Showing posts with label பூமணி. Show all posts
Showing posts with label பூமணி. Show all posts

Dec 16, 2012

பூமணிக்கு கீதாஞ்சலி விருது – தமிழ்மகனுக்கு கோவை இலக்கிய விருது

கீதாஞ்சலி  விருது

கோவை இலக்கிய விருது

pooman 150px-TAMILMAGAN
பூமணி
தமிழ்மகன்

.பிரான்சுநாட்டைத் தவிர்த்து பிற நாடுகளிலிருந்து வெளிவரும் பிரெஞ்சுமொழி படைப்புகளை ஊக்குவிக்கவும், இந்திய இலக்கியங்களை ஆதரித்தும்,  கீதாஞ்சலி என்ற அமைப்பு வருடந்தோறும் பரிசுகளை இவ்விருபிரிவிற்கும் வழங்கி வருகிறது. தேர்வு செய்யப்படும் படைப்புகள் மதச்சார்பற்றும், பிரபஞ்ச நோக்குடைத்ததாகவும், மனிதநேயத்தைப் போற்றுகின்ற வகையிலும் இருக்கவேண்டுமென்பது தங்கள் எதிர்பார்ப்பென தேர்வுக் குழுவினர் கூறுகிறார்கள். இந்தியாவில் இருவருக்கும், எகிப்திய எழுத்தாளர் ஒருவருக்கும்  ஏற்கனவே பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள். இவ்வருடம் இந்திய எழுத்தாளர் ஒருவருக்கும் தரும் பரிசு தமிழுக்கு என்று முடிவுசெய்து, எழுத்தாளர் பூமணியைத் தேர்வு செய்திருக்கிறார்கள். அவரது நூலொன்றை விரைவில் பிரெஞ்சுமொழியில் கொண்டு வர இருப்பதாகவும், கீதாஞ்சலியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. நூலின் பெயர் குறிப்பிடபடவில்லை.

கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் ரங்கம்மாள் விருது இவ்வாண்டு தமிழ்மகனுக்கு அவரின் “ வெட்டுப்புலி “ நாவலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.25,000 ரூபாய் பரிசுத்தொகை கொண்டது அப்பரிசு  ( உயிர்மை வெளியீடு. பதிப்பாளருக்கும் பரிசு உண்டு ) இரு ஆண்டுகளுக்கு ஒரு நாவலாசிரியருக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. பிரபஞ்சன், சிவசங்கரி, சுப்ரபாரதிமணீயன், நாஞ்சில்நாடன், சி.ஆர். ரவீந்திரன் , வே சபாநாயகம், மோகனன், நீலபத்மநாபன் போன்றோருக்கு இவ்விருது இதுவரை வழங்கப்பட்டிருக்கிறது

Dec 8, 2011

பூமணியின் படைப்புலகம்-ஜெயமோகன்

பூக்கும் கருவேலம்--பூமணியின் படைப்புலகம்

ஜெயமோகன்

விளக்கு அமைப்பின் இலக்கியப் பரிசை எழுத்தாளர் பூமணி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது.பூமணி தமிழின் இயல்புவாத[naturalist] இலக்கியத்துக்கு பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர். அவரது 'பிறகு ' ' வெக்கை ' ஆகிய இரு நாவல்களும் ' ரீதி ' pooman என்ற சிறுகதைதொகுப்பும் முக்கியமானவை என்று கூறலாம். இன்றைய தலித் இலக்கியங்கள் பலவற்றிலும் உள்ள ஓங்கிய பிரச்சாரக் குரலோ , பிரச்சினைகளை எளிமைப்படுத்தும் போக்கோ இல்லாத சமநிலை கொண்ட கலைப்படைப்புகள் அவை.அவரது நாவல்கள் ஒரு வகையில் இயல்புவாதத்தின் உச்சங்களை தொட்டமையினால் தான் தமிழில் தொடர்ந்து அடுத்தகட்ட எழுத்துக்கள்,----யதார்த்தத்தையும் மீமெய்மையையும் பிணைக்கும் படைப்புகள் என்று இவற்றை தொகுத்துக் கூறலாம் ---பிறக்க முடிந்தது.

