Showing posts with label அசோகமித்திரன். Show all posts
Showing posts with label அசோகமித்திரன். Show all posts

Apr 2, 2017

விடிவதற்கு முன் - அசோகமித்திரன்

பங்கஜத்துக்கு முத்துவை எழுப்புவதற்கு வேதனையாகத் தான் இருந்தது. ஒன்றுக்குள் ஒன்றாக நான்கு பிளாஸ்டிக்வாளிகளை எடுத்து வந்து வாசல் படியில் வைத்தாள். இனியும் தாமதிக்க முடியாது என்று தீர்மானித்து, "முத்து, முத்து' என்று அழைத்தாள்.

முத்து படுக்கையில் அசைந்து கொடுத்தான். "முத்து, எழுந் திரு. என் கண்ணோல்லியோ" என்றாள். அவ்வளவு இருட்டிலும் அவன் ஒருமுறை கண் விழித்துப் பார்த்தது அவளுக்குத் தெரிந்தது.

"இதுக்குள்ளே தண்ணீ வந்திருக்காதும்மா” என்று முத்து சொன்னான்.

"வந்துடும்டா, கண்ணு. தெருக்காரா எல்லாரும் போயிட்டா.
நன்றி விகடன்
இப்போவே போனத்தான் இரண்டு மணிக்காவது தண்ணீ பிடிச்சுண்டு வந்து கொஞ்சம் கண்ணசரலாம்."

"நீ போய் பக்கெட்டை வைச்சுட்டு வாம்மா. நான் இதோ வந்துடறேன்."

பங்கஜம் வாசல் கதவைத் தாளிடாமல் வெறுமனே சாத்தி விட்டுத் தெருவுக்கு வந்தாள். ஒரு தெரு விளக்கும் எரியாது போனாலும் வீட்டை விட வெட்ட வெளியில் கண் நன்றாகத் தெரிந்தது. விறுவிறுப்பாகப் பல உருவங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன.

பங்கஜம் சாலையைக் கடந்து எதிர் சாரியில் மூடிக்கிடந்த பல கடைகள் நடுவே மறைந்து கிடந்த ஒரு குறுகலான சந்துக்குச் சென்றாள். சந்து இடைவெளியில் காலி வாளியே இருமுறை பக்கத்துச் சுவரில் இடித்தது. சந்து ஒரு வீட்டின் முற்றத்தில் முடிந்தது. அந்த இருட்டிலும் அங்கு டஜன் கணக்கில் தவலைகளும், வாளிகளும் பரத்தி வைத்தது தெரிந்தது. சுவரோரமாகப் பதித்து வைத்திருந்த தண்ணீர் பம்பு அருகே நான்கைந்து ஆண்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் பங்கஜத்தைப் பார்த்து, "இனிமே இங்கே வராதீங்கன்னு போன தடவையே சொன்னேனே?" என்றார்.

"இன்னிக்கு மட்டும் தயவு பண்ணுங்க. நாளைக்கு வேறே இடத்துக்குப் போறேன்” என்று பங்கஜம் சொன்னாள்.

"இங்கே வீட்டிலே இருக்கிறவங்களுக்கே தண்ணீ பத்தலே. சும்மா சும்மா வந்து கூட்டம் கூடினா!"

பங்கஜம் பதில் சொல்லாமல் நின்றாள். "பக்கெட்டை வைச்சுட்டு வெளியே நில்லுங்க தண்ணீ வந்தா உள்ளே வந்துக்கலாம்."

பங்கஜம் வாளிகளை ஒரு மூலையில் வைத்துவிட்டு மீண்டும் சாலைக்கு வந்தாள். நட்ட நடுநிசியில் அப்படிச் சாலையோரமாக நிற்பது அவளுக்கு அசாதாரணமாகத் தோன்றாமல் போய் மாதக் கணக்கில் ஆயிற்று.

கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் கிடப்பது சாதாரணமாக இருந்தது. குழாய்த் தண்ணீர் ஒருநாள் விட்டு ஒருநாள் வருவதாகப் பேச்சு. ஆனால் வீட்டுக் குழாயில் வராது. எங்கே வருகிறதென்று தேடிப் பிடித்து அது வரும் இரு மணி நேரத்தில் பரபரக்க ஏராளமானவரோடு தேவையற்ற துவேஷம் வளர்த்து இரு பாத்திரங்களில் வண்டலும் வடிசலுமாகத் தண்ணீர் பிடித்து எடுத்து வந்தால் இரு நாட்களுக்கு அதைச் சமையலுக்கும் வைத்துக் கொண்டு குடி தண்ணீராகவும் கொட்டிக்கொள்ள வேண்டும். இன்றிரவு இங்கு ஒரு வழியாகச் சமாளித்தால் நாளை மறுநாள் இப்படி நடுத் தெருவில் அலைய மனதைத் திடப் படுத்திக் கொண்டால் போதும்.

நடைபாதை ஒரக்கல்லிலும் இன்னும் பலர் காத்துக் கிடந்தார்கள். அங்கு சாதாரணமாகக் கிடைக்கும் அசுத்தத்தில் பகல் வெளிச்சத்தில் நிற்கக் கூட அருவருப்பாயிருக்கும்.

தொளதொளவென்று ஒரு சட்டையை ஒழுங்காகப் பொத்தான் கூடப் போடாமல் முத்து வந்து சேர்ந்தான். பங்கஜம் முத்துவைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். "குழந்தை தூங்கிண்டு இருக்காளா?” என்று கேட்டாள்.

"நான் பார்க்கலேம்மா. ஆனா அவ அழலே" என்று முத்து சொன்னான்.
"கதவைச் சாத்திண்டுதானே வந்திருக்கே?"

"ஆமாம்."

"நீ இங்கேயே நில்லு, நான் தவலையை எடுத்துண்டு ஐஸ் டெப்போலே ஒரு தடவை தண்ணீபிடிச்சுண்டு வந்துடறேன்."

"இங்கே தண்ணீ வந்துடுத்தா?” "இன்னும் வரலே. வீட்டுக்காரா இப்போதான் பம்பை மாட்டிண்டு இருக்கா"

பங்கஜம் சாலையைக் கடக்கவிருந்தவள் சட்டென்று நின்றாள். அசாத்திய வேகத்தில் ஒரு லாரி அவளைக் கடந்து சென்று மறைந்தது. அதை அடுத்து இன்னும் ஒரு காரும் மோட்டார் சைக்கிளும் பறந்து சென்றன.

பங்கஜம் முத்துவைக் கவலையோடு திரும்பிப் பார்த்தாள். பிறகு அவள் வீட்டுக்கு ஒட்டமும் நடையுமாகப் போனாள். தெருவில் அப்போதுதான் யாரோ கைவண்டியில் எங்கிருந்தோ தண்ணீர் பிடித்துக் கொண்டு போயிருக்கிறார்கள். சிந்திய தண்ணீர் தெரு நடுவில் பட்டையாகக் கோடிட்டிருந்தது.

போட்ட படுக்கைக்குச் சம்பந்தமே இல்லாமல் சம்பா தரையில் தூங்கிக் கொண்டிருந்தாள். பங்கஜம் அவளைத் தூக்கவில்லை. படுக்கையில் கிடக்கும் போது குழந்தை விழித்துக் கொண்டால் என்ன செய்வது? பெரியவர்களைப் போலக் குழந்தையும் ஒருநாள் விட்டு ஒருநாள் தூங்கக் கற்றுக் கொள்ள வில்லை.

பங்கஜம் தண்ணீர்த் தவலையுடன் ஒரு வெண்கலப் பானையையும் தூக்கிக் கொண்டு மீண்டும் தெருவுக்கு வந்தாள். எதை நம்பி இருட்டில் குழந்தையைத் தனியே விட்டுவிட்டு வீட்டையும் தாளிடாமல் போகிறோம்? கணவன் ஊரிலிருந் தாலும் இல்லாது போனாலும் இதுவரை தண்ணீருக்காக அவன் இன்னொருவர் வீட்டுக் கொல்லையில் நிற்கப் போகவில்லை. ஆனால் வீட்டுக்கும் குழந்தைக்குமாவது காவலாக இருக்கலாம்.

ஐஸ் டெப்போ காவல்காரன், "ஏய், எங்கே போறே?" என் றான். பங்கஜம் இடுப்பிலிருந்து கால் ரூபாய் சில்லரை எடுத்தாள். அவன் அதைக் கவனியாது போல, "போம்மா. போ போ போ. இன்னிக்கு ஒருத்தரையும் உள்ளே விட முடியாது. போ போ போ!' என்றான். அங்கு கூடியிருந்த கூட்டம் அவனிடம் கடுமையை உண்டு பண்ணியிருக்க வேண்டும். அதைப் பொருட் படுத்தாமல் எல்லா வயதுக்காரர்களும் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். பங்கஜமும் அவள் பங்குக்கு, "இன்னைக்கி ஒருநாள் மட்டுங்க” என்றாள். ஒருநாள் மட்டும், ஒரு நாள் மட்டும் என்றே எவ்வளவு நாட்களாகி விட்டன? இன்னும் எவ்வளவு நாட்கள் இப்படி?

முத்து அவளைத் தேடி வந்து விட்டான். "இன்னும் மூணு பேர் பிடிச்சப்புறம் நம்பதாம்மா" என்றான்.

"நாலு பக்கெட்டும் சரியா இருக்கா?”

"இருக்கு"

"நீ இங்கே நில்லு. நான் போய் தண்ணீ அடிச்சு வைச்சுட்டு உன்னைக் கூப்பிடறேன்."

"இந்த வெங்கலப் பானையை ஏம்மா எடுத்துண்டு வந்தே? இதிலே தண்ணீயும் ரொம்பக் கொள்ளலே, தூக்கறதும் கஷ்டமாயிருக்கே?"

"என்ன பண்றதுடா? பெரிய அடுக்கிலே நேத்திக்குத் துணி அலசின தண்ணீயைச் சேத்து வைச்சிருக்கேன்.”

முத்துவிடம் தவலையையும் வெண்கலப் பானையையும் ஒப்படைத்து விட்டு பங்கஜம் வாளிகளை வைத்திருந்த வீட்டுக்கு விரைந்தாள். அங்கு இப்போது அசாத்தியக் கும்பல் சேர்ந்திருந்தது. "இப்போ வந்துட்டு எங்கே உள்ளே போறே? நாங்கள்ளாம் உனக்கு மனுஷாள்களாத் தெரியலியா?" என்று ஒரு கிழவி பங்கஜத்தைத் தடுத்தாள்.

"பன்னெண்டு மணிக்கே நான் வந்து பாத்திரம் வைச் சிருக்கேன்."

கிழவி சந்தேகத்துடன் பங்கஜத்தைப் பார்த்தாள். பங்கஜம் அந்தக் கும்பலில் அந்தக் குறுகலான சந்துக்குள் முன்னேறிச் சென்றாள்.

அந்தச் சாலையில் தண்ணீர் வந்த ஐந்தாறு வீடுகளில் அந்த ஒரு வீட்டு பம்பில்தான் சிறிது அதிகமாக வரும். ஆதலால் தண்ணீர் பிடிக்க வருபர்களும் அங்குதான் அதிகம். பம்பு அருகே நின்றவர்களுடன் பங்கஜமும் முண்டியடித்துக் கொண்டு தன் முறைக்குக் காத்திருந்தாள். தண்ணீர் இன்னும் சிறிது நேரமே வரும் என்ற உணர்வில் ஒருவர் தவறாமல் பம்புப் பிடியை அரக்கத்தனமாக இயக்கிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு அடியும் சம்மட்டியடி போல ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது. பங்கஜத்துக்கு முந்தைய இடத்தில் பாத்திரம் வைத்திருந்த அம்மாள் தலைப்பை இழுத்துச் சொருகிக் கொண்டு தயாராக இருந்தாள். அவள் முறை வந்ததும் பங்கஜமே அந்த அம்மாளுடைய தவலையைப் பம்படியில் நகர்த்தி வைத்தாள். அதைத் தவலை என்பதைவிட வேறு பெயர் ஏதாவதுதான் சொல்ல வேண்டும். அது நிரம்பினால் எப்படி நகர்த்துவது என்று ஒரு கணம் பங்கஜத்துக்குப் பயம் எழுந்தது. பாவம், அந்த அம்மாள் வீட்டில் எவ்வளவு நபர்களோ? ஆனால் ஒருவர்கூட அவளுக்குத் துணை வரவில்லை.

தவலை பாதி நிரம்பியபோது அந்த அம்மாள் திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணம் இருந்தாள். தவலைக்குப் பிறகு இன்னும் நான்கு பெரிய அடுக்குகள். அதன் பிறகு பங்கஜத்தின் முறை.

இரண்டாம் அடுக்கு நிரம்புவதற்குள் அந்த அம்மாளுக்குப் பெரிதாக மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கத் தொடங்கியது. பம்பு அடிப்பதிலும் கை தடுமாறியது, "நான் அடிக்கறேன். நீங்க பாத்தி ரத்தை நகர்த்துங்க" என்று சொல்லிப் பங்கஜம் பம்ப் பிடியை வாங்கிக் கொண்டாள். பம்பைச் சுவரில் பதித்து வைத்திருந்ததால் ஒரே பக்கமாக ஒரே கையில்தான் அடிக்க முடியும். நிதானமாக அடித்தாலே ஒரு பாத்திரத்திற்குள் கை சளைத்துவிடும்.

பங்கஜம் அந்த அம்மாளின் பாத்திரங்கள் அனைத்திற்கும் தண்ணீர் அடித்துத் தந்துவிட்டுத் தன் வாளியை நகர்த்தி வைத்தாள். அங்கு நின்றிருந்த ஒருவர், "ஒருத்தரே அண்டா அண்டாவாத் தண்ணீர் எடுத்துப்போனா மத்தவங்க என்ன பண்ணுவாங்க?" என்று சொன்னார். மூச்சிறைக்கப் பங்கஜம், "இதுதான் என்னுது முதல் பாத்திரம்” என்றாள்.

அந்த நபர், "யோவ், சந்தானம்! இங்கே என்ன கேள்வி கேப்பாரு யாருமில்லே? இந்தப் பொம்பளைங்க இப்படி ஒரேயடியா பம்பைப் பிடிச்சு வளைச்சிட்டிருக்காங்களே! விடும்மா, நாங்களும் தண்ணீ பிடிக்கத்தான் மணிக்கணக்கா நின்னுட்டிருக்கோம்” என்றார்.

தண்ணீர் நிரம்பிய அடுக்குகளை எடுத்துப் போய்க் கொண்டிருந்த அம்மாளிடம் பங்கஜம், "நீங்கதான் அவர்கிட்டே சொல்லுங்கம்மா" என்றாள்.
அந்த அம்மாள் அந்த நபரிடம், "அவுங்க இன்னும் பிடிக்க வேல்லப்பா" என்றாள்.

"ஆமாம், இதுல கூட்டு"

பங்கஜத்தின் தோளே கழண்டுவிடும் போல இருந்தது. இன்னும் மூன்று வாளிகள் அடித்தாக வேண்டும். கொண்டு வந்த வற்றில் முழுக்கத் தண்ணீர் எடுத்துக்கொண்டு போனால்கூட இரண்டாம் நாள் மாலையில் எல்லாம் காலியாகிக் கிடக்கும்.

அரிசியைச் சரியாகக் களைய முடியாது. சட்டென்று யாராவது ஊரிலிருந்து வந்து விட்டால் முகம் கழுவிக் கொள்ள ஒரு செம்புத் தண்ணீர் தரமுடியாது. மறுநாள் சுத்தமான வேஷ்டி புடவை வேண்டும் என்றால் துணி நனைத்து உலர்த்த முடியாது.

பங்கஜம் அவளுக்கு ஞாபகமிருந்த தோத்திரங்களை மனதுக்குள் சொல்லிக் கொண்டு பம்பை அடித்தவண்ணம் இருந்தாள். ஒருமுறை கூட ஒரு தோத்திரத்தைக் கூட முழுக்கச் சொல்ல முடியவில்லை. அங்கு விரலிடுக்கு இடமில்லாமல் நிறைந்திருந்த மக்களும் பாத்திரங்களும் அவளுடைய கண்ணில் மிக இலேசான நிழலாகத் தென்பட்டதுபோலத் தோத்திரங்களும் ஒரே குழப்பமான குவியலாக வந்து போய்க் கொண்டிருந்தன. லலிதா சகஸ்ரநாமத்தில் செளந்தர்யலகரி நடுவே கிருஷ்ணாஷ்டகம், பித்துக்குளி முருகதாஸ் பஜன் பாட்டு. அம்மா! அம்மா! அம்மா!

பங்கஜத்துக்கு அம்மாவென்று கத்தியழைக்கக்கூட முடியாது போலத் தோன்றிற்று. அவளுடைய கை ஏதோ தனிப்பட்டுப் போனது போல ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. மார்பு எவ்வளவு கனத்ததோ அந்த அளவு மனம் காலியாக இருந்தது. அவள் அவளே இல்லை. அவள் வேறு யாரோ. வேறு யாரோ என்று சொல்வது கூடத் தவறு. வேறு ஏதோ மூன்றாவது வாளி அடிக்கும் போது முத்து வந்துவிட்டான். ஐஸ் டெப்போவில் என்ன ஆயிற்று என்று கேட்கக்கூட முடியாமல் பம்புப் பிடியை பங்கஜம் முத்துவிடம் கொடுத்தாள். அவன் கையால் அடிக்க முடியாமல் இரு கைகளாலும் பிடியைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் தன் முழு உடலையும் உயர்த்தி அடித்தான்.

பங்கஜம் ஒவ்வொரு வாளியாகத் தூக்கிச் சாலை நடைபாதையில் கொண்டு போய் வைத்தாள். அங்கே இன்னும் எவ்வளவோ பேர் தண்ணீர் பிடித்ததும் பிடிக்காததுமாகப் பாத்திரங்களையும் வாளிகளையும் வைத்திருந்தார்கள். ஆண்கள் சைக்கிள்களில் எப்படியெல்லாமோ குடங்களையும், தவலைகளையும் கட்டித் தொங்க விட்டுக் கொண்டு அலைந்து கொண்டிருந்தார்கள். ஊரே வெறி பிடித்தது போலக் குழாய்த் தண்ணீருக்கு அலை பாய்ந்து கொண்டிருந்தது.

பங்கஜத்துக்கு அடிவயிற்றில் சுளிரென்று ஒருமுறை வலித்தது. போன தடவையும் இப்படித்தான் வலி வந்து தெருவிலேயே சுருண்டு விழுந்திருந்தாள். சம்பா பிறந்தவுடனே அவளது கணவன் ஆஸ்பத்திரியில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான். ஆபரேஷன் ஆனபோது பெரிய தொந்தரவு இருக்கவில்லை.
                                                                                                                    ஆனால் இப்போது இரண்டு வருடங்கள் கழித்து வலி வரத் தொடங்கியிருக்கிறது. பெரிதாகிப் போய் படுத்த படுக்கையாகத் தள்ளி விடக்கூடாது.

