Showing posts with label ந. முத்துசாமி. Show all posts
Showing posts with label ந. முத்துசாமி. Show all posts

Dec 19, 2012

நீர்மை - ந. முத்துசாமி

மூத்த உள்ளூர்க்காரர்களையும் எப்போது அறிமுகமானார்கள் என நினைவு கொள்ள முடிவதில்லை. ஒருவன் தன் தாயையும் முதல் அறிமுகம் எப்போதென்ற பிரக்ஞையின்றிப் போகிறான் ஆனால், அவள் எனக்குச் சாலைக்குளத்திலிருந்துதான் அறிமுகமாயிருக்க வேண்டுமென நிச்சயமாக இருந்தாள். எல்லாவற்றிலும் ஆச்சரியம் கொள்ளும் குழந்தைக்கு குளிக்கிறவள் என்று விநோதமற்றுப் போகாமல் அவள் நடுக்குளத்தில் தனித்துத் தென்பட்டிருப்பாள். நரைத்த பனங்காயைப் nMUTHUபோல அவள் தலைமிதந்து அலைந்து அவளென்று தெரிய  இருந்திருக்கும்.

அவள் தன் பத்தாவது வயதில் வீணானவள். இறக்கும்போது அவளுக்கு வயது தொண்ணூறுக்கு மேல். அப்போது எனக்குப் பதினைந்து வயது. அவளை அறியாத ஒரு தலைமுறை பிறந்து முழுப் பிராயத்திற்கு வந்துவிட்டது. இப்போது அவளைப் பார்க்காத நாள் நினைவிலில்லாமல் தினம் பார்த்து வந்திருப்பதாகவே தோன்றுகிறது.

தெரு தோன்றிய நாளிலிருந்து வண்டி அறைந்த புழுதியைக் காலால் உழுது விளையாடிக் கொண்டிருந்தபோது அவள் கரையேறிக் கிழவியாக வரும் தோற்றம் முகத்தைக் குளத்தில் மிதக்கவிட்டு வந்தது போலிருக்கிறது. அது நீருக்குள் கற்பித்திருந்த உடம்புக்கு இணங்காத எல்லோருக்குமான நார் மடிப்புடவையின் தோற்றம்.

சில வருஷங்கள் கழித்து என் தம்பியும் என்னுடன் விளையாட்டில் கலந்து கொண்டான். அடுப்பங்கரை தயிர் கடையும் தூணில் முடிந்திருக்கும் மத்து இழுக்கும் கயிற்றை நாங்கள் அம்மாவுக்குத் தெரியாமல் விளையாட அவிழ்த்துக் கொண்டு வந்துவிடுவோம். அது நாள்பட்டு, இழுபட்டு, வெண்ணைக் கைபட்டு, திரித்தது என்பதைவிட, பயிரானது என்று இருக்கும். அதை இவன் கழுத்தில் போட்டு அக்குளுக்கடியில் முதுகுப்புறம் மடக்கிப் பிடித்துக்கொண்டு அவனை வண்டி மாடாக ஓட்டுவது எங்கள் விளையாட்டு. அவன் எட்டுக் குளம்புப் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஓடுவான். முடிவில் மாடாகிக் களைத்துப் போவான். எனக்குக் கூடுதலாகச் சவாரிச்சுகம் கிடைத்திருக்கும்.

அவள் என்னைக் ‘கண்டாமணி’ என்பாள், நாங்கள் கால்சட்டை போடாமல் ஓடுவோம். எனக்கு இயற்கையாகவே கொஞ்சம் பெரிதாகத் தொங்கிற்று. வெகுநாள் கழித்து அறுவை சிகிச்சைக்குப் பிறகுதான் பருவ இயல்புக்குச் சுருங்கிற்று. இதே சொல்லை, வாக்கியமாக்காமல், ஓடும்போது அவளைச் சந்திப்பது ஒத்துக்கொண்டபோதெல்லாம் சொல்லி வந்தாள். அப்போது அவள் சந்தோஷப்பட்டிருப்பாள். சிரித்துக்கூட இருக்கலாம். ஓடி மேலக் கோடித் திருப்பத்தில், அவள் கவனமின்றி சொல் காதில் விழுகிறது. சிரிப்பு அவளிடம் பொருந்த முடியாமல் வேறு எம்முகத்திலோ போய் ஒட்டிக் கொள்கிறது;

சிறுகச் சிறுக மாறிவந்த அவள் முகத் தோற்றத்தை ஊர் காண முடியாமல் போய் விட்டது. நினைவில் இருப்பது எந்த வயதின் சாயலென்றும் தெரியவில்லை. பிறர் நினைவில் எந்தச் சாயலில் இருக்கிறாள் என்பதை எப்படி ஒத்துப் பார்ப்பது? அவள் பொதுவில் பெயராக மிஞ்ச ஆரம்பித்து விட்டாள்.

நாங்கள் கால் சட்டை போட ஆரம்பித்த பிறகு கண்டாமணி என்று சொல்வதை நிறுத்திவிட்டாள். அதற்குப் பிறகு அவளோடு பேசியதில்லை. சில வருஷங்களுக்குப் பிறகு ஒருமுறை என்னை வேறு யாரோவாக நினைத்துப் பேசினாள்.

எனக்கு வினவு தெரிந்தபோது அவள் பலருக்கும் ஆச்சரியமற்றவளாக மாறியிருந்தாள். என் வயதுக் குழந்தைகளும் எங்களுக்குள் விநோதமாக உணர்ந்து பேசிக்கொண்டதில்லை. அவர்கள் தங்கள் வீடுகளில் ஆச்சரியப் பட்டிருக்கலாம். பெரியவர்களைப் பார்த்து விநோதமில்லையென்றும் மறத்திருக்கலாம். சாதாரணமானவற்றில் அநேக விநோதங்களைக் கண்டு நாங்கள் கூட்டாக ஆச்சரியப்பட்டிருக்கிறோம்.

அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள நான் எங்கள் அப்பாவிடம் தினம் நச்சரித்துக் கொண்டிருந்தேன். பிறகு எனக்கு அலுத்துவிட்டது அவருக்கு அவளுடைய இளமையைப் பற்றிய கதை என்னைவிட அதிகம் தெரியவில்லை. அவள் அவருக்கும் சாலைக் குளத்தில்தான் அறிமுகமானாள். அவருக்கு அவள் தலை மிதந்து கருப்புப் பனங்காயாகத் தோன்றியிருக்க வேண்டும்.

எங்கள் கிழப்பாட்டி மட்டும் பேரனிடம் காட்டும் தனி அபிமானத்துடன் பழமை தோன்ற அவள் கதையைச் சொல்லுவாள். அவள் வயதில், குழந்தைகளுக்குத் தேவையில்லாதவை என நினைப்பவைகளை ஒதுக்கி விடுவாள். இதனால் அவள் கதைகள் சில விநோத குணங்களை இழந்திருக்கலாம். ஆனால், குழந்தை ஆர்வத்தில் புதுத் தகவல்களின் விநோதங்களுடன் அவள் கதை இருந்திருக்கிறது. நிலா உள்ள முன்னிரவுகளில் நாங்கள் தெருவில் கூட்டமாக விளையாடிக் கொண்டிருப்போம். பாட்டி ரா ஆகாரத்தை முடித்துக் கொண்டு காற்றாட திண்ணைக்கு வருவாள். அவளைக் கண்டதும் விளையாட்டு ஆர்வம் குன்றிவிடும். கதை கேட்கத் திண்ணைக்கு ஓடிவருவோம். கால்களை நீட்டி முழங்கால்களைத் தடவி விட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பாள் பாட்டி. பாட்டியுள்ள ஒவ்வொரு பேரன்களும் இவ்விதம் திண்ணைக்கு ஓடிவிட, விளையாட்டு முடிவுக்கு வந்துவிடும். அவள் தொடையில் தலைவைத்துப் பக்கத்துக்கொருவராகப் படுத்து கதை கேட்க ஆரம்பிப்போம். பாட்டி சொல்லும் கதை பகல் போல் இருட்டை நீக்கித் தெரியப்படுத்த முடியாத நிலா வெளிச்சம் போலவே இருக்கும். கதையைத் தவிர்க்க நினைக்கும் அவள் குதற்கங்களாலும், ஆரம்பிக்கும் ஆயத்தங்களாலும், குழந்தை அறிவுக்கு எட்டாதவைகளாலும் கதையில் ஆர்வம் கூடுதலாகும். பாட்டியின் மேல் அனுதாபமும் அபிமானமும் உண்டாகும்.

‘நான் பொறந்த கதையேச் சொல்லவா? வாழ்ந்த கதையேச் சொல்லவா? வாழ்ந்து அறுத்த கதையேச் சொல்லவா?’  என்று ஆரம்பித்து தன்னையும் சேர்த்து தன் கண்ணால் பார்த்த மனிதர்களின் மூன்று தலைமுறைக் கதைகளைச் சொல்லி விடுவாள் பாட்டி. முந்தின தலைமுறையைப் பற்றிக் கேட்டவைகளும் நடுவில் விளக்கக் குட்டிக் கதைகளாக வரும்.

எங்கள் பாட்டி உள்ளூரிலேயே வாக்கப்பட்டு ஊர்க் கண் முன் வாழ்ந்து கிழவியானவள்.

அவளுக்கும் புஞ்சைதான் பிறந்த வீடு. அவளும் புகுந்த ஊரில் வாந்த அனுபவம் இல்லாமல் பிறந்த வீட்டிலேயே வயதாகிக் கிழவியானவள். ஆனால் பாட்டிக்கும் அவளுக்கும் சமவயது. ஆனால், அவள் வீணானவுடன் பாட்டிக்கு அவளுடன் தொடர்பு விட்டுப் போயிற்று. கணவனின் அந்திமக் கிரியைகளுக்கு அப்பாவுடன் போயிருந்துவிட்டு காரியங்களை முடித்துக்கொண்டு வந்தவள்தான். அவ்வயதில் ஒரு ஆயுட்காலம் அவ்வூரில் வாழ்ந்தவளென்ற அதிர்ச்சியுடன் திரும்பியவள் போலும். பிறகு அவள் வெளியில் வரவேயில்லை. ஜனன மரணங்களைச் செய்தியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தாள். இப்படி முப்பது வருஷங்கள் உள்ளிருந்து விட்டு தன் நாற்பதாவது வயதில் அவளா இவளென வெளியில் வந்தாள். ஊர் அவளுக்குத் தெரிவிக்கப்பட்ட பெயர்களின் நிஜத் தோற்றங்களால் நிறைந்திருந்தது. அவளால் யாரையும் அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. பிறர் அவளை நிஜமாகக் கண்டார்கள். அவள் ஒருவளானதால் அறிமுகம் சுலபம் போல் ஆயிற்று. அவள் செய்தி கேட்ட நாளின் கற்பனைத் தோற்றங்கள் தங்க இருந்து விட்டாள். அவற்றுள் ஒற்றுமை காண முடியாமல் வெளி உலகம் வயதடைந்து புஞ்சை அன்னியக் குடியேற்றத்திற்கு ஆளானது போலாயிற்று.

அவள் வெளியில் வந்ததும் தவிர்க்க முடியாமல் நேர்ந்ததுதான். அவளுடைய தந்தை இறந்த தினத்தன்று அவள் வெளியில் வந்தாள். பிரேதம் எடுத்துக்கொண்டு போனபிறகு கூட்டத்திலிருந்து மிரண்டு பயந்து அழுது ஓடிப்போய்ச் சாலைக் குளத்தில் விழுந்தாள். அவளைக் கரையேற்றி காவிரிக் கரைக்குக் கொண்டு போக பெரும்பாடு பட்டார்களாம். தூக்கிக்கொண்டு போவதாகவே காண இருந்ததாம். அவளை அணைத்து அழைத்துப் போனவர்களில் எங்கள் பாட்டி ஒருத்தி. துக்கத்தினால் அன்றி தொடு உணர்ச்சிக்கே அஞ்சியவளாகப் பாட்டியை அடையாளம் காணாதவளாக மிரண்டு பார்த்திருக்கிறாள் அவள். அவள் கையில் புல் வாங்கிக்கொண்டு தயாதிகளுள் ஒருவன் அவள் தகப்பனுக்கு நெருப்பு போட்டான். இத்துடன் அவளுக்கு நெருக்கமாய் இருந்த ஒரு பிரஜையையும் புஞ்சை இழந்தது.

“நம்மாத்துக்குக் கெழக்கே அவபோய்ப் பாத்திருக்கியோ?” என்று பாட்டி ஒரு கதை நாளில் கேட்டாள். உதடுகளை மடித்து ஈரப்படுத்திக் கொண்டாள் பாட்டி. இப்படி அவளுக்குப் பழக்கமாகியிருந்தது.

கால் கடுக்க அவளைத் தெருவில் பலமுறை நடத்திப் பார்க்கவேண்டியிருந்தது எனக்கு. பாட்டியின் மந்திரத்தில் அவள் கட்டுண்டவள் போலத் தோன்றினாள்.

“இல்லை”

பாட்டியின் உதடுகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த உதடுகளில்தான் கற்பனைகள் எல்லாம் இருப்பதாகத் தோன்றிற்று.

எங்கள் வீட்டிற்குக் கீழ்க் கையில் தெருவை இரண்டாகத் தடுத்து குறுக்கே மண் சுவர் ஒன்று தடையாக எழும்பியிருந்தது. அது முப்பத்தைந்து நாற்பது வருஷங்களாக மழையில் கரைந்துக் குட்டிச் சுவராக நின்றது. கீழே நாய்க்கடுகு முளைத்து கொடிப்பூண்டுகள் அடர்ந்திருந்தன. குழந்தைகள் கழுதை மேல் எறிந்த கற்கள் சிதறிக் கிடந்தன. கிழக்கே விளையாடிவிட்டு நேரங்கழித்து வீடு திரும்பும்போது குட்டிச்சுவரில் மோதிக் கொண்டுவிடுவேனென்றுத் தயங்கித் தயங்கி கடந்து வர வேண்டியிருக்கும். இருளில் வழியைத் தடவி வரும்போது உயர்ந்து வளர்ந்த செடிகள் குத்திவிடுமென்ற பயத்தில் இமைகள் நடுங்கும். நான் பட்ட காயங்களில் பல அங்கு தடுக்கி விழுந்து ஏற்பட்டவை.

தினமும் ஒருமுறையாவது அவளைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு எங்கள் வீட்டிலேயே இருந்தது. பால், தயிர் வாங்குவதற்கு அவள் வருவாள். ஒரு தேவையில் இது அவளுக்குப் பழக்கமாகியிருந்தது. தினமும் அம்மா தயிர் கடைந்து கொண்டிருக்கும் போதே வருவாள். நான் அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து மோரில் மத்து துள்ளுவதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இடை, இடையில் அம்மாவுக்கு அடுப்பில் வேலை இருக்கும். காலையில் கறந்த பால் பொறை ஊற்ற வரட்டி வைத்து கணப்பு போல் எரியும் அடுப்பில் காய்ந்து கொண்டிருக்கும். தூசி தட்டிய வரட்டியாலேயே பாலை மூடியிருப்பாள். அதிகம் எரியும்போது பாலில் ஆடை கெடாமலிருக்க அடுப்பைத் தணிக்கவும், அணையும் போது வரட்டியைத் திணித்துத் தூண்டவும் மத்தைக் கட்சட்டியில் சாத்தி வைத்துவிட்டு எழுந்து போவாள் அம்மா.

கயிறு ஓடித் தேய்ந்த மத்தின் பள்ளங்களில் கயிற்றைப் பொருத்திப் பார்க்க வேண்டும் எனக்கு. அம்மாவைப் போல், மத்து மோரின் மேலே மிதந்து சிலுப்பாமலும் அமிழ்ந்து கச்சட்டியின் அடியில் இடிக்காமலும் கயிற்றின் மேல் கயிறு ஏறிக்கொள்ளாமலும் கடையும் வித்தையைச் செய்து பார்க்க வேண்டும். என்னை அறைந்து விலக்க அம்மா திரும்பி வருவள். அந்தத் தூணடியிலேயே நான் சண்டியாக உட்கார்ந்து கொண்டிருப்பேன். உடம்பை வளைத்து அம்மாவின் அடியை வாங்கிக் கொள்வேன்.

அம்மாவுக்கோ தயிர் கடைந்துவிட்டுக் குளிக்கப் போகவேண்டும். சமையலுக்கு ஆரம்பிக்க வேண்டும். நேரமானால் ‘ஒருவேளைப் பிண்டத்துக்கு தவங்கிடக்க வேண்டியிருக்கு இந்த வீட்டிலே’ என்பாள் பாட்டி. அவசர அவசரமாகத் தயிர் கடைய வேண்டியிருக்கும். அது அவசரத்திற்குக் கட்டுப் படாது. விட்டு விட்டுக் கடைந்தால் வெண்ணெய் சீக்கிரம் விடுபடும் என்று அம்மா இதர வேலைகளுக்கு ஓடுவாள். சுற்றுவட்டக்காரியங்கள் ஆகும் போது தயிர் கடைவது கவனத்தில் இருந்து பரக்கடிக்கும்.

”அம்மோவ்” என்று மாட்டுக்காரப் பையன் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிக் கொண்டு போக வந்து கொல்லைப் படலுக்கு அப்பால் நின்று குரல் கொடுப்பான். படலைத் திறந்து வைத்துத் திரும்பி மாடுகளை அவிழ்த்து விட வேண்டும் அவனுக்கு. அவனைக் காக்க வைக்க முடியாது. மாடுகள் ஒவ்வொன்றாக வயிற்றை எக்கிக் குனிந்து ’அம்மா, அம்மா’ என்று அழைக்க ஆரம்பித்துவிடும். கொட்டாய்த் தரை அதிரும்படி அவை கூப்பிடும். அந்நேரம் ‘யாராத்து மாடு’ இப்படிக் கூப்பிடறது’ என்று தெருவில், குரல் கேட்ட ஒவ்வொருவரும் மனதிலாவது நினைத்துக் கொள்வார்கள்.

கொட்டாயிலிருந்து அம்மா திரும்பும்போது என் தம்பி அடுப்படியில் இருப்பான். காய்ந்த அவரைச் சுள்ளிகளைக் கையில் அடுக்கிக் கொண்டு ஒவ்வொன்றாய்த் தணலில் திணித்து அவை பின்னால் புகை விடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். திரும்பிய வேகத்தில் அவன் முதுகில் ஒன்று வைப்பாள். கைச்சுள்ளிகளைப் பிடுங்கி அடுப்பங்கரைத் தொட்டி முற்றத்தில் எறிந்து விடுவாள். பாலைத் திறந்து பார்த்துவிட்டு மூடுவாள். அவன் அழமாட்டான். சுள்ளிகளைப் பொறுக்க ஓடுவான். அடுப்பங்கரையில் மூன்றில் ஒரு பங்கு தொட்டி முற்றம் எங்கள் வீட்டில்.

இதற்கும் ‘அம்பே’ என்று மாடுகளுடன் ஓடி விடாமல் பிடித்துக் கட்டிய பசுங்கன்றுகள் கொட்டாயிலிருந்து குரல் கொடுக்கும். கொட்டாய் பெருக்குபவள் வர நேரமாயிற்று என்ற எச்சரிக்கை இது. தாய்கள் மேயப் போன தனிமையை வைக்கோல் போரில் அசை போட்டுத் தணிக்க அவற்றுக்குப் பழக்கப் படுத்தப்பட்டிருந்தது. கொட்டாய் பெருக்குபவளைத் திட்டிக்கொண்டு அவற்றை அவிழ்த்து வைக்கோல் போர்க்கொல்லையில் விரட்டிவிட்டு உட்கொல்லை படலைச் சாத்திக் கொண்டு வருவாள் அம்மா. திரும்புகாலில் தம்பி கிணற்றுத் தலையீட்டில் குனிந்து தண்ணீரைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் காண வேண்டியிருக்கும். அவன் தண்ணீரில் பூச்சிகள் கோலமிட்டு ஓடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பான். ஆர்வத்தில் அவன் பூச்சிகளோடு பேச ஆரம்பித்து விடுவான். எந்த நிமிஷமும் அவன் குப்புறக் கவிழ்ந்து விழுந்து விடலாம் என இருக்கும். “சனியனே, என்ன அவப்பேரை வாங்கி வைக்கக் காத்திண்டிருக்கே” என்று அவனை இழுத்துக்கொண்டு வருவாள். அவன் நடக்காமல் அம்மாவின் இழுப்புக்குக் காத்து. கால்களைப் பதித்துக் கொள்வான். குளிப்பாட்ட தண்ணீரைத் துறையில் இழுபடும் கன்றுக்குட்டியைப் போல நிற்பான். அவன் இதை ரசித்து அனுபவிப்பான்.

இன்னும் தயிர் கடைந்த பாடில்லையே என்று அம்மா தினம் அலுத்துக் கொள்வாள். “சனியன்களே பாட்டிண்டே போய்த் திண்ணையிலே ஒக்காந்திண்டிருங்களேன், சனியன்களே. ஒரு எடத்திலே இருப்புக் கொள்ளாத சந்தம்” என்று வைவாள் அம்மா. இது பாட்டியின் காதுக்கு எட்டினால் “ஏண்டி கொழந்தைகளே கரிக்கறே” என்பாள்.

நான் இழுத்துச் சிலுப்பிய தயிர், கச்சட்டிக்குப் பக்கங்களில் சிந்தியிருக்கும். இப்போது அம்மாவைக் கண்டதும் ஓடத்தோன்றும். அம்மா இப்போது அடித்தால் அழுவேன். சிந்திய தயிரைத் துடைத்துவிட்டுக் கை கழுவப் போகும்போது தொட்டியில் தண்ணீர் இருக்காது. குளிக்கப் போகுமுன் கொல்லைக் கிணற்றிலிருந்து அடுப்பங்கரைத் தொட்டிக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொட்ட வேண்டும். எச்சில் கை கழுவும் இரண்டாம் கட்டுத் தொட்டிக்கும் நிரப்ப வேண்டும். முன்பே அவற்றைக் கழுவிக் கொட்டிவிட்டதை அம்மா மறந்து போயிருப்பாள். அநேகமாக தினம் எங்கள் இருப்பு இட்ம் மாறியிருப்பதைத் தவிர அவள் காரியங்கள் இவ்விதமாகவே சற்று முன்னும் பின்னுமாய் இருந்து கொண்டிருக்கும். இந்நேரங்களில் தினமும் ஒருமுறையேனும் அலுப்பின் உச்சத்தில் “புஞ்சையான் குடும்பத்துக்கு ஒழைக்கறாத்துக்கின்னே பொறப்பெடுத்தாச்சு” என்று நொந்து கொள்வாள் அம்மா.

அம்மா தயிர் கடைந்து கொண்டிருக்கும் போதோ, கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருக்கும்போதோ தாழ்வாரத்திலிருந்து ‘பட்டு’ என்று குரல் வரும். இது அம்மாவுக்கு நேரம் காட்டும் குரல். அது அவளுடைய குரல். அம்மாவுக்கு எட்டியிருக்காது என்ற அனுமானத்தில் ‘பட்டு’ என்று இன்னொரு முறை கேட்கலாம். அப்படியானால் இது எங்கள் பாட்டியின் குரலாக இருக்கும். இது அவசியத்தைப் பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட முறையும் கேட்கும். ஒரு கடமையாகப் பாட்டி இதைச் செய்வாள். நாங்கள் வெளியில் இருந்தால் “அம்மாவ்.... அம்மாவ்” என்போம்.

கிணற்றங்கரையிலிருந்து கொட்டாய் வாசற்படையைத் தாண்டி வரும்போது அவள் தாழ்வாரத்துச் சின்னத்திண்ணை ஓரமாய் நின்ரு கொண்டிருப்பதைப் பார்க்கலாம். தயிர் கடைந்து கொண்டிருந்தால் அடுப்பங்கரையை ஒட்டிய தாழ்வாரத்து நெரைச்சல் மறைப்பில் பிய்ந்த கீற்று ஓட்டை வழியாக அவள் நின்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம். குழந்தைகளுள்ள எவ் வீடுகளும் இதே அமைப்பில் நெரைச்சலில் தாழ்வாரத்தைக் காண துவாரம் செய்யப்பட்டிருக்கும். அவள் உருவைக் கிரகிக்க இரண்டு கோணங்கள் போதாதென ஓர் அரூபச் சாயலில் அவள் உயிர் கொண்டிருப்பதாகத் தோன்றும். அவள் குரலுக்கு எந்த இடத்திலிருந்தும் அம்மா “இதோ வந்துட்டேன்” என்பாள். குளத்தில் இருப்பவளுக்குக் கேட்கச் சொல்வதாய் இரைந்தே சொல்வாள். பால் கணக்குச் சொல்வதைத் தவிர அழைப்பிற்கு இருப்பைக் காட்டிக் கொள்வதல்லாமல் அம்மாவுக்கு அவளுடன் வேறு பேச்சில்லை.

இது காலைக் காரியங்கள் ஆகி எல்லோரும் குளிக்கக் கிளம்புகிற நேரம். ஒவ்வொருவரும் தயிர் கடைந்து விட்டுப் போக வேண்டும். வற்றாத நாளில் காவிரிக்கும், மற்ற நாளில் குளத்திற்கும் அக்ரகாரப் பெண்கள் குளிக்கப் போக வேண்டும். குளத்தில் கோடையில்  மீன் பிடித்த பிறகு கொல்லைக் கிணற்றங் கரையில் தண்ணீர் இழுத்துக் கொட்டிக் கொண்டு குளிப்பார்கள். நேரம் தப்பிப் போய் பெயர் வாங்கிக் கொள்ளாமல் எல்லோருக்கும் நேரம் ஒத்துக் கொண்டுவிடும். இதில் ஒத்துக் கொள்ளாமல் தூரத்திற்கு ஒதுங்காதவர்களென ஓரிருவரும் இருந்தார்கள்.

தினம் இந்த நேரம்தான் அம்மாவின் பரபரப்பில் பால்வாங்க  வர அவளுக்கு ஒத்துக் கொண்டது. நேர உணர்வு துல்லியமாக மிருகத்துடையதைப் போல அவளுக்கு இருந்திருக்கிறது.

அவள் சாலைக் குளத்திலிருந்து கரையேறிய வேகத்தில் வந்திருப்பாள். ரேழிவாயிற் படியைத் தாண்டி தாழ்வாரத்தின் முனையில் சின்னத் திண்ணையின் ஓரமாய் நிலைப்படியில் சாய்ந்துகொண்டு காத்து நிற்பாள். காத்திருத்தல் அவளுக்கு அலுப்புத் தருவதாகத் தோன்றாது. ‘பட்டு’ என்ற ஒரு அழைப்பே காத்திருத்தலுக்கு அவளுக்குப் போதுமானது போலிருக்கும். இதில் நின்ற இடத்தை மறந்தவளாகத் தோன்றுவாள். உடல் பாரத்தைக் கால்களில் ஓரிருமுறை மாற்றிக் கொள்வாள்.

அவள் நிற்கும் இடம் தண்ணீரும் தெருமணலும் சேர்ந்து குழம்பிப் போயிருக்கும். எண்ணெய்ப் பிசுக்கும் நீர்க்காவியும் ஏறிய பழைய நார்மடிப்புடவையோடு தவிர்க்க முடியாமல் தெருமண்ணையும் பாதங்களில் அப்பிக் கொண்டு வந்திருப்பாள். நின்ற சந்தர்ப்பத்தில் புடவையின் நீர் வடிந்து கால் மண்ணைக் கழுவி விடும். மண் சிமெண்டுத் தரையில் தங்கி நீர் பிரிந்து முற்றத்திற்கு ஓடும்.

அம்மா தயிரையும் பாலையும் அவளுடைய பாத்திரங்களில் மாற்றும் போது ‘இன்னியோட ஒம்பதே காலணா ஆச்சு’ என்பாள். நின்ற நேரத்தில் வேறு இடத்தில் வாழ்ந்தவளாகத் தோன்றியவள் நிலைக்குத் திரும்பிய இடறல் இல்லாமல் இயல்பாகப் பாத்திரங்களில் ஏந்திக் கொள்வாள். இதில் அவள் நின்ற இடத்தை மறந்திருந்தாள் என எப்படிச் சொல்வது? கால அளவும் அவளுக்கு வேறுபட்டிருக்கும் போலிருக்கிறது.

பதினைந்தே முக்காலணாவுக்கு மேல் ஒரு ரூபாய் என்று அம்மா சொல்லக் கேட்டதில்லை. அவள் கையிலிருந்த சில்லறை அம்மாவின் கைக்கு மாறியதையும் பார்த்ததில்லை. கணக்குச் சொல்லி பாத்திரங்களில் மாற்றும்போது அவள் சம்மதத்தின் அறிகுறியும் தென்படாது. தகராறு நேராததிலிருந்து வியாபாரம் நாணயமாய் நடந்து வந்திருக்கிறதென்று ஊகிக்க்க இருந்தது. அவளுக்குப் பால் கொடுப்பதால் புண்யமுண்டு என்றும் அம்மா சொல்லுவாள்.

இடையில் தயிர் வாங்க வருவதை இரண்டொரு மாதங்கள் நிறுத்தி விடுவாள். அப்போது யாரிடம் வாங்கினாள் என்பதைத் தெரிந்து கொள்ளும் அக்கறை இருந்ததில்லை. ஏன் அப்படி இடம் மாற்றினாள் என்பதும் தெரியவில்லை. மறதியில் ஒரே வீடு என்று வாங்கி வந்திருப்பாளோ? என்னவோ? மேற்கேதான் எங்காவது வாங்கியிருப்பாள். கிழக்கு மேற்கான தெருவில் சாரியைப் பொறுத்து தெற்குப் பார்த்தோ வடக்குப் பார்த்தோ ஒரு தாழ்வாரத்துச் சின்னத் திண்ணையருகில் நின்று ஒரு பையன் நெரைச்சல் இடுக்கு வழியாகப் பார்க்க வாங்கி வந்திருப்பாள். மேலண்டைச் சுவர் வீட்டின் தாய்ச் சுவராக இரண்டு சாரி அமைப்பில் எதிரெதிராக வீட்டுக் கதவுகள் திறந்திருக்கும்போது கொல்லைத் தலைமாடுகளிலிருந்து பார்க்க நேர்ந்தால் நடுவில் தெரு மறைந்து ஒரே வீட்டின் பல நிலைப்படிகளாகத் தோன்றும். ஒரு பயணியைக் கொண்டு ஞாபகம் வரலாம். தெரு தாழ்ந்திருப்பதில் தாழ்வாரத்தில் நடப்பவரென்று கொள்ளமுடியாது. ஒரு சாரியின் கொல்லைச் சந்திலிருந்து எதிர்ச்சாரியின் கொல்லைச் சந்துக்குப் போக எல்லோருக்கும் குறுக்குப் பாதை வீடு. அவள் ஒரே இடத்தில் நின்று பழக்கமானதில் பார்க்கும் திசையைக் கொண்டு எச்சாரி என தீர்மானிக்க இருக்கலாம். அநேகக் குறுக்குப் பாதைகள் ஒன்றில் கடந்து போகும் ஒருவரென்று மறதியில் தோன்றினாலும் சாரிப்பிரிவினை சாத்யமற்றுப் போகும். இப்பொதுத் தன்மைகளில் வேறுபட்ட வீடுகள் ஒருவரை விநோதம் ஏதுமற்றவராகக் காட்டலாம்.

அங்கும் அவள் ‘பட்டு’ எனக் கூப்பிட்டிருக்கக்கூடும். இப்பெயர் கொண்ட இன்னும் சிலர் இருந்தார்கள். பாட்டி சொன்னதைப் போல அவள் பிழியாத ஈரப் புடவையில் ‘அவ ஆம்படையான் இன்னிக்கித்தான் செத்தான்’ என்று அவர்களுக்கும் தோன்றியிருக்கலாம்.

இப்படி ஒருவரின் நினைப்பாக இல்லாமல் அவளைத் தண்ணீர்ப் பிசாசு என்று எல்லோரும் சொல்வார்கள். இறந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பிசாசாகப் பிறந்து வந்தவளாகக் கண்டார்கள் போலிருக்கிறது. ஆனால் அவளைக் கண்டு யாரும் பயந்து கொண்டதில்லை. அவள் தன் இருப்பைத் தூக்கலாய் உணர்த்தியும் பழக்கத்தில் மறந்து விட்டார்கள்.

அவளுடைய சாலைக் குளம் வீட்டு விலக்கான பெண்கள் குளிக்க வசதியாக இருந்தது. அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு ஆண் பார்வை படுமுன் திரும்பிவிடலாம். கணவன் கண்ணில் படாமல் உப்பும் அரிசியும் போட்டுக்கொண்டு விடலாம். ஒரு பெண் துணையுடன் குளிக்கப் போகும்போதும் அவள் குளத்தில் இருப்பாள். கண்களில் படாமல், இருட்டில் அலைந்து எழுப்பும் சலசலப்பு நிசப்தத்தில் பயமூட்டுவதாக இருக்கும். ஒருவருக்கொருவர் பேசும் ஒலிக்கும் பயந்து மௌனமாய் இருக்கும் நேரம் இது. தங்கள் நினைப்பே பயமுறுத்துவதாக இருக்கும். கண்களில் தென்படாமல் மரக்கிளையை ஆட்டிச் சலசலக்க வைக்கும் நிறையப் பிசாசுக் கதைகள் தெரியும். சுவாரஸ்யத்தில் கதை கேட்டு விடுவார்கள். பின்னால் நினைத்துப் பயந்து கொண்டிருப்பார்கள். இப்போது அக்கதைகள் எல்லாம் ஞாபகத்திற்கு வரும்.

ஏதோ ஒரு தலைமுறையில் வீட்டு விலக்கானவளை துணையாக வந்து குளிக்க இதே குளத்திற்கு அழைத்துக் கொண்டு போன பிசாசுக் கதை வீட்டு விலக்காகும் பெண்களுக்கெல்லாம் தெரியும். இந் நாட்களில் தெரிந்து கொள்ள வேண்டிய எச்சரிக்கைகளில் ஒன்றாக புஞ்சைப் பெண்களுக்கு மரபாகச் சொல்லப்பட்டு வந்தது இது. மற்ற நாட்களில் மறந்திருப்பவள் இதை வீட்டு விலக்கு நாட்களில் நினைவுபடுத்திக் கொண்டு விடுவாள்.

விலக்காகி மாட்டுக் கொட்டாயில் ஒதுங்கியிருந்தவளைக் காமமுற்று மூன்று நாட்களும் கொல்லைப் புளிய மரத்திலிருந்து கவனித்துக் கொண்டு வந்ததாம் பிசாசு. மூன்றாம் நாள், குளிக்கக் கிளம்ப வேண்டுமென்று அரைத் தூக்கத்தில் இருந்தவளைப் பக்கத்து வீட்டில் விலக்கானவள் வேஷத்தில் வந்து வாசல் கதவைத் தட்டி எழுப்பிக் கொண்டு போயிற்று. முதல்நாள் அவர்கள் கொல்லையில் ஒருவருக்கொருவர் துணையாகப் போக வேண்டுமென்று பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறது அது. முதலில் அவளைக் குளத்தில் குளிக்க விட்டு, இவளை வந்து அழைத்துக் கொண்டு போயிற்று. பக்கத்தில் துணையாக வந்தவள் முன்பே குளத்தில் குளித்துக் கொண்டிருப்பது கண்டு இவள் திரும்பிப் பார்க்க, வந்தவளைக் காணவில்லை. தன்னோடு குளிக்க இறங்கியவள் இப்போதுதான் வீட்டிலிருந்து வரும் கோலத்தில், முழுகி எழுந்தவள் பார்த்துத் தன்னோடு குளிக்க இறங்கியவள் எங்கே எனத் தேடிக் கு ழம்பி விட்டாள். உண்மையான இருவரும் ஒருவரை ஒருவர் பிசாசு என்று பயந்து அலறிப் புடைத்துக்கொண்டு ஓடிவந்து வீட்டுக் கதவை இடித்து வாய் குழறி நின்றார்கள். பிறகு விடிந்து கொல்லைக் கிணற்றடியில் தண்ணீர் இழுத்துக் கொட்டக் குளித்துவிட்டு வந்து படுத்தவர்கள்தான். பேய் விரட்டிய பிறகே இருவருக்கும் ஜுரம் தணிந்தது. இருவரும் அடுத்தமாதம் விலக்காகவில்லை. அவர்கள் வயிற்றில் பிசாசு கரு வளர்கிறது என்று எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். மீண்டும் இரண்டு பேரும் பேயாட ஆரம்பித்தார்கள். ‘பிசாசுக்கு வாக்குப்பட்டா புளியமரத்திலே குடும்பம் நடத்தணும்’ என்ற பழமொழிக்கு எல்லோருக்கும் இப்போதுதான் உண்மையான அர்த்தம் தெரிந்ததாம். கருத்தரிக்காத நாட்கள், கருத்தரிக்கும் நாட்கள் என்ற விவரமெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. பிசாசுக் கருவைச் சிதைத்துப் பேய் விரட்டிய பிறகே அவர்கள் தன் நிலைக்குத் திரும்பினார்கள். ஊரிலும் குடும்பத்திலும் நிம்மதி ஏற்பட்டது. எப்படி பிசாசைப் பெற்று வளர்ப்பது? ஊர் குழந்தைகளை விளையாடப் போகாமல் கட்டுப் படுத்தி வைக்க முடியுமா?

வீட்டு விலக்கானவர்கள் குடும்பத்தில் ஒருவர் வீட்டிலிருந்தே தூங்கி எழுந்து வருகிறவர் என்ற நிச்சயமான துணையுடன் தான் குளிக்கப் போவார்கள். மாற்றி மாற்றி ஒருவர்காலை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள். பார்வையில் தாங்களே பிசாசாகும் பயமும் இருக்கும். ஆனால், முன்பே அவள் குளத்தில் அலைந்து கொண்டிருப்பதில் யாரும் பயந்து கொண்டதில்லை. அது பிசாசாகவே இருந்தால்கூட பயந்திருக்க மாட்டார்கள். அவள் இறக்கும்வரை மற்றொரு துணையாகவே இருந்து கொண்டிருந்தாள்.

குளத்திலும் ஊரிலும் அவள் இல்லாத சமயங்களும் இருந்திருக்கின்றன. இதை யாரும் உணர்ந்ததில்லை. நினைவில் உறுத்துகிற முந்தானை முடிச்சைப் போன்ற இதை யாரும் உணராதது முடிச்சை மீறிய மறதி போலிருக்கிறது. ஒரு முறை நான் அவளை முற்றிலும் அன்னியச் சூழ்நிலையில் கண்டேன். ஒரு நாள் சாயங்காலம் செம்பனார் கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தபோது அவள் எதிரில் வந்து கொண்டிருந்தாள்.  இப்போது குளத்தில் கண்டு கொண்டிருக்கக் கூடுமென்று தோன்றிற்று. நான் பார்த்ததும் ஒரு உருவெளித் தோற்றமோ என்று இருந்தது. அவள் கையில் ஒரு பொட்டலத்துடன் தோற்றத்தில் பொருந்தாமல் வந்து கொண்டிருந்தாள். ஜவுளிக் கடையிலிருந்து திரும்பிக் கொண்டிருப்பவளாக இருக்கலாம். பொட்டலம் கட்டப்பட்டிருந்த தோரணை அவ்விதம் நினைக்க இருந்தது. ஒருவன் அவளைக் குளத்தில் பார்த்த நேரத்தில் ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்களில் ஒருவராகப் பலர் கண்டிருப்பார்கள்.

இன்னொரு முறை அவளை நாங்கள் அவள் வீட்டிலேயே கண்டோம். ஒரு கிருஷ்ண ஜயந்திக்கு குழந்தைகள் நாங்கள் எண்ணெய் தண்ட கிண்ணங்களை எடுத்துக் கொண்டு ‘சீசந்தி அம்பாரம், சிவராத்திரி அம்பாரம்’ என்று பாடிக் கொண்டு போனோம். அவள் வீட்டுக் கதவும் திறந்திருந்தது. அவளும் வீட்டிலிருந்தாள்.

அவள் வீடு நூறு வருஷத்திற்கு முந்தியது. என்றாலும் குடுமியுள்ள ஒற்றைக் கதவில்லை. இரட்டைக் கதவுகள்.அவை சித்ர வேலைப்பாடுகள் செய்த நிலைப்படியும் கதவுகளும். சட்டம் சட்டமாக இழைத்து அலுத்து தச்சன் கிடைத்த சந்தர்ப்பத்தில் தன் சொந்தத் திருப்திக்காகச் செய்தவை போலிருக்கும் அவை. இடப்புறக் கதவு கிராமப் பழக்கம் போல மேலும் கீழும் தாழிட்டு எப்போதும் போல் சாத்தப்பட்டிருந்தது. வலக்கதவு திறந்திருக்கும்போது ஒருக்களித்திருப்பது போல் ஒருக்களித்து வைக்கப்பட்டிருந்தது. மூடிய கதவின் ஓரங்களைச் சுவரோடு வைத்துத் தைத்து விட்டது போல சிலந்தி வலை பின்னியிருந்தது. நிலைப்படியின் மேல் சிற்ப இடுக்குகளில் வெள்ளை வட்டங்களாகத் தம்படி அளவில் பூச்சிக் கூடுகள் இருந்தன. அவற்றை காயம்படும்போது காயத்தில் ஒட்டிக் கொள்ள எடுக்கப் போவதுதான் அவள் வீட்டுடன் எங்களுக்குப் பரிச்சயம். அங்குதான் கிடைக்கும் அவை. காயத்திற்கான அரிய மருந்து எங்களுக்கு.

ஒருக்களித்திருந்த கதவை முழுதாகத் திறந்து வைத்துவிட்டு நாங்கள் உள்ளே போனோம். அப்போது என் மூக்கில் சிலந்தி இழை ஒன்று ஒட்டிக் கொண்டு மூக்கணாங் கயிறு போல் காதுகளில் மாட்டி பாதி ரேழி வரையில் வந்தது நினைவிருக்கிறது. கையில் பற்ற முடியாமல் அதை எடுப்பதற்குத் தடுமாறித் தயங்கி நடு ரேழியில் நான் தாமதிக்க வேண்டியிருந்தது. மற்றவர்கள் எனக்கு முன்னதாக அவள் வீட்டின் உட்புறத்தைக் கண்டார்கள்.

சாதாரண நாளில் ஒற்றைக் கதவும் திறந்திருந்து முற்றம் தெரிந்து தெருவில் போவார் யாரும் பார்த்ததில்லை. குத்தகைக் காரன் நெல் கொண்டு வந்து போடும்போது கதவுகள் இரண்டும் திறக்கப்படும். அவன் வீட்டின் எதிர்ப்புற காலிமனையில் நின்று கொள்வான். குடியானவன் ஒருவன் வண்டி மூட்டைகளை முதுகில் புரட்டி உள்ளே கொண்டுபோய் போடுவான். இந்நேரங்களில் பார்வைக்கு மூட்டைகள்தான் தென்படும். முற்றம் தென்படுவதில்லை.

ரேழியில் வௌவால் புழுக்கையின் நாற்றமடித்தது. இது கிராமத்தில் தொன்மையின் நெடியாக சுவாசிக்க அனுபவமாகியிருப்பது. அரவம் கேட்டவுடன் உத்திரத்திலும் சரத்திலும் தொங்கித் தரையைக் கூரையாகப் பார்த்து எங்களைத் தொங்குவதாகக் கண்டு வௌவால்கள் அச்சத்துடன் சிதறிப் பறக்க ஆரம்பித்தன. காக்கைகள் அடங்கும் மரத்தில் இரவில் கல்லெறிந்தது போலாயிற்று. காக்கைகள் போல கூச்சலிடாமல் இறக்கைகளைப் புடைத்துக் கொண்டு பறந்தன. அவற்றின் உயிர்ப்பை அகாலமாய் அவற்றுக்கு நினைவூட்டியது போலாயிற்று.

முற்றத்தில் வேலைக்காரி அரிசி புடைத்துக் கொண்டிருந்தாள். அவள் அசை போட்டுக் கொண்டிருந்த அரிசி கடைவாயில் வெள்ளையாயிருந்தது. பூந் தவிடு படிந்து மீசையிருப்பது தெரிந்தது.

நாங்கள் முற்றத்திலிருந்து தாழ்வாரத்தில் ஏறியபோது அவள் பூஜை அறையில் விளக்கேற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். அழுக்குப் பிடித்த பழந்திரியை நிமிண்டிவிட்டு விளக்கை ஏற்றினாள். சுடர் பிடிக்க ஆரம்பித்தது. தலையிலோ, புடவையிலோ எண்ணெய்க் கையைத் துடைத்துக் கொள்ளும் கிராமப் பொம்மனாட்டிகளின் வழக்கம்போல அவள் கை எண்ணெய்க் கரியைப் புடவையில் துடைத்துக் கொண்டாள்.

விளக்கு, சரத்திலிருந்து தொங்கிய சங்கிலியின் முனைக் கொக்கியில் மாட்டப் பட்டிருந்தது. துருப்பிடித்தும் அங்கு மாட்டியவரை நினைக்கத் தூண்டுவதாகவும் இருந்தது. சங்கிலி ஆடிக் கொண்டிருந்ததில் விளக்கின் நிழல் சுவரிலும் தரையிலுமாக ஆடிக் கொண்டிருந்தது. அறையின் பொருள்களும் அவளும் நிழலோடு பெயர்ந்து ஆடினார்கள். தரையில் கிடந்து சுவரில் ஏறி ஆடும் நிழல்கள் திரிந்து பூச்சாண்டி காட்டின. அவை இவற்றின் நிழல்கள் என வேர்பிடித்துத் தெரிந்தன. அவற்றில் அவள் நிழல் பூதாகரமாய் ஆடிற்று. போதை போல் தணிந்து ஆட்டம் நிலைக்கு வர நேரம் பிடித்தது.

விளக்கின் எண்ணெய் தங்கும் குழிவு நீலமாய், பாசி படிந்து எரிந்த திரித்துண்டுகளோடும் ஒட்டடைத் தூசியோடுமிருந்தது. கூரையின் சாத்துகளை இணைத்து சாம்பல் தூவிய பாத்தியைக் கவிழ்த்து, விதானம் கட்டியதுபோல் எங்கும் ஒட்டடை. விளக்குச் சரம் அதில் பயிரான கொடி போலிருந்தது. ஓடுமாற்ற அவள் வீட்டுக்கூரையில் ஆள் ஏறிக் கண்டதில்லை நாங்கள். அவள் ஆணைக்குக் கட்டுப்பட்டிருந்தது. அவள் செத்த மறு வருஷம் பெருங்காற்று மழையில் சிரமத்துடன் முனகிக் கொண்டு கூரை கூடத்தில் உட்கார்ந்து விட்டது.

தரை முழுவதும் காற்றுச் சலித்த புழுதி படிந்ததிருந்தது. பாதம்பட்ட புதிய சுவடுகளும் பழைய சுவடுகளில் புழுதி படிந்து மறைவதும் பூச்சிகள் ஓடிய கோலங்களுமாய் இருந்தது தரை. அவள் காலத்தில் வம்சாவளியாய் பூச்சிகள் கோலமிட்டு வந்திருக்க வேண்டும். அவற்றின் சுவடுகள் மறைந்தும் தோன்றிக் கொண்டுமிருந்தன. அவள் பாதத்தின் பரிணாமச் சுவடுகள் அறையில் பொதிந்து வைக்கப்பட்டிருக்க வேண்டுமென்றிருந்தது.

விளக்கின் அடிவிளிம்பில் எண்ணெய்ச் சொட்டுக்கள் வரிசையாக கீழே விழ கசிந்து வரும் கனத்திற்குக் காத்துக் கொண்டிருந்தன. விளக்கு ஓட்டையை எண்ணெய்க் களிம்பு அடைத்துக் கொண்டிருக்கலாம். சுடர்க்கசிவும் நல்ல விளக்கை ஓட்டையாகக் காட்டியிருக்கலாம். சொட்டிய எண்ணெய்த் தரையில் சுவறியிருந்தது. பழைய பிசுக்கில் புழுதி படிந்து மீண்டும் சொட்டி விளக்கின் அடித்தரை அங்கு மேடிட்டிருந்தது. ஆடி விலகிச் சொட்டியவை அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தோன்றின.

எங்கள் வருகை அவள் கவனத்தைக் கவரவில்லை. விளக்கேற்றிவிட்டு மேற்புறச் சுவரைப் பார்த்துத் திரும்பிக் கொண்டாள். அவள் பார்த்து நின்ற சுவரிலிருந்த படங்கள் புழுதி படிந்து கண்ணாடிச் சட்டங்களாகத் தோன்றின. நம் பார்வைக்குத் தோன்ற அவற்றில் ஒன்றுமில்லை. படங்களின் கீழிக் கஸ்தூரிக் கட்டைகளில் பாராயண புத்தகங்கள் போலும் ஓலைச்சுவடிகள் போலும் புழுதி படிந்த குப்பல்களிருந்தன. எல்லாம், அன்னியக் கைபடாமல் ஞாபகார்த்தமாக விட்டுச் சென்ற நிலையில் காப்பாற்ற இயலாதென இருந்தன. அவற்றிலிருந்தவை அவள் நினைவிலிருக்கலாம். அவள் இப்போது விமோசனம் இல்லாத சாபம் போலத் தோன்றினாள்.

ஒருவன் ‘பாட்டி’ என்றான். இதுவரை அவளை யாரும் இவ்விதம் கூப்பிட்டதில்லை. கூப்பிட்டவன் ஒருமாதிரியாக உச்சரித்தான். அவன் கூப்பிட்டதற்கு மற்றக் குழந்தைகள் வெட்கப்பட்டார்கள் போலிருந்தது.

இன்னொருவன் ஓரடி உள்ளே எடுத்து வைத்தான். சுவர்ப்புறம் பார்த்துக்கொண்டிருந்தவள் கையை நீட்டி அவனைத் தடுத்தாள். அவன் நிழலும் விளக்கு வெளிச்சத்தில் அறைக்கு வெளியில்தான் விழுந்திருக்க முடியும். நிழலைக் காண்பிக்க வெளியில் இருட்டவில்லை. அவள் ஒரு உள்ளுணர்வில் மட்டுமே அவனை உணர்ந்திருக்க வேண்டும். இப்போதும் அவள் எங்கள் பக்கம் திரும்ப வில்லை. அறைக்கு வெளியில் உள்ள எதுவும் அவள் கவனத்தைக் கவர முடியாது போலிருக்கிறது.

“கொஞ்சம் எண்ணெய் ஊத்தரேளா?” என்று யாசித்தாள் எங்களில் ஒரு பெண்.

அவள் கேட்டது, ஒலி வெளியைக் கடந்து அவள் காதுக்குப் போய்ச்சேர முடியும் என நம்புவதாக இருந்தது. பேச்சுக் காற்று பட்டு ஒட்டடை சல்லாத் துணியாய் ஆடிற்று. அவள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

விளக்கு வெளிச்சத்தில் பெரிய சிலந்திகள் மின்னின. புதிதாக நூலிழுத்து ஓடி நெய்து கொண்டிருந்தன. புதிய இழைகளும் மின்னின.

நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

‘சீசந்தி அம்பாரம்... சிவராத்திரி அம்பாரம் பட்டினி அம்பாரம் பாரணை அம்பாரம்’ என்று திடீரென்று ஒருமித்துணர்ந்து பாடினோம். சப்தம் இங்கு விகாரமாய் ஒலித்தது.

”ஏன் சும்மா நின்னுக்கிட்டு, அது எங்கே ஊத்தப்போவுது” என்றாள் அரிசி புடைத்துக் கொண்டிருந்தவள்.

பூஜை அறையிலிருந்து கிளம்பி அவள் வாசலுக்குப் போக ஆரம்பித்தாள். களவுக்கு வீட்டில் எதுவும் இல்லையென நம்புபவள் போலத் தோன்றினாள்.

“அந்த எண்ணெயே வாங்கினாக்கூட ஒரே வெஷம்டா, எண்ணேய்ச் சொம்பேப் பாரேன். ஒரே கரும்புளிச்சிருக்கு” என்று ஒருவன் சொல்ல நாங்கள் திரும்பினோம்.

அவள் மேற்கே குளத்திற்குப் போய்க் கொண்டிருந்தாள். இருட்டுவதற்கு இன்னும் நேரமிருந்தது. எண்ணெய் தண்ட இன்னொரு வீடு மேற்கே பாக்கியிருந்தது. ஒவ்வொருவனும் ஒரு நோக்கில் புழுதியை உழுது கொண்டு போனான். பெண்கள் சிணுங்கினார்கள்.

“மாட்டுக்காரப் பசங்க வெசவு அவளுக்கு வேணும்” என்றான் ஒருவன். மந்தையிலிருந்து ஒரு பசு மாடு தவறி வாயிற் புறமாய் வந்து கொண்டிருந்தது. வாசலாலும் வீட்டை அடையாளம் காணத் தெரிந்தது போலிருக்கிறது அது.

குளத்தின் மேல்கையில் இலுப்பைத் தோப்பில் பையன்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது அவளைப் பார்த்துப் பாடுவார்கள். ‘அக்ரகாரப் பாப்பானுவோ சாவக்கூடாதா? ஆத்தங்கரை ஓரத்திலே வேவக்கூடாதா?’ என்று. அவளிடமிருந்து எதிர்ப்பில்லாமல் ஏமாந்து ‘ஏ பாப்பாத்தி காது ஓட்டையா பூடிச்சா?’ என்று கத்துவார்கள்.

“தண்ணிப் பிசாசு” என்று ஒருவன் திட்டினான்.

”அவ செவிடுன்னே நெனெக்கிறேன்” என்றான் இன்னொருவன்.

“செவிடுன்னா என்ன? கைக் கிண்ணத்தைப் பாத்தே ஊத்தலாமே” என்று அடுத்தவன் சொன்னான்.

“அவ நம்மே பாக்கவே இல்லை. பொட்டையும் போலிருக்கு” என்று பின்னால் ஒருவன் சொன்னான்.

“அவ கண்ணுலே பாப்பா இருக்காண்ணு பாக்கணும்” என்று ஒருத்தி சிரித்தாள்.

“அவ ஒரு நிதானத்லே நடக்கறா போலேருக்கு” என்று மற்றொருவன் சொன்னான்.

“மாட்டுக்காரப் பசங்க வெசவு அவளுக்கு நன்னா வேணும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னான் இதை முதலில் சொன்னவன். அவளை நாங்கள் கூட்டமாய்ச் சேர்ந்து வெறுத்தது இதுதான். இதற்கு முன்னாலும் பின்னாலும் இன்னொரு சந்தர்ப்பம் இல்லை. நான் அவளைத் தனியாக வெறுக்க நேர்ந்திருக்கிறது. இது பின்னால் சுதந்திரத்திற்கு முன்பு நடந்தது. இடுப்பில் குடத்தோடு குளத்திலிருந்து அவள் வந்து கொண்டிருந்தாள். நான் மேற்கே போய்க் கொண்டிருந்தேன். என்னைப் பார்த்து கல்லடிக்குப் பயந்து ஓரத்தில் கூனிக் குறுகி அடியைத் தவிர்த்து விடலாம் என்ற நம்பிக்கையோடு ஒடுங்கும் வெற்றுத் தெரு நாயைப் போல ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டு “யாருடா?” என்றாள். கையைக் குவித்துப் பார்வைக்குக் குடை பிடித்துக் கொண்டாள்.

“நாந்தான்”

“இம்” உன்னிப்பான பார்வையை ஆள் மேல் தடுத்து நிறுத்தச் சிரமப்படுபவள் போல இருந்தாள்.

“நாந்தான் கண்ணன்”

“யாரு, வெட்டியாரக் கோவிந்தன் மக்னா?” கையை எடுத்துவிட்டு, ஆள் மேல் பார்வையை நிறுத்திவிட்டவளாகக் கேட்டாள்.

”நாந்தான் கண்ணன். கண்ணன். நடேசய்யர் பையன். நீங்க தயிர் வாங்கவல்லே? கண்ணன்... கண்ணன்” செவிடும் குருடுமென்று அருகில் போய்க் குரலை உயர்த்திச் சொன்னேன். இன்னும் விலகிச் சுவரோடு ஒண்டிக்கொண்டாள். குடத்துத் தண்ணீரை அங்கேயே கொட்டிவிட்டு குளத்திற்குத் திரும்பி விட்டாள். உடனே வெறுக்கத் தோன்றிற்று. என் மேலும் வெறுப்பாய் இருந்தது. பிறகு மாட்டுக்காரப் பசங்க வெசவு நியாயம் என்று தோன்றிற்று.

வெட்டியாரக் கோவிந்தன் அவள் குத்தகைக்காரன் வரதராசுவின் பாட்டன் என்றும், தான் குழந்தையாக இருக்கும் போதே கிழவனாகச் செத்து விட்டான் என்றும் பாட்டி பிறகு சொன்னாள்.

முதல் சுதந்திர தினத்தன்று பள்ளிக்கூட வாத்தியார்கள் சேர்ந்து சேரிக்காரர்களை ஊர்வலமாக அக்ரகாரத்திற்குள் அழைத்து வந்தார்கள். கொட்டு மேளத்துடன் ஊர்வலம் கிழக்கிலிருந்து மேற்கே வ்நது அவள் வீட்டைக் கடக்கும்போது அவள் தண்ணீர்க்குடத்துடன் குளத்திலிருந்து வந்து கொண்டிருந்தாள்.

அக்ரகார வாத்தியார் விகண்டையாகச் சொன்னார் “ஏலே ஒங்களுக்குத்தாண்டா... அம்மா பூரணக்கும்பம் எடுத்தாரங்கடா” என்று அவர் தானே சிரிக்க வேண்டியிருந்தது. பிறகு அவர்கள் சிரித்தார்கள்.

இப்போது அவள் எப்படி நடந்து கொள்ளப் போகிறாள் என்று எனக்குத் தோன்றிற்று. குடத்துத் தண்ணீரைத் தன் தலையில் ஊற்றிக் கொள்ளப் போகிறாளா? சுவரோரம் ஒதுங்கிக் கொள்ளப் போகிறாளா? ஒருவருக்கானால் அவள் ஒதுங்கிக் கொள்ளலாம். பலருக்கானால் அவள் சுவருக்குள்ளேயே போக வேண்டுமென்று தோன்றிற்று. கல் சுவர், ஈர மண் சுவரைப் போல அவளுக்கு வழிவிட வேண்டும். ஈர உடலோடு மன், உடலில் ஒட்டாமல் அவள் மண்ணில் புதைந்து புறப்பட வேண்டும். அவள் போன இடம் ஆள் வடிவில் ஓட்டை விழுந்திருக்க வேண்டும். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துவிட்டேன். எல்லோரும் சிரித்து முடித்த பிறகு நான் சிரித்திருந்தேன்.

“என்ன கண்ணா நான் சொல்றது” என்றார் வாத்தியார். இரண்டாம் முறை அவர் சிரித்தார். மீண்டும் எல்லோரும் சிரித்தார்கள். அவர் மிகவும் சந்தோஷமாய்ச் சிரித்தார்.

ஊர்வலத்தில் வரதராசு இருந்தான். சந்தோஷத்துடனும், கூச்சத்துடனும், ஆச்சரியத்துடனும் இரண்டு சாரி வீடுகளாலும் நெருக்கப்படுவது போல நிதானமில்லாமலும் நெளிந்து ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது.

இவளைக் கண்ட வரதராசு “டேலி, ஒத்திக்கிங்கடா... அம்மா வராங்கடா” என்று ஒதுங்கினான். எல்லோரும் வெடித்துச் சிரித்தார்கள். வரதராசுவும் சிரித்தான். ஊர்வலத்தில் தான் விட்டுச் சென்ற பொக்கையை திரும்பி வந்து நிரப்பினான். நாதசுரக்காரன் கெட்டி மேளம் கொட்டினான்.

அவள் ஊர்வலத்தைக் கண்டவளாகத் தோன்றவில்லை. வரதராசுவை அவள் அடையாளம் கண்டு கொண்டிருக்கலாம். இடுப்பில் குடத்துடன் வீட்டுக்குள் போய்விட்டாள். அவள் காந்தி கட்சியில் சேர்ந்து விட்டாளென்று கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அக்ரகார வாத்தியார் கொஞ்ச நாட்கள், ஊர்வல தினத்தன்று தான் சந்தைக்குப் போய் வந்தவன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவள் உயிருடன் இருந்த மூன்று வருஷமும் வரதராசு குத்தகை நெல்லை, வண்டியை வாசலையொட்டி ஓட்டி நிறுத்திக் கொண்டு மூட்டைகளை முதுகில் புரட்டி ரேழியில் உருட்டிவிடுவான். ஆடாதொடைத் தழையால் பூச்சிக்கூடுகளைத் தட்டுவான். குடியானவன் அங்கிருந்து உள்ளே கொண்டுபோய் போடுவான்.

இந்த மூன்று வருஷங்களில் ஒழுங்காகத் தயிர் வாங்க வருவதை அவள் நிறுத்தி விட்டாள். நேர்ந்த சமயங்களில் வந்து சின்னத் திண்ணையில் உட்கார்ந்து யாராவது பார்க்கும் வரை காத்துக் கொண்டிருந்து வாங்கிக் கொண்டு போவாள். விலைக்கு வாங்குபவளாகத் தோன்றாது. யாசித்து நிற்பவளாகத் தோன்றும். சில நாட்கள் விடுபட்டுப் போகும். முன்பு சில சொற்களில் முடிந்தது இப்போது மௌனமாகவே சாத்யமாயிற்று. ஆனால், அவள் மௌனமாக இருந்ததில்லை. அருகில் போனால் லேசான முனகல் கேட்கும். பெரிதாகச் சத்தம் போட்டு தொண்டைகட்டி சப்தம் வராமல் முனகலானது போலிருக்கும். இனிமேல் அதிக நாட்கள் தாங்க மாட்டாளென்று தோன்ற ஆரம்பித்தது. அவள் சீக்கிரம் சாகக் காரணம் அந்த ஊர்வலம் தான் என்று வாத்தியார் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் காலை அவளைக் காணவில்லை. அதிசயமாய் உணர்ந்து வீட்டைப் பார்த்தவருக்கு வீட்டில் பூட்டுத்ட் ஹொங்கிக் கொண்டிருந்தது. அவள் தன் சாக்காட்டை முன்னதாய் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அவள் செத்து, குளத்தில் மிதக்கப் போகிறாள்; அல்லது வீட்டில் செத்து நாறியபிறகுதான் அவள் சாவு தெருவில் தெரியப் போகிறது என்றுதான் நாங்கள் எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் இவ்வளவு விரைவிலென்று எதிர்பாராத அவள் சாக்காட்டுச்  செய்தியை வரதராசு கொண்டுவந்து விட்டான்.

மூச்சு இறைக்க, வியர்வைத் துளித்துளியாய் சேர்ந்து கோடிட்டு மார்பில் ஓட, முகத்தில் வழியும் வியர்வை, கடைவாயில் வழிய அக்ரகாரத்தில் துப்பத் தயங்கி, ”அம்மா எறந்து பூட்டாங்க” என்று இறைக்க இறைக்கச் சொன்னான். ஊரைத் தகித்துக் கொண்டிருந்த வெயிலில் ஓடிவந்திருந்தான். கோடைப் பந்தலில் தண்ணீர் தெளித்துவிட்டு நாங்கள் வாத்தியார் வீட்டுத் திண்ணையில் பேசிக் கொண்டிருந்தோம்.

“வண்டியே... கட்டுங்க வண்டியே கட்டுங்க” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே தயாராக எழுந்து கொண்டார் அவர்.

நாங்கள் மூலைக்கொருவராக ஓடி, அவன் வண்டி; இவன் மாடு; இவன் பூட்டணாங்கயிறு; இவன் முளைக்கழி; இவன் தார்க்கழி என்று கொண்டுவந்து சேர்ந்துவிட்டோம். அவர் ஆளவடியில் கிழிந்த ஜமக்காளத்தை உதறிக் கொண்டு நின்றார். இரட்டிப்பான சாமான்களை அவர் வீட்டுத் திண்ணையிலேயே போட்டு விட்டு நொடியில் வண்டியைப் பூட்டினோம்.

தலைக்கயிற்றை அவர் தன் கையில் வாங்கிக் கொண்டார். நாங்கள் தொத்திக் கொண்டோம். அதற்கு முன்பே வண்டி புறப்பட்டு விட்டது. மாடுகள் பாய்ச்சலில் போயின. வரதராசு பின்னால் ஓடிவந்தான்.

அவள் காலையில் கீழப்பாளையத்தைத் தாண்டி வரப்பில் நடப்பதை எவனோ கண்டானாம். அவள் போன திக்கிலிருந்து அவள் தன் தாயாதிக்காரனைத் தேடிக் கொண்டு போயிருக்க வேண்டுமென்று தோன்றிற்று. அங்கிருந்து அவள் அதிக தூரம் போகவில்லை. களைத்து ஒரு களத்தின் ஆலங்கிளை நிழலில் போய் உட்கார்ந்து விட்டாள். வெயிலுக்கு அஞ்சியவன் எவனோ வைத்துச் சில வருஷங்களே ஆன ஆலங்கிளை கொஞ்சம் தழையை பூ போல் வைத்துக் கொண்டு நின்றது. நரிப்பயறில் மேயும் மாடுகளை விரட்டிக் கொண்டு போன வரதராசு அவளைக் கண்டிருக்கிறான்.

“ஏம்மா இந்த வெயில்லே பொறப்பட்டு வந்தீங்க” என்றிருந்திருக்கிறான் அவன். அவள் பதில் சொல்லவில்லை. விழிகள், மேல் இமையில் சொருகலிட்டிருந்திருக்கின்றன. வாய் பிளந்து ஆகாசத்திற்கு உயர்ந்து விட்டிருந்திருக்கிறது.

வண்டி கீழப்பாளையத்தைத் தாண்டி எருவடிக்க பாரவண்டிகள் போன சோடையில் இறங்கி ஓடிற்று. சோடை நரிப்பயறுக்கு அடியில் புகுந்து கண்ணுக்கு எட்டும் தூரத்தைத் தாண்டி முடிவற்றுப் போயிற்று. நரிப்பயறு சூடேறி வெப்பம் அடித்துக் கொண்டிருந்தது. துவண்டு தாகத்தைத் தூண்ட இருந்தது. அடிநிலம் தாறுமாறாய் வெடிப்போடியிருந்தது. கானல் பேரோடையாக எங்கும் அலைமோதிக் கொண்டிருந்தது. ஆயிரம் வாய் பிளந்த நிலம் எங்கும் கானல் நீரைக் குடித்துக் கொண்டிருப்பதாய் இருந்தது.

”இங்கேதாங்க” என்றான் வரதராசு.

அவன் சொல்லுமுன்பே இடம் தெரிய இருந்தது. சூழ்ந்து பார்த்துக் கொண்டும், பார்த்துத் திரும்பிக் கொண்டும், பார்க்கப் போய்க் கொண்டும் இருந்தவர்கள் வண்டிச் சப்தத்தை தூரத்தில் கேட்கும்போதே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வண்டியைக் களத்தருகில் திருப்பி நிறுத்தி விட்டுக் களத்தில் ஏறினோம். நிழலில் கிடந்தவள் இப்போது சுற்றி நின்று பார்த்தவர்களின் நிழலில் கிடந்தாள். முக்காட்டை முகத்தில் இழுத்து விட்டிருந்தார்கள். இதற்கு முன் யாரும் அவளை இவ்வளவு நெருக்கமாய்ப் பார்த்திருக்க முடியாது. முக்காட்டை விலக்கி முகத்தைப் பார்க்க வேண்டுமென்று எங்களில் யாருக்கும் தோன்றவில்லை. அவள் சாக்காட்டைத் தீர்மானிக்கும் ஆவலும் இல்லை. வரதராசுவின் செய்தியும், பார்த்து நின்றவர்களின் தீர்மானமும் உண்மையாக இருக்க வேண்டுமென்று நினைத்தோம் போலிருக்கிறது. தாயாதிக்காரனுக்கு சாவுச் செய்தி சொல்ல வரதராசுவை அனுப்பினோம். பிணத்தை வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு எல்லோருக்கும் காட்டும் ஆர்வத்துடன் போன வேகத்திலேயே திரும்பினோம்.

அவளைப் பார்க்க எல்லோரும் வந்தார்கள். சாவுக்குத் துக்கம் விசாரிப்பவர்களாக இல்லை. அவள் சாவுக்கு யாரிடம் போய் துக்கம் விசாரிப்பது? அவள் இருக்கும்போதே எல்லோரும் வந்துவிட்டார்கள். ரேழியில் கிடத்தப்பட்டிருந்த அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மறுநாள் பலரும் அவளைக் குளத்தில் கண்டதாகச் சொன்னார்கள். வெகுநாள் வரையில் அவளைக் குளத்தில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் அவளைக் குளத்தில் பார்க்காத நாள் என்று ஆரம்பமாயிற்று என்பது யாருக்கும் தெரியவில்லை. அதில் நானும் ஒருவன்.

நன்றி: கசடதபற, ஜூலை 1972 இதழ்

தட்டச்சு : சென்ஷி

Mar 4, 2012

ந.முத்துசாமி உடல் மொழியின் நாடகம் - எஸ்.ராமகிருஷ்ணன்

கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கும் போது சாமுவேல் பெக்கட்டின் வெயிட்டிங் பார் கோதோ வாசித்தேன். அதுவரை நவீன நாடகம் என்பதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அந்த நாடகம் வாசிப்பதற்கு மிகுந்த ஆர்வமுடையதாக இருந்தது. அதை எப்படி மேடையேற்றியிருப்பார்கள் என்பதைப் பற்றி எனது பேராசிரியர்களில் ஒரு வரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் லண்டனில் நடந்த நாடகவிழா ஒன்றில் நிகழ்த்தப்பட்ட கோதோ நாடகத்தின் வீடியோவைக் காண்பதற்குத் தந்தார்.

நான் வாசித்த பிரதிக்கும் நிகழ்த்தபட்ட நாடகத்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி 2006041100010101 இருந்தது. நிகழ்த்தப்படும் வெளி மற்றும் நடிகர்களின் உடல்மொழி மற்றும் காட்சிகளின் பின்புல இசை யாவும் அந்த நாடகத்தை ஒரு கனவு நிலைப்பட்டதாக மாற்றியிருந்தது.  பிரதியை அப்படியே மேடையேற்றுவது அல்ல நாடக இயக்குனரின் வேலை. பிரதியிலிருந்து தனக்கான நாடகமொழியை உருவாக்கிக் கொள்வதுதான் நவீன நாடகத்தின் பிரதான பணி என்று பேராசிரியர் சொன்னபோது எனக்கு அது புரியவில்லை.

அந்நாள்வரை நான் கண்டிருந்த மேடை நாடக வடிவம் முற்றிலும் கலைந்து போய் நடிகர்களின் உடல் மொழியும் நவீன நிகழ்த்து வெளியும் உரையாடும் பாங்கும் தீவிரமாகப் பற்றிக் கொண்டது. என்ன வகை நிகழ்த்துதல் இது. ஏன் தமிழில் இப்படியான நாடகங்கள் நடத்தப்படுவதில்லை. கோதோவை மொழியாக்கம் செய்து இதே போல நிகழ்த்தினால் என்னவென்று அதன் பிந்தைய நாட்களில் தோன்றிக்கொண்டிருந்தது. பத்து நாட்களுக்குள் கோதோவை மொழியாக்கம் செய்துவிட்டேன். ஆனால் அதை எப்படி நிகழ்த்தவது என்பதைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை.

நான் அறிந்த இலக்கிய நண்பர்கள் எவரும் அன்று நவீன நாடகம் பற்றி எதையும் அறிந்திருக்கவில்லை. சில மாதங்களுக்கு அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்துவிட்டு பெக் கெட்டை மறந்து வழக்கம் போல  நாவல், அபுனைவுக் கட்டுரைகள் என்று வாசிப்பதை நோக்கி நகர ஆரம்பித்தேன். ஆனால் மனதில் பெக்கெட்டின் வரிகள் மற்றும் நிகழ்காட்சிகள் இருந்து கொண்டேயிருந்தது.

அதன் சில ஆண்டுகளுக்கு பின்பு மதுரையில் தற்செயலாக பேராசிரியர் மு.ராமசாமி ஏற்பாடு செய்திருந்த எட்வர்ட் ஆல்பியின் ஜர் ஸ்டோரி என்ற நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. என் மனதிலிருந்த  பெக்கெட் திரும்பவும் விழித்துக் கொண்டுவிட்டார். அந்த நாட்களில்  மதுரையில் சுதேசிகள் என்ற பெயரில் தமிழ்த் துறையில் பயின்ற சுந்தர்காளி ஒரு குழுவை உருவாக்கியிருந்தார். அவர்களுடன் சேர்ந்து நவீன நாடகம் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் துவங்கினேன்.

விஜய் டெண்டுல்கர், ஹெரால்ட் பைண்டர், ஐயனெஸ்கோ, டென்னஸி வில்லியம்ஸ்,  லூயி பிராண்டலோ,  ஆர்தர் மில்லர், ஒநில், பிரெக்ட், செகாவ், ஜெனே, லோர்க்கா, இப்சன் எட்வர்ட் பாண்ட், வோலே சோயிங்கா என்று நூலகத்தில் கையில் கிடைத்த நாடகப்பிரதிகளை மிகுந்த தீவிரத்தோடு வாசிக்க ஆரம்பித்தேன்.

தமிழில் அப்படி யாருடைய நாடகமாவது இருக்கிறதா என்று தேடியலைந்த போது பழைய ஷேக்ஸ்பியர் பிரதிகள், மற்றும் சங்கரதாஸ் சுவாமிகளின் மரபு நாடகப்பிரதிகள் இருந்தனவேயன்றி நவீன நாடகப்பிரதிகள் எதுவும் காணப்படவில்லை.

அறிந்த நண்பர்களிடம் கேட்டபோது அவர்களும் அப்படி நவீன நாடகப்பிரதி எதுவும் வெளியாகி இருப்பது போல அறியவில்லை என்றார்கள். அந்த நாட்களில்தான் ந. முத்துசாமியின் பெயரைக் கேள்விபட்டேன். நடை இதழில் முத்துசாமியின் காலம் காலமாக வெளி வந்து மிகுந்த கவனத்தைப் பெற்றது என்பதையும் அவரது நாற்காலிக்காரர், சுவரொட்டி நாடகங்களையும் பற்றி நண்பர்கள் விரிவாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

நீர்மை எழுதிய முத்துசாமியா நவீன நாடங்கங்கள் போடுகின்றவர் என்று வியப்புடன் கேட்டேன். ஆமாம் அவரேதான் என்றபடியே கூத்துப்பட்டறை என்ற நவீன நாடகக் குழுவைச் சென்னையில் உருவாக்கியிருக்கிறார் என்றும் அது தீவிரமாக நவீன நாடக உருவாக்கத்தில் முனைந்திருக்கிறது என்றும் அறிந்து கொண்டேன்.

எனக்கு முத்துசாமியின் சிறுகதைகளைப் பிடிக்கும். நவீனச் சிறுகதைகளில் அவர் தனித்துவமானவர். குறிப்பாக அவர் கதை சொல்லும் முறை வித்யாசமானது. சிறிய சம்பவங்களை நுட்பமாக விவரித்துக் கொண்டே செல்லும் கதைமுறை அவருடையது. ஊர் சார்ந்த நினைவுகள் மற்றும் நவீன வாழ்வின் அபத்தம் இரண்டும் கலந்த குரல் அவர் கதைகளுக்கு உண்டு. கதாபாத்திரங்களின் நிகழ்வுகளைவிடவும் அவர்களின் மனவோட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் தரும் எழுத்துமுறை அவருடையது. புஞ்சை என்ற ஊரைப் பற்றிய வெவ்வேறு விதமான பதிவுகள் அவர் கதைகளில் தொடர்ந்து இடம் பெற்றிருந்தன. அத்தோடு கசடதபற இதழ்களில் முத்துசாமி எழுதியதையும் வாசித்திருக்கிறேன்.

நீர்மையின் இன்னொரு சிறப்பு முத்துசாமியின் மகன் ஓவியர் நடேஷ் வரைந்த முகப்பு ஓவியம். மிகச் சிறப்பாக அச்சிடப்பட்டிருந்த புத்தகமது. அதில் முத்துசாமியின் சித்திரம் ஒன்றை மிக நவீனமான முறையில் நடேஷ் வரைந்திருப்பார். அதிலிருந்து ஒரு முத்துசாமியை நாம் கற்பனை செய்து கொள்வது விசித்திரமாக இருக்கும்.

இருபதிற்கும் குறைவான சிறுகதைகளே முத்துசாமி எழுதியிருக்கக்கூடும். ஆனால் அந்தக் கதைகள் அவருக்கெனத் தனியான வாசக உலகை உருவாக்கியிருந்தன. தொடர்ந்து அவர் சிறுகதையுலகில் செயல்படாமல் போனது பெரிய இழப்பே.

நவீன நாடங்களில் ஏற்பட்ட ஈடுபாட்டின் காரணமாக கேரளாவில் உள்ள திருச்சூரில் உள்ள நாடகப்பள்ளிக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அங்கே நாடகவிழா ஒருவார காலம் நடைபெற்றது. அப்போதுதான் நான் வாசித்திருந்த பல நவீன நாடகங்களை ஒரு சேரக்காணக் கிடைத்தது. நாடகப்பள்ளியின் வளாகமும் அதன் கட்டிட அமைப்பும் மிக நவீனமானவை. அதை லேரி பேக்கர் வடிவமைத்திருந்தார்.

நாடகப்பள்ளியில் நடத்தபட்ட நாடங்களைக் காண்பதற்கு அருகாமையில் உள்ள  கிராம மக்கள் வருவதைக் கண்டது ஆச்சரியமாக இருந்தது. லோர்க்காவின் நாடகம் ஒன்றை மலையாளத்தில் நிகழ்த்தினார்கள். சமஸ்கிருத நாடகம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. அயென்ஸ்கோ நாடகத்தை மாணவர்கள் நிகழ்த்தினார்கள்.  இப்படி ஒரு வார காலம் நடைபெற்றது. அங்குள்ள மாணவர் விடுதியில் தங்கியபடி நாடகங்களைப் பார்த்து பிரமித்துப் போயிருந்தேன்.

இந்த நாடகங்கள் மேடை அமைப்பை விட்டுவிலகி புதிய நாடகவெளியை உருவாக்கியிருந்ததும் சம்பிரதாயமாக வசனங்களைப் பெரிதும் சார்ந்திருந்த நடிப்பை விலக்கி நடிகனின் உடலின் வழியே நிகழும் நாடகமாக வெளிப்படுத்தும் முறையும் குரலை உபயோகிக்கும் முறைகளும் நாடக பாவனைகளும், அவர்கள் உருவாக்கும் படிமங்களும், உருவகங்களும் நவீன நாடகம் என்பதைப் பற்றிய ஆதார பிரக்ஞையை உருவாக்கியது. அந்த நாட்களில் முத்துசாமியைச் சந்திக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொள்ளத் துவங்கினேன்.

ஆனால் ஏதோ தயக்கம் அதைத் தடுத்துக்கொண்டேயிருந்தது. திருச்சூரில் சந்தித்த நாடகத்துறை  நண்பர்களின் வழியே பெங்களூரில் நடைபெறும் நவீன நாடகங்கள் பற்றி அறிந்து கொள்ள ஆரம்பித்தேன். இதற்காகவே  பெங்களூர் செல்லும் போதெல்லாம் நவீன நாடகங்களைத் தேடிச்சென்று பார்க்கத் துவங்கினேன். அப்படித்தான் கிரிஷ் கர்நாட்டின் துக்ளக், ஹயவதனா, மற்றும் கம்பாரின் நாடகங்கள் காண நேர்ந்தது.

நவீன நாடகம் என்பது தனியுலகம். அதற்கெனத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நடிகர்களும் இயக்குனர்களும் அதற்கான குறைந்தபட்ச பார்வையாளர்களைப் பற்றிய கவலையின்றித் தங்களது முழு ஈடுபாட்டையும் செலுத்தி வருவதைக் கண்ட போது அது என்னை ஈர்க்கத் துவங்கியது.
அந்த நாட்களில் திருச்சியில் பாதல்சர்க்கார் நாடகவிழா நடை பெற்றது. அதைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே கூத்துப்பட்டறையின் நாடகம் ஒன்றைக் கண்டேன். முத்துசாமியைக் காண முடியவில்லை. மற்ற நாடகங்களிலிருந்து கூத்துப்பட்டறை நாடகம் மிகவும் வேறுபட்டிருந்தது.

அந்த நாடகவிழாவின் உந்துதலில் சூரியனின் அறுபட்ட சிறகுகள் என்ற நாடகத்தை எழுதி அதை நாடகவெளி இதழுக்கு அனுப்பி வைத்தேன். ரங்கராஜன் அப்போதுதான் நாடகத்திற்கான சிற்றிதழாக வெளியை அறிமுகம் செய்திருந்தார். அதில் என்னுடைய நாடகம்    வெளியானது.  அதன் தொடர்ச்சியாக சுதேசிகள் நாடகக்குழுவிற்காக 'உருளும் பாறைகள்' என்ற நாடகத்தை எழுதித் தந்தேன். அது சங்கீத நாடக அகாதமியின் தென் மண்டல நாடகவிழாவிற்காகத் தேர்வு செய்யப்பட்டது. அந்த நாடகம் குறித்து முத்துசாமி தனக்குப் பிடித்துள்ளது என்று தெரிவித்ததாக சுந்தர்காளி சொன்னபோது மீண்டும் முத்துசாமியைப் பார்க்கும் ஆசை துளிர்விடத் துவங்கியது.

மதுரை நண்பர்களுக்காக எட்வர்ட் பாண்டின் ஸ்டோன், பிரெக்டின் கலிலியோ, மகேஷ் எல்கஞ்வரின் பிரதிபிம்பம், என்று பரபரப்பாக நாடகங்களை மொழியாக்கம் செய்வதும் எழுதித் தருவதுமாக இருந்த நாட்களில் எனக்கிருந்த ஒரே வாசிப்புத் துணை ந. முத்துசாமியின் நாடகங்கள். அத்தோடு அவர் எழுதிய அன்று பூட்டிய வண்டி என்ற நிகழ்த்து கலைகள் பற்றிய கட்டுரைகள். மரபுக்கலைகள் குறித்த அவரது பார்வையும் விவரிப்பும் அசலானவை. அன்று பூட்டிய வண்டி முத்துசாமியின் முக்கியமான கட்டுரைத் தொகுப்பு.

தெருக்கூத்து தென்மாவட்ட மக்களுக்குப் பரிச்சயம் இல்லாத வடிவம். அப்படி ஒரு நிகழ்த்துகலை இருப்பதையே மக்கள் அறிந்திருக்கவில்லை. தென்மாவட்டங்களுக்கு என்று சிறப்பான நிகழ்த்துகலைகள் நிறைய இருந்தன. ஆனால் தெருக்கூத்து அங்கேயில்லை.

முத்துசாமியின் கட்டுரைகள் அளித்த உந்துதல் காரணமாக தெருக்கூத்தைத் தேடிச் சென்று பார்ப்பது என்று சுற்றியலைந்து காஞ்சிபுரம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் முதன்முறையாகத் தெருக்கூத்தைப் பார்த்தேன். நடிகர்களின் ஒப்பனையும், நிகழ்த்தும் முறையும் வியப்பாக இருந்தது. அது  முத்துசாமியைச் சந்திக்கும் ஆசையை அதிகப்படுத்தியது.

சென்னையில் வந்து சுற்றியலைந்தபோது சிறுகதைகள் மற்றும் நாடகம் இரண்டிலும் இருந்த என் அக்கறைக்கு முத்துசாமியே காரணமாக இருந்தார். அப்போது அடையாற்றில் தங்கியிருந்த போது அண்ணாமலை அறிமுகமானார். அவர் கூத்துப்பட்டறையில் பயின்ற நடிகர். அவரிடம் முத்துசாமியைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னதும் அதற்கென்ன பார்த்துவிடலாமே என்று சொல்லி மறுநாளே முத்து சாமியைச் சந்திக்க அழைத்துச் சென்றார். அலியான்சே பிரான்சேயின் வெளிவாசலில் முத்துசாமி நின்றுகொண்டிருந்தார்.

முத்துசாமியின் தோற்றம் ஒரு நடிகருக்கான கம்பீரம் கொண்டது. குறிப்பாக அவரது மீசையும் முகபாவங்களும் அற்புதமானவை. அவர் பேசும் தோரணையும் கைகளை அவர் உபயோகிக்கும் லாவகமும் எவரையும் ஈர்க்கக் கூடியவை.  ஆனால் அவர் குரலில் இயல்பாகவே எதையோ மறுக்கின்றவரைப் போன்ற எதிர்ப்புணர்வு இருக்கும். உண்மையில் அவர் வேடிக்கையாகப் பேசும்போதுகூட அந்தத்தொனி  அவரிடமிருக்கிறது. அது பலநேரம் முத்துசாமி மிகவும் கோபப்படக்கூடியவர் என்ற பிம்பத்தை உருவாக்கியிருந்தது.  அது உண்மையில்லை. முத்துசாமியோடு நெருங்கிப் பேசினால் அவரிடம் சொல்லித் தீராத நினைவுகளும்  நாடகம் குறித்த புதிய தேடுதல்களும் மரபுக் கலைகள் குறித்த தனித்துவமான அவதானிப்புகளும் நிரம்பியிருக்கும்.

என் முதல் சந்திப்பில் முத்துசாமி 'ஒங்க நாடகம் ரொம்ப நல்லாயிருந்தது. எழுதுங்க' என்று ஒரேயொரு வரிதான் பேசினார். அதன் பிறகு அலியான்சேயில் பிரான்சிலிருந்து வந்திருந்த தோல்பாவைக் கலைஞருடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதன் முன் வரிசையில் அமர்ந்தபடியே அந்த பிரெஞ்சுக் கலைஞரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் முத்துசாமி. ஏதோ ஓவியம் ஒன்றைப் பார்வையிடுவதைப் போன்றிருந்தது அவரது முகபாவம்.

முடிவில் முத்துசாமி பத்து நிமிடங்கள் பேசினார். "தெருக்கூத்து ரொம்ப ஒசத்தியானது. அதை அப்படியே நாடகமாகப் போட்டுற முடியாது. அதை நாம முதல்ல புரிஞ்சிகிடணும். குரல்வளம் உள்ள நடிகர்கள் நம்மகிட்டே இல்லை. முதல்ல நாம  அதை உருவாக்கணும். அதே போல பார்வையாளர்களுக்கும் நடிகருக்கும் இடையில் உள்ள வெளி ரொம்ப முக்கியமானது. நடிகர்கள்  கதாபாத்திரத்தை சிருஷ்டி பண்றாங்க. அதுல மூழ்கிப் போறதில்லை.

கதாபாத்திரமாக மாறிப்போறது என்பதெல்லாம் தெருக்கூத்துல கிடையாது. நடிகர் கதாபாத்திரம் ரெண்டுக்கும் இடையில் ஒரு பெரிய மாயம் நடக்குது. நடிகன் தன் கற்பனையால் அந்தக் கதாபாத்திரத்தை வளர்த்துகிட்டே போறான். அது ஒரு விளையாட்டு. கண்ணுக்குத் தெரியாத விளையாட்டு. நடிகன் ஒரு ஜென் துறவி மாதிரியும் இருக்கணும். அதே நேரம் சாமுராய் மாதிரியும் இருக்கணும். பழைய மேடை நாடக நடிப்பு எல்லாம் இப்போ எடுபடாது" என்று அவர் பேசிய விதமும் சொற்களை அவர் கையாளும் லாவகமும் அதை விளக்கிச் சொல்லும் போது அவரிடம் ஏற்படும் முகமாற்றங்களும் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டிருந்தது.

பேச்சை அவர் திடீரென நிறுத்தி  முடித்துக்கொண்டுவிட்டார். கிட்டத்தட்ட அதுவே ஒரு நிகழ்த்து கலை போலவே இருந்தது. நிகழ்ச்சி முடிந்து முத்துசாமி வெளியே செல்லும் வரை பார்த்துக்கொண்டேயிருந்தேன். சம்பந்தம் என்ற கூத்துக் கலைஞருடன் அவர் ஒரு டிவிஎஸ் 50யின் பின்னாடி ஏறிக்கொண்டு புறப்பட்டார். அவரது உயரத்திற்கு அந்த வண்டியில் போவது சிரமம் தருவதாக இருந்திருக்கக்கூடும். ஆனால் அவரிடம் அது தென்படவில்லை.

அலியான்சேயின் வெளியில் இருந்த படிகளில் அமர்ந்தபடியே முத்துசாமி பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நவீன இலக்கியப் பரிச்சயம் கொண்டிருந்த முத்துசாமி நவீன நடனத்திலிருந்தே தனது நாடகத்திற்கான மூலங்களைக் கொண்டிருக்கிறார். ஆகவே அவருக்கு நாடகப்பிரதி என்பது ஒரு வரைபடம் போல நாடகம் போடுவதற்காக ஆதாரம் மட்டுமே. நடிகனின் உடல் மற்றும் குரலில் அவர் செய்யும் மாற்றம் அற்புதமானவை.

கூத்துப்பட்டறையில் நடிப்பிற்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படுவதில்லை. மாறாக நடனம், யோகா, மார்சல் ஆர்ட்ஸ், சிலம்பம், தேவராட்டம், களறி, தாய்சி, தியானம், எனப் பல்துறைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதன் மூலம் நடிகன் தன் உடலை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ள முடியும். அது போலவே மரபான நடிப்பு முறையிலிருந்து விலகிய பிரக்ஞை பூர்வமாக நடிப்பைக் கைக்கொள்ள முடியும் என்று கூத்துப்பட்டறையில் பயின்ற நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அது உண்மை என்பதை அதிலிருந்து பயின்று வந்த பல நடிகர்கள் இன்று நிரூபணம் செய்கிறார்கள். சிறந்த இரண்டு உதாரணங்கள் பசுபதி மற்றும் கலைராணி. இவர்கள்  நடிப்பை பிரக்ஞை பூர்வமாகவும் பல்வேறு தளங்களில் விரித்தும் கற்பனை செய்தும் புரிந்து கொண்டவர்கள். இவர்கள் மட்டுமின்றி பிரசாத், அண்ணாமலை, ஜார்ஜ், பாங்ளா , குமாரவேல், சந்திரா, என்று தனித்துவமிக்க நடிகர்கள் பலரை கூத்துப்பட்டறை உருவாக்கியிருக்கிறது.

அதன் பிறகு கூத்துப்பட்டறையின் நாடகங்களை அலியான்சே மேக்ஸ்முல்லர் பவன் மற்றும் தீவுத்திடலில் உள்ள அரங்கில் தொடர்ச்சியாகக் காண நேர்ந்தது. ஒவ்வொரு நிகழ்வின்  போதும் முத்துசாமி தொலைவில் நின்று கொண்டிருப்பார். ஒரு சிரிப்பு மற்றும் எப்படியிருக்கீங்க என்ற வினா இரண்டையும் தவிர அவர் வேறு எதையும் பகிர்ந்து கொண்டது கிடையாது.

ஆனால் ஒரு முறை பிரிட்டீஷ் கவுன்சில் ஆங்கில நாடகம் ஒன்றினையும் அதைத் தொடர்ந்த இரவு விருந்தையும் அளித்தது. சென்னையில் தமிழ் நவீன நாடகங்கள் பார்ப்பதற்கு ஐம்பது பேர்கூட வருவதில்லை. ஆனால் ஆங்கில நாடகம் பார்ப்பதற்கு முந்நூறு பேர்களாவது வருவார்கள். இதில் ஆச்சரியம் ஐநூறு ரூபாய் டிக்கெட் போட்டு நடக்கும் நவீன நாடகங்களுக்குக் கூடப் பல நேரங்களில் டிக்கெட் விற்றுப் போய் நாடகம் பார்க்க முடியாமல் வீடு திரும்ப நேரிடும். அது ஒரு எலைட் இன்ட்ரஸ்ட் என்று முத்துசாமியே ஒரு சமயம் சொன்னார்.

அன்று பிரிட்டீஷ் கவுன்சிலின் வெளியில் நாடகம் முடிந்து வெளியே விருந்து துவங்கியது. பகட்டான ஆங்கிலப் பேச்சுகள், நாடகம் பற்றிய மேல்உதட்டு அபிப்ராயங்கள் தாண்டி தனியே அமர்ந்திருந்தார் முத்துசாமி, அருகில் சென்று அமர்ந்தேன்.  அவராகப் பேசத்துவங்கி பேச்சு அவரது சொந்த ஊரான புஞ்சை  பற்றியும் அங்குள்ள நற்றுணையப்பன் என்ற தெய்வம் குறித்தும் நீண்டது.

பேச்சின் நடுவில் செம்பொனார் கோவிலில் இருந்த நாதஸ்வரக் கலைஞர் ஒருவரைப் பற்றி நினைவுகூறத்துவங்கி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவர் அப்படியே எழுந்து நின்று அந்த நாதஸ்வரக் கலைஞர் வாசிக்கும் முறையைத் தன் கைகளால் பாவனை செய்தபடியே தனிநடிப்பு போல சொல்லத் துவங்கினார்.

"அப்படியே ஆகாசத்துக்கும் பூமிக்கும் இடையில் அந்த நாதஸ்வரம் சுழன்று சுழன்று வருது.  அந்த மனுசன்  ஆவேசத்துடன் வாசிக்கிறார். வெளியே இருக்கிற மரங்கள் எல்லாம் ஒடுங்கிப் போய் நிக்குது. அருள் வந்த ஆள் போல அவர் வாசிச்சிகிட்டே இருக்கார். ரொம்ப  ஒசத்தியான இசை. இன்னைக்கும் மனசில அப்படியே இருக்கு. இசையைக் கேட்டு நாம கற்பனை பண்ண முடியலை. அது ஒரு உன்னதமான அனுபவம். பார்த்துகிட்டு இருக்கும்போதே எல்லாம் மறைஞ்சி போற மாதிரி இருக்கு.  பாம்பாட்டி முன்னால் நிக்குற பாம்பு மாதிரி இருக்கேன். எதையோ தொலைச்சிட்டு தேடிக்கிட்டு இருக்கிறது மாதிரி நாதஸ்வரம் மேலேயும் கீழேயும் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் போய்க்கிட்டே இருக்குது. சாட்டையைச் சுழட்டுற மாதிரி இருக்கு இசை. ஆனா.. சட்னு அப்படியே ஒரு நிமிஷம் அவர் வாசிக்கிறதை நிறுத்திடுறார். நம்மாலே நிறுத்த முடியலை."

அவர் சொல்லச் சொல்ல, காதில் அந்த நாதஸ்வர இசை கேட்பது போலவே இருந்தது. இசையை ஒரு மனிதனால் இவ்வளவு நுட்பமாகக் காட்சிப்படுத்த முடியுமா என்ற வியப்பிலிருந்து என்னால் மீள முடியவேயில்லை. முத்துசாமி சொல்லி முடித்து சிரிப்போடு அருகில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு நெருக்கத்தோடு என் தோளில் தட்டினார். முத்துசாமியிடமிருந்து இதைத்தான் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டிருந்தேன் என்று அந்த நிமிடத்தில் தோன்றியது.

அதன் பிறகு அவரை ஒன்றிரண்டு முறை தேடிப்போய்ப் பேசுவதும் பார்ப்பதுமாக இருந்தேன். இணக்கமும் அன்புமான பகிர்தல் அவரிடம் எப்போதுமிருந்தது. இதன் இடையில் நடேஷ் நெருக்கமான நண்பராகியிருந்தார். நடேஷ் முத்துசாமி இருவரும் பேசிக்கொள்வதைக் காணும்போது அப்பா பையன் போலவே இருக்காது.

முத்துசாமியின் கவனம்  தமிழ் நவீன நாடகத்திற்கான புதிய மொழியை உருவாக்குவதிலே முதன்மையாகக் குவிந்திருக்கிறது. அது மரபுக்கலைகளிலிருந்து உருவான நவீன உடல்மொழி.  தமிழ்நவீன நாடகப் பிரக்ஞையை முத்துசாமியே உருவாக்கினார்.

பேராசிரியர் ராமானுஜம், மு.ராமசாமி, மங்கை, ஞாநி, பிரளயன், ராஜி, ஆறுமுகம், ராஜேந்திரன், சண்முகராஜா, முருகபூபதி என்று நவீன நாடகப் பரப்பில்  பல்வேறு ஆளுமைகள் தீவிரமாக நாடக உருவாக்கத்தில் செயல்பட்டு வருகின்றார்கள். இவர்கள் யாவருக்குள்ளும் முத்துசாமியின் ஏதோவொரு நுட்பமான பாதிப்பும், அரூபமான நெருக்கமும் அறிந்தும் அறியாமலும் இருக்கின்றது.

முத்துசாமி உருவாக்கிய நாடக மொழிக்கான அடிப்படைகளை அவர் சிற்பங்கள் ஓவியங்கள், நடனம், மரபுக்கலை, கோவில்கலை, மேலை நாடக மரபுகள் என்று பல்வேறு இழைகளைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்.

முத்துசாமியின் நாடகம் தந்த உந்துதலால் சந்திரலேகாவின் நாடகங்களைக் காண நேர்ந்தது. அது முற்றிலுமான ஒரு நடனநாடகம் என்றே சொல்வேன். அதில் நடிகன்  பெரிதும் நடனக்கலைஞராகவே இருக்கிறான். அவன் உடலை யோகநிலைகள் போல வெவ்வேறு படிகளில் ஒன்று சேர்ப்பதும் அவிழ்ப்பதுமே நாடகத்தின் முக்கிய போக்காக இருந்தது. அபத்தமோ, முரண்களோ, பகடியோ அதில் இல்லை.

முத்துசாமியின் நாடகங்களை ஒரு சேர வாசிக்கும் போதுதான் அவர் உருவாக்கியுள்ள தமிழ் நவீன நாடகப்பரப்பு எவ்வளவு பெரியது என்று உணர முடிகிறது. காலம் காலமாக எழுதிய போது முத்துசாமி நவீன நாடகம் குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை. அது நடை இதழில் 1969ஆம் ஆண்டு வெளியாகிறது. எழுத்து இதழில் சி.சு. செல்லப்பா ஓரங்க நாடகங்கள் என்று சில நாடகங்களை வெளியிட்டார். ஆனால் அது நவீன நாடக வகைமை கொண்டதில்லை.

முத்துசாமி சுயமாக தனக்கான நாடகமொழியைக் கண்டுபிடித்திருக்கிறார். அதன்பிறகு தெருக்கூத்தின் பரிச்சயம் அவருக்கு 1975ஆம் ஆண்டுதான் ஏற்பட்டிருக்கிறது. அன்றிலிருந்து அவரது பிரதிகள் உருமாற்றம் கொள்ளத் துவங்குகின்றன. உருவகங்கள் குறியீடுகள் கலாச்சார மறுவாசிப்பு புராணக்கதைகளின் மறுவடிவம் என்று அவர் தன் பிரதிக்கான அர்த்த தளங்களை விரிவாக  எடுத்துக்கொண்டு போகிறார். படுகளம் நாடகம் அதன் உச்ச நிலை என்றே சொல்வேன். மகாபாரதமும் சமகால நிகழ்வுகளும் ஒன்றோடு ஒன்று கலப்பதும் அதில் வெளிப்படும் பகடியும் நிகழ்த்து முறையும் நவீன நாடகத்தின் சிறப்பான உயர்நிலை.

நாற்காலிக்காரர், சுவரொட்டிகள், உந்திசுழி, கட்டியக்காரன், நற்றுணையப்பன்,  இங்கிலாந்து தெனாலி, பிரகலாத சரிதம், சந்திர ஹரி, படுகளம் என்று முத்துசாமியின் நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒரு தளத்தில் இயங்குகின்றது.

முத்துசாமியின் நாடகங்களை முதன்முதலாகப் பார்க்கும் பார்வையாளன் அடையும் திகைப்பு நடிகர்கள் பேசும் முறை. அவர்கள் வசனங்களை நேரடியாக ஒப்புவிப்பதில்லை. மாறாக அதைச் சிலவேளைகளில் உச்சாடனம் செய்கிறார்கள். சில வேளைகளில் கவிதை போல உயர்நிலைக்குக் கொண்டு போகிறார்கள். சிலவேளைகளில் சொற்களின் ஊடே இடைவெளியை உருவாக்கி அர்த்த மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள். இது பார்வையாளன் அடையும் முதல் திகைப்பு.

அடுத்தது அவர்கள் மேடையைப் பயன்படுத்தும் விதம். பொதுவில் திரைச்சீலைகளும் மேஜை நாற்காலிகளும் அரங்க பொருட்களாக அறிமுகமாகயிருந்த பார்வையாளனுக்கு முத்துசாமியின் நாடகத்தில் அவர்கள் தங்கள் பாவனைகளால் பொருட்களை உருவாக்குவதும் அதைப் பயன்படுத்துவதும் வியப்பளிக்கக் கூடியது. மூன்றாவது, நாடகத்தின் பின்புல இசை மற்றும் கூட்டியக்கம். ஒரு இசைக்கோவை போல நாடகம் வேறுவேறு தளங்களுக்கு உயர்ந்து பின்பு உச்சநிலையை அடைகிறது.

இது பார்வையாளர்களுக்குக் குழப்பம் ஏற்படுத்திவிடாதா, நாடகம் புரிந்து கொள்ளப்படவில்லை என்ற கேள்வி முத்துசாமியின் ஒவ்வொரு நாடகத்தின் முடிவிலும் கேட்கப்படுகிறது. அவர் மிகப் பொறுமையாக, இதற்குப் பார்வையாளர்கள் பழகிக் கொள்ள வேண்டும். திரும்பத் திரும்ப எனது நாடகங்களைக் காண்பதுதான் அதைப் புரிந்துகொள்வதற்கான ஒரே வழி என்று சொல்கிறார். அதுதான் உண்மை. இந்த நாடகங்கள் புரியவில்லை. இதை வெறும் ஏமாற்று என்று புறக்கணிப்பதைவிடவும் இதை எப்படிப் புரிந்து கொள்வது என்று முயற்சிப்பதே அவசியம்.

முத்துசாமி நவீன நாடகப்பிரதிகளை எழுதியதோடு அதை முழுமையானதொரு நவீன நாடகமாக நடிகர்களைக் கொண்டு பயிற்சி செய்து உருமாற்றிக் காட்டுகிறார்.  குறிப்பாக மேடையின் ஒளியமைப்பில் கூத்துப்பட்டறை செய்த பல முன்முயற்சிகள் இந்திய அளவில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. டாக்டர் ரவீந்திரன், மற்றும் நடேஷ் ஒளியமைப்பு செய்த முறைகள் மிகுந்த பாராட்டுக்கு உரியவை.

அது போலவே பன்சி கௌல், கன்யாலால், அன் மோல் விலானி, கில் ஆலன், ஜான் மார்டின், என்று பல்வேறு நாடக இயக்குனர்களுடன் முத்துசாமி இணைந்து உருவாக்கிய தமிழ்நாடங்கள் நவீனத் தமிழ்நாடகத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளது. இன்று நாடகத்திற்கான சிறப்புப் பயிலரங்கில் ஒன்றாகக் கூத்துப்பட்டறையை யுனெஸ்கோ அங்கீகாரம் செய்து உதவி செய்து வருகிறது.

முத்துசாமியை நீண்ட நேர்காணல் ஒன்று செய்து எனது அட்சரம் இதழில் வெளியிட வேண்டும் என்று அவரை நான்கு முறை தொடர்ச்சியாகச் சந்தித்து உரையாடலைப் பதிவு செய்தேன். பத்து மணி நேரத்திற்கும் அதிகமான பதிவு. முத்துசாமி அந்தப் பதிவில் எங்கும் தன் சாதனைகள் பற்றியோ, தனது ஏமாற்றங்கள் பற்றியோ ஒரு முறைகூடக் குறிப்பிடவேயில்லை. இதழ் நின்று போய்விடவே அந்த ஒலிப்பதிவுகள் அப்படியே கைவிட் டுப் போய்விட்டன.

அலியான்சே மேக்ஸ்முல்லர்பவன் என்று அயல்நாட்டுக் கலாச்சார நிறுவனங்களோடு இணைந்து நாடகம் போடுகின்றவர் என்று குற்றம் சாட்டப்பட்ட முத்துசாமி சென்னையில் பலவருடம் சேரிப்பகுதி மக்களுடன் இணைந்து வசித்தவர். அடிப்படை வசதிகள்கூட எதுவுமில்லாத மிக எளிமையான அரசுக் குடியிருப்பில் தன் வாழ்க்கையைச் செலவிட்டவர். பொருளாதார நெருக்கடிகளுக்காகத் தன்னை மாற்றிக்கொள்ளாதவர் முத்துசாமி.

இன்று சிறுகதை, கவிதை, நாவல் போன்ற வடிவங்களின் மீது இலக்கியவாதிகள் காட்டும் அக்கறையில் ஒரு பகுதிகூட நாடகத்தின் மீது இல்லை என்பதே உண்மை.

தெருக்கூத்திற்கு இன்றுள்ள அங்கீகாரத்திற்கு அவரே முக்கிய காரணம். நாடகம், கூத்து, கலை என்று தன் முழு நேரத்தையும் ஒப்படைத்துக் கொண்ட முத்துசாமி  சங்கீத நாடக அகாதமி விருது பெற்றபோது அது இலக்கியச் சூழலில் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவேயில்லை. ஆனால் முத்துசாமியின் தொடர் இயக்கம் காரணமாகவே இன்று வெளி மாநிலங்களில் நவீனத் தமிழ்நாடகம் குறித்த அறிமுகம் ஏற்பட்டு உள்ளது.

நாடகத்திற்கான தேவை இப்போதுதான் மிக அதிகமாக உள்ளது. அதிகமான மன அழுத்தம் மற்றும் நெருக்கடியான சூழலில் மனிதர்களுக்கு அகவிடுதலை தரக்கூடிய தனித்தன்மை கொண்டது நாடகம். பன்னாட்டு நிறுவனங்கள் இன்று தங்களது ஊழியர்களுக்கு யோகா மற்றும் நாடகப் பயிலரங்கம் நடத்துகின்றன. நாடகம் ஒருபோதும் புறக்கணிக்கபட்டுவிடாது. அதை நாம் முறையாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று முத்துசாமி சொல்லியிருந்ததை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வாசித்தேன்.

முப்பது ஆண்டுகாலமாக முத்துசாமியின் அக்கறை அப்படியே இருக்கிறது. பிரதான இலக்கியச் சூழல் அவரைக் கண்டுகொள்ளாமல் எப்போதும் போல வீண்வாதங்கள், வம்புகளின் பின்சென்று கொண்டிருக்கிறது. அதை அவர் கண்டுகொள்ளவும் இல்லை கவலைப்படவும் இல்லை. அபத்தம் தான் வாழ்வின் பிரதான சுவை என்று அவர் அறிந்திருக்கக்கூடும்.

நன்றி: உயிர்மை இதழ் - November, 2008

Jan 28, 2012

ந.முத்துசாமிக்கு பத்மஶ்ரீ விருது

 

 

நாடக ஆசிரியரும், கூத்துப்பட்டறை இயக்குனரும், சிறுகதை எழுத்தாளருமான ந.முத்துசாமிக்கு இந்த வருடத்தின் பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது.

அவருக்கு அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகள்.

ந.முத்துசாமி:நரையேறும் காலம்: எஸ்.ரா

இழப்பு - ந. முத்துசாமி

muthuswamy
417590_307441975969324_100001105711963_802756_378483240_n

Nov 30, 2010

ந.முத்துசாமி:நரையேறும் காலம்: எஸ்.ரா

‘நரையேறும் காலம்’- கதாவிலாசம்- எஸ்.ராமகிருஷ்ணன்


காலை நடைப்பயிற்சிக்குச் செல்லும்போது வழியில் தினமும் அவர்கள் மூவரையும் பார்ப்பேன். எழுபது வயதான ஒரு பெரியவர், நாற்பது வயதான குள்ளமான மனிதர், பதினாறு வயதுப் பையன். மூவரும் ஒரே விதமான ஷ¨, வெள்ளை நிற பேன்ட், டி&ஷர்ட் அணிந்திருப்பார்கள். அவர்களில் குள்ளமானவர் வழி முழுவதும் பேசிக்கொண்டே வருவார். பதினாறு வயது பையன் அவர்களோடு நடப்பதை விலக்கி தனியே ஓடத் துவங்கிவிடுவான். அப்போது நடுத்தர வயதுக்காரர் சப்தமாக ‘கோவிந்த் வெயிட்’ என்று உரத்த குரலில் கூப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். அவன் அதைப் பற்றிய லட்சியமேயின்றி தனியே அதிகாலை வெளிச்சத்தில் ஓடுவான்.

வயதானவர் மிக மெதுவாகத்தான் நடப்பார். சாலைக்கடைகளில் தொங்கும் தினசரிகmuthuswamyளின் போஸ்டர்களை அருகில் சென்று வாசித்த பிறகே கடந்து வருவார். இது அந்த நடுத்தர வயதுக்காரருக்குப் பிடிக்கவே பிடிக்காது. சாலையைக் கடந்து வந்து அவரது கையைப் பிடித்து  இழுப்பார். ‘என்ன பழக்கம்ப்பா இது? அதான் வீட்ல ஹிண்டு வருதே. அதைப் படியேன்’ என்பார்.
பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் சாலை முனை வரை நடந்து அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்திற்கு வந்து சேர்வார்கள். அங்கிருக்கும் பெஞ்சில் சில நிமிடங்கள் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்தும்போது பெரியவருக்கு அவர் ஒரு நாள் முழு வதும் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை நடுத்தர வயது நபர் குழந்தைக்குச் சொல்வதுபோலச் சொல்வார்.

‘டிபன் சாப்பிட்டு பேங்க்குக்குப் போயி Ôசெக்Õகை கலெக்ஷனுக்கு போட்டிருப்பா. வரும்போது மாம்பலம் வரை போயி காபி பவுடர் அரைச்சு வாங்கிக்கோ, அப்படியே ஸ்டேஷன் கீழே வெந்தயக் கீரையிருக்கும்... பாத்து ஒரு கட்டு வாங்கிக்கோ... அங்கிருந்து வடபழனிக்குப் போயி, நம்ம முரளியோட பையன் ஸ்டேட்ஸ்ல இருந்து வந்திருக்கான். அவனைப் பார்த்து பேசி நம்ம கோவிந்தை அனுப்புறதுக்கு யோசனை கேளு. அவங்க வீட்ல ஏதாவது கொடுத்தா சாப்பிடாதே.

வீட்டுக்கு வந்ததும் கதவை பூட்டிக்கோ. வேலைக்காரக் குட்டி வந்தா அவளை ஒரு கண் பார்த்துக்கோ... வீடு பெருக்குறேன்னு எதையாவது வாயில எடுத்துப்போட்டுத் தின்னுகிட்டு இருப்பா... போன் வந்தா யாருனு கேட்டு நம்பரைக் குறிச்சு வெச்சிரு... பகல்ல வீட்ல ஏ.சி. போடாதே... சொன்னது எல்லாம் நினைவு இருக்கில்லையா? தலையைத் தலையை ஆட்டிக் கேட்டுட்டு பிறகு மறந்துட்டேன்னு சொல்லாதே... வீட்டுக்குப் போனதும் ஒரு பேப்பரில் எழுதி வெச்சுக்கோ, உன் செலவுக்குப் பத்து ரூபா இருக்கு. பஸ்ல போயிட்டு வந்திரு. இதையெல்லாம் செஞ்சு முடிச்சதும் போன் பண்ணு, வேறு ஏதாவது இருந்தா சொல்றேன்.’

மாநகராட்சி மைதானக் காவல்காரனின் குழந்தைகளுக்காக, வீழ்ந்து கிடக்கும் இலைகளில் ஒன்றை எடுத்து ஊதுகுழல்போல ஒன்றைச் செய்து தருவார் பெரியவர். குள்ளமானவர் உடற்பயிற்சி முடிந்ததும் அருகில் வந்து அப்பாவின் கையிலிருக் கும் இலைக்குழலை பிடுங்கிப் போட்டபடியே மைதானத்தைவிட்டு அழைத்துக்கொண்டு போவார்.

இருவரும் போன பிறகு பதினாறு வயது பையன் மட்டும் சாவகாசமாக வந்து சுவரில் ஏறி உட்கார்ந்துகொண்டு நிம்மதியாக ஒரு சிகரெட் பிடிப்பான். புகையை வானத்தை நோக்கி ஊதுவான். பிறகு ஒரு பபிள்கம்மை மென்று சுவைத்துவிட்டு ஒரு மரத்தில் ஓட்டவைத்துவிட்டுப் போவான்.
இந்த மூன்று நடையாளர்களை மாதக்கணக்கில் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். துணி துவைப்பதற்காக உவர் மண் எடுக்கச் செல்பவர்கள் கழுதைகளின் கால்கள் நடுங்க மணல் மூட்டைகளை ஏற்றிவருவதைப் போல இத்தனை வேலைகளைப் பெரியவரின் முதுகில் ஏற்றியபோதும் அவர் எப்படிச் சலனம் இல்லாமல் ஏற்றுக்கொள் கிறார். உண்மையில் யார் அப்பா, யார் பிள்ளை?

சில நாட்களுக்குப் பிறகு தற்செயலாக அந்த வயதானவர் மட்டும் தனியே நடந்து வருவதைப் பார்த்தேன். நான் அவரது பெஞ்சின் அருகில் சென்று அமர்ந்தேன். அவர் சிரித்தபடியே, ‘நீங்கள் எழுத்தாளர்தானே... பத்திரிகையில் உங்கள் போட்டோ பார்த்திருக்கிறேன்’ என்றார். அவரும் நானுமாக அருகம்புல் சாற்றைக் குடித்தோம். அவர் இளவெயிலைப் பார்த்தபடியே என் குழந்தைகளைப்பற்றி விசாரித்தார். நான் தயக்கத்துடன் கேட்டேன் Ôஇன்றைக்கு உங்கள் மகன் வரவில்லையா?’
அவர் சிரித்தபடியே சொன்னார்... Ôஊருக்குப் போயிருக்கிறான். அவனைக் கவனிச்சிருக்கீங்களா... எனக்கு ஒரே பையன். பேரு விஸ்வம். பெரிய வேலை, நல்ல சம்பளம். ஆனா, சதா வாய் ஓயாம எதையாவது உளறிக்கிட்டே இருப்பான். முட்டாள்... நான் கூட ரிட்டயர்ட் இன்ஜினீயர். வயசு எழுபதாகுது. மருமகள் பேங்க்ல வேலை பாக்குறா. உதவியா இருக்கட்டுமேனு மகன்கூட வந்து இருக்கேன். ஊர் அம்பாசமுத்திரம். பெரிய வீடு இருக்கு. பாத்துக்கிட யாரு மில்லை. பூட்டிட்டு வந்துட்டோம்.’

அன்றைக்குக் காவல்காரனின் குழந்தைகளைக் காணவில்லை. நான் அவரிடம் ஒரு இலையைக் கொடுத்து ஊதுகுழல் செய்துதரச் சொன்னேன். அவர் இலையை லாகவமாக மடித்துக் கொண்டே சொன்னார், Ôஅப்பாவும் பிள்ளையும் கொஞ்சிக்கிடறதும் ஒட்டிக்கிட்டு தூங்குறதும் பத்து வயசு வரைக்கும்தான். அப்புறம் வளர வளர இடைவெளி வந்துருது. உடைந்த கண்ணாடியில் முகம் பார்த்தா முகம் சிதறித்தான் தெரியும். அப்படித்தான் பையன் அப்பனைத் தப்பு சொல்றான். அப்பன் பையனைத் தப்பு சொல்றான். மரத்து நிழல் மாதிரி இருந்துட்டுப் போயிட்டா பிரச்னையில்லை. புரியலையா? மரத்து நிழலால மரத்துக்கு ஒரு லாபமும் கிடையாது. மத்தபடி வெயில்ல ஒதுங்குற யாரா இருந்தாலும் அது குளிர்ச்சியானது தான்.Õ

அவர் குழலை ஊதிப் பார்த்தார். நாதம் வந்தது. சிறுகுழந்தையைப்போல ஆகாசத்தை ஏறிட்டபடி ஊதினார். ஊதுகுழல் சப்தம் கேட்டு ஓடிவந்த ஒரு சிறுவன் ஆசையாகக் கையை நீட்ட, பெரியவர் அந்த சிறுவனுக்கு ஊதுகுழலைத் தந்துவிட்டு சொன்னார்... Ôரெண்டு நாள் முன்னாடி மாம்பலம் ஸ்டேஷன் படியில மயக்கமா வருதுனு உட்கார்ந்துட்டேன். கண்ணைக் கட்டிக்கிட்டு வந்தது. எனக்குனு யாருமே இல்லையேனு ஒரு நிமிஷம் கண்ல தண்ணி வந்திருச்சு... யாரோ ஒரு ஸ்கூல் பையன் ஓடிப்போய் ஜூஸ் வாங்கிட்டு வந்து கொடுத்தான். வீடு வரைக்கும் கூடவே வந்து விட்டுட்டுப் போனான். ஒருவேளை அப்பவே நான் போயிருந்தா... வாக்கிங் போறதுக்கு ஒரு ஆள் குறைஞ்சிருக்கும். என்னைத் திட்டுறதுக்குப் பதிலாக என் பையன் அவன் மகனைத் திட்ட ஆரம்பிச்சிருவான். இப்போ நான் ஒரு தடுப்புச் சுவர் மாதிரி இருக்கேன். இவ்வளவுதான் சார் வாழ்க்கை!Õ

எனக்கு காஃப்கா, தஸ்தாயெவ்ஸ்கி, புதுமைப்பித்தன் என பல எழுத்தாளர் களைப் பற்றிய நினைவுகள் வந்தன. இவர்கள் யாவரும் அப்பாவோடு பிணக்குக் கொண்டவர்கள். அப்பாவுக் கும் மகனுக்குமான பிணக்கு உலக மெங்கும் ஒன்றுபோலத்தான் இருக் கிறது. படிக்கவைப்பது, வேலை வாங்கித் தருவது, சாப்பாடு போடுவது மட்டும் ஒரு அப்பாவின் வேலையல்ல. அப்பா வாக இருப்பது ஒரு பொறுப்பு உணர்ச்சி. அது தன்னை விலக்கிய நிலை.

ந.முத்துசாமியின் கதை ஒன்று நினைவுக்கு வந்தது. இவரது கதைகளின் உலகம் புஞ்சை என்ற கிராமம் மீதான அவரது நினைவுகளும் சம்பவங்களுமே. கதைகளின் பின்புலத்தைத் துல்லியமாக விவரிப்பதன் வழியாக கதாமாந்தர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தனியான எழுத்து முறை இவருடையது. மிக அபூர்வமாகவே சிறுகதைகள் எழுதிவரும் ந.முத்துசாமியின் ‘அப்பாவின் பள்ளிக்கூடம்’ என்ற சிறுகதை தமிழில் வெளிவந்த சிறந்த கதைகளில் ஒன்று.
இந்தக் கதை பள்ளிக்கூடம் செல்லும் இரண்டு சிறுவர்களைப் பற்றியது. அவர்களது அப்பா ஒரு பள்ளி ஆசிரியர். அவர் சில நாட்களுக்கு முன் பாக மாரடைப்பால் வகுப்பறையிலே இறந்துபோகிறார். அந்த நிகழ்ச்சி சிறுவர்களின் மனதில் மிக ஆழமான துயரத்தை உருவாக்குகிறது.
ஒரு நாள் பள்ளி முடிந்து வீடு திரும்பிவரும்போது வழியெல்லாம் மூத்தவன் அழுதபடி வருகிறான். தம்பி காரணம் கேட்டும் சொல்லவேயில்லை. வீடு வந்ததும் அம்மாவிடம் கதறி அழுதபடி தன்னை வாத்தியார் அடித்து விட்டதாகச் சொல்கிறான். இதைக் கேட்டு தம்பியும் சேர்ந்து அழுகிறான்.

பிள்ளைகளின் மீது விழும் அடி அவர்கள் அப்பனை இழந்ததை உறுதிப் படுத்துவது போல இருப்பதாக அம்மாவிற் குத் தோன்றுகிறது. அவளும் தன் பிள்ளை களைக் கட்டிக்கொண்டு அழுகிறாள். இதைக் கண்ட பாட்டி, பிள்ளைகளைச் சமாதானம் செய்கிறாள். மறுநாள் ஆசிரியரைப் பார்க்க பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கூடம் செல்கிறாள் பாட்டி. ஆசிரியரோ தான் அடிக்கவேயில்லை என்கிறார். மூத்தவனுக்கு அப்பா இறந்துபோன பிறகு அவரது முகம் சில நாளிலே மறந்து போய்விட்டிருக்கிறது. அப்பாவைப் பற்றி நினைத்தால் ஒரு ஆசிரியரின் உருவம்தான் நினைவுக்கு வருகிறது.

அவன் மனமயக்கத்தில் வகுப்பு ஆசிரியர் தன் அப்பாவைப் போலவே இருப்பதாக நினைக்கிறான். அன்றும் இது போன்ற மனபிரமை அதிகமாக, பயத்தில் வகுப்பை விட்டு வெளியேறி ஓட முயற்சிக் கும்போது தடுக்கி விழுகிறான். ஆசிரியர் அவனைக் காப்பாற்றப் போகும்போது அப்பாவின் ஆவி தன்னைப் பிடிக்க வந்து விட்டதாக நினைத்து கத்தி அழுகிறான். வீடு வரும் அவனை வேறு பள்ளியில் சேர்ப்பதாக பாட்டி சமாதானம் செய்கிறாள் என்பதோடு கதை முடிகிறது.
அப்பா எப்படி குழந்தைகள் மனதில் படிந்து போயிருக்கிறார். அல்லது அப்பாவை எப்படி நினைவுகொள்வது என்பதுதான் கதையின் மையம். பெரும்பான்மை வீடுகளில் அப்பாவின் உருவம் துர்கனவில் வரும் உருவம் போலவே குழந்தைகளுக்குள் படிந்து இருக்கின்றன. அப்பாவின் மீது கோபம் துளிர்க்காத இருபது வயது இளைஞனே உலகில் இல்லை. ஆனால், அந்தக் கோபம் அப்பாவின் மீதான கோபமில்லை. தனது அடையாளங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் விளைவாக உண்டான கோபம். தனது விருப்பங்களைப் பகிர்ந்துகொள்ள முடியாத கோபம். அடுத்தவர்கள் தன் குடும்பத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக அப்பா விதித்த கட்டுப்பாடுகளின் மீதான கோபம். இந்தக் கோபங்கள் சில நேரம் நீர்க்குமிழியைப் போலக் கரைந்து விடுகின்றன. சில நேரம் தீக்காயம் போல நாள்பட்டும் உலராமலே போய்விடுகின்றன.

பையனுக்கும் அப்பாவுக்குமான உறவு படகுக்கும் அதைச் செய்த மரத்தச்சனுக்கும் உள்ள உறவைப் போன்றது. படகு ஆற்றில் விடப்படுவதற்காகத்தான் உருவாக்கப் படுகிறது. தச்சன் அதைச் செய்யும்போது மிகக் கவனமாகச் செய்கிறான். ஆனாலும் அதை ஆற்றில் விடாமல் வீட்டிலே வைத்துக்கொண்டு இருக்க முடியாது. அதோடு ஆற்றின் சீற்றத்தைச் சந்திக்க படகிற்கு அவன் கற்றுத்தந்து விடவும் முடியாது. கூடவே இருக்கவும் முடியாது. ஆற்றின் விசையை எதிர்கொள்வது படகின் விதி.

தொலைவில் செல்லும் படகின் போக்கினைக் கரையிலிருந்து மௌன மாகப் பார்க்கும் தச்சனைப் போன்றது தான் அப்பாவின் நிலை. ஒரு நாள் நாமும் அந்த தச்சனில் ஒருவனாக இருப்போம் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

தமிழில் நவீன நாடகங்கள் உருவானதற்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் ந.முத்துசாமி. இதற்காக இவர் சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்றிருக்கிறார். 1936 &ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்தவர். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களில் முத்துசாமி முக்கியமானவர். இவரது Ôகூத்துப்பட்டறைÕ என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்துவருகிறது. ÔகசடதபறÕ, ÔநடைÕ போன்ற இலக்கிய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவரது Ôநீர்மைÕ என்ற சிறுகதைத் தொகுதி குறிப்பிடத்தக்கதாகும். Ôஅப்பாவும் பிள்ளையும்Õ, Ôநாற்காலிக்காரர்கள்Õ Ôகாலம் காலமாகÕ, Ôசுவரொட்டிகள்Õ, Ôபடுகளம்Õ போன்ற நாடகங்களை எழுதியிருக்கிறார். Ôஅன்று பூட்டியவண்டிÕ என்ற தெருக்கூத்துக் கலை பற்றிய இவரது கட்டுரைத் தொகுப்பு மிக முக்கியமானது. நவீனதமிழ் நாடகங்களை உலகமெங்கும் நடத்திக் காட்டிய பெருமை ந.முத்துசாமிக்கு உண்டு.

நன்றி: கதாவிலாசம்- விகடன் பிரசுரம்

Nov 19, 2010

இழப்பு - ந. முத்துசாமி

ந. முத்துசாமி :நாடகத்திற்குப் போன எழுத்துக்காரர்.

மிகக் குறைந்த அளவே எழுதியிருக்கும் போதிலும் தமிழ் நவீன இலக்கியத்தில், குறிப்பாக சிறுகதையில் ந. முத்துசாமியின் இடம், மௌனியைப் போல், தவிர்க்க இயலாதது. ஒரு வகையில் ந. முத்துசாமியை மௌனியின் பள்ளியைச் சேர்ந்தவர் என்றும் சொல்லலாம். முத்துசாமியின் முதல் சிறுகதை சி.சு. செல்லப்பாவின் `எழுத்து' வில் வெளிவந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை கொண்ட `நீர்மை' சிறுகதைத் தொகுப்பை 1984ஆம் ஆண்டு க்ரியா பதிப்பகம் கொண்டு வந்தது. ஆmuthuswamyனால் அப்பொழுதே முத்துசாமியின் கவனம் நாடகங்கள் பக்கம் திரும்பியிருந்தது. நாடகத்தின் பக்கம் திரும்பியதும் முத்துசாமி சிறுகதை எழுதுவது குறைந்து கொண்டே வந்து பின்பு நின்றுவிட்டது. ஆனால் சிறுகதையைப் போலவே நாடகத்திலும் முத்துசாமியின் இ டம் ஸ்திரமானது. `நாற்காலிக்காரர்,' `அப்பாவும் பிள்ளையும்,' `சுவரொட்டிகள்' ஆகியவை முத்துசாமியின் முக்கியமான நாடகங்கள்.    ஆரம்பத்தில் `சிம்ஸன்' டிராக்டர் கம்பெனியில் சிறிதுகாலம் பணியாற்றிய பின், அமெரிக்காவின் `போர்ட் பவுன்டேசன்' உதவியுடன் `கூத்துப்பட்டறை' என்ற நவீன நாடகத்திற்கான அமைப்பை முத்துசாமி உருவாக்கினார். கூத்துப்பட்டறை இதுவரை தமிழ் நாடகங்களுடன் முக்கியமான மொழிபெயர்ப்பு நாடகங்களையும் அரங்கேற்றியிருக்கிறது. தமிழின் தொன்மைக் கலையான கூத்தை நாடகத்துடன் இணைத்தது மற்றும் பரவலாக அறியச் செய்ததில் முத்துசாமிக்கு பெரும் பங்குண்டு. முத்துசாமியின் பாவைக்கூத்தைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு ஒன்று அன்னம் வெளியீடாக வெளி வந்திருக்கிறது.

   ந. முத்துசாமி தஞ்சாவூருக்கு பக்கத்தில் புஞ்சை என்னும் கிராமத்தில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இங்கு தரப்பட்டிருக்கும் `இழப்பு' சிறுகதை பலமுறை பலராலும் சிறந்த சிறுகதையாக மீண்டும் மீண்டும் முன்னிறுத்தப்பட்டச் சிறுகதை.

தன் நண்பர்களைக் கொல்ல வேண்டுமென்று அவனுக்குத் தோன்றிவிட்டது. ஏன் அப்படித் தோன்றிற்று என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஒருநாள் மாலை பைகிராஃப்ட்ஸ் ரோட்டில் தன் நண்பர்களோடு போய்க்கொண்டிருந்தபோது திடீரென்று இப்படித் தோன்றிற்று. 13-ஆம் நம்பர் பஸ் தன்னைக் கடந்து போனபோது நண்பர்களை ஒவ்வொருவராக சக்கரத்தில் தள்ளிக் கொன்றுவிட வேண்டுமென்று தோன்றிற்று. புருவத்தை உயர்த்தி ஏன் என கேட்டுக்கொண்டான். நினைப்பை மனதில் அழுத்தி அழித்துவிட வேண்டுமென்று கண்ணை இறுக மூடிக்கொண்டான். சின்னப்பையனாகக் கிராமத்தில் கும்பியில் கால் வைத்து அழுத்தும் தோற்றமும், காற்று வெளிப்படும் சப்தமும், காற்றுக் கொப்புளங்ளும் தோன்றின. முழங்கால் வரையில் சகதி. அழுந்திய காலை எடுக்க, அடுத்த காலை வைத்து இழுக்க, வைத்த கால் அழுந்துகிறது. அழுந்திய கால் மேல் வருகிறது. உதவ வந்த கால் இன்னும் கீழே போகிறது. ஒன்றுக்கு ஒன்று உதவியாக மேலும் கீழுமாக மாறிமாறிப் போய்வருகின்றன. கொல்லை வைக்கோல் போருக்குப் பின்னால் பறைச்சி சாணி மிதிக்கும் தோற்றம் தெரிகிறது. அவள் காலை மாற்றி மாற்றிக் குதித்து வரட்டிக்குச் சாணி மிதிக்கிறாள். பாட்டி சொன்ன கதையில் பேய் மிதித்ததைப்போல் மிதிக்கிறாள். இவன் சகதியில் புதைந்த காலை இழுக்க விரைவாக முயல்கிறான். கால்கள் விசை பெறுகின்றன. நின்ற இடத்தில் கேலிக் கூத்தாக ஒரு மிஷினின் இரண்டு பிஸ்டன்களாகக் கால்கள் இயங்குவதாகத் தோன்றுகிறது. குத்திட இயங்கியவைக் கிடையில் இயங்கி ரயில் எஞ்சினின் சக்கரத்தை இயக்கும் பிஸ்டனாக தோற்றம் கிடைக்கிறது. சக்கரங்கள் `சிக்சிக்'கென்று நின்ற இடத்தில் வேகமாக இயங்கிவிட்டு உருளத் தொடங்குகின்றன. ஓடும் சக்கரத்தில் ஒரு நண்பன் விழுந்து இறக்கிறான். தலையும் முண்டமுமாக தண்டவாளத்திற்கு அந்தண்டையும் இந்தண்டையும் இரு துண்டுகளாக அவன் உடல் விழுந்து துடிக்கிறது. இவன் கடைவாய்ப் பற்களை அழுந்தக் கடித்துக்கொண்டான். பல் கடிபடுவதை கன்னத்தைத் தடவிப் பார்த்துக்கொண்டான். தோல் போர்த்தின எலும்புத் தாடையாக பார்ப்பவருக்குத் தோன்றுமென்று வெட்கப்பட்டான். ஒரு விநாடி கண் மூடலிலும் பல் கடித்தலிலும் நினைவு மறைந்ததை உணர்ந்தான். முன்பு சாணி மிதித்தலில் நினைவு மறைந்ததை உணர்ந்தான். ஆடும் அரிவாள்மனையில் ஒரு தென்னை மரத்திற்கு அடியில் அமர்ந்து வைக்கோல் கூளத்தைப் பிடிப்பிடியாக நறுக்கிச் சாணியில் போட்டு மிதிக்க அவை மறைவதுபோல் மறைந்தன என நினைத்துக்கொண்டான். சாணி மிதித்தல் எனவும்; கும்பி, பேய், குதித்தல், குத்திட்ட பிஸ்டன்கள், கிடைநிலை பிஸ்டன்கள், ரயில் சக்கரம், நண்பன் இறத்தல் எனவும் தொடர்ந்தன.

   மறைந்ததென்று எண்ணவும் மீண்டும் அந்த நினைப்பு பிடித்துக்கொண்டுவிடுவதைக் கண்டு கொண்டான். இப்படி ஒவ்வொரு விஷயமாக நினைப்பை விரட்டி வீடு போய்ச் சேருகிறவரையில் அதிகபட்சம் அந்த நினைப்பைக் குறைக்க விரும்பினான். உடனே பேய்க்கதை அதற்கு வசதியாக இருக்கும் என்று தோன்றிற்று. ஒரு கதையில், பேய் நடுஜாமத்தில் கிருஷ்ணசாமி அய்யரை மிளகாய்க் கொல்லைக்கு தண்ணீர் இறைக்கக் கூப்பிட்டது. ஏற்றம் பிடித்து இறைத்துக் கொண்டிருந்தவர் அண்ணாந்து மேலே பார்க்க நிலவில் ஏற்ற மரத்தில் ஓடிக்கொண்டிருந்தவனுக்குக் கால்கள் இல்லாததைக் கண்டு தன்னைப் பேய் ஏமாற்றிவிட்டதென உணர்ந்து அதைத் தான் ஏமாற்றிவிட எண்ணினார் கிருஷ்ணசாமி அய்யர். ``டேய் ரங்கசாமி, அடுத்த பாத்திக்கி மடையைக் கோலிட்டு வரேண்டா, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கோ,'' என்றார். ``சரிடா கிச்சாமி'' என்றது பேய். கிருஷ்ணசாமி அய்யர் அதுதான் சமயமென்று மண்வெட்டியை எடுத்துக்கொண்டு கடைசிப் பாத்திக்குப் போனார். மடையைக் கோலினார். மண்வெட்டியைக் குத்திட நிறுத்தினார். தலை முண்டாசைக் கழற்றி மண்வெட்டிக் காம்பில் தலையைப் போல் நிறுத்தினார். குனிந்து மிளகாய்ப் புதர் மறைவில் ஒண்டிக் கொண்டே போய், தணிவாக இருந்த இடத்தில் வேலியைத் தாண்டி வரப்போடு ஓடி வீட்டுக்குப் போய் வாயிற்கதவைத் தடதடவென்று தட்டினார். மனைவி யாரென்று கேட்டுத் தெரிந்து கொண்டு திறக்க நேரமாயிற்று. இவருக்குக் கோபம் வந்துவிட்டது. ``நான்தான்'' என்று கோபத்தோடு கதவு உடைந்துவிடும் போலத் தட்டினார். அவள் கதவைத் திறந்தாள். இவனுக்கு அவர் மனைவி கதவைத் திறந்தாள் என்றவுடன் தான் அவர் முண்டக்கட்டையாக வரப்புகளைக் கடந்து ஓடினார் என்பது நினைவுக்கு வந்தது. கதையில் அவர் முண்டாசை மண்வெட்டிக் காம்பில் மாட்டிய உடனேயே இடுப்பு வேட்டியையும் அவிழ்த்துப் போட்டுவிட்டார். கோமணம் கட்டும் பழக்கம் அவருக்கு இல்லை போலிருக்கிறது எனச் சிரித்துக்கொண்டான். அவர் பெண்டாட்டி விழுந்து விழுந்து சிரித்தாளாம். மறுநாள் ஊரே சிரித்ததாம். இத்தனைக்கும் அவர் வேட்டி கட்டிக்கொண்டிருந்த கதையைத்தான் சொல்லியிருக்கிறார். அவர் மனைவிதான் முண்டக்கட்டைக் கதையைத்தான் சொல்லியிருக்கிறார். அவர் மனைவிதான் முண்டக்கட்டைக் கதையை ஊரில் பரப்பியது. அடுத்தாத்துக்காரி, பக்கத்தாத்துக்காரி என்று ஒவ்வொருவருக்காகக் கதையைச் சொல்லிவிட்டாள். அவர்கள் சிரித்துவிட்டு தங்கள் ஆத்துக்காரர்களுக்கும் சொல்லிச் சிரித்திருக்கிறார்கள். அவர்களோ உடனே கிருஷ்ணசாமி அய்யரின் வேட்டியை அவிழ்த்துப் பார்த்துக் கதையை ரசித்துச் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இவன் சிரித்தான். ``என்ன நீயா சிரிச்சுக்கறே'' என்றான் பக்கத்தில் வந்து கொண்டிருந்த நண்பன். ``ஒன்றுமில்லே'' என்று சொல்லிவிட்டான் இவன். கதையில் கிருஷ்ணசாமி அய்யர் கறுப்பு. நிலவில் ஓட அவர் கறுப்பாக ஓடுவது பேய்க்குத் தெரிந்திருக்கும் என்று அவர் ஓடினபோது நிலவை மேகம் மறைத்திருக்க வேண்டுமென்று திருத்திக் கொண்டான். பேய்களுக்குக் கால்கள் இல்லை. இன்னொரு கதையிலும் கால்கள் இல்லாததைக் கொண்டுதான் அதை பேய் எனத் தெரிந்து கொண்டாள் அலமேலு. இவளை நடுஜாமத்தில் சாணி தட்டக் கூப்பிட்டது பெண் பேய். விடியற்காலையென்று சாணி தட்டப் போனாள் அவள். பேய் சாணி மிதித்தது. இவள் தட்டத் தட்ட அது மிதித்துக்கொண்டேயிருந்தது. அது மிதிக்கும் வேகத்தில் இவளால் தட்டி முடிக்க முடியவில்லை. அலமேலுவுக்குச் சந்தேகம் வந்து நிமிர்ந்து பார்த்தாள். பேய். கால்கள் இல்லை. கால்கள் இல்லாமலே அந்தப் பேய் சாணி மிதித்திருக்கிறது. அலமேலுவுக்கு குலையை நடுக்கும் பயம். எப்படி தப்பித்துக் கொள்வது? அவள் எப்படி தப்பித்துக்கொண்டாள் என்ற கதையும் இவனுக்கு மறந்துவிட்டது. ``இதோ தண்ணி கொண்டு வந்துடறேன்'' என்று குடத்தைத் தூக்கிக் கொண்டு உள்ளே போய்க் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டிருப்பாள் என நினைத்துக்கொண்டான். `பேய் பேய்' என கத்த ஆரம்பித்திருப்பாள். அல்லது பயத்தில் கத்த முடியாமல் ஊமையாகியிருப்பாள். உடனே அவளுக்கு ஜுரம். இரண்டு நாள் கடுமையான ஜுரத்தில் கிடந்தாள். மூன்றாம் நாள் இறந்துவிட்டாள். இறப்பு இவன் நினைவுக்கு வந்துவிட்டது. ஒரு நண்பனை பேயின் கையில் பிடித்துக் கொடுக்கவேண்டுமென நினைத்துக் கொண்டான். தன்னையும் சேர்த்துக்கொண்டால் என எண்ணிச் சிரித்தான். ``என்ன நீயா சிரிச்சுக்கறே'' என்றான் பக்கத்தில் வந்துகொண்டிருந்த நண்பன். ``ஒன்றுமில்லே'' என்று சொல்லிவிட்டான் இவன். பிறகு, ``பேய்களைக்கொண்டே ஒரு நாட்டை முன்னேற்றிவிட முடியும்'' என்று சொன்னான். ``ஆமாம், பேய்கள்தான் நம் நாட்டை முன்னேற்றிக் கொண்டிருக்கின்றன.'' ஒரு நண்பன் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். இவனுக்கு வெட்கமாகப் போயிற்று. திடீரென்று பேய்கள் சிரித்தார்கள். இவனுக்கு வெட்கமாகப் போயிற்று. திடீரென்று பேய்கள் உண்மையெனத் தோன்ற ஆரம்பித்தது. தன் பாட்டி பேய்களை நேரே பார்த்ததாகச் சொல்லி இருக்கிறாள். கதைகளானாலும் கிருஷ்ணசாமி அய்யரும் அலமேலுவும் புஞ்சையில் வாழ்ந்தவர்கள். இவனே ஒருமுறை பேயைப் பார்த்திருக்கிறான். சின்னப் பையனாக இருந்தபோது ஒரு பேய் புளியமரத்தடியில் வெளிக்குப் போய்க்கொண்டிருந்தபோது பார்த்திருக்கிறான். நண்பர்களோடு பார்த்தான். கல்லைவிட்டு எறிந்தார்கள். கல் உருவத்தை ஊடுருவிக்கொண்டு போயிற்று. அது பேய்தான் என்று பிறகு தீர்மானித்துக்கொண்டார்கள். கால்கள் இல்லாமல் அது எப்படி குந்திக்கொண்டு வெளிக்குப் போயிற்று என்பதை இப்பொழுது நினைத்துப் பார்க்க முடியவில்லை. பேய்க்கதைகளைத் தொடர்ந்துக் கொண்டு போவது இவனுக்குப் பிடிக்கவில்லை. அதைப்பற்றி இனிமேல் தன்னால் பேசாமல் இருக்கமுடியாது எனத் தோன்றிற்று. உண்மை, என்றும் சிரிப்புக் கிடமானதுதான் என நினைத்தான். பிறகு, கடைப் பெயர்ப்பலகைகளில் எரியும் நியான் எழுத்துகளைத் திரும்பிப் பார்த்தான். சிவப்புநிற எழுத்துகள் ரயிலில் அடிபட்டு இறந்தவனின் ரத்தத்தை நினைவுக்குக் கொண்டுவந்தன. தலையை உதறிக்கொண்டான். மீண்டும் பழைய நினைப்பு. இப்படி மறக்க, நினைக்க, மறக்க, நினைக்கவென்று நினைவு ஓடிக்கொண்டிருந்தது. மறக்க, நினைக்க, மறக்க, நினைக்க என்பதை தொட்டுவிட்டு என்று காட்சியாகக் கண்டான். உடனே தன் மனைவியின் ஊரான மாயூரத்தில் மாயூரநாதசாமி கோயிலில் சாமி புறப்பாட்டின்போது ``ஜிஞ்சா ஜிஞ்சா''வென்று தொட்டுவிட்டுத் தொட்டுவிட்டு, - வாயில் துணியைப் பிடித்துக்கொண்டு கன்னத்தை உப்பிக்கொண்டு ஊதும் ஒத்துக்காரனுக்குப் பின்னால் - பையன் ஜாலரா போடுகிற தோற்றம் வந்தது. ஒத்துக்காரனின் சோகமான தோற்றம் இவனுக்கு மரணத்தை நினைவூட்டியது. கல்யாணங்களில் ஒத்துக்காரனையே பார்த்துக்கொண்டிருக்கும் தன் பழக்கத்தையும் நினைத்துக்கொண்டான். அந்த மணமக்களுக்காகவே இந்த ஒத்துக்காரன் சோகமாக இருக்கிறான் என்று நினைத்துக்கொள்வான். தம்பதிகள் ஒருநாள் இறக்கப்போகிறார்கள் என்று, ஒருவர் முந்தி இறக்க, இன்னொருவருக்கு சோகம் வரப்போகிறதென்று, அவன் முந்திக்கொண்டு இறக்கப்போவதால் அவள் விதவையாகப் போகிறாள் என்று இவன் இப்பொழுதே நினைத்து சோகமாக இருக்கிறான் என்று நினைப்பான். கடைசியில் இறப்பைப்பற்றியே சிந்தித்துக்கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான். நண்பர்களை எங்கு என்ன சொல்லிப் பிரிந்து வந்தோம் என்பதே அவனுக்கு மறந்துவிட்டது.

   சாப்பிட்டுவிட்டு சாய்வு நாற்காலியில் வந்து சாய்கிறவரையில் நினைப்பு வேறுவிதமாக வேலை செய்தது. பரிமாறிய மனைவியையும் பக்கத்தில் உட்கார்ந்து சோற்றைப் பிசைந்து கொண்டிருந்த ஒரே குழந்தையையும் நண்பர்களின் பக்கம் பிடித்துத் தள்ளுவதாக நினைப்பு வந்தது. முழு உருவத்தில் அவர்கள் அருகில் இருந்தும் பிடித்துத் தள்ளும்போது வெறும் சாயலாக அவர்கள் தோன்றினார்கள். அந்த நிழலுக்கு மூக்கும் வழியும் கொடுத்து நிஜமாகக் கற்பிக்க வேண்டுமென்று முயன்றான். அது அவனால் முடியவில்லை. அதற்காகப் பலமுறை மீண்டும் மீண்டும் பழைய இடத்திலிருந்து அவர்களைத் தள்ளவேண்டியிருந்தது. குழந்தை அறியாத்தனமாகவும், மனைவி மிரண்டு கெஞ்சும் பாவனையிலும் அவனைப் பார்த்தார்கள். மீண்டும் மீண்டும் பிடித்துத் தள்ள, குழந்தை அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டது. பலமுறை இப்படித் தன்னைத் தள்ள அது விரும்பியதாகத் தோன்றிற்று. எனக்கு வேண்டாம் இந்தப் பூசணிக்காய் விளையாட்டாக அது ஆகிவிட்டது. தான் தள்ளப்பட வேண்டுமென்று ஒவ்வொரு முறையும் அது தோளைச் சாய்த்துக்கொண்டு இவன் பக்கம் வந்தது. அதையே இவன் தள்ளிக்கொண்டிருந்தான். சாப்பிட்டு முடிக்கிறவரையில் குழந்தையை மட்டுமே அழுகப் பூசணிக்காயாகத் தள்ளிக்கொண்டிருந்துவிட்டு எழுந்து வந்தான். எதிர்பாராத் தள்ளலிலும் விழாமல் தன்னைச் சமாளித்துக்கொண்ட சாய்ந்த தோற்றத்தோடே இவன் மனைவி நின்றுகொண்டிருந்தாள். மிரட்சியும் கெஞ்சும் பாவமும் நிலைத்துவிட்டிருந்தன.

   ஏன் இப்படித் திடீரென்று தோன்ற ஆரம்பித்தது என்று நினைத்துக்கொண்டே வந்து, சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டான்.

   ``அப்பா'' என்று குழந்தை இவனை நோக்கி ஓடிவந்தது. நாற்காலியில் இருந்து நிமிர்ந்து எட்டி குழந்தை தன்னிடம் வருவதைக் கையை நீட்டி முன் கையால் தடுத்தான். குழந்தையின் கால்கள் தரையில் பாவுகின்றனவா என்று பார்த்தான். தரையில் கால்கள் பதியப்பதிய நின்றது குழந்தை.

   ``குட்டிப் பேய்க்குக் கால்கள் தரையில் பாயும்'' என்று உரக்கவே சொன்னான்.

   ``பாவம் கொழந்தையைப் போய் ஏன் இப்படிப் பேய் இங்கறேள்'' என்றாள் மனைவி அடுப்பங்கரையில் இருந்த படியே ``நீ பெண் பேய்'' என்றான் இவன்.

   ``அப்போ, நீங்க ஆண்பேய்'' என்று சிரித்தாள் அவள். ``என் நண்பன் இன்று பேயாகிவிட்டான். ரயிலில் அறைபட்டுப் பேயாகத் திரிகிறான்'' என்று சொன்னான்.

   ``யார்? யார்? ரயில்லே அறைபட்டுச் செத்தது'' என்றாள் அவள்.

   இவன் பதில் சொல்லவில்லை. எழுந்துபோய் ஜன்னல் கதவுகளைச் சாத்திவிட்டு வந்து உட்கார்ந்தான். ஜன்னலைத் தாண்டி பேய் உள்ளே வராது என்பது அவனுக்குத் தெரியும்.

   ஜன்னலைத் தாண்டி அதன் தோற்றம் பார்வைக்கு வராது என்பது என்ன நிச்சயம்? பாட்டி அப்படிச் சொன்னதில்லை. ``குழந்தை எழுந்து நடக்க எத்தனை நாள் ஆகிறது. முதலில் கால்கள் தரையில் பாவாமல்தான் குழந்தை தள்ளாடுகிறது. பிறகுதான் தரையில் கால்கள் பாவும்படி நடக்கக் கற்றுக்கொள்கிறது. பேய்களுக்கு இது நேர்மாறுதல். குழந்தைப் பேய்கள் தரையில் கால்கள் பாவப்பாவ நடந்து தள்ளாடுகின்றன. பிறகுதான் கால்கள் பாவாமல் நடக்கப் பழகிக்கொள்கின்றன'' என்று சொன்னான். ``போதும் போதும் கொழந்தை பயந்துக்கப் போறது. விளையாட்டு ரொம்ப நன்னாருக்கு. கொழந்தையை யாரானும் பேய்ன்னு சொல்வாளோ?'' என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு போக அவள் வந்தாள். ``ஜன்னலை ஏன் இப்படிச் சாத்தி வைச்சிருக்கேள்'' என்றாள். ``பேய்க்காக' என்றான். ``பேய்க்காகவா? என்ன பேசறேள்'' என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு நின்றாள். ``பேயாலே உள்ளே வர முடியாவிட்டாலும் அதனால் ஜன்னலுக்குப் பின்னால் வந்து நிக்க முடியும்'' என்றான். ``என்ன குடிச்சுகிடிச்சுட்டு வந்தேளா?'' என்றாள். ``போடி, உன்னை அப்பவே பிடிச்சுத் தள்ளாமே விட்டது என் தப்பு'' என்றான். ``என்ன என்ன பேசறேள். மூளை கீளை பிரண்டு போச்சா என்னா?'' என்று அவள் மிரண்டு நின்றாள். அவன் கடகடவென்று சிரிக்க ஆரம்பித்துவிட்டான். ``நல்ல வேடிக்கை வேண்டிக்கெடக்கு, சாப்பிட்டாச்சு. பாயேப் போட்டுண்டு படுத்துத் தூங்குங்கோ'' என்று சொல்லிவிட்டு அவள் போய்விட்டாள். இவன் பாயை விரித்துப் படுத்தான். காலையில் எழுந்ததும் கொஞ்சம் தெளிவாக இருந்தது. இவனைத் தேடிக்கொண்டு நண்பர்களில் ஒருவன் வந்தான். வந்தவுடனேயே, ``எனக்குப் பாவம் புண்ணியத்தில் நம்பிக்கை போய்விட்டது'' என்றான் இவன். ``எனக்கும்தான்'' என்றான் நண்பன்.

   ``மனிதாபிமானத்தின் மேல்கூட'' என்றான் இவன்.

   நண்பன் பதில் சொல்லவில்லை. ``பாவ சிந்தனைகள் மனதில் புகாமல் தடுத்துக் கொண்டிருந்த கடவுள் என்ற வாயில்காப்போனை அண்டை வீடுகளுக்கு அனுப்பிவைத்து விட்டேன்.'' நண்பன் சிரித்துவிட்டு ``எதற்காக?'' என்று மீண்டும் சிரித்தான். ``எனக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை'' என்று சொன்னான்.

   ``உன்னைப் போன்றவர்கள் எப்படியெல்லாம் சட்டத்தை மீறுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக.'' நண்பன் வாய்விட்டுச் சிரித்தான்.

   ``கருணையில்லாமல் உன்னை என்னால் கொன்றுவிட முடியும்'' என்று சொன்னான் இவன்.

   ``அதற்காகப் பிறகு நீ வருந்துவாய்.''

   ``என்னால் துணிச்சலாகத் தற்கொலையும் செய்துகொள்ள முடியும்.''

   ``அதான் மனிதாபிமானமே இல்லாதவன் என்றாயே.''

   ``உன்னுடையதில் இருந்து என் மனிதாபிமானம் வேறுபட்டது.''

   ``சகமனிதனிடம் அன்பு காட்டுவது என் மனிதாபிமானம்.''

   ``உதவாக்கரை மனிதர்களை எனக்குப் பிடிப்பதில்லை.''

   ``இதேவிதமாக உன்னைப்பற்றியும் என்னால் நினைக்க முடியும்.''

   ``இப்பொழுது எனக்குப் பேயிடம் மட்டும்தான் நம்பிக்கை இருக்கிறது.''

   நண்பன் சிரித்தான்.

   ``நரசிம்மன் பேயாகச் சுற்றிக்கொண்டிருக்கிறான்.''

   ``அவன் இயல்பே அதுதானே. `லோலோ'வென்று நாயாகச் சுற்றிக்கொண்டிருப்பான்.''

   நண்பன் எழுந்து வீட்டுக்குக் கிளம்பினான். வழக்கமாக வாயில்வரையில் கொண்டுவிடப் போகிறவன், இன்று போகவில்லை. திறந்திருந்த ஜன்னல் கதவுகளைச் சாத்தினான். திடுதிடுவென்று ஓடி வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும் நண்பனை பஸ் சக்கரத்தில் தள்ளிக் கொன்றுவிட வேண்டும் போலிருந்தது. சட்டையை மாட்டிக்கொண்டு வெளியில் புறப்பட்டான்.

   ``ஆபீஸுக்கு கிளம்பப் போறதில்லையா?'' என்றாள் மனைவி. ``இதோ வந்துடறேன்'' என்று கிளம்பிப் போனான். சற்று நேரத்திற்கெல்லாம் திரும்பிவிட்டான். ``பாலகிருஷ்ணன் பஸ் சக்கரத்தில் அறைபட்டுச் செத்துவிட்டான்'' என்று சொல்லிக்கொண்டே போய் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டான்.

   ``எப்படி, எப்படி? ஐயோ கடவுளே! நேத்திக்கி ஒன்னு இன்னிக்கு ஒன்னா? எப்படி எப்படி'' என்று இவன் அருகில் வந்து நின்றாள் அவள். அவன் பதில் சொல்லவில்லை. கண்ணை மூடிக்கொண்டு சாய்வு நாற்காலியில் படுத்துவிட்டான். அவளும் பதிலை எதிர்பார்க்காமல் திரும்பிவிட்டாள். நண்பர்களை இழந்த துயரத்தில் பதில் சொல்லும் நிலையில் அவன் இருக்கமாட்டான் என்று நினைத்துக் கொண்டு கேள்விகளால் அவனுக்குத் தொல்லை கொடுக்க விரும்பாமல் திரும்பிவிட்டாள். ஆபீஸுக்குக் கிளம்ப வேண்டிய நேரம் கடந்தும் அவன் நாற்காலியில் படுத்துக்கொண்டிருந்தான். இந்நிலையில் அவனால் ஆபீஸுக்கும் போக முடியாது என்றே அவள் நினைத்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் அவனை ``சாப்பிட வறேளா?'' என்று கூப்பிட்டுக்கொண்டு வந்தாள்.

   ``போடி பேயே'' என்றான் கண்ணை மூடிக்கொண்டே. அவள் உள்ளே போய்விட்டாள். பிறகு குழந்தை ``அப்பா'' என்று கூப்பிட்டுக்கொண்டு வந்தது. ``குட்டிப் பேயே போ'' என்றான். அவள் உள்ளிருந்தபடியே ``அப்பாவுக்கு மனசு சரியில்லேடி கண்ணு வந்துடு இப்படி'' என்றாள். சற்றுக் கழித்து அவனே சாப்பிடுவதற்குப் போனான். பேசாமல் சாப்பிட்டு விட்டு வந்து மீண்டும் நாற்காலியில் படுத்துக்கொண்டான். இதுவரையில் பஸ்ஸிலோ ரயிலிலோ அறைபட்டுச் செத்தவர்களை அவன் பார்த்ததில்லை. புஞ்சை கசாப்புக் கடையில் ஒரு சட்டிக்குமேல் கழுத்தை வைத்து ஆடு அறுப்பதைப் பார்த்திருக்கிறான். திருச்சம் பள்ளியில் இருந்து வந்து ஒரு சாயபு கசாப்புக்கடை வைத்திருந்தான். கறி விற்று முதல் ஆனதும் கடையைக் கட்டிக்கொண்டே திருச்சம்பள்ளி போய்விடுவான் அவன். வாரத்திற்கு மூன்று நாட்கள் கடை. உள்ளூர் கீழப்பாளையம் இடப்பிள்ளையின் ஆட்டுக்கிடையில் இருந்து அவனுக்கு ஆடுகள் போகும். நாளுக்கு ஒருவர் என்று முறை போட்டுத் தலையை வாங்கிக் கொண்டு போவார்கள். தலையை காதைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போவார்கள். இமைக்காத விழிகளோடு ஆட்டுத்தலை பார்த்துக்கொண்டு போகும். ரயிலில் அடிபட்டுச் செத்தவனின் தலையையும் இப்படித்தான் தூக்கிக்கொண்டு போகவேண்டியிருக்கும். மனிதத் தலையை கேவலமாகக் காதைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போக முடியாது. மயிரைப் பிடித்துத்தான் தூக்கிக்கொண்டு போகவேண்டியிருக்கும். அல்லது பனங்காயைப் போல, உள்ளங்கையிலும் ஏந்திக் கொண்டு போகலாம். சாணத்தை ஏந்திக்கொண்டு போவதைப்போல, மனிதத்தலையை ஏந்திக்கொண்டு போவதா என்று நினைக்கும் மனிதாபிமானி காளியைப்போல தலைமயிரைப் பிடித்துத்தான் தூக்கிக்கொண்டு போவான். சற்று நேரத்தில்தான் கடவுளாகிவிட்டதாகவும் அவன் நினைத்துக்கொண்டு போகலாம்.

   சாயபு மிருகாபிமானம் இல்லாதவன். பெரிய மண் அகலுக்கு மேல் உள்ள கழுத்தை சாவகாசமாக அறுப்பான் அவன். ஆட்டை விடியற்காலையில் கடைக்காலில் கட்டிவைத்து தின்னத் தழை போட்டு வைத்திருப்பான். கத்தியை, உதவிஆள் வருகிறவரையில் தீட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான். ஆட்டின் கால்களை ஒருவன் பிடித்துக்கொள்ள வேண்டும். முழங்கால்களை முதுகுப்புறமாக ஆட்டு உடலில் மண்டியிட்டுக் காலைச் சேர்த்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஒருவன் வாயைக் கெட்டியாக அமுக்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும். இவன் கூர் பார்த்துவிட்டு கழுத்தில் கத்தியை வைப்பான் ரத்தத்திற்கு விலையுண்டு தரையில். சிந்தாமல் அதைச் சட்டியில் எந்த வேண்டும். சாவதானமாக அறுத்தால்தான் முடியும். ஆடு முணகும். கத்தி தொண்டைக்கு வந்ததும் முணகல் தொண்டையில் வழிந்துவிடும் போலிருக்கிறது. அதன் முணகல் அப்போது ரத்தத்தில் கலந்திருக்கும் என்று தோன்றிற்று. கசாப்புக்கடை பள்ளிக்கூடம் போகும் குறுக்குவழி; அங்கும் பேய் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டார்கள். பகலிலேயே அவன் அவ்வழியாகப் போய் இருந்ததால் பேயை அவனால் பார்க்க முடியவில்லை. எப்போதும் மனிதர்கள் அங்கு குந்தி பீடி குடித்துக் கொண்டிருந்ததை மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது. அவர்களுக்குக் கால்கள் இருந்தனவா என்ற சந்தேகம் இப்பொழுது திடீரென்று தோன்றிற்று. ஆட்டுக் கழுத்தில் உணவு போகும் வழியைப் பார்த்ததில்லை. நரசிம்மன் கழுத்தும் அப்படித்தான் இருந்திருக்கும். இனி தேவையில்லை என்பதால் அது அடைபட்டுப் போகிறது போலிருக்கிறது. தேவையில்லாதவைகளை ஒழித்துக்கட்ட வேண்டியதுதான். எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒருநாள் ஒருவன் பின்புறமாக ரயிலில் ஏறி, கிளம்பிய சக்கரத்தில் மாட்டிக்கொண்டான். ரயில் நின்றுவிட்டது. ஒருகால் கணுக்காலில் அரைபட்டது. அவனைத் தூக்கிக்கொண்டு வந்து பிளாட்பாரத்தில் போட்டார்கள்.

   இதுவரையில் கிட்டிப்புள்ளுக்குக் கிளைவெட்டுவதைப் போலத்தான் கால்கள் ரயிலில் துண்டிக்கப்படுகின்றன என்று நினைத்துக் கொண்டிருந்தான். அப்படியில்லை, இவன் கால் நசுங்கித்தான் இருந்தது. பாதம் முழுதாக இருந்தது. அப்படியொன்றும் அவன் துடித்துவிடவில்லை. அப்பா அப்பா என்றோ, அம்மா அம்மா என்றோ சொன்னான். நிமிர்ந்து காலைப் பார்த்துக்கொண்டான். காலைப் பார்க்கத்தான் அப்பாவையும் அம்மாவையும் கூப்பிட்டான் போலிருந்தது. கால் போச்சே கால் போச்சே என்றுதான் அழுதான். கால் போனதற்காக அழுதானே தவிர வலிக்காக அழுததாகத் தெரியவில்லை. ஒரு புழுவை ஈர்க்குச்சியால் தொட்டால் எவ்வளவு உயரம் துள்ளிக் குதிக்கிறது. அதைப்போல எவ்வளவு பெரியவன் மனிதன். இவன் எவ்வளவு துள்ளிக் குதித்திருக்கவேண்டும். சாதாரணமாகத்தான் படுத்திருந்தான். வலி தாங்கிக்கொள்ளக் கூடியதுதான் என்று தோன்றிற்று. வயிற்றுவலிக்காகப் புஞ்சையில் தூக்குப் போட்டுக்கொண்டவர்கள் எல்லோரும் வேறு காரணங்களுக்காகத்தான் தூக்கிட்டுக் கொண்டிருக்க வேண்டும். குறுக்குக் காவிரிச்சாலை மரங்கள் அத்தனையிலும் யாராவது ஒருவன் தொங்கி இருக்கிறான். தற்கொலை மிகச் சுலபமானது என்று தோன்றிற்று. மவுண்ட்ரோட்டில் ஒரு இரவு ஒருவன் டாக்ஸியில் மோதிக் கீழே விழுந்தான். தலையில் இருந்து சிறிதுதான் ரத்தம் கசிந்திருந்தது: உயிர் இருந்தது. நினைவு இல்லை. வலிக்காக முணகவில்லை. அவன் கழுத்தில் அந்த டாக்ஸி ஏறி அவன் செத்திருந்தால் அவனுக்குத் தெரிந்திருக்காவா போகிறது. அவ்வளவு எளிதானது தற்கொலை. யோசித்துப் பார்க்காது தாவத் தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவுதான். வெகு நாட்களுக்கு முன்பு பஸ்ஸில் தலை அறைபட்டு எல்லாப் பற்களும் தெரிய இளித்துக்கொண்டு சாலை ஓரத்தில் கிடந்த நாய் ஒன்று இப்பொழுது சிரித்தது. அதன் குடல் ஆசனவாய் வழியாய்ப் பிதுங்கிக் கயிறுபோல் அதைச் சுற்றிலும் கிடந்தது. வயிற்றில் இருக்க வேண்டிய குடல் வெளியில் இருந்ததற்காக அது சிரித்துக் கொண்டிருந்தது போலத் தோன்றிற்று. அன்று முழுவதும் அவன் மனைவியோடோ குழந்தையோடோ பேசவில்லை; தேவையானபோது சாப்பிட்டான். கொண்டுவந்த காப்பியைக் குடித்தான். மற்ற நேரத்தில் சாய்வு நாற்காலியிலேயே கண்ணை மூடிக்கொண்டு கிடந்தான். மறுநாள் காலையில் மனைவி தழையத் தழையப் புடவையைக் கட்டிக்கொண்டு பேயைப் போல காப்பியை எடுத்துக்கொண்டு வந்தபோது அவளைப் புடவையைத் தூக்கச் சொன்னான். ``சீச்சி அசிங்கம்'' என்று அவள் உள்ளே போய்விட்டாள். ``நீ பேய்'' என்று கத்தினான். குளிக்காமலேயே சாப்பிட்டுவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆபீஸுக்குப் போனான். அவனுக்கு முன்னால் காரில் போனவர்களின் தலை பின் கண்ணாடி வழியாய்த் தெரிந்தது. தன்னைக் கடந்துபோன பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டிருந்தவர்களை மார்பு அளவுதான் பார்க்க முடிந்தது. டிரைவரின் தலையும், தோளும், கைகளும் மட்டுமே தெரிந்தன. குறுக்குக் கம்பியில் தொங்கியவர்களில் கையைப் பிடித்துக்கொண்டு தொங்கினார்கள் சிலர். அவர்கள் எல்லோருமே கால்கள் இல்லாத பேய்கள் என்று தோன்றிற்று. நடந்து போனவர்கள் அத்தனை பேரையும் பார்த்துக்கொண்டே போனான். எல்லோரும் செருப்புப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பாதம் மண்ணில் படவில்லை; ஆகவே அவர்களும் பேய்களே என்று நினைத்துக்கொண்டே போனான். `ஷு' போட்டுக்கொண்டவர்கள் கணுக்கால் அளவு இல்லாத பேய்கள். சைக்கிளில் போனவர்கள் அந்தரத்தில் உட்காரும் நடுத்தரப் பேய்கள். செருப்பு இல்லாமல் ரிக்ஷா இழுத்துக்கொண்டுபோன ஒருவன் மட்டும் மனிதன் என்று ஒரு விநாடி தோன்றினான். பிறகு, அவன் மாட்டைப்போல வண்டி இழுத்ததால், மனிதனாக இருக்க முடியாது, இரண்டு கால்களில் நடக்கத் தெரிந்த மிருகமாக இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டே ஆபீஸ் போய்ச் சேர்ந்தான். ஆபீஸுக்குப் போகும்போது நேரமாகிவிட்டது. ``ஏன்?'' என்று கேட்டார்கள். ``வரும் வழியில் என் நண்பன் ராமநாதன் பஸ்ஸில் மாட்டி அரைபட்டுச் செத்துவிட்டான். அதைப் பார்த்துவிட்டு வருகிறேன். நாயின் குடல் வெளியில் கிடந்ததுபோல அவன் குடல் பிதுங்கிக் கிடந்தது. நாய் சிரித்ததுபோல அவன் இளித்துக்கொண்டு கிடந்தான். எழும்பூர் ரயிலில் மாட்டிக்கொண்டவனின் காலைப்போல் அவன் கழுத்து நசுங்கி இருந்தது'' என்று சொன்னான். ``ஐயோ பாவம். லேட்டானா பரவாயில்லை. சீட்டுக்குப் போ'' என்றார்கள் அனைவரும். ``நீங்கள் எல்லோரும் பேய்கள்'' என்று சைக்கிளில் ஏறிக்கொண்டு திரும்பி விட்டான். ``ஆபீஸுக்கு வரப்போறதில்லை என்று சொல்லத்தான் வந்திருக்கான் போலிருக்கிறது. நண்பன் இறந்ததில் கலங்கிப்போய் இருக்கிறான்'' என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள். இவன் வீட்டுக்குப் போனதும் ஆபீஸில் இருந்து திரும்பிவிட்டதைக் கண்டு மனைவி ``ஏன் ஆபீஸுக்குப் போகலியா?'' என்றாள். ``சென்னையில் அத்தனை பேரும் பேய்கள்'' என்று சொல்லிக் கொண்டே போய் சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டான். ``ஏன்? உங்களுக்கு உடம்பென்ன செய்யறது? உயிருக்கு உயிரா பழகினேள்தான். அதுக்காக செத்துட்டா நாமுமா கூட செத்துட முடியும்? மனசெ தேத்திக்கோங்கோ'' என்று கனிவோடு அவன் அருகில் வந்தாள். ``போடி பேயே'' என்றான். அவள் விலகிக்கொண்டாள். பயம் வந்துவிட்டது. ``ஒங்களுக்குப் பைத்தியம் புடுச்சிடுத்தா என்ன?'' என்றாள். ``புடவையைத் தூக்கு'' என்றான் இவன். ``சீச்சி... அசிங்கம் என்ன பேசறேள்'' என்று சிரித்து கொண்டே அவள் உள்ளே போய்விட்டாள் ``நான் தான் பூமியில் பாவும் மனிதன் என்றான் இவன் அவள் உள்ளே இருந்தபடியே ``படுத்துண்டு தூங்குங்கோ. மனசு தெளியும். நாளைக்கு ஆபீஸுக்குப் போயி ஒரு மாசம் லீவு போட்டுட்டு வாங்கோ. ஒரு மாசம் ஊருக்குப் போய் இருக்கலாம். எல்லாம் மறந்துடும்'' என்றாள். இவன் நாற்காலியிலேயே படுத்துக் கொண்டிருந்தான். குழந்தை படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தது. காலைப் புடவையால் போர்த்தியிருந்தாள் அவள். போய்ப் புடவையைத் தூக்கிப் பார்த்தான். கால்கள் இருந்தன. தூங்கும்போது கால்கள் இருந்தால் போதாது. நடக்கும்போதுதானே பாதம் பூமியில் பாவுகிறதா இல்லையா என்று பார்க்க வேண்டும் என்று மீண்டும் போய் நாற்காலியில் படுத்துக்கொண்டான். பிறகு ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாய்ப் போயிற்று. பயமாக இருந்தது. உலகத்தில் தான் மட்டும் தனியாக இருப்பது போலத் தோன்றிற்று. எங்கும் பேய்க் கூட்டம் உலவிக் கொண்டிருப்பதாகத் தோன்றிற்று: பேய்களுக்கு இடையில் தான் மட்டும் மனிதனாக இருப்பதாகத் தோன்றிற்று. பேய்கள் மனித உருக்கொண்டு தரையில் பாதம் படாமல் தோன்றினால் மனிதன் பேயாகப் பதுங்குவதே மேல் என நினைத்தான். சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியில் புறப்பட்டான். பைகிராஃப்ட்ஸ் ரோட்டில் பஸ்கள் வந்து போய்க்கொண்டிருந்தன. தூரத்தில் 13-ஆம் நம்பர் பஸ் வெகு வேகமாக ஒரு பேயால் ஓட்டிக்கொண்டு வரப்பட்டது. அருகில் வந்ததும் அதன்முன் பாய்ந்தான். அவன் மேல் ஏறி இறங்கி சற்றுத் தூரத்தில் போய் நின்றது பஸ்.

நன்றி: தீராநதி

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்