Showing posts with label சுந்தர ராமசாமி. Show all posts
Showing posts with label சுந்தர ராமசாமி. Show all posts

Apr 11, 2013

என்னைக் கவர்ந்த என் படைப்பு – சுந்தர ராமசாமி

தில்லி, ஆல் இண்டியா ரேடியோ, அயல் நாட்டு ஒலிபரப்பில் ஒலிபரப்பப்பட்டது. 15.6.95

என்னைக் கவர்ந்த என் படைப்பு என்று நான் எழுதியுள்ளவற்றில் எதைச் சொல்வேன் ? ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னால் என் மற்ற படைப்புக்களுக்கும் எனக்குமான உறவு என்ன ? அவை என்னைக் கவராத படைப்புக்களா ?

நான் நாற்பத்தைந்து வருடங்களாகத் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன். கவிதைகளும், sura15சிறுகதைகளும் நாவல்களும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். கட்டுரைகளில் அதிகமும் இலக்கிய விமர்சனத் துறையைச் சார்ந்தவை. பிற மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பும் சிறிது செய்திருக்கிறேன். நீண்ட கால எழுத்துப் பணி என்று பார்க்கும் போது படைப்பின் அளவு மிகக் குறைவாகவே இருக்கிறது. இரண்டு நாவல்களும் சுமார் ஐம்பது சிறுகதைகளும் ஐம்பது கட்டுரைகளும் நூறு கவிதைகளும் எழுதியிருக்கிறேன். குறைவாக எழுதியிருக்கும் நிலையிலும் எனக்கு மன நிறைவைத் தரும் சில விஷயங்களும் உள்ளன. என் எழுத்தின் உருவம் எதுவாக இருந்தாலும் சரி, எழுதும் காலத்தில் எனக்கிருந்த ஆற்றலையும் அறிவையும் மனத்தையும் முழுமையாகச் செலுத்தியே எழுதியிருக்கிறேன். அத்துடன் ஒவ்வொரு படைப்பையும் செம்மை செய்யவும் செப்பனிடவும் என்னால் இயன்ற அளவு முயன்றிருக்கிறேன். அவசரமாகவோ கவனக்குறைவாகவோ எதையும் எழுதிய நினைவு இல்லை. இந்தப் பின்னணியில் எனக்கும் என் படைப்புக்களுக்குமான உறவு சற்று நெருக்கமானது. இந்த நெருக்கமான உறவு கொண்டுள்ள படைப்புக்களிலிருந்து ஒன்றை மட்டும் குறிப்பிட்டு அது என்னைக் கவர்ந்துள்ளதாகக் கூறுவதற்கு சிறிது மனத்தடை இருக்கிறது.

எனக்கு தரப்பட்டுள்ள தலைப்பை ‘என்னை அதிகம் கவர்ந்த என் படைப்பு எது’ என்ற கேள்வியாக இப்போது மாற்றிக் கொள்கிறேன். ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ என்ற தலைப்புக் கொண்ட என் இரண்டாவது நாவல்தான் என் மனதில் சற்றுச் சிறப்பான இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.

புதுமை மீது எனக்குத் தீராத கவர்ச்சி உண்டு. புதுமை என்று மொழி சார்ந்து நிற்கும் வடிவத்தை மட்டுமே நான் குறிப்பிடவில்லை. புதுமை என்பது முக்கியமாக எனக்கு விஷயம் சார்ந்த விமர்சனம் ஆகும். அது வாழ்க்கை சார்ந்த புதிய பார்வையும் ஆகும். இன்றைய வாழ்க்கை சார்ந்த தாழ்வுகளை விவாதித்து குறைகளை இனம் கண்டு அவற்றை நீக்கும் வழிவகையாகும். இந்த வேட்கை சார்ந்ததுதான் என்னுடைய புதுமை. புதிய படைப்பு இன்று வரையிலும் படைப்பாளிகள் போயிராத வாழ்க்கையின் புதிய பிராந்தியத்திற்குள் போயிருக்க வேண்டும். புதிய அனுபவங்களைக் கொண்டு வந்து வாழ்க்கை சார்ந்த பார்வைகளை விரிவு படுத்தியிருக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தி நம் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்தியிருக்கவேண்டும். பழைய மொழியை வைத்து இந்த லட்சியங்களை நிறைவேற்ற முடியாது. வாழ்க்கையின் விமர்சனம் தரும் புதிய மொழிதான் புதிய அனுபவங்களையும் சிந்தனைகளையும் படைத்துக் காட்டும். மொழி கூடி வந்த வகையிலும் விமர்சனம் கூர்மை கொண்ட விதத்திலும் வாழ்க்கை சார்ந்த என் கவலைகள் வெளுப்பட்ட முறையிலும் ‘ஜே.ஜே : சில குறிப்புக்கள்’ மீது எனக்குத் தனியான மதிப்பு இருக்கிறது.

உலகச் சிந்தனையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நம் நிலை இன்று பல விதங்களிலும் தாழ்ந்து கிடக்கிறது. இந்திய மொழிகளில் கூட நவீன கலைகளும் நவீனச் சிந்தனைகளும் நம்மைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கின்றன. நமக்குப் பண்டை இலக்கியச் செல்வம் நிறைய இருக்கிறது. அதன் இருப்பை உணர்ந்து நாம் பெருமிதம் கொள்வது மிகவும் இயற்கையான காரியம். ஆனால் இன்றைய வாழ்வை எதிர் கொள்ள இன்றைய காலத்திற்கு உரித்தான அறிவியல் பார்வையும் நவீனச் சிந்தனைகளும் நவீனப் படைப்புகளும் நமக்குத் தேவை. சென்ற கால இலக்கியச் சாதனைகளான சங்ககாலக் கவிதைகள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் போன்றவற்றிற்கு நிகரான சிகரச் சாதனைகளை நாம் இன்றும் உருவாக்கினால்தான் இந்தியாவிலுள்ள பிற மாநிலத்தினர் நம்மை மதிப்பார்கள். உலகம் நம்மை மதிக்கும். இன்றைய நம் தமிழ் வாழ்வை மறு பரிசீலனை செய்யும் ஆக்கங்கள் நம்மிடம் இல்லையென்றால் நேற்று இருந்தவற்றைப் பற்றி மட்டுமே பேசுவது பழம் பெருமை பேசுவதாகிவிடும்.

இன்றையத் தமிழ் வாழ்வின் நிலை எவ்வாறு உள்ளது ? தமிழன் இன்றைய காலத்திற்குரிய பார்வையைக் கொண்டிருக்கிறானா ? அரசியல் சார்ந்தும் கலைகள் சார்ந்தும் அவனுடைய விழிப்பு நிலை எவ்வாறு இருக்கிறது ? நேற்றைய இலக்கியச் செல்வங்களையும் வரலாற்றையும் இன்றைய வாழ்க்கையைச் செம்மை செய்யும் லட்சியத்தை முன் வைத்து அவனால் மறு பரிசீலனை செய்ய முடிகிறதா ? தமிழனுடைய ஈடுபாடுகள், பழக்க வழக்கங்கள் எந்த நிலையில் இருக்கின்றன ? தமிழன் விரும்பிப் பார்க்கும் திரைப்படங்களின் தரம் என்ன ? அவன் படிக்கும் பத்திரிகைகளும் jjsilaஅவன் பேசும் அரசியலும் நாள் முழுக்க அவன் பார்த்துக் கொண்டிருக்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளும் எந்த அழகில் இருந்து கொண்டிருக்கின்றன ? அவன் விரும்பிப் படிக்கும் புத்தகங்களின் உள்ளடக்கம் என்ன ? மக்களுக்குத் தொண்டாற்றும் நிறுவனங்களையும் அமைப்புக்களையும் கல்வித் துறைகளையும் அவன் வாழ்வுக்குகந்த அரசையும் அவனால் உருவாக்க முடிந்திருக்கிறதா ? இன்றையத் தமிழ் சமுதாயத்தில் தத்துவப் பிரச்சனைகள் எவை ? நெருக்கடிகள் எவை ? உலகத் தளத்திலிருந்தும் இந்தியத் தளத்திலிருந்தும் தமிழ்ச் சமுதாயம் தன் வளர்ச்சியை முன் வைத்து எவற்றைப் பெற்றுக் கொண்டிருக்கிறது ? இந்திய கலாச்சாரத்திற்கும் உலகக் கலாச்சாரத்திற்கும் தமிழ்ச் சமுதாயம் எதைக் கொடுத்து பெருமை தேடித் தந்திருக்கிறது ?

நான் எழுத ஆரம்பித்த 1950ஆம் ஆண்டிலிருந்து ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ எழுதி முடித்த 1980 ஆம்ஆண்டு வரையிலும் எனக்கு முக்கியமாக இருந்த கேள்விகள் இவைதாம். இந்தக் கேள்விகளை தமிழ் அறிஞர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் எழுத்தாளர்களும் உரக்கக் கேட்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அதாவது இந்தக் கேள்விகள் சார்ந்த விவாதங்கள் தமிழ் சமூகத்தில் நடைபெற வேண்டும் என்று விரும்பினேன். ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ என்ற நாவலின் படைப்பாக்கத்திற்குப் பின்னால் நின்ற குறிக்கோள் இதுதான்.

‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ தொடராக வெளுயிடப்பட்டதல்ல. அது புத்தக உருவத்திலேயே வாசகர்களைச் சந்தித்தது. இப்படிப் பார்க்கும்போது அதைக் கணிசமான வாசகர்கள் படித்தார்கள் என்றே சொல்வேன்.

ஆனால் துரதிருஷ்டவசமாக தமிழகத்தில் இன்று தீவிரமான வாசகர்கள் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கிறார்கள். அந்தத் தீவிரமான வாசகர்களிலும் எழுத்தாளர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கையைக் கழித்துவிட்டால் வாசகர்களாக இருப்பவர்கள் மிகக் குறைவு. தமிழகத்தில் ஒரு தீவிர எழுத்தாளன் வாசகனுக்காக எழுதிக் கொண்டிருக்கிறானா அல்லது சக எழுத்தாளனுக்காக எழுதிக் கொண்டிருக்கிறானா என்று கேட்கும் நிலையில்தான் சூழல் இருந்து கொண்டிருக்கிறது. இதனால் எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் உறவு நிலை ஒரு படைப்பைச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ பாதித்துவிடுகிறது. படைப்பைச் சார்ந்த வாசக மதிப்பீடு ஒரு பாதிப்புச் சக்தியாக பெரும்பாலும் உருவாகி வருவதில்லை.

தமிழகத்தில் ஒவ்வொரு துறையும் அந்தந்தத் துறைகளில் நுட்பமான தேர்ச்சி பெறாதவர்கள் கைகளிலேயே இருந்து கொண்டிருக்கிறது. துறை சார்ந்த தேர்ச்சிகள் பெற்று அரிய காரியங்களைச் சாதிப்பதைப் பார்க்கிலும் குறுகிய நோக்கங்களை முன் வைத்து மேலோட்டமான காரியங்களைச் செய்து புகழும் பணமும் தேடிக் கொள்வதே ஒரு வாழ்க்கை முறையாக இன்று உருவாகிவிட்டது. தமிழ் வாழ்வின் கலை விமர்சனங்களாக தமிழ்த் திரைப்படங்கள் இல்லை. அவை வெறும் கேளிக்கைகளாகவே இருக்கின்றன. அதிக விற்பனை கொண்ட பத்திரிகைகள் தமிழ் வாசகனுக்கு எதுவும் கற்றுத் தருவதில்லை. நுனிப்புல் மேய்பவர்களாக அவர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது. சகல வணிகக் கலைகளின் நோக்கமும் வாசகர்களை அல்லது பார்வையாளர்களின் பாலுணர்ச்சிகளை வெளுப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ சுரண்டுவதாகவே இருக்கிறது. மக்கள் விரும்பிப் பார்க்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் அவர்களுடைய சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் மழுங்கடிக்கக் கூடியதாக இருக்கின்றன. உழைப்பு, சாதனை, தொண்டு, உண்மை, மனித நேயம் போன்ற அரிய சொற்களுக்கு இன்று தமிழ் வாழ்வில் இடமில்லை. சீரழிந்த அரசியலைப் பந்தாடத் தெரிந்தவர்கள் சகல வெற்றிகளையும் இன்று தம் காலடிகளில் போட்டு மிதித்துவிட முடியும்.

தமிழ் வாழ்வில் இன்றைய சீரழிந்த நிலையை ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ ஒரு விவாதப் பொருளாக்குகிறது. விருப்பு வெறுப்பற்ற தீவிரமான வாசகர்கள்தான் ‘ஜே.ஜே : சில குறிப்புக’ளை ஒரு விவாதப் பொருளாக மாற்ற முடியும். சீரழிந்த தமிழ் வாழ்வு பல துறைகளையும் சீரழித்து நிற்பதுபோல் தமிழில் தீவிர வாசகர்களையும் முடிந்த வரையிலும் சீரழித்திருக்கிறது. இந்தச் சூழலில் அப் படைப்பை உருவாக்கிய நோக்கம் போதிய அளவு நிறைவேறவில்லை. காலத்தின் மாற்றத்தில் புதிய வாசகர்கள் உருவாகி வருகிறார்கள். அவர்களுடைய வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது என் ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’.

நன்றி: திண்ணை

Mar 31, 2012

ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை-சுந்தர ராமசாமி

நாகர்கோவில் தெ. தி. இந்துக் கல்லூரி முதுகலை வணிக இயல் துறை பேரவைத் தொடக்க விழாவில் பேசியது - 28.10.1988

'ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை ' என்ற தலைப்பில் என்னை இளைஞர்கள் பேசக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தலைப்பு மிகவும் வித்தியாசமானது. ஒரு படைப்பாளி என்று கூறுகிற போது என்னை நான் சிறிது வரையறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் மொழி சார்ந்த ஒரு படைப்பாளி என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஓவியம் சார்ந்தோ, சிற்பம் சார்ந்தோ, இசை சார்ந்தோ படைப்புத் தொழிலில் ஈடுபட்டவனல்லன் நான். படைப்பாளி என்ற வார்த்தையை மேலும் விரிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். இலக்கியமே வாழ்க்கையைச் சார்ந்திருக்கிறது. வாழ்க்கையைப் படைப்பு முறையி  ல் அணுக விரும்புகிற ஒரு படைப்பாளி என்று நான் என்னைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய முதல்பட்சமான அக்கறைகள் வாழ்க்கையைப் பற்றியவை. இந்த அக்கறைகளைச் சார்ந்துதான் sundara-ramaswamyஇலக்கியப் படைப்புக்கள் உருவாகின்றன. ஆக, ஒரு இலக்கியப் படைப்பாளி என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி, வாழ்க்கையைப் படைப்புக் கண்ணோடு பார்க்க விரும்புகிறவன் என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி முதல்பட்சமாக நான் ஒரு வாசகனாக இருப்பதையே உணருகிறேன்.

பெரும்பாலும் இலக்கியப் படைப்பாளிகள் எல்லோருமே அவர்கள் தீவிரமான படைப்பாளிகள் என்றால், படைப்பாளி என்ற சொல்லுக்கு அருகதை உள்ளவர்கள் என்றால், அவர்கள் தீவிரமான வாசகர்களாகவும் தான் இருப்பார்கள் என்று நம்புகிறேன். இளவயதில் ஒருவனுக்கு இந்த வாசிப்பு ஏற்பட்டு மிகச் சிறந்த படைப்புக்களோடு மோதல்கள் நிகழ்ந்து, படைப்பின் ஊற்றுக்கண் திறந்து அவனும் ஒரு படைப்பாளியாக மாறிக் கொள்கிறான் என்று நினைக்கிறேன். படைப்புக்கு முன்னும், படைக்கும் காலங்களிலும், படைக்க முடியாத காலங்களிலும் அனுபவ வறட்சியாலோ அல்லது வயோதிகத்தாலோ அல்லது பொறிகள் சுருங்கிப் போவதாலோ படைக்க முடியாத காலங்களில் கூட படைப்பாளிகள் வாசகர்களாக இருக்கிறார்கள். இப்போது முன்புபோல் எழுத முடியவில்லை; படிக்கத்தான் முடிகிறது என்று சொல்கிறார்கள். ஆக எந்த நிலையிலும் தொடரக்கூடிய ஓர் நிகழ்வாக இந்த வாசிப்பு இருந்துகொண்டிருக்கிறது.

வாசிப்பு என்று நாம் சொல்லக்கூடிய வார்த்தையின் உண்மையான பொருள் என்ன ? வாசிப்பு என்பது மற்றொருவர் உரையாட, நாம் கேட்டுக் கொண்டிருப்பது. உரையாடக்கூடியவர் அங்கில்லை. ஆனால் அவரது உரையாடலை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடன் அவர் உரையாடிக் கொண்டிருக்கிறார் என்பதுகூட அவர் அறியாத காரியமாக இருக்கும்; அப்போதும் அந்த உரையாடல் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர் இந்த உலகத்தை விட்டு மறைந்து பல நூற்றாண்டுகள் ஆயிருக்கும். அப்போதும் அவர் நம்மைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தைத் தரும் இந்த வாழ்க்கையைப் பற்றி நினைக்கிறபோது இது மனித குலத்திற்குக் கிடைத்த ஒரு பெரும் வாய்ப்பாக எனக்குப்படுகிறது.

மாணவர்களாகிய நீங்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறீர்கள். நம்முடன் உரையாட வந்தவர்கள் ஏதோ சாதாரண விஷயங்களைப் பற்றி நம்மிடம் சொல்வதில்லை. அவர்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் மிகச் சாரமான பகுதியை - மிக மேலான பகுதியை - அதிக அளவிற்குப் பொருட்படுத்தத் தகுந்த பகுதியைப்பற்றியே நம்மிடம் பேசுகிறார்கள். அந்த அர்த்தத்தில் இன்று நாம் வள்ளுவனுடன் பேச முடியும்; கம்பனுடன் உறவாட முடியும்; ஷேக்ஸ்பியரின் மிகச் சாராம்சமான பகுதிகள் என்ன என்பதைத் தெளிளத் தெளிவாக, துல்லியமாக நாம் தெரிந்து கொள்ள முடியும். இந்தக் காலத்தில் வாழ்கின்ற எல்லா சிறந்த எழுத்தாளரையும் நாம் இருக்குமிடத்திலிருந்தே சந்திக்க முடியும். இந்தப் பெரிய வாய்ப்பை எண்ணி எவன் புளகாங்கிதப்படுகிறானோ அவனைத்தான் நான் சிறந்த வாசகன் என்று கருதுகிறேன்.

ஆக, மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் மிகுந்த பரவசத்தோடு பெற்றிருக்கும் இந்த வாய்ப்பை, சுமார் நூறு வருடங்களுக்கு முன்னால் விசேஷமான வசதியுடன் வாழ்ந்திருந்தாலும் கூட, இந்த அளவிற்கு விரிவாகப் பெற்றிருக்க முடியாது. புத்தகங்கள் அச்சேறத் தொடங்கிய பின் ஒரு மிகப் பெரிய அறிவுப் புரட்சி, கலைப்புரட்சி, கலாச்சாரப் புரட்சி நிகழ்ந்து வருகிறது. இதைப் பற்றித் துல்லியமாகத் தெரிந்து கொள்கிற வாய்ப்பை இந்த நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பெற்றிருக்கிறோம். இப்படி யோசிக்கும்பொழுது இன்று வாழ்ந்துகொண்டு இருக்கக்கூடிய ஒருவன் ஏதோ ஒரு துறையைச் சார்ந்து பணியாற்றக் கூடியவன், குடும்பம் சார்ந்து இயங்கக் கூடியவன், உறவினர்களிடம் நட்புப் பாராட்டக் கூடியவன் அதாவது பிரத்யட்சமான வாழ்க்கையை, எதார்த்தமான வாழ்க்கையை எதிர்கொள்ளக் கூடியவன் எதற்காகப் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற கேள்வியையும் நாம் எழுப்பிக் கொள்ளலாம்.