கிடைசி வாளி அடித்துவிட்டுத் தூக்கமாட்டாமல் அதைச் சிறிது சிறிதாக நகர்த்திக் கொண்டு முத்துவும் நடைபாதைக்கு வந்து சேர்ந்தான். அவனுக்கும் வயிற்றை வலிக்கும். ஹெர்னியா என்று சொல்லிப் போன வருஷமே ஆபரேஷன் செய்ய வேண்டு மென்று டாக்டர் சொன்னார். சொன்னவர் பயமுறுத்திச் சொல்லியிருந்தால் ஒரு வேளை உடனே ஏதாவது செய்திருக்க லாம். பங்கஜம் முத்துவை அணைத்துக் கொண்டாள். நீ போடா வீட்டுக்கு. நான் ஒவ்வொண்ணாய்க் கொண்டு வந்துடறேன்" எனறாள.

'ஐஸ் டெப்போலே சாவித்திரிக்கிட்டே சொல்லிட்டு வந்திருக்கேன். அதையும் அடிச்சுட்டுப் போறேம்மா" என்று முத்து சொன்னான்.

"வேண்டாம்டா, கண்ணா. இது போறும். எப்படியாவது பார்க்கலாம்."

"அப்போ அங்கே போய்க் காலி பாத்திரத்தை எடுத்துண்டு போகட்டுமா?"

"இல்லை, நீ வீட்டுக்குப் போ. நான் எடுத்துண்டு வரேன்." பங்கஜம் ஒவ்வொரு வாளியாகச் சாலையைக் கடந்து மறு புறமிருந்த நடைபாதையில் கொண்டு போய் வைத்தாள். அங்கே ஒரு கன்றுக்குட்டி அவளருகே வந்தது. "போ, போ' என்று விரட்டினாள். அது நகராமல் அங்கேயே நின்றது. அடுத்த வாளி எடுத்து வர அவள் நகர்ந்தவுடன் அது நிச்சயம் தண்ணீரில் வாயை வைத்து விடும்.

பங்கஜம் மறுபடியும் அந்தக் கன்றுக்குட்டியை விரட்ட முயன்றாள். எந்தத் துவேஷமும் பாராட்டாமல் அது சொறிந்து கொடுக்க வாகாகத் தலையை உயர்த்தியது.

"சரி, குடி” என்று பங்கஜம் சொன்னாள். சாலை மறுபுறத்தில் வைத்திருந்த இதர பக்கெட்டுகளை எடுத்து வர விரைந்தாள். நாளை மறு நாள் இந்த அளவு தண்ணீராவது கிடைக்குமா என்று தெரியாது. ஆனால் இன்றையப் போது இதோடு முடிந்துவிட்டது. விடிய இன்னும் வெகு நேரம் இருந்துங்கூட.

1984

May 12, 2013

அசோகமித்திரன் - நேர்காணல்


சந்திப்பு: கடற்கரய் 


தமிழ் இலக்கியவெளியில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஆளுமை அசோகமித்திரன். சாகித்ய அகாதெமி விருது (1996) டால்மியா மத நல்லிணக்க விருது (1995) தேவன் விருது (1997) என்று பல விருதுகள் பெற்றவர். இதில் டால்மியா விருதை அன்னை தெரசா வழங்கி கெளரவித்தார். எழுபத்தைந்து வயதைத் தாண்டியும் பங்களிப்பு செய்பவர். தண்டீஸ்வர் நகரில் இருக்கும் அவரது இல்லத்தில் தீராநதிக்காக சந்தித்தோம். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட அவரின் பேச்சில் மையப் புள்ளியாக Non violence கருத்து வலியுறுத்தப்பட்டுக்கொண்டே இருந்தது. இதை இந்த நேர்காணலும் உணர்த்தவே செய்யும்.e6845d5f-0c25-4911-89d5-8a50f3ab7827-ashokamithran-02

தீராநதி :1972_ல் உங்களின் ‘வாழ்விலே ஒரு முறை’ வெளியானது. இதையொட்டி ‘காலமும் ஐந்து குழந்தைகளும்...’ 1988_ல் மீண்டும் அது மறுபதிப்பு கண்டது. அது பரவலாக விற்பனைக்குப் போகும் முன்னதாக எலிக்கும், கறையானுக்கும் உணவாகிப் போனதாக ஒருமுறை வருந்தி எழுதியிருந்தீர்கள். ஆனால், இன்று தமிழ் பதிப்பகங்கள் சர்வதேச தரத்திற்கு வளர்ந்திருக்கின்றன. இம்மாற்றத்தை எப்படி உணருகிறீர்கள்?

அசோகமித்திரன்: முதல் தொகுதி ‘வாழ்விலே ஒரு முறை’ இருக்கே அது ரொம்பக் கொறச்சலா 500 பிரதிகள் தான் போட்டோம். முன் கூட்டியே முன்பதிவு செஞ்சியிருந்தவங்களுக்கு அதைக் கொடுத்துட்டோம். பெரிய பதிப்புன்னு சொல்ல முடியாது இதை. ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ நூல் அதுதான் முறையான பதிப்பாளர் கலைஞன் வெளியிட்டார். கலைஞன் மீது அதுக்காக இன்றைக்கும் நான் ரொம்ப நன்றியுடன் இருக்கேன். 1974_ல் வெளியிட்டார். அப்ப என்ன ஆயிடுத்துன்னா பதிப்பகம் சின்ன எடமா இருந்ததால எலியும் கறையானும் அரிச்சிடுது. அப்ப அவர் மாடிமேல இருந்தார். மழை வேற பெய்ஞ்சு தண்ணில நெனைஞ்சு பாதிக்கு மேல பாழாப்போயிடுத்து. அவரு அன்போடயும் ஆர்வத்தோடயும் வெளியிட்டார். நான் ரொம்ப விற்கக்கூடிய எழுத்தாளன் இல்லன்னு அவருக்குத் தெரியும். தெரிஞ்சும் தைரியமா வெளியிட்டார் .அதுக்காகத்தான் என்னோட வருத்தமெல்லாம். நம்மலால ஒருத்தர் நஷ்டமாயிட்டாரேன்னு வருத்தம். இன்னைக்கு எவ்வளவோ மாறிடுத்து. சுயமா வெளியிட்டுக்குறாங்க. இப்படி சுயமா வெளியிட்டுக்குறதுல சங்கடங்கள் என்னான்னா, அவங்க வந்து இதை விமர்சனப் பூர்வமா செய்ய முடியாது. பப்ளீஷருக்கு என்ன பெரிய விமர்சனம் தெரியும்னு நாம கேட்கலாம். பப்ளீஷரோட தேர்வு இருக்கே அந்தத் தேர்வே ஒரு விமர்சனம். இந்தப் புத்தகம் போடலாம். இந்தப் புத்தகம் போடமுடியாதுன்னு கணிக்குறதே விமர்சனம்தான். ஆகவே, ரொம்ப பேரு என்னது விற்காதுன்னு சொல்லி அனுப்பிச்சிட்டாங்க. அதை ஒண்ணும் தவறா நெனைக்கல. ஏன்னா அது அவங்களோட விமர்சனம். இவருக்கும் (கலைஞன்) பெருசா விற்கும்னு நம்பிக்கை கிடையாது. இருந்தும் மிக்க அன்புடன் போட்டார். பதிப்பகங்கள் வளர்ச்சியில எனக்கு என்னைக்குமே ஒரு மகிழ்ச்சி உண்டு. ஆனா படிக்கப்படணும். நெறைய புத்தகங்கள்லாம் வருது. பாத்தீங்கன்னா தடிதடி புத்தகங்கள்லாம் வருது. இதெல்லாம் படிக்கப் படறதான்னு தெரியுல. ஜெயமோகன், ராமகிருஷ்ணன் எழுதுறதெல்லாம் பார்த்தா எனக்குப் பயமா இருக்கும். 500 பக்கம் 600 பக்கம் எழுதுறாங்க எப்படி? களைச்சுப் போயிடும். அதாவது இன்னைக்கு ஒரு விதத்துல படிக்குறத தவிர வேற அறிவு பூர்வமா ஒரு பயிற்சி தரக்கூடிய ஈடுபாடுகள் கிடையாது.இப்ப எதை நீங்க தவிர்த்தாலும் தவிர்த்துடலாம். பத்திரிகைகளைத் தவிர்க்க முடியாது. ரொம்பக் கஷ்டம் அது. பத்திரிகைகள் படிச்சா பெரிய அளவுக்கு விஷயங்கள் இல்லாத மாதிரி தெரியும். அதேபோல, நீங்க பத்திரிகை படிக்கலைன்னா வாழ்க்கையோட தொடர்பு இல்லாம போயிடும். அது எந்த மாதிரி பத்திரிகையினாலும் தேவல. கட்சி சார்ந்ததா கூட படிக்க வேண்டியது இருக்கு. அந்தச் சமயத்துல இவ்வளவு பெரிய பெரிய புத்தகங்கள் வருது. இது படிக்கப்படணும். படிச்சாங்கன்னா ரொம்ப சந்தோஷம்தான். இதுக்கெல்லாம் ஒரு வாசகத்தளம் இருக்குதான்னு எனக்குத் தெரியுல. விற்கறது கூட வித்துடுறாங்க. நெறைய விற்பனை ஆயிடறதா சொல்றாங்க. என்னோட அனுபவத்துலேயே பார்த்தேன். நெறைய பேரு பேர தெரிஞ்சு வெச்சி இருக்காங்க. முகத்த தெரிஞ்சு வெச்சிருக்காங்க. உங்களை டி.வி.ல பார்த்தேன். பத்திரிகையிலே பார்த்தேங்குறாங்க. ஆனா படிக்கறத பத்தி ஒரு கதைய பத்தி, ஒரு வார்த்தை வரவே வராது. அவரோட ஒரு மணி நேரம் பேசினாக்கூட நம்ம படைப்பைப் பத்தி அபிப்ராயமே வராது. அப்படின்னா என்ன அர்த்தம்? அவர் படிக்கலன்னு அர்த்தம். பத்திரிகையில வரக் கூடிய அளவுக்குப் பிரபலமானவர்_ இதுதான். ஆகவே ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கக் கூடிய விஷயம் என்னான்னா, அவனோடதை படிச்சிட்டு நன்னா இருக்குன்னு சொன்னா போதும். அப்புறம் இந்த பப்ளீஷிங் இருக்கே, நெறைய வெளியிடுறது, விற்பனை ஆறதுயெல்லாம் நல்ல விஷயம் தான். ஆனா இந்த ஒரு கவலையும் இருக்கு. படிக்கப்படணுமே.

தீராநதி: பல எழுத்தாளர்களின் Style படைப்பின் இடை இடையே குறுக்கிடுவதாகவே இருக்கும். அந்தத் தன்மை உங்களிடம் அறவே இல்லாத மாதிரி தோணுகிறது. பொதுவாக Style _ல் உங்களுக்கு உடன்பாடு இல்லையா?

அசோகமித்திரன்: பொதுவா Style _ல பத்தி சொல்வாங்க. Style தான் ஒரு மனிதன்னு. Style of the Men. Style in the writer ன்னு. Style இல்லாம எழுதுறதே ஒரு Style தான். Style இல்லாம இருக்குறதுக்கும் ஒரு பயிற்சி வேணும். இதெல்லாம் அவ்வளவு எளிதில் வந்த ஒரு விஷயம் இல்ல. ஏதேதோ பயிற்சி செய்துதான் வந்தது. படிச்சு, எழுதி எழுதி வந்தது. ஒரு இடைவெளி இருக்கக் கூடாது. அதான் ஒரு முயற்சி. எழுத்துல வர்ற அனுபவத்துல இடைவெளி அதிகம் இருக்க கூடாதுன்னு முயற்சி செய்தேன். இந்த முயற்சில எந்த அளவுக்கு வெற்றி அடைஞ்சி இருக்கேன்னு அதெல்லாம் சொல்ல முடியாது. அம்பது வருஷம் அதுக்கு மேலேயே ஆயிடுத்து நான் எழுத ஆரம்பிச்சு. ஞாபக மறதி வேற வந்துடுத்து. இன்னும் இதை என்னால உறுதியா சொல்ல முடியல, இன்னும் அதுல நான் வெற்றி அடைஞ்சுட்டேன்னு. என்னோட இயல்பா இதை எடுத்துக்கலாம். இப்ப உங்ககிட்ட என்ன மாதிரி உறவு வெச்சிக்கிறனோ அதை மாதிரி தான் என் எழுத்துலயும் வெச்சியிருக்கேன். எழுத்துல வந்து வேற மாதிரியா வெச்சிக்க முயற்சி செய்யல. Style இருக்கே அதை நான் நிராகரிக்கல. நான் அதைச் செய்யல. Style இல்லாம இயங்குறதுல எனக்கு ஒரு நிறைவு இருக்கு, அப்படி செஞ்சும் கதை புரியலங்குறாங்க. பார்த்தீங்கன்னா ‘அமுதசுரபி’ யில இப்ப ஒரு கதை வந்தது. அதுல கிழவர் ஒருத்தர் இலந்த பழம் விற்பார். இலந்தப் பழம் விற்குறவருன்னா நாம் வந்து அவரை பரம ஏழைன்னு நெனைப்போம். அதெல்லாம் இல்ல. பெரிய ஒரு பங்களாவுக்கே அவர்தான் Êஓனர்னு கதை போகும். நல்ல கதை. ஆனா யாருமே அதப்பத்தி சொல்லல. அந்தப் பத்திரிகை ஆசிரியரே கூட சொல்லல.

தீராநதி: ஆரம்பகாலங்களில் ஜெமினி ஸ்டுடியோவில் PRO _வாக பணி செய்திருக்கிறீர்கள். பழைய நாடகங்களில் கூட பங்களிப்பு செய்திருப்பதாக நினைக்கிறேன். இன்றைக்கு நடத்தப்படும் நவீன நாடகங்கள் குறித்தும், தமிழ் சினிமா குறித்தும் உங்களின் மதிப்பீடு என்ன?

அசோகமித்திரன்: இந்த ஸ்டுடியோ பணி இருக்கே ... நான் என்ன செய்றதுப்பா? எங்க அப்பா வந்து அவருக்கு நண்பரா இருந்தாரு. திடீர்னு ஒரு நாள் அப்பா செத்துப் போயிட்டார். வீட்ல ரொம்ப கஷ்டம். அந்த நாள்லயெல்லாம் பெரிய பாதுகாப்பெல்லாம் கிடையாது. நான்தான் வீட்ல மூத்தவன். வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம். ஏதோ நான் மட்டும் கஷ்டப் பட்டுருக்கேன்னு சொல்ல வர்ல. என்னைவிட கஷ்டப்பட்டவன்லாம் இருக்காங்க. வீட்ல பொண்ணுங்க இருக்கு. ஒரு அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. ஆனாலும் அவ்வளவு சந்தோஷமா இல்ல. வேலைக்கும் போயிட்டேன். அவருக்கு என்ன வேலை எனக்கு தர்றதுன்னே தெரியுல. எனக்கும் தயக்கம், சினிமா கம்பெனியாச்சே. அங்க இருந்தா நமக்கும் சினிமாத்தனமெல்லாம் வந்துடுமே. எழுத்தோடயே சம்பந்தப்பட்ட வேலையா இருந்தா நல்லது. அதான் PRO வேலை. நான் சேர்ந்த போதும் ஒருத்தர் இருந்தார். ரெண்டு மூணு வருஷத்துல அவருக்கு வேற வேலை. செகரட்ரியா போயிட்டார். என்னோட வெறும் டெசிகினேஷன் தான் PRO. அதை வந்து நான் பெரிய பதவியா நெனைக்கல. பெரிய சினிமா அனுபவமெல்லாம் கிடையாது. எல்லோரையும் போல சினிமா பார்த்தேன், அவ்வளவுதான். மாறுபட்ட தன்மையோ பார்வையோ எனக்குக் கிடையாது. ஆனா நாடகங்களோட பரிச்சயம் உண்டானதுக்கு ஞாநிதான் காரணம்.ஞாநி ஒரு பத்திரிகைக்காரர். இந்திரா பார்த்தசாரதியை ஒரு தடவை பேட்டி கண்டு எழுதி இருந்தார். அப்ப ஞாநியை ரொம்ப பிடிச்சுப் போச்சு. இந்த மாதிரி ஒரு ஆள் பத்திரிகையில இருக்குறது எவ்வளவு நல்ல விஷயம்னு தோணுச்சு. அப்புறம் அவரே நாடகம் போடணும்னு இறங்கினார். அவரே நாடகங்களும் எழுதி இருக்கார். அதேபோல நான் மொதல்ல எழுதுறதுக்கு தூண்டுதல இருந்தவர் ஒரு நாடகக்காரர். ராஜாமணின்னு பேரு. நெறைய படிச்சவர். அவரு என்ன ஒத்துண்டதே கிடையாது அவரு இருந்த வரைக்கும். சீக்கிரமே செத்துப் போயிட்டார். அதிக நாள் இல்லை. அப்ப நான் எழுதின கதைகள்லாம் கூட படிச்சிட்டு ‘இல்ல, இல்ல நீ மறுபடியும் இதைத் திரும்ப எழுதணும்னு சொல்லுவார். பப்ளீஷ் ஆன கதையையும் கூட, இதெல்லாம் போதாதும்பார். அந்த அளவுக்கு உரிமை என் மேல எடுத்துக்குவார். தமிழ் சினிமா பத்தி எனக்குத் தெரியாது. ஆனா 14 வருஷம் அந்தத் துறையில இருக்குறவனுக்கு அதுல விஷயம் இருக்கும் இல்லையா? இதெல்லாம் அசாதாரணமான நிகழ்ச்சிகளா நான் நெனைக்கல. இந்த மாதிரி நான் வேற ஒரு துணி உற்பத்தி செய்யறதுல இருந்தா அது சம்மந்தமா எழுதி இருப்பேன். அரசாங்க சம்மந்தப்படுத்தின வேலையா இருந்தா அதை எழுதி இருப்பேன்.ஆனா நான் யாரையும் இழிவுபடுத்தி எழுதணும்னு நெனைச்சு எழுதினது கிடையாது. ரெண்டு லட்சியங்கள் உண்டு. ஒண்ணு: யாருகிட்டயும் விரோதம் பாராட்டக் கூடாது. ரெண்டு: புறம் பேசக்கூடாது. இன்றைக்கு நவீன நாடகங்கள் எல்லாம் வந்து கிமிக்ஸ் அளவோட நின்னுபோவுது. முகத்துல கோரமா வேஷம் போட்டுக்கிட்டு கிமிக்ஸ் பண்றதுன்னு போயிட்டா பண்ணிகிட்டே போகலாம். வாழ்க்கையில இருக்குற விசேஷத்தன்மை சொல்லப்படல. ஷேக்ஸ்பியரை இன்னைக்கும் ஒரு கவிஞராத்தான் எடுத்துக்க முடியுது. அவரு நாடகத்துல எல்லாம் பெருசா செஞ்சார்னு சொல்ல முடியாது. 200, 300 வருஷங்கள் பின்னால வந்தவங்கதான் செஞ்சி இருக்காங்க. ஷெரிடன்னு ஒருத்தர் செஞ்சியிருக்கார். அப்புறம் இப்சன்னு ஒருத்தர் செஞ்சி இருக்கார். ஷேக்ஸ்பியர் நாடகமெல்லாம் பொன்மொழிகளாகத்தான் இருக்கு. நாடகமாப் பெருசா ஒண்ணும் இல்ல. தமிழ்லயும் அதிகம் செய்யுல. ஆங்கிலத்துல செஞ்சு நான் பார்த்து இருக்கேன். ‘மெட்ராஸ் பிளேயர்ஸ்’ நிறைய நாடகங்கள் நடத்தி இருக்காங்க. இங்க யதார்த்தத்தை வந்து மட்டமா நினைக்கிறாங்க. அதை யதார்த்தம்னே தெரியாத மாதிரி ஒரு நிகழ்ச்சியை சுவாரஸ்யமா காண்பிச்சு இருப்பாங்க. ஆனா இதெல்லாம் மேல் நாட்டு நாடகங்கள்ல இருந்து எடுத்து செஞ்சி இருக்காங்க.விஜய் டெண்டுல்கர்ன்னு மராத்தியில ஒரு நாடகக்காரர் அவரு பண்ணுவார். ஆனா அதுல தீவிரத்தன்மை இருக்கும். அவரு ஒரு நல்ல நாடகாசிரியர். தமிழைப் பொறுத்த அளவில் நான் எல்லா நாடகத்தையும் பார்த்துட்டேன்னு சொல்ல மாட்டேன். பார்த்த அளவுக்கு அதிகமாக கவர்ல. எனக்கும் வயசாயிடுத்து இல்லையா? ஒரு மணிநேரம் உட்கார்ந்து நாடகம் பார்க்குற நிலையில இப்ப என் உடம்பு இல்ல.தீராநதி : வ.வே.சு. ஐயர். கு.ப.ரா. புதுமைப்பித்தன் என்று மூத்த படைப்பாளிகள் பற்றியும் நகுலன், ஜெயகாந்தன், கோபிகிருஷ்ணன் என்று பெரும் பட்டியலிடும் அளவிற்கு சகபடைப்பாளி பற்றியும் நிறைய எழுதி இருக்கிறீர்கள். இந்த ஆர்வத்திற்கான அடிநாதம் எது?அசோகமித்திரன் : பெரிய ஆர்வமன்னு ஒண்ணு கிடையாது. சிலதைப் படிக்கிறோம் அது நன்னா இருக்கு. அது எல்லாருக்கும் படிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு இருந்திருக்காது. இந்த மாதிரி நிகழ்ந்திருக்கு சொல்லலாம். ஒரு நூல் இருக்குன்னு சொல் லறதுக்கும் ஒரு எடம் வேணும். அந்த எடம் கிடைச்சது. ஆனா க.நா.சு. ஒரு இயக்கமா இதை நடத்தி வந்தாரு. அடுத்து சி.சு. செல்லப்பா. இலக்கிய விமர்சனம் இலக்கிய படைப்புகள்னு தொடர்ந்து செய்து வந்தாங்க. நான் அந்த மாதிரி இயக்கத் தலைவருன்னுயெல்லாம் என்னை சொல்லிக்க மாட்டேன்.