தமிழ் இயல்புவாதமும் பூமணியும்

தமிழின் முதல் இயல்புவாதப் படைப்பு எது ? இதற்கு பதில் பலவகைப்படலாம் என்றாலும் முக்கியமான ,இலக்கண சுத்தமான ,முன்னோடியான, இயல்புவாதப் படைப்பு ஆர் ஷண்முக சுந்தரத்தின் நாகம்மாள் தான் என்பது வெளிப்படை. இயல்புவாதத்தின் இலக்கணம் என்ன ? துல்லியமான தகவல்கள் ,விமரிசனப்பாங்கற்ற சித்தரிப்பு நடை , முற்றிலும் நம்பகமான [அதாவது செய்திச் சித்தரிப்பு தன்மை கொண்ட ] கதையாடல் என்று சிலவற்றைகூறலாம்.மேற்கே இயல்புவாதம் இந்த அம்சங்களுடன் அப்பட்டமான அழுக்கு மற்றும் கொடுமைச் சித்தரிப்புகள் முதலியவற்றையும் சேர்த்துக் கொண்டது.அதாவது சித்தரிப்பாளனின் குரல் ஒழுக்க நெறிகளையோ அழகியல் நெறிகளையோ கூட கணக்கில் கொள்ளாத அளவுக்கு நேரடியானதாக மாறியது.

எனினும் தமிழில் அப்படி நடக்கவில்லை .அதே சமயம் நாகம்மாள் கதையில் வரும் பேச்சுகள் அந்த காலத்தை வைத்துப் பார்க்கும்போது அப்பட்டமானவையேயாகும்.கொங்கு வட்டார வாழ்க்கையின் அறிக்கையாகவும் ,அப்பட்டமான சித்தரிப்பாகவும் தன்னை பாவனை செய்து கொண்டது நாகம்மாள் [இலக்கியப் படைப்பு எந்நிலையிலும் முன்வைப்பது ஒரு புனைவுப் பாவனையையே ,உண்மையை அல்ல. உண்மை அதை வாசிக்கும் வசகனால் அவன் அந்தரங்கத்தில் உருவாக்கப்படுவது மட்டுமே] ஆகவே அக்கால கட்ட வாசகனுக்கு அது சுவாரசியம் தரவில்லை ,அத்துடன் சற்று அதிர்ச்சியையும் தந்தது .அதை ஒரு முக்கியமான இலக்கியப் படைப்பாக முன்வைத்ததும் ,விமரிசன பூர்வமாக நிறுவியதும் க நா சுப்ரமண்யமே. பிறகு வெங்கட் சாமிநாதன்.

நாகம்மாளுக்கு பிறகு நீல பத்மனாபனின் 'தலைமுறைகள் ' , 'உறவுகள் ' இந்த வகை இலக்கியத்தின் முக்கியமான உதாரணங்கள் ஆகின. பிறகு ஹெப்ஸிபா ஜேசுதாசனின் ' புத்தம் வீடு ' அதன் பிறகு பூமணியின் வருகை நிகழ்ந்தது. க நா சு வைப் பொறுத்தவரை அவர் தொடர்ந்து முன்வைத்த உதாரண இலக்கிய வடிவம் இதுவே.பிறகு வெங்கட் சாமிநாதனும் இப்பார்வையையே கொண்டிருந்தார். இரண்டு அம்சங்கள் இதில் கவனத்துக்கு உரியவை.ஒன்று அக்காலத்தில் சோஷலிச யதார்த்தவாதம் அசாதாரண முக்கியத்துவம் பெற்றிருந்தது. ரகுநாதனின் 'பஞ்சும் பசியும் ' இதற்கு முன்னோடியாக இருந்தது.[கடைசியில் ரகுநாதனே இந்த அழகியல் வடிவம் பொருத்தமற்றதும் ,செயற்கையாக உண்டு பண்ணப்பட்டதுமான ஒன்று என்று கூற நேர்ந்தது, 1992 ல் .] செ.கணேச லிங்கனை மாபெரும் நாவலாசிரியராக முன்னிறுத்தி கைலாசபதி ,சிவத்தம்பியும் இவ்வடிவத்தை பிரச்சாரம் செய்தனர் .இதன் வெற்றி உச்சமாக ஜெயகாந்தனின் இலக்கிய திக்விஜயம் அமைந்தது.இவ்வடிவம் அடிப்படையில் எழுத்தாளனின் [சமூக சீர்திருத்த ] நோக்கத்தையே தன் மையமாகக் கொண்டிருந்தது.