இந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, எவ்வளவுதான் கூர்மையான பொறிகளை நாம் பெற்றிருந்தாலும் கூட, நம்முடைய கவன வட்டங்கள், நம்முடைய அறிவு வட்டங்கள், நம்முடைய அனுபவ வட்டங்கள் மிகக் குறுகிய எல்லைகளிலேயே இயங்குகின்றன. தொலைதூரம் என்னால் பார்க்க முடியாது. தொலை தூரத்தில் இருக்கக்கூடிய வாசனையை என்னால் நுகர முடியாது. என்னுடைய அனுபவங்கள் எனக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ அந்த அளவு அவை என்னிடம் மயக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அந்த அளவுக்குக் கூட எனக்குப் பிறருடைய அனுபவங்கள் தெரியாது. ஆகவே இந்த வாழ்க்கையின் அகண்டகாரமான தன்மையையும், இந்த வாழ்க்கையில் பூமிப் பந்தில் ஒரு எறும்பு ஒட்டிக் கொண்டு இருப்பது போல் இருக்கக்கூடிய என்னுடைய நிலையையும் நினைத்துப் பார்க்கும்பொழுது பிறருடைய வாழ்க்கை சார்ந்த உண்மைகளையும் பிறருடைய வாழ்க்கை சார்ந்த சாராம்சங்களையும் சத்தான பகுதிகளையும் தெரிந்துகொண்டு அதன் மூலம் இந்த முழு வாழ்க்கையைப் பற்றி, இந்த வாழ்க்கையின் பல்வேறுபட்ட பரிமாணங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். இதுதான் வாசிப்பின் தேவையை வற்புறுத்தக் கூடிய காரணமாக அமைகிறது.

இந்தக் காலத்தை எதிர்கொள்ளக்கூடிய மாணவர்கள், இளைஞர்கள் ஏதோ ஒரு விதத்தில் முழு வாழ்க்கையின் கோலங்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். இவர்கள் காலத்தால் பின்தங்கிப் போய்விடாமல் உருவாகி வரும் மிக மோசமான காலத்தை - மிக மோசமான காலம் ஒன்று உருவாகி வருகிறது; நாம் அதைப்பற்றி அறிந்திருக்கலாம்; அறியாமல் இருக்கலாம். ஆனால் காலத்தினுடைய மோசமான விளைவுகளை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் - எதிர்கொள்வதற்கு வாழ்க்கையின் முழுக் கோலங்களைப் பற்றிய உணர்வுகளை, அனுபவங்களை, அறிவுகளை மாணவர்கள் முடிந்த மட்டும் தேடிக் கொள்வது நல்லது என்று படுகிறது.

மாணவர்கள் இயன்ற வரையிலும் தீவிரமான வாசகர்களாக இருக்கக்கூடிய பெரும் வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது நாம் வற்புறுத்திக் கூற விரும்பும் கருத்து. இது மிகவும் முக்கியமானது. மற்றொன்று உங்கள் துறை சார்ந்த விஷயங்கள். மாணவர்கள் கல்லூரிகளில் பல்வேறுபட்ட துறைகளைக் கற்றிருக்கலாம். அந்தத் தேர்வுகள் சுத்தமாக நிகழ்கின்றனவா என்பதைப் பற்றி எனக்குச் சந்தேகங்கள் இருக்கின்றன. அநேக சந்தர்ப்பங்களில் முதிர்ச்சி அடையாத மனநிலையில், அல்லது ஒரு பதட்டத்தில், அவசரத்தில் தனக்கு வழிகாட்ட போதிய விவேகம் கொண்ட தந்தையோ, தாயோ அல்லது குடும்ப உறவினர்களோ இல்லாத நிலையில், மாணவர்கள் பல்வேறுபட்ட துறைகளை எடுத்துப் படிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார்கள் என்று நினைக்கிறேன். ஆக தங்களுடைய கண்ணோட்டத்தைச் சேர்ந்த, தங்களுடைய ஆளுமையைச் சேர்ந்த, தங்களுடைய ருசிகளுக்கு ஏற்ற துறையைத்தான் எப்போதும் அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. இளமைக் காலத்தில் 18 - 20 வயது வரும்போது தமக்கு அதிக வயதாகிவிட்டது; நாம் விரைவில் கல்வியை முடித்துக் கொண்டு ஏதாவது ஒரு தொழிலுக்கு அல்லது ஒரு பணிக்குச் செல்ல வேண்டும் என்ற அவசர உணர்வும் இளைஞர்களுக்கு ஏற்படுவது இயற்கை என்று எனக்குத் தோன்றுகிறது.

என்னைப் பொறுத்த வரையில் ஒருசில இழப்புகளுக்கு நீங்கள் உங்களை ஆளாக்கிக் கொண்டாலும் கூட, ஒரு சில சிரமங்களுக்கு உங்களை நீங்கள் ஆளாக்கிக் கொண்டாலும்கூட அல்லது உங்களுடைய ஆசைகளிலிருந்தோ அல்லது உங்களுடைய குடும்பத்திலிருந்தோ சில விமர்சனங்களுக்கு நீங்கள் ஆட்பட்டார்கள் என்றாலுங்கூட, சரியான துறையை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்லுவேன். இந்தத் துறைகளை மாற்றிக் கொள்ளக்கூடிய விஷயம் இங்கு முக்கியமாக இந்தியாவில் அல்லது தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்னையை தரக்கூடிய விஷயமாக இருக்கலாம். ஆனால், மேல்நாட்டில் பலரும் தவறான துறையை விட்டு சரியான துறையைத் தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பை தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். 50, 55 வயதிலும் கூட ஒருவர் இப்போதுதான் என்னுடைய துறை, என்னுடைய ருசி, என்னுடைய அணுகுமுறை அல்லது என்னுடைய ஆளுமை எனக்குத் தெரிந்தது; ஆகவே, நான் என்னுடைய துறையை மாற்றிக் கொண்டு விட்டேன் என்று சொல்லக்கூடிய சோதனைகள், இந்த சோதனையில் அடையக்கூடிய வெற்றிகள், இவை நிரந்தரமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதற்குப் பல்வேறு உதாரணங்களை என்னால் சொல்ல முடியும்.

ஆக, மாணவர்கள் அல்லது மாணவிகள் கல்லூரியில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமான விஷயமல்ல. ஒருசமயம் அவர்கள் சரியான துறையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஒருக்கால் அவ்வாறு தேர்ந்தெடுக்கவில்லை என்ற உணர்வு அவர்களுக்கு இருக்குமேயானால் அவர்கள் விரும்பக்கூடிய துறையைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இன்றைய உலகில் அதிக அளவு உள்ளன. அந்தத் துறையை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் அதைச் சார்ந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும் போது - இந்தியாவிலும் சரி, குறிப்பாகத் தமிழகத்திலும் சரி - நான் சந்திக்கக்கூடிய பலரும் அந்த துறையைச் சார்ந்த ஒரு வல்லமையைத் தேடிக் கொண்டவர்களை விட, அதிகமாக அந்தத் துறையைச் சார்ந்து நின்று தங்கள் வாழ்க்கைக் கோலத்திற்கு ஏற்றவாறு அதைச் சமாளிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

துறை சார்ந்த சமாளிப்பு என்பது ஒன்று; இந்தத் துறை சார்ந்த வல்லமை என்பது மற்றொன்று. பெரும்பாலும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் - அது வைத்தியமாக இருக்கலாம், அல்லது பொறியியலாக இருக்கலாம் - அல்லது வணிகமாக இருக்கலாம் அல்லது சட்டமாக இருக்கலாம் - அந்த துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவுக்கு அந்தந்த துறையைச் சார்ந்த உத்திகள், பந்தாக்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கற்று, அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் போன்ற பாவனையைப் பிறரிடம் உருவாக்கி அதன் மூலம் வாழ்க்கையைச் சமாளித்துக் கொண்டிருக்கக்கூடிய கோலத்தைத்தான் அதிக அளவில் பார்க்க முடிகிறது.

இளைஞர்களாகிய நீங்கள் இந்தச் சுலபமான வழியில் விழுந்துவிடக் கூடாது என்று ஆத்மார்த்தமாக விரும்புகிறேன். ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொள்வது என்பது அவ்வளவு கடினமான விஷயமல்ல. அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து நாம் அதில் தேர்ச்சி பெறும் போது மிகுந்த தன்னம்பிக்கை பெறுகிறோம். அந்தத் துறையைச் சார்ந்த மரபுரீதியான விஷயங்கள் மட்டுமல்ல, பாடபுத்தகங்களைச் சார்ந்த விஷயங்கள் மட்டுமல்ல, இன்று அந்தத் துறை அடைந்திருக்கும் வளர்ச்சியைப் பற்றியும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு அதையும் கற்றுத் தேர்ந்தால்தான் இன்றைய காலத்தை எதிர்கொள்ள முடியும். ஆக, துறையை நன்றாகக் கற்றுக் கொள்ளும் போது வாழ்க்கையில் அணுகு முறையிலேயே ஒரு பெரும் மாற்றம் நிகழ்கிறது. நீங்கள் உள்ளூர மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாக மாறுகிறீர்கள். உங்களைப் பற்றியே உங்களுக்கு உயர்வான எண்ணம் ஒன்று ஏற்படுவதற்கு இது அடிப்படையான காரணமாக அமைகிறது. இதற்கு மாறாக துறை சார்ந்து சமாளித்துக் கொண்டிருப்பவர்கள் அந்தச் சமாளிப்பினால் பிற்காலத்தில் அந்தத் துறையைக் கற்றுக் கொள்வதற்கான ஆற்றலையே இழந்து விடுகிறார்கள். இவ்வளவு நாட்கள் இந்தத் துறையைச் சமாளித்துக் கொண்டிருந்துவிட்டோம், குறை நாட்களையும் சமாளித்துத் தீர்த்து விடுவோம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். இவர்கள் கடைசி வரையிலும் தன்பலம் என்பதை உணராமல் - ஆத்ம வீரியத்தை உணராமல் - உள்ளூர பலகீனமான சமூகத்தை எதிர்கொள்கிற கோலத்தை நாம் பார்க்கிறோம். இதை ஒரு எச்சரிக்கையாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மாணவ மாணவிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றொரு விஷயம் தாழ்வு மனப்பான்மை சம்பந்தப்பட்டது. பொதுவாகத் தமிழ் மக்கள் மிகுந்த தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் என்பது என் எண்ணம். நான் அவர்களுடைய புத்தகங்களைப் படித்ததன் மூலம் அறிந்து கொண்ட சில விஷயங்கள், சமூக வாழ்க்கையில் நான் அவர்களுடன் பழகும் போது எனக்குக் கிடைக்கக்கூடிய செய்திகள் ஆகியன பெரும்பாலும் தமிழ் மக்கள் தாழ்வு மனப்பான்மைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. இது மிகக் கொடுமையான விஷயம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் நான் இதை எடுத்துக் கூறும்போது தங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை எதுவும் இல்லை என்ற தோரணையில் அவர்கள் பல வாதங்களை முன் வைப்பதை நான் கண்டிருக்கிறேன். அந்த வாதங்களின் சாராசம்களை நான் ஆராய்ந்து பார்த்த போது அவர்கள் தாழ்வு மனப்பான்மை நோய் கொண்டவர்கள் மட்டுமல்ல, தாழ்வுமனப்பான்மையை மறுக்கக்கூடிய நோயும் கொண்டவர்கள்; ஆக இரண்டு நோய்கள் கொண்டவர்கள் என்ற முடிவுக்கு நான் வர முடிந்தது.

ஒரு இனம் ஏதோ ஒரு காலகட்டத்தில் தாழ்வு மனப்பான்மைக்கு ஆட்படுகிறது என்பது மிக மோசமான, அருவருக்கத் தகுந்த, அல்லது வெட்கப்பட தகுந்த ஒரு விஷயமல்ல. ஆனால் ஸ்தியைப் பற்றி - நாம் இருக்கும் நிலையைப்பற்றி - உணராமல் இருப்பது, தன்போதம் இல்லாமல் இருப்பது, சுயபோதம், சுய அறிவு இல்லாமல் இருப்பது, சுய கணிப்பு இல்லாமல் இருப்பது என்பது மிக மோசமான விஷயம். இதற்கான காரணங்கள் இந்த இனத்திற்கு - மிக செழுமையான பாரம்பரியம் கொண்ட இந்த இனத்திற்கு, தொல்காப்பியத்தைத் தோற்றுவித்த இந்த இனத்திற்கு அல்லது வள்ளுவர், கம்பன், பாரதி போன்ற மிகப் பெரிய கவிஞர்கள் வாழ்ந்த இந்த இனத்திற்கு, சிற்பக் கலையில் மிகுந்த வல்லமை கொண்ட இந்த இனத்திற்கு, கட்டிடக் கலையில் மிக வல்லமை கொண்ட இந்த இனத்திற்கு ஒரு காலத்தில் கடல்மீது மிகுந்த ஆட்சி கொண்ட இந்த இனத்திற்கு - ஒரு மொழியை இரண்டாயிரம் வருடங்களாக செம்மையாகத் தக்க வைத்துக் கொண்டு, இன்று தோன்றும் கருத்துக்களைக்கூடத் தெளிளத் தெளிவாக சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு மொழியைக் காப்பாற்றி வரும் ஒரு இனத்திற்கு - ஏன் இந்தத் தாழ்வு மனப்பான்மை ஏன் 200 வருடங்களாக ஏற்பட்டது என்பதை எனக்குச் சொல்ல தெரியவில்லை. அதைப்பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

இந்தத் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுகள் எவை என நாம் எடுத்துக் கொண்டோமென்றால் பல்வேறுபட்ட குணங்கள் மூலம் அந்த நோயின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ள முடியும். மிகத் தெளிவான ஒரு நோய்க்கூறு - எல்லோருக்கும் புரியக்கூடிய நோய்க்கூறு - என்னவென்றால் தமிழனுக்கும் ஆங்கிலத்துக்கும் இருக்கக்கூடிய உறவு. அந்த உறவில் தமிழனிடம் இருக்கக்கூடிய மயக்கம் - உறவல்ல, அதில் இருக்கக்கூடிய மயக்கம் - ஆங்கிலத்தின்பால் அவன் கொண்டிருக்கக்கூடிய மயக்கம் மிகச் சிறந்த ஒரு மொழியைத் தன்னளவில் கொண்டிருந்தும் கூட - மிகப் பெரிய பாரம்பரியத்தைத் தன்னளவில் கொண்டிருந்தும் கூட - ஆங்கில மொழியின் மீது தமிழன் கொண்டுள்ள மயக்கம், அதனுடைய கோலங்கள் மிக விரசமானவை. அதை நாம் பரஸ்பரம் பேசிக்கொள்வதைவிட அதை நினைத்துப் பார்ப்பதே நாகரிகமான காரியமாக இருக்கும் என நினைக்கிறேன்.

தமிழனுடைய தாழ்வு மனப்பான்மை எப்போதும் தெளிளத் தெளிவாகக் காட்டக்கூடிய அறிகுறிகளில் ஒன்று, மற்றொரு வகையில் சிந்தித்தால், கடந்தகாலத்தில் நமக்கு இருந்த அளவுக்குச் சாதனைகள் இன்று இல்லாமல் போனது. முக்கியமாக ஒரு 50 ஆண்டுகள் நமக்குச் சாதனைகள் இல்லாமல் போனது. இவை நம்முடைய தாழ்வு மனப்பான்மை வளர்வதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ என்று நான் சந்தேகப்படுகிறேன். தமிழினம் மிகப் பெரிய ஒரு நிகழ்வை நினைத்துப் பரவசம் கொள்ளக்கூடிய எந்த சந்தர்ப்பத்தையும் கடந்த 50 வருடங்களில் உருவாக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்.

பிளாரன்ஸ் என்ற ஒரு கறுப்பு நிறப் பெண் ஒலிம்பிக்ஸ் ஓட்டப் பந்தயத்தில் முன்னே வந்து மற்ற இனத்தைச் சேர்ந்த பெண்களைத் தாண்டி - மற்ற தேசத்தைச் சேர்ந்த பெண்களைத் தாண்டி - முன்னால் வந்து நிற்பது என்பது ஓட்டப்பந்தயம் சம்பந்தமான விஷயம் மட்டுமல்ல; ஒரு இனம் தன்னுடைய பெருமையை வற்புறுத்தக்கூடிய காரியமும் கூட என்று தோன்றுகிறது. அந்த நிகழ்வைப் பார்க்கக்கூடிய கோடிக்கணக்கான கறுப்பர் இனம் ?காலங்காலமாக தங்களை வெளிளை இனம் தாழ்த்திக் கொண்டு வந்திருக்கிறது; அவர்களுக்கு இருக்கக்கூடிய குணாதிசயங்கள் நமக்கில்லை; அந்தச் குணாதிசயங்களை நம்மால் பெற முடியாது என்று நம்மை மட்டம் தட்டி வைத்திருப்பது உண்மை அல்ல ? என்று அந்நேரம் உணர்ந்து பரவசம் கொள்கிறது.

கடந்த 50 வருடங்களில் தமிழனும் இது போன்ற ஒரு பரவசத்தை - கூட்டுப் பரவசத்தை - அடையவில்லை. தனிப்பட்ட முறையில் சில பரவசங்களை அடைந்திருக்கலாம். தனிப்பட்ட முறையில் நம்பிக்கை பெற்றிருக்கலாம். ஆனால் இந்த இனம் மொத்தமாக நம்பிக்கை பெறுவதற்கான காரணம் கடந்த 50 வருடங்களில் உருவாகவில்லை என்று படுகிறது.

கடந்த காலங்களில் நம்முடைய கலாச்சாரத் தலைமை - நம்முடைய அரசியல் தலைமை - நம்முடைய கலைத் தலைமைகள் ஆகியவற்றால் நமக்குப் பெருமை வரவில்லை. மட்டுமல்ல நாம் வெட்கி அவமானப் படக்கூடிய அளவுக்குப் பல சிறுமைகளுக்கும் நாம் ஆளாகியிருக்கிறோம் என்பதையும் கூற வேண்டியிருக்கிறது. எவ்வளவுதான் நாம் உண்மையாகப் பேசிக் கொண்டிருந்தாலும் நம்முடைய அரசியல் தலைவர்களின் தரத்தைப் பற்றி நீங்கள் ஆத்மார்த்தமாக யோசித்துப் பார்ப்பீர்களேயானால் அவர்களுடைய தரத்தை உலகம் ஏற்றுக் கொள்ளாது என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களுடைய திறமைகள், அவர்களுடைய சவடால்கள் அல்லது சாமர்த்தியங்கள் உள்ளூர் சந்தையில் விலை போகலாம். ஆனால் உலகம் அவர்களை மதிக்காது என்று உள்ளூர நமக்குத் தெரியும்.

நம்முடைய மிகச் சிறந்த எழுத்தாளர்களைத்தான் கலாச்சார தலைவர்கள் என்று நாம் சொல்ல வேண்டும். லட்சக்கணக்கான வாசகர்கள் விரும்பிப் படிக்கும் நம்முடைய எழுத்தாளர்களின் தரத்தை நீங்கள் ஆராய்ந்தால் அவர்களில் பெரும்பான்மையரின் தரத்தை உலகம் ஏற்றுக் கொள்ளாது என்பதை உணர்ந்து கொள்வீர்கள். நுட்பமான வாசனை கொண்ட வாசகர்களுக்கு இது நன்றாகவே தெரியும். நம்முடைய திரைப்பட இயக்குநர்கள் எவரையும் உலகத் திரைப்படம் ஏற்றுக் கொள்ளாது என்பது நமக்குத் தெரியும். வங்காளத்தில் ரவீந்தரநாத தாகூர் தோன்றினார். அவர் மறைவுக்கு சில வருடங்களுக்கு உள்ளாகவே சத்யஜித் ரே என்ற திரைப்பட இயக்குநர் தோன்றி உலகப் படங்களுக்கு நிகரான திரைப்படங்களை எடுத்து வங்காள இனம் தன்னுடைய வல்லமையைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். இது போன்ற ஒரு நிகழ்வு இன்று வரையிலும் இந்த நூற்றாண்டில் நம்மிடம் நிகழவில்லை. பக்கத்தில் இருக்கக்கூடிய கேரளாவை எடுத்துக் கொள்ளுங்கள் அரசியல் சார்ந்து ஈ. எம். எஸ். நம்பூதிரிபாடு - இலக்கியம் சார்ந்து சிலர்.

