Showing posts with label கு.ப.ரா. Show all posts
Showing posts with label கு.ப.ரா. Show all posts

Oct 10, 2021

புது எழுத்து - கு. ப. ரா.

சென்ற மகா யுத்தத்தின் பிறகு ஐரோப்பிய நாடுகளில் இலக்கிய சம்பந்தமாகப் புதிய பிரச்னைகளும் பாதைகளும் கிளம்பின. பல புது எழுத்தாளர்கள் இலக்கியமே புரட்சி உருவம் கொள்ளவேண்டுமென்றும், யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட சமூக - பொருளாதார மாறுதல்களை இலக்கியம் அலசி ஆராய்ந்து புது வழிகளையும் போக்குகளையும் நிர்ணயிக்க வேண்டுமென்றும் வாதாடினார்கள். அந்தக் கிளர்ச்சியின் பயனாகத் தோன்றிய எழுத்துகள் எல்லாம் ஐரோப்பிய சமூகத்தைப் படம் பிடிப்பவைகளாகவே அமைந்தன.

இங்கிலாந்தில் ஏற்பட்ட அதிர்ச்சியின் அறிகுறிகளைத் தொகுத்து ‘புது


எழுத்து’ என்ற வெளியீடு ஒன்றும் தோன்றிற்று. அதன் இரண்டு பாகங்கள் இப்பொழுது ‘பெங்குவின்’ பிரசுரத்தில் வெளியாகியிருக்கின்றன. ‘ஐரோப்பாவின் புது எழுத்து’ என்ற புத்தகம் ஒன்றும் புது எழுத்தின் ஆசிரியர் ஜான் லேமன் என்பவரால் எழுதப்பட்டு வெளியாகிறது.

அவை மூன்றையும் சமீபத்தில் படித்தேன். படித்து முடித்தபின் மனதில் இதுதான் தோன்றிற்று; அப்பேர்ப்பட்ட பிரமாதமான அதிர்ச்சிகளின் பலனாக இந்த மாதிரியான எழுத்துத்தானா புதிதாக வெளிவந்தது? ‘மலையைக் கெல்லி’ என்பார்களே அந்தமாதிரிதானா இந்த இயக்கம் பரிணமித்தது? அந்தப் புத்தகங்களில் ஒன்றும் அவ்வளவு புதிய வாசனைக் கொண்டதாகக் காணோமே! புதுத் தேர்ச்சியோ புதுக்கருத்தோ அப்படியாக ஒன்றும் புலப்படவில்லையே?

யுத்தத்தின் கோரங்களைப் பற்றியும் வாழ்வின் சிதைவைப் பற்றியும் சில வர்ணனைகள் இருக்கத்தான் இருக்கின்றன. மார்க்ஸைப் பற்றிக்கூட ஓரிருவர் ஓரிரு வரிகள் எழுதியிருக்கிறார்கள். எழுத்தில் வேதனை நிரம்ப இருக்கிறது; திகைப்பு தெளிவாகத் தென்படுகிறது; ஆனால் வழியைக் காணோம். கடைத்தேறுவதற்கான சூசனைகளைக் காணோம்.

புது எழுத்து என்பதற்கான அத்தாட்சி ஒன்றையும் அவற்றில் காணோம். இலக்கணம் தவிடுபொடியாகியிருக்கிறது. என்னதான் எழுதுவது என்ற விவஸ்தை இல்லை என்பது தெரிகிறது. பச்சையாக வேசைகளின் சாகஸங்களைப் பற்றிய வர்ணனைகள் பதேஷ்டமாக இருக்கின்றன - அவ்வளவுதான். இதுதானா புது எழுத்தின் சின்னம்?

தமிழ்நாட்டிலும் கொஞ்சகாலமாகப் புது எழுத்துக் கிளர்ச்சி நடைபெறுகிறது. சில எழுத்தாளர்கள் இலக்கணத்தைக் கட்டித் தூர வைத்துவிட்டார்கள். சிலர் பச்சை எழுத்தில் புகுந்துவிட்டார்கள். மனோதத்துவ ஆராய்ச்சி என்ற போர்வையில் வாய்க்கு வந்ததெல்லாம் - கைக்கு வந்ததெல்லாம் எழுதுகிறார்கள்.

அவர்களுக்கு நேர் எதிரிடையாகச் சிலர் இன்றும் “பத்தாம் பசலி’த் தமிழ் எழுதுகிறார்கள். கவைக்குதவாத விஷயங்களைப் பற்றி எழுதிக் காதைத் துளைக்கிறார்கள். நமது சமூக நிலைக்கோ உலகப் போக்கிற்கோ ஒவ்வாத பழங்கதைகளைப் போற்றிப் போற்றிப் பொழுதைக் கழிக்கிறார்கள்.

இன்று தமிழ்நாட்டில் பண்டிதர்கள் ஒருபுறமாகவும் புது எழுத்தாளர்கள் ஒருபுறமாகவும் ஒருவரை ஒருவர் கலக்காமல் தனித்தனியாக எழுதுகிறார்கள். ஒரு கூட்டம் மற்றதை மதிப்பதில்லை. புதுரக எழுத்தாளர்களை, ‘பழமை அறியாதவர்கள்’ என்று பண்டிதர்கள் அலட்சியமாகப் பேசுகிறார்கள். ‘பண்டிதர்களுக்குப் புது வாழ்க்கை நினைப்பே இல்லை’ என்று நவீன எழுத்தாளர்கள் குறை கூறுகிறார்கள்.

புதுமுறை எழுத்தாளர்களுக்கு ஏதோ ஒரு லட்சியம் இருப்பது போலவாவது தென்படுகிறது. அவர்கள் தற்கால வாழ்வையாவது ஆதாரமாக எடுத்துக்கொள்ளுகிறார்கள். பழைய எழுத்துக்காரர்களுக்கு ஒன்றும் இருப்பதாகவே தெரியவில்லை. எல்லாம் பழைய தமிழில் இருக்கிறது என்பதுதான் அவர்கள் வாதம், லட்சியம். புதுமையைக் கண்டு, அவர்கள் மஞ்சுவிரட்டுக்காளை போல மிரளுகிறார்கள்; தமிழுக்கே ஆபத்து வந்துவிட்டது என்று கலங்குகிறார்கள். இந்த நிலைமையில் இப்பொழுது ஒரு முட்டுக்கட்டையே ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லாம்.

புது எழுத்து என்பது என்ன? அதில் என்ன மாறுபாடு இருக்கிறது? என்ன இருக்கவேண்டும்?

புது எழுத்து என்பது உண்மையில் பழைய எழுத்துத்தான். மிக மிகப் பழையது. அதைப் பண்டிதர்கள் எதிர்த்தால் உண்மையாகவே அவர்களுக்கு சரித்திர வாசனையோ உண்மையான பழைய எழுத்து அறிவோ இல்லையென்றுதான் சொல்லவேண்டும்.

நான் சொன்னபடி புது எழுத்து இன்னும் சரியான புதை பூமியில் கட்டிடம் பெறாமல் இருக்கலாம். தற்சமயம் ஓரளவு மேல்நாட்டு நவீன இலக்கியச் சார்புகூடக் கொண்டிருக்கலாம். ஆனால் அதன் பிறப்பு அத்தாட்சி பெற்றது. நமது தற்கால வாழ்வின் சுற்றுப்புலனின் மூச்சுக்காற்று பெற்றது. இதே காரணத்தால்தான் நான் அதை உண்மையான பழைய எழுத்து என்கிறேன்.

நமது பழைய எழுத்துக் காலம் சங்ககாலம். அப்பொழுது எழுத்து வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவும் அதன் லட்சியக் கருவியாகவும் இருந்தது. தலைவனும் தலைவியும் தமிழ்க் காதல் புரிந்த காலத்தில் உதித்தது அது. இடைக்காலத்தில் தமிழ் எழுத்து வாழ்க்கைக்குச் சம்பந்தமற்றுப் போயிற்று; ஏதோ ஒரு விபரீதமான கற்பனையாக மாறிற்று. அந்தக் காலத்துக்கு ஒவ்வாத கருத்துகளும் வார்த்தைகளும் இலக்கியத்தில் புகுந்து அதை வாழ்க்கையிலிருந்து பிரித்துவிட்டன. பிறகு ஆழ்வார்கள் முதலியவர்கள் தோன்றின பொழுதுதான் மனநிகழ்ச்சிகள் மூலமாவது இலக்கியம் வாழ்க்கையுடன் பிணைப்புக் கொண்டது.

சென்ற நூறு வருஷங்களாக தமிழ் எழுத்து அதற்கு முன் இருந்த விபரீதத்தைத் துறந்து நடை முதலுக்கு வர ஆரம்பித்துவிட்டது. வாழ்க்கையில் அடிபடாது செந்தமிழ் நீங்கித் தமிழன் பேசும் பாஷை இலக்கியத்தில் இடம்பெற்றுவிட்டது. அந்த ஆதிக்கத்தைப் பரப்பத்தான் இன்று புதுமை எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். பேச்சு நடை இலக்கியத்தில் ஸ்தானம் பெறுவது அவர்கள் முதல் லட்சியம். கருவியைச் செப்பனிடுவதுதானே எல்லா ஆக்க வேலைகளிலும் முதற்காரியம்?

எனவே புது எழுத்து என்றால், முதலில் புது பாஷை - நடைமுறையில் இருக்கும் பாஷை - இலக்கியத்தில் கையாளப்படுவது. அதற்குப் பிறகு புதுக் கருத்து.

