Showing posts with label யுவன் சந்திரசேகர். Show all posts
Showing posts with label யுவன் சந்திரசேகர். Show all posts

Sep 3, 2013

குள்ளச் சித்தன் சரித்திரம்-(ஒரு பகுதி)– யுவன் சந்திரசேகர்

குள்ளச் சித்தன் சரித்திரம் –  புதினத்திலிருந்து ஒரு பகுதி.

அரங்கதினுள்ளே விசித்திரமான மணம் நிரம்பியிருந்தது. நிறுத்தி வைக்கப்பட்ட தூண்களின் உச்சியிலிருந்த கிண்ணக் குழிவுகளில், கனன்ற கங்குகள் மீது ஒரு விதமான மணப்பொடி தூவப்பட்டு, அவற்றிலிருந்து கிளம்பிய புகையில் நறுமணம் நிரம்பியிருந்தது. கூடத்தை நிறைத்தவர்கள் அரசாங்க உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், பிரபுக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள்.

பெரும் நிசப்தம் நிலவிய அரங்கத்தின் பக்கவாட்டில், இரு ஓரங்களிலும் அலிகள் சிலர் நின்று yuvan_chandrasekarமயிற்பீலியால் ஆன மகத்தான விசிறிகளைப் பதமாக அசைத்துக் கொண்டிருந்தனர். அவையை பாதியாய்ப் பிரித்துப் போடப்பட்ட திரைக்கு பின்னால், வளையல்களின் ஓசையும், குறுஞ்சிரிப்புகளின் மென் சப்தமும்,கிசுகிசுப்பான பேச்சுகளும் கேட்டவாறு இருந்தன. அரங்கத்தின் மேடை, பச்சை திரைச்சீலையால் மூடப்பட்டிருந்தது.

இங்கிலாந்திலிருந்து வந்திருக்கும் வணிகர்களுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி துவங்குவதற்காக காத்திருக்கிறது சபை.

திரை மெல்ல உயர்கிறது. மேடையில் நடுநாயகமாக அவன் உட்கார்திருக்கிறான். அவையின் வலது வரிசையில் முன் ஓரத்தில் அரியாசனம் போன்ற இருக்கையில் வீற்றிருக்கும் பாதுஷாவை நோக்கித் தலை தாழ்த்துகிறான், தன் வலது கையை மார்பில் பதித்தவாறு.

இவனுடைய குரு மிகப்பெரிய இசை மேதையாம். தன் சங்கீதத்தால் மேகங்களைப் பொழிய வைக்கவும், தீபத் திரியில் நெருப்பு ஏற்றும் வல்லவராம். இவனைப் பற்றியும் விசேஷமாக சொன்னார்கள். தன் சித்தம் போன விதமாக நாடோடியாக அலைகிறவனாம் . இந்தத் தலைமுறைப் பாடகர்களில் முதன்மையானவன் என்கிறார்கள்.

கன்றின மிளகாய்ப் பழம் சிவந்திருக்கின்றன அவன் கண்கள். பிடரியில் அலைஅலையாய்ப் புரள்கிறது ஒழுங்குபடுத்தப்படாத கேசம். சித்த சுவாதீனம் இல்லாதவன் போலத் தோன்றுகிறான். குதப்பிய வெற்றிலைச் சாறு குருதிக் கோடாகக் கடைவாயோரம் வழிகிறது. தனக்கு இடது புறம் இருக்கும், வாயகன்ற பித்தளைப் படிக்கத்தில் உமிழ்கிறான்.

அவனுக்கு பின்னால் இரு புறமும் தூண்கள் போல நின்றிருக்கும் தந்தி வாத்தியங்களில் இருந்து கனத்த ரீங்காரம் எழுகிறது. அவையில் அமைதி படர்கிறது. வாத்தியங்கள் ஒன்றுக்கொன்று இசைவாகுவதற்கு வெகு நேரம் பிடிக்கிறது. பாடகன் தன் மடியில் கிடத்தியிருக்கும் சிறு வாத்தியத்தில் தன் விரல்களை அலையவிட்டுக் கொண்டிருக்கிறான். இதுவும் தந்தி வாத்தியம் தான். சீரான இடைவெளியில் இழுத்துக் கட்டப்பட்ட கம்பிகளுடன் அகலமான சட்டகம் போல இருக்கிறது.

மூன்று கருவிகளும் பொருந்திய தருணத்தில், அவற்றுடன் இழைந்து மிருதுவாக எழுகிறது அவனுடைய குரல்.

மிக மெதுவாக மிக மிக மெதுவாக அரற்ற ஆரம்பிக்கிறது. சுழன்று சுழன்று வேகமெடுக்கிறது. சன்னமான தூறலாகத் தொடங்கி சிறு தாரைகளாகக் கூடி, கனத்த மழைக் கம்பிகள் போல வர்ஷிக்கிறான். அவனது வேகத்துடன் இணையாக சஞ்சரிக்கிறது என் மனம்.

இது நாள் வரை நான் கேட்டறியாத என் ரகசிய உட்குரலை நான் கேட்க உதவும் வண்ணமாக அவன் பாடிக் கொண்டிருக்கிறான். தன் குரலை அல்ல, குரலுக்கு பின்னாலுள்ள எதையோ உணர்த்தும் பொருட்டு தான் அவன் பாடுகிறான் என்று தோன்றுகிறது. அவன் முன்னிறுத்தும் அந்தப் பின்புலத்தில் தொற்றிக் கொள்ள என் மனம் மிகவும் சிரமப்படுகிறது. சுனையாக ஊரும் வேட்கையுடன் சுவாசம் ஒடுங்கி ஆழ்கிறேன். மந்தை வசியத்துக்கு ஆளான மதக்கூட்டம் போல அவையோர் கிறங்குகிறார்கள்.

கச்சேரியின் இரண்டாம் பகுதி தொடங்குவதற்கு முன்னான இடைவெளியில் என் மனம் ஒப்பீட்டில் இறங்குகிறது. என்னுடைய தேசத்தின் சாஸ்திரிய சங்கீதத்துக்கும் இவன் பாடும் சங்கீதத்துக்கும் உள்ள வேறுபாடு புலனாகிறது. எங்களுடைய சங்கீதத்தில் நிசப்தம் என்பது, ஒரு ஒலித் துணுக்குகும் மற்றதுக்கும் உள்ள இடைவெளி. இவனுடைய சங்கீதத்தில், ஓசையின் பின்னுள்ள திரையாக செயல்படுகிறது நிசப்தம். மனதில் அலையாடும் எண்ணக் குவியலைக் புறக்கணிக்கும் பொருட்டே இவர்கள் சங்கீதத்தில் ஆழ்கிறார்கள் என்று படுகிறது.

தாள வாத்தியம் உடன் சேர்கிறது. அவன் இசையின் வேகம் அபரிமிதமாக கூடியிருக்கிறது. முன்னோக்கி நீட்டிய கைகளால் காற்றில் சித்திரம் வரைகிறான்.தன் மனதின் ரகசிய தாழ்வாரங்களில் ஊறும் ஒலித்தாதுக்களின் வரி வடிவத்தை எழுதிக் காட்ட முனைபவன் போல. மானசீக மரம் ஒன்றை இரு கைகளாலும் பற்றி குலுக்கி உலுப்புகிறான். ஒலிச்சிதறல்கள் போல ஒலிப்புள்ளிகள் இறைந்து பரவுகின்றன.

குழைவான அவன் குரலிருந்து அபூர்வமான தனிமை ஒன்று பீய்ச்சியடிக்க ஆரம்பிக்கிறது. அது கரும் மேகக் கூடம் போல அரங்க விதானத்தின் கீழ் தொங்குகிறது.அரங்கத்தில் தனிமையின் இருள் சூழ்கிறது. அவனும் நானும் மட்டுமே பகிர்ந்து கொள்ள மீந்த தனிமை வெளியில் இருவருக்குமான பொதுத் தொடர்பாக வரையறுக்கப்பட்ட ஒலித் தொகுப்பு ஸ்தாபிதமாகி இருக்கிறது. தடமற்ற ஒலிச்சாலையில் அந்தகன் போல் அவன் குரல் பற்றி தொடர்கிறேன்.

அவன் சொல்லி நான் புரிந்து கொள்வது என்றில்லாமல், அவன் சொல்லும் முன்பே எனக்குள் ஒலிக்கும் தனிமையின் காத்திரத்தை வலுவாக உணர்கிறேன்.

அவனுடைய வேகம் நாலாவது ஐந்தாவது ஆறாவது கதியில் பாய்கிறது. எனக்குள் சிந்தனை அடங்கிய நிசப்தவெளி உருவாகிறது. மனம் அசைய மறுக்கிறது. அவன் பாடும் வேகத்தில் என்னுள் அசைந்து கொண்டிருந்த தாளம் நின்று போகிறது. அடி வயிற்றிலிருந்து ஒரு ஏக்கம் பீறிட்டுக் கிளம்புவதை உணர்கிறேன்.

மூச்சுத் திணறத் திணற நிசப்தத்தின் இருட்ச்சிறைச் சுவர்களுக்குள் ஒடுங்குகிறேன். நண்பனே ... என் அருமந்த நண்பனே. இசைஞனே.. என்னை மீட்க வந்த இறையே...

கூடம் வாஹ் ... வாஹ் ... என்று ஆர்ப்பரிக்கிறது பெரும் தேஜஸூடன் மிளிர்ந்த அவன் முகம், ஓசை ஓய்ந்த தருணத்தில் விகாரமாக வெளிறி இருக்கிறது. கரகோஷம் உரத்து எழும்பொது, தன் அந்தரங்கத்தைப் பிறர் அறியத் தந்ததில் அவமானமுற்றவன் போலக் கூசுகிறது அவன் முகம்.

நன்றி: குள்ளச் சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர் - கிழக்கு பதிப்பகம்

தேர்வும் தட்டச்சும்: V மணிகண்டன்

Mar 26, 2011

சுவர்ப்பேய் - யுவன் சந்திரசேகர்

வேலையில் சேர்ந்த முதல்நாள் சாயங்காலம் இனம் புரியாத வெறுமை மனமெங்கும் நிறைந்திருந்தது. பட்டப்படிப்பை முடித்து விட்டு வீட்டில் காத்திருந்த நாட்களில் என் மனத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் நாடித்துடிப்பு மாதிரி நிறைந்திருந்த நாள் நிஜமாகவே வந்து கடந்த yuvanchandrasekar பிறகு ஒருவித வெற்றிடம் உருவாகிவிட்டது. அதில் வேறு கற்பனைகளை இனிமேல்தான் நிரப்பியாக வேண்டும்.

வங்கிக் கட்டடத்தின் எதிர்மருங்கில் இருந்த தேநீர்க்கடையில் தனியாக நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். அந்தத் தனிமையும், யாருக்காகவும் ஒளிந்து குடிக்க அவசியமற்று என் கையில் புகைந்த சிகரெட்டும் தந்த விட்டேற்றியான மனநிலை வெகு ஆனந்தமாக இருந்தது. யாரோ என் தோளைத் தொட்டார்கள்.

காசுத்துறை அதிகாரி அருணாசலம். அவருடைய மொழியும் பேச்சும் வித்தியாசமானவை. புதுமைப்பித்தனின் கதையிலிருந்து இறங்கி வந்த கதாபாத்திரம்போலப் பகல் முழுவதும், கிளை முழுவதும் ஒலித்துக்கொண்டிருந்தது அவரது உரத்த குரல்.

தனீயா நின்னு சீரெட்டை என் ஜாய் பண்ணுதீராக்கும்?

வண்டிக்காரத் தெருவில் போய்க் கொண்டிருந்த ஓரிருவர் திரும்பிப் பார்த்தார்கள். நான் அவசரமாக சிகரெட்டைப் பின்புறம் கொண்டு போனேன்.

”குடியும் குடியும். உத்தியோகத்துலே சேந்தாச்சு. இன்னமே நீரும் பெரியமனுசன்தானே வே. “என்று சிரித்தார். தலைமுடியும் வரிசைப் பற்களும் போட்டி போட்டுக்கொண்டு வெளுத்திருந்தன. தாமும் ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டார். நான் அசட்டுத்தனமாகச் சிரித்துக்கொண்டே கையை முன்புறம் கொண்டுவந்தேன்.

ஒமக்குப் பூர்வீகம் எந்தூர்ன்னு சொன்னேரு?

கரட்டுப்பட்டி சார்.

எது, சோளவந்தான் கரட்டுப் பட்டியா?

ஆமா சார்.

அட. அங்கினெ நம்ம பய ஒர்த்தென் வாத்தியா இருந்தானே . . .

ஞாபக அடுக்குகளில் எதையோ தேடுகிற மாதிரி அவர் முகத்தில் தியானம் கவிந்தது. விழிகளைச் சுருக்கி தெருவை வெறித்தார். நினைவு வந்துவிட்டமாதிரிக் கண்கள் மலர்ந்தபோது என்னிடம் சொன்னார்.

அதுவும் இருக்குமே, ஆறேளு வருசம் இருக்கும். ஆச்சு, டச்சு விட்டுப்போய் ரொம்ப வருசம் ஆச்சு. இப்பொ எங்கினெ இருக்கானோ?

தன் ஞாபக அடுக்குகளுக்குள் புகுந்து அவர் தேடிய அதே சமயம் நானும் மானசீகமாகக் கரட்டுப்பட்டிக்கும் மதுரைக்கும் சென்று வந்திருந்தேன். பின்னாட்களில், கல்லூரியில் படித்த காலத்தில், தல்லாகுளம் பொது நூலகத்தில் எடுத்து வந்த காஞ்சனையில் கந்தசாமிப் பிள்ளையின் பேச்சில் ராஜுவாத்தியார் வாசனையடித்தது உடனடியாக நினைவு வந்து விட்டது.

ராஜூ வாத்தியாரா சார்?

அவம்தான். ராசுதான். நமக்குத் தூரத்துச் சொந்தக்காரென்வே அவன். எங்க அம்மெ வளியிலே . . . நல்ல பய. அவனெ மாதிரி ஒரு ஜெம்மைப் பாக்க முடியாது . . .

சிகரெட்டை வேகமாக இழுத்தார். புகை அதைவிட வேகமாக வெளியேறியது.

. . .ம்ஹும். விடு, நல்ல மனுசங்களைத்தானெ தெய்வம் தொரத்தித் தொரத்தி அடிக்கிது. சவம் நம்ம கோயில்கள்ள குடியிருக்கது சாமியா பிசாசான்னு சமயத்திலெ சந்தேகம் வந்துருது.

அவர் சிகரெட்டைக் கீழே போட்டுத் தேய்த்த விதத்திலேயே தெரிந்தது, விஷயத்தை அவர் முடித்துக் கொண்டுவிட்டார் என்பது. அவர் வங்கியை நோக்கியும் நான் என்னுடைய புது அறை நோக்கியும் நகர்ந்தோம்.

மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு அறை நண்பர்களுடன் திரும்பினேன். என்னுடைய வழக்கப்படி மொட்டைமாடியில் படுக்கச் சென்றேன். நண்பர்கள் வெட்டவெளியில் படுப்பதை விரும்புவதில்லையாம். எனக்கானால் கூரைக்குக் கீழ் படுத்தால் தூக்கம் வராது. திருமணத்துக்குப் பிறகு என்ன செய்வீர்கள் என்று என் புதிய நண்பர் ஒருவர் கேட்டுச் சிரித்தார். தெரியாது என்று நானும் சிரித்துக்கொண்டே பதில் சொன்னேன்.

மொட்டைமாடியில் இருட்டும் நிசப்தமும் அடர்ந்திருந்தன. கீழே வீதியில் எப்போதாவது ஒரு வாகனம் உறுமிச் செல்லும் எந்திர ஓசை. யாரோ ட்ரான்ஸிஸ்டர் கேட்கிறார்கள். இன்ன பாட்டு என்று தெரியாத, ஆனால் பாட்டு என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிற, தொலைவிலிருந்து ஒலிக்கும் இசையைக் கொஞ்சநேரம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு சிகரெட் பற்றவைத்தேன். முடித்துவிட்டு மடக்குக் கட்டிலில் மல்லாந்து படுத்தேன். நானும் ஒரு ஆகாயம் நிரம்ப நட்சத்திரங்களும் மட்டும் பகிர்ந்து கொண்ட தனிமையில் அமிழ்ந்திறங்கும்போது ராஜு வாத்தியார் ஞாபகம் கனத்து எழுந்தது.

அப்பாவின் மரணத்தையொட்டி கிராமத்தைவிட்டு வெளியேறிவிட்டோம். அதன்பிறகு ஒன்றே கால் வருடம் கழித்து மதுரையில் வந்து குடியமர்ந்தோம். நாங்கள் கிராமத்தைவிட்டுக் கிளம்புவதற்கு ஆறேழு மாதங்கள் முன்னால் மேல்நாச்சிகுளம் நடுநிலைப் பள்ளிக்கு மாற்றலாகி வந்தார் ராஜூ வாத்தியார்.

கிராமப் பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி ஆசிரியர்கள் கிடையாது. வகுப்பாசிரியர் என்று ஒருவர் இருப்பார். எல்லாப்பாடத்தையும் அவர்தான் எடுத்தாகவேண்டும். ராஜு வாத்தியார் எந்தப் பாடமானாலும் சுவாரசியமாக எடுக்கக்கூடியவர். அவர் பேசுகிற தமிழ் இன்னும் பிரமாதமாக இருக்கும்.

லே மக்கா . . . சேசுராசு . . .

என்று கூப்பிடுவதும், கேக்கான் பாக்கான் குட்மாணிங் வைக்கான் கூப்புடுதான் அந்தாலே இந்தாலேவாறு கால் ஓவு என்றும் அவர் பேசப்பேசக் கேட்டுக்கொண்டேயிருக்கத் தோன்றும் . . . அவ்வையார் மீது எனக்கு இன்றுவரை இருக்கும் காதலுக்கு ராஜூ வாத்தியார்தான் முதல் காரணம்.

அவ வலுத்த கிளவீல்லா . . .

என்று ஆரம்பித்து அவ்வையார் பாடல்களை – பாடப்பகுதியில் வந்தவை போக – ஏகப்பட்டது மனப்பாடமாகச் சொல்லுவார்.

அவர் பணிபுரிந்தது மேல்நாச்சி குளத்தில் என்றாலும், குடியிருந்தது கரட்டுப்பட்டியிலிருந்த நாட்டாமைக்காரர் வீட்டில் என்று சொன்னேனல்லவா? அந்த வீட்டில் மேற்குப்புறம் ஒரு சுவர் இருந்தது. உண்மையில், முற்காலத்தில் அது சுவராக இருந்திருக்க வேண்டும். பிறகு என்ன காரணத்தாலோ நடுவில் மாத்திரம் இடிந்து, மேற்கூரையில்லாத குட்டிச்சுவராகி நின்றது. சிவப்பு நிறத்தில் இளித்துக்கொண்டு நிற்கும் செம்மண் சுவர். சுவரையொட்டி உட்புறம் இருந்தது திறந்த வெளி முற்றம்தான் என்பதால் குடி வந்தவர்கள் யாரும் அதைப் பொருட்படுத்தாமல் விட்டு விட்டார்கள் போல.

ராஜுவாத்தியார் அந்தச் சுவரைப் பற்றி எங்களுக்கு ஒரு கதை சொன்னார். அவ்வையார் ஒரு தடவை கரட்டுப்பட்டி வழியாக வந்தாராம்.

சாடையிலே அந்தக் கிளவி நம்ம முத்தாச்சி மாதிரியே இருப்பா . . .

என்றார் வாத்தியார்.

ஆனா ஒண்ணு, சேலையைக் கெண்டைக்கால் வரைக்கி எறக்கித்தான் கட்டுவா கிளவி. முத்தாச்சி மாதிரித் தொடை வரைக்கி வளிச்சு ஏத்தியிருக்கமாட்டா.

வகுப்பு ஓவென்று சிரித்தது. தாமும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார் வாத்தியார்.

அவ்வைக்குக் கடுமையான பசி. கையில் காசில்லை. வழக்கமாகத் தோளிலிருக்கும் கந்தை மூட்டையில் தினை மா கொண்டுவருவார். சமயநல்லூருக்கு அருகில் வரும்போதே அதுவும் தீர்ந்தாகிவிட்டது. இனிமேல் நிலக்கோட்டை போனால்தான் சாப்பாடு கிடைக்கும். அங்கே தார்வேந்தன் என்று ஒரு பிரபு இருக்கிறார். அவர் மேல் பாடுவதற்கு ஓரிரண்டு வெண்பாக்கள் கட்டலாம் என்றால், பார் மேலும் சீர் மேவும் கார் போலும் என்று எதுகைகள் உதிக்கிறதே தவிர கரு திரள மாட் டேனென்கிறது. வயிற்றைக் கிள்ளுகிற பசிதான் காரணம்.

நம்ம நாட்டாமெக்காரரோட கொள்ளுப்பாட்டனுக்கு ஒரு கொள்ளுப்பாட்டன் இருந்தாரு. அவரு சம்சாரம் ஒரு ஆச்சி இருந்துச்சே, அதுக்கு நீலி ஆச்சின்னு பேரு. அது ரெம்பத் தடவை இந்தச் செவுத்தெக் கெட்டி நிறுத்தீறணும்னு நோங்குச்சு. அதாண்டே, நாங்க இருக்க வீட்டுலெ ஒரு குட்டிச் செவுரு நிக்கில்லா, அதெத்தாம். கொத்தரு வந்து கெட்டுவாரு, கூலியெ வாங்கிக்கிட்டு அவரு நகந்ததும் செவுரு வுளுந்திரும். உள்ளூர்லெ கோடாங்கி அடிச்சுப் பாத்தாக. அப்பத்தான் நூஸு தெரிஞ்சுச்சு. இந்தச் செவுருக்குள்ற முனியில்லா இருக்காம். பாக்க அப்புராணி மாதிரி நிக்ய செவுரு. உள்ளுக்குள்ள எம்புட்டுப் பெரிய ரகசியம் வச்சிருக்கு பாரு.

ஆச்சி சுதாரிச்சுக்கிச்சு. வெளியூர்லருந்து வேலெ தேடி வார கொத்தமார்ட்டெ கண்டிசனாச் சொல்லிப்போடும். செவுர எடுத்துக் கெட்டீட்டு ராத் தங்கிறணும். காலையிலே செவுரு நின்னா பதக்கு நெல்லு கூலி, இல்லாட்டி இல்லே.

இந்தச் சமயத்திலேதான் நம்ம அவ்வெ வாராக. கிளவி நீலி ஆச்சிட்டெ வந்து சாப்பாடு கேக்கா. ஆச்சி, போடுதேன், செரமம் பாக்காமெ இந்தச் செவுர எடுத்துக் கட்டிர்றியா? ன்னு கேக்கு.

எம்புட்டுக் கூலிங்கா அவ்வை யாரு. ஒரு பதக்கு நெல்லுத்தாரேன்ங்கு ஆச்சி. போர வளிக்காச்சேன்னு தலையாட்டுதா அவ்வெ. சாப்புடும்போது ஆச்சி வெசயத்தெ வௌக்கமாச் சொல்லுது. அப்பிடியா சேதின்னு கிட்டெப்போயி செவுத்தெத் தட்டிப்பாக்கா அவ்வெ. தலையத் தலைய ஆட்டிக்கிடுதா. ஏதோ புரிஞ்சு போச்சு அவளுக்கு.

செம்மண்ணெக் கொழைச்சுத்தாறதுக்கும் பாண்டுலெ நெரப்பித் தூக்கியாறதுக்கும் ஒரு ஆள் மட்டும் ஏற்பாடு செஞ்சாக் கட்டீறலாம்ன்னு ஆச்சிட்டெச் சொல்றா. கிளவியா இருக்காளே, கூட ஒரு பதக்கு நெல்லுத்தானே, சவம் செவுரு நின்னாச் சரிதான்னு ஆச்சி ஒத்துக்கிடுது. செவுரைக் கெட்டி முடிச்சுட்டு கும்பா நெறையக் கூழ் வாங்கிக் குடிக்கா அவ்வெ. குடிச்சு முடிச்சுத் திரும்பிப்பாத்தா, செவுரு லேசா ஆட்டம் காட்டுது . . . அந்தாலே செவுரெப் பாத்து ஒரு பாட்டுப் பாடுதா.

மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்கு வந்தேன்

சொற்கொண்ட பாவின் சுவை யறிவா ரீங்கிலையே

விற்கொண்ட பிறைநுத லாள் நீலி தரும் கூலி

நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே . . .

அப்புறம் அவ்வைக் கிழவி சாகும்வரை அந்தச் சுவர் வீழாமல் நின்றதாம். பிறகு ஏதோ ஒரு கால கட்டத்தில் மின்னல் தாக்கியதில் மீண்டும் குட்டிச் சுவராகிவிட்டது.

கையில் எடுத்த சிட்டிகைப் பொடியை, கண்களை இறுக மூடிக்கொண்டு உறிஞ்சி முடித்தார் வாத்தியார். நாசியில் ஏறிப் புகுந்த துகள்கள் நிஜமாகவே ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

டியூப் லைட்டுலெ வெளிச்சம் இருக்கது எதுனாலெ? உள்ளாறே கரண்டு ஓடுது. அதேதாம்லெ மின்னலுக்கும். ஒரு மின்னல்லெ இருக்க கரண்டெ வெச்சு நம்ம முனியாண்டி கோயில் டியூப்லைட்டெ ஆயிரம் வருசத்துக்கு எரிய வைக்கலாம் . . .

என்று விஞ்ஞானப் பாடத்துக்குத்தாவினார் ராஜூ வாத்தியார்.

அவ்வையாரின் பெயரோடு முத்தாச்சியின் முகமும் பொருந்திக் கிடந்துவருகிறது எனக்குள். மேற்சொன்ன கதையின் ஆரம்பத்திலேயே இது நிகழ்ந்துவிட்டது என்று தோன்றுகிறது. இவ்வளவுக்கும் அவ்வையார் முத்தாச்சிபோல தொடர்ந்த வெற்றிலைப் பழக்கத்தால் காவியேறிய பற்கள் கொண்டவரா, பொக்கைவாய்க் கிழவியா என்று எனக்குத் தெரியாது.

ராஜு வாத்தியாரின் வீட்டுக்கு மேற்குப்புறம் முத்தாச்சிக் கிழவியின் வீடு. ஊரின் கடைசி வீடு. வீட்டின் முன்வாசல் முற்றத்தையும் திண்ணையையும் சிறு கடையாக மாற்றியிருந்தாள். நாங்கள் பள்ளிக்கூடம் போகும்போதும் வரும்போதும் முத்தாச்சி கடைமுன் சற்று நின்றுவிட்டுப் போவோம், அட்டைகளில் தொங்கும் வற்றல்கள், வடகங்கள், பல்லிமிட்டாய்ப் பொட்டலங்கள் ஊறுகாய்ப் பாக்கெட்டுகளை வேடிக்கை பார்த்தபடி. இதுபோக எந்நேரமும் அந்த வீட்டுக்குள்ளும் சுற்றுப் புறத்திலும் நிரம்பியிருக்கும் கருவாட்டு மணம். அவளுடைய திண்ணையில் எந்நேரமும் யாராவது வெளியூர்ப் பெண்கள் வந்து அமர்ந்திருப்பார்கள். அக்கம்பக்க கிராமங்களிலெல்லாம் கிழவியின் கைவைத்தியத்துக்குப் பெரும் மவுசு.

முழங்காலுக்கு மேல் ஏற்றிச் சொருகிய கண்டாங்கிச் சேலையுடன் பழைய ஒரு ரூபாய் நாணயம் அளவு விட்டமுள்ள சிவப்புக்கல்தோடுகள் அணிந்து திண்ணையின் ஓரத்தில் அமர்ந்து சதா வெற்றிலைமென்றுகொண்டிருப்பாள் முத்தாச்சி. ஏந்திய கீழுதட்டிலிருந்து வார்த்தைகளும் கெட்ட வார்த்தைகளும் செந்நிற எச்சில் சாரலும் சரமாரியாய்க் கொட்டும். அவற்றின் வேகத்துக்கிசைய புத்தர்போல வளர்த்த காதுச் சவ்வின் கீழ்ப்புறம் தோடுகள் ஊசலாடும்.

சற்று அதிகநேரம் நாங்கள் நின்று விட்டாலோ, கூட்டம் அதிகமாகச் சேர்ந்துவிட்டாலோ எங்களை நோக்கி ஆவேசமாய்க் கேட்டு விரட்டுவாள்.

இங்கென்னா வேலெ. அம்மணக்குண்டி ஆட்டம் பாக்க வந்தீகளாக்கும்?. ஓடு ஓடு, பள்ளிக் கொடத்துல மணியடிச்சுரும்.

இதையெல்லாம்விட, முத்தாச்சி எனக்குக் கற்றுத்தந்த பாடம்தான் முக்கியமானது.

ஆண்களும் பெண்களும் சமம் என்ற கருத்தை முதன்முதலில் எனக்குள் விதைத்தவள் முத்தாச்சிதான். எங்கள் வீட்டிலெல்லாம் நிலைமை வேறு மாதிரியிருந்தது. அப்பாவைக் கேட்காமல் அம்மா ஒரு துரும்பைக்கூட நகர்த்த மாட்டாள்.

எங்கே . . . அவ எடுத்த முடிவெ சாதுர்யமா என் வாயாலெ வர வழைச்சுர்றா.

என்று அப்பா கேலி பேசினாலும், இறுதி முடிவுகள் அப்பாவின் பெயரால்தான் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. அண்ணன்மார் இன்னும் ஒருபடி மேலே போனார்கள். குறிப்பாக இரண்டாவது அண்ணா. அவன் மன்னியைக் கண்மூடித்தனமாக அடிக்கும்போது இந்தக் குடும்பத்துக்கும் அந்த நிகழ்வுக்கும் சம்பந்தம் கிடையாது என்பதுபோன்று ஒரு பொது அமைதி நிலவும். வீங்கின முகத்துடன் தனியாக உட்கார்ந்து அழும் மன்னியை அணைத்துக்கொள்ள வேண்டும்போல எனக்குப் பரபரக்கும். நல்லவேளை, நானெல்லாம் பெண்ணாய்ப் பிறக்கவில்லை என்று ஆறுதல் பட்டுக் கொள்வேன். ஏழாம் வகுப்புப் படிக்கும் மனத்துக்கே உரிய ஆறுதல் அது என்று பிற்பாடு பலநாட்கள் தோன்றியதுண்டு.

இந்த இடத்தில்தான் முத்தாச்சியின் முக்கியத்துவம் வருகிறது. பிள்ளையார் கோவில் திடலில் விளையாடிக்கொண்டிருக்கும்போது, வெள்ளைக்கரடுவரை போய்விட்டு வரலாம் என்று பாண்டி யோசனை சொன்னான். கரட்டை ஒட்டி ஏகப்பட்ட புதர்கள் இருக்கும். சப்பாத்திக் கள்ளிகளும் கருவேல மரங்களும் காவல் காக்கும் ஒற்றையடிப்பாதை வழியே வரும்போது கரட்டான்களும் பாம்புகளும் நத்தைகளும் மரவட்டைகளும் வெல்வெட் பூச்சிகளும் தவளைகளும் பார்க்கக் கிடைக்கும். தாத்தா வாத்தியாரின் காச நோய் வைத்தியத்துக்கு நத்தை பொறுக்க ரீஸஸ் பீரியடில் எங்களை அழைத்துச் செல்லும்போது பார்த்திருக்கிறேன்.

எங்கள் வீட்டில் அந்தப் பக்கமெல்லாம் போக விடமாட்டார்கள். பெண் குழந்தைகளுக்குச் சமமான பாதுகாப்புடன் என்னை வளர்த்து வந்தார்கள். பாண்டி இருந்த தைரியத்தில், அப்பா மறைவுக்குப் பிறகு அம்மா திண்ணையில் உட்கார்ந்து ஊர்ப்பெண்களுடன் வம்பு பேசுவது குறைந்துவிட்ட தைரியத்தில், அண்ணன்மார் எவரும் தற்சமயம் ஊரில் இல்லை என்ற தைரியத்தில், பாண்டியின் யோசனைக்கு உடன்பட்டேன். வழியில் காய்ந்தும் பச்சையாகவும் கிடந்த மலக் குச்சங்களைப் பார்க்கும்போதெல்லாம்,

தாயில்லாப் பிள்ளெ கெடக்கு. பாத்து வா.

என்று எச்சரித்தபடி கைபிடித்துக் கூட்டிப் போன பாண்டி, சட்டென ஓரிடத்தில் என் கையை அழுத்தி நிறுத்தினான். உதட்டில் ஆள்காட்டி விரலை வைத்து எச்சரித்தான். அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் முத்தாச்சி குத்த வைத்து அமர்ந்திருந்தாள்.

இடுப்புக்கும் மேலே வழித்தேற்றிய சேலைக்குக் கீழே பளிங்கு போலப் பளபளத்த புட்டத்தை விடவும் என் கவனத்தைக் கவர்ந்த வேறு ஒரு சங்கதி இருந்தது. அவள் கம்பீரமாக சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தாள். இதெல்லாம் ஆம்பளைகள் சமாசாரமில்லையா என்று ஒரு கணம் தோன்றியது. என்றாலும், பெண்கள் சம்பந்தமான பிற்கால அறிதல்கள் பலவற்றுக்கு ஒரு ஆரம்பப்புள்ளியாய் அந்தச் சுருட்டு என்னையறியாமலே எனக்குள் ஏறி அமர்ந்தது.

எஸ்ஸெஸ்ஸெல்ஸியில் நல்ல மதிப்பெண் வாங்கி பள்ளிக்கூடத்தில் இரண்டாவது மாணவனாகத் தேறியபோது, கரட்டுப்பட்டிப் பிள்ளையாரைப் பார்த்து நன்றிகூறி வரச் சொன்னாள் அம்மா. மீசை அரும்பிவிட்ட பருவம் என்பதால் தனியாகச் சென்றுவர அனுமதி கிடைத்தது. பிள்ளையாருக்கு விடல் போட்டுவிட்டு ஊருக்குள் போனேன்.

கடைவாசலில் கால்நீட்டி உட் கார்ந்து பஞ்சுபோல் முழுக்க நரைத்த தலைமுடியை ஈருவளியால் சிடுக்கெடுத்துக்கொண்டிருந்தாள் முத்தாச்சி. ரவிக்கை போடும் வழக்கம் இல்லாதவள். இடது முலை சேலைக்குள் பாதி மறைந்தும் பாதி தெரிந்தும் அவள் இடுப்பில் நிரந்தரமாகச் செருகியிருக்கும் சுருக்குப்பையின் சாயலுடன் ஆடியது. அக்குள் ரோமங்களில் நரை பாய்ந்திருந்தது. தெருவில் நடந்துவந்து அவள் கடை வாசலில் நின்றுவிட்ட என்னைக் கண்களைச் சுருக்கிப் பார்த்தாள்.

ஆத்தாடி, ஐயரு மகென்தானே, அம்மா நல்லாருக்காகளா சாமீ?

என்று கூவினாள். வியாபாரப் பொருட்களைப் பரத்திய திண்ணையின் ஓரமாக எஞ்சியிருந்த இடத்தில் என்னை உட்காரச் சொன்னாள்.

கலர் சாப்புடுறீகளா?

நாலே வருடத்தில் முத்தாச்சிக்கு இருபது வயது கூடிவிட்ட மாதிரிக் கிழடு தட்டியிருந்தாள். அதற்கு இரண்டு வருடங்கள் கழித்து இடது மார்பில் புற்றுநோய் தாக்கி சில மாதங்கள் போராடிவிட்டு இறந்தே போனாள் என்று கேள்விப்பட்டேன். நான் பார்த்த நாளில் அந்த நோய் வேர்பிடித்து ஆழ இறங்கத் தொடங்கியிருக்கலாம் ஒருவேளை, அவளே அறியாதவண்ணம்.

வாத்தியார் வீடு பூட்டிக்கெடக்கே ஆச்சி?

அதையேங் கேக்குறீக? அவுகதேன் ஊரெ விட்டே போய்ட்டாகளே?

அப்பிடியா? எந்தூருக்குப் போனாங்க ஆச்சி?

தேவதானப்பட்டிக்கி அங்குட்டு ஏதோ ஒரு பள்ளிக்கொடமாம்.

ஏன், என்னாச்சு?

அது பெரீய்ய கதெ சாமி.

போனவருடம் சாமிகும்பிடு முடிந்த மறுநாள் ஊர்ப்பெண்கள் எல்லாம் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்று முல்லையாற்றில் கரைத்துத் திரும்பினார்கள் அல்லவா, வாத்தியாரின் மனைவி சிரித்து முத்தாச்சி பார்த்தது அன்றுதான் கடைசி.

தொடர்ந்து நாட்கணக்காக உற்சவம் நடத்தி முடித்த களைப்பில் ஊரே உறக்கத்தில் மூழ்கிக் கிடந்தபோது, ராஜூ வாத்தியாரின் வீட்டுக்குள் திருடன் புகுந்துவிட்டானாம். உடைந்த சுவர் வழியாக முற்றத்தில் நுழைந்து பம்மிக் காத்திருந்திருக்க வேண்டும் என்பது முத்தாச்சியின் யூகம்.

நள்ளிரவில் குட்டிச்சுவருக்கு இந்தப்புறம் சிறுநீர் கழிக்க எழுந்து வந்தாளாம் முத்தாச்சி. வாத்தியார் வீட்டிலிருந்து வாட்டசாட்டமான ஒரு ஆள் இறங்கி ஓடியிறங்கியிருக்கிறான். வீட்டுக்குள் வாத்தியார் சம்சாரம் அழும் சப்தமும் வாத்தியார் அவளுக்கு சமாதானம் சொல்கிற மாதிரியும் கேட்டதாம். இதுவரை சாதாரணமாகச் சொல்லி வந்த முத்தாச்சியின் குரல் சடாரென்று தழைந்தது.

ஏஞ் சாமீ, களவாங்க வந்தவன் வீட்லயிருந்து எறங்கி ஓடுறான். நம்ம கூட்டாளமிண்டா என்ன செய்வோம்? திருடன் திருடன் ஓடுறான் புடிண்டு அலற மாட்டோம்? வாத்தியார் வீட்லெருந்து ஒரு சின்ன மொனக்கங்கூட இல்லே.

ம்

அதுனாலெதான் எனக்கு இன்னமும் சந்தேகம் . . .

இருந்த இடத்தில் இருந்தவாறே, பாவனையாக என் காதருகில் தன் உதட்டைக் கொண்டுவந்தாள் முத்தாச்சி. குரலில் மேலும் கொஞ்சம் ரகசியம் சேர்ந்தது.

. . . வந்தவென் வெறுங்கையோட ஓடுன மாரித்தான் இருந்துச்சு சாமி. அவன் ஓடுன சீரெப்பாத்தா பொருளெக் களவாங்க வந்தவனெ மாரித் தெரீலே. ஆனா, அவென் சீவரங்கொளத்தான் இல்லேண்றது மட்டும் நிச்சியம். அவிங்ய ஆளுமேல கைவய்க்க மாட்டாங்ய.

இதற்குள் முத்தாச்சியைப் பார்ப்பதற்காக இரண்டு பெண்கள் வந்து சேர்ந்தார்கள். தாயும் மகளும்போல இருந்தார்கள். இருவர் முகத்திலும் உயிர்க்களை இல்லை. அந்தப் பெண் தேவையில்லாமல் அடிக்கடி தன் அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறாள் என்று எனக்குத் தோன்றியது. என்னிடம் பேசிய போது இருந்த பாவத்துக்குச் சம்பந்தமேயில்லாத அதிகாரத் தொனியில் முத்தாச்சி கேட்டாள்

எந்தூரு?

நீரேத்தான்.

பதில் சொன்ன மூத்தவளின் குரலில் லேசான நடுக்கம் இருந்தது. நான் முத்தாச்சியைப் பார்த்துத் தலையாட்டிவிட்டுக் கிளம்பினேன். எதிர்ச்சாரிப் பொட்டலில் மண்டியிருந்த எருக்கலஞ்செடிகளின் ஊடாகப் பழுப்பும் வெள்ளையும் கலந்த நாய் ஒன்று புகுந்து ஓடியது.

ஞாபகத்தின் ஆழ்பரப்பில் புதையுண்டு கிடக்கும் எந்த ஒரு சம்பவமாவது தனியாகக் கிடக்கிறதா, சொல்லுங்கள்? வியர்த்த உடம்புடன் மணல்தரையில் புரண்டு எழுந்த மாதிரி, மேற்பரப்புக்கு எழுந்துயரும் எந்தவொரு நிகழ்ச்சி, தனிநபர், அல்லது நாளுடனும் பல்வேறு உபரி நினைவுத் துகள்கள் ஒட்டிக்கொண்டு வரத்தானே செய்கின்றன. ராஜு வாத்தியார் என்ற பெயர் தன்னுடன் இழுத்து வரும் வால் வெகு நீளமானது. கரட்டுப்பட்டி, முத்தாச்சி, அவ்வையார், ராஜு வாத்தியாரின் கருகருவென்ற சுருள்முடி, இடது கைக் கட்டை விரல் நகத்தில் அவர் நாலைந்து தடவை தட்டிவிட்டுத் திறக்கும் பழுப்புநிறப் பொடி மட்டை, கரும்பலகையில் சச்சதுரமாகத் திரண்டு வரும் சாக்பீஸ் எழுத்துகள், முல்லையாற்றுக்கரையில் சாயங்காலம் அவருடன் நடந்து வரும் அவரது மனைவி, அந்த அம்மாளின் நிமிர்ந்த நடையில் மிளிரும் கம்பீரம் . . .

ராஜு வாத்தியாரைவிட அவருடைய மனைவி ஒரு பிடி உயரம். வாத்தியார் நல்ல சிவப்பு நிறம். உள்ளங்கைகள் செக்கச்செவேலென்று பூவிதழ்கள் மாதிரி மிருதுவாக இருந்தது நினைவு வருகிறது. அந்த அம்மாள் சற்று நிறம் மட்டுத்தான். எங்கள் ஊர்ப்பக்கம் புதுநிறம் என்பார்கள். இருந்த கொஞ்ச மாதங்களில் அவர்கள் வீட்டுக்கு வாரந்தோறும் சென்று வந்திருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சேரும் குமுதத்தைச் செவ்வாய்க்கிழமை கொண்டு கொடுப்பதும், வியாழன் அல்லது வெள்ளியன்று திரும்ப வாங்கி வருவதும் என்னுடைய வேலை.

இருவரும் சேர்ந்திருக்கும் சந்தர்ப்பங்களில் நேருக்கு நேராகப் பேசிக் கொண்டு நான் பார்த்ததே கிடையாது. பள்ளிக்கூடத்தில் சதா பேசிக் கொண்டே இருக்கும் வாத்தியார், வீட்டுக்குள் நுழைந்ததும் மௌனமாகிவிடுகிறாரே என்று தோன்றும். அவர்கள் வீட்டினுள் எப்போதுமே நிலவும் அமைதி எங்கள் வீட்டின் சூழ்நிலைக்கு நேர்மாறானது. கொண்டாட்டமாகவோ, தகராறாகவோ மனிதக் குரல்களும், பெரியக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததையொட்டி வீட்டுக்குப் புதிதாக வந்திருந்த பிலிப்ஸ் வால்வு ரேடியோவின் சினிமாப் பாட்டுகளும், சமையலறையில் எந்நேரமும் இருந்துகொண்டிருக்கும் பாத்திர ஒலிகளும் எனச் சதா ஓசையால் நிரம்பியிருக்கும் வீடு எங்களது. இந்த வித்தியாசத்தைப் பற்றி அம்மாவிடம் ஒருநாள் கேட்டேன்.

கொழந்தையில்லாத வீடு இல்லையா? நிசப்தமாத்தான் இருக்கும்.

என்று சுலபமாகச் சொன்னாள்.

சோழவந்தான்- நிலக்கோட்டையை இணைக்கும், வாகனப் போக்குவரத்து நிறைந்த, தார்ச் சாலையை ஒட்டிய வளாகத்தில் உள்ள வீடு எங்களுடையது, ஊர்க் கோடியில் ஆள் நடமாட்டமே அரிதாக இருக்கும் பகுதியில் ராஜு வாத்தியார் வீடு இருந்தது என்பது அவள் சொல்லாத இன்னொரு காரணம்.

நினைவில் பதிந்த எண்ணற்ற முகங்கள் தாமாகக் கொள்ளும் சுழற்சிவிதியின் பிரகாரம், ராஜு வாத்தியார் முகமும் விதவிதமான சந்தர்ப்பங்களில் ஞாபகம் வந்து போகும். ஆனால், அவரைத் தவிர வேறு நினைவு இல்லாதபடி மனம் குவியக் கிடைத்த சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. நான் வேலையில் சேர்ந்தது 1983 ஏப்ரல் 7ஆம் தேதி. முன்னரே சொன்னபடி, அன்றிரவில் அழுத்தமாக மேலெழுந்த ராஜு வாத்தியார் ஞாபகம் வேறு இரண்டு சந்தர்ப்பங்களிலும் தீர்க்கமாக நினைவு வந்தது.

ஒன்று, 79-ல். கல்லூரி நூலகத்திலிருந்த தனிப்பாடல் திரட்டு நூலை எடுத்துப் படித்து வந்த ஒரு நாளில், அவ்வையார் பாடியதாக எங்களுக்கு ஒரு கதைபோல விரிவாக ராஜூ வாத்தியார் சொன்ன, பேய்ச் சுவரை நிறுத்திய, பாடல் அந்தப் புத்தகத்தில் இருந்தது.

அந்தப் பாடலைப் பாடியவர் கம்பர். அவ்வையார் இல்லை. இந்தத் தகவல் தெரிந்த கணத்தில் என் மனம் முழுக்க ராஜு வாத்தியார் நிரம்பினார். அவர் சொல்லி நினைவிலிருக்கும் பழம் பாடல்கள் அத்தனைக்கும் நேர் எதிரில் மானசீகமாக நிலைகொண்டிருந்த புலவர்களின் பெயர்கள் இடம்பெயர்ந்து கொசுக்கள்போலத் தன்னிச்சையாகப் பறக்க ஆரம்பித்தன.

அதன் பிறகு, நானும் எழுதவென்று ஆரம்பித்த பின்னர், ராஜு வாத்தியாரின் அருமை வேறு ஒரு விதமாகத் தெரிய வந்தது. எங்கோ நடந்துகொண்டிருந்த அவ்வையாரையும் அந்தப் பாடலையும் கரட்டுப்பட்டி ஊருக்குள் அழைத்துவந்த தன் சிருஷ்டிகரமும், அதன்வழியே என்றும் மறக்கவியலாதபடி என் மனத்தில் பதிய வைத்த பயிற்றுவிக்கும் கலையும் வெகு விசேஷமானவையாகத் தென்பட்டன.

புரவலர்களையும் மன்னர்களையும் அரசவைகளையும் பரிசில்களையும் மாணாக்கர்களையும் விமர்சகர்களையும் எதிரிகளையும் இழப்புகளையும் தன்வசம் கொண்டிருந்த கம்பர் போன்ற காவியகர்த்தாவை விடவும், ஊரும் உறவும் அற்றுத் தனியாய்த் திரிந்த, உப்புக்குப் பாடி, புளிக்கும் ஒரு பாட்டுப் பாடிய, தேசாந்திரிக் கிழவிக்குத்தான் அந்தப் பாடல் நெருக்கமாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது என்றும் தோன்றியது.

இயற்றியவர் பெயர் மட்டுமில்லை, வேறு சில பாடபேதங்களும் ராஜு வாத்தியார் கூறிய பாடலுக்கு உண்டு. நெற்கூலி கொடுத்த பெண்ணின் பெயர் நீலி அல்ல, வேலி. அவள் பிறைநுதலாள் அல்ல, வாணுதலாள் . . . இப்போது வேறு ஒரு குழப்பம் வந்துவிட்டது. ஒருவேளை ராஜு வாத்தியார் சரியாகவே சொல்லி, நான் நினைவில் ஏற்றுக்கொண்ட பதிவுகள்தாம் தவறாக இருந்திருக்குமோ என்று.

அவர் சொன்ன பாடல் மட்டுமல்ல, அவர் சம்பந்தமாக நான் அறிந்து வைத்திருந்த விதமும் கூடத் தவறாக இருக்கலாம் என்பது புரிய 2002 வரை நான் காத்திருக்க வேண்டியிருந்தது, வாத்தியார் திருநெல்வேலிக் கொச்சைவழக்கில் பேசினாலும்கூட, புதுமைப்பித்தனின் கதையிலிருந்து இறங்கி வந்தவராய் இல்லாமல், கு ப ராஜகோபாலனின் கதையிலிருந்து இறங்கி வந்தவரோ என்ற சந்தேகத்தைக் கிளப்பிய ஒரு தருணம் வரும்வரை.

அந்த முறை வந்த ஞாபகத்தில் இன்னும் முக்கியமான அம்சம் ஒன்று இருந்தது. ஒரே சமயத்தில் தத்துவார்த்தமாகவும் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்ததாகவும் மனம் பிளவுகொண்டது. உலகம் மிகவும் சுருங்கிவிட்டது போன்ற சித்திரம், அல்லது ஒன்றுக்கொன்று தொடர்பற்ற ஏகப்பட்ட விஷயங்களை ஒன்றாக நான் கோத்துப் பார்ப்பதால் அது சுருங்கிவிட்ட மாதிரித் தோன்றுகிறதோ என்ற சந்தேகம் ஒருபுறம். மறு புறம், இனம்புரியாத ஒரு வேதனை மனத்தில் கனத்தது. அதற்கு முன்புவரை ராஜுவாத்தியாரை நான் நினைவுகூர்ந்த சந்தர்ப்பங்களெல்லாம் சந்தோஷத்தால் நிரம்பியவை . . .

பத்மினி தன் தாயாருக்கு உடல் நலம் சரியில்லை என்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பிறந்தகம் சென்றிருந்தாள். மனித வாசனை முழுக்க அற்றுவிட்டது போன்ற இறுக்கம் சூழ்ந்திருந்தது வீட்டை. நான் மட்டும் தனியாக இருந்தேனா, கொசுக்களுக்குச் சமமாகத் தனிமையும் மண்டி ரீங்கரித்தது.

பொழுதின் கழுத்தில் கை வைத்து நெட்டித் தள்ளுவதற்காக, பழைய தினசரிகள் பத்திரிகைகள் கிடந்த மர அலமாரியைக் குடைந்து கொண்டிருந்தேன். ஆங்கில தினத்தாளுக்கு ஈடாகப் பெண்கள் பத்திரிகைகள் விதவிதமாகச் சேர்ந்திருந்தன. நூதனமான சமையல் குறிப்புகளுக்காக பத்மினி அவற்றை விடாமல் வாங்கிச் சேர்ப்பாள். அவளுக்கும் அவளுடைய தாயாருக்கும் நடந்த உரையாடல் நினைவு வந்தது.

விதவிதமாச் சமைச்சுப்போட்டு கொழந்தைகளுக்கு இப்பிடி நாக்கை வளத்துவிடறயே பத்தா.

அது சரி. ஒனக்கு உண்டைக் கட்டி சாதமும் ஒரு கரண்டி தயிரும் போதும். எல்லாரும் ஒன்னை மாதிரி இருப்பாளா? ஒத்தொருத்தர் ருசியும் பசியும் ஒவ்வொரு மாதிரி.

மிகப் பிரபலமான பத்திரிகைக் குழுமம் சென்ற வருடம் தொடங்கியிருந்த பெண்கள் பத்திரிகையின் பழைய இதழ் ஒன்று அகப்பட்டது. புரட்டினேன். பொதுவாக இது போன்ற பத்திரிகைகளில் இருக்கும் வழக்கமான சமாசாரங்கள்தாம், சமையல், கை வேலைப்பாடுகள், பதினாறு புள்ளி எட்டுவரிசைக் கோலம், வீட்டிலிருந்தே பணம் சம்பாதித்தல், ஜோசியம், அசட்டுத்தனமான ஓரிரு சிறுகதைகள் என்று.

ஆனால், இந்தப் பத்திரிகைகளில் வாசகர் பங்கேற்பாக வரும் பகுதிகள் சுவாரசியமாக இருக்கும். அதிலும்கூட, வெள்ளைப்படுவது, மார்பகம் விகிதாசாரக் குறைவாகச் சுருங்கியிருப்பது, விடாய்க் காலத்தில் பிறப்புறுப்பில் தாளமுடியாத நமைச்சல் என்பது போன்று மருத்துவரிடம் நேரில் சென்று ஆலோசனை கேட்க வேண்டிய விஷயங்களை நாலு வரிப் போஸ்ட் கார்டில் எழுதிப் போடும் வாசகிகள் உண்மையிலேயே வாசகிகள்தாமா, அல்லது ஆசிரியர் குழுவின் கற்பனைக்குப் பெயர் மட்டும் நல்குகிறவர்களா என்று சந்தேகமும் உண்டு. தவிர, பெண்கள் பத்திரிகையில் ஆண்களுக்கான தனிப்பகுதியோ இது என்றும் சந்தேகம்.

நான் பார்த்த இதழில், வாசகியர் தம் வாழ்வின் சில அந்தரங்கமான நெருக்கடிகளில் எடுக்க நேர்ந்த முடிவு சரியா தவறா, தொடர்ந்து தான் எந்தத் திசையில் செல்வது என்ற குழப்பத்தை முகம் தெரியாத எண்ணற்ற சக வாசகியருடன் பகிர்ந்துகொள்ளும் பகுதி ஒன்று இருந்தது. முந்தைய இதழில் விரிவாக வெளியான கடிதத்தின் சுருக்கம் இந்த இதழில் பிரசுரமாகியிருந்தது. விஷயம் இதுதான். கணவரை இழந்தவரான அறுபத்தைந்து வயது வாசகி ஒருவர். இளம் வயதில் தம்மைக் காதலித்தவர் இப்போது திரும்பவும் தன் வாழ்க்கையில் குறுக்கிட்டிருக்கிறார், தம்மோடு வாழ வரும்படி அழைக்கிறார், குழந்தைகள் அரைக் கிழமாகிவிட்ட நாட்களில், பேரக்குழந்தைகள் கல்லூரி செல்லும் நாட்களில், சமூக மரியாதையும் நெடுநாள் காதலும் எதிரெதிராய் இழுக்கும்போது தாம் என்ன முடிவெடுப்பது என்று வாசகியரிடம் ஆலோசனை கேட்டிருந்தார்.

இந்த இதழில் வாசகியர் வாக்களித்திருந்த விதம் அசாதாரணமானது. 97 சதவீதம் காதலருடன் வாழச் செல்லும்படி அறிவுறுத்தியிருந்தது. 3 சதவீதம் மட்டும் பலவீனமான காரணங்களைச் சொல்லி வேண்டாம் என்று கூறியிருந்தது.

தொடர்ந்து, இந்த இதழுக்கான கட்டுரைக் கடிதம். சாய்வு நாற்காலியில் சென்று உட்கார்ந்து கொண்டு சாவகாசமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

அன்புள்ள தோழியருக்கு,

முதலில் என்னைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே சொல்லி விடுகிறேன். அப்போதுதான் என் பிரச் சினை உங்களுக்கு நன்றாகப் புரியும்.

நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். வீட்டின் செல்லக் குழந்தை. மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் அன்பானதாய் தந்தையரும் என்று ஆனந்தமாகப் போய்க் கொண்டிருந்த இளமைப் பிராயம். அந்த நாட்களில் நான் ஏறாத மரமில்லை. நீந்தாத நீர்நிலை இல்லை. பனைமரத்தில் நான் ஏறும் வேகத்தைப் பார்த்து என் சகோதரர்களே ஆச்சரியப்படுவார்கள். பாவாடையை ஏற்றிச் செருகிக்கொண்டு கபடி விளையாடுவேன். என் பால்ய ஞாபகங்களில் நான் பாண்டியோ பல்லாங்குழியோ விளையாடியதாக நினைப்பே இல்லை.

பருவ வயதை எட்டியபோது, இத்தனைபேருடன் இருந்தபோதும், ஒருவிதமான தனிமையை உணரத் தொடங்கினேன். கிராமத்தின் தெருக்களில் ஓடியும் சாடியும் நான் தீர்த்துக்கொண்ட தினவு, என் உடம்புக்குள் ஆழ ஆழப் புதைந்து கொண்டது. உடல் வளர்வதற்கு இணையாக எனக்குள் அது வளர்ந்துகொண்டும் போனது. எவ்வளவுதான் சுதந்திரம் நிலவும் வீடாக இருந்தாலும், பிறருடன் பகிர்ந்துகொள்ள முடியாதது அது. ரகசியமாகக் கிளைவிரித்துப் படரும் தாவரம்போல எனக்குள் வளர்ந்து வந்தது.

இந்த நேரத்தில் எனக்குத் திருமணம் பேசினார்கள். எங்களைப் போன்ற நடுத்தர வருமானமுள்ள குடும்பம்தான். நாகரிகமான மனிதர்கள். அந்த நாட்களில் பெண்ணைப் பெற்றவர்கள் படும் பண ரீதியான சிரமத்தையோ, மனச்சிக்கலையோ சற்றும் எதிர்கொள்ளாமலே என் பெற்றோர் என்னை மணமுடித்து அனுப்பினார்கள்.

வேறொரு கிராமத்தில் நாங்கள் தனியாகக் குடியமர்ந்தோம். அவர் மிருதுவானவர். அதிர்ந்து பேசக்கூடமாட்டார். எதிராளியின் மனத்தைப் புண்படுத்திவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருப்பார். சுத்தத்தைப் பற்றி அபார அக்கறை கொண்டவர். தினந்தோறும் சலவை உடைதான் அணிவார். சும்மா இருக்கும் நேரங்களில் வீட்டின் ஏதாவது ஒரு பகுதியைச் சுத்தம் செய்துகொண்டேயிருப்பார். ஒரு தடவை சொன்னார். மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையறாது நடந்துவரும் மாபெரும் போரில் இயற்கை கைக்கொள்ளும் கொடூரமான ஆயுதம் தூசிதானாம். இது தம்முடைய கண்டுபிடிப்பு அல்ல என்றும், ஏதோ ஒரு விஞ்ஞானப் புத்தகத்தில் படித்ததாகவும் சொன்னார்.

சைவப் பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவள்தான் நானும் என்றாலும் மசாலாப் பொருட்கள் கலந்த சமையலில் மிகவும் பிரியம் கொண்டவள். சமையலில் உப்பு புளி காரம் எண்ணெய் எல்லாமே மிதமாகத்தான் இருக்கவேண்டும் அவருக்கு. பத்தியச் சாப்பாடு மாதிரி. உறுத்தாத மெல்லிய மணம் உள்ள ஊதுபத்தியோ தசாங்கமோ சதா மணம் நிரப்பியி ருக்கும் வீடு. எல்லாமே தாறுமாறாகக் கிடக்கும் என் தாய் வீட்டின் சூழ்நிலைக்கு நேர் விரோதமாக நேர்த்தியும் அழகும் அலங்காரமும் அமைதியும் கொண்டிருந்த எங்கள் தனிவீடு முதல்நாள் முதலே வேறு யாருடைய வீடோபோலத் தோன்ற ஆரம்பித்துவிட்டது எனக்கு.

வீட்டின் சகல முனைகளிலும் நிலவிய அந்நியத்தன்மை எங்கள் படுக்கையறையையும் விட்டு வைக்கவில்லை. தாம்பத்திய வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லாமல்தான் பார்த்துக்கொண்டார் என்னவர். உண்மையில், இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரை என்னவர் என்று குறிப்பிடும்போது மிகவும் நெகிழ்வாக உணர்கிறேன். அவரை நான் அடைந்தது எனது பல ஜென்மப் பேறு என்று நிஜமாகவே நம்புகிறேன்.

இவ்வளவு இருந்தும், என் அக ஆழத்தில் ஒரு பள்ளம் இருப்பது போலவும், அது நிரம்பாமலே என் வாழ்நாள் கழிந்துகொண்டிருக்கிறது என்கிற மாதிரியும் உணர ஆரம்பித்தேன். ஏழு வருடங்கள் இப்படியே கழிந்தன.

ஏழாவது வருடத் துவக்கத்தில் எனக்கு ஒரு கனவு அடிக்கடி வரத் தொடங்கியது. எங்கள் ஊர்ப் பக்கம் கந்த சஷ்டியை ஒட்டி சூரன் வேடம் தரித்து வருவார்கள். அப்படிப்பட்ட ஒரு சூரன் என் கனவில் தவறாமல் வருவான். கல்த் தொட்டியாக ஆகியிருக்கும் என் அடிவயிற்றைக் கூர்மையான சூலத்தால் குத்திப் பிளப்பான். நானானால் சிரித்துக்கொண்டிருப்பேன்.

இந்நிலையில் எங்கள் வீட்டுக்குள் நள்ளிரவில் ஒருவன் புகுந்து விட்டான். திருட வந்தவனாகத் தான் இருக்க வேண்டும். கத்தி முனையில் எங்களை நிறுத்தித் தூணோடு கட்டிப்போட்டு விட்டு, அலமாரிச் சாவியைக் கேட்டு மிரட்டினான். என் முகத்திலும் அவர் முகத்திலும் டார்ச் லைட் ஒளி பட்டுப் பட்டு விலகியபோது பார்வை கூசியது எனக்கு. கண்களைச் சுருக்கிக் கொண்டு பார்த்ததில் வந்தவனுடைய உருவமும் முகமும் ஓரளவு துலங்கியது. இளைஞன்தான். வயது இருபத்தைந்தை ஒட்டி இருக்கலாம்.

என்ன நினைத்தானோ, எதைக் கண்டானோ, சடாரென்று என்னை நெருங்கி என் கட்டுகளை மட்டும் அவிழ்த்துவிட்டான். பல்லிடுக்கில் கவ்விய கத்திக்கு மறுபுறம் மலர்ந்த முறுவல் பயங்கரமானதாக இருந்தது. பிறகு அவன் என் கணவரின் கண்முன்னே என்னை . . . என்னை . . .

இதற்காகவே வந்தவன்போல இறங்கிப்போய்விட்டான். தான் தேடி வந்ததை விடவும் அதிகமாகவே கிடைத்துவிட்டதாக உணர்ந்தானோ என்னவோ.

நான் குமுறிக் குமுறி அழுதேன். என்னவர் அருகில் அமர்ந்து ஆறுதல் சொன்னார். விபத்தில் ஒரு அங்கம் ஊனமாகிறவர்கள் கிடையாதா, இதை ஒரு விஷய மாகவே நினைக்க வேண்டியதில்லை, யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ளலாம் என்றெல்லாம் பலவிதமாகத் தேற்றினார். சில விஷயங்களை அப்படியெல்லாம் மூடி மறைத்துவிட முடியாது என்பதுகூடத் தெரியாத அப்பாவி அவர். அவருடைய அன்பின் ஜ்வாலையில் அப்படியே பொசுங்கிவிட மாட்டோமா என்று ஏக்கமாக இருந்தது.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல வேறு இரண்டு பிரச்சினைகள் முளைத்தன. என்னவரின் அன்பில் ஒரு இம்மி அதிகரித்துவிட்டது போலவும், அதற்குக் காரணம் அவரால் இனி வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத அந்த இரவுதான் என்றும், தன்னுடைய உபரிப் பரிவின் மூலம் எனக்கும் அதை சதா நினைவூட்டி வருகிறார் என்றும் தோன்றத் தொடங்கியது எனக்கு. எங்களுக்குள் தொடுகை என்பதே அநேகமாக நின்றுபோய் விட்டது என்பதுபோக, நான் ஒரு பிச்சைப் பாத்திரத்துடன் எந்நேரமும் அவர் முன்னால் இறைஞ்சிக்கொண்டு நிற்பதுபோல உணர ஆரம்பித்தேன்.

இரண்டாவது விஷயம்தான் இன்னும் சிக்கலானது. சூலத்தால் கல்த் தொட்டியைப் பிளக்க வந்து சேரும் கனவுச் சூரனுக்கு ஒரு முகம் கிடைத்துத் தொலைத்தது. வேளை கெட்ட வேளைகளில் கண்முன் அந்தரத்தில் மிதந்து பழிப்புக் காட்டியது.

அதிக நாட்கள் இந்தச் சித்திரவதையைத் தொடர அனுமதிக்கவில்லை நான். என்னவரைப் பிரிந்து பிறந்தவீடு திரும்பிவிட்டேன். விட்ட இடத்திலிருந்து படிப்பைத் தொடர்ந்து நானாக உத்தியோகம் தேடித்தனியாக வாழ்ந்து தீர்த்து போன ஆண்டுதான் ஓய்வு பெற்றேன். நான் பிரிந்துபோவதாக அறிவித்த பிறகுகூட ஒரு சொல் வன்மமாக உதிர்க்காத, கோர்ட் படியேறாத உத்தமரைப் பிரிந்து வந்தது தவறோ என்று சமீபகாலமாக அடிக்கடி தோன்றுகிறது. வயதாகிவிட்டதில்லையா, குற்றவுணர்ச்சியின் வேகம் தாள முடியாததாக இருக்கிறது.

வாசகிகள்தாம் சொல்ல வேண்டும், நான் செய்தது சரியா தவறா என்று.

ஆனால், அவர்களிடம் இன்னொரு உண்மையையும் நான் மறைக்க விரும்பவில்லை. எனக்குள் ஒரு பள்ளம் நிரந்தரமாக இருந்து வந்தது என்று சொன்னேனில்லையா, அது நிரம்பித் ததும்பியதும் அந்த விபத்து நடந்த இரவில்தான் . . .

பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

*******

நன்றி: உயிர்மை

Jan 11, 2011

நான்காவது கனவு - யுவன் சந்திரசேகர்

யோசித்துப் பார்க்கும்போது அமானுஷ்யம் என்னும் ஒன்றே கிடையாதோ எனத் தோன்றுகிறது. சென்னையின் புறநகர்த் தெருவில் நடந்தவாறு, காதோரம் உள்ளங்கையில் எதையோ வைத்துக்கொண்டு, சற்றே சித்தம் பிறழ்ந்தவன்போலத் தனக்குத்தானே உரத்துப் பேசிக்கொண்டு போகும் தன் பேரன் வாஸ்தவத்தில் அமெரிக்காவிலுள்ள அவனுடைய பேரனுடன் yuvanஉரையாடுகிறான் என்று அறுபதுகளின் கடைசியில் அமரராகிவிட்ட என் தாத்தா இப்போது பார்த்தால் நம்புவாரா?

அல்லது, என் அத்தையை எடுத்துக்கொள்ளுங்கள். அவள் பெயர் வனஜாட்சி. இளம் வயதிலேயே  கணவரை இழந்தவள். ஒரே மகன் பட்டாளத்தில் இருந்தான். இன்னும் மணமாகாதவன். 71 பாகிஸ்தான் யுத்தத்தின்போது அத்தை எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள் - என்னுடைய தாத்தா திவசத்துக்கு ஆசாரச் சமையலில் உதவ. அவள் வந்த மறுநாள் வெள்ளிக்கிழமைக் காலை எங்கள் வீட்டுச்சுவரில் தொங்கிய முகம் பார்க்கும் கண்ணாடி தவறி விழுந்து நொறுங்கியது. என்னுடைய அம்மா கண்ணாடிச் சில்லுகளை ஒற்றியெடுக்கச் சாணி உருண்டை தேடிப் போனாள். நியாயமாக அந்த வேலையைச் செய்ய விரைபவள் அத்தையாகத் தான் இருக்கும்-அவளோ நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

உத்தரத்தைப் பார்த்து நிலைகுத்தின விழிகளிலிருந்து கரகரகரவென்று கண்ணீர் ஊற்றியது. என்னுடைய அப்பா அவளருகில் சென்று தோளைத் தொட்டு, என்னாச்சு வனஜீ என்று கேட்க முனைந்தார்.

'போயிட்டாண்டா, என் ஒத்தெப் பிள்ள போயிட்டாண்டா. என்னை ஒத்தெ மரமா நிக்கவிட்டுட்டுப் போயிட்டாண்டா' என்று குமுறி அழுதாள் அத்தை. நீண்ட நெடுங்காலமாகக் கைம்பெண்ணாய் இருந்துவரும் அவளுக்கு ஏதோ காரணத்தால் திடீரென்று மரை கழண்டுவிட்டதுபோலிருக்கிறதே என்று நாங்களெல்லாம் கவலைப்பட்டோம்.

ஆனால் சரியாக மறுநாளைக்கு மறுநாள் மிலிட்டரியிலிருந்து தந்தி வந்து சேர்ந்தது. கிழக்குப் பாகிஸ்தானில் வைத்து லட்சுமணன் - அதுதான் வனஜா அத்தையின் மகன் - எதிரியின் பீரங்கி வெடியில் அகப்பட்டுச் சிதறிவிட்டான் என்று சொன்னது. தேச சேவைக்கு மகனை அர்ப்பணித்த தாய்க்குத் தன் மரியாதையையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தது இந்திய அரசாங்கம்.

எங்களுக்கானால் ஆச்சரியம் தாங்கவில்லை. அது என்ன மாதிரியான தொலைத்தொடர்பு என்று புரியவும் இல்லை... எதற்கு இவ்வளவும் சொன்னேன் என்றால், ஒரு தலைமுறைக்கு அமானுஷ்யமாகத் தெரிவது இன்னொரு தலைமுறைக்கு நடைமுறையான விஷயமாக இருக்கிறது என்பதற்காகத்தான்.

நான் யார் என்றே சொல்லாமல் என் யோசனைகளை மட்டுமே சொல்லிக்கொண்டு போகிறேன், இல்லையா? அதன் காரணமாக, திடும்மென்று ஆரம்பித்து நான் சொல்லிவரும் விஷயங்களில் லேசாகப் புகைமூட்டம் படர்கிறது, இல்லையா? என்னைப் பற்றிய தகவல்களைச் சொல்லிய பிறகும், நான் சொல்லப்போகிற விஷயத்தை விஸ்தாரமாகச் சொல்லி முடித்த பிறகும் தற்போது நிலவும் இதே குழப்பம் தொடர்வதற்கான வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது.

இத்தனை வருஷம் கழித்து எனக்கே சற்றுக் குழப்பமாகத்தானே இருக்கிறது.

நான் சுந்தரேசன். தற்போது வயது அறுபத்தொன்று. விற்பனைப் பிரதிநிதியாகத் தொடங்கி, அகில இந்திய நிறுவனமொன்றின் நிர்வாக இயக்குநர் பதவிவரை உயர்ந்தவன். சென்ற வருடம்தான் ஓய்வுபெற்றேன். முதன்முதலில் கர்நாடகத்தில் உள்ள ஒரு மதுவடிப்பு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு சர்வதேச மென்பான நிறுவனம். அதன் பிறகு சிகரெட் நிறுவனம். கடைசியாக வேலை பார்த்த நிறுவனம் போதைப் பாக்குக்குப் பெயர் பெற்றது. இன்றைக்கு இந்தியா முழுவதும் இளைஞர்கள் சதா மென்றுகொண்டும் துப்பிக்கொண்டும் இருக்கிறார்கள் என்றால் அதில் என்னுடைய பங்களிப்பு கணிசமானது.

வாழ்நாள் முழுவதும் லாகிரி வஸ்துக்களை விற்றுவந்திருக்கிறேனே தவிர, அவற்றில் எதையும் நான் ருசிபார்த்ததுகூடக் கிடையாது.

எங்க சுந்தரம் மாதிரி ஒருத்தனைப் பார்க்க முடியாது. பாக்குத் துண்டு பல்லுலெ படாதே என் தங்கத்துக்கு. என்று இருபத்தைந்து வருடத்துக்கு முன் காலமாகிவிட்ட என் அம்மா அடிக்கடி சொல்வாள். பிதுர்லோகத்திலிருந்து பார்க்கும்போதும் அவள் என்னை எண்ணிப் பெருமைப்படத் தான் செய்வாள் என்று நம்புகிறேன். இந்த மாதிரி நம்பிக்கைகளுக்கும் நான் 'மிஸ்ட்டர் டீட்டோட்டல' ராக (அப்படித்தான் என் கடைசி நிறுவனத்தின் உபதலைவர் ஏ.கே. ஸின்ஹா என்னை அழைப்பார்) இருப்பதற்கும் நேரடித் தொடர்பு ஏதாவது இருக்கிறதோ என்னவோ?

ஆனால் எனக்குப் பிடித்தமான லாகிரி வேறு ஒன்று இருந்தது. தொழில் சார்ந்து ஊர் ஊராக அலையத் தொடங்கியவன் நான். பதவி உயர்ந்தபோது மாநிலம் மாநிலமாகத் திரிந்தவன். ஏழெட்டு முறை வெளிநாடு கூடச் சென்று வந்திருக்கிறேன், ஸிலோன், மாலத் தீவு, சிங்கப்பூர், பங்களாதேஷ், நேபாளம் என்கிற மாதிரி. அந்த நாட்களில், போகிற இடமெல்லாம் பரிச்சயமாகிற மனிதர்கள் விதவிதமான சம்பவங்களைக் கதைபோலச் சொல்வதைக் கேட்பதில் அலாதியான போதை எனக்கு.

சொன்னால் வியப்பீர்கள், யாருக்குமே சொல்வதற்கு ஒரு பேய்க்கதையோ பாம்புக்கதையோ இருக்கிறது அல்லது பரம்பரைப் பெருமைக் கதை. மேற்சொன்ன எதுவும் இல்லையா, ஒரு ராஜாராணிக் கதை நிச்சயம் உண்டு. வேற்றுமொழி பேசும் அயல் பிரதேசத்தில், எந்த நேரமும் ஏதோவொரு அவமானம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. அதற்குத் தன்னை சதா ஆயத்தப்படுத்திக்கொண்டு இருக்கும் மனத்தில் சன்னமான பீதி நிரந்தரமாக இருக்கும். மேற்படிக் கதைகளைக் கேட்பது என்னை நடைமுறை அன்றாடத்திலிருந்து விலக்கிக் காப்பதோடு, கதைசொல்லியின் மனத்தில் என் சம்பந்தமாக ஒரு நம்பிக்கையையும் இதத்தையும் உருவாக்கிவிடும்.

நான் கேட்ட கதைகள் யாவற்றையும் விடாமல் என் நாட்குறிப்பில் பதிவுசெய்து வந்திருக்கிறேன். சமீபத்தில் என் சிநேகிதன் ஒருவனிடம் அதைக் காண்பித்தபோது, அவன் வெகுவாக ஆச்சரியப்பட்டான். கதைகளில் குவிமையம், செய்தியென்றெல்லாம் எதுவும் இல்லாவிட்டாலும் சுவாரசியத்திற்குக் குறைவில்லையென்றும், நான் கேட்டவிதமாக மட்டும் கதைகளை எழுதாமல் சொந்தச் சரக்காகச் சில வர்ணனைகள், சில வாக்கியங்களைச் சேர்த்திருப்பதால் இவற்றுக்கு ஒரு தனித் தன்மையும் சமச்சீர்மையும் உருவாகியிருப்பதாகவும், இளம் வயதில் எழுதியவை என்பதால் மொழியில் ஒரு முறுக்கும் விறுவிறுப்பும் இருப்பதாகவும் தமிழில் தற்சமயம் எழுத்தாளர்களின் எண்ணிக்கையை விடப் பதிப்பகங்களின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கிறபடியால் என் குறிப்புகளை ஒரு புத்தகமாகப் போடுவது எளிது என்றும் சொன்னான்.

அவனுடைய ஏற்பாட்டின்படி, மேற்படிக் கதைகளை மாநிலவாரியாகப் பிரித்துப் புத்தகமாகப் போட ஒரு பிரசுர நிறுவனம் முன்வந்திருக்கிறது. நான் காலவரிசையில் அடுக்கலாம் என்றிருக்கிறேன் - அதாவது நான் அவற்றைக் கேட்ட கால வரிசையில்.

ஆரம்பித்த இடத்திலிருந்து வெகுதூரம் தள்ளிப்போய்விட்டது என்று நினைத்துவிட வேண்டாம், நான் கூறிய முதல் பத்தியின் பின்னணியில் இன்னொரு விஷயம் மிக முக்கியமானது. சமீபத்தில் பொழுதுபோகாமல் என் நாட்குறிப்பை வரிவிடாமல் வாசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தபோது தான் நானே இதைக் கண்டுபிடித்தேன்.

அதாவது, இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் கொலைகள் நடைபெற்ற நாட்களிலெல்லாம் நான் வேறு மாநிலங்களில் இருந்திருக்கிறேன் என்பதை.

ரயில்வே அமைச்சராக இருந்த லலித் நாராயண் மிஸ்ரா சமஷ்டிபூரில் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டபோது நான் பீகாரிலேயே இருந்தேன். ஜர்னெய்ல் சிங் பிந்தரன்வாலேயைக் கொல்ல ராணுவம் பொற்கோயிலுக்குள் நுழைந்தபோது மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் இருந்தேன். தமது பாதுகாவலர்களால் திருமதி. காந்தி கொல்லப்பட்ட தினத்தில் வங்காளத்தின் 24 பர்கானாஸ் மாவட்டத்தில். அவருடைய மகன் சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்த நாளில் மேகாலயாவில். ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட மறுநாள் ஆந்திரத்தின் கடப்பைக்கு அருகே ஒரு கிராமத்து ரயில் நிலையத்துக்கு வெளியே நாள் முழுவதும் தடுத்துவைக்கப்பட்ட ரயிலில் இருந்தேன். இப்படி ஒரு விசித்திரமான பிரயாணத் திட்டத்தை எனக்கு வகுத்துத் தந்த கரம் மானுடக் கரமாக இருக்கச் சாத்தியமே இல்லை.

நாட்குறிப்பைப் படித்துவந்த போது, கடப்பையில்-உண்மையில் கடப்பை தாண்டி, எர்ரகுண்ட்லாவும் தாண்டி, பிறகு வந்த சிறு நிலையத்தையும் கடந்தபிறகு வந்த கிராமத்தின் வெளிவிளிம்பில் - சந்தித்த அல்லூரி வெங்கடேச ராவ் சொன்ன கதை அழுத்தமாக நெஞ்சில் வந்து அமர்ந்தது. அதைத்தான் இப்போது சொல்லப்போகிறேன்.

அன்று அதிகாலையில் கடப்பையைத் தாண்டிக் கொஞ்சநேரம் ஊர்ந்த ரயில் திடீரென்று வேர் பிடித்த மாதிரி நின்றது. ஓட்டுநரும் கார்டும் ரயில் இப்போதைக்கு நகராது என்ற தகவலையும் அதற்கான காரணத்தையும் பெட்டிபெட்டியாக அறிவித்துக்கொண்டு சென்றார்கள். நாள் முழுவதும் நகராதிருக்கும் ரயில் பெட்டிக்குள் சும்மா உட்கார்ந்திருப்பது சாதாரண விஷயமில்லை. மே மாத வெய்யில் கனக்கத் தொடங்கும் போது, ரயில்பெட்டி கொதிக்கும் இட்லிக் கொப்பரையின் உட்புறம் போல வெம்மைகொள்ளும். முந்தின இரவு நமக்கு நண்பராகிய அயல் மாநிலத்துக்காரரை மறுநாள் காலையில் விரோதியாக்குகிற அம்சங்கள் பெருகத் தொடங்கும்.

போக்கிடம் இல்லாமல் நின்றுகொண்டிருக்கும் ரயிலுக்குள் சிறையிருக்கும் பயணிகளுக்குச் சாப்பாடு முதல் எல்லாமே பிரச்சினையாகி விடும் அல்லவா? அக்கம்பக்கத்து ஜனங்கள் திடீர் வியாபாரிகளாவார்கள். அவசரத் தயாரிப்பின் அவல ருசியும் அளவுப் பற்றாக்குறையும் எச்சில்தொட்டி நாய்கள்போல அடித்துக்கொள்ள வேண்டிவருவதும் ரயில் பயணிகளுக்குள் தீராத குரோதத்தை விளைவிக்கும். தவிர, வேறு வழியேயில்லாமல் நாற்பது ஐம்பது முகங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அந்தரங்கமான, விதவிதமான, கொலைவெறிகள் கூடிவிடும். தண்ணீர் காலியாகிவிட்ட கழிவறை சொந்த உடல்மீதே அசாத்தியமான வெறுப்பை உண்டாக்கும். குழந்தைகள் சலிக்காமல் அழும் ஒலி சதா கேட்டவாறிருக்கும்.

ரயிலைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினேன்.

பொதுவாகவே, கல் விளையும் பூமி அது. விதவிதமான அளவுகளில் தகடுகளாக வெட்டியெடுக்கும்போது விளிம்புகளில் சேதமுற்ற கல்பலகைக் கற்கள் சிதறிக்கிடந்தன. கண்ணுக்கெட்டியவரை ஆகாயத்தில் செருகிக்கிடக்கும் புகைபோக்கிகள் கொண்ட சிமெண்ட்டுத் தொழிற்சாலைகள் மண்டிய பிரதேசம். காலடியில் நிரநிரக்கும் மண்ணில் சாம்பல் நிறம் பூத்திருந்தது.

பாறைகள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட பெரும் பள்ளங்கள். கிணறுகள்போல ஆழம் கொண்ட அவற்றின் படுகையில் பாசிபடர்ந்த மழைத் தண்ணீர்மீது மேலும் தூசிகள் சென்று அடர்வது வெறும் கண்ணுக்கே தெரிந்தது. தரையையொட்டிக் கிடந்த அழுக்குத் தண்ணீரைக் குடிக்க இறங்கிச் சென்றிருந்த மைனா ஒருமுறை தலை நிமிர்த்தி என்னைப் பார்த்தது. கணவனும் மனைவியும்போலத் தென்பட்ட சக பயணிகள் இருவர் என்னை விரைந்து கடந்தார்கள். அந்தப் பெண் ஒரு புதருக்குப் பின் அவசரமாக ஒதுங்கினாள். அவன் அசட்டுப் பார்வையுடன் காவலுக்கு நின்றான்.

ரயிலின் சாந்தத்தில் ஏதாவது சலனம் இருக்கிறதா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்துசென்றேன். மெல்ல வேகம் எடுத்த காற்றில் வறட்சியும் வெம்மையும் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்தன. சிறிய தோட்ட வீடு போன்ற ஒன்று கண்ணில் தட்டுப்பட்டது. ஆலமரம்போல அகலித்து வளர்ந்த பிரம்மாண்டமான வேப்ப மரத்தின் நிழலில் சாவகாசமாக நின்றிருந்த வீடு.

அங்கேதான் வெங்கடேச ராவைச் சந்தித்தேன்.

கடப்பைக் கல் கழிவுகளைச் செங்கற்கள்போல உபயோகித்துக் கட்டப்பட்ட குடில் அது. வாசலில் சிறு கீற்றுக்கொட்டகை போடப்பட்டிருந்தது. அதற்குள் இரண்டு மர பெஞ்சுகள். வெளியில், மெருகேற்றப்பட்ட ஏகப்பட்ட கல்பலகைகள் சாத்திக் கிடந்தன. அவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் பிடிமானமேயற்று அந்தரத்தில் தொங்கின. நேர்கோடுகளே இல்லாத லிபிகொண்டது தெலுங்கு மொழி என்று ஒரு அபிப்பிராயம் தோன்றியது.

எனக்குத் தெலுங்கு வாசிக்கத் தெரியாது. ஆனால் மிகச் சரளமாகப் பேசவும் புரிந்துகொள்ளவும் முடியும். மெல்லின ஓசைகள் நிறைந்ததும், பல சந்தர்ப்பங்களில் மூக்கால் பேசுகிறார்களோ என்று தோன்றவைக்கிறதுமான மொழியைச் சங்கீதத்துக்கான சிறப்பு மொழி என்று காலங் காலமாகச் சொல்லிவருகிறார்களே, இதற்கெல்லாம் என்ன அடிப்படை என்று ஒரு சந்தேகம் உண்டு எனக்கு. வெங்கடேச ராவ் பேசுவதைக் கேட்டபிறகு, இந்த மாதிரியான மூத்தோர் கூற்றுகளில் சட்டென்று புலப்படாத ஒருவகை ஞானம் ஒளிந்திருப்பது தெரியவந்தது.

தொழில் காரணமாக ஆந்திரா முழுவதும் மூன்று வருடங்கள் சுற்றியலைந்திருக்கிறேன். கர்நூல் என்னுடைய தலைமையிடமாக இருந்தது அப்போது. தவிர, மார்க்கெட்டிங் துறையில் என்னுடைய அபார வளர்ச்சிக்கு புதிய பாஷைகளை விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறமையும் ஒரு காரணம் என்று என் முன்னாள் உபதலைவர் ஸின்ஹா பாராட்டுவார். ரூபாய் நோட்டில் போட்டிருக்கும் மொழிகள் பலவற்றிலும் என்னால் சரளமாகப் பேச முடியும். சொன்னால் நம்பமாட்டீர்கள், உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதியில் மைதிலி என்ற பாஷை பேசுவார்கள். அதில்கூட என்னால் சகஜமாக உரையாட முடியும்.

கொட்டகைத் தூணாக நின்ற மூங்கில் கழிகளில் சாத்தியும் தரையிலும் கிடந்த பலகைகள் பலவும் பெயர்ப் பலகைகள். எழுத்துகள் பிசிறில்லாமல் பொறிக்கப்பட்டிருந்தன என்பதுபோக, அவற்றின் அமைப்பில் ஒரு நேர்த்தியும் சுற்றிலுமிருந்த அலங்கார வேலையில் நூதனமான வடிவங்களும் இருந்தன. இவ்வளவு தேர்ந்த கைவேலைக்காரன் இப்படி ஒரு அத்துவான வெளியில் வந்து குடியிருக்கிறானே, வாடிக்கையாளர்கள் எங்கிருந்து வருவார்கள் என்று ஆச்சரியமும் ஆதங்கமும் ஒரே சமயத்தில் தோன்றின. குடிலின் பின்புறம் இருந்த கிணற்றின் உறைச் சுவரையொட்டிக் கிளம்பிய வண்டிப் பாதையின் தடம் முடியும் இடத்தில் உயர்ந்திருந்த நாலைந்து காரைக் கட்டடங்கள் சிறுநகரொன்று அண்மையில் இருப்பதற்கான தடயம் அறிவித்தன. என் முதுகுப்புறம் யாரோ செருமும் ஒலி கேட்டது.

என்ன வேண்டும்?

சற்றுக் கிறீச்சிட்ட குரல்தான். வயதான மனிதர். பல நாட்களாக மழிக்கப்படாத முகத்தில் முள்முள்ளாகப் படர்ந்திருந்த வெண்முடிகள். பஞ்சு வெண்மையில் அடர்த்தியாக இருந்த தலைமுடி. மீசை கிடையாது. தாடைவரை இறங்கியிருந்த வெண் கிருதா. ஆனாலும் முகச் சருமத்திலும் முன்னங்கைகளிலும்கூடச் சுருக்கங்கள் எதுவும் இல்லை. சாம்பல் நிற விழிகள் பார்வையை அகற்றவொட்டாமல் ஈர்த்தன.

சும்மாதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வியாபார விஷயமாக வரவில்லை.

அதுதான் தெரிகிறதே. அந்த ரயிலிலிருந்து இறங்கி வந்தவர் தானே....?

அசட்டுத்தனமாகச் சிரித்து வைத்தேன்.

... அதனால்தான் கேட்டேன். சாப்பாடா தண்ணீரா, என்ன வேண்டுமென்று!

கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்.

பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் சீசாக்கள் புழக்கத்துக்கு வராத காலகட்டம் அது. பெரியவர் வாய் அகண்ட ஒரு தாமிரப் போணியில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். ரயிலில் கிடைத்த தண்ணீர் போல இல்லை அது. புத்துணர்ச்சியும் மென்மையும் நிரம்பிய குளிர்நீர். என் ஆச்சரியத்தைக் கவனித்தவர் போல, 'மண்பானைத் தண்ணீர்' என்று புன்னகைத்தபடி குடிலின் உட்புறம் கையைக் காட்டினார். தண்ணீரில் ஏதோ வேர் போட்டிருப்பதாகச் சொன்னார். தெலுங்கு வேர். சரியாகப் புரியவில்லை.

குடிலின் வாசலைப் பார்த்தபோது இரண்டாவது ஆச்சரியம் தொற்றியது. அதன் உள் ஷரத்தாக, இத்தனை நேரம் இதை எப்படிக் கவனிக்காமல் விட்டேன் என்று ஒரு உப ஆச்சரியமும் கிளர்ந்தது.

நிமிர்ந்து நின்றிருந்த ஆளுயரச் சிலை ஒன்று. வெண் பளிங்கால் ஆன சிலை. இந்தப் பிரதேசத்தில் கிடைக்கும் கற்கள் படிவக் கற்கள் அல்லவா? முதிராத பாறைகள், சிற்பம் செய்ய லாயக்கற்றவை என்றல்லவா சொல்வார்கள்? எனக்கு சிற்பத்துக்கும் சிலைக்கும் வித்தியாசம் தெரியாது அல்லது இரண்டும் ஒன்றுதானா என்பதுகூடத் தெரியாது. என்றாலும், அசந்தர்ப்பமாக அந்த இடத்தில் நின்றுகொண்டிருக்கும் சிலையை அருகில் சென்று பார்க்கத் தோன்றியது. பெரியவரிடம் அனுமதி கேட்டேன்.

'தாராளமாய்' என்றார் அவர்.

முழுமையாக விளைந்த ஒரு ஆணுடம்பின் சிற்பம் அது. பொதுவாகக் கோவில் சிற்பங்களில் உள்ள திருத்தமும் நேர்த்தியும் சமகால நபர்களை வடித்த சிலைகளில் இருக்காதல்லவா? அசல் நபரின் தொலைதூர நகல் மாதிரிக்கூட இல்லாத பஞ்சுமிட்டாய் நிறங்களில் வர்ணம் பூசப்பட்ட, சிமெண்ட் பொம்மைகளை எத்தனை கிராமங்களில் பார்த்திருக்கிறேன். அவற்றின் காரணமாக உருவாகும் அரசியல் தகராறுகளையும் வெட்டுக் குத்துகளையும் சாமான்யர்கள் உயிரிழப்பதையும் எத்தனை செய்திகளில் படித்திருக்கிறேன். இந்தச் சிற்பம் அப்படிப்பட்டதல்ல. அதன் வடிவத்திலும் திருத்தத்திலும் ஒரு புராணிகத் தன்மை இருந்தது. இந்த நாள் ஆச்சரியங்களின் தினம் போல என்று ஒரு கணம் தோன்றியது. அந்த வாலிபன் தன் வலது கையில் ஒரு சுத்தியலையும் இடது கையில் உளியும் வைத்திருந்ததுகூடப் பெரிய ஆச்சரியம் அல்ல, அவனுடைய கண்கள் உயிருள்ள கண்கள் போலவே என்னைப் பார்த்தன என்பதுதான் பேராச்சரியம். விலகி நின்று வேறு கோணத்தில் பார்த்தபோதும் அவனுடைய கண்களின் வெண்ணிறக் கருவிழிகள் என்னைப் பார்த்தன. விழிகளில் சலனமெதுவும் இருக்கிறதோ என்று ஒரு சந்தேகம் உதித்தது. மின் அதிர்ச்சிபோல அச்சம் என் முதுகுத் தண்டில் தாக்குவதை உணர்ந்தேன். தவறான இடத்தில் வந்து வேண்டாத வேலையில் இறங்கிவிட்டேனோ?

"பரவாயில்லையே. ஒரு பார்வையில் கண்டுபிடித்துவிட்டீர்களே?" முதுகுப்புறம் கிறீச்சிட்ட குரல் மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது. திரும்பிப் பார்த்தேன். நான் என்ன கண்டுபிடித்தேன் என்று இவர் கண்டுபிடித்தார்?

"இந்தச் சிற்பத்தின் சிறப்பே அதுதான். எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் அது நம்மைப் பார்க்கிற மாதிரி இருக்கும். ஏன் தயங்கி நிற்கிறீர்கள்? இன்னும் கிட்டச் சென்று பார்க்கலாம். அது சிற்பம்தான். ஒன்றும் செய்துவிடாது..." குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

இன்னும் அருகில் சென்றேன். நெருங்கிப் பார்த்தபோது இன்னமும் தீர்க்கமாக ஆகியது சிற்பம். மார்பின் குறுக்கே ஓடிய பூணூலின் புரிகள் துலக்கமாகத் தெரிந்தன. சிங்கத்தின் பிடரி போன்று தோளில் படர்ந்திருந்த கேசத்தின் ஒவ்வொரு இழையும் துல்லியமாய்த் தெரிந்தது. ராஜஸ்தானிய பாணி உருமாலில் துணி மடிப்புகளும் சுருக்கங்களும் குச்சத்தின் நுனிப் பிசிறுகளும் தத்ரூபமாய் இருந்தன. கண் இமைகளின் முடிகள் ஒவ்வொன்றும் தனித் தனியாக நீட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தபோது எனக்கு மூச்சுத் திணறியது. பளிங்கின் நிறமில்லாமல் இயல்பான நிறங்கள் மட்டும் இருந்திருந்தால் உயிருள்ள ஆள் உறைந்து நிற்கிறான் என்றே நம்பியிருப்பேன்.... பெரியவரிடம் கேட்டேன்.

யார் செதுக்கிய சிற்பம் இது?

செதுக்கியதா? என்று கேட்டார்.

ஆழமாக இழுத்து ஒரு பெருமூச்சுவிட்டார். ஏதோ ஞாபகம் வந்த மாதிரி உதட்டோரம் சிறு முறுவல் உதித்தது.

நான் ஒன்றும் தவறாகக் கேட்டுவிடவில்லையே?

அட. அதெல்லாம் இல்லை. இந்தச் சிற்பத்தின் கதை பெரியதாயிற்றே. . .

தொலைவில் மரவட்டையின் பிரேதம்போல நின்றிருந்த ரயிலை ஒருமுறை பார்த்தார்.

.... அது இப்போதைக்குக் கிளம்பாது. உட்காருங்கள். சாவகாசமாகச் சொல்கிறேன். என்றவாறு குடிலின் உள்ளே சென்று திரும்பினார்.

ஒரு கையில் பருத்த சுரைக் குடுக்கையும் மறுகையில் ஒருவர் மட்டும் அமர்கிற மாதிரி சதுரமான கோரைத் தடுக்கும் கொண்டுவந்தார். தரையில் உட்கார்ந்து கொட்டகையின் தூணாக நின்ற கழியில் சாய்ந்துகொண்டார். தமக்கெதிரில் தடுக்கைப் போட்டு என்னை அமரும்படி சைகைகாட்டினார்.

குடுக்கையின் தக்கையைத் திறந்தவுடன் உறைந்து பல நாட்களாய்க் காடியேறிய ஊளைமோரின் புளிப்பு மணம் கொட்டகை முழுவதும் நிரம்பியது.

'கொஞ்சம் கள் சாப்பிடுகிறீர்களா?' - என்று என்னை நோக்கி நீட்டினார்.

'பழக்கமில்லை...' என்று தலையசைத்த மாத்திரத்தில், அவர் மனம் புண்பட்டுவிடக் கூடாதே என்று அவசரமாய்ச் சொன்னேன்.

"வாசலில் உள்ள பலகைகள் நீங்கள் பொறித்ததா? பிரமாதமாக இருக்கின்றன."

அவர் பெருமிதமாகச் சிரித்துக்கொண்டார்.

"சும்மாவா? நான் பிறந்த வம்சத்தின் பெருமை அல்லவா அது? இதோ நிற்கிறாரே, இவர் யார் தெரியுமா?..." - மூலையில் நின்ற சிற்பத்தை மோவாயால் சுட்டிக்காட்டினார். இதற்குள் நாலைந்து மிடறுகள் அருந்தவும் செய்திருந்தார். பேசுவதற்காக வாய்திறந்தபோது இன்னும் விசையுடன் புளிப்பு பீறியது.

கர்நாடகத்தில் ஒரு ராஜாவின் ஆஸ்தான சிற்பியாக இருந்தவர். எனக்கு இருபது தலைமுறைக்கு முந்தியவர்.

ஏயப்பா. பல நூறு வருஷம் ஆகியிருக்குமே. அவருடைய சிலைதானா இது?

அவசரப்படாதீர்கள். அதை நிதானமாகச் சொல்ல வேண்டும் என்றுதானே இதை எடுத்துவந்திருக்கிறேன்.

குடுக்கையைச் செல்லமாகத் தட்டினார். மெல்ல மெல்ல அவர் கண்கள் சிவந்து வந்தன. கொஞ்சமும் தடுமாறாத மொழியில், ஏற்கனவே பலதடவை சொல்லி ஒத்திகை பார்த்துக்கொண்டது போன்ற நிதானத்தில், தான் காண்கிற கனவைக் காணும்போதே அடுத்தவருக்குச் சொல்கிற மாதிரிக் கிறக்கத்தில் சொல்லிக் கொண்டே போனார். இதுபோல ஆழ்ந்து கதை சொன்ன பலபேர் என் முகத்தைத் திரைபோலப் பாவித்து அதில் தெரியும் காட்சிகளை எனக்கே எடுத்துச் சொல்கிறவிதமாக என்னை உற்றுப் பார்ப்பதை ரசித்து அனுபவித்திருக்கிறேன். இவர் கதை சொல்லும்போது என் முகத்தை ஊடுருவிப் பார்த்தபடி சொன்னார். எனக்குப் பின்புறம் வேறெங்கோ தற்சமயம் நடந்துகொண்டிருக்கும் உண்மைக் கதைபோலும் அது.

.... கர்நாடகத்தில் ஒரு ராஜா என்று சொன்னேனே, அது எந்த ராஜா, எந்தக் காலகட்டம் என்று சொல்வதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. எங்கள் வம்சம் வெகு கறாராகக் கடைப்பிடித்துவரும் ரகசியம் அது. ஊரையும் பேரையும் சொன்னால் தீராத சாபம் பிடித்துவிடும். தெற்குக் கர்நாடகத்தில் ஒரு பிரம்மாண்டமான சிவன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தார் அந்த ராஜா.

என் மூதாதை - அதுதான் இங்கே சிலையாக நிற்கிறாரே, அவர் - அந்தச் சமயத்தில்தான் கர்நாடகம் வந்து சேர்ந்தார். அவருடைய பூர்வீகம் ராஜஸ்தானம். கல் தச்சர்கள் பரம்பரை. குடும்பத்தவரோடு ஏதோ பிணக்கு ஏற்பட்டு வெளியேறிவிட்டார். அப்போது இருபத்தோரு வயது அவருக்கு. தனியராகவும் கைவசம் சாமான் மூட்டை எதுவுமின்றியும் தம் முன்னால் வந்து நின்ற வாலிபனைப் பலவாறாகக் கேள்விகள் கேட்டு இவர் ஒரு சிற்பி என்று அறிந்துகொண்டார் ராஜா. கோவில் பணியில் சில சில்லறை வேலைகளைக் கொடுத்தார். இவருடைய வேகமும் திறமையும் ஒரே வாரத்தில் வெளிப்பட்டுவிட்டதாம். உடனடியாகப் பெரிய வேலைகளை இவர்வசம் ஒப்படைத்தார்.

குறிப்பாக, கோவிலில் விழா மண்டபத்தின் முகப்பில் நிறுத்துவதற்கான பெண் சிலை. பொதுவாக, அந்தக் காலகட்டத்தில் கருங்கல் அல்லது மாக்கல்லில்தான் சிற்பங்களைச் செதுக்கிவந்தார்கள். நமது சிற்பி ராஜஸ்தானத்தைச் சேர்ந்தவரல்லவா? வெண்பளிங்கில் வடிக்க முடிவெடுத்தார். ஆனால், கல்லைத் தேர்ந்தெடுக்கத் தம் பூர்வீக ராஜ்யத்துக்குப் போக மறுத்துவிட்டார்.

ராஜாவின் ஏற்பாட்டில் ராஜஸ்தானத்திலிருந்து தரமான கற்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவருவதற்கு நாற்பத்தியிரண்டு சிற்பிகள் கொண்ட ஒரு குழு ராஜஸ்தானம் புறப்பட்டுச் சென்றது. அவர்களுக்குப் பதினைந்து நாள் பாடம் சொல்லிக் கொடுத்தாராம் நமது சிற்பி. அறுபது யானைகள் சுமந்துவந்த பளிங்குக் கற்கள் கர்நாடகம் வந்து சேர்வதற்கு மூன்று மாதங்கள் பிடித்தன. அதுவரை ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சிற்பி, கற்களைப் பொறுப்பெடுத்துக்கொண்ட மாத்திரத்தில் பிசாசுபோல இயங்க ஆரம்பித்தார்.

உசிதமான கல்லைத் தேர்ந்தெடுக்க மட்டுமே ஒரு மாதம் ஆகிவிட்டதாம். தினசரியும் காலையில் கற்கள் குவிக்கப்பட்டிருக்கும் திடலில் வந்து ஒவ்வொரு கல்லையும் அங்குலம் அங்குலமாகத் தட்டி அதன் நாதத்தைக் கேட்டுக்கொண்டிருப்பாராம். முடிவாக ஒரு கல்லைத் தேர்ந்தெடுத்தார். அன்றாடம் நீராடிவிட்டு வந்து அதன் முன்னால் உட்கார்ந்து தியானத்தில் ஆழ்ந்துவிடுவாராம். சரியான முகூர்த்த நாள் ஒன்று பார்த்து, அன்று சிற்பப் பணி ஆரம்பித்தது.

ராப்பகலாக வேலை. அவருக்குத் தாம்பூலம் தரிக்கும் வழக்கம் உண்டு. பிரம்மச்சாரி என்பதால் சுயம்பாகமாகச் சமைத்துச் சாப்பிடுபவர். பல நாட்கள் வேலை மும்முரத்தில் தாம்பூலம் தவிர வேறெதுவும் சாப்பிடாமலே பொழுது கழிந்துவிடுமாம். சுபாவமாகவே பிறருடன் அதிகம் உரையாடல் எதுவும் வைத்துக்கொள்ளாத தனிமை விரும்பி. இந்த வேலையை ஏற்றுக்கொண்டதன் பிறகு பேச்சு இன்னமும் குறைந்துவிட்டது.

இவருக்குத் தனியாக ஒரு விஸ்தாரமான குடில் அமைத்துத் தரச் செய்தார் ராஜா. தாமே சமைத்துச் சாப்பிடுகிறார் என்று கேள்விப்பட்டு இனி அது தேவையில்லை, தினமும் அரண்மனையிலிருந்தே ஆசாரமான சாப்பாடு வந்து சேரும் என்று ஏற்படுத்தினார். இரவில் இவர் உறங்கும்போது விசிறுவதற்காக இரண்டு பணிப்பெண்களை அமர்த்தித் தந்தார். ஓரிரு நாட்கள் கழித்து இந்தப் பெண்கள் வர வேண்டியதில்லை என்று சிற்பி கூறிவிட்டாராம். யாராவது பார்த்துக்கொண்டிருக்கும்போது உறக்கம் தன்னியல்பாக வந்து கவிய மறுக்கிறது என்று காரணம் சொல்லியிருக்கிறார்.

கற்கள் வந்து சேர்ந்த நாட்களிலேயே, ராஜாவின் ஒரே மகளான ராஜகுமாரி தினசரி வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். ஒருமுறை ராஜகுமாரி சிற்பியிடம் கேட்டாள்.

சிற்பம் செதுக்குவதற்கான கல்லை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

அது ரொம்ப சுலபம் அம்மா. எந்தக் கல்லுக்குள் நாம் தேடும் சிற்பம் ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டால் போதும்.

சிற்பியின் பதில் கொஞ்சமும் புரியவில்லை அவளுக்கு. ஆனால் அவருடைய கண்களைவிட்டுப் பார்வையை விலக்கிக்கொள்ளவும் முடியவில்லை.

ஓ... வேலை தொடங்குவதற்கு முன்னால் நாட்கணக்காகத் தியானத்தில் அமர்ந்தது எதற்காக?

சுற்றிப் போர்த்தியிருக்கும் பாறைத் திப்பிகளைத் தட்டி உதிர்ப்பதற்கு சிற்பத்தின் அனுமதியை வேண்டித்தான்.

இந்தவிதமாக அவ்வப்போது உரையாடிக்கொண்டு, சேடியர் கொண்டுவந்த அலங்கார நாற்காலியில் அசையாமல் அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பாள். அவள் வேடிக்கை பார்த்தது சிற்பத்தையா சிற்பியையா என்பது பெரும்பெரும் சர்ச்சையையும் தர்க்கத்தையும் விவாதத்தையும் ராஜ்யம் முழுவதும் ஏற்படுத்தியதாம்...

புதிதாக வந்த ஒருவனுக்கு இவ்வளவு சௌகரியமும் அங்கீகாரமும் கௌரவமும் கிடைப்பது சக சிற்பிகளுக்குள் பொறாமையை ஏற்படுத்தத்தானே செய்யும்? தலைமைச் சிற்பியாய் இருந்த கிழவர் இதை ஒரு விநோதமான வழியில் தீர்த்துக்கொள்ள முடிவெடுத்தார். ராஜஸ்தானத்திலிருந்து வந்த கற்களில் நமது சிற்பி வேண்டாம் என்று ஒதுக்கிய ஒன்றை எடுத்துத் தாம் ஒரு சிலை செய்யத் தொடங்கினார்.

அவர் செதுக்கிய சிலை வேறெதுவுமல்ல, நமது சிற்பியின் உருவம்தான். பெண் சிற்பம் உருவாகி முடியும் நாளில், தாம் வடிக்கும் சிலையையும் முடித்துவிடும் திட்டத்துடன் வேகமாக வேலை பார்த்து வந்தார். ஆனால் இந்த வேலை மிக ரகசியமாக நடந்துவந்தது. நமது சிற்பியின் வேலைபோலப் பகிரங்கமாக அல்ல.

ஆரோக்கியமான தாய் வயிற்றில் வளரும் சிசுவைப் போலப் பெண் சிற்பம் நன்கு வளர்ந்து வந்தது. ராஜகுமாரி அரண்மனை திரும்பும் நேரமும் தாமதமாகிவந்தது. ஓரிரு இரவுகள் குடிலிலேயே தங்கவும் செய்தாள்.

ஒரே சிற்பத்தை எவ்வளவு நேரம் அம்மா பார்த்துக்கொண்டிருப்பாய்?

என்று ராஜாகூட மகளைச் சற்றுக் கோபமாகக் கேட்டாராம்.

ஒரே ராஜ்யத்தை எவ்வளவு காலமாக ஆண்டுகொண்டிருக்கிறீர்கள்? என்று பதிலுக்குக் கேட்டாளாம் மகள்.

அவள் இப்படியெல்லாம் கேட்கக் கூடியவளே அல்ல. சிற்பியின் சகவாசம்தான் காரணமோ என்று மனம் புழுங்கியிருக்கிறார் மன்னர்...

ஆயிற்று, சிலைக்கு நாளைக் காலை கண்திறக்க வேண்டியதுதான் பாக்கி.

முந்தின நாள் இரவில் சில உற்பாதங்கள் தோன்றின. வெகுநாட்களாக ஆகாயத்தில் உலவிவந்த வால்நட்சத்திரம் சடாரென்று உதிர்ந்தது. பார்வையற்ற காக்கை ஒன்று குடிலின் வாசலில் ஓயாமல் பிலாக்கணம் வைத்தது. அதை விரட்டியடிக்கும் விதமாக நாலைந்து கோட்டான்கள் விடாமல் அலறின. இரவு முழுவதும் மார்கழி மாதத்துக்குச் சம்பந்தமேயற்ற வெக்கை நிலவியது. குடிலின் மூலையில் இருந்த எண்ணெய் விளக்கின் அருகே கொடியில் காய்ந்த வஸ்திரமொன்று காற்றுக்கு அசைந்து தீப்பற்றியது. இரவுச் சாப்பாட்டுக்காக அரண்மனையிலிருந்து வந்திருந்த அன்னத்தில் பல்லி விழுந்து இறந்துகிடந்தது. குடிலின் உத்தரத்தில் புதிதாகக் குடிவந்திருந்த மரப் பல்லி இரவு முழுவதும் துர்ச்சொல் உதிர்த்தவண்ணமிருந்தது. சிற்பி கை மறதியாய் வெற்றிலையில் தடவிய சுண்ணாம்பு அபரிமிதமாக அளவு கூடி வாய் வெந்துபோயிற்று.

ஆகாயத்தில் பரவிவிட்ட இரவையும் அதன் இருள் அடர்த்தியையும் தன் தனிமையையும் வெறித்துக் கொண்டு உறக்கம் பிடிக்காமல் உட்கார்ந்திருந்தார் சிற்பி. வெக்கை முற்றியபோது ஆயாசம் தாங்காமல் கண்கள் தாமே மூடிக்கொண்டன. உறக்கத்தினுள் வழுக்கினார்.

முதல் ஜாமம்

முதலாம் ஜாமம் ஆரம்பித்து ஒரு நாழிகை சென்றபின் ஒரு கனவு வந்தது. வழக்கமாகக் கனவுகளில் நிலவுவதுபோன்ற சாம்பல் நிற வெளிச்சம் இல்லை. கோடை நாளின் உச்சிப்பொழுது போன்ற ஒளி. கண்களை முழுக்கத் திறந்து பார்க்க இயலாதபடி பார்வை கூசியது.

தன் எதிரில் நிற்பது சிற்பம் அல்ல, உயிருள்ள தேவதை என்று கண்டு சிற்பி அதிர்ந்தார். முந்தைய கணத்தில் உளியும் சுத்தியும் திறந்துவைத்த கண்களை முழுசாக மலர்த்திச் சிரித்தாள் அந்த மந்திரக் கன்னி. நேற்றுவரை உறைந்திருந்த சிரிப்பில் இல்லாத ஒரு கபடம் தற்போதைய சிரிப்பில் கூடியிருப்பதைக் கவனித்தார் சிற்பி. கண்களும்கூடத் தான் திறந்துவைத்த விதமாக இல்லாமல், அகலம் அதிகரித்திருப்பதைக் கண்டார். அவை அவ்வப்போது இமைக்கவும் செய்தன.

வெக்கையின் ஊடாகத் திடீரென்று ஒரு குளிர்ந்த காற்றலை ஊடுருவிச் சென்றது. திகைப்பின் காரணமாக மூடிய சிற்பியின் கண்கள் மீண்டும் திறந்தபோது சிலை பீடத்தைவிட்டுக் கீழே இறங்கி வந்திருந்தது.

அது நின்ற நிலையும் அதன் கன்னச் சதையின் துடிப்பும் நீட்டிய கைகளில் இருந்த பரபரப்பும் அதன் நோக்கத்தை வெளிப்படையாகத் தெரிவித்தன. தன் மார்பின் குறுக்காக இரண்டு கைகளையும் கோத்துக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தார் சிற்பி.

என்னம்மா வேண்டும் உனக்கு?

நீர்தான்.

தயக்கமில்லாமல் பதிலளித்தாள் சிற்பக் கன்னி. தீவிரமான யோசனை போல மௌனத்தில் அமிழ்ந்தார் சிற்பி. கண்களை மறுபடியும் மூடிக்கொண்டார். கண்களின் உட்புறம் எதையோ நிகழ்த்திப் பார்க்கிறவர் மாதிரி இமைகளுக்கடியில் விழிகள் உருண்டன. சில நிமிடங்கள் கழித்து கனிவான குரலில் பதிலிறுத்தார்.

அது முறையல்ல அம்மா.

ஏன்?

கல்லிலிருந்து உன்னைப் பிறப்பித்தவன் நான்தான். ஆகவே, உனக்குத் தகப்பன் ஸ்தானம். உன்னை என் மகளாகத்தான் பார்க்கிறேனே தவிர, பெண் உடம்பாகப் பார்க்க முடியாது.

உளறுகிறீர். கல்லிலிருந்து என் வடிவத்தைத்தான் உருவாக்கினீர். கல்லை நீர் உருவாக்கவில்லை. தவிர, என் உடம்பு பற்றிச் சொன்னீரே...

ம்.

மிக அருகிலிருந்து உம்முடைய உடம்பை அன்றாடம் பார்த்து வந்திருக்கிறேன் அல்லவா...

இன்று காலைதானே உன் கண்களைத் திறந்துவிட்டேன்?

... கண்ணை மூடிப் படுத்திருக்கும்போது உம் அருகில் யாராவது வந்தால் உம்மால் உணர முடியாதா?

வாஸ்தவம்தான்.

உம்மீது கிளர்ந்த மோகத்தின் கிறக்கம் தாளாமல்தான் இறங்கி வந்திருக்கிறேன். நான் பார்த்துப் பார்த்து மோகித்த அந்த உடம்பை ஒருமுறை தழுவி இன்புற்றாக வேண்டும் எனக்கு.

தொடர்ந்து உரையாடல் போய்க்கொண்டேயிருந்தது. சிற்பியின் சுண்டுவிரல் நகம்கூடச் சிற்பக் கன்னியின்மீது படவில்லை. விவாதத்தின் உச்சத்தில் அவர் முடிவாகச் சொன்னார்.

பாறையுடன் சம்போகம் செய்யும் திராணி எனக்கு இல்லை அம்மா - என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

அவள் அடிவயிற்றிலிருந்து சாபமிட்டாள்.

என்னைச் சிலை என்றுதானே பரிகசிக்கிறீர். அடுத்த பிறவியில் நீரும் சிலையாக இருக்கக் கடவீர். அப்போதுதான் புரியும் என் தகிப்பு.

மீண்டும் சிற்பமாக உறைந்தாள் அவள்...

உடல் விதிர்த்து விழித்துக்கொண்டார் சிற்பி. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தார். யதேச்சையாக வந்த குட்டிமேகத்துக்குப் பின்னால் மறைந்துகொண்டாலும் நிலாவின் வெளிச்சம் அது இருந்த இடத்தைச் சுற்றிலும் வெகுதூரத்துக்கு ஆதிக்கம் செலுத்தியிருந்தது. இருளின் ரகசியத்துடன் ஓயாமல் கண்சிமிட்டிப் பேசிக்கொண்டிருந்த நட்சத்திரங்கள் விநோதமான ஏக்கத்தைக் கிளர்த்தின. வெற்றிலைப் பையை எடுத்துத் திறந்தார். தாம்பூலம் தந்த கிறுகிறுப்பு தனிமைக்கு மிக இதமான துணையாக இருந்தது. எழுந்து சென்று சக்கையைத் துப்பிவிட்டுத் திரும்புகிறார், சிலை தம்மையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார். முதுகில் பூரான் ஓடுகிற மாதிரி ஒரு குறுகுறுப்பு. மேகத்தைவிட்டு வெளியே வந்திருந்த நிலா பளிரிட்டது. சிற்பம் கேட்டதைக் கொடுத்திருக்கலாமோ? என்று ஒரு கணம் சிந்தை தயங்கியது.

வாசலில் இருந்த மூங்கில் படலை யாரோ திறக்கிற மாதிரி சப்தம் கேட்டது. பாத சரங்கள் ஒலிப்பது போலவும், அவற்றின் ஒலி மிகவும் பரிச்சயமானது போலவும் தோன்றியது. இந்த நேரத்தில் யார் வரப் போகிறார்கள், பிரமையேதான் இது என்று சமாதானம் கொண்டு கண் கிறங்கினார்.

இரண்டாம் ஜாமம்

விட்ட இடத்திலிருந்து தொடர்வதுபோல, அதே கனவு மீண்டும் வந்தது. இந்தமுறை மிகப் பெரிய வித்தியாசம் ஒன்று நேர்ந்துவிட்டிருந்தது...

கண் திறந்த சிலையின் முகம் ராஜகுமாரியின் முகம்போலவே இருந்தது.

சிற்பம் முந்தைய கனவில்போல வேண்டுகோளெல்லாம் விடுக்கவில்லை. தன்னியல்பாக நெருங்கி வந்து அணைத்துக்கொண்டது. தனது பொருளைத் தான் எடுத்துக்கொள்ளும் சுவாதீனத்துடனும் வெகு நாளாகக் காணாமல்போயிருந்த பொருள் யதேச்சையாகக் கிடைத்து விட்ட ஆவேசத்துடனும் இன்னும் கொஞ்ச நேரம்தான், பிறகு அது நிரந்தரமாகக் காணாமல் போய்விடும் என்பது போன்ற பதற்றத்துடனும் பலநாள் திட்டத்தின் விளைவாகச் செயல்படுவது போன்ற சிரத்தையும் கச்சிதமும் கொண்டு சேர்க்கையின் பல்வேறு அடுக்குகளுக்கு இட்டுச்சென்றது.

தேர்ந்த சிற்பி ஆட்டுரல் கொத்துவதுபோல எளிமையாகவும் வாகாகவும் தன் உடம்பு கையாளப்படுவதை உணர்ந்தார் சிற்பி.

கனவில் நிகழ்ந்த முத்தங்களின் ஒலியும் மென்சதையின் ஸ்பரிசமும் மறைவிடங்களின் மணமும் எச்சிலின் ருசியும் அலையலையாக முன்னெழுந்த சதையின் திரட்சியும் என எதுவுமே கனவில்போல இல்லை. நிஜம்போலவே அவ்வளவு அண்மையில், அவ்வளவு நேரடியாக, அவ்வளவு கிளர்ச்சி தருவதாக இருந்தன.

உச்சத்தின் விளிம்பில் சட்டென்று தான் பிடுங்கி வீசப்படுகிற மாதிரி உணர்ந்தார் சிற்பி.

விழிப்புத் தட்டியது.

குடிலுக்கு வெளியில் குதிரைக் குளம்படிபோல ஒலிகள் கேட்டன. தழைந்த பேச்சுக் குரல்களும் இணைந்துகொண்டன. வெகு தத்ரூபமான ஒலிகள். இருளைத் தவிர வேறு மர்மங்களும் இரவின் நிசப்தத்தின் திரைக்குப் பின்னால் ஏதோ பயங்கரங்கள் ஒளிந்திருப்பது போல, பிரமை தட்டியது.

உடம்பு கடுமையாக வியர்த்திருந்தது. படுக்கை விரிப்பில் அகலமாக ஈரத்தடம் பதிந்திருந்ததைப் பார்க்க விகாரமாக இருந்தது.. வெளியில் வெக்கை இன்னும் அதிகரித்துவிட்ட மாதிரித் தோன்றியது. வெக்கை நிஜமாக இருப்பது எங்கே, சூழ்நிலையில்தான் நிலவுகிறதா அல்லது தனக்குள்ளிருந்து ஊறுகிறதா என்று தீர்மானிக்க முடியாமல் திகைத்தார். கைகள் அனிச்சையாகத் தாம்பூலப் பையை எடுத்தன.

குடிலுக்கு வெளியே குளம்படித் தடங்கள் இருக்கின்றனவா என்று பார்த்துவிட்டால் கைகளின் நடுக்கம் சற்றுக் குறையக்கூடும் என்று தோன்றியது. விரும்பத்தகாத ஏதாவது உறுதியாகிவிடுமோ என்று கவலையாகவும் இருந்தது.

கனத்த மனத்துடன் பஞ்சணையில் சரிந்தார்.

ஆறுதலாகத் தொற்றியது உறக்கம்.

மூன்றாம் ஜாமம்

இந்தமுறை வந்த கனவு அதிக நேரம் நீடிக்கவில்லை. அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு விநாடிகள் இருக்கலாம். அவ்வளவுதான். அதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டன.

முந்தைய இரண்டுமுறைகள் போலவே இப்போதும் சிற்பம் உயிர் கொண்டது. ஆனால் பெண்ணுக்குரிய அம்சங்கள் யாவற்றையும் துறந்துவிட்டு ஒரு பயில்வானைப் போன்று உடல்வாகை உருமாற்றிக் கொண்டது. முந்தைய ஜாமத்தில் உடலெங்கும் பொங்கித் தீர்ந்த பரபரப்பையும் உச்சத்தில் தொற்றிய கிளுகிளுப்பையும் மீண்டும் நிகழ்த்திக்கொள்ளும் ஆவலுடன் விரித்த கைகளுடன் நெருங்கிய சிற்பியின் நெஞ்சில் கைவைத்து நிறுத்தியது.

தனது வலது புஜத்தில் முளைத்துப் பெரிதாகப் புடைத்திருந்த மருவைச் செதுக்கியெறியும்படி சைகை காட்டியது. குடிலின் உள்ளே சென்று உளியும் சுத்தியலும் எடுத்துவந்தார் சிற்பி.

கண்ணிமைக்கும் நேரத்தில் அவரைச் செந்தூக்காய்த் தூக்கியது சிற்பம். முந்தைய ஜாமத்தின் மிருதுத் தன்மையும் காதலும் அறவே நீங்கியிருந்த ஸ்பரிசம். போர்வீரன்போல மாறியிருந்தது ராஜகுமாரியின் முகச் சாயல். சிற்பியைப் பீடத்தில் நிறுத்தியது.

தன் பாதங்களின் அடிப்புறம் நூல் சரங்கள்போல வேர் முளைத்துப் பீடத்துக்குள் ஊன்றிக்கொள்வதையும் தலைப்பகுதியிலிருந்து மரத்துக் கொண்டே வருவதையும் உணர்ந்த சிற்பி, ஏதோ ஒரு விபரீதச் சுழியின் மையத்தில் தான் சிக்கிக்கொண்டதை அறிந்து தப்பிக்க முனைந்த மாத்திரத்தில் அந்த உருவம் குடிலை விட்டு வெகுவேகமாக வெளியேறுவதைக் கண்டார். குதிரைக் குளம்படியோசை எழுந்து நகர்ந்து மெல்லத் தேய்ந்து மறைந்தது. நகரத் திராணியின்றி நின்றிருந்தார் சிற்பி.

நாலாம் ஜாமம்

வயலை நோக்கிக் கலப்பைகளுடனும் மண்வெட்டிகளுடனும் பிரம்புக் கூடைகளுடனும் சென்றுகொண்டிருந்த ஆண்களும் பெண்களும் ஆச்சரியத்துடன் பார்த்தார்களாம் - நேற்றுவரை ஒரு பெண் சிலை நின்றிருந்த இடத்தில் இப்போது ஆண் சிலை நிற்கிறதே என்று...

இதுவரைதான் என்னுடைய நாட்குறிப்பில் இருக்கிறது. அதன் பிறகும் பலதடவை கடப்பை வழியாகச் சென்று வந்திருக்கிறேன். ஒருமுறைகூட அந்தக் குடிலுக்கு மறுபடியும் போக வாய்க்கவில்லை. வாழ்க்கை என்னை உந்திச் சென்ற பாதைகள் அப்படி. கொஞ்சம்கூட அவகாசம் தராதவை.

எனக்குக் கதைசொன்ன பெரியவர் தற்போது உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பும் மிகக் குறைவுதான் என்று தோன்றுகிறது. நான் சந்தித்தபோதே அவருக்கு வயது எழுபதுக்கு அருகில் இருக்கலாம். அந்தச் சிற்பம் யார்வசத்தில் இருக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. ஆனால் என் ஞாபகத்தில் வெகு அழுத்தமாக ஏதோ முந்தாநாள்தான் பார்த்த வஸ்துவின் பிம்பம்போல அவ்வளவு திருத்தமாக அது வீற்றிருக்கிறது.

தொடர்ந்து பல வருடங்கள் அந்தச் சிற்பியின் கதையை அசைபோட்டு வந்தபோது இயல்பாகச் சில சந்தேகங்களும் எழுந்து வந்தன.

1. ராஜஸ்தானியரான சிற்பியின் இருபத்தோராம் தலைமுறை வாரிசு, ஆந்திரத்தின் ராவ் ஆனது எவ்விதம்?

2. பிரம்மச்சாரியாக வந்து சேர்ந்து பிரம்மச்சாரியாகவே வாழ்வு முடிந்த சிற்பிக்கு வாரிசுகளும் வம்சமும் தோன்றியது எப்படி?

3. இவருக்குப் போட்டியாக தலைமைச் சிற்பி செய்த சிலை பிறகு என்னாயிற்று? எங்கே போயிற்று?

4. ராஜகுமாரிக்குச் சிற்பியின் மீது ஒரு அந்தரங்கமான இச்சை உருவான செய்தியும் கதையில் வந்ததே, அவள் என்னவானாள்?

5. தன்னந்தனியாக வாழ்ந்து மறைந்தவராயிற்றே சிற்பி? அவருடைய மறைவுக்கு முந்திய துர்ச்சகுனங்களின் பட்டியலை யார் கவனித்துக் கோத்தார்கள்? நிகழப்போகும் அசம்பாவிதத்தின் முன்குறிகள் அவை என்று யாருக்குத் தோன்றியது?

ஓய்வுபெறுவதற்குச் சிலமாதங்கள் முன்பு, உத்தியோகரீதியாக மஹாராஷ்ட்ரம் செல்ல வேண்டி வந்தது. கடைசியாக அதுதான் நான் கடப்பையைத் தாண்டிச் சென்றது. அந்தமுறை இன்னொரு விசித்திரமான சந்தேகம் தோன்றியது.

அந்தக் கனவுகள் மூன்றையும் கண்ட மனிதன்தான் சிலையாகிவிட்டானே, நான் பார்த்த பெரியவர் வரை கர்ணபரம்பரையாக அவை எவ்விதம் வந்து சேர்ந்தன?

அப்புறம் சமாதானம் செய்துகொண்டேன்... போகட்டும், உயிருள்ள மனிதன் சிலையாக மாற முடியும் என்றால், ஒருவருடைய கனவை இன்னொருவர் காண்பதும் நடக்கக்கூடிய விஷயம் தானே!

******

நன்றி: காலச்சுவடு

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்