Jul 16, 2009

சம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்

சி. மோகன்
(சென்னையில் சென்றவாரம் 11ஆம் தேதி சம்பத் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
1975ஆம் ஆண்டு கவிஞர் உமாபதியின் முயற்சியில் ‘தெறிகள்’ காலாண்டிதழ் வெளிவந்தது. அச்சமயம் அறிவிக்கப்பட்ட நெருக்கடி கால நிலையின் காரணமாக உமாபதிக்கு ‘தெறிகள்’ நடத்தியது தொடர்பாக அலுவலகத்தில் ஏற்பட்ட சிக்கலை அடுத்து அவ்விதழ் தொடர்ந்து வெளிவராமல் போனது. ஓர் இதழ் மட்டுமே வெளிவந்த தெறிகளில் இரண்டு மிக முக்கியமான படைப்புகள் வெளிவந்திருந்தன. ஒன்று : கலாப்ரியாவின் ‘சுயம்வரம்’ குறுங்காவியம் ; மற்றொன்று: சம்பத்தின் ‘இடைவெளி’ நாவல். கலாப்ரியாவின் சுயம்வரம் பற்றி, நண்பர்கள் சிலருடன் இணைந்து அப்போது நான் நடத்திக் கொண்டிருந்த ‘விழிகள்’ இதழில் கட்டுரை எழுதினேன். அதே சமயம் ‘தெறிகள்’ இதழில் சம்பத்தின் இடைவெளி நாவல் முடிந்திருந்த பக்கத்தின் கீழ் இருந்த சிறு வெற்றிடத்தில் தமிழில் அதுவரை வாசித்த நாவல்களில் அதுவே மிகச் சிறந்தது என்ற என் எண்ணத்தையும் அந்நாவல் வாசிப்பு எனக்குள் ஏற்படுத்திய எக்களிப்பையும் நுணுக்கி நுணுக்கிக் குறித்து வைத்திருந்தேன். இன்றும் அந்த எண்ணத்தையும் எக்களிப்பையும் இடைவெளி தந்து கொண்டிருக்கிறது.

1983ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான் க்ரியாவில் பணியாற்றுவதற்காக சென்னை வந்தேன். ‘க்ரியா’ புத்தக வெளியீட்டைத் தீவிரப்படுத்த யோசித்திருந்த நேரமது. அப்போது க்ரியா ராமகிருஷ்ணனிடம் ‘இடைவெளி’யை வெளியிடலாமென்று மீண்டும் யோசனை தெரிவித்தேன். ராமகிருஷ்ணன் வெளியிடப்படுவதற்கான கையெழுத்துப் பிரதிகளின் அடுக்கிலிருந்து ஒரு டயரியை எடுத்துக் கொடுத்தார். ராமகிருஷ்ணன் ஏற்கெனவே கேட்டுக் கொண்டதற்கிணங்க சம்பத் ‘தெறிகள்’ இதழில் வெளியான பனுவலில் சில திருத்தங்கள் செய்து ஒரு டயரியில் எழுதிக் கொடுத்திருக்கிறார். அதிலும் ஆங்கிலச் சொற்கள் நிரவிக் கிடந்தன. ‘அவரோடு உட்கார்ந்து எடிட் செய்யலாமென்றால் அவர் அதற்குத் தயாராக இல்லை. நீங்கள் வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள், என்றார் ராமகிருஷ்ணன். இதனையடுத்து சம்பத்துடனான முதல் சந்திப்பு நிகழ்ந்தது. நான் சற்றும் எதிர்பார்த்திராத தோற்றம்; செமத்தியான உடல்வாகு; பருமனும் சரி , உயரமும் சரி. அவரைச் சம்மதிக்க வைப்பது சிரமமாகவே இருக்கும் ; எனினும் பக்குவமாக அவரை இந்த முடிவுக்கு நகர்த்திக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற என் முன்ஜாக்கிரதைகளுக்கு மாறாக, முதல் ஓரிரு பக்கங்களை முன்வைத்து நான் தெரிவித்த ஓரிரு யோசனைகளின் அளவிலேயே அவர் சரி, நாம் சேர்ந்து பார்க்கலாமென்று சம்மதித்துவிட்டார்.

