Showing posts with label மௌனி. Show all posts
Showing posts with label மௌனி. Show all posts

May 31, 2020

மாபெருங் காவியம் - மௌனி

  கிட்டுவின்  காரியம் முடிவடைந்துவிட்டது. அவன் எழுத ஆரம்பித்த  அந்த  “மாபெருங் கவியம்” பூர்த்தியாகி விட்டது. இதற்குப் பிறகு அவனிடம், அவனுடைய  இரண்டொரு சிநேகிதர்கள் , ஒரு பெரிய மாறுதலைக் கண்டனர். அதைப்பற்றி அவர்கள்  எப்போதாவது இவனிடம் குறிப்பிடும்போது கிட்டு சிறிது சிரித்துக்கொண்டே  “ என் வாழ்க்கை ஒரு உன்னத நிழல் ஆட்டம் . ஒளி  குன்றியது . என்னுடைய நிழலும்  பார்வையினின்றும் மங்கி விட்டது . விலகி நின்று உலகநாடகத்தைப் பார்ப்பதுதான் இப்போது நான் செய்வது ...”


 கிட்டுவின் கண்களையும்  முகத் தோற்றத்தையும் தவிர்த்து , அவன் சாதாரணமாகத் தெரிபவன்தான் . அவன் கண்கள் இரு ஞானவொளிச் சுடர்போன்று தோன்றும் . அவைகளின்  பார்வை  ஒரு உன்னத காவியம் . அவன் இழுத்து இழுத்துப் பேசுவதே ஒரு இனிய கீதம்.

  வறுமையில் உழன்ற அவன் வாழ்க்கைக்கு ஆறுதலாக அவன் மனைவி குஞ்சுவும், ஆறு வயதுடைய ஒரு  பையனும் இருந்தனர் . தன்னுடைய வாழ்க்கையை ஒரு இனிய கனவில் கழிப்பதாகவே கருதி அந்த எண்ணத்தில்தான்  அவன் வாழ்ந்து இருக்க முடியும். ஏதோ நடுவில் விதி குறுக்கிட்டு அவனை ஒரு காவிய கர்த்தனாக்கி விட்டது. ஒருக்கால் சிருஷ்டியிலும் வெளி விளக்கத்திலும் அடையும் ஒருகண சாசுவதாம்ச ஆனந்தத்தைக் கொள்ள அவன்  மனது விரும்பியதால்தான் இந்தப் புத்தகத்தை அவன் எழுதினான் போலும் .

   பிரபஞ்ச வெளியில் கட்டுப்பாடியின்றித் தெரியும் பறவை போன்ற ஞான உணர்வைப் பிடித்துக் கூட்டிலடைத்ததுதான் அக்காவியம். சாசுவதானந்தத்தை  வாக்கியத்தில் புதைத்துக் கண்ட களிப்பதில் , கலைஞர்கள் கடவுளுடைய சிருஷ்டி ஆனந்தத்திற்கு ஒப்பானதை உணர்கிறார்கள் போலும். எவ்வகை சிருஷ்டியும் அழிவிற்கு விரைந்து செல்வதாயினும் , அழிவின்றித்தான் அவர்கள் மனதில் அக்கண ஆனந்தம் பதிகிறது.

   வாழ்க்கையின் வறுமை அவனை வெறித்து நோக்குகிறது. தான் புத்தகம்  எழுதுமளவும் ,ஒன்றும் அவனைத் துன்புறுத்தா வகையில் தூரத்தில் கண்ட வெளியிலேயே  அவன் மனம் சஞ்சரித்தது . அது முடிந்தவுடன் பழையபடி  உலக வாழ்க்கை  அவனைத் தன்னிடம் இழுத்தது . சிற்சில சமயம் அவன் மனது துக்கம் அடையும் . “ கனவிலா  உன் வசீகரத்தைக் கண்டேன் . இப்போது விழிப்பின் இருளில் உன் அழகு மறைகிறதோ ? ” எனச் சஞ்சலமடைவான். அப்போது  இரவில் தடுமாறித் தடவும் அசாரீயைப் போன்று அவன் எண்ணங்கள்  தடுமாற்றம் கொள்ளும் ஆயினும் , என்றுமறியாத ஒரு அமைதியை அவன் மனது கண்டது. அதற்கு ஆதாரம்  கொடுப்பது எது என்பதை அவன் ஆராய ஆசை கொள்ளவில்லை . மற்றவைகளைப் போலவே அவன் மன ஆறுதலும் , ஒரு மாயையை அஸ்தி வாரமாகக் கொண்டதாக ஏன் இருக்கக் கூடாது என்ற ஒரு எண்ணம் மட்டும் நிச்சயம் கொள்ளாது அவன் அடிமனத்தில் அமுங்கிக் கிடந்தது போலும் .....

       கிட்டுவின் குழந்தை ராமு நான்கைந்து நாளாகக் கடுமையான சுரத்தில் அவஸ்தைப்பட்டுக் கொண்டு இருந்தான்.......... கிட்டு , ஒரு கடையில் குமாஸ்தாவாக இருபத்தைந்து ரூபாய் சம்பளத்தில் இருந்தான் . சம்பளம் வாங்கியதும் , தன் மனைவி கையில் அதைக் கொடுக்கும்போது ஏதோ ஒரு கேவலச் சந்தோஷத்தில் ஆரவாரிப்பதைப் போல அந்த ரூபாய்கள் கலகலவெனச் சப்திக்கும். அவன் மனைவி கண்களில்  காலதேவனாலும் கொன்றுவிட முடியாத ஒரு புன்னகையின் வசீகரம் காணும் . இவனுக்கோவெனில் வெறும் வருத்தந்தான் . ஏன் தனது மனது மட்டும் சமாதானம்  கொள்ளமுடியவில்லை என்பது ஒரு உருக்கொண்ட பிரச்சனையாகிவிட, அதை அறிய முடியாது திகைப்படைவான் . தன் தலையில் எழுதின வகை......தலை விதியாக்கினவனே போன்று .... ஒரு லேசான சமாதனம் கொள்ளுவான்  . இதெல்லாம் இவன் புத்தகம் எழுதுவதற்கு முன்பு . புத்தக வேலை முடிந்தது; குருட்டுத்தனமாக விதி இவனை எவ்வகை உயர்  காரியத்தைச் சாதிக்கத் தள்ளியது என்று எண்ணுவது உண்டு. ஆனால், அதினின்று அடைந்த உணர்வு மட்டும் விதிக்கு விலக்கியே, தன் உள்ளக் கிளர்ச்சியின் ஒரு ஆனந்தமெனக் கருதினான் . இதற்காகத்தான் ,ஒருக்கால் கடவுள் , விதிவசப்படாது நிற்க எப்போதும் , சிருஷ்டித்து, அந்த ஆனந்தத்தை அடைகிறான் போலும் !

   சாசுவதமற்ற உலக வெளி வெறிப்பும் , அதில் கொண்ட அவன் வெறுப்பும்  மழுங்கிக் கொண்டே அநேகமாக மறைந்துவிட்டது. ஆனந்தத்தைக் கொடுக்கத்தான் குழந்தை இராமுவின்  இரு விழிகள் இருந்தன. மனச்சங்கடத்தின் எல்லையில்  பொருந்தின  இரு சுடர் விளக்காகத் தான் அவ்விழிகள் இவனுக்குத் தோற்றம் . கிட்டிய பக்கத்தை கவலைக் கடலாகக் காட்டினாலும் , மறு பக்கத்தை அச்சுடர்கள் கொஞ்சம் காட்டும்போது எல்லைக் கடந்த ஆறுதலின் இன்பசாகர வெளியை, கிட்டுவால் பார்க்க முடிந்தது.

    குழந்தை சுரத்தில் சங்கடப்படுவதைப் பார்க்க அவனால் சகிக்க முடியவில்லை. சுரவேகத்தில் ஒளிகொண்ட குழந்தையின் கண்கள் , இவனைப் பயம் கொள்ளும்படி செய்தன. அச்சுறுத்தும்படி . ஆள்காட்டிவிரல் போல அவன் போகும் இடத்தைக் காட்டுவதா அக்கண்களின் பார்வை ? அவனால் அவன் குழந்தையீன் முகத்தைப் பார்க்க முடியவில்லை ........

  அன்று இரவு குழந்தைக்குத் தாங்க முடியாத சுரம் . கண்ணயராமல்  கிட்டுவும்   குஞ்சுவும் அறையில் குழந்தையின் அருகில் உட்கார்ந்து இருந்தனர் . நடுநிசிக்கு அப்பால்  குழந்தை கொஞ்சம் கண்களைத் திறந்து  ‘ அம்மா  ’ என்றான். விழித்துக் கொண்டதும், அவனுக்கு மருந்து கொடுப்பதற்காக குஞ்சு மருந்தைக் கொணரச் சென்றாள். கிட்டு எழுந்து மேஜை அருகில் உள்ள நாற்காலிக்குப் போய் விட்டான். மருந்து கொடுத்ததும் வாய்க் கசப்பை மாற்ற  மேஜை மீது இருந்த திராக்ஷைப் பழப் பொட்டலத்திலிருந்து கொஞ்சம் எடுத்து அவனுக்குக் கொடுத்துக் குழந்தையைத் தூங்கச் செய்தாள் . மேஜையருகில் கிட்டுவிற்கு எதிர்ப்புறமாக வந்து நின்றாள். ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்த கிட்டு அவள் வருகையினாலும் திரும்பவில்லை. வெளியே வெகு எட்டிய வெளியே அவன் நோக்கு சென்று கொண்டிருத்தது. ஊர்  ஆரவம் நன்றாக அடங்கி  நிசப்தமாக இருந்தது. பிறைச் சந்திரன் மேற்கு அடிவானத்தருகில்  தேங்குவதைக் கண்டு கொண்டு இருந்தான். ஒரு மங்கிய நிலவில் வீதிகளும் ,வீடுகளும் ,எட்டிய மரங்களும் தெரிந்தன. ஒன்றையும் கவனியாது இயற்கையின் சக்கரம் காலத்தில் சுழன்று கொண்டு இருந்தது. உலகத்தில் மாந்தர்கள் கொள்ளும் மனச் சாயையைக் கொஞ்சமும் பொருட்படுத்தாது இப்பிரபஞ்சம் துயின்று கொண்டு இருப்பது கிட்டுவிற்குப் புரியவில்லை. வாழ்க்கையின் இன்ப துன்பம் தன்னுடைய மனத்தில் தான் தோன்றுகிறாதா என்ற ஒரு எண்ணம் கொண்டபோது, ஆறுதலுக்கும்த் தன்னைத்தவிர வேறிடம் தேடுவது மதியீனம் என்பதாக நினைத்தான். உள்ளே அறைப்பக்கம் தலையைத் திருப்பினான். சுவரில் ஆடிய நிழல்கள் இவன் மனதேபோலச் சலித்தன. சிறிய ஒளியில் எதைப் பார்ப்பது என்பதை அறியாதனப்போன்று கண்கள் தாமாகவே குஞ்சுவின் முகத்தை நோக்கின.

மேஜையின்மீது இரு கைகளை ஊன்றி நின்று இருந்தாள் குஞ்சு. அவள்  மனது , எண்ணங்கள் சூனியப் பொருளைக் கொண்டதாக இருந்தது. ஒன்றும்  தெரியாது விழிப்பதுபோன்று பார்ப்பவளுடைய முகம் சாயை யற்றுத் தோன்றியது. இவன் தன்னைப் பார்ப்பதை அறிந்த குஞ்சு தலையைக் குனிந்துக் கொண்டாள். ஒருக்கால்  உருக்கொண்ட உலகத் துக்கம் அவள் கண்களினின்றும் வந்த கண்ணீர் மேஜையின் மீது சொட்டியது.

 கிட்டுவால் நிதானமாக ஒன்றையும் செய்ய முடியவில்லை . தன் மனைவியின் எல்லையற்ற வருத்தம் இவனைத் தடுமாறச் செய்தது.

   யதேச்சையாக மேஜையைப் பார்த்தபோது திராக்ஷைப் பழப் பொட்டணம் பிரித்தப்படியே இருந்தது. அதை மடித்து வைக்கக் கையில் எடுத்தான். அந்தப் பொட்டணக் காகிதத்ததில் ஏதோ எழுதியிருந்தது. தனக்குத் தெரிந்த  எழுத்தாகத் தோன்றியது. யோசிக்க ஒன்றுமில்லாது மனது மிகச் சஞ்சலம் கொள்ளும்போது எவ்வகை அல்பவிஷயத்திலும் புத்தி ஈடுபடுகிறது . கிட்டு நன்றாக அதை  உற்றுப் பார்த்தான் . ஆம் அவனுக்கு நன்றாகத் தெரிந்த எழுத்துத்தான் அது. ஒரு கணத்தில்  அது தன்னுடைய கையெழுத்தென்பதைத் தெரிந்து கொண்டான். பொட்டணத்திலிருப்பதைக் கீழே மேஜையில் வைத்துவிட்டு அந்தக் காகிதத்தை எடுத்து வந்து தரையில் உட்கார்ந்து படித்தான். இதற்குள் குழந்தை ஏதோ சுரவேகத்தில் உளர அதன் அருகில் குஞ்சு போய்விட்டாள்.

  கிட்டு அப்போது அடைந்த மன அதிர்ச்சியில் ஒன்றுமே புரியாதவனானான். தன்னுடைய உன்னதப் புத்தகத்தின் ஏடுகளில் அந்தக் காகிதத் துண்டு ஒன்றென அவன் அறிந்தபோது அவன் உள்ளமே வெடித்தது போன்றாகியது. அக்கணத்திலேயே, தான் அக்காவியம் செய்து முடித்தவுடன் தோன்றிய அந்த ஆனந்தம் அவன் மனத்தில் குடி கொண்டது.
 
  நடந்ததைச் சிறிது நேரத்திலேயே ஊகித்துக் கொண்டான் . தான் எழுதி  வைத்திருந்த காகிதங்களைத் தன் குழந்தை கடையில் போட்டு ஏதோ வாங்கிக் கொண்டான் என்பதாகக் கண்டு கொண்டான்.

  இதற்குள் குழந்தையின் பக்கத்தில் இருந்த தன்னுடைய மனைவியின் கூப்பிடும் சப்தம் கேட்டு அங்கு சென்றான்.  கனவில்  காண்பதைவிட வெகு விநோதமாகவே தன்னெதிரில்  நடப்பவைகள் தெரிந்தன. அவனால் சமாளிக்க முடியாத அதிர்ச்சியை அவன்  மூளை அடைந்ததினால் உலகத்தையே தலைகீழாகப் பார்த்தான் என்பது சரியே போலும் .

     தன்னுடைய குழந்தை ராமு ஜன்னி வேகத்தில் ஏதோ பிதற்றிக் கொண்டிருநத்தான். இரண்டொரு வார்த்தைகள் புரியும்படியாக , ‘ பம்பரம்  ’  ‘அப்பா ’ என்பது போன்று இருந்தது.

    காலை ஒளியில் கடைசி நக்ஷத்திரம் மறையும் முன்பே குழந்தை ராமு இறந்துவிட்டான். மற்றுமொரு குருவி கூண்டைவிட்டுப் பறந்தோடிவிட்டது. ஆகாயத்தில் இன்னும் நக்ஷத்திரங்கள் தெரிந்து கொண்டிருந்தன. குழந்தையைப் பார்க்கத் தாயார் வெற்றுத் தொட்டிலை குனிந்து நோக்குவது போன்று, சவமான ராமுவை, குஞ்சு பார்த்து நின்றாள் . அவள் துக்கம் வாயைவிட்டு வரவில்லை. கல்லாகச் சமைந்து , பார்க்கும் பார்வையிலேயே இறந்தவள் போன்று நின்று இருந்தாள், அருகில் கிட்டு வந்தான் . அவனால் அவள் கண்களில் நீர் பெருகுவதைத் தடுக்கமுடியவில்லை. தாங்காத வருத்தத்துடன் தன் மனையானை அணைத்துக் கொண்டான்.

அந்தப் பிரியாத அணைப்பிலே அந்நிலையிலே தாங்கள் தனிச் சரீரம் பெற்றதான உணர்ச்சியைக் கொண்டார்கள் .............

    கிட்டுவின் மனத்திலே தன்னுடைய இரு சிருஸஷ்டிகளை ஒருமிக்கப் பறிகொடுத்ததான எண்ணம் பரிகாசமாகவேபட்டது . எவ்வகை அல்ப மகிழ்ச்சி,  இந்த  சிருஷ்டியில் கொள்ளும் ஆனந்தம் . உயிர் கொடுக்கப்பட்டவுடனே அவை யாவும் உடனே   அழிவிற்குத் தாமே எல்லாம் விரைந்து செல்லுகின்றன. சாசுவதமாகக்க கொள்ள வேண்டின் உணர்வுகளுக்கு விளக்கம் கொள்ளுவது ஏன் ?

      தன்னுடைய காவியம் அழிந்ததில்  அவன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. மலரினின்றும் பிரிந்து வதங்கிய  இதழைவிட்டுச் சென்ற மணத்தை எங்கும் உணர்ந்தான். எதற்காக மலரையும் மணத்தையும்  ‘ அவன் ’ ஒன்று சேர்த்தான். கேவலம் இது தொழில் செய்வதில் கொள்ளும் ஒரு ஆனந்தத்திற்காகவா ? ..........

 இப்போது கிட்டுவின் முகத்தில் ஒரு அமைதி குடி கொண்டுவிட்டது . எதிர்பாராத உள்நோக்கு அவன் கண்களில் கண்டது. அவன் பேசும்போது வெளிவராத வார்த்தைகளை வலுக்கட்டாயப் படுத்தி இழுத்துப் பேசுவதுபோல் இருக்கும். தன் மனைவி குஞ்சுவை அவன் கனிந்து பார்க்கும்போது அந்தப் பார்வையையே சாசுவதத் தான் எண்ண முடியும்.

 மின்னலைக் கணம் கண்டு குருடானவனாயினும் பிறவிக் குருடானவனாயினும் பிறவிக் குருடனுக்கும் அவனுக்கும் மேலெழுந்தவாரியாக வித்தியாசம் காணக்கூடாத வகையில்தான் தன் வாழ்க்கையை நடத்துகிறான் .

         ஆனால், அவன் மளிகைக் கடையில் உட்கார்ந்து  கொண்டு , பொட்டணம் மடிக்கத் துண்டுக் காகிதங்களை, ஆட்களுக்கு எடுத்துக் கொடுக்கும்போது, ஏன் அத்துண்டுகளை கண்ணெதிரே வைத்து சிறிது நேரம் உற்று நோக்குகிறான்...... ஆமாம் , அக்காகிதத்திணூடே, அதற்கு வெகு அப்பாலே ஜீவியக் காவியத்தை அவன் கண்கள் பார்க்கின்றன. என்றுமில்லாத ஜோதி அவன் கண்களில் காணுகிறது . சிறிது சென்று ஒரு அசட்டுச் சிரிப்பும் அவன் முகத்தில் படருகிறது. சிருஷ்டியில் கொள்ளும் ஆனந்தம் எத்தகையது என்பது அவனுக்கு அப்போது தெரியும்.

தினமணி  மலர் 1937

தட்டச்சு - தீட்சண்யா. ரா

Sep 29, 2017

மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்

தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி  போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில்  நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோணத்தில் தம் மனப்போக்கிற்கிசைந்த ஒரு சிலரின் கோஷ்டியில் சேர்ந்து, தெளிவுகாண அநேக விஷயங்களைப்பற்றி விவாதித்துக்கொண்டிருந்த நாட்கள் அவை, 1933ல் மகாமகம் வந்தது. அதற்காக ஒரு கண்காட்சி நடந்தபோது, கதர் ஸ்டாலுக்கு வந்திருந்த பி.எஸ்.ராமையாவைச் சந்தித்தார் விவாதத்தில் பிரிதி உள்ள மெளனியிடம், பிஎஸ்ஆர். எதையேனும் கண்டிருக்கலாம்: மெளனியே எதிர்பாராதபடி, "நீங்கள் சிறுகதைகள் நன்றாக எழுத முடியுமென்று நினைக்கிறேன், "மணிக்கொடி" பத்திரிகைக்கு எழுதுங்கள்" என்றார் மெளனி, இதற்கு

அந்த வேளையில் என்ன சொன்னாரோ, எப்படி இதை எடுத்துக்கொண்டாரோ தெரியவில்லை. ஆனால் 1934க்கும் 35க்கும் இடையில், இப்போதும் அவர் வசமுள்ள குறிப்புப்புத்தகங்களில், அவ்வப்போது பளிரெனத் தோன்றியவற்றுடன் சிறுகதைகளுக்கான குறிப்புகளையும் எழுத ஆரம்பித்தார் தொடர்ச்சியாக, 1934ஆம் வருஷ இறுதியில் ஆறேழு சிறுகதைகளையும் ஒரு குறுநாவலையும் ஏதோ வேகத்தில் எழுதினார். இதுதான் ஆரம்பம்
மெளனியைப் புதுமைப்பித்தன், "சிறு கதையின் திருமூலர்" என்று
குறிப்பிட்டது. திருமூலரைப்பற்றி ஐதீகமாகச் சொல்லப்படுவதுபோல், மெளனியும் ஆண்டுக்கு ஒரு கதை எழுதியவர் என்பதற்காக அல்ல என்று, அவ்வொற்றுமை இல்லாததால், இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது. திருமூலர், மிக எளிய பதங்களையும் பதச்சேர்க்கைகளையும் கொண்டு உயர்ந்த தத்துவங்களைச் செய்யுளில் வடித்தாற்போல, மெளனியும், "கனமான விஷயங்களை ஏற்க மறுக்கிற மெலிந்த சொற்களில்", உந்நத அநுபவங்களை எழுப்பியிருக்கிறார் என்ற ஒற்றுமைக்காகவே, பு:பி. அப்படிச் சொல்லியிருக்கலாம். ஆனால், தமது எழுத்தின் இந்தத் தரத்தைப் பற்றி, மெளனிக்கே ஆரம்பத்தில் ஒரு நிர்ணயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. "இலக்கியத்தைச் சாதிக்கும்" நோக்கம், அந்தவரையில் அவருக்குத் தோன்றவும் இல்லை. அவரே சொல்வதுபோல், "பிரசுரிக்கும் நோக்க(மு)ம். இல்லை. எழுத முடிகிறதா என்று பார்க்கும் நோக்கம் போலும்" இலக்கிய ரசனை மிக்க நண்பர் ஒருவர் அக்கதைகள் பற்றிச் சொன்ன உயர்ந்த அபிப்ராயமோ, மெளனி எதிர்பார்த்ததை விடக் "கொஞ்சம் திடுக்கிட இருந்தது" அவர் ஆலோசனைப்படி, பி.எஸ்.ஆரைத் தமக்கு அறிமுகப்படுத்திய வாக்கில் நண்பரிடம் கதைகளை அனுப்பி, சென்னையில் "எந்தப் பத்திரிகை ஆசிரியரிடமாவது காட்டி", போடத் தகுதியுள்ளதாயின் போடும்படி எழுதினார், வக்கீல் நண்பர், மணிக்கொடியுடன் தொடர்புள்ள பிஎஸ்ஆரிடம் கதைகளைத்தந்தார். இதிலிருந்து, மெளனிக்கும் மணிக்கொடிக்கும் இருந்த "தொடர்பை"யும் நாம் நிதானிக்கலாம். 1936 பெப்ரவரி தொடக்கம், மெளனி கதைகள் அவ்வப்போது வெளியாகின. அவரது பெரும்பாலான கதைகளைத் தாங்கிவந்த சிறப்பு மணிக்கொடிக்கு உரியது. மௌனி, இதர கதைகளுடன் அனுப்பிய குறுநாவல் பிரசுரிக்கப்படவில்லை; அதன் பிரதியும் காணாமற் போயிருக்கிறது. மெளனி அது பற்றிச் சொன்னதைக் கொண்டு பார்த்தால், அது அவரது தரமான கதைகளின் வரிசையில் வராதது என்று தெரிகிறது.

சிறுகதைத் துறையில், அதுவும் முதல் சந்திப்பில் பி.எஸ்.ஆர் சொன்னதை மனதில் வைத்துத்தானோ என்னவோ, "எழுதிப்பார்த்து" எழுத்தாளரான மெளனி, தமது ஆரம்ப நாட்கள் தொட்டுச் சங்கீதத்திலும் ரசிகராக ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில், பிடில் வித்வானான ஒரு நண்பரோடு மௌனியின் நெருங்கிய ஈடுபாடும் ரசனையும் சர்ச்சைகளும் தான், அவர் கதைகளில் சங்கீதம் வகிக்கும் இடத்திற்கு ஒரு அந்தரார்த்தம் கொடுப்பதற்கு காரணமானது போலும் அவர் எழுத்து சொல் ஜாலத்தை நிராகரித்துப் பிறந்தது.

பிடில் சங்கீதமும் எழுத்தும் தற்செயலான விளைவுகளுக்கு இடம் தருவன. இதனால், கலைஞனின் உண்மையான மனநிலைகள், உணர்வுகள் போன்றவற்றுக்குக் கட்டுப்படாமல், தற்செயலான தினம்வர வளைவிலோ, படிமங்களிலோ தடுமாறி, பிடில் வாசிப்பும் எழுத்துக்கலையும் செயல்படமுடியும். இந்தத் தற்செயல் விளைவுவேறு, தன்னை மறந்த வேகத்தில் பிறக்கும் படைப்பு வேறு என்பதை பெரும்பாலான கலைஞர்கள் மறந்து விடுகிறார்கள். முதிர்ந்த சில கலைஞர்கூட, இவ்விருதுறைகளிலுமே, தற்செயல்  விளைவுகளை விஸ்தரித்துக்கை தட்டலையும் கைதட்டலையும் வாசகரஸனையையும் பெற்று விடுகிறார்கள்.

இவ்விபத்துக்களையே அதுசரித்துப் பிறக்கும் கலை, கைதட்டலையும் ஆரவாரிப்பையும் தான் பெறமுடியும், ஆனால், "கைதட்ட வைப்பதோ, "பேஷ், பேஷ்" என்று ஆரவாரிக்க வைப்பதோ அல்ல - நீண்ட பெருமூச்சுக்களை உண்டாக்குவதுதான் உயர்ந்த சங்கீதம்" என்று, மெளனி ஒருதடவை சம்பாஷணையில் குறிப்பிட்டிருக்கிறார். பிடில் போன்ற ஒரு வாத்யத்தில், சாஸ்திரக் கட்டுமானங்களின் முடுக்கப்பட்ட ஓட்டத்தில் சில தற்செயல் விளைவுகள், கலைஞனின் உண்மையான உணர்ச்சிகள் போன்றவற்றுக்குக் கட்டுப்படாமல் பிறப்பதுண்டு. இது ஒரளவு எழுத்துத் துறைக்கும் பொருந்தும். இந்த தற்செயல் விளைவு, கலைஞனின் மனநிலையிலிருந்து வேறுபட்டதாக இருக்க, அந்த மனநிலையாலேயே ஆளப்பட்டு, பளீரெனப் பிறக்கும் சங்கீதமும் எழுத்தும் உண்டு. இப்படித் தன்னை மறந்த வேகத்தில் பிறப்பதற்கும் தற்செயல் விளைவுகளுக்கும் இடையே உள்ள வேறு பாட்டை, தமிழில் சில பழம் பெரும் எழுத்தாளர்கள் கூட உணரவில்லை: இன்றும், கைதட்டலையும் ஆரவாரிப்பையும் பெறும் அவர்கள். அந்தத் தற்செயல் விளைவுகளை விஸ்தரித்து எழுதுபவர்கள்தான் என்பதை, அவர்களது எழுத்துக்கள் கைதட்டலையும் ஆரவாரிப்பையும் மட்டுமே பெறுகின்றன என்ற ஒன்றன் மூலமே நிரூபிக்கலாம். மெளனியோ, நீண்ட பெருமூச்சுகளை எழுப்புபவர்.

சாஸ்திரப் பயிற்சி, மனநிலைகளை வெளியிடாமல் தன் போக்கிற்கு விளைவுகளை உண்டாக்கும் என்பதால், அத்தகைய பயிற்சி நிலையிலேயே தேங்குபவரை "விரல் ஞானஸ்தன்" என்பதுண்டு: எழுத்துத்துறையிலும் அத்தகையவர்களை இப்படிக் குறிப்பிடலாம் இவர்கள், தற்செயல் விளைவு நேராத சமயத்தில்தான், ஒரு "விரல் ஞானஸ்தன்” சாஸ்திரீயமாகத் தான்  கற்ற ஸ்வர உருப்படிகளை மட்டுமே வாசிப்பதுபோல், காது புளித்த லட்சியங்களை உண்டாக்குவதும் தத்துவச்சரடு திரிப்பதும்
அடுத்தது, மெளனி நடப்பியல்பு"க்குப் புறம்பான வகையாக எழுதுபவர் என்பது ஆனால் நடப்பியல்புக்கு "இசைய" எழுதுபவர்களில் சிலர் சாதிக்க முடியாத மனநிலைப் போக்குகளை, மெளனிதான் இயல்பானதாகத் தென்படும்படி சாதிக்கிறார் ஆளில்லா வேளையில் வீடு பெருக்குபவளை வரச்சொல்லிவிட்டு, அவள் வந்ததும் அந்த

இக்கட்டான சமயம் பார்த்து "மனம் மாறி" விடுகிறதாக எழுதியுள்ள ஒரு கதையுடன், மெளனியின், 'மனக்கோலத்தை ஒப்பிட வேண்டும். நடப்பியல்பு என்ற அளவில் இயல்பானது, அந்த இக்கட்டான நிலையில் செய்யத் திட்டமிட்ட "கெட்ட” காரியத்தை நிறைவேற்றுவதுதான். மனம் மாறுவது, மனோதத்துவ இயல்பு தென்படும் வகையில் சித்தரிக்கப்படாத அளவில், அம்மனமாற்றம் அக்கதையின் நடப்பியல்பு அல்ல. அந்த இயல்பைச் சித்தரிக்கும் சிரமத்தைத் தவிர்த்து விட்டு, தத்துவச் சரடு திரித்தேபாத்திரத்தின் மனதை மாற்றுவது, வில்லனைக் காரால் அடித்துத் தீர்த்துவிடுவது போன்ற ஒரு சுளுவான காரியம்தான். மெளனி, சுளுவான தத்துவச்சரட்டை அனுமதிப்பதே இல்லை, பாத்திரத்தின் இயற்கையையே கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டி எழுப்புகிறார்,

கேசவன் என்ற ('மனக்கோலம்") அப்பாத்திரம், மனம் மாறுவதற்கான காரணமும் ஏற்கனவே தென்பட ஆரம்பிக்கிறது. அவன் கெளரியை, 'ஒன்றிலும் கட்டுப்படாது, தனியே எட்டி நின்று உற்றுப்பார்க்கும் பெணிமையாகக் காண்கையிலேயே விரும்புகிறான். பெண்மை, அவன் வாழ்வுக்கு லட்சியமாகும். அவளது கருவிழிகள் என்பனவெல்லாம், உடலுறவுக்கும் அப்பாற்றபட்ட அம்சங்கள். (ஆனால், உடலுறவையும் அவன் சரீரத்தின்  தவிர்க்க முடியாத இயல்பால் நாடுகிறான் என்பதுகூட, தன்னறையில் அவளை அவன் தேடுவதில் சூசகமாக காட்டப்படுகிறது) இருந்தும் இன்னொருவரின் மனைவி என்று (உடலளவில்?) கட்டுப்பட்டவளாக, அவள் அருவருப்பையே அளிக்கிறாள். எனவேதான், கெளரி தன்னை, அதுவும் தன் கற்பனையிலேயே பின்னிருந்து அணைத்ததாக உணர்கையில், அவன் அருவருப்படைந்து 'மனமாற்றம்' கொள்கிறான். இங்கு, கெளரியை நேரில் (நடப்பியல் உலகில்?) அவன் அறைக்குக் கொண்டு வந்து அவ்வருவருப்பை உண்டாக்காமல், அவன் கற்பனையில் இதை நிகழ்த்தியதற்காகவும், மெளனியை நடப்பியல்புக்குப் புறம்பானவர் என ஒருவர் வாதிக்கலாம். அவ்விதமானால், அவளைக் கொண்டுவரும் வகையாக நிகழ்ச்சிகளை ஏற்கெனவே எழுப்பியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் அதனால் அவள் உணர்வுகள் எப்படி ஆகின்றன என்று சித்தரிக்கும் பொறுப்பையும் கொணர்ந்து, சிறுகதைக்கான கூர்மையை அழிக்கநேரும். ஆனால் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி உண்மையில் மனப்போக்குகளால் ஆளப்பட்டு நிகழ்வதால், மனநிலைகளின் இயல்புக்குத் தான் முதலிடம் தரவேண்டும். அதைத் தந்து விட்ட அளவில், புற நிகழ்ச்சிகளின் உதவி அங்கு வேண்டியதில்லை. இதுதான், மெளனியின் கதைகளை மற்றையவர்களினுடைய வற்றிலிருந்து பிரித்துக்காட்டும் அம்சம். அவர் நடப்பியல்புக்குப் புறம்பானவர் அல்ல. மனப்போக்குகளின் நடப்பியல்பையே, அதுவும் பரிபூரணமாகச் சித்தரித்துவிட்டு ஒதுங்குபவர். இது அவர்சாதனை மெளனியின் கருத்தில், நடப்பியல் என்பது புற நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, அப்புறநிகழ்ச்சிகள் மனிதர்களோடு சம்பந்தப்பட்டதால், அவர்களின் மனப்போக்குகளை உரியமுறையில் சித்தரிக்கும் மளவுக்குத்தான், கதைகளும் நடப்பியலானவையாகும். புற நிகழ்ச்சிகள், நிலைமைகன் என்பவற்றைப் பற்றி, மெளனி 'கண்மூடித்தனமாக இருக்கவில்லை நிகழ்ச்சிகளையும் நிலைமைகளையும் சிக்கனப்படுத்தி இருக்கிறார் என்பதே சரி இந்தச் சிக்கனமான எல்லைக்குள்ளேயே, அவர் வாழ்க்கையின் அகண்டத்தை அங்கங்கே சிதறி விழும் வரிகள் மூலம் எழுப்பிவிடுகிறார். இதை அவரது கவித்வம் என்றே கூறவேண்டும் இந்த அம்சத்தை, 'உயிர்வாழ்ந்த ஒவ்வொரு கனமும் ஒரு புரியாத புதிராக அமைகிறது விடை கண்டால், புரிந்த நிகழ்ச்சியும் மறுகணம் இறந்ததாகிறது' என்று சிந்தனைப் பொருளாகவும் 'ஒன்றிலும் கட்டுப்படாது தனியே எட்டி நின்று உற்றுப் பார்ப்பதே, பெண்மையின் பயங்கரக்கருவிழிகள்தான்' என்று கவிப்பொருளாகவும், அவரது சுமாரான கதைகளின் வரிசையிலுள்ள ' மனக்கோலத்திலேயே காணலாம். இவற்றை உணராது, வேலைநிறுத்தம் போன்ற புற நிகழ்ச்சிகளையும் அதற்கான நிலைமைகளையும் சித்தரிக்காததுக்காக, அவர் வாழ்க்கையைப் பற்றிக் 'கண்மூடிக்" கொண்டவர் என்றதுடன், ஃபிராய்டின் வழியில் ஆராயப்படத்தக்கவர் என்றும் அவரது ரசிகர்களே கூற நேர்ந்திருக்கிறது. மேற்சொன்ன வீடுபெருக்குபவளைப்பற்றிய கதையில், கதாநாயகன் மனம்மாறுவதைக்கூடப் 'பிராய்டின் வழியில் ஆராயலாம் என்று நாம் திருப்பிச் சொல்லலாம். சுயநினைவோடு தத்துவமும் லட்சியமும் பேசுபவர்களும், 'பிராய்டிடம் அகப்படுபவர்கள்தாள்.

II
மெளனியின் இலக்கிய முன்னோடிகள் என்று, தமிழில் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லி விடமுடியாது. வசன அமைப்புகளிலிருந்து கதையம்சம் வரை, வேறொருவருடனும் அடையாளம் காட்டமுடியாத தனித்தன்மையை அவர்கலை விளக்குகிறது. “மறுமலர்ச்சி" என்ற பிரயோகத்தை (பதினாறாம் நூற்றாண்டில், ஐரோப்பாவில் பல கலைத்துறைகளிலும் அறிவுத்துறைகளிலும் புத்துயிர்காட்டி உலகையே பாதித்த 'மறுமலர்ச்சி'யை மனதில் கொண்டு, அச்சொல்லை இங்கும் பிரயோகித்தார்களாயின், அது எவ்வளவுக்கு பரிதாபகரமான தப்பர்த்தங்களைக் காண்பிக்கும்!) 1930க்களின் இறுதியில் சில தமிழ் எழுத்தாளர்கள் உச்சரித்தபடி, அத்தகைய அவர்களது லட்சியம் எதையும் ஏற்றுக்கொண்டு, இலக்கிய மணிக்கொடி பத்திரிகைக்கு மெளனி எழுதியவரல்ல என்பதை, அவருக்கு மணிக்கொடியுடன் ஏற்பட்ட தொடர்பின் விதமே காண்பிக்கிறது. அதோடு, அக்காலத்தில் இயங்கிய இலக்கிய சக்திகள்" என்று குறிப்பிடப்படுபவர்கள் எவராலும்கூட, மெளனி ஆளப்படவில்லை. இந்நிலையில், 'மணிக்கொடி கோஷ்டியுடன் அவரையும் அடையாளம் காட்டுவது எவ்வளவு முரணானது! அவ்வப்போது போய்வந்த தொடர்பைத் தவிர, மெனளிக்குச் சென்னையுடனேயே தொடர்பில்லாது இருக்க, மணிக்கொடியிலேயே நெருங்கிய தொடர்புகொண்ட புதுமைப்பித்தன்கூடத் தம்மை மணிக்கொடி கோஷ்டியினர் என்று குறிப்பிட்டால் சண்டைக்கு வந்து விடுவாராம். அப்பத்திரிகையில் எழுதியவர்களிடையே, மேதாவிலாசம் பொருந்திய எழுத்தாளர்கள் மெளனியும் புதுமைப்பித்தனும் மட்டுமே என்பது என் அபிப்ராயம். அவர்கள் அளவுக்கு மேதைகள் என்று இதுவரை, அவர்களுக்குப் பிறகும் வேறொறுவரையும் குறிப்பிட முடியாது. பாரதி இலக்கியத்தின் 'வாரிசுகள்" என்ற பிரயோகத்துக்குப் புதுமைப்பித்தன் எப்படித்தம்மை ஈடுகட்டிக்கொண்டாரோ தெரியவில்லை. இதரமணிக்கொடி - மறுமலர்ச்சிக் காரர்களோ, இந்த "பாரதி பரம்பரை" என்ற பிரயோகத்தையும் நாணயமாக்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது. ஆனால், மெளனி இத்தகைய முத்திரை எதையும் ஏற்கமறுப்பதோடு, பாரதிகலையின் 'வாரிசாக மெளனி கலை பிறக்கவில்லை என்பதையும் நாமாகவே காணமுடிகிறது.

மெளனி ஒரு பெரிய படைப்பாளி என்ற அளவில், பண்டிதத் தனமானவர் அல்ல எனச் சொல்ல வேண்டியதில்லை அவர்சொற்பிரயோகங்கள், இந்த 'பாரதி பரம்பரையில் வராததால் அவரைப் பணடிதத்தனமானவரென்பது அபத்தமானது. போவது' என்றில்லாமல் சென்றது என்று மட்டுமல்ல, நகைத்தல்" என்பது போன்ற பழைய சொற்களைக்கூட அவர் உபயோகிக்கிறார். இதன்காரணம், பாரதியின் கவிதையிலுள்ள தொனியிலிருந்து மாறுபட்ட தொனியில் அவர் சிறுகதைகள் பிறப்பதாலாகும். உதாரணமாக, பின்வரும் மெளனி வசனத்தில் உள்ள நகைத்த' - சென்றது' என்ற சொற்களை நீக்கி, ' சிரித்த, போனது' என்ற சொற்களைப் போட்டுப் படித்துப்பார்த்தால், தொனியில் மாற்றமும் கீழிறக்கமும் தென்படக்காணலாம். "அந்த இருள் வெளியில் கலகலவென நகைத்ததென ஒரு சப்தம் கேட்க, ஒளிகொண்ட ஏதோ ஒன்று உருவாகி எட்டிய வெளியில் மிதந்து சென்றது" (மனக்கோலம்) உயர்ந்த மனவெழுச்சியினர் வசப்பட்ட தொனிக்காகத்தான், இச்சொற்கள் பிரயோகிக்கப் படுகின்றன. ஆனால், மாறாட்டம்' போன்ற கீழ்தளத்து தொனியுள்ள கதைகளில், கொச்சையையும் மெளனி உரியபடி உபயோகிக்கின்றார்  எனக்காணலாம்.

III
மெளனிக்கு தமது கதைகளில் ஒவ்வொரு சொல்லுமே முக்கியமானது சொற்களின் அர்த்தத்தோடு, சிலவேளைகளில், அவற்றின் சப்த அமைப்பையும்கூட அவர் கவனத்தில் ஏற்கிறார். "எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?" (அழியாச்சுடர்) என்ற வரியில், "எவற்றின்" என்ற சொல் தவறு, "எவைகளின்" என்பதே சரி என ஒருவர் மெளனியிடம் சொன்னாராம் மௌனி, அச்சொல்லின் சப்தம் அந்த வசனத்திற்குத் தேவைப்படுகிறது என்றார் எவற்றின்' என்ற சொல்லின் அழுத்தமான சப்தமே, அவ்வரியிலுள்ள கேள்விக்கு அதிக வலிமையைக் கொடுக்கிறது எனக் காணலாம். தம் கதைகளில் பலவற்றை, பல தடவைகள் வேறு வேறு சொற்பிரயோகங்களுடன் திரும்பத்திரும்ப எழுதி, முக்கியமான இடங்கனைச் சீராக்கும் மெளனியைப்பற்றி, 'சரி - தப்பு' பார்ப்பவர்கள் கொஞ்சம் நிதானித்து தங்கள் அபிப்ராயங்களைச் சொல்வது நல்லது சொற்களைப்பற்றியே இவ்வளவு அக்கறை காட்டும் மெளனி கதைகளுக்கு இடப்பட்ட சில தலைப்புகள், சில கதைகளுக்குப் பொருந்தவில்லை, நினைவுச் சுழல்' என்பது போன்ற படிமங்கள் உவமை உருவகங்கள் செறிந்த ஆடம்பரமான பெயர்களைவிட, மாறுதல்" என்பது போன்ற பெயர்கள்தான் அவர் கதைகளுக்குப் பொருந்தும். ஏனெனில், தானாக இச்சொல் ஒரு மனக்கிளர்ச்சியையும் ஏற்படுத்திவிடாமல், கதையைப் படிக்கும்போதும் படித்து முடித்த பின்னும் ஏற்படும் உணர்வினால் நிரம்புவதற்கென, வெறுமையாகக் காத்து நிற்கிறது. "நினைவுச்சுழல்" என்பது போன்ற தலைப்புகளோ, தாமாகவே ஒரு உணர்வை எழுப்பி விடுவன கதையைப் படிக்கும் முன்பே, இவ்வுணர்வைக் கதையிலும் எதிர்பார்த்து நாம் தயாரகி விடுகிறோம். சில வேளைகளில், இப்படி எதிர்பார்த்தது நிறைவேறாமலும் போகும் மொத்தத்தில், நாம் மெளனி கதைகளில், பெயர்களைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டுத்தான் அவற்றைப் படிக்கவேண்டும் என்று சொல்லித்தோன்றுகிறது.

இதோடு, தமது கதாபாத்திரங்களின் பெயர்கள்கூட - கதையின் முக்கியமான ஓட்டத்தை மீறிச்சப்தம் போட்டு விடக்கூடாதே என்ற அக்கறையுடன்  பாத்திரங்களின் பெயர்களையும் சாமானியமானவையாகவே உபயோகிக்கிறார். சில கதைகளில், அவசியமில்லை என்று கானும்போது, பாத்திரத்துக்குப் பெயரே இராது. பெயர் இருப்பினும் இல்லாவிடினும், பெயர்கொள்ள, பாத்திரம் உருப்பெறுவதே அதிமுக்கியம் என்பதை அவர் உணர்ந்திருப்பது, இவ்விஷயத்திலே தெரியவரும்,

IV
மெளனி, பல விஷயங்களில் பிரச்சனைக் குரியவராகியிருக்கிறார். பொதுவாக, அவர் எழுதுவதே புரியவில்லை என்ற குற்றச்சாட்டு ஒன்று - தமது வசனங்கள் ஏதும் புரியவில்லையா என்று மெளனி கேட்கிறார் அல்ல, புரிய மறுக்கிற சில விஷயங்களை, அங்கங்கே எளிமையான வார்த்தைகளில் மடக்கிக் கொண்டுவரவே அவர் முயல்கிறார். அவ்விடங்களிலும் ஒரிரு வசனங்கள், அதுவும் மெளனியிடத்தே புதுப்பரிச்சயம் கொள்வோருக்குப் புரியாதிருக்கலாம் மற்றப்படி, அப்படி ஒன்றும் மெளனி வசனங்கள் புரியாதவை அல்ல அப்படியானால், தமது கதை எதுவும் புரியவில்லையா என மெளனி கேட்கிறார். அப்படியும் இல்லை. ஒரு அளவுக்கு அவையும்புரிவது போல்தான் தென்படுகின்றன. ஆனால், அதற்கும் மேல் அதில் புரிந்து கொள்வதற்கு ஏதுவும் இருக்கிறதா என்று சந்தேகிக்க அவை இடம் வைக்கின்றன. உதாரணமாக, "அழியாச் சுடர்" கதையில், ஒருவன்
ஒருத்தியிடம் அவளுக்காகத் தன்னால் எதையும் செய்யமுடியும் என்று சொலகிறான். ஒன்பது வருஷங்களின்பிள், பூரண வாலிபப் பருவத்தில் அவளை மீண்டும் சந்தித்தபோது, அவள் அவனை நோக்கி ஏதோ ஆக்ஞையிடுவதாக அவனுக்குத் தோன்றியது. அவள் என்ன செய்யச்சொன்னாள் என்பதே புரியாமல் அவன் மறைகிறான். இவ்வளவும் புரிகிறது. அவ்வளவுதான் அதில் புரிந்துகொள்ள இருப்பது என்கிறார் மெளனி இதற்குமேல், பாத்திரங்கள் ஏன் சாதாரணமானவர்களைப்போல் நடக்கவில்லை என்பது போன்ற கேள்விகளுக்கு மெளனி, பாத்திரங்களின் பைத்தியக்காரத்தனமான இயல்பை ஒத்த நடத்தையாகத்தானே அவர்களின் காரியங்கள் இருக்கும் என்கிறார். இது இடக்கான பதிலே அல்ல. உண்மையில், பாத்திரங்களே சாதாரண மனிதர்களாகவன்றி, மனக்கோளாறு பிடித்தவர்களாகவோ, குடிப்பவர்களாகவோ, உந்நதமானவர்களாகவோதான் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.


மெளனியின் கதைகள், படிக்கும்போதே உயர்வகையான மனக் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இக்கிளர்ச்சிக்கான காரணங்களைக் கதைகளில் ஆராயும்போது, அவைகள் இப்படி அசாதாரணமான பாத்திரங்களைச் சுற்றி அமைவதாக காண நேர்கிறது என்பது, மேற்படி கூற்றுக்களுக்குக் காரணமாகலாம் ஆனால் திரும்பத்திரும்பப் படிக்கிறபோது, இந்த வெளிக் காரணங்களைப் பற்றிய சிரமம் பின்தங்கி மங்கிவிடுகிறது. ஒரு உயர்ந்த மனவெழுச்சியை உண்டாக்கிவிட்டுப் பாத்திரங்கள் மங்கி மறைந்துவிடவே தோன்றின என்ற உணர்வினால் இது நேரலாம் அதற்கப்புறம் பாது படித்தாலும் இந்நிலையே நீடிக்கக் காண்கின்றோம் உண்மையில், மெளனி கதைகள் திரும்பத்திரும்பப்படித்து அநுபவிக்கத்தக்கவை.

அசாதாரணமான பாத்திரங்களாகச் சிருஷ்டிக்கப்பட்ட பின், அவர்களது நடத்தையே அவர்களால் நிகழ்த்தப்படும் சம்பவங்களோகூட, அவர்களைப் பொறுத்த அளவில் நடப்பியல்புக்கு ஒத்தவைதான். குருவி 'ஏன் எங்கே" என்று கத்துவதும் கல்யாளி எழுந்து நின்று சுத்தாடுவதும், கதாபாத்திரங்களைப் பொறுத்த அளவில்தான். வேறு ஆசிரியர்கள் ஆடம்பரமான பெயர்கள், வார்த்தைகள், சிக்கலான நிகழ்ச்சிகள், தத்துவச் சுவடு, அரைவேக்காட்டு நனவோடை யுக்தி'களால் சாதிக்க முடியாத ஒரு தரிசனத்தை, மெளனி இந்த வகையாக அசாதாரணமான பாத்திர அமைப்பு என்கிற ஒரே தந்திரத்தின் மூலம், பிரமிக்கத்தக்க விதத்தில் சாதிக்கிறார் என்பதே, அவரது பாத்திரங்களின் அத்தன்மைக்குப்போதிய சமாதானமாகும்.

மெளனி தமது கதைகளில், பெரும்பாலும் நிகழ்ச்சிகளினாலன்றி கவித்துவத்தினாலேயே பாத்திரங்களிடையே உறவு போன்றவற்றைக் கொண்டு வருகிறார் பிரக்ஞை வெளியில்" கதையிலே, கதாநாயகன் காரில் மோதுண்டு வீழ்வதுபோன்ற புற நிகழ்ச்சிகள் வரும்போது, அவை மங்கலாக்கப்பட்டு பின்னொதுக்கப்படுகின்றன. மனக்கோலம்' என்ற கதையில், கேசவனுக்கும் கெளரிக்கும் இடையே உள்ளக் கவர்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை மெளனி தேடவில்லை. கவித்துவம் நிரம்பிய மெளனியின் எழுத்தோட்டத்திலேயே இந்தப் பிணைப்பு அற்புதமாக, உதறமுடியாமல் நேர்ந்துவிடுகிறது அவள் கோலம் வரைவது, தன் மனம் சித்திரம் கொள்ள என்று கேசவன் கற்பிப்பதிலும், அவள் 'முகமே விழிகளென' இவனைப்பார்ப்பதிலுமே, மெளனி அவர்களிடையே வேண்டிய பிணைப்பைக் கொண்டுவந்துவிடுகிறார். 'பிரக்ஞை வெளியில்" கதையில், சேகரும் சுசீலாவும் ஒருவரைப்பற்றி மற்றவர் பேசிக்கொண்டிருந்து, கிட்ட நெருங்கியதும் பேச்சை நிறுத்தி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதில், தாம் பேசியது மற்றவருக்குக் கேட்டிருக்குமோ என்ற அழுத்தத்தினால் ஏற்படும் பிணைப்பை வைத்தே, அறிமுகமானவர்கள் போன்று பின்னடி ஹோட்டலில் சந்தித்ததும் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த அளவிற்கு மெளனி கதைகளில், நிகழ்ச்சிகளின் இடத்தைக் கவித்துவமும் மனோதத்துவப்போக்குகளுமே நிரப்புகின்றன.

V
இக்கதைகளில் உயர்ந்தவை இவை என்று கட்டவோ, கதைகளை அலசிப்பார்க்கவோ நான் முயலவில்லை. உள்ளர்த்தம் பார்த்து பிச்சுப்பிடுங்குவது பரம்பரையாகத் தமிழ் இலக்கிய ரஷனையில் ஊறிவிட்ட ஒன்று போலும் ஒரு படைப்பு ஏதும் உள்ளர்த்தம் கொண்டிருக்கவேணும் என்றும் அதுதாள் ஆழமான எழுத்தாகும் என்றும் கருதிப் பழகிவிட்டோம். இதனால், மௌனியின் கதைகளைப்போல், படிக்கும் போதே உயர்ந்த அநுபவங்களை பண்பாக்கக்கூடிய படைப்புகளிையிட பிச்சுப் பிடுங்கி உள்ளார்த்தம் தேடி, அதன் பின்பே "ஆழமான" எழுத்து என்று கருதத்தக்கதாக இலக்கியம் பிரமை நம்மிடையே  என்ற  மாறியிருக்கிறது.

இலக்கியம், படிக்கும்போதே அனுபவிக்கத்தான். மௌனி கதைகள் இதற்குத் தகுந்த உதாரணங்கள் என்பதோடு, அவர்கதைகளில் கண் அர்த்தம், தத்துவச் சரடு ஏதும் கிடையாது அங்கங்கே தெளிவுபட்டு, எட்டி உயர்ந்து செல்லும் சிந்தனைப் பொருள்கள், வேகம் கொண்டவசனங்களில் வருகின்றன. இதுதான் அவரைப்பொறுத்த அளவில் ஆழமானது". அவ்விடங்களில் மெளனியின் வசனம் சிக்கலாவதும் உண்டு ஒன்றுக்கு மேற்பட்ட வசனங்களில் சொல்வதால் பொருளின் வேகம் குறைந்து விடும் எனக்கருதி, சொல்லவந்ததை ஒரு தரிசனமாகக் கண்ட கனத்தின் வேகத்தோடு, ஒரே வசனத்தில் சொல்ல முயன்றவைதான் அவை. உதாரணமாக, "இரவின் அந்தகார இருளைக்கான, ஒரு சிறு ஒளிப்பொறி போன்றாக முடியுமா இப்பகல் தீவட்டிகளின் ஒளிகாட்ட முயலுதல்கள்?" என்று 'மனக்கோட்டை'யில் வரும் வசனம். இதுவார்த்தை ஜாலம் அல்ல. வார்த்தை ஜாலம் என்பது பொருட்கிடை இல்லாத அபத்த வசனத்தைத்தான் குறிக்கும். மாறாக, இங்கே இது போன்ற வசனங்கள், பொருட்கிடையோடு தரிசன உணர்வும் செறிந்தவை.

தத்துவம், லட்சியம் போன்ற, கதைக்கு அப்பாற்பட்ட எதன் உதவியும் இன்றியே, மெளனியின் கதை வாசகர் மனதைச் சிறகு பெற்றதுபோல் உயர்வடைய வைக்கிறது. ஒரு காவிய இன்பத்தை அளிக்கிறது. இவ்வதுபவமே, ஆழமானதென்று சொல்லத் தக்க இலக்கிய அநுபவம்
கதையம்சத்தை ஆழமாக்குவதாலோ, அதன் உள்ளர்த்தத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும்" சாமத்தியமும் கண்டு பிடித்தோம்" என்ற கர்வமும்தான் வாசகரிடையே வளரும். இது, பண்டிதர்களிடமிருந்து இன்று சில விமர்சகர்கள் வரை பரவி, தமிழ் ரஸனையைப் பிடித்த ஒரு வியாதியாகி விட்டது. இதை மாற்றியமைத்து, மெளனியின் கதைகள் போன்ற படைப்புகளை உணரத்தக்க விதமாக ரஸனையைப் பணிபடுத்துவதுதான் நாம் செய்ய இருப்பது தமிழில் ஆழமான கதையம்சத்தினர் துணையின்றி, சாதாரணமான கதைகளிலேயே ஒரு காவிய உணர்வை, மௌனி மட்டும்தான் இன்று தருகிறார். அவரது சொற்களால் தீண்டப்பட்டதும், இயற்கைப் பொருள்களிலிருந்து, சங்கீதம், பெண்மை என்பனவரை, தம்மை மீறி வியாபகம் பெறுகின்றன. படிக்கப்படிக்க அலுக்காத உணர்வோட்டமும் இலக்கிய நயமும், இதனாலேயே மெளனிகதையில் பரந்து கிடைக்கின்றன.
இந்த அளவு உந்நதமான காவியத்தன்மை, உலக இலக்கியத்திலும் அபூர்வமாகவே காணப்படுகிறது. தமிழுக்கு, இந்த வரண்ட வேளையில் இந்தப் படைப்புகள் கிடைத்தது அதிர்ஷ்டம்தான். இருந்தும், இவை தமிழுக்கு மட்டும், அதுவும் இந்த வேளைக்கு மட்டும் உரியனவல்ல; சிலவற்றின் ஜோதி, காலத்தால் குன்றாது, தேச வரம்புகளையும் மீற ஜொலிப்பது என்று தோன்றுகிறது

முன்னுரை, மௌனி கதைகள், மௌனி, சிதம்பரம் 1967. திருக்கோணமலை, மே 1967)

சிறுகதையின் திருமூலர் என அழைக்கப்படும் மௌனியின் சிறுகதைகளுக்கு பிரமிள் தனது 28வது வயதில் எழுதிய முன்னுரை இது.


மகுடம் : பிரமிள் சிறப்பிதழ் 2015
நன்றி :rrn.rrk.rrn@gmail.com

Mar 15, 2017

மௌனியும் எம். வி.வி.யும் - எம்.வி வெங்கட்ராம்

என் இலக்கிய நண்பர்கள் (எம்.வி வெங்கட்ராம்) - நூலிலிருந்து


விளக்கேற்றி வெகுநேரமாயிற்று. மணி ஏழரை எட்டுக்குள் இருக்கும். வீட்டில் மின்சாரம் வராத காலம்; அகல் விளக்குகள், பவர்லைட், அரிக்கேன் லைட், சிம்னி விளக்குகளை ஏற்றி வெளிச்சத்தை வரவேற்போம்: ஆயினும் வெளிச்சம் வீட்டின் சில பகுதிகளுக்குப் போதாது.

வீட்டின் நடுப்பகுதியில் தரையில் உட்கார்ந்தபடி ஏதோ படித்துக் கொண்டு இருந்தேன். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் நான் இரண்டாம் ஆண்டு மாணவன். எங்கள் காலத்தில், எஸ். எஸ். எல். சி.யில் தேறியதும் பட்டப்படிப்புக்கு நாலு ஆண்டுகள் ஆகும். இரண்டு ஆண்டுகள் .... (Intermediate) , பட்டப்படிப்பு இரண்டு ஆண்டுகள். கல்லூரியில் சேர்ந்த ஆண்டிலேயே என் சிறுகதைகள் மணிக்கொடியில் வெளி வரத் தொடங்கின. அதனால், கல்லூரி
பாடப்புத்தகங் களைவிட அதிகமாய் அப்போதைய பத்திரிகைகள், ஆங்கிலச் சிறுகதைகள், நாவல்களைப் படிப்பது என் வழக்கம், 1937ஆம் வருடத்தில் நடந்ததைக் கூறுகிறேன்.

எங்கள் தெரு நண்பன் ஒருவன் என் படிப்பில் குறுக்கிட்டான். டேய் வெங்கட்ராம், உன்னைப் பார்க்க என் கணித ஆசிரியர் வருகிறார்...'
கணித ஆசிரியர் என்னை எதற்குப் பார்க்கவேண்டும்?' என்றபடி நான் தலை நிமிர்ந்தபோது, நண்ப னுக்குப் பின்னால் ஒர் இளைஞர் வருவதைக் கண் ேடன்

அவசரமாக எழுந்து, வாருங்கள் சார்!’ என்று கைகுவித்தேன்.
நீதானே வெங்கட்ராம்? நான் எதிர்பார்த்ததைவிட சின்ன பையனாக இருக்கிறாயே! என்னைத் தெரிய வில்லையா? நான் மெளனி...... o
அவ்வளவுதான்; அந்தப் பெயர் காதில் விழுந்ததும் என் கைகால்கள் நடுங்கத் தொடங்கின. -

உட்காருங்கள் சார்!’ என்று சொல்லவே குரல் தடுமாறியது. எங்கள் வீட்டில் நாற்காலி-மேஜை என்கிற ஆடம்பரம் கிடையாது. பட்டுசேலை வியாபாரம் என் தந்தையாருக்கு; தரையில் நீளமான கடைய பாய் விரித்திருக்கும்; யார் வந்தாலும் அதன்மேல்தான் அம்ர வேண்டும். மெளனி உட்கார்ந்ததும் என் நண்ப்ன் அவரிடம் விடைபெற்றுப் போய் விட்டான். அவருக்கு முன்னால் உட்காரத் தயங்கிய என்னை அவர் வற்புறுத்தி உட்கார வைத்தார்.
சமீபத்தில்தான் வயது கணக்குப் பார்த்தேன். அப்போது எனக்குப் பதினேழு வயது; அவருக்கு முப்பது. பதின்மூன்று வருட இடைவெளி எங்களுக்குள் எவ்வளவு பெரிய வேற்றுமையைக் கற்பித்து விட்டது! ஒல்லியாக, சிவப்பாய் பையன் எண்ணும்படியாகவே என் உடல் வளர்ச்சி இருந்தது; அதற்கு ஒரு கம்பீரம் கொடுப்பதற்காக நேவிகட்' என்று அந்தக் காலத்தில் பிரபலமான துளிர் மீசை வைத்திருந்தேன். என் தோற்றம் பற்றி நான் மிகுந்த அக்கறை காட்டுகிறவன்; கிராப்பை விதவிதமாக வாரிக் கொள்வேன். அல்லது யாராவது வாரி விடுவார்கள். பெரும்பாலும் அரைக்கை சட்டையே அணிவேன்; ரோல்டு கோல்டு பொத்தான்கள் தான் போடுவேன். சட்டையின் ஒரு காலரில் ரோல்டு கோல்டு பின் ஒன்று வழியும். என்னுடைய இந்த

கவனம் எல்லாம் என்னை ஒரு மாணவனாகக் காட்டிக் கொடுத்தது.
அவருடைய தோற்றம் எனக்கு நேர்மாறு. அதுபற்றி அவர் கவனம் கொண்டவராய்த் தோன்றவில்லை. அவரும் ஒல்லி-கறுத்த கிராப், இடது பக்கம் வகிடு எடுத்து சீவப் பெற்றாலும், அவர் தன் கையாலேயே ஒதுக்கி விட்டாற்போல் இருந்தது. நீண்ட மூக்கும், கரிய கண்களும், சதையில் செதுக்குண்ட கிரேக்கச் சிலை போல. வெள்ளை அரைக்கைச் சட்டை, அதற்குமேல் கதர் துண்டு போர்த்திருந்தார். அவருடைய உருவம் என் மனத்தில் பதிவு பெற, எங்கள் வீட்டில் போதுமான வெளிச்சம் இருந்தது. ..

மணிக்கொடியில் கதை எழுதியவர்கள் எல்லோரிடமும் எனக்கு ஆழ்ந்த பக்தி உண்டு, அரை நூற்றர்ண் டுக்கு முன்னால், பிச்சமூர்த்தியும், கு. ப. ரா.வும் எனக்கு மணிக்கொடியில் இடம் கண்டவர்கள். புதுமைப்பித்தன், மெளனி, ஆசிரியர் பி. எஸ். ராமையர், உதவி ஆசிரியர் இ. ராமச்சந்திரன், சிதம்பர சுப்பிரமணியன், சிட்டி ஆகியோரின் பெயர்களோடு என் பெயரும் சேர்ந்து வருவதை நான் பெரும்பேறாக மதித்தவன். மணிக்கொடி இதழ் ஒவ்வொன்றையும் பல தடவை படிப்பேன். இந்த இலக்கியப் படைப்பாளிகள் அனைவருமே வானத்திலிருந்து வந்த தேவப்பிறவிகளாக எனக்குத் தோன்றி னார்கள். இவர்களிலும் புதுமைப்பித்தன், மெளனி இருவரின் படைப்புகளைச் சிறப்பாகப் போற்றினேன்.

மெளனியின் முதல் கதை மணிக்கொடியில் வந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு என் முதல் கதை வந்தது. தொடர்ந்து அவருடைய சிறுகதைகளைப் போலவே என் கதைகளும் வெளிவந்தன. நானும் வாசகர்களின் கவனத்தைப் பெற்றிருந்தேன். முதல் கதைக்குப் பிறகு, ந. பி. யிடமோ, கு. ப. ரா. இடமோ நான் என் கதை,எதனையும் காட்டியதில்லை. என் சங்கோச குணம் காரணமாக, அவர்களை கண்டாலே ஒதுங்கி விடுவேன். மெளனியும் கும்பகோணத்துக்காரர் என்பதையும், அவரும் ந. பி.யும், கு. ப. ரா.வும் அடிக்கடி சந்தித்துப் பேசுவார்கள் என்பதையும் அவர்களுடைய நண்பரான என் ஹிந்தி ஆசிரியர் சொல்லியிருந்தார். ஆனால் நானாகச் சென்று அவர்களுடன் பேச, எனக்குத்’ தைரியம் இல்லை. இன்று மெளனியே என்னைத் தேடி வந்திருக்கிறார்; நான் அவருக்கு முன்னால் உட்கார்ந்திருக் கிறேன் என்பதே எனக்கு அதிசயமாக இருந்தது.

! நின்றய எழுதுகிறாயா? '....

இல்லை சார். படிப்பு நேரத்துக்குப் பிறகு...எழுதுவேன். என்று பொய் சொன்னேன். உங்கள் காதல் சாலையை இருபது முப்பது தடவை படித்தேன்.....உங்களுடைய ஸ்டுடன் ட் எப்படி சார்?' என்று என் தெரு நண்பனைப் பற்றிக் கேட்டேன்.

ஒன்றும் இல்லாத இடத்தில் சாமான்களை வைப்பது. சுலபம்; ஆனால் தேவையில்லாத சாமான்களும் குப்பை கூளமும் நிறைந்த இடத்தில் சரியான சாமான்களை எப்படி வைப்பது? உன் சினேகிதன் நிறைய தெரிந்து வைத்திருக்கிறான்-தப்பு தப்பாக! முதலில் அதை எல்லாம் கூட்டித் தள்ளி சுத்தம் செய்ய வேண்டியிருக் கிறது. பிறகுதான் புதிதாய் சொல்லித்தர வேண்டி இருக் கிறது. ஆக, இரண்டு வேலை எனக்கு!

என் நண்பனைப் பற்றிய இந்த வருணனையைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது.

"சரியானது எதையும் அவன் மூளை ஏற்க மறுக்கிறது. அவனோடு இது வேறே கஷ்டம். மேத்ஸ் மட்டும் வரவில்லை என்று என்னை டியூடராக வைத்தார்கள்.

ஆனால் அவன் எந்த சப்ஜெக்டில் கெட்டிக்காரன் என்று அவனுக்கே தெரியவில்லை!"

என் நண்பன் பணக்கார வீட்டுப் பிள்ளை; அவனைப்பற்றி மெளனி ஜோக் அடிப்பதைக் கேட்க எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
'உங்களுக்கு எப்படி சார் இவன் பழக்கம்?" -*

'எனக்குப் பழக்கம் இல்லை. ஒரு சிநேகிதன் சிபாரிசு செய்தான்; ஒப்புக்கொண்டேன். எனக்கும் பொழுது போகுமே என்று நினைத்தேன். நிறைய படிக்கிற வழக்கம் இருக்கிறதா உனக்கு: அதென்ன புத்தகம்?" என்றபடி நான் படித்துக்கொண்டிருந்த த கிரேட் ரஷ்ஷியன் ஷார்ட் ஸ்டோரீஸ்' என்ற புத்தகத்தைக் கையில் எடுத்தார்; அதைப்பற்றி ஏதோ கூறினார்; எனக்குப் புரியவில்லை.

ஒரு பெரிய ஆச்சரியத்துக்கு எதிரில் அமர்ந்திருப்பது போன்ற பரவசத்தில் நான் சிக்கியிருந்தேன். எனக்கு அவருடைய கதைகளில் ஈடுபாடு இருந்தது. ஆனால், அக்கதைகளின் சிறப்பு என்ன என்று விண்டுநோக்கும் பக்குவம் எனக்கு இல்லை. மணிக்கொடி ஆசிரியர் பி. எஸ். ராமையா முதல் அத்தியாயம்' என்ற தலைப்பில் ஒவ்வொரு இதழிலும் எழுதியுள்ள ஆசிரியர்களைப் பற்றியும் கதைகளைப் பற்றியும் சிலபல வரிகள் எழுதுவது வழக்கம். மெளனியின் முதல் கதையைப் பெரிதும் வியந்து பாராட்டி எழுதினார். காதல்சாலை' என்ற கதையைப்போற்றி ராமையா ஒரு முழுப்பக்கமே எழுதியிருந்தார். அவற்றை எல்லாம் நான் கவனமாய்ப் படிப்பேன். என் கதைகள் வெளிவந்துகொண்டிருந்தா லும் சிறுகதையின் வடிவம் உள்ளடக்கம், உத்தி முதலியவை பற்றி அப்போதுதான் நான் சிறிதளவு தெரிந்துகொண்டிருந்தேன். ஆகையால், மெளனியின்


கருத்துகளைக் கேட்டுக்கொள்ளத்தான் என்னால் முடிந்தது.

மெளனி வாரத்தில் 3, 4 நாள் எங்கள் தெருவுக்கு வருவார்; டியூஷன் முடிந்த பிறகு வாரம் ஒருமுறையாவது என்னைப்பார்க்க வருவார். அவர் வருவதையும், பேசுவதையும் நான் மிகவும் விரும்பினேன்; வேண்டி னேன். ஆனால், அவருடைய கருத்துகள் என்னைத் திகைப்புறச் செய்தன.

வெறும் சென்டிமென்ட்ஸ் வைத்துக் கவிதை எழுதும் (பாரதியார் ஒரு கவிஞனா?” என்று அவர் பலமுறை சொன்னதை வியப்புடன் கேட்பேன். ஒரு சந்திப்பின்போது, நேற்று ராத்திரி பிச்சமூர்த்தி, ராஜகோபாலனோடு பேசிக்கொண்டிருந்தேன். இவன்கள் எல்லாம் என்ன கதைகள் எழுதுகிறான்கள். சரியான அப்ரோச்சே இல்லை' என்று பரிகாசம் செய்தார். அவருடைய பல சந்திப்புகளால், புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு. ப. ரா., சிதம்பர சுப்புரமணியன்,
சிட்டி, ராமையா முதலிய மணிக்கொடி எழுத்தாளர் யாரையும் அவர் எழுத்தாளராக ஏற்றதில்லை என்பது தெரிந்தது. நான் மிகவும் மதித்த இலக்கியப் படைப்பாளிகளை எல்லாம் அவர் பீடத்திலிருந்து கீழே தள்ளிவிடுவதை நான் வேதனையோடு பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஆர். எஸ். மணி என்பது மெளனியின் இயற்பெயர். மெளனி என்னும் புனைப்பெயரை அவருக்கு சூட்டியவர் ஆசிரியர் பி. எஸ். ராமையா. புனைப்பெயரைப் பொய்யாக்கி நிறையப்பேசுகிற சுபாவம் அவருக்கு. அரை நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது; மெளனி பேசியதெல்லாம் எனக்கு நினைவு இல்லை. நினைவில் உள்ளவற்றை மட்டும் உண்மைக்கு மாறுபடாமல் இங்கே பதிவு செய்கிறேன்.


ஒருமுறை அவரைக் கேட்டேன். நீங்கள் எப்படி கதை எழுதுகிறீர்கள்?"
'மனத்தில் தோன்றுகிறவை, கற்பனையானவை, திடீரென்று எழும் கருத்துகள்-எல்லாம் நான் ஒரு நோட்டில் குறித்துவைக்கிறேன். எழுதும்போது அதில் சில எனக்கு உபயோகப்படும். வீட்டுக்கு வாயேன், காட்டுகிறேன்' என்றார்.

நான் கல்லூரிக்குப் போகும் வழியில்தான் அவர் வசித்த காமாட்சி ஜோசியர் தெரு இருக்கிறது. மறுநாள் மாலையே அவருடைய வீட்டுக்குப் போனேன். பெரிய, இரட்டை மாடி வீடு. வாசலைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், எதிரெதிரான இரண்டு நாற்காலிகளுக்கு இடையில் ஒரு சிறிய மேஜை அவர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும், வா’ப்பா, காலேஜ் போகவில்லையா? என்றார்.
-- கடைசி பீரியட் லெக்சரர் வரவில்லை. வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டார்கள். நீங்கள் வரச்சொன்னர் களே......

உள்ளே சென்று உடனே திரும்பியவர், மேஜை மீது ஒரு கனமான புத்தகத்தை வைத்தார்: கதைக்கான குறிப்புகளை இதில்தான் எழுதிவைக்கிறேன்.'

ஐந்தாறு கொயர் பருமனிருந்த அந்த நோட்டை அவரே தயாரித்துக் கொண்டிருக்க வேண்டும். நோட்டைப் புரட்டினேன். எந்த பக்கத்திலும் நேர்வரிசை யாக எழுதப்படவில்லை. குறுக்கும் நெடுக்குமாகப் பாதி நோட்டுக்கு மேல் கிறுக்கியிருந்தார். கஷ்டப்பட்டுத்தான் அவருடைய கையெழுத்தைப் படிக்க முடிந்தது. பல வரிகள் படித்தேன். எதுவும் இப்போது நினைவில்லை.

இது இரண்டாவது நோட்டு என்றார் மெளனி.


அவரைப்போலவே நானும் இப்படி குறிப்புகள் எழுதப்பழகவேண்டும் என்று மனத்தில் ஒரு தீர்மானம் செய்தேன்; ஆனால், அதை ஒருநாளும் நான் செயல் படுத்தவில்லை. எங்கள் வீட்டுக்கு அவர் வந்தாலும் சரி, அவர் வீட்டுக்கு நான் போனாலும் சரி, பேசியவர் அவர்: கேட்டுக்கொண்டவன் நான்.

sweet seventeen - (G)anfu 16Gaurop)3(51% thirsty thirty - (தாகம்ான் முப்பது)க்கும் இடையில் நிகழ்ந்த இந்தச் சந்திப்புகளால் எனக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? என் எழுத்துப்பித்தம் வலுத்தது. மெளனி என்னும் ಹಾಕಿ சிலை மேலும் அழகுற்றது என் மனத்தில். i
பதினோரு வருடங்களுக்குப் பிறகு நான் தேனி மாத இதழைத் தொடங்கினேன். மெளனியைக் கட்டாயம் எழுதவைக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு. அவர் கும்பகோணம் வீட்டை விற்றுவிட்டு சிதம்பரத்தில் அரிசி மில் வைத்திருந்தார். அவருக்கும், க. நா. சு. வுக்கும் கடிதம் எழுதியதோடு, எனக்குத் துணையாக உத்விய கரிச்சான்குஞ்சு"வையும் அவர்களை நேரில் கண்டு தேனீக்கு எழுதும்படி வற்புறுத்தினேன். இருவருமே தேனி ஆபீஸுக்கு-எங்கள் வீடுதான் ஆபீஸ்-அடிக்கடி வரலானார்கள்; ஸ்டைல்தான் வித்தியாசம் க. நா. சு. ஆடம்பரமாக வந்து இரண்டொரு நாள் தங்குவார். மெளனி திடீரென்று முற்பகலில் வருவார்; அவசரமாகத் திரும்ப வேண்டும் என்று திண்ணையிலேயே புறப்படத் தயார் நிலையில் உட்காருவார்; இரண்டு மூன்று மணி நேரம் பேசிவிட்டு அவசரமாய்த் கிளம்புவார். இரண்டொரு முறைதான் அவர் ஆபீசுக்குள்ளே வந்ததாய் ஞாபகம். மெளனியும், க. நா. சு. வும் ஏக காலத்தில் தேனி ஆபீசுக்கு வந்தார்களா என்பது எனக்கு நினைவில்லை.


மணிக்கொடி நின்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. கு. ப. ரா. கிராம ஊழியனுக்கு ஆசிரியராக இருந்தார்; ஆனால், அவர் மெளனி'யின் எழுத்துகளைத் தேடிப் போகவில்லை. கவிஞர் சாலிவாகனனின் (வி. ரா. ராஜகோபாலன்) ஆசிரியராக இருந்த கலாமோகினி' யில் கு. ப. ரா., நான், க. நா. சு., தி. ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, சிட்டி முதலியவர்கள் எழுதினார்கள். க. நா. ஏனோ மெளனியை எழுதத் துண்டவில்லை. 1 லிருந்து 1948 வரை மெளனி ஒன்றும் எழுதியதாகத் தெரியவில்லை. இந்தக் காலகட்டத்தில்தான் புதுமைப் பித்தன் ஒரு ரேடியோ பேச்சுக்கு இடையில் மெளனியை சிறுகதையின் திருமூலர், சொல்லில் அடைபட மறுக்கும் கருத்துகளைச் சொல்லாக்கியவர்' என்று வரையறை இன்றிப் புகழ்ந்தார். புதுமைப்பித்தனின் இந்தப் போற்றி உரையைக்கூட க. நா. சு. வும் மற்றும் சிலரும் உடனே பற்றிக்கொள்ளவில்லை; பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர்கள் புதுமைப்பித்தனின் கருத்தைப் பின்பற்றி மெளனியைக் கண்டுகொண்டார்கள் என்று நான் கூறினால் தவறாகுமா? க. நா. சு. ஆசிரியராக இருந்த சந்திரோதயம், சூறாவளி-இதழ்களில் மெளனி எழுதவில்லை.

மெளனியின் சிறுகதைகள் தேனி'யை அலங்கரிக்க வேண்டும் என்பது என் விருப்பம்; அவருடைய இரண்டு சிறுகதைகள் தேனியில் வந்தபோதும் க. நா. சு. அவைபற்றி போற்றியோ துாற்றியோ எங்களிடம் அதிகமாகப் பேசியதில்லை. மணிக்கொடிக்குப் பிந்தைய பத்து ஆண்டுகளில் நான் ஓரளவு இலக்கியப் பயிற்சியும் வாழ்வியல் அறிவும் பெற்றுவிட்டேன். 17, 18 வயதுகளில் என்னிடம் இருந்த மாணவ மனோபாவம் முற்றிலும் அகன்றுவிட்டது. மணிக்கொடியில் எழுதியவர்களின் இலக்கியப் பங்களிப்பின் பெருமையை, கல்லூரிப் பருவத்தின் கலங்கல் இல்லாத தெளிவுடன் இப்போது உணரத் தொடங்கியிருந்தேன்.


தேனி முதல் இதழுக்கு மெளனியின் சிறுகதை வரவில்லை. இதழ் வெளியான சில நாட்களுக்குள் அவரே எங்கள் வீட்டுக்கு வந்தார். முதல் இதழ் பூராவையும் அவர் படித்ததாய்க் கூறினார். அந்த இதழில் எழுதிய எழுத்தாளர் ஒவ்வொருவரையும் மற்றோர் எழுத்தாளர் அறிமுகப்படுத்தி இருந்தார். இது ஒரு நல்ல அம்சம் என்று கரிச்சான்குஞ்சு, ஜானகிராமன், நான்கருதினோம்.

மெளனிக்கு இந்தப்பகுதி பிடிக்கவில்லை: ஒருவரை ஒருவர் முகஸ்துதி செய்துகொள்ளக்கூடாது' என்றார்:

'இது முகஸ்துதி இல்ல்ை, சக எழுத்தாளரிடம் நாம் காணும் குறைகளையும் சுட்டிக் காட்டியிருக்கிறோம். என்றதோடு அந்தப் பகுதிகளையும் காட்டினேன். அவர் திருப்தி அடையவில்லை.
அந்த இதழில் ராஜகுடும்பம்' என்கிற என் சிறுகதை வந்திருந்தது. தேனியை மிகவும் பாராட்டி வரவேற்ற ஹிந்து நாளேடு என் கதைகளையும் புகழ்ந்து சில வரிகள் எழுதி இருந்தது. -
'ஹிண்டுவில் தேனி விமரிசனம் படித்தேன், உன் கதையை மெச்சி இருக்கிறான். அந்தக் கதையில் அப்படிப் பேச என்ன இருக்கிறது? தப்புத் தப்பாக எழுதியிருக் கிறதே! என்று அவர் கூறியது எனக்குப் புரியவில்லை.

‘என்ன தப்பு சார்?' அக்கதைப் பற்றி எனக்கு ஒரு நிறைவு இருந்தது, அதில் என்ன தப்பு கண்டார் என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
'கதையில் ராஜாவும் வரவில்லை, ராணியும் வர வில்லை. ராஜ குடும்பம் என்று எப்படி பெயர் வைக்க லாம்?-அவர் கூறியதை நான் ஜோக் அடிக்கிறார்’ என்று எண்ணிச் சிரித்தேன்.


'இப்படி சம்பந்தம் இல்லாமல் பெயர் வைப்பது தப்பு'-என்று மறுபடியும் அழுத்திப் பேசின. பிறகுதான் அவர் உண்மையாகவே கண்டிக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன்.

கதைநாயகனுக்கு ராஜா என்று பெயர். அவன் தன் மனைவியை ராணி என்று பிரியமாக அழைக்கிறான். ஒரே குழந்தையை இளவரசு என்கிறார்கள், பாகத்தால் பிணைந்த இந்த அழகான குடும்பத்தை ராஜகுடும்பம் என்கிறேன்; அதிலே தப்பு என்ன?" -- ?----

‘ராஜா, ராணி வராத கதைக்கு ராஜகுடும்பம் என்று நீ பெயர்:இட்டது தப்புதான் என்று அவர் முடிவு கட்டி பேசினார்.

; : அதிே கதையில் என் கதாநாயகன் ஈரானி ஹோட்ட லுக்குச் சென்று பிரியாணி சாப்பிடுகிறான். . .

- அந்த வார்த்தையைக் கேட்டால்ே எனக்குக் குமட்டு கிறது. நீ எழுதியிருக்கக் கூடாது!"

-\ . அவருட்ைய தர்க்க நியாயத்தின் அடியொற்றி நான், அவன் , அசைவப்பயல் சார் என்ன என்னவோ சாப்பிட்டுத் தொலைக்கிறான், நான் என்ன செய்ய முடியும்!" என்றேன்.

நீ அந்த வார்த்தையை எழுதி இருக்க வேண்டாம்' என்றார் முடிவாக. - -
அவருடைய சைவ உணவுப் பற்று-என் கதையைப் புதுமையாக ஒரு விமரிசனத்துக்கு உள்படுத்தியது. சாதி, மதம், கட்சி பார்த்து விமரிசனம் செய்கிறார்கள் தமிழ் நாட்டில் சிலர், உணவுமுறையையும் பார்ப்பது புது முறை விமரிசனமாக இருக்குமே! .

தேனியில் நான் எழுதிய முதல் கதையைத் தூளாக்கி விடுவது என்னும் உறுதியோடு மெளனி அன்று வந்திருந் தாக் போலும்; அடுத்து, கதாசிரியனான என்னைப்பற்றி


தி. ஜானகிராமன் எழுதியிருந்ததை மெளனி கண்டிக்கத் தொடங்கினார். -
மகாபாரதத்தில் வெறும் எலும்புக்கூடுகள் என ஜீவனற்றுக் கிடந்த சில பெண் பாத்திரங்களை உயிரும் உணர்வும் உள்ள அழகிகளாக நான் உருவாக்கினேன் என்பதுபோல் தி. ஜா எழுதியிருந்தார். -
---
"மகாபாரதத்திலிருந்து எலும்புக்கூடுகள் தோண்டி எடுப்பதாவது சொல்லவே அருவருப்பாக இருக்கிறது:மெளனியின் இந்த விமரிசனத்தை நான் கட்சியர்டாமல் ஒப்புக்கொண்டேன். மாபெரும் இதிகாசத்தைப் படைத்த வியாச முனிவர் எலும்புக்கூடுகளையா தம் நூலில் போட்டிருப்பார்? அப்படி எழுதியதும், அதை நான் வெளியிட்டதும் அநாசாரம், அநாகரிகம் என்பதை மெளனி சுட்டிக்காட்டிய பிறகே நானும், தி. ஜா வும் உணர்ந்தோம். -
இந்த உரையாடல்கள் ஒருபுறம் இருக்க, தேனிக்கு கதை எழுதித் தருமாறு ஓயாமல் அதைக் கேட்டுக்கொண் டிருந்தேன். அந்த பெரும் கலைஞன்ைத் தேனி'யில் காணவேண்டும் என்று எனக்கு ஏக்கமாக இருந்தது.

மெளனியின் முதல் கதையை, கரிச்சான்குஞ்சு சிதம்பரத்துக்குச் சென்று வாங்கிவந்தார். மெளனி கரிச்சான்குஞ்சுவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு கதையை எழுதிக் கொடுத்துள்ளார். அவர் எழுதியதைப் படித்துக்கூடப் பார்க்கவில்லை, திருத்திப் போட்டுக் கொள்ளச் சொன்னார்?' என்றபடி கைப்பிரதியை என்னிடம் கொடுத்தார் கரிச்சான்குஞ்சு. -
'நீங்கள் படித்தீர்களா?

நேரம் ஏது? கடிதங்களைச் சுருடடிக்கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடிவிட்டேன், அவருக்கும் அவசரம்'.

ஆவலும் மகிழ்ச்சியுமாகக் கதையைப் படிக்கத் தொடங்கினேன். முதலில் எழுத்துகள் புரியவில்லை. பிறகு, ஒரு வாக்கியமும் முடிவுபெறவில்லை, அடுத்த வாக்கியம் எங்கே ஆரம்பம் ஆகிறது என்றும் புரியவில்லை. இலக்கண அமைதியோ தெளிவோ கதையில் காணோம்-எனக்கு ஒரே மலைப்பாக இருந்தது.

கரிச்சான்குஞ்சுவும் படித்தார். நாலைந்து பக்கம் படித்ததும், இதென்ன, ஒன்றும் புரியவில்லை. அவரையே சரிசெய்து கொடுக்கச் சொல்லலாமே! என்றார்.

வேண்டாம், அவர் திருத்திக்கொடுப்பதற்குள் மாதம் போய்விடும், நான் எடிட் செய்கிறேன்.

கதையைத் திருத்தம் செய்ய எனக்குச் சில நாட்கள் ஆயின. மெளனியின் சிறுகதை வடிவம் அவருக்கு இயல்பாக வந்த ஒர் அற்புதம் போகிற போக்கில் காட்சிகளைத் தோற்றுவிப்பதும், பிம்பங்களை (images) உயிர்ப்பிப்பதும் அவருடைய எழுத்துகளின் வலிமை. இந்த அவருடைய பெருமைகளுக்குச் சற்றும் ஊனம் ஏற்படாமல் கதையைத் திருத்தம் செய்ய எனக்கு மிகக் கவனம் தேவைப்பட்டது. கால், அரை, முற்றுப்புள்ளி க்ளைக்கூட ஜாக்கிரதையாகப் பயன்படுத்தவேண்டி யிருந்தது.

மெளனியைச் சந்தியுங்கள் என்று ஹிண்டு, மித்திரன், தினமணி ஆகிய தினசரிகளில் எல்லாம் விளம்பரம் கொடுத்தேன். இதனால், கரிச்சான்குஞ்சு உள்படச் சில எழுத்தாளர்களுக்கு என்மேல் வருத்தம். கதை வெளியான பிறகு, அவர்களின் பொருமல் எனக்குக்கேட்டது. லா. ச. ராமாமிர்தம் கதையைப் பாராட்டு வதேபோல் பரிகாசம் செய்து ஒரு நீண்ட கடிதம் எழுதியது இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. மெளனி தன் கதையை தேனி'யில் கண்டு எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அச்சான பிறகு, கதையைப் படித்தபோது: அக்கதையின் படைப்பாளி நானே என்பது போன்ற பெருமிதம் எனக்கு உண்டாயிற்று.

மெளனியின் தமிழ் பற்றி எனக்கு சிறிது கவலையாக இருந்தது. அவசர அவசரமாக எழுதியதால் மெளனியின் தமிழ் குழம்பி இருக்கலாம் என்று நானும் சமாதானம் சொல்லிக்கொண்டேன். அடுத்த கதைக்காக அவரை 'நச்சரிக்க'லானேன்.

மெளனின் முதல் கதையுடன், அவரை வாசகர்களுக்கு. அறிமுகம் செய்யும் பொறுப்பை க. நா. சு. வுக்கு கொடுத்தேன்; அவர் தன் பொறுப்பை நல்லவிதமாகவே நிறைவேற்றினார். க. நா. சு. வின் அறிமுகத்தோடுதான் மெளனி யின் முதல் கதை தேனியில் வந்தது. மெளனி பின் தமிழ் பற்றிப் பேசியபோது க. நா. சு. அதை பொருட்படுத்தவில்லை. -

இரண்டாவது கதை வந்து சேர்ந்தது. அதுவும் முதல் கதைபோலவே இருந்தது. நானே அதையும் ஒழுங்குபடுத்தி 'நினைவுச்சுவடி’ என்ற பெயரிட்டு தேனீயில் வெளியிட்டேன். முன்னைப்போலவே மெளனிக்கு மட்டும் தினசரிகளில் விளம்பரம் செய்தேன். -
இந்தத்தடவை கரிச்சான்குஞ்சுவோடு தி. ஜானகி ராமனும் சேர்ந்து கொண்டார். இருவரும் மெளனி'யின் ரசிகர்களே; ஆனால் அவருக்கு மட்டும் சிறப்பிடம் கொடுப்பதை இருவரும் விரும்பவில்லை.
மெளனியின் தமிழ் பற்றி எனக்குக் கவலையும் வியப்புமாக இருந்தது. மணிக்கொடியில் வெளியான

கதைகளின் கைப்பிரதிகளும் இப்படித்தான் இருந்தனவா? பி. எஸ். ராமையா எடிட்' செய்தாரா, வேறு யாராவது அவருக்கு உதவினார்களா? அல்லது மெளனியின் கைப்பிரதிகள் சரியான தமிழில் இருந்தனவா?

இந்த கேள்விகளுக்கு விடைகாணும் முன், மெளனி யின் மூன்றாவது கதை வருமுன், தேனியை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. - -

இலக்கிய விசாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு வியாபாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். 1954-ஆம் ஆண்டு, ஜூலை, ஆகஸ்ட் மாதம் நானும். ஒரு வியாபாரி நண்பரும் சிதம்பரம் செல்ல நேர்ந்தது, ஏதோ ஒரு தெரு வழியாகப் போகும்போது, பின்னா லிருந்து யாரோ என் பெயர் கூறி என்னைக் கூப்பிட்டார் கள். திரும்பிப் பார்த்தேன்: மெளனி ஒரு வீட்டு வாசலில் நின்றார். மகிழ்ச்சியோடு அவரை நெருங்கினேன்: என்ன் சார், எப்படி இருக்கிறீர்கள்?’ என்றபடி.
'நீ எங்கே இங்கே?' என்றவரிடம், நான் சிதம்பரத் துக்கு வந்த வேலையைக் கூறினேன். அவர் எங்களை உள்ளே வருமாறு அழைத்தார். திண்ணையிலேயே உட்கார்ந்த அவருக்குப் பக்கத்தில் நாங்கள் அமர்ந்தோம். என்னோடு இருந்த நண்பர் வியாபாரி, இலக்கிய வாசனை அறியாதவர் உள்ளே வருமாறு அழைத்த மெளனி எங்களைத் திண்ணையில் நிறுத்தியதை நண்பர் ரசிக்கவில்லை; சீக்கிரம் போகணுமே!’ என்றார்.

மெளனியும் நானும் இரண்டு மணி நேரத்துக்கு மேல் பேசிக் கொண்டிருந்தோம்; பேச்சுக்கு இடையில் அவர், 'ஒரு கதை எழுதினேன். விகடனுக்கும் குமுதத்துக்கும் அனுப்பினேன். திருப்பி அனுப்பி விட்டார்கள்', என்று வருத்தப்பட்டார்.


‘விகடனுக்கும் குமுதத்துக்கும் ஏன் சார் அனுப்பினர் கள்?' என்றேன் வியப்புடன்.

- "அவைதானே பிரபலமாக இருக்கின்றன! அவர்கள் அதிகப் பணம் தருவதாகச் சொன்னார்கள்.

'உங்களுக்கு எதுக்கு சார் பணம்: விகடன், குமுதம் எல்லாம் உங்கள் கதையைப் போடாது. சிவாஜி தீபாவளி மலரில் போடச் சொல்கிறேன். சிவாஜி சிறிய பத்திரிகை, பணம் கிடைக்காது. கதையை மரியாதையோடு வெளியிடு வார்கள், அதைப் பெருமையாகவும் நினைப்பார்கள்.

அவர் உள்ளே சென்று கைப்பிரதியைக் கொண்டு வந்தார். நீயே வைத்துக் கொள். தீபாவளி சமயம் சிவாஜிக்கு அனுப்பலாம்'
சார், வேண்டாம். காணாமல் போய் விட்டால், கஷ்டம். நீங்கள் தீபாவளி மலருக்கு அனுப்பல்ாம். கடிதம் வரும்'-நான் கதையைப் படிக்கவில்லை. நேர மில்லை, மதிய உணவு நேரம்; பசியால் என் நண்பருக்கு ஒரே கோபம். இடையிடையில், போவோமா? என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தார்.

ஒருவாறு மெளனியிடம் விடைபெற்றோம். வெளியில் வந்ததும் என் நண்பர் குமுறினார். பெரிய எழுத்தாளர், உங்களுக்கு ரொம்ப வேண்டியவர் என்றீர்கள். விட்டுக் குள்ளேகூட அழைத்துப் போகவில்லை. இவ்வளவு நேரம் பேசினீர்கள், ஒருவாய் தண்ணீர்கூட தரவில்லை.

தாகமாக இருந்தால் தண்ணிர் கேட்டிருக்கலாமே!என்று சிரித்தேன். கட்டாயம் கொடுத்திருப்பார்.

சிவாஜி தீபாவளி மலருக்கு மெளனியின் கதை கிடைக்கும் என்று ஆசிரியர் கவிஞர் திருலோக சீதாராம னுக்கு கடிதம் எழுதி விட்டேன்.
அடைமழை பெய்து கொண்டிருந்தது. ரயில், பஸ் போக்குவரத்துப் பாதைகள் காயப்பட்டுக் கிடந்தன. ஊருக்குள் தெருக்கள் சாக்கடைகள் போலக் காட்சி அளித்தன. வீட்டுக்கு வெளியே செல்லவும் அச்சமாக இருந்தது. தீபாவளி 15 நாள் தூரத்தில் இருந்தது.
நள்ளிரவு கடந்து விட்டது. கொட்டுமழையின் சந்தடியை மீறி, யாரோ பலமாய் கதவு தட்டும் சத்தம் கேட்டு என் தூக்கம் கலைந்தது. கதவு திறந்தேன். சிவாஜி ஆசிரியர் கவிஞர் திருலோக சீதாராம். பாதி நனைந்த கோலத்தில்!

எனக்கு ஆச்சரியமாக இல்லை. கவிஞருக்கும் எனக்கும் இருந்த நட்பு அப்படி நேரம் கெட்ட நேரத்தில் அவர் என்னைக் காண வருவது சகஜம். கவிஞருக்குப் பள்ளிப் படிப்பு அதிகமில்லை. மகாகவி பாரதியாரின் கவிதை களை அரசியல், இலக்கியக் கட்டங்களில் பாடிப்பாடியே கவியாக மாறியவர். பாரதியாரின் கவிதைகள் எல்லாம் அவருக்கு மனப்பாடம். அவருக்கு இயற்கையாக அமைந்த செளக்கியமான சாரீரம், உணர்ச்சிவசப்பட்டுப் பாடு வதைக் கேட்டவர்கள் இருப்பிடத்தை விட்டு அசைய மாட்டார்கள். தமிழ்நாட்டில் அவர் கலந்து கொள்ளாத பாரதிவிழா சுகப்படுவதில்லை. அவர் பாரதியாரின் ஞான வாரிசு என்றே பலரும் கருதினார்கள்.

அவருடைய வாழ்க்கை சித்தர்களின் வழி வளமை யிலும் ஜொலிப்பார், வறுமையிலும் ஜொலிப்பார். வெற்றி வீரர்களாய் உலகத்தால் ஏற்கப்பட்ட பெரிய மனிதர்கள் பலர் மனம் சோரும்போது அவரைத் தேடிச் செல்வார்கள்; அவர் பாடக்கேட்டு தைரியத்தை மீட்டுக் கொள்வார்கள். டெலிபோனில் அவரைப் பாடச் சொல்லிக் கெஞ்சுவார்கள் பலர். அவருடைய குரல் ஒலி குனிந்த தலையை நிமிரச் செய்யும்.


1944இலிருந்து எங்கள் நட்பு தொடங்கியது; பரஸ் பரம் வியக்கும் நட்பு. தமிழ்நாட்டில் அவர் எந்த ஊரில் சொற்பொழிவாற்றினாலும், உடனே திருச்சிக்கு திரும்ப மாட்டார். நேராக கும்பகோணத்துக்கு என்னைத் தேடி வருவார். தூத்துக்குடியிலோ, நாகையிலோ பேசியதை அப்படியே, அதே உணர்ச்சிப் பாவனையோடு எனக்கு முன்னால் பேசுவார்; நான் சபாஷ் சொன்னால்தான் அவர் அமைதி அடைவார்.

திடீரென்று நள்ளிரவில் கதவு தட்டுவார்; உள்ளே வரும்போதே, சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?" என்று கேட்பார். நீராகாரமும் நீர் வடுவும் நிச்சயம் இருக்கும். சிலசமயம் பட்சணமும் பழமும் கொடுப்போம். வயிறு நிம்மதியானதும்; குழந்தைகள் தூக்கத்தைக் கெடுக்க வேண்டாம். திண்ணைக்குப் போவோம்' என்ற படி வெற்றிலை டப்பாவுடன் திண்ணைக்குப் போவார்;எங்கள் இருவரிடமும் வெற்றிலை, சீவல் ஸ்டாக் நிறைய இருக்கும்.

திண்ணைக்குப் போனதும், கன்யாகுமரியில் பேசிய தைத் திரும்பப் பேசுவார்; பாரதியார் பாடல்களோடு சொந்தக் கவிதைகளையும் பாடுவார். நாலு அல்லது ஐந்து மணி ரயிலைப் பிடிக்க வேண்டும் என்று பையைத் தூக்கிக் கொண்டு கிளம்புவார்...... இது எங்கள் நட்பின் ஒரு பகுதி......

ஒரு மழையில் வந்த கவிஞர் திருலோகத்திடம், எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று கேட்டேன்.
'மதுரையிலிருந்து......
'மதுரையிலிருந்து கும்பகோணமா...... இந்த மழையில்...உட்காருங்கள்'.

உட்கார நேரம் இல்லை; மூன்றரை மணி ரயிலை, .பிடிக்க வேண்டும். புறப்படுங்கள்......" -


‘என்ன, ஏது என்று சொல்லாமல்...... -
நீங்களும் நானும் சிதம்பரம் போகிறோம். மெளனியிடமிருந்து கதை வாங்கிவர வேண்டும்'.

இந்தப் பிரளய மழையில் சிதம்பரத்துக்கா?

பிரளய கால மழையில் இரண்டு கவிஞர்கள் மெளனியின் கதை தேடிப் போனார்கள் என்று வரலாறு படைப்போமே!’ என்றார் கவிஞர், நின்றபடியே.

திருலோகம், முதலில் உட்காருங்கள். பிறகு வரலாறு படைப்போம். இந்தப் பேய் மழையில் கதை தேடி அலைய வேண்டாம். தாளைக்கு நான் மெளனிக்கு எழுது கிறேன், இரண்டே நாளில் கதை வந்து விடும். ---
மெளனியின் கதையோடுதான் இந்த ஆண்டு தீபாவளி மலர் வெளிவர வேண்டும்.

அது என் பொறுப்பு. எழுதிய கதை வீணாகி விடக் கூடாது என்று மெளனியும் நினைக்கிறார்

சிவாஜி ஆசிரியர் விடியலில் திருச்சிக்குப் புறப்பட் டார். கதை கேட்டு மெளனிக்கு எழுதினேன். நான் எதிர் பார்த்தபடி, மறு தபாலில் கதை வந்தது. வழக்கம்போல் அதைத் திருத்தி சாவில் பிறந்த சிருஷ்டி என்று பெயர் சூட்டி, சிவாஜிக்கு அனுப்பினேன். 1954ஆம் ஆண்டு சிவாஜி தீபாவளி மலரில் அக்கதை வெளிவந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிவாஜி ஆசிரியர் கேட்டுக்கொண் டதற்கு இணங்கி, மெளளியிடம் கதை கேட்டேன். அவரும் உடனே அனுப்பினார். இந்தக் கதையையும் திருத்தம் செய்து குடை நிழல்' என்று தலைப்பிட்டு சிவாஜிக்கு அனுப்பினேன். 1959 சிவாஜி தீபாவளி மலரில் இக்கதை இடம்பெற்றது.

1948 முதல் 1959 வரை நான் மெளனியின் நான்கு கதைகளை திருத்தம் செய்திருக்கிறேன். அவருடைய தமிழ்


எனக்குப் பிரமிப்பாகவே இருந்தது. மணிக்கொடியில் அவர் எழுதிய கதைகளின் தமிழும் இப்படித்தான் இருந்ததா? என்றொரு சந்தேகம் எனக்கு. பல ஆண்டு களுக்குப் பிறகு ஆசிரியர் பி. எஸ். ராமையாவிடம் பேச்சுக்கிடையில் இதுபற்றிக் கேட்டேன். ஒருமாதிரி யாகத்தான் இருக்கும். நாங்கள் திருத்தி வெளியிட்டோம்' என்று கூறினார். ஒரு பெரும் கலைஞனிடம் இப்படி ஒரு பலவீனம் இருந்ததை நினைக்க இப்போதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
அப்பால் ஒரு தடவை மெளனி எங்கள் வீட்டுக்கு வந்தார். இருவரும் பேசியபடி ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்தோம். தம்மிடம் ஒரு கதைக்கான கரு இருப்பதாய்க் கூறிய மெளனி கதையைச் சொல்லத் தொடங்கினார். மிகவும் அழகாய்க் சொன்னார். கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. -

(LGaు சொல்லாதீர்கள், கதையை நானே எழுதிவிடுவேன்போல் இருக்கிறது.

எழுது நானும் எழுதுகிறேன்' என்றார் அவர். மெளனி கொடுத்த கருவிலிருந்துதான் கருகாத மொட்டு’ என்னும் என் கதை பிறந்தது. அது கல்கி'யில் வெளி வந்தது. மெளனி அதே பீஜத்தைக் கொண்டு பிரக்ஞை வெளியில்' என்னும் கதையை எழுதினார்; அது 1960இல் சரஸ்வதியில் வந்தது. பிறகு, பல ஆண்டுகள் வரை நான் அவரைச் சந்திக்க வில்லை

1973ஆம் ஆண்டு, ஐந்து எழுத்தாளர்கள் என்னிடம் ஒரு நீண்ட பேட்டி எடுத்தார்கள். அது கண்ணதாசன் செப்டம்பர் இதழில் வெளிவந்தது. அந்த பேட்டியில் மெளனியின் சிறுகதைகள் பற்றின என் கருத்தைக்
கூறாமல், எழுத்தாளர் என்ற முறையில் அவரிடம் கண்ட பலவீனங்களை மட்டும் சொல்லிவைத்தேன்.

கண்ணதாசனின் பேட்டி வெளியாகும் முன்பே, மெளனியை இரண்டு மூன்று முறை சந்தித்திருந்தேன். சிதம்பரம், மணிவாசகர் பதிப்பகத்தார் என் நாவல்களை வெளியிடும் பொறுப்பை ஏற்றிருந்தார்கள்; அவர்கள் தான் மெளனியின் புதிய முகவரி கொடுத்தார்கள். தனியாகவும், நண்பர்கள் சிலரோடும் அவரை நான் சந்திப்பது வழக்கம்.

கண்ணதாசனின் பேட்டி அச்சான பிறகு, மெளனி பற்றி பேசியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. அவருக்கு வாழ்க்கையில் பல அல்லல்கள், சித்தத்தைக் குழப்பும் பல துயர நிகழ்ச்சிகள். நானும் பல துன்பங் களோடு வாழ்ந்தவன். அவருடைய மனத்தைப் புண்படுத்திவிட்டோமே என்று வருத்தமாக இருந்தது. ஆயினும், எய்தான பிறகு அம்பை மீட்டுக் கொள்வது எப்படி?
பேட்டியைப் படித்த மெளனியின் ரசிகர்கள் சிலர் வாய்ப்பு கிடைத்தபோது என்னைத் தாக்கி எழுதி வந்தார்கள். நான் யாருக்கும் பதில் கூறவில்லை.

ஆனால், என் பேட்டி வெளியான பிறகு, சில நண்பர்களோடு அவரைச் சில தடவை சந்தித்தேன். பேட்டியைக் கண்டுகொண்டதாகவே அவர் காட்டிக் கொள்ளவில்லை._நானும் அதுபற்றிப் பேசவில்லை. பிறகு, இந்த விஷயத்தை மறந்துபோனேன்.

ஒருமுறை ஏதோ வேலையாக, சென்னை சென்ே றன். ஒருநாள் மாலை, திருவல்லிக்கேணி ஃபெல்ஸ் ரோடில் நண்பர் அசோகமித்திரனைக் கண்டேன். இருவரும் பேசிக்கொண்டே அருகில் இருந்த முரளி கபோக்குப் போனோம். பேச்சுக்கு இடையில் அசோகமித்திரன், மெளனி உங்களுக்குப் பதில் சொன்னாரே, படித்திர் களா? என்று கேட்டார்.

மெளனி எனக்குப் பதிலா? எதுக்கு?- என்றேன் விளங்காமல்,
உங்களுடைய கண்ணதாசன் பேட்டிக்கு, கணையாழி யில் வந்தது. 3 மாதம் ஆயிற்றே.

'கணையாழியை என் நண்பர் வீட்டில் படிப்பது வழக்கம். மெளனியின் பதிலை நான் பார்க்கவில்லை. நீங்கள் எனக்கு காபி அனுப்பி இருக்கலாம். நான் அதைப்பார்க்க வேண்டுமே", என்றேன்.
அப்போது கணையாழியின் ஆசிரியர் அசோக மித்திரன். அவரோடு ஆபீஸுக்குப்போய், மெளனியின் பதிலைப் படித்தேன். எனக்கு கோபமூட்டும்படி பேட்டி யின் ஒரு பகுதி இருந்தது; எனக்கு கோபம் வரவில்லை; விசனமாக இருந்தது.

'நீங்கள் இதற்கு பதில் சொல்லப்போகிறீர்களா? என்று கேட்டார் அசோகமித்திரன்.

இல்லை. நான் கண்ணதாசன் பேட்டியில் சொன்னது எல்லாம் உண்மை. ஆனால், மெளனி துன்பப்பட்டவர். என்னால் அவருக்கு மேலும் துன்பம் வேண்டாம்.'
சரியான முடிவு' என்றார் அவர்.

மெளனியின் பேட்டி வெளிவந்த கணையாழி இதழை விலைக்கு கேட்டும் அசோகமித்திரன் கொடுக்க வில்லை. ஆபீஸ் காபி தவிர, விற்பனைக்கு பிரதிகள் இல்லை என்று கூறிவிட்டார். ஆகையால் அந்தப் பேட்டியை இரண்டாம் முறை நிதானமாகப் படிக்கவும் எனக்கு வாய்ப்பு இல்லை.

சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, 1991-டிசம்பர் மாதக் கணையாழியில் மெளனியின் பேட்டி மறு பதிப்பாக (re-print) மீண்டும் வந்துள்ளதைக் காண எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதை இப்போது அமைதியாகப் படிக்க முடிகிறது. பழைய நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாய் காட்சிகள் ஆகின்றன. மெளனியும் மறைந்துவிட்டபின் அவர் மனத்தைப் புண்படுத்த நேருமோ என்கிற அச்சம் எனக்கு இல்லை. அவர் உயிரோடு இருந்தபோது, அவருக்குப் பதில் கூறுவதில்லை என்று நான் முடிவு செய்தது சரி; அது சரியான முடிவு

என்று நண்பர் அசோகமித்திரன் கருதினார். இப்போது
பதில் கூறுவது நியாயமாகும் என்று எண்ணுகிறேன்.
கணையாழி பேட்டியில் மெளனி கூறுகிறார்:
கண்ணதாசன் (செப்டம்பர்-73) எம். வி. வி. பேட்டி யில் என்னைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தவைகளில் சில தவறுகள் நேர்ந்துள்ளன. தேனியில் வெளிவந்த என் இரண்டு சிறுகதைகள் எந்தச் சூழ்நிலையில் எழுதப் பட்டவை, தரப்பட்டவை என்பதைச் சொல்கிறேன்.

மனக்கோலம் (1948) கதையை என் வழக்கப்படி திருப்தியின்றி வெவ்வேறு scriptஆக பதினைந்து தடவைக்கு மேல் எழுதிக் கிழித்தும், கடைசியாக நான் பக்கம் பக்கமாக எழுதிப்போட, கரிச்சான்குஞ்சு அருகிலி ருந்து வாங்கிக் கொள்ள-மகளின் திருமணம் முடிந்த அன்று நள்ளிரவு ரயிலில் சிதம்பரம் திரும்பியாக வேண்டிய அவசரத்தில் - கரிச்சான்குஞ்சு கதையின் கடைசிப் பக்கத்தை இன்னொரு தடவை படித்து விட்டு வேறு எழுதக் கோரியபோது-அவ்வளவுதான், அதைத் திருப்பிப் பார்த்தால்-எல்லாமே எனக்குத் திருப்தி தராமல் கிழித்துப் போட்டுவிட்டு வேறு எழுதத் தோன்றி விடும்...நான் ஊருக்குக் கிளம்பியாக வேண்டும் என்று இளம்பி விட்டேன்.

எம். வி. வி. தன் பேட்டியில் முதல் கதையை நேரில் கொண்டு வந்து தந்தார். திருத்திப்போடு என்று சொல்லி விட்டுப் போனார் என்று கூறியிருப்பதற்காக இதனைக் கூறுகிறேன்......
முதல் தேனி கதையைக் கரிச்சான்குஞ்சு வாங்கி வந்தார் என்று மெளனி கூறுவது சரி; அவர் நேரில் கொண்டு வந்து கொடுத்தார் என்று நான் 'கண்ணதாசன் பேட்டியில் சொன்னது சரியல்ல. கரிச்சான்குஞ்சுவிடம் கேட்டு நான் சரிசெய்து கொண் டேன். ஆனால், முக்கியமான பிரச்சினை அது அல்லவே. மெளனியின் தமிழ் குறைப்பட்டது என்று நான் உரைத்த தற்கு அவர் பதில் கூறவில்லை. மகளின் திருமண வேலை களின் நிர்ப்பந்தத்தால் அவர் அவசரமாக எழுதிக் கொடுத்ததால், அவருடைய தமிழ் பிழைபட்டது என்று அவர் நமக்கு உணர்த்துவதாய் வைத்துக் கொள்வோம். தேனியில் அவர் எழுதிய இரண்டாவது கதை பற்றி அவர் கூறுவதைப் பார்ப்போம்.
மெளனி கூறுகிறார் :

'இரண்டாவது சிறுகதையை நான் தேனிக்குத் தந்த கதை இது: அப்போது க. நா. சு. பொறுப்பேற்று நடத்திய ‘சந்திரோதயம்' பத்திரிகையின் ஆண்டு மலர் கொண்டுவரப் போவதால் என் கதை வேண்டுமெனக் கேட்க நான் எழுதிக் கொடுத்த கதை நினைவுச்சுவடு' (1948)- சந்திரோதயத்தில் அப்போது உதவி ஆசிரியராக சி. சு. செல்லப்பாவும், ஓவியராக சாரதியும் இருந்தார் கள். சந்திரோதயம் மலர் வெளியீடு முன்பே நின்று விட்டது. அச்சமயத்தில் எம். வி. வி. தேனி பத்திரி கைக்கு என் கதை அவசியம் தேவை என்று கேட்க, நான் க. நா. சு. விடம் வெளியிடாமல் வைக்கப்பட்டிருக்கும் என் கதையைக் கேட்டு பெற்றுக் கொள்ளச் சொன்னேன். க. நா. சு. அந்தக் கதைத் தாள்களை கறையான் அரித்து விட்டதாகக் கூறியதால், மறுபடியும்
எம். வி. வி. என்னை வந்து துளைத்தார். நினைவுச்சுவடு கதையைத் திருப்தியின்றி மாற்றி மாற்றி எழுதிய கடைசி versionக்கு முந்திய பிரதி தற் செயலாக அகப்பட, அதை அவருக்குக் கொடுத்தேன். அதுவே தேனி'யில் வெளிவந்த எனது இரண்டாவது சிறு
-
கதை......
தேனீயில் வந்த இரண்டாவது கதையின் கதையை இவ்வாறு கூறுகிறார் மெளனி. ...... &#3Dl_@ versioně(5 முந்தியபிரதியை’ என்னிடம் கொடுத்ததாய் சொல்கிறார். ஆகையால், அது சரியான தமிழில் இருக்காது என்கிற தொனி அவர் கூற்றில் இருக்கிறது. அவர் எந்தப் பிரதி கொடுத்திருந்தாலும் சரி, அது எந்தவித இலக்கண அமைதியும் இல்லாதது என்றுதான் நான் கண்ணதாசன் பேட்டியில் குறிப்பிட்டேன்.

ஆக, தேனீயில் வெளிவந்த இரண்டு சிறுகதைகளின் தமிழ் பிழையானதே என்று மெளனி நேராக ஒப்புக் கொள்ள விட்டாலும் மறைமுகமாக ஏற்றுக் கொண்ட தாகவே நான் கருதுகிறேன். தன்னால் பிழையற்ற தமிழில் எழுத முடியும் என்று அவர் சொல்லவே இல்லை. மெளனி கணையாழி பேட்டியில் மேலும் கூறுகிறார்:
'நான் கதை எழுதுவது என்பதே நாள் கணக்கில் ஏற்படுகிற சிரமமான விஷயமாக இருக்க, கதை எழுதி வைத்திருந்து விகடனுக்கும் குமுதத்துக்கும் அனுப்பி திரும்ப வந்து விட்டது' என்று நான் வருத்தப் பட்டதாக () எம். வி. வி. தன் பேட்டியில் கூறியிருப்பது உண்மை இல்லாத விஷயம்."

அவருடைய பேட்டியின் இந்தப் பகுதிதான் என் மனத்தைப் புண்படுத்தியது; அவர்மீது சிறிது கோபமும் உண்டாக்கியது._ஆனால், அவரிடம் எனக்குள்ள :மரியாதை காரணமாக நான் அவருக்கு அப்போது பதில் கூற விரும்பவில்லை.

அந்தப் பேட்டியின் தொடக்கத்திலேயே மெளனி "...ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளுக்கு உயரிய கதை எழுதி அனுப்பி திரும்பப் பெற்றால் எந்த மனோபாவம் _ கொள்ள வேண்டும்- psychological mistake என்று சொல்லக் கூடிய- தரமற்ற பத்திரிகைகள் அவை என்று துாற்றுவது rational ஆகுமா? ஆனால், இவன் இந்த முடிவிற்கு இந்தக் காரணம் முன்னிட்டுக் கொள்வது logical? தற்போது அநேக குழுவினரையும்... ஒரு reaction விளைவாகத்தான் காண முடிகிறது என்று கூறியிருப்பதை வைத்தே நாம் உண்மையை ஊகிக்கலாம்.

தேனியில் வெளிவந்த தன் இரண்டு கதைகளின் கதையை ஒரளவு விஸ்தாரமாக எழுதிய மெளனி, சிவாஜியில் ஐந்தாண்டு இடைவெளியில் (1954லிலும் 1959லிலும்) வெளியான தன் இரண்டு கதைகளைப் பற்றி ஒரு வார்த்தைகூட கூறவில்லை. ஏன் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்: எம். வி. வி. க்கு அவர் கதைகளை அனுப்பியதையும் எம். வி. வி. அவற்றை திருத்தம் செய்து சிவாஜி வார ஏட்டில் பிரசுரமாக உதவி யதையும் பற்றி மெளனி பேச விரும்பவில்லை. மெளனி சிவாஜி ஆசிரியர் கவிஞர் திருலோக சீதாராமை அதுவரை சந்தித்ததே இல்லை! -

கண்ணதாசன் பேட்டியில் நான், மெளனியின் கதை யில் ஒருவாக்கியமும் இலக்கண சுத்தமாக இல்லை. அவருக்குக் கைவந்த கதை வடிவம் கெடாமல் அதைத் திருத்த எனக்குச் சில நாட்கள் ஆயின' என்று குறை கூறியிருந்தேன். கணையாழி பேட்டியினால் அவர் தனக்கு இலக்கண சுத்தமாக எழுதத் தெரியும் என்பதை நிலை நாட்டவில்லை. மாறாக, என் கருத்துக்கு வலுக்கொடுப்ப தாகவே அவருடைய பேட்டி அமைந்துள்ளது.

மெளனியின் பேட்டியில் என்னைப்பற்றி அவர் கூறியுள்ள மற்ற விவரங்களுக்கு நான் பதில் கூறத் தேவையில்லை.
1936இல் மெளனியின் சிறுகதைகள் வெளியான போது அவை என்னுள் வலிய கிளர்ச்சியை உண்டாக்கின. புதுமையான காதல் கதைகளாகவே அவை என்னைக் கவர்ந்தன-அப்போது நான் கல்லூரி மாணவன். ஆனால், புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு. ப. ரா. , ராமையா முதலியவர்கள் மெளனியின் கதைகளில் வடிவம், மொழி, நடை, உத்தி முதலியவற்றை ரசித்தே அவரைப் பாராட்டினர். மணிக்கொடியில்தான் அவருடைய பெரும்பாலான கதைகள் வந்துள்ளன. முழுமையாக உருவான ஒரு பொருளாகவே (finished product) நான் அப்போது அவருடைய கதைகளைக் கண்டேன். ஆனால், ஆசிரியர் ராமையாவும், துணை ஆசிரியர் கி. ரா. வும் மெளனியின் கைப்பிரதிகளைப் பார்த்திருப்பார்கள். அவர்கள் அவருடைய இலக்கண மற்ற தமிழைப் பற்றி ஒன்றும் சொல்லாதது ஏன்? ராமையாவுடன் நெருங்கி இருந்த புதுமைப்பித்தன் முதலியவர்களும் ஏதும் பேசாதது ஏன்? 'மெளனி'யின் தமிழ் ஒருமாதிரி இருக்கும்; திருத்திப்போடுவோம்', என்று ராமையா அலட்சியமாக என்னிடம் கூறினாலும், அவர் அதைப்பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. மணிக்கொடிக்கு வந்து மெளனியின் கதைகள் அதிகம் பிழைபடாததாக இருந்திருக்குமோ? என் பார்வைக்கு வந்த நாலு கைப்பிரதிகளும் ஏதோ மனக்குழப்பத்தில் எழுதப்பட்டிருக்குமோ? கணையாழிப் பேட்டியில்கூட அவர் தன்னால் பிழையற்ற தமிழ் எழுத முடியும் என்று ஓங்கிச் சொல்லவில்லையே!

இலக்கியப் படைப்பாளிகளுக்கு மொழிப்புலமையோ, இலக்கண் அறிவோ கட்டாயத் தேவை என்று நான் கூறவில்லை; பேச்சு வழக்குக் கொச்சை மொழியும் இலக்கியம் ஆகும்-படைப்பாளியின் கையில். நான் கண்ட மெளனியின் தமிழ் இந்த விதிகளுக்கும் அப்பாற்பட்டது. மற்றொருவரால் திருத்தப்பட்டா,தான் விளங்கும். வாசகர்களுக்கு கிடைப்பது தட்டிக் கொட்டி ஒழுங்கு செய்யப்பட்ட பொருள்தானே!
மெளனியை சிறுகதையின் திருமூலர்' என்று புதுமைப்பித்தன் ஏதோ வேகத்தில், குறிப்பிட்டுவிட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்று அடக்கமானவர் திருமூலர். தமிழர்ல் எந்த ஆழத்துக்கும் செல்ல முடியும், எந்த உயரத்துக்கும் ஏற முடியும் என்பதைச் செய்துகாட்டியவர். தமிழ் மொழியை எவ்வளவு அழகாய்க் கையாள முடியும் என்பதை இன்றைய எழுத்தாளர்களுக்கும் உணர்த்தும் வழிகாட்டி. பிழையின்றி தமிழ் எழுத முடியாத ஒருவரைத் திருமூலரோடு ஒப்பிட்டுப் பேசுவது பொருத்த மற்றது. 'திருமூலரோடு என்னை ஒப்பிட்டு புதுமைப் பித்தன் ஏன் பேசினார் என்று அவரையே கேட்க வேண்டும் என்று மெளனியே கூறுகிறார்.

அதே புதுமைப்பித்தன் மற்றொரு சமயம், தமிழில் வந்துள்ள சிறுகதைகளில் பத்து நல்லவற்றைத் தேர்ந்து எடுக்கும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டால், என் சிறுகதைகளில் பத்தைப் பொறுக்கித் தருவதைத் தவிர வேறு வழி இல்லை'-என்று உரைத்ததாய் ச. பொதிய வெற்பன் எழுதிய புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாறு' கூறுகிறது. மெளனியை அவர் ஏன் மறந்தார்?

'கம்பனை ரசிக்கிறவர்கள் மெளனியையும் ரசித்துப் பாராட்ட வேண்டும்', என்று க. நா. சு. மொழிந்ததும் மிகமிகை. இதிகாசத்தை மகாகாவியமாகப் படைத்த மகாகவியைச் சில சிறுகதைகள் எழுதியவரோடு ஒப்பிட்டுப் பேசுவது அபத்தம். ஆர்வமிகுதியால் இவ்வாறு பேசுவது-சரியான விமரிசனக் கண்ணோட்ட் மும் ஆகாது.
மனம் சுதந்திரமாக இயங்கும் தன்மை வாய்ந்தது. கலைஞனின் மனம் தன் போக்கில் சஞ்சாரம் செய்யும்போது, எண்ணத்தின் எல்லையையும் கடந்து, பலவித கற்பனைகளையும், படிமங்களையும், பாவனைகளையும், உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் கைப்பற்றுகிறது. இந்த அனுபவத்தை அப்படியே எழுத்தோவியமாக்க வந்த மொழிக்கும் வல்லமை கிடையாது. தான் பெற்ற அனுபவத்தை வாசகரிடம் தாண்டிவிடும் ஒரு கருவியாக மொழி கலைஞனுக்குப் பயன்படுகிறது. வாக்குக்கு எட்டாத இறைவனை வாக்குப்படுத்தி வெற்றி கண்டவர் திருமூலர். இறைமையையும் அளக்கும் வலிமை வாய்ந்தது தமிழ்மொழி என்பதை அறிந்திருந்ததால் அவர் 'தமிழ் செய்யுமாறு: ஆண்டவன் தன்னை 'நன்றாகப் படைத்தான்' என்று அறிக்கையிடுகிறார். ஆனால், தமிழ் தெரியாத மெளனி தமிழ்மொழி கலை வெளியீட்டுக்கு இப்போதுள்ள நிலையில் செயல்பட முடியாது' என்றும், 'என் மூளை எழுதிப்பார்க்கும் சில அபூத impression களை express செய்ய மிகவும் சிரமமாக இருக்கிறது’ என்றும் கூறி தன் பலவீனத்தைத் தமிழின் பலவீனமாய்க் காட்டுகிறார்.

தமிழ் பல துறைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும் என்பது உண்மை; ஆனால், மெளனி சொல்லியுள்ள பொருளில் அல்ல.
இவை எல்லாம் என் கருத்துகள்; மற்ற சிலருக்கும் எனக்கும் உள்ள கருத்து வேறுபாடுகள். இவை ஒருபுறம் இருக்க, நான் இன்னும் மெளனியின் ரசிகன்; அவருடைய சிறு கதைகளை தன்னிறைவோடு படிக்கிற வாசகன், தமிழின் புதிய இலக்கியத்தில் அவருக்குச் சிறப்பான இடம் உண்டு என்றும் நம்புகிறேன். ஆனால், அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்று பண்டைப் புலவர் களின் பாணியில் அவரைப் போற்ற நான் விரும்பவில்லை. அவ்வாறு செய்வது, அவரோடும், அவருக்குப் பிறகும் எழுதியlஎழுதுகிற சிறந்த சிறுகதைப் படைப்பாளிகளுக்கு. அநியாயம் செய்வதாகும். .

சென்னையில் மெளனியின் கணையாழிப் பேட்டியை படித்த பிறகும் நான் தனியர்கவோ, அல்லது சில நண்பர் களுடனோ அவரை அவ்வப்போது சந்தித்துக் கொண்டு இருந்தேன். கண்ணதாசன் பேட்டியைப் படித்ததாய் அவர் காட்டிக் கொள்ளவில்லை. கணையாழி பேட்டியை பார்த்ததாய் நான் காட்டிக் கொள்ளவில்லை. எங்களுக்கு இடையில் வழக்கம்போல் செளஜூன்யமான நட்பு
நிலவியது.

ஒருமுறை தஞ்சை பிரகாஷ் உள்பட நாங்கள் ஐந்து பேர் மெளனியைச் சந்தித்தோம். வழக்கம்போல் அவர் எங்களை அன்பேடு வரவேற்றாலும், அவர் 'யாரையும் எதிர்பார்க்கவில்லை போலும்; அவருடைய முகத்தில் சோகம் பட்டையாக அப்பிவிட்டாற்போல் இருந்தது. அது என் வெறும் பிரமையாக இருக்கலாம். சுமார் நாற்பது ஆண்டுக் காலமாக நாங்கள் பழகுகிறோம். என்னை அவர் ரொம்ப சின்ன பையன் என்றார்; அவரை நான் இளைஞராய்க் கண்டேன். இப்போது நிலைமை மாறி விட்டது. என் தலைமுடி நரைத்துப் பின்னடைய, என் நெற்றி விசாலமாகி வந்தது; இன்னும் ஆங்காங்கு கருமுடி இருந்தது. அவருடைய தலைமுடி முற்றிலும் வெள்ளையானாலும் அடர்த்தியாக, கையால் ஒழுங்கு செய்யப்பட்டாற் போலிருந்தது. என் கண்கள் ஓரளவு பலவீனப்பட்டாலும், பார்வை மங்கவில்லை. அவருடைய கண்கள் பார்வையைக் குறைத்து விட்டன; எங்களைப் பார்க்கையில், வெறுமையைப் பார்ப்பவர் போலத் தோன்றியது. உதடுகளின் இருபுறமும் கோடுபோட்டாற் போல மடிப்பு விழுந்திருந்தது. எனக்கு ஒருவகைத் துன்பம் என்றால், அவருக்கு வேறுவகைத் துன்பம்; அது எங்களை முதுமைக்குத் தள்ளிக் கொண்டிருந்தது.

நேற்று ஜெயகாந்தன் வந்திருந்தார். அவருடைய கதை ஒன்று படித்தேன். இவர்கள் எல்லாம் என்ன எழுதுகிறார்களோ, என்ற மெளனி ஜெயகாந்தன்கதையின் முதல் இரண்டு வாக்கியங்களைக் கூறினார்: ‘the second sentence cancels the first sentence’.
அவருடைய இந்தக் கதை பிரபலமானது' என்றார் பிரகாஷ்.
இப்படி எழுதுவதால் பிரபலம் ஆகலாம் போல', என்ற மெளனி வீட்டுக்கு உள்பக்கம் பார்த்து யாருக்கோ குரல் கொடுத்தார்; எல்லோருக்கும் காபி கொண்டு வரும் படி கட்டளை இட்டார்.
"இங்கே வரும்போது சாப்பிட்டு வந்தோம், சார்' என்றேன்.
'அதனால் என்ன; என்றார் அவர். அதற்கு முன்னால் அவர் வீட்டில் காப்பி சாப்பிட்டிராத எனக்கு இந்தப் புதிய உபசாரம் சற்று வினோதமாக பட்டது.

சிறிது நேரத்தில் ஓர் இளைஞன் ஒரு டிரேயில் டபராடம்ப்ளர் காப்பியை ஜாக்கிரதையாகக் எடுத்து வந்தான். -
'எம். ஏ. லிடரேசர் பண்ணின பையன் இந்த வேலை செய்யறான்', என்றார் மெளனி. அவர் தொடர்ந்து ஒன்றும் கூறவில்லை. நானும் கேட்கவில்லை. எவ்வளவு நெருங்கிய நண்பர்களானாலும், அவர்களுடைய தனிப் பட்ட|குடும்ப அல்லல்கள் பற்றித் நானாக ஏதும் கேட்ப தில்லை. அவர்களே சொன்னால் கேட்டுக் கொள்வது என் பழக்கம். -
மேஜை மீது காப்பி டிரேயை வைத்த வாலிபனிடம், 'சாப்பிட்டானதும் எல்லாம் எடுத்துக் கொண்டு போக வேணும்', என்றார் மெளனி.
சாப்பிட்டானதும் டபார-டம்ப்ளர்களை டிரேயில் வைத்து எடுத்துப் போனான் இளைஞன்.


பிறகு கொஞ்சநேரம் ஏதோ பேசினோம். இடையில் மேஜை டிராயரைத் திறந்து ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டு எனக்கு அருகில் வந்தார் மெளனி. அது அமெரிக்காவிலிருந்து வந்த கடிதம்; அதன் தலைப்பு நுனி கள் இரண்டையும் விரல்களால் கெட்டியாகப் பிடித்தபடி கடிதத்தை என்னிடம் காட்டி, இதைப்படி என்றார் அவT.
'கடிதத்தை என்னிடம் கொடுங்கள், சார், படிக்க சுலபமாக இருக்கும்', என்றேன்.

அவர் கொடுக்கவில்லை. இப்படியே படி”, என்றார்.
'கடிதத்தைத் துக்கிக் கொண்டு ஓடிவிட மாட்டேன். இங்கே கொடுங்கள்...... என்று சிரித்தேன்.

அவர் கடிதத்தை தன் கையிலிருந்து விடுவிக்க விரும்ப வில்லை: சும்மா இப்படியே படி, வெங்கட்ராம்!”

- அமெரிக்காவிலிருந்து ஆல்பர்ட் ஃபிராங்களின்
எழுதிய கடிதம் அது. தமிழில் தேர்ச்சி பெற்ற அந்த அமெரிக்கர் மெளனியின் சிறு கதைகளின்பால் பெரு மோகம் கொண்டார். மெளனியின் இரண்டு சிறுகதை களை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். கருமேகங்களுக்கு இடையில் ஒரு மின்னல்’ என்று மெளனியை அமெரிக்க வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி னார்; இரண்டு கதைகளும் நியூயார்க்கர் என்னும் அமெரிக்கப் பத்திரிகையில் வெளியாயின. தன் உத்தி யோகத்துக்கு ஒரு வருடம் சம்பளம் இல்லாத லீவ் போட்டு விட்டு, மெளனியின் மற்ற சிறுகதைகள் அனைத்தையும் மொழி பெயர்க்கப் போவதாய் ஆல்பர்ட் ஃப்ராங்ளின் கூறியிருந்தார். இந்தத் தகவல்களை மெளனி யும், க. நா. சு.வும் என்னிடம் கூறியிருந்தார்கள்.

--- அந்த அமெரிக்கர் எழுதிய கடிதத்தைத்தான் என் கண்களுக்கு முன்னால் காட்டிப் படிக்கும்படி சொன்னார்மெளனி. அவருடைய ஒரு கதையை மீண்டும் படித்ததாக வும், அது இந்தியத் தத்துவத்தை நுட்பமாகவும், அழகாக வும் பிரதிபலிப்பதாயும் ஃப்ராங்களின் பாராட்டி எழுதி யிருந்தார். நானும் பிரகாஷாம் படித்தானதும்: கடிதத்தை ஜாக்கிரதையாக மேஜை டிராயரில் வைத்து விட்டு மெளனி உட்கார்ந்தார்.

வெங்கட்ராம், அந்தக் கதையில் ஃபிராங்க்ளின் சொல்லும் அர்த்தம் வருகிறதா?’ என்று கேட்டார்.

கேள்வியை எதிர்பாராத நான் பதில் கூறத் தயங்கினேன். அது மெளனியின் எந்தக் கதை என்று இப்போது நினைவில்லை. அப்போது கதை நினைவில் இருந்தது. அது எந்த இந்தியத் தத்துவத்தையும் பிரதிபலிப்பதாய் எனக்குத் தோன்றவில்லை. நான் பதில் சொல்வதற்குள், மெளனி, அந்த அர்த்தம் வருகிறதா? என்று பலமுறை கேட்டுவிட்டார், ஆவலுடன்.

எனக்கு அப்படி தோன்றவில்லை...' என்றேன் தயக்கத்துடன்,
'அப்படி அர்த்தம் ஆவதாய் ஃபிராங்க்ளின் சொல்கிறானே!"
அது உங்கள் எழுத்தின் சிறப்பு, சார், உங்கள் எழுத்தின் பெருமை. விதவிதமான அர்த்தம் கொள்ளும் படி இருப்பதுதான் உயர்ந்த இலக்கியத்துக்கு லட்சணம்; இல்லையா சார்?' என்றேன்.
அந்த சோகத்தின் முகத்தில் ஒரு புன்சிரிப்பு உதித்தது. அதைக்காண எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அப்பால், எத்தனை நாட்களோ, மாதங்களோ,வருடங்களோ எதுவும் எனக்கு நினைவாகவில்லை. சிதம்பரம் கோயிலின் மேற்கு வாசலில் உள்ள மணிவாசகர் பதிப்பகத்தில் ஒரு மாலை நேரம் உட்கார்ந்திருந்தேன். இருட்டுவதற்கு முன்பு ஊருக்குப் புறப்பட வேண்டும் என்று பரபரத்துக்கொண்டிருந்தேன்.
தற்செயலாக, என் கவனம் தெருப்பக்கம் சென்றது. மெளனி கோயிலின் மேற்கு வாயிலை நெருங்கிக் கொண்டிருந்தார். யாரோ ஒருவர் அவருடைய இடது கையைப் பற்றி வழிநடத்திக் கொண்டிருந்தார். மெளனியோடு பேசுவதா வேண்டாமா என்று ஒரு நொடி தயங்கினேன்.

சிதம்பரத்துக்கு நான் வருவதே, ஆறு மாதத்திற்கு ஒருமுறை, ஒராண்டுக்கு ஒருமுறை என்றாகிவிட்டது. ஆகையால், அவரோடு சிறிதுபேசலாம் என்று எண்ணி அவரை நோக்கி விரைந்தேன்.
'சார், வெங்கட்ராம் வந்திருக்கிறேன் - என்று அவரை நெருங்கும்போதே குரல் கொடுத்தேன். அவர் நின்றார்.
என்னப்பா ஆளையே காணோம்?

'சிதம்பரத்துக்கு வருகிற வேலை அதிகமில்லை... நல்லபடி இருக்கிறீர்களா சார்!"இருக்கிறேன். கண் சரியாகத் தெரியவில்லை. துணை இல்லாமல் வெளியே புறப்பட முடியவில்லை...... y
அதே வெள்ளை முடி அலங்காரம். கருப்புக் கண்ணாடி அணிந்து, கைத்தடி வைத்திருந்தார் என்று ஞாபகம். மிகவும் இளைத்திருந்தார். பித்தான்கள் சரியாத போடப்படாத-அரைக்கைச்சட்டை, மேல் துண்டை இடுப்பில் கட்டியிருந்தார். நெற்றியில் திருநீற்றுப்பூச்சு. வயோதிகத்துக்கு உதாரணமான சிலையைச் செதுக்கப் பொருத்தமான உருவம்.
கோயில்-புதிய பழக்கமாக இருக்கிறதே?

விமோசனத்துக்கு வேறே வழி? பெரும்பாலும் தினம் வருகிறேன். உள்ளே வருகிறாயா?"

'இல்லை சார், ஊருக்குக் கிளம்புகிறேன்.

'மறுபடியும் எப்போது வருவாய்?

சொல்லமுடியாது. சிதம்பரம் வந்தால், உங்களைப் பார்க்கிறேன் சார்".
கட்டாயம் வா."

வருகிறேன்."

நான் பார்க்கையிலேயே, மெளனி ஆடலரசன் ஆலயத்துக்குள் நுழைந்தார்.

(ஆல்பர்ட் ஃபிராங்க்ளின் என்னும் அமெரிக்கர் மெளனியின் மற்ற சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவில்லை; வாசகர்கள் ஊக்கத்தோடு மெளனியின் இரண்டு கதைகளை வரவேற்காததால் நியூயார்க்கர்’ தொடர்ந்து வெளியிட மறுத்துவிடவே ஃபிராங்க்ளின் மொழிபெயர்ப்பைக் கைவிட்டார். இந்த தகவலை என்னிடம் கூறியவர் க. நா. சு. இந்த தகவல் சரியானதா என்று எனக்குத் தெரியாது).


நன்றி:rrn.rrk.rrn@gmail.com



Mar 10, 2017

மனக்கோட்டை - மௌனி

பத்து வருஷங்களுக்கு முன்பு இவன் பட்டிணத்தில் உயர் படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது , இவன் பெற்றோர்கள் இவனுக்கு கலியாணப் பிரயத்தனங்கள் செய்ததுண்டு. ஒவ்வொரு சமயமும் காரணம் காண முடியாத வகையிலே, எதேச்சை குறுக்கீட்டினால் என அவைகள் எல்லாம் தடைபட்டுவிட்டன. அவர்களும் ஒருவர் பின் ஒருவராக மறைந்தனர். தனக்குக் கிடைத்த உயர் உத்தியோகம் ஒன்றையும் உதறிவிட்டு, தன் கிராமத்தில் சொத்து சுதந்திரத்திடையே காலம் கழித்துக்கொண்டிருந்தான். ஒரு பிள்ளை என்பதினாலும், நெருங்கிய உறவினர்கள் என்பதின்றியும் தனியே இருந்து ஒரு நேர்மையான நட்புறவில் ஏனைய கிராமத்தினரிடை மதிப்புகொண்டு வாழ்ந்து வந்தான்

mouni2

சில சமீப சில வருஷங்களாக, தன் வாழ்க்கை,குறிப்பற்று,போக்கு புரியாமல், பாதையில் நழுவிச் செல்லுவதான தோற்றம் கொள்ளலானான். எதேச்சையென கொள்ளுவதை மனது மறுக்கிறது. தன்னையும், தன் சூழ்நிலைகளையும் , சம்பவங்களையும். ஒருமை கொள்ள வேண்டியிருக்கிறது. சூழ்நிலைக்களன்களில் ஒன்றி, அனுபவம் கொள்ள மனநிலை விரிவும் மாற்றமும் கொள்ளவும் வேண்டியிருக்கிறது. உலக வாழ்க்கையே ஒரு பெரிய சூழ்நிலைத் தோற்றமெனக் கொள்ளவேண்டியிருப்பதில், தன் அறிமுகம் சரியென ஒரு போதும் தெரிய முடிகிறதில்லை என்றும் தெளிந்து கொள்ள, வெறித்து கனவென வாழ்க்கையைக் கண்டு நிற்பதான ஒரு எண்ணமும் இவனுக்கு அடிக்கடி எழுவதுண்டு. மனது வேதனை கொள்ளவதாகிறது, எல்லாம் ஈசுவர சங்கல்பம் என, தன்னை விடுத்துக் கொள்ளும் நம்பிக்கையும் இல்லை. இவன் தோற்றம், நடையுடை பாவனைகள், பேச்சுப் பழக்கங்கள், எல்லாம் சேர்ந்து. ஒரு விநோத விரோத பாவத்தில் கலந்து. இவனைத் தெரியாதவர்களுக்கும்கூட இவனைப் பார்க்குங்கால் , தெரிந்து கொள்ள அவா கொடுப்பதாக இருக்கும். இவ்வகையில், இவன் சிநேகித சித்திபெற்றவன் போலும்.

அடிக்கடி இவன் ஊரைவிட்டு, மாதக் கணக்கில் வெளியூர் போய் வருவது உண்டு. பெரிய பட்டிணங்கள், சிறிய நகரங்கள், க்ஷேத்திரங்கள் மற்றும் பழங்கால சரித்திர சின்னங்கள் என ஒரு வரையறையிலும் அகப்படாது, சித்தன் போக்கெனத் தோன்றும், இவன் பிரயாணங்கள். இதுவரையில் இவ்வகையாக நான்கைந்து தரத்திற்கு மேலாகவே சுற்றியிருக்கிறான். இப்போது, இவன் ஊரை விட்டகன்று நாலைந்து மாதங்களுக்கு மேலாகி விட்டது .திரும்பி பட்டிண மடைந்தவன், ஊரையடையும் ஆவலின்றியே, அங்கு சில நாட்கள் தங்கிப் போகலாமென நினைத்து ஒரு ஹோட்டல் அறையில் தங்கினான்.

தெரிந்த பட்டிணத்தில் , ஊரைச் சுற்றும் அலுவல்கள் இல்லை. எப்போதாவது சிறிது நேரம் , சிறிது தூரம் வெளியே சென்று உலாவி வருவதிலும், ஆங்காங்கே தென்படும் , தன் பழைய சிநேகிதர்களைக் கண்டு சிறிது பேசித் திரும்புவதிலும், பாக்கி அதிக நேரத்தை தன் அறையில் கழிப்பதுமாக இரண்டொரு நாட்கள் சென்றன. ஒரு நாள் மாலை ,ஒரு வீதியோரமாகச் சென்றுகொண்டிருக்கும்போது, பின்னின்று, சிலர் பேசிக்கொண்டு தன்னைக் கடந்து முன் சென்றபோது, அவர்கள் திரும்பி இவனைப்பார்த்தனர். இவனைத் தெரிந்துகொண்டு ஒருவன் ‘என்னப்பா சௌக்கியமா ? - எப்போது’ என்றான். அவர்கள் இவனோடு படித்த நண்பர்கள். மேலும் அவர்கள் தன்னைக் கடக்கும்போது பேசிக்கொண்டு போனதும் தன்னைப் பற்றித்தான் எனவும் இவன் நினைத்தான். ‘-அவன் தானே - இல்லை அவனைப்போல - இல்லை அவனே தான்’ என்பவைகள். ஒவ்வொருவருடைய பேச்சாகவும், ஒருவனுடைய பேச்சாகவும்,மேலும், தானே தன்னைப் பற்றிய சந்தேகத்தில் பேசிக் கொண்டதென, எவ்வகையிலும், அர்த்தம் கொடுக்கும் வகையில் பட்டது, இவனுக்கு வியப்பை கொடுத்தது. இச்சிந்தனைப் போக்குடன் அவர்களோடு சிரித்துப் பேசிக் கொண்டு போனான்.

“உன் சிரிப்புகூட மாறி விட்டது” என்றவன் இவனைப்பற்றி ஒன்றும் கேட்காமலே, தங்களைப்பற்றியும், ஏனைய நண்பர்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். மற்றொருவன், ‘நேற்றுகூட நாங்கள் சங்கரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். உன் நினைவுகூட வந்து , உன்னைப்பற்றியும் பேசினோம்’ உன்னைப்பார்த்தபோது, நீயோவெனக் கூட சந்தேகித்தோம்.சங்கர் இறந்தது உனக்கு தெரியுமோ? -’ என்றான். சந்தேகத்திலும் தான் அவர்களுக்கு உருவாவது இவனுக்கு விநோதமாகப் பட்டது. அவர்களுக்குதான் புரியுமளவுக்குக்கூட, தனக்கு தன்னைப் புரியவில்லை என்ற எண்ணத்துடன், சங்கர் இறந்தது முன்பே தெரியுமா என்பதின்றியே, ‘ஆம் சங்கர் இறந்து விட்டான்-' என தன் மனதிற்குள்ளே இரைந்து சொல்லுவது போன்று சொன்னவன் தன் சிந்தனைப் போக்கிலே போய்க் கொண்டிருந்தான். இவ்விதம் அவர்களுடன் பேசிக்கொண்டு போனால் தன்னை பைத்தியக்காரத்தனமாக தவறாகப் புரிந்து கொள்ளுவார்கள் என சீக்கிரம் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு, தன் விடுதியை அடைந்தான்.

‘ஆம் சங்கர் இறந்து விட்டான்.' இவன் மனது ஒரு தரம் சொல்லிக்கொண்டது. அநேக மாணவர் மத்தியில் இவன் ஒரு மதிப்பில் வீற்றிருக்கும்போது, அவனை அங்கு பார்க்கமுடியாது. கொஞ்சம் எட்டியோ, அல்லது பார்வையில்கூட படமுடியாத வகையில், அவன் அங்கிருப்பது மட்டும் நிச்சயம் . அவசியமானால் பார்வையில் கொள்ளக்கூடிய விதத்தில், அவன் எங்கேயாவது பகற்கனவு கண்டு கொண்டிருப்பான் என இவன் எண்ணுவான். தான், அவன் எண்ணத்தில் எப்போதும் இருக்காமல் இருக்க முடியாது என்பதும் இவன் எண்ணம் போலும். தனியே, இருவரும் சேர்ந்து இருக்கும்போதுகூட, அதிகமாகப் பேசுவது இல்லை. பரந்த வெளியில் சித்திரம் காண இரண்டொரு கரிக்கிறுக்கல் கோடுளெனத் தோன்றும், அவன் வார்த்தைகள். இவன் மனோ விசாலத்தைப் பொருத்து , அதற்கு உருவம் கொடுக்க தன்னைத் தான் பார்பதற்கான தோற்றம் தான், இவன் கொள்ளவான். படிப்பிலும் மற்றும் எவ்விதத்திலும் இவனுக்கு சரிநிகரானவன். எவ்வளவு இனிமையாக துன்புறுத்தும் நினைவுகள் பாலிய கால பழைய நினைவுகள்!

அவனோ சில வருஷங்கள் படித்துவிட்டு, வேறுவிதப்படிப்பிற்கு வடக்கே சென்று விட்டான். போவதற்கு முன்பு இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டதும் ஞாபகம் வந்தது. அவனுடன் வெகுநாட்கள் கடிதத் தொடர்பு கொண்டிருந்தான். கடைசியாக , அவன் எழுதிய லெட்டருக்கும் இவன் பதில் எழுதி இருக்கிறான். அவனுடைய கடைசிக் கடிதம் வெகு தெளிவாக கண்முன் நின்றது... இவன் மனது மிக வருத்தமடைந்தது . அவர்கள் சொல்லுவதுபோல அவனோடு - அவன் இறப்போடு , தன் இருப்புகூட சந்தேகம் கொள்ளவதும் சரியெனத் தோன்றியது. அவன் இறுதிக் கடிதம் .......'உன்னை , என் பெற்றோர்கள் நன்கறிந்தவர்கள். ஏனைய குடும்பத்தினரும்கூட எப்படி எனத்தான் தெரியவில்லை. ஒரு தரம் , நீ என் வீட்டிற்கு வந்து சிறிது நேரம் பேசிப் போனாய். அப்போது அவர்கள் உன்னைப் பார்த்து இருக்கலாம். தெரிந்து கொண்டிருக்கலாம். அச்சிறு சந்திப்பு போதுமா, என்பதில் எனக்கு சந்தேகம். அடிக்கடி உன்னைப்பற்றி நான் அவர்களிடம் பேசியிருக்கிறேன். என் கற்பனையில் பிறந்து , அவர்கள் மனதில் நீ வாழ்வது , எவ்விதமோ தெரியவில்லை. எல்லோருமே, உன்னையும் பற்றி பேசுமளவிற்கு , நீ எங்கள் குடும்பத்தினரிடை ஒருவருரினென்ற தோற்றம் நாங்கள் கொண்டிருக்கிறோம். அடுத்த தடவை நான் ஊருக்குப் போகும்போது உன்னையும் அழைத்து வருவதாகச் சொல்லி இருக்கிறேன்...அப்போது, நீ வந்தபோது என் கடைசித் தங்கை சுமி, உன்னை கதவிடுக்கிலிருந்து பார்த்தது, உனக்குத் தெரிந்து இருக்க முடியாது. அவள் எப்போதாவது உன்னை குறிக்கும்போது, எவ்வளவு நன்றாக, அழகாகப் புரிந்து கொண்டிருக்கிறாள் தெரியுமா ? நான் போகும்போது, உனக்குக் காட்டுகிறேன். நீ அவளுடன் பேசி நான் பார்க்க வேண்டும்... என்னையின்றி நீ போக நேர்ந்தாலும், போய் வா . உன்னைப் பார்த்து அவர்கள் தெரிந்துகொள்ள முடியவிட்டாலும் ,நீ சொன்னால் நிச்சயமாக தெரிந்து கொண்டு விடுவார்கள் ..'

அன்றிரவு அவன் தூக்கம் காண, வெகு நேரமாயிற்று.

மறுநாள் காலையில் எழுந்தவுடன், அவன் இல்லாதே, அவர்கள் வீட்டிற்குப் போய் வரலாமெனக்கூட, நினைத்தான். அவன் எழுதியபோது, தனியாகப் போய் வருவதற்கும் , இப்போது அவன் இல்லாமல் போவதற்கும், ஏராள வித்தியாசம் இருக்கிறதென்பதை , அவன் அறியாமலில்லை. அவர்கள் இருந்த வீடும், இப்போது இவன் ஹோட்டலுக்குச் சமீபமாகத் தான் இருந்தது .இப்போது அவர்கள் அங்கு இருக்காமலும் இருக்கலாம் என்றும் தோன்றியது .ஒருக்கால் அவர்கள் இருந்தும், அங்குபோய், தனக்கு அவர்களைத் தெரிந்து, அவர்களுக்கு தன்னை அவர்களுக்குத் தன்னைத் தெரியாவிட்டால், எவ்வகையில் தன்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தமுடியும் என்பதும் சேர்ந்து, அங்குபோகும் எண்ணத்தைக் கைவிட்டான். பட்டிணத்தில், மேலும், தங்கவும் பிடிக்கவில்லை. ஊர்போகும் ஆவலும் இல்லை.

பட்டிணத்திலிருந்து தன்னூர் செல்லும், ரயில் பாதை நடுவில், ஒரு சிற்றூர் இருந்தது. அதனருகில், சரித்திரப் பிரசித்திபெற்ற ஒரு பாழடைந்த மலைக் கோட்டை இருப்பது இவனுக்குத் தெரியும். இதுவரையில், இவன் அதைப் பார்த்தது கிடையாது. இந்த சந்தர்ப்பத்தில் அதன் நினைவு கொண்டு அதைப் பார்க்கலாமென, பட்டிணத்தைவிட்டு காலை வண்டியிலே கிளம்பிவிட்டான்.

இருட்டு நன்றாகக் கண்டுவிட்டது . ரயில் அந்த ஸ்டேஷனை அடையும்போது, மேலும் நாழிகை ஆகிவிட்டது. குறிப்பிட்ட நேரத்தில் வண்டி வந்திருந்தால், மாலை நேரத்திலேயே அடைந்து இருக்க முடியும். அன்று ரயில் , மூன்று மணி நேரம் லேட். அந்த ஸ்டேஷனில் இவனைத் தவிர வேறு யாரும் இறங்கியதாகத் தெரியவில்லை, ஸ்டேஷனே இரண்டொரு சிப்பந்திகளைத் தவிரவும், வெளியே பிரயாணிகளுக்காக் காத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் , நான்கைந்து வண்டிகளையும் தவிர , ஜனசஞ்சாரமற்ற தோற்றம் தான் கொடுத்தது . அவன் பார்க்கப் போகுமிடம் ,இப்போது இருட்டிலும்கூட தெரியும் வகைக்கு , ஸ்டேஷனுக்கு சமீபத்தில்தான் இருந்தது. ஆனால், அவன் அன்றிரவு தங்க, மூன்று மைல்களுக்கப்பால் உள்ள, ஒரு சிறு நகரத்தை அடைய வேண்டிருந்தது . அக்குன்றுக் கோட்டை அடியில் ஒரு பெரிய பட்டிணம் ஒரு காலத்தில் இருந்தது . அது காலத்தில் நாகரீகத்திலும், நகர்ந்தும் , தேய்ந்தும், இப்போது இருக்கிட மடைந்திருக்கலாம். அல்லது மறைந்தே, சிறு குடிசைகளாக, மலையடிவாரத்தில், சிதறித் தோற்றம் கொண்டிருக்கலாம். மேற்கு அடி வானத்தில் மறைய விருக்கும் பிறை சந்திரன், அறையிருட்டைத்தான், அழகுடன் உலகிற்கு அளித்துக் கொண்டிருந்தது. ஆகாயத்தில் தெரிந்த எண்ணிலா நக்ஷத்திரங்கள், மொத்தமாக,சிறு ஒளிகொடுக்க இருந்தன.. ஸ்டேஷனில் இறங்கியவன், சிறிது நேரம் அப்பிராந்தியத்தைச் சுற்றிப் பார்வைகொண்டு, நின்றிருந்தான். மங்கிய ஒளித் திரையில், அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரியும் அநேக மலைக்குன்றுகள் பல ரூபத்தில் பதிந்திருக்கக் கண்டான். தேவாசுர யுத்தத்தில், ஒருவருக்கொருவர், மலைகளைப் பிடுங்கி அடித்துக் கொண்டதில் , சிதறித் தெறித்தனவென, ஆங்காங்கே தோன்றித் தெரிந்தனவே போலும் ,உயிரற்ற அவைகளுக்கு, எல்லையிலா கற்பனையில் ஜீவன் கொடுக்க, இச்சிறு ஒளிபோதும் - மேலே வானத்தில் எண்ணிலா நக்ஷத்திரங்கள் தெரிவதும் கீழே பூமீயில் கண்ணுக் கெட்டிய வரையில் ஆங்காங்கே தெளிக்கப் பட்டுத் தெரியும், சிறு குடிசைகளின் விளக்கொளியும் போதும் போலும். புதைவு கொண்ட அமைதி, விட்டுவிட்டு விம்முதலில் காணும் மெளனக் குமுறலின், ஓலமென எல்லாவற்றையும் பார்த்து, சிறிது நின்றிருந்தான்.

ஒரு வண்டியைப் பிடித்துக்கொண்டு, இதுவரையில் பார்க்காத, ஊர்ப்பயணத்தை, இருள் வழியே இப்போது இவனுக்குப் போக நேர்ந்தது. இது இவனுக்கு, ஒரு அதிசய அனுபவமாக இருக்கவும் அமைந்தது. ரயில் பிரயாணம் தாமதப்படாது இருந்து இருந்தால் , இருட்டுக் காணும் முன்பே ஊரை அடைந்து இருப்பான்.

இருப்பக்கமும் மரங்களுடர்ந்த இருள் சாலையில் வண்டி போகும்போது, இவனுக்கு, வண்டியில் போவதாகவே தோன்றவில்லை. காலதேச விவரணத்தைக் குறிக்க, ஆங்காங்கே சாலையோரத்தில் தெரியும் சிறுகுடிசைக் கடைகளின் விளக்கொளிதான் . சில கடைகளில் , தாமதமாக, இரவில் வெகுநேரம் சென்று சாமான்கள் வாங்கியது போன்றே நிசப்த்தில் இரண்டொருவர் தெரிந்தனர். விடாது, தொடர்ந்து கேட்கும், வண்டி, வண்டிக்காரன் , சப்தத்தை கவனிப்பில் கொள்ளமுடியவில்லை. குருட்டுத் தனமான , மெளனவெளித் தேடுதலாகப்பட்டது இப்பிரயாணம். நடுவீதியில், அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் நாய்கள், வண்டி இடிக்குமளவு விழித்தெழக் காத்து, தீடீரென ஊளையிட்டோடுவது , அடிக்கடி இவனுக்கு அதிர்ச்சி கொடுத்துக்கொண்டிருந்தது. இந்த தெரியாத ஊர்ப்பயணம், இருட்டில், ஒரு விநோத அனுபவமாகத்தான் இவனுக்கு பட்டது.

மறுநாள் காலையில், கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து, எல்லா காரியங்களையும் முடித்துக்கொண்டு, நடுப்பகல் பொழுதிற்கு முன்பே பார்க்கவேண்டியவைகளை பார்த்துவிட்டு திரும்பிவிடலாமென்று, கையில் ஆகாரம் கொண்டு போகாதே கிளம்பினான்.

காலை ஒளியில், சொட்டச்சொட்டக் குளித்து நின்று கண்ணுக்கொட்டிய தூரம் வரையில், அப்பிராந்தியம் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. அது ஒரு மலைப் பிரதேசமல்ல. ஒரு பெரிய பொட்டல், வெட்டவெளிப் பிரதேசம். ஆங்காங்கே, சின்னதும் பெரியதுமாக, அநேக குன்றுகள் சிதறித் தெரிந்தன. எட்டிய வெளி வரையில், கட்டான் தரையும், சிலசில இடங்களில் பசும்புல் பூமி, மரம் மட்டைகள், சிறு புதர்கள் ஆகியவைகளும், ஒன்றுகூடி, ஒரு பிரமிப்பை கொடுக்கும்வகையில் தெரிந்தது. தனித்தனியாக ஆடுமாடுகளும், இரண்டொரு மனிதர்கள், எட்டிய வெளியில் மந்தையென ஆடுமாடுகள் அசைவுத் தோற்றம்... ஆகியவைகள் அகண்ட வெளியில் கரையாது தோன்றியது. ஒவ்வொரு நேர ஒளியிலும், பருவகால வித்தியாசத்திலும், பார்ப்பவர் மனநிலையோடு கலந்து, வேவ்வேறு வகைக்குக்காண, எண்ணிலாச் சாயைக் கொண்டு தோற்றம் கொடுக்க இருந்தது, அப்பிராந்தியம். ஒரு உயரமான குன்றின்மீது, இவன் பார்க்க இருக்கும், கோட்டை தெரிந்தது. அதன் அடிவாரத்தை அடைந்தபோது, அவ்விடம் கொஞ்சம் செழுமையான பூமி எனத்தோன்ற , மர பட்டைகளும் , புதர்களும் மண்டியிருந்தன. மரத்திலிருந்த பக்ஷிகளின் குரல், தூரத்திலிருந்து கும்பலாகப் பறந்து வரும் பறவைகள் தன்னைத் தடவி ஸ்பரிசம் கொடுக்கும் காற்று இலைகளூடே சலசலப்பு கொள்ளுவது , எல்லாமுமே இவனுக்கு ஒரு பாழ் பட்டுக் கொண்டிருக்கும் தோற்றத்தைத் தான் கொடுத்தன. குன்றின் அடிவாரத்திலிருந்து,

கோட்டை கொத்தளங்கள், மாளிகை மாடங்கள், கோவில் கோபுரங்கள் எல்லாம் தெரிந்தன. மேலே ஏறி, சாவகாசமாக, எல்லாவற்றையும் பார்த்துவிட்டுத் திரும்பும்போது, நடுப்பகல் சரிவு கண்டுவிட்டது. களைப்பில் பசிக் கூடதோன்றவில்லை. சிறிது இளைப்பாறி, பிறகு நடக்கலாம், என ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். எதிரே உற்றுநோக்கிக் கொண்டிருந்தான். கோட்டைக் கொத்தளங்கள், எட்டித் தெரியும் குன்றுகள், எல்லாம் எட்டி நகர்ந்து மறையத் துடித்து, கானல் சலனத்தில் தெரிந்தன. இந்தக்கோட்டையை இது வரையில் பார்க்காதவனானாலும், அதைப்பற்றி அநேக விஷயங்களைக் கேட்டும், படித்தும் தெரிந்துகொண்டிருந்தான்.

மறைந்த கோவில் வெங்கலத் தேரையும்,கோட்டைப் பாதாளச் சுரங்க வழிகளையும் , பராபரிச் செய்திகளென, இவன் கேட்டிருக்கிறான். திரேதாயுகத்தில், அதன் ,நிர்மானம் ,ஸ்தல மகிமைப் புராணம், உண்மைக் கூற்றென சரித்திரம், கல்பனைக்கதைகள், முதலிய என்னவெல்லாமோ அதைப்பற்றி புத்தக ரூபமாகப் படித்தும் தெரிந்து கொண்டவன். இப்போதும் தனக்குத் தெரிந்த தெல்லாவற்றையும் நினைக்கும்போது, அபத்தமென, சிரிப்புகூட தோன்றியது. பக்தியில் கோவிலுக்கு வெங்கலத் தேரை வார்த்துவிட்டு, எதிரிகளை முறியடிக்க, விநோதமான குறுக்குப் பாதைகளை, வெகுயுக்தியுடன் கண்ட ஒரு மேதாவி வீரதீர சக்ரவர்த்தி, தொலைவிலே எதிர்க்க வரும் எதிரிகளை முறியடிக்க , அவர்கள் மத்தியில் திடீரெனப் புகவும், பிறகு தோற்றால் திடீரென மறைந்து கோட்டையை அடையவும், அநேக சுரங்கப் பாதைகளை அமைத்தான். ஒரு தரம் அவ்வகை செய்ய தீர்மானித்து, அநேகரை , எட்டிய வெளியில் விரோதிகளெனக்கண்டு அவர்களிடை புகுந்து வீரதீரபராக்கிரம செயல்கள் புரிந்து ,சுரங்க வழியே கோட்டையை அடையும் ஆவலில் தோற்று , மறைய நினைத்தப் போது எல்லாம் மறந்துவிட்டது . அவர்கள் மத்தியிலே அவர்களாகவே ‘ஜே-ஜே' கோஷமிட்டு கோட்டையை அடைந்தான். அவர்களும் மறந்து, தாங்களென மதித்து , இவனையே அரசனாக்கி , கோட்டையை அடைந்து கைகட்டி கட்டளைக்குக் காத்திருந்தனர். அவர்களோடு வெங்கலத் தேரும் ,சுரங்கப் பாதைகளும் மறந்து மறைந்துவிட்டன. இந்திரன் ,பிரும்மஹத்தி தோஷ நிவாரணம்,சுனையில் முழுகி சுவாமி தரிசனத்தில் கண்டது ... தற்போது ஒருவராலும் இந்திரனாக முடியாததினாலும் , பிராயசித்தம் காணும் வகைக்கு , பிரும்மஹத்தி செய்ய முடியாததினாலும் , அதுவும் மறந்துவிட்டது. மறைய பாழடைந்து கொண்டிருக்கிறது. அந்த அரசன் அவன் தகப்பன் அவன் -அவன் மகன் இவன் எனக்கொண்டு, கடல் கடந்து வாணிபம் செய்தது... இமயத்தை வென்றது, பேரவை கூட்டியது , முத்தமிழ் பரிமாறியது. அது இது எல்லாமும், மனப்பிராந்தியில் சரித்திரமாகி ,கல்பனைகளுடன், உண்மையும் மறந்துவிட்டது, மறைந்தும்விட்டது. கோவில்,கோட்டை, குளம் எல்லாமுமே, இவன் பார்வைக்கு,ஒன்றெனத் தோன்ற , இப்பாழ் தோற்றம் இவனெதிரில் மெளனமாக ஏங்கிப் புலம்பி நின்றன. கானல் சலனத்தில் எங்கேயே எட்டிய வெளியையும் நாடிப்போகத் துடித்துக் கொண்டிருக்கிறது.

எவ்வளவு அபத்தமாகப் படுகிறது எல்லாம். ஒரு அல்பசித்திகண்டு, தாங்கமுடியாது, மேலே போக வழிகாணாது, தவித்துக் கொந்தளிக்கும் மனோவியக்திகள் , இவ்வகை வெளிவிளக்க ஆர்ப்பாட்டம் , ஊர் கூட்டும் தமுக்கடி தமாஷா போன்று, எவ்வளவு அபத்தமாகப் படுகிறது. எவ்வித பிரமாண்டத் தோற்றமும் ஒரு அல்பசித்தியின், அல்ப பவிஷாசையின், வெளிவிளக்கமாகத்தானே, தோற்றம் கொள்ளுகிறது. இரவின் அந்தகார இருளைக் காண, ஒரு சிறு ஒளிப்பொறி போன்றாக முடியுமா, இப்பகல் தீவட்டிகளின் ஒளிகாட்ட முயலுதல்கள். எல்லாம் மாறி , மறைய, பாழடையத்தானே தோற்றம் கொள்ளுகிறது. பகல் ஒளியைப் பார்க்க , இவன் கண்கள் கூசின. சிறிது கண்களை மூடினான். யாரோ ஒருவன் ஒரு பெரிய பெட்டியைச் சுமந்து சென்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு,நீ பொட்டிக்குள்ளிருந்தே உன்னைத் தூக்கிக்கொண்டு போனால், சவுகரியமாகுமே என்று சொல்லிக் கொண்டிருந்த போது, எல்லாம் மறைந்தன. ஒரு கேட்காத சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. கண்களை உடனே திறந்து பார்த்தான். ஒரு காகம் மேலே மரக்கிளையிலிருந்து கரைந்து கொண்டிருந்தது. மாலை நேரம் கண்டு கொண்டிருந்தது, இவனைத் தூக்கி வாரிப் போடும்படி இருந்தது. நடுப்பகலில் அயர்வுக் கண்டு, தூங்கி மாலையில் விழித்ததென்பது , இவ்வளவு நொடிப்பொழுதில் என்று தோன்றியபோது ,அன்று மாலை தானோ,என்பதும் கூட, இவனால் அனுமானிக்க முடியவில்லை . மழை வருமெனத் தோன்றி ,எழுந்து நகரத்தை நோக்கி வேகமாக நடக்கலானான்.

ஊர் எல்லைக்கு வெளியே இருக்கும் பங்களாக்களைக் கடந்து கொண்டிருக்கும்போது, வேகமாக காற்று கிளம்பி சிறு தூரலாக மழை ஆரம்பமாயிற்று. அருகிலிருந்த ஒரு பங்களா வாயிற் கேட்டடியில் சாரல் படாது இருக்க ,சிறிது ஒதுங்கி நின்றிருந்தான்.காற்றில் மழை கலைந்தால், கொஞ்சம் காத்திருந்து , நனையாமல் போகலாம் என இவன் நினைத்து, சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்தான். சிறிது அப்பால் தள்ளி ,உள்ளே நின்ற அப்பங்களா வரண்டா தூணடியில், இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்று , இவனைக் கூர்ந்து கவனித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் உணர்ந்தான். காற்று ஓய்ந்து,மழை வலுக்க ஆரம்பித்தது . மறு முறை உள் பக்கம் பார்த்தான். அவள் அப்படியே நின்று தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டான். அங்கியிருப்பது ஒருவிதத்திலும் இவனுக்குப் பொருத்தமாகப் படவில்லை . நின்றாலும் நனையத்தான் வேண்டுமெனத் தோன்றியது. இனி நிற்பதும் பிடிக்கவில்லை என, நனைத்துகொண்டே நடக்க எண்ணியவனுக்கு , தன் அருகில் ஒருவன், கையில் குடையுடன் தன்னை உள்ளே அழைத்து வரண்டாவில் வந்து இருக்கும்படி சொன்னதும், இவன் அங்கு நாற்காலியில் உட்கார்ந்து இருப்பதும் ,ஒரு கனவு நிகழ்ச்சியைத்தான் கொள்ளும்படிஇருந்தது. வெளியே மப்பு மந்தாரத்திலும் , வெளிச்சம் இருந்தது.பங்களாவுக்குள் , விளக்கு போடுமளவிற்கு இருட்டு கண்டிருந்தது.வாயிற்படி கதவருகில் நின்று நிழலென ,தன்னை அவள் கவனித்தது தெரிந்தது. உடனே ,வாயில் விளக்கும் , உள் வெளிச்சமும் போடப்பட்டவுடன், ஒளி நடுவில் திடுக்கிட்டான், மறுபடியும் வாயில்படி பக்கம் பார்த்தான்.அவள் அங்கு நின்றிக்கவில்லை. உள்ளே சென்றுவிட்டாள்.அந்த பங்களாவுக்குள் ஒரு கார் வந்து நின்றது. அதனின்றும் உயர்ந்த உத்தியோகஸ்தரெனப்படும் ஒருவர் இறங்கி, ஒரு சேவகன் தொடர உள்ளே சென்றார். இவனைக் கடக்கும் போது பார்த்தும் பார்க்காத பாவனையில் மறைந்து விட்டார். அவள் கணவனென்பது இவனுக்குத் தெரிந்துவிட்டது. போகும்,‘தன்னை யார்'என்ன விசேஷமெனக் கேட்டிருந்தால் , அப்போது தன்னை எவ்விதம் அறிமுகப்படுத்தியிருக்க முடியும், என்பது இவனுக்கு விளங்கவில்லை. அவர் தன்னைக் கேட்காது போனதில் ,சிறிது நிம்மதி அடைந்தும் , இனியும் தனக்கு அவ்வகை நேராது இருக்க முடியுமா,எ ன்பது புரியாமலும் கூட , அங்கு விட்டு அகல முடியாமல் ,நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.ஏதோ, ஒரு தவறிய சூழ்நிலையில் சிக்கித்தவிப்பதான எண்ணம் இவன் மனம் கொண்டது.

சிறிது நேரத்தில் ,அவர் உடைகளை மாற்றிக்கொண்டு வெளியே வந்தார்......................... ‘மன்னிக்க வேண்டும், ஸார், கவனிக்கவில்லை. உள்ளே உட்கார்ந்து பேசலாமே...'என்று அவனை அழைத்துப் போகவும் , ஹாலில் நாற்காலியில் ,ஒருவர் முன் ஒருவராக உட்கார்ந்து கொண்டனர். முதலில் கண்ட நிலைக்கு , தற்போது கொஞ்சம் மாறுதலாகத் தோன்றினாலும் , மனது , ஒரே விதமாக இவனுக்கு வேதனை கொடுத்துக் கொண்டிருந்தது. தன்னை யாரென அறிமுகப் படுத்திக் கொள்ள முடியாத ,தன் நிலைமையைத் தான் ,வேதனைகளெனக் கண்டு கொண்டிருந்தான். ஒரு பரிசாகரன் , இரண்டு கப் காப்பி கொணர்ந்து வைக்க ,இருவரும் பருகினர். அவருக்குப் பின்னால் , தன் பார்வையில் அவள் பட எப்போது வந்தாள் என்பதை இவன் கவனிக்கவில்லை அத்தம்பதிகள் இருவர் முகத்திலும் ,ஒரு சோகக்களை படர்ந்து இருப்பதை, இவன் பார்த்தான் . தான் அவர்களுக்கு யாரெனப்படுகிறோம்,என்பதும் புரியவில்லை.

‘......உங்களுக்கு , எங்களைத் தெரியவில்லை' எனக் கொண்டு ,‘நாங்கள் எப்படி எங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும் , என்பது புரியவில்லை'என்றது இவனுக்குக் கொஞ்சம் தூக்கி வாரிப் போடும்படி இருந்தது. மேலும் இவன் திகைப்பை நீடிக்கா வண்ணம் தடுப்பதே போன்று ‘உங்களுக்கு ,உங்கள் நண்பன் , சங்கரை நினைவிருக்கிறது, என்று நினைக்கிறேன் என்று சொல்லி சிறிது நிறுத்தினார்'. இவனுக்கு எல்லாமே, ஒரு நொடியில் புரிந்துவிட்டது. அவரிடம் ஒரு மதிப்பும்,கொண்டான்.‘...........ஆமாம் சரிதான்' என்று பேசியதும், இவனுக்கு சரியாகப் பேச ஆரம்பித்தார்.அதற்கு முன், அவர் தன் மனைவியை சிறிது உள்ளே போய் வரச்சொன்னார்.

‘நீங்கள் சங்கர் நண்பர் சேகர் தான் என்று எங்களுக்குத் தெரிகிறது. உங்களுக்கும்,எங்களைத் தெரிகிறது ....ஆனால் ,இக்குடும்ப சம்பவங்கள் சில, உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.....உங்களுக்கும் தெரியவேண்டுமென்ற அவசியமுணர்ந்து,நான் சொல்லுகிறேன்.........’

ஆமாம் சங்கர் இறந்து விட்டான், என்றவன் பேச்சை நிறுத்திக்கொண்டான்.

‘ஆமாம் சங்கர் இறந்துவிட்டான்.....எப்படி என்றும்,உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம் .இருந்தாலும் நான் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமுணர்ந்து சொல்லுகிறேன். உங்கள் துக்கம் மேலும், அதிகமாகலாம் ஆனால் உங்களிடம் சொல்லுவதில் ,என் மனம் சிறிது ஆறுதல் கொள்ளும் .அதற்காக மன்னியுங்கள்’. சிறிது நிறுத்தி மேலும் பேசலானார்.

‘ஆமாம் , ஆயிரம் தடவை , நான் சொல்லி ஆறவேண்டிய துக்கம் அது. சுசிக்கோ, ஓரு தரம்கூட நினைக்க முடியாத, தாங்க முடியாத துக்கம். அவள் இப்போது இங்கில்லை. எங்கள் பிரியம், சங்கரிடம் எவ்வளவு எனத் தெரியவேண்டுமானால், ஒருக்கால் ,அது அவன் உங்களிடம் கொண்ட அளவு, என்று வேணுமானால் சொல்லலாம். ஏதோ விவரமற்று , அர்த்தமற்ற புதிர் போட இவ்வளவு சப்பை கட்டி பேசிக் கொண்டிருப்பதாக நீங்கள் எண்ணமாட்டீர்கள் . நான் சொல்லுவதற்கு ,நிதானம் கொள்ள,தவிப்பின் வெளியீடுதான், இவ்வகை பேச்சின் தடுமாட்டம், மன்னிக்கவேண்டும் ....?’ சிறிது நிறுத்தி மேலும் தொடர்ந்தார்.

‘...சரி சங்கர் இறந்தான். காலம் போனாலும் , அந்த சம்பவம் , மனவெளியில் மாறாது நிலைத்துவிட்டது. அதை மறுக்குமளவுக்கு இருக்கும் வகையில் , மேலும் கடுமையாக பாதிக்க, அத்துக்கம், மாறாது ஸ்திரமென நிலைத்துவிட்டது அவன் இறந்த செய்தித்தந்தி அவன் தகப்பனாருக்கு....அவன் இறுதிக் கடன்களை , அங்கேயே அவர்களே செய்யும்படி,இவர் பதில் தந்தி, வடக்கே, கண்கணாதேசத்தில், ஒரு சுரங்க கம்பெனியில்,ஒரு உயர்பதவி வகித்தவன், பூமிக்கடியில் இரண்டாயிரம் அடி கீழே சுரங்கத்தை பார்வையிடும் போது , ஏதோ விஷம் தீண்டி இறந்தான். மேலே கொண்டு வரும் அளவிற்கு, அவன் உயிர், உடம்பில் தரிக்கவில்லை. அவனைப் பார்ப்பதில் தான் அவன் ஆத்மா சாந்தியடையப் போகிறதா? தகப்பனார் பதில் தந்திதான் அதற்குப் பதில். பிறகு வெகுநாள் கழித்து அவன் சாமான்கள் வந்து சேர்ந்தன.....அவன் இறப்பை மறுக்குமளவுக்கு இல்லை? நீங்கள் இப்போது வந்தீர்கள் .உங்களை இந்த குடும்பத்தில் ஒருவராகத்தான் நாங்கள் கருதிக்கொண்டு இருக்கிறோம்.உங்களைப் பற்றி அவன் சொல்வதிலிருந்து, எங்களுக்கு, நன்றாகத் தெரியும்’......

‘எல்லோரிடமும் அவன் பிரியமாகப் பழகினாலும் அவன் கடைசித் தங்கை சுமியிடம்,அதிகப் பிரியம் போலும். அவன் இறந்தது,அவளை வெகுவாகப் பாதிக்க ஆரம்பித்தது.கடைசியாக, அவன் எழுதிய லெட்டர் அவளுக்குத்தான்... அவன் எப்போது வருகிறான் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் ,நாங்கள் எல்லோரும் அவளைச் சுற்றிச்சூழ்ந்து , அவளைப் படிக்க வொட்டாது செய்து கொண்டிருந்தோம். வெகு நேரமாயிற்று அவளுக்கு அதைப்படித்து முடிக்க. அவள் முகத்தை அப்போது பார்க்கவேண்டும்.! வர்ணிக்கக்கூடாது-முடியாது. படித்து முடித்தவுடன் லெட்டரை என்னிடம்தான் கொடுத்தாள். நான் அதை இரைந்து படித்தது,எல்லோரும் கேட்டது ...... அப்போது எங்களிடம் கண்ட குதூகலத்தில் , வாழ்க்கையே போய்க்கொண்டிருந்தால்... ‘சீக்கிரம் லீவு எடுத்துக் கொண்டு எல்லோரையும் பார்க்க வருவதாகவும் ,வரும்போது, உங்களையும் அநேகமாக ,நிச்சயமாக அழைத்துக் கொண்டு வருவதாயும் ... எழுதியிருந்தது. எல்லோருக்கும் உங்களை நன்றாகத் தெரியும். அவன் வருகை ஆவலில் ,உங்கள் வருகையும் கலந்து ,நாங்கள் வெகு ஆவலாக அந்த நாளை எதிர்பார்க்கும் ஆவல்தான் அது.உலகில் கொடுத்து வைப்பது, கொஞ்சநாள் தான் போலும்... சில நாட்சென்று , அந்த தந்தியும் வந்தது .எங்கள் நிலைமையை அப்போது , நீங்கள் உணர முடியும். அவன் இறப்பு, மறுக்குமளவிற்கு மீறியே போகிறது .அதிர்ந்துபோன, எங்களை துக்கம் பீடிக்க கொஞ்சம் கொஞ்சமாக வந்தது.

உள்ளே சென்றவள் , எப்போது திரும்பிவந்து அவன் பின் நின்றாள் என்பது , இவனுக்குத் தெரியவில்லை. கீழே தொங்கிய தலையுடன் , கேட்டுக்கொண்டிருந்தாள்.

‘....சங்கர் இறந்ததில் சுமி கலியாணப் பிரயத்தினங்கள் தடைப்பட்டது... பிறகு, அவளும் கன்னியாகவே போய் விட்டாள். தன் தமயன் இறப்பை, கொஞ்சநாள் வரையிலும் அவள் மனது ஒப்புக்கொள்ளவில்லை போலும். அவன் வருகையை எதிர்பார்த்து நிற்பவள்போன்று,வெகு வசீகரத் தோற்றம் கொண்டிருந்தாள். ஆயினும் உள்ளே குடிக்கொண்ட ஒரு ஏக்கம், வெளிக்கிளம்பியப்படி, காலத்தை எதிர்பார்த்திருந்ததுபோலும் , அப்போது அவள் தோற்றம் ,வெகு வசீகரமான தோற்றம் ,எங்கள் மனதிற்கு ,ஒரு அச்சத்தை விளைவித்துக் கொண்டிருந்தது.அவள் ஒரு பயங்கரத்தின் கவர்ச்சியாகத்தான் தோன்றினாள். அதிகமாக ஒருவரோடும்,பேசுவதில்லை. ஆனால் பேசாது இருந்தாகவும் சொல்ல முடியாது. வெகு ஆழ்ந்துதொனிக்குமாறு ,அவ்வப்போது,ஏதாவது திடுக்கிடப் பேசுவாள். என்னை ‘அண்ணா -அண்ணா’யென அழைத்து கொஞ்சம் அதிகமாகப் பேசுவாள் . பிறகு சிறிது சிறிதாக, அவள் மனம் ,சஞ்சலிக்க ஆரம்பித்தது. அப்போது அவளைப் பார்க்கும்போது மனதிற்கு வருத்தம் தோன்றுவதில்லை ...பார்த்து , பார்க்க முடியாது ,பெருமூச்சுடன் திரும்பிப்போவதுதான் முடியும்.... அவளும் போய் விட்டாள். அவறைத் தேடி..’ அவர் பேசி முடித்துவிட்டார். இவனைப் பார்த்தும் , எங்கெங்கேயும் பார்த்துக் கொண்டிருந்தார். எல்லையற்ற துக்கம் , அவர் நிதானப் பேச்சில் , வெகு தெளிவாகத் தெரிந்தது. சிறிதுநேர மெளனத்தில் , அவர் அவர்களுக்கு அந்த சூழ்நிலையில் தத்தம் எண்ணப்போக்கில் போய்க்கொண்டிருக்க,அவகாசமிருந்தது.

‘நீங்கள் அப்போது வந்து பார்த்திருந்தால் .........’ என்று ஆரம்பித்தவரை , இவன் இடைமறித்து ,

‘அப்படி நேர்ந்து இருக்க முடியாது’- என்று சொன்னான்.

‘என்ன - இப்போது வந்தது போல ,...’ எனத் திடுக்கிட அவர் கேட்டார்.

‘எப்படி முடியும்,இப்போது போல,அப்போது பார்ப்பது..’என்றவன் மேலும்,

‘அப்போது சங்கர் இறந்து விட்டான் . அப்போது எனக்கு ......எவ்வளவு தெரிந்து இருந்தும் அவன் இல்லாது நான் வந்தால் நீங்கள் தெரிந்து கொண்டிருக்க முடியாது .இது தெரியவில்லை உங்களுக்கு -?’என்றான் இவன். வெகு நிதானமாகவே, கொஞ்சம் அதிகமாகவும் பேசியும் விட்டான் . எண்ணங்கள் எங்கெங்கேயோ போய்க் கொண்டிருந்தன.

‘என்ன ’என்றார் அவர்.

‘இப்போது யதேச்சையாகவா , வந்து சேர்ந்தேன்? இல்லை. என் வாழ்க்கை அவன் கற்பனையில் , என்பதில் அவர்களும் கூட இருப்பது, உங்களுக்குத் தெரியவில்லை .இப்போது ? - நான் இருப்பதில் ’- என்றான்.

தெரிவது போன்ற தோற்றம் ,சிறிது கொண்டும், அவன் பார்க்குமிடத்தைப் பார்க்காது,அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர் அவர்கள். இவன் மனம் தடுமாறுவதாகவும் சிறிது எண்ணமடைந்தார் போலும்......

இவன் சொன்னான், ‘ இதுதான், நான் இப்போது சொல்லுவது. ’ எனச் சொல்லி எழ நினைத்தவன் மறுபடியும் உட்கார்ந்து கொண்டு, ‘நீங்கள் உங்கள் மனைவியை இப்போது பார்க்கவில்லை? அப்படித்தான் - ’ என்றான்.

‘எல்லோரும் காண இருப்பவளை நீங்கள் எப்படி உவமிப்பது -’ என்றார்.

‘என்ன நீங்களா பேசுவது..’ என்று கொஞ்சம் கடுமை தொனிக்க சொன்னவன், மீண்டும், நிதானமாக நீங்கள் உங்கள் மனைவியைப் பார்ப்பது போல நானும் சுமியைப் பார்க்கிறேன் - இப்போது பார்க்கிறேன்........சங்கர் இறக்க முடியும், என் வாழ்க்கையை, என்னை, கனவு காணாது இருக்கமுடியாது, அவன் கனவில் , நனவென வாழ்க்கை கொள்ளும், நான் இருக்குமளவும் அவன்?..........அவனை நாடி அவன் கனவை நாடி சுமி போகமுடியும் என்னைவிட்டு...எப்படி முடியும்? நான் இப்படியாவதை, தவிர்த்து,எப்படி வாழமுடியும்...’

இவன் நிதானமாக எழுந்து , வெளியே சென்று கொண்டிருந்தான். வாயிற்படியைத் தாண்டி , மற்றும் வரண்டாவின் இரண்டு மூன்று படிகளையும் தாண்டி, மேலும் , பங்களா கேட்டையும் தாண்டித்தான் , எதிரே போகும் வீதியை அடைய வேண்டும் . போவதை தடுக்கவோ ,மழையில் நனையாது போக , வசதியளிக்கவோ, இவர்களால் முடியவில்லை . பிரியா விடைக்கொண்டு ,போவதைத்தான் கேட்டைத்தாண்டி வீதியில் பார்வையில் மறையும் வரையில் , பார்த்து நின்றிருந்தனர். துக்கத்திற்கோ , கண்ணீர் துளிகளுக்கோ அப்போது அங்கே இடமில்லை.

காற்று கடுமையாக வீசிக்கொண்டிருந்தது . மழையும் சிறு தூரலாக விட்டபாடில்லை.

எழுத்து 1963

நன்றி - தட்டச்சு : தீட்சண்யா

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்