Showing posts with label ஆத்மாநாம். Show all posts
Showing posts with label ஆத்மாநாம். Show all posts

Nov 15, 2013

ஆத்மாநாம் நேர்காணல் - பிரம்மராஜன்

ஆத்மாநாம்

(18. 1. 1951 - 6. 7. 1984)

ஆத்மாநாமின் இயற்பெயர் S. K. மதுசூதன். 1951 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி பிறந்தார். சென்னையிலேயே வளர்க்கப்பட்டார். தாய்மொழி கன்னடமாக இருந்தபோதிலும் ஆத்மாநாமுக்குத் தமிழில் இருந்த ஈடுபாடு அதிகம். அம்பத்தூரில் சர் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பெற்று பிறகு வைஷ்ணவா கல்லூரிக்குச் சென்றார். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பட்டப்படிப்பைathmanam_thumb6 (B. Com) அதே கல்லூரியில் மாலை வகுப்புகளில் சேர்ந்து படித்தார். 1967ஆம் ஆண்டு சதர்ன் சுவிட்ச்கியர்ஸ் என்ற  கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். 1968ஆம் ஆண்டு வேலையை விட்டுவிட்டுக் கணக்குத்துறை சேர்ந்த விஷயங்களைக் கற்க ஆடிட்டர் அலுவலகம் ஒன்றுக்குச் சென்றார். இந்தப் பின்னணி அவருக்கு கோரமண்டல் கார்மெண்ட்ஸ் என்ற கம்பெனியில் வேலை கிடைக்க ஏதுவாக இருந்தது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1971இல் தயார் உடைகள் தயாரிக்கும் நிறுவனமான ரெங்கா அப்பாரெல்ஸ்க்கு மாறினார். இங்கிருந்துதான் ஆத்மாநாமின் சிக்கலான வருடங்கள் ஆரம்பிக்கின்றன. 1978ஆம் ஆண்டு அய்யப்பன் என்பவருடன் சேர்ந்து டாப்டென் என்ற தயார் உடைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை உருவாக்கினார். இதே சமயத்தில்தான் ழ இதழையும் தொடங்கினார். தன்னுடைய நிறுவனத்தைக் கட்டி எழுப்ப இரவுகளிலும் வேலைசெய்ய வேண்டிவந்தது. இரண்டு மூன்று ஈடுபாடுகளில் ஒரே நேரத்தில் தீவிரமாய் இயங்கியபோது Affective Disorder என்ற மனநலத் தாக்குதல் ஏற்பட்டு 1979 புரசைவாக்கத்திலிருக்கும் தனியார் மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பிறகு இன்டர் கிராப்ட் என்ற கம்பெனியில் பணிபுரிந்தார். ஆனால் அவருக்கு ஓய்வு முக்கியம் என்று மருத்துவர் கருதியதால் தொடர்ந்து பணிக்குச் செல்ல முடியாத சிக்கல் ஏற்பட்டது. மூளையின் அதி தீவிர இயக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க ஆத்மாநாம், Lithium, Hyportrym, Largatyl, Fenargon போன்ற மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டியிருந்தது. 1983 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாகத் தனக்கு சிகிச்சைக்காகத் தரப்பட்ட மருந்துகளையே அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். காப்பாற்றப்பட்டார்.

இந்தச் சமயத்தில் அவர் இடைவிடாது படித்துக்கொண்டிருந்த நூல் A. K. ராமானுஜனின் The Speaking of Shiva. 1983ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் Affective Disorderன் இரண்டாவது தாக்குதல் ஆத்மாநாமுக்கு ஏற்பட்டது. 1984 ஜனவரி இறுதிவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்கை அளிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழுவதும் அவர் பெங்களூரில் அவரது சகோதரர் ரகுநந்தனின் வீட்டில் இருந்தார். மார்ச் 9ஆம் தேதி (1984) தனக்குத் தரப்பட்ட மருந்துகளை உட்கொண்டு இரண்டாவது முறையாகத் தற்கொலை செய்ய முயன்றார். பின்னர் National Institute of Mental Health and Neurological Sciences மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதியிலிருந்து 20 வரை NIMHANSல் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வீடு திரும்பிய பின்னர் தனது சகோதரர் வீட்டில் எவரிடமும் எதுவும் பேசாமல் இருந்திருக்கிறார். ஏறத்தாழ ‘உயிரற்ற மனித உடம்பாக’ ஆத்மாநாம் வீடு திரும்பியதாக அவரது சகோதரர் ரகுநந்தன் குறிப்பிட்டார். மார்ச் 1984லிருந்து தனது இறுதி மறைவு வரை (ஜு லை 1984) ஆத்மாநாம் தனக்கு வந்த கடிதங்களையோ, பத்திரிகைகளையோ, அழைப்பிதழ்களையோ படிக்கவில்லை. பிரித்துக்கூடப் பார்க்கவில்லை. பெங்களூரில் தன்னுடைய சாவை முன்கூட்டித் தீர்மானித்ததுபோல ஏறத்தாழ 120 தபால் கார்டுகளை வாங்கி வைக்கிருந்திருக்கிறார். நண்பர்களின் முகவரிகள் முதலிலிருந்து கடைசி வரை திருத்தம் செய்து வைக்கப்பட்டிருந்தன.

**********

ந்தப் பேட்டி 14-4-83 அன்று மதியத்திற்குமேல் உதகமண்டலத்தில் நிகழ்த்தப்பட்டது. இடம் செயின்ட் மேரீஸ் ஹில். கோடை என்பதால் கண்ணாடி ஜன்னல்கள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. தூரத்துத் தோட்டங்களில் மருந்து தெளிக்கும் யந்திரங்களின் தொடர்ச்சியான ரீங்காரம் கேட்கிறது. அறைக்குள் தாமோதர் தீட்டிய தைல வண்ண ஓவியம். அதை நோக்கியபடி ஆத்மாநாம் ஒரு நீல நிற ஒயர் நாடாக்கள் பின்னிய நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். பேட்டியின்போது Charms சிகரெட்டுகளைப் பிடித்தவண்ணம் இருக்கிறார். ஸ்டீல் டீப்பாயின் மீதிருந்த Nippo batteries-ன்டீ ட்ரேயை சாம்பல் கிண்ணமாகப் பயன்படுத்துகிறார். காலர் வைத்த காக்கியுமல்லாத மிலிட்டரி பச்சையுமில்லாத ஒரு நிறத்தில் ஜிப்பா ஷர்ட் அணிந்திருக்கிறார். பதில்களை இடைவிட்டு நிறுத்திப் பேசுகிறார். சில நேரங்களில் தடையற்ற பிரவாகமாகவும் பதில்கள் வெளிப்படுகின்றன. இந்தச் சமயத்தில் ஆத்மாநாம் படித்துக்கொண்டிருந்த புத்தகங்கள், Stalin : an Impartial Study of the life and works of JosephStalin (Stephen Graham), Octavio Paz-ன் கவிதைகள், Gunter Grass-ன் கவிதைகள், நவீன ஐரோப்பியக் கவிஞர் வரிசையில் வெளிவந்த Tadeuz Rosewicz. பேட்டி பதிவு செய்யப்பட்டுப் பிரசுர நிலையை அடைந்திருக்கிறது. கேள்விகள் மட்டுமே முன்தீர்மானத்துடன் உருவாக்கப்பட்டு இருந்தன. மேலும் அக்கேள்விகளும் ஆத்மாநாமின் பதில்களால் ஈர்க்கப்பட்டுவேறு வடிவங்களை அடைந்திருக்கின்றன. 24-4-83 அன்று இரவு கோவை, அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பப்பட்ட இந்தப் பேட்டிக்கும் தொடர்பு ஏதுமில்லை.

பிரம்மராஜன்: தமிழ்ப் புதுக்கவிதைல 20 வருஷம் பழக்கம் இருக்குன்னு கணக்கு வெச்சுக்கலாம். எழுத்து பத்திரிகைல இந்தப் புதுக்கவிதை ஒரு ஆரம்ப நிலைல இருந்தது. கொஞ்சம் கழிஞ்சு கசடதபற பத்திரி்கை காலத்தில எழுதப்பட்ட கவிதைகள் வளர்ச்சியாயிருந்தது. பின்னால ‘ழ’ பத்திரிகையில வந்த கவிதைகள், இப்ப ‘எழுத்து’ கவிதைகள், ‘கசடதபற’ கவிதைகள் என்கிற ஒரு காலப்பிரிவாக வைத்துக்கொள்ளலாம். இவை வளர்ச்சி ரீதியா என்னென்ன நிலைகளில் இருந்தன? இயல்பு ரீதியா என்ன வித்தியாசங்கள் ஏற்பட்டிருக்கு?

ஆத்மாநாம்: தமிழின் புதுக்கவிதைகள் பாரதியாரிடமிருந்து ஆரம்பமாகின்றன என்று கணக்கு பார்த்தா சுமார் 60 ஆண்டுகளுக்குத் தமிழ்ல புதுக்கவிதைகள் இருக்குன்னு சொல்ல முடியும். பாரதியாருக்கு அடுத்து வரக்கூடிய கவிஞர்கள்னு ந. பிச்சமூர்த்தி, கு. ப. ரா, புதுமைப்பித்தன் போன்றவர்களைச் சொல்ல முடியும். ‘எழுத்து’ பிரசுரமான புதுக்குரல்களின் மூலம் தெரியவந்த கவிஞர்களின் பெரும்பான்மையான கவிதைகள் மேற்கத்திய தத்துவத்தையோ அல்லது கிழக்கத்திய

தத்துவத்தையோ தூக்கலாக அறிவிக்கும்படியாக இருந்தன. அதற்கப்பறம்வந்த ‘கசடதபற’ கவிதைகளில் பௌதிக உலகத்தின் தாக்குதல் மற்றும் அனுபவம் வெளிப்படையா தெரியவந்தது. சமீபத்திய ‘ழ’ கவிதைகள் சுய அனுபவம், சுய சிந்தனையின் அடிப்படைல இருந்தன.

பிரம்மராஜன்: எழுபதுகளில் இருந்த புதுக்கவிதைகளுக்கும், தற்போதைய புதுக்கவிதைகளுக்கும் என்ன வித்தியாசம்? முன்னேற்றம் ஏதும் இருக்கிறதா?

ஆத்மாநாம்: 70களில் இருந்த புதுக்கவிதைகள் விரைவாக உற்பத்தி செய்யப்பட்டவை. தற்போது கொஞ்சம் நிதானமாக யோசித்து எழுதப்படுகின்றன. 70ன் கவிதைகள் இன்றைய பிரபல வாரப் பத்திரிகைகளில் வெளிவரும் கவிதைகளுக்கு முன்மாதிரியாக அமைந்துவிட்டது ஒரு சோகமான விஷயம்.

பிரம்மராஜன்: நடை இதழில் சி. மணி, ‘புதுக்கவிதை புரியவில்லை’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதாவது 1969-70ல். இன்றைக்கும் இந்த நிலை மாறிவிடவில்லை. இதுபற்றி?

ஆத்மாநாம்: இதைப்பற்றிச் சொல்லும்பொழுது - இரண்டு விதமான சிந்தனைப் போக்குகள் கவிதைகளில் இருப்பதால் - ஒருவிதப் போக்கின் கவிதைகள் படித்தவுடன் புரிந்துவிடுகின்றன, இன்னொரு வகை மீண்டும் ஓரிரு முறை படித்தவுடன் ஓரளவோ அல்லது முழுமையாகவோ புரிகின்றன. ஆனால் புரிதல் என்பது தனிப்பட்ட நபரின் விஷயமாகும். எனவே கவிதைகள் புரிகின்றன, புரியவில்லை என்பது தன்னிலை விளக்கமாகத்தான் அமைகின்றது.

பிரம்மராஜன்: ஒரு நல்ல கவிதைக்கும் அதிலிருக்கும் obscurity, அதாவது புரியாத தன்மைக்கும் சம்பந்தமிருக்கா?

ஆத்மாநாம்: இது கவிதையின் கருப்பொருளைப் பொறுத்த விஷயம். ஒருவரின் அனுபவம் சிக்கலானதாக இருந்தால் கவிதைகள் இருண்மையுடன் கூடியதாக இருக்கும். சிலசமயம் கவிதைகள் தெளிவாகவே வெளியாகவும் கூடும். எனவே கவிதைக்கும் obscurityக்கும் நேரடித்தொடர்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. சில கவிதைகள் படித்தவுடன் புரிந்துவிடுவதால் அது வார்த்தைக்கு மீறிய பொருளைக் கொள்ளவில்லை அல்லது கொண்டிருக்கிறது என்று சொல்லமுடியாது. அதே சமயம் ஒரு கவிதை புரியவில்லை என்னும் பொழுதும் அந்தக் கவிதைவில் குற்றமுள்ளதுஅல்லது வாசகனிடம் குற்றமுள்ளது என்றும் சொல்லமுடியாது. சிறிது காலம் தாழ்த்தித்தான் எதுவும் சொல்ல முடியும்.

பிரம்மராஜன்: ஒரு கவிதை சிக்கலா இருக்கறதுக்கு வாழ்க்கைல இருக்கற complexity காரணமா, இல்லை அதை எழுதின கவிஞன் ரொம்ப complex ஆன அனுபவமுடையவனா இருக்கான்கிறது காரணமா, அல்லது அவனது சிந்தனை, வெளிப்பாட்டு முறையே complex ஆக இருப்பது காரணமா? சிந்தனை வெளிப்பாட்டு முறையே complex ஆக

இருக்கும்போது it is indirectly influenced by his sociallife. அதனால் வாழ்க்கை நிர்ப்பந்திக்கிறதால்தான் கவிதை complex ஆகிறதா?ஏன்னா, மேற்கத்திய அரூப ஓவியங்களைப் பத்திச் சொல்லும்பொழுது வாழ்க்கை அரூபமாகிவிட்டதால்தான் ஓவியங்களும் அரூபமாயிருச்சுங்கறாங்க.

ஆத்மாநாம்: கவிதைகள், ஓவியங்கள் அரூமாயிருப்பது காலத்தோட நிர்ப்பந்தம்.

பிரம்மராஜன்: விளக்கமா சொல்லுங்க.

ஆத்மாநாம்: ஒரு நேரிடையான புகைப்படத்துடன் ஓவியத்தை ஒப்பிட்டுப்பார்க்கும்போது ஓவியம் குழப்பமாகத் தெரிகிறது. ஆனால் ஓவியம் வரைபவன் தன் முழு தீட்சண்யத்தையும் அதில் கொண்டுவருவதற்காக அப்படி வரைகிறான். ஆனால் கவிதை புரியாததா வருதுன்னு சொல்லும்போது அந்த obscurity ஒரு சில சமயம் forced obscurity ஆக இருக்க முடியும். சில விஷயங்களை நேரடியாக எழுத்தின் மூலம் சொல்ல முடியாது. எனவே வேறுவிதமான வார்த்தைகள் மூலமாய் அதைத் தெரிவிக்கிற முயற்சிகளாக இருக்க முடியும். உதாரணமாக ‘மறு பரிசீலனை’ என்ற கவிதையில் கடைசி வரி.

பிரம்மராஜன்: மறு பரிசீலனை உங்க கவிதை இல்லையா?

ஆத்மாநாம்: ஆமாம். அதில ‘புறப்பட்டாகிவிட்டது கறுப்புப் படை’, அதுக்கு முன்னாடி ‘தொண்டையில் சிக்கிக்கொண்ட மீனின் முள் என’, அப்பறம் ‘துணிக் கயிற்றில் தொங்கும் குரல்வளைகள் போல’ இப்படிப் பல விஷயங்களை indirect ஆகச் சொல்லவேண்டியிருக்கிறது. அந்த நேரத்தில் obscurity வருது.

பிரம்மராஜன்: அதைத் தவிர்க்க முடியாதுன்னு சொல்றீங்க.

ஆத்மாநாம்: அது ஒரு காலத்தின் நிர்ப்பந்தம்னு ...

பிரம்மராஜன்: அதாவது வெளிப்பாட்டில் தவிர்க்க முடியாததா அல்லது கருப்பொருளிலேயே தவிர்க்க முடியாததா?

ஆத்மாநாம்: அது situationsனால தவிர்க்க முடியாததாகுது.

பிரம்மராஜன்: Situationsனா? இன்னும் தெளிவா சொல்லணும் நீங்க.

ஆத்மாநாம்: Situationsனு சொல்லும்போது ...

பிரம்மராஜன்: ஒரு காலகட்டம்னு சொல்லலாமா அதை?

ஆத்மாநாம்: ஒரு காலகட்டத்தின், சமூக, அரசியல், பொருளாதாரப் பின்னணிகளைப் பொறுத்து அது அமையறது.

பிரம்மராஜன்: சில கவிதைங்க ரொம்ப plain ஆகவே இருக்கு. சிக்கலான வார்த்தைங்க ஏதும் போடறதில்லை. ஆனா படிச்சு முடிச்ச உடனே comprehensiveஆக ஓரு ஒட்டுமொத்தமான பார்வைக்குப் புரியாம போயிடறது. இதை plain poetryன்னு நாம எடுத்துக்கிட்டோம்னா plain

poetryகூட புரியாம போயிடறதுக்கு chance இருக்குன்னு அர்த்தம்தானே. இதைப் பத்தி நீங்க ஏதாவது சொல்றீங்களா...

ஆத்மாநாம்: Plain poetryன்னு சொல்லும்போது ஆனந்தோட பல கவிதைகள் plain poetry ஆகதான் வருது...

பிரம்மராஜன்: உதாரணத்துக்கு எதையாவது சொல்ல முடியுமா... ?