இதனையடுத்து, சம்பத்தும் நானும் ராமகிருஷ்ணனுடைய வீட்டில் பகற்பொழுதில் வரி வரியாகப் பார்த்தோம். ஏªழுட்டு நாட்களில் அப்பணி முடிந்ததாக ஞாபகம். சதா தகிக்கும் உள்ளார்ந்த தீவிர மனநிலையும், நேசிக்கக்கூடிய வகையிலான ஒருவித பேதமையும் ஒன்றையொன்று மேவி அவரிடம் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். அப்போது தொடங்கிய நட்பும், சந்திப்பும் அடுத்த ஆறேழு மாதங்கள் _ அதாவது 1984ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி அவர் இறந்ததற்கு சில நாட்கள் முன்பு வரை தொடர்ந்தது.

1983ஆம் ஆண்டு இறுதியில் என் குடும்பமும் சென்னைக்கு வந்து நாங்கள் நண்பர் சச்சிதானந்தம் வீட்டு மாடியில் குடியமர்ந்தோம். அந்த மாடி இரண்டாகத் தடுக்கப்பட்டு ஒரு பகுதி எங்கள் வீடாகவும், மற்றொரு பகுதி ‘க்ரியா’வின் புத்தகக் கிடங்காகவும் அச்சுக் கோப்பகமாகவும் அமைக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு ஜூன் வாக்கில் இடைவெளி அச்சு வேலை தொடங்கியபோது சம்பத் அநேகமாக ஒவ்வொரு நாளும் மதிய வேளைகளில் வீட்டுக்கு வந்துவிடுவார். சென்னை வெயிலில் அவர் வந்தவுடன் செய்யும் முதல் காரியம் சட்டையைக் கழற்றிப் போடுவதுதான். சட்டை பாக்கெட்டில் எப்போதும் லாட்டரி சீட்டு இருக்கும். இப்படி 10_15 நாட்கள் வந்து கொண்டிருந்தவர் திடீரென்று பல நாட்கள் வரக் காணோம். ‘இடைவெளி’ புத்தகம் அச்சு வேலை முடிந்து பைண்டிங்கில் இருந்தது. இச்சமயத்தில் ஒரு நாள் காலை திலீப்குமார் ‘சம்பத் இறந்துவிட்டதாகத் தகவல்’ என்று தயங்கியபடி கூறினார். அத்தகவல் தெரியவந்தபோதே அவர் இறந்து 15_20 நாட்கள் ஆகிவிட்டிருந்தன. அன்றே அத்தகவல் உறுதிபடுத்தப்பட்டது. நான் அன்றே சம்பத் வீடு சென்று அவருடைய துணைவியாரைச் சந்தித்தேன். மறுநாளே அவர் பற்றிய ஒரு குறிப்பை எழுதி அச்சிட்டுப் புத்தகத்தில் சேர்த்தோம். ஒரு படைப்பாளியின் மரணம் பற்றிய தகவல்கூட வெளித்தெரிய சில நாட்கள் எடுக்கும் அவல நிலைதான் நம் சூழலின் யதார்த்தம்.

தெறிகள் இதழில் வாசித்தது தொடங்கி, அப்பிரதியை செம்மைப்படுத்துவதற்கு முன்னும் அப்பணியினூடாகவும், புத்தகமாக வெளிவந்த பின்பு அவ்வப்போதும், நடைவழிக் குறிப்புகளுக்காக சம்பத் பற்றி எழுதும்போதும் என நான் பலமுறை படித்த நாவல் இடைவெளி. நான் அதிக முறை படித்த நாவலும் இதுதான்.

பாரீஸ் ரிவ்யூ நேர்காணலில் வில்லியம் ஃபாக்னரிடம் ஐரோப்பிய எழுத்தாளர்கள் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, ஜேம்ஸ் ஜாய்சை ஒரு மகத்தான படைப்பாளி என்று குறிப்பிட்டுவிட்டு, ‘‘ஞானஸ்நானம் செய்விக்கும் கல்வியறிவற்ற ஒரு உபதேசி பழைய ஆகமத்தை அணுகுவதைப் போல நம்பிக்கையோடு ஜாய்சின் யூலிஸஸை நீங்கள் அணுக வேண்டும்’’ என்று கூறியிருப்பார். என்னைப் பொறுத்தவரை, ‘இடைவெளி’யுடனான என் உறவு அநேகமாக இப்படித்தான் இருந்து வருகிறது.

