Showing posts with label ஷங்கர்ராமசுப்ரமணியன். Show all posts
Showing posts with label ஷங்கர்ராமசுப்ரமணியன். Show all posts

Oct 5, 2012

நவீன கவிதையை க.நா.சுவிலிருந்தும் தொடங்கலாம்-ஷங்கர்ராமசுப்ரமணியன்

க.நா.சு.100

க.நா.சுவின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னைப் பல்கலைக்கழக தமிழ் துறைக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை

இன்று செழுமையும், பன்மைத்தன்மையும், பலபடித்தான பாதைகளும் கொண்ட நவீனத் தமிழ்க் கவிதைகளைப் புதிதாக படிக்கத் தொடங்கும் வாசகன், நவீன கவிதையின் இன்றைய உருவம், எதேச்சையாக, எதிர்ப்புகளற்று, வசதிகள் கொண்ட ஒரு சூழலில் பிறந்ததாகவே எண்ணக்கூடும்.  புதுக்கவிதை தன்னை நிறுவிக் கொண்ட கதை அவ்வளவு எளிதானதல்ல.. இலக்கண வயப்பட்ட சட்டகங்களிலிருந்து மட்டுமல்ல, பழமையின் இறுகிய தடைகொண்ட மனோபாவங்களிலிருந்தும், சிந்தனை மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரத்தை பெற்ற உருவம் புதுக்கவிதை. பழைய வெளியீட்டு வடிவத்திலிருந்து புதிய வெளியீட்டு வடிவத்தை தமிழ்க் கவிதை அடைந்தது உடல் ஒரு சட்டையைத் துறந்து, மற்றொரு சட்டையை அணிவது போன்றதல்ல. ஒரு உயிர் தன் உடலையை மறு தகவமைப்புக்கு உட்படுத்தியதற்கு சமமானது.kanasu98

தமிழில் பாரதியால் வசனகவிதை என்ற பெயரில் தொடங்கப்பட்டு,புதுமைப்பித்தன், கு.ப.ரா. ஆகியோரால் ஓரளவு முயற்சிக்கப்பட்டு,ந.பிச்சமூர்த்தியும், க.நா.சுவும் நிலைநிறுத்திய வடிவம் புதுக்கவிதை.

ந.பிச்சமூர்த்தி மற்றும் க.நா.சு ஆகியோர் முயன்ற கவிதைகளை இப்போது ஒப்பிடும்போது, க.நா.சுவின் கவிதைகள் இன்றைய நவீன கவிஞர்களுக்கும் பொருளம்சத்துடன் கூடிய அனுபவத்தை தரும் வலுவில் இருப்பதை உணரமுடிகிறது. ந. பிச்சமூர்த்தியின் வேதாந்த, லட்சியச்சார்பு அவர் கவிதையை பழமையில் நங்கூரமிட்டு விடுகிறது. க.நா.சுவின் கவிதைகள் லட்சியம் துறந்தவையாக உள்ளன. அந்த குணம் க.நா.சுவின் கவிதைகளை,இன்றைய நவீன கவிஞனுக்கு மேலும் இணக்கமாக்கக் கூடியது.

தமிழில் நாவல், சிறுகதைகளின் வடிவம் மற்றும் பொருள் சார்ந்து தனது மொழிபெயர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் மூலம் திட்டமான தரமதிப்பீட்டைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் க.நா.சுப்பிரமணியம். அதே போலவே புதுக்கவிதை தொடர்பாகவும் அந்தக் கலைவடிவம் நவீன வாழ்க்கை சார்ந்து துறக்கவேண்டியதும், ஏற்கவேண்டியதுமான அம்சங்களையும் நிகழ்த்திக் காட்டுவதற்காகவே தனது கவிதைகளை எழுதியுள்ளார் என்றும் சொல்லலாம்.அதனால் தான் தனது கவிதைகளை அவர் சோதனைகள் என்று சொல்கிறார்.

"இலக்கியச் சோதனைகளில் எப்போதுமே வெற்றி,தோல்விகள் பூரணமானவை.என் புதுக்கவிதை முயற்சி வெற்றிபெறும் என்றே நான் எண்ணிச் செய்கிறேன்.சோதனைகளின் தன்மையே இதுதானே. செய்து, செய்து பார்க்கவேண்டும்.அவ்வளவுதான்"

இப்படி, 1959 இல் வெளியான சரஸ்வதி ஆண்டுமலரில் வெளியான அவர் கட்டுரையில் எழுதுகிறார்.
சிறுகதை, நாவல் மற்றும் உரைநடையைப் போல் நேரடியாக க.நா.சுவின் கவிதைகள் எல்லாத் திசைகளிலும் திறந்திருக்கும் ஒளிவீடாக வாசகனை வரவேற்பவை.. வாசகன் தனது அனுபவத்தைக் கொண்டு பிரதிபலிக்கவும்,அதில் தனது சலனங்களை இனம்காணவும், அவர் கவிதைகள் இன்றின் துடிப்போடு காத்திருக்கிறது. அதுதான் அவர் கவிதைகளில் நுழையும் போது காணும் முதல் அழகு. நேரடிக் கூற்று, மரபின் சுமையற்ற சுதந்திரம், படிம,தத்துவச் சுமையின்மை போன்ற அம்சங்களுடன் அன்றாட வாழ்வின் பொருட்களும், சத்தங்களும் சாதாரணத்துவத்துடனேயே உலவும் இடம் அது.இப்படியாக தமிழ் புதுக்கவிதை வடிவத்துக்கு ஒரு சிறந்த முன்வரைவை க.நா.சு உருவாக்கியிருக்கிறார்.

க.நா.சுவின் எளிமை என்று நான் கூறுவது அதன் மொழிதல் முறையையே தவிர, அதன் பொருள் மற்றும் அனுபவத்தை அல்ல. நவீன வாழ்வின் சிக்கல்கள் மற்றும் சிடுக்குகள் அனைத்தும் புதுக் கவிதையில் இருக்கவேண்டும். . ஆனால் மொழிதலில் தெளிவு, வாசகனுக்குத் தொனிக்க வேண்டும் என்று பிரக்ஞையுடையவர் அவர்.

புதுக்கவிதையில் க.நா.வின் இடத்தைப் பற்றி ஞானக்கூத்தன் பேசும்போது, "இருபதாம் நூற்றாண்டு படைப்பாளிகளில் கவிதைக்கு நிகழ்ந்து கொண்டிருந்த சிக்கல்களை அறிந்தவர்களில் பாரதி, பிச்சமூர்த்தி,கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், க.நா.சு இவர்கள் தான் முக்கியமானவர்கள். அடுத்த நூற்றாண்டின் இரட்டைக் கதவு மூடிக்கிடந்ததை அறிந்தவர் பாரதி. அதைத் திறக்க முயன்றதில் அது சற்றுத் திறந்துகொண்டு இடைவெளி காட்டியது. பிச்சமூர்த்தி முயன்றதில் அது திறந்துகொண்டது.ஆனால் முழுமையாகத் திறந்துகொண்டு விடவில்லை. அவரே கூட அது முன்போல மூட வருகிறதா என்று பார்த்தார். ஆனால் க.நா.சுவோ கதவை நன்றாகத் திறந்ததோடல்லாமல், கதவின் இரண்டு பக்கங்களையும் பெயர்த்து அப்புறப்படுத்திவிட்டார்." என்கிறார்.

000

க.நா.சுவின் கவிதைகளைத் தொடர்ந்து படிக்கும்போது சலித்த ஒரு மனதின் தன்விசாரமாக அவை இருப்பதை உணரமுடியும். தனிமனிதனின் குரல் முதல்முதலில் கவிதையில் அழுத்தம்பெறும் போது இப்படித்தான் தொடங்கியிருக்கவும் முடியும். தமிழிலும் முதல் தலைமுறைப் புதுக்கவிஞர்களின் பொது இயல்பென்றும் இந்த தன்விசார அம்சத்தை நாம் கூறிவிடமுடியும். தத்துவம் அல்லது வேதாந்தத்தின் சாய்வுநாற்காலியில் சாய்ந்து கொண்டு இந்த சுயவிசாரத்தை க.நா.சு நிகழ்த்தவில்லை. தனது வாசிப்பு, பட்டறிவு, நினைவுகள் வழியாக அவர் சுயவிசாரத்தை தொடர்ந்து கவிதைகளில் மேற்கொள்கிறார். அவர் கவிதைகளில் நன்மை, தீமைகளின் பெரிய மோதலையோ, உயிரின் அலைக்கழிப்பையோ, உணர்வுச்சத்தையோ வாசகன் பார்க்க இயலாது. க.நா.சுவின் எழுத்துவாழ்வு அது தொடர்பான ஏமாற்றங்கள், சலிப்புகளையும் அவர் கவிதைகள் வழியாகப் படிக்க முடியும்.அறிவார்த்தத்தின் சமநிலையுடன், அசட்டுத்தனத்தை மூர்க்கமாக அகற்றியபடிதான் செல்கிறது அவரது விசாரணை. அந்த விசாரணையில் பொதுச்சமூகம் ஏற்றுக்கொள்ளாத மனதின் இயல்புகளை மனத்தடை இன்றி சுய அம்பலமாக நிதர்சனத்தைச் சொல்லிச் செல்கிறார். கலாச்சாரப் புனிதங்கள் ஏதும் படைப்பில் கட்டிக்காக்கவேண்டியதில்லை என்ற தொனியை அவர் கவிதையில் பார்க்கமுடிகிறது..


நினைவுப்பாதை

இரவு சாப்பிட உட்கார்ந்ததும்
பாட்டி சாதம் போட்டு சாம்பார்
வார்த்ததும்
பக்கத்தறையில் உரக்க
முனகல் கேட்டு
எழுந்துபோய்ப் பார்க்க
செத்துக்கிடந்த தாய்
உருவம் அடியோடு மறந்துவிட்டது.

ஆனால்
தாயை இழந்தவன்
அழ வேண்டிய
மாதிரியா நீ அழுதாய்?
என்று
மறுநாள்
பாட்டி கேட்டது மட்டும்
பசுமையாய் நினைவில்
பதிந்திருக்கிறது.

தகப்பன் இறந்தபோது
சாகவயது வந்துவிட்டது.
கருமத்தில் கண்ணாக
இருந்தது கண்டு புரோகிதர்
'என்ன சிரத்தை! என்ன சிரத்தை!
என்று வைதீகமாய்ப் பாராட்டியது
நினைவில் இருக்கிறது.
குப்பையைக் கூட்டி
அப்புறப்படுத்த
உயிரற்ற உடலை
எடுத்தெரிக்க
எத்தனை சடங்குகள்
எத்தனை புராணச் சப்பைக் கட்டுகள்
என்று நினைத்ததும்
நினைவில் இருக்கிறது

20 ஆம் நூற்றாண்டில் வாழும் க.நா.சுவுக்கு மனிதகுலம் ஓரளவுக்கும் அதிகமாக நீடித்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது. வாழ்வு ஒரு கட்டத்தில் பழக்கத்தின் செக்குமாட்டுத் தனத்தில் உறைந்துவிட்டது. பாலுறவு, மதம்,சிந்தனை எதுவுமே அவனை விடுவிக்கவில்லை. இந்நிலையில் ஒரு நம்பிக்கையின்மை, ஒரு சந்தேகம், விடை போன்று தொனிக்கும் விடை,ஆழ்ந்த புரியாமை உணர்வு, ஒரு போதாமை மற்றும் அமைதியை உருவாக்க அவர் ஒரு வார்த்தைக் கூட்டத்தை சுழற்றி மேயவிடுகிறார். சின்னஞ்சிறிய வியப்புகளையும், கவனிப்புகளையும் அவர் வானில் நட்சத்திரங்களைப் போல தெளித்துவிடுகிறார். கவிதைச் செயல்பாடு மட்டுமல்ல படைப்புச் செயல்பாடு அத்தனையும் மனிதனின் போதாமை மற்றும் நிராசையிலிருந்தே எழுகிறது என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது. அந்த நிறைவின்மையை அவர் தனது கவிதைகளிலும் தொட்டெழுப்பி ஒரு முழுமையைப் பற்ற முயன்றுகொண்டே இருக்கிறார்.
கவிதை பற்றி எழுதிய கவிதை இதோ

கவிதை

எனக்கும்
கவிதை பிடிக்காது. மனிதன் எத்தனையோ
எட்டுகள் எடுத்து வைத்துவிட்டான்; இவற்றில்
எத்தனை எட்டுக்கள் கவிதையால்
சாத்திய மாயின
என்று யார்
தீர்மானித்துச் சொல்ல இயலும்? பின்
எதற்காகத்தான் கவிதை தோன்றுகிறது?
மொழியின் மழலை அழகு தான்.
ஆனால் அது போதவே
போதாது.
போதுமானால் கவிதையைத் தவிர வேறு
இலக்கியம் தோன்றியிராதே. போதாது
என்று தான், ஒன்றன்பின் ஒன்றாக
இத்தனை இலக்கியத்
துறைகள்
தோன்றின- நாடகமும், நாவலும், நீள்
கதையும், கட்டுரையும் இல்லாவிட்டால்
தோன்றியிராது; ஆனால் அவையும்தான்
திருப்தி தருவதில்லையே!
அதனால்,
தான் நானும் கவிதை எழுதுகிறேன்.
மனிதனுக்கு கலை எதுவும் திருப்திதராது
மேலே, மேலே என்கிற ஏக்கத்தைத் தான்
தரும். கலையின்
பிறப்பு
இந்த அடிப்படையில் ஏற்படுவது. கடவுளே
இன்னமும் உயிர்வைத்துக் கொண்டிருப்பது
இந்த அடிப்படையில்தான் சாத்தியம்
என்று சொல்லலாம்.

எழுத்து- ஜனவரி 1959


என்று எழுதுகிறார்.