ஆத்மாநாம்: ‘ம்... அதோ அந்தச் சிறுபறவை அழைத்துவரும் மேகம் தண் என எனை நிறைக்கையில், நான் இல்லாது போவேன்’- இந்தக் கவிதையில் அந்தப் பறவை, அப்றம் ‘நான் இல்லாது போவேன்’ அப்படின்ற expression எல்லாமே தெளிவாக இருக்கு.

பிரம்மராஜன்: அதாவது statement plain ஆக இருக்கு.

ஆத்மாநாம்: ஆமாம். ஆனா முழுக்கவிதையும் படிச்சா உங்களுக்கு அதில் புரியாத ஏதோஒரு அம்சம் இருக்குன்னு, அதில் அவர் உணர்ந்த ஏதோ அனுபவம் உங்களுக்குச் சரியா transfer ஆகலை அப்படிங்கற மாதிரி quality அந்த poemல இருக்கு. அதனால் Simple poemகூட complexஆக இருக்க வாய்ப்புகள் இருக்கு.

பிரம்மராஜன்: அதையேதான் நானும் கேக்கறேன்.

ஆத்மாநாம்: இன்னொரு நேரத்திலே ஒரு complex poem, ஒரு absurd poem ஒண்ணை நாம assess பண்ணி பாக்கறப்ப புரியக்கூடியதா இருக்கு. இதுக்கு உதாரணம் என்னோட கவிதைகள்லேர்ந்தே எடுத்துக்காலம்.

பிரம்மராஜன்: எந்தக் கவிதைய எடுத்துக்கலாம்?

ஆத்மாநாம்: என் ‘மறுபரிசீலனை’ கவிதையையே எடுத்துக்கலாம். அது நேரிடையா obscure poem கிடையாது; absurd poem ஆகச் சொல்லலாம். கொலாஜ் மாதிரி various cuttingsஐ வச்சு ஒரு paintingஐ paste செய்யற மாதிரி.

பிரம்மராஜன்: இப்படிச் சொல்லலாமா? absurdஆக இருக்கறது ரொம்ப logical ஆகப் பாக்கறவனுக்கு obscure ஆகத் தெரியலாமில்லையா?

ஆத்மாநாம்: That is possible.

பிரம்மராஜன்: ஏன்னா எல்லாம் ஒரு ஒழுங்கிலேயே இருக்கணும்னு எதிர் பார்க்கிறவனுக்கும் absurdஆக இருப்பது ஒரு ஒழுங்கில்லாததாய்த் தோன்றலாம். அதனால இன்றைய சூழல்ல விளக்கம் தர்றது அதாவது interpretations தவிர்க்க முடியாததாகிப் போகிறது. இதற்குக் காரணம் பகையான ஒரு சமூகத்தில் கவிஞன் அந்நியமாகிப் போனதாலா? அல்லது கவிதைங்கற ஒரு அறிவுத்துறையிலே, மற்ற அறிவுத் துறைகளின் பாதிப்புகள், உதாரணத்திற்கு சைக்காலஜி, பெயிண்டிங், இசை மற்றும் ஆஸ்ட்ரோஃபிஸிக்ஸ், டைம் இந்தமாதிரி விஷயங்கள் கலந்துவிட்டது காரணமா?

ஆத்மாநாம்: இதில அந்நியமாகிப் போறதுங்கறது அம்சம் பல நூற்றாண்டுகளாகவே மனிதன் ஒரு சமூகத்திலிருந்து அந்நியமாகிப்போய் வரான்.

அதனால ஒவ்வொரு காலகட்டத்திலேயும் அந்நியமாதல்ங்கற அந்தவிஷயம் உணர்ந்தோ உணராமலோ நடந்திருக்கு. அவன் எழுத் தாளனாயிருந்தா எழுத்திலேகொண்டுவரான். ஓவியனா இருந்தா அதை ஓவியத்துல கொண்டுவரான். அதனால் இந்த அந்நியமாதல்ங்கறதநாம பல ஆயிரம் வருஷங்களாகவே ஒரு விதத்துல உணர்ந்து வரோம். இந்திய சிற்பங்களில் இருக்கக்கூடிய சில புரியாத் தன்மைகள் - யாளி மாதிரி - இல்லாத மிருகங்கள் ...

பிரம்மராஜன்: புரியாத மிருகங்கள...

ஆத்மாநாம்: ஆமாம். புரியாத மிருகங்களைக் கொண்டுவரும்போது அந்த இடத்தில் அவன் அவனுடைய கற்பனையில் அந்நியமானதால்தான் அந்தமாதிரி கொண்டுவர முடிஞ்சிருக்கு. ஆனா இன்றைக்கு ஓருவன் அந்நியமாகிப் போறான்னா அதை அவன் முழுக்க முழுக்க உணர்றான்.

பிரம்மராஜன்: இல்ல... நான் கேக்கற கேள்வி ...

ஆத்மாநாம்: நீங்க கேக்கற கேள்வி பாதிப்புகள், ஓவியம் மற்றும் சைக்காலஜி போன்ற அறிவுத்துறைகள்லயிருந்து வந்த விஷயமான்னு ...

பிரம்மராஜன்: இல்ல... கவிதைங்கற துறையில ஒரு perceptive poet வேறுசில துறைகளை அனுமதிக்கிறான். தன் சிந்தனைக்குள்ள அப்படி அவன் அனுமதிக்கறதால கவிதைகள் சிக்கலாகறதான்னு கேக்றேன்.

ஆத்மாநாம்: இல்லை... அதில தெளிவுதான் வர முடியுமே தவிர...

பிரம்மராஜன்: தெளிவு கவிஞனுக்கு வர முடியும். இந்தத் துறைகள் பற்றித் தெரியாத ஒருவாசகனுக்குத் தெளிவின்மை வரக் காரணமாக இருக்க லாம் இல்லையா?

ஆத்மாநாம்: இருக்கலாம்.

பிரம்மராஜன்: வேறு ஏதாவது விளக்கம் தர முடியுமா? இதைத்தவிர inter- pretationsன் அவசியத்தைப் பற்றி ஏதாவது சொல்லமுடியுமா?

ஆத்மாநாம்: சில கவிதைகள் புரியாமயே போகிறபோது அதைப் புரிஞ்சிருக்கிற ஒருத்தர் வந்து விளக்க முற்படறார். அதாவது ஒருத்தருடைய சுய அனுபவமானது இன்னொருத்தருக்கு முழுக்க முழுக்கவோ இல்லை ஓரளவுக்கோ அந்த அனுபவத்தின் கிட்ட நெருங்கற மாதிரி இருக்கும்போது அந்தக் கவிதையை அவர் புரிஞ்சுக்கறார்னு சொல்ல முடியும். அதனால இது புரியாத சில வாசகர்களுக்கு விளக்க முற்படறார். இதன் மூலமா poetsக்கு quantity wise ஒரு contribution இருக்கு. உங்க கவிதைகளைப் புரியலைன்னு first readingல சொல் லிடறவங்க எவ்வளவோ பேர் இருக்காங்க. ஆனா அதுக்குத்தான் முன்னாலேயே 2அல்லது 3 தடவை படிக்கணும்னு சொல்லியிருக்கு. அப்பறம் உங்க interpretation பிரகாரமா ஒரு வாசகன் ஒரு கவிஞனின் அனுபவத்துக்கு இணையா தன்னை உயர்த்திக்கணும்கற ஒரு எதிர்பார்ப்பு வந்து அந்த இடத்துல இருக்கு. ஆனா நேரிடையா ஒரு வாச

கன் எங்கேயோ இருக்கான். ஐநூறு கிலோமீட்டர் தள்ளி இருக்கான். அவன் இந்தக் கவிதையைப் படிக்கிறான். அவனுக்கு அந்தக் கவிதை புரியுணும்னு சொல்லும்போது வேறு யாரோ ஒருவர் அந்தக் கவிதைக்கு விளக்கம் சொல்லறப்ப ஓரளவுக்கு உள்ள போறதுக்கு வாய்ப்பு கிடைக்குது. அந்த வகையில அந்தமாதிரி விளக்கங்கள் தேவை. ஏன்னு கேட்டா, கவிதைகள்ல இன்னைக்கும் நாம ஒரு புறப் படற நிலையிலேதான் இருக்கோம். நாம எந்த நிலையிலும் போய்ச் சேர்ந்திடலை.

பிரம்மராஜன்: எழுதப்பட்ட மொழி ஒரு குறியீடுன்னு நாம சொல்றோம். அதை ஒரு அடிப்படையாவெச்சு ஆரம்பிச்சா கவிதையும் எழுதப்பட்ட சொற்களால்தான் ஆகியிருக்கு. அப்ப கவிதைபுரிவதற்கான சாத் தியப்பாடுகள் என்னென்ன?

ஆத்மாநாம்: அகநோக்குப் பார்வைகள் கொண்ட கவிதைகள் சிலதுல மொழி வெறும் குறியீடா மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உதாரணமா ஆனந்தோட கவிதைல பறவை. அவரோட பல கவிதைகள்ல பறவை வருது. தொடர்ச்சியா வருது. So பறவைங்கறது ஒரு விஷயத்தைக்குறிப்பிடறது. அதாவது பறக்கறது. சுதந்திரமா பறக்கறது. எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாம பறக்கறது. அப்படிங்கிறதை அது குறிப்பிடறது. அந்த வகையில ஆனந்தோட கவிதைல பறவைங்கறது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை ஒரு முழு சுதந்திரத்தோட எங்கே வேணும்னாலும் திரியக் கூடிய வாய்ப்பை எதிர்நோக்கறது. அதனால மொழிப்பயிற்சி ஓரளவுக்கு இருக்கிறவாசகர்கள் குறியீட்டோட நியாயத்தையும் அர்த்தத் தையும் புரிஞ்சுக்க முடியும்.

பிரம்மராஜன்: ஆனா கவிதை எல்லோருக்கும் புரியல. புரியாத கவிதை எழுதறது ரொம்பத் தப்புங்கறமாதிரி சொல்றாங்களே அது பத்தி என்ன சொல்றீங்க? அப்ப எதுக்காக எழுதறீங்கனுகேக்கறாங்க. அதாவது உங்களுக்கே புரியாத அல்லது வாசகனுக்குப் புரியாத கவிதை எழுதறதுலஎன்ன பிரயோஜனம்னு கேக்கறாங்க. இது validஆன காரணமாக இருக்க முடியுமா? வாசகர் பக்கத்துல இருந்து.

ஆத்மாநாம்: ஒரு individualங்கறவனுக்கு நேரடியா ஒரு consciousல சில அனுபவங்கள் பதிவாயிருக்கு. சில அனுபவங்கள் sub-consciousல பதிவு ஆகியிருக்கு. இன்னும் சில அனுபவங்கள் அவனுக்கே புரியாம, தெரியாம அவனுடைய brain cellsல போய் record ஆயிருது. இப்ப அவனுக்குக் கனவுகள் வருது. அந்தக் கனவுகள்ல ஒரு ஊஞ்சல் வரது. அவன் சைக்கிள் ஓட்டிண்டு போறான். இல்ல groundல இருக்கானோ, இல்ல யாருமில்லாத கடற்கரையில்தனியா இருக்கானோ, இந்த மாதிரி பல்வேறு காட்சிகளில் அவனே இருக்கான்.

பிரம்மராஜன்: யார்? அவன்... அந்தக் கவிஞனா?

ஆத்மாநாம்: இல்லை ஒரு individual. அவனுக்கு ஒண்ணுமே புரியல. அதை அவன் probe பண்ணிட்டு போகும்போது ஒண்ணு அவன் அதை

சைக்காலஜிகலா அப்ரோச் பண்ணனும். அவனோட life experienceல இருந்து அது கிடைக்கறதா இல்ல lifeக்கு அப்பாற்பட்ட விஷயங்களிலிருந்து கிடைக்கற experienceல இருந்து இந்த மாதிரி ஞாபகங்கள் வருதான்னு அவனுக்கே தெரியாது. அந்த நேரத்தில் அவன் creative writerஆக இருந்தா சில விஷயங்கள் intuitiveஆக புலனாறது. அதை கவிதைல கொண்டுவரபொழுது அது complex metaphor ஆகவோ இல்ல complex imageஆகவோ இருக்கறதுக்கு possibilities இருக்கு. இதை ஒருத்தன் புரிஞ்சுக்கணும்னா அது அந்தக் கவிஞனுக்கே immediate ஆக சாத்தியம் இல்லை. So வாசகன் அந்த இடத்துல கொஞ்சம் தேட வேண்டியிருக்கு. ஆனா அதுக்கு ஏதாவது ஒரு நாள் ஒரு சைக்காலஜிஸ்டோ இல்ல brain chemist டோ ஒரு விளக்கம் தர முடியும். ஆனா அதுகூட ஒரு definite answer என்று கூற முடியாது. இவன், இவனோட அர்த்தம்தான் முழுமையான அர்த்தமாக இருக்க முடியும். அது கிடைக்கிற வரைக்கும் அந்தக் கவிதையை அவன் வாசிச்சிட்டே இருப்பான். அவ்வளவுதான்.

பிரம்மராஜன்: இப்படிச் சொல்லலாமா? அதாவது ஒரு கவிஞன் தனக்கான ஒரு பிரச்சனைக்குத் தீர்வு கொண்டு வருவதன் மூலம் பல மனிதர்களுக்கான, பல தனிநபர்களுக்கான தீர்வைக் கொண்டு வரான் அப்ப டின்னு F. R. லீவிஸ், T. S. எலியட்டின் கவிதைகளைப் பற்றிச் சொல்லுவார். அந்த மாதிரி இந்த இருண்மை அல்லது புரியாத தன்மை, conscious, sub-conscious இன்னும் pre-conscious statesல இருக்கிற சில மன நிலைகளை ஒரு கவிஞன் சொல்லறப்போ, அதை முதல்முறை படிக்கற வாசகனுக்குச் சிரமம் ஏற்படலாம். ஆனா அதே கவிதையை அனுபவம் ஏற்பட்ட பிறகு பத்து வருஷம் கழிச்சுப் படிக்கறான்னு வச்சுக்குவோம், அப்ப அந்த கவிதை புரியலாமில்லையா? இந்தக் காரணத்துக்காக அது புரியறதோ புரியலையோ, உபயோகமோ இல்லையோ அதை அந்தக் கவிதையை வாழ்வுக்கு கொண்டுவரது, to bring it into existence அவசியம்தான்னு எனக்குப் படறது.

ஆத்மாநாம்: கண்டிப்பா நாம் காத்திருக்கணும்தான்.

பிரம்மராஜன்: எதுக்கு? கவிதை புரியறதுக்கா?

ஆத்மாநாம்: ஆமா, புரியதுக்காகக் காத்திருக்கணும். ஆனா அதுக்காகப் புரியாத கவிதைகள்தான் கவிதைகள்னு நான் ஒத்துக்கமாட்டேன்.

பிரம்மராஜன்: சரி.

ஆத்மாநாம்: இன்னும் எனக்கு, நான் இருக்கக்கூடிய சமூகத்துல எந்த அளவுக்கு நான் முரண்பட்டிருக்கேன் அல்லது ஒத்துப்போறேன்னு விஷயங்கள் வரும்போது அதுக்கு நான் நேர்மையா இருக்கேன்னா அதை நான் கவிதைல கொண்டுவந்திருக்கணும். அதைச் செய்யாம நான், வெறும் எனக்குள்ள இருக்கற பிரச்சினைகளை மட்டுமே வச்சி ருக்கேன்; அது வந்து பத்து வருஷமோ இல்ல 20 வருஷமோ கழிச்சுப் புரியும்னு, இல்ல வேற யாராவது சைக்காலஜிஸ்டோ, சைக்கியாட்ரிஸ்டோ வந்து அதை interpret பண்ணுவான் அப்படின்னு நான் காத்

திருக்கேன்னு சொன்னா அது முழுமையான வாழ்க்கையை வெளிப்படுத்தினதா ஆகாது. இரண்டும் balancedஆக இருக்கணும்.

பிரம்மராஜன்: கவிதைகள் சில சமயம் அரூபத்தன்மை பெறுகின்றன. எடுத்துக்காட்டா abstract paintings போல, நம் ராகங்களின் வடிவைப் போல, Symphoniesஐ போல, இந்த மாதிரியா இருப்பதற்கு வேறுபட்ட அர்த்தங்களைக் கொடுக்கறாங்க. அதாவது கவிஞர் intend பண்ணாத அர்த்தங்களை வேற கொடுக்க வேண்டியிருக்கு. அப்படிக் கொடுக்கும்போது கவிஞனின் கவித்துவக் கருத்துருவத்துக்குப் பாதகம் விளையாதா? அவன் என்ன நினைச்சான்கறதுக்கு?

ஆத்மாநாம்: எந்த விதமான பாதகமும் விளையாது.

பிரம்மராஜன்: எப்படி?