தீராநதி : அப்படி நீங்கள் எழுதிய விமர்சனங்கள் முன்னுரைகள் கறார்தனம் இல்லாதவை என்று கருத்து நிலவுகிறது. இதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

அசோகமித்திரன்: முன்னுரையில் நாம அப்படி கறாரா இருக்கக்கூடாது. முன்னுரை எழுதச் சொல்லறதோட நோக்கமே இன்னாரை இந்த நாவல படிக்க வெச்சிடனும் என்பதுதான். அவங்களைப் போய் இது மோசமா இருக்குன்னு சொல்லக்கூடாது. கூடுமான வரைக்கும் அதுல இருக்குற நல்ல அம்சங்களை எடுத்துக்காட்டலாம். சாதாரண படைப்புலயும் எங்கேயாவது ஒரு எடத்துல ஒரு பொறி இருக்கும். அந்தப் பொறியை எடுத்துக்காட்டிப் பேசலாம். இதுல வந்து ஏன் இந்த மாதிரி இருக்கீங்க? அது தவறு இல்லையான்னு கேட்கலாம். அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. வாழ்க்கையில நெறைய விஷயங்கள் பெரிய நன்மைக்காக சிறிய விஷயங்களைத் தியாகம் பண்ணவேண்டி இருக்கும். அதனால கறாரா செய்யணும்னு, சொல்லணும்னு நெனைச்சா அது ஒரு தன்மைதான். நான் இல்லன்னு சொல்லல. அதனால இந்த முன்னுரைகள்ல பொதுவா எனக்கு நம்பிக்கை கிடையாது. இப்ப வந்து ஒரு அம்மா எஸ்டிடி போட்டு பேசறாங்க. நீங்க முன்னுரை எழுதித் தரணும்னு. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். ஏன்னா பத்துபக்கம் சேர்ந்தாப்ல படிச்சம்னா பத்தாம் பக்கம் வர்றச்சே முதல் பக்கம் என்ன படிச்சோம்னு மறந்து போயிடுது.

தீராநதி : பாஸிடிவ் அப்ரோச்சான முடிவையே உங்களின் பெரும்பாலான கதைகள் கொண்டிருக்கிறது?

அசோகமித்திரன் : பாசிடிவ் அப்ரோச்ல ஒண்ணும் தவறு கிடையாது. இது என்ன தெரியுமா? பாசிடிவ் அப்ரோச்ன்னாலே ஒரு உண்மையைப் பார்த்து நாம செய்யறோம். சில பேரு எப்ப பார்த்தாலும் நெகடிவ்வாவே பேசுவா. ஜாக்ரதையா போங்க... கீழ விழுந்துடுவேன்னு. இவர் என்ன சொல்றது. போறவனுக்குத் தெரியாதா நாம கீழ விழுந்துடுவோம்னு. அப்படி ஒரு பயமெல்லாம் தேவயே இல்ல. உலகத்துல நெறைய பேரு சங்கடப்படுறாங்க. எனக்கு இன்னும் நெறைய விஷயங்கள் வருத்தமா இருக்கு. நாடு துவேஷம். மொழி துவேஷம். உலகத்த பார்த்தாலும் துவேஷம். யாரை யார் நம்பறதுன்னே தெரியுல. பார்லிமெண்ட் தாக்கப்பட்டப்போது அம்பது பேரு செத்துபோனா. இந்த அம்பது பேருக்கும் அம்மா அப்பா இருக்காங்க. கொழந்தை குட்டி இருக்காங்க. மனைவி இருக்காங்க. எனக்கு வந்து அஃப்சல் குருவ தூக்குல போடணுமா.? தூக்குல போடக்கூடாதாங்குறதுல நான் கலந்துக்கல. அவங்களுக்கு நியாயங்கள் செய்யப்படலேன்னு சொல்றாங்க. இந்த ராணுவத்துக்கு வர்றவங்க இருக்காங்களே... வேற எந்தப் பணிய செய்யமுடியாத நிலையிலே ஆர்மிக்கு வர்றாங்க. திடீர்ன்னு சாவு வர்றதுக்கு வாய்ப்புகள் நெறையா. ராஜீவ்காந்தி அனுப்புன அமைதி படையிலக் கூட 6000, 7000 பேர் செத்துப் போனதா சொல்றாங்க. நாம அவங்களை பலி கொடுத்த மாதிரிதான் ஆயிடுச்சு. என்னத்த பெருசா நம்மலால சாதிக்க முடிஞ்சது? இன்னும் அவங்க சண்டைப்போட்டுகிட்டுதான் இருக்காங்க. இந்த ராணுவ வேலையே அந்த மாதிரிதான். காவல்காரனா இருக்குறானே அவன் என்ன பாவம் செஞ்சான். முதல்ல அவனோட (எதிரிகள்) கண்ணுக்குத் தெரியுறது காவல்காரன்தான். அதனால அவன முதல்ல அடிச்சுடுறது. இராணுவத்துல இருக்குறவன் யாருன்னா காவல்காரன். அவன் எங்கிருந்து வந்தவன்? கிராமத்துல இருந்து வேலை கிடைக்காம ராணுவத்துக்கு வந்தவன். அவன் செத்துப்போறான். என்ன ஒரு ட்ராஜிடி.

தீராநதி : உங்களின் கதை மாந்தர்கள் பெரும்பாலும் நகரவாசிகள். கிராமம் தொடர்பான அனுபவமே உங்களுக்குக் கிடைக்கவில்லையா?

அசோமித்திரன் : எனக்கு கிராம அனுபவமே இல்லன்னுதான் சொல்லணும். சிகந்தராபாத்துல பொறந்து வளர்ந்தவன் நான். அது ஒரு சின்ன கண்டோன்மெண்ட். அதனால எனக்கு எந்த அனுபவம் கொறைவா இருக்கோ, அந்த அனுபவம் கதையில கொறைவா இருக்கும். அதை நான் ஒரு இழப்பா நெனைக்கறதில்ல. நகர வாழ்க்கையில் இருக்குற சின்னச் சின்ன விஷயங்கள் எழுதுறதுக்கு நெறையா இருக்கு. எவ்வளவோ இன்னும் எழுதப்படல. வீடு மாத்திகிட்டு வந்தபோது ரேஷன் கார்டு மாத்த ஏற்பட்ட அனுபவம் இருக்கே, அதை வெச்சி பெரிய நாவலே எழுதலாம். அவ்வளவு தீவிரம் இருக்கும்.

தீராநதி : Commual harmony பற்றி இன்று நிறைய பேசுகிறார்கள். விவாதிக்கிறார்கள். ஆனால் நீங்களோ உங்களின் கதைகள் மூலம் அன்றே அதைச் சாத்தியமாக்கி இருக்கிறீர்கள். இது தன்னியல்பானதா? திட்டமிட்டதா?

அசோகமித்திரன் : நாங்க இருந்த ஏரியா இருக்கே.... அவுங்க அவுங்க அவங்களோட பழக்கத்தை வெச்சிக்குவாங்க. ஆனாலும் ஒண்ணா இருந்துக்குவாங்க. இப்ப சட்டைக்காரங்க இருக்காங்கன்னா அந்தப் பழக்கத்தோட இருப்பாங்க. முடிஞ்சா ஞாயிற்றுக்கிழமயானா சர்ச்சுக்குப் போவாங்க. அதே மாதிரி மூணு முஸ்லிம் இருந்தாங்க. அதுல ஒருத்தர் மட்டும் தமிழ் முஸ்லிம். அப்புறம் முதலியாரு, நாயுடு, அது கலப்படமான எடமா இருந்தது. அதை நீங்க நிர்ணயிக்க முடியாது. நீங்களே ஒரு எடம் இருந்து தனியா தேடிகிட்டுப் போனாதான். இங்க (சென்னை) ஒரு மொழி பெயர்ப்பாளர் அப்துல்லான்னு இருந்தார் _ கோழிக்கோடுக்காரர். அவர் பஷீரை, ஆங்கிலத்துல மொழிபெயர்த்தவர். பஷீர் கூட கோழிக்கோடுகாரர். அவரு (அப்துல்லா) என்னோட நல்ல பழக்கம். 1960_கள்ல இருந்தும் 80 வரைக்கும் இயங்கிட்டு இருந்தார். ஒரியண்ட் லாங்மன்ல வேலை, யுனஸ்கோவுலயே இவரோட மொழிபெயர்ப்பைத்தான் அங்கீகரிச்சு வெச்சி இருக்காங்க. அவரு மாம்பலத்துல குடி இருந்தார். அங்கப் போனப்பதான் தெரிஞ்சுது முஸ்லிம்களுÊக்கு மாம்பலத்துல சுலபமா வீடு கிடைக்காதுன்னு. ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் எடுத்து பதினைஞ்சு குடும்பங்க இருந்தாங்க. தாமு ரெட்டி தெருவ எடுத்துக்கோங்க ஒரு வீடு கிடையாது. இப்ப வந்துட்டாங்க அந்தக்காலத்துல முடியவே முடியாது. சாத்தியமே இல்ல... முஸ்லிம்கள்லாம் கறி சமைப்பாங்கன்னு தரமாட்டாங்க. எதுக்கு சொல்றன்னாக்க இந்த மாதிரி ஒரு விஷயங்கள் ‘டக்’குன்னு ஸ்ட்ரைக் (Strike) ஆவுது.அந்த நாள்ல ஒட்டர்கள்னு இருந்தாங்க. அவங்களெல்லாம் நகரசுத்தி வேலை பார்ப்பாங்க. இப்ப வந்து அந்த மாதிரி இல்ல. ட்ரை லாவட்டரின்னு பேரு. ட்ரை லாவட்டரின்னா அன்ன அன்னைக்கு வந்து எடுத்துகிட்டுப் போகணும். எங்க வீட்ல ஒரு அம்மா ஒருத்தி இருந்தா. தினமும் அவளோட சண்டை. அதாவது நாங்க மூணுநாள் வர்லேன்னு சொல்லுவோம். அவ வந்தேன்னு சொல்லுவா. வர்லங்கறது நமக்குத் தெரியும். இருந்தும் சொல்லுவா. நான் அந்த அம்மாவைத் தேடிகிட்டு ஒரு நாள் அவ வீட்டுக்குப் போனேன். அங்க போனப்பதான் தெரியுது அந்தக் காலனியே கம்லீட்டா ஒட்டர்கள்னு. எதுக்கு நான் சொன்னேன்னா தனிப்பட்ட வாழ்க்கைல இருக்க இந்த இழைகள் வந்து எல்லாத்துக்கும் சொல்றதுக்கு முடியுறதில்ல. நான் என்னவோ கொஞ்சம் கொஞ்சம் தான் முயற்சி பண்ணி இருக்கேன்.சிகந்தராபாத்துல இருக்குற முதலியாருங்க இருக்குறாங்களே அவங்க வீட்லயே உருதுதான் பேசுவாங்க. நான் அவங்க வீட்டுக்குப் போவேன். முஸ்லீம் நவாப் மாதிரி டிரஸ் பண்ணிகிட்டு போட்டோ எடுத்து வீட்ல மாட்டி வெச்சியிருப்பாங்க, அவங்கள பார்த்தா முதலியாருன்னே தெரியாது. ஹைதராபாத்துல அப்ப இந்தியாவுடைய டாங்கெல்லாம் (துருப்பு) வந்துடுச்சு. அங்க இருக்குற முஸ்லிம்க சின்னச்சின்ன கத்தி வெச்சிகிட்டு ‘டெல்லி பக்கடோ’ன்னு கத்திகிட்டு திரிவாங்க. ஓட்டை கத்தி கபடா வெச்சிட்டு எப்படி இவங்கள டெல்லிய புடிக்க முடியும். கொஞ்சம் கூட பொருத்தமே இருக்காது. படிக்கல, எப்படி யோசிக்கமுடியும் பாவம். இப்ப பாருங்க ஹைதராபாத்தோட அடையாளமே மாறிப் போச்சு. எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு. ஆகவே, இது எதுவும் திட்டமிட்டப்படி நடக்கல. இயல்பாகத்தான் நடந்தது. இங்க வந்த பிறகுதான் நெனைச்சுப் பாக்குறப்போ நமக்கே தெரிய வருது.

தீராநதி : தமிழிலக்கியப் போக்கில் கணையாழிக்கு ஓரிடமுண்டு. அதோடு இருபத்தைந்தாண்டுகள் சம்மந்தப்பட்டிருந்தவர் என்பதால் கேட்கிறேன். இன்று அப்பத்திரிகை பற்றி உங்களின் அவதானிப்பு என்ன? திருப்தி தரக்கூடிய அளவுக்கு அதன் செயல்பாடுகள் உள்ளதா?

அசோகமித்திரன்: கணையாழிக்கு நான் உரைநடைக்கு மட்டும் பொறுப்பா இருந்தேன். அதுக்கு நெறைய ஆசிரியர்கள் இருந்தாங்க. டெல்லியில இருந்து கடைசி நிமிடம் சொல்லுவாங்க. இதைப் போடுங்க இதை நிறுத்துங்கம்பாங்க. இதைப் போடணுமா போடக்கூடாதான்னு வர்றப்ப சண்டை வந்திடும். அதை நன்னா கொண்டுவரணும்னு எனக்கு ஒரு ஈடுபாடு இருந்தது. ஈடுபாடு இருக்குறச்ச சரியா செய்யலாம். ஆனா, இன்னைக்கு நின்னுப் போச்சுன்னு சொல்லறாங்க.அப்ப நான் இருந்தப்ப நல்ல கதையா இருந்தா எழுதினவனுக்கு லெட்டர் எழுதி சொல்லிடுவேன். கதைய நாங்க எவ்வளவு நாள் தாமதமானாலும் கண்டிப்பா வெளியிடுவோம்னு எழுதுவேன்.கதையில இது சரியா இருக்கு. இத கொஞ்சம் மாத்தணும்னு இருந்தா அதையும் எழுதிடுவேன். தொடர்ந்து பத்திரிகை இயங்க ஒரு துணிவு வேண்டி இருக்கு. அந்தத் துணிவை எடுத்துகிட்டு செஞ்சது. இன்னைக்கு எப்படியோ தெரியுல. என்ன பணி செய்யும்படியா இருந்ததோ அந்தப் பணிய நன்னாச் செய்யணும்னு நினைக்கிறேன். செஞ்ச வரைக்கும் திருப்தியா இருந்தது.

தீராநதி : சிகந்தரபாத்தில் நீங்கள் இருந்த காலகட்டத்தில்தான் இந்தியாவுக்கு சுதந்திரமே கிடைத்தது. சுதந்திரக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைக் கேட்க அன்று ரேடியோ மட்டுமே தகவல் சாதனம். ரேடியோவின் வால்வ் சூடேறுவதற்கே நான்கு மணிநேரம் பிடிக்கும். பிறகு தான் செய்தி கேட்க முடியும் என்று எழுதியிருந்தீர்கள். குறைந்த அறிவியல் சாதனங்கள் இருந்த காலமது. ஆனால் இன்றோ சகலமும் ஒளி வேகத்தில்... இரு அனுபவமும் வாய்க்கப்பெற்றவர் நீங்கள். இன்றைய தகவல் யுக வளர்ச்சி பற்றி?

அசோகமித்திரன்: ஆகஸ்ட் 14, 1947_ இராத்திரியெல்லாம் ரேடியோ கேட்டோம். சிகந்தராபாத்தில் எங்க வீட்ல இருந்த ஐந்து வால்வ் ரேடியோ மூலமா சென்னை ஒலிபரப்பு நிலைய நிகழ்ச்சிகளை இராத்திரி வேளையிலதான் ஓரளவுக்குக் கேட்க முடியும். ரேடியோவில் வரும் கரகரப்பு சத்தத்தைப் பொருட்படுத்தாம கேட்போம். ஹைதராபாத்திலயும் ரேடியோ நிலையம் இருந்தது. அது நிஜாம் அரசாங்கத்தின் ரேடியோ. இந்திய சுதந்திரக் கொண்டாட்டங்களை ஒலிபரப்பியே ஆகணும்னு கட்டாயம் அதுக்கு இல்ல.நாங்க இருந்த சிகந்தராபாத்தும் _ நிஜாமின் தலைநகர் ஹைதராபாத்தும் பக்கத்துப் பக்கத்து ஊர்கள் என்றாலும், இரண்டிலும் வேறு வேறு போலீஸ் படைகள். நிஜாம் போலீஸ் முழுக்க உருதுமொழியில் இயங்கும். சிகந்தராபாத் போலீஸ் தெலுங்கு, இங்கிலீஷ்ல இயங்கும். நிஜாம் போலீஸ் நீலக்கலருல யூனிஃபார்ம் போட்டு இருப்பாங்க. சிகந்தரபாத் போலீஸ் காக்கிச்சட்டை. சிகந்தராபாத் போலீஸ் ஸ்டேஷன்ல சைக்கிள் லைசன்ஸ் வாங்கினா அது பித்தளைத் தகட்டில் இங்கிலீஷ் எழுத்துகள்ல எழுதி இருப்பாங்க. ஹைதராபாத் போலீஸ் ஸ்டேஷன்ல அதே லைசன்ஸ் தகரத்தகட்டுல உருதுல எழுதினதா இருக்கும். யாரோ ஒருத்தர்கிட்ட லைசன்ஸ் வாங்கினா ரெண்டு நகரத்துக்கும் போதுமானதா இருந்தது.போலீஸ்காரங்கள விரல்விட்டு எண்ணிடலாம். ஆனாலும் அவ்வளவு கட்டுப்பாடு. ரோட்ல எந்த வண்டியும் ரூல்ஸ்ஸ மீற முடியாது. ஆறு மணிக்கு சூரிய வெளிச்சம் இருந்தாலும் சைகிள்ல விளக்கு ஏத்தியிருப்பாங்க.உண்மையில சொல்லணும்னா. இந்தியாவோட சுதந்திரம் நிஜாம் சமஸ்தானத்துக்கு மகிழ்ச்சியான நிகழ்ச்சியா இல்ல. ஜனவரி 30, 1948_ல் காந்தி செத்துப்போனது எங்களுக்கு ஏழு மணிக்குத்தான் தெரியும். ஆனா அவரு 5.10 க்கு செத்துப்போயிட்டார். ரேடியாவுல 9 மணிக்குதான் நியூஸ். இப்போ மணிக்கு ஒரு தரம் நியூஸ் மாதிரி அன்னைக்கு இல்ல. 10 மணிக்கு ரேடியோவே முடிஞ்சி போயிடும். இப்படி இருந்த சமயத்துலயும் உலக இயக்கத்துல நாங்க பங்கு பெற்றது இருக்கே அது ஒண்ணும் தடைபடலன்னுதான் நான் சொல்லுவேன். இப்ப வந்து டான்டான்னு எல்லாம் தெரிஞ்சுடுது. நாம என்ன என்னமோ பார்க்குறோம். தாமதமா தெரிய வந்தாலும், அந்த அனுபவங்கள் இருக்கே நிஜ அனுபவங்களாகவே இருந்தது. தகவல் சாதனங்களின் வேகம் கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் உலக இயக்கத்தில் எங்களின் ஒரு பங்கு இருக்கே அது வந்து குறையலன்னுதான் நான் நெனைக்கிறேன்.

தீராநதி: இந்து_முஸ்லிம் சண்டை சச்சரவுகள் கலவரங்கள் பற்றி அதிகம் எழுதி இருக்கும் தமிழ் எழுத்தாளர் நீங்கள். இரு தரப்புகளுக்கும் இன்று பகை தீர்ந்தபாடில்லை என்பது போல ஒரு தோற்றம் கட்டி எழுப்பப்படுகிறது. இதுவெல்லாம் நிஜமா என்று தெரியவில்லை..? அன்றைய உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

அசோகமித்திரன்: நிஜாம் சமஸ்தானத்தில் அந்த ஆண்டில் (1947) இந்திய சுதந்திரத்தை ஒட்டி விதர்பா ஏழை முஸ்லிம்கள் அகதிகளாக வந்து சேர்ந்தாங்க. நிஜாம் சமஸ்தானத்திலிருந்து ஹிந்துக்கள் பல சமஸ்தானத்தை விட்டு வெளியேறினாங்க. சில குடும்பங்கள் நிரந்தரமாவே வெளியேறிப் போயிட்டாங்க. அதைப் பார்த்ததும் நிஜாம் சர்க்கார் உடனே ஒரு உத்திரவு போட்டது. யாரும் சரியான காரணம் இல்லாம சமஸ்தானத்தை விட்டு வெளியேறக் கூடாதுன்னு. யார் இரயில்ல போக வேண்டுமானாலும் டிக்கெட் வாங்கும் பணத்தோட போலீஸ் பர்மிட்டும் வெச்சிருக்க வேண்டும். இந்தியாவுக்குள்ளாகவே பாஸ்போர்ட் இருந்தாதான் போகமுடியும்.இந்த உத்தரவு போட்டவுடன் சிகந்தராபாத்தில் பதட்டம் இன்னும் ஜாஸ்தியாயிடுத்து. எங்களுக்கு வெளியூர் எங்க போறது... யார் வீட்ல போய் தங்குறதுன்னெல்லாம் யோசிக்க முடியல. ஆனா ஊரைவிட்டுப் போயேயாகணும்னு முடிவெடுத்துட்டோம். பாஸ்போர்ட், பர்மிட் விஷயத்துல தடை வரக்கூடாதுன்னு அப்பாகிட்ட ரெண்டு மனுக்கள் எழுதிக் கொண்டு நான் சிகந்தராபாத் கோர்ட் ஆபீசுக்குப் போனேன். சிகந்தராபாத்தில டிசம்பர் மாதத்துல மழை நின்று போய் பனி பெய்யும். டிசம்பர் பனியில கண் பார்க்கும் எடமெல்லாம் பெரிய ஓவியம் போல இருக்கும்.பெரிய பெரிய காம்பவுண்டுச் சுவர்கள் நிற்கும், ரோட்ல ரெண்டு பக்கமும் இருக்குற மரங்கள் ஒரு குகைமாதிரி தெரியும். அந்தக் குகைக்குள்ள முன்னேறி கோர்ட் ஆபீஸுக்குப் போய் சேர்ந்தேன். அங்கேயேதான் போலீஸ் ஸ்டேஷனும் இருந்துச்சு. அங்க எனக்கு முன்னாலயே டஜன் கணக்குல மக்கள் கூடி இருந்தாங்க. எப்படியோ போராடி பாஸ்போர்ட் வாங்கிட்டோமே தவிர ஊரெதுக்கும் போகல. வட இந்தியாவில் அந்த நாள்ல நடந்த படுகொலைகளை மனம் ஏற்றுக்க மறுத்தது. இருந்தும் உறவினர் வீட்டுக்கு ஒரு லட்டர் போட்டோம். மறு தபாலில் பதில் எழுதிப் போட்டுவிட்டாங்க அவங்க. இங்கு விலைவாசி மிக அதிகம்னு.இதற்கிடையில் இந்திய அரசுக்கும் நிஜாமுக்கும் தற்காலிக ஒப்பந்தம் ஒண்ணு கையெழுத்தாச்சு. ஆனா இது எந்தச் சிக்கலையும் தீர்க்கல. சாதாரண மக்களுக்கு உணவுச் சாமான்கள் கிடைப்பதே அரிதாக இருந்தது. நகரப் பகுதிகள்ல பகிரங்கமாக காஸிம் ரஸ்வி என்ற ஒரு இனவாதத் தலைவரின் ரஜாக்கர் குழுக்கள் ராணுவப் பயிற்சி எடுக்கத் தொடங்கினாங்க. அந்தப் பயிற்சியை வெச்சிகிட்டு மிகச் சாதாரண ராணுவ ஆயுதத்தைக் கூடக் கையாள முடியாதுன்னு ஒரு குழந்தைக்குகூடத் தெரியும். ஆனா அன்று அந்தக் ‘காச் மூச்சு’ கூச்சல் கூப்பாடு இலட்சக்கணக்கான மக்களைக் கதிகலங்க வெச்சது. காரணம் _ அவர்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் அவ்வளோதான். காந்திஜி சாகும் வரை உண்ணாவிரதம்னு அறிவிச்சது சிகந்தராபாத், ஹைதராபாத்துல இருந்த இந்துக்கள் நிலையைக் கொஞ்சம் தீவிரமாக்கியது. ஆச்சர்யமா இருக்கிறது; இவ்வளவு அமளி துமளியிலயும் அந்த ஊர்ல தெலுங்கு சினிமா படங்கள் வரும். மாசக் கணக்குல ஓடும். நாங்களும் ரெண்டு மாசங்கள் மூன்று மாசங்களுக்கு ஒரு முறை ஊர்வலமாக நடந்து போய் அந்தப் படத்தைப் பார்த்துட்டு வருவோம். ஒரு வாரம் தவறாமல் ஒரு மைல் தள்ளியிருந்த பிள்ளையார் கோவிலுக்கு மறுபடியும் ஊர்வலம் போய் வருவோம். இன்று இதையெல்லாம் திரும்ப நினைத்துப் பார்க்கும்போது அப்போ அனுபவித்த பீதி, கிலியெல்லாம் ஆதாரமற்றதுதானான்னு கூடத் தோன்றும். காலம் கடந்த பின்னாடி துன்பங்கள் அவற்றின் கூர்மையை இழந்துவிடுகின்றன.சமீபத்துல ஒரு இந்திய பெண் எழுத்தாளர் கதையை மொழி பெயர்ப்புல படிச்சேன். ‘இந்துசார் உசேன் ஐ ஆம் வெய்டிங் ஃபார் யூ’ங்கறது கதையோட பேரு. இந்துசார் உசேன் பாகிஸ்தான் ரைட்டர். அந்த அம்மாவோ இண்டியன் ரைட்டர். கதை என்னான்னா இந்த அம்மாவோட அப்பா காணாம போயிடுறார். அவர் கலவரத்துல மாட்டி பாகிஸ்தான் போயிட்டதா தெரியவருது. இந்த அம்மா பாகிஸ்தான்ல இருந்து வர்ற கதைகள்ல தன்னோட அப்பாவ பத்தி ஏதாவது சேதி வந்துருக்கான்னு தொடர்ந்து படிக்குறா. கலவரம் முடிஞ்சு அம்பது வருஷமாயிடுச்சு. ஆனாலும் இன்னும் படிக்கிறா. இதை படிச்சப்போ அந்தப் பத்திரிகைக்கு கதை நல்லா இருக்குன்னு எழுதினேன். முடிஞ்சா அந்த அம்மாவுக்கு இதைத் தெரிவிங்கன்னு சொன்னேன். அந்த அம்மாவுக்குத் தகவல் கிடைச்சு பேசினாங்க. இப்ப நான்கு ஐந்து வருஷமாத்தான் இது மாதிரியா படைப்புகள் நிறைய வருது. அந்தக்கால பிரச்னையை மையமாக வைத்து படைப்புகள் நிறைய வருது. அந்தக்காலத்துல பிரச்னை சண்டைகள் இருந்துச்சு. ஆனா இந்த மாதிரி ஒழிச்சிடணும்னு ஒரு வெறி இருந்ததா எனக்குப்படல.

தீராநதி: சிறுகதைகளின் வெளி தமிழில் சுருங்கி வருவதாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. சிறுகதை வளர்ச்சி குறித்துப் பேசுவோமா?

அசோகமித்திரன்: சிறுகதை நெறைய வரலன்னு சொல்ல முடியாது. நெறைய எழுதப்படுறது. ஆனா அதை பத்திரிகைகள் வெளியிடுறதான்னு பார்த்தா கிடையாது. அப்படியே போட்டாலும் ஒண்ணே ஒண்ணுதான். சிறுகதைகள் நெறைய வந்துகிட்டுதான் இருக்கு.

தீராநதி: சிறுபத்திரிகைவாசிகள் ஒரு காலத்தில் வெகு ஜன தளத்தில் பங்கு கொள்ளத் தயங்குவார்கள். இன்றோ நிலை தலைகீழ். சிற்றிதழில் எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்கள் வெகுஜன ஊடகத்திலும் பங்களிப்புச் செய்கிறார்கள். இது ஆரோக்கியத்தின் வெளிப்பாடா. நீத்துப் போனதற்கான அடையாளமா?

அசோகமித்திரன்: ஆரம்பத்துல இருந்தே நான் வந்து பத்திரிகைகள்ல பாகுபாடு பாக்குறத வெச்சிகிட்டதே கிடையாது. பத்திரிகைகள்ல துவேஷம் பார்க்கறது கூடாதுன்னு நெனைப்பேன். எல்லோருக்கும் ஒரே போலதான் எழுதுறேன். இவனுக்கு ஒரு கதை. அவனுக்கு ஒரு கதைன்னு எழுதறது இல்ல. ‘மாலதி’ன்னு ஒரு கதை எழுதி 1974_வாக்குல குமுதத்துக்கு அனுப்பி வைச்சிருந்தேன். அந்தக்கதை வெளி வரல. அப்ப வந்து குமுதம் ஆபீஸுக்கே போய் என்ன அறிமுகப்படுத்திகிட்டு என்னோட கதையைப் போடலயினாலும் பரவா இல்லை. என்கிட்ட அதோட காப்பி இல்லை அத கொடுத்துடுங்களேன்னேன். அவங்க இல்ல இல்ல அந்தக் கதை தீபாவளி மலரில வருதுன்னாங்க. எனக்கு நம்பிக்கை வரல. எங்க காட்டுங்க பார்ப்போம்ன்னேன். உடனே காண்பிச்சாங்க. அந்த வருஷம் சொன்ன மாதிரி தீபாவளி மலர்ல வந்துச்சு. இத ஏன் சொல்லறன்ன, அப்ப போட்டோ காப்பியெல்லாம் கிடையாது. ஒரு கதை எழுதுனா, அத படி எடுத்துதான் அனுப்பி வைக்கணும். அதுக்குள்ள அலுத்துப் போயிடும். சிலநேரம் அப்படியே அனுப்பிடுவோம். அது குமுதத்துல வந்ததால எந்த விதத்துலயும் குறைஞ்சு போயிடல. ஆனா சில நேரம் நம்ம கதையோட தலைப்பையே மாத்தி வெளியிட்டுடுவா ‘குமுதம்’. ஒரு கதை அப்படிதான் ‘விட்டேன் ஒரு விதை’ன்னு மாத்தி போட்டாங்க. அப்புறம் ‘கொண்டு வா பெட்ரோல’ன்னு போட்டாங்க. மத்தவங்கயெல்லாம் என்ன கிண்டல் பண்ணாங்க. மாத்துனா என்ன? படிக்குறவனுக்குத் தெரியாதா நல்லதா கெட்டதான்னு சொல்லுவேன். அதனால சிறு பத்திரிகைக்கும் பெரிய பத்திரிகைக்கும் இப்ப வித்தியாசமெல்லாம் இல்லாம போயிடுச்சு. என்ன இவங்களவிட அவன் கொஞ்சம் சினிமா செய்திய அதிகமா போடுவான் அவ்வளவுதான். சிறு பத்திரிகைகள் அத்தியாவசியமா இருந்த ஒரு காலகட்டம் முடிஞ்சுப் போயிடுத்து.

தீராநதி: பேச்சு மொழியில் இருக்கும் ஒலிச்சிதைவை அப்படியே உரைநடையில் பயன்படுத்துவது கடினமாக இருக்கிறது. பூர்ணமாக கையாள முடியவதில்லை. அப்படியே கையாள முடிந்தால் அப்படைப்பு ரசிக்கும் விதமாய் இருக்குமா?

அசோகமித்திரன்: சிலபேரு மண்வாசனைக்காக பண்றோம்ன்னு பண்றாங்க. அது என்ன ஆயிடுறதுன்னா பேச்சுத் தன்மைக்கு அதிகமாகப் போய் புரியாம போயிடுறது. கொஞ்சமா இருந்தா பரவாயில்லை. வரிக்கு வரி புரியாம போயிடுச்சுன்னா ஒரு தொடர்பே ஏற்படுத்திக்க முடியாம போயிடும். மொழி பெயர்ப்பு எடுத்துக்கிட்டா அவனால எப்படி அந்தப் பேச்சு மொழிய, எப்படி மொழி பெயர்க்க முடியும்.என்னதான் நாம பண்ணாலும் ஆங்கிலத்துல இருக்குற ஒரு ஸ்டேண்டர்டு இங்கிலீஷ்லதான் பண்ணமுடியும். முழுக்க முழுக்க பேச்சுலையே அந்த அனுபவத்த தர்றேன்னு வைச்சிகிட்டா கஷ்டம். ஆனா சில தகவல்கள் கொடுத்து புரிய வைக்கலாம். இதுக்கு உங்களுக்கு நீங்களேதான் ஒரு திட்டம் வகுத்துக்கணும். சிலபேர் நிறைய செய்யறாங்க. அதுக்குன்னு பொதுவான மொழியிலேயே எழுதிட்டுப் போயிட்டா இவர் என்ன ஜாதின்னே தெரியாது. இங்க நாம ஜாதின்னு சொல்றப்ப ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு அடையாளம் இருக்கும். அதனால அந்தக் கதைக்கு தனித்தன்மை வந்திடுது. அதெல்லாம் இல்லாம போயிட்டா எல்லாமே ஒரே மாதிரி ஸ்டேண்டடா போயிடும்.இப்பக்கூட பாமான்னு ஒரு ரைட்டரோடைய கதையை ஆங்கிலத்துல மொழிபெயர்த்திருக்காங்க. அந்த மொழி பெயர்ப்புக்கே அவார்டெல்லாம் கிடைச்சது. ஆனா அந்த மொழி பெயர்ப்பு மேலயும் விமர்சனங்கள் வர்றது. நான் இரண்டையும் படிச்சேன். தமிழ்ல இதுவரைக்கும் அந்த Form வரல. வெளியில இருந்தும் நாமதான் மொழிபெயர்த்து படிக்கிறோம். அப்ப நம்மளோடத யாரு மொழி பெயர்க்குறாங்க? வெள்ளைக்காரன்தான் பண்ணணும். எந்த வெள்ளைக்காரன் வர்றான் நம்மளேதான் பண்ண வேண்டி இருக்கு. ஆக, ஆங்கிலத்துல இருந்தும் நாமதான் பண்றோம். தமிழ்ல இருந்து ஆங்கிலத்துக்கும் நாமதான் பண்றோம். இது ஒரு விதத்துல சங்கடமானதுதான்.

தீராநதி: இரண்டாம் உலகப்போரின் போது இந்தியர்கள் அனுபவித்த சிராய்ப்புகள் அதிகம். அதைக் கண்கூடாக உணர்ந்தவர் நீங்கள். ரொட்டிக்கும் சீனிக்கும் ரேஷனில் காத்துக்கிடக்க வேண்டி இருந்தது என்றெல்லாம் எழுத படித்திருக்கிறோம். அன்று ஜெர்மனி.. இன்று அமெரிக்கா.. இரண்டாம் உலகப் போர் பற்றிப் பேசுங்களேன்?

அசோகமித்திரன்: தலையை எண்ணித் தானியம் கொடுத்தாங்க. அரிசியெல்லாம் கிடையாது. கோதுமை கிடையாது. சோளம். ரேஷன் கடை, ஆபீஸ், அதிகாரின்னு லஞ்சம் கொடுக்கணும். தெருவிளக்குகள் குல்லாய் மாதிரி ஒன்றைத் தொங்கவிட்டாங்க. வெளிச்சம் கம்பத்தின் கீழே மட்டும் அடிக்கும். வீட்டு வெளிச்சம் இரவில் வெளியே தெரியக் கூடாது. ஜன்னலை மூடிவை. சாலையில் மிலிடெரி வண்டிகளைப் பார்த்தாலே பதுங்கத்தான் வேண்டும். பணம் கிடைச்சவங்க, கிடைக்காதவங்க இருவருமே தடுமாறினாங்க. கண்ணியமங்கறது ரெண்டாம் பட்சமானது. யுத்தம் முடிஞ்சதுன்னு சொன்னவுடனேயே அப்பாடா இனிமே ரேஷன்ல காத்துக்கிடக்க வேண்டியதில்லடான்னு தோணுச்சு. எங்க வீட்ல இருந்து ஒரு மைல் தூரம் நடந்து போய் ரேஷன் வாங்கணும். பிற்பகல் தவறவிட்டுடா அடுத்த நாள் காலை போய் நின்னா நேற்றே எல்லாம் வந்து தீர்ந்துடுச்சுன்னு பதில் வரும். இங்க நம்ம சென்னையில விறகு வாங்குறதுக்கு ரேஷன் கார்டு வேணும் தெரியுமா உங்களுக்கு? அரை குண்டு ஒரு குடும்பத்துக்குன்னு தருவாங்க. ஐரோப்பிய யுத்தம், ஜப்பான் யுத்தம், கொரியா யுத்தம், சூயஸ் யுத்தம், பங்களாதேஷ் யுத்தம், வியட்நாம் யுத்தம் எவ்வளவு யுத்தங்கள். ஆனாலும் இன்று வேறு கவலைகள் அந்த இடத்தை எடுத்துக்கொண்டுவிட்டன. ஆக்சுவலி எதுக்கு சண்டைப் போட்டாங்கன்னு யோசிச்சா சங்கடமா இருக்கு. சமீபத்துல ஒரு போலந்து படம் பார்த்தேன். இது யதேட்சையா நடந்தது. ஜெர்மன் போலந்து மேலதான் முதல்ல படையெடுத்தாங்க. முதல்ல இருந்தே ஜெர்மனோட திட்டம் என்னான்னா ஜூசை எல்லாத்தையும் ஒழிச்சிடனும்ங்கறது. அந்தப் படத்துல வர்றவன் ஒரு ஜூ. அவன் ஒரு பியானோயிஸ்ட். அவன் ஜெர்மன் ஆர்மிகிட்ட மாட்டிக்கிறான். ஆர்மி ‘நீ யாரு’ன்னு கேட்கிறான். இவன் பியானோயிஸ்ட்னு சொல்றான். அப்ப பக்கத்து அறையில இருந்து ஒரு பியானோவ எடுத்து வந்து வாசிக்கத் தர்றான் ஆர்மி. இவன் பியானோ வாசிச்சே பல வருஷங்கள் ஆயிடுச்சு. யுத்தத்துக்கு முன்னாடி வரைக்கும் வாசிக்க அவனுக்கு வாய்ப்பிருந்தது. அப்புறம் மேல இல்லாம போயிடுச்சு. அப்ப ரொம்ப இடைவெளி வந்தாச்சு. அவனோட கையெல்லாம் பரபரக்குது. ஆனாலும் வாசிக்கிறான். பிரமாதமா வாசிக்கிறான். அப்ப அந்த ஆர்மி தன் கோட்டைப் பரிசளிக்கிறான். அவ்வளவு வெறிக்கு மத்தியிலேயும் இசையால் அவன் உயிர் பொழச்சிருக்குறான் _ இது அந்தப்படம். நாம எவ்வளவு உயிரை இழந்தோம். அதனால என்னத்த பெருசா சாதிச்சிட்டோம். ஒண்ணுமே கிடையாது. யாரோ நாலுபேர் ஆட்சி செய்றதுக்காக இவ்வளவு சாவுகள். நம்மலால எழுதத்தான் முடியும். வேற என்ன செய்ய முடியும்.

தீராநதி: புது எழுத்து என்ற உத்வேகத்தோடு நிறைய பிரதிகள் எழுதப்படுகின்றன. தமிழுக்குப் புதிய வளம் சேர்க்கும் கோட்பாடுகளில் பரிசோதனைகள் செய்கிறார்கள். பிரேம்_ரமேஷ், எம்.ஜி.சுரேஷ், சுரேஷ்குமார் இந்திரஜித், சாருநிவேதிதா இவ்வாறு நிறைய.. இதையெல்லாம் படிக்கிறீர்களா? சாருநிவேதிதாவுக்கு வழங்கிய முன்னுரையில் கூட தனக்கு உவப்பாகாத எழுத்து என்பது மாதிரி எழுதி இருந்தீர்கள்?

அசோகமித்திரன்: ஒரு ஷாக் கொடுக்கணும்ங்கறதுக்காக இப்படியெல்லாம் எழுதறாங்களோன்னு தோணும். ரியாலிட்டியில இல்லையான்னு கேட்கலாம். தமிழ் பழைய இலக்கியத்துலயும் இருக்கு. சிலப்பதிகாரத்தை எடுத்துகிட்டா அதுவும் இந்த மாதிரியான உறவை பத்தினதுதான். என்ன ஒரு மேன்மையோட சொல்லப்பட்டிருக்குன்னு பார்க்கணும். மேன்மை இல்லாதபடி இதுக்காகதான்னு நாம எழுதுறது இருக்கே, அதுல எனக்கு பெரிய உவப்பு கிடையாது. இந்தக் கோட்பாடுகளெல்லாம் விமர்சனத்துக்குச் சொல்லக்கூடியதா இருக்கலாம். ஆனா படைப்புக்குத் தேவையில்லைன்னு நெனைக்கிறேன். நான் நெனைக்கிறேன் அவ்வளவுதான். அவங்க வேறமாதிரி சொல்லலாம். அதுல தப்பு கிடையாது. இப்ப நோபல் வாங்கி இருக்கிறாரே பாமுக். அவர பாக்குறச்சே எதிர்ப்புகளைக் காண்பிக்கிற மாதிரிதான் எழுதி இருக்குறாரே ஒழிய, இந்த மாதிரியெல்லாம் எழுதுல. ‘டாக்டர் ஷிவாக்கோ’ன்னு ஒரு ரைட்டர். சோவியத் புரட்சி பற்றி ஒரு நாவல் எழுதினார். அதுக்கு நோபல் பரிசு கொடுத்தா வாங்கக்கூடாதுன்னு சோவியத் அரசே சொல்லிடுச்சு. அவரும் நான் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டார். அவருக்கு உள்ளுக்குள்ள என்ன பயம்னா அவரை நாடு கடத்திட போறங்கன்னு பயம். ஆனால் நாவல் மிகவும் சிறந்தது.

தீராநதி: மறுமலர்ச்சி அடைந்திருக்கும் தலித் படைப்புகள் குறித்து?

அசோகமித்திரன்: ரொம்ப நாளைக்கு தலித்காரங்ககிட்ட படிப்பே இல்லாம இருந்தது. எழுத்துல இதையெல்லாம் பதிவு செய்யணும். ஓரல் ஹிஸ்டரின்னு இதைச் சொல்லலாம். இப்ப உடனே பதிவு செய்யப்படுறது. சுதந்திரத்துக்குப் பிறகுதான் எல்லோருக்கும் கல்வி சாத்தியமாச்சு. அப்புறம் எழுதுறதுக்கு ஒரு சாத்தியம் வந்திருக்கு. எல்லா தலித் இலக்கியங்களும் பழையபடி துக்கத்தையும், சோகத்தையும் சொல்லிக்கிட்டே இருந்தா போதாது. வேற மாதிரி வரணும். இந்திய மொழிகள்லயே இந்தியும், மராட்டியும் குறிப்பிட்டுச் சொல்லலாம். தயாபவர் _ மராட்டிய எழுத்தாளர். எனக்கு நல்ல நண்பர். அவரு வீட்டுக்கெல்லாம் வரச்சொல்லி போனபோது என் கையிலேயே துரதிருஷ்டவசமா செத்துப்போனார். அவரை மைனாரட்டின்னு நான் சொன்னப்போ, நீயும் மைனாரட்டிதான்னு சொல்லுவார். அவரு நிறைய எழுதி இருக்கார். அவரோட வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கார். இங்கேயும் நல்ல எழுத்தெல்லாம் வர்றது. அதுல இன்னும் பிரிவுகள் எல்லாம் வரும். இதையெல்லாம் நான் வரவேற்கிறேன்.

தீராநதி: சில மாதங்களுக்கு முன் நீங்கள் ஆங்கில பத்திரிகை ஒன்றில் பிராமணர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. தங்களோட கலாசாரத்தை இயல்பாக கடைப்பிடிக்க முடியாம இருக்கிறார்கள் என்ற ரீதியில் எழுதியதாக சர்ச்சை எழுந்தது.. மறுத்திடாமல் பேசுங்கள்?

அசோகமித்திரன்: இந்தப் பேட்டி சங்கடமானது. இப்படித்தான் டெலிபோன்ல பேட்டி எடுத்தாங்க. பேட்டி எடுக்குறவங்களுக்குன்னு ஒரு சில கருத்துக்கள் இருக்கும். அத நம்ம சொன்னதா சேர்த்து சமயத்துல எழுதிடுவாங்க. இதுவும் அப்படித்தான் நேர்ந்திடுச்சு. இல்லப்பா.. இங்கயெல்லாம் கொஞ்சம் கஷ்டமா இருக்குதுன்னேன். என்னோட பையனுங்க அட்மிஷனுக்காக போறப்ப சில கஷ்டங்கள் இருந்தது. ஒரு பையனுக்கும் அவன் கேட்ட குரூப் கிடைக்கல. இதை நாம சொல்றோம். நமக்கு எந்த துவேஷமும் கிடையாது. காந்தியே சொல்லி இருக்கார். கண்ணுக்குக் கண்ணுன்னு நீங்க ஆரம்பிச்சிட்டீங்கன்னா உலகத்துல எல்லாம் குருடனா போயிடுவான்னு. வலியுறுத்த வேண்டியதுதான். சொல்ல வேண்டியதுதான். சில நியாயத்தைச் சொல்றோம். நியாயம்னு நமக்கு உடனே தெரியுறதில்ல. சில காலம் கழிச்சி தெரியும். ஸெரீனா வாழ்க்கையில ரெண்டு மூணு வருஷம் எப்படி ஆயிடுச்சு பாருங்க. இந்த மூணு வருஷமும் திரும்பக் கிடைக்குமா அவளுக்கு? பீகாரை எடுத்துகிட்டா அப்படிதான். எங்க முன்னேற்றம் இல்லையோ அங்க கிரைமும் அதிகமும் இருக்கும். உடனே முன்னேறின நாடுகள்ல கிரைம் இல்லையான்னு கேட்கக் கூடாது. பீகாருல திருடுனானன்னு நெத்தியில ஒருத்தனுக்கு சூடு போட்டாங்க. என்ன கொடுமை இது? _ ஆயுள் முழுக்க நெத்தியில சுமந்துகிட்டு திரியவேண்டியது. இப்படி பலபேர் செத்துப் போனங்க. அப்புறம் கண்ணை குருடடிச்சு விட்டுடுறது. இவன் யாரு அவன் கண்ணை குருடடிக்க. திருடினான்னா உன்னால நிரூபிக்க முடிஞ்சா எவ்வளவு சிறை வாசமோ அதக் கொடுக்க வேண்டியதுதானே. சித்துவ எடுத்துக்குங்க. அவன்கிட்ட பணம் காசு இருக்கு. அப்பாவிங்க என்ன செய்வாங்க. சிலைகளையும், ஏழை எளியவங்களையும் தாக்கறாங்க. இதுவெல்லாம் சரி கிடையாது. ஏதாவது நாம பேசினா நேஷ்னல் ஆக்ட்ல உள்ள போட்டுடுவாங்க. ஒரு வருஷம் வாய் திறக்க முடியாது. உலகத்துலேயே யாருக்கு அதிக சிலைகள் இருக்குன்னு ஒரு புள்ளி விவரம் எடுத்தா, அம்பேத்காருக்குத்தான் இருக்கு. நிறைய சிலைகள் இருந்தா நிறைய விபத்துகளும் நடக்கும். இத இப்படித்தான் நாம எடுத்துக்கனும். இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா போராடுறதுன்ணு இறங்கிட்டா காந்தி சொன்ன மாதிரி கண்ணுக்குக் கண்ணுன்னு ஆயிடும்.

நன்றி:தீராநதி

Sep 29, 2012

எழுதிக்கொண்டே இருந்த க.நா.சு - அசோகமித்திரன்

க.நா.சு.100

புத்தக அறிமுகம்

எழுதிக்கொண்டே இருந்த க.நா.சுப்பிரமணியம் கி.அ.சச்சிதானந்தம்  வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை - 600017. விலை - ரூ75/-

மன்ச்சி மனுஷிக்கு ம -ரணமே சாட்சி’ என்று ஒரு பழமொழி தெலுங்கில் உண்டு. எல்லா நல்லவர்களுக்கும் அனாயாச மரணம் கிடைப்பதில்லை. ஒரு குழந்தையுடையது போன்ற மனது கொண்ட பாரதியார் கடைசி நாட்களில் ஒரு நொடிப்போதாவது ‘காலா, நீ உடனே வா’ என்று எண்ணியிருக்கக் கூடும். செப்டம்பர் 12-ஆம் தேதி வரை அவர் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருந்தால் அது மனைவி, குழந்தைகளை அனாதரவாகவிட்டுச் செல்ல மனமில்லாததால்தாka-na-su ன் இருக்கும்.

க.நா.சுப்பிரமணியனுக்கு அனாயாச மரணம் சாத்தியமாயிற்று. அவருக்கு சர்க்கரை நோய் இருந்தது என்று சில ஆண்டுகள் முன்புதான் தெரிய வந்தது. அவர் கண் மருத்துவரைப் பார்ப்பதைத் தவிர்த்தது இந்த நோயை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதற்காகத்தான் என்று இன்று எனக்குத் தோன்றுகிறது. நோய் ஒப்புக்கொள்ள மறுத்த பலர் வாரக்கணக்கில் மருத்துவமனையில் சித்திரவதைக்குள்ளானதைப் பார்த்திருக்கிறேன். என் குடும்பத்திலேயே இந்த அனுபவம் எனக்குக் கிடைத்திருக்கிறது.

’எழுதிக் கொண்டேயிருந்தவர்’ என்ற அடையாளம் அவருக்குப் பொருத்தமானதுதான். சுஜாதா கூட எழுதிக் கொண்டேயிருந்தார். பிரசுர சாத்தியமோ, வேறு எந்த வகை வெகுமானமோ இல்லை என்று தெரிந்துதான் க.நா.சு எழுதிக் கொண்டேயிருந்தார் என்று கூற வேண்டும்.

நான் அவரை 1966 முதற்கொண்டு அறிவேன். சென்னையிலும், டில்லியிலும் அவருடைய வீட்டுக்குப் பலமுறை போனதில் பல விஷயங்கள் கேட்காமலே தெரிந்தன. ஒன்று, தினமும் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அவர் பத்து பக்கமாவது எழுதுவது. இரண்டாவது, அவருடைய பல ஆங்கிலக் கட்டுரைகளை சன்மானமே சாத்தியமில்லாத பத்திரிகைகளுக்கு எழுதியது. மூன்றாவது, அவருடைய பல படைப்புகள் திரும்பி வந்திருப்பது. நான்காவது, அவருடைய கையெழுத்துப் பிரதிகள் ஏராளமானவை தொகுக்கப்பட்டிருக்கின்றன. பல பகுதிகள் கொண்ட அவருடைய சுயசரிதைக் கையெழுத்துப் பிரதியை இலக்கியப் பத்திரிகை என்று அறியப்பட்டதொன்று தொலைத்துவிட்டதாகக் கூறியது. ஒரு சொல் வருத்தம் தெரிவிக்கவில்லை. அது போனது போனதுதான்.

கி.அ.சச்சிதானந்தம் எழுதிய ‘எழுதிக் கொண்டேயிருந்த க.நா.சுப்பிரமணியம்’ சில நல்ல பின்னிணைப்புகளைக் கொண்டிருக்கிறது. முக்கியமானது, க.நா.சு - செல்லப்பா விவாதம். ஆனால் அச்சிட்ட முறையில் அதன் முழுப்பயனும் பெற முடியாமல் போகும் அபாயம் இருக்கிறது.

ஆங்கில மொழியில் க.நா.சுப்பிரமணியம் ஏராளமான கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அநேகருடைய படைப்புகளை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவர் அமெரிக்கப் பதிப்பகம் ராண்டம் ஹவுஸ் நடத்திய ஒரு போட்டிக்காக ‘அவதூதர்’ நாவலை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியிருக்கிறார். அவருடைய நாவல் பரிசு பெறவில்லை. ஆனால் சில மாற்றங்கள் செய்தால் பிரசுரம் செய்யச் சம்மதம் என்று ராண்டம் ஹவுஸ் கடிதம் எழுதியிருந்தது. (இதை நான் பார்த்தேன்). க.நா.சு முடியாது என்று எழுதியிருக்கிறார். இது போன்ற விஷயங்களில் இதுதான் சரி என்று கூற முடியாது. இந்த நாவல் தமிழிலும் மிகத் தாமதாகத்தான் வெளியாயிற்று. ‘பித்தப்பூ’ கற்பனை செய்யமுடியாத அச்சுப்பிழைகளுடன் வெளியாயிற்று. ராண்டம் ஹவுஸ் சில மாற்றங்கள் செய்தாலும் அச்சுப்பிழைகள் இல்லாமல் வெளியிட்டிருக்கும்.