இந்தப் புதுக் கருத்து விஷயத்தில் புது எழுத்தாளர்களிடையேகூட அபிப்பிராய பேதம் இருக்கிறது. நடை விஷயத்தில் ஒன்று சேர்ந்து பண்டிதர்களை எதிர்க்கும் பேர்வழிகள் கருத்து விஷயத்தில் தங்களுக்குள்ளேயே வித்தியாசம் கொள்ளுகிறார்கள். பண்டிதர்களுக்கும் கருத்துகளுக்கும் சம்பந்தமே இல்லை. அவர்கள் போராடுவதெல்லாம் எலும்புக்காகத்தான் - சதைக்காகவல்ல. சதையென்று ஒன்று இருப்பதையே அவர்கள் அறியவில்லை - பாவம்!

புதுக் கருத்து விஷயமாக புதிய எழுத்தாளர்களிடையே அபிப்பிராய பேதம் இருக்கிறது என்று நான் சொல்லும்போது அதற்கேற்றவாறு தீவிரமாகக் கொள்கை நிர்ணயமாகிவிட்டதென்றோ, அதையொட்டிப் போர் நடக்கிறதென்றோ எண்ணிவிடக் கூடாது. அப்படித் தீவிரமாகத் தத்துவ ஆராய்ச்சி செய்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் என்றோ சொல்லிவிட முடியாது. ஏன்? சில புது எழுத்தாளர்களுக்குத் தத்துவ ஆராய்ச்சியிலேயே நம்பிக்கை கிடையாது!

ஆமாம். இந்த ‘வபை’யான இடத்திலிருந்தே நிலைமையை விளக்க முயலாம். சிலருக்குத் தத்துவத்தில் நம்பிக்கை கிடையாது; சிலர் தத்துவமின்றி ஒன்றும் செய்ய முடியாது என்ற கொள்கை கொண்டவர்கள். முன்னவர்களைப் பொதுவாக பெளதிகவாத மனப்பான்மை கொண்டவர்கள் என்று சொல்லலாம்; பின்னவர்களை ஆத்மீக சார்பு கொண்டவர்கள் என்று சொல்லலாம். யாரும் எந்த இடத்திலும் தங்கள் மனப்பான்மையை நிர்ணயித்து இதுவரையிலும் சொல்லவில்லை. பொதுவாக எழுத்துகளையெல்லாம் படிப்பதிலிருந்து இந்த மேலெழுந்த வித்தியாசம் தென்படுகிறது. எந்தக் கட்சி சரியானது, எது தவறு என்ற பிரச்னையே இங்கு எழவில்லை. இப்படி இரண்டு கூறுகள் இருக்கின்றன என்பதுதான் விஷயம். எழுத்தின் போக்கிலே இது தெரிகிறது. குறித்த மனப்பான்மை தங்களுக்கு இல்லவே இல்லை என்று சில எழுத்தாளர்கள் மறுக்கக்கூடச் செய்யலாம். அதிலும் ஆச்சரியமில்லை. ஏனெனில் எதுவும் இன்னும் நிர்ணயமாகவில்லை.

இந்தக் கட்டுரையில் எனக்குத் தோன்றியதை நான் சொல்லிவைத்தால் அதன் மூலமாகவாவது ஒரு நிர்ணயம் ஏற்படலாமோ என்பது என் எண்ணம். ஆனால் நிர்ணயம் ஒன்றுமே கூடாது; எந்த நிர்ணயமும் முற்றிலும் நிலைக்காது என்று சில எழுத்தாளர்கள் ஆட்சேபிப்பார்கள் - எனக்குத் தெரியும்.

எந்த நிர்ணயமும் நிரந்தரமல்ல என்பதை நானும் ஒப்புக்கொள்ளுகிறேன். வெள்ளப் பெருக்கு ஆறாக வேண்டுமானால் இரண்டு கரைக்குள் நிர்ணயம் ஆகவேண்டும். வெள்ளப் பெருக்கு ஆறு ஆவானேன்? நீர்தானே? இரண்டு நிலைகளிலும் எப்படியிருந்தால் என்ன?

வெள்ளப் பெருக்கு போக்கு வழியற்றது; அழிக்கும் தன்மை கொண்டது. ஆறு குறித்த பாதை கொண்டது. சிருஷ்டி சக்தி கொண்டது.

இலக்கியத்திற்கு லட்சியம் உண்டா? அல்லது அது காரியமற்ற கதைப்பா? அது மலரிலிருந்து பிறக்கும் மணம் போன்ற உயர்த்தும் சக்தியா? அல்லது

வியர்வை போன்ற வெளியீடா? இதெல்லாம் தனிப் பிரச்னைகள். ஆனால் தற்காலிகமாகவாவது இலக்கியப் போக்கிற்கு ஒரு பாதை வேண்டுமென்பதை அராஜகர்களைத் தவிர வேறு யாரும் ஆட்சேபிக்க முடியாது.

‘எழுத்துக்காகத்தான் எழுத்து அல்லது கலைக்காகத்தான் கலை’ என்று எப்பொழுதும் ஒரு கட்சி உண்டு. இலக்கியத்திற்கு வேறொரு வேலையும் கிடையாது. வேறொரு இயக்கத்திற்கும் காரணமாகாது. தன் நெகிழ்ச்சியிலேயே நிலைபெறுவது என்பது அந்தக் கட்சியின் சித்தாந்தம். அதாவது கலை என்பது, கலைஞனின் ஆத்மா வெளியே விரிவு கொள்வது – அவ்வளவுதான். அஃது ஒரு நிகழ்ச்சி, அனுபவம். அதற்கு மேல் போன யாதொரு தத்துவமும் அதில் கிடையாது என்பது அதன் கொள்கை.

இலக்கியம் இதயத்தின் ஒலிபரப்புத்தான் - சந்தேகமில்லை. ஆனால் அந்த ஒலி உள்ளே இருக்கும் வரையில் அது ஆத்மானுபவம்தான் - கலைஞனின் உள்ள நெகிழ்ச்சி. எந்த நிமிஷம் எழுத்து, வாத்தியம், வர்ணம், கல் முதலிய கருவிகள் மூலம் அது வெளியேறிப் பரவுகிறதோ, அதே நிமிஷம் அது வெளியுலகத்தை எந்த முறையிலாவது பாதிக்கும் தன்மை பெற்றுவிடுகிறது. அப்பொழுது அது வெறும் அனுபவம் என்ற கர்ப்ப நிலையைத் தாண்டிவிடுகிறது - பிறந்த குழந்தையாகிவிடுகிறது. பிறகு பிறர் சூட்டும் பெயரும் பிறர் சுமற்றும் சுமையும்தானே அதன் வாழ்க்கை?

கலைஞன் தன் அனுபவங்களைக் சிதைத்துத் தத்துவ ஆராய்ச்சி செய்யச் சக்தியற்றவனாக இருக்கலாம்; ஆனால் பிறர் விடமாட்டார்கள் அல்லவா? அவர்கள் “என்ன பெயர் குழந்தைக்கு? இன்னார் போலவே இருக்கிறது, அழகாக இருக்கிறது, நன்றாக இல்லை” என்றெல்லாம் சொல்லத்தான் சொல்லுவார்கள். “உன் கொள்கை என்ன?” என்று கேட்டால் கலைஞன், “எழுதி இருக்கிறேன், பார்த்துக்கொள்ளுங்கள்!” என்று வேண்டுமானால் சொல்லலாம்; “கொள்கையே கிடையாது எனக்கு!” என்று சொல்லித் தப்ப முடியாது. “என் குழந்தைக்குப் பெயர் கிடையாது” என்று கலைஞன் சாதித்தாலும் ஊரார் “இன்னான் மகன்” என்றாவது ஒரு பெயர் வைக்கத்தான் செய்வார்கள்.

“பெயரில் என்ன இருக்கிறது?” என்று ஆங்கிலக் கவி எழுதியதைச் சிலர் தப்பாக அர்த்தம் செய்துகொண்டுவிட்டார்கள். பெயர் எப்படியிருந்தால் என்ன என்பதுதான் அதன் பொருளே தவிர, பெயரே தேவை இல்லை என்று அர்த்தமல்ல. நடைமுறைக்காவது நிச்சயம் பெயர் இருந்தே தீர வேண்டும்.

ஒவ்வொரு கலைஞனுடைய எழுத்துக்கும் கொள்கை என்ற பெயர் இருந்தே தீரவேண்டும். இந்த முறையில் தமிழ்நாட்டில் தற்காலம் எழுதிவரும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு கொள்கை இருப்பது தென்படுகிறது. பொதுவாக அவர்களுடைய எழுத்துக்களைச் சில முக்கியமான பிரிவுகளின் கீழ் கொண்டுவந்துவிடலாம்.

சென்ற பத்து வருஷங்களுக்குள்தான் அநேகமாக இந்தப் புது எழுத்து பூராவும் தோன்றியிருக்கிறது என்று பொதுவாகக் கொள்ளலாம். பாரதியும் வ. வே. சு. அய்யரும் இந்தக் காலத்திற்கு முன் எழுதினவர்கள். அவர்களை இந்த ஆராய்ச்சியில் சேர்க்கத் தேவை இல்லை.