ஆத்மாநாம்: ஒரு கவிதைக்கு நாலு பேர் நாலு விதமான பொருள் கொடுக்கறாங்கன்னு வச்சுப்போம். இவன் இவனுக்கு intuitiveஆகப் புரியற போதுதான் அந்தக் கவிதைக்கு ஒரு பொருளைக் கொடுக்க முடியும். அதுவரைக்கும் அந்த நாலு பேர் கொடுக்கறதையும் இவன் ஒரு listener எப்படி respond பண்றாங்கிற levelல அதை observe பண்ணுவானே ஒழிய இவன் அதை interpret பண்ணலை. நாலு பேர் நாலு பொருளைக் கொடுக்கறாங்க. நாலு பேரும் நாலு different persons ஆக இருக்கறதால அவங்கவங்க தங்கள் life styleக்கு ஏத்தபடி அதுக்குப் பொருளைக் கொடுக்க முடியும். So அந்த நாலு interpretationsம் அவங்கவங்க அளவிலே சரி, தப்புன்னு கணிக்க முடியாது. இந்தப் புரியாத தன்மைங்கறது ஒரு மனுஷனுக்கு ஆதிகாலத்துல இருந்து இன்னிவரைக்கும் இருந்திண்டுருக்கற விஷயம். இந்த வாழ்க்கையே எனக்கு விளங்கலை, இதுக்குப் பொருளே இல்லை, அப்படின்னு சொல்ற தன்மை பல ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே இருந்திட்டிருக்கு. இந்த வாழ்க்கைக்கான அர்த்தத்துக்குத்தான் பல சமயங்களும், பல புத்தங்களும், பல இலக்கியங்களும் முயற்சி செய்யறது. அதனால இந்த வாழ்க்கைக்கான முழுப்பொருளை... அவன் எந்த அளவுக்குத் தன்னோட வாழ்க்கைக்கு நேர்மையானவனா இருக்கான்கறதை வச்சுதான்கணிக்க முடியும். மத்தபடி எந்த விதமான அளவுகோலும் இருக்கவே முடியாது. So நாலு பேர்நாலு விதமா பொருள் கொடுத்தாலும்கூட அந்தக் கவிதைக்கு என்னிக்காவது ஒரு நாள் சரியானபொருள் கிடைக்கும்னே நான் நினைக்கிறேன்.

பிர:அதாவது அந்தக் கவிஞர் intend பண்ணின அளவுக்கு அந்த meaning இருக்குமா? இல்லை அதைவிடவும் அழகாகூடக் கொடுக்க முடியுமா?

ஆத்மாநாம்: ம்ம் அதைவிட அழகாகக்கூடக் கொடுக்க முடியும்...

பிரம்மராஜன்: ஒரு தடவை டி. எஸ். எலியட்டோட Love Song of Alfred J. Prufrockக்கு ஒருத்தர் interpretation எழுதினார். அதைப் படிச்ச எலியட் இது ரொம்ப ஜோரா இருக்கு. ஆனா நான் இப்படி நினைக்கவே இல்

லைன்னு சொல்லிட்டார். சில சமயம் interpretations கவிதைகளையே enhance பண்ற அளவுக்கு வந்துடுது.

ஆத்மாநாம்: ஆமாம்.

பிரம்மராஜன்: Committed poetryன்னு சொல்றாங்க இல்லையா? அதை ஈடுபடுத்திக்கொண்ட கவிதைகள்னு மொழிபெயர்க்கலாம். அந்தமாதிரி தமிழ்ல ஏதும் எழுதப்பட்டிருக்கா?இது முதல் கேள்வி. ஒரு துணைக் கேள்வி: மேற்கத்திய நாடுகள்ல இந்தமாதிரி எழுதப்பட்டிருக்கா? அவைகளின் தரம் எப்படி? நீங்க நிறைய மேற்கத்திய கவிதைகளைப் படிச்சிருப்பீங்கங்கிற நம்பிக்கையில் இதைக் கேக்கறேன்.

ஆத்மாநாம்: Committed poetryன்னு சொல்றப்ப முழுக்க முழுக்க ஒரு கவிஞன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டால் ஒழிய கவிதைகள் சாத்தியமே கிடையாது. அதுக்குமேல நாம் committed poetryன்னு சொல்றப்ப, ஒரு social commitmentஐ refer பண்ற மாதிரி ஆயிடறது.

பிரம்மராஜன்: Social commitmentனா சமுதாயத்துக்கு உண்மையா இருக்கறது...

ஆத்மாநாம்: சமூகத்துல ஈடுபாடோட நேர்மையா இருக்கறதுன்னு சொல்லலாம். சமூகத்துல ஈடுபாடு கொண்ட கவிதைகள் ஒரு புறம். இன்னொருபுறம் தன்னைப் பற்றித் தேடலுடன் கூடிய கவிதைகள். இரண்டுமே committedதான். ஆனா ஒரு கவிஞன் தன்னைப் பற்றி மட்டுமே தேடிக்கொண்டிருந்து தனக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவு பற்றி எதுவும் கூறாமல் இருந்தால், அந்தமாதிரிக் கவிஞர்கள் காலப்போக்கில் தள்ளப்பட்டுவிடுவார்கள். ஆக, ஒரு கவிஞனை முழுமையான கவிஞன்னு சொல்லணும்னா அவனுக்கு social ஆகவும் ஒரு commitment இருக்கணும் personal ஆகவும் ஒரு commitment இருக்கணும். ஒரு angleல மட்டும், வெறும் social commitment அல்லது Personal commitment மட்டும் இருந்தா முழுக்கவிஞன்னு சொல்லிட முடியாது.

பிரம்மராஜன்: முழுமையடையாத கவிஞன்னு சொல்லிடலாமா...

ஆத்மாநாம்: முழுமையடையாத கவிஞன்னு சொல்ல முடியாது. அது implied. இரண்டும் ஒண்ணுதான்.

பிரம்மராஜன்: சரி, இன்னொரு கேள்வி உள்முகத்தேடல்னு சில கவிஞர்களின் கவிதைகளைச் சொன்னீங்க இல்லையா...

ஆத்மாநாம்: இல்ல, அகநோக்குப் பார்வைன்னு...

பிரம்மராஜன்: சரி, அகநோக்குப் பார்வை அல்லது உள்முகத்தேடல் அல்லது introvert outlook அல்லது inlookனு சொல்லலாம். நீங்க வேறகவிதைகள் இருக்குன்னு சொன்னீங்களே, அதாவது objective ஆக அல்லது புற நோக்கிலே எழுதப்பட்ட கவிதைகளும் இருக்குங்கறீங்க. ஆனா இப்ப நீங்க குறிப்பிட்ட கவிஞர்கள் நிறைய பேர் இந்த அகவயக் கவிதைகள் நிறைய எழுதக் காரணம் அது ஒரு typical ஆன

Indiannessன் பாதிப்போன்னு சந்தேகமா இருக்கு. இதைப் பத்திகொஞ்சம் தெளிவு பண்ண முடியுமா?

ஆத்மாநாம்: பொதுவா கவிதையை seriousஆக எடுத்திட்டிருக்கிற கவிஞர்கள் மிகக்குறைவா இருக்கற இந்த நேரத்துல, சில கவிஞர்கள்தான் committedஆக இருக்காங்க. அவங்க அகநோக்குப் பார்வை கொண்ட கவிஞர்கள் ஆனாலும் சரி, புறவயப்பட்ட பார்வை இருக்கற கவிஞர்கள் ஆனாலும் சரி, மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்காங்க. அவங்க கவிதைகள்ல புறவயமான பாதிப்புகள் இருக்கக்கூடிய கவிதைகள் அதிகமாக இல்லன்னு சொல்றது ஒரு பொதுவான முறைல சொல்லக்கூடிய குற்றச்சாட்டாகத்தான் எடுத்துக்க முடியும். புறவயமான கவிதைகளை எழுதச் சொல்லி எதுவும் force பண்ண முடியாது. எந்த state ஆலயும் force பண்ண முடியாது.

பிரம்மராஜன்: Stateன்னா அமைப்புன்னு சொல்லலாமா...

ஆத்மாநாம்: ம. எந்த அமைப்பாலயும் force பண்ண முடியாது. அதனால தான்ஜோசப் ப்ராட்ஸ்கி போன்ற கவிஞர்கள் தங்கள் தேசத்தை விட்டு வேற தேசத்துக்குப் போய் கவிதைகள் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் உருவாறது. Commitmentங்கறது அவங்ககவிதைக்கு அவங்க committedஆக இருக்காங்களா இல்லையான்னுதான் பார்க்க முடியுமேதவிர மற்றபடி social commitmentஓட எழுதறாங்களா இல்லையான்னு பாக்க முடியாது. அவங்களே மனிதாபிமான அடிப்படைல எழுதினாங்கனா அதை நாம வரவேற்கலாம், அவ்வளவுதான். Force பண்ண முடியாது.

bramarajan_thumb[3]பிரம்மராஜன்: சமூகத்துல ஈடுபடுத்திக்கிட்ட எழுத்துக்கள்... அதனோட வெளிப்பாட்டு முறைக்கும், romanticஆன வெளிப்பாட்டு முறைக்கும் தொடர்பிருக்கா? அப்படி வந்து ஈ டுபடுத்திக்கொண்ட எழுத்துக்கள் எல்லாம் romanticஆகதான் வெளிப்பட முடியுமா? குறிப்பா நீங்க வானம் பாடிக் கவிஞர்கள் பற்றி ஒரு சின்ன குறிப்பு கொடுத்தா தேவலாம்னு தோணுது.

ஆத்மாநாம்: பொதுவா சமூகத்திலே ஈடுபடுத்திக்கொண்ட கவிதைகளுக்கும், romanticஆன கவிதைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இன்னிக்கு romanticஆக எழுதப்படக்கூடிய புரட்சிகரமான கவிதைகள் சினிமாப் பாடல்லகூட இருக்கு. ஆன அதையெல்லாம்நாம கவிதைகளா எடுத்துக்கறது கிடையாது. Romanticஆன வெளிப்பாடு சில குறிப்பிட்ட கவிதைகளுக்குதான் பொருத்தமானதா இருக்க முடியும். சமூக ஈடுபாடுங்கறபோது அந்த இடத்துலஅது romanticஆக வந்தா அது ரொம்ப ஆபாசமாதான் இருக்க முடியும். இந்த வகைல நாம வானம்பாடிக் கவிதைகளைப் பார்க்கும்போது, பொதுவா அவங்க சமூகப் பிரச்சினைகள் பற்றித்தான் எழுதுறாங்க. ஆனா சமூகப் பிரச்சினைகள் எந்த அளவுக்கு ஆழ்ந்த உணர்ந்து எழுதியிருக்காங் கன்னு தெரியல. அவங்க usage of language ரொம்பவும் romanticஆக இருக்கறதால அந்தக் கவிதைகள் நீர்த்துப்போயிடறது. அவை எழுதப்

படுவதின் முக்கியமான purposeஐயோ அவை serve பண்ணுவதில்லை. ஆனா அதில சில exceptionsம் இருக்கும்.

பிரம்மராஜன்: தமிழ்ச் சூழல்ல ... ஏன் இந்தியச் சூழல்லயே நெரூடாவோட statureக்கோ, லோர்காவோட integrityக்கோ அல்லது ஸ்டீவன் ஸ்பென்டரோட் integrityக்கோ ஒரு கவிஞனை நம்மால பார்க்க முடியலை. Outputலயும் சரி, கவிதையை சாதிச்ச முறையிலேயும் சரி, அவங்க நடத்திய வாழ்க்கை முறையிலும் சரி, அவங்கமாதிரி இங்கு ஒருத்தரையும் நாம பார்க்க முடியலை. ஏதாவது காரணம் இருக்க முடியுமா?

ஆத்மாநாம்: அங்க பல மாற்றங்கள் உருவாகுது.

பிரம்மராஜன்: எதில... ?

ஆத்மாநாம்: அவங்க systemல்

பிரம்மராஜன்: System of what?

ஆத்மாநாம்: அவங்க வாழ்க்கை முறைல, அதில பல விதமான மாற்றங்கள் அடிக்கடி உருவாறதால அவங்க உடனடியா வெளிப்படுத்திக்கறாங்க. அந்த மாற்றங்களுக்கு அவங்க react பண்றாங்க. ஆனா இந்தியால எவ்வளவோ விதமான மாற்றங்கள் வந்திட்டிருந்தாலும், இவ்வளவு பெரிய நாடா இருந்து இவ்வளவு மொழிகள் இருக்கும் போது, நீங்க சொல்ற statureஉடன் ஒரு poet உருவாற அளவுக்குப் பாதிப்புகள் இல்ல. National levelல்ல ரவீந்திரநாத் தாகூர் ஒருத்தர் பேசப்பட்டிருக்கார். ஆனா பாரதியாரையோ இல்ல ஆந்திராவில, கர்நாடகாவில, இல்ல மஹாராஷ்ட்ராவில் இருக்கிற கவிஞர்களையோ அந்த levelல்ல பேசப்பட்டதாசொல்ல முடியல, அதை posterityதான் சொல்லணும். நாம ஒண்ணும் சொல்ல முடியாது.

பிரம்மராஜன்: அதாவது பின்னால வரவங்கதான் சொல்லணும்...

ஆத்மாநாம்: ஆமாம்.

பிரம்மராஜன்: Mathew Arnoldங்கற ஆங்கிலக் கவிஞர் - விமர்சகர் தன்னுடைய Preface to the Study of poetryங்கற சின்ன கட்டுரையோட முன்னுரையில (1853ல் வெளியானது) தன் காலத்துக்குச் சற்று பின்னால மதத்தோட இடத்தைக் கவிதை நிரப்பிடும்னு சொன்னார். இது டார்வினோட Origin of Species வெளியானதோட காரணமா இருக்கலாம். அந்தச் சமயத்துல கொஞ்சம் மதம் ஆட்டம் கண்டுபோனதால இதைச் சொல்லியிருக்கலாம். அதுக்கும் இன்றைய தமிழ்க் கவிதைக்கும் அல்லது பொதுவா உலகக் கவிதைக்கும் ஏதாவது relevance இருக்குமா?

ஆத்மாநாம்: கண்டிப்பா இருக்கு. முக்கியமா நம்ம நாட்டிலேயே இருக்கு. ஏன்னா நம்ம cultureல் வந்து dogmatic ideas, religious beliefs இதெல்லாம் ஒரு விதமான அர்த்தத்தையும் வாழ்க்கைக்குக் கொடுக்கறது கிடையாது. அந்த மாதிரி நேரத்துல ...

பிரம்மராஜன்: அதாவது வெறும் சடங்காகிப்போன மதத்தைப் பத்திச் சொல்றீங்க இல்லையா? நம்ம இந்து மதம் வாழ்தலே மதமாகியிருக்கிற ஒரு மதம். பின்னால ஏற்பட்டசில விளைவுகளினால அது வெறும் சடங்காகிப் போச்சுன்னு தாகூரே தன்னுடைய பல கட்டுரைகள்ல சொல்லியிருக்கார். அந்த மாதிரிச் சடங்காகிப்போன ஒரு மதத்தை replace பண்ற capacity, ஒரு தகைமை கவிதைக்கு இருக்குன்னு நீங்க நம்பறீங்களா?

ஆத்மாநாம்: அது இப்ப இல்லன்னாலும்கூட இன்னும் literacy rate increase ஆகும்போதும், அப்பறம் literatureல interest improve ஆகும் போதும் அதுலயும் குறிப்பாகக் கவிதைகள்ல interest அதிகரிக்கும் போதுதான் அதைச் சொல்ல முடியும். இப்போ immediateஆக poetry religionஐ replace பண்ணிடும்னு சொல்ல முடியாது. கண்டிப்பா replace பண்ணும், இந்த qualifications வரும்போது, கவிதை தன்னுடைய முழுப் பரிமாணத்தோட மக்களை ஈர்க்கும்போது அந்த effect வர முடியும்.

பிரம்மராஜன்: நாம இப்ப புதுக்கவிதை பத்தியே பேசி முடிக்காம இருக்கோம். ஆனா மேற்கில 1940களிலேயே இந்தப் புதுக்கவிதைகளையெல்லாம் தாண்டி அதாவது Verse-libre/Free-Verse என்கிறதையெல்லாம் தாண்டி anti-poetryங்கற விஷயம் வந்துருச்சு. அந்த மாதிரியான ஒரு வளர்ச்சி நிலை தமிழுக்கு இருக்கா? இது பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?

ஆத்மாநாம்: எதிர்க்கவிதைங்கறதைப் பத்தி இன்னும் எந்த விதமான தெளிவான அபிப்ராயமும் form ஆகல. ஆனா இப்போ கவிதைகள் போற போக்கைப் பார்த்தா வேறவிதமான கவிதைகள் உருவாகும்னு சொல்ல முடியாது; இந்த எதிர்க்கவிதைகள் அப்படிங்கறஒரு வடிவத்துக்குள்ள தான் வர முடியும்னு தோணறது.

பிரம்மராஜன்: இன்னிக்கு எப்படி நவீன ஓவியத்தைப் பயன்படுத்தறவங்க அல்லது பயில்றவங்கன்னு சொல்லலாம் - அவங்க பல பேருக்கு மரபு வழியான ஓவியத்தைப் பத்தினபயிற்சி இல்லாம இருக்காங்க அல்லது புறக்கணிக்கறாங்க. அதே மாதிரி இன்னிக்குத் தமிழ்ல பேரிலக்கியங்கள் பற்றி அறிவு இல்லாமலே நிறைய பேர் கவிதைகள் எழுதிட்டிருக்காங்க. இவங்களோட கவிதைகள்லாம் எப்படி இருக்கும்? அதை identify பண்ண முடியுமா?்

ஆத்மாநாம்: மரபை அறிஞ்சு அதை மீறது ஒண்ணு. அந்த மாதிரிதான் இப்பநிறைய பேர் செய்யறாங்க. மிகச் சிலரே மரபு தெரியாம புதுசா அவங்க கவிதைகள்னு feel பண்ணறதை எழுதறாங்க. அவங்க கவிதைக்கும் இவங்க கவிதைக்கும் content levelல்ல variation இருக்கறதுக்கு possibilities கிடையாது. மரபை மீறறவனும் அவனுக்கு ஒரு clarityக்காகத்தான் அதைச் செய்யறான். ஆனா மரபைத் தெரியாதவன் மரபை மீறின கவிதைகள் இருக்கு இல்லையா? அதைப் படிக்கும்போது அவன் feel பண்ணக்கூடிய விஷயங்களைப் பொறுத்து அவன் கவிதைகள் எழுதறான் இரண்டு பேருமே ஒரே விஷயத்தைப் பத்திதான்

கவிதைகள் எழுதிண்டு வருவாங்க. அதுல வித்யாசம் இருக்கறதுக்கு வாய்ப்பு கிடையாது. மரபு தெரிஞ்சாதான் கவிதை எழுதலாம்கற qualification செல்லுபடி ஆகாது.