சோஷலிச யதார்த்தவாதம் என்பது [ ரகுநாதனைப்போலவே எனக்கும் ] இன்று பொருத்தமில்லாத சொல்லாட்சி . ஆகவே இதை விமரிசன யதார்த்தவாதம் என்று சொல்லலாம். இந்த அழகியல் வடிவம் மீது க நா சு மரபுக்கு கடுமையான அவநம்பிக்கை இீருந்தது. ஆசிரியன் குரலை அவர்கள் வடிவத்தில் உட்புகும் புற அம்சமாகவே கண்டனர். படைப்பு என்பது வாசகக் கற்பனையில் உருவாவது என்று நம்பிய அவர்களுக்கு ஆசிரியனின் குரலை மையமாகக் கொண்ட விமரிசன யதார்த்தவாதம் ஒரு வகை திரிபுநிலையாக , கலையில் அரசியலின் அத்துமீறலாகப் பட்டது. அந்நிலையில் இயல்பு வாதத்தின் துல்லியமான மெளனம் அவர்கள் விரும்பி ஏற்கும் அழகியல் வடிவமாக இருந்ததை புரிந்து கொள்ள முடிகிறது.

நாகம்மாள் ,தலைமுறைகள் ,பிறகு ஆகிய நூல்கள் தமிழ் அழகியல் [ வடிவவாத ] விமரிசகர்களால் போற்றப்பட்டமைக்கு முக்கியமான காரணம் அவை அவர்களின் தரப்பை விளக்கும் மூன்னுதாரணங்களாக அமைந்தன என்பதே. அழகியல் குறித்த பேச்சு இலக்கியத்தில் ஜனநாயகத்தன்மை உருவாவதற்கோ , எளிய மக்களின் வாழ்க்கை இலக்கியத்தின் கருப்பொருள் ஆவதற்கோ எதிரான ஒன்றல்ல என்று காட்ட இவர்கள் விரும்பினார்கள் .முற்போக்கு என்பது பிரச்சாரம் மட்டுமல்ல என்று சொல்லவும் இவை பயன்பட்டன. மேலும் அன்று பிரபல இதழ்கள் மூலம் பரவலாக ரசிக்கப்பட்ட ஆர்வி ,எல்லார்வி ,சாண்டிலயன்,பி வி ஆர் ரக ' அதி சுவாரசியக் ' கதைகளுக்கு மாற்றாக இக்கதைகளை முன்வைக்க இவ்விமரிசகர்கள் முயன்றனர்.

க நா சு வுக்கும் ,வெங்கட் சாமிநாதனுக்கும் அடிமனதில் இவ்வகை படைப்புகள் மீது தான் உண்மையான ரசனை இருந்ததோ என்று இன்று படுகிறது.குறிப்பாக வெங்கட் சாமிநாதனின் இன்றைய விமரிசனங்களை பார்க்கும்போது. ' பிறகு ' விற்கு பிறகு நம் இயல்புவாத மரபில் பல முகியமான எழுத்துக்கள் உருவாகியுள்ளன. இன்னும் சொல்லப்போனால் விமரிசன யதார்த்தம் எழுபதுகளில் முக்கியத்துவம் இழந்த பின்பு வந்த பெரும்பாலான படைப்பாளிகள் இயல்புவாத எழுத்தையே தங்கள் பாணியாகக் கொண்டனர். மேலாண்மை பொன்னுசாமி .கந்தர்வன் போன்றுசில விதிவிலக்குகளே உள்ளன. முதல் தலைமுறையில் பாவண்ணன்[ சிதைவுகள் , பாய்மரக்கப்பல் ] சுப்ர பாரதி மணியன் [மற்றும் சிலர்,சுடுமணல் ,சாயத்திரை ] சி ஆர் ரவீந்திரன்[ ஈரம் கசிந்த நிலம் ] சூரிய காந்தன் [மானாவாரி மனிதர்கள் ] ஆகியவர்களையும் ; அடுத்த தலைமுறையில் பெருமாள் முருகன் [ ஏறு வெயில் ,நிழல் முற்றம், கூளமாதாரி ] இமையம் [ கோவேறு கழுதைகள் ,ஆறுமுகம்] சோ .தருமன் [தூர்வை ]ஸ்ரீதர கணேசன்[ உப்புவயல் , வாங்கல் ,சந்தி] தங்கர் பச்சான் [ஒன்பது ரூபாய் நோட்டு] போன்றவர்களையும் முக்கியமாக சொல்லலாம் .இவை அனைத்துமே வெங்கட் சாமிநாதனின் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளனரென்பது விமரிசன ரெரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது..அவ்வகையில் பார்த்தால் ஆர் . சண்முக சுந்தரம் முதல் பூமணி ஈறாக உள்ள படைப்பாளிகளின் மூலம் இயல்பு வாதத்தை இவ்விமரிசகர்கள் தமிழில் ஆழமாக நட்டுவிட்டார்கள் என்பதைக் காணாலாம்.இன்று வெ சாமிநாதன் கொண்டாடுவது இவ்வெற்றியைத்தான்.