000

இன்றைய தலைமுறை வாசகர்களும், நவீன கவிஞர்களும் இனம் காணக்கூடிய, க.நா.சு மீதான மதிப்பாக நினைவுகொள்ளக் கூடிய கவிதைகளை அறிமுகப்படுத்துவது இக்கட்டுரையின் முக்கிய பயன்பாடாக இருக்கவேண்டும்.க.நா.சு கவிதையில் வரும் பிராணிகளும், பறவைகளும் அழகு, சுதந்திரம் அல்லது எந்த தத்துவப் பொருண்மையுடையதான குறியீடுகளாக இல்லை.அவை சிறியதாக இருந்தாலும் தனித்த குணமுடைய மற்றமையின் அழகுடைய உயிர்கள். அந்தப் பிராணிகளுக்கும், பறவைகளுக்கும் க.நா.சு கவிதையில் அளித்த சுதந்திரம் சாதாரணமானதல்ல. இன்றைக்கும் க.நா.சுவின் வாஞ்சையான பரிசுகள் என்று பெருமிதமாக கூஃபி, விளையாடும் பூனைக்குட்டி, சிட்டுக்குருவி, பூனைக்குட்டிகள் ஆகிய கவிதைகளை இளம் வாசகன் முன் எடுத்துவைக்க முடியும்.

க.நா.சு தனது அறிவு மற்றும் பிரக்ஞையின் போதத்திலிருந்து,ம்,சலிப்பிலிருந்தும் விடுபட்டு தன்னை இழக்கும் இடமாக இக்கவிதைகளைப் பார்க்க முடிகிறது.

அதற்கு அடுத்தபடியான நிலையில் இலக்கிய வரலாறு மற்றும் அரசியல் முக்கியத்துவம் கொண்டு பார்த்தால் புதுமைப்பித்தன் இருந்த வீடு,போ, உயில்,மதுரை மீனாக்ஷியின் கன்னிமை கழியும்போது, முச்சங்கம், இன்னொரு ராவணன், பயணம் போன்ற கவிதைகள் முக்கியமானவை.
(கூஃபி- பக்கம் 44) (விளையாடு பூனைக்குட்டி-70) (பூனைக்குட்டிகள் 148)

அவர் காலத்தில் எழுச்சி பெற்ற திராவிட இயக்கத்தின் மீதான விமர்சனங்களை அவர் கவிதைகளில் வெளிப்படையாகவே பார்க்கமுடிகிறது.. நகுலனில் அது விபீடணன் தனிமொழி போன்ற கவிதைகளில் மிகவும் பூடகமாக இயங்குகிறது.அலங்காரப் பேச்சுக்கும், நடைமுறை எதாரத்தத்துக்கும் இடையே தத்தளிக்கும் தமிழ் கலாச்சார வறுமை, முச்சங்கம் கவிதையில் அங்கதத்துடன் விமர்சிக்கப்படுகிறது. முச்சங்கம்( 129)

மதுரை மீனாக்ஷியின் கன்னிமை கழியும்போது கவிதையும் அரசியல்ரீதியானதே.. ஆனால் அவரது கவிதைகளின் பொதுவான சமநிலையைத் துறந்து உக்கிரமான நிகழ்ச்சிகள் தாளகதியுடன் இக்கவிதையில் விவரிக்கப்படுகின்றன. இன்னமும் அக்கவிதை பூடகத்தையும், புதிரின் எழிலையும் விலக்காமல் வைத்திருக்கிறது. இக்கவிதையில் இறந்தகால நிகழ்ச்சிகளையும் , தற்காலத்தின் நடைமுறைக்காட்சிகளையும் பிணைத்து ஒரு கூத்து நிகழ்த்தப்படுகிறது. மதுரையின் மீனாக்ஷியின் கன்னிமை கழியும் போது என்ற வாக்கியமே ஒரு சாதாரண தமிழ் மனத்துக்கு இன்னமும் அதிர்ச்சியை ஊட்டுவதே.(103)

000
தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் முக்கியத் தடம் பதித்த சாதனையாளர்களை இருவகையாகப் பிரிக்கலாம். தனக்கென ஒரு பார்வையையும், உலகத்தையும் உருவாக்கி அதை முற்றிலும் செழுமைப்படுத்தி அந்த வெற்றியின் பலன்களை முற்றிலும் நுகர்ந்து அது தரும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் சுவைத்தவர்கள் முதல்பிரிவினர்.
படைப்பின் தீராத சவால்களால் தூண்டப்பட்டு, நிறைவின்மையின் தொடர்ந்த அலைக்கழிப்புடன் வெற்றி,தோல்வியை அறியாமலேயே பல்வேறு சாத்தியங்களின் விதைகளைத் தூவியவர்கள் இரண்டாம் பிரிவினர். அவர்கள் பண்படுத்தி, விதைகள் இட்ட நிலம் அவர்களின் படைப்பு வாழ்க்கைக்குப் பின்னும் செழுமையாகவே இருக்கும். முழுமையின்மையிலிருந்து கொப்பளிக்கும் படைப்பூக்க நிலம் அது. இந்த இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவர் தான் க.நா.சுப்பிரமணியம்.
க.நா.சுவின் தொடர்ச்சியாக நகுலன், விக்ரமாதித்யன், ஆத்மாநாம், சுகுமாரன்,சமயவேல், பா.வெங்கடேசன் என்று ஒரு ஆரோக்கியமான சங்கிலி இன்னும் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
க.நா.சு, புதுக்கவிதை சார்ந்து உத்தேசித்த இயல்புகளின் விரிந்த வரையறைக்குள் இருப்பவர்களே தவிர ஒவ்வொருவருமே அவர்களின் உலகங்கள் சார்ந்து தனித்துவம் கொண்டவர்கள் என்பதும் முக்கியமானது.

000

இலக்கியத்தை பிரதானமான அறிதல் முறையாகப் பார்த்து, முழுவாழ்க்கையின் கர்மமாக எழுத்தை எண்ணி வாழ்ந்த வாழ்க்கை க.நா.சு.வினுடையது.  படைப்பின் வழியாக அவர் வாழ்க்கையின் சிக்கல்களையும் அதன் அகபரிமாணங்களையும் தொடுவதற்காக அவர் கொண்ட எத்தனங்களின் துளி அனுபங்களாக அவரது கவிதைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் சிட்டுக்குருவி கவிதை.
தான் கழற்ற முடியாத மின்விசிறியின் ப்ளேடை தொடர்ந்து அசைத்துப் பார்த்துவிட்டு பின்னர் சிகரெட் தாளையும், விளக்குமாறு குச்சியையும் தன் கூட்டுக்கு எடுத்துச் செல்வது போல மெய்மையைக் அறிந்துவிட எழுத்தாளனும் முயன்றுகொண்டேயிருக்கிறான். அவனுக்கு கடவுளின் ஆறுதல் பரிசைப் போல கணநேர அழகுகளும், தரிசனங்களும், மன எழுச்சிகளும் கிடைக்கின்றன. அவன் ஓயாமல் கொண்ட சலனங்களுக்கு அவன் மேற்கொண்ட சிரமம்மிக்க பயணமும் பரிசுதான் என்பதைப் போலத்தான் இருந்திருக்கிறது க.நா.சுவின் வாழ்க்கை.

பார்வை நூல்கள் மயன் கவிதைகள், க.நா.சு கவிதைகள்

நன்றி: யானை

Dec 23, 2010

சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை- ஷங்கர்ராமசுப்ரமணியன்

சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை

தலைப்பிரட்டைகளை
மீன்களென்று எண்ணி
நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து அள்ளி 34838_105318686188593_100001313875575_44080_6688702_n
சட்டைப்பையில்
நிரப்பிச்செல்லும் சிறுவர்கள் நீங்கள்
அவை
உங்கள் விருப்பப்படியே 
உங்கள் தலைக்குள்ளும்
சில நாட்களுக்கு
அவரவர் வசதிக்கேற்ப
குப்பிகளிலும்
மீனென நீந்தும்.
மீன்களைப் பிடிப்பதற்கு தேவையான
தூண்டில்கள்
வலைகள்
காத்திருப்பின் இருள்
எதையுமே அறியாத சிறுவர்கள்
நீங்கள்.
தலைப்பிரட்டைகளை
சட்டைப்பைக்குள் நிரப்பி
எடுத்துச்செல்கிறீர்கள்.
உலகிற்கும்
காத்திருக்கும் உங்கள் அம்மாவிற்கும்
யாரும் எதிர்பார்த்திராத
அரிய உயிர்த்துடிப்புள்ள
பரிசை எடுத்துச்செல்வதில்
உங்கள் மனம் படபடக்கிறது
உங்கள் தோழி தேஜீவிடமும்
இந்தப் பரிசை
பகிர்ந்து கொண்டே ஆகவேண்டும்
நண்பர்களே
உங்களது இப்போதைய
சந்தோஷத்திற்கு
நான் ஒரு பெயர் இடப்போகிறேன்.
தலைப்பிரட்டை.

ஒரு இரையை
புதிரானதும், கரடுமுரடானதுமான இடங்களில்
எலி ஒன்று இழுத்துச் செல்வது போல்
கனவொன்று
நேற்றும் என்னை வழியெங்கும்
அழைத்துச் சென்றது.
என்னை பரிதவிக்க விட்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
அந்தக் கனவு கொறித்தது
மீதியாய் என்னை மதில்களிலிருந்து
தூக்கி எறிந்தது.
அபாயத்தில் அலறுவதும் பீதிக்குள்ளாவதுமாய்
வழியெங்கும் கனவின்
கொடூரப் பற்களிடையே
நடுங்கியபடி இருந்தேன்.
கனவில் எங்களைக் கண்டாயா என்று
நீங்கள் கேட்கிறீர்கள்
சற்று இளைப்பாறிவிட்டு
உங்களுக்கு நியாயமாகவே பதிலுரைக்கிறேன்.
நீங்கள் இல்லாமலா ?


நித்தியவனம்

தெலைபேசியில் உள்ள எண்காட்டியில்
எண்கள் நடுங்குவதை
முதல் முறையாய் பார்க்கிறீர்களா.
உங்கள் அழைப்புமணியின் ரீங்காரம்
இதவரை செல்லாத நிலவுகளின்
சுவர்களுக்குள்
ஊடுருவுவதை உணர்கிறீர்களா.
நீங்கள் அழைக்கும் நபர்
சற்றுமுன் இறந்தவராய் இருக்கக்கூடும்.

இரவு காகமென அமர்ந்திருக்கிறது
உயிர்
ஒரு கொக்கின்
வெளிச்ச உடலுடன்
ஆஸ்பத்திரி காரிடாரில் நடந்து
வெளியேறியது.
கொக்கும் காகமும்
ஒரு நித்ய வனத்திற்குள்
ஜோடியாய் பறப்பதை
நீங்கள் பார்த்தீர்கள்
நான் பார்ததேன்.

நன்றி: சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை என்ற தொகுப்பிலுள்ள கவிதைகள் இவை, சந்தியா பதிப்பகம்

Dec 13, 2010

நன்மையும் சாசுவதம் - ஷங்கர்ராமசுப்ரமணியன்

நன்மையும் சாசுவதம்: ஆனால் தீமையும் சாசுவதம்

ஷங்கர்ராமசுப்ரமணியன்

 

நகுலன் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தவுடன் நான் செய்ய முயற்சித்தது நகுலன் தொடர்பாக பெருகிய நினைவை நிறுத்த முயற்சித்ததுதான். என்னில் பெருகும் நினைவுகளுக்கு நகுலனின் மூலமாகவே நான் இடையீடு செய்யின் அது ஒரு நிமித்தம் மாத்திரம்.

மதம், நியதிகள், சம்பிரதாயம், பழக்கம், நிறுவனங்கள், அறிவு ஆகியவை கருத்துருவம் செய்த மனிதனின் ஏற்கனவேயான மரணத்தை விபரீத அழகுள்ள படிமங்களால் உரக்க அறிவித்தவர் அவர். தன் இருப்பையே யோகத்தின் சவநிலையாக கோட் ஸ்டாண்ட் கவிதைகளில் வெளிப்படுத்தியவர். ஒரு புதிய அறிதலின் மகிழ்ச்சியுடன் பச்சைக் குழந்தையை nsgu7ஸ்பரிசிக்கும்  வியப்புடன் சாவை நோக்கித் தியானித்திருந்தவர் அவர். புதிய செய்திபோல நகுலன் இறந்து விட்டாரென்று யாராவது நகுலனிடம் போய் சொல்வார்கள் எனில் நகுலன் தன் பாணியில் சிரிசிரியென்று சிரிப்பார்.

நகுலன் என்ற பெயரே அவர் தனக்குத் தரும் ஒரு சாயல் அல்லது விளக்கம்தான். நகுலன் என்ற பாத்திரத்தை ஏன் டி.கே. துரைசாமி தேர்வு செய்தார்? விபீடணன் என்னும் ராமாயணக் கதாபாத்திரத்துக்குள் இவர் குரல் எப்படி துல்லியமாக ஒலிக்கிறது. இந்த கேள்விகளுக்கான பதிலின் திறவுகோல் இவரின் படைப்புகளில் இருக்கிறது.

மகாபாரதத்தில் நகுலன் என்னும் கதாபாத்திரத்தின் இருப்பு ஒரு விளிம்புநிலை. தங்கள் எதிரிகளான கௌரவர்களுக்கு நல்ல நாள் குறிக்கச் செல்பவன். சதா எதிர்நிலைகளிலேயே பழகிவிட்ட பொது மன, பௌதீகப் பரப்பை (ராமன் – ராவணன்- அர்ச்சுனன் - துரியோதனன்) அதன் தர்க்கங்களின் கொலைக் கூர்மையை முனைமழுங்கச் செய்யும் எழுத்தாளக் கதாபாத்திரம் நகுலன். ஆதியிலிருந்துதான் தனியன் என்பதன் நினைவில்லாத மனிதத்தன்னிலை குடும்பம், சாதி, மதம், மதிப்பீடுகளின் மேல் சாய்ந்தும், ஈடுபட்டும் குழுவாக சமூகமாக, கும்பலாக தன்னை பாவிக்கிறது. நகுலன், மனிதன் மிகத் தனியன் என்பதை தொடர்ந்து ஞாபகப்படுத்துபவராய் உள்ளார். விபீடணனின் தனிமொழியிலும் நகுலன் இதை ஏற்றியுரைக்கிறார். லங்கை நகரமே மதுவிலும், போகத்திலும், திளைக்கிறது. விபீடணனால் எதிலும் ஒன்ற முடியவில்லை. விபீடணன் ராவணனுடன் முரண்பட்டு ராமனிடம் சென்றாலும் வானரங்கள் அவனை ஒற்றனாக, அந்நியனாகவே பார்க்கின்றனர். நகுலன் புனையும் ராமாயணத்தில் (நகுல ராமாயணம் என்றே மூன்று, ஐந்து தொகுதிகளைக் குறிப்பிடுவார் கோணங்கி) கும்பகர்ணன் ராமனுடன் உரையாடும் பகுதியில் அரக்கர் - நாகரீக மனிதர் என்ற எதிர்நிலையில் உரையாடல் இடம்பெறுகிறது. தத்துவம், மதம், அமைப்புகள் எல்லாவற்றின் தோல்வியையும் கும்பகர்ணன் போட்டுடைக்கிறான். ராமனின் அம்பில் வீழ்ந்து மரணமுறும்போது 'ராமா என்னிலும் அசுரன் நீ' என்றுரைத்து மரணிக்கிறான். இந்த கும்பகர்ணக் கூற்றில் ராமன், ராவணன் இருவருமே ஒரே நிலைமையின் இரு அபாயங்களாக மாறுகின்றனர்.