பிரம்மராஜன்: ஒரு கலாச்சாரப் பாரம்பர்யம் வேண்டாம்னு சொல்றீங்களா? T. S. எலியட் கவிஞர்கள் ஓரளவுக்காவது படிச்சிருக்கணும்னு நினைக்கறார். எழுதியிருக்கார். அதாவது அவங்களுடைய creativityக்கு அல்லது spontaneityக்குக் குந்தகம் விளைவிக்காத அளவுக்கு அவர்கள் பொது விஷயங்களைத் தெரிஞ்சு வெச்சுருக்கனும்னு, awareஆக இருக்கனும்னு சொல்றார்.

ஆத்மாநாம்: மரபு பள்ளிக்கூடங்கள்ல இருந்தே ஆரம்பம் ஆறது. தமிழ்ல எழுதக்கூடிய ஒரு கவிஞனோ அல்லது எழுத்தாளனோ மரபு ஓரளவுக்குத் தெரிஞ்சுதான் எழுதறான். அந்த வகைல மரபு முழுக்க முழுக்கத் தெரியாதுன்னு சொல்ல முடியாது. ரொம்பவும் மரபு பற்றித்தெரியும்னு confidentஆக சொல்றவங்களோட complete பண்ண முடியாமே இருக்கலாம். ஆனா அவங்களுக்கும் ஓரளவு மரபு தெரிஞ்சுதான் அவங்க புது விஷயங்களை எழுதறாங்க.

பிரம்மராஜன்: இந்த மாதிரியான ஆழ்ந்த கலாச்சாரப் பாரம்பரியம் எந்தெந்த கவிஞர்கள்கிட்ட இருந்து வெளிப்பட்டிருக்குன்னு நீங்க நினைக்கிறீங்க?

ஆத்மாநாம்: ஞானக்கூத்தன், சுந்தர ராமசாமி, நகுலன், சிவராமு அப்படின்னு சொல்லலாம்.

பிரம்மராஜன்: சரி, Major poets அப்படிங்கற கேள்வியை கவிதை வளர்ந்திட்டிருக்கற அந்த கால கட்டத்துல எழுப்பறது தகுதியா இருக்குமா?

ஆத்மாநாம்: என்னைப் பொறுத்தவரைக்கும் இப்ப எழுதற அத்தனை பேருமே Minor Poetsதான்னு தோண்றது. காவியங்களோ, மிக நீண்ட கவிதைகளோ ரொம்ப உள்ளாழ்ந்த கருத்துக்கள் இருக்கக்கூடிய கவிதைகளோ எழுதக்கூடியவங்களைத்தான் Major Poetனு சொல்லலாம். இப்பொ எழுதக்கூடிய கவிஞர்கள் முக்கால்வாசி பேர் spontaneousஆக எழுதறாங்க, இல்லை technicalஆக அவங்களுக்கு இருக்கற knowledgeஐ வெச்சு எழுதறாங்க, மற்றபடி major poetsங்கற categoryல கம்பன் மாதிரியோ, இளங்கோவடிகள் மாதிரியோ, திருவள்ளுவர் மாதிரியோ, பாரதி மாதிரியோ இப்ப இருக்கற கவிஞர்கள் யாரையுமே சொல்ல முடியாது.

பிரம்மராஜன்: அப்ப நீண்ட காவியங்கள் எழுதினாத்தான் ஒருவன் major poetஆக இருக்க முடியுமா?

ஆத்மாநாம்: ஒரு கவிஞனோட மொத்தப் படைப்பையுமேகூட ஒரு நீண்ட காவியமா எடுத்துக்கலாம். ஒரு தொகுப்பை நீங்க நீண்ட காவியமா எடுத்துகிட்டீங்கனா அதுல ஒரு forceம், clarityம், total understanding of lifeம், அப்பறம் various aspectsthat attract life இதைப் பத்தின understanding இருந்தாத்தான் நீங்க அவரை major poetன்னு சொல்ல

முடியும். அந்த வகைல பாத்தா இப்பொ சிறு சிறு தொகுப்புகள்தான் வந்திருக்கும். So we cannot say anything now.

பிரம்மராஜன்: கவிதை ஒரு தொழிற்சாலை மாதிரி இன்னிக்கு ஆயிருச்சு. நிறைய உற்பத்தி செய்யப்படுது. அப்படிப்பட்ட இந்தக் கட்டத்துல நாம் இனம் பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுப்போகுது. நீங்க ஒரு கவிதை இதழோட ஆசிரியர்ங்கற முறைல இதற்கு ஏதாவது அளவுகோல் வச்சிருக்கீங்களா? எப்படி நீங்க கவிதைகளைத் தேர்ந்தெடுக்கறீங்க?

ஆத்மாநாம்: தொழிற்சாலைன்னு குறிப்பிடக்கூடிய கவிதைகள் எல்லாமே துணுக்காகவோ இல்லை விடுகதைகளாகவோ இந்த வகைப்பட்ட கவிதைகளாகவோதான் இருக்கு. அந்தமாதிரி கவிதைகள் மொத்தத்தையும் நீங்க ஒதுக்கித் தள்ளிட்டுப் பாத்தீங்கனா நாங்க editபண்ற பத்திரிகைக்கு வரக்கூடிய கவிதைகள்ல வந்து ஒரு use of language, idea, thoughtஅப்பறம் ஒரு inner beautyன்னு சொல்றாங்க - அதை explain பண்றது கஷ்டம் - அந்த inner beauty, உள்ளழகு ஒரு organic element, அந்த poetryயோட structureல இருக்குன்னா அந்தக் கவிதையை நாங்க பிரசுரிக்கிறோம். அதுல ஏதாவது ஒரு சில elements இருந்தாக்கூட போடறோம். அந்த வகைலதான் கவிதைகளைத் தேர்வு செய்ய முடியறது, வேற எந்த set-rulesம் கிடையாது.

பிரம்மராஜன்: ஒரு வாசகனோட ‘status-quo’வை disturb பண்றது நல்ல கவிதைங்கற அளவுகோலை ஒரு உச்சமான தேர்வா வைக்கலாமா?

ஆத்மாநாம்: கண்டிப்பா. இந்த statement உடன் நான் முழுக்க ஒத்துப் போறேன்.

பிரம்மராஜன்: நல்ல கவிதை ‘இரும்பு - மனோநிலை’யை disturb பண்றது...

ஆத்மாநாம்: பாதிக்கிறது.

பிரம்மராஜன்: அது தன்னோட உலகத்துக்குத்தான் வாசகனை இழுக்கிறது. இதுக்கு எதிர்மறையா ஒரு நர்சரி ரைமை எடுத்துக்கலாம். பா - பா ப்ளாக் ஷீப்ங்கற ரைமைப் படிக்கும்போது நாம் disturb ஆகறதில்லை. ஓஹோ! அப்படியான்னுதான் கேக்கறோம். ஆனா சில கவிதைகளைப் படிக்கும்போது நாம நம்பளையே மறந்துடறோம்...

ஆத்மாநாம்: We are moved.

பிரம்மராஜன்: ஆமாம். We don’t forget ourselves...

ஆத்மாநாம்: We are moved.

பிரம்மராஜன்: நாம கவிதையோட உலகத்துக்கு எடுத்துட்டுப் போகப்படறோம். உதாரணமா அக்னிக்குஞ்சொன்று கண்டேன்கற பாரதியோட கவிதையைச் சொல்லலாம். கவிதையை இனம்காணறதுக்கு இதை ஒரு நல்ல அளவுகோல்னு சொல்லலாம் இல்லையா?

ஆத்மாநாம்: கண்டிப்பா. இது மிக முக்கியமான அளவுகோல். இதை வெச்சுதான் நாம் கவிதை இயலையே தீர்மானம் செய்யமுடியும். அப்படின்னுதான் நினைக்கிறேன்.

பிரம்மராஜன்: முதல் நபர் பார்வையில் சொல்லப்படற கவிதை, முன்னிலைப்படுத்தப்பட்ட கவிதை, இவை இரண்டுமே அதிகம் சிரமம் தரவில்லை. இது இல்லாம narratorனு ஒருத்தர் இல்லாத ஒரு omniscient view, point of view அந்த மாதிரி narratorம் இல்லாம, நானும் இல்லாம, நீயும் இல்லாம சிலர் கவிதை எழுதறாங்க. அந்த கவிதைகள் ரொம்ப சிக்கலா இருக்கு. இதுபற்றி?

ஆத்மாநாம்: இந்தமாதிரி கவிதைகள் ரொம்ப கம்மி. ஒண்ணு தன்னிலைபடுத்தியோ இல்லைனா முன்னிலைப்படுத்தியோதான் பெரும்பாலான கவிதைகள் எழுதப்படறது. ஏன்னா அதுதான் simpleஆக இருக்கு communicationக்கு. இப்போ வெறும் description மட்டும் ஒரு கவிதைல நீங்க குடுக்கறீங்கனா அது எப்போதுமே complexஆகதான் இருக்கும்னு சொல்லமுடியாது. ஏதாவது சில சமயம்தான் complexஆக இருக்கும். அந்தமாதிரிக் கவிதைகள் எல்லாமே சிக்கலா இருக்கும்னு என்னால ஒத்துக்க முடியாது. ஆனா இந்த மாதிரிக் கவிதைகள் சிக்கலாறதுக்கு முதல்ல நாம obscurity பத்தி பேசின விஷயங்களைத்தான் மறுபடியும் நினைவுபடுபத்திக்கணும்.

பிரம்மராஜன்: தமிழ்ல கவிதை இயக்கமா வளர்ந்திருக்குன்னு உங்களால சொல்ல முடியுமா?

ஆத்மாநாம்: ஆரம்பத்திலிருந்தே ஒரு இயக்கமாதான் கவிதை இருந்திருக்கு. ஆனா அதுல பல போக்குகள் உருவாகியிருக்கு. ஒவ்வொரு கால கட்டத்திலயும் ஒவ்வொரு விதமான போக்குகள் உருவாறது. ஒரு சிலர் யதார்த்தத்தைக் கடைபிடிச்சாங்க. சிலர் வேற வெளிப்பாட்டுமுறைகள்ல வித்தியாசம் காட்டினாங்க - படிமங்கள் மூலமா தங்களை வெளிப்படுத்திக்கமுயன்றாங்க. தமிழ்ல எப்போதுமே கவிதை இயக்கமாதான் இருந்திருக்குன்னு சொல்ல முடியும். ஆனா பல போக்குகள் இருக்கு. ஒரு போக்கு அழியறது. இன்னொரு போக்கு உருவாறது. இல்லனா இரண்டு மூன்று போக்குகள் parallelஆக வளர்ந்திட்டிருக்கு. இந்த மாதிரிதான் இயக்கத்தைப்பத்தி என்னால சொல்ல முடியும்.

பிரம்மராஜன்: கடைசியா இன்னொரு கேள்வி. நிறைய வார, மாதப் பத்திரி கைகள்லவர்ற கவிதைங்க கவிதையின் ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு என்ன விளைவைக் கொடுக்கும்?

ஆத்மாநாம்: கண்டிப்பா கவிதையோட ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு நீங்க சொன்ன கவிதைகள் அடிகோலாகாது. ஏன்னா அதுல போலியான கவிதைகள்தான் கவிதைகள்ங்கற பேர்ல வெளியாறது. அதைப்படிக்கறவங்க அதுதான் கவிதை அப்படின்னு நம்பற வாய்ப்புகள் அதிகமா இருக்கு, அதுல genuineஆன கவிதைகள். சிறு பத்திரிகைகள்ல எழுதக்கூடிய கவிஞர்களோட கவிதைகள் வரும்போது அவங்களுக்கு கொஞ்சம் differentஆன reading material கிடைக்கிறது. இப்பலாம் கவிதையை யாரும் ரொம்ப seriousஆக எடுத்துக்கறது கிடையாது அப்படின்னுதான் தோணறது. ஆனா பொதுவா நல்ல கவிதைக்கு வார, மாத பத்திரிகைகள்ல, பல லட்சக்கணக்குல விற்பனையாகிற பத்திரிகைகள்ல வரக்கூடிய கவிதைகள் குந்தகமாகத்தான் இருக்கும் எப்போதும்.

*****

ஆத்மாநாம் படைப்புகள் - பதிப்பாசிரியர்: பிரம்மராஜன்

May 11, 2013

ஒரு புளியமரம்-ஆத்மாநாம்

ஒரு புளியமரம்

ஒரு புளியமரம் சமீபத்தில் என் நண்பனாயிற்று
தற்செயலாய் அப்புறம் நான் சென்றபோதுathmanam
நிழலிலிருந்து ஒரு குரல் என்னைத் தெரிகிறதா
திடுக்கிட்டேன் அப்புளியமரம் கண்டு
நினைவிருக்கிறதா அன்றொரு நாள்
நீ புளியம்பழங்கள் பொறுக்க வந்தபோது
என் தமக்கையின் மடியின் அயர்ந்துபோனாய்
அப்போது குளிர்ந்த காற்றை வீசினேனே
உன் முகத்தில் உடலில் எங்கும்
வா எப்படியும் என் மடிக்கு.

-o00o-

அந்தப் புளியமரத்தை

நேற்றிலிருந்து
அந்தப் புளியமரத்தை
வீழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்

முதலில்
புளியமரத்தின் உச்சியை அடைந்தார்கள்
சிறிய சிறிய கிளைகளை
முறித்துக்கொண்டார்கள்
இலைகள் மலர்கள்
உதிர உதிர சிறிய
கிளைகள் பூமியைத் தழுவின

சிறிய கிளைகள் இழந்த மரம்
அருவ உருவில்
வானத்தை
உறிஞ்சிக்கொண்டிருந்தது

மரத்திலிருந்து இறங்கியவர்கள்
ஒரு மாபெரும்
மரமறுக்கும் ரம்பத்தைக்
கொண்டுவந்தார்கள்

புளியமரத்தின்
அடியைக் குறிபார்த்து
கீறிக்கொண்டிருந்தார்கள்
பொடித்துகள்கள்
இருபுறமும் கசிய

நெடுமரத்தைச் சாய்த்தார்கள்
மீதம் உள்ள கிளைகளையெல்லாம்
வெட்டிவெட்டி அடுக்கினார்கள்

கட்டை வண்டியில் ஏற்றிப்
புறப்பட்டார்கள்

இலை தழைகளுக்கிடையே
ஒரு புளியஞ்செடி
தன்னைப் பார்த்துக்கொண்டது.

-o00o-

2083 ஆகஸ்ட் 11

என் கவிதை ஒன்று
இரண்டாயிரத்து எண்பத்தி மூன்றில்
கிடைத்தது
கடற்கரையில்
நானும் ஞானக்கூத்தனும்
பேசிக்கொண்டிருந்தோம்
சுண்டல் வாங்கிப் பிரித்தால்
காகிதத்தில் ஒரு கோடு
ஆத்மாநாம் எனும் வாசகங்கள்
கவிதை ஆரம்பம்
ஆச்சர்யத்துடன்
ஞானக்கூத்தனைக் கேட்டேன்
இன்னும் இங்கேவா இருக்கிறோம்
அவர்
சூளைச் செங்கல் குவியலிலே
தனிக்கல் ஒன்று சரிகிறது
என்றார்
என்ன இது வினோதம்
இருந்த இடத்திலேயே இருப்பது
என்றேன்
இருப்பதை உணர்வதே வாழ்க்கை
என்றார்
நகுலன் எங்கே என்றேன்
நவீனன் இறந்த மறுநாளே இறந்துவிட்டார்
என்றார்
உங்கள் சமீபத்திய கவிதை என்றேன்
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள
என்றார்
நன்றி என்றேன்
அப்பொழுதுதான்
ஒரு அணுகுண்டு வெடித்த
சப்தம் கேட்டது
இருவரும்
அகதிகள் முகாமிற்குத் திரும்பினோம்.

 

புத்தக விவரங்கள்:

ஆத்மாநாம் படைப்புகள்
பதிப்பாசிரியர்: பிரம்மராஜன்
டிசம்பர் 2008, காலச்சுவடு பதிப்பகம்.

நன்றி:சொல்வனம்

Mar 1, 2012

2083 ஆகஸ்ட் 11 - ஆத்மாநாம்

.

ஒரு புளியமரம்

ஒரு புளியமரம் சமீபத்தில் என் நண்பனாயிற்று
தற்செயலாய் அப்புறம் நான் சென்றபோது
நிழலிலிருந்து ஒரு குரல் என்னைத் தெரிகிறதா
திடுக்கிட்டேன் அப்புளியமரம் கண்டு
நினைவிருக்கிறதா அன்றொரு நாள்athmanam
நீ புளியம்பழங்கள் பொறுக்க வந்தபோது
என் தமக்கையின் மடியின் அயர்ந்துபோனாய்
அப்போது குளிர்ந்த காற்றை வீசினேனே
உன் முகத்தில் உடலில் எங்கும்
வா எப்படியும் என் மடிக்கு.