சச்சிதானந்தம் அவரறிந்த க.நா.சுவை ஒரு சிறு விள்ளல்தான் இந்த நூலில் தந்திருக்கிறார். க.நா.சுவுக்கு எழுத்துத் துறைக்கு அப்பாற்பட்ட நண்பர்கள் என்று கிடையாது. சென்னையில் எம்.கோவிந்தன் என்ற மலையாள இலக்கிய இலட்சியவாதி க.நா.சுவின் நெருங்கிய நண்பர். இவர்கள் இருவர் முயற்சியில் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர்கள் மாநாடு கேரளத்தில் நடந்தது. சண்முகசுந்தரம், மெளனி, சுந்தர ராமசாமி, சி.சு.செல்லப்பா போன்றோர் அகில இந்திய கவனம் பெற்றார்கள். அவ்வளவு மகத்தான படைப்பாளிகளை ஒரே இடத்தில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு அதன்பின் நேரவேயில்லை.

க.நா.சு தொகுத்து வெளியிட்ட நூல்கள் ஒவ்வொன்றிலும் அவருடைய விரிவான அறிமுகக் கட்டுரை இருக்கும். இலக்கியக்கட்டுரைகள் என்றால் எளிதில் புரிந்துகொள்ள முடியாதபடி இருக்க வேண்டும் என்று ஒரு சம்பிரதாயம் ஏற்பட்டுவிட்டது. க.நா.சு இலக்கியவாதிகள் மட்டுமல்லாமல் அனைவரும் அந்த விவாதத்தில் பங்கு பெறவேண்டும் என்று நினைத்தவர். ஆதலால் எளிய நடையில் அவருடைய கட்டுரைகள் இருக்கும். பொதுவாகப் பத்து கதைகள் கொண்ட தொகுப்பு என்றால் அதில் ஐந்தாறுதான் தரமாக இருக்கும். க.நா.சு பிற மொழிகளில் கூடச் சிறப்பாக உள்ளதைத்தான் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருப்பார். அத்தொகுப்பு நூல்கள் இன்று கடைகளில் கிடைக்காது. தேசிய நூலகங்களில் இருக்கக்கூடும்.

கி.அ.சச்சிதானந்தன் நூலில் பல தகவல்கள் இருக்கின்றன. அந்த நூலுக்கான அளவில் உள்ளதைப் போல இன்னும் நிறையப் பதிவு செய்யப்படாமல் உள்ளன.

நன்றி: சொல்வனம்

Feb 28, 2011

அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் - அசோகமித்திரன்

ஸ்ரீராமுக்கு வயது இருபத்தொன்று நடந்துகொண்டிருந்தது. பி. ஏ. பரிக்ஷை எழுதியிருந்தான். பரிக்ஷை முடிவுகள் ஜூன் மாதத்தில் வரும். நடந்து கொண்டிருந்தது ஏப்ரல் மாதம்.

ராமஸ்வாமி ஐயர் ஸ்ரீராமின் அடுத்த வீட்டுக்காரர். மருந்துக் கம்பெனி ஒன்றில் குமாஸ்தாவாக இருந்தார். அவருக்கு ஐந்து குழந்தைகள். முதல் மூன்றும் பெண்கள். அப்புறம் நான்கு வயதில் ஒரு பிள்ளை. கடைசியாக ஒரு பெண். அது பிறந்து ஒன்பது மாதங்கள்தான் ஆகியிருந்தன.

ஸ்ரீராம் ஒரு ஆங்கில தினசரிக்குச் சந்தாதாரர். பத்திரிகை தினமும் காலை ஆறு மணிக்குashki அவன் வீட்டில் விநியோகிக்கப்பட்டுவிடும். வழக்கமாகப் பத்திரிகை கொண்டு வருபவனுக்கு அன்று கோர்ட்டுக்குப் போக வேண்டியிருந்தது. ஆதலால் அவன் தன் மகனிடம் பத்திரிகைகளைக் கொடுத்து விநியோகித்து வரச் சொல்லியிருந்தான்.

ராமஸ்வாமி ஐயர் காலையில் எழுந்தபோது அவர் வீட்டு ஜன்னல் வழியாகப் பத்திரிகை ஒன்று நீட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அது யாருடையது என்பது அவருக்குத் தெரியாது. முகம் கழுவி, காப்பியும் குடித்த பிறகு அந்தப் பத்திரிகையை ஒரு வரி விடாமல் படிக்க ஆரம்பித்தார்.

தெருவில் ஒருவன் புதுப்புளி விற்றுக்கொண்டு போனான். விலை மிகவும் மலிவு. ராம்ஸ்வாமி ஐயர் வெளியே வந்து புளி விற்பவனை ஒரு மணங்கு நிறுத்துப் போடச் சொன்னார். புளி விற்பவன் தராசில் ஒரு தடவைக்கு இரண்டு வீசையாக நிறுத்தான். புளி உருண்டைகளை உள்ளே கொண்டுபோய்ப் போட்டுவர ஏதாவது தேவைப்பட்டது. ராமஸ்வாமி ஐயர் கையில் பத்திரிகை இருந்தது. அது யாருடையது என்று அவருக்குத் தெரியாது. அவர் மூன்றாவது தடவையாகப் புளி உருண்டையை உள்ளே கொண்டு செல்லும்போது ஸ்ரீராம் வெளியே வந்து யாரிடமோ பத்திரிகைக்காரன் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான். ராமஸ்வாமி ஐயர் உள்ளே விரைந்து சென்று புளியை உதறினார். அவரால் முடிந்தவரை அந்தத் தினசரியைச் சுத்தம் செய்து,  வெளியே வந்து அதுதான் அவன் பத்திரிகையாக இருக்கக் கூடுமோ என்று ஸ்ரீராமிடம் கேட்டார். ஸ்ரீராம் பத்திரிகையை அவரிடமிருந்து பறித்துக் கொண்டு பிரித்துப் பார்த்தான். முன் பக்கத்தில் ஒரு சினிமாப் படத்தின் முழுப் பக்க விளம்பரம் இருந்தது. அந்த விளம்பரத்தில் தென்னாட்டிலேயே மிகச் சிறந்த அழகி என்று புகழ் பெற்ற நடிகையின் முகம் பெரிய அளவில் அச்சிடப்பட்டிருந்தது. ஆறு வீசைப் புளி அந்த முகத்தில் பல இடங்களில் கறை ஏற்படுத்தியிருந்தது. ஸ்ரீராமுக்கு அந்த நடிகை மீது அளவிடமுடியாத ஆசை. எந்த எண்ணத்தில் வேறொருவருடைய பத்திரிகையைத் தூக்கிச் சென்றார் என்று அவன் ராமஸ்வாமி ஐயரைக் கேட்டான். ராமஸ்வாமி ஐயர் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும்,  பத்திரிகை அவர் ஜன்னலில் சொருகப்பட்டிருந்தது என்றும் சொன்னார். ஸ்ரீராம் முணுமுணுத்துக் கொண்டே பத்திரிகையைப் படிக்க ஆரம்பித்தான். அந்த அழகியின் முகம் அலங்கோலமாக இருந்தது. காது கேட்கும்படியாக ஸ்ரீராம், “முட்டாள்” என்று முணுமுணுத்தான். ராமஸ்வாமி ஐயர் “என்ன” என்று கேட்டார். ஸ்ரீராம் “உமக்கு ஒன்றும் இல்லை” என்று கூறிவிட்டு மறுபடியும் “முட்டாள்” என்றான். கால்மணி நேரத்திற்குள் ராமஸ்வாமி ஐயர் ஸ்ரீராமை அவன் முட்டாள், மடையன், அயோக்கியன், போக்கிரி என்று தெரிவித்தார். ஸ்ரீராமும் ராமஸ்வாமி ஐயரைப் பற்றி ஏறகுறைய அதே அபிப்ராயத்தைத் தான் கொண்டிருப்பதாக அறிவித்தான். அன்று ராமஸ்வாமி ஐயர் காரியாலயத்திற்குப் போகும்போது ஒரு மணி நேரம் தாமதமாகிவிட்டது.

இரண்டு நாட்கள் கழித்து அதிகாலையில் ராமஸ்வாமி ஐயர் வேப்பிலை கொண்டு செல்வதை ஸ்ரீராம் கவனிக்க நேர்ந்தது. ராமஸ்வாமி ஐயரின் பிள்ளைக்கு அம்மை போட்டிருப்பதாக அவன் அம்மா தெரிவித்தாள். ஸ்ரீராம் அன்று எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சு, புத்தகசாலை, சினிமா இவையெல்லாவற்றிற்கும் போக வேண்டியிருந்தது. அவன் வீட்டை விட்டுக் கிளம்பியவுடன் முதல் காரியமாக சுகாதார இலாகாவுக்கு ஒரு கடிதத்தைத் தபால் பெட்டியில் போட்டான். அந்தக் கடிதத்தில் அவன் கையெழுத்திடவில்லை.

பகல் முழுவதும் நல்ல அலைச்சல். ஸ்ரீராம் மாலை வீடு திரும்பும்போது முழுக்க இருட்டவில்லை. அப்போது அவனுக்கு ஏதோ மாதிரி இருந்தது. அது என்னது என்று அவனுக்குப் புலப்படவில்லை. மனம் நிம்மதியற்று இருந்தது.

பிளாஸ்கில் அவனுக்காக வைத்திருந்த காப்பியை மெதுவாகச் சீப்பிக் குடித்தான். அப்போது அவன் அம்மா சொன்னாள். யாரோ அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். அன்று பகலில் வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாத சமயத்தில் அவர்கள் ராமஸ்வாமி ஐயரின் மகனை ஒரு மோட்டாரில் காலரா ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் சென்று விட்டார்கள். ராமஸ்வாமி ஐயரின் மனைவி பெரிதாக அழுது வந்தவர்களையெல்லாம் கெஞ்சினாள். ஆனால் அவர்கள் அந்த நான்கு வயதுக் குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டார்கள். யாரும் ஒன்றும் செய்வதற்கில்லை. அதுதான் சட்டம் என்று சொன்னார்கள். ராமஸ்வாமி ஐயரின் மனைவி பைத்தியம் பிடித்தவள் போலக் கதறிக் கொண்டே தெருவில் ஓடினாள்....

ஸ்ரீராமுவுக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டது. அவன் இப்படியெல்லாம் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை.

ராமஸ்வாமி ஐயர் ஆபிஸிலிருந்து வீடு திரும்பினார். வந்தவர் ஆபிஸ் உடைகளைக் கூட கழட்டாமல் வெளியே ஓடினார். அவர் மின்சார ரயில் நிலையம் இருக்கும் திசை நோக்கி ஓடுவதை ஸ்ரீராம் கவனித்தான். தொத்து வியாதிகளுக்கான ஆஸ்பத்திரி ஊருக்கு வெளியே பத்து மைல் தூரத்தில் இருந்தது.

ஸ்ரீராமால் நிலைகொண்டு இருக்க முடியவில்லை. சாப்பாட்டை ருசித்து உண்ண முடியவில்லை. வீட்டு வெளிச்சுவர் அருகே நின்ரு கொண்டு தெருவில் வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டிருந்தான். மணி பத்துக்கும் மேலாகிவிட்டது. ஊரோசை அடங்கத் தொடங்கிவிட்டது.  ரயில் நிலையம் அவன் வீட்டிலிருந்து அரை மைல் தூரத்தில் இருந்தது. அங்கு வண்டிகள் வந்து போகும் ஊங்கார சப்தம், லெவல் கிராஸிங்கில் அடிக்கும் மணியின் சப்தம், சக்கரங்கள் இருப்புப் பாதையில் உருளும் சப்தம், இவை எல்லாவற்றையும் ஸ்ரீராமால் மிகத் தெளிவாகக் கேட்க முடிந்தது. தன்னைச் சுற்றி ஊர் அடங்கி ஒடுங்கிப் போவதை அவன் அதற்கு முன்னால் உணர்ந்து கவனித்தது கிடையாது. வைத்தியக் கல்லூரியில் படிக்கும் அந்தக் கோடி வீட்டுப் பையனும் விளக்கை அணைத்து விட்டான். தெருவின் இரண்டு வரிசை வீடுகளும் கருத்த நிழல்களாகக் காணப்பட்டன. ஸ்ரீராமின் கண்கள் கனத்தன. அவன் படுக்கையில் சாய்ந்தான். அவனால் தூங்க முடியவில்லை. அவன் மறுபடியும் தெருவுக்கு வந்தான். அவன் வேஷ்டி மட்டும் அணிந்திருந்தான். அந்த வேளையில் எல்லாம் இருட்டாக இருந்தது. எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவன் தன்னந்தனியாகத் தெருவில் காத்திருந்தான். கடைசியில் எது ஒன்றை நினைத்துப் பயந்து கொண்டிருந்தானோ, எது ஒன்றைத் தவிர்ப்பதற்கு அவனுக்கு உலகத்தில் உள்ளதையெல்லாம் கொடுத்துவிடுவானோ அது தெருமுனையில் தோன்றிற்று. அது ராமஸ்வாமி ஐயர். அவர் அழுது அழுது தொண்டை கம்மிப் போயிருந்த தன் மனைவியைத் தாங்கிக்கொண்டு அழைத்து வந்தார். இரண்டு வருடங்களாகப் பக்கத்து வீட்டிலேயே இருந்தும்கூட ஸ்ரீராம் ராமஸ்வாமி ஐயரின் மனைவியை எண்ணிப் பத்துத் தடவைகூடப் பார்த்தது கிடையாது. அவள் அப்படி வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பாள். ஊமையோ ஊனமோ என்ற சந்தேகம்கூட ஸ்ரீராமுவுக்குத் தோன்றியது உண்டு. அப்படிப் பட்டவள் அந்த அர்த்தராத்திரியில் தன் அடக்கத்தை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு அழுதுகொண்டு வருகிறாள். பிற்பகலில் யார் யார் காலிலெல்லாம் விழுந்திருக்கிறாள். பைத்தியம் பிடித்தவள் போலக் கதறியிருக்கிறாள்.

ராமஸ்வாமி ஐயரும் அவர் மனைவியும் வீட்டினுள் சென்றார்கள். அத்தனை நேரம் ஒன்றும் புரியாமல் தூங்கிப் போயிருந்த குழந்தைகள் அனைத்தும் விழித்துக் கொண்டு ஒரு சேர அழ ஆரம்பித்தன. தாயார் இன்னமும் புலம்பினாள். அது அவள் மகன். அவளுடைய ஒரே மகன். நான்கு வயதுதான் ஆகிறது. ஒரு மணி நேரம்கூட அது அவளைப் பிரிந்து இருந்ததில்லை. இப்போது அந்தக் குழந்தைக்கு உடம்பு சரியில்லாதபோது எங்கேயோ அத்துவானத்திற்குத் தூக்கிப் போய்விட்டார்கள். வியாதியுடன் படுத்திருக்கும் குழந்தைக்குப் பெற்ற தாயாரால் சிசுருஷை செய்ய முடியாது. அது தாகம் தாகம் என்று கதறும்போது ஒரு வாய்ப்பால் தர முடியாது. குழந்தையை எங்கேயோ பழக்கமில்லாத பயங்கரமான இடத்தில் ஆயிரம் குஷ்டரோகிகள், காலரா வியாதிக்காரகள் நடுவில் போட்டு விடுவார்கள். குழந்தைக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை கூற ஒருவரும் இருக்க மாட்டார்கள். குழந்தை கிலி பிடித்து நடுங்கும். அதைக் கொல்லைப்புறம் அழைத்துப் போக யாரும் இருக்க மாட்டார்கள். யாரோ மீசை வைத்திருக்கும் முரடன் தான் இருப்பான். அவன் குழந்தையை அதட்டி மிரட்டுவான். ஆண்டவனே, நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இந்த மாதிரி ஆக வேண்டும்? ஏன் இப்படி இரக்கமில்லாமல் என் குழந்தையை வாட்டுகிறாய்?

ஸ்ரீராம் இரவு முழுவதும் தூங்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்துக் குழந்தை இறந்துவிட்டது. அம்மை போட்டிருந்தபடியால் உடலை வீட்டுக்குக் கொண்டு வராமல் நேரே சுடுகாட்டிற்குக் கொண்டு போய்விட்டார்கள்.

ஒரு மாதம் கழித்து மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு ஸ்ரீராம் ராமஸ்வாமி ஐயர் வீட்டினுள் அடி எடுத்து வைத்தான். ராமஸ்வாமி ஐயர் ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். ஸ்ரீராம் மெதுவாக, “ராஜூ பற்றி உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்,” என்றான். ராஜூ என்பது ராமஸ்வாமி ஐயரின் மகனின் பெயர்.

ராமஸ்வாமி ஐயர் தலையைத் தூக்கி, “என்ன?” என்றார்.

“அவனுக்கு அம்மை போட்டிருந்தது பற்றித் தகவல் கொடுத்தது யார் தெரியுமா?”

“யாராயிருந்தால் என்ன?”

”அது நான்தான்”

ராமஸ்வாமி ஐயர் அவனையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார். பிறகு “காமு!” என்று அழைத்தார்.

அவர் மனைவி சமையலறையிலிருந்து வந்தாள். ஒரு மாதத்தில் அவள் மிகவும் மாறிப் போயிருந்தாள்.

ராமஸ்வாமி ஐயர் அவளைச் சுட்டிக் காட்டி, “அவளிடம் சொல்லு,” என்றார்.

ஸ்ரீராமுவுக்கு அந்தக் கணமே அவள் காலில் விழுந்து கதறி அழ வேண்டும் போலிருந்தது. அவன் நெஞ்சிலுள்ளதை விழுங்கிக் கொண்டு, “ராஜூவைப் பற்றித் தகவல் அனுப்பியவன் நான் தான்,” என்றான்.