ராவணனை விபீடணன் 'பெரிய அண்ணா' என்று சொல்லும்போதே அதிகாரம் குறித்த பயம் விபீடணன் குரலில் நகுலனாய் நடுங்குகிறது. இந்த தனியனின் குரலே நானும் ஒரு பறையன்தான் (மழை:மரம்: காற்று) என அறிவிக்கிறது. இயற்கை என்ற பேருருவின் சின்னஞ்சிறிய உறுப்புகளான எறும்புகளைப் பார்ப்பதில் லயிக்கிறது. செயலற்று பார்த்துக்கொண்டிருப்பது ஒரு படைப்பு போதமே. காரணகாரியம், சாராம்சம், செயல் தர்க்கம் சார்ந்த பின்னணியுடைய பொதுப்புத்தி அதை "ஒரு துரும்பைக் கூட இவ்வளவு லயிப்புடன் பாப்பாயோ என்றுதான் கேள்வி கேட்கும்."
இது மனிதன் என்று அழைக்கப்படும் அதிசாராம்சத்தை மறுக்கும் நகுலனின் விமர்சனமும்கூட. இயற்கையிலிருந்து விகுதியாய் பாவித்துக் கொண்ட ஒரு மனிதனின் எல்லா வெற்றிகளும் மனதின் தோல்விகளாகவே தொனிக்கிறது நகுலனுக்கு. சலித்து, அலுத்த மனிதனின் சாயைகளாகவே இயற்கை நகுலனுக்கு தோற்றமளிக்கிறது.

சாம்பல், குருவி, கருங்குருவி, பச்சைக்கிளி, மரங்கொத்தி, சாரைப்பாம்பு, மஞ்சள் நிறப்பூனை என்று அவர் படைப்பில் வரும் நகுலனின் ஜனங்கள் அவ்வளவு பேரும் அவரது உணர்வு நிலைகள். ஒரு வகையில் மனிதன் என்ற பேரழுத்தத்திலிருந்து பிராணிகள், பறவைகளுக்குள் நகுலன் கூடு பாயும் வழிமுறைகளும் கூட. (நவீனன் என்கிறேன். நகுலன் என்கிறேன். ஆனால் நான் யார்? யாரைச் சந்திக்கிறனோ, நான் அவர், அவர் ஆகிறேன்... அதனால்தான். இக்கணம் பச்சைப் புழு, மறுகணம் சிறகடிக்கிற வண்ணத்துப்பூச்சி.) பிராந்தியின் போதையும் யதார்த்தத்தின் அழுத்தத்தை களைந்து, உடலைக் கழற்றி வேறு, வேறு சாத்திய நிலைகளுக்குள், ஏற்பாடுதான். நன்றாகக் குடி என்ற பாதலேரின் கவிதை நகுலன் மொழி பெயர்த்தது. இதை நகுலனின் புரிதலாகவும் கொள்ளலாம். "காலத்தின் கொடிய சுமை உன் தோள்களை முறித்து உன்னை நிலத்தில் குனியும்படி செய்வதை நீ உணராமல் இருக்கவேண்டுமென்றால் நீ நல்ல போதையில் இடையீடின்றி இருக்கவேண்டும்."

இயற்கை என்னும் பேரழகின் பிரதிபலிப்பாகவே சுசீலா, துரௌபதை, கண்ணம்மா, சீதை ஆகியோர் இருக்கிறார்கள். உடற்புணர்ச்சி என்ற செயல் சாராமல் நகுலனில் தொனிக்கும் தீராத விரகம் இயற்கையெனும் பேருருவின் மீது முயக்கம் கொள்வதாகியுள்ளது.

கிளிமரம், பறவைகள், வாழை இலையின் நுனிப்பச்சை எல்லாவற்றிலும் தன் காதலை படரவிட்டுள்ளார். சிருஷ்டியின் அழகும், இயற்கையின் முழுமையும் சேதாரத்துக்குள்ளாவதான, அத்துமீறுவதான தயக்கமும், துக்கமும் கலவி என்ற செயல்பால் இருக்கிறது. சுசீலாவின் சாயல் உள்ள ஆண்களிடமும் நவீனனின் மனம் ஆசை கொள்கிறது. (ஆண், பெண் வெறும் தோல் விவகாரம்) சிலசமயம் பிராணிகளிடம்கூட சுசீலாவின் சாயல் இருக்கிறது. புணர்ச்சி பற்றி அறிவு நிலைக்கு முன்னுள்ள தெரியாமையின் புள்ளியில் இவ்வுலகின் சௌந்தர்யத்தை எல்லாம் சதா ஜெபித்துக்கொண்டிருக்கும் உயிர்நிலை நகுலன். இந்த தெரியாமையின் புள்ளியில் நிற்கும் உயிரியின் பார்வை சாத்தியங்கள் அல்லது பார்வைக் கோணத்தில் தான் நகுலனின் ஒற்றைத் துணுக்குகூட காலாதீதத்துடன் உறவு கொள்ளும் மாயமொழி ஆகிவிடுகிறது. இந்த தெரியாமை என்னும் உயிர், தான் அறியாமலே காமார்த்தத்தின் உள் மடிப்புகளையும் புலன் யதார்த்தம் கடந்து அவற்றின் மெய்மையை வெளிப்படுத்தி விடுவதுதான் அறிதல் செயல்பாட்டின் தீர்க்க முடியாத அழகும், முரணுமாகும். கன்னியொருத்தி கருத்தரிக்க/கருத்திசைந்து முன்வரக்/கையினை கைகௌவும்/அவ்வமயம்/தீ எரிய/மத்தளம் அதிர/ஒரு மதயானை நின்று தளரும்)
கலவியின்/பின் கண்கள் சிவந்தன.

சிறிது நகுலனோடு நேரடிப் பழக்கம் உள்ளவர்களிடமும்கூட நகுலன் உடற்புணர்ச்சி தொடர்பான தன் பிரமைகளையும் வினோதத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். நான், சண்முகசுந்தரம் மற்றும் தளவாய் மூன்று பேரும் நகுலனைப் பார்ப்பதற்கு சென்றபோது யோனியின் எப்பகுதியில் செலுத்துவார்கள் என்று உங்களுக்குத் தெரியுமோ? என்ற திரும்பத் திரும்பக் கேட்டார். நாங்களும் அப்போது தெரியாமையின் துவக்கப்புள்ளியில்தான் இருந்தோம். அவரது பேச்சில் கன்னிமை மீதான புனிதம் வெளிப்பட்டது. ஒரு யுவதி, தன் வீட்டின் பக்கவாட்டில் உள்ள சாலையை தினசரி குடையோடு கடந்து போனதையும், பிறகு திருமணமாகிவிட்டதையும் சொன்னார். அதற்குப் பிறகு ஒன்றுமில்லை என்ற தவனி இருந்தது. கலவி அனுபவம் மற்றும் கலவிசார் பௌதீக அறிவு தாண்டிய வியப்பிலிருந்து உருவாக்கிய கவிதைகள் மிகுந்த அகக்கிளர்ச்சியும் பாலார்த்தமும் தளும்புபவை.

நகுலனின் படைப்புகள் இந்திய தத்துவ மரபின் ஆழ்ந்த போதத்தைக் கொண்டிருப்பது, சிலசமயங்களில் அத்வைத விசாரமோ என்ற மயக்கத்தையும் தருவது. வேதங்களின் பாதிப்பும் உண்டு. (மழை மரம் காற்றில் ஆ, ஆசையே நீ ஒரு புராதன விருட்சம்). அதேவகையில் காப்கா, ஜாய்ஸிலிருந்து திருக்குறள், மஸ்தான் சாய்பு, திருமந்திரம், சித்தர் பாடல்களின் பிரதிபலிப்புகள். எடுத்தாள்தல்களும் உண்டு. ஒரு சடங்கின் சட்டகத்தைப் போல் பழம்பிரதிகளின் அமைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு தன் கவித்துவ சகுனங்களை உரைத்ததன் மூலம் நகுலன் தான் இயங்கிய நவீனத்துவ காலத்துக்குப் பின்னும் பொருளுடய அறிதல்களை நிகழ்த்தியவர் ஆகிறார். பழம்பிரதிகள் ஊடாக உலவும் நகுலன் அவற்றை தனது புது ஒழுங்கிற்குள் கலைத்து விடுகிறார். தேய்ந்த படிமங்கள், வழக்குகள், ஓசை, இசைமையை மீட்டுருவாக்குவதையும் போதத்துடனேயே செய்துள்ளார்.

149482_129399930447135_100001313875575_159866_92361_nமனித மனமும், அதன் நினைவுகளும், எண்ண ஓட்டமும் நேர்கோட்டுத் தன்மையுடையதல்ல. அவன் இயங்கும் காலமும் கூட. அவன் மனம் குறுக்கும், நெடுக்குமான நினைவுப்பாதைகளையும், எண்ணிலடங்கா பிரபஞ்சங்களிலும் சஞ்சரிப்பது. பிரத்யட்ச நிலைக்கும் அரூப நிலைக்கும் நகுலனின் பூனை உருப்போல பயணித்துக்கொண்டே இருப்பது. அங்கு நேர்கோட்டுத் தன்மையோ யதார்த்தமோ இல்லை. அவனது நினைவுகள் தெறிக்கும் பிரமைகளின் ஊடாட்டத்தில் ஆயிரம் சிறகுகளையுடைய வயோதிகன் தான் மனிதன். அங்கே அவனது பேச்சும் குறிப்பிட்ட மொழி அர்த்தத் தளத்தைத் தாண்டிய சப்த துணுக்குதான். நகுலனின் நாவல்களில் இந்த அடி உலகத்தில் தான் கதாபாத்திரங்கள் அடிக்கடி சஞ்சரிப்பவர்களாய் உள்ளனர். அவற்றை வாசிக்கும் வாசகனின் நினைவொழுங்கையும் கலைக்கும் பொழுது நிகழ்கிறது வாலறுந்த நரிகளாகும் நினைவுகளின் கலகம்.

நினைவுப்பாதை, நாய்கள், சில அத்தியாயங்கள், நவீனன் டைரி, அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி, வாக்குமூலம், என எல்லா நாவல்களிலும் தன் விசாரத்தில் கிடைக்கும் அபத்த அனுபவத்தை நகுலன் எப்படியோ மொழியின் இசைமைக்குள் உருவாக்கி விடுகிறார். சூசிப் பெண்ணே ரோசாப்பூவே (நினைவுப் பாதை) என்னும் வாக்கியத்தில் துக்கத்தை எப்படி அமரவைக்கிறார். புழங்கு மொழி, பேச்சுக்கூறு, இலக்கிய மரபின் பின்னணியில் வழக்கத்தில் இல்லாத, நேர்கோட்டுத் தன்மையற்ற பேச்சை, வார்த்தைக் கூட்டத்தை மொழி சுழற்சியை ஒரு படைப்பு மனம் உருவாக்குகிறது. அதை வாங்கிக்கொள்ளும் அதே மொழி மற்றும் கலாசாரத்திற்குப் பரிச்சயமான வாசக மனம் தன் பின்னணியில் ஒழுங்குபடுத்தி தொடர்பு கொண்டு களிப்பை அடைகிறது. எழுத்து மொழியில் உருவாக்கப்படும் தொடர்பற்ற, வெட்டிக் கூறும் அபத்த அனுபவத்தை எடுத்துக்கொள்வதற்கு வாசகனிடமும் ஒரு அபத்த அமைப்பு இருக்கக்கூடும். நினைவு, கலாச்சாரம் என்ற பொதுத் தளத்தில் குறைந்தபட்ச பகிர்தலாவது சாத்தியப்படுவது மொழியின் வினோத செயல்பாடுகளில் ஒன்றே.

தீமையின் விதவிதமான சஞ்சாரங்களைக் கொண்டது நகுலனின் படைப்புலகு. ஆரம்பகட்ட கவிதைகளிலிருந்து மரணம் என்பதன் மீதான பொதுவாக நிலவும் எதிர்மறைப் பார்வை, நகுலனின் படைப்புகளில் உற்சவமாய் மாற்றப்பட்டுள்ளது. நகுலனின் கவிதையில் வரும் புள்ளிக் குயிலைப் போல நித்தமும் அரளிக்காயின் விஷப்பாலைப் பருகியவர் அவர். சூரல் நாற்காயின் மனக் குளத்தில் கண்கள் மினுமினுத்து ஒளிப்பிரவாகமிட்டபடி சுருண்டபடி இருக்கும் நகுலனை பாம்பென்றும் அழைக்கலாம்.

நகுலனின் நாவல்களில் கேசவ மாதவன், நவீனன், அவனின் தாய், தந்தை எல்லாரும் சம்பிரதாயமான குடும்ப, உறவு அமைப்புகளின் பின்னணியில் கட்டப்பட்டிருந்தாலும் எல்லாரும் அலுத்து, சலித்து, மரணிப்பவர்கள் அல்லது மரணத்திற்காக கண்கள் மினுமினுக்க காத்திருப்பவர்கள். அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள் முதல் அரசு வரை கரையானால் உளுத்துப்போன சட்டகங்கள். எத்தனை நூறு ஆண்டுகள் மனிதர்கள் பிரமைகளும், சம்பிரதாயங்களாலுமான கூட்டாக 'தோற்றம் தரும்' வாழ்வை அனுசரிக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட ஆதியிலிருந்து எதையும், யாரிடமும் பகிர்ந்ததேயில்லை என்பதை நினைவுறுத்தும் துக்கம்தான் நகுலனுடையது. தனிமை, காமம், துயரம், சந்தோஷம் என எதுவுமே இதுவரை யாராலும் யாருக்கும் பகிரப்படாத இடத்தில் தான் தோல்வியில் சுருண்டிருக்கிறார் நகுலன். இந்த துக்கமே "இன்னும் சொல்லால் சொல்ல முடியாத நக்ஷத்திரங்களின் கீழ்" என்று நகுலனை எழுத வைக்கிறது.

மது அருந்தும்போது ஒரு வழக்கம் அவருக்குண்டு. அவருக்கு உள்ள மதுக்குப்பியை மொத்தமாக முதலிலேயே அவருக்குத் தந்துவிட வேண்டும். அதை உள்ளறையில் கொண்டு வைத்துவிடுவார். நம்முடன் குடிக்கும்போது நடுநடுவே உள்ளே சென்று தனது பிரத்யேக அவுன்ஸ் கிளாஸில் ஊற்றி நீர் கலந்து எடுத்துவந்து நம்முடன் மீண்டும் தொடர்வார். உறவு, நாகரீகம், மனிதநேயம் என்ற கலாச்சாரச் சட்டகத்தை முகமூடிகளைப் பாவிப்பவனுக்கு நகுலனின் பழக்கம் ஒவ்வாததாகவே இருக்கும். ஆனால் தனிமை என்னும் அதீத உணர்நிலையில் நகுலனின் சஞ்சரிப்பு அது. நகுலனின் நாவல்களிலும் சரி, கவிதைகளிலும் சரி அதன் கால பரிமாணத்திலும், வரிசையிலும் அவற்றின் பிரஜைகள், அரங்க பொருட்கள், அழகியல், நிறங்கள், நம்பிக்கை எல்லாம் தங்களை களைந்தபடி முன்னேறுகின்றனர். உருவத்திலிருந்து அரூபத்துக்கும், சத்தத்திலிருந்து மௌனத்துக்கும் நகரும் ஒரு எத்தனம். நகுலனின் கடைசி நாவல் மஞ்சள் நிறப் பூனை. நகுலன் தனது இறுதிக் காலத்தில் தான் புனைவுகள் படிப்பதை நிறுத்திவிட்டதாகச் சொன்னதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். திருக்குறளும், அகராதியுமே அவருக்கு சுவாரசியத்தை தூண்டும் நூல்களாய் கடைசியில் இருந்துள்ளன. அகராதியில் அவர் எந்த வார்த்தைகள் மீது கண் பதித்திருப்பார்.
எதிர் நிலைகளே இல்லாத நகுலனின் உலகத்தில் பிறப்பு, இறப்பு, இரண்டுமே இரண்டு பெருவாசல்களாகவே இருக்கிறது.
பிறப்பைக் குறிக்கும் கவிதை இது.


மிகச்சிறிய /

துவாரத்தினூடு /

கர்ப்பச் சிறையில் /

ஒடுங்கிய ஒரு யோகி /

ஒரு புதுநகரைக் காண /

தான் தனியாகத்தான் /

வருவான்


இறப்பைக் குறிக்கும் ஒரு கவிதை

பந்தல் கட்டி /

பாய்விரித்து /

சந்தை விட்டு /

சயனக் கிருதம் /

புகுந்தேன், தோழி.


இங்கு பிறப்பு, இறப்பு இரண்டுமே புதிதான மலரை உணர்வு போல் சொல்லப்படுகிறது. அடியில் மெலிதான கொண்டாட்டம் இருக்கிறது. நகுலன் வெகுகாலம் காத்திருந்து ஒரு புது நகரம் காணச் சென்றுள்ளார். கொண்டாடுவோம்.

( உயிர்மை நகுலன் சிறப்பிதழ்)

Nov 28, 2010

விக்ரமாதித்யனின் கவிதை என்னும் சமயம் - ஷங்கர்ராமசுப்ரமணியன்

விக்ரமாதித்யனுக்கு விளக்கு விருது வழங்கப்பட்டபோது படிக்கப்பட்ட கட்டுரை : ஷங்கர்ராமசுப்ரமணியன்

ஓம்

அது குறைந்திருக்கிறது

இது குறைந்திருக்கிறது

குறைவு குறைவினின்று எழுகிறது

குறைவினின்று குறைவு எடுத்து

குறைவே எஞ்சுகிறது

ஓம்

அசாந்தி அசாந்தி அசாந்தி

இந்த உலகில் பிறக்கும் மனிதஉயிர், மரணிக்கும் வரை தன்னை பின்னமாகவும் அபூர்ணமாகவும்  கருதிக்கொள்கிறது. இயற்கையிலிருந்தும் இறைமையிலிருந்தும் ஒரு மனிதன் அல்லது மனுஷி தன்னைப் பிரித்துணரும் நாளிலிருந்து nambi23அவனது அவளது தனிமையும் மீட்சிக்கான தேடுதலும்  ஆரம்பமாகிறது. அப்போதிருந்துதான் முழுமையை நோக்கிய பிரார்த்தனையும் ஏக்கமும் தன் குறையின்பால் புகார்களும் விசாரணைகளாகத் தொடங்கியிருக்க வேண்டும். 20 ஆம் நூற்றாண்டு தமிழ் நவீன கவிதைப்பரப்பில் இந்த மனத்தை வைத்துக்கொண்டு அலைக்கழியும் கவிதை உயிரியாக விக்ரமாதித்யன் என்னும் கவிதை ஆளுமையை நாம் வகுத்துக்கொள்ளலாம். 20 ஆம் நூற்றாண்டு என்னும் காலப்பின்னணியை 1947 இல் பிறந்த நம்பிராஜன் என்னும் உடல் இயங்கும் காலத்தை வைத்து மட்டுமே குறிப்பிடுகிறேன்.

விக்ரமாதித்யனின் கவிதைகளில் இயங்கும் உடலைப் பார்த்தால் அது சிலசமயங்களில் குரங்கின் கள்ளமின்மையைக் கொண்டிருக்கிறது. சிலவேளைகளில் மத்தியகால உடலின் வன்மையுடன் தோற்றம் தருகிறது. இதனால் விக்ரமாதித்யனின் அடியைத் தேடுவது மிகவும் சிரமம். இனக்குழு வாழ்வு மறைந்து முடியரசு ஸ்தாபிக்கப்படும் காலம் அதன் எல்லையாக இருக்கிறது.

ஒரு தோற்றத்தையோ காட்சியையோ படிமமாக்கி அதற்கு காலாதீத அர்த்தத்தையும்,உலகளாவிய பொதுமையையும் படைப்பில் ஏற்றும் நவீனத்துவ கவிதை நம்பிக்கையின் சிறுசாயல் கூட விக்ரமாதித்யனில் படியவேயில்லை. தோற்றத்தை விலக்கி மெய்மையைக் காண விரும்பும் அறிதலின் வேட்டை மூர்க்கமும் அவரிடம் இல்லை. நவீனத்துவக் கலைமனம் தன் அனுபவங்களாலும் தன்னைச்சுற்றிய பொருட்களாலும் ஆன உலகத்தைச் சிருஷ்டித்து ஒரு ஒழுங்குக்குக் கொண்டுவர முயல்கிறது.

விக்ரமாதித்யனின் கலை இதற்கு நேரெதிரானது. தோற்றம் அழகாவும் அனுகூலமாகவும் இருக்கும்போது உவகைபூத்து சன்னதமூர்க்கத்தில் ஆராதனை செய்கிறது. தோற்றம் பயங்கரமாகும்போது புரண்டழுது மண்டியிடுகிறது. இருளுக்குப் பிறகு மெல்லிய ஒளிவரும். மென்மையான வெளிச்சம் வெயிலாகி உடலைக் காயும். பின்பு வெயில் கனிந்து உடல்குளிரும். மீண்டும் இருள்வரும் என்ற இயல்பில் பற்றுறுதி கொண்ட லௌகீக உயிரின் விவேக ஞானம் அது. இதைத்தான் விக்ரமாதித்யன் மரபு, மரபு என உரக்கச் சொல்கிறார் என்று நான் கருதுகிறேன்.

ஒரு பின்மதியத்தில் விக்ரமாதித்யனும் நானும் நாகேஸ்ரர ராவ் பூங்காவில் அமர்ந்திருக்கிறோம். அந்தப் பூங்காவில் பவளப்பூச்சிகள் அதிகம். மாலை நடையாளர்கள் அப்போது பயிற்சியைத் தொடங்கியிருந்தனர். நாங்கள் உட்கார்ந்திருந்த பெஞ்சில் ஒரு பவளப்பூச்சி ஜோடி ஒன்றின் மேல் ஏறிப் புணர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. நான் விக்ரமாதித்யனுடன் பேசிக்கொண்டே தன்னிச்சையாக அந்த ஜோடியைப் பிரித்துவிட்டேன். இரண்டும் பிரிந்து நின்று சில நொடிகள் சமைந்திருந்ததைப் பார்த்ததும் குற்ற உணர்ச்சி தொடங்கியது.

அண்ணாச்சியிடம் பூச்சிகளைப் பிரித்ததைப் பற்றி குற்றவுணர்ச்சியுடன் சொன்னேன்.அவர், 'கவலைப்படாதடா, திரும்ப சேர்ந்துரும்' என்றார். நான் காத்திருந்தேன். நான் பிரித்துவிட்ட பவளப்பூச்சிகள் மீண்டும் தமது காதலின் சவாரியைத் தொடங்கி நகர ஆரம்பித்திருந்தன. இதுதான் மரபின் விவேக ஞானம். நூலறிவு சாராத ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்கள் நடந்த பாதை அது.

கடவுள், பெண், வாழ்வு என்ற பிரமாண்டங்களின் முன்னிலையில் உயிர் நிகழ்த்தும் சூதாட்டத்திற்கான அழகிய சோளிகளைப்போல் விக்ரமாதித்யன் தன் கவிதைகளை மாற்றியுள்ளார். சோளிகள் குலுங்கி தரையில் பரவும் இசைக்கு ஒப்பான தனி இசைமையைத் தமது கவிதைகளுக்குள்ளும் உயிராய் புதுக்கி வைத்துள்ளார். மந்திர உச்சாடனங்கள், வார்த்தை விளையாட்டுகள், பழமொழிகள், வழக்காறுகள், உளறல்கள் என தமிழின் கலாசார ரேகைகள் இச்சோளிகளில் சேகரமாகியுள்ளன. இந்த விளையாட்டில் சிலசமயம் தர்மனாக தோற்கிறார். சகுனியாக ஜெயிக்கிறார்.

ஆக்கமும் அழிவுமான பேரியற்கை, கண்ணுக்குப் புலனாகாமல் தன்னை இயக்கும் சக்தியுடனான உறவையும் அனுசரணையையும் வேண்டி பரிமாற்றத்தைத் தொடங்கும்போதுதான் சமயமனம் பிறக்கிறது.

படைப்பு, வாழ்வு என்ற பிரிக்க முடியாத கணிதத்தில் இயங்கும் விக்ரமாதித்யனின் கவிதை உலகம் பிரத்யேக சமயமாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. அங்கு நிலவும் நம்பிக்கைகளும், சடங்குகளும், கடவுளரும், திருவிழாக்களும், அறங்களும் வேறு.நன்மை தீமை முயங்கி நெருப்பின் சூட்டில் இருக்கிறது அது. அவரது கவிதைகளுக்குள் உங்களுக்குத் தெரிந்த கடவுள்களும் இருப்பதால் அவற்றை ஒரு பெருஞ்சமயத்துக்குள் வகைப்படுத்திவிட முடியாது. மாமிசப்படையலோடு கற்களால் சிவனைப் பூஜிக்க வந்த வேடன் கண்ணப்பனின் சமயமும் நம்பிக்கையும்தான் விக்ரமாதித்யனுடையதும்.

விதியின் கையில் வசமாகச் சிக்கிக்கொண்ட தன்னிலை விக்ரமாதித்யன். முதலில் முரண்டி பின்பு அந்தத் தன்னிலை தன்னை விதியிடம் ஒப்புக்கொடுக்கிறது. அந்தத் தன்னிலை நன்மைக்கும் தீமைக்கும் எப்படி பொறுப்பாக முடியும். தன்னைக் கொண்டு செலுத்தும் நிகழ்ச்சிப்போக்கின் ரயிலில் பயணித்து அழுக்குகளோடும் பசியோடும் குற்றம் மற்றும் தீமையின் பனிக்காற்றில் உடல் நடுங்கிப் பயணிக்கிறது. ஒரு சின்னஞ்சிறிய நிகழ்வால் ஒரு இனக்கூட்டமே துயரத்தை அனுபவிக்கும் நிலவியல் நம்முடையது. நமது பெண்கள் துயரத்தின் எண்ணற்ற அலைகளால் மோதி மோதி கடவுளின் அரூபத்தை அடைவதுபோல விக்ரமாதித்யனும் தனது பாடுகள் கவிதைகள் வழியாக இறைமையை அடைய முயல்கிறார்.

விக்ரமாதித்யனின் கவிதைகளில் உள்ள நான் தத்தளிக்கிறது. விளிம்புக்குத் தள்ளப்படுகிறது. சிதைக்கப்படுகிறது. அவமதிக்கப்படுகிறது. நிராசைக்குள்ளாகிறது.

இயல்பு திரிய நிர்ப்பந்திக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகும் அது உயிரின் அழகுடன் மீண்டு நிற்கிறது. அவர் கவிதைகளில் மரணம் குறித்த பேச்சோ, அச்சமோ, போதமோ கிட்டத்தட்ட இல்லையென்றே சொல்லலாம். லோகாதாயமும் நம்பிக்கையும் தொழில்படும் உலகில் உயிர்த்துவமும் காதலும்தானே உற்பத்தி சக்திகளாக இருக்கமுடியும். மரணம் என்னும் தத்துவப்பிரச்னையைத் தீண்டாமல்தான் அது இயங்கவும் முடியும்.

35294_105589092828219_100001313875575_46987_1013598_nதமிழ் நவீன கவிதைப்பரப்புக்குள் நுழையும் வாசகனை வசீகரித்து நிலைக்கச் செய்யக்கூடியவை விக்ரமாதித்யனின் கவிதைகள். வெகுஜனப் பாடல் வரிகளைப் போல் இவரது கவிதை வரிகளை ஞாபகத்தில் வைத்து தங்கள் வாழ்வின் வேறுவேறு தருணங்களில் அசைபோடும் பொதுவாசகர்களின் எண்ணிக்கை தமிழ் கவிஞர்களிலேயே இவருக்குத்தான் அதிகம் என்பதை என்னால் நிச்சயம் சொல்ல முடியும். பாப்லோ நெரூதாவின் அய்லா நெக்ரா தீவின் குகைச்சுவரில் காதலர்கள், பாப்லோ, உங்கள் கவிதைகளால் நாங்கள் காதலிக்கிறோம் என்று எழுதியிருப்பதைப் படித்திருக்கிறேன்.

இப்படியாக விக்ரமாதித்யன் தமிழ்நினைவின் ஒரு அம்சமாக நிலைகொள்ளும் காலம் இது. விக்ரமாதித்யனின் வரிகளுடன் நான் எதிர்கொள்ளும் பெண்களை, காதலை,வலிகளைக் கடந்திருக்கிறேன்.

வெட்கமும் காமமும் பருவாய்ப் பூத்திருக்கும் பெண்ணை இன்னமும் கடந்து செல்லும்போது ‘பருவைத்த முகம் பார்க்க அழகாகத்தான் இருக்கிறது’ என்ற இவரது கவிதை மனதில் வந்து செல்லும்.

"போன வருஷச்சாரலுக்கு

குற்றாலம் போய்

கைப்பேனா மறந்து

கால்செருப்பு தொலைந்து

வரும்வழியில்

கண்டெடுத்த

கல்வெள்ளிக் கொலுசு ஒண்ணு

கற்பனையில் வரைந்த

பொற்பாத சித்திரத்தை

கலைக்க முடியலியே இன்னும்"

இக்கவிதையை நான் எனது பதினெட்டாம் வயதில் படித்தேன். இதில் இருக்கும் அந்தரங்க தொனியும் ஒன்றை இழந்து ஒன்றை மீட்கும் காதலின் துயரார்ந்த விதியும் படிக்கும்போது இன்றுவரை மாயம் குறையாமல் வசீகரித்துக்கொண்டே இருக்கிறது.எந்த மறைபொருளும் இல்லாமல் பாறை ஈரத்தில் கால் உணரும் சில்லிடலை இவர் இந்தக் கவிதையில் எப்படி கொண்டுவந்தார். இதுபோன்ற அனுபவங்கள்தான் விக்ரமாதித்யன் கவிதைகளின் பயன்பாடும் கூட.

கவிதை என்ற வடிவத்திலேயே தன் முழுவாழ்வையும் வெளிப்படுத்தும் மூர்க்கத்தில் கொள்ளும் தோல்விகளும் அப்பட்டமாகவே வாசகன் முன் இருக்கின்றன. விதியின் போக்கில் தன்னை ஒப்புக்கொடுத்த வாழ்க்கையில் இவர் பயணித்த உலகங்களும் அனுபவங்களும் மிக மிக உக்கிரமானவை. இல்லாமையும், கீழ்மையும் தோய்ந்த அவரது சுய அனுபவங்களை பஷீர் போல உயிர்த்துவத்துடன் எழுதத் தொடங்குவதற்கு இந்த விருது அவருக்கு தூண்டுதலை அளிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

Nov 23, 2010

நினைவில் மினுமினுக்கும் பாதரசத் தூசிகள்-ஷங்கர்ராமசுப்ரமணியன்

நினைவில் மினுமினுக்கும் பாதரசத் தூசிகள்

கலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்கள் கட்டுரை நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை

'அந்த உலகம் மிகச் சமீபத்தில் தோன்றியது. அங்குள்ள பல பொருள்களுக்குப் பெயரில்லை. அவற்றைக் குறிப்பதற்கு சுட்டிக் காட்டுவதுதான் அவசியமாக இருந்தது.' இது மார்க்வெசின் 'நூற்றாண்டு காலத்தனிமை' நாவலின் தொடக்கத்தில் மக்காந்தோ ஊரைப் பற்றி வரும் சித்தரிப்பு. கவிஞர் கலாப்ரியாவின் பிராயகால நினைவுக் குறிப்புகளான 'நினைவின் தாழ்வாரங்கள்' நூலைப்kalapriya படித்து முடித்தபோது அதுகுறித்த பேச்சைத் தூண்டுவதற்கு இந்த விவரணை பொருத்தமாக இருக்கக்கூடும் என்று தோன்றியது.

காலமாற்றத்தில் நிலைவுடைமை சார்ந்த செல்வ வளமுள்ள ஒரு குடும்பத்தின் சிதைவுதான் 'நினைவின் தாழ்வாரங்கள்' நூலின் மையப் படிமம். படிப்படியாக சிதையும் குடும்பம் ஒன்றின் கடைசி குழந்தையாக, படிப்படியாக நேரும் இழப்புகளில் பங்கேற்பவராகவும் நுட்பமான பார்வையாளனாகவும் இந்த நினைவுக் குறிப்புகளை எழுதிச் செல்கிறார், கலாப்ரியா.

நிலங்கள் ஒவ்வொன்றாக விலையாகின்றன. குடும்பத்தின் அந்தஸ்துக்கு அடையாளமான நகைகள், பொருட்கள் விற்கப்படுகின்றன. தலைமுறை தலைமுறையாகப் புழங்கப்பட்டு குடும்ப நினைவின் ஒரு பகுதியாகவே மாறிவிட்ட, பழைய கைவினைத் திறனுக்கு சாட்சியாக இருந்த பாத்திரங்கள், ஓவியச் சட்டகங்கள் வெளியே போகின்றன. அக்காலத்தில் செல்வ வளமையின் அடையாளமாய் பாதுகாக்கப்படும் இரும்புப் பெட்டியும் விற்கப்பட்டு அது இருந்த இடமும் வெறுமையாகிறது. இது காலப்ரியாவின் அகத்தில் நடப்பது.

கலாப்ரியா, இச்சிதைவு குறித்து எழுதிச் செல்வது இறந்தகாலம் தொடர்பான ஏக்கத்தை உருவாக்கும் நோக்கத்தில் அல்ல பழம் பெருமைகளையும் மரபையும் கிண்டலுடன் சீண்டவும் செய்கிறார். வீட்டின் இரும்புப் பெட்டியில் இருந்த வெள்ளி நாணயம் ஒன்றை நண்பனுடன் சேர்ந்து விற்றுவிட்டு, புரோட்டா சாப்பிடுவதற்காக செல்லும்போது அவரால் இப்படிச் சொல்ல முடிகிறது. இதை நான் ஒரு கவிதையாக சில வார்த்தைகளை வெட்டி மடித்திருக்கிறேன். இக்காட்சியில் வரலாற்றின் இயங்கியல் போக்கு நிதர்சனமாகப் பதிவாகியுள்ளது.

நெல்லையப்பர் கோவிலின்
மேற்குகோபுர வாசல் அது
கழுவேற்றிமுடுக்கு என்று பெயர்
அங்கே எங்கு கழு இருந்தது
எனக்குத் தெரியாது

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள

ஆபிரகாம் ஓட்டலில்

ரெண்டு ரொட்டியும் 
சால்னாவும் 
90 பைசா.

தனது பழைய வீட்டின் இடிபாடுகளை உதிர்த்தபடி சமூக கலாசார மாற்றங்கள் சுழிக்கும் முச்சந்தி வெளி அவனை வசீகரிக்கிறது. அங்கே பழையவை, கனத்த நினைவுகளுடனும் துக்கத்துடனும் தன்னுடன் சேர்ந்திருக்கும் கதைகளை மிச்சம் வைத்துவிட்டு மறைந்து கொண்டிருக்கின்றன.
கலாப்ரியா என்ற கவிதை ஆளுமையின் நிகழ்வு, தமிழகத்தில் சமூக அரசியல் கலாசாரத் தளங்களில் ஏற்பட்ட குறிப்பிட்ட எழுச்சி மற்றும் பண்பு மாற்றங்களுடன் தொடர்புடையது. நிலவுடைமை சார்ந்த மதிப்பீடுகளும் உற்பத்தி உறவுகளும் பலவீனப்பட்டு, நவீன மயமாதலும் அதுசார்ந்த மதிப்பீடுகளும் எழுச்சிபெறும் காலம் கலாப்ரியாவினுடையது. சமத்துவத்தை வலியுறுத்தி பகுத்தறிவு இயக்கம் முன்னெடுத்த வெகுமக்கள் எழுச்சியும் அதுபெற்ற அரசியல் அதிகாரமும், சமூகப் பிரிவினைகளைத் தளர்த்தி நவீன கல்வியின் மூலம் கடைப்பட்டோரும் மேம்படும் வழிகள் திறக்கப்பட்ட சரித்திர நிகழ்வு அது. இக்காலகட்டத்தில் தான் பாகுபாடுகள் நிலவிய மரபான பொதுவெளிகள் உணவு விடுதிகள், திரையரங்குகள், பொருட்காட்சிகள், அரசியல் மேடைகள் ஆகியவை உருவாகின்றன. புதிய வண்ணங்களுடன் புதிய துக்கம் மற்றும் பிறழ்வுகளுடன் குறுக்குமறுக்கான உறவுச் சமன்பாடுகள், கொண்டாட்டங்கள், பிரத்யேகச் சடங்குகள் மற்றும் குழுக்குறிகள் தோற்றம் கொள்கின்றன. (அப்போது அறிமுகமான பொருட்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் திடத்தன்மை இருந்தது. விநோதத்தின் கண் சிமிட்டலுடன் அவை இருந்ததை உணரமுடிகிறது.) இந்நிகழ்வுகளில் சராசரி பங்கேற்பாளனாகவும் நுட்பமான பார்வையாளனாகவும் ஒரு சாதாரணனாக கலாப்ரியா கரைந்திருக்கிறார். அக்காலத்திய சினிமா, அரசியல், மாணவர் போராட்டம், தெரு அரட்டை தொடங்கி குடி, பெண்கள் உள்ளிட்ட சில்லறைச் சல்லித்தனங்கள் வரை தன் பிராயகால நினைவுகளாக எழுதிச்செல்லும் கலாப்ரியா, ஒரு காலகட்டத்து தமிழ் இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிப்பவராகிறார்.

ஒரு தேவாலயத்தில் பிரார்த்திக்கும் அனுபவத்தைப் போல், கூட்டு மன எழுச்சியையும் சந்தோஷத்தையும் அனுபவ பகிர்வையும் சாத்தியப்படுத்தி, பின்பு மொத்தமாக தமிழ் வாழ்வையே நிர்ணயிக்கும் மதமாகவே மாறிப்போன சினிமாவின் வெகுஜனக் கலாசார வரலாறை ஒருவர் இதில் வாசிக்க இயலும். இந்த கூட்டு மன எழுச்சியையும் ஞாபகங்களையும் பொருத்தமான பழைய பாடல் வரிகளினூடாக எழுப்ப முயல்கிறார், கலாப்ரியா. பொதுவாக கவனிக்கப்படாத சினிமா சுவரொட்டி வடிவமைப்பாளர்களின் பெயர்கள் முதல் ஒலிப்பதிவாளர்கள் வரை விஸ்தாரமாக இந்நூலில் சர்ச்சிக்கப்படுகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ் நினைவு மீது சினிமாவைத் தவிர வேறு எதுவும் இத்தனை தாக்கத்தை செலுத்தியிருக்குமா என்பது கேள்விக்குரியது. இந்தப் பொதுநினைவின் சாராம்சமாக விளங்கும் கலாப்ரியாவின் இந்த நூல் தமிழ் வாசகர்களை மிகவும் வசீகரிக்கக்கூடியது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஒவ்வொரு ரயில் நிலையமாகச் சென்று தாரால் இந்திப் பெயர்களை அழித்தபடி மாணவர்கள் திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை நோக்கி செல்கிறார்கள். ஒவ்வொரு நிறுத்தத்திலும் மாணவர்கள் படிப்படியாக குறைந்து செங்கோட்டை வரும்போது கலாப்ரியாவும் அவரது நண்பர்கள் ஓரிருவர் மட்டுமே மிஞ்சுகிறார்கள். எங்கு போவது என்று இலக்கில்லாமல், நடக்கிறார்கள். தார்மீக உணர்வும் லட்சியங்களும் தோற்றுப்போய் இலக்குகளற்ற அவநம்பிக்கையின் பாதை அந்த இளைஞர்கள் முன்பு விரிவதை எந்த கூடுதல் அழுத்தமும் இல்லாமல் உணர்த்திச் செல்கிறார்.

பழைய மதிப்பீடுகளும் பழைய உணர்வுகளும் அங்கங்கு கண்ணாடித்தூசி போல் துக்கத்துடன் அனைத்தின் மீதும் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை உண்டு. நிலவுடைமை சார்ந்த குடும்பங்கள் சிதையும் போக்கிலேயே, பாரம்பரிய ஞானம் என்பது போஷிப்பவர்கள் இல்லாமல் விழிபிதுங்கி நிற்கிறது. அதையே வாழ்க்கை முறையாகவும் அடையாளமாகவும் கொண்ட தொழிலாளர்களும் கைவிடப்படுகின்றனர். கல்தச்சர்கள், கண்ணாடிக்கு ரசம் பூசுபவர்கள், கைமருத்துவம் பார்க்கும் குறவர்கள் தங்கள் சுயத்துவம் கூடிய படைப்பழகு துறந்து காலத்தின் பொது வெயிலில் ஆவியாகின்றனர். அவர்களுக்கேயுரிய புராணிகங்களை வரலாற்றைச் சுமப்பதுபோல் கவிஞன் இந்நூலில் சுமந்து திரிகிறான். ஆடியிலிருந்து சுரண்டி எடுக்கப்பட்ட பாதரசத் தூசிகளின் மினுமினுப்பு போல கலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்கள் நூலில் அவை சேகரமாகியிருப்பது அழகானது. ஏனெனில், துக்கம் அனைவருக்கும் பொதுவானது. சந்தோஷங்கள் தனிப்பட்டவை.

இதன் நடுவில் ஆலங்கட்டி மழை வீடுகளுக்கு இடையே பெய்கிறது. அபூர்வமாகப் பெய்யும் ஆலங்கட்டியைப் பகிர்வதில் ஸ்பரிசிக்கவே இயலாத ஆண் பெண் கைககள் தொட்டு உறவாடுகின்றன. ஆலங்கட்டியைப் போன்ற கணநேரக் காதல் புதியதா, பழையதா என்று தெரிவதற்குள் கரைந்துவிடுகிறது. மற்றாங்கே கவிதையில் முழுமையடையாத தாபமாக மழை தகரத்தில் உக்கிரமாகப் பெய்கிறது.

ஒரு புனைவில் கவிஞனின் கண்கள் எங்கு பதிந்திருக்கின்றன. அவை எதை அடிக்கோடிடுகின்றன என்பதைப் பார்ப்பது எனக்கு மிக சுவாரசியமான அனுபவமாக இருந்தது. நவீன கவிதையில் துல்லியமான நிலவியல் அடையாளத்துடன் சமகால வாழ்வின் உக்கிரமான சித்திரங்களாலான யதார்த்தத்தை தீவிர அங்கதத்துடன் முன்னுரைத்தவை கலாப்ரியாவின் கவிதைகள். புகைதையில் புதுமைப்பித்தனுக்கு சமமான சாதனை இது. மற்றவர்களும் மற்றவையின் இருப்பும் துள்ளத்துடிக்க இவர் கவிதைகளில் தான் முதலில் இடம்பிடித்தன. தன்கால வாழ்வுக்கு எதிர் வினையாற்றி, ரௌத்ரம் கொண்ட தமிழ் இளைஞன் ஒருவனின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முதல் வெளிப்பாடு அது.

மாறும் காலத்தின் கோலத்தில் சகலமும் எனக்கு ஊறுவிளைவிக்கலாம் என்று பசியற்ற காகங்களைத் தன் மூளையைக் கொத்த அனுமதித்தவர் கலாப்ரியா. பிறரின் துக்கம் தன் அனுபவத்தின் மீது ஏறி கலவரம் புரிய, புறக்கடைகளில் நரகலையும் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளையும் மிதித்தபடி சோரங்கள், இழப்புகள், அபத்தங்களை, மறைபகுதிகளை தரிசிக்க நேர்ந்த வலியிலிருந்து ரத்தத்தால் எழுதப்பட்டவை அவர் கவிதைகள்.

நினைவுதான் மரணத்தைவிட நம்மை வெகுவாகப் பீதியூட்டுவது, கலாப்ரியாவின் சசி குறித்த நினைவுதான் அவரது மொத்தப் படைப்புலகுக்கான முன்னிலை. சசி கிடைக்காத துக்கம், மரண பீதி போன்று அவரை வெளியே விரட்டி சகலவற்றின் மீதும் படிந்து, சகலரின் துக்கத்தையும் அவர் துக்கமாக மாற்றுகிறது. அது தோல் உரிந்த நிலை. கிட்டத்தட்ட பைத்தியத்திற்கு பக்கத்தில் உள்ள நிலை. கலாப்ரியா மிகுந்த உயிர்ப்புடன் படைப்பாக்கத்தில் ஈடுபட்டிருந்தபோது எழுதிய கவிதைகள் இப்போது வாசிக்கும் வாசகனைக்கூட நிலைகுலையச் செய்யும் வன்முறையும் தீவினையின் வேகமும் கொண்டவை.

திருநெல்வேலி என்னும் நிலவியலின் பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கும் 'நினைவின் தாழ்வாரங்கள்' நூலை வாசித்த அனுபவத்திலிருந்து, புதுமைப்பித்தனிலிருந்து விக்ரமாதித்யன் வரை இந்த நிலத்தின் படைப்புக் குழந்தைகளை பிணைக்கும் சரடு என்ன? இவர்களின் ஆதார மனவுலகம் எப்படி உருவாகிறது என்பதைப் பார்ப்பது முக்கியமானது.

திருநெல்வேலியின் மனநிலப் பரப்பு கோவிலுக்கும் ஆற்றுக்கும் இடையில் இருப்பது. சமயமும் தத்துவமும் சேர்ந்து வீடுகளுக்கு இடையே நெகிழாத சுவர்களை ஏற்படுத்தி, ஒருவரின் தனிமையைக் கூடத் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. காமமும், தாபமும் புணராமல் வெயிலில் முறுகிக் கொண்டிருக்கும் இடம் அது. தன் அனுபவமே கற்பிதமோ என்ற மயக்கத்தில் ஆறு இருக்கிறது... இல்லை... தேர் இருக்கிறது... இல்லை... வாழ்வு இருக்கிறது... இல்லை என்ற கயிற்றரவு மனநிலையிலேயே நீடிக்கிறது. லோகாதாயமான கனவுகள் இல்லாத நிலையில், அந்த இடம் படைப்பு என்னும் கனவு வழியாகவே தன்னைத் தொடர்ந்து ஆற்றிக்கொள்ளவும் உரையாடவும் செய்கிறது.

சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத்தில் புதிய தொழில்கள் மற்றும் பொருளா34838_105318686188593_100001313875575_44080_6688702_nதாரம் சார்ந்து அபிவிருத்தி அடைந்த பல நகரங்களுக்கு ஈடாக அது எந்த மாற்றங்களுக்கும் உட்படவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் இங்கு ஏற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மட்டுமே திருநெல்வேலியை நிகழ்காலத்துக்குள் வைத்திருக்கிறது. இங்கு கல்விபெற்ற இளைஞர்கள் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கும் நிலையில், அது கோபுரத்தின் பழைய  நிழலுக்குள்ளேயே மறைய முயற்சித்துக் கொண்டிருக்கிறது. புதுமைப்பித்தன், வண்ணநிலவன், கலாப்ரியா, விக்ரமாதித்யன் படைப்புகளில் விசாரணையாகவும் காதலாகவும் அவலதரிசனமாகவும்  கழிவிரக்கமாகவும் வெளிப்படுவது திருநெல்வேலியிலிருந்து மீறத்துடிக்கும் எதிர்வினைதான்.

பண்டிகை காலங்களில் ஏகாந்தத்திற்காகவும் சில நேரம் துக்கத்துடனும் நான் தாமிரபரணி ஆற்றுக்குச் சென்றிருக்கிறேன். ஊரே பண்டிகையில் திளைத்துக் கொண்டிருக்க, நண்பகலில் குறுக்குத்துறை படித்துறையில் யாரோ ஒருவராவது தனிமையில் துணியை அடித்துத் துவைத்துக்கொண்டிருப்பார். வட்டப்பாறையில் துவைக்கும் சப்தம் கோவில் மண்டபத்தில் எதிரொலிக்கும். அங்கே யாராவது துவைத்துக்கொண்டிருந்தால் அது கிழக்கே இருக்கும் ரயில் பாலத்துக்கு எதிரொலிக்கக்கூடும். நட்டநடு வெயிலில் யாருமற்ற ஆற்றில் ஒருவர் துணி துவைக்கும் சப்தத்தில் விளக்க இயலாத தனிமை உள்ளது; அபத்தம் உள்ளது; தீவிரமான தனிமையை உணர நேரும் மரண பிரக்ஞை உள்ளது. இந்த சப்தத்தை பேராச்சி அம்மன் கோவில் படித்துறையில் அமர்ந்து புதுமைப்பித்தனும் ஒரு வேளை கேட்டிருக்கக்கூடும். அவரது 'செவ்வாய் தோஷம்' கதையில் ரத்தக்காட்டேரி அடித்து இறந்துபோன நபரின் சடலம் புதைக்கப்பட்டு ஒருவாரத்துக்குப் பிறகும் ரத்தம் உறையாமல் இருக்கிறது. படைப்பென்னும் ரத்தக் காட்டேரியால் தீண்டப்பட்டது இவர்கள் தான் போலும்.

Oct 28, 2010

நகுலன் : நினைவின் குற்றவாளி - ஷங்கர்ராமசுப்ரமணியன்

தமிழ் நாவல் கதைப் பரப்பானது, கட்டுறுதிமிக்க புறநிலை யதார்த்தத்தால் சாத்தியங்கள் மட்டுப்படுத்தப்பட்டு, பகுத்தறிவின் தீவிர விழிப்பால் கட்டப்பட்டது. லோகாதாயம், மதம் மற்றும் அரசு போன்ற அமைப்புகள் காலம்தோறும் மனிதனை வடிவமைக்கவும்,கட்டுப்படுத்தவும், வரையறை செய்யவும் முயன்றுகொண்டே இருக்கின்றன. ஆனால்,இவ்வமைப்புகள் தங்கள் நோக்கத்திற்கேற்ப வரையும் மனிதச்சித்திரம் மட்டுமல்ல அவன். தமிழ் நாவல் பரப்பில் பெரும்பாலும் மனிதர்கள் பேசப்பட்டிருப்பது மேற்குறிப்பிட்ட வரையறையின் மீறாத நிலைமைகளில்தான். ஸ்தூலமான நிகழ்வுகள்,வெளிப்பாடுகள், முடிவுகளைக் கொண்டு ஒரு தன்னிலையை, அதன் செயலை வரையறுக்கும் பழக்கத்தை பொதுப்புத்தி உருவாக்கி வைத்துள்ளது.nagulan-by-viswamithran-1 இதிலிருந்து மாறுபட்டு பொருள்கள் மற்றும் உயிர்கள், அவை தொடர்பு கொண்டிருக்கும் சூழலின் மறைதன்மையை சுட்டிப் புலப்படுத்துவதாய், அதன் அகமுகத்தை வரைவதாய், ஒரு பார்வைக் கோணம் நகுலனின் புனைவுகளில், ஒரு விசித்திர அனுபவத்தைச் சாத்தியப்படுத்துகிறது. நகுலன் இவ்வனுபவத்தை திண்ணமான கதை உருவோ,கதாபாத்திரங்களோ இன்றி சாத்தியப்படுத்துகிறார். அவரது எழுத்துகளில் தொடர்ச்சியாய் இடம்பெறும் பூனை போலவே, பிரத்யட்ச நிலைக்கும் அரூப வெளிக்கும் இடையே நினைவு, நடப்பின் அலைக்கழிவில் தொடர்ந்து பயணம் செய்பவனாய் மனிதன் இருக்கிறான். அவன் ஒரே சமயத்தில் பல உலகங்களில் சஞ்சரிக்கிறான். நகுலன் நம்மில் நிகழ்த்தும் விழிப்பு இதுதான். நகுலன், தான் புழங்கிய இலக்கிய வடிவங்கள் கவிதை சிறுகதை நாவல், கட்டுரை எல்லாவற்றிலும் நகுலன் தன்மை ஒன்றை நீக்கமற உருவாக்கியுள்ளார். அவர் புனைவில் திரும்பத் திரும்ப வரும் பிராணிகள் மற்றும் சொற்றொடர்களையும் நகுலனின் பிரஜைகள் என்று சொல்லுமளவுக்கு, அவற்றின் அடையாளங்களுக்குள் தன் சாயலை ஏற்றியுள்ளார்.

'நினைவுப்பாதை' நாவலில் வரும் வாக்கியம் இது: 'நான் தனி ஆள்; ஆன வயதிற்கோ அளவில்லை.' நவீனன் (அல்லது) நகுலன் சொல்லும் இவ்வாக்கியம் பிறப்பு, இறப்பு,குறுகிய வாழ்வு என்ற வரையறைக்குட்பட்ட ஒரு பௌதீக உடல் சொல்ல இயலக்கூடிய வாக்கியமா? சாத்தியமில்லை. இக்கூற்றில் பல்லாயிரக்கணக்கான ஆண்டின் நினைவழுத்தம் அல்லவா வெளிப்படுகிறது. அப்படியெனில் இக்கூற்றைச் சொல்லும் நவீனனுக்கு எத்தனை வயதாகின்றது? மனிதனின் முக்கிய அடிப்படைப் பிரச்சினைகளில் ஒன்று நினைவு. செயலாற்ற விரும்பும் மனிதனின் காரியத்தை வெற்றி கொள்ளும் மனம், நினைவை ஓரளவு கட்டுக்குள் வைத்து அனுசரிக்கும் இயல்பைப் பெற்றுள்ளது. அவன் அனுசரித்துப் பராமரிக்கும் தற்காலிக நினைவென்பதாலேயே அது பொருள்களை, மனிதர்களை உடைமை கொள்ள முடிகிறது.நினைவுகளைக் கட்டுப்பாட்டில்லாமல் பெருகவிடுபவன், வரலாற்றின் சாம்பல் தன்மை படர்ந்த உடலுடன் தோல்வியின் பைத்திய, குற்ற நெடியடிக்கும் பிரதேசத்துக்குள் நுழைந்து விடுகிறான். அவ்வகையில் நகுலனை நாம் நினைவின் குற்றவாளி எனலாம்.

ஆசை - நிராசை, உறவு - பிரிவு, இருப்பு - இன்மை என்ற இருமைகளில் ஆடிக்கொண்டிருக்கும் மனித மனதிற்கு தோல்வியின் மீது ஒரு அடங்காத வசீகரம் உண்டு. அது இடுபாடுகள் மீதான வசீகரம். நினைவுகளிலேயே சதா திளைத்துக் கொண்டிருக்கும் பொய்கைதான் தோல்வி. நகுலனின் ஒட்டுமொத்த புனைவிலும் தோல்விதான் முக்கிய அனுபவம்.

இங்கு சொல்லப்படும் தோல்வி என்பது இலக்கிய தோல்வியோ, நகுலனின் அந்தரங்கத் தோல்வியோ அல்ல. தன்னால் சிருஷ்டிக்கப்பட்ட அமைப்புகளிலிருந்து, தன் உடல்வரை பொறிகளாய் உணரும் தீவிரமான விழிப்பு நிலையில், மனிதன் உணரும் செயலின்மையிலிருந்து பெருகும் தோல்வி.

நகுலன், கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் விசாரம் அல்லது தன் விசாரம் மூலம் மொழி, வரலாறு, யதார்த்தம், கற்றறிவு, பட்டறிவு சார்ந்த எல்லா நினைவுகளையும் பேச்சாய், ரூபமற்ற சப்த அலைகளாய் பெருக வைக்கிறார். இதன்மூலம் பொதுப் பேச்சு,அமைப்பு மற்றும் உறவுகளின் வாழ்வே சடங்காகி விட்டதை உச்சபட்சமாய் பகடி செய்தபடி வாசகனின் நினைவுச் சரடையும் அதிர வைக்கிறார். சிலசமயம் வெட்டி,சம்பந்தமற்ற சரடோடு இணைக்கிறார். வாசகன் போதைமை கொள்ளும், பைத்திய உவகை பொங்கும் தருணங்கள் அவை. 'நினைவுப்பாதை', 'நாய்கள்', 'சில அத்தியாயங்கள்', 'நவீனன் டைரி', 'அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி', 'வாக்குமூலம்' என எல்லா நகுலனின் நாவல்களிலும் நிகழும் உரையாடல் மற்றும் தன் விசாரத்தில் கிடைக்கும் அபத்த அனுபவத்தை எப்படியோ அவர் தன் மொழியின் இசைமை வழியாய் உருவாக்குகிறார்.

மனிதன் சலித்துக் கொண்டிருக்கிறான். பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் உடல் சலிப்படைவதைத்nagulan-by-viswamithran-5 தவிர வேறொன்றும் விசேஷ நிகழ்வுகள் இல்லை. நவீனனின் பாஷையில் சொன்னால், 'எறும்புப் புற்றுக்கு உணவிடுவதுதான் லௌகீகம்'. எறும்புக்கு உணவிட்டுக் கொண்டே அது கடிக்கிறது என்று ஏன் புகார் சொல்ல வேண்டும். இதுதான் லௌகீக வாழ்க்கை குறித்த நவீனனின் விமரிசனம். ராமநாதன், சச்சிதானந்தம் பிள்ளை,சாரதி, கேசவமாதவன் எல்லோருமே எறும்புக்கு உணவிடுபவர்கள்; சலிக்கிறவர்கள்.இவர்களெல்லாம் ஒரே நபரின் சாயல்கள்தான். "நவீனன் என்கிறேன். நகுலன் என்கிறேன்.ஆனால் நான் யார்? யாரைச் சந்திக்கிறேனோ, நான் அவர், அவர் ஆகிறேன்...அதனால்தான் இலக்கணம் பச்சைப்புழு, மறுகணம் சிறகடிக்கிற வண்ணத்துப்பூச்சி."

நகுலனின் புனைவுகளில் பெண்கள் ஸ்தூலமாய் வருகிறார்கள். சுசீலா, அம்மா மற்றும் சுலோசனா. சுசீலா காதலி. மானசீகமான ஒரே முன்னிலை மற்றும் வாசகி. நகுலன் (அ)நவீனனுக்கு தனிமையைக் கற்றுக் கொடுத்துப் பிரிந்த ஆசிரியை. சுசீலாவின் பிரிவும்,சுசீலாவை இடைவிடாமல் ஜபிப்பதும், மனவெறியில் சுசீலாவுடன் உரையாடுவதும்,சுசீலாவை எழுதுவதும் நகுலனுக்கு தனிமையை விலக்கும் செயலாக, தனிமையைப் பெருக்கும் செயலாக இருக்கிறது. அம்மா நவீனனை (அ) நகுலனை நிறை குறைகளோடு ஏற்றுக்கொண்டவள். அங்கீகரித்தவள். அவளும் நவீனனைத் தனியே உலகில் விட்டு மறைந்து விடுபவள். 'இவர்கள்' நாவலை அம்மா என்னும் புராதனப் பிரக்ஞைக்கும்,அதன் நிழலிலிருந்து தற்கால நிகழ்வுகளை எதிர்கொள்ளும் நவீன மனதுக்கும் இடையே உள்ள உரையாடல் என சொல்லலாம். இந்தியா போன்ற கீழைத் தேசங்களில் தாய் என்பவள் தந்தைக்குப் பணிவான, படிந்து போகக்கூடிய ஆளுமையாய் தோற்றம் கொடுத்தாலும் வலிமை கொண்ட மனமாய் அவளே இருக்கிறாள். நினைவைக் காப்பாற்றுபவளாய், ஒருவகையில் நினைவின் எஞ்சிய ஒரே படிமமாகவும் இருக்கிறாள்.தாயின் நினைவின் நிழல் படர்ந்திருப்பவன், நிகழ்கணம் கோரும் செயலில் ஈடுபட இயலாமல் இருப்பவன். 'இவர்கள்' நாவலில் அம்மா 'பழைய காலத்தின் உள்ளுணர்வுள்ள பிரதிநிதியாகவும்' சித்தரிக்கப்பட்டுள்ளாள்.

நகுலன் தன் புனைவின் மூலம் தீய சகுனங்களை கவித்துவமாய் சொல்பவராய் இருக்கிறார். குடும்பம் என்கிற அமைப்பு மனிதனை குரூரமாய் சிதைப்பது. 'நிழல்கள்'நாவலிலிருந்து நவீனனை, சிவனை, ஹரிஹர சுப்ரமணியனை, சாரதியை சிதைப்பது தொடர்கிறது. இவர்களின் வீடுகளில் கழிப்பறையில், உள்ளறைகளில் கரும்பாம்பும்,சாரைப் பாம்பும் சுருண்டு கிடக்கின்றன. நகுலன் ஒரு சூழலை விவரிக்கும் போதும், ஒரு பறவையின் சப்த துணுக்கைச் சொல்லும் போதும் பிராணிகளைப் பற்றிப் பேசும்போதும், அவற்றை சூழலின் விகாசத்துடன் நம் மனதின் உணர்வு நிலைகளாய் மாற்றி விடுகிறார். திருச்சூர் மிருகக்காட்சி சாலையில் உள்ள பாம்பைப் பற்றி விவரிக்கும்போது, அது சட்டென உருப்பெற்று நகுலனின் புத்தகத்துக்குள் சுரீரென உலவுகிறது. நகுலன் எழுத்தும் நம் மனவெளிக்குள் கருத்த, பயங்கர அழகுள்ள பாம்பு ஒன்று புழக்கடை வழியாய் வீட்டின் பிளவுக்குள் புகுவதைப் போல்தான்.

நகுலனுக்கு எழுத்து உடலை அறிதலாகவும் உடலைக் கடத்தலாகவும் இருக்கிறது.எழுத்தும் உடலும் ஒரு தன்மை கொள்ளும் சந்தர்ப்பமும் நேர்கிறது. எழுத்துக்கள் மயங்கும் நேரம். உருவம் தெரியாமல் மறையும் தருணம். உருவத்திலிருந்து தப்புவதற்கு உருவமில்லாத ஒரு உருவத்தைச் சிருஷ்டிக்கிற முயற்சியாகவும் இருக்கிறது. சுசீலாவின் பிரதிபலிப்பையும் நவீனனின் பிரதிபலிப்பையும் எல்லா உயிர் உருவங்களிலும் பார்ப்பதைப்போல கருங்குருவி, பச்சைக்கிளி, மரங்கொத்தி,சாரைப்பாம்பு, மஞ்சள் நிறப்பூனை எல்லாமே பிரஜைகளாகவும் பிரக்ஞைகளாகவும் மாறும் போதே திருமந்திரம், திருக்குறள், பத்திரகிரியார், பாதலேர் என நகுலனின் புனைவில் நினைவுகளாய் தோதான இடங்களில் பிரதிபலிக்கின்றன.

ஆதிசங்கரரின் வாழ்க்கையில் நிகழும் ஒரு நிகழ்ச்சியை சொல்வது நகுலனின் புனைவை, ஒருவகையில் நகுலனைப் புரிந்துகொள்வதற்குத் துணையாய் இருக்கக்கூடும். ('கடைசியாக எந்த மண்ணில் ஆதிசங்கரர் கால்வைத்து நடந்தாரோ அங்கு வந்துவிட்டேன்' -நினைவுப்பாதை) ஆதிசங்கரர் துறவியான பிறகு அவருடைய அம்மா இறந்துபோகிறார். செய்தி அறிந்த உடன் அம்மாவுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்ய ஆயத்தமாகிறார் ஆதிசங்கரர். ஆனால் துறவியாகிவிட்டதால் இறுதிக்கடன்களை அவர் தன் தாய்க்குச் செய்வதற்கு தடை சொல்கின்றனர். ஆதிசங்கரர் அத்தடையை மீறி அம்மாவுக்கு இறுதிக் கடன்களை செய்து முடித்த பிறகே தன் துறவுப் பயணத்தைத் தொடர்கிறார். நகுலனின் ஒட்டுமொத்த எழுத்துக்களை இறந்த அம்மாவுக்கும், பிரிந்து சென்ற சுசீலாவுக்கும் நகுலன் செய்யும் கிரியைகள் எனலாமா?

நகுலனின் மற்ற நாவல்களை விட செயலின் முழுமை நோக்கிப் பயணிக்கும் நாவல் வாக்குமூலம். காஃப்காவின் சாயல் கொண்டது. முட்டாள்கள் தினமான ஏப்ரல் ஒன்றாம் தேதி அரசு ஓர் அறிவிப்பை வெளியிடுகிறது. அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களில் தொடர்ந்து வாழ்வதற்கு விரும்பாதவர்களை அரசே பொறுப்பேற்று வலியின்றி கொல்வதற்கு கொண்டுவரும் தேச  முன்னேற்றச் சட்டம் அது. கதையின் நாயகன் ராஜசேகரன் அச்சட்டத்தை பயன்படுத்திக் கொள்ள sankarமுயன்று அதற்கான விண்ணப்பக் கேள்விகளுக்குப் பதில் எழுதும் முகாந்திரமாக எழுதப்படுவதே வாக்குமூலம். நாவலின் கருப்பொருள் தீவிர அபத்த நிலையில் இருந்தாலும், கதை நிகழும் சூழலும் யதார்த்தமும் வலுவாக வாக்குமூலம் நாவலில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மர்ம நாவலுக்கான மூட்டத்துடன், தொடர்ந்து அறிமுகமாகப் போகும் நபர்கள், நிகழ்வுகள் குறித்த எதிர்பார்ப்புமாக வாசிக்க இயலக்கூடிய நாவல் இது. தற்கொலையைப் பாவம் என நம்பும் ஒரு இந்திய மனம் தற்கொலையை விடுத்து, அரசே பரிந்துரைக்கும் கொலையை விரும்பி ஏற்க முன்வருகிறது. ஆனால், அரசு, கடைசியில் ராஜசேகரன் மற்றும் சிலர் விண்ணப்பித்திருந்த இறப்புக்கான கோரிக்கையை நிராகரிக்கிறது.கடைசியில் மரணத்துக்கான பாதையும் கெஸட்டியர் பிரதிகளாக, ஷரத்துகளாக, பக்க எண்களால் நிரம்பி மூடிவிடுகிறது. ராஜசேகரன் வாழ்க்கையில் இதிலும் ஒரு தோல்வி.ஆனாலும் இலவச இணைப்பாய் ஒரு வெற்றியும் நிகழ்கிறது. தேச முன்னேற்றச் சட்டத்தை இராஜசேகரன் பயன்படுத்துவதற்குக் கேட்கப்பட்ட வாக்குமூலம் பரிந்துரைக் குழுவால் பாராட்டப்பட்டு பிரசுரத்துக்குரியதாய் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதுவே நகுலன் நாம் வாழும் அமைப்பின் மீது வெளிப்படுத்தும் அபத்த நகைச்சுவையும் முரண் நகையுமாகும்.

நகுலனின் கதைகளுக்குப் பின் இயங்கும் அடிப்படைதான் என்ன? புறநிலை யதார்த்தம்,அனுபவம் மற்றும் உறவுகள் என்பதெல்லாம் மனிதன் கற்பிதங்கள் அல்லது மாயை என்றெண்ணும் அத்வைதப் பிரக்ஞைக்கும், தீவிர புறமெய்மை உணர்ச்சிக்கும் இடைப்பட்ட முரண் அல்லது விசாரம் எனலாம். ஒரு புனைவில் அல்லது நாவலில் ஒரு தத்துவம் அடிப்படையாய் இருக்கலாம். ஆனால் அதுவே புனைவு கொள்ளும் மொத்த சாத்தியங்களை வரையறுத்து விடுவதாய் இருக்க முடியாது. மையக்கருத்து அல்லது ஆசிரியரின் முடிவுக்கு அப்பாற்பட்டு புனைவின் போக்கில் சேரும் உபபொருள்கள் தான் புனைவை வேறுரு கொள்ளச் செய்கின்றன. அவ்வகையில் நகுலனின் நாவல்கள் பல குரல் தன்மை கொண்டவை. கதாபாத்திரங்களின் மனஓட்டம்,இயல்பு ஆகியவற்றின் பல குரல் தன்மை அல்ல; நகுலன் நாவல்களில் நாம் உணர்வது மொழி நினைவு, சமூக நினைவு, மரபு, வரலாற்று நினைவுகளுடனான பலகுரல் தன்மை ஆகியவைதான்.

Dec 13, 2009

நகுலன் படைப்புலகம்-சங்கர ராம சுப்ரமணியன்

சங்கர ராம சுப்ரமணியன்

(6.12.02 வாணியம்பாடியை அடுத்த காவலூரில் வெளி மற்றும் புது எழுத்து சார்பில் நடத்தப்பட்ட நகுலன் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

நகுலனின் பெயர் எனக்கு கோட் ஸ்டாண்ட் கவிதைகள் மூலம் தான் அறிமுகமானது. அப்போது நகுலன் nAGULANEதொடர்பாய் ஏற்பட்ட மனப்பதிவு ஏதோ ஒரு கொடுங்கனவை அனுபவமாக்குபவர் என்பது தான் அது. படிக்கும்போது விலகிப் படிக்க முடியவில்லை. பயம் கவிழ்த்துவிடும். பயம், பயம் தவிர வேறொன்றுமில்லை. அப்போது பிரபஞ்சனின் கதையில் வரும் நல்லியல்பு கொண்ட இளைஞனாக என்னை விரும்பிக் கொண்டிருந்தேன். ஜே.ஜே. படித்த பிறகு கூடுதல் நெஞ்சு நிமிர்த்தல். இந்த தருணத்தில் நகுலன் என் மன அடுக்குக்குள் புகுந்துவிட்டார். அவரை எப்படி வகைப்படுத்துவது. அவசியமில்லாத விருந்தாளியாய் - ஆனால் நான் அழைத்து வந்த விருந்தாளி அல்லவா -- அவரை வீட்டின் புழக்கடையில் அமரும்படி செய்துவிட்டு தப்பித்து என் இலக்கிய பயணத்தை லயம் குலையாமல் தொடர ஆரம்பித்துவிடுவேன்.

அதற்குபின் வந்த வசந்தங்களும், கோடைகளும், என் உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. வெயிலும், ஊமைப்பனியும் தலைக்குள் இறங்கத் தொடங்கிய பொழுது அது. அப்போது நண்பனின் கடிதத்தில் நகுலனின் கவிதை வரி ஒன்று குறிப்பிடப்பட்டிருந்தது.

வெயில் வண்ணத்துப்பூச்சிகள் பறந்து

கொண்டிருக்கின்றன

என்ற வரி அது. இவ்வரி தான் நகுலனை நோக்கி என்னை ஈர்த்தது. கோடைகளும், வசந்தங்களும் என் உடலில் உருவாக்கிய தோல்வி உறுப்புதான் புழக்கடையில் மறைந்திருக்கும் நகுலனிடம் என்னை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். செத்தைகள் குவிந்து, பிரமைகளை தோற்றுவிக்கும் திருநெல்வேலி வெயில் நகுலனுடைய கவிதைகளை வாசிக்க வைத்தது.

ஆசை, ஆசையின்மை - வெற்றி, தோல்வி - இருப்பு, இன்மை - மாறி, மாறி உரையாடிக் கொண்டிருக்கும் மனித மனத்திற்கு தோல்வியின் மீது ஒரு அடங்காத வசீகரம் உண்டு. அது இடிபாடுகள் மீதான வசீகரம். நினைவுகளில் சதா திளைத்துக் கொண்டிருக்கும் பொய்கைதான் தோல்வி. அது மிகுந்த அழகுடையது. நகுலனின் எழுத்தில் தோல்விதான் முக்கிய அனுபவம். நான் தோல்வி என்று குறிப்பிடுவது இலக்கிய தோல்வியை அல்ல. நகுலனின் அந்தரங்க தோல்வியும் அல்ல. சூழலை ஒரு நாடகமாக, ஏதோவொன்றை சுட்டி இன்னொன்றுக்கு காரணமாக்கும் வினோத தர்க்க முறையை ஒரு மனம் இயக்கமின்மையிலிருந்து உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.

ஏனெனில்

'யாருமற்ற இடத்தில்

என்ன நடக்கிறது

எல்லாம் '

நான் இல்லாத இடம் யாருமற்ற இடம்தானே. அங்கு எல்லாமும் தானே நடக்கும். அந்த இடத்திற்கு நகுலனால் போக முடியாது. இதுதான் நகுலன் தரும் அனுபவம். நீங்களும் நானும் போகாத இடத்தில் என்ன நடக்கிறது. எல்லாம். இந்த இயல்புதான் நகுலனின் வசீகரம்.

வீட்டின் கூரையில் காகங்கள் கரைந்தால் விருந்தாளி வருவார்கள் என்பது நமது ஊர்களில் உள்ள நம்பிக்கை. ஊர் தொடர்பான கவனிப்பாய் இருக்கும். அந்த ஊரில் நிறைய பெண்கள் சைக்கிளில் போய் கொண்டிருப்பார்கள். ஊர் பற்றி எந்த ஒட்டுதலும் விருப்பு, வெறுப்பும் அற்ற ஒரு இயக்கத்தை வைத்து சுட்டும் நகுலனின் விவரிப்பு நகுலனின் ஜன்னலில் இருந்து அவரால் மட்டுமே பார்க்கத் தகுந்தது. இந்தபார்வைதான் நிறுவப்பட்ட கலாச்சாரத்தின் sankar நினைவுகளிலிருந்து நகுலன் அணுகப்படாமல் இருப்பதற்கு காரணம். சமூகம் தான் உருவாக்கியுள்ள தளைகளை எழுத்தாளன் மீறும்போது அது முதலில் தன் எதிர்ப்புணர்வை தெரியப்படுத்துகிறது. காலத்தில் கலாச்சாரம் தன் இறுக்கத்தை நெகிழ்த்துகையில் அந்த எழுத்தாளனின் உடலையும் பொருத்திக் கொள்ள சில சமிக்ஞைகளை அனுப்புகிறது. தன்னை போன்ற உடல்கள் புறக்கணிக்கப்படும் வேளையிலும், உரையாடல் என அர்த்தப்படுத்திக்கொண்டு - அர்த்தப்படுவதான பாவனை செய்துகொண்டு - பதில் சமிக்ஞை செய்து தன்னை படைப்பாளி பொருத்திக் கொள்கிறான். வாழ்வையே அது தெரிவிக்கும் செய்தியின் அடிப்படையில் முப்பரிமாண கனவாக பார்க்காமல் வெளிறிய தன்மையை தொடர்ந்து கவனித்து வரும்போது கலாச்சாரமும் அரசியலும் அந்த விதிகளை ரகசியமாய் புறக்கணித்து விடுகின்றன. கலாச்சாரம் என்பதே ஜாதிகளின் நினைவின் மேலும், ரகசியக் கனவுகளின் மீது கட்டப்பட்டது தானே.

கலாச்சாரம் ஸ்வீகரித்துக் கொள்ளாமல் காலம் தாண்டி ரகசியத் தன்மையை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நகுலனின் எழுத்து கார்ட்டூன் தன்மையையுடையது. வாழ்வை அதீத கான்வாஸில் பார்க்கும்போது பிறப்பும், மூப்பும் மரணமும் பெற்ற தருணம் அது. நகுலனும் எழுத்தின் விசார மரபிலும் மரபான சத்த ஒழுங்கிலும் தான் தன் கவிதைகளை எழுதத் தொடங்குகிறார். குருவாயூர் குருவி வருகிறது.

பிரெக்டுக்கு எதிர்வினை புரியும் விதமாகத்தான் நகுலன் முதலில் தன் அ-கவிதைப் பாதையை தொடங்குகிறார். ஏன் மரங்களைப் பற்றி பேசக் கூடாதென்று. பிறகு எழுதும் கவிதைகளில் குருவாயூர் குருவி இல்லை. அப்போது அவர் பார்வையில் படும்பொருள்கள் நிழலோடு சேர்ந்து நகுலனின் வெளிக்குள் புகுந்து விடுகின்றன.

* * * *

நினைவுப்பாதை, நாய்கள் போன்ற இவரது நாவல்களிலோ பிற புனைவுகளிலோ தமிழில் ஏற்கனவே உறுதிப்பட்ட செம்மையான கதைமாந்தர் உருவாக்கம் கிடையாது. நகுலனின் வெவ்வேறு சாயல்களாகத்தான் எல்லா பாத்திரங்களும் முயக்கம் கொள்கின்றன. நினைவுப்பாதை நாவலில் ஒரே ஒரு ஞாபகம் மட்டுமே புனே என்னும் ஒரு காட்சி அல்லது அனுபவத்தை வைத்து நடக்கப்போகும் விஷயங்களுக்கான சமிக்ஞையை பெறுவது போலத்தான். நகுலனின் எழுத்துக்களையும் அவர் விவரிக்கும் காட்சிகளையும் சில சகுனங்களாகத் தான் புரிந்து கொள்கிறேன். ஒரு தோல்வியுற்ற மனம் தெரிவிக்கும் நவீன சகுனங்கள் தான் அவை.

* * *

நிகழ் வாழ்க்கையை விசாரம் செய்து ஒரு தத்துவசரடில் எழுதிச் செல்வதாகத்தான் தமிழில் நவீன கவிதை வெளிப்படத் தொடங்குகிறது. மரபின் செழுமையை சாதகமாக்கிக் கொண்டு படிமங்களின் வழியான சமத்கார கவிதைகளை பிரமிள் எழுதத் தொடங்கும் போது நவீன கவிதையில் பெரும் உடைப்பு ஒன்று நிகழ்கிறது. நவீன கவிதை புனைவின் சாயல்களை ஒரே கணத்தில் நடந்து வளர்ந்து, முடிந்து பார்வையாளனின் புன்னகையை மட்டுமே தெரிவிக்க இயலும். வலிகளின், உபாதைகளின் மீதான புன்னகை. கோபம் பகைமை மீதான புன்னகை. கனவு, நம்பிக்கை மீதான புன்னகை. இருப்பு, சுவாதீனம் மீதான புன்னகை. நகுலன் சேரிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்

Sep 28, 2008

நினைவுப் பாதையில் பதுங்கியிருக்கும் நகுலன்

ramana_ps75@yahoo.com

தமிழ்ப் புனைவுபரப்பிலும், கவிதை புலத்திலும் நகுலனின் இடம் தனித்தது. தமிழ் நவீன கவிதையின் இரு பாதிக்கத்தக்க குணாம்சங்களாக பிரமிளையும் நகுலனையும் சொல்லலாம். பிரமிளுடையது, மரபின் செழுமையையும் சமத்காரத்தையும் எடுத்துக்கொண்டு படிம மொழியில் பேசுவது. நகுலனின் கவிதையை, மரபை clip_image002[3]அழைத்தும், மரபிலிருந்து விடுபட்டுக் கொண்டும் எழுதிக் கொண்ட நேர் கவிதை எனலாம். முதல் தலைமுறை நவீன கவிஞர்களை உருவாக்கிய சி.சு. செல்லப்பா அவர்களின் எழுத்துப் பத்திரிகையில்தான் நகுலனின் (டி.கே துரைஸ்வாமி) கவிதைகளும் தொடங்கின. எழுத்தில் எழுதிய பல கவிஞர்களின் கவிதைகள் இன்றைய வாசகன் படிக்கும்போது உணர்வெழுச்சியைத் தராமல் அலுப்பை தந்து கொண்டிருக்கும் வேளையில், மஞ்சள் ஒளி படிந்த அபத்த நிலையை எதிர்கொள்ளும் வினோதத்தை நகுலனின் கவிதைகள் தந்தபடியிருக்கின்றன.

நகுலனின் வீடு தமிழ்நாட்டுக்கு வெளியே திருவனந்தபுரத்தில் கெளடியார் ஹில்ஸ் சாலையில் நவீன பங்களாக்களுக்கு இடையில், கேரள நிலப்பரப்புக்கேயுரிய விசித்திரமான திடீர் இறக்கத்தில் உள்ளது. நிலம் சார்ந்து அவரின் வாழ்விடம் அன்னியப்பட்டிருப்பதற்கும், அவருடைய எழுத்துகளுக்கும் நுட்பமான உறவிருக்கிறது. வட்டார நாவல்களும், சிறுகதைகளும் வரவேற்புடன் எதிர்கொள்ளப்பட்ட காலத்தில்தான் இவரது புத்தகங்களும் வெளிவரத் தொடங்குகின்றன. ஆனால் நினைவுப்பாதை, நாய்கள் போன்ற இவரது நாவல்களிலோ, பிற புனைவுகளிலோ தமிழ் புனைவில் ஏற்கனவே உறுதிப்பட்ட செம்மையான கதை மாந்தர் உருவாக்கம், பின்னணி தொடர்ச்சி இவை எதுவும் இருக்காது. நகுலனின் வெவ்வேறு சாயல்களாகத்தான் எல்லா பாத்திரங்களும் இயக்கம் கொள்கின்றன. நினைவுப்பாதை நாவலில், ஒரே ஒரு ஞாபகம் மட்டுமே புனே என்னும் ஊரைப்பற்றிய கவனிப்பாக இருக்கும். (அந்த ஊரில் நிறைய பேர் சைக்கிளில் போய்க் கொண்டிருப்பார்கள்) ஒர் ஊர் பற்றி எந்த ஒட்டுதலும், விருப்பு, வெறுப்பும் அற்ற ஒரு இயக்கத்தை வைத்து சுட்டும் நகுலனின் விவரிப்பு, நகுலனின் ஜன்னலிலிருந்து அவரால் மட்டுமே பார்க்கத் தகுந்தது.

தமிழில் தத்துவ சாய்வு எழுத்துக்கள் நிறைய உண்டு. மனத்தடையற்று எண்ணங்கள் முன்னும், பின்னும் ஊடறுத்த நகுலனின் சுய அவதானத்திலிருந்து, தத்துவமும் புனைவும் ஒரே வெளியில் உருக்கொண்டன.

யாருமற்ற இடத்தில்

என்ன நடக்கிறது

எல்லாம்.

இந்தப் பார்வைதான் வட்டார கலாச்சாரத்தின் நினைவுகளிலிருந்து நகுலன் அணுகப்படாமல் இருப்பதற்குக் காரணம். கலாச்சாரம், தான் உருவாக்கியிருக்கும் தளைகளை எழுத்தாளன் ஊடறுக்கும்போது முதலில் பலத்த எதிர்ப்புணர்வை தெரியப்படுத்துகிறது. காலத்தில் கலாச்சாரம் தன் இறுக்கத்தை நெகிழ்த்துகையில் அந்த எழுத்தாளனின் உடலையும் பொருத்திக் கொள்ள சில சமிக்ஞைகளை அனுப்புகிறது. தன்னைப் போன்ற உடல்கள் புறக்கணிக்கப்படும் வேளையிலும், உரையாடல் என அர்த்தப்படுத்திக்கொண்டு - அர்த்தப்படுவதாக பாவனை செய்து கொண்ட - பதில் சமிக்ஞை செய்து தன்னை படைப்பாளி பொருத்திக் கொள்கிறான். வாழ்வையே அது தெரிவிக்கும் செய்தியின் அடிப்படையில் முப்பரிமாண கனவாக பார்க்காமல் வெளிறிய தன்மையை தொடர்ந்து கவனித்து வரும்போது கலாச்சாரமும் அரசியலும் அந்த விழிகளை ரகசியமாய் புறக்கணித்து விடுகின்றன. கலாச்சாரம் என்பதே ஜாதிகளின் நினைவின் மேலும், இரகசியக் கனவுகளின் மீதும் கட்டப்பட்டதுதானே.

கலாச்சாரம் ஸ்வீகரித்துக் கொள்ளாமல் காலம் தாண்டி இரகசியத் தன்மையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் நகுலனின் எழுத்து கார்ட்டூன் தன்மையையுடையது. வாழ்வை அதீத கான்வாஸில் பார்க்கும்போது பிறப்பும், மூப்பும், மரணமும் ஒரே கணத்தில் நடந்து, வளர்ந்து, முடிந்து பார்வையாளனின் புன்னகையை மட்டுமே தெரிவிக்க இயலும். வலிகளின், உபாதைகளின் மீதான புன்னகை. கோபம் பகைமை மீதான புன்னகை. கனவு, நம்பிக்கை மீதான புன்னகை. இருப்பு, சுவாதீனம் மீதான புன்னகை. நகுலன் சேரிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நகுலனின் கவிதைத் தொகுப்புகள்:

1. கோட் ஸ்டாண்ட் கவிதைகள்

2. மூன்று

3. ஐந்து

4. சுருதி

5. இரு நீண்ட கவிதைகள்

நகுலனின் உரைநடை:

1. நினைவுப்பாதை (நாவல்)

2. நாய்கள் ( '' )

3. நிழல்கள் ( '' )

4. வாக்குமூலம் ( '' )

5. நவீனின் டைரி ( '' )

6. நகுலனின் கதைகள்(சிறுகதைகள்)

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்