-o00o-

அந்தப் புளியமரத்தை

நேற்றிலிருந்து
அந்தப் புளியமரத்தை
வீழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்

முதலில்
புளியமரத்தின் உச்சியை அடைந்தார்கள்
சிறிய சிறிய கிளைகளை
முறித்துக்கொண்டார்கள்
இலைகள் மலர்கள்
உதிர உதிர சிறிய
கிளைகள் பூமியைத் தழுவின

சிறிய கிளைகள் இழந்த மரம்
அருவ உருவில்
வானத்தை
உறிஞ்சிக்கொண்டிருந்தது

மரத்திலிருந்து இறங்கியவர்கள்
ஒரு மாபெரும்
மரமறுக்கும் ரம்பத்தைக்
கொண்டுவந்தார்கள்

புளியமரத்தின்
அடியைக் குறிபார்த்து
கீறிக்கொண்டிருந்தார்கள்
பொடித்துகள்கள்
இருபுறமும் கசிய

நெடுமரத்தைச் சாய்த்தார்கள்
மீதம் உள்ள கிளைகளையெல்லாம்
வெட்டிவெட்டி அடுக்கினார்கள்

கட்டை வண்டியில் ஏற்றிப்
புறப்பட்டார்கள்

இலை தழைகளுக்கிடையே
ஒரு புளியஞ்செடி
தன்னைப் பார்த்துக்கொண்டது.

-o00o-

2083 ஆகஸ்ட் 11

என் கவிதை ஒன்று
இரண்டாயிரத்து எண்பத்தி மூன்றில்
கிடைத்தது
கடற்கரையில்
நானும் ஞானக்கூத்தனும்
பேசிக்கொண்டிருந்தோம்
சுண்டல் வாங்கிப் பிரித்தால்
காகிதத்தில் ஒரு கோடு
ஆத்மாநாம் எனும் வாசகங்கள்
கவிதை ஆரம்பம்
ஆச்சர்யத்துடன்
ஞானக்கூத்தனைக் கேட்டேன்
இன்னும் இங்கேவா இருக்கிறோம்
அவர்
சூளைச் செங்கல் குவியலிலே
தனிக்கல் ஒன்று சரிகிறது
என்றார்
என்ன இது வினோதம்
இருந்த இடத்திலேயே இருப்பது
என்றேன்
இருப்பதை உணர்வதே வாழ்க்கை
என்றார்
நகுலன் எங்கே என்றேன்
நவீனன் இறந்த மறுநாளே இறந்துவிட்டார்
என்றார்
உங்கள் சமீபத்திய கவிதை என்றேன்
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள
என்றார்
நன்றி என்றேன்
அப்பொழுதுதான்
ஒரு அணுகுண்டு வெடித்த
சப்தம் கேட்டது
இருவரும்
அகதிகள் முகாமிற்குத் திரும்பினோம்.

 

புத்தக விவரங்கள்:

ஆத்மாநாம் படைப்புகள்
பதிப்பாசிரியர்: பிரம்மராஜன்
டிசம்பர் 2008, காலச்சுவடு பதிப்பகம்.

Nov 7, 2011

உன் நினைவுகள் - ஆத்மாநாம்

காட்சி

முதலில் athmanam
நீதான் என்னைக்
கண்டுகொண்டாய்
எனக்குத் தெரியாது
மனிதர்களைப் பார்த்தவண்ணம்
முன்னே வந்துகொண்டிருந்தேன் 
உயிருடைய ஒரு முகத்துடன்
பளிச்சிட்டுத் திரும்பினாய்
பின்னர் நடந்தவைக்கெல்லாம்
நான் பொறுப்பல்ல
எந்த ஒருகணம் என்பார்வை உன்மேல் இல்லையோ
அந்த ஒரு கணம் முழுமையாக என்னைப் பார்ப்பாய்
அதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
மாமன் ஒருவன் உன்னை இடம்பெயர்க்க
காட்சிகள் மாற மாற
நானும் நீயும் ஒரு நாடகத்தை முடிக்கிறோம்.


உன் நினைவுகள்

எனினும் நான்
உற்றுப் பார்த்தேன்
கூர் வைரக் கற்கள்
சிதறும் ஒளிக் கற்றைகளை
வீசும் விளக்கை

அப்பொழுதேனும்
துடிக்கும் மனத்தின்
பிணைப்பினின்று மீள

முடியாது
இவ்விதம்தொடர்ந்திருக்க முடியாது என்று
நிற்கும் தரையின்
பரிமாணங்களைச் செதுக்கிய
ஓவியத்திற்குச் செல்வேன்
பழகிவிட்ட ஓவியமும்
கைவிடும்

உதிர முடியாத
காகிதப் பூக்கள்
வண்ணம் இழக்கும்

மெல்லிய ஒலியுடன்
நாடி நரம்புகளைத்
தொற்றிக் கொண்டு
சிறிது நேரம்
மூச்சளிக்கும் இசை

எழுத்துக் கூட்டங்களுக்கும்
தொடர்வேன்
ஏதேனும் ஒரு மூலையில்
உன் நினைவுகள்

என் அறையில்
நான் முடங்கிக் கிடக்கையில்
எப்பொழுதேனும்
அந்த உயிரிழந்த பஸ்ஸரை
அழுத்திச் சென்றுவிட்டாயோ
என்று மன மதிரும்

பின்னர்
உயிர்த்திருக்கும்
புட்களுடன்
தேடிக்கொண்டிருப்பேன்
அலையும் நினைவுகளில்

நன்றி: ஆத்மாநாம் படைப்புகள் (காலச்சுவடு பதிப்பகம் 2002)
உயிர்மை

Jan 6, 2011

விமலாதித்த மாமல்லனின் சிறுகதைகள்-ஆத்மாநாம்

இன்றைக்கு எழுதப்படிக்கத் தெரிந்த எவரும் குறைந்தபட்சம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறுகதைக்கு அறிமுகமாயிருக்க வேண்டும். அந்த அளவுக்கு பெரும்பத்திரிகைகள் கவர்ச்சி அரசியல் சினிமா மதம் மற்ற மசாலா அம்சங்களோடு வணிக இலக்கியத்தை காலம் தவறாது ஒரு உபாதையை நீக்கிக்கொள்வதுபோல் செயல் பட்டு வருகின்றன. இந்தப் போக்குகளிலிருந்து விடுபட்டு ஒரு ஈடுபாட்டுடன் கலை இலக்கியத்தைப் படைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு சிலரே. அப்படி உள்ளவர்களுக்கு இலக்கியத்தை செழுமைப்படுத்துவதுதான் முதல் நோக்கமாக இருக்கிறது. athmanam அவர்கள் வாழும் ஒவ்வொரு கணத்திலிருந்தும் கற்றுத் தேர்கின்றவற்றை கலா ரீதியாக இலக்கியமாகப் படைக்கும்போது வாழ்க்கையின் புதிய பரிமாணத்தைக் கண்டு கொள்கிறார்கள். கோடிக்கணக்கான ஊசிகளால் தைக்கப்பட்டுள்ள மனித மனத்தின் ஒரு ஊசியை எடுத்துப் பார்த்து மீண்டும் பொறுத்துகிறார்கள்.

நல்ல ஒரு கலைஞன் சூழலை மட்டும் முன் வைக்கிறான். தன்னுடைய கருத்தை அதில் திணிப்பதில்லை. எந்த ஒரு மரபையும் அவன் பின்பற்றுவதில்லை. தன்னையும் ஒரு மரபாக ஆக்கிக்கொள்வதில்லை. இப்படிப்பட்ட ஒருவனின் படைப்பு அது சிறுகதையோ, நாவலோ எதுவாக இருப்பினும் வாசகனின் மனதில் அது உள்ளொளியைத் தோற்றுவிக்கிறது. ஒரு கணமேனும் இப்படிப்பட்ட படைப்பிலக்கியத்தை உருவாக்குபவர்கள் உள்ளொளி நிறைந்தவர்களாயிருப்பார்கள் என்பதைக் கூறத் தேவையில்லை.

ஆனால் வீச்சு என்பது படைப்பாளிக்குப் படைப்பாளி வேறு படுகிறது. ஏனோதானோ என்றிருப்பவன் ஒரு படைப்பிலக்கிய கர்த்தாவாக இருத்தல் அரிது. நிச்சயமானதொரு திசையை அவன் தேர்வு செய்கிறான். வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட மனித குணச்சித்திரங்களை சிறுகதை எழுதுபவன் படைக்கிறான் தனக்குத் திருப்தி அளிக்காதவற்றை நிராகரித்துக் கொண்டு. இப்படிப்பட்ட சூழலில் விமலாதித்த மாமல்லன் சிறுகதைகள் சில நமது கவனத்துக்கு வருகின்றன. இருபதாம் நூற்றாண்டு மனிதனின் பொதுவான குணாம்சங்கள் சிலவும் இவருக்கே உரித்தான தனியான குணாம்சங்கள் சிலவும் சிறுகதைகளில் வெளிப்படுகின்றன. எதிலிருந்தும் அந்நியப்படாமல் எதிலிருந்தோ அந்நியப்பட்டதாக நினைத்துக்கொண்டு சிக்கலில் சிக்கியுள்ள ஒருவனின் கனவுகள் சில சிறுகதைகளின் களங்களாக இருக்கின்றன. உதிரிக் கூட்டம், சரிவு, இழப்பு, அறியாத முகங்கள், போன்ற சிறுகதைத் தலைப்புகள் ஓரளவு இவரிடம் உள்ள வெறுமையையும், கூட்டத்தில் காணாமற்போன குழந்தையின் நிலைமையையும் ஜாடையாகத் தெரிவிக்கின்றன. இன்றைய சமூகச் சூழல், அதற்கு இடம் கொடுக்கும் அமைப்பு, புதிய தலைமுறைக்கு பொருந்தாத பழைய மதிப்பீடுகள், அவற்றிற்கெதிராக எழுப்பப்படும் குரல் இவையெல்லாம் சற்று நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ வெளிப்படுகின்றன இவரது சிறுகதைகளில்.

கதை படைக்கும் கலையில் ஒரு கூரிய பார்வை புலனாகிறது. ‘இலை’ கதையில் வரும் மாமி, மற்றும் கறிவேப்பிலை பறிக்கவரும் ஆள் இருவரும் ஒருவரை விட ஒருவர் கறாராக இருக்கிறார்கள். துணைப்பாத்திரங்கள் பற்றிய விவரங்கள் தெளிவாக இருக்கின்றன. ‘தமக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி விடாமல் அதற்குள்ளேயே தம்மால் இயன்ற அளவிற்கு பௌருஷத்துடன் இருக்கப்பழகி அனேக ஆண்டுகளாகிவிட்டன அவருக்கு’ என்னும் மாமாவைப் பற்றிய வாசகத்தைப் படிக்கும்போது மாமல்லன் பார்வை பளிச்சென்று பிடிபடுகிறது.

உதிரிக்கூட்டம் கதைக் களம் வீட்டிலிருந்து தெருவுக்கு வருகிறது. சென்னை நகரத்தின் மத்தியதர வர்க்கத்தின் திரிசங்கு சொர்க்க வாழ்க்கை நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கதை சொல்லும் உத்தி கொஞ்சம் நையப் புடைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

‘சரிவி’ன் நாயகனுக்கு ஒரு முகம் இல்லை. நீங்கள் பார்த்திருக்கக்கூடிய உணர்ந்திருக்கக்கூடிய விஷயந்தான். ஆழ்ந்த ஒரு அதிர்ச்சியை அளிப்பதில் மாமல்லன் வெற்றி பெற்றிருக்கிறார். மெல்ல நகரும் திரைப்படம் ஒன்றைப் போல செய்திகள் ஊர்கின்றன. நடை கதைக்கேற்ப இயல்பாக உள்ளது. ஒரு நல்ல கதையொன்று சுலபமாக சொல்ல முடிகிறது. கதையில் வருபவன் ஒரு பொந்தில் வாழ்வதாக உணரும் கடம் Metamorphosis கதையில் ஏற்படும் நிகழ்வை நினைவு படுத்தும் விதத்தில் இருக்கிறது. தனிமனித வீழ்ச்சியை சித்தரிப்பதில் இக்கதை ஒரு குறிப்பிடத்தக்க இடம் பெறுகிறது.

155183_125359917527223_100001596457502_167936_4297066_n இழப்பு’ கதையும் பொருளாதாய உலகின் சீரழிவுகளையும் சங்கிலித் தொடர்போல் வீழ்ச்சியடையும் மனித உறவுகளையும் சித்தரிக்கிறது. அதில் வரும் மூவரின் தோற்றங்களும் இயற்கையாக படைக்கப்பட்டிருக்கிறது.

வயிறு போன்ற கதைகளைப் பற்றி பேசவும் விமர்சிக்கவும் போலியான முகத்திரை ஒன்றை போர்த்திக் கொண்டால்தான் வசதியாயிருக்கும். உடல் இயந்திரத்தைப் போல செயல்படும் பொழுது மனிதனின் ஆன்மா பணம் பணம் என்று ஜெபிக்கும் அவலம் மிகவும் கொடியதாக இருக்கிறது. மாமல்லன் கலைக்கு இது ஒரு பரிசாகும்.

’அறியாத முகங்கள்’ கதையும் மீண்டும் பொருளாதாரம் எப்படி மனித உறவுகளை சிதைக்கிறது என்பதை விவரிக்கிறது. செல்லாக் காசாகும் மலட்டுக் கோபம் தனிமனிதனை ஆட்டுவிக்கும் இடங்கள் சிறப்புடன் வெளியாகியிருக்கின்றன.

இப்படி இவர் எடுத்துக் கொண்டுள்ள கருவெல்லாம் பெரும்பாலும் மனிதத்தின் வீழ்ச்சியை விவரித்து வாசகனையே இதற்கான முடிவுகளை கேட்கிறது. பெருமூச்சொன்றை விட்டபடி வாசகன் தான் சிறுகதை இலக்கியம் படைக்கும் நிஜத்தைப் பொய்யாக்க வேண்டும். இப்படிப்பட்ட வாசகர்களை உருவாக்கும் பொழுது ஓரளவிற்கு கலை முழுமை அடைகிறது.

(நன்றி - மீட்சி சிற்றிதழ்)

Aug 14, 2010

போய்யா போ - ஆத்மாநாம்

 

போய்யா போ

நான் ஒரு கெட்டவன்athmanam
நான் பீடி குடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் இலைச்சுருள் குடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஒரு சிகரெட் குடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பில்டர் சிகரெட் குடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பில்டர் கிங்ஸ் குடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் சுருட்டு குடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பைப் குடிப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் மூக்குப்பொடி போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் வெற்றிலைப்பாக்கு போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் புகையிலை போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஜர்தா பீடா போடுபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் உள்ளாடையும் பனியனும் அணிபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பேன்ட்டும் ஷர்ட்டும் அணிபவன்
நான் ஒரு கெட்டவன்
நான் காரில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் டாக்ஸியில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஆட்டோவில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் சைக்கிள் ரிக்க்ஷாவில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் சைக்கிளில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் பேருந்தில் போகிறவன்
நான் ஒரு கெட்டவன்
நான் நடந்து செல்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ராஜ பவனத்தில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் அரசு மாளிகையில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஈன்ற மாளிகையில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஈன்ற ப்ளாட்டில் வாழ்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் வாடகை ப்ளாட்டில் இருப்பவன்
நான் ஒரு கெட்டவன்
நான் ஒண்டுக் குடித்தனக்காரன்
நான் ஒரு கெட்டவன்
நான் சேரியில் வாழ்பவன்
நான் ஒரு கெட்டவன்
........................................
இப்படியே சொல்லிக் கொண்டு போனால்
யார் கெட்டவன்
யார் நல்லவன்
அவ்வளவு தானே
கெட்டவன் நல்லவன்
நல்லவன் கெட்டவன்.

Feb 18, 2010

ஆத்மாநாமின் ஆத்ம தரிசனம்

பாரதிராமன்

ஒரு கவிஞனின் படைப்புகள் எல்லாம் அவனுடைய சுயத்தின் வெளிப்பாடுகளே.தன்னைத்தானே தரிசித்துக்கொள்ளும் அவன் பிறருக்கும் தன்னை தரிசனப்படுத்துகிறான்.எனினும் பார்க்கும் அனைவருக்கும் இத்தோற்றங்கள் ஒரேமாதிரி அமைவதில்லை, அக்கவிஞனுக்கு உள்பட

' கொள்கைகளைப் பற்றிய அதிகப்படிப்பு இவருக்கு இல்லாததால் வாழ்வில் சொந்த athmanam அனுபவங்களிலிருந்துமட்டுமே கவிதை எழுதுகிறார். ஒவ்வொரு கவிதையும் புதிதாகப் பிறக்கும் பச்சைக் குழந்தையைப்போல. அதனால் கவிதைகளைக் குத்திக் கிளறிப் பார்க்காமல் ஆர்வத்தோடு நாசூக்காக ஏன் எப்படி எவ்வாறு என்று கேள்விகளுடன் அணுகிவந்தால் அதன் முழு வர்ணங்களும் தெரிய வரும் ' என்று தன்னைப்பற்றியும் தன் படைப்பைப்பற்றியும் கூறும் ஆத்மாநாம் ' கவிதை எழுதப்பட்ட பின்பு கவிஞனுக்கே புரியாமல்கூட போகலாம். ஆனால் கூர்ந்து வாசிக்கும் ஒரு வாசகன் கவிதையை அணுகிவிட முடியும் ' என்ற கருத்தையும் கொண்டிருந்தார்.

அவருக்கு முழு மனித வாழ்க்கை அமையவில்லைதான் என்றாலும் முழு மனித வாழ்க்கை அனுபவங்கள் வாய்த்திருந்தன.அவற்றின்மீதான வெளிச்சங்கள் அவரது கவிதைகளில் வீசப்பெறுகின்றன. யாவரும் கண்டுகொள்வதற்காக மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் மறு பரிசீலனை செய்வதற்காகவும்கூட.

' நான் எதனையுமே மறுபரிசீலனைக்கே விட்டு விடுகிறேன்

நான் படித்த புத்தகங்கள் என்னைக் கேலி செய்கின்றன

நீ பழைய மனிதன்தான் என்கிறது ஒரு புத்தகம்

புதிய மனிதன்தான் என்கிறது இன்னொரு புத்தகம்

நான் மனிதன்தானா என்று சோதித்துக்கொள்ளும் நிர்ப்பந்தங்கள் '

( மறு பரிசீலனை )

இந்த நிர்ப்பந்தங்களிலிருந்து விடுபட்டவர்களாக அவரது கவிதைகளை பரிசீலனையோ மறு பரிசீலனையோ செய்வது நல்லது. அதாவது பழைய மனிதனாகவோ அல்லது புதிய மனிதனாகவோ இருந்துகொண்டோ அல்லது இல்லாமலிருந்துகொண்டோ அணுகுவது ஒரு நூதன அனுபவமாக அமையும்.

கையில் பேனா இருக்கிறது, பேனாவில் மசி இருக்கிறது, காகிதம் இருக்கிறது, என்ன செய்யலாம் ?

' ஒரு ஓவியம் வரையக்கூடும்

ஒரு கட்டிட வரைபடத்தையும்

ஒரு சாலை விவரக் குறிப்பையும்

ஒரு பெண்ணுக்குக் காதல் கடிதத்தையும்

ஒரு அலுவலகத்தின் ஆணைகளையும் '

பதிவு செய்யலாம். ஆனால் 'இவை யாவும் இப்பொழுதைக்கு இல்லை '

ஏதோ ஓர் அமைப்பு குறுக்கிடுகிறது. வீடுகளிலும் பொட்டல்காடுகளிலும் வயல்வரப்புகளிலும் வாழ்கின்ற எலும்புகளுக்குக்கூட ' அரசர்களும் மந்திரிகளும் போர்வீரர்களும் என்றொரு அமைப்பு ' இருக்கிறதே!

( என்றொரு அமைப்பு )

இந்த அமைப்பை எதிர்த்து செயல்பட முடியாதா ? அவரது இன்னொரு கவிதை பதிலளிக்கிறது.

' எதிர்த்துவரும்

அலைகளுடன் நான் பேசுவதில்லை

எனக்குத் தெரியும் அதன் குணம்

பேசாமல்

வழிவிட்டு ஒதுங்கிவிடுவேன்

மற்றொரு நாள்

அமைதியாய் இருக்கையில்

பலங்கொண்டமட்டும்

வீசியெறிவேன் கற்பாறைகளை

அவை மிதந்து செல்லும்

எனக்குப் படகாக '

( காரணம் )

ஆனால் பாறைகளை வீசியெறியும் சுதந்திரம் மனிதனுக்கு உள்ளதா, தேவையா என்று எழக்கூடிய கேள்விக்கும் பதிலிருக்கிறது அவரது 'சுதந்திரம் ' கவிதையில்.

' எனது சுதந்திரம்

அரசாலோ தனிநபராலோ

பறிக்கப்படு மெனில்

அது என் சுதந்திரம் இல்லை

அவர்களின் சுதந்திரம் தான்

----------- -------- -------

உன் வேலை

உன் உணவு

உன் வேலைக்குப்போய்வர சுதந்திரம்

இவற்றுக்குமேல்

வேறென்ன வேண்டும்

சாப்பிடு தூங்கு மலங்கழி

வேலைக்குப் போ

உன் மீது ஆசை இருந்தால்

குறுக்கிடாதே '

வாழ்க்கை முழுதும் அவர் அனுபவிக்க நேர்ந்த சுதந்திரக் கட்டுப்பாடுகளின் எதிரொலியாக எள்ளலும் விரக்தியும் கலந்து ஒலிக்கின்றன இவ்வரிகள்.

இப்படி எத்தனை நாள்தான் வாழ்வது ?

' இருபத்தி இரண்டு ஆண்டுகள்

படிப்பு வேலை தொழில்

எல்லாம் பார்த்தாகிவிட்டது

சந்தித்த முகங்கள்

மறக்கத் துவங்கியாயிற்று

----- ----- ----- ------

விஞ்ஞானத்தில்

மெய்ஞ்ஞானத்தில்

ஏராளமான சாதனைகள் ---

அணுப்போருக்குப் பின்

புதிய சமுதாயம்தான்

------ ------ -----

இருந்தும்

இன்னும் ஒரு முறைகூட

அண்டை வீட்டானுடன் பேசியதில்லை.

( நான் )

இப்படித்தான் இன்றும் வெட்கம் கெட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்.

பின் எப்படித்தான் வாழ்வதாம் ?

வழி சொல்கிறார் ' முத்தம் ' கவிதை மூலம் ஆத்மாநாம்.

' முத்தம் கொடுங்கள்

பரபரத்து

நீங்கள்

முன்னேறிக்கொண்டிருக்கையில்

உங்கள் நண்பி வந்தால்

எந்தத் தயக்கமும் இன்றி

இறுகக் கட்டித் தழுவி

இதமாக

தொடர்ந்து

நீண்டதாக

முத்தம் கொடுங்கள்

மற்றவர்களும்

அவரவர்

நண்பிகளுக்கு முத்தம் கொடுக்கட்டும்

விடுதலையின் சின்னம் முத்தம்

----- ----- ------

முத்தம் ஒன்றுதான் ஒரே வழி

----- ----- ------

முத்தம்

முத்தத்தோடு முத்தம்

என்று

முத்த சகாப்தத்தைத்

துவங்குங்கள் '

என்று இருபத்தியோறாம் நூற்றாண்டுக்குக் கட்டியம் கூறுகிறார் கவி.

வாழ்க்கையைப் பற்றி அவருக்கு பலவித உணர்வுகள் இருந்தன.

கோபம் இருந்தது-( நான்தான் வீரகேஸரி ) ' அசையும் பகுதிகள் மீதெல்லாம்/

இரட்டைக்குழல் துப்பாக்கிகொண்டு/ சுட்டுக்கொண்டேயிருக்கிறேன் '

( ஏதாவது செய் ) 'ஆத்திரப்படு கோபப்படு/ --- தின்று கொழிப்பவரை/ ஏதாவது செய் ஏதாவது செய் '

அமைதியின்மை தெரிந்தது - ( தும்பி ) 'எனது அமைதியைப்/ பறக்க விட்டேன்/ எங்கும் தாங்கவொண்ணா விபரீதம்

ஒரு புரியாமை இருந்தது- ( களைதல் ) 'வெற்றிடத்து/ சூனிய வெளி இருந்தது/ சூனிய வெளியைக் களைந்தேன்/ ஒன்றுமே இல்லை.

அலட்சியம் இருந்தது- ( பதில் ) ' கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்து ' ஏதாவது சொல்லியாகவேண்டும்/ நமக்கேன் வம்பு

ஏக்கம் இருந்தது- (சூழல்) ' நாம் ஏன் ஏரிகளாய் இருக்கக் கூடாது/சலனமற்று வான் நோக்கி பாறைகளுடன் பேசிக்கொண்டு '

அத்வைதப் பார்வை இருந்தது- ( நான்தான் நான் ) 'மண்ணும் மலையும் புழுவும் பூச்சியும்/ நான்தான் நான்தான் நான்தான் ' ( அமைதிப் படுகையில் ) ' நான் ஒரு நட்சத்திரம் ' -( ஒன்றும் இல்லை ) ' ஒன்றுமில்லையில் இவ்வளவா/ பின் அந்த ஒன்றில்/ நம்மையும் மீறிய ஒன்று '

சுய கெளரவம் இழையோடிற்று- ( காளை நான் ) ' கயிற்றை இழுப்பவர்களை நினைத்ததும்/ அடிவயிற்றிலிருந்து/ பெரும்பீதி தோன்றிற்று/ ஆயினும் எனக்கு நிம்மதி/ எனக்கு மூளை இருக்கிறது/ மனம் அமைதியாய் இருக்கிறது '

கேலிப் பார்வைகள் இருந்தன- ( இதோ ஒரு கவிதை ) ' சுத்தமாய் நின்று எதிர் சுவற்றில்/ மூத்திரம் இருங்கள்/ இப்போது போதுமிது ' ( சுற்றி ) ' எந்த மரத்தைச் சுற்ற/ பிறந்த பிள்ளை இவன்/ ஏதாவது தறுதலை மரமாக இருக்குமோ ? ' -(நன்றி நவிலல் ) ' உங்களுக்கு நன்றி/ இத்துட்னாவது விட்டதற்கு '- ( ஐயோ ) ' அற்புத உலகம்/ அற்புத மாக்கள் '

விரக்தியும் எட்டிப்பார்த்தது- ( போய்யா போ ) ' இப்படியே சொல்லிக்கொண்டுபோனால்/ யார் நல்லவன்/ யார் கெட்டவன்/ அவ்வளவுதானே/ கெட்டவன் நல்லவன்/ நல்லவன் கெட்டவன் '- ( விடுதலை ) ' உள்மனப்போருக்குப் பின்/ முயற்சியை விடுத்து/சும்மா இருக்க முடிவெடுக்கிறேன் '

இவற்றுக்கெல்லாம் மேலாக வாழ்க்கையின் மீது நம்பிக்கையும் இருந்தது அவருக்கு.- ( நாளை நமதே ) 'இருப்பை உணராது / இறப்புக்காகத் தவம் புரிகின்றனர்/ என் ஸக மனிதர்கள்/ இந்த துக்கத்திலும்/ என் நம்பிக்கை/ நாளை நமதே ' - ( காலம் கடந்த ) ' என் காலடியில்/ கொஞ்சும் நாய்க்குட்டிக்காக/ இன்னும் எனது நம்பிக்கை/ நசித்துப் போகவில்லை/ இன்னமும் கொஞ்சம்/ அன்பு மீதமிருக்கிறது '

மனநலக் கோளாறுகள் அவரை அடிக்கடி வாட்டி வந்தன. தற்கொலை முயற்சிகளுக்கும் தூண்டும் அளவுக்குப் போயின.என்றாலும் கனவுகள் காண்பதையும் கவிதைிகள் எழுதுவதையும் அவர் மூச்சாக இருந்தது.

( கனவு ) ' என்னுடய கனவுகளை/உடனே அங்கீகரித்துவிடுங்கள்/ வாழ்ந்துவிட்டுப் போனேன் / என்ற நிம்மதியாவது இருக்கும் '

( ஏரி ) ' ஏனோ நான் மட்டும்/ கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் '

சோகம்தான் கவிஞனை தோற்றுவிக்கிறது என்பது பொதுவாக நிலவும் கருத்து. ஆத்மாநாம் தன் சோகங்களையும் மீறிய படைப்பாளியாயகத் திகழ்கிறார்.வெற்றுக் காகிதத்தில் ஒன்று,நூறு, ஆயிரம்--பத்து கோடி, நூறு கோடி மேலும் மேலுமென்று கோடுகளை அதன் எல்லா இயல்புகளிலும் போடுகிறார்.அவை இல்லாமல் போய்விடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டாலும் வெள்ளைத் தாளிலும் நமக்குத் தெரியாமலும் சில கோடுகள் குறுக்கிலும் நெடுக்கிலும் இருக்கும் என்ற உண்மை அவருக்கு தைரியமூட்டுகிறது.

அந்த தைரியம்தான் அவரைப் பாடவைக்கிறது இவ்வாறு:

' சாதித்திருக்கிறாயா நீ

என்ளூது ஒரு கேள்வி

என்னிடம் இப்பொழுது

பதில் இல்லை

என் உடல் மரித்தபின்

எழும் கல்தூண்

முன் கேள் '

கேட்கும் எண்ணம் நமக்கு இல்லை, தேவையில்லை என்பதால்.

***

ஜூலை 6 ஆத்மாநாமின் மறைவு தினம். அவரது நினைவாக

bharathiraman@vsnl.com

***

Dec 23, 2009

ஆத்மாநாம் தன்னை நிராகரித்த கவிஞன்-குவளைக் கண்ணன்

குவளைக் கண்ணன்

”கவிதை என்று பிரிக்க முடியாது. கவிதை, கவிதை அல்லாதது என்று மட்டுமே பிரித்தாள முடியும். கவிதை அல்லாதது அப்பட்டமாகத் தன்னைத்தானே வெளிக்காட்டிக்கொண்டு விடுகிறது.

கவிதையானது என்றைக்குமே தனது இருப்பை மொழியின் மீதோ அல்லது அதனைப் பேசும் மக்கள் மீதோ திணித்ததில்லை. திணிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை.'”

மேற்கூறிய வாசகங்கள் ஆத்மாநாமுடையவை.

பெருநகர்களில் தனிமனித இருப்பு சார்ந்த நெருக்கடியைத் தெரிவிக்கிற, ஒரு செடியின் இருப்பு வழியாக மனித இருப்பின் அடிப்படைச் சிக்கலை விளக்கிக்கொள்ள முயல்கிற, சகவாசியின் வேதனையைப் பார்ப்பதோடு, கும்பலின் மீதான வெறுப்பை athmanamஉமிழ்கிற (உதாரணம்: கட்டாந் தலைகள்), சுய தேடலுள்ள, குழந்தைகளின் உலகில் ஊடாடுகிற, விளக்குக் கம்பம், திருஷ்டிப் பொம்மை, திருஷ்டிப் பூசணி எனச் சாதாரணமாக நாம் தினசரி பார்ப்பவற்றை முற்றிலும் வேறாகக் கண்டு நமது வாழ்வினுள் கொண்டு வருகிற கவிதைகள், பட்டியலிடும் கவிதைகள், வாசகனிடம் நேரடியாகப் பேசும் கவிதைகள், இயக்கங்கள் தங்களது பிரச்சாரங்களில் உபயோகிக்கக்கூடிய அளவுக்குக் காட்டமான, அப்பட்டமான அரசியல் கவிதைகள், கேலி செய்யும் கவிதைகள், காதல் கவிதைகள் என்று பல்வேறு வகையான கவிதைகளையும் கொண்டது ஆத்மாநாமின் படைப்புலகம்.

'குட்டி இளவரசிக்கு ஒரு கடிதம்', 'குட்டி இளவரசி வந்துவிட்டாள்', 'புத்தம் புதிய' எனும் தலைப்பிலுள்ள கவிதைகள், குழந்தைகளின் உலகம் சார்ந்தவை. குட்டி இளவரசிக்கு ஒரு கடிதத்தில், குழந்தைகளின் புனைவுலகம் சார்ந்த ஷிநீஷீஷீதீஹ் எனும் நாய் வருகிறது அல்ல வருகிறான். நாய்களின் தலைவனைக் கௌரவிக்கக் கூட்டம் நடக்கிறது. அந்தத் தலைவன் எதற்காகக் கௌரவிக்கப்படுகிறான் தெரியுமா, பின்னால் சுமக்கும் பையைக் கண்டுபிடித்ததற்காக.

'குட்டி இளவரசி வந்துவிட்டாள்' கவிதையைப் பார்ப்போம்: டப்பியின் களிப்புகளைப் பரப்பி வைப்பாள்/ சுவற்று அழுக்கை ஈயெனப் பிடிப்பாள்/ கூக்கூவைத் தினம்தினமும் புதிதாய்க் காண்பாள்/ மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுவாள்/ ஏறி இறங்கும் படிகள் அவள் உலகம்/ பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள்/ பசி உடல் தவிர அழ ஒன்றும் இல்லை/ தனக்குள்தானே பொங்கும் மகிழ்ச்சி அவள்/ ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியின் தொடர்ச்சியே/ பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்ப்பாள்/ அவள் ஊடுருவல் பார்வை உம்மையும் மீறிச் செல்லும்.

குட்டி இளவரசி நடக்கக் கற்றுக் கொண்டவள்; அநேகமாக இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. பசிக்கு அழுதால்தான் அழுகை. வளர்ந்தவர்களின் ஒழுக்கம்/ ஒழுக்க விதிகள் அவளுக்குப் பொருந்தமாட்டா. மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுகிறாள். பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள் . . . வளர்ந்தவர்களான நமக்குக் குழந்தையாகிற ஏக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்குக் குழந்தைகளின் உலகைக் கவனித்த கவிதை இது. நாமும் குழந்தையாக இருந்தபோது இப்படித்தானே இருந்திருப்போம். சொல்லோடுதான் இப்போதைய குழப்பங்களும் துயரங்களும் நம்மிடம் வந்தனவா?

'பூச்சுக்கள்' என்ற தலைப்பிலுள்ள கவிதையைப் பார்ப்போம்.
வாழ்க்கைக் கண்ணாடியில்/ முகம் பார்த்து/ தலை சீவி/ பவுடர் பூசி/ வெளிக் கிளம்பினேன்/ பஸ் ஸ்டாண்டில்/ என்னைப் போலவே/ ஆண்களும் பெண்களும்/ அவரவர் வாழ்க் கைக் கண்ணாடியில்/ முகம் பார்த்து/ அலங்கரித்து/ காத்து நின்றிருந்தனர்/ வந்து போய்க்கொண்டிருந்த/ வாகனங்களில்/ பொதுமக்கள்/ வேற்றுமை காண இயலாவண்ணம்/ உட்கார்ந்து கொண்டும்/ நகர்ந்துகொண்டும்/ பயணம் செய்துகொண்டிருந்தனர்/ என்னுடைய வாகனம் வந்துவிட்டது/ இடிபாடுகளுக்கிடையே/ நானும்/ ஒரு கம்பியில் தொற்றிக்கொண்டேன்/ எங்கோ ஒரு இடத்தில்/ நிலம் தகர்ந்து/ கடல் கொந்தளித்தது/ ஒரு பூ கீழே தவழ்ந்தது.

இந்தக் கவிதையில் நகரத்தின் காலை நேரக் காட்சியொன்று தரப்படுகிறது. காலை நேரம் என்பதை எட்டிலிருந்து பத்து மணிக்குள் என்று வைத்துக்கொள்ளலாம். திங்கட்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்குள் ஏதோ ஒரு வேலை நாளாக இருக்க வேண்டும். இதில் வரும் கவிதை சொல்லி வீட்டிலிருந்து கிளம்பிப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நிற்கிறார். இவரைப் போலவே ஆண்களும் பெண்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். பொதுமக்கள் அடையாளம் காண இயலாவண்ணம் பயணம் செய்கிறார்கள். இவரது வாகனம் வருகிறது. இவரும் ஒரு கம்பியில் தொற்றிக்கொள்கிறார். பெருநகரமொன்றின் வேலைநாட்களின் காலை நேரம் அதன் அத்தனை அவசரத்தோடும் அவதியோடும் கவிதைக்கான காட்சிப் பின்புலமாக நமக்குத் தரப்படுகிறது.

முதல் வரியிலிருந்தே, முதல் சொல்லிலிருந்தே கவிதை தொடங்கிவிடுகிறது. கண்ணாடியில் முகம் பார்த்து, தலை சீவி, பவுடர் பூசி, வெளிக் கிளம்பினேன் என்றாலே கவிதை சொல்லி வீட்டைவிட்டுப் புறப்பட்டதை நமக்குக் காட்டிவிடலாம். ஆனால் வாழ்க்கைக் கண்ணாடி என்கிறார். நாம் ஏன் வெளியே கிளம்புவதற்கு முன் கண்ணாடி பார்க்கிறோம் கண்ணாடியில் முகம் மட்டும்தான் தெரிகிறதா? ஒவ்வொரு முறையும் வீட்டைவிட்டுப் பொதுவெளிக்குள் நுழையும்முன் நாம் ஏன் மறக்காமல் கண்ணாடியிடம் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொள்கிறோம்? கண்ணாடிகள் பிரதிபலிக்கும் தன்மையுடையவை, நாம் உருவத்தைப் பார்த்தால் உருவத்தை. கண்ணாடியில் பார்த்து நமது உருவத்தைத் திருத்திக் கொள்கிறோம். உள்ளுக்குள் எப்படி இருந்தாலும் பொதுவெளிக்கு என்று முகத்தைத் திருத்திக்கொண்டுவிடுகிறோம். கவிஞர் கண்ணாடியில் வாழ்க்கையை, அல்ல கண்ணாடியையே வாழ்க்கையாகப் பார்க்கிறார். உட்கார்ந்துகொண்டு, நகர்ந்துகொண்டு பயணம் செய்யும்போது அடையாளம் காண இயலாதபடி ஆகிறோம். மேலும் பொதுமக்கள் என்பவர் நமது புலன் வெளிக்குள் வந்தாலும் நமது உணர்வுவெளிக்குள் வராதவர்தானே, யாரிடம் நமக்கு எதுவுமே தோன்றுவ தில்லையோ அவர்கள்தானே. இவருடைய வாகனமும் வந்துவிடுகிறது, கவிதைசொல்லியும் கம்பியில் தொற்றிக்கொள்கிறார். பேருந்தில் நின்றுகொண்டு நாம் எதையோ யோசித்துக்கொண்டிருக்கும்போது, சட்டென்று பேருந்து நகரத் தரையே நகர்வது போன்ற உணர்வு ஏற்பட்டு சட்டென்ற திகில் பொங்குமே, அப்படி ஆகிறது. கடைசி வரியில் கவிதை சொல்லி தனது எண்ண ஓட்டத்திலிருந்து நிகழ்கணத்துக்கு வந்து பேருந்துக்கு வெளியே பார்க்க, பேருந்து நகரும் திசைக்கு எதிர்திசையில் ஏதோ ஒரு பெண் நடந்துபோகிறாளா? அசைவுகள் நினைவுகளாகி இந்த நான்கு வரிகளும் அசைபோட்டு சொல்லப்படுகின்றனவா? இப்படி வாசிக்கலாம். மற்றொரு வாசிப்பாகப் பேருந்து நெரிசலில் தவிக்கிற அதே சமயத்தில் பூமியின் வேறொரு பகுதியில் பூமி நகர்ந்து, கடல் கொந்தளிந்துவிடலாம். வேறொரு இடத்தில் தனக்குக் கீழே தண்ணீரிலோ காற்றிலோ பூவொன்று தவழ்வதைக் கவிஞர் சொல்வதாகக் கொள்ளலாம். அதாவது முதலில் சொல்லப்பட்ட சந்தடியும் இரைச்சலுமான நகரக் காட்சியின் அருகில் பூமியின் வேறெதோ இடத்தில் வேறெதோ காலத்தில் நடந்த, நடக்கப் போகிற நிகழ்ச்சியை வைத்துக் கவிதைக்கும் வாழ்வுக்கும் அழகூட்டிவிடுகிறார். இப்படியும் வாசிக்கலாம்.

இந்தக் கவிதையில் 'இடிபாடுகளுக்கிடையே' என்ற சொல்லைக் கவனியுங்கள். நெரிசல் என்ற சொல்லே பொதுவாக உபயோகத்திலுள்ள சொல், தகர்ந்த கட்டுமானங்களைப் பற்றிச் சொல்லும்போது நாம் உபயோகிக்கிற சொல் 'இடிபாடுகள்' என்பது, இப்போது மீண்டும் இந்தக் கவிதையை வாசியுங்கள்.

ஆத்மாநாமின் கவிதை உலகை மேலும் அறிவதற்கு ஏதுவாகச் சில வரிகளைப் பார்ப்போம்:

முட்டிமோதிப் பார்க்கிறது கடல்/ மணலைத் தன் நீலப் புடவைக்குள்/ சுருட்டிக்கொள்ள* உங்கள் இருப்பை நிரூபிக்க/ முத்தத்தைவிட சிறந்ததோர் சாதனம் கிடைப்பதரிது . . . முத்தம்/ முத்தத்தோடு முத்தம்/ என்று/ முத்த சகாப்தத்தைத் துவங்குங்கள்* முன்பென்றால் நினைவு/ பின்பென்றால் கனவு/ இப்பொழுதென்றால் நான்* நானும் வேறான நானும் பொய்/ நான் இல்லை* சித்திரத்திற்கு குரல் இருக்க வேண்டும்/ அந்தக் குரலுக்கு உயிர் இருக்க வேண்டும்/ பார்ப்பவன் பேச வேண்டும்/ பேச்சில் தெளிவு வற்றாதது தெளிவு/ நீங்கள் ஒவ்வொரு வரும்/ ஒரு சமவெளியை நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்* எல்லோருமே/ ஒரே ஒரு புத்தகத்தைத்தான்/ படிக்கப்/ போகிறீர்கள்/ அது உங்கள் புத்தகம் தான்* இந்தக் கவிதை/ எப்படி முடியும்/ எங்கு முடியும்/ என்று தெரியாது./ திட்டமிட்டு முடியாது என்றெனக்குத் தெரியும்/ இது முடியும்போது/ இருக்கும் (இருந்தால்) நான்/ ஆரம்பத்தில் இருந்தவன்தானா.* உதிரும்/ மலரின்/ கணிதத்தை/ என்றாவது/ யோசித்திருந்தால்/ மட்டும்/ இது புரியும்* சரக்கென்று/ உடல்விரித்துக்/ காட்டும்/ கற்றாழையின்/ நுனியிலிருந்து/ துவங்கிற்று வானம்* வயல்களுக்கப்பால் இருந்த/ சூரியன் மேலே சென்றான்/ எருமைகள் ஓட்டிச் சென்ற/ சிறுவனின் தலையில் வீழ்ந்தான்.

மொத்தக் கவிதைகளில் பதினைந்துக்கு மேற்பட்ட சமூக/ அரசியல் கவிதைகள் உள்ளன. ஒருவகையில் தமிழில் இவ்வாறான கவிதைகளுக்கான முன்னோடி என்றுகூட ஆத்மாநாமைச் சொல்லலாம். இவ்வகைக் கவிதைகளில் நுட்பமானவையும் உள்ளன, அப்பட்டமானவையும் உள்ளன. இவ்வகைக் கவிதைகளின் சில வரிகளைப் பார்ப்போம்.

தூங்குபவர்களையும்/ தூங்குபவர்களைப் போல் நடிப்பவர்களையும்/ எழுப்பும் வார்த்தைக் கூட்டங்கள்/ புறப்பட்டாகிவிட்டது கருப்புப்படை* எனது சுதந்திரம்/ அரசாலோ தனி நபராலோ/ பறிக்கப்படுமெனில்/ அது என் சுதந்திரம் இல்லை/ அவர்களின் சுதந்திரம்தான்* மக்கள் சுபிட்சமாய் இருந்தனர்/ அவசரமாய் அவ்வப்போது ஒன்றுக்கிருந்து* இந்த நகரத்தை எரிப்பது/ மிகச் சுலபம்/ ஒரு தீப்பெட்டி போதும் . . . ஓசைகள் குறைந்த இரவில்/ எங்கேனும் துவங்கலாம் . . . தனியொருவன் எரித்தால் வன்முறை/ அரசாங்கம் எரித்தால் போர்முறை * மந்திரிப் பெயர் சூட்டிக்கொண்ட/ அரச குமாரர்கள் . . . ஜனநாயக சர்வாதிகாரம் . . . சூழ்ந் துறங்கும்/ மனித உரிமைகள்.

இவ்வகையிலான இரண்டு கவிதைகளைப் பார்ப்போம்:

'நன்றி நவிலல்' எனும் தலைப்பில்: இந்தச் செருப்பைப் போல்/ எத்தனை பேர் தேய்கிறார்களோ/ இந்தக் குடையைப் போல்/ எத்தனை பேர் பிழிந் தெடுக்கப்படுகிறார்களோ/ இந்தச் சட்டையைப் போல்/ எத்தனை பேர் கசங்குகிறார்களோ/ அவர்கள் சார்பில்/ உங்களுக்கு நன்றி/ இத்துடனாவது விட்டதற்கு.

'தும்பி' எனும் தலைப்பில்: எனது ஹெலிகாப்டர்களைப்/ பறக்கவிட்டேன்/ எங்கும் தும்பிகள்/ எனது தும்பிகளைப்/ பறக்கவிட்டேன்/ எங்கும் வெடிகுண்டு விமானங்கள்/ எனது வெடிகுண்டு விமானங்களைப் பறக்கவிட்டேன்/ எங்கும் அமைதி/ எனது அமைதியைப் பறக்கவிட்டேன்/ எங்கும் தாங்கவொண்ணா விபரீதம்.

இவை மட்டுமல்ல, பல்வேறு தொனிகளில் ஏற்கனவே சொன்னதுபோல் பதினைந்துக்கும் மேற்பட்ட சமூக, அரசியல் கவிதைகள் உள்ளன. இவ்வாறான கவிதைகளில் ஒன்று 'அவள்'. இந்த அவள் நீங்கள் நினைக்கிற 'அவள்' அல்ல, இது 1984க்கு முன்னர் எழுதப்பட்டது.

எந்த ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளும் இயங்க முடியாத ஒருவன் மட்டுமே படைப்பாளியாக முடியும். சுதந்திரத்தின் உச்சகட்டத்தில் இருப்பவன் மட்டுமே செயல்பட முடியும். புதிய புதிய திசைகளை அடையாளம் காண முடியும். படைப்பாளி தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு பதில்களைக் கண்டுபிடித்துக்கொள்கிறான். அவன் தனக்குத்தானே குருவாகி சிஷ்யனுமாகித் தன்னையே நிராகரித்துக் கொண்டிருக்கிறான். தொடர்ந்து குருவின் சிலையை உருவாக்கும் உளிச் சத்தம் ஒன்றும் குருவின் சிலையை உடைக்கும் உளிச் சத்தம் ஒன்றும் கேட்கின்றன.

மேல் பத்தியிலுள்ளவையும் ஆத்மாநாமின் வாசகங்கள்தான். நம்மிடையே பல கவிஞர்களும் தம்மை நிறுவ முயன்று, தமக்கென்று ஒரு குறிப்பிட்ட ரீதியைத் தேர்ந்தெடுத்து, தம்மை மீண்டும் மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கையில், தன்னையே தொடர்ந்து நிராகரித்து வந்ததால்தான் பல்வகைப்பட்ட, பல ரீதியிலான கவிதைகளை அவரால் எழுத இயன்றிருக்கிறது. தமிழில் பலவகையான கவிதைகளை எழுதிய கவிஞர்களில் ஆத்மாநாம் ஒருவர். சரியாகச் சொல்வதானால் ஒரே ஒருவர்.

ஆத்மாநாம் பற்றி பிரம்மராஜன் எழுதியுள்ள வாழ்க்கைக் குறிப்பிலிருந்து Lithium, Hyportry, Largatyl, Fenargan போன்ற மருந்துகளை ஆத்மாநாம் தொடர்ந்து உட்கொண்டது தெரிகிறது. இவரது கவிதைகளில் 'ஒரு குதிரைச் சவாரி' என்கிற ஒரே ஒரு கவிதையில் மட்டுமே இந்த தனிப்பட்ட நிலைமை வெளியாகி வாசகனைத் துயருறச் செய்கிறது. எழுதுபவர்களது மன அவசங்களும் மன அலைவுகளும் மனச் சிக்கல்களும் கவிதையில் அதிகமாக எழுதப்படுகிற இந்தக் கட்டத்தில் கவிதை எழுதுபவர்கள் கவனிக்க வேண்டிய தன்மை இது. கவிதைக்கு ஆட்படுவதற்கும் கவிதையை ஆட்படுத்த நினைப்பதற்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசத்தை ஆத்மாநாம் உணர்ந்திருக்கக்கூடும். மேலே குறிப்பிடப்பட்ட நான்கு மாத்திரைகளில் ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து உட்கொண்டுவரும் ஒருவரிடம் அவரது பெயர் கேட்கப்பட்டால், தனது பெயரைச் சொல்லக்கூட அவருக்கு நேரமெடுக்கும். ஆத்மாநாமுக்கு மனித உறவுகளிலும் சமூக வாழ்விலும் சிக்கலிருந்திருக்கலாம். இலக்கியத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு திடமான பரப்பில் நின்றிருந்திருக்கிறார். ஆத்மாநாம் கவிதைக்கு ஆட்பட்டவர்.

மொத்தம் நான்கே பக்கங்கள் வரக்கூடிய இவரது இரண்டு கட்டுரைகளும் பிரம்மராஜனுக்கு அளித்த நேர்காணலும் தமிழ்க் கவிதையியலுக்கு ஆத்மாநாமின் முக்கியப் பங்களிப்புகள். 'கவிதை எனும் வார்த்தைக் கூட்டம்' கட்டுரையில் எனது 'மனத்தில் தைத்த கவிதைகள்' எனத் தந்திருக்கும் கவிதை வரிகள், கவிதை பற்றிய புரிதலுக்குப் பெரிதும் உதவக்கூடியவை. இப்படி ஒரு பத்துக் கவிஞர்கள் அவர்களது மனத்தில் தங்கிய கவிதை வரிகளைத் தந்தால் அது தற்காலத் தமிழ்க் கவிதைகளின் உண்மையான வாசகருக்கு உதவக் கூடிய திரட்டாக அமையும்.

'ஆத்மாநாமைப் பற்றியும் கவிதை பற்றியும்' ஆத்மாநாம் - ஐ எனும் கட்டுரையில்:

தன்னிலிருந்து தானே விடுபடும் போது ஒருவன் மனிதனுக்கு ஒருபடி மேலே செல்கிறான் என்பவர், "உண்மையைத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது என்பதில் நம்பிக்கை உள்ளவர்" என்று சொல்லி மேலும் "இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை வாழத் தகுதியுள்ளதாக நினைக்கும் இவர், இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை முடியுமோ என்று அஞ்சுகிறார்" என்று தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இலக்கியத் தொடர்பாலா முடிந்தது? முடிந்ததா?

06.07.1984 அன்று மரணத்தில் மூழ்கியது, 18.01.1951இல் பிறந்த ஷி.ரி. மதுசூதன். இதற்கு இருபது ஆண்டுகள் கழித்தும் இப்போதும் ஆத்மாநாம் இருக்கிறார், இன்னும் இருப்பார். கவிதைகளின் வாழ்வல்லவா கவிஞர்களின் வாழ்வு.

('கடவு' சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட 'கூடல்' கவிஞர்கள் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் விரிவாக்கம்)

ஆத்மாநாம் படைப்புகள்
பதிப்பாசிரியர்: பிரம்மராஜன்
காலச்சுவடு வெளியீடு
விலை ரூ. 150/

நன்றி: காலச்சுவடு இதழ்

Nov 28, 2009

ஏதாவது செய்-ஆத்மாநாம்

ஆத்மாநாம்

athmanam

ஏதாவது செய் ஏதாவது செய்
உன் சகோதரன்
பைத்தியமாக்கப்படுகிறான்
உன் சகோதரி
நடுத்தெருவில் கற்பிழக்கிறாள்
சக்தியற்று
வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா
அடி உதை விரட்டிச் செல்
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள் கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்யத் தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது
சரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீர்யமிழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்
இளிச்சவாயர்கள் மீது
எரிந்து விழச் செய்யும்
ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக் கிழி
உன் சகவாசிகளின் கிறுக்குத் தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்

* Do Something என்ற குந்தர் க்ராஸ் கவிதையை முன்னோடியாகக் கொண்டு எழுதப்பட்டது. க்ராஸின் கவிதை அடிப்படையில் மிகவும் கிண்டலானது. ஆத்மாநாமின் கவிதை தீவிரத்தையே தொனியாகக் கொண்டது.

Nov 20, 2009

ஆத்மாநாம் பிரக்ஞைபூர்வமானவர்.-சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி

ஆத்மாநாமின் மறைவும், அவர் மறைந்த விதமும் அவரது கவிதைகளைப் பற்றி சற்றுத் தூக்கலாகப் பேச நம்மைத் தூண்டிற்று என்று நினைக்கிறேன். பிரிவின் கொடுமையை எதிர் கொள்ளும் தருணங்களில் மிகை எப்போதும் தவிர்க்க முடியாததாகவே இருந்திருக்கிறது. அவர் நம்மை விட்டுப் பிரிந்து இப்போது ஒன்பது ஆண்டுகள் ஆகப்போகின்றன. அவர் கவிதைகளும் நம் இலக்கியத்தின் ஒரு பகுதியாகி விட்டது. இன்று அவரைப் பரிசீலனை செய்ய இந்த இடைவெளி நமக்கு உதவக்கூடும்.

athmanam ஒவ்வொரு கவிஞனும் தான் அழிந்த பின்னும் தன் கவிதைகள் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறான். 'என்னை அழித்தாலும் என் எழுத்தை அழிக்க இயலாது ' என்றார் ஆத்மாநாம். என்னை அழித்தும் என்னை அழிக்க இயலாது என்றும் சொல்லியிருக்கிறார். அது சரிதான். அவருடைய் சாரம் இன்றும் நம்மிடம் இருக்கிறது. அவருடன் உறவாட முடிகிறது. இந்த நேரத்தில் ஆத்மாநாமின் கவிதைகளை முழுமையாகவும் சிறப்பாகவும் பதிப்பித்து தந்திருக்கும் பிரம்மராஜனின் பணியை நாம் நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.

புதுக் கவிஞர்களில் பிரக்ஞைபூர்வமான கவிஞர்கள் மிகக்குறைவு. ஆத்மாநாம் பிரக்ஞைபூர்வமானவர். தன் செயல்பாடுகள் குறித்தும் தான் ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் அவருக்கு யோசனைகள் இருந்திருக்கின்றன. காலத்தின் வரிசையில் கடைசியாக தன்னிடம் வந்து சேர்ந்திருக்கும் கவிதைகளின் பொதுக் குணத்தை பிரதிபலித்தல் இவருக்கு இயற்கையாக இல்லை. தன்னுடைய கவிதைகளை கண்டுபிடிக்கும் முயற்சியாகவே இவர் கவிதைகள் இருக்கின்றன. ஞானக்கூத்தனின் ஆரம்பகாலக் கவிதைப் போக்கை பிரதிபலித்து இவர் எழுதியுள்ள 'இன்னும் ' என்ற தலைப்பிட்ட கவிதையில்தான் இவர் சுத்தமாக இல்லாமல் இருக்கிறார். மற்றக் கவிதைகளில் - மொத்தம் 143 கவிதைகள் - இவரது ஆளுமை, பலவற்றில் மங்கலாகவும் ஒரு சிலவற்றில் மிகச் சிறப்பாகவும் வெளிப்பட்டிருக்கிறது. பிரதிபலிப்பு படைப்பாகாது என்ற விழிப்பு இவரிடம் கூர்மையாக செயல்பட்டிருக்கிறது.

வாழ்நிலையில் தான் பெற்ற அனுபவங்களை கவிதை மூலம் இவர் ஆராய்ந்து கொண்டே போகிறார். தன்னை அறிந்து தன் பார்வையைத் தெளிவு படுத்திக் கொள்ளும் முனைப்பு இது. இந்த தெளிவு கூடிவரும் வகையை உணருவது இன்று சிரமமாக இருக்கிறது. இவரது கவிதைகளை கால வரிசைப்படுத்தித் தர பிரம்மராஜனுக்குச் சாத்தியப்பட்டிருக்கும் என்றால் இவர் பெற்றுள்ள வளர்ச்சியை இன்னும் துல்லியமாக நாம் மதிப்பிட்டிருக்க முடியும்.

சுதந்திரம் மனித ஆளுமைக்கு தரும் விகாசம், வாழ்நிலை சார்ந்த அபத்தங்களும் கேவலங்களும் தரும் வருத்தம், sura22 மனிதனை ஆசுவாசப்படுத்தக் காத்துக் கொண்டிருக்கும் இயற்கை, நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம், இவை சார்ந்த உணர்வுகள் அவர் கவிதைகளில் அழுத்தம் பெறுகின்றன. தன் கவிதைகள் மூலம் ஒரு உயர்நிலை பாதிப்பை நிகழ்த்த வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டிருந்தார் இவர். இதனால் தன் கவிதை மொழி தன் சக மனிதனுக்குப் புரிய வேண்டும் என்பதில் அவருக்கு கவனம் இருந்தது. ஏற்கும் புதுமையின் பொருள் என்ன என்பதிலும் இந்த மண் சார்ந்து அதன் பொருத்தம் என்ன என்பதிலும் அவர் கவனங்கள் கொண்டிருந்தார்.

மேற்கத்திய சோதனைகளின் பிரமிப்புகள் மீது அல்ல; உலக இலக்கியத்தின் தரம் மீதே இவர் பற்றுக் கொண்டிருக்கிறார். பழைய கவிதைகளின் அலங்காரங்கலை புறக்கணித்த புதுக்கவிதைகள் மூலம் உறுதிப்பட்டு வந்து கொண்டிருந்த புதிய அலங்காரங்களையும் இவர் புறக்கணித்திருக்கிறார். பேச்சு அல்லது கடிதங்களில் நாம் பயன்படுத்தும் சொற்களுக்கு மேற்பட்ட 'கவிச்சொற்கள் ' அவர் கவிதையில் இல்லை. கவிதைக்குரிய வலுக்களாகக் கருதப்படும் உவை, உவமேயம், படிமங்கள் இவற்றின் மீது சார்ந்து நிற்காமல் -இயற்கையாக கூடிவருவது வேறு- அர்த்தங்கள் தரும் அனுபவ அலைகளை நம்பி கவிதைகளை எழுதியிருக்கிறார். அநேக கவிதைகளில் குழாயின் ஒரு நுனியிலிருந்து மறு நுனிக்கு தண்ணீர் ஓடி இறங்குவது போல முதல் வரியிலிருந்து கடைசி வரிக்கு அர்த்தம் விரைந்து ஓடுகிறது. ஒரு சில கவிதைகளில் முன் பகுதியும், பின் பகுதியும் தொடர்பின்றி பிளந்து கிடக்கின்றன. இது வாசிப்பு சார்ந்த நம் குறையாகவோ அல்லது நோயுற்ற காலங்களில் கவிஞருக்கு ஏற்பட்ட தடையாகவோ இருக்கலாம்.

ஆத்மாநாமின் அநேக கவிதைகள் குறிக்கோளைச் சென்றடையவில்லைதான். நிறைவான கவிதையை அடைய முன்னுவதும் குறையாக அவை முடிந்து போவதும் கவிதைத் தொழிலின் விதி என்று கூறும் அளவுக்கு மிகச் சிறந்த கவிஞர்கள் கூடி வராமலேயே கவிதையை முடித்துக்கொண்டு போயிருக்கிறார்கள்.

ஆனால் ஆத்மாநாமின் கவிதைகளில் அலங்காரத்தினால் தடைபட்டவை என்றோ பிரமிப்பினாலோ மயக்கத்தினாலோ செயற்கையினாலோ இருப்பை மிகைப்படுத்திக்காட்ட விரும்பியதினாலோ தடைபட்டவை என்றோ அதிகம் இல்லை. அனுபவத்த்தில் மனம் இழையும் பயணம் எந்தப் புள்ளியில் கவிதையின் உடலாக மாறுகின்றது என்ற கேள்விக்கு திட்ட வட்டமான பதில் இல்லை. அநேக கவிதைகளில் இந்த உடல் உயிராக மாறும் காரியம் அவருக்கு நடக்கவில்லை.

கவிஞரான ஆத்மாநாமை அவர் வாழ்ந்த காலத்தின் நேர்மையான மனிதன் என்றும் சொல்லலாம். இது அபூர்வமான தகுதி. அவருடைய தொடர்புகள் சிறு வட்டத்தினுள் இருந்திருக்கலாம். உடல், காலம் இடம் சார்ந்த வரையறை கொண்டது. ஆனால் அவருடய கனவுகளின் எல்லை மேலான கவிதையின் விரிந்த தளத்தில் இருந்தது. மேலான கவிதையை மேலான வாழ்விலிருந்து பிரிக்க இயலாத லட்சியவாதியாகவும் அவர் இருந்தார்.

அவரது கவிதைகள் அவரது அனுபவ சாரங்களின் நாட்குறிப்புப் போல இருக்கின்றன. தன் அனுபவங்களை தான் விளங்கிக் கொண்ட விதத்தை சக மனிதனிடம் - மக்களிடம் அல்ல - அநேக சமயங்களில் ஒரு நண்பனுக்குச் சொல்லும் விதமாக - இவர் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். ஒலி பெருக்கியால் எழுதாமல் தன் மனதால் எழுதிய கவிதைகள் சக மனிதனின் கரங்களைப் பற்றிக் கொண்டு அவன் காதோடு சொல்லும் வரிகளுக்குரிய அந்தரங்கத்தோடு இருக்கின்றன. அந்த வரிகள் பொருட்படுத்தத் தகுந்தவை என்றால் தன்னுடைய நண்பனிடம் அவன் இந்த வரிகளைச் சொல்வான். ஒரு மனதிலிருந்து மற்றொரு மனதிற்கு கவிதை இப்படித்தான் தவழ்ந்து செல்கிறது.

மென்மையான கவிஞர் என்று இவரைச் சொல்லலாம். இவருடைய ரீங்காரம் தான் மென்மையானதே தவிர ரீங்காரத்துக்கு ஆதாரமான கம்பி - உள்பலம்- வலிமையானது. சுயத்தின் மீது நம்பிக்கை கொண்ட உள்பலம் இது. தன் அனுபங்களை சதா அசை போடுவதில் கூடிவரும் உள்பலம். அனுபவங்களின் சாரங்களை அறிய தனக்கு உகந்த தயாரிப்புகளிலும் இவர் கவனம் கொண்டிருந்தார். படிப்பும், தொடர்புகளும், விவாதங்களும், இதனால் காலத்தைப் பற்றிய உணர்வு இவருக்குச் சாத்தியமாயிற்று. கூடிவராத கவிதைகளில் கூட காலத்துக்கும் கவிதைக்கும் இடையே பழமையின் களிம்பு இல்லை.

பிறப்பு, வளர்ப்பு, தேசம், மொழி, ஜாதி, மதம் இவற்றின் குறுகல்கள் தாண்டிய முகம் இவருடையது. இதனால் அடையாளங்கள் அற்று வெற்று அம்பலத்தில் வெளிறிப்போன கவிதைகளாக இவருடையவை இருக்கின்றன என்பது இல்லை. ஒரு தமிழ் நகரத்தில் வாழ்ந்த தமிழனின் நவீனக்கவிதைகளாக இவை இருக்கின்றன. இந்தக் கவிதைகளின் வேர் இந்த மண்ணில் இருக்கிறது. இந்த மண்ணின் வேதனை இந்தக் கவிதையிலும் இருக்கிறது.

-1993

Oct 19, 2008

குட்டி இளவரசிக்கு ஒரு கடிதம்-ஆத்மாநாம்

ஆத்மாநாம்

modern-art-07

ஹலோ என்ன சௌக்கியமா

இப்பொழுது புதிதாக என்ன விளையாட்டுக் கண்டுபிடித்துள்ளாய்

உன்னுடைய குஞிச்ட்ணீ எப்படி இருக்கிறது

பூச்செடிகளுக்கிடையே

புல்தலைகளின் மேல்

நெடிய பசும் மரங்களின் கீழ்

சுற்றிலும் வண்ணாத்திப்பூச்சி

மரச்சுவர்களுக்கிடையே

சிவப்பு வீட்டின் உள்ளேயிருந்து

ஷிநீணீனீஜீ எட்டிப் பார்க்கிறான்

வெளியே பழுப்புநாய் இருந்தான்

என்ன விஷயமென்று குஞிச்ட்ணீ வெளியே வந்தான்

தெரியாதா நம்முடைய கூட்டம் மரத்தடியில்

சீக்கிரம் வந்துவிடு என்றான்

பலவர்ண நாய்களுக்கிடையே தாவி நுழைந்தான்

கேட்டது ஒரு கேள்வி

எங்கள் தலைவனை கௌரவிக்க

நாமெல்லோரும் கூடியிருக்கிறோம்

அவர் கண்டுபிடித்ததென்ன

அடக்கத்துடன் ஷிநீணீனீஜீ சொன்னான்

பின்னால் சுமக்கும் பை

கூட்டம் கலைந்தது

அடுத்த கதையை நீ சொல்

அன்புடன் என்றும் உன்

என் ரோஜாப் பதியன்கள்-ஆத்மாநாம்

ஆத்மாநாம்

moderart-3

என்னுடைய இரண்டு ரோஜாப்பதியன்களை

இன்றுமாலை சந்திக்கப் போகிறேன்

நான் வருவது அதற்குத் தெரியும்

மெலிதாய்க் காற்றில் அசையும் கிளைகள்

பரபரத்து என்னை வரவேற்கத் தயாராவது

எனக்குப் புரிகிறது

நான் மெல்லப் படியேறி வருகிறேன்

தோழமையுடன் அவை என்னைப் பார்க்கின்றன

புன்னகைத்து அறைக்குள் நுழைகிறேன்

செருப்பைக் கழற்றி முகம் கழுவி

பூத்துவாலையால் துடைத்துக் கொண்டு

கண்ணாடியால் எனைப்பார்த்து

வெளி வருகிறேன்

ஒரு குவளைத் தண்ணீரைக் கையிலேந்தி

என் ரோஜாப் பதியன்களுக்கு ஊற்றுகிறேன்

நான் ஊற்றும் நீரைவிட

நான் தான் முக்கியமதற்கு

மெல்ல என்னைக் கேட்கின்றன

என்ன செய்தாய் இன்று என

உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் என

பொய் சொல்ல மனமின்றி

செய்த காரியங்களைச் சொன்னேன்

அதனை நினைத்துக் கொண்ட கணத்தைச் சொன்னேன்

சிரித்தபடி காலை பார்ப்போம்

போய்த் தூங்கு என்றன

மீண்டும் ஒருமுறை அவற்றைப் பார்த்தேன்

கதவைச் சாற்றி படுக்கையில் சாய்ந்தேன்

காலை வருவதை எண்ணியபடி

முத்தம்-ஆத்மாநாம்

ஆத்மாநாம்

auguste-rodin-the-kiss-rodin-museum-paris

முத்தம் கொடுங்கள்

பரபரத்து

நீங்கள்

முன்னேறிக் கொண்டிருக்கையில்

உங்கள் நண்பி வந்தால்

எந்தத் தயக்கமும் இன்றி

இறுகக் கட்டித் தழுவி

இதமாக

தொடர்ந்து

நீண்டதாக

முத்தம் கொடுங்கள்

உங்களைப் பார்த்து

மற்றவர்களும்

அவரவர்

நண்பிகளுக்கு முத்தம்

கொடுக்கட்டும்

விடுதலையின் சின்னம் முத்தம்

முத்தம் கொடுத்ததும்

மறந்துவிட்டு

சங்கமமாகிவிடுவீர்கள்

பஸ் நிலையத்தில்

ரயிலடியில்

நூலகத்தில்

நெரிசற் பூங்காக்களில்

விற்பனை அங்காடிகளில்

வீடு சிறுத்து

நகர் பெருத்த

சந்தடி மிகுந்த தெருக்களில்

முத்தம் ஒன்றுதான் ஒரே வழி

கைவிடாதீர்கள் முத்தத்தை

உங்கள் அன்பைத் தெரிவிக்க

ஸாகஸத்தைத் தெரிவிக்க

இருக்கும் சில நொடிகளில்

உங்கள் இருப்பை நிரூபிக்க

முத்தத்தைவிட

சிறந்ததோர் சாதனம்

கிடைப்பதரிது

ஆரம்பித்து விடுங்கள்

முத்த அலுவலை

இன்றே

இப்பொழுதே

இக்கணமே

உம் சீக்கிரம்

உங்கள் அடுத்த காதலி

காத்திருக்கிறாள்

முன்னேறுங்கள்

கிறிஸ்து பிறந்து

இரண்டாயிரம் வருடங்கள் கழித்து

இருபத்தியோறாம் நூற்றாண்டை

நெருங்கிக் கொண்டிருக்கிறோம்

ஆபாச உடலசைவுகளை ஒழித்து

சுத்தமாக

முத்தம்

முத்தத்தோடு முத்தம்

என்று

முத்த சகாப்தத்தைத்

துவங்குங்கள்

ஆத்மாநாம்

athmanam

பிரக்ஞை பூர்வமாக எதிர் கவிதை எழுதியவர்களில் ஆத்மாநாம் முதன்மையானவர். அவரின் சமூகக் கவிதைகளிலும் சரி, நம்பிக்கையின்மைக்கு மத்தியிலும் சரி, ஒரு மெல்லிய கீற்றாக நம்பிக்கை துளிர்த்து நிற்கிறது. ஆத்மாநாமின் இயற்பெயர் எஸ்.கே. மதுசூதனன். 1951ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி பிறந்தவர். 1978இல் மனநலத்தாக்குதல் ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஆத்மாநாம் 1983 ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். ஆனால் பின்பு பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த அவர் 6_7_1984_ல் கிணற்றில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்டார். ஜோசப் ப்ராட்ஸ்கி பற்றி அறிமுக நூல் ஒன்றை எழுதியுள்ளார். 1981இல் காகிதத்தில் ஒரு கோடு _ ‘ழ’ வெளியீடாகப் பிரசுரிக்கப்ட்டது. `ஆத்மாநாம் கவிதைகள்’ பிரம்மராஜன் தொகுத்து தன்யா _ பிரம்மா வெளியீடாக 1989இல் வெளிவந்தது. இங்கு இடம்பெறும் கவிதைகள் `ஆத்மாநாம் கவிதைகள்’ தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்