பூமணியின் கலைப்பார்வை

இவர்களில் பூமணி மேலும் அழுத்தம் பெற்ற /பெற்றாகவேண்டிய படைப்பாளி .நீல பத்மநாபன் உயர் சாதியை சேர்ந்த வாழ்க்கையை அதன் மதிப்பீடுகளை முன்வைத்த நாவலாசிரியர். அவரது படைப்புலகம் படிப்படியான சரிவையே எப்போதும் சித்தரிக்கிறது .பூமணி தாழ்த்தப்பட்ட ஜாதியில் இருந்து வந்த, அச்சாதியைப்பற்றி எழுதிய படைப்பாளி [அருந்ததியர் அல்லது சக்கிலியர் ] ஆனால் படைப்புக்கு வெளியே இருந்து பெறப்பட்ட எந்த புரட்சிகர யதார்த்தங்களையும் அவர் முன்வைக்கவில்லை .கூட்டு அரசியல் குரல்களின் எதிரொலியாகவுமில்லை . இது தமிழில் மட்டுமல்ல இந்திய மொழிகளில் கூட ஒரு ஆச்சரியம்தான் .கன்னட மொழியிலும் மராட்டி மொழியிலும் தலித் இலக்கிய இயக்கம் பிறந்து ஒரு தலைமுறை தாண்டிய பிறகுதான் அப்படைப்பாளிகள் கூட்டு அரசியல்க் குரலுக்கு இலக்கியத்தில் பெரிய இடமில்லை என்று புரிந்துகொள்ள ஆரம்பித்தனர். [சமீபத்தில் தான் தயா பவார் ,தேவனூரு மகாதேவ ஆகியோர் அப்படி சொல்லியிருக்கின்றனர் ] மாறாக எழுதத் தொடங்கிய காலத்திலேயே தான் எழுதுவது தன்னால் உருவாக்கப் படும் ஒரு புனைவு யதார்த்தமே என்றும் , அதற்கு படைப்பின் அந்தரங்க தளத்திலேயே மதிப்பு என்றும் உணர்ந்து கொண்ட படைப்பாளி பூமணி. இலக்கியம் ஒருபோதும் அரசியல் செயல்பாடுகளின் நிழலாகமிருக்காது என்று உணர்ந்தவர்.தலமைப் பொறுப்பை எந்நிலையிலும் அரசியல்வா தியிடம் ,அது எத்தனை புரட்சிகர அரசியலாக இருந்தாலும்கூட , தந்துவிட முன்வராதவர்.

அவரது படைப்புகள் எந்த புறக்குரலையும் பிரதிபலிக்கும் வேலையை செய்யவில்லை. ஆகவே தான் தமிழில் தலித் இலக்கிய மரபு ஒன்றை உருவாக்க முயன்றவர்கள் பூமணி போன்ற ஒரு பெரும்படைப்பாளி முன்னரே இருந்த போது கூட அவரை பொருட்படுத்தவில்லை .அவர்கள் ஒருவேளை அளித்திருக்கக் கூடிய கெளரவங்களை ஏற்க பூமணி முன்வரவுமில்லை.முதலும் முடிவுமாக அவர் தன்னை ஒரு படைப்பாளியாக மட்டுமே முன்வைத்தார் .அதற்கு மேல் விழும் எந்த டையாளமும் தன் படைப்பை குறுக்கும் என்று அவர் உணர்ந்திருந்தார். ' 'அழ கிய லுக்குப் பதிலாக அரசியலை ' ' முன்வைக்கும் குரல்கள் எழுந்த காலகட்டத்தில் இலக்கிய அழகியலின் அடிப்படையான வலிமையைக் காட்டும் முன்னுதாரணமாக பூமணி இருந்தார். தமிழில் அந்த ' அரசியல் ' இலக்கியவெற்றி பெறவில்லை ,பூமணியின் முன்னுதாரணம்தான் வென்றது என்பது சமீபகால வரலாறு

பூமணியின் படைப்புகள்

பூமணியின் படைப்புகளை முன்வைத்து விரிவான விவாதத்துக்கு இங்கு முற்படவில்லை.இக்கட்டுரை அனேகமாக வெளிநாட்டு வாசகர்களை முன்கண்டு எழுதப்படுவது.பூமணியின் படைப்புகளை தமிழின் இயல்புவாத படைப்பின் முன்னுதாரணங்களாகக் கொள்வது முதல்கட்டமென்றால் அவரது தனித்தன்மைகள் மூலம் அவர் அவ்வழகியலின் இலக்கணத்திலிருந்து அவர் விலகும் இடங்களை ஒவ்வொன்றாக அடையாளம்கண்டு அவரை அதிலிருந்து வேறுபடுத்திக் காண்பது அடுத்தகட்டமாகும்.எந்த முதன்மைப்படைப்பாளியும் ஒரு குறிப்பிட்ட அழகியலடையாளத்துடன் முழுமையாக பொருந்திப் போகமாட்டான் .காரணம் அழகியல் இயக்கங்கள் காலகட்டம் சார்ந்தவை ,படைப்பு நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் காலம் சார்ந்தது.