அவளிடமிருந்து அவன் மிகக் கொடூரமான சாபங்களுக்காகக் காத்திருந்து, உள்ளூரப் பிரார்த்திக்கவும் செய்தான். ஆனால் அவள் தன்னுடைய இயல்பான அடக்கத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டவளாக இருந்தாள்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

(1960)

******

Feb 13, 2011

காந்தி - அசோகமித்திரன்

அன்று காபி அவனுக்கு மிகவும் கசப்பாக இருந்தது. கசப்பு அவனுக்கு என்றுமே பிடித்தமானதொன்று. பத்து நண்பர்களோடு இருக்கும்போதுகூட ‘பத்து கப், ஒன்றில் மட்டும் சர்க்கரை இல்லாமல்’ என்று அவன்தான் காபி கொண்டு வருபவனிடம் கூறுவான். அந்தக் காபியைக் குடிப்பதில் ஆரம்ப நாட்களில் இருந்த பெருமை விலகிப் போய், அதுவே பழக்கமாகப் போய்விட்டு  வெகு நாட்களாகியும், அன்றுதான் காபியின் கசப்பை கசப்பாக, ருசிக்கத்தக்கதல்லாததாக உணர முடிந்தது. ‘சர்க்கரை கொண்டு வா’ என்று சொல்லத் திடமில்லாமல் கோப்பைasokamயில் பாதிக்கு மேல் காபியிருக்க அவன் அதை ஒதுக்கி விட்டு நாற்காலியில் சாய்ந்து கொண்டான். அந்த ஹோட்டலிலும் மின் விசிறிகளை ஓட வைப்பதை நிறுத்தி வெகு நாட்களாகிவிட்டன. அவன் சட்டையின் பொத்தான்களை அவிழ்த்துக்கொண்டு ஊதிக் கொண்டான். மார்பின் மேல் காற்று கசப்பாகப் படிந்து மறைந்தது.
உள்ளிருக்கும் கசப்புத்தான் வெளியிலும் கசப்பாக உணர்வளிக்கிறது என்று  அவனுக்குத் தெரியாமலில்லை. உண்மை கசப்பானது, உண்மை கசப்பானது என்று நண்பர்களுடன் விவாதிப்பதையே மிக முக்கியமானதாக, அர்த்தம் பொருந்தியதாக, வாழ்வே அதில்தான் மையம் கொண்டிருக்கிறது என்பது போன்ற மனநிலை கொண்டுவிட்ட  இந்த ஏழெட்டு வருட காலத்தில் பல நூறு முறை அவன் அதைக் கூறியிருப்பான். உண்மை கசப்பானது என்று யாராலோ எந்தச் சந்தர்ப்பத்திலோ கூறப்பட்டாலும் அவர்கள் அவனைப் பார்த்து ஒரு முறை கண் சிமிட்டும் அளவுக்கு அவன் உண்மை கசப்பானது என்ற வாக்கியத்துடன் இணைக்கப்பட்டிருந்தான். அதில் அவனுக்கு முதலில் சங்கோசமிருந்து பின் சங்கடமிருந்து, அதன் பின் பெருமையிருந்து, அதற்குப் பின்னால் அது சம்பிரதாயமான கிட்டத்தட்ட உணர்வேயெழுப்ப இயலாத, செத்த அசைச் சொல்லாகவும் போய் விட்டிருக்கும் என்ற நேரத்தில் அவன் கசப்பை மனதில், உடலில், வாயில், காபியில் உணர வந்திருப்பதை நினைக்க, அந்த நினைப்பைத் தடுக்க இயலாமல் போன தன் நிலையை எண்ணி மேலும் மாய்ந்து போனான்.
இவ்வளவிற்கும் அவனைப் பற்றிப் பொய்யைப் பரப்பித் திரிபவன் அவனுடைய நண்பன். ‘திரிபவன்’ என்று நினைத்து விட்டோமே என்று வருத்தம் கொண்டான். அவனைப் பற்றி பொய்யை ஒருவரிடத்தில், ஓரிடத்தில் மட்டும் அவன் நண்பன் கூறியிருந்தால் அந்த நண்பனையே நேருக்கு நேர் பார்த்துக் கேட்டுவிடலாம். ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் அந்த நண்பன் பலரிடத்தில், பல சந்தர்ப்பங்களில் பொய்யை, பல பொய்களைக் கூறியிருக்கிறான். தீர்மானமாக, முன் திட்டத்துடன், துவேஷத்துடன் கூறியிருக்கிறான். இன்னமும் கூறி வருகிறான். இனியும் அந்த நண்பனைப் பார்த்து அதுபற்றிக் கேட்க முடியாது, கேட்க வேண்டியதில்லை. அந்தப் பொய்களைத் தான் நம்புகிறான் என்னும் அளவுக்கு அந்த நண்பன் நடந்து கொண்டு வருகிறான். அபிப்ராயங்கள் பற்றிச் சந்தேகம் கொண்டு, சந்தேகம் கொள்ள வைத்துப் பேசலாம், விவாதிக்கலாம், மாற்றிக் கொள்ளலாம், மாற்ற வைக்கலாம். ஆனால் நம்பிக்கைகளை மாற்ற முடியுமா?
அவனுக்கு அவனைப் பற்றிப் பொய்கள் வெளியில் உலவுகின்றன என்பதில்கூட அவ்வளவு துக்கம் ஏற்படவில்லை. ஆனால் அந்த நண்பனால் அவை உலவவிடப் படுகின்றன என்பதுதான் சித்ரவதையேற்படுத்தியது. நண்பன்! எப்பேர்ப்பட்ட நண்பன்.
ஒருகணம் எல்லா வேதனையும் மறந்து அந்த நண்பனைப் பற்றிய ஒட்டுமொத்தமான உணர்வில் தன்னை பற்றிய நினைவும் மறைய லயித்தான். அவர்கள் இருவரின் உறவு நான்கு மாதங்களுக்கு மேற்பட்டதில்லை. நான்கே மாதங்கள். தன்னைப் பிறப்பிக்க அம்மா, அப்பா; தன்னோடுகூடப் பிறந்தவர்கள்; சந்தர்ப்ப சூழ்நிலையானாலும் தன்னிச்சை காரணமாகவும் பள்ளி நாட்களில் ஏற்பட்ட எண்ணற்ற நண்பர்கள்; உறவுகள்; நான்காம் படிவத்தில் டபிள்யு. எச். ஹென்லியின் ‘இரவிலிருந்து’ என்னும் கவிதையை ஒரு தரிசனமாக மாற்றிக் கற்றுக்கொடுத்த ஆங்கில மொழி ஆசிரியர்; எவ்வளவோ மாதங்கள் புரியாத முடிச்சாக இருந்த கால்குலஸ் இண்டெக்ரேஷன் அடிப்படையை ஒரு வலுவிழந்த நொடியில் தனக்குப் பிரகாசமாக்கிய கணிதப் பேராசிரியர்; நன்றாகத் தூக்கியெறியப்பட்டு மெதுவாகக் கீழிறங்கும் சுழற் பந்தைத் தவறாமல் கவர் - டிரைவ் செய்யப் பாதங்களை நகர்த்திக் கொள்ளக்கற்றுக் கொடுத்த கிரிக்கெட் வைஸ் காப்டன்; தன்னுடைய அழுக்குப் படிந்த ஷர்ட்களையும் டிரௌசர்களையும் பச்சைக் குழந்தையைக் கையாளுவது போல நல்ல வெயில் நேரத்திலும் பொறுமையாகக் கிணற்றடியில் சோப்புப் போட்டு அலசி உலர்த்தும் அவன் தங்கை; இப்படி இன்னும் எவ்வளவோ பேர்கள் எவ்வளவோ ஆண்டுகளாக அவன் மனத்தில், அவன் பிரக்ஞையில் ஆழ்ந்து போயிருந்த போதிலும் அந்த நண்பன், நான்கே மாதங்கள் முன்பு ஏற்பட்ட நண்பனுக்கு அவனுடைய முழு ஜீவித இயக்கத்தையும் அர்ப்பணம் செய்திருந்தான். நண்பர் வட்டமே முழு உலகமும் என்றிருந்த அந்த வயதில், அந்த நண்பர் வட்டத்திலும் அந்த நண்பனே முழு வியாபகமும் என இருந்த நேரத்தில் தன் பிரக்ஞையே சிதறிப் போகிற விதத்தில் அந்த நண்பன் தோற்றம் கொண்டு விட்டான். தோற்றம் என்றால் என்ன?
சளசளவென்று பேசிக்கொண்டு காலைத் தேய்த்துத் தேய்த்து நடப்பதால் உண்டாகும் அளவு மீறிய செருப்புச் சப்தத்துடன் மூன்று இளைஞர்கள் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள். வேண்டுமென்றே செய்கிறார்கள் என்றுகூடத் தோன்றும் முறையில் நாற்காலிகளைத் தடாம் முடாம் என்று நகர்த்தி ஒரு மேஜையைச் சுற்றி உட்கார்ந்தார்கள். அவர்களில் ஒருவனின் தலை மயிர் நீண்டு வளர்ந்து கழுத்துக்குப் பின்னால் ஷர்ட் காலரைத் தொட்டுப் புரண்ட வண்ணமிருந்தது. இப்போது எல்லோரும் தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் கழுத்துக்கு அடியில் உள்பக்கமாக மயிர் தானாகச் சுருண்டு கொள்வதில்லை. அவனுடைய நண்பன் முடி அப்படித்தான் சுருண்டு கொண்டிருக்கும். அவனை முதன் முதலாகச் சந்தித்த தினத்தன்றுகூடப் பேச்சு எது எதிலோ சென்று தலைமுடி பற்றி ஒருகணம் சுழன்றபோது அந்த நண்பன் பெருமையடித்துக் கொண்டான். அன்றிரவு மற்ற நண்பர்கள் நேரமாகிவிட்டது என்று ஒவ்வொருவராகச் சென்றுவிட்ட பின் அவர்கள் இருவரும்தான் வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அறிமுகமான முதல் நாள் என்ற உணர்வே இருவருக்கும் தோன்ற முடியாத வண்ணம் அந்த நண்பன் தொடர்ச்சியாகவும் முழு ஈடுபாடுடனும் பேசிக் கொண்டிருந்தான். அவன் எதைப் பற்றிப் பேசினாலும், அவன் பேசுவது மிகவும் அபத்தமானதாக இருந்தாலும், முழு மூச்சோடும் மனித சம்பாஷணையில் சாத்தியமான அதிக  பட்ச ஆர்வத்துடனும் பேசிக்கொண்டிருந்தான். இவன் அந்த நண்பன் பேசும் விஷயங்களைக் காட்டிலும் அவனுடைய பேச்சு வெளிப்பாடு விதத்தில் லயம் கொண்டு தலையசைத்துக் கொண்டிருந்தான். அந்த இடத்தில் அவர்கள் உட்கார்ந்திருந்த நிலையில் அப்போது ஆகாயத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த நட்சத்திரங்களும் வேறு சில வீடுகளின் மாடிப் பகுதிகளும் மட்டும் நிழலாகப் பார்வையில் தெரிந்தன. அப்போது அந்த நண்பன் சட்டென்று “அதோ பார்” என்றான். அது எதிர்வீட்டு மொட்டைமாடி. அங்கே யாரோ ஒரு பையன் ஒரு சிம்னி விளக்கு உதவியில் பரிட்சைக்குப் படித்துக்கொண்டிருக்க வேண்டும். விளக்கு இவர்கள் இருந்த இடத்தில் தெரியவில்லை. அந்தப் பையன் எழுந்திருக்கிறான். சிம்னி விளக்கின் மங்கல் ஒளி ஒருகணம் பையன் முகத்தில் விழுந்தது. அந்த ஒருகணத்தில் கோடிகணக்கான மைல் தூரத்தில் நட்சத்திரங்கள் சிறு புள்ளிகளாக மின்னிக் கொண்டிருக்கும் கருநிற வானப் பின்னணியில் சுமார் இருபது முப்பது அடி தூரத்தில் அந்தப் பையனின் முகத்தின் ஒரு பகுதி மட்டும் சிம்னி விளக்கு ஒளிவிழுந்து ஆகாயத்தில் சஞ்சரிக்கும் தேவதை போல - அப்படித் தேவதைகள் இருக்குமானால்  பூமியின் எண்ணற்ற ஸ்தூல சக்திகளால் கட்டுப்பட்டிருக்கும் மனித உணர்வை, மனிதக்கற்பனையை, உளமன எழுச்சியை, எல்லைக்கடங்கா அகண்ட வெளியில் இழுத்துச் செல்லும் தேவதை போலக் காட்சியளித்தது. அந்த ஒரு கணம் அப்பையனின் முகம் சாந்தத்தில், அமைதியில், அழகில், பரிசுத்தத்தில் தெரிந்தது தெரியாததான இலட்சிய மனிதப் பிறவிகள் யாவரையும் ஒரு நொடியில் பிரகாசப்படுத்திப் போவது போல இருந்தது. அந்தப் பையன் விளக்கை எடுத்துக் கொண்டு கீழே இறங்கிப் போய்விட்டான். நண்பன் பேசுவதை நிறுத்திவிட்டு வெகுநேரம் சிலைபோல உட்கார்ந்திருந்தான். அவன் லயம் கலைந்து ஒரு முறை பெருமூச்சு விட்டவுடன் இவன், “நீ சாப்பிட்டுவிட்டு இன்றிரவு இங்கே இருந்து விடேன்,” என்றான். சிறிது நேரம் முன்பு வரை ஆவேச இயக்கத்தின் உருவமாக இருந்த நண்பன் இப்போது எதிர்ப்பே சாத்தியமில்லாதவனாக மாறியிருந்தான். இரவு உணவு முடித்துவிட்டு இருவரும் மீண்டும் மாடிக்கு வந்தார்கள். ஏனோ இருவருக்கும் பேச விஷயங்களே இல்லாமல் போயிருந்தது. திடீரென்று நண்பன் அழ ஆரம்பித்தான். விம்மி விம்மி அழ ஆரம்பித்தான். இவன் அவனை அணைத்துக் கொண்டான். என்ன காரணம் என்று கேட்கத் தோன்றாமல் அவனை இறுக அணைத்துக் கொண்டான். அந்தச் சோகம் அற்ப சுய நல சோக்கு மன முறிவால் உண்டானதாகத் தோன்றவில்லை. ஒரு மனிதனின் வாழ்க்கைச் சோகமாகவும் தோன்றவில்லை. காலம் காலமாகக் கோடிக்கணக்கில் தோன்றி, உழன்று, மறைந்த மனித குலம் அனைத்திற்குமாக உண்டான சோகமாக இருந்தது. மனிதனின் முதன்மையானதும், மகத்தானதுமான இழப்புக்கு ஏற்பட்ட சோகமாக இருந்தது. மனித இனம் இழந்த பரிசுத்தத்திற்காக உருகி அழித்துக்கொள்ளும் சோகமாக இருந்தது. நண்பன் வெகு நேரம் அழுது ஓய்ந்தபின் அப்படியே படுத்துத் தூங்கிவிட்டான். இவனும் தன் கண்களிலிருந்து தாரை தாரையாகப் பெருகிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு படுத்தபடியே வெகுநேரம் ஆகாயத்தைப் பார்த்த வண்ணம் விழித்திருந்தான். அந்த நண்பன், பரிசுத்தத்தின் எல்லையையும் சோகத்தின் எல்லையையும் உணர்வில் எட்டி அந்த மகத்தான அனுபவத்தை இன்னொருவனுக்கும் பகிர்ந்தளிக்கக்கூடிய நண்பன், இப்பொழுது முன் திட்டத்தோடும் துவேஷத்தோடும் ஒருவனைப் பற்றிப் பொய்களைக் கூறிப் பரப்பி வருகிறான்!
அந்த மூன்று இளைஞர்கள் எழுந்து போய்விட்டார்கள். அவர்களை விட ஓரிரு வயதே பெரியவனாக இருக்கக்கூடிய தனக்கு அவர்களை எப்படித் தனியே இளைஞர்கள் என்று அழைக்கத் தோன்றியது என்று எண்ணிக் கொண்டான். ஏன் தன்னால் இப்படி முதுமையுணர்ச்சியோடு சிந்தனையில் விழுந்து கிடக்க முடிகிறது? அவன் எதிரே அந்த அசைவ ஹோட்டலிலும் தனக்கு இடமுண்டு என்று சொல்வது போல் ஒரு காந்திப் படம் புன்முறுவலித்துக் கொண்டிருந்தது. காந்தி! எப்பேர்ப்பட்ட மனிதர்! எவ்வளவு அசாத்தியமான நம்பிக்கைகளும் எதிர்ப்பார்ப்புகளும் கொண்ட அபூர்வப் பிறவி! முப்பது வயதிலேயே முதுமை கொண்ட மனிதர். எங்கோ கடல் கடந்த நாட்டில் தனக்கு நேர்ந்த ஒரு அவமதிப்பை மனித இனத்திற்கே பொதுமைப்படுத்திக் கொள்ளக்கூடிய மன விசாலம் பெற்று இயற்கையின் தன்னிச்சையான அள்ளித் தெளிப்பால் கிடைத்த தோல் நிறத்தாலே கூட ஒரு மனிதன் இன்னொருவனை விட உயர்த்தி எனக் கொள்ளக்கூடிய எந்தவித நியாயவாதத்திற்கும் உட்பட முடியாத ஆனால் எவ்வளவோ நூற்றாண்டுகளாக நடைமுறை வாழ்க்கையில் ஒன்றிப் போய்விட்ட சிருஷ்டி விநோதப் பெருமையையும் அகங்காரத்தையும் முற்றிலும் உணர்ந்து, சோகத்தில் தோய்ந்து, அந்தச் சோகத்தின் உந்துதலால் எண்ணற்ற அசாத்தியமான பணிகளில் ஈடுபட்ட மனிதர். அந்த வெள்ளிக்கிழமையன்று மாலை குண்டடிப்பட்டுச் சாகும்வரை சுயசுத்திரிகரிப்புத் தவத்தைத் தவறவிடாதவர். மனித இயல்பின் சபலங்களையும் பலவீனங்களையும் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவர். அப்படிப்பட்ட மனிதருக்கு மனமுறிவும் ஏமாற்றங்களும் சாத்தியமேயில்லை. ஆனால் அவருடைய கடைசி ஆண்டுகள் கண்ணீரில் உப்பரிக்கப்பட்டவை. அழையா இடங்களுக்கு அவராகப் போய் அவரைக் கேட்காத ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் அவராகக் கொடுத்து, பிரளயமாகப் பொங்கி வந்தப் பயங்கரக் கேடுகளுக்கு அவரே காரணம் எனத் தோற்றம் கொண்டு மற்றோரையும் நினைக்க வைத்து, தான் கண்டெடுத்து உருவாக்கி வளர்த்துவிட்ட சீடர்களைக் கிழம் ஏன் இப்படி தொல்லை கொடுக்கிறது எனச் சொல்லாமல் சொல்ல வைத்து, தன்னை வணங்கிய ஒருவன் கையாலேயே சாவும் அடைந்தவர். மனித சிந்தனைத் தொடர்ச்சி தொடக்க காலத்திலிருந்து இன்று வரை ஏற்பட்டுள்ள துன்பியல் காவியங்களில் எது மகத்தானது? இராமன் கதையா? தருமனா? ஈடிபஸ்ஸா? ஒதெல்லோவா, லியர் அரசனா, டாக்டர் ஃபாஸ்டஸ்ஸா? இல்லை, காந்தியல்லவா? களங்கம் நிறைந்த புறவாழ்க்கையை வெறுத்து ஒதுக்காமல் தன் வரையிலாவது சாதிக்க வேண்டும் என்று பரிசுத்தத்தையே நாடிச் சென்ற தீரன் காந்தி அல்லவா?
அவன் காந்தியைப் பார்த்தது கிடையாது. அவன் பிறந்ததே அவர் இறந்து சில ஆண்டுகளுக்குப் பிறகுதான். அவரைப்பற்றி அவன் முதன் முதலில் கேட்டதெல்லாம் அவர் பெயருடன் கூடவே தாத்தா, தாத்தா என்று சொல்லப்பட்டு ஏதோ பல்லுப்போன, உடல் வலுவிழந்த, விவரம் அறியாச் சிறுவர்களுக்கு மட்டும் களிப்பூட்டும் விதூஷக உருவம்தான். ஆனால் அப்படி இல்லை, எண்பது வயதை நெருங்கியபோதும் உலகம் அனைத்துக்கும் பொதுவான, பொருத்தமான பிரச்சினைகளில் முழு மூச்சுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், தனக்கு அந்தரங்கம் என்று எதையுமே வைத்துக் கொள்ளாதவர், ஒரு நாளில் இருபத்திநான்கு மணி நேரத்திலும் தன்னை மற்றவர் பார்வைக்கும் பரிசோதனைக்கும் பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் வெளிப்படுத்திக் கொண்டவர். தனக்கே கூச்சமேற்படுத்தும் நினைவுகளையும் அனுபவங்களையும் அவரைப் பேர் ஊர் தெரியாதவர்கள் கூட என்றோ எப்போதோ அறிந்து அவரைப்பற்றி விகாரமாக எண்ணிக் கொள்ளக்கூடிய வகையில் ஒப்புதல் வாக்குமூலம் போல சுயசரிதை எழுதியவர், தான் நேற்றிருந்தவனில்லை, ஒவ்வொரு கணமும் மறுபிறவி எடுக்கக் கூடியவன் - மாற்றம் கொள்ளக் கூடியவன் - உயரக்கூடியவன் - என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் முன்கணம் களங்கமுற்றதை  இந்தக் கணம் பகிரங்கப்படுத்தத் தயங்காதவர், இந்த மனிதர் கடவுளைக் குறிப்பது என்று தான் நம்பிய ஒரு சொல்லை உச்சரித்தபடிதான் தன் இறுதி மூச்சை விட்டார். அவர் கடவுளைக் கண்டாரா? கடவுள்தான் மனித துயரத்தின் எல்லையா? இந்த மனிதரால் எப்படிச் சிரிக்கவும் முடிந்திருக்கிறது?
காபிக் கோப்பை மீது உட்கார வந்த ஒரு ஈயைச் சட்டென்று விரட்டினான். அரைக் கோப்பை அளவு மிஞ்சியிருந்த காபி மீது லேசாக ஏடு பரவ ஆரம்பித்திருந்தது. இந்த காபியைத்தான் குடிக்கப் போவதில்லையே, ஏன் ஈயை விரட்டினோம் என்று அவனுக்குத் தோன்றியது. ஓர் ஈ எத்தனை நாட்கள் உயிர் வாழ்ந்திருக்கும்? பத்து நாட்கள்? இருபது நாட்கள்? ஒரு மாதம்? அந்தக் குறுகிய கால வாழ்க்கையில் ஒரு கணம், அதன் ஒரு வாய் உணவு, பெரும்பங்கைத்தான் வகிக்க வேண்டும். அவனால் இப்போது சாக்கடையில் கொட்டப்பட இருக்கும் அந்த காபி எத்தனை ஜீவ ராசிகளின் முழு ஜீவித ஆதாரமாக இருக்கக்கூடும்?எவ்வளவு எளிதில் சிருஷ்டி தர்மத்தை, ஓருயிர் தான் வாழவேண்டும் என்று மேற்கொள்ளும் இயக்கத்தை, தன்னால் ஒரு சலனம் கூட இல்லாமல் புறக்கணிக்க முடிகிறது, துஷ்பிரயோகம் செய்ய முடிகிறது? மனிதனுக்கும் மனிதனுக்கும்கூட இப்படித்தானோ? காந்தி இதற்குத்தான் மீண்டும் மீண்டும் தான் ஆங்கிலேயரை வெறுக்கவில்லை, ஆங்கிலேயரைத் துவேஷிக்கவில்லை என்று கூறிக் கொண்டாரோ?
ஆனால் காந்தியை அவனுடைய நண்பன் ஒத்துக்கொண்டதில்லை. காந்தியாலே கூட தனக்கும் தன் நண்பனுக்கும் இப்படிக் குரோதம் தோன்றிவிட்டதோ என்று நினைத்துக் கொண்டான். “காந்தியைப் போல ஒரு அயோக்கியன் மனித சரித்திரத்திலேயே பிறந்ததில்லை. அவனைப் போல் ஒரு மனித இன விரோதி செயல்பட்டதேயில்லை. இன்று சோவியத்தாரர்கள் அவர்களுக்குச் சௌகரியமாயிருக்கிறது என்று அவர்களும் காந்தி பஜனை செய்யலாம். ஆனால் அவனைப் போன்ற ஒரு பாட்டாளி வர்க்கச் சத்ரு உலகத்தில் தோன்றியதே இல்லை” - இவ்வளவு திட்டவட்டமாக, தீவிரமாக, பெயர் ஊர் தெரியாத ஒரு சிறுவன் முகத்தின் பரிசுத்தத் தோற்றத்தில் உள்மன வயப்பட்டு உருகிக் கண்ணீர் வடிக்கவும் கூடிய அவனுடைய நண்பன் கூறியிருந்தான். திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறான். காந்தியைப் பற்றித் தான் அறிந்ததெல்லாம் அவனுடைய நண்பனும் அறிந்திருக்க வேண்டும். அப்படியிருந்தும் இவ்வளவு நிந்தனையை வெகு எளிதாக மனதின் அடித்தளத்திலிருந்து காந்திமீது சுமத்த முடிகிறது. “எப்படிக் கூறுகிறாய்?” என்று இவன் கேட்டிருக்கிறான்.
“அந்த மனிதனுடைய ஒவ்வொரு செய்கையும் அவன் அயோக்கியன் என்று காட்டுகிறது. ஊருக்கெல்லாம் உபதேசம். தான் செய்வதெல்லாம் அதற்கு நேர் எதிரானது.”
“எப்படி?”
“ஒரு செயல்கூடப் பாட்டாளி மக்கள் நன்மைக்காக என்று கிடையாது. தானும் தன் பனியா இனத்தினரும் நிரந்தரமாக ஏகபோக வர்த்தக ஆதிக்கம் இழக்காமல் இருக்கவேண்டும் என்றுதான் அவன் செயல்பட்டது. ஒருமுறை கூட உண்மையான தொழிலாளிகள் வர்க்கத்துடன் இணைந்துகொள்ளவில்லை மாறாக ஒவ்வொரு தொழிலாளர் கிளர்ச்சியின் போதும் பனியா முதலாளிகள் உடைமைகளையும் நலன்களையுமே பாதுகாக்க விவரமறியா ஏழைகளைப் பலியிட்டிருக்கிறான். சுதேசி இயக்கம் சுதேசி இயக்கம் என்று கூச்சலிட்டதெல்லாம் பனியா மில் முதலாளிகளின் கொள்ளையடிப்பைப் பாதுகாக்கத்தான். ஆங்கிலத் துணி பகிஷ்கரிப்பு பம்பாய் மில்களின் ஏகபோக வர்த்தகத்தை வலுப்படுத்தத்தான். எந்தத் தொழிற்சங்கக் கிளர்ச்சியிலும் தலையிட்டு  மில் முதலாளிகளுக்குச் சாதகமாகவே கிளர்ச்சியைத் திசை திருப்பி விடுவதுதான் அவன் நோக்கம். எந்த உண்மையான மக்கள் எழுச்சியும் பண முதலைகளுக்குச் சாதகமாக மாற்றி விடுவதுதான் அவன் ஆயுள் லட்சியம். கை நூற்பு, கைவேலை, சர்வோதயம் என்றெல்லாம் ஏழைகள் என்றென்றைக்கும் ஏழைகளாகவே இருந்து சாவதற்காகச் செய்த தந்திரம். யாரும் ஆங்கில மருந்துகளை உபயோகிக்கக் கூடாது, மேல் நாட்டு வைத்திய முறை நோயாளிகளைக் கொள்ளையடிப்பதற்காக என்று நாளெல்லாம் அலறிவிட்டுத் தனக்கு மட்டும் உடம்புக்கு வந்தால் உடனே அதே வைத்தியர்களிடம் ஓடுவதுதான் அவனுடைய வழக்கம். ‘உனக்கு ஆபரேஷன் செய்தால் நீ பிழைப்பாய்’ என்று கூறியபோது வாயை மூடிக்கொண்டு ஆபரேஷன்  செய்துகொண்டவன் தானே இந்தக் காந்தி!”
“தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வது யாருக்கும் முதல் தர்மமில்லையா?”
“அதுதான், அதுவேதான். தன் உயிர் என்றால் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கெல்லாம் உபதேசம். மாட்டுப் பால் குடித்தால் ஹிம்சை. ஆட்டுப்பால் குடித்தால் அஹிம்சை.”
“இப்படி ஒன்றிரண்டு விஷயங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரின் முழு வாழ்நாள் சாதனைகளையும் இலட்சியங்களையும் புறக்கணிக்க முடியுமா?”
“என்ன சாதனை? என்ன இலட்சியம்? ஒத்துழையாமை என்று கூறி மக்களை ஏவி விடுவது, அது ஒரு உண்மையான மக்கள் புரட்சியாக மாறும்போது எஜமானர்களுக்குச் சாதகமாகக் கைவிடுவது! பெஷாவரில் என்ன நடந்தது?மக்களோடு கார்வாலி ரெஜிமெண்ட் இணைந்து கொண்டு ஒரு வாரத்திற்கும் மேலாக ஆங்கில ஆதிக்கத்தை உதறித் தள்ளியிருக்கிறது. நினைத்துப் பார்க்கவும் முடியாத பயங்கர அடக்குமுறையைக் கட்டவிழ்த்து அந்த கார்வாலி ரெஜிமெண்டைச் சின்னாபின்னமாகப் படுகொலை செய்து, சித்திரவதை செய்து அந்தமானில் தீவாந்திரத்திற்கு அனுப்பிய போது இந்த மகாயோக்கியன் இர்வினுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறான். ‘அரசியல் கைதிகள் எல்லாரையும் விடுவிக்க வேண்டும். கார்வாலி வீரர்களைத் தவிர.’ இவன் தேசப்பிதா.”
“நீ முழு விவரங்களையும் ஒருங்கிணைத்துப் பார்க்காமல் பகுதி பகுதியாகத் துண்டித்துப் பேசுகிறாய்.”
“நான் பேச  என்ன இருக்கிறது? இந்திய சரித்திரம் முழுக்கவே இவன் துரோகச் செய்ல்களை அடுக்கிக் கொண்டே போகிறதே? பம்பாயில் கப்பற்படைக் கிளர்ச்சி போது என்ன நடந்தது? கப்பற்படை வீரர்களுடன் பம்பாய் நகரத் தொழிலாளர் வர்க்கம் அனைத்துமே சேர்ந்து கொண்டது. இந்திய வரலாற்றிலேயே முற்றிலும் சுயமான, பூரணமான இந்து முஸ்லீம் - இணைப்பு என்று அப்போதுதான் நடந்தது. அந்தப் போராட்ட மட்டும் அரவணைக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருந்தால் 1857 புரட்சியைக் காட்டிலும் பரிபூரணமான உண்மையான சுதந்திரப் புரட்சியாக மாறியிருக்கும். ஆனால் இந்த மகாத்மா என்ன செய்தான் அப்போது? ஆங்கிலப்படை பலத்தைத் திரணமாக மதித்து எதிர்த்து நின்ற அந்த உண்மையான வீரர்களை ஆதரித்து ஒரு வார்த்தை கூறவில்லை. ஒரு அறிக்கை விடவில்லை. மாறாக அவர்கள் முதுகில் கத்தி பாய்ச்சினான். ‘இந்த விதமான இணைப்பு நான் வேண்டும் உன்னத ஹிந்து - முஸ்லீம் இணைப்பு அல்ல. படைவீரர்கள் அதிகாரிகளை மீறித் தள்ளும் கட்டுப்பாடற்ற தன்மையை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.’   கட்டுப்பாடற்ற தன்மை! இவன் வாழ்க்கையே முழுக்க முழுக்கக் கட்டுப்பாடற்ற தன்மை. இவன் உபதேசிக்கிறான் கட்டுப்பாடு!”
“நீ தவறான ஆதாரங்களையே படித்திருக்கிறாய்.”
“இவன் தவறான ஆதாரங்களைத்தான் உலகமெல்லாம் பரப்பியிருக்கிறான்? அதைத்தானே உலகமெல்லாம் தெரிந்து கொண்டிருக்கிறது? பொய், புனைசுருட்டு, திரித்துக்கூறல்,  உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல், தனக்கு ஒரு நியாயம், மக்களுக்கு வேறொரு நியாயம்....”
“உன் ஆதாரம் எது? நீ எதை வைத்துக்கொண்டு இப்படிப் பேசுகிறாய்?”
“நீ ஆர்.பி. டட் எழுதிய ‘இன்றைய இந்தியா’ படி. புரியும் இந்த மகாத்மாவின் மகாத்மியம். இவன் கைப்பட எழுதிய கடிதங்களும் அறிக்கைகளுமே இருக்கின்றன.”
“அவ்வளவுதானா? ஒருவரைப்பற்றி ஒருவர் எழுதியதை மட்டும் வைத்துக்கொண்டு தீர்ப்புக்கூறிவிட முடியுமா? ஒருவன் எண்பதாண்டுகள் பொது வாழ்க்கைக்கே அர்ப்பணித்துச் செயல்பட்டிருந்த போது ஒருவர் விமர்சனத்தை மட்டும் வைத்துக்கொண்டு அந்த எண்பதாண்டு பணிகளை உதறித் தள்ளிவிட முடியுமா? நாம் அவரின் செயல்களை நாமாகப் பரிசீலித்து முடிவுக்கு வர வேண்டாமா?”
”என் பரிசீலனை முடிந்துவிட்டது. இவன் கார்வாலி ரெஜிமெண்டைத் துரோகம் செய்யவில்லை என்று கூற முடியுமா? இவனுடைய காந்தி இர்வின் ஒப்பந்தம் பனியா முதலாளிகள் உடமைகள் பாதுகாப்புக்காகவென்றே செய்யப்படவில்லை என்று கூறமுடியுமா? இவன் மேல்நாட்டு வைத்தியமுறை ஆபரேஷன் செய்து கொள்ளவில்லை என்று கூற முடியுமா? இவன் கப்பற்படை வீரர்கள் எழுச்சியை ஒடுக்குவதற்குச் செயல்படவில்லை என்று கூறமுடியுமா? என் பரிசீலனை முடிந்துவிட்டது. அஹீம்சையாம் அஹிம்சை! காஷ்மீரில் இவன் அஹிம்சையைக் காண்பித்திருக்கலாமே? படையெடுப்புக்கு எதிராக இந்தியத் துருப்புக்களை அனுப்பியபோது இவன் வாயை மூடிக்கொண்டிதானே இருந்தான்!”
இப்போது காந்தி படம் இன்னமும் அதிகமாகப் புன்முறுவலித்துக் கொண்டிருப்பது போல் தோன்றிற்று. பல கோடி ஆண்டுகள் முன்பு நேர்ந்திருக்க வேண்டிய சிருஷ்டியிலிருந்து தொடங்கி உலக வரலாற்றின் ஒவ்வொரு நாளும் மறுபரிசீலனைக்கும் புது முடிவுகளுக்கும் உட்பட்டுக் கொண்டிருக்கும் இன்றுகூட காந்தி பற்றி மட்டும் ஒருவனுக்கு அவன் பரிசீலனை முடிந்துவிட்டது. அந்த நண்பனுக்குக் காந்தி பற்றிய பரிசீலனை மட்டும் என்றில்லை. அந்த நண்பனுடைய காந்தி பற்றிய பரிசீலனையைத் துணை வைத்துக்கொண்டு தன்னைத் தானே பரிசீலித்துக்கொள்ள முடியுமா எதை சத்தியம் என்று வைத்துக்கொண்டு அடுத்தக் கட்டத்திற்குப் போவது? இதனால் தான் காந்தி தன் சுயசரிதத்தைச் ‘சத்திய சோதனை’ என்று பெயரிட்டாரோ?
அவனுடைய நண்பன் ‘சத்திய சோதனை’யைப் படித்திருக்க மாட்டானென்று அவனுக்குத் தோன்றிற்று. அதைப் படித்திருந்தால் அவன் பார்வைக்கு இன்னும் டஜன் கணக்கில் குறைகளும் பாதகங்களும் அடுக்க முடியும். அந்த மனிதர் அதெல்லாவற்றையும் எழுதி வைத்துப் போயிருக்கிறார். அது முழு வாழ்க்கைச் சுயசரிதம் அல்ல. அதில் கண்டிருப்பதற்குப் பின்னர் இன்னும் இருபதாண்டுகளுக்கும் மேலாக காந்தி வாழ்ந்திருக்கிறார். உலக சரித்திரம் அந்த இருபதாண்டுகளில்தான் பயங்கரத் தீவிரம் அடைந்திருக்கிறது. முழு தேசங்கள் அழிந்திருக்கின்றன. முழு நம்பிக்கைகள் அழிந்திருக்கின்றன.  முழு கலாச்சாரங்கள் அழிந்திருக்கின்றன. நேரடியாகவும் சில இயக்கங்களின் விளைவாகவும் மக்கள் லட்சக் கணக்கில் அணு அணுவாகவும் ஒரேயடியாகவும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளாக மனிதர் வாழ்ந்த காலத்தில் ஒருவன் முகத்தை இன்னொருவன் அறிந்துதான் கொலை செய்திருக்கிறான். இன்று கொலையாளிக்கு அவன் யாரை எவ்வளவு பேரைக் கொலை செய்யப்போகிறான் என்று தெரியாது. அவன் வரையில் அவன் விசையைத் தள்ளுபவன். கொலை செய்யப்படுபவர்களுக்கும் அவர்களுடைய முடிவுக்கு எவன் உண்மையான காரணம் என்று தெரியாது. அப்படித் தெரிந்தாலும் அவன் பல ஆயிரம் மைல்களுக்கப்பால் ஒரு சுரங்க அறையில் மிகவும் பத்திரமாக, மிகவும் பத்தியமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பான். அங்கு அவன் கூட இருக்கும் நாய் பூனைகளிடம் கருணையின் வடிவமாக இருப்பான்..
நான்  யாரையோ எதற்குச் சொல்ல வேண்டும், என் நண்பனே அப்படித்தானே இருக்கிறான்? - சிந்தனை பொது விஷயங்களிலிருந்து பிரிந்து மீண்டும் தன்னைப் பற்றியதாக மாறியதில் அவன் வேதனை தணிந்தது போலிருந்தது. சட்டென்று பொங்கி எழுந்தது. தன்னலனைப் பற்றிய சிந்தனைகளுக்குத்தான் எவ்வளவு கட்டுப்பட்டு அடிமையாக இருக்கிறானென்ற உணர்வு அவன் வேதனையை அக்கணத்தில் விம்மியழுது தீர்க்க வேண்டியதொன்றாகக் கூர்மைப்படுத்தியது. அந்த உண்மையும் எல்லா உண்மைகளைப் போலக் கசப்பாக இருந்தது.
அவன் எதிரே அரைக்கோப்பையளவில் ஆறிக்குளிர்ந்து போயிருந்த காபி மீது காற்று வீசும்போது நூற்றுக்கணக்கான நுணுக்கமான கோடுகளின் நெளிவுமூலம் காபி திரவத்தின் மேற்பரப்பில் பரவிய மெல்லிய ஏடு தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. 
(1973)

தட்டச்சு : சென்ஷி

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்