2

காலம், வாழ்க்கை, மனித ஸ்திதி, ஆகியவற்றைக் கண்டுணர்ந்தும் கிரஹித்தும் ஒரு நாவல் புனைவாக்கம் பெறுகிறது. இப்புனைவு அதற்கான ஞானத்தை, மெய்யறிவைக் கொண்டிருக்கிறது. இது மனித இருப்புக்குப் புதிய சாத்தியங்களையும் காலத்துக்கான கண்டுபிடிப்புகளையும் அளிக்கிறது. அதனால்தான், ‘‘அறிவியல் சிந்தனைகளுக்காகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் 19ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பே, மனித இருப்பின் விலக்க முடியாத ஒரு பரிமாணமாக, மடத்தனம் இருப்பதை ஃபிளாபெர்ட் தம் நாவல்கள் மூலம் கண்டடைந்ததுதான்’’ என்று மிலன் குந்தரேவால் கூற முடிகிறது. மேலும் ஃபிளாபெர்ட்டின் இந்தக் கண்டுபிடிப்பு மார்க்ஸ், ஃபிராய்டு ஆகியோரின் திடுக்குற வைக்கும் கருத்துகளை விடவும் எதிர்கால உலகுக்கு முக்கியமானது என்கிறார்.

ஆக, நாவலாசிரியன் தன்னளவில் ஒரு தத்துவவாதி, சிந்தனையாளன், கண்டுபிடிப்பாளன். இவ்வகையில்தான் சிந்தனையும், புனைவும் கூடி முயங்கி உருக்கொண்ட இடைவெளி, தமிழின் பெறுமதியான ஒரு நாவலாகி இருக்கிறது.

தமிழ் நாவல் பரப்பில் இந்நாவலின் முக்கியத்துவம் பற்றிச் சற்று விரிவாகப் பேசுவதற்கு முன் மிகச் சிறந்த ஆங்கில நாவலாசிரியரான டி. எச். லாரன்ஸ் ‘கீலீஹ் ழிஷீஸ்மீறீ விணீttமீக்ஷீs’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் ஒரு ஆதங்கத்தை முன்வைக்க விரும்புகிறேன்: ‘பிளாட்டோவின் உரையாடல்கள் விநோதமான சிறிய நாவல்கள். தத்துவமும் புனைகதையும் பிரிந்தது, இவ்வுலகின் மிகப் பெரிய சோகமாக எனக்குப் படுகிறது. இரண்டும் ஒன்றாகத்தான் புராணக் கதைக் காலங்களிலிருந்து உருவாகி வந்திருக்கின்றன. அரிஸ்டாடில், தாமஸ் அகின்னஸ் போன்றவர்களால் இவை ஒருவர் மீது ஒருவர் குற்றம் கண்டுபிடித்துத் தொல்லைபடுத்திக் கொண்டே இருக்கிற தம்பதிகளைப் போல் தனித்தனியே பிரிந்து போயின. இதன் காரணமாக நாவல் மேலோட்டமானதாகவும், தத்துவம் அருவமானதாகவும் வறண்டு போயின. நாவலில், இவ்விரண்டும் மீண்டும் இணைந்து வர வேண்டும்.’

இத்தகையதோர் இணைப்பில் புனைவாகியிருக்கும் நாவல்தான் இடைவெளி. இதனாலேயே தமிழின் முதல் முழு முற்றான கருத்துலக நாவலாக இடைவெளி தனித்துவம் பெற்றிருக்கிறது.

சம்பத்துக்கு முன் தமிழ் நாவல் பரப்பில் கருத்துலகச் சாயல் கொண்ட படைப்பாளியாக அறியப்பட்டு அதனாலேயே பிரபல்யமும் அடைந்தவர் ஜெயகாந்தன். ஆனால் அவருடைய படைப்புகளில் புனைவுலகின் மெய்யறிவிலிருந்து கருத்துகளோ, சிந்தனைகளோ உருண்டு திரள்வதில்லை. மாறாக, கருத்துலகம் சமூகத்துக்கு அளித்த சாரங்களின் சில அம்சங்களை ஸ்வீகரித்துக் கொண்டு அவற்றுக்குப் புனைவடிவம் தந்தவர் ஜெயகாந்தன். இவ்விடத்தில் இன்று, கலை, இலக்கியமானவை எந்த ஓர் அமைப்புக்குமோ, கொள்கைக்குமோ, துறைசார் அறிவுக்குமோ சேவகம் செய்வன அல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக, படைப்பின் மெய்யறிவுப் பயணத்திலிருந்து உருக்கொள்ளும் சிந்தனைகளிலிருந்து பிற அமைப்புகளும், கொள்கைகளும், துறைசார் அறிவுகளும் தங்களை செழுமைப்படுத்திக் கொள்ள முடியும். முடிந்திருக்கிறது. சலித்துப் போன உதாரணம் : ஃப்ராய்டு, தாஸ்தாயெவ்ஸ்கியிடமிருந்து பெற்ற பெறுமதிகள். கலை_இலக்கியங்களிடம் காலம் எதிர்பார்ப்பது இதுதான். ஜெயகாந்தனிடம் இது நிகழவில்லை. ஆனால், இடைவெளி நாவலில் அடிப்படைகளில் உழன்று தகிக்கும் தினகரனை சாவு பிரச்சனை ஆட்கொள்ளும் போது அவர் மேற்கொண்ட பயணத்தினூடாக படைப்பு ஒரு மகத்தான கண்டுபிடிப்பை வசப்படுத்துகிறது. அதுவே இப்படைப்பை முக்கியத்துவமிக்கதாக்கி இருக்கிறது. சம்பத்தின் ‘இடைவெளி’க்குப் பின் வெளிவந்த சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே.’ சில குறிப்புகள்’ தமிழில் சிந்தனைத் தளத்தில் இயங்கிய முதல் நாவலாகப் போற்றப்பட்டுக் கொண்டாடப்பட்டது. பெறப்பட்ட அறிவின் உதிரித் தொகுப்புகளாகவே பெரிதும் அமைந்துவிட்ட இந்நாவல் அதன் வசீகர நடை காரணமாக பெரிதும் சிலாகிக்கப்பட்டது. அடியறியா, ஆழமறியா புனைவுப் பயணத்தினூடாகப் படைப்பு மெய்யறிவு கொள்வதற்கான எவ்விதப் பிரயாசையும் இந்நாவலில் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், ஒரு அடிப்படைப் பிரச்சனைக்குத் தன்னை முழு முற்றாக ஒப்புக் கொடுக்க சம்பத்துக்கு முடிந்திருக்கிறது.

‘இடைவெளி’ 7 அத்தியாயங்கள் கொண்ட சிறிய நாவல். இந்நாவலின் மையப் பாத்திரமான தினகரன் பற்றி நாவலிலிருந்து நாம் அறிவது என்ன என்று பார்க்கலாம்.

பத்தாண்டுகள் முன்னோக்கிப் பார்க்க விரும்பாத இச்சமூக ஓட்டத்திற்கிடையே அடிப்படைப் பிரச்சனைகளில் உழன்று தகிக்கும் ஒருவர் தினகரன். இப்போது அவரை ஆட்கொண்டிருப்பது சாவு பற்றிய ஒரு கேள்வி. பிறப்பால் பிராமணன். அவருக்கு தாஸ்தாயெவ்ஸ்கியை ரொம்பப் பிடிக்கும். காரணம் அவர் Êஏசு கிறிஸ்துவை, ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது கடைசி பட்சமாக, அசைக்க முடியாத அளவுக்கு ஓர் கண்டன விமர்சனம் பண்ணிப் போயிருக்கிறார். இது தினகரனுக்கு ரொம்ப முக்கியம். ஏசுவை தினகரனுக்குப் பிடிக்கும். ஆனால் எண்ண ரூபமான எதையுமே எதிர்கொள்ளத்தானே வேண்டும் என்பது தினகரனின் நிலைப்பாடு. (இப்படிப் பார்க்கும்போது வேதங்களும் உபநிஷத்துகளும் இந்த மாதிரியான பரிசீலனைக்கு இன்னமும் உட்படவில்லை என்பது அவரது ஆதங்கம்.

கிட்டத்தட்ட 35 வயதான தினகரனின் குடும்பம் இது. மனைவி பத்மா. குழந்தைகள் குமார், ஸ்ரீதர், ஜெÊயஸ்ரீ, (சம்பத்தின் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்களே இவை.) கலவியில் அதீத நாட்டமுடையவர். சாவு பிரச்சனையில் உழலத் தொடங்கிய பிறகு, மனைவியே கேட்டுக் கொண்டும் மறுக்குமளவு பிரச்சனையில் அமிழ்ந்து போனவர். டில்லியில் பணிபுரிந்த போது கல்பனா என்ற பெண்ணுடன் உறவு. மனதில், நினைவுகளில் அவளின் தீவிர இருப்பு.

சாவு பிரச்சனை தினகரனை ஆட்கொள்ளத் தொடங்கும் ஆரம்பக் கட்டத்தில் தோல் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் முக்கிய பதவியில் இருக்கிறார். பிரச்சனை தீவிர முகம் கொள்ளும்போது, வேலை அதிகமில்லாத, மதிப்பில்லாத பேக்கிங் பிரிவுக்குத் தானே விரும்பிக் கேட்டு மாற்றிக் கொள்கிறார். முன்னர் டில்லியிலும் தற்சமயம் சென்னையிலுமாக ஒருபோதும் ஒரு அலுவலகத்தில் அதிக நாட்கள் அவர் நீடித்திருந்ததில்லை. சாவு பிரச்சனையில் சிக்கிக் கொண்டு உழன்று தவிக்கும் போது வீட்டிலும், வெளியிலும், அலுவலகத்திலும் அவருடைய நடவடிக்கைகள் பரிகசிக்கப்படுகின்றன.

இவ்வாறாக, லௌகீக வெற்றியை நோக்கி விரையும் பொது ஓட்டத்துக்கு எதிர்திசையில் நிகழ்கிறது இவர் பயணம். மனித ஸ்திதியின் மாறுபட்ட சாத்தியப்பாடு இது. இதிலிருந்துதான் நாவல் புது வெளிச்சம் கொள்கிறது.

சாவு பற்றிய ஒரு அடிப்படைத் தன்மையை சொல்லிவிடப் போகிறோம் என்ற எண்ணம் தினகரனிடம் உருவாவதிலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது. சாவு பல விதங்களில் சம்பவித்தாலும் அதன் அடிப்படைக் கூறு ஒன்றுதான் என்ற யூகத்துடன் முதல் அத்தியாயம் முடிகிறது.

இரண்டாவது அத்தியாயத்தில் தினகரன் தான் காணும் கனவில் ‘இடைவெளி’ என்று தன்னையறியாது சொல்கிறார். எதிரில் அமர்ந்திருக்கும் சாவு உருவம் தலையாட்டுகிறது.

இது குறித்து சதா உலைந்து கொண்டிருக்கும் தினகரன் வாழ்வு என்பது அணுசரணையான இடைவெளி என்றும், சாவு என்பது முரண்பாடுடைய இடைவெளி என்றும் கடைசியில் கண்டடைவது, ‘எண்ண ஓட்டங்களுக்கு, பெரிய எண்ண ஓட்டங்களுக்கே உரித்தான வீர்யத்தோடும், பூ மணப்பின் குணத்தோடும், நாவலில் விகாசம் பெற்றிருக்கிறது.

தகிக்கும் மனதின் வெதுவெதுப்பை இந்நாவலின் பக்கங்களில் நாம் உணர முடியும். கண்டடைவதின் பரவசத்தையும் தான். இந்த வெதுவெதுப்பும் பரவசமும் நம் வாழ்வுக்கு அவசியமானவை. அதனால்தான் நாவலின் கடைசியில் தினகரன் சாவுக்கு முன் மானசீகமாக மண்டியிடுவதைப் போல ஒவ்வொரு வாசிப்பின் போதும் நான் மண்டியிடுகிறேன்.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்