' பிறகு ' பூமணியின் படைப்புகளில் முதன்மையானது என்பதில் விமர்சகர்களிடையே மாற்றுக் கருத்து இல்லை.அதேபோல படைப்பூக்கம் சற்றும் திரளாமல் போன படைப்பு ' நைவேத்யம் ' என்பதிலும் . அதே சமயம் நைவேத்யம் ஒரு முக்கியமான விஷயத்தை பறைசாற்றுகிறது . படைப்பாளிக்கு சூழல் சித்தரிப்பும் சரி ,சமூகச் சித்தரிப்பும் சரி படைப்பின் புற அம்சங்களே. படைப்பை ' நம்பவைத்தலுக்கும் ' படைப்புக்கு தேவையான படிமங்களை உருவாக்கவும் தான் அது பயன்படுகிறது .கரிசல் காட்டுக் கிராமத்துக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் அடிப்படையில் வேறுபாடு இல்லை அக்கரிசல் காட்டுக் கிராமத்தில் படைப்பாளியின் மனம் பெரிதும் கலந்திருப்பதனால் அது அகப்படிமங்களாகும்போது உயிர்ப்பு அதிகம் அவ்வளவுதான் . தனக்கு பழகிப்போன அருந்ததிய சாதி சார்ந்த வாழ்வில் இருந்தும் , கரிசல் நிலத்திலிருந்தும் பூமணி விலகி பிராமண வாழ்வைப்பின்புலமாகக் கொண்டு இந்நாவலை எழுதியது அவரது தன்னம்பிக்கையையும் ,புதிய தடங்களை நோக்கி செல்வதற்கான அடிப்படையான துடிப்பையும் தான் காட்டுகிறது .அத்துடன் அச்சாதி மற்றும் நிலப்பின்னணியை தன் இலக்கிய ஆக்கத்தின் ஆதாரமாக அவர் எண்ணவில்லை என்பதற்கும் அது சான்று.

ஆனால் தனக்கு ஆழ்மன அறிமுகம் இல்லாத பிராந்தியத்தில் படைப்பாளியின் மனம் எதையுமே கண்டடையாது என்பதற்குச் சான்றாக அமைந்தது நைவேத்யம் . பூமணிக்கு பின்னால் வந்த படைப்பாளிகள் தங்கள் சாதி ,நிலச் சூழலுடன் தங்களுக்கு இருந்த அடிப்படை உறவை வலியுறுத்தினார்கள் . தாங்கள் எழுதுவது அந்த சமூக , நிலப் பகுதியின் ' அப்பட்டமான ' வாழ்க்கையை என்று நம்பி சொல்லவும் செய்தார்கள்.அந்த நம்பிக்கை இயல்புவாத எழுத்தில் எப்போதும் காணப்படுவது .பூமணிக்கும் இயல்புவாதத்துக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இதுதான்.அவர் மன அளவில் இயல்புவாதத்தை ஏற்றுக் கொண்டவரல்ல .தன் சித்தரிப்புகளை அப்பட்டமாக செய்யும்போதேகூட அவர் அதை ஒரு புனைவு உத்தி என அறிந்துமிருந்தார் .