மேற்கத்திய நாகரிகம் என்று சொல்லும் போது ஆடை, அணிகலன்கள் சம்பந்தமான விஷயங்களை நான் சொல்லவில்லை. அவை மேம்போக்கான விஷயங்கள். அடிப்படையாக வாழ்வோடு கொள்ளவேண்டிய உறவுமுறை சம்பந்தமான விஷயங்களில் மேற்கத்திய நாகரிகம் செலுத்தக்கூடிய பாதிப்புகள் நம்மிடம் மிக விரைவாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்தக் குறுக்கீடு நம்மைக் கண்டு கொள்வதற்கு - நம்மை நாமே கண்டு கொள்வதற்கு - பெரும் தடையாக இருக்கிறது. நம்மைச் சார்ந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் நமக்கு ஒரு அலட்சியமும், மேல் நாட்டிலிருந்து வரக்கூடிய எல்லா விஷயங்களைப் பற்றி மிகுந்த மோகமும் கொண்டவர்களாக நாம் பொதுவாக இருந்து வருகிறோம். அதற்கு ஒரு உதாரணம் சொல்ல முடியும். இப்போது உலகெங்கும் அலோபதி வைத்தியத்திற்கு எதிரான ஒரு மனோபாவம் உருவாகி வருகிறது. இந்த வைத்தியத்தை உருவாக்கியவர்கள் உண்மையில் வைத்தியத்தை முதன்மைப்படுத்தியவர்கள் அல்லர் என்றும், அவர்கள் மருந்து வியாபாரிகள் என்றும், மருந்து வியாபாரிகளுடைய சுயநலங்களுக்கு ஆட்பட்ட மருத்துவர்கள் என்றும் சொல்லலாம் என்கிறார்கள். நோயிலிருந்து நிவாரணம் தரக்கூடிய மார்க்கங்களையே இந்தத் துறை சிந்தித்திருக்கிறது. ஆனால் வைத்தியத் துறையின் அடிப்படையான நோக்கம் மனிதன் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பது. அந்த அடிப்படை இந்தத் துறைக்கு இல்லை என்பதை எண்ணற்ற மேல்நாட்டுச் சிந்தனையாளர்கள் இப்போது பரப்பி வருகிறார்கள். ஆக உலகத்திற்குப் பொதுவான வைத்தியம் ஒன்று இருக்க முடியாது என்றும், ஒவ்வொரு நாட்டிலும் தொன்றுதொட்டு எந்த வைத்தியமுறைகள் உருவாகி வந்திருக்கிறதோ அந்த வைத்தியமுறைகள் தான் அந்த மக்களுக்கு உகந்ததாக இருக்கமுடியும் என்றும், அந்த வைத்தியத் துறைகளை வளர்த்து எடுப்பது தான் அந்த மக்களுடைய இலட்சியமாக இருக்கவேண்டுமே ஒழிய பிற நாட்டிலிருந்து வைத்தியத்தை இறக்குமதி செய்வது அவர்கள் நோக்கமாக இருக்க கூடாது என்றும் சிறந்த வைத்தியர்கள் கூறி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் இவான் இலியா எலிவிச் என்கிற ரஷ்ய மருத்துவர். அவர் தன்னுடைய ஒரு புத்தகத்தில் தான் ஆரம்ப நாட்களில் காந்தியினுடைய சிந்தனைகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறுகின்றார். இந்தச் சிந்தனையைக் காந்தி கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்னாலேயே ?ஹிந்து சுயராஜ் ? என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

நாம் மேல் நாட்டு சிகிச்சைக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நமக்கு உகந்த சிகிச்சை முறைகள் நம்முடைய முன்னோர்கள் நமக்கு உருவாக்கி வைத்திருக்கிறார்கள், அதை நாம் வளர்த்துக் கொண்டு போக வேண்டும் என்ற கருத்தை இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே காந்தி கூறியிருக்கிறார். ஆனால் அந்தக் கருத்துக்களை இங்கிருக்கும் அறிவாளி வர்க்கம் போதிய அளவுக்கு முக்கியம் தந்து எடுத்துக் கொள்ளவில்லை. இதே கருத்துக்கள் மேல் நாட்டிற்குச் சென்று, அந்தக் கருத்துக்கள் அவர்களுடைய சூழ்நிலைக்கேற்ப சிறிது மாற்றப்பட்டு புத்தகங்கள் மூலம் சொல்லப்படும் பொழுது, அவை மிகப்பெரிய கருத்துக்களாக நமக்குத் தோன்றி அதைப் பின்பற்றத் தொடங்குகிறோம். இதே மனோபாவத்தில் தான் மோகம் - வாழ்க்கையைப் பற்றிய ஒரு மோகம் - சார்ந்து வாழ்ந்து வருகிறோம்.

இனிமேல் தனித்து நின்று நமது சிந்தனையை வளர்ப்பது என்பது நடைமுறையில் சாத்தியமான விஷயமல்ல. உலகத்தில் தோன்றியுள்ள எல்லா சிந்தனைகளையும் நம்முடைய சிந்தனைகளைச் சார்ந்த தெளிவுகளுக்கு உரமாக எடுத்துக் கொள்ளும் பயிற்சியை நாம் பெறலாம். ஆனால் நம்முடைய சிந்தனைகளை விட்டுவிட்டு - நமக்குச் சுயமான விஷயங்களை நாம் முற்றாக விட்டுவிட்டு - வேறு சூழ்நிலையில் வேறு காரணங்களுக்காக உருவான கருத்துக்களை நாம் அப்படியே எடுத்துக் கொள்ளுவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையின் நிதானத்தை மிகுந்த அளவுக்குக் குறைத்துக் கொண்டு வருகிறோம் என்று நான் நினைக்கிறேன்.

முக்கியமாக இன்று நான்கு விஷயங்களை நான் உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினேன். ஒன்று வாசிப்பு சம்பந்தபட்ட விஷயம்; மற்றொன்று உங்களுக்கு உகந்த துறையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்தத் துறையில் நீங்கள் போதிய திறமை பெற்று நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளக்கூடிய விஷயம். மூன்றாவது தாழ்வு மனப்பான்மை என்று நான் நம்பக்கூடிய நோயிலிருந்து முற்றாக விடுதலை பெறுவதற்கான வழிகள். நான்காவது இந்திய வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையை எதிர்கொள்ளுவதன் மூலம் நமக்குச் சொந்தமான, சுயமான கண்ணோட்டங்களை நாம் உருவாக்கி கொள்ளக்கூடிய முயற்சி. இந்த நான்கு கருத்துக்களையும் விவாதத்திற்காக உங்கள் முன் வைக்கிறேன்.

தமிழனுக்குத் தாழ்வு மனப்பான்மை இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். எந்தக் காரணத்தைக் கருத்தில் கொண்டு இதைக் கூறினீர்கள். விளக்க முடியுமா ?

தன்னால் எவற்றைச் செய்ய முடியுமோ, அவற்றைக் கூடத் தொடர்ந்து செய்யாமல் இருப்பது; இது தன்னைப் பற்றிய ஒரு தாழ்வான எண்ணத்தை உருவாக்கக்கூடும். ஆசிரியர்களுக்கும், உங்களுக்கும் புரியக்கூடிய இரண்டு உதாரணங்களை நான் முன் வைக்க முடியும். சமூகம் சார்ந்து எண்ணற்ற கருத்துக்களை நான் சொல்ல முடியும். அல்லது திரைப்படம் சார்ந்து பல கருத்துக்களைச் சொல்ல முடியும். அந்தப் படங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அல்லது பார்க்காமல் இருக்கலாம். ஆனால் மாணவர்களும், ஆசிரியர்களும் படிப்பதற்கான வாய்ப்பு மிகுதி என்பதால் புத்தகம் சார்ந்த உதாரணத்தை எடுத்துக் கொள்கிறேன்.

டாக்டர் மு. வரதராசன் ?இலக்கியத் திறன் ? என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். முக்கியமாக, தமிழ் துறையைச் சேர்ந்தவர்கள் அந்தப் புத்தகத்தைப் படித்திருக்கக்கூடும். என்னுடைய பெரும் மதிப்பிற்குட்பட்டவர் அவர். தமிழ்ப் புலமையாளர்களில் மு.வ.வை நான் மிகவும் மதிக்கிறேன். அவரை நான் ஒரு சிறந்த படைப்பாளி என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை ஒரு படைப்பாளி என்றே எற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தன் புலமையை மிக நேர்மையாக, மிகத் தெளிவாக முன் வைத்தவர் அவர் என்ற மதிப்பு எனக்கு உண்டு. ?இலக்கியத் திறன் ? என்ற புத்தகம் தமிழ்க் கவிதையைப் பற்றி ஆராயக்கூடிய புத்தகம். இரண்டாயிரம் வருடங்களில் நம்முடைய பாவினங்கள் எப்படி ஒவ்வொரு காலத்திலும் மாறி வந்திருக்கின்றன என்பதைப் பற்றி அந்தப் புத்தகத்தில் மிக நேர்மையாக, சுத்தமாக, தெளிவாக, இன்றைய இலக்கியம் சார்ந்த விஞ்ஞானக் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொண்டு முன் வைக்கிறார் டாக்டர் மு. வ. இந்நூலின் கடைசிப் பக்கங்கள் தமிழில் இன்று வந்து கொண்டிருக்கும் புதுக்கவிதை என்ற இயக்கத்தை மனமார வரவேற்கிறது. தமிழ்ப் புலவர்கள் புதுக் கவிதைக்கு எதிராக ஒரு தார்மீகமான கோபம் கொண்டிருந்த காலத்தில், இது தவிர்க்க முடியாத காலத்தின் நியதி என்று உணர்ந்து மு. வ. ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த புத்தகத்தை நீங்கள் படிப்பீர்கள் என்றால் ஒரு விஷயம் உங்களுக்குத் தெரியவரும். மு.வ. அப்புத்தகத்தில் கவிதை சார்ந்த ஒரு கோட்பாட்டை உருவாக்கவில்லை.

கவிதை சார்ந்து மிக எளிமையான கருத்துக்கள் இருக்கின்றன. ஒன்று, கவிதை தெளிளத் தெளிவாகப் புரிய வேண்டும் என்ற கருத்து. மற்றொன்று கவிஞன் ஒரு குழந்தை உள்ளம் கொண்டவன் என்பது. இவை போன்ற மிக எளிய கருத்துக்களைக் கூட விளக்க மேல்நாட்டு அறிஞர்களான கவிதை விமர்சகர்களான மாத்யூ அர்னால்டு, ஹட்சன், டி.எஸ்.எலியட், டபிள்யூ. ஹெச். ஆடன், ஷெல்லி போன்றோர்களின் பெயர்களைப் பக்கத்துக்குப் பக்கம் மேற்கோள் காட்டி எழுதிக்கொண்டு போகிறார். பிரிட்டிஷ் இனம் எந்த அளவுக்குக் கவிதைகளுக்குச் சொந்தமான இனமோ, எந்த அளவுக்கு கவிதை சார்ந்த நெடிய நீண்ட பாரம்பரியம் பிரிட்டிஷ் மக்களுக்கு உண்டோ, அந்த அளவுக்குக் கவிதை சார்ந்து தொன்மையான நீண்ட பாரம்பரியம் கொண்ட இனம் தமிழினம். கவிதை பற்றிய கோட்பாட்டைத் தன்னைச் சார்ந்து உருவாக்க முடியாமல் கவிதை சம்பந்தப்பட்ட எளிய கருத்துக்கஆளைக் கூட மற்ற இலக்கிய விமர்சகர்களிடமிருந்து கையேந்தி வாங்கக்கூடிய ஒரு மனோபாவம் தாழ்வு மனப்பான்மை என்று நான் நினைக்கிறேன். இது மிக முக்கியமான ஒரு உதாரணம்.

நான் குறிப்பிட்ட இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்து அதில் இக்கருத்துக்கள் சரியாக இருக்கின்றனவா அல்லது என்னுடைய வாதத்திற்கு ஏற்ப நான் கருத்துக்களை முன் வைக்கிறேனா என்பதை ஆசிரிய நண்பர்கள் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்று தமிழகத்தில் எந்தத் துறையைச் சேர்ந்த விஷயங்களையும் எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக, நாட்டுப் பாடல்கள், புராதனக் கலைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வோம். சமீப காலங்களில் நாம் அதிக அளவுக்குக் கவனம் செலுத்தி வருகின்ற ஒரு துறை இது. இந்தத் துறை சார்ந்து அதிக அளவுப் பேச்சுக்களும் அத்துடன் சில உண்மையான காரியங்களும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்கின்ற வில்லிசைக் கலை, கணியான் ஆட்டம் போன்ற கலைகளைப் பற்றி அமெரிக்க ஆராய்ச்சி மாணவரான Stuart Blackburn என்பவர் மிகச் சிறந்த ஒரு புத்தகத்தை உருவாக்கி உள்ளார். இவர் தமிழ் நாட்டில் ஐந்தாறு ஆண்டுகள் தங்கி தமிழைக் கற்றவர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் பல மாதங்கள் தங்கியிருக்கிறார். நாங்கள் நண்பர்கள் நடத்திய கூட்டத்தில் வந்து கலந்துகொண்டிருக்கிறார். நம் மாவட்டத்திலுள்ள பல கிராமத்திற்கும் பயணம் செய்தவர். நம்முடைய பழக்க வழக்கங்களை முற்றாகத் தெரிந்து கொண்டவர். எந்த ஜாதியில் எந்தப் பெண் ருதுவானாலும் அதற்காக அந்த வீட்டில் என்னென்ன செய்வார்கள் எப்படிக் கொண்டாடுவார்கள் என்றால் அவருக்கு அது அத்துப்படியாகத் தெரியும். நம் மக்களுடைய சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் விருப்பு வெறுப்புகள் ஆகியவை அவருக்குத் தெரியும். ஒரு வீட்டில் கோலம் போட்டிருந்தால் அதற்கு என்ன அர்த்தம் ? எந்தெந்த விசேஷங்களுக்கு என்னென்ன கோலங்கள் போடுவார்கள் என்பதைப் பற்றி எல்லாம் அவர் அறிந்திருக்கிறார். நம்மைப் பற்றி நமக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ அதைவிட பலமடங்கு அவர் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார். இவர் பின்னால் உருவாக்கிய புத்தகத்தைப் போன்ற ஒன்றை நம்மாலும் உருவாக்கியிருக்க முடியும். நமக்கு உருவாக்குவதற்கான வசதிகள் அதிகம். நமக்கு இந்த மக்கள் பேசக்கூடிய மொழி தெரியும். நம்முடைய ஊர் என்பதால் நமக்கு அதிக அளவுக்குப் பழக்க வழக்கங்கள் தெரியும். நமக்குத் தொடர்புகள் மிகுதி. இருந்தாலும் அந்தப் பணியை நாம் செய்யவில்லை. அது போன்ற ஒரு புத்தகத்தைச் சார்ந்து இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் குறைந்த பட்சம் பத்து தமிழ்ப் புத்தகங்களேனும் வரும். அத்தனை புத்தகங்களிலும் அவருடைய பெயரை மேற்கோள் காட்டி, அவரை மிக உயர்வாகப் போற்றிச் சொல்லுவார்கள். இதுபோன்ற எண்ணற்ற காரணங்களை முன் வைத்து நாம் நம்பிக்கை பெறாமல் இருப்பதால்தான் இதற்கு ஈடான சாதனைகளைச் செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன்.

மாணவ நண்பர்களுக்கு இதற்கு மாறான கருத்துக்கள் இருக்குமென்றால் அது மிக நல்ல விஷயம். மிக உயர்வான விஷயம். ஏதோ ஒரு காரணத்தினால் என்னுடைய வாதங்கள் தவறு என்று ஏற்படுவதை நான் விரும்புகிறேன். நம் இனம் நம்பிக்கை கொண்ட இனம் என்பது உண்மையென்றால் நாம் பல சாதனைகள் செய்து நம்முடைய கண்ணோட்டத்தையும் சாதனையையும் உலகம் பொருட்படுத்தும் அளவுக்குச் செய்ய வேண்டும்.

மு.வ. ஒரு படைப்பாளி இல்லை என்றீர்கள் ? அதற்குக் காரணம் கூற முடியுமா ? அப்படியென்றால் ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய தகுதிகளை மதிப்பீடு செய்யுங்களேன் . . . ?

இதற்கு முன்னால் இல்லாமல் இருக்கக்கூடிய ஒன்றைச் செய்து காட்டக் கூடியது தான் படைப்பு. அது தான் அதன் அடிப்படையான பொருள். இவர் ஒரு நாவல் எழுதி இருக்கிறார். நாவல் என்றால் அது முற்றிலும் புதுமையானதாக இருக்க வேண்டும். நம் மொழியில் இருக்கக்கூடிய ஒன்றையோ பிற மொழிகளில் இருக்கக்கூடிய ஒன்றையோ நகல் செய்ததாக இருக்கக்கூடாது. இந்த படைப்பு ஒருவன் வாழ்க்கையை சுயமாக எதிர் கொள்ளுவதன் மூலம் - அந்த எதிர்கொள்ளுதலிருந்து பெறக்கூடிய அனுபவங்களைச் சார்ந்து - அந்த அனுபவங்களின் சாராம்சம் என்ன என்ற agonyியிலிருந்து, வேதனையிலிருந்து - படைப்பு தோன்றுகிறது.

மு.வ. அவருடைய நாவல்களில் தமிழ்ச் சமுதாயம் அவருக்கு முன் அறிந்திராத எந்த அனுபவத்தையோ அல்லது கருத்துக்களையோ முன் வைக்கவில்லை என்று கருதுகிறேன். அவர் கூறிய கருத்துக்கள் காலம் காலமாக தமிழ் சமுதாயத்தைச் சேர்ந்த அறிஞர்கள் கூறிய - அதிகமும் வள்ளுவர் கூறிய - கருத்துக்களே ஆகும். இந்தக் கருத்துக்களின் கூட்டுத் தொகுப்பு ஒரு படைப்பாகாது. படைப்பும் சமூக இயல் சார்ந்த நூல்களும் அடிப்படையில் வேறானவை. திருக்குறள் ஒரு நாவல் அல்ல. காரணம் அது வாழ்க்கையைப் பற்றி ஒரு கவிஞர் கண்டடைந்த முடிவான கருத்துக்களைக் கூறுகிறது. வாழ்க்கையின் அனுபவங்களைப் பற்றியோ அந்த அனுபவங்களி லிருந்து இந்தக் கருத்து நிலைக்கு வந்து சேர்ந்த பயணங்களைப் பற்றியோ அந்த நூலில் எந்தத் தடயமும் இல்லை.

ஆக, இரண்டு விதமான நூல்கள் இருக்கின்றன. ஒன்று படைப்பு சார்ந்த நூல்கள். மற்றொன்று ஒரு துறை சார்ந்த - விஞ்ஞானம் அல்லது சட்டம் அல்லது மதம் அல்லது அறவியல் போன்ற துறை சார்ந்த - நூல்கள். இவற்றிற்கு அடிப்படையான வேற்றுமை: ஒன்று அனுபவம் சார்ந்து இயங்குகிறது. அதில் முற்றான முடிவான கருத்துக்கள் வற்புறுத்தப்படவில்லை. வாழ்க்கையைப் பற்றிய கவனங்கள் கொண்டு வரப்படுகின்றன. வாழ்க்கை சார்ந்த மிக மேலான அனுபவங்கள் தேக்கப்படுகின்றன. மற்றொன்றில் முடிவான கருத்துக்கள் வற்புறுத்தப்படுகின்றன. இந்த முடிவான கருத்துக்களை வற்புறுத்திய ஆசிரியராகத்தான் மு.வ.வை எடுத்துக் கொள்கிறேன். மாறாக வாழ்க்கையைச் சார்ந்த அனுபவங்களை அவர் முன் வைத்தார் என்று என்னால் கூறமுடியவில்லை. அதனால் ஒரு படைப்பாளியாக அவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நோய்களைக் கண்டுபிடிக்கிற, உயிர் காக்கும் மருந்துகளையும் கருவிகளையும் கொண்ட அலோபதி வைத்தியத்தின் மீது நாம் ஏன் மோகம் கொள்ளக்கூடாது ?

இது வைத்திய சாஸ்திரம் சம்பந்தப்பட்ட கேள்வி. நான் சொல்ல வந்தது அலோபதி வைத்தியத்தைப் பற்றி இன்று உலகத்தில் வாழும், சமூக அக்கறைகள் கொண்ட வைத்தியர்கள் என்ன கூறி வருகிறார்கள் என்பதைத்தான். அலோபதி என்ற சிகிச்சை முறை, மொத்த நலங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு விவாதிக்கப்பட்டதல்ல. நோயாளிகளின் பிறப்பு, வளர்ப்பு அவர்களுடைய பழக்க வழக்கங்கள், அவர்களுக்கும் அவர்கள் எதிர் கொள்கிற சமூகத்திற்கும் உள்ள உறவுகள், அவர்களுக்கும் அவர்கள் ஆற்றக்கூடிய காரியங்களுக்கும் உள்ள உறவுகள், அவர்களுக்கு இருக்கக்கூடிய வசதிகள் இவற்றைத் கருத்தில் நிறுத்திக் கொண்டு உருவான ஒரு சிகிச்சை முறை அல்ல. மாறாக ஒரு நோய்க்கு உடனடியாக நிவாரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மருந்து விற்பனையானர்களின் லாபத்தை அடிப்படையாகக் கொண்ட துறை என்று மருத்துவத்தைச் சார்ந்த சிலரே முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இதே கருத்துக்கள் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் காந்தியால் முன்வைக்கப்பட்டன. அப்போது அந்தக் கருத்துக்களை முதன்மையாக எடுத்துக் கொள்ளாத இந்தியாவிலுள்ள அறிவு வர்க்கம் இன்று இந்தக் கருத்துக்களுக்கு முதன்மையான இடம் தந்து பேசுகிறது. மேல் நாட்டில் தான் சிறந்த கருத்துக்கள் வர முடியும் என்கிற ஒரு மனோபாவத்தை இது காட்டுகிறது என்பதற்கு ஒரு உதாரணமாக இதைச் சொன்னேன். நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய வைத்திய முறைகள் அலோபதியா, ஆயுர்வேதமா, ஹோமியோபதியா என்பதைப் பற்றிச் சொல்வதற்கான அடிப்படைத் தகுதிகள் எவையும் எனக்குக் கிடையாது.

நான் கூற வந்த விஷயம் நாம் கொண்டிருக்கும் மோகம். நம் முன்னோர்கள் கூறிய விஷயங்களை உதாசீனம் செய்துவிட்டு, அதே விஷயங்கள் மேல் நாட்டிலிருந்து வரும்போது அவற்றை மிகப் பெரிய விஷயங்களாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை நான் சொல்லுகிறேன். இதே மனோபாவத்தை நீங்கள் பல்வேறு விஷயங்களில் பார்க்கலாம். ?சுற்றுப் புறச்சூழல் இயக்கம் ? என்று ஒன்று இன்று மேல் நாட்டில் உருவாகி வருகிறது. உங்களுடைய சுற்றுப்புறங்களை நீங்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிதன் அவசியத்தை இப்போது மிகப் பெரும் அளவுக்கு வற்புறுத்தி வருகிறார்கள். மரங்களை வெட்டக்கூடாது; நெடுஞ்சாலை ஓரங்களில் குடியிருப்பு பகுதிகள் அமைக்கக்கூடாது; நதிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்; எந்த ஜீவராசிகளையும் முற்றாக அழித்துவிடக் கூடாது என்று ஒரு இயக்கத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதே காரியங்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வற்புறுத்தியுள்ளார்கள். காந்தி இதைப் பல தடவை வற்புறுத்தியிருக்கிறார். சுற்றுப்புற சூழ்நிலைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவருடைய எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் வற்புறுத்துகின்றன. ஆனால், இது இன்று இயக்கமாக மேல்நாட்டிலிருந்து வரும்போது அதை அப்படியே நாம் ஏற்றுக் கொள்கிறோம். அங்கு ஏற்பட்ட பல பிரச்சனைகள் காரணமாக அந்த இயக்கம் சார்ந்து பல்வேறுவகைப்பட்ட அழுத்தங்கள் அங்கு இருக்கின்றன. நம்முடைய சூழ்நிலைக்கு ஏற்ப அந்த இயக்கத்தை மாற்ற வேண்டும் என்று எண்ணாமல் அவர்களுடைய சோகங்களை - அவர்களுடைய மனோபாவத்தை - அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.

ஆங்கில மொழியினால் நமக்குச் சில வசதிகள் கிடைக்கின்றன. அந்த மொழியினால் சில அவசியத் தேவைகள் நிறைவேறுகிறது. அப்படியானால் அந்த மொழியின் மீது ஏன் மோகம் கொள்ளக்கூடாது ?

ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவி இருக்கக்கூடிய ஒரு மொழி என்பது உண்மையான விஷயமல்ல. உலகத்தில் மிகச் சிறுபான்மையான மக்கள் அறிந்த ஒரு மொழிதான் ஆங்கிலம். ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு உங்களுக்கு பிரிட்டிஷ் தீவுகளில் அல்லது அமெரிக்காவில் நீங்கள் சில காரியங்களைச் செய்ய முடியும். நீங்கள் ஐரோப்பாவிற்குச் சென்றிருந்தால், சீனாவுக்குச் சென்றிருந்தால் அல்லது ருஷ்யாவுக்குச் சென்றிருந்தால் இந்த ஆங்கிலத்தை நீங்கள் காலணாவுக்குக் கூட அங்கெல்லாம் விற்க முடியாது. அங்கு செல்லுபடியாகாது. நீங்கள் ஆங்கிலம் அறிந்தவர்களா இல்லையா என்பது அங்கெல்லாம் பிரச்சனையே அல்ல. ஆங்கில மொழி சம்பந்தமாக இந்தியர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு மயக்கம், அதைத்தான் தவறு என்று கூறுகிறேன்.

ஆங்கில மொழியை மோசமான மொழி என்று நான் சொல்ல வில்லை. ஆங்கில மொழியைக் கற்பதால் நாம் அதிகமான பயன்களை அடைய முடியாது என்றும் நான் சொல்லவில்லை. ஆங்கில மக்களுடன் இருநூறு ஆண்டுகளில் நமக்கு ஏற்பட்ட உறவினால் அவர்களிடமிருந்து நமக்கு வந்த கலாச்சாரப் பழக்க வழக்கங்களை நாம் முற்றாக நீக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இரண்டு இனங்கள் ஒன்றுக்கொன்று கூடி வாழும் போது ஒரு இனம் மற்றொரு இனத்திலிருந்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ளும். வசதியைக் கருதி கற்றுக் கொள்ளும். அதைத் தக்க வைத்துக் கொள்ளும் என்பது ஒரு சாதாரண விதி. சிலவற்றை வெளிளையரிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறோம். அவற்றை நாம் தக்க வைத்துக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறில்லை.

அறிவு என்பதை ஆங்கிலத்தின் மூலம்தான் பெற முடியும் என்பது உண்மையான விஷயமல்ல. ஒருக்கால் உங்களுக்கு ஆங்கிலம் தெரியாமல் ஜெர்மன் மொழி தெரிந்திருப்பின் அதன் மூலம் பெற முடியும். இன்று முக்கியமாக ஜெர்மன் மொழியும் பிரஞ்சு மொழியும் ஆங்கிலத்துக்கு இணையாக, ஒரு சமயம் ஆங்கிலத்தைத் தாண்டியும் வளர்ந்துவிட்டன. ஆங்கிலத்துக்கும் நமக்கும் இருக்கக்கூடிய உறவுகளில் நாம் கொண்டிருக்கக்கூடிய ஆரோக்கியத்தைப் பற்றி, நேர்மைகளைப் பற்றி நான் சொல்லவில்லை. நாம் அந்த மொழியைச் சார்ந்து நிற்கும் மயக்கங்களைப் பற்றிச் சொல்கிறேன். ஒரு அறிவாளியை அளப்பதற்கு முதன் முதலாக acid test என்று அவருக்கு ஆங்கிலம் தெரியுமா என்றுதான் இன்று பார்க்கப்படுகிறது. இங்கு ஒரு மனிதன் பிழையாக ஆங்கிலம் பேசும்போது அவன் மிகுந்த வெட்கமடைகிறான். ஆனால் அவன் பிழையாக தமிழ் பேசும்போது எந்தவிதமான வெட்கத்தையும் அடைவதில்லை. பேசும்போது மட்டுமல்ல எழுதும்போதும் அவன் அடைவதில்லை. இன்று நீங்கள் ஒரு தமிழ் அறிஞரை மதிக்கும்போது அவர் தமிழ் அறிஞர் என்பதற்காக மதிக்கிறீர்களா அல்லது அவர் ஆங்கிலமும் அறிந்த தமிழ் அறிஞர் என்பதற்காக மதிக்கிறீர்களா என்று பார்த்தால் அவர் தமிழ் அறிஞர் என்பதற்கு மேலாக ஆங்கிலமும் அறிந்தவர் என்பதற்காகவே அதிகப்படியான மதிப்பை அவர் பெற முடிகிறது. இப்படி நீங்கள் சிந்தித்துக் கொண்டு போனால் இந்த மொழி சார்ந்து ஒரு பலகீனம், மயக்கம் நமக்கு இருக்கிறது. சாதாரண மக்களிடம் இந்தப் பலகீனம் இன்னும் அதிகமாக இருக்கிறது.

இன்றைய திரைப்படங்களை எடுத்துக் கொள்ளுவோம். ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத ஒரு கதாநாயகன், ஒன்றுக்கும் உதவாதவன் என்று பெண் வீட்டாரால் கருதக் கூடிய ஒரு கதாநாயகன், அவன் கூலி வேலை செய்யக்கூடியவனாகவோ, டாக்சி ஓட்டக்கூடியவனாகவோ இருக்கலாம். அவன் அந்தத் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆங்கிலத்தில் சில வசனங்கள் பேசும் போது எண்ணற்ற பார்வையாளர்கள் கரகோஷம் செய்வார்கள். அந்தக் கரகோஷத்திற்கு அர்த்தம் ?அவன் அறிவாளி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது ? என்பதுதான். இவை நாம் மனரீதியாக எவ்வளவு பெரிய நோயாளியாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளங்கள். இந்த நோயை நாம் தெரிந்து கொண்டால்தான் விமோசனம் பெற முடியும். இந்த நோய்க்கு நாம் ஆளாகியிருப்பது ஒன்று. இந்த நோய் நமக்கு இருக்கும்போதே இருப்பதை மறுப்பது மற்றொன்று. ஆக இரண்டு நோய்களுக்கு நாம் ஆட்படுகிறோம். இது போன்று பல்வேறு உதாரணங்களைச் சொல்லி நம்மிடம் இருக்கும் மோகத்தை நிரூபிக்க முடியும்.

ஆங்கிலம் தெரியாதவர்கள் மிகப்பெரிய அறிஞர்களாக இருந்தும் கூட ஆங்கிலம் தெரியவில்லை என்ற காரணத்தால் உள்ளூர அவர்கள் மிகுந்த வெட்கம் அடைந்திருக்கிறார்கள். அவர்கள் வெட்கம் அடைவதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். உ.வே.சாமிநாத ஐயரின் பெரிய கவலை தனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதாம். அவருக்கு நிகரான பதிப்பாசிரியர்கள் உலக சரித்திரத்தில் இல்லை என்று கூடக் கருதுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர் தமிழ் மீது மிகுந்த காதல் கொண்டவர். மட்டுமல்ல உலக சரித்திரத்தில் மற்றவர்கள் எப்படிப் புத்தகங்ளைப் பதிப்பித்திருக்கிறார்களோ, வளர்ந்த நாடுகளில் புத்தகங்கள் எப்படிப் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றனவோ அவற்றிற்கு இணையான பதிப்புக்களை உருவாக்கியவர் அவர். பிறரிடம் ஒவ்வொரு விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு பதிப்பித்தவர் அவர். தனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதை திரும்பத் திரும்ப தன் நண்பர்களிடம் அவர் சொல்லியிருக்கிறாராம். இந்த அவமானத்தை அவருக்கு நாம் ஏற்படுத்தும் போது அதை எண்ணி அவமானப்பட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். இதுதான் அந்த மொழி சார்ந்த மோகம். இது ஒரு Symptom. இன்னும் எண்ணற்ற Symptoms. நம்மிடம் இருக்கின்றன. அதை நாம் இன்னும் கூராகப் பார்த்தோமானால் தாழ்வு மனப்பான்மைக்கான காரணங்களாக அவை இருப்பதை அறிய முடியும். இது ஒரு இயற்கையான விஷயம். அபூர்வமான நோயல்ல. உலகத்தில் பல இனங்களுக்கும் இருக்கக்கூடிய தாழ்வு இது. இதைத் தாண்டி வருவதற்கான விஷயங்களைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும் என்றுதான் சொன்னேன்.

கவிமணி, பாரதி, நாமக்கல்லார் போன்ற கவிஞர்கள் சமுதாயம் சீர்கெட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். ஆனால் இன்றைய எழுத்தாளர்களோ தன்னலத்தோடு செயல்படுகின்றனர். இவர்கள் பெரிய சிக்கலைக் கருவாக எடுத்துக் கொண்டாலும் அதை ஆபாசமாக்கி விடுகின்றனரே. காரணம் சொல்ல முடியுமா ?

நண்பருடைய பேச்சில் எந்தவிதமான கருத்து வேற்றுமையும் எனக்கு இல்லை. அவர் இந்தக் கால எழுத்தாளர்களை இன்னும் காரமாகத் தாக்கியிருக்கலாம் என்பதைத் தவிர. மற்றபடி எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இந்த எழுத்தாளர்கள் ஏன் இந்த மாதிரியான காரியங்களைச் செய்கிறார்கள் என்பதை நீங்களே சொல்லிவிட்டார்கள். அவர்கள் சுயநலம் சார்ந்து ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு இரண்டு விதமான குறிக்கோள்கள் இருக்கின்றன. ஒன்று சமூக அந்தஸ்து. சமூக அந்தஸ்து என்றால் புகழ். மற்றொன்று பணம். இந்த இரண்டு வெற்றிகளைச் சார்ந்து - இந்த வெற்றிகளை எவை ஈட்டித் தருமோ, எந்தவிதமான இயக்கம் உருவாக்கித் தருமோ, அவற்றைச் சார்ந்து - அவர்கள் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் படைக்கிறார்கள் என்பதைவிட அவர்கள் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். இந்த வெற்றிக்கு அவர்கள் பல்வேறு வகைப்பட்ட துறைகளால் அங்கீகரிக்கப்படுகிறார்கள். உண்மையில் தரமற்ற எழுத்தாளர்கள் அல்லது தரமற்ற கவிஞர்கள் அங்கீகரிக்கப்படும் போது ஒரு தயக்கம் ஏற்படுகிறது. மிகத் தரமற்ற ஒரு நாவலாசிரியர் மிகப் பெரிய பரிசைப் பெறும்போது அவரைத் தரமற்றவர் என்று நிரூபிப்பதில் கஷ்டம் இருக்கிறது.

பெரிய நிகழ்ச்சிகள் நிகழும்போது ஒரு இனம் தனக்குரிய அவநம்பிக்கைகளை அல்லது தாழ்வு மனப்பான்மையை உதறிக் கொண்டு சிலிர்த்து எழுகிறது. அப்படி மற்ற இனங்களுக்குச் சில சாதனைகள் நடந்திருக்கின்றன. ஒரு எழுத்தாளருக்கு நோபல் பரிசு கிடைக்கிறபோது அந்த இனம் வாழ்க்கைமீது ஆழ்ந்த நம்பிக்கை கொள்கிறது. உலகம் பார்த்து மெச்சக்கூடிய எந்தக் காரியத்தையும் நாம் இலக்கியத்திலோ சினிமாவிலோ செய்யவில்லை. அரசியல் சார்ந்த கருத்துக்களையோ சமூக ஆராய்ச்சி சார்ந்த கருத்துக்களையோ குறைந்த பட்சம் நமக்கு இரண்டாயிரம் வருடம் பழக்கம் உள்ள கவிதை சார்ந்த துறையிலோ உலகத்துக்கு இன்று வரையிலும் நாம் எவற்றையும் அளிக்கவில்லை. ஆகவே தான் நாம் தாழ்வு மனப்பான்மை கொண்டுவிட்டோம் என்று நான் சந்தேகப்படுகிறேன்.

துறையைத் தேர்ந்தெடுப்பதில் பிறரது அறிவுறைகளையோ தாக்குதலையோ பொருட்படுத்த வேண்டாமா ?

ஒரு துறையைத் தேர்ந்தெடுத்த பின் அதில் இயங்குவது விரும்பத்தக்க விஷயம்தான். ஆனால் நம் சமூகப் பின்னணி சார்ந்த ஏதோ ஒரு காரணத்திற்காக சரியான வழிகாட்டல் நமக்குக் கிடைக்காமல் போகலாம். அது குடும்பம் சார்ந்தோ அல்லது உறவினர்கள் சார்ந்தோ அல்லது நண்பர்கள் சார்ந்தோ அல்லது ஆசிரியர்கள் சார்ந்தோ நமக்குக் கிடைக்காமல் போகலாம். அதனால் சில சந்தர்ப்பங்களில் நாம் தவறான துறையைத் தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பினால் நாம் சில பட்டங்களைப் பெற்ற பிறகு ஏதோ ஒரு காரணத்தினால் இருபது, இருபத்திரண்டு வயதில் அதிக வயதை நாம் அடைந்துவிட்டோம் என்றும் இந்தத் துறையை மாற்றிக் கொண்டு மற்றொரு துறையை நாம் தேர்ந்தெடுத்து அதில் திறமை பெறுவது அசாத்தியமான காரியம் என்ற எண்ணம் மாணவர்களுக்கு ஏற்படுவது இயற்கை. இது போன்ற ஒரு எண்ணம் நமக்கு ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை. கல்லூரியில் நாம் தவறான ஒரு துறையைத் தேர்ந்தெடுத்தாலும் கூட வாழ்க்கையில் நம்முடைய ருசிகளுக்கு ஏற்ற துறைகளைத் தேர்ந்தெடுத்து அதில் பயிலக்கூடிய வாய்ப்பு இன்று இருக்கிறது. அந்த வாய்ப்பு மாணவர்களுக்கு அவசியம் என்றால், விமர்சனங்களுக்கு ஆட்பட்டாலும் கூட - அவர் தனது ருசிக்கு ஏற்ப துறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள பின் வாங்கக்கூடாது என்று நினைக்கிறேன். உங்களைப் பொறுத்த வரையில் நீங்கள் சரியான துறைகளைத்தான் தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என்றால் நீங்கள் அந்தத் துறையைத் தொடரலாம். ஏதோ ஒரு காரணத்திற்காக நமக்குத் துறைகள் சரியாக அமையவில்லை என்று வாழ்நாள் முழுவதும் விசனப்பட்டுக் கொண்டிருப்பதைவிட நமக்கு நம்மைப் பற்றித் தெரிந்த நேரத்தில் நம்முடைய துறைகளை மாற்றிக் கொள்வது மிக முக்கியமான விஷயமாக எனக்குப்படுகிறது.

இன்று புதுக்கவிதை வளர்ந்த நிலையில்தான் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் தமிழிற்கு ஒரு சரியான இடம் இல்லாமல் போகவில்லையே ?

நான் புதுக்கவிதையைப் பற்றி சாதகமாகவோ பாதகமாகவோ எந்தக் கருத்தையும் என்னுடைய பேச்சில் கூறவில்லை. மு.வ. ?இலக்கியத் திறன் ? என்ற தனது புத்தகத்தில் புதுக்கவிதையை வரவேற்று எழுதக்கூடிய அளவுக்கு இன்றைய நவீன இலக்கியப் போக்குகளை அறிந்து வைத்திருக்கிறார் என்று பாராட்டினேன்.

பொதுவாக ஒரு மொழி இரண்டாம் பட்சமான படைப்புக்களால், அவை நாவல்களாக இருந்தாலும் சரி, சிறுகதையாக இருந்தாலும் சரி, கவிதையாக இருந்தாலும் சரி, ஒரு மொழி தன்னுடைய வலிமைகளை இழந்து கொண்டிருக்கும். முதன்மையான படைப்புக்களால் மிகத் தரமான படைப்புக்களால் மொழி வளர்ச்சி அடையும். நம்முடைய மொழி நம்முடைய சிறந்த கவிஞர்களால், சிறந்த நாவலாசிரியர்களால், சிறந்த சிறுகதை ஆசிரியர்களால், சிறந்த கட்டுரை ஆசிரியர்களால் நன்றாக வளர்க்கப்படுகிறது என்று நான் நம்புகிறேன். ஆனால் நம்மிடமோ இரண்டாம் பட்சமான அல்லது மூன்றாம் பட்சமான கவிஞர்களும், நாவலாசிரியர்களும், சிறுகதை ஆசிரியர்களும் எண்ணிக்கையில் அதிக அளவு இருக்கின்றனர். அவர்களுக்கு சமூக அந்தஸ்தும் நிறுவனங்களின் ஆதரவும் கிடைக்கிறது. அவர்கள் மொழியை மலினப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் தமிழ் மொழி சம்பந்தமாக நாம் எதிர் கொள்ளக் கூடிய நிலையாக இருக்கிறது.

நமக்கு இருக்கின்ற ஆங்கில மோகத்தால் தான் நாம் தமிழை உண்மையில் மதிக்காமல் இருக்கின்றோமா ?

ஆங்கில மோகம் ஏற்படுவதற்கு மாணவர்களை நான் குறை சொல்லவில்லை. மாணவர்கள் இந்த குறைகளுக்கு ஆட்பட்டுவிடக்கூடாது என்ற கவலையினால்தான் உங்களை provoke செய்யக்கூடிய, அல்லது உங்களை தொந்தரவு பண்ணக்கூடிய, நீங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுக்கக்கூடிய பல கருத்துக்களை முன் வைத்தேன். மாணவர் சமுதாயம் இன்று இருக்கக்கூடிய பல்வேறு குறைகளுக்குப் பலியாகி விடக்கூடாது என்று நினைக்கிறேன். இன்று ஆங்காங்கே திறக்கப்பட்டுள்ள ஆங்கிலப் பள்ளிகள், ஆங்கிலத்தின் மீது நாம் கொண்ட மோகத்தையே காட்டுகின்றன. வெளியே தமிழின் பெருமை பேசுதல், அதே சமயம் ஆங்கிலத்தை உள்ளூர மதித்தல் இதுதான் நம்முடைய கலாச்சார தலைமையின் இரட்டைக் குணம். நம்முடைய அரசியல் தலைமையின் இரட்டைக் குணம். இந்த குணத்தைக் கொண்டவர்கள் தான் இந்தச் சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆங்கிலக் கல்விக்கு அளிக்கக்கூடிய முக்கியத்துவத்தை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் தெரியும். இவர்களுடைய மரியாதை தமிழ் சார்ந்து இல்லை என்பதற்கும் ஆங்கிலம் சார்ந்து தான் இருக்கிறது என்பதற்கும் எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும். நாம் கடந்த ஐம்பது வருடங்களில் தமிழைப் பற்றி உயர்வாகப் பேசியது உண்மையென்றால் நாம் பல்வேறுபட்ட காரியங்களைச் சாதித்திருக்க வேண்டும். ஆனால் சொல்லும்படியான மிகப்பெரிய காரியங்கள் எவற்றையும் நாம் சாதிக்கவில்லை. தமிழன் பெருமை பேசுவதே சில அரசியல் காரணங்களுக்காக, சில சமூகக் காரணங்களுக்காக. இதை ஒரு தந்திரமாகக் கொண்டிருக்கிறோம். இந்த இனம் தன்னுடைய தாழ்மையைப் பற்றி உள்ளூர வருந்தவில்லை என்பதற்கான தடயங்கள் தான் எனக்கு அதிகமாகக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இன்றைய கலாச்சார வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக எதைச் சொல்ல முடியும் ?

முக்கியமான காரணம் தமிழ் நாட்டில் போலிகளுக்குக் கிடைக்கக் கூடிய அங்கீகாரம் என்று சொல்லலாம். ஒரு சமுதாயத்தில் எல்லா தரத்தைச் சார்ந்த மக்களும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். மிக உயர்ந்த தரத்தைச் சார்ந்த மக்கள் மட்டும் வாழக்கூடிய சமுதாயம் என்று எதுவுமே இல்லை. செயல்பாடுகள் என்று எடுத்துக் கொண்டால் பல்வேறு தரத்தைச் சார்ந்த செயல்பாடுகள் ஒவ்வொரு சமூகத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும். மிக உயர்வானதும் இருக்கும்; நடுத்தரமானதும் இருக்கும். மிகக் கீழானதும் இருக்கும். ஆனால் ஒரு விவேகமான சமூகம் உயர்வான செயல்பாடுகளை ஏற்றுக் கொள்கிறது. அதைப் போற்றுகிறது. பாராட்டுகிறது. இரண்டாம் பட்சமான செயல்பாடுகளை விமர்சிக்கிறது. மூன்றாம் பட்சமான அல்லது முப்பதாம் பட்சமான செயல்பாடுகளைக் கண்டிக்கிறது. இதன் மூலம் மதிப்பீடுகளை ஒரு விவேகமான சமூகம் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. எனவே இந்தச் செயல்பாடுகள் இருப்பது வீழ்ச்சிக்கு காரணம் அல்ல. தரக்குறைவான செயல்பாடுகள் இல்லாத ஒரு சமூகம் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. தரக்குறைவான காரியத்துக்கு நாம் கொடுக்கக் கூடிய சமூக அங்கீகாரம் சமூக மதிப்பு வீழ்ச்சியினுடைய அறிகுறி என்று நான் கருதுகிறேன்.

மூன்றாம்தர எழுத்தாளரை முதல் தரமான எழுத்தாளராக ஒரு சமூகம் கருதுமென்றால், பல்கலைக்கழகம் கருதுமென்றால், அறிவாளி வர்க்கங்கள் கருதுமென்றால், அரசாங்கம் கருதுமென்றால், அரசியல்வாதிகள் கருதுவார்கள் என்றால் அந்த சமூகம் விவேகமான மதிப்பீடுகளை, அளவுகோல்களை இழந்து விட்டது என்றுதான் அர்த்தம். மிகச் சிறந்த நடிகர்கள் இருக்கக்கூடிய ஒரு சமூகத்தில் மிக மோசமான நடிகர்களை மிகச் சிறந்த நடிகர்களாக ஒரு சமூகம் ஏற்றுக் கொள்ளும் என்றால், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த அறிவாளிகளும் ஏற்றுக் கொள்வார்கள் என்றால், நடிப்பைச் சார்ந்த அளவுகோல் முறிந்து போகிறது என்று அர்த்தம். இதுபோன்ற ஒரு வீழ்ச்சி தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் பிற துறைகள் சார்ந்தும் மூன்றாம் தரமானவற்றை முதல் பட்சமாக முன் வைக்கும் காரியம், முதல் பட்சமானவற்றை முற்றாக நிராகரித்து விடும். இந்த இரண்டு காரியத்தையும் இந்த சமூகம் ஏற்றுக் கொண்டிருகிறது. ஆகவே இது ஒரு பெரிய வீழ்ச்சி என்று நம்புகிறேன்.

இன்றைய தரமான எழுத்துக்கள் படிப்பதற்கு எளிமையாக இல்லையே. உங்கள் காலச்சுவடு கூடத்தான். . .

மிகச் சிறப்பான எழுத்து சற்றுக் கடினமாக இருக்கலாம். மிகச் சிறப்பான எழுத்து எளிமையாகக் கூட இருக்கலாம். கடினம் என்பது இலக்கிய அளவுகோல் அல்ல. இது கடினமாக இருக்கிறது; ஆகவே உயர்வானது என்று சொல்ல முடியாது. இது எளிமையாக இருக்கிறது; ஆகவே இது தள்ளுபடியானது என்று சொல்ல முடியாது. இரண்டு விதமாகவும் படைப்புக்கள் இருக்கலாம். எளிமையாக இருக்கிறதா ? அல்லது கடினமாக இருக்கிறதா ? என்பதைப் பற்றி முன்கூட்டியே எண்ணங்களைக் கொண்டு அந்த எண்ணங்களின் அடிப்படையில் நான் இலக்கியப் புத்தகங்களை மதிப்பிடுவதில்லை. நம்முடைய இதிகாசங்களான மகாபாரதமும், இராமாயணமும் மிக எளிமையானவை. James Joyce இன் Ulysses மிகக் கடினமான புத்தகம். Franz Kafkaவும் சுலபமான ஆசிரியர் அல்ல. இவை எல்லாமே இலக்கியத் தரமானவை என்றே நான் கருதுகிறேன். இதில் ஒன்று போதும். மிக எளிமையானது மட்டும் போதும்; கடினமானவை வேண்டாம், வேண்டவே வேண்டாம் என்கிற மனோபாவத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நாவலாசிரியர்கள் அல்லது கவிஞர்களின் படைப்புக்களை கடினம் என்று வாசகர்களாகிய நாம் கூறுவதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. இதற்கு முன் எந்தக் காரியங்கள் சொல்லப்பட்டனவோ அதே விஷயங்கள் இந்த நாவலிலோ கவிதைகளிலோ சொல்லப்படவில்லை. இதுகாறும் சொல்லாத மிகச் சிக்கலான விஷயங்களை அவர்கள் சொல்ல முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சிகளில் வெற்றிகள் அடைகிறார்கள். இதன் மூலம் உங்கள் மொழி மிக நுட்பமான ஆற்றல்களை அடைகிறது. இன்று பல நுட்பமான கருத்துக்களை நம் மொழியில் நாம் சொல்கிறோம் என்றால் நம் மொழியை மிகக் கூர்மையாக படைப்பாளிகள் வளர்த்திக்கொண்டு வருவதால்தான் நம் மொழியை நாம் பல்வேறு வகைப்பட்ட வளர்ந்துவரும் துறைகளுக்குப் பயன்படுத்த முடிகிறது. மகாபாரத மொழி மட்டுமே நமக்கு இருக்குமென்றால் இன்று உலகத்தில் தோன்றக்கூடிய பல கருத்தாக்கங்களை நாம் சென்றடைய முடியாது.

காலத்தின் கோலத்திற்கு ஏற்ப, விரிந்து வரக்கூடிய அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப, புதிய துறைகளின் அறிமுகத்திற்கு ஏற்ப, நம்முடைய புத்தகங்கள் நம்மளவில் கடினமாகிக் கொண்டு போகக்கூடிய வாய்ப்புகள் மிகுதியாக இருக்கின்றன. இதையும் ஒரு தவிர்க்க முடியாத விதியாகக் கொள்ள வேண்டும். அந்தப் புத்தகங்களிடம் நமக்கு உள்ள உறவை மேலும் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த உறவுகளை நல்ல முறையில் நாம் பேண வேண்டும். கடினமான புத்தகங்களை நாம் படித்து அதிலுள்ள சாராம்சங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும் என்றால் இதற்கு முன்னால் நமக்கு இலக்கியத்திலிருந்து கிடைக்காத ஒருவகை அனுபவம், ஒரு பேரனுபவம், அனுபவத்தின் ஒரு புதிய பரிணாமம் அந்தப் புத்தகங்களிலிருந்து நமக்குக் கிடைக்கும். அந்த வாய்ப்பைக் கடினம் என்று சொல்லி நாம் இழந்து விடக்கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய இதழான காலச்சுவடு உங்களால் போதிய அளவுக்குப் படிக்க முடியாமல் இருக்கிறது என்றால் இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று அதை எழுதக்கூடியவர்கள் போதிய அளவுக்கு எளிமையாகச் சொல்லத் தெரியாதவர்களாக இருக்கலாம். அல்லது அவர்கள் சொல்லுகிற விஷயங்களைச் சார்ந்து உங்களுக்கு முன் பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம். இந்த காரணங்களைச் சார்ந்து அது கடினமாக அமையும். ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்கள் சார்ந்து உங்களுக்கு பழக்கம் இருக்குமேயென்றால் அதில் வரக்கூடிய கட்டுரைகளை நீங்கள் புரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு இருக்கும். அப்படி உங்களுக்கு பழக்கம் இருந்தும் அந்த கட்டுரைகளோ அல்லது கவிதைகளோ உங்களுக்குப் புரியவில்லை என்றால் அது அநேகமாக சொல்லியவர்களுடைய குறையாகக் கருதலாம். இரண்டு வாய்ப்புகளும் இருக்கின்றன.

ஒருவன் படிப்பினால்தான் நிறைவான வாழ்க்கையை அடைய முடியுமா ? இன்றைய காலகட்டத்தில் படிப்பிற்கு நேரம் ஒதுக்குவது என்பது முடியாத செயலாக இருக்கிறதே.

வாசிப்பு என்பது முக்கியமான ஒன்று என்று சொன்னேன். ஆனால் அதை ஒரு கட்டாயமான விதியாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை. அது முக்கியமாக ஒரு தவிர்க்க முடியாத விதி அல்ல. நீங்கள் படிக்கலாம். படிக்காமல் கூட இருக்கலாம். படிக்காமலேயே நிறைவான வாழ்க்கை வாழ்ந்த பல்வேறு நபர்களை எனக்குத் தெரியும். எந்த ஒரு புத்தகத்தையும் படிக்காமல் - ஒரு தினசரியைக் கூடப் படிக்காமல் - சந்தோஷமான நிறைவான வாழ்க்கையை தங்களவில் வாழ்ந்தவர்களை எனக்குத் தெரியும். ஆனால், இன்றைய வாழ்க்கையை வாழ்க்கையின் வேறு பரிமாணங்களைப் புத்தகங்களின்றி நாம் எதிர்கொள்ள முடியாதோ என்ற சந்தேகம் எனக்குப் பலமாக இருக்கின்றது.

நேரம் ஒதுக்குவது என்பது உங்கள் ஆர்வங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். நாம் பல்வேறு துறைகளைப் பற்றிப் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இலக்கியம் என்று எடுத்துக் கொண்டால் நமக்கு நேரம் இல்லாமல் போகலாம். ஆனால் அதைவிட மிக முக்கியத்துவம் குறைந்த பல்வேறுபட்ட விஷயங்களுக்கு நேரம் செலவிட வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது அரசாங்கத்துக்கும் உங்களுக்குமான உறவுகள் சார்ந்த காரியங்கள், நீங்கள் பணியாற்றும் நிறுவனங்களின் உறவைச் சார்ந்த காரியங்கள், உங்கள் உறவுகளைத் திருப்திப்படுத்துவதற்காக நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள், உங்கள் குடும்பத்தைத் திருப்திப்படுத்துவதற்காக நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள், உங்கள் நண்பர்களைத் திருப்திப்படுத்துவதற்காக நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் - இப்படி எண்ணற்ற காரியங்களில் நீங்கள் பொழுதைச் செலவழித்துக் கொண்டிருக்கிறீர்கள். இவற்றில் ஒரு பொழுதை மிச்சப்படுத்தி நீங்கள் விரும்பக்கூடிய மிக உன்னதமான புத்தகங்களைப் படிக்க முடிந்தால் அந்த அளவுக்கு வாழ்க்கைப் பார்வை விரிவடையும் என்று நம்புகிறேன்.

இந்த நூற்றாண்டில் தமிழில் மிகச்சிறந்த கலைஞர்கள் யாவர் ?

இந்த நூற்றாண்டில் மிகச் சிறந்த கலைஞர்களாக நான் இருவரை மதிக்கிறேன். ஒருவர் பாரதி. மற்றொருவர் புதுமைப்பித்தன். இவர்களின் புத்தகங்களையேனும் மாணவர்கள் முழுமையாகப் படிக்க வேண்டும். இந்த அனுபவங்களுக்கு அவர்கள் ஆளானால் அதுவே பெரிய விஷயம். ஒரு முக்கியமான விஷயம். இதை ஆரம்பமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்டுள்ள முக்கியமான மற்ற புத்தகங்களைப் படிக்கலாம். சிறந்த புத்தகங்கள் ஏராளமாகத் தமிழில் இருக்கின்றன. அவற்றை நீங்கள் படித்துப் பார்ப்பது அவசியமென்று நம்புகிறேன். இந்த நூற்றாண்டைச் சேர்ந்த நூறு புத்தகங்களையேனும் குறைந்தபட்சம் படிக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு மாணவிக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இருக்கிறது என்று நினைக்கிறேன். அந்தப் புத்தகங்களை நீங்கள் சுலபமாகப் பெற்றுக் கொள்ள முடியும். பெரும்பான்மையான புத்தகங்கள் உங்கள் நூல் நிலையங்களில் இருக்கக் கூடியவைதான். எந்தவிதமான கஷ்டத்துக்கும் நம்மை ஆட்படுத்தாமல் மிகப் பெரிய செல்வங்கள் நம்மை வந்தடையக்கூடிய ஒரு வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். அந்த வாய்ப்பை நாம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

படைப்பாளிகளில் இரண்டாந்தர படைப்பாளியை எந்த அளவுகோலை வைத்து மதிப்பிடுகிறீர்கள் ?

இப்போது பல்வேறு வகைப்பட்ட அளவுகோல்கள் இருக்கின்றன. முக்கியமாக ஒரு அளவுகோல் ஒரு படைப்புக்கும் காலத்துக்குமான உறவு. ஒரு எழுத்தாளன் அவனுடைய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளன் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நவீன மனிதனாக இருக்க வேண்டும். அவனது உடல் இன்று வாழ்கிறது என்ற காரணத்திற்காக அவனை இந்த நூற்றாண்டு மனிதனாகக் கருதி, கருத்துலகம் சார்ந்து, அனுபவ உலகம் சார்ந்து கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.

இன்று வந்து கொண்டிருக்கிற பெரும்பான்மையான புத்தகங்களும் படைப்புக்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருக்க வேண்டியவை. ஆக ஒரு படைப்பாளிக்கும் இந்த காலத்திற்கும் இருக்கக்கூடிய உறவு நிலை காலத்தால் அவன் பெற்ற பாதிப்புகள், அந்தப் பாதிப்புகள் மூலம் தன்னை நவீன மனிதனாக அவன் உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நிறைவு, இவைதான் படைப்புக்கு அடிப்படையான கூறுகள் என்று நினைக்கிறேன். இதைச் சார்ந்து பல்வேறுபட்ட கூறுகள் இருக்கின்றன. மொழியை அவன் எப்படிப் பயன்படுத்துகிறான் ? சிக்கனமாகப் பயன்படுத்துகிறானா ? மொழியை விரயம் செய்கிறானா ? மிகப்பெரிய அனுபவங்களை அவனால் அறிய முடிகிறதா ? பல்வேறுபட்ட அர்த்தப் பரிமாணங்களை அந்த படைப்புக்களால் தர முடிகிறதா ? உண்மையென்று முற்றாக நம்பக்கூடிய, நம்பச் செய்துவிடக்கூடிய ஒரு கற்பனை வளத்தை அவன் கொண்டிருக்கிறானா ? மீண்டும் மீண்டும் அந்தப் படைப்பை அணுக வேண்டும் என்ற வற்புறுத்தல் அந்த படைப்பு நமக்குத் தருகிறதா ? நம்முடைய கவனத்தை முழுமையாக அந்தப் படைப்புக் கேட்டு நிற்கிறதா ? அல்லது அரைத் தூக்கத்திலேயே அந்தப் படைப்பைப் படிக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கிறதா ? என்பது போன்ற பல்வேறுபட்ட அளவுகளை வைத்து உயர்ந்த படைப்புக்கும் இரண்டாம் பட்சப் படைப்புக்குமான வேற்றுமைகளைக் கண்டு கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

^^^^

Mar 17, 2012

ஒரு புளியமரத்தின் கதை-முன்னுரை- சுந்தர ராமசாமி

முதல் பதிப்பின் முன்னுரை

இது என்னுடைய முதல் நாவல்.

நண்பர் ஸ்ரீ விஜயபாஸ்கரன் சரஸ்வதிக்கு ஒரு தொடர்கதை வேண்டு மென்று கேட்டார். 1959இல் நாவலாக எழுதிவிடலாம் என்று நான் நம்பிய கரு ஒன்று அப்போது என் மனசில் ஊசலாடிக்கொண்டிருந்தது. ஒப்புக்கொண்டேன். நாலைந்து அத்தியாயங்கள் வெளிவந்ததும் சரஸ்வதி தளர்ந்துவிட்டது. கையோடு அப்போதே இந்த நாவலை எழுதி முடித்திருக்கலாம்.sura20 எழுதியிருந்தால் அன்றே புத்தக உருவம் பெற்றிருக்கவும் கூடும். இதற்குள் - ஏழு வருடங்களில் - முதல் பதிப்பு ஆயிரம் பிரதிகள் விற்று முடிந்திருந்தால்கூட ஆச்சரியப்படுவதிற் கில்லை. எத்தனையோ  வாசகர்கள் என் எழுத்தை விரும்பிப் படித்துத் தான் வருகிறார்கள். ஏனோ அப்போது எழுதி முடிக்கவில்லை. அதனால் விசேஷ நஷ்டம் ஒன்றுமில்லையென்று இப்போது சமாதானப் பட்டுக் கொள்கிறேன். 1959இல் எனக்கு வயது 28. இப்போது 35. ராஜம் அய்யர், கமலாம்பாள் சரித்திரத்தைச் சிறுவயதில்தான் எழுதினார். அந்நாவலின் குறைகள் இன்று விமர்சகர்களால் எடுத்துக் காட்டப்பட்டு வருகின்றன. வயோதிகத்தில் எழுதப்பட்ட தரமற்ற படைப்புகளுக்கு நம் மொழியில் மட்டுமல்ல, உலக மொழிகளிலும் உதாரணங்கள் சொல்லலாம்..

தமிழ் இலக்கியத்தின் நாவல் மரபைத் திசைதிருப்பிவிட வேண்டு மென்றோ, உரு, உத்தி இத்யாதிகளில் மேல்நாட்டுக் களஞ்சியத்திலிருந்து கொஞ்சம் கொள்ளையடித்துத்தான் தீருவது என்று ஆசைப்பட்டோ, திட்டம் வகுத்தோ எழுதிய நாவல் அல்ல இது. தமிழ் அன்னைக்கு இதோ ஒரு புதிய ஆபரணம் என்று எண்ணியும் இதை எழுதவில்லை. எந்தக் கலைஞனும் தன் மொழியில் இல்லாததைத் தேடி அளிக்கவோ, இடைவெளிகளை நிரப்பவோ, இலக்கிய வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கவோ, மொழிக்குச் செழுமை யூட்டவோ எழுதுவதில்லை. நவநவமாய் ஆபரணங்களைச் செய்து அன்னையின் கழுத்தில் சூட்டுவது அல்ல, தன் கழுத்திலேயே மாட்டிக்கொண்டு அழகு பார்க்கவே அவனுக்கு ஆசை. கலைஞனின் சமூகப் பொறுப்புகளும் பொதுநல உணர்ச்சிகளும் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டுவிட்ட காலம் இது. அவன் எந்த அளவுக்குச் சுயநலக்காரன், திமிர்பிடித்தவன், அரசாங்க அமைப்பின் எதிரி, அனைவரையும் திரணமென மதிக்கும் அகங்காரி, சகோதரத் தொழிலாளிகள்மீது தீராத பொறாமை உணர்ச்சியை அடைகாத்து வருபவன், சிலவேளைகளில் எப்படி மனிதனிலும் கடைமனிதன் அவன் - இவை எல்லாம் மறந்துவிட்ட பாவனை காட்டும் காலம் இது. வெகுளிகளில் அவன் அக்கிரகண்ணியன். அவனால் சொந்தம் பாராட்ட முடியாத அர்ச்சனைகள் சொரியப்படுகிறபோது அதையும் அவன் கேட்டுக்கொண்டுதான் இருப்பான். ஆமோதிக்க, உண்மை உணர்ச்சி அவனை உறுத்தும். மறுக்க, அவனுடைய புகழாசை விடாது. விமர்சகர்களுக்கு வேட்டைதான். காண ஆசைப் படுவதையெல்லாம் கண்டுவிட்டதாகவே சொல்லிவிடலாம். ஆட்சேபணை இல்லை.

எழுத்தாளனும் ஒரு கலைஞன். தன் எழுத்து எவ்வாறு பிறர் படித்து ரசிக்கும்படியாக அமைந்துவிடுகிறது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தத்தளிக்கும் அப்பாவி அவன். அவன் வாழ்கிற காலத்தின் ஜீவரசம் அவனுள் ஓடிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய பொறி களுக்கு வசப்பட்ட வாழ்க்கையின் கோலத்தை எழுதுவதிலும், எழுதாமல் விடுவதிலும், அதன் அடுக்கிலும், தேர்விலும், அழுத்தத்திலும், முடிப்பிலும் அவனுடைய ரத்த நம்பிக்கைகள் துளிர்க்கின்றன. வைஷ்ணவன் நெற்றியில் நாமம் போல் டைட்டில் பக்கத்தில் அவை பொறிக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது இல்லை. பிரமாணமாக உருவாகாத சிந்தனைகளும், தீர்ப்புகளுமே படைப்பில் கசிகின்றன. விஞ்ஞான பத்ததிக்கும் தருக்க சாஸ்திர முறைக்கும் இலக்காகாத அவ்வுணர்வுகளின் தீர்ப்புகளில் முரண்பாடுகள் சகஜம்; தவிர்க்க முடியாதவை. இதற்கு நேர்மாறாக, கலையுலகில் அங்கீகரிக்கப்பட்ட தத்துவங்களுக்குத் தலையணை உறை தைப்பவன் கலைஞனே அல்ல. தெருக்கோடி கிருஸ்துவ பஜனையில் தொண்டையைக் கிழித்துக் கொள்பவனுக்கும் அவனுக்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது. கலைஞனின் படைப்பின் விளைவால் புதிய மாற்றங்கள் நிகழலாம்; மொழி செழுமை அடையலாம்; இடைவெளிகள் அடைக்கப்படலாம். இவை விளைவுகள். தலைகீழாகச் சொல்லிப் பழகிவிட்டார்கள் சமூக சாஸ்திரிகளான விமர்சகர்கள். கலைஞனின் வெகுளித்தனம் மறுக்காமல் பழகிவிட்டது.

puliayamaram

சரஸ்வதியில் புளியமரம் தொடர்கதைக்கு 15.7.59-ல் வந்த விளம்பரம்

1956 - 57 ஆண்டுகளில், சாயங்கால வேளைகளில் பள்ளி மணி அடித்துச் சில நிமிஷங்களுக்கெல்லாம் பஜாரில் தெற்கேயிருந்து ஒரு வாத்தியாரம்மா தோன்றி வடக்கே போவதை எண்ணற்ற நாட்கள் பார்த்திருக்கிறேன். அவளுடைய நடையழகு என்னை வெகுவாகக் கவர்ந்தது. தேவதூதர்கள் இருமருங்கும் நின்று அவள் பாதம்படப் பூக்கள் தூவிச் செல்வது என் கண்களுக்குத்தான் தெரிய வில்லை என்று எண்ணிக்கொள்வேன். மனசில் பதிந்துவிட்ட அவளுடைய உருவமே இந்நாவலில் செல்லத்தாயின் உருவாக அந்தர்முகமாய் நின்று தொழில்பட்டிருக்கிறது என்ற உண்மை சமீபத்தில் ஒருநாள் ஏதோ ஒரு நிமிஷத்தில் என் மனசில் பளிச் சிட்டது. அவளுக்கும் செல்லத்தாயிக்கும் ஒட்டும் உறவும் இல்லை தான். இருந்தாலும் விஷயம் உண்மை.

இந்நாவலின் கதாபாத்திரங்களில் பெண்கள் மிகக் குறைவு. நம் தேச ஜனத்தொகையில் பெண்களுக்குரிய வீதாசாரமான பிரதிநிதித் துவம் ஏகதேசமாய்க்கூட இந்நாவலில் அளிக்கப்படவில்லை. ஏதோ அவ்வாறு நிகழ்ந்துவிட்டது. உண்மையில் ஒரு பெண் கதாபாத்தி ரத்திற்கு நிறையப் பங்கு அளிக்கவே உத்தேசித்திருந்தேன். 1958இல் எங்கள் ஊரில் நான் விரும்பும் நாவலாசிரியர் ஒருவர் வந்து தங்கியிருந்தார். நானும் என் இலக்கிய நண்பரும் வெகு நேரம் ஆசை யோடு அவருடன் பேசிக்கொண்டிருப்போம். பேச்சு அலுப்புற்ற வேளைகளில் அந்த ஓட்டலின் இரண்டாவது மாடியில் நின்று பஜார் இயக்கங்களை வேடிக்கை பார்த்தபடி இருப்போம். அங்கிருந்து நேராகக் கீழே பார்த்தால் சினிமா தியேட்டரை ஒட்டிப் பொரி கடலைக்காரி ஒருத்தி உட்கார்ந்துகொண்டிருப்பது தெரியும். மேலே இருந்து பார்க்கையில் முறத்தில் பொரிகடலைக் குவியல்மீது அவளுடைய சிரம் வெட்டி வைக்கப்பட்டிருப்பது போல் தெரியும். இந்தக் கோணத்தில் பார்க்க நேர்ந்ததால் அவள் என் மனசில் இடம் பெற்றாள். கொழகொழவென்று வெற்றிலைச் சாறு தளும்பும் வாயுடன், தலையில் கனகாம்பர மூட்டையுடன், பெரிய பொட்டு டன், மலிவான அலங்காரங்களுடன், செயற்கைக் கவர்ச்சிகளுடன், ‘இது என் தொழில் அல்ல; உப தொழில்’ எனப் போடாமல் போடும் கோஷத்துடன், சிரிப்பும் வசையுமாக, கண்களால் ஆண்மையை அவ்வப்போது சீண்டியபடி இருப்பாள். அவளுக்கு இந்நாவலில் முக்கிய பங்கு அளிக்கவேண்டுமென்று எண்ணியிருந்தேன். ஒரு அத்தியாயத்தில் அவளை அறிமுகப்படுத்தியும் வைத் தேன். கூலி ஐயப்பனின் காதலியாகவோ, சகோதரியாகவோ, மாமியாராகவோ பின்னால் வளர்த்திக்கொண்டு வரவேண்டு மென்று யோசித்திருந்தேன். அடித்துத் திருத்திக் கிழித்துப்போட்டுத் திரும்ப எழுதிய பக்கங்களின் அவஸ்தையில் அவள் எப்போது நழுவி வெளியே விழுந்தாள் என்பதே தெரியவில்லை.

இது என்னுடைய முதல் நாவல்.

நாவல் துறைக்கு இந்நாவல்வழி நான் அறிமுகமாக நேர்ந்தது எனக்கு ஏதேதோ வகைகளில் திருப்தியைத் தருகிறது.

படித்துப் பாருங்கள். இந்த நாவல் உங்களுக்குப் பிடிக்கலாம். பிடிக்காமலும் இருக்கலாம். சில நாவல்கள் நன்றாக இருக்கும். சில நாவல்கள் நன்றாய் இராது.

நான் இதைவிடவும் விரும்பும் நாவல் ஒன்றைப் பின்னால் எழுதக் கூடுமென்று தோன்றுகிறது.

நாகர்கோயில் சுந்தர ராமசாமி

23 ஜூன் 1966

Mar 10, 2012

நினைவோடை: க. நா. சுப்ரமணியம் – சுந்தர ராமசாமி

நினைவோடை: க. நா. சுப்ரமணியம் – சுந்தர ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்

1954ல் என்று நினைக் கிறேன், க. நா. சு. வை முதன்முதலாகத் திருவனந்தபுரத்தில் சந்தித்தேன். திருவனந்தபுரத்திற்குக் க. நா. சு. வந்திருக்கும் செய்தி எனக்கும் கிருஷ்ணன் நம்பிக்கும் கிடைத்திருந்தது. யார் மூலமாக என்பது ஞாபகத்தில் இல்லை.

நம்பி, ‘நாம் ரெண்டு பேரும் போய் க. நா. சுவைப் பார்த்துவிட்டு வருவோம்’ என்றுசொல்லிக்கொண்டேயிருந்தான். நம்பிக்கு நானும் கூட இருந்தால் ஆதரவாக இருக்கும், தைரியமாகப் போய்ப் பார்க்க முடியும் என்ற எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில் என்னால்  அவனுடன் போக kanasuமுடியவில்லை. உடம்புக்கு முடியாமல் வீட்டில் அடைந்து கிடக்கும் நான் அடிக்கடி திருவனந்தபுரம், மதுரை என்று புறப்பட்டுப் போவதைப் பார்த்து என் அப்பா இவனுக்கு ஒரு வியாதியும் கிடையாது. வீட்டில் கொஞ்ச நாள் இருக்கமாட்டான். எங்கையாவது புறப்பட்டுப் போய்விடுகிறான். பிரயாணம்தான் எல்லாத்துக்கும் காரணம் என்று தீர்மானமாகச் சொல்லிவிடுவார். இதையெல்லாம் கேட்டுக்கேட்டு அலுத்துப்போயிருந்த நான் நம்பி கூப்பிட்ட போது, ‘நீ போயிட்டு வா . . . ரொம்ப எளிமையான ஆளாகத்தான் இருப்பார்’ என்று சொன்னேன்.

‘இல்லை, எனக்குப் பயமாக இருக்கு. ரொம்பப் படிச்சவரா இருக்காரே’ என்றான் நம்பி.

‘ரொம்பப் படிச்சவர்ங்கறதுனால பயப்படணும்னு இல்லை. படிக்காதவர்களும் பயமுறுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். நீ தைரியமாகப் போய்ப் பாரு. கொஞ்ச நாள்லயே நானும் வந்துடறேன். ரெண்டாவது தடவை நாம வசதியாகப் போக முடியும்’னு சொன்னேன்.

க. நா. சுவிடம் கல்லூரியில் பேச வரும்படிச் சொன்னபோது, ‘கூட்டத்துக்கெல்லாம் வர்றேன். உங்க கூடவும் நிறைய நேரம் பேச முடியும் இல்லையா. மத்ததெல்லாம் இரண்டாம்பட்சமானதுதான்’ என்றார். கடைசியாக ஸ்காட் கிறித்துவக் கல்லூரி ஆங்கிலத்துறை சார்பாக ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு பண்ணினோம். அங்கிருந்த பேராசிரியர் க. நா. சுப்ரமணியம் என்ற பெயரைக் கேள்விப்பட்டதேயில்லை. தமிழ் இலக்கியத்தில் பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு அவருக்கு யார் பெயருமே தெரிந்திருக்கவில்லை. எனக்கு அப்போது எப்படியோ க. நா. சு, ஹிண்டு தினசரியில் மதிப்புரை எழுதும் விஷயம் நினைவுக்கு வந்தது.K.N. Subramaniam என்ற பெயரில் எழுதினார். நானே கிட்டத்தட்ட பத்து மதிப்புரைகள் படித்திருக்கிறேன். அதைச் சொன்னதும் ‘ஓ . . . K.N.S. ஆ . . . அதை முதல்லயே சொல்லக்கூடாதா? நன்றாகத் தெரியுமே. கண்டிப்பாகக் கூப்பிட்டுவிடலாம். பிரின்சிபாலுக்குக்கூட நன்றாகத் தெரியுமே’ என்றார். ஹிண்டு வில் எழுதுவதென்றால் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்று என்னைவிட க. நா. சுவைப் புகழ ஆரம்பித்து விட்டார். பி. ஏ., எம். ஏ. படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் தகவல் தெரிவித்து ஒரு நாள் நிச்சயித்து அதைக் க. நா. சுவுக்குத் தெரிவித்தோம்.

அவர் வருவதை உறுதி செய்ய மீண்டும் ஒரு கடிதம் எழுதினோம். கூட்டம் நடக்க இருக்கும் நாளன்று பேராசிரியர் பஸ் ஸ்டாண்டுக்குப் போய் அவரைக் காரில் அழைத்துக் கொண்டு வருவதாக முடிவு செய்யப்பட்டது. கல்லூரிக்குப் போனபோது ஒரு மாணவன், ‘K.N.S. வந்தாச்சு. அவரைப் பேராசிரியர் சாப்பிட அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்’ என்றான். கொஞ்ச நேரத்தில் அவர் வந்து சேர்ந்தார். வராண்டாவில் நின்று பேச ஆரம்பித்தார். ஒரு கூட்டத்துக்குப் பேச வந்திருக்கிறோம்; உள்ளே பேராசிரியர்கள், மாணவர்கள் நமக்காகக் காத்துக்கொண்டிருப்பார்கள்; தலைமை தாங்க வந்த ஒருவர் காத்துக்கொண்டிருப்பார் என்பதெல்லாவற்றையும் மறந்துவிட்டவர்போல கூட்டம் நடந்த திசையைப் பார்க்காமல் எதிர்த்திசையைப் பார்த்தபடி அவர்பாட்டுக்கு எங்களுடன் பேசிக்கொண்டேயிருந்தார். அவராகப் பேச்சை முடித்துவிட்டு வருவார் என்று மரியாதை காரணமாக அவர்கள் மேடையில் காத்துக்கொண்டிருந்தார்கள். இவரோ பேச்சை நிறுத்திவிட்டுப் போவதாகத் தெரியவில்லை. எனவே ஒரு பேராசிரியர் மெதுவாக வந்து, ‘கூட்டத்தை ஆரம்பிச்சுட லாமே . . . நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது. வர்ரீங்களா . . .’ என்றார். அப்புறம்தான் அவர் புறப்பட்டுப் போனார். ரொம்பத் தெரியும் என்று சொன்ன அந்தப் பேராசிரியர் க. நா. சுவின் பெயரை அன்று தப்பாக உச்சரித்தார். கே. என். எஸ். சுப்பிரமணியம் என்று பல தடவை சொன்னார். அது எனக்கு ரொம்ப ஏமாற்றமாகவும் கஷ்டமாகவும் இருந்தது. க. நா. சுவாவது எழுந்து தன் பெயரைத் திருத்துவார் என்று எதிர்பார்த்தோம். அவர் பாட்டுக்கு உட்கார்ந்துகொண்டிருந்தார். எப்படியும் சொல்லிட்டுப் போறார். நமக்கென்ன? என்பதுபோல் உட்கார்ந்துகொண்டிருந்தார். கீழேதான் உட்கார்ந்துகொண்டிருந்தார். பேசுவதற்கு முன்னால் மேடைக்குப் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அறிமுகம் முடிந்ததும் பேசக் கூப்பிட்டார்கள். மேடையில் போய் நின்றார். தமிழ்கூட அவருக்குப் பிரச்சினையாக இருக்கலாம். ஆங்கிலம் சரளமாகப் பேசுவார் என்ற கற்பனை எங்கள் மனதில் இருந்தது. ஆனால் அவரால் சரிவரப் பேச முடிந்திருக்கவில்லை. சுற்றிச் சுற்றி வந்தார். நிறைய ஆங்கில வாக்கியங்களை உருவாக்கவே முடியவில்லை. ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அவர் பேசும்போது பாதியில் நிறுத்தும் இடங்களில் நாங்கள்கூட மனதிற்குள் மீதி வாக்கியத்தைப் பூர்த்தி செய்துகொண்டோம். அந்த வாக்கியங்களைக் கூட அவரால் பேச முடியவில்லை. தமிழ்க் கலாச்சாரம், தமிழ்க் கல்லூரிப் பேராசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது பற்றிய விமர்சனபூர்வமான பேச்சுதான். ஆனால் அவை பேராசிரியர்களைச் சென்றடைய முடியாத விதத்தில் சொல்லும் முறை தடையாக இருந்தது.

கூட்டம் ஏற்பாடு செய்திருந்த ஆங்கிலப் பேராசிரியர் தலைமை தாங்க தமிழ்த்துறைத் தலைவரை அழைத்திருந்தார். ஆங்கிலப் பேராசிரியருக்குத் தெரிந்த அளவுக்குக்கூட தமிழ்த் sura14 (1)துறைத்தலைவருக்கு க. நா. சுவைப் பற்றித் தெரியாது. ஆனால் க. நா. சு., தமிழ் இலக்கியம் பற்றி, தமிழ்க் கலாச்சாரம் பற்றி ஏதோ விமர்சனம் செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டிருந்தார். பொதுவாக விருந்தினரைப் பேசக் கூப்பிட்டால் அவர்களைப் பாராட்டித்தான் பேசுவார்கள். யாரும் விமர்சனம் செய்ய மாட்டார்கள். ஆனால் தமிழ்த்துறைத் தலைவர் ரொம்பவும் உணர்ச்சி வ சப்படக்கூடியவராக இருந்தார். எனவே எடுத்த எடுப்பிலேயே விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார். க. நா. சு. மேற்கத்திய சிந்தனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய கருத்துக்களுடன் நான் உடன்பட முடியாது என்று சொன்னார். உடனே க. நா. சு. எழுந்து - அவர் அப்படிச் செய்வார் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவேயில்லை - ‘என்னைப் பாருங்கள். ஒரு பழங்காலத்து வேட்டியும் பழைய சட்டையும் அணிந்து கொண்டிருக்கிறேன். பேராசிரியரையும் பாருங்கள், சூட் போட்டுக்கொண்டிருக்கிறார், கோட் போட்டுக் கொண்டிருக்கிறார். இவர் சொல்லும் விஷயங்களும் இப்படித்தான் இருக்கும்’ என்று சொல்லிவிட்டு உட்கார்ந்துவிட்டார்.

கூட்டம் ஒருவழியாக முடிந்தது. எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு வெட்க உணர்ச்சி ஏற்பட்டிருந்தது. எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது என்பது க. நா. சுவுக்குத் தெரிந்து விட்டிருந்தது. ‘இதெல்லாம் இப்படித்தான் இருக்கும். அதுக்கென்ன’ என்றார். ‘நான் நன்றாகப் பேசவில்லையே என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். எனக்கு இவ்வளவுதான் சொல்ல இருக்கு. நான் இங்கிலீஷ் நன்றாகப் பேசக்கூடியவன் இல்லை’ என்றார். ‘அதெல்லாம் இல்லை. நீங்கள் சொன்னவை எவ்வளவு முக்கியமானவை’ என்றோம். எங்கள் வீட்டுக்கு வந்தார். நாலைந்து மணிநேரம் இருந்தார். அப்போது என் வீட்டில் ஏதோ ஒரு function.என்ன என்று ஞாபகம் இல்லை.

அவரிடம் ஒரு சின்னப் பெட்டி மட்டுமே இருந்தது. வேறெதுவும் கிடையாது. அவரிடம் இருக்கும் ஆடைகளும் குறைவு. அதைத் தூக்கிக்கொண்டு போய்விடுவார். அந்தப் பெட்டியை அறையிலேயே வைத்துவிட்டுப் போங்கள் என்று நாங்கள் சொல்லவும் முடியாது. அவர் திரும்பி வராமலேயே போய்விடுவார். போய்விட்டார் என்றால் அவரிடமிருந்து ஒரு கடுதாசிகூட வராது. அவருடைய சுபாவம் அப்படி. அவர் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பதற்குக்கூட ஒரு பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டி வரும். இப்படிப்பட்டவர் எங்கே வராமல் போய்விடுவாரோ என்று மனதுக்குள் ஒரு பயம் இருந்து கொண்டேயிருக்கும். ஆனால், அங்கு இருந்தபோது சாயந்திரம் வருவேன் என்று சொல்லிவிட்டுப் போனால் அநேகமாக ராத்திரியாவது வந்து சேர்ந்துவிடுவார். ரொம்ப நேரம் பஸ் ஸ்டாண்டில் காத்துக்கொண்டிருப்போம். வரவில்லை என்றதும் சலித்துப் போய் லாட்ஜ்க்குப் போவோம். நான்காவது மாடியில் ஆள் நடமாட்டமில்லாத படிகளில் உட்கார்ந்துகொண்டிருப்போம். அவர் வருவார். அறையைத் திறந்துகொண்டு உள்ளே போனதுமே பேச ஆரம்பித்துவிடுவோம்.

எத்தனை மாதங்கள் நாகர்கோவிலில் இருந்தார் என்பது திட்டவட்டமாக ஞாபகம் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ஒரு வாரம், பத்து நாள் இருந்துவிட்டுப் போகிறேன் என்று சொன்னவர் குறைந்தது இரண்டு மாதத்திற்கு மேல் இருந்தார் என்பது மட்டும் நினைவிருக்கிறது. இதில் நடுவில் மூன்று நான்கு தடவை திருவனந்தபுரம் போய்விட்டு வந்திருந் தார்.அவரை நிறைய இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஆசைப்பட்டோம். ஆனால், அவருக்கு அதில் ஆர்வம் இருக்கவில்லை. ஒரு தடவையோ, இரண்டு தடவையோ கன்னியாகுமரிக்குப் போயிருந்தோம். அன்று கன்னியாகுமரி உண்மையிலேயே அற்புதமான இடமாக இருந்தது. கடற்கரை ஓரமாகப் போய்க்கொண்டே இருந்தால் ஒரு மணல் குன்று வரும். அந்த மணல் குன்றிற்கு மேலே ஏறிப்போய் உட்கார்ந்து கொண்டால் ரொம்ப அருமையான காற்று வீசும். பெரும்பாலும் சாயந்திரம் அந்த இடத்தில் கூட்டமே இருக்காது. பெண்கள் எல்லாம் அந்த இடத்திற்கு வரமாட்டார்கள். முன் பக்கம் வந்து பார்த்துவிட்டுக் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பி விடுவார்கள். இப்போது அந்த விஷயங்கள் எல்லாம் பார்க்க முடியாமல் போய்விட்டது. அந்தக் குன்றே தரையோடு தரையாக ஆகிவிட்டது. கரைக்கும் கடலுக்கும் நடுவில் ஒரு பெரிய கல்சுவரை எழுப்பியிருக்கிறார்கள். அதைப் பார்ப்பதற்கு ரொம்பக் கொடுமையாக இருக்கிறது. கடல் அரிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக அறிவு பூர்வமாக யோசித்து அவர்கள் அதைக் கட்டியிருக்கலாம். அதன் மூலம் கடற்கரை அரிப்புக்கு ஆளாகாமல் காப்பாற்றப்படவும் செய்யலாம். ஆனால் கடல் சம்பந்தப்பட்ட ஒரு விகாசம், அதனுடைய அழகு, அடிவானம் வரையில் பார்வையைச் சுழலவிடும்போது ஏற்படும் உணர்வு இவற்றையெல்லாம் எப்படியோ அந்தக் கல்சுவர் நாசம் செய்து விடுகிறது. கல்சுவர் கட்டினதுக்கு அப்புறம் கன்னியாகுமரிக்கு நான் போகவே இல்லை. அதுக்கு முன்னால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் கன்னியாகுமரிக்குப் போவேன். உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ, உறவினர்கள் யாராவது வந்தாலோ போகாமல் இருந்திருப்பேனே தவிர வருடத்திற்குக் குறைந்தது ஐம்பது தடவையாவது போவேன். அலுப்பே இல்லாமல் போய்வருவேன்.

எங்கள் ஊர்ப்பக்கம் சின்னதாக, இனிப்பாக ஒரு வாழைப் பழம் இருக்கும். அதுக்கு மட்டிப்பழம் என்று பெயர். க. நா. சு. அதை விரும்பிச் சாப்பிடுவார். அதிகமாகச்சாப்பிடமாட்டார், ஒன்று இரண்டு சாப்பிடுவார். அவருக்கு இவற்றையெல்லாம் விட காஃபி டிபன்தான் ரொம்பப் பிடிக்கும். காலையில் டிபன் சாப்பிட்ட விஷயம், இரவில் டிபன் சாப்பிட்ட விஷயம் எல்லாவற்றையும் எங்களிடம் ஆர்வமாகச் சொல்லுவார். இந்தப் பக்கம் கோட்டாறுவரை அந்தப் பக்கம் பார்வதிபுரம்வரை கிட்டத்தட்ட ஐந்து மைல் சுற்று வட்டாரத்தில் அவர் சாப்பிடாத ஹோட்டலே கிடையாது என்று சொல்லலாம். எங்களுக்குத் தெரியாத இருபத்தைந்து முப்பது ஹோட்டல்களில் அவர் சாப்பிட்டிருப்பார். தினமும் புதுப் புதுப் பெயராகச் சொல்லுவார். ரசவடை அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. பீம விலாஸில் இன்னிக்கு ரசவடை ரொம்ப நன்னா இருந்தது என்பார். காலையில் என்ன சாப்பிட்டேன், ராத்திரி என்ன சாப்பிட்டேன் என்று சொல்லியிருக்கிறாரே தவிர, மத்தியானச் சாப்பாடு பற்றி அவர் எதுவுமே எங்களிடம் சொன்னது கிடையாது. அந்த ரகசியத்தைத் துப்பறிய வேண்டும் என்று நானும் நம்பியும் நேரம் மாத்தி மாத்திப் போயிருக்கோம். நீங்க சாப்பிட்டாச்சா என்று கேட்க ஏதோ காரணத்தினால் கூச்சமா இருந்தது. மத்தியானச் சாப்பாட்டை அவர் ‘ஸ்கிப்’ பண்ணறாரோ என்ற சந்தேகமும் இருந்தது. அவருக்குச் சோறு பிடிக்காது என்பது ஒரு புறம் இருக்க அவரிடம் காசு இல்லையோ என்றும் தோன்றும். நானும் நம்பியும் அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வீட்டிலிருந்து ஏதாவது எடுத்துக் கொண்டு போய்விடுவோம். அவருக்கு அதில் சந்தோஷம் இருக்கிற மாதிரியும் தெரியாது. சாப்பிடுவார். நாங்களும் அவருடன் உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவோம். இதெல்லாம் ரொம்பக் குறைவான தடவைகள் தான் நடந்திருக்கும்.

க. நா. சுவிடமிருந்த இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவருக்கு இந்திய இலக்கியத்தில் நல்ல பரிச்சயம் இருந்தது. ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு இவற்றில் வெளியான படைப்புகளை அவை ஆங்கிலத்தில் வந்திருந்தாலும் சரி, தமிழில் வந்திருந்தாலும் சரி, அவர் படித்திருந்தார். நாங்கள் அப்போது அதுமாதிரியான புத்தகங்கள் நாலோ ஐந்தோதான் படித்திருந்தோம். எங்களுக்கு அறிமுகமாகியிருந்த உலகம் மிகவும் சின்னதாக இருந்தது. அதுபோல் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருப்பதை அவர்தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அந்தப் புத்தகங்கள் எல்லாம் எங்கே கிடைக்கும் என்று கேட்டபோது, ‘அதையெல்லாம் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். புத்தகம் நம்மைத் தேடி வருமா? அதைத் தேடுவதே பெரிய சுவாரஸ்யமான விஷயம்’ என்பார். அவர் சொல்வதைப் பார்த்தால் எந்தப் புத்தகமும் சீக்கிரமாகக் கிடைத்துவிடக்கூடாது; தேடித் தேடி அலைந்து திரிந்த பிறகுதான் கிடைக்கவேண்டும் என்று ஒரு விதி இருப்பதுபோல் தோன்றும். அப்படி ஒரு பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம். அப்படியே செய்தும் வந்தோம். நம்பியின் மறைவு வரையிலும் இந்தத் தேடல் தீவிரமாக நடந்தது.

பாரதி பற்றி அவரிடம் ஒரு மௌனம் இருந்தது. பாரதியைக் குறை சொல்லி எதுவும் எழுதினதும் இல்லை சொன்னதும் இல்லை. அதுபோல் பாரதியைப் பாராட்டி எதுவும் சொன்னதும் இல்லை, எழுதினதும் இல்லை. அவருக்கு 18-19ம் நூற் றாண்டுத் தமிழ் இலக்கியங்கள் மிகவும் பிரியமானவை. அவர் மனதிற்குள் அது பற்றி விரிவான சித்திரங்கள் இருந்தன. யார் யார் எந்தெந்தக் காலத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களது காலத்தில் சமூகச் சூழல் எப்படி இருந்தது போன்றவை பற்றித் தெரிந்து வைத்திருந்தார். ஆங்கிலக் கட்டுரைகள் எழுதுவதற்கும் அந்தத் தகவல்கள் அவருக்கு உபயோகமாக இருந்திருக்கின்றன. ராமலிங்க சுவாமிகளைப் பற்றி அடிக்கடிச் சொல்லுவார். ஜோதி ராமலிங்கம் என்றுதான் சொல்லுவார். இதுபோல் பல விஷயங்களைக் கொஞ்சம் வித்தியாசமாகச் சொல்லுவார். சின்ன வயதில் அவருக்குப் பெயர் அப்படிப் பதிந்திருக்கலாம். கடிதங்களிலும் அப்படித்தான் எழுதுவார்.

அவருடைய முக்கியமான குணமாகப் பரவலாகப் பலர் சொன்னது என்னவென்றால், ஒரு லட்ச ரூபாய் தருகிறேன்; ஒரு குறிப்பிட்ட சினிமா பற்றி விமர்சனம் கொஞ்சம் தூக்கி எழுதுங்கள் என்று யாராவது சொன்னாலும் நடக்கவே நடக்காது. அந்த ஆள் அடுத்த தடவை அவர் முகத்தில் முழிக்கவே முடியாது. ஆனால் அவராகவே ஒரு படத்தை ஆஹா ஓஹோ என்று தூக்கி எழுதுவார். அது வேற விஷயம். ‘நல்ல தம்பி’ என்ற என். எஸ். கிருஷ்ணனின் படத்துக்கு ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். என். எஸ். கிருஷ்ணனுக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு அந்த விமர்சனம் என்று சொல்லலாம். அந்தப் படத்தில் என். எஸ். கிருஷ்ணன் மது விலக்குப் பிரச்சாரம் செய்திருக்கிறார். அதனால் கல்கி அவரைப் பற்றி அப்படி எழுதினார் என்று சொல்வார்கள். கல்கி பற்றி அன்று எனக்கிருந்த அபிப்ராயங்கள் அவை. இதெல்லாம் க. நா. சுவிடம் சொன்னேன்.

உடனே அவர், ‘கல்கி பெரிய க்ரியேட்டிவ் எழுத்தாளர் கிடையாது. அவருக்குப் புகழ் அதிகமாக இருந்தது அவ்வளவு தான்’ என்றார்.

க. நா. சுவுக்கு ஆர். ஷண்முகசுந்தரம் பற்றி ரொம்ப உயர்வான எண்ணம் இருந்தது. ஆனால் அந்த அபிப்ராயம் கொஞ்சம் மிகையானதோ என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. அவர் நிறைய நாவல் எழுதி இருக்கிறார். நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். விற்பனை ஆகவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் பல நாவல்கள் எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் நல்ல நாவல்கள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்த காலத்திலேயே கிட்டத் தட்ட பத்து நாவல்கள் எழுதியிருக்கிறார். அவையெல்லாம் அவ்வளவு உயர்வாக இல்லை. ஒரே ஒரு நாவல் - குறு நாவல் என்று சொல்வது சரியாக இருக்கும் - எழுதியவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டுமா என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால், க. நா. சுவைக் குருவாக மதிக்கக்கூடியவர் ஷண்முக சுந்தரம். க. நா. சுவால்தான் நான் ஒரு எழுத்தாளனாக இருக்கிறேன் என்று சொல்லுவார். அதில் உண்மையும் உண்டு. அந்த அளவுக்கு அவர்மீது பக்தியும் உண்டு. இதேவிதமான பக்தி கு. அழகிரி சாமிக்கு க. நா. சு. பேரில் ஏற்பட்டது. கு. அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ தொகுதிக்கு க. நா. சு. ஹிந்து இதழில் மிகவும் சிலாகித்து எழுதிய மதிப்புரை மூலம்தான் தீவிர எழுத்தாளர்கள் / வாசகர்கள் கவனத்தைத் தான் பெற்றதாகப் பலமுறை அழகிரிசாமி என்னிடமே கூறியிருக்கிறார். க. நா. சுவுக்கு செல்லப்பா பற்றி உயர்வான அபிப்ராயம் கிடையாது. சிதம்பர சுப்பிரமணியனைப் பற்றி இருக்கும் அளவுக்குக்கூட செல்லப்பா பற்றிக் கிடையாது. ‘இதயநாதம்’ நாவல் அவருக்குப் பிடித்திருந்தது. அந்த நாவலை அவருக்குப் பிடித்திருந்தது என்று சொல்லும் போது இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்கவேண்டும். தமிழில் இருப்பவற்றில் சிறந்த நாவல் எவை என்று க. நா. சுவைக் கேட்டால் ‘நாகம்மாள்’, ‘பொய்த்தேவு’, ‘இதயநாதம்’ என்று சொல்லுவார். அவை ரொம்பச் சிறந்த நாவல்கள் என்ற அபிப்ராயம் அவருக்கே கிடையாது. இருப்பவற்றில் சிறந்தவை அவை என்றுதான் சொல்லுவார். அவ்வளவுதான்.

பிச்சமூர்த்தி மேலே அவருக்கு மதிப்பும் அக்கறையும் உண்டு. முக்கியமாக பிச்சமூர்த்தியின் இரண்டாவது ஜென்மம் இருக்கே -நீண்ட இடைவெளி விட்டு அதன்பின் அவர் எழுதத் தொடங்கிய காலம் - அதன் பின் அவர் எழுதிய கதைகள் எங்கு இருந்தாலும் தேடிப் போய்ப் படித்துவிடுவார். ஒரு தடவை கலைமகளில் பிச்சமூர்த்தியின் ஒரு கதை வெளிவந்திருப்பதாகத் தகவல் கிடைத்திருந்தது. மணிமேடையில் கேட்டபோது கிடைக்கவில்லை. நானும் நம்பியும் எங்கள் ஊரில் பூங்காவுக்குள் ஒரு நூலகம் இருக்கும் விவரத்தைப் பற்றி க. நா. சு. விடம் சொல்லியிருந்தோம். நேராக அங்கு போய்த் தேடிப்பிடித்து அதைப் படித்து விட்டார். கதை எப்படி இருக்கிறது என்று கேட்டோம். நன்றாகத்தான் இருக்கிறது என்றார். அவர் சொல்வதைப் பார்க்கும்போது பிச்சமூர்த்தி எப்போதுமே நன்றாகத்தான் எழுதுவார் என்ற தொனி இருக்கும். பரிபக்குவமான எழுத்தாளர். சில கதைகளில் எல்லாம் கூடி வரும். சில கதைகளில் அப்படிக் கூடி வந்திருக்காது. ஆனால் ஒன்றுகூட அசட்டுத்தனமாக இருக்காது என்ற நிம்மதியோடுதான் அவரைப் பற்றிப் பேசினார். பிச்சமூர்த்தியின் கதைகளில் உங்களுக்குப் பிடித்த கதை எது என்று கேட்டேன். எனக்கு ரொம்பப் பிடித்த கதை ‘காவல்’ என்றார். பிச்சமூர்த்தியின் கதைகள் முழுவதையும் படித்த பின் எனக்கும் அந்தக் கதைதான் பிடித்திருந்தது. க. நா. சுவின் அபிப்ராயங்கள் சார்ந்து பிடித்திருந்ததா, என் அபிப்ராயங்கள் சார்ந்து பிடித்திருந்ததா என்பது வேறு விஷயம். அவர் எழுதின ஆகச் சிறந்த கதை அது என்று சொல்ல முடியாவிட்டாலும் சிறந்த நாலைந்து கதைகளில் அதுவும் ஒன்று என்று சொல்லும்படியாக இருந்தது. அப்படிச் சிலர் மேல் அவருக்கு ரொம்ப அக்கறை உண்டு. அப்படிப்பட்டவர்களில் புதுமைப்பித்தன் முக்கியமானவர். புதுமைப்பித்தனின் சாதகமான அம்சங்களைப்பற்றிச் சொல்லுவார். அவரது நகைச்சுவை உணர்வு, மொழியில் இருக்கும் பிடிப்பு, நிறைய புத்தகங்களைப் படிக்கும் பழக்கம், தமிழுக்குப் புதிதாக எழுதிச் சேர்க்க வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வம், அப்படி எழுதும்போது தோல்வி வந்தால் அது தோல்வி அல்ல என்ற நம்பிக்கை. இப்படிப் பலவிதமான குணங்கள் கொண்ட எழுத்தாளர் என்று சொல்லியிருக்கிறார்.

க. நா. சு. ஆரம்ப காலத்தில் கு. ப. ரா., மௌனி இவர்களைத் தான் சிறந்த எழுத்தாளராகச் சொல்லி வந்திருக்கிறார். புதுமைப் பித்தனுக்குப் பரவலான பெயர் கிடைத்த பிறகுதான் கட்சி மாறி அவரையும் பெரிய எழுத்தாளராகச் சொல்ல ஆரம்பித்தார் என்ற தொனியில் தொ. மு. சி. சொல்லியிருக்கிறார். நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆரம்பத்திலேயே அவருக்குப் புதுமைப்பித்தன் பற்றி நல்ல அபிப்ராயம் இருந்திருக்கிறது. மௌனி பற்றியும் ரொம்ப உயர்வான அபிப்ராயம் வைத்திருந்தார். மௌனி, புதுமைப்பித்தன் இவர்களில் யார் உயர்ந்தவர் என்பதுபற்றி அவருக்குக் குழப்பம் இருந்திருக்கிறது. ஒரு விதத்தில் மௌனி சிறந்தவராகவும் இன்னொரு விதத்தில் புதுமைப்பித்தன் சிறந்தவராகவும் அவருக்குத் தோன்றுகிறார்கள். அது ஒரு பெரிய குற்றமே கிடையாது. தெளிவாக வெளிப்படையாகத்தான் அந்த மதிப்பீட்டை அவர் வைத்துக்கொண்டிருக்கிறார். கு. ப. ரா. பற்றிச் சொல்லும்போது அவர் நல்ல சிறுகதை எழுத்தாளர்தான். வடிவமெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என்று சொன்னாலும் அவருக்கு கு. ப. ரா. மேல் ஈடுபாடு அதிகம் இருக்கவில்லை. எழுத்துவில் ஒரு நீளமான கட்டுரை கு. ப. ரா. பற்றி க. நா. சு. எழுதியிருந்தார் என்றாலும் அது செல்லப்பா வற்புறுத்தியதால் எழுதிய கட்டுரை. செல்லப்பாவுக்கு கு. ப. ரா. மேல் ரொம்பப் பெரிய அபிப்ராயம் உண்டு. பின்னாளில்தான் திடீரென்று பி. எஸ். ராமையாவைப் பற்றி உயர்வாகச் சொல்ல ஆரம்பித்தார். எனக்குக்கூடத் தோன்றியதுண்டு - இப்படி இவர் ராமையாவை முக்கியமான எழுத்தாளராகச் சொல்லுகிறாரே, செல்லப்பாவின் இலக்கிய விமர்சனம்மீது மரியாதை வைத்திருப்பவர்கள் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டி வருமே என்று.

இலக்கிய வட்டம் காலத்துக்குப் பிறகும் எனக்கும் க. நா. சுவுக்கும் இடையில் நெருக்கமான நட்பு இருந்தது. அவர் எந்தப் பத்திரிகையில் எழுதினாலும் அதை ஒன்றுக்கு இரண்டு தடவை படித்து என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தொடர்ந்து புரிந்துகொண்டுவந்தேன். ஆனால் ஒருதடவைகூட அவருக்கு இது பற்றி எழுதியதே கிடையாது. அந்த மாதிரியான கடிதப் போக்குவரத்து வைத்துக்கொள்ளக்கூடிய சுபாவமே அவருக்குக் கிடையாது. இருந்தும் அவர் எனக்கு முக்கியமானவராகத்தான் இருந்திருக்கிறார். அவருடைய சில கருத்துக்கள் நான் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லாவிட்டாலும் ஆழ்ந்து சிந்திக்கும் படியாக அவை இருந்திருக்கின்றன. தமிழில் மிக முக்கியமான மாற்றத்தை அவர் உருவாக்கியிருக்கிறார் என்பது தெளிவாகவே எனக்குத் தெரிகிறது. கோபதாபங்களுக்கு அவர் பயப்படவேயில்லை. எழுத்து உலகில் ‘கெட்ட’ பெயர் வாங்கிக்கொள்ளாமல் எந்த உண்மையையும் சொல்ல முடியாது என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.

1947- 48களில்கூட யார் பிரபலமானவர்களாக இருந்தார்களோ, யார் லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டிருந்தார்களோ அவர்கள்தான் சிறந்த எழுத்தாளர்கள் என்ற எண்ணம் சமுதாயத்தின் எல்லாத் தளங்களிலும் இருந்தது. க. நா. சு. தான் அதை முதன்முதலாக உடைத்தார். அப்போது வெகு குறைவான பேர்களே அவரது கருத்துக்களை ஏற்றுக்கொண்டார்கள். சிறு பத்திரிகை வட்டத்துக்கு, பின்னாட்களில் வந்து சேர்ந்தவர் கள்கூட ஆரம்பத்தில் இவர் என்ன சொல்கிறார், இவரைப் படிப்பதற்கு யாருமே இல்லையே. லட்சக்கணக்கானவர்கள் படிக்கிறார்களே, அவர்கள் என்ன மோசமான எழுத்தாளர்களா என்று முரட்டுத்தனமாகக் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அந்தக் கேள்வி மழுங்கி க. நா. சுவின் பார்வை நாளாக நாளாக வலுப்பட்டு வந்திருக்கிறது. லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் எப்படி அந்த வாசகர்களை உருவாக்கிக்கொண்டார்களோ அதே போல் க. நா. சுவால் தீவிரமான எழுத்தாளர்களுக்கு ஒரு வாசகர் பட்டாளத்தை உருவாக்கித்தர முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள் முன்னால் இலக்கிய விமர்சனம் சார்ந்து ஒரு வாதத்தை க. நா. சு. முன்வைத்திருந்தாரே அது தமிழ் இலக்கியத்துக்கு அவர் ஆற்றிய மிகப் பெரிய பங்களிப்பு என்று நான் நினைக்கிறேன். வணிக எழுத்தாளர்கள் முன்வைத்த வாதமானது ஒரு தர்க்க நிலையோ, விமர்சன மரபோ கொண்டது அல்ல என்பதெல்லாம் இப்போது அம்பலப்பட்டுப் போய்விட்டிருக்கிறது. ஒருபுறம் அவர் சிறந்த நாவலாசிரியர் - இல்லையென்றால் நல்ல நாவல்களை எழுத ஆசைப்பட்டுக் கைகூடாமல் போனவர் - அவர் நமக்கு மிகச் சிறந்த விமர்சனக் குறிக்கோளை உருவாக்கித் தந்திருக்கிறார்.

க. நா. சு. மேற்கத்திய புத்திகொண்டவர்; தமிழ் நாட்டைப் பற்றி அக்கறை இல்லாதவர் என்று சொல்வது வழக்கத்தில் இருக்கிறது. இன்றைக்கும் பலர் அப்படிச் சொல்கிறார்கள். சொல்ல ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவர் பல சந்தர்ப்பங்களில் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் செயல்பட்டிருக்கிறார் என்பதற்கான தடயங்கள் இருக்கின்றன. இந்தத் தமிழ் நாட்டைப் பற்றி உயர்வாகப் பேசிக்கொண்டு அதன் மதிப்பீடுகளை அழிக்கக்கூடிய புத்தகத்தைச் சந்தோஷமாகவும் தாராளமாகவும் பலர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. அதனால் அவர் எல்லாவற்றையும் ஒரு முன்யோசனையோடுதான் செய்கிறார் என்று தோன்றுகிறது. அவர் சொன்னது உண்மைதான் என்பது பின்னால் நிரூபணமாகியிருக்கிறது. அதற்கு ஒருவிதமான பலன் ஏற்பட்டிருக்கிறது என்ற தெளிவு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர் மொழிபெயர்த்த நாவல்களை ஒருசிலராவது விரும்பிப் படித்தார்கள். எழுத்தாளர்களை அது முக்கியமாகப் பாதித்திருக்கிறது. மகாபாரதத்தைப் படிப்பதில் எவ்வளவு ஆர்வம் உண்டோ அதே அளவு ஆர்வத்துடன் க. நா. சு. மொழிபெயர்த்த நாவல்களைப் பலர் விரும்பிப் படித்திருக்கிறார்கள். நிறைய எழுத்தாளர்கள் அந்த நாவல்களால் பாதிப்பு பெற்றிருக்கிறார்கள். பேர்லாகர் குவிஸ்டின் ‘பாரபாஸ்’ (அன்பு வழி) என்ற நாவல் பலரை ரொம்பவும் பாதித்திருக்கிறது. நம்பி தான் படித்ததிலேயே ‘மதகுரு’ மிகச் சிறந்த நாவல் என்று சொல்லியிருக்கிறான். அதை அவன் படித்தான் என்று சொல்வதைவிடப் பாராயணம் செய்தான் என்று சொல்வது தான் சரி. க. நா. சு. கூட அந்நாவலை மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் பல பக்கங்கள் படித்துக்கொண்டே போய்விட்டதாகவும் பின்பு விட்ட இடத்திலிருந்து மொழிபெயர்க்க ஆரம்பித்ததாகவும் சொல்லியிருக்கிறார். ஸெல்மா லாகர்லாஃபின் அந்தப் புத்தகத்தை வருடத்துக்கு ஒரு சில தடவைகள் படிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

மேற்கத்திய விமர்சனங்களைப் பின்னாட்களில்படித்தபோது ஒரு விஷயம் தெரிய வந்தது. அதாவது அந்த ஸ்வீடிஷ் படைப்பாளிக்கு இவ்வளவு மரியாதை கொடுத்துப் பேசியது உலகத்தி லேயே க. நா. சு. ஒருவர்தான். பல சமயங்களில் அந்தக் காலத்து எழுத்துக்களைப் பற்றி எழுதிய பிற மேற்கத்திய விமர்சகர்களின் பட்டியலில் ஸெல்மா லாகர்லாஃபின் புத்தகத்தைப் பற்றிப் பேச்சு மூச்சில்லை. உலக விமர்சனம் புறக்கணித்துவிட்ட படைப்பாளியைத் தன்னந்தனியாகப் பல பத்தாண்டுகள் சொல்லிக்கொண்டு வந்திருப்பதுடன் அந்த நாவலை மொழி பெயர்க்கக் கிடைத்த சந்தர்ப்பத்தையும் அச்சந்தர்ப்பத்தின் ஓட்டைகள் தெரிந்த நிலையிலும் முழுமையாக மொழிபெயர்த்திருக்கிறார்.

அவரது மொழிபெயர்ப்பு பற்றிப் பொதுவாக ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அவர் மொழிபெயர்ப்பைச் சரளமாகப் படிக்கும்படிச் செய்திருக்கிறார். அதைப் படிக்கும்போது எந்த ஒரு சிக்கலும் இருக்காது. ஆனால், அநேக மேற்கத்திய படைப்புக்களைப் படிக்கும்போது - அவை சகஜமாகப் படிக்கும்படியாக இருக்கின்றன என்றாலும் - சில இடங்களில் ஒரு அந்நியமான, சிக்கலான விஷயங்கள் வரத்தான் செய்கின்றன. ஏனென்றால், மேற்கத்தியக் கலாச்சாரம் என்பது நம் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்ட ஒன்றுதானே. அங்கு பல விஷயங்கள் வித்தியாசமாக நடந்திருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக, சர்ச் சம்பந்தமாக பல சண்டைகள் விவாதங்கள் அங்கு நடந்திருக்கின்றன. கிறிஸ்தவ தியாலஜி சம்பந்தமான விவாதங்கள் அவற்றுக்குரிய சொற்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்த மாதிரியான பகுதிகளையும் சேர்த்து மொழிபெயர்ப்பவர்கள் மொழிபெயர்ப்பில் வாசிக்கும் போது சிக்கலை உணர நேரிடலாம். க. நா. சுவின் மொழி பெயர்ப்புகளில் அந்த விதமான சிக்கல்களைக் காணவே முடியவில்லை. மொழிபெயர்ப்பு, மூலத்துக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறது என்பதை யாருமே சோதித்துப் பார்க்கவில்லை. நான் வலிமைப்படுத்த விரும்பும் கருத்து என்னவென்றால் அவருடைய தேர்வுகள் முக்கியமானவை. தேர்வு செய்யும்போது அதைப் பிரக்ஞை பூர்வமாகச் செய்திருக்கிறார். தமிழ் மக்களை, தமிழ்க் கலாச்சாரத்தை மனதில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஒட்டக் கூடியதைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்து அவர்ஒருவருக்குத்தான் அப்படி ஒரு பார்வை இருந்திருக்கிறது. மற்றவர்களெல்லாம் தங்களுக்கு என்னென்ன சந்தர்ப்பங்கள் வருகிறதோ அவற்றைச் செய்து தருவார்கள். அதற்கான வருமானத்தைப் பெற்றுக் கொள்ளுவார்கள். அதை மீறிப் பல விஷயங்களைச் செய்திருக்கிறார். அவ்வளவு உயர்வாக அவரே கருதாத புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறார் என்பது உண்மைதான். அவருடைய வாழ்க்கை அப்படியான நிர்ப்பந்தங்களை அவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் தனக்கு விருப்பமில்லாத ஒன்றை அவர் ஒருபோதும் செய்திருக்கவில்லை. இன்னும் நாம் அவரை விரிவாக ஆராய்ந்து பார்த்தால் அதிகக் குறைகள் கண்டுபிடிக்கச் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். எதிர்காலத்தில் அவை வெளிப்படுத்தப்பட்டாலும்கூட மொழிபெயர்ப்பிற்கு அவர் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. அது மட்டுமல்ல, இன்றுவரை அதைத்தாண்டி யாருமே போயிருக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்.

அடுத்ததாகக் க. நா. சுவின் பங்களிப்பாக நான் கருதுவது அவர் புதுக்கவிதைக்கு ஆற்றியது. ஆரம்பத்தில் பிச்சமூர்த்தி, கு. ப. ரா., வல்லிக்கண்ணன் இவர்களால் ஆரம்பிக்கப்பட்ட புதுக்கவிதை இயக்கம் நடுவில் சற்று ஓய்ந்து போய்விட்டிருந்தது. அது இறந்துபோய்விட்டது என்ற எண்ணங்கள் அதை உருவாக்கியவர்களுக்கேகூட இருந்திருக்கின்றன. தற்செயலாக 1959ல் ந. பிச்சமூர்த்தியின் ‘பெட்டிக்கடை நாரணன்’ கவிதையைச் செல்லப்பா மறுபிரசுரம் செய்யப்போக, நிறைய பேர் அதைப் பார்த்துவிட்டுப் புதுக்கவிதை எழுதத் தொடங்கினார்கள். அந்தக் கவிதை அவர்களைப் பாதித்தது என்று சொல்வதைவிட அது வெளியான காலத்தில் இளம் படைப்பு மனங்களில் புதிதாக ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் எப்படிச் செய்வது என்று தெரியாத தத்தளிப்பும் இருந்தன. சமுதாயத்துக்குப் புதுவிதமான கவிதை தேவையாக இருந்தது. பாரதிதாசன் மறைந்தபிறகு எழுத்துத் தோன்றுவது வரை எழுதப்பட்ட கவிதைகளை இன்று நாம் படிக்கவே முடியாது. கவிதையை உண்மையாக நேசிக்கக் கூடியவனுக்கு கவிதை இல்லாமல் இருந்தது. ஒருவித வறட்சி ஏற்பட்ட நேரத்தில் வழி திறந்துவிட்ட விஷயத்தைத்தான் எழுத்து செய்தது.

ஒருதடவை நான் அவரைப் பெங்களூரில் சந்தித்திருந்தேன். நான் என் மனதுக்குள் எந்த இடைவெளியையும் உணர்ந்திருக்கவில்லை. இடைவெளி இருப்பதை நான் விரும்பவும் இல்லை. அங்கு அவரைச் சந்தித்தபோது ஒரு மனநிறைவு ஏற்பட்டது. இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட மனநிறைவு. என் அப்பா அம்மா காலமானபின் அவரைச் சந்தித்திருக்கவில்லை. அது பற்றி இங்கிதமாகத் தொட்டும் தொடாமலும் பேசினார். அதன்பின் இந்தக் காலத்தில் முக்கியமானவர்களில் யார் யாரெல்லாம் நாகர்கோவிலுக்கு வந்திருந்தனர் என்று கேட்டார். ராமாமிர்தம், தி. ஜா., கு. அழகிரிசாமி இவர்கள் எல்லாரும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள் என்றேன். செல்லப்பா வந்து தங்கியதைப் பற்றிச் சொன்னேன். அழகிரிசாமி, பார்த்தசாரதி இவர்களுடன் கடிதத் தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிறீர்களா என்று கேட்டார். அந்தக் கேள்வியை அவர் கேட்கும்போது உற்சாகமும் ஆர்வமும் அவர் குரலில் தெரிந்தது. தொடர்பு இப்போது விட்டுப்போயிருக்கிறது. சென்னைக்குச் சென்று மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் என்றேன். ‘ரகுநாதனைச் சந்திப்பதை முற்றாக விட்டாச்சோ?’ என்றார். நான் க. நா. சுவைச் சந்திப்பதற்கு முன் ரகுநாதன் தான் என்னை வெகுவாகப் பாதித்திருந்தார் என்பது அவருக்குத் தெரியும். ‘ரகுநாதன் இப்போது சோவியத் யூனியன் அலுவலகத்தில் வேலை செய்கிறார். அவருடைய இலக்கியப் பணிகள் சொல்லும்படியாக இல்லை. எனக்கும் வேறு விதமான கவனங்கள் வந்திருக்கின்றன. அவரது அலுவலகத்துக்குப் போய் அவரைப் பார்ப்பது என்பது சுலபமும் இல்லை’ என்றேன். இன்னொரு நாள் சாயந்திரம், நாளைக்கு நான் ஃப்ரீ, நீ ஃப்ரீயா இருந்தா பார்ப்போம் என்றார். உண்மையிலேயே அன்று எனக்கு வேறு வேலைகள் இருந்தன. மதியத்துக்கு மேல் சந்திக்கலாம் என்றேன். ‘நான் பிரீமியர் புக் ஸ்டாலில் இருப்பேன், நீயும் அங்கு வந்துவிடு’ என்றார். அந்தக் கடை மகாத்மா காந்தி ரோட்டுக்கு அருகில் இருந்தது. முக்கியமான கடை என்று தமிழவன் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. நான் அதுக்கு முன் பெங்களூர் போனபோது வேறு பல கடைகளுக்குப் போயிருக்கிறேன். ஆனால் அந்தக் கடை எனக்குத் தெரிய வந்திருக்கவில்லை. அது ஒரு சந்துக்குள் உள்ளடுங்கி இருந்ததால் என் பார்வையில் விழவில்லை. க. நா. சுவுடன் ஏதாவது பேசுவதானால் பேசிக்கொள்ளட்டும் என்று கண்ணனையும் அழைத்துக்கொண்டு போனேன். அங்கு நாங்கள் போனபோது அவர் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். க. நா. சு. புத்தகங்களைப் பார்ப்பது ஒரு தினுசாக இருக்கும். அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. எல்லாப் புத்தகத்தையும் எடுத்துக் கூர்ந்து பார்ப்பார். அநேகமாகப் பல புத்தகங்கள் அவர் படித்ததாக இருக்கும். சில புத்தகங்கள் கேள்விப்பட்டதாக இருக்கும். அவருக்குத் தெரியாத புதுப்புத்தகங்கள் என்று கொஞ்சம்தான் இருக்கும். அந்தப் புதிய புத்தகங்களை எடுத்து அது என்ன சரக்கு என்று யீமீமீறீ பண்ணிப் பார்க்க முயற்சி செய்வார். அதுவும் தவிர புத்தகக்கடையில் இருக்கும்போது அவருக்குச் சுய உணர்வே இருக்காது. நமக்கு ஒரு உடம்பு இருக்கிறது. நாலுபேர் போக வர இடம் விட்டு நிற்க வேண்டும் என்ற உணர்வே இருக்காது அவருக்கு. அதுவும் தவிர ஒரு புத்தகத்தை நாம் விலை கொடுத்து வாங்கினதுக்கு அப்புறம்தான் அது நமக்குச் சொந்தமாகும், அதுவரை அது புத்தகக் கடைக்காரருக்குத்தான் சொந்தம் என்பது போன்ற எண்ணமெல்லாம் அவருக்கு இருக்காது. அங்கே இருக்கும் ஒரு புத்தகத்தை எடுத்து இங்கே வைப்பார். இங்கே இருக்கும் புத்தகத்தை எடுத்து அங்கே வைப்பார். அப்படிச் செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல்தான் இருப்பார்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக ஆனார். அதுக்கு அவருக்கு நல்ல வெகுமதி கிடைத்தது. அதை எவ்வளவு சீக்கிரம் தீர்க்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தீர்த்துவிட்டார். அதன் பின் அவருடன் எனக்குத் தொடர்பிருக்கவில்லை. பத்திரிகை நடத்தும்போது மேட்டர் கேட்டுக் கடிதம் அனுப்புவார். அது தவிர கடிதம் ஒன்று இரண்டு வந்திருக்கும். அவ்வளவு தான். திருவனந்தபுரத்தில் அதாவது 1954ல் அவரைப் பார்த்ததிலிருந்து அவர் இறந்துபோவதுவரை ஒரு மானசீகத் தொடர்பு, நேர் சந்திப்பு, நட்பு, மதிப்பு எல்லாம் இருந்து வந்திருக்கின்றன. அவர் நேரில் இல்லாதபோதும் அவருடன் தனியாகப் பேசிக் கொள்வதுபோல் ஒரு உறவு தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. இப்போதும் சில விஷயங்களுக்கு அவரிடம் ஆலோசனை கேட்டு மனதளவில் பெற்றுக்கொண்டுதானிருக்கிறேன். அவர் 1989ல் இறந்தார். ரொம்ப ஆரோக்கியமாகத்தான் இருந்தார். சட்டென்று மரணம் வந்துவிட்டது. அது ஒருவிதத்தில் நல்லது தான். அவரெல்லாம் படுக்கையில் படுத்து நோயால் வதை பட்டுக்கொண்டிருப்பது மிகக் கொடுமையான விஷயம். பார்வை அழிந்து படிக்க முடியாமல் ஆகிவிடுவதைவிட உயிர் பிரிவது தான் அவருக்கு நல்லது. அப்படியான நிலைமையெல்லாம் வராமல் அதற்கு முன்பே போய்ச் சேர்ந்துவிட்டார்.

அவரது மறைவு எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்னால் தாங்கிக்கொள்ள முடிந்திருக்கவில்லை. அவரைப் போன்ற ஒரு பெரிய மனிதரைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்ததைப் பெரிய விஷயமாகத்தான் மதிக்கிறேன். சாதாரண எழுத்தாளருக்கெல்லாம் இவரிடம் இவ்வளவு ஆத்மார்த்தமாகப் பேசக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான். அந்த நட்பில் மேடு பள்ளங்கள் இருந்தன என்றாலும் அதெல்லாம் இயற்கையானதுதான் என்பது இப்போது நன்றாகவே தெரிகிறது. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இடையில் கூட எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றனவே. ஆனால் தமிழ்நாட்டுக்கு அவரைப்பற்றித் தெரியாது. தமிழ்நாட்டு இடது சாரி எழுத்தாளர்களுக்கு அவரைப்போன்ற ஒருவர் தேவையே இல்லை. அவர்களுக்குத் தேவை வல்லிக்கண்ணனும் தி. க. சியும் தான். ரகுநாதன்கூடத் தேவையில்லை.

*****

நன்றி: http://sundararamaswamy.com/

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்