Showing posts with label கிருஷ்ணன் நம்பி. Show all posts
Showing posts with label கிருஷ்ணன் நம்பி. Show all posts

Sep 21, 2010

தங்க ஒரு…- கிருஷ்ணன் நம்பி

அன்புள்ள செல்லா,
உன் கடிதம் கிடைத்தது. என்ன செய்யச் சொல்லுகிறாய்? முயற்சியில் ஒன்றும் குறையில்லைknambi .  ஒவ்வொரு நாள் மாலையும், மந்தைவெளி, புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் என்று வேகமாக அலையத்தான் செய்கிறேன். மோட்டார்காரனுக்குக் காசு கொடுத்துக் கட்டி வராது என்று விளக்கெண்ணை வேறு வாங்கி வைத்திருக்கிறேன் காலில் போட்டுத் தேக்க. என் காலைப் பிடித்துவிட நீயும் இங்கு உடனே வர வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் என்ன செய்யச் சொல்லுகிறாய், செல்லா, முப்பது ரூபாய்க்கு மேல் போகவும் கூடாது. அதுவே நம் சக்திக்கு மீறியதுதான். போனால் போகிறது என்று கொடுக்கத் தயாராக இருந்தாலும்கூடக் கிடைக்க மாட்டேன் என்கிறதே.
நேற்று நடந்த அந்தச் சம்பவம், அந்தக் காட்சி, அதை நீ பார்த்திருக்க வேண்டுமே செல்லா, தேனாம்பேட்டையில்...
தேனாம்பேட்டை பக்கம்தான் போய்க்கொண்டிருந்தேன்.. ஒரு சந்து. குப்பையும், சேறும் சாக்கடையும், பன்றிக் கூட்டமும் - ஒரே அசுத்தக் களஞ்சியமாக இருந்தது. மூக்கைக் கழற்றி எறிந்துவிட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணமிட்டபடி நடந்தேன். அந்தச் சந்தினுள் எப்படித்தான் நுழைந்தேனோ, கால்கள் நடக்கக் கூசின. ஆனால் மனிதன் அங்கும் சுவாசித்துக் கொண்டு, சாப்பிட்டுக்கொண்டு, குழந்தை குட்டிகளோடு கொஞ்சிக் குலவிக்கொண்டு உட்கார்ந்துதான் இருக்கிறான். என்னத்தைச் சொல்ல? உடம்பெல்லாம் கூசிற்று. வேறு வழியில்லை. அந்தச் சந்தைக் கடந்துதான் நான் போகவேண்டிய இடத்துக்குப் போக வேண்டியிருந்தது. போன காரியம் மட்டும் வெற்றியாக முடிந்திருந்தால்... 'ஸ்டார்ட் இம்மீடியட்லி?' ஆம். அவ்வளவுதான். இந்நேரம் நீ நம் கண்மணி ராஜாவுடன் ரெயிலில் வந்துகொண்டிருந்திருப்பாய்... சரி, போகட்டும்; அந்தக் காட்சியை அல்லவா சொல்ல வந்தேன் -
போன காரியம் காயாய்ப் போன ஏமாற்றத்துடன், அந்த ஏமாற்றப் புண்ணுக்கு மருந்திடுவதுபோல ஜாலியான சினிமா மெட்டு ஒன்றைச் சீட்டியடித்தபடி அந்தச் சந்துவழி - அதிலிருந்து நான் தப்புவதற்கில்லை - வந்து கொண்டிருந்தேன்.
அப்போதுதான் அந்தக் காட்சி, ஒரு வேப்பமரத்தினடியில் இரண்டு பெரிய பழைய பூட்சுகள். கனமான, தடித்த, அங்கங்கே ஓட்டுப் போட்ட போலீஸ்காரன் பூட்சுகள். யாராவது போலீஸ்காரந்தான் காலுக்கு உதவாததை அங்கே வீசி எறிந்துவிட்டுப் போயிருக்க வேண்டும். அப்படியானால் யாரோ போலீஸ்காரன் தெருவில் விட்டுவிட்டுப் போன பூட்சுகள் இன்னும் அப்படியே, அங்கேயே கிடந்ததுகொண்டிருக்கிறதா? ஓட்டை, உடைசல் பழைய சாமான்கள் வாங்குகிறவன் கண்களில்கூடவா படவில்லை அவை! அந்தப் பூட்சுகளை மீண்டும் ஒருமுறை நான் கவனித்தேன். என்ன ஆச்சரியம்! ஒரு பூட்சுக்குள்ளிருந்து பந்து பந்தாய்ப் புகைச் சுருள் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது என்று பார்க்க வேப்பமரத்தின் அருகே போனேன். புகை மேலும் வெளிப்பட்ட வண்ணமாகவே இருக்கிறது. அது மட்டுமா! பூட்ஸின் வேறொரு பக்கத்திலிருந்து ஒரு சிறு துவாரத்தின் வழியாகத் தண்ணீர் வேறு வெளியே வந்துகொண்டிருந்தது!
அந்த பூட்சை நெருங்கி கைகளிரண்டையும் முதுகுப்புறம் கட்டிக்கொண்டு, தலையைக் குனிந்து புகை வெளிவரும் இடத்தை உற்றுப் பார்த்தேன். எரியும் சுடர் தெரிந்தது. வேறு எதுவும் தெளிவுபடவில்லை. உட்கார்ந்து நன்றாகப் பார்க்கலாம் என்று தரையில் குனிந்தேன். அப்போது சிறு தும்மல் சப்தம் உள்ளேயிருந்து கேட்டது. தும்மியவன் மனிதன் தான். என் நிழல் தன்மேல் கவிந்ததும் அந்த மனிதன் அண்ணாந்து மேலே பார்த்தான். "என்ன சார்! என்ன பார்க்கிறீர்கள்...? அடுப்பில் ஈர விறகை வைத்துவிட்டாள் வீட்டுக்காரி. புகைகிறது... என்ன விஷயம்? உள்ளே வாருங்களேன்...! ஒ! இல்லை, இல்லை... நானே வெளியே வருகிறேன்" என்று கூறிய அந்த மனிதன் தென்னை ஈரக் குச்சியால் படி கட்டிய ஒரு நூல் ஏணியின் மேல் வேகமாக ஏறி மேலே வந்தான். அவன் வேகமாக வந்தும் கூட என் பக்கம் அவன் வர இரண்டு நிமிஷம் பிடித்தது. மீசையை முறுக்கிவிட்டவாறு பூட்சின் மேல் தளத்தில் வந்து நின்றான் அவன். 'கலிவரின் யாத்திரை' என்ற இங்கிலீஷ் கதையில் வரும் லில்லிபுட் பேர்வழிகளைப் போலல்லவா இருக்கிறான் இவன்! உயரம் அரை விரற்கடை கூட இருக்காது. கருப்பாக இருந்தான். தலை வழுக்கை. கடுகாய் சிறுத்த மூக்கும் கண்ணும், காக்கி நிஜார் மட்டும் அணிந்திருந்தான். நெஞ்சில் கீரை விதை பரப்பியதுபோல மயிர் படர்ந்திருந்தது. உடம்பில் வேர்வையின் ஈரம். புகையில் நின்றதால் தானோ என்னவோ அவன் விழிகள் சிவந்துபோயிருந்தன. பின்னும் இரண்டு தரம் தன் கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டான். அவன் கேட்டான்:
"என்ன சார்...! ஏன் இப்படி நிற்கிறீர்கள்... ஏதோ மலைத்தமாதிரி...!"
இல்லை . அதெல்லாம் ஒன்றும் இல்லை... சும்மாதான்... இதுதான் உங்கள்... வீடா?" - வியப்புடன் கேட்டேன்.
"ஆம். இதில்தான் வசிக்கிறேன். ரொம்ப சௌகரியமான இடம். நான், என் மனைவி, மூன்று குழந்தைகள்; ஐந்து பேருக்குப் போதாதா?"
"என்ன இதிலா?"
"ஆம், மேலும் என் சொந்த வீடு. அதோ, அதுகூட என் வீடுதான்." - மற்றொரு பூட்சைச் சுட்டிக் காட்டினான்.
"ஒ ஹோ"
"முன்னே உங்களைப்போல் இருந்தபோது இது என் கால் பூட்சாகத் தான் இருந்தது. அப்போது நான் போலீஸ் கான்ஸ்டபில். இப்போது சி.ஐ.டி. ரகசிய போலீஸ். உத்தியோகம் கொஞ்சம் உயர்ந்துவிட்டது. இந்த உத்தியோக உயர்வுகூட உங்களைப் போல இருந்திருந்தால் கிடைத்திருக்கும் என்கிறீர்களா? இதற்கும் எத்தனை சிபாரிசு என்கிறீர்கள்...!" என்று அலுத்துக்கொண்டான். அந்த மனிதன். அவன் என்னைக் கேட்டான்.
"நீங்கள் எங்கே... இப்படி இடம் தேடியா?..." மிகவும் தாழ்ந்த குரலில், ஒருவித அனுதாப சுருதியில் அவன் இதைக்கேட்டான்.
"ஆம்... இடம்தான்...தேட ஆரம்பித்து ரொம்ப ரொம்ப நாளாகிறது. முப்பது ரூபாய்க்குள் ஒரு இடம்.... என் குழந்தை, மனைவி, நான் - மூன்று பேருக்கும். கிடைத்தால்தானே. அவள் ஊரிலிருந்து வாரத்துக்கு நாலு கடிதம் எழுதுகிறான், 'கிடைத்ததா?... கிளம்பலாமா?' என்று இப்போதும், இதோ இந்தப் பக்கம் தேடிவிட்டுத்தான்... இடம் இருக்கிறது. ஐம்பது ரூபாயாம்...! எங்கே போவது?...வெறும் குமாஸ்தா." - நான் பெருமூச்செறிந்தேன். என் பெருமூச்சுக்கு உரிய மரியாதை செலுத்துபவன் போல் ஒரு நிமிஷம் மௌனமாக நின்றுவிட்டுப் பிறகு சொன்னான்.
"இதோ, இந்த வீட்டை வாடகைக்கு விடுவதாகத்தான் இருக்கிறேன். ஐந்து ரூபாய் மாதத்துக்கு. இரண்டு மாத வாடகை அட்வான்சாகக் கொடுத்துவிட வேண்டும். நேற்று ஒருவர் வந்து பார்த்துவிட்டுப் போனார். இந்த வாடகை அதிகமாம். கட்டி வராதாம். வேண்டாமாம்; போனால் போய்விட்டுப் போகிறார். அவருடைய மாத வருவாயே முப்பது ரூபாய்தானாம். அதற்க்கு நான் என்ன பண்ணுவது? எனக்கும் என்ன, மாசம் ஆயிரமா வருகிறது!... சரி, அது போகட்டும் உங்களுக்குக் கொடுத்துவிடலாம் என்றால்... ஒ, அது முடியாதே, நீங்கள்... நீங்கள்... என்ன செய்ய? ரொம்பவும் பரிதாபமாக இருக்கிறது; இரண்டு மாதமாக அந்த வீடு காலியாகத்தான் கிடக்கிறது. முன்னே இருந்த ஆசாமி இரண்டு மாத வாடகை பாக்கி போட்டுவிட்டு, பணம் கொடுக்காமல் கம்பி நீட்டிவிட்டான். போலீஸ்காரனுக்கே மிளகாய் அரைத்துவிட்டுப் போய்விட்டான். அவனை நான் விடப்போவதில்லை... அது சரி, நீங்கள் நிற்கிறீர்களே!... உட்காரச் சொல்லவும்..."
"அதனால் என்ன... பரவாயில்லை. ஒரு இடம் கிடைப்பதாயிருந்தால் இப்படியே நெஞ்சில் கையைக் கட்டிக்கொண்டு நூறு நூற்றைம்பது வருஷம் நின்றுவிடலாம். கால் வலித்தாலும், இடம் கிடைத்த பிறகு கடுப்புத் தீர உட்கார்ந்து ஆறலாமல்லவா? ஆனால் ஒரு யுகம் நின்றாலாவது கிடைக்குமா?... ஹுஹும், உங்கள் வீட்டைப் பயன்படுத்திக்கொள்ளும் அதிருஷ்டமும் எனக்கில்லை. என்ன பண்ணுவது... ஆமாம்... நீங்கள் எப்படி... இப்படி..." - நான் இப்படி இழுத்தேன்.
"ஒ! புரிந்தது. என் இந்த உருவத்தைத்தானே கேட்கிறீர்கள்! எப்படி இந்த உருவம் என்று. அப்படித்தானே? இந்தப் பட்டணத்தில் இன்னும் கொஞ்ச காலம் நீங்கள் தங்கியிருந்துவிட்டால் போதும்; விடை தானாகவே உங்களுக்குத் தெரிந்துவிடும்... இருந்தாலும் நானே சொல்லிவிடுகிறேன்... இந்தப் பட்டணத்துக்கு நான் வந்து சேர்ந்து எத்தனையோ வருஷங்கலாகிவிட்டன. நாங்கள் நானும் என் மனைவியும். கிராமத்திலிருந்து வந்தோம். எங்கள் கல்யாணம் நடந்த மறுநாள் எனக்கு வேலை உத்தரவு வந்தது. எல்லாம் அவளுடைய அதிர்ஷ்டம்தான். போலீஸ் வேலை. அப்போது நான் உங்களை விடவும் ஒரு பிடி உயரமாக இருந்ததாகத்தான் நினைவு. பட்டணம் வந்து இடம் தேடி அலைந்தேன். இந்தப் பட்டணம் என்றுதான் நெருக்கமாக இருந்ததில்லை? அது சரி, இது ஒரு பட்டணம் என்றா நினைக்கிறீர்கள்? ஒ! இது ஒரு சந்தை; பெரிய சந்தை. சந்தை நெருக்கடியாகத்தான் இருக்கும். ஆனால் இந்தச் சந்தை கலைவதில்லை. கூடிய சந்தை கூடியபடியே இருக்கிறது. சந்தையிலேயே எல்லாரும் தங்கிவிட்டார்கள். அப்போதும் வெய்யில் இப்படிதான். நெருப்பு. இடம் தேடி வெய்யிலில் நான் அலைந்து திரிந்தேன். வெய்யில் காலம் முடிந்து மழையின் காலம் வந்து மீண்டும் வெயிலின் காலம் தொடர்ந்தது. அப்போதும் நான் இந்தப் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டுதான் இருந்தேன். கடைசியில், ரொம்ப ரொம்பக் கடைசியில், ஒரு இடம் கிடைத்தது. அந்த இடத்துக்கு நான் என்ன வாடகை கொடுத்தேன் என்பது நினைவில்லை. ஆனால் நிச்சயம் என் சக்திக்கு மீறிய வாடகைதான். கிராமத்துக்குப் போய் என் மனைவியை அழைத்து வந்தேன். கிடைத்த இடம் கொஞ்சம் சௌகரியமாகவே இருந்தது. உட்காரவும், உடம்பைச் சற்று வளைத்துப் படுக்கவும் தாராளமாகவே இருந்தது. அந்த இடத்தில் நாங்கள் வளைந்து வளைந்து படுத்திருந்தோம். ஆனால் எப்போதுமே காலை நீட்டிக்கொண்டு உட்கார அங்கே வசதி இருந்ததே, அது பெரிய விஷயம் அல்லவா? என்றாலும் இரவில் அப்படி உட்கார்ந்து எங்களால் தூங்க முடியவில்லை. மேலும் அப்போது நாங்கள் இளம் தம்பதிகள்... என்ன ஸார், கேட்கிறீர்களா? ரொம்பவும் சுருக்கமாகத்தான் சொல்லுகிறேன்..."
"ம்... சொல்லுங்கள்." - நான் தலையைப் பலமாகச் சுழற்றினேன்.
"கொஞ்ச காலத்துக்குப் பிறகு அந்த வீட்டை நங்கள் காலி சேயை வேண்டியதாயிற்று. வீட்டுக்காரன் வாடகையை உயர்த்தினான். மீசையை முறுக்கிக்கொண்டு நான் முறைத்தேன். என் போலீஸ் ஜம்பம் ஒன்றும் அவனிடம் சாயவில்லை. அவன் கண்டிப்பாகப் பேசிவிட்டான். மேலும் எனது கூனல் விழுந்த முதுகைப் பார்த்து அவன் கேலியாகச் சிரிக்க வேறு செய்தான். ஆம், அந்த இடைக்காலத்தில் என் முதுகும் என் மனைவியின் முதுகும் நன்றாக வளைந்து கூனிக் குறுகிப் போய்விட்டிருந்தது. வெகு நாட்களாக வளைந்து வளைந்து படுத்திருந்ததால்தானோ என்னமோ எலும்பு வில்லாயின எங்கள் முதுகுகள்."
மீண்டும் இடம் தேடித் திரிந்தேன். கூனல் முதுகுடன் பட்டணத்து வெய்யிலில் சிறிது காலம் சுற்றிய பின் ஒரு இடம் கிடைத்தது. நாலு வருஷம் தேடிய பிறகுதான் கிடைக்கும் என்று முதலில் நினைத்தேன். எப்படியோ சீக்கிரம் கிடைத்துவிட்டது. எங்கள் அதிர்ஷ்டம்தான். முன்னை விடவும் வாடகை சிறிது அதிகம். இடம் முன்னை விடவும் சற்று சிறிது. ஆனால் கால் நீட்டி நாங்கள் உட்கார முடிந்தது. இரவில் உன்னை விடவும் முதுகை வளைத்து, அரை வட்டமாகச் சுருண்டு கிடக்க இடமிருந்தது. நானும் என் மனைவியும் சேர்ந்து ஒரு வட்டமாகக் கிடப்போம்.
"இந்த வட்டத்துக்குள் இருக்கும் காலி இடத்தை யாருக்காவது ஒண்டிக் கிடித்தனம் விடலாமல்லவா?" என்று என் வீட்டுக்காரி கேட்டாள். அவள் மிகவும் கெட்டிக்காரி என்பதில் என்ன சந்தேகம்? அப்படி யாராவது குடித்தனம் பண்ண வந்தால் அது எங்களுக்கு லாபம்தானே? எங்கள் வருவாய் சிறிது அதிகரிக்காதா? அந்த வீட்டில் வைத்துத்தான் எங்களுக்குக் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்தன. பிறந்த குழந்தைகளின் முதுகுகளும் வளைந்தே இருந்தன. ஒருகால் கருப்பையில் அவைகள் நிமிர்ந்தே இருந்திருக்கலாம்.
"நாள் செல்லச் செல்ல ஒரு அதிசயம் நிகழ்ந்தது. எங்கள் முதுகுகள் சிறிது சிறிதாக நிமிரத் தொடங்கின. அப்படியே எங்கள் குழந்தைகளின் முதுகுகளும் படிப்படியாக நிமிர்ந்து வந்ததை எல்லையற்ற மகிழ்ச்சியுடன் நாங்கள் கவனித்து வந்தோம். ஆனால் கொஞ்ச நாளில் எங்கள் குழந்தைகளிரண்டும் ஒன்றன் பின் ஒன்றாகத் திடுதிப்பென்று இறந்து போயின. நாங்களும் நோய்வாய்ப்பட்டோம். குழந்தைகள் இறந்ததில் நாங்கள் மிகவும் துயரம் அடைந்தோம் என்றாலும், அந்தத் துயர நிகழ்ச்சிக்குப் பின் எங்கள் வாழ்க்கையில் அற்புதமான சில சௌகரியங்கள் வந்து கூடின. முதுகு கூனி, முதுகு நிமிர்ந்த பின் முன்னைவிடவும் குறுகிச் சிறுத்தோம். நாங்கள் இருந்த வீடு ஒரு மாளிகையை எங்களுக்குத் தோன்றும் வண்ணம் நாங்கள் உருமாற்றம் கொண்டுவிட்டதை என்னவென்று சொல்ல? ஒன்று சிறுத்தது ஒன்று சிருக்கவில்லை என்றில்லாதபடி எங்கள் எல்லா அங்கங்களும் அதனதன் அளவில சீராக, சுருக்கமாக - நானும் அவளும் கண்ணாடியில் கண்டு களிப்புரும்படியாக  –  அமைந்துவிட்டதை என்னவென்று  சொல்ல!  இருந்த  சிறு குடில் பெரிய வீடாகவும் அணிந்து வந்த சரியான சட்டைகள் தொளதொளத்து, உடல் நீண்டு, கை நீண்டு, தோல் பட்டை நீண்டு.... பேஷ், பேஷ்!  ஒரு வேட்டியை இரண்டு வேட்டியாக்கிக் கொள்ள முடிந்தது! பழைய ஒரு நாள் சாப்பாட்டில் இரண்டு நாள் பசியைத் தீர்த்துக்கொள்ள முடிந்தது. ஒரு நாளைக்கு ஓரணா மோர் வாங்கிய நாங்கள் இப்போது அரை அணா மோர் வாங்கத் தொடங்கினோம். நாங்கள் பாதியாய்ச் சிறுக்க எங்கள் தேவைகளும் பாதியாய்ச் சிறுத்தன. ஆனால் பழைய வருவாய் அப்படியேதான் வந்தது. இருந்த வீடு முன்யிருந்தது போலவேதான் இருந்தது. ஆ! என்ன ஆனந்தம்! என்ன வெற்றி! பேரதிர்ஷ்டம்...!"
அந்த மனிதன் சொல்லச் சொல்ல நான் அமைதியாகவும், ஆச்சரியத்தை விழுங்கிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் நின்றேன். அக்குறுமனிதன் உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டக்காரன் தான்.
நெற்றி வியர்வையை வழித்து விட்டு விட்டு இரண்டு இடுப்பிலும் இரண்டு கைகளையும் மீண்டும் ஊன்றிக் கொண்டு என்னை அண்ணாந்து நோக்கினான் அந்த மனிதன்.
"உம் அப்புறம்" என்றேன் நான்.
பொழுது இருட்டத் தொடங்கிற்று. தெரு விளக்குகள் ஒரு வகைச் சோகம் கலந்த மங்கிய ஒளியை மண்ணில் தேய்க்கத் தொடங்கின. தன் பேச்சில் தானே சலிப்புற்றவன் போல் அந்த 'இக்கினியூண்டு' மனிதன், "அப்புறம் என்ன ஸார்..." என்று ஒரு இழுப்பு இழுத்தான். நானும் சற்றுச் சலிப்புற்றுத்தான் இருந்தேன். போய்விடலாம் என்றே தோன்றியது. ஆபீஸ் வேலைகளும் மண்டையை அழுத்திற்று. ஆனாலும் நான் பேச்சை வளர்க்க முனைந்தேன். ஏனென்றால் அறையும் குறையுமாய் விஷயத்தை விட்டுவிட்டால் உனக்கு எரிச்சலாக வருமே செல்லா. எதையுமே கடைசிவரை தெரிந்து கொள்ளும் அக்கறை உள்ளவலாயிற்றே நீ. ஆனால் உலகத்தில் எதையுமே கடைசிவரை தெரிந்துகொள்ள முடியாது என்பதை மீண்டும் உனக்குச் சொல்லுகிறேன். கடைசி கடைசி என்பதெல்லாம் வெறும் மயக்கம்தான். சரி போகட்டும்... பாதியாகக் குருகியவன் பூட்சுக்குள் புகும் அளவுக்கு எப்படி ரூபம் பெற்றான் என்று நீ அடுத்த கடிதத்தில் நிச்சயமாகக் கேட்பாய். நான் இப்படி இங்கே நிறுத்திவிட்டால். உனக்காக அவனிடம் பேச்சை வளர்த்தினேன். " உம் அப்புறம், அப்புறம்" என்றேன்.
அவன் சிரித்தான். அரை நிக்கரை மேலே இழுத்துச் சரி செய்துகொண்டான். தொண்டையையைக் கனைத்துக் குரலை வசதி பண்ணிக்கொண்டான்.
அப்புறம் என்ன?... அதேதான், அப்புறமும் எங்களுக்குக் குழந்தைகள் பிறந்தன. குடும்பம் பெருகிற்று. என் மனைவி வியாதிகளில் விழுந்தாள்; எழுந்தால். குழந்தைகளும் நோய் நொடிப்பட்டன. செலவு அதிகரித்தது. இடையில் வாய்த்திருந்த சௌகரியங்கள் இல்லாமலாயிற்று. விலைவாசிகள் நாள் செல்லச் செல்ல விஷ வேகத்துடன் ஏறின. உலகத்திலே எங்கெங்கோ கடும் யுத்தங்கள்  மூண்டன.  இந்தப் பட்டணத்தின் நெருக்கடி பத்து மடங்காய், நூறு மடங்காய், மிகுந்தது. வீட்டு வாடகை என்னும் பேய் அமோகமாய் வானை முட்டிக்கொண்டு எழுந்தது. மீண்டும் நான் இருந்த வீட்டை விட்டுச் செல்ல வேண்டியவனானேன். இன்னும் பதினைந்து கூட்டிக் கொடு என்றான் வீட்டுக்காரன். என் சம்பளம் அப்போது சிறிதளவு ஏறியிருந்தது. என்றாலும் விலைவாசியும், குடும்பமும் பெருத்துப் போனதால் நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை. மறுபடியும் ' ஒரு வீடு' என்று நாயை நடந்தேன். இந்தப் பட்டணத்தைச் சுற்றிச் சுற்றி... போதும், இப்படிப் பேசிக்கொண்டே இருக்கப் பிடிக்கவில்லை ஸார்! மேலும் இப்போ எனக்குப் பசிக்கிறது. விஷயத்தை ஓட்டிச் ஒல்லி முடித்து உங்களையும் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன். நீங்கள் நூறு வருஷமாய் நின்றுகொண்டிருப்பதாகவும் நூற்றைம்பது வருஷமாய் என் சுயசரிதத்தை உங்களிடம் கடைவிரித்துக் கொண்டிருப்பதாகவும் எனக்குத் தோன்றுகிறது... ஏன், உங்களுக்குப் பசிக்கவில்லையா?... ஹோட்டல்... மணி இப்போது ஏழரை இருக்காது....
"இருக்கும். இருக்கும்... அப்புறம் என்ன?"
"அப்புறம் என்ன? உலகத்திலேயே மிகச் சிறிய வீடு எனக்குக் கிடைத்தது. அதில் நானும் குடும்பமும் குடிபுகுந்தோம். எங்களை இரண்டாக, நாளாக மடக்கிக்கொண்டு அவ்வீட்டில் படுத்து உறங்கினோம். அட்டைகளாய் இழைத்தோம். எங்கள் முதுகுகள் மேலும் வளைந்து நிமிர்ந்தது. மேலும் நாங்கள் குறுகிச் சிருத்தோம். இருந்த குழந்தைகள் இறந்தன. மேலும் பிறந்தன. ஒரு நாள் உணவு நாலு நாள் பசியைத் தீர்த்தது. நாலுநாள் பசி தீர்த்த ஒரு நாள் உணவின் விலை முன்னை விடவும் எட்டு மடங்காய் ஏறிற்று. உலகம் புதிய பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு திண்டாடியது. பத்துச் சிக்கல்கள் ஒரு புறம் விடுபடுகையில் பதினாயிரம் புதுச்சிக்கல்கள் மற்றொரு புறம் கால்பரப்பி எழுந்தன.
"பிறகு உலகத்திலேயே மிகச் சிறிய அந்த வீட்டையும் துறக்க வேண்டியவர்களானோம். குடும்பம் பெருத்தாலும், நோய்நெடிச் செலவுகள் மிகுந்தாலும், விலைவாசிகள் எட்ட முடியாதபடிச் சிறகடித்துப் பறந்தாலும், உடல் குருகியதால் ஏற்பட்ட சௌகரியங்கள் அடிபட்டுப் போயின. 
"பிறகு ஒரு கோழிக் கூட்டில் நாங்கள் குடிபுகுந்தோம்..."
"பிறகு இந்த வீட்டுக்கு - இந்த பூட்சுகள்! இது எனது பழைய பூட்சு. போலீசில் முதலில் நான் சேர்ந்த காலத்ஹ்டில் சர்க்கார் எனக்குக் கொடுத்தது. நோக்கமின்றியே பத்திரமாகப் பாதுகாத்துக்கொண்டு வந்தேன். ஓட்டுப் போட்டதென்றாலும் உறுதியானது. இது மிகவும் சௌகரியம், உள்ளே பல வசதிகள் பண்ணி வைத்திருக்கிறேன். வந்து பார்க்கிறீர்களா? ஒ! மன்னிக்க வேண்டும். உங்களை ரொம்பவும் காக்க வைத்துவிட்டேன். மணி இப்போது எட்டு இராதா?... இருக்கும். நீங்கள் பொங்கல். உங்களுக்குப் பசிக்கவில்லையா? எனக்குப் பசிக்கிறது. கடவுள் கிருபையால் சீக்கிரமே உங்களுக்கு வீடு கிடைக்க வேண்டும்... சரி போய் வாருங்கள். என் மனைவி இதோ என்னைக் கூப்பிட்டுக் கத்துகிறாள். கேட்கிறதா?...
கரம் கூப்பிவிட்டு நூலேணியில் கால் வைத்தான் அந்த ஆசாமி. மீண்டும் ஒரு பெருமூச்சை உதறிவிட்டு நான் அங்கிருந்து புறப்பட்டேன்.
செல்வா, நம்மை விடவும் அந்தக் குறுகல் பேர்வழி அதிர்ஷ்டசாலி இல்லை என்று உன்னால் நினைக்க முடிகிறதா. செருப்புக்கு ஏற்றபடி எல்லாம் அவள் காலைச் ஹ்சின்னது பண்ணிக் கொடுத்துக்கொண்டே வந்திருக்கிறான் இறைவன்.
இப்போது என்ன சொல்கிறாய்? நாமும் அவனைப் போல்... அடக் கடவுளே!
இப்படிக்கு ,
உயரமான உன் கணவன்
இலக்கிய வட்டம்.

நன்றி: கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள், முழுத்தொகுப்பு - காலச்சுவடு பதிப்பகம்

தட்டச்சு :கிருஷ்ணபிரபு

Aug 17, 2010

கிருஷ்ணன் நம்பி கவிதைகள்


1.
ஆனை வேணுமென்று _ குழந்தை
அழுது கூச்சலிட்டான்
ஆனை கொண்டு வந்தார் _ ஆனால் knambi
அழுகை தீரவில்லை 

பானை வேணும் என்றான் _ குழந்தை
பானை கொண்டு வந்தார்
ஆனை பானை இரண்டும் _ வந்தும்
அழுகை ஓயவில்லை  

`இன்னும் அழுவதேனோ _ குழந்தாய்
இனியும் என்ன வேணும்?’
என்று கேட்டபோது _ குழந்தை
ஏங்கி அழுது கொண்டு

இந்தப் பானைக்குள்ளே _ அந்த
ஆணை போக வேணும்!
என்று சொல்லுகின்றான் _ ஐயோ
என்ன செய்ய முடியும்?

2.
அம்பிப் பாப்பா விஷயம் என்றால்
அம்மா சலுகை அதிகம்தான் _ எங்கள்
அம்மா சலுகை அதிகம்தான்.

பாலைக் கொட்டிக் கவிழ்த்தினாலும்
`பார் சமர்த்தை’ என்கிறாள்!
சீலத்தோடு சிரித்துக் கொண்டே
சிந்திய பாலைத் துடைக்கிறாள் _ அம்மா
சிந்திய பாலைத் துடைக்கிறாள்!

பள்ளிப் புத்தகத்தை எல்லாம்
பறித்துக் கிழிக்கும் வேளையில்
அள்ளி அணைத்து முத்தமிட்டு
அம்பிப் பயலைப் புகழ்கிறாள் _ அம்மா
அம்பிப் பயலைப் புகழ்கிறாள்

கண்ணில் கண்ட பொருளையெல்லாம்
காலால் உதைத்துத் தள்ளினால்
`கண்ணன் இவன்’ என்று அம்மா
கண்டது போல் சொல்கிறாள் _ ரொம்பக்
கண்டதுபோல் சொல்கிறாள்!

அம்மா என்று திக்கித் திக்கி
அம்பி உளறிக் கொட்டினால்
அம்பிப் பயலை வாரி எடுத்து
அறிஞன் என்று மெச்சுறாள் _ அம்மா
அறிஞன் என்று மெச்சுறாள்!

அம்பிப் பாப்பா விஷயம் என்றால்
அம்மா சலுகை அதிகம்தான் _ எங்கள்
அம்மா ரொம்ப மோசம்தான்!

3. மண்ணிலே பொன்னிருக்கு!

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

கையில் வலு இருக்கோ _உன்றன்
மெய்யில் வலு இருக்கோ?
கையில் வலு உளதேல் _ உன்றன்
மெய்யில் வலு உளதேல்,.

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

மண்வெட்டி ஒன்றுளதோ _ நல்ல
மண்வெட்டி ஒன்றுளதோ?
மண்வெட்டி ஒன்றுளதேல் _ நல்ல

மண்வெட்டி ஒன்றுளதேல்,

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

காணி நிலம் உளதோ _ ஒரு
காணி நிலம் உளதோ?
காணி நிலம் உளதேல் _ ஒரு
காணி நிலம் உளதேல்,

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

வெட்டத் தெரியாதோ _ வேர்வை
கொட்டத் தெரியாதோ?
வெட்டத் தெரியுமெனில் _ வேர்வை
கொட்டத் தெரியுமெனில்,

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

வித்து சிறிதிருக்கோ _ மழை
வெய்யில் சிறிதிருக்கோ?
வித்து சிறிதுளதேல் _ மழை
வெய்யில் சிறிதுளதேல்,

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

ஊக்கம் உனக்கிருக்கோ _ வேலை
பார்க்கத் திறமிருக்கோ?
ஊக்கம் உனக்கிருந்தால் _ வேலை
பார்க்கத் திறமிருந்தால்,

மண்ணிலே பொன்னிருக்கு _ இந்த
மண்ணிலே பொன்னிருக்கு!

                                
                              
நன்றி: கிருஷ்ணன் நம்பி படைப்புலகம் தமிழாலயம் வெளியீடு.

Jul 19, 2009

கிருஷ்ணன் நம்பியின் கதைகள்-நகுலன்

நகுலன்                                                       

நன்றி: கிருஷ்ணன் நம்பி படைப்புலகம் தமிழாலயம் வெளியீடு.

நமக்குப் பழக்கமான விஷயங்களைப் பழக்கமான முறையில் காரியத்திறமையால் செய்வதால் சிறப்புப்பெறும் சிறப்பு கிருஷ்ணன் நம்பி கதைகளில் இல்லை. எந்த விஷயங்களையும் கலா பூர்வமாக உருவாக்குவதில் நாம் சற்றும் எதிர்பார்க்காத ஒரு இலக்கியத் தன்மையைப் பெற்றிருப்பது அவருடைய கலையின் சிறப்பு. இதனால்தான் அவருடைய கதைகளை முதல்முறை படிப்பதிலிருந்து அவைகளின் சிறப்பை நம்மால் உணரமுடிவதில்லை. ஒரு முறைக்கு இரு முறையாக நின்று நிதானமாகப் படிக்கையில் நமக்கு அவை ஒரு தனி இலக்கிய சுகத்தைத் தருகின்றன.

இவ்வாறு படிப்பதற்கு ஒரு பயிற்சியும் பக்குவமும் வேண்டும். நாம் சம்பிரதாயமாக ஏற்றுக் கொண்டு பழகிய சிறுகதை உருவை மறந்து அவர் சிருஷ்டி செய்திருக்கும் உருவை அறிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைப் பருவத்தில் எந்த அனுபவமும் நம்மை நேரிடையாகத் தாக்குகையில் அந்தத் தாக்குதலுக்குள்ள ஒரு சக்தியும் வசீகரமும் பிற்காலத்தில் நமக்கு ஷணித்து விடுகிறது. இதற்கு ஒரு காரணம் வயது ஆக ஆக நாம் த்வைத அடிப்படையில் இயங்கும் அறிவினால் வகை செய்யப்பட்ட அனுபவத்தின் நளினமான வடிவத்தைத்தான் காண்கிறோம்.

அனுபவத்திற்கும் அதை உணர்த்தும் மொழிக்கும் உள்ள வேறுபாட்டை அறிய முடியாத அளவில் மொழியையே அனுபவமாகக் குழப்பமடையவும் செய்கிறோம். அனுபவத்தைச் சம்பிரதாய உருவத்தில் காண்கிறோம். இதனால் தான் க.நா.சு. சொல்கிற மாதிரி ஒரு கவிஞனின் பார்வை சம்பிரதாய உருவத்திலிருந்து வேறுபட்டு இருப்பதால் நமக்கு அது கவர்ச்சியை அளிக்கிறது.

மேலும் எந்த அனுபவத்திலும் அவன் ஒரு நோக்கைப் பிரதானமாக வைத்துப் பார்க்கும்பொழுது கூட அதில் அமைந்திருக்கும் மாறுபட்ட பார்வைகளை ஒரு விகிதாம்சமாகக் காண்கிறான். அதனால்தான் அனுபவத்தை முழுமையாக வாங்கிக் கொள்ளும் குழந்தை நோக்கும் கலைஞன் நோக்கும் ஒரு மையத்தில் சந்திக்கின்றன என்று சொல்ல வேண்டும். இந்தத் தகுதிதான் ஒரு கலைஞன் பார்வையின் அடிப்படை என்று கூட எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.

மேலும், குழந்தையின் பார்வையில் அனுபவமும் மொழியும் வேறு பிரிந்து கிடக்கின்றன என்று சொல்ல வேண்டும்.

`கிருஷ்ணன் நம்பி கதைகள் சிலவற்றில் இந்த அடிப்படையை விளக்க விரும்புகிறேன். நீலக்கட’லின் ஆரம்பம் பாலியக் கட்டத்தைத் தாண்டியவன் சொல்வது, முடிவும் வயசானவன் பார்வைதான். நடுவில்தான் குழந்தை அனுபவ உலகை விவரிக்கும் குழந்தைப்பார்வை. பிரச்சினை இதுதான், சாவை நாம் எப்படி அணுகுகிறோம் _ குழந்தையாக இருக்கும் பொழுதும் பின்னரும். குழந்தைப் பருவத்தில் சாவு என்ற வார்த்தை தெரிந்தாலும் அதன் பயங்கரம் நம் கண்ணில் தென்படுவதில்லை. பின்னர் இதன் அடிப்படையே மாறுகிறது. ஒரு குழந்தையின் மரணம் `பால்ய’ அனுபவத்தில் இவ்வாறு விவரிக்கப்படுகிறது. `என் தம்பி ராமகிருஷ்ணனிடம் அன்றொரு நாள் ஸாமி அன்பு வைத்தார்.’ மேலும் ``இப்படி எல்லாம் பேசுகிற பாட்டிதான் `நீ எப்போது சாவாய்?’ என்று ஒருநாள் கேட்டதற்கு என்னிடம் கோபித்துக்கொண்டாள்’’ என்ற பகுதியையும் படிக்கின்றோம். சாவு தினத்தில் குப்பு மாமியின் பிட்டு வழக்கம்போல் சுவையாக இருந்ததைக் குழந்தைமனம் விகல்பமின்றி குறிக்கிறது. வேறு ஒரு இடத்தில் `நான் பெரியவனானபின் நன்றாக இங்கிலீஷ் படித்து (அப்பாவைப்போல) சிரிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்’ இந்தக் குழந்தை இயல்புதான் மனிதனை மிருக இனத்திலிருந்து வேறுபடுத்துகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். கடைசியாகச் சாவதைக் கண்டு சிரித்தவனே, சாவைக்கண்டு பயப்படுவதாகக் கதை முடிகிறது.

குழந்தைப் பிராயத்திலிருந்து வயோதிகத்தில் சென்று அமையும் மனித உள்ளத்தின் ஒரு அனுபவச் சரித்திரம் இங்கு குறிப்பிடப்படுகிறது. கதையின் `நீலக்கடல்’ என்ற தலைப்பு ஒரு பாவனை நிறைந்த இலக்கியச் சிறப்பை உடையது. `எனக்கு ஒரு வேலை வேண்டும்’ என்பது ஒரு `கிறுக்கன்’ மனதைச் சித்திரிக்கிறது. முப்பது வயதானாலும் இவன் ஒரு மூன்று வயதுக் குழந்தையைப் போல் அனுபவத்தின் ஸ்தூல வடிவத்தைத் தான் ஏற்றுக் கொள்கிறான். இங்குகூட நம்பி இவனுக்கு எங்க ராஜப்பா எப்படி ஒரு மாதிரியாக அமைகிறான் என்பதிலிருந்து இந்தப் பாத்திர சிருஷ்டிக்கு ஒரு ஆழத்தைக் கொடுத்து விடுகிறார். இந்தக் கதையிலும் ஆரம்பமும் முடிவும் கலாரீதியாக அமைந்திருக்கின்றன.

விளையாட்டுத் தோழர்களில் ஒரு சின்னப் பாப்பாவுக்குக்கூட நாம் கூறுவதுமாதிரி அதற்குத் தேவாம்சம் மாத்திரம் இல்லாமல் அசுராம்சமும் இருக்கிறது என்பதைக் காட்டுகிறார். நம்பி ஒரு கதையிலும் பிரத்யஷ உலகை விட்டு ஒரு அங்குலம் கூட நகர மாட்டார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

`சுதந்திர தினம்’ என்பது ஒரு பையனின் சுதந்திர தினம் என்பதின் அனுபவத்தை விவரிக்கிறது. கொடி பிடிப்பது ; டீ பார்ட்டி, கலெக்டர் வருகை, ஒரு உருப்புரியாத பவித்திர உணர்ச்சி இவைதான் பையன் சுதந்திரத்திற்கு கொடுக்கக்கூடிய அர்த்தம். ஒரு கூட்டத்தில் தானும் கலெக்டரைப்போல கறுப்பா இருந்தாலும் தான் ஏன் ஒதுக்கப்பட வேண்டும் என்று அவன் உள்ளம் நினைக்கிறது. ஆனால், அந்தக் கூட்டம் அடுத்த கட்டத்தில் மாய்ந்து விடுகிறது.

`கணக்கு வாத்தியார்’ ஒரு சிறந்த கதை. அதுவும் நீலக்கடல்போல் வயதான பிறகு குழந்தை அனுபவத்தைப் பார்க்கும் முறையில் எழுதப்பட்டிருக்கிறது. கதை முடிவும் வயதானவனின் முடிவு. `கணக்கு வராத பிள்ளை மக்கு’ என்ற குரூரமான அபிப்பிராயத்தை நாம் எல்லோருமே அனுபவித்திருக்கிறோம் ; இங்கு `கணக்கு வாத்தியார்’ ஒரு பாவனா சிருஷ்டி. கதையின் முடிவு, கடவுளே கணக்கு வாத்தியாராகக் காட்சி அளிப்பது கதைக்கு ஒரு ஆழத்தைக் கொடுக்கிறது.

`தங்க ஒரு . . . ’ கதையும் சிறந்தது. தங்க ஒரு இடம் கிடைக்கவில்லை என்பதைத் தங்க ஒரு . . . என்று குறிப்பிடுவதில் ஒரு இலக்கியத்தன்மை இருக்கிறது. இது கலிவரின் யாத்திரையைப் பின்பற்றியது. கேலிச் சுவையைக் கலாபூர்வமாக ஆள்வதில் புதுமைப் பித்தனின் `கடவுளும் கந்தசாமி பிள்ளையையும்’ விடச் சிறப்பாக வந்திருக்கிறது என்பது என் அபிப்பிராயம். சமூக வாழ்வின் கொடுமைக்கு வளைந்து கொடுத்து கருவில் சிசுவாக மனிதன் குறுகும் அனுபவத்தைக் காரமாகக் காட்டுகிறது. செல்லா, நம்மை விடவும் அந்தக் குறுகல் பேர்வழி அதிருஷ்டசாலி இல்லை என்று உன்னால் நினைக்க முடிகிறதா? செருப்புக்கு ஏற்றபடியெல்லாம் அவனைச் சின்னது படுத்திக் கொண்டே வந்திருக்கிறான் இறைவன். இதை நமது தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற காந்தியத் தத்துவத்தின் விபரீத உருவமாகவே ஆசிரியர் சித்தரித்திருக்கிறாரோ என்று கூட எனக்குத் தோன்றுகிறது. இந்தக் கதைகள் எல்லாவற்றிலும் நம்பி குழந்தை மனதை நுணுகி ஆராய்வதில் மனித மனதின் விகிதாம்சமான ஆசா பாசங்களைக் காட்டுகிறார். அவர் பார்வை மனிதனை மையமாகக் கொண்டது. பிரத்யஷ உலகிலிருந்து முன்கூறியபடி ஒரு அங்குலம் கூட நகராதது.

இங்கு கலைஞன் அனுபவத்தைப் பார்க்கும் பார்வைதான் முக்கியம். குறுகிய நீதி _ அநீதி வரம்புகளைத் தாண்டி அனுபவத்தைக் குழந்தைக் காண்பது போல், அதன் முழு வடிவத்தில் கண்டு _ வாழ்க்கையின் சம்பிரதாய மதிப்புகளைப் புறக்கணித்துவிட்டு கலைஞன் வாழ்க்கையைத் தன் போக்கில் பரிசீலனை செய்வதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு கதையையும் ஒரு கவிதை மாதிரி ரசிக்கலாம்.

சில கதைகளையே குறிப்பிடுகிறேன். `காணாமல் போன அந்தோனி’, `சிங்கப்பூர் பணம்’, `நாணயம்’, `சத்திரவாசலில்’, `சட்டை’, `கருமிப்பாட்டி’ எல்லாமே ஒரு வகையில் ஓ.ஹென்றியுடன் இணைத்துப் பேசப்படும் எதிர்பாராத முடிவைத்தாங்கியவை. ஆனால் ஒவ்வொன்றும் எடுத்துக்கொண்ட விஷய வேறுபாட்டாலும், ஆசிரியர் அனுபவத்தைப் பரிசீலனை செய்யும் போக்கிலும் சிறப்புப் பெறுகிறது. `நாணயம்’ தர்மத்தைப் பற்றிய பரிசீலனை. `சட்டை’ சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் காட்டுவது, `சிங்கப்பூர் பணம்’ குழந்தை மனதை ஆராய்வதின் மூலம் வாழ்க்கையைப் பரிசீலனை செய்வது. சில கதைகளில் கதையம்சம் சொட்டையாக இருப்பதாகத் தோன்றினாலும் ஆசிரியரின் வாழ்க்கை பரிசீலனைக்காகவே கவிதையைப் போலப் படித்து ரசிக்கலாம். இங்குதான் நம்பியின் விளையாட்டுத் தன்மை கலாபூர்வமாக இருக்கிறது. இதை ஒட்டிக் கதை அம்சம், அதை ஒட்டிப் பாத்திர சிருஷ்டி, இவைகளை வைத்துக்கொண்டு கதைகளை எடைபோடுவது சரியான முறையன்று. `சத்திரத்து வாசலில்’ மனோதத்துவம் மிகவும் இலக்கியப் பூர்வமாகக் கையாளப்படுகிறது.

இந்தத் தொகுதியில் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன். இரண்டிலும் கதை அம்சம் குறைவு, இலக்கியச் சிறப்பு மிகுதி. ஒன்று எக்ஸெண்ட்ரிக். ஒரு ஏழையின் அனுபவத்தை விவரிக்கிறது.

இக் கதையில் வரும் கார், நாய் வர்ணனைகள் இலக்கியப் பூர்வமானவை. சில பகுதிகள் அசட்டு உணர்ச்சி சொட்டச் சொட்ட எழுதும் கதாரீதிகளைப் பரிகசிப்பதாக அமைத்திருக்கிறது. மேலும் விவிதாம்ச குணங்களைச் சித்திரிக்கும் பாத்ர சிருஷ்டி ஒரு சிறந்த வெற்றி.

`காலை முதல்’ கதையின் முடிவு சற்றுப் பலவீனமானது. இருந்தாலும் கம்பளிப் போர்வையினுள் உடம்பை நுழைத்துக் கொண்டு கூட்டுப் புழுவைப்போல் இயங்கும் ஒரு மனிதப் புழுவின் வாழ்க்கையைத் திறம்பட விவரிக்கிறது. படித்து ரஸிக்க வேண்டிய கதை.

நம்பி ஒரு அக உலகக் கலைஞர். அவர் பார்வை விளையாட்டுத் தன்மையும் விஷயமும் நிறைந்தது. அவர் உலகம் யதார்த்த நிலை பிறழாதது. ஆரம்பத்தில் கூறியபடி ஒரு `புற உலகக்’ கலைஞனாகத் தூய நிலையில் சிறந்த படைப்புக்களைப் படைத்து வெற்றியும் பெயரும் பெறுவதைவிட, ஒரு எழுத்தாளன் என்ற வகையில் நம்பியைப்போல், தோல்வி (இது தோல்வி என்றால்) அடைவதையே நான் மதிக்கிறேன்.

Oct 19, 2008

மருமகள் வாக்கு-கிருஷ்ணன் நம்பி

கிருஷ்ணன் நம்பி (நன்றி : ஸ்நேகா பதிப்பகம் வெளியீடு. )

மறுநாள் தேர்தல். பூனைக்கும் கிளிக்கும் இருமுனைப் போட்டி. கிளி அபேட்சகர் வீரபாகுக் கோனாரும் பூனை அபேட்சகர் மாறியாடும் பெருமாள் பிள்ளையும் உயிரைக் கொடுத்து வேலை செய்தார்கள். ஊர் இரண்டு பட்டு நின்றது.

சமையல் வேலைக்குச் செல்பவர்களும் கோவில் கைங்கரியக்காரர்களும் நிறைந்த அக்ரகாரத்துப் பிள்ளையார் கோவில் தெரு, கிளியின் கோட்டை என்று சொல்லிக்கொண்டார்கள். அந்தக் கோட்டைக்குள் பல குடும்பங்களுக்கும் பால் வார்த்துக்கொண்டிருந்தவர் வீரபாகுக் கோனார்தான்.

modern_art_gallery.-contemporary_galleries_of_modern_art_paintings.merello.-_la_nina_sevillana

மீனாட்சி அம்மாளிடம் சொந்தமாகப் பசு இருந்தது. வேளைக்குக் கால்படிப் பாலை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு மிச்சத்தை நியாயமாகத் தண்ணீர் சேர்த்து விலைக்கு விற்றுவிடுவாள். ரொக்கந்தான். கடனுக்குத்தான் இந்தக் கடங்கார வீரபாகுக் கோனார் இருக்கிறானே!

மீனாட்சி அம்மாள் அப்படியொன்றும் வறுமைப்பட்டவள் அல்ல. இருந்த வீட்டுக்கும், ஊரடியில் அறுபத்தாறு சென்ட் நஞ்சைக்கும் அவள் சொந்தக்காரி. தாலுக்கா பியூனாக இருந்து சில வருஷங்களுக்கு முன் இறந்து போன அவள் கணவன் அவள் பெயருக்குக் கிரயம் முடித்து வைத்த சொத்து இது. ராமலிங்கம் ஒரே பையன், ஸாது. தகப்பன் வேலையைப் பாவம் பார்த்துப் பையனுக்கே சர்க்கார் போட்டுக் கொடுத்துவிட்டது அவனுடைய அதிர்ஷ்டந்தான். கல்யாணமும் பண்ணி வைத்துவிட்டாள் மீனாட்சி அம்மாள். தள்ளாத வயதில் உதவிக்கு ஒரு மருமகள் வேண்டும் அல்லவா?

ருக்மிணி மெலிந்து துரும்பாக இருந்தாலும் வேலைக்குக் கொஞ்சமும் சளைக்காதவள். அதிகாலையில் வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போடுவதிலிருந்து படுக்கப் போகும் முன் மாட்டுக்கு வைக்கோல் பிடுங்கி வைப்பது வரை எல்லா வேலைகளையும் அவள் அப்பழுக் கில்லாமல் செய்துவிடுவாள். சமையலில் அவளுக்கு நல்ல கை மணம். வெறும் வற்றல் குழம்பும் கீரைக் கறியும் பண்ணிப் போட்டால் கூடப் போதும்; வாய்க்கு மொரமொரப்பாக இருக்கும். (மாமியார்கள் எப்போதும் ஏதேனும் குற்றம் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். எல்லாம் மருமகள்காரிகள் திருந்து வதற்கும் மேலும் மேலும் முன்னேறுவதற்கும் தானே.)

ருக்மிணிக்கு பால் கறக்கவும் தெரியும். பால் கறந்தால் நெஞ்சு வலிக்கும் என்று பக்கத்து வீட்டுப் பெண்கள் சொல்வதுண்டு. ஆனால் பலரும் பேசுவார்கள்; ஒன்றையும் காதில் போட்டுக்கொள்ளக்கூடாது, பதில் பேசவும் கூடாது. ஏன் யாரிடமும் எதுவுமே பேசாமலிருப்பது ரொம்ப ரொம்ப உத்தமம். நாம் உண்டு, நம் காரியம் உண்டு என்று இருந்துவிட வேண்டும். இப்படி, மருமகள் வந்த அன்றே மாமியார் புத்திமதிகள் கூறியாகிவிட்டது. மேலும், கல்யாணத்துக்கு முன்பே ருக்மிணிக்கு லேசாக மார்வலியும் இறைப்பும் உண்டு. டாக்டர்கள் அவளைப் பரிசோதித்திருந்தால் `டிராபிகல் ஈஸ்னோபீலியா’ என்றிருப்பார்கள். ஆனால் ஏன் அப்படிப் பரிசோதிக்க வேண்டும்? வைத்தியம் செய்கிறேன் என்று வருகிறவர்கள் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்களுக்குக் காசு ஒன்றுதான் குறி. மீனாட்சி அம்மாளுக்குத் தெரியாதா? அவள் வயசு என்ன? அநுபவம் என்ன? ஒரு குழந்தை பிறந்துவிட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று சொல்லி விட்டாள். அவள் மட்டுமல்ல; டாக்டரிடம் போவதற்கு இங்கு யாரும் சாகக் கிடக்கவில்லையே?

மருமகளை ஏவி விட்டுவிட்டு மாமியார் மீனாட்சி அம்மாள் ஒன்றும் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்துவிடவில்லை. அவளுக்கும் வேலைகள் உண்டு. பாலுக்குத் தண்ணீர் சேர்ப்பது, அளந்து விற்பது, வருகிற காசுகளை (ராமலிங்கம் சம்பளம் உள்பட) வாங்கிக் கணக்கிட்டுப் பெட்டியில் பூட்டுவது, பார்த்துப் பார்த்துச் செலவு செய்வது, தபால் சேவிங்க்ஸில் பணம் போடுவது எல்லாம் அவள் பொறுப்புதான். இவை மட்டுமா? ஓய்ந்த நேரங்களில் ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம் என்று ஒரு நோட்டுப் புத்தகத்தில் லட்சத்துச் சொச்சம் தரம் எழுதி, அக்ரகாரத்துப் பெண்களை அதிசயத்தில் ஆழ்த்திவிட்டிருக்கிறாள். சாவதற்குள் பத்து இலட்சத்து ஒன்று எழுதி முடித்துவிட வேண்டும் என்பது அவள் திட்டம்.

ருக்மிணியும் மாமியாரும் என்றுமே சேர்ந்துதான் சாப்பிடுவார்கள். பரிமாறியபடியே, `பெண்டிற்கழகு உண்டி சுருக்குதல்’ என்று மீனாட்சி அம்மாள் அட்சரச் சுத்தத்துடன் கணீரெனக் கூறுகையில், அந்த அரிய வாக்கை மீனாட்சி அம்மாளே அவளது சொந்த அறிவால் சிருஷ்டித்து வழங்குவதுபோல் தோன்றும் ருக்மிணிக்கு. மேலும் அதிகமாகச் சாப்பிட்டால் ஊளைச் சதை போட்டுவிடும் என்று மாமியார் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று மருமகள் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. (ரொம்பவும் பொறுக்க முடியாமல் போய், யாரும் அறியாதபடி ருக்மிணி அள்ளிப் போட்டுக் கொண்டு தின்றது இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில்தான்.)

மருமகள் என்று வருகிறவர்களின் வாயைக் கிளறி எதையாவது பிடுங்கிக்கொண்டு போய், மாமியார்க்காரிகளிடம் கோள்மூட்டிச் சண்டை உண்டாக்கி வேடிக்கை பார்க்காவிட்டால் ஊர்ப் பெண்களுக்குத் தூக்கம் வராதல்லவா? ஆனால், ருக்மிணியிடம் அவர்கள் வித்தைகள் எதுவும் செல்லுபடியாகாமல் போனது அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. சதா வீட்டோடு அடைந்து கிடக்கும் போது அவள் எப்போதாவது கோவிலுக்கோ குளத்துக்கோ அனுப்பப்படும்போது, அவளை விரட்டிக்கொண்டு பின்னால் ஓடிய பெண்கள் இப்போது ஓய்ந்து, `இந்தப் பெண் வாயில்லாப் பூச்சி’ என்று ஒதுங்கிக்கொண்டு விட்டார்கள்.

இரவு நேரத் திண்ணை வம்புகளின்போது, ``மாட்டுப் பெண் எப்படி இருக்கா?’’ என்று துளைக்கிறவர்களிடம், ``அவளுக்கென்ன, நன்னார்க்கா’’ என்று மேல் அண்ணத்தில் நா நுனியை அழுத்திப் பதில் சொல்லி அடைத்துவிட்டு அடுத்த விஷயத்துக்கு நகர்ந்து விடுவாள் மீனாட்சி அம்மாள். ``அவளா? அவளை ஜெயிக்க யாரால் முடியும்?’’ என்பார்கள் ஊர்ப் பெண்கள், ஒருவித அசூயையுடன்.

தேர்தலுக்கு முன்தின இரவுப் பேச்சுக் கச்சேரியில் தேர்தல் விஷயம் பிரதானமாக அடிபட்டதில் ஆச்சரியம் இல்லை. மீனாட்சி அம்மாள் வாக்கு யாருக்கு என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், ``ஒங்க ஓட்டு கிளிக்குத்தானே மாமி?’’ என்று விஷமமாக வாயைக் கிளறினாள் ஒருத்தி. ``ஏண்டி எல்லாம் தெரிஞ்சு வெச்சுண்டே என்னச் சீண்டறயா?’’ என்றாள் மீனாட்சி அம்மாள். ``ஒங்க மாட்டுப் பொண் ஆருக்குப் போடப் போறாளோ?’’ என்று இன்னொருத்தி கண்ணைச் சிமிட்டவும், மீனாட்சி அம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது. ``பொண்டுகளா, என்னயும் அவளயும் பிரிச்சாப் பேசறேள்? நானும் அவளும் ஒண்ணு, அது தெரியாதவா வாயிலே மண்ணு’’ என்று அவள் ஒரு போடு போடவும் எல்லாரும் பெரிதாகச் சிரித்தார்கள்.

காலையில் வாக்குப் பதிவு சற்று மந்தமாகவும் மதியத்துக்கு மேல் ரொம்பச் சுறுசுறுப்பாகவும் இருந்தது. மீனாட்சி அம்மாள் முதல் ஆளாகப் போய் வோட்டுப் போட்டுவிட்டு வந்துவிட்டாள். வீட்டிலிருந்து கூப்பிடுகிற தூரத்தில் ஆற்றுக்குப் போகிற வழியில் இருக்கிற தொடக்கப் பள்ளிதான் சாவடி. ராமலிங்கம் குளித்துவிட்டுத் திரும்புகிற வழியில் ஆட்கள் பிடித்திழுக்க, ஈரத் துணியோடு அவன் வோட்டளிக்கும்படி ஆயிற்று.

மத்தியான்ன உணவுக்குப் பிறகு வழக்கமாகிவிட்ட சாப்பாட்டு மயக்கத்தில் மீனாட்சி அம்மாள். தாழ்வாரத்து நிலைப்படியில் தலைவைத்துப் படுத்துக் கிடந்தாள். ருக்மிணி தொழுவத்தில் மாட்டுக்குத் தவிடும் தண்ணீரும் காட்டிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் அது சுமட்டுக் கட்டுக்கு ஒரு கட்டுப்புல் தின்று தீர்த்திருந்தது. அது குடிப்பதையும் தின்பதையும் பார்த்துக்கொண்டே இருப்பது ருக்மிணியின் மிகப்பெரிய சந்தோஷம்; மாமியாரின் அதிகார எல்லைகளுக்கு வெளியே கிடைக்கிற சந்தோஷம். ``சவமே, வயத்தாலிக் கொண்டே எம்பிட்டுத் தின்னாலும் ஒம் பசி அடங்காது’’ என்று பொய்க் கோபத்துடன் அதன் நெற்றியைச் செல்லமாய் வருடுவாள். ``மாடுன்னு நெனைக்கப்படாது, மகாலக்ஷ்மியாக்கும்! ஒரு நாழி கூட வயிறு வாடப்படாது; வாடித்தோ கறவையும் வாடிப் போயிடும். கண்ணும் கருத்துமாக் கவனிச்சுக்கணும்’’ என்பது மீனாட்சி அம்மாளின் நிலையான உத்தரவு. ``பசுவே, நீ மட்டும் பெண்டிர் இல்லையா? உண்டி சுருக்கற நியாயம் ஒனக்கும் எங்க மாமியாருக்கும் மாத்ரம் கெடையாதா சொல்லு!’’ என்று அதன் முதுகில் தட்டுவாள் ருக்மிணி. அவளுக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வரும். அதன் கழுத்துத் தொங்கு சதையைத் தடவிக் கொடுப்பதில் அவளுக்குத் தனியான ஆனந்தம், அதற்கும் இது பிடிக்கும். முகத்தை இவள் பக்கமாகத் திருப்பி இவள்மேல் ஒட்டிக்கொள்ளப் பார்க்கும். ``நான் இன்னிக்கு ஓட்டுப் போடப் போறேன். ஒனக்கு அந்த ஒபத்ரவம் ஒண்ணும் கெடையாது. நான் ஆருக்குப் போடணும் நீ சொல்லு. செல்லுவியா? நீ ஆருக்குப் போடச் சொல்றயோ அவாளுக்குப் போடறேன். ஒனக்குப் பூனை பிடிக்குமோ? கிளி பிடிக்குமோ? சொல்லு, எனக்கு ஆரப் பிடிக்குமோ அவாளைத்தான் ஒனக்கும் பிடிக்கும், இல்லையா? நெஜமாச் சொல்றேன், எனக்குக் கிளியைத்தான் பிடிக்கும். கிளி பச்சப்பசேல்னு எம்பிட்டு அழகா இருக்கு! அதுமாதிரி பறக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. பூனையும் எனக்குப் பிடிக்கும். ஆனா, அதைவிடக் கிளியைப் பிடிக்கும். ஆனா பூனைக்குக் கிளையைக் கண்டாலே ஆகாது.’’

வாளியில் தண்ணீர் தணிந்து விடவே, குடத்திலிருந்து மேலும் தண்ணீரைச் சரித்துத் தவிடும் அள்ளிப் போட்டாள். அதற்குள் பசு அழியிலிருந்து ஒரு வாய் வைக்கோலைக் கடித்துக்கொண்டு அப்படியே தண்ணீரையும் உறிஞ்சத் தொடங்கவே, எரிச்சலுடன் அதன் வாயிலிருந்து வைக்கோலை அவள் பிடுங்கி எறியவும், வாளி ஒரு ஆட்டம் ஆடித் தண்ணீர் சிந்தியது. ``சவமே, எதுக்கு இப்படிச் சிந்திச் செதறறாய்? தேவாளுக்காச்சா, அசுராளுக்காச்சா? ஒழுங்கா வழியாக் குடியேன்’’ என்று அதன் தாடையில் ஒரு தட்டுத் தட்டினாள். அது இடம் வலமாய்த் தலையை ஆட்டி அசைக்க, தவிட்டுத் தண்ணீர் பக்கங்களில் சிதறி ருக்மிணியின் மேலும் பட்டது. அவள் புடைவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

பசு இப்போது தண்ணீரை உறியாமல் வாளியின் அடியில் வாயைத் தணித்து, பிண்ணாக்குக் கட்டி ஏதாவது கிடைக்காதா என்று துழாவ, தண்ணீரின் மேல்மட்டத்தில் காற்றுக் குமிழிகள் சளசளவென வெளிப்பட்டன. மூச்சு முட்டிப் போய் முகத்தைச் சடக்கென அது வெளியே எடுத்து, தலையை மேல்நோக்கி நிமிர்த்தி, முசு முசென்றது. அதன் முகத்தைச் சுற்றி விழுந்திருந்த தவிட்டு வளையத்தைப் பார்க்க அவளுக்குச் சிரிப்பு வந்தது. ``கேட்டாயா, பசுவே! நீ இப்போ மட்டும் இப்படிக் கறந்தாப் போறாது. எனக்குக் கொழந்தை பொறந்தப்புறமும் இப்படியே நெறயக் கறந்துண்டிருக்கணும். எங் கொழந்தை ஒம் பாலைக் குடிக்க வேண்டாமா? ஒங்கொழந்தை குடிக்கற மாதிரி எங்கொழந்தையும் ஒம் மடீல பால் குடிக்க சம்மதிப்பியோ? எங்காத்துக்காரர் சொல்றாப்லே, எனக்குத் தான் மாரே கெடையாதே. மார்வலிதான் இருக்கு. மாரில்லாட்டாப் பாலேது? ஆனா, நிச்சியமா எனக்கும் கொழந்தை பொறக்கத்தான் போறது. பெறப் போறவள், எங்க மாமியார் சொல்றாப்லே, எப்பவாவது ஒரு தரம் படுத்துண்டாலும் பெறத்தான் செய்வாள். பெறாதவ என்னிக்கும் பெறப் போறதில்லை. யுத்தத்திலே செத்துப் போனானே எங்கண்ணா மணி, அவன்தான் எனக்குப் பிள்ளையா வந்து பொறக்கப் போறான். தெரியுமா ஒனக்கு? கொம்பக் கொம்ப ஆட்டு. ஓரெழவும் தெரியாது ஒனக்கு. நன்னாத் திம்பாய்!’’ பசு பொத் பொத்தென்று சாணி போட்டு, ஒரு குடம் மூத்திரத்தையும் பெய்தது. உடன் அவளே அவசரத்துடன் சாணியை இரு கைகளாலும் லாகவமாக அள்ளிக் கொண்டுபோய்ச் சாணிக் குண்டில் போட்டுவிட்டு வந்தாள். புல்தரையில் கையைத் துடைத்துவிட்டு, மிகுந்திருந்த தண்ணீருடன் வாளியையும் குடத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். பசு அவளை நிமிர்ந்து பார்த்து, `ம்மா’ என்று கத்திற்று. ``போறேன், போய் ஓட்டுப் போட்டுட்டு வந்து கன்னுக்குட்டியைக் குடிக்க விடறேன். மணி மூணுகூட இருக்காதே. அதுக்குள்ள ஒனக்கு அவசரமா?’’ பால் கட்டி மடி புடைத்துக் காம்புகள் தெறித்து நின்றன.

மீனாட்சி அம்மாள் சொல்லி வைத்திருந்தபடி, பக்கத்து வீட்டுப் பெண்கள் சிலர் ருக்மிணியையும் சாவடிக்கு அழைத்துச் செல்ல, இருப்பதில் நல்ல உடைகளணிந்து வந்திருந்தனர். கிணற்றடியில் கை, முகம் எல்லாம் கழுவிக்கொண்டு ருக்மிணி வீட்டுக்குள் வந்தாள். ``சரி, சரி, தலய ஒதுக்கிண்டு, நெத்திக்கிட்டுண்டு பொறப்படு’’ என்று மாமியார் முடுக்கவும், ருக்மிணி அலமாரியைத் திறந்து சிறிய சிறிய பச்சைப் பூக்கள் போட்ட ஒரு வாயில் ஸாரியைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு மறைவுக்காக ஓடினாள். முகத்தின் மூன்றில் ஒரு பங்கு தெரிகிற கையகல வட்டக் கண்ணாடியில் முகம் பார்த்து, சீப்பு சமயத்துக்குத் தட்டுப்படாமல் போனதால் விரல்களாலேயே முடியை ஒதுக்கிவிட்டுக்கொண்டு, நெற்றியில் ஏதோ ஒரு இடத்தில் குங்குமம் வைத்துக்கொண்டு வாசல் பக்கத்துக்கு ஓடோடியும் வந்தாள். வந்திருந்த பெண்களில் ஒருத்தி மீனாட்சி அம்மாள் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, ``ஏண்டி, எம்பிட்டு நேரம்டீ?’’ என்று கேட்கவும் ருக்மிணிக்குத் துணுக்கென்றது. ``தலயக் கூடச் சரியா வாரிக்காமன்னா ஓடிவரேன்’’ என்று அவள் அடைக்கிற குரலில் பதில் சொல்லி முடிப்பதற்குள், ``சரி, சரி, கிளம்புங்கோ!’’ என்று எல்லாரையும் தள்ளிவிட்டாள் மாமியார் அம்மாள். படி இறங்கியவளைக் கையைத் தட்டி, ``இந்தா, சொல்ல மறந்துட்டேனே, ஒரு நிமிஷம் இங்க வந்துட்டுப் போ’’ என்று வீட்டுக்குள் கூட்டிப் போனாள். குரலைத் தணித்து, ``ஞாபகம் வைச்சிண்டிருக்கியா? தப்பாப் போட்டுடாதே. ஒரு சீட்டுத் தருவா. பூனப் படமும் கிளிப்படமும் போட்டிருக்கும். பூனப் படத்துக்குப் பக்கத்திலெ முத்திரை குத்திடு. வழிலெ இதுகள்கிட்ட வாயெக் குடுக்காத போ’’ என்றாள்.

சாவடி அமைதியாக இருந்தது. பல வளைவுகளுடன் ஒரு பெண் வரிசையும் சற்று நேராக ஓர் ஆண் வரிசையும். பெண் வரிசையின் நீளம் சிறிது அதிகம். வர்ணங்கள் நிறைந்த பெண் வரிசை மலர்கள் மலிந்த ஒரு கொடி போலவும் ஆண் வரிசை ஒரு நெடிய கோல் போலவும் தெரிந்தன. வோட்டளித்து வெளிவந்த சில ஆண் முகங்களில் தந்திரமாய் ஒரு காரியம் நிகழ்த்தி விட்ட பாவனை தென்பட்டது. ஒரு சாவுச் சடங்கை முடித்து வருவது போல் சில முகங்கள் களையற்று வெளிப்பட்டன. அநேகமாய், பெண்கள் எல்லாருமே மிதமிஞ்சிய, அடக்கிக்கொள்ள முயலும் சிரிப்புகளுடன், பற்களாய் வெளியே வந்தனர். ருக்மிணிக்கு ரொம்பச் சந்தோஷம். எல்லாமே அவளுக்குப் பிடித்திருந்தது.

அந்தப் பள்ளிக் காம்பவுண்டுக்குள் செழிப்பாக வளர்ந்து நின்ற வேப்பமரங்களை அவள் மிகவும் விரும்பி நோக்கினாள். வெயில் மந்தமாகி, லேசுக் காற்றும் சிலுசிலுக்க, அது உடம்பை விட மனசுக்கு வெகு இதமாக இருப்பதாய் அவள் உணர்ந்தாள். கண்ணில் பட்டதெல்லாம் அவளைக் குதூகலப்படுத்திற்று. `இன்னிக்கு மாதிரி என்னிக்காவது நான் சந்தோஷமா இருந்திருக்கேனா?’ என்று அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். ஆ! அதோ அனிசமரம்! ஒரு கோடியில், ஒரு கிணற்றடியில் ஒற்றைப்பட்டு அது நிற்கிறது. அது அனிச மரந்தானா? ஆம், சந்தேகமே இல்லை. வேம்பனூரில்தான் முதல் முதலாக அவள் அனிசமரத்தைப் பார்த்தாள். அதற்குப் பின் இத்தனை வருஷங்களில் வேறு எங்குமே அவள் பார்க்கவில்லை. உலகத்தில் ஒரே ஒரு அனிசமரந்தான் உண்டு; அது வேம்பனூர் தேவசகாயம் ஆரம்பப் பாடசாலைக் காம்பவுண்டுக்குள் இருக்கிறது என்று உறுதிப்படுத்திக் கொண்டிருந்தவள் இவ்வூரில் இன்னொன்றைக் கண்டதும் அதிசயப்பட்டுப் போனாள். ஒருகால் அந்த மரமே இடம் பெயர்ந்து இங்கே வந்துவிட்டதா? ஆ! எவ்வளவு பழங்கள்! ருக்மிணிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. அனிசமரம், அனிசமரம் என்று உரக்கக் கத்த வேண்டும் போலிருந்தது. அனிசம்பழம் தின்று எவ்வளவு காலமாகிவிட்டது! அதன் ருசியே தனி!

வேம்பனூரில் அவள் ஐந்தாவது வரை படித்தபோது எத்தனை பழங்கள் தின்றிருப்பாள்! கணக்கு உண்டா அதற்கு? பையன்களுடன் போட்டி போட்டுக்கொண்டு அவள் மரத்தில் ஏறுவாள். இரு தொடைகளும் தெரியப் பாவாடையைத் தார்பாய்ச்சிக் கட்டிக் கொள்வாள். மரம் ஏறத் தெரியாத அவளுடைய சிநேகிதிகள், `ருக்கு, எனக்குப் போடுடி, எனக்குப் போடுடி’ என்று கத்தியபடி கீழே அண்ணாந்து, நிற்க, மரத்தின் உச்சாணிக் கிளைகளில் இருந்தபடி பழம் தின்று கொட்டைகள் துப்பி மகிழ்ந்ததை நினைத்தபோது அவளுக்குப் புல்லரித்தது. கண் துளிர்த்தது. புளியங்கொட்டை ஸாரும் சள்சள் ஸாரும் ஞாபகம் வரவே அவளுக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. பாவம், அவர்கள் எல்லாம் செத்துப் போயிருந்தாலும் போயிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டாள். மீண்டும் சின்னவளாகிப் பள்ளிக்குப் போக முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு!

மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. ருக்மிணி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அந்த அனிசமரத்தின் ஒரு நுனிக்கிளையில் ஒரு பச்சைக்கிளி சிவந்த மூக்குடன் பறந்து வந்து உட்கார்ந்து கிரீச்சிட்டது கிளை மேலும் கீழுமாக ஊசலாடியது. என்ன ஆச்சரியம்! `கிளியே, வா! நீ சொல்ல வேண்டியதில்லை. என் ஓட்டு உனக்குத்தான். முன்பே நான் தீர்மானம் செய்தாயிற்று. ஆனால், என் மாமியாரிடம் போய்ச் சொல்லிவிடாதே. பூனைக்குப் போடச் சொல்லியிருக்கிறாள் அவள். நீயே சொல்லு, கிளிக்குப் போடாமல் யாராவது பூனைக்குப் போடுவார்களா?. என் மாமியார் இஷ்டத்துக்கு வித்தியாசமாக நான் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது. என்ன செய்ய, சொல்லு? சரி, இப்போது நீ எங்கிருந்து வருகிறாய்? எங்கள் வீட்டுக்கு வாயேன். நீ எப்போது வந்தாலும் என்னைப் பார்க்கலாம். மாட்டுத் தொழுவத்தில் தான் இருப்பேன். இப்போது வரச் சௌகரியமில்லை என்றால் பின் எப்போதாவது வா. எனக்குக் குழந்தை பிறந்த பிறகு வந்தாயானால் ரொம்பச் சந்தோஷமாக இருக்கும். என் குழந்தையும் உன் அழகைப் பார்ப்பான் அல்லவா? வரும்போது, கிளியே, குழந்தைக்குப் பழம் கொண்டு வா!’

ருக்மிணி அன்றுவரை கியூ வரிசைகளைக் கண்டவள் இல்லை. இது அவளுக்குப் புதுமையாகவும் ஒரு நல்ல ஏற்பாடாகவும் தெரிந்தது. ரெயில் மாதிரி நீளமாக இருந்த வரிசை இப்போது குறுகிப் போய்விட்டதே! ஆண்கள் ஏழெட்டுப் பேரே நின்றனர். சாவடி அவள் பக்கம் வேகமாக வந்துகொண்டிருந்தது. அவளுக்கு முன்னால் எட்டொன்பது பேர் பெண்கள். தான் அறைக்குள் பிரவேசித்ததும் வேற்று ஆண்களின் அருகாமை அவளுக்குக் கூச்சத்தையும் ஒருவகை மனக்கிளர்ச்சியையும் உண்டு பண்ணிற்று. யாரையும் நிமிர்ந்து பாராமல், சுற்றியிருப்பவற்றை மனசில் கனவுச் சித்திரமாக எண்ணிக்கொண்டு முன் நகர்ந்தாள்.

இளம் கறுப்பாய் மயிர் இன்றிக் கொழுகொழுவென இரு கைகள், ஒரு நீள் சதுர மேசையின் மேல் காகித அடுக்குகள், சிவப்பு, மஞ்சள் பேனா பென்சில்களுக்கிடையே இயங்க, அவளுக்கு ஒரு வெள்ளைச் சீட்டு நீட்டப்பட்டது. யார் யாருடையவோ கால்கள் குறுக்கும் நெடுக்குமாய்க் கோடுகளிட்டன. ஒரு நாணயம் தரையில் விழுந்த சத்தம் காதில் விழுந்தது. கடைசியில் ஒரு ஸ்கிரீன் மறைப்புக்குள் எப்படியோ தான் வந்துவிட்டதை ருக்மிணி உணர்ந்தாள். அவளுக்குப் பின்னால் திரைக்கு வெளியே ஒரு பெண் சிரிப்பொலி தெறித்து, நொடியில் அடங்கிற்று. ருக்குவின் நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. பொறுக்க முடியாதபடி மூத்திரம் முட்டிற்று. `ஸ்வாமி. என்ன அவஸ்தை இது!’ பற்கள் அழுந்தின. `ஐயோ, பால் கறக்க நேரமாயிருக்குமே’ என்ற நினைவு வர மடியில் பால் முட்டித் தெறிக்க மருகும் பசுவும், கட்டிலிருந்து தாவித் தவிக்கும் அதன் கன்றும் `ம்மாம்மா’ என்று அவள் செவிகளில்அலறிப் புடைக்கலாயின. அவள் உடம்பு இப்படிப் பதறுவானேன்? மாரும் லேசாக வலிக்கிறது. ஆ, கிளி! கிளிக்கு எதிரே முத்திரை நெருங்கிவிட்டது. இப்போது ஒரு கை ருக்மிணியின் கையைப் பற்றவும், திடுக்கிட்டு, `யாரது?’ என்று அவள் திரும்பிப் பார்த்தாள். யாரும் அங்கில்லை. ஆனால், அவள் கையை வேறொரு கை இறுகப் பற்றியிருந்தது என்னவோ நிஜந்தான். பெண் கைதான். வேறு யாருடைய கையும் அல்ல; மாமியார் மீனாட்சி அம்மாளின் கைதான். கிளிக்கு நேர் எதிராக இருந்த அவள் கையை, பூனைக்கு நேராக மாமியார் கை நகர்த்தவும், பளிச்சென்று அங்கு முத்திரை விழுந்துவிட்டது. ஆ! ருக்மணியின் வாக்கு பூனைக்கு! ஆம், பூனைக்கு!

பரபரவெனச் சாவடியை விட்டு வெளியேறினாள் அவள். அவளுக்காகப் பெண்கள் காத்திருந்தனர். இவள் வருவதைக் கண்டதும் அவர்கள் ஏனோ சிரித்தனர். பக்கத்தில் வந்ததும், ``ருக்கு, யாருக்குடி போட்டே?’’ என்று ஒருத்தி கேட்க, ``எங்க மாமியாருக்கு’’ என்ற வார்த்தைகள் அவள் அறியாது அவள் வாயிலிருந்தது வெளிப்படவும் கூடிநின்ற பெண்கள் பெரிதாகச் சிரித்தார்கள். ருக்மிணி தலையைத் தொங்கப் போட்டபடி, அங்கு நிற்காமல் அவர்களைக் கடந்து விரைந்து நடந்தாள். முன்னை விடவும் மார்பு வலித்தது. பொங்கி வந்த துக்கத்தையும் கண்ணீரையும் அடக்க அவள் ரொம்பவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

கிருஷ்ணன் நம்பி

தமிழகத்தின் தென்முனையில் கன்னியாக் குமரி மாவட்டத்தின் சிற்றூர்களில் ஒன்றான அழகியபாண்டிபுரத்தில் 1932 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி கிருஷ்ணன் நம்பி பிறந்தார். பெற்றோர்களுக்கு கிருஷ்ணன் நம்பி முதல் குழந்தை. அவருக்கு அவர்கள் இட்ட பெயர் அழகிய நம்பி. கிருஷ்ணன் நம்பியுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ஒரு சகோதரர் ; இரண்டு சகோதரிகள்.

அழகியபாண்டியபுரத்தில் விவசாயம் செய்துவந்த கிருஷ்ணன் நம்பியின் தந்தை

1939இன் பிற்பகுதியில் நாகர்கோவிலில் உர வியாபாரத்தை clip_image002[6]ஆரம்பித்தார். நாந்சில் நாட்டில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட உரக்கடை அதுதான். வியாபாரம் நன்றாக நடைபெறவே 1940 ஆம் ஆண்டு நம்பியின் தந்தை குடியிருப்பை அழகிய பாண்டியபுரத்திலிருந்து நாகர்கோவிலில் கிருஷ்ணன் கோவிலுக்கு மாற்றிக் கொண்டார். அப்போது கிருஷ்ணன் நம்பிக்கு எட்டு வயது. நாகர்கோவிலில் அவரின் பள்ளிப் படிப்பு தொடங்கியது. ஆனால் பள்ளிப் படிப்பு அவருக்கு உகந்ததாக இருக்கவில்லை. குறிப்பாக கணிதம் கடைசிவரை அவருக்கு வரவேயில்லை. எட்டாவதிலும், பள்ளி இறுதி வகுப்பிலும் அவர் முதல் முறை தேறாமல் மீண்டும் எழுதிதான் வெற்றிபெற்றார். பின்பு நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் படித்தார். அதில் இறுதித் தேர்வில் அவரால் தேர்ச்சிபெற இயலவில்லை. அத்துடன் படிப்பு ஒரு முடிவுக்கு வந்தது.

படிக்கவும் செய்யாமல் சும்மா இருக்கவே நம்பியின் தந்தை, அவர்மீது தன்னுடைய வியாபாரத்தை கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினார். ஆனால் அவரால் வியாபாரத்திலும் நாட்டம் கொள்ள முடியவில்லை. அவர் கடைக்குச் சென்றுவரும் தினங்களில் வியாபாரமும் வசூலும் மிகவும் குறைவாக இருக்கவே நம்பியின் தந்தை அவரது அம்மாவிடம் ``இவன் உருப்பட மாட்டான்’’ என்பாராம். இந்நிலையில் 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி கிருஷ்ணன் நம்பிக்கு திருமணம் ஆயிற்று. மனைவி பெயர் ஜெயலட்சுமி. அப்பாவின் வியாபாரத்திலும் நாட்டமில்லை. வருமான உத்தரவாதமளிக்கும் வேறு வேலையும் கிடையாது. ஆனால் திருமணமாகிவிட்டதால் குடும்பத்தில் நம்பியின் பொறுப்பு அதிகமாகிவிட்டது. பின்பு காங்கிரஸ் தியாகி கொடுமுடி ராஜகோபாலன் சிபாரிசில் நம்பிக்கு `நவசக்தி’யில் ஃபுருஃப் ரீடர் வேலை கிடைத்தது. மாதம் எண்பது ரூபாய் சம்பளம். சென்னையில் ராயப்பேட்டை மணிக்கூண்டு எதிரே `சங்கர் லாட்ஜி’ல் அறை எடுத்துக் கொண்டார். `நவசக்தி’யில் பணிபுரிந்த காலகட்டத்தில் கிருஷ்ணன் நம்பிக்கு சென்னையிலிருந்த `ஜீவா’வின் நட்பு கிடைத்தது. உள்ளூர்க்காரர் என்பதால் ஜீவாவுக்கும் நம்பியிடம் அளவு கடந்த பிரியம்.

`நவசக்தி’யில் நம்பியினுடைய வேலை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அவரது உடல் நிலையும் மோசமாகிக்கொண்டே வந்தது. எனவே அவர் ஊர் திரும்பி விடுவதென்று முடிவு செய்தார். ``ஏராளமான இருமல்களுடனும், அரைக் கிலோ திராட்சையுடனும் நம்பி வெற்றிகரமாக நாகர்கோவில் திரும்பினார்’’ என்று சமீபத்தில் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார் அவரது சகோதரர் கே. வெங்கடாசலம். ஊருக்குத் திரும்பி சிறிது காலம் விவசாயம் செய்தார். பின்னாளில் அவரது தந்தையின் உடல்நிலை மோசமாகி அவர் படுத்த படுக்கையானதால் மொத்த நிர்வாகத்தையும் நம்பியே கவனிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. வியாபாரத்தில் நம்பிக்கு அவரது தந்தையின் நண்பர்கள் உதவினர். தோவானைத் தாலுகாவுக்கான திகிசிஜி நிறுவனத்தாரின் மொத்த வியாபார உரிமத்தையும் நம்பி வாங்கினார். அப்புறம் பூதப்பாண்டியில் வியாபாரத்தை நிறுவுவது என்று தீர்மானித்து குடும்பத்துடன் 1963 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பூதப்பாண்டிக்குச் சென்றார். இந்நிலையில் அவரது தந்தையின் உடல்நிலை மேலும் மோசமாகவே அவர் நாகர்கோவிலைவிட்டு பூர்வீகமான அழகியபாண்டியபுரம் வந்து குடியமர்ந்தார். எனவே நம்பியின் பொறுப்பு குடும்பத்தில் இன்னும் அதிகமானது. ஆனாலும் மிகவும் சிரமத்துடன்தான் அவர் சமாளித்து வந்தார். கிருஷ்ணன் நம்பிக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். ஒரு மகன் 1986 இல் மறைந்து விட்டார்.

கிருஷ்ணன் நம்பியின் இலக்கிய பிரவேசம் 1948_49 இல் அப்போது மிகவும் முக்கியமான பத்திரிகையான வை. கோவிந்தனின் சக்தியில் வெளிவந்த `நாட்டுப்பாடல்கள்’ பற்றிய அவரது முதல் கட்டுரையின் மூலம் ஆரம்பமாயிற்று. பதினாறு வயதே ஆகியிருந்த அச்சமயம் அவர் பத்தாவது வகுப்புப் படித்து வந்தார். அக்காலங்களில் அவரது நெருங்கிய இலக்கிய நண்பர் எழுத்தாளர் ம. அரங்கநாதன். பின்னர் 1950 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கலைமகள் நிறுவனத்திலிருந்து வந்து கொண்டிருந்த சிறுவர் பத்திரிகையான `கண்ணனில்’ தொடர்ந்து `சசிதேவன்’ என்கிற பெயரில் குழந்தைப் பாடல்கள் எழுதினார். கிட்டத்தட்ட சுமார் 35 பாடல்கள் கண்ணனில் வெளிவந்தன. சிறுவயதிலேயே நம்பிக்கு குழந்தைகளிடம் அபரிமிதமான ஈடுபாடு இருந்தது. எனவே அவரது ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் பெரும்பாலும் குழந்தைப் பாடல்களாகவே இருந்ததில் ஆச்சரியமில்லை. அச்சில் வெளிவந்த நம்பியின் முதல் சிறுகதை `சுதந்திர தினம்’ (1951). இக்கதை குழந்தைகளை மையமாக வைத்து எழுதப்பட்டதே.

1950 இல் கிருஷ்ணன் நம்பிக்கும் சுந்தர ராமசாமிக்கும், ராமசாமி கொண்டுவந்த `புதுமைப்பித்தன் நினைவு மலரை’ ஒட்டி நட்பு ஏற்பட்டது. கிட்டதட்ட 25 வருடங்கள் இடைவெளியின்றி தொடர்ந்த நட்பு இது. சுந்தர ராமசாமியின் நட்பு நம்பியை மேலும் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்று கிருஷ்ணன் நம்பியின் அப்பா எண்ணினார்.

விஜயபாஸ்கரன் `சரஸ்வதி’யை தொடங்கியபோது அதில் நம்பி சுமார் 11 குழந்தைக் கவிதைகள் எழுதினார். தொடர்ந்து சிறுகதைகளும் எழுத ஆரம்பித்தார். `ஜீவா’வுடன் நட்பாயிருந்த காலகட்டத்தில் அவர் நம்பியின் கதைகளை கேட்டு வாங்கி `தாமரை’யில் பிரசுரித்தார்.

1965 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகாலயம் கிருஷ்ணன் நம்பியின் 39 குழந்தைப் பாடல்களை தொகுத்து `யானை என்ன யானை?’ புத்தகத்தை கொண்டு வந்தது. 1995 ஆம் ஆண்டு ஸ்நேகா பதிப்பகம் `காலை முதல்’, `நீலக்கடல்’ இரண்டு தொகுப்புகளிலுமுள்ள கதைகளை தொகுத்து 19 கதைகளடங்கிய `கிருஷ்ணன் நம்பி கதைகள்’ புத்தகத்தை கொண்டு வந்தது. 1974 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக கிருஷ்ணன் நம்பியின் இடது காலை ஆபரேஷன் செய்து எடுக்கவேண்டியதாகிவிட்டது. காலை எடுத்தபிறகு ஒன்றரை ஆண்டுகள்தான் அவர் உயிருடன் இருந்தார். நுரையீரல் பாதிக்கப்பட்டு 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி காலையில் நாகர்கோவில் மத்தியாஸ் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. 

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்