'பிறகு ' நாவலின் அழகிரி தமிழின் மிக முக்கியமான முன்னோடிக் கதாபாத்திரம் .தமிழ் நாவல்களில் ஆண் பெண் வடிவில் அழகிரிப்பகடை இப்போது பலமுறை மறுபிறவி எடுத்துவிட்டார். [இமையத்தின் ஆரோக்கியம் ,தருமனின் மாடத்தி ஈறாக] ' பிறகு ' நாவலின் ஒரு நீட்சியே பெருமாள் முருகனின் கூளமாதாரி [ இவ்விரு நாவல்களை புரிந்துகொள்ள முக்கியமாக உதவக் கூடியது மாற்கு எழுதிய ' அருந்ததியர் வாழும் வரலாறு ' என்ற ஆய்வு நூல் ] சமூகத்தால் இழிந்த நிலையில் கடைப்படியாக கருதப்படும் ஒரு குலத்தில் , சகல அழுக்குகளுக்கும் இருட்டுகளுக்கும் இழிவுகளுக்கும் நடுவே பிறந்து முழு வாழ்க்கையையும் கழிக்கும் அழகிரிப்பகடையில் குடிகொள்ளும் ஆழமான மானுட நேயமும் ,வாழ்க்கை குறித்த புரிதலும் , சமநிலையும் நிதானமும் வாசகனை மிக ஆழமான மறு பரிசீலனைகளுக்கு இட்டுச் செல்கிறது.ஒரு சராசரித்தமிழ் மனம் அழகிரியை 'சான்றோர் ' என்று ஏற்றுக் கொள்ளாது. [சில நற்குணங்களை அது அவரிடம் அடையாளம் கண்டுகொள்ளலாம் ,அது வேறுவிஷயம் ] ஆனால் அழகிரிப்பகடை அச்சமூகமனம் எவற்றை உயர்ந்த விழுமிங்களாகக் காண்கிறதோ அந்த அம்சங்களெல்லாம் நிரம்பிய கதாபாத்திரம். அதே சமயம் அது நா பார்த்தசாரதியின் பாணியில் செதுக்கப்பட்ட ஓர் ' அச்சு இலட்சியவாத ' கதாபாத்திரமல்ல .இங்குதான் பூமணியின் அப்பட்டமான இயல்புவாதம் அவருக்கு கைகொடுக்கிறது. அழகிரிபகடை ' எது மேலான வாழ்க்கையின் இலக்கணம் ' என்ற வினாவை மிக ஆழமாக எழுப்பிவிடுகிறார் .

' பிறகு ' ஒரு வரலாற்று நாவலும் கூட. நூறு வருட காலகட்டத்தில் இந்த அருந்ததிய வாழ்க்கையில் மெல்ல மெல்ல ஏற்பட்ட மாறுதல்கள் [அல்லது வேறு ஒரு கோணத்தில் மாறுதலின்மைகள் ] இந்நாவலில் கூறப்படுகின்றன.அழகிரிப் பகடையின் சாதாரண வாழ்க்கையை மிகச் சாதாரணமான நிகழ்ச்சிகள் வழியாக பூமணி சித்தரிக்கிறார் .பலவகையிலும் இதனுடன் ஒப்பிடக்கூடிய நாவலான சினுவா ஆச்சிபி யின் ' சிதைவுகள் ' [Things fall apart ] இதனுடன் ஒப்பிடுகையில் மிகச் சாதாரணாமான ஒரு படைப்பே .காரணம் ஆச்சிபி என்ற [மேற்கத்தியக் கண் கொண்ட] சித்தரிப்பாளர் அக்கதையைச் சொல்வது அந்நாவலில் அடிக்கடி வெளித்தெரிகிறது .குறிப்பாக அந்நாவலில் கதையில் வரும் முக்கியமான கால இடைவெளி ஒரு புனைவுத் தோல்வியே ஆகும். வரலாறு ஒரு கதையாக மாற்றப்படும் விதம் பொம்மலாட்டக் காரனின் விரல்கள் போல அங்கு வெளியே தெரிகிறது.மாறாக 'பிறகு ' காலம் போலவே நகர்வு தெரியாமல் நகர்கிறது.மிகவும் சகஜமாக ,மிகவும் நுட்பமாக ,அதே சமயம் மிகவும் சலிப்பூட்டுவதாகவும் கூட!இந்த முதிர்ச்சியான வரலாற்றுப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் முகமாகவே பூமணியின் நடையும் சித்தரிப்பும் மிக மிக நிதானம் மிக்கவையாக , சமநிலை கொண்டவையாக காணப்படுகின்றன.