ஆனந்த விகடன், கலைமகள், மணிக்கொடி - இந்த மூன்று பத்திரிகைகளும் இந்தப் புது எழுத்திற்கு முதல் ஆதாரமாக இருந்தனவென்பது சென்ற பத்து வருஷ இலக்கிய நிகழ்ச்சிகளைக் கவனித்து வரும் எல்லோரும் அறிந்த விஷயம். புது எழுத்து முழுவதும் அநேகமாக அவற்றில் அடக்கமாகியிருக்கிறது என்றே சொல்லிவிடலாம்.

இந்த மூன்று பத்திரிகைகளுமே ஒரு விதத்தில் மூன்று மனப்பான்மைகளின் வாக்காக அமைந்துவிட்டன. ஆனந்த விகடன் நுனிப்புல் மேயும் மனப்பான்மை கொண்டது. ஆழ்ந்து எதையும் ஆராய அதற்கு விருப்பம் இல்லை. வாழ்க்கையின் கஷ்டங்களைக் கண்டு சகிக்க அதற்கு வெறுப்பு. எனவே வாழ்க்கையில் மேலெழுந்தவாரியாகத் தென்படும் சுக சௌகரியங்களை மட்டும்தான் அது வாழ்க்கையில் கண்டறியவேண்டியவை என்று கொள்கிறது. ஹாஸ்யம், கிண்டல். அதிலும் ஆழம் கிடையாது. சிக்கல்களை வெகு லேசாக ஒதுக்கிவிட்டு முகம் கோணாதபடி வாழ்க்கையின் சௌகரியமான அம்சங்களை மிகைப்படுத்திச் சித்தரிப்பது, துக்கத்தையும் வீழ்ச்சியையும் மகத்தான சோகங்களையும் கண்டு கண்மூடிக்கொண்டுவிடுவது. இவைதான் இந்த மனப்பான்மையின் சாரம். ‘கல்கி’ என்ற ரா. கிருஷ்ணமூர்த்தியும், எஸ். வி. வி.யுமே இத்த மனப்பான்மையின் முதன்மையான எழுத்தாளர்கள். சிதம்பரநாத முதலியாரும் ‘பி. ஸ்ரீ.’யும் இதன் விமரிசகர்கள்.

கலைமகள் முக்கியமாகப் பெருவாழ்வின் மிதப்பைப் போற்றும் மனப்பான்மை கொண்டது. கற்பனையிலும் வாழ்க்கையிலும் பெருமையையும் பேறையும் அந்தஸ்தையும் கௌரவத்தையும் போற்றுவது இதன் இயற்கை. வாழ்க்கைப் போர் அலட்சியம் செய்யவேண்டிய விஷயம். அது நிரந்தரமல்ல, முக்கியமல்ல. சீரும் செல்வமும்தான் வாழ்க்கையின் லட்சியங்களை நிறைவேறச் செய்யும் கருவிகள். அவைதான் போற்றுதற்குரியவை. வாழ்க்கையின் லட்சியம் – பெயர், பதவி, சுகம், கலாரசனை, லட்சியத்திற்கொத்த கலை. சாமிநாதையர் அவர்களும் ‘குமுதினி’யும் இதன் எழுத்தாளர்கள் என்று சொல்லலாம்.

மணிக்கொடியின் மனப்பான்மை புரட்சி. வாழ்க்கையிலும் சமூகத்திலும் ரசனையிலும் புரட்சி; ‘புராணமித்யேவ நசாதுசர்வம் (பழையது என்பதாலேயே எல்லாம் சிறந்தது அல்ல) என்று காளிதாசன் சொன்னதுதான் அதன் கொள்கை. போராட்டத்தில்தான் அதன் உயிர். துக்கத்திலும் வீழ்ச்சியிலும் வறுமையிலும்தான் உணர்ச்சிகள் சிறந்து ஒளிகொண்டு ஜ்வலிக்கின்றன என்பது அதன் கொள்கை. சுகம், ஏமாற்றம், துக்கம்தான் உண்மை என்பது அதன் தீர்மானம். சர்வஜன ஓட்டின் தீர்ப்புப்படி உலகத்தில் பெருவாரியான மக்கள் அனுபவிப்பது இன்பமா? செல்வமா? பதவியா? இல்லை. அதனால் மணிக்கொடி மனப்பான்மை எங்கும் தென்படும் வறுமையையும் நோயையும்தான் ஆராய்ச்சி செய்கிறது. எதையும் அது புறக்கணிப்பதில்லை. எல்லாம் இயல்பு, எல்லாம் பலவீனம் என்று தெளிவு கொள்ளுகிறது. போராட்டம்தான் அதன் லட்சியம், போரின் முடிவுகூட அவ்வளவு இல்லை.

முதல் இரண்டு மனப்பான்மைகளும் கொஞ்சம் நிதான புத்தி கொண்டவை; மூன்றாம் மனப்பான்மை தீவிரப் போக்குடையது. இதற்குள்ளேயே பல போக்குகள் இருக்கின்றன. உதாரணமாக வ. ரா. ஒரு போக்கு; பிச்சமூர்த்தி ஒரு போக்கு; ‘புதுமைப்பித்தன்’ என்ற விருத்தாசலம் ஒரு போக்கு.

மேலே குறித்தவர்களைத் தவிர வேறு சிறந்த எழுத்தாளர்கள் இல்லை என்பதல்ல; அந்த மனப்பான்மையை எழுத்தில் பூரணமாகக் காட்டும் சிலரை மட்டும் உதாரணமாகக் காட்டியிருக்கிறேன். மேலும் ஒரு மனப்பான்மையுடையவர் மற்றொரு பத்திரிகைக்கு அதிகமாக எழுதுவதில்லை என்பதும் கிடையாது. ஆனந்த விகடன் எழுத்தாளர்களும் மணிக்கொடி எழுத்தாளர்களும் பரஸ்பரம் மாறி எழுதுவது அதிகமாகத் தென்படவில்லையே தவிர, இரு கோஷ்டியினரும் கலைமகளுக்கு வெகுவாக எழுதியிருக்கிறார்கள். இந்த முறையில் கலைமகள் ஒரு பொதுக்கருவி என்றுகூடச் சொல்லலாம்.

ஆனால் இதெல்லாம் சௌகரியத்திற்காகச் செய்துகொள்ளும் பிரிவுகளே தவிர வெட்டிவிட்டாற்போல் ஒன்றுமே நிர்ணயிக்க முடியாது. வளர்ச்சி எந்த இடத்தில் எந்த தருணத்தில் நடைபெறுகிறது என்று எங்காவது சொல்ல முடியுமா? பொதுப்படையாக அடையாளம் கண்டுகொள்ளும் பொருட்டுதான் பிரிவுகள் எல்லாமே. அதற்கு மேல் அவற்றிற்கு நாம் முக்கியத்துவம் அளிப்பது ஆபத்தாகும். நான் பெயர்களைக் குறிப்பிடுவதிலும் ஒரு விஷயம் சொல்லவிரும்புகிறேன். எனக்குத் தென்பட்ட குணங்களைச் சொல்லுகிறேனே தவிர யாரையும் நான் மதிப்புக் குறைவாகவோ கீழாகவோ கருதவே இல்லை.

இந்த மூன்றிலும் ஒன்று தாழ்ந்தது, மற்றொன்று உயர்ந்தது என்று நான் சொல்ல முன்வரவே முடியாது. எதுவும் குறைந்ததல்ல; இகழத்தக்கதல்ல. மனித சுபாவத்தின் மூன்று போக்குகள் இவ்வாறு, யதேச்சையாக, வேண்டுமென்று யாரும் வகுக்காமல் பிரிவு கொண்டு பரிமளிக்கின்றன. ஒவ்வொரு மனப்பான்மைக்கும் நிச்சயம் தர்க்க ரீதியாகவே ஓரளவு சித்தாந்தமாக விளங்க இடமிருக்கிறது. எல்லாவற்றிலும் உண்மை இருக்கிறது. விகிதத்தில்தான் வித்தியாசம். அதிலும் அபிப்பிராய பேதத்திற்கும் ஏராளமாக ஆதரவு இருக்கிறது.

தமிழ்நாட்டில் சென்ற பத்து வருஷங்களுக்குள் உள்ளத்தின் ஒலிபரப்பு இவ்விதமாக இவ்வளவு தெளிவுடன், சிற்றலை, நீட்டலை, நடுத்தர அலை என்று ரேடியோவில் சொல்லுவது போலப் பாகுபாடு பெற்றதே ஒரு பெரிய நிகழ்ச்சியாகும். இந்தப் பொதுவான பாகுபாடுகளைப் பற்றியும் அவற்றின் கீழிருக்கும் பல சிறு உட்பிரிவுகளைப் பற்றியும் இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாக ஆராய்ச்சி செய்வது உபயோகமாக விருக்கும். அப்பொழுது எழுத்தாளர்களுடைய கொள்கைகளைப் பற்றிய நிர்ணயத்தையும் ஒருவாறு சொல்லவேண்டிவரும்.

(நவசக்தி) 

 மறுபிரசுரம்: எழுத்து, மே 1959

அனுப்பியவர்: "அழிசி" ஸ்ரீனி

Apr 14, 2017

சிறிது வெளிச்சம் - கு.ப.ரா

அப்பா அவன் துன்பம் தீர்ந்தது என்று ஒருசமயம் தோன்றுகிறது.

ஐயோ தெரிந்தே அவளை சாவுக்கிரையாக விட்டு விட்டு வந்தேனே என்று ஒருசமயம் நெஞ்சம் துடிக்கிறது.

நான் என்ன செய்ய முடிந்தது. அவள் இடமே கொடுக்கவில்லையே

அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு எவ்வளவோ தடவைகள் அங்கே போயும் அவளைப் பார்க்க முடியவில்லை.

நேற்று போனேன் அவள் மாரடைப்பால் இறந்துபோய் விட்டாளாம்!

மாரடைப்பா

அந்த மார்பில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் மூண்டு அதை
அடைத்து விட்டனவோ?

அன்றிரவு சிலவற்றைத்தான் வெளியேற்றினாள் போல் இருக்கிறது.
போதும், சிறிது வெளிச்சம் போதும்; இனிமேல் திறந்து சொல்ல முடியாது' என்றாள் கடைசியாக.

திறந்து சொன்னதே என் உள்ளத்தில் விழுந்துவிடாத வேதனையாகி விட்டது.

அது தெரிந்துதான் அவள் நிறுத்திக் கொண்டாள். ஆமாம்!

இனிமேல் என்ன சொல்லுகிறேனே; அவள் இட்ட தடை அவளுடன் நீங்கிவிட்டது

நான் சென்னையில் சென்ற வருஷம், ஒரு வீட்டு ரேழி உள்ளில் குடியிருந்தேன். உள்ளே ஒரே ஒரு குடித்தனம். புருஷன் பெண்சாதி, உலகத்தில் சொல்லிக்கொள்ளுகிறபடி புருஷனுக்கு எங்கோ ஒரு பாங்கில் வேலை. பகல் முழுவதும் வீட்டிலிருக்க மாட்டான்: இரவில் வீட்டில் இருப்பதாகப் பெயர். சாப்பிட்டுவிட்டு வெளியே போவான்; இரவு இரண்டு மணிக்கு வந்து கதவைத் தட்டுவான்.

அந்த வீட்டில் நான் தனியாக இருப்பது எனக்கே சங்கடமாக இருந்தது. நான் எழுத்தாளன் இரவும் பகலும் வீட்டிலேயே இருப்பவன்.

காலையிலும் மாலையிலும்தான் சிறிது நேரம் வெளியே போவேன்.

அந்த மனிதன் முந்திக் கொண்டு விட்டான்.

'ஸார், நீங்கள் இங்கே தனியே இருக்கிறோமே என்று சங்கோசப்பட வேண்டாம். நான் சந்தேகப்படும் பேர்வழியல்ல; நீங்களும் உங்கள் ஜோலியோ நீங்களோ என்று இருக்கிறீர்கள். மனுஷ்யாள் தன்மையை அறிய எவ்வளவு நேரமாகும்? உங்களைப் போன்ற ஆசாமி வீட்டில் இருப்பது, நான் சதா வெளியே போவதற்குச் செளகரியமாக இருக்கிறது.

'உங்களைப் போல என்று சொல்ல என்னிடம் என்னத்தைக் கண்டான்?

அவள்-சாவித்திரி-என் கண்களில் படுவதே இல்லை. நானும் சாதாரணமாகப் பெண்கள் முகத்தை தைரியமாகக் கண்ணெடுத்துப் பார்க்கும் தன்மை இல்லாதவன். எனவே எனக்கு அவள் குரல் மட்டும் தான் சிறிது காலம் பரிச்சயமாகி இருந்தது.

அவன்-அவன் பெயர் கோபாலய்யர்-ஆபீஸுக்குப் போகுமுன்பே நான் முற்றத்திலிருந்த குழாயை உபயோகித்துக் கொண்டு விடுவேன். பிறகு, அந்தப் பக்கமே போகமாட்டேன். அவன் வெளியே போனதும் அவள் ரேழிக் கதவைத் தாளிட்டுக் கொண்டு விடுவாள். சாவித்திரி யாருடனும் வம்பு பேசுவதில்லை; வெளியே வருவதே இல்லை.

இப்படி ஒரு வாரமாயிற்று. இரவு இரண்டு மணிக்கு அவன் வந்து கதவைத் தட்டுவதும், சாவித்திரி எழுந்து போய்க் கதவைத் திறப்பதும், பிறகு கதவைத் தாளிட்டுக் கொண்டு அவள் அவனுடன் உள்ளே போவதும் எனக்கு அரைத் தூக்கத்தில் கேட்கும். ஒரு நாள் அவன் வந்து கதவைத் தட்டியபோது அவள் அயர்ந்து தூங்கிப் போய் விட்டாள் போல் இருக்கிறது. நாலைந்து தடவை கதவைத் தட்டிவிட்டான். நான் எழுந்து போய்க் கதவைத் திறந்தேன்.

'ஒ! நீங்களா திறந்தீர்கள்? மன்னிக்க வேண்டும்! என்று என்னிடம் சொல்லிவிட்டு அவன் உள்ளே போனான். நான் என் அறையில் போய் படுத்து கதவைத் தாளிட்டுக் கொண்டேன்.

உள்ளே போனவன் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை என்ன செய்தானோ தெரியவில்லை. பிறகு தெரிந்தது; உதைத்தான் காலால் அவள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து, ரொம்ப நாழி தட்டினர்களா? மத்தியானமெல்லாம் தலைவலி, உடம்பு... தெரியாமல்...' என்று அவள் மெதுவாக பயந்து சொன்னது என் காதில் பட்டது.

'உடம்பு தெரியுமா உனக்கு உடம்பு தெரியச் சொல்கிறேன்! என்று சொல்லிக் கொண்டு அடித்தான் அவளை அடித்தது என் காதில் விழுந்தது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. புருஷன் பெண்சாதி கலகத்தில் பிற மனிதன் தலையிடக் கூடாது என்று கடைசியாகச் சும்மா இருந்துவிட்டேன்.

பிறகு இரவு முழுவதும் மூச்சுப் பேச்சு இல்லை. ஆனால் அவள் தூங்கவே இல்லை என்பது எனக்குத் தெரிந்தது. ஏனென்றால் நானும் தூங்கவில்லை.

மறுநாள் இரவு கதவை அவள் விழித்திருந்து திறந்தாள். ஆனால், அன்றும் அவளுக்கு அடி விழுந்தது. முதல் நாள் போல அவள் பேசாமல் இருக்கவில்லை.

"என்னை ஏன் இப்படி அடித்துக் கொல்லுகிறீர்கள்? நீங்கள் செய்வது எதையாவது நான் வேண்டாமென்கிறேனா?

'ஒஹோ, இப்பொழுது உனக்கு வாய் வேறா? '

எவ்வளவு நாள்தான் நானும்...'

'சீ, வாயைத் திறந்தால் பல்லை உதிர்த்து விடுவேன்?

'உதிர்த்து விடுங்கள்!"

பளாரென்று கன்னத்தில் அரை விழுந்த சத்தம் கேட்டது. என்னை யறியாமல் நான் எழுந்து ரேழிக் கதவண்டை போய், ஸார், கதவைத் திறவுங்கள் என்றேன்.

அதற்குமுன் என்னோடு பல்லிளித்துக் கொண்டு பேசி வந்த மனிதன் உள்ளே இருந்து மிருகம் போலச் சீறினான்.

"எதற்காக?"

'திறவுங்கள், சொல்லுகிறேன்!

'முடியாது, ஸார்!

" திறக்காவிட்டால் கதவை உடைப்பேன்!"

அவன் கதவைத் திறந்துகொண்டு வெளியே ரேழிக்கு வந்து மறுபடியும் கதவை மூடிக்கொண்டு என்ன ஸார்?' என்றான்.

'உங்கள் மனைவியை நீங்கள் அடித்தது போல் காதில் பட்டது?

இருக்கலாம், அதைப் பற்றி உங்களுக்கென்ன?

'நீங்கள் அந்த மாதிரிச் செய்யும்படி நான் விடமுடியாது!"

"என்ன செய்வீர்கள்?"

போலீஸுக்குத் தகவல் கொடுப்பேன், முதலில் நானே பலாத்காரமாக உங்களைத் தடுப்பேன்."

அவன் முகத்தில் சோகமும் திகிலும் தென்பட்டன. திருதிருவென்று சற்று விழித்தான். என்னுடைய திடமான பேச்சைக்கண்டு அவன் கலங்கிப் போனான் என்று தெரிந்தது. அவன் கோழை என்று உடனே கண்டேன்; இல்லாவிட்டால் ஒருவன் பெண் பிள்ளையை அடிப்பானா?

'நீங்கள் சாது, ஒரு வழிக்கும் வரமாட்டீர்கள் என்று உங்களை ரேழியில் குடிவைத்தேன். நீங்கள் அனாவசியமாக என் விஷயத்தில் தலையிடுவதாக இருந்தால் காலையிலேயே காலி செய்து விடவேண்டும்.

'நான் காலி செய்வதைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளுவோம். இனிமேல் நீங்கள் விடிகிற வரையில் உள்ளே போகக்கூடாது.

'நீர் யாரையா, இந்த மாதிரியெல்லாம் உத்தரவு செய்ய?

"யாராயிரிருந்தால் என்ன? இப்பொழுது நீர் நான் சொன்னபடி செய்ய வேண்டியதுதான்; மீறினீரானால் உமக்கு நல்லதல்ல.

'பயமுறுத்துகிறீர்களோ?

பயமுறுத்துவது மட்டுமல்ல-செயலிலே காட்டி விடுவேன். வாரும், என் அறையில் படுத்துக் கொள்ளலாம். அம்மா, கதவை உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளுங்கள் என்றேன் அவள் பக்கம் திரும்பி.

போட்டு விடுவாளோ அவள்?"

'நான் இங்கே இருக்கிறவரையில் நீர் இனிமேல் அந்த அம்மாள் மேல் விரல் வைக்க முடியாது."

அப்பொழுது சாவித்திரி கதவைத் திறந்துகொண்டு வந்தாள். என்னுடன் அவள் பேசினதே இல்லை.

தயவு செய்து நீங்கள் தலையிட வேண்டாம் என்று என்னிடம் சொல்லிவிட்டுப் புருஷனைப் பார்த்து, வாருங்கள் உள்ளே! என்றாள்.

'நீ போடி உள்ளே! உன்னை யார் இங்கே வரச் சொன்னா என்று அவன் அவள்மேல் சீறி விழுந்தான்.

'அம்மா, விஷயம் உங்கள் கையிலும் இல்லை. என் கையிலும் இல்லை. நான் தலையிடாமல் இருக்க முடியாது. போலீஸுக்குத் தகவல் கொடுத்தால் அனாவசியமாக உங்களுக்கு சங்கடமே என்றுதான் நானே தலையிடுகிறேன் என்றேன் அவளைப் பார்த்து.

'நீங்கள் இதையெல்லாம் காதில் போட்டுக்கொண்டு தலையிடுவது தான் எனக்குச் சங்கடம் என்று அவள் சொன்னாள்.

சரி, கதவு திறந்திருக்கட்டும். நீங்கள் உள்ளே படுத்துக் கொள்ளுங்கள். வாசற்கதவைத் தாளிட்டு வருகிறேன். இவரும் நானும் என் அறையில் படுத்துக் கொள்ளுகிறோம் என்றேன்.

நான் இங்கே படுத்துக்கொள்ள முடியாது. எனக்க வெளியே போக வேண்டும். ஜோலி இருக்கிறது என்று அந்த மனிதன் வெளியே போக ஆயத்தமானான்.

என்ன மனிதன் அவன் அவன் போக்க எனக்கு அர்த்தமே ஆகவில்லை.

சாவித்திரி உள்ளே போய்க் கதவைத் தாளிட்டுக் கொண்டாள். அவன் வெளியே போனான். நான் வாசற்கதவை மூடிக்கொண்டு என் அறையில் போய்ப் படுத்துக்கொண்டேன்.

தூக்கம் வரவில்லை. சாவித்திரியின் உருவம் என் முன் நின்றது. நல்ல யெளவனத்தின் உன்னத சோபையில் ஆழ்ந்த துக்கம் ஒன்று அழகிய சருமத்தில் மேகநீர் பாய்ந்தது போலத் தென்பட்டது. பதினெட்டு வயதுதான் இருக்கும். சிவப்பு என்று சொல்லுகிறோமே, அந்த மாதிரி கண்ணுக்கு இதமான சிவப்பு. மிகவும் அபூர்வம் இதழ்கள் மாந்தளிர்கள் போல இருந்தன. அப்பொழுதுதான் அந்த மின்சார விளக்கின் வெளிச்சத்தில் கண்டேன். கண்களுக்குப் பச்சை விளக்கு அளிக்கும் குளிர்ச்சியைப் போன்ற ஒரு ஒளி அவள் தேகத்திலிருந்து வீசிற்று.

அவளையா இந்த மனிதன் இந்த மாதிரி...!

தாழ்ப்பாள் எடுபடும் சத்தம் கேட்டது.

நான் படுக்கையில் சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன். அவள் என் அறை வாசலில் வந்து நின்றாள் போலத் தோன்றிற்று. உடனே எழுந்து மின்சார விளக்கைப் போட்டேன்.

வேண்டாம், விளக்கு வேண்டாம், அணைத்து விடுங்கள் என்றாள் அவள்.

உடனே அதை அணைத்துவிட்டு, படுக்கையிலேயே உட்கார்ந்து விட்டேன். அவள் என் காலடியில் வந்து உட்கார்ந்து கொண்டாள். 'புருஷன் ஒரு விதம், மனைவி ஒரு விதமா என்று எனக்கு ஆச்சரியம்.

'உங்களுடன் தனியாக இப்படி இருட்டில் பேசத் துணிந்தேனே என்று நீங்கள் யோசனை செய்ய வேண்டாம். நீங்கள் இதற்காக என்னை வெறுக்க மாட்டீர்கள் என்று எனக்கு எதனாலோ தோன்றிற்று... வந்தேன்.

'அம்மா...'

'என் பெயர் சாவித்திரி.

“எதற்காக இந்த மனிதனிடம் இங்கே இருக்கிறீர்கள்? பிறந்தகம் போகக் கூடாதா? இந்த புருஷனிடம் வாழாவிட்டால் என்ன கெட்டுப் போய் விட்டது

'இருக்க வேண்டிய காலம் என்று ஊர் ஏற்படுத்தியிருக்கிறதே. அதற்குமேல் பிறந்த வீட்டில் இடமேது ?"

ஆனால் அங்கே இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்களா? '

வாயைத் திறந்து சொல்ல வேண்டுமா?"

'பெற்றோர்களாவது, புருஷனாவது, எல்லாம் சுத்த அபத்தம். காக்கை குருவி போலத்தான் மனிதர்களும். இறகு முளைத்த குஞ்சைக் கூட்டில் நுழைய விடுகிறதா பட்சி?

'புருஷன்...'

'என்னடா இந்தப் பெண் இப்படிப் பேசுகிறாள் என்று நீங்கள் நினைப்பீர்கள். நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைத்தாலும் எனக்கு ஒன்றுதான். புருஷனா புருஷனிடம் வந்த சில மாதங்கள் பெண் புதிதாக இருக்கிறாள். பிறகு புதிதான பானம் குடித்துத் தீர்ந்த பாத்திரம் போலத்தான் அவள்...'

'நீங்கள் அப்படி...'

'நீங்கள் என்று ஏன் சொல்லுகிறீர்கள், நீங்கள் தானே பெரியவர்கள். என் நெஞ்சு புண்ணாகி, அதன் ஆழத்திலிருக்கும், எரியும் உண்மையைச் சொல்லுகிறேன். உங்களுக்குக் கலியாணம் ஆகிவிட்டதா?’

'இல்லை."

ஆகி, மனைவி வந்து சில மாதங்கள் ஆகியிருந்தால், நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகும்.'

வாசற்புறம் கேட்காதபடி சற்று மெல்லிய குரலில்தான் பேசினாள். ஆனால், அந்தப் பேச்சில் இருந்த துடிப்பும் வேதனையும் தாங்க முடியாதவையாக இருந்தன.

'அம்மா... சாவித்திரி, உன் புருஷன் வந்துவிடப் போகிறான். ஏதாவது தப்பாக நினைத்துக்கொண்டு...'

’இனிமேல் என்னை என்ன செய்துவிடப்போகிறான். கொலைதானே செய்யலாம்? அதற்குமேல்?’

'நீ இப்படிப் பேசலாமா? இன்னும் உன் புருஷனுக்கு புத்தி வரலாம். நீயே நல்ல வார்த்தை சொல்லிப் பார்க்கலாம்.

'நல்ல வார்த்தையா? புத்தியா? இந்த மூன்று வருஷங்களில் இல்லாததா?

பின் என்ன செய்யப் போகிறீர்கள்?"

‘என்ன செய்கிறது? தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தேன், முடியவில்லை - அதாவது என்னால் முடியவில்லை. என்னால் பொய் சொல்ல முடியாது. உயிர் இருக்கிற வரை அடிபட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.'

அடடா, இப்படியேயா!'

வேறு வழி என்ன இருக்கிறது?

என்னால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

'என்ன பதில் இல்லை? என்று அவள் சிரித்தாள்.

'நான் என்ன சொல்வது... அதாவது நான் ஒன்று கேட்கட்டுமா?" என்று திடீரென்று கேட்டேன்.

கேட்கிறது தெரியும். உங்களுடன் ஓடிவந்துவிடச் சொல்லுகிறீர்கள். நீங்களும் இதே மாதிரிதானே சில மாதங்களுக்குப் பிறகு.? '

என்ன சாவித்திரி..."

அதாவது, ஒருவேளை நீங்கள் அடித்துக் கொல்லாமல் இருப்பீர்கள். மிருக இச்சை மிகைப்படும்போது என்னிடம் கொஞ்சுவீர்கள். இச்சை ஒய்ந்ததும் முகம் திருப்பிக் கொள்ளுவீர்கள். புது முகத்தைப் பார்ப்பீர்கள்."

'நீ இவ்வளவு பட்டவர்த்தனமாகப் பேசும்பொழுது, நானும் பேசலாமா?

'தாராளமாக!'

'என்னைக் கவர்ந்து வைத்துக்கொள்ளும் சக்தி உன்னிடமல்லவா இருக்கிறது!"

அதெல்லாம் சுத்தக் கதை. அதை இங்கே இப்பொழுது புகவிடாதீர்கள். வெட்கமற்று உண்மையை நான் கொட்டுகிறேன். நீங்கள் எதையோ சொல்லுகிறீர்களே? எந்த அழகும் நீடித்து மனிதனுக்கு திருப்தி கொடுக்காது...'

'நீ எப்படி அந்தமாதிரிப் பொதுப்படையாகத் தீர்மானிக்கலாம்?"

‘எப்படியா? என் புருஷனைப்போல் என்னிடம் பல்லைக்காட்டின மனிதன் இருக்கமாட்டான். நான் குரூபியல்ல, கிழவியல்ல, நோய் கொண்டவள் அல்ல. இதையும் சொல்லுகிறேன். மிருக இச்சைக்கு பதில் சொல்லாதவளுமல்ல. போதுமா?"

'சாவித்திரி, உன் உள்ளத்தில் ஏற்பட்ட சோகத்தால் நீ இப்படிப் பேசுகிறாய். என்றாவது நீ சுகம் என்றதை ருசி பார்த்திருக்கிறாயா?

“எது சுகம்? நகைகள் போட்டுக்கொள்வதா? நான் போடாத நகை கிடையாது. என் தகப்பனார் நாகப்பட்டணத்தில் பெரிய வக்கீல், பணக்காரர்; புடவை, ரவிக்கை-நான் அணியாத தினுசு கிடையாது. சாப்பாடா, அது எனக்குப் பிடிக்காது. வேறென்ன பாக்கி. சரீர சுகம்; நான் ஒருநாளும் அடையவில்லை இதுவரையில்.

'அதாவது...'

'என் புருஷன் என்னை அனுபவித்துக் குலைத்திருக்கிறான். நான் சுகம் என்பதைக் காணவில்லை."

பின் எதைத்தான் சுகம் என்கிறாய்? '

நான் உள்ளத்தைத் திறந்து பேசுவதற்கும் கூட ஒரு எல்லை இல்லையா? இதற்கும் மேலுமா என்னைச் சொல்லச் சொல்லுகிறீர்கள்?"

'உன் புருஷன் ஏன்...?"

'என் புருஷனுக்கு என் சரீரம் சலித்துப்போய் விட்டது. வேறு பெண்ணைத் தேடிக் கொண்டுவிட்டான், விலை கொடுத்து.

'சாவித்திரி தைரியமாக ஒன்று செய்யலாமே!

'நான் எதையும் செய்வேன். ஆனால், உபயோகமில்லை. சிறிது காலம் உங்களைத் திருப்தி செய்யலாம் அவ்வளவுதான்.

'உன்னைத் திருப்தி செய்ய நான் முயற்சி செய்து பார்க்கிறேனே!"

'வீணாக உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். என் ரூபத்தைக் கண்டு நீங்கள் மயங்கிவிட்டீர்கள். உங்கள் இச்சை பூர்த்தியாவதற்காக, என்னை திருப்தி செய்வதாகச் சொல்லுகிறீர்கள்.

“எது சொன்னாலும்...'

'ஒன்றுமே சொல்லவேண்டாம், இனிமேல் விளக்கைப் போடுங்கள்.

நான் எழுந்து விளக்கைப் போட்டேன்.

'நான் போய்ப் படுத்துக்கொள்ளட்டுமா?"

தூக்கம் வருகிறதா?”

தூக்கமா? இப்பொழுது இல்லை

பின் சற்று தான் இரேன்.

'உங்கள் தூக்கமும் கெடவா?

'சாவித்திரி..."

'ஒன்றும் சொல்லாதீர்கள்!"

நீ சொல்வதெல்லாம் சரி என்றுதான் எனக்குத் தோன்ற ஆரம்பிக்கிறது

. நிஜம்மா என்று எழுந்து என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

'பொய் சொன்னால்தான் நீ உடனே...

அப்பா, இந்தக் கட்டைக்கு கொஞ்சம் ஆறுதல்'

'சாவித்திரி, உன்னால் இன்று என் அபிப்பிராயங்களே மாறுதல் அடைந்துவிட்டன.

அதெல்லாம் இருக்கட்டும். இந்த அந்தரங்கம் நம்முடன் இருக் கட்டும். என் கட்டை சாய்ந்தபிறகு வேண்டுமானால் யாரிடமாவது சொல்லுங்கள்.

'ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? '

இல்லை, இனிமேல் இந்த சரீரம் என் சோகத்தைத் தாங்காது. ஆனால், எதனாலோ இப்பொழுது எனக்கேதோ ஒரு திருப்தி ஏற்படுகிறது.

நான் சொல்லவில்லையா? என்று நான் என்னையும் அறியாமல், துவண்டு விழுபவள்போல் இருந்த அவளிடம் நெருங்கி, என்மேல் சாய்த்துக்கொண்டேன்.

அவள் ஒன்றும் பேசாமல் செய்யாமல் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் அப்படியே கிடந்தாள்.

இவ்வளவு மாதங்கள் கழித்து, நிதான புத்தியுடன் இதை எழுதும் போதுகூட, நான் செய்ததை பூசி மெழுகிச் சொல்ல மனம் வரவில்லை எனக்கு. இப்படி மனம் விட்டு ஒரு பெண் சொன்ன வார்த்தைகளைக் கொஞ்சங்கூட மழுப்பாமல் எழுதின பிறகு கடைசியில் ஒரு பொய்யைச் சேர்க்க முடியவில்லை.

மெள்ள அவளைப் படுக்கையில் படுக்கவைத்தேன்... என் படுக்கையில் அப்பொழுதும் அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவ்வளவு ரகஸ்யங்களை ஒரேயடியாக வெளியே கொட்டின இதழ்கள் ஒய்ந்து போனது போலப் பிரித்த படியே கிடந்தன.

திடீரென்று, ‘அம்மா! போதுமடி!’ என்று கண்களை மூடிய வண்ணமே முனகினாள்.

'சாவித்திரி, என்னம்மா? என்று நான் குனிந்து அவள் முகத்துடன் முகம் வைத்துக்கொண்டேன்."

போதும்!"

'சாவித்திரி, விளக்கு...'

அவள் திடீரென்று எழுந்து உட்கார்ந்தாள்.

‘ஆமாம், விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கொள்ளுங்கள். சற்றுநேரம் இருந்த வெளிச்சம் போதும்!’ என்று எழுந்து நின்றாள்.

'நீ சொல்வது அர்த்தமாகவில்லை, சாவித்திரி!’

'இனிமேல் திறந்து சொல்ல முடியாது. நான் போகிறேன். நாளைக்கு வேறு ஜாகை பார்த்துக்கொள்ளுங்கள்!"

'ஏன், ஏன் நான் என்ன தப்பு செய்துவிட்டேன்?’

'ஒரு தப்பும் இல்லை. இனிமேல் நாம் இந்த வீட்டில் சேர்ந்து இருக்கக் கூடாது, ஆபத்து என்று சொல்லி என்னைப் பார்த்துவிட்டு, சாவித்திரி தானே விளக்கை அணைத்துவிட்டுச் சிறிதும் தயங்காமல் உள்ளே போய்க் கதவைத் தாளிட்டுக்கொண்டாள்.

சட்டென்று என் உள்ளத்திலும் சற்று எரிந்த விளக்கு அணைந்தது.

போதும்!

எது போதும் என்றாள்? தன் வாழ்க்கையா, துக்கமா, தன் அழகா,என் ஆறுதலா, அல்லது அந்தச் சிறிது வெளிச்சத்தில்...?

******
கலாமோகினி, ஜனவரி-1943

Sep 28, 2013

பண்ணைச் செங்கான் - கு ப ரா

"இதோ இந்த மாமரம் ஒங்க பாட்டன், மவராசன், வச்ச மரம். பனம் கல்கண்டு கணக்கா சுவையா இருக்கும் ! இந்தத் தென்ன மரம் அவரு கையாலே போட்ட நெத்து. இப்படித் தடத்தோடேயே வாங்க. வரப்புல நடந்து பளக்கமில்லே. பட்டண வாசத்துப் புள்ளே!" என்று வேகமாக விடாமல் பேசினான் செங்கான்.

நானும் அவனும் என் நிலத்தின் ஒரு புறத்து வரப்பின் மேல் நடந்து போய்க் kupara கொண்டிருந்தோம்.

"இதை எப்போப்பா அறுக்கலாம்?" என்றேன்.

நிலத்தில் நின்ற பயிரைக் காட்டிக் கொண்டு செங்கான், " இன்னும் கொஞ்ச நாள் போவானுங்க. தொண்டேக் கதிர இருக்குது. கொஞ்சம் மேப்பக்கம் பூரா கதிரு வாங்கி நிக்குது.. இந்த மாமரத்து நெளலிலேயே குந்துங்க. ஏ, கங்காணி மவனே ! சின்னசாமிக்கு ரெண்டு எளனி புடுங்கியா!" என்றான்.

எனக்கு இளநீர் குடிக்கத் தெரியவில்லை. மேலேஎல்லாம் கொட்டிக் கொண்டு விட்டேன்.

"அந்த ஒலெய அளுத்திப் புடிச்சிக்கிட்டு, சட்டுன்னு சாச்சுக்கணும்" என்று செங்கான் சிரித்துகொண்டே கையால் செய்து காட்டினான்.

‘பறச்செங்கான்’ என் பாட்டனார் காலம் முதல் எங்கள் நிலத்தைச் சாகுபடி செய்கிறவன். சொக்கனூர் கிராமத்திலேயே அவன்தான் வயது முதிர்ந்த கிழவன். எண்பது வயது என்று பேச்சு. ஆனால் பார்த்தால் அறுபதிற்கு மேல் சொல்ல முடியாது. கையில் அவன் உயரமுள்ள மூங்கில் தடி. தடி எடுத்தவன் தோட்டி என்பார்கள்.ஆனால் செங்கான் தோட்டியல்ல. பழுப்பு நிலத்தில் பயிரேற்றிப் பிழைத்தான். தளதளவென்று செழித்திருந்த மார்பளவு பயிரின் நடுவில் சதா ஏதாவது வரப்பைக் கிண்டிக் கொண்டே இருப்பான்.

நிலத்தை விட்டு வெளியே வந்தாலும் அந்த தடி, இடுப்புக் கோவணந்தான்.  கறுப்பு கம்பளி ஒன்றைத் தலையிருந்து கால் வரை, மழைக்காலத்தில் சாக்கை மடித்துப் போட்டுக் கொள்வது போலப் போட்டுக் கொண்டிருப்பான். காலில்  செருப்பு, கறுத்த உடல் நரைத்த மீசையும் உச்சிக் குடுமியும்.

“அம்மா சொகமாயிருக்கா ? நம்ம கொளந்தே நல்லா இருக்கா? ஏன், ஒரு வாட்டி அம்மாளைக் கூட்டியாந்தா என்ன?”

செங்கான் சற்றுத் தொலைவில் உட்கார்ந்து கொண்டு கால் செருப்பின் வாரை இறுக்கிக் கொண்டிருந்தான்.

2

காலாவதி காலத்தில் நான் வருசா வருசம் என் கிராமத்திற்குப் போயி விட்டு வருவது வழக்கம். நான் போகாவிட்டால் செங்கான் விட மாட்டான். அவன் கொடுத்ததை வாங்கிக் கொண்டு வருவேன். பாதிப் பணம் போய் வருவதில் செலவாகிவிடும். அவன் கொடுக்கும் குத்தகை என் பாட்டனார் காலத்தில் ஏற்பட்டது. பக்கத்துக்கு நிலங்களுக்கெல்லாம் குத்தகை இரடித்துவிட்டது. அந்த தடவை நான் கிராமத்திற்குப் போயிருந்த பொது எல்லோரும் என்னை பரிதாபப் பார்வையுடன் பார்த்தார்கள். சிலர் அருகில் நெருங்கி யோசனை கூறினார்கள்.

“பாவம்! ஆண்டுக்கு ஒரு முறை வருகிறீர்கள். உங்களுக்கு இந்த ஊர் நிலைமை எப்படித் தெரியும்? கிழவன் ஏதவாது குத்தகை தருகிறானா இல்லையா? ஊரெல்லாம் குத்தகை  ஏறிப்போச்சு. உங்களை மட்டும் அவன் ஏமாற்றுகிறான்” என்று சொல்லிக்கொண்டு ஒருவர் முன் வந்து தாம் ஓர் ஆளை இரண்டு பங்கு குத்தகைக்குப் பேசி விடுவதாகச் சொன்னார்.

“இல்லை இதனால் என்ன பிரமாதம்? ஏதோ ரொம்ப நாளாய் இருக்கிறான். இருந்து விட்டுப் போகட்டும்” என்று நான் வழவழவென்று பேசினதை கேட்டதும் அந்த மனிதருக்கு தைரியம் வந்து விட்டது.

“நீங்கள் சும்மா இருங்கள் ஸார்! நீங்கள் தாக்‌ஷிண்ணியப்படுகிறீர்கள், நான் எல்லாம் ஏற்பாடு செய்து விடுகிறேன். மேலும் பாருங்கள். ஊரோடு ஒத்து வாழ வேண்டும். ஊரில் ஏற்பட்ட குத்தகை வர வேண்டாமோ?” நீங்கள் இப்படிவிட்டால் குடிப்பிரியம் கெட்டுப்போகும்.

“இல்லை இல்லை அவனை நீக்க எனக்கு மனம் வரவில்லை. அவன் தான் சாப்பிடட்டுமே. இதையே நான் நம்பி இருக்கவில்லை” என்றேன்.

“ என்ன ஸார் நீங்கள் பேசுகிறது? ரொம்ப அழகு! பின் அவனுக்குதான் நிலத்தைச் சாஸனம் எழுதிக் கொடுத்து விட்டுப் போய் விடுங்களேன். இந்த போக்கு வரத்துச் செலவு வேண்டாமே” என்று என்னைக் கொஞ்சம் பரிகாசம் செய்து ஆரம்பித்தார் அந்த மனிதர்.

நான் எப்போதும் தாக்‌ஷிண்யப் பிரகிருதி. புது மனிதன் கூட ஒரே கணத்தில் என் தலை மேல் ஏறிவிடுவான். நான் மெல்ல ஞேஞ்ஞ மிஞ்ஞவென்று சொன்னதை அந்த மனிதர் காதிலேயே போட்டுக் கொள்ள வில்லை. வேற ஆளைப் பேசி என் பேருக்கு குத்தகைச் சீட்டு எழுதி வாங்கிக் கொண்டு வந்து என் கையில் கொடுத்து விட்டார் ! இதை எப்படி செங்கானிடம் சொல்வது? அவனை எப்படி அப்புறப்படுத்துவது!” என்பவையே எனக்குப் பெரியபிரச்சனைகளாகி விட்டன.

3

அவன் அதிகமாக பேசி என்னை மடக்கித் தன வசமாக்கிக் கொள்ளாமல் இருக்கும் பொழுது அவனிடம் கண்டிப்பாக விசயத்தைச் சொல்லி விட வேண்டுமென்று, மறு நாள் வயலுக்குப் போன போது,நான் இரண்டு மூன்று தடவை வாயெடுத்தேன். ஒவ்வொரு தடவையும் வாய்வார்த்தை வெளியில் வராமல் நெஞ்சில் சிக்கிக் கொண்டது.

“பொளச்சுக்கெடந்தா வர வருசம் கிணத்தைக் கட்டி தொலெ வைக்கணும். சாமி! எனக்கு ஒரு சோடி மாடு வாங்கிக் குடுங்க;இந்த நெலத்துலே பொன் வெளயச் செய்யறேன்!” என்றான் செங்கான்.

“செங்கான் உனக்குத்தான் வயசாகிவிட்டதே; இனிமேல் உன்னால் உழுது பயிரிட முடியுமா?” என்று மெள்ள நான் ஆரம்பித்தேன்..

“நல்ல சொன்னீங்க. என்னைப்போலே இந்தவூரிலே யாரு காலத்துலே பயிரேத்துறான்? ஏரி மொதத் தண்ணி நமக்கு”

“ஒனக்கு ஒத்தாசைக்கு ஒருவரும் இல்லையே?”

“என் மவன் பொந்திலியன் இருந்தா இந்த ஊரையே சாகுபடி பண்ணிட மாட்டேனா? மூணாம் வருஷம் மகமாயி ஆத்தா-!” என்று சொல்லி செங்கான் பெருமூச்சு விட்டான்.

“அவன் மவன் ஒரு பய இருக்கான். அவன் செய்வானே ஒரு பெரிய ஆள் வேல!” என்றான் சற்று நேரம் கழித்து.

செங்கான் மறுபடியும் கொஞ்ச நேரம் சும்மா இருந்தான்.விஷயத்தை அந்த சமயத்தில் அவனிடம் சொல்ல எனக்கு மனமே வரவில்லை. செங்கான் மாமரத்தடியில் உட்கார்ந்து கொண்டு பொந்திலியனை மாரியாத்தா கொண்டு போன வகையைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தான் போலும்! திடீரென்று தலை தூக்கி என் முகத்தைப் பார்த்தான்.

“ஏஞ்சாமி, நான் பயிரிட முடியாம போட்டுடுவேன்னு ரோசனே பண்றீங்களா? அது இந்த உசிரிலே இல்ல! நெலத்துலே ஈரமில்லே; சக்கையாப் போச்சு மண்ணு, ஏளேட்டுக் கடே கட்டினா நல்லாயிருக்கும் கட்டலாங்களா ?”

பொழுது விழுந்துவிட்டது. தூரத்தில் நரிகள் ஊளையிட்டன.

“வாங்க நேரத்திலே வூட்டுக்குப் போவோம் சாமி! ஒங்களுக்கு இருட்டிலே நடந்து பளக்கமிருக்காது” என்று முன்னே வழிகாட்டிக் கொண்டு செங்கான் வேகமாக வீட்டை நோக்கிப் புறப்பட்டான். அவனைப் பின்பற்றிச் செல்வது கூட எனக்குச் கொஞ்சம் சிரமமாகப் போய்விட்டது.

“ஏஞ்சாமி என்னெ விட்டு நெலத்தெ மாத்தணும்னு ரோசனெயா ? என் உசிரிலே இன்னொருத்தன் அதுல ஏரு பிடிக்கவா? முடியுமா எங்கணாச்சியும்? என் நெலத்துலே எவன் நொளைவான் ..? பாக்கறேன். அந்த மண்ணுத்தான் அவனுக்கு வெளைவாளா?”

கொஞ்ச நேரம் மெளனமாக நடந்தான். நான் ஒரு வரப்பில் கால் தடுமாறி, வயலில் தண்ணீர் கட்டியிருந்த சேற்றில் காலை வைத்துவிட்டேன்.

“கெடக்குங்க வாய்க்கால்லே கால களுவிக்கலாம்.. நாப்பது வருசமா என் கையாலே வரப்புப் பிடிச்சி வாய்க்கா பிடிச்சி... பெரிய அய்யா இருந்தா என்னே வுட்டு மாத்தணும்னு நெனைப்பாங்களா ? மண்ணே கண்ணாக் காப்பாத்தி “ என்று சொல்லி வந்தவன் திடீரென்று “நான் வுடமாட்டேஞ்சாமி !” என்றான்.

“நான் மாற்றுகிறேன் என்று உன்னிடம் சொல்லவில்லையே!” என்றேன்.

“அது தானே கேட்டேன்! ஒரு கலம் அரைக்கலம் நீங்க சாப்பிடறது நான் சாப்பிட்டா என்ன  இந்த வயக்காட்டிலே நான் பட்ட பாட்டுக்கு? நெத்தி வேர்வ நெலத்துல விள எம்பாங்க. அது எனக்கல்ல தகும்!  ராப்பவலா எவன் என்னைப் போல காட்டுலே கெடப்பான்? ரவைக்கு ரவெ தாவத்துக்குத் தண்ணி கொடுக்குறாப் போல எவன் தண்ணி கட்டுவான்? – நேரமறிஞ்சு? நம்ம காட்டு லெச்சுமி என்னோடே பேசுவாளே! ஒரு வருஷம் சூறை உண்டா, சாவி உண்டா, தரிசு உண்டா? மூணாம் வருஷம் மழை இல்லாதப்பக்கூட பயிரேத்திப்பிட்டேனே ! இந்த வயக்காட்டுலே ஒளச்சேதான் நான் சாவனும் சாமி! இதெ வுட்டா நான் செத்துப் போவேன்!”

4

காலை ஐந்து மணிக்குப் பல் துலக்க நிலத்துப் பக்கம் போனேன். செங்கான் கணீரென்ற குரலில் ஏற்றப் பாட்டு பாடிக்கொண்டே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தான்.

மூங்கிலிலை மேலே - தூங்கு பனி நீரே

தூங்கு பனி நீரை  - வாங்கு கதிரோனே!”

என்ற பாட்டின் ஒரு அடி என் காதில் விழுந்தது. வேலை மும்முரத்தில் அவன் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

“என்ன ஸார் செங்கான்கிட்ட சொல்லி விட்டீர்களா, இந்தப் பயிரை அறுத்து கொண்டு நிலத்தை விட்டு விட வேண்டுமென்று?” என்று என் நண்பர் கேட்டார்.

“இல்லை சொல்லப் போவதில்லை. செங்கான் கொடுக்கும் நெல் போதும் எனக்கு!” என்றேன், தலை நிமிர்ந்து.

*****

மணிக்கொடி 23.09.1934

தட்டச்சு: V. மணிகண்டன்

Jan 29, 2012

தாயாரின் திருப்தி-கு.ப.ரா

பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சி கால வேட்கை மிகுதியால் உலகமே மயங்கியிருந்தது. காக்கை கூட வாயைத்திறந்துகொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தன. நாய்கள் மட்டும் எச்சில் இலைகளுக்காக பிரமாதமாக ரகளை செய்துகொண்டிருந்தன. பிராமணர்கள் துடித்துக்கொண்டு நடந்துவந்து சோ்ந்தார்கள்

புரோஹிதர் கண்ணை மூடிக்கொண்டு மந்திரங்களை அர்த்தமில்லாமல் ஓட்டினார். “பிராசீநவிதி“kupara4 “பவித்ரம் த்ருத்வா“ என்பவைகளையும் மந்திரத்துடன் சேர்த்து ஒரு ராகத்தில் பாடிக்கொண்டே போனார். பிராமணர்களுக்கு வஸ்திரம் கும்பம் தட்சிணை இவைகள் கொடுக்கப்பட்டு சாப்பிட உட்கார்ந்தார்கள்.

சுந்ரரேசய்யரின் தாயாருக்கு அன்று சிரார்த்தம். அவர் நாஸ்திகருமல்ல ஆஸ்திரகருமல்ல. தென்னிந்திய ஆங்கிலம் படித்த பிராமணர்களின் திரிசங்கு கூட்டத்தைச் சேர்ந்தவர்.ஸ்நான சந்தியா வந்தருதிகள் விதிப்படி நடக்கவில்லை. ஆனால் தர்ப்பணமும் ஸ்ரார்தமும் மட்டும் தவறாமல் நடைபெறும்.அந்த தினங்களில் மட்டும் விபூதி பஞ்சகச்சம் இவைகள் பவித்திரத்தை சந்திக்கும். சுந்தரேசய்யரின் பஜனை ஒன்றும் விளங்கும். அவர் அதில் அசாத்திய மோகம் கொண்டவர். ராம சங்கீர்த்தனத்தில் உருகிக் கண்ணீர் விடுவார்.அதற்காக ஊரில் அவரை கொஞ்சம் கேலி கூடசெய்கிறதுண்டு. ஆனால் ஆடிமாத்தத்தில் வெகு சாதுவான பிரகிருதி. பிச்சைக்கராரனென்றாலும் ஏதாவது கொடுக்காமல் அனுப்ப மாட்டார்ஃ அதிலும் கூன் குருடென்றார் அரை, கால் என்று கொடுத்து விடுவார். இதற்காக அவரைப் பற்றி ஊரில் உலகம் தெரியாதவரென்றும் கொஞ்சம் “கிறுக்கு“ மநுஷ்யனென்றும் பேசிக்கொள்வதுண்டு.

பிராமணர்கள் சாப்பாடு முடிந்து பிண்டப்பிரதானமும் ஆய்விட்டது. பிராமணர்கள் ”திருப்தி” சொல்ல வேண்டிய கட்டம். சுந்தரேசய்யர் மூன்று வயதுக் குழந்தை வாசலில் விளையாடிக்கொண்டிருந்தவன் உள்ளே ஓடி வந்து ”அப்பா வாசல்லே பாட்டி வந்திருக்கா. சாதம் வேணுமாம்” என்றான்.

”பாட்டி வந்திருக்காளா? அதார்ரா?” என்று கேட்டுக்கொண்டே சுந்தரேசய்யர் வாசலில் போய்ப் பார்த்தார்.

வாசற்படியில் கையில் தடியும் தரகரக் குவளையுமுள்ள ஒரு குறக்கிழவி சாய்ந்து கொண்டிருந்தாள்.

அந்தத் தவிப்பைப் பார்த்த சுந்தரேசய்யர் மனதில் திடீரென்று ஏதோ ஓர் எண்ணம் ஏற்பட்டது. ஜாதியாசாரம் என்று சொல்லப்படும் மூடபக்தியை மனிதனின் ஸ்வபாவ குணமான இரக்கம் ஒரேயடியில் வென்றுவிட்டது. ஒரு நிமிஷத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதையும் தீர்மானித்து. அதற்கு மதநம்பிக்கைக்கு ஏற்ற சமாதானத்தையும் கொண்டார்.

சட்டென்று உள்ளே சென்று ஒரு பிண்டத்தையும் தன் தீர்த்த கலசத்தையும் எடுத்துககொண்டு வாசலில் வந்து உருண்டையைக் கரைத்துக் கிழவியின் குவளையில் ”பிடி” என்று ஊற்றினார். அதை மடமடவென்று குடித்துவிட்டு கிழவி ”அப்பாடா. உசிர் வந்திச்சு! மகாராசா நீ நல்லா இருக்கணும். உன்னைப் பெத்த வயிறு என் வயிரைப் போலே குளிரணும்” என்று சொல்லி சிரமம் மேலிட்டு படியில் சாய்ந்துவிட்டாள்.

”என்ன..என்ன!” என்று ஓடி வந்த பிராமணர்கள் இதைப் பார்த்துத் திகைத்துப் போய் ”அடாடாடா..என்ன அபசாரம்! சிரார்த்தம நஷ்டமாய் விட்டதே! என்ன அக்ரமம்! யார் இப்படி சிரார்த்தம் செய்யச் சொன்னார்கள்!” என்றார்கள்.

”ஏன்?” என்றார் சுந்தரேசய்யர்.

”வாயசத்துக்குக் கூட இன்னும பிண்டம் வைக்கவில்லை. பித்ருக்கள் காக்கையாக வந்து காத்திருப்பார்களே! ”

”மனித ரூபத்துடன் வந்து என் தாயார் இதோ திருப்தியடைந்து விட்டாளே! காக்கையைக் காட்டிலும் மனித ஜன்மம் மேலல்லவா?”

”உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. உம். இனிமேல் இங்கே ஜலபானம் செய்யக்கூடாது. ஓய் சாஸ்திரிகளே தாம்பூலத்தை இங்கேயே எறிந்து விடும்” என்று சொல்லி பிராமணர்கள் வஸ்திரம் கும்பம் தட்சிணைகளை கைபடாமல் எடுத்துக்கொண்டு கீழே கால்வைத்துக்கூட நடக்காமல் சென்றார்கள்.

”ஐயோ. இதென்ன இப்படிச் செய்து விட்டீர்களே!” என்று கவலையோடு மனைவி வெளியே வந்தாள்.

”என்னடி அசடு! வாசலில் பார் அம்மா உருவெடுத்து வந்திருப்பதை!”

***

குபரா முத்திரைக் கதைகள் -  செல்லப்பா பதிப்பகம் முதற்பதிப்பு டிசம்பர் 2003

தட்டச்சு உதவி: ரமேஷ் கல்யாண்

Jan 8, 2011

முழுத்தொகுப்புகள்,நாவல்கள்

காலச்சுவடு பதிப்பகம்

catskua   clas1

cla2 

cats1 cats2

அடையாளம் 

குபரா கதைகள்பிரமிள் கவிதைகள் (1)   

     கு.ப.ரா கதைகள் ,பிரமிள் கவிதைகள்

     தி.ஜானகிராமன் படைப்புகள் தொகுதி - 2

தி.ஜானகிராமன் படைப்புகள் - ஐந்திணை

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்