'பிறகு 'வை முன்வைத்து இயல்புவாதத்துக்கும் பூமணிக்கும் உள்ள உறவை மேலும் ஆராயலாம். இயல்புவாதத்தின் அப்பட்டமான மானுட யதார்த்தத்தை ' பிறகு ' தவிர்த்துவிடும் இடம் எது ? அழகிரிப் பகடையின் கதை கிட்டத்தட்ட ஒருமூதாதை வரலாறு போலவே உள்ளது.மூதாதை வரலாறுகளில் உள்ள மிகை நவிற்சியும் ,சாராம்சப் படுத்தும் குரலும் தவிர்க்கப் பட்டுள்ளன .அதாவது இயல்புவாத அழகியல் மூலம் முற்றிலும் நம்பகமான சூழலில் நிறுவப்பட்ட மூதாதைக் கதை தான் ' பிறகு ' இந்திய மூதாதைக் கதை ஒன்றில் எதையெல்லாம் நம் மரபு அனுமதிக்காதோ அதையெல்லாம் இக்கதையும் அனுமதிக்கவில்லை --இயல்புவாதமேயானாலும் !ஆக இயல்புவாதத்தின் அடிப்படையான தத்துவத்தை பூமணிீ ஏற்றுக் கொள்ளவில்லை என்று கருதலாம் .மனித வாழ்க்கையும் ,வரலாறும் , மனமும் ஆழத்தில் இருள் நிரம்பியவை என்ற நம்பிக்கை இயல்புவாதத்தின் ஆதாரம்.[ஃப்ராய்டிய உளப்பகுப்புடன் இதற்குள்ள உறவு அடையாளப்படுத்தப் பட்டுள்ளது] அந்த இருளை எந்த பாவனைகளுமில்லாமல் அப்பட்டமாகக் காட்டவே அது முயன்றது. பூமணிீயி ன் இீயல்புவாதம் அப்பக்கமே போகவில்லை. அது இயல்புவாதத்திடமிருந்து பெற்றுக் கொண்டது விமரிசன நோக்கமற்ற சித்தரிப்பும் , சமநிலை கொண்ட வடிவத்தையும் மட்டுமே என்று சொல்லலாம்.

'வெக்கை ' தமிழில் நவீனத்துவப் படைப்புகள் பரபரப்பாக பேசப்பட்ட காலத்தில் வெளிவந்தது . புகழ் பெற்ற நவீனத்துவ நாவல்களுடன் இதற்கு வடிவம் மொழி ஆகிய இரு தளங்களிலும் நெருக்கமான தொடர்பு உண்டு.எதிரியின் கையை வெட்டிவிட்டு ஓடும் சிறுவனாகிய கதாநாயகனின் சித்திரத்துடன் தொடங்குகிறது நாவல் . அவனது ஓட்டத்தை ஒரு குறியீட்டுத்தளத்திற்கு நகர்த்துவதிலும் நவீனத்துவ நாவல்களின் பாதிப்பு அதிகம். ஆனால் இந்நாவலும் அழகிய இயல்புவாத நாவலேயாகும்.சித்தரிப்பில் எந்த இடத்திலும் சமூகவியல் நிலவியல் நம்பகத் தன்மையை இது இழக்கவில்லை.இதன் பாதிப்பு அதன் செய்தியறிக்கைப் பாணிமூலமே நடைபெறுகிறது . இதை ஒரு நவீனத்துவ நாவலாகாது தடுக்கும் அம்சம் இதிலுள்ள இனவரைவியல் கூறுதான்.இது அடையாளம் இல்லாத 'ஒரு மனிதனின் ' கதை அல்ல .மானுடத்தின் உருவகக் கதையுமல்ல. இன இட அடயாளம் காரணமாக இது மெதுவாக வீரகதைகளின் எல்லைக்குள் சென்றுவிடுகிறது. அதே சமயம் இது அத்தகைய கதைகளுக்குரிய மிகை நோக்கிச் செல்லாமல் தன் இயல்புவாத அம்சத்தை நிலை நிறுத்திக் கொண்டுமுள்ளது.இயல்புவாதத்திலிருந்து நவீனத்துவம் நோக்கிய ஒரு மெல்லிய நகர்வே இந்நாவலாகும்.

பூமணியின் சிறுகதைகளும் நவீனத்துவ அழகியல் வடிவ நேர்த்தியை இயல்புவாத தன்மையுடன் அடைய முயல்பவை என்று சொல்லலாம்.ரீதி தொகுப்பில் உள்ள கதைகளை ஒருவர் எளிய நேரடியான வாழ்க்கைத்துளிகளாக எடுத்துக் கொள்ளலாம் அவற்றை பின்னணியான சமூகச் சித்திரத்துடன் பொருத்திப் பார்க்கையில் அவை விரிவடைந்த படியே போவதைக் காணலாம்.ரீதியும் ராஜேந்திர சோழனின் ' எட்டுகதைகள் ' என்ற தொகுப்பும் முறையே இயல்புவாதத்துக்கும் ,விமரிசன யதார்த்தவாதத்துக்கும் உச்ச உதாரணங்களாக அவை வெளிவந்த காலத்தில் கருதப்பட்டன.

பூமணியின் எல்லைகள்

தமிழில் நவீனத்துவம் புதுமைப்பித்தனுடன் பிறந்துவிட்டது. கச்சிதமான வடிவம் குறித்த நவீனத்துவத்தின் பிரக்ஞை அங்கிருந்து பரவி எல்லா வகை அழகியல் தளங்களிலும் வளர்ந்தது. பொதுவாக இந்திய மொழிகளைப் பார்த்தால் விமரிசன யதார்த்தவாதம் என்ற அழகியல் வடிவம் மிதமிஞ்சிய வடிவப் பிழைகளிடன் ,அ த்துமீறியுருப்பதைக் காணமுடியும். உதாரணமாக மகா ஸ்வேதா தேவி யின் கதைகளையோ தகழி சிவசங்கரப் பிள்ளையின் [செம்மீன் தவிர்த்த] படைப்புகளையோ பார்க்கலாம் .தமிழ் நவீனத்துவத்துடன் உள்ள நெருக்கமான உறவு காரணமாக தமிழ் விமரிசன யதார்த்தவாதப் படைப்புகள் கூட கச்சிதமான வடிவத்தை அடைந்துள்ளன.[விதிவிலக்கு பொன்னீலனின் புதிய தரிசனங்கள். ஆனால் அதுவே அவ்வகை நாவலகளில் முதன்மையானது.காரணம் விமரிசன வாதம் என்பது அக்கண்ணோட்டம் முழுமையாக முன்வைக்கப் படும்போதே மதிப்புக்குரியதாகிறது] .

தமிழின் இயல்புவாதப் படைப்புகள் எல்லாமே மிகக் கச்சிதமான வடிவ நேர்த்தியுடன் இருப்பதைக் காணலாம். முதல் உதாரணமான 'நாகம்மாள் ' கூட அப்படிப்பட்ட கச்சிதமான ஒரு படைப்புதான். கலைப் பிறழ்வுகளை இங்கு சுட்டவில்லை.பூமணியின் நாவல்கள் இயல்பாகவே கச்சிதமானவை--நைவேத்யம் கூட.அவற்றின் முக்கியமான பிரச்சினையே அவற்றின் அப்பட்டமான இயல்புவாதத் தன்மைதான்.கனவுகளுக்கோ நெகிழ்வுகளுக்கோ இடமற்ற 'வரண்ட ' இப்பரப்பில் வாழ்க்கையின் ஒரு தளம் மட்டுமே இடம் பெற முடிகிறது.ஆழ்நிலைகளை இது ஐயப்படுகிறது .புறவய யதார்த்தத்தை மட்டுமே கணக்கில் கொள்கிறது.உதாரணமாக பூமணி பேசும் மக்கள் கூட்டத்தின் கடவுள்கள் சடங்குகள் ஆகியவை அவர்களின் அகம் வெளிப்படும் முக்கியமான ஊடகங்களாகும்.[பார்க்க அருந்ததியர் வழும் வரலாறு] ஆனால் பூமணி இந்த தளத்தை முற்றிலுமே தவிர்த்து விட்டிருக்கிறார்.அவை வெறும் நிகழ்ச்சிகளாக ,தகவல்களாக மட்டுமே அவருடைய படைப்புலகில் தெரிகின்றன.இதன் மூலம் வெளியே தள்ளப்படும் ஆழத்தில் தான் இம்மக்களின் சமூக ,அந்தரங்க பழக்கவழக்கங்களின், நம்பிக்கைகளின் ஊற்றுக் கண் இருக்க முடியும்.

பலவகையிலும் உளவியல்பூர்வமாக அடக்கப்பட்ட இம்மக்கள் தங்கள் தரப்பை நுட்பமான இடக்கரக்கல்கள் மூலமும் , குறியீடுகள் மூலமும் மறை முகமாக இந்த ஐதீக, புராணிகங்களில் பதிவு செய்துள்னர் .அவ்வம்சங்கள் தவிர்க்கப் பட்டதும் ஓர் முக்கியமான அகத்தளம் விடுபடுகிறது .இவ்வம்சத்தை முழுமைப்படுத்தவே பிற்பாடு வந்த மிகுபுனைவுசார்ந்த , மீமெய்வாத [fantacy &surrealism ] படைப்பாளிகள் முயன்றனர்.ஒரு உதாரணம் கூறலாம் .பூமணியின் 'வெக்கை ' கதையின் அகவய நீட்சியே கோணங்கியின் ' கருப்பன் போன பாதை ' என்ற முக்கியமான கதை. பூமணியின் கதையில் ஆண்டையை வெட்டியபிறகு ஓடும் பகடையின் ரத்தம் பரவிய ஆடைகளும் ,அரிவளும் யதார்த்தமாக சித்தரிக்கப் படுகையில் கோணங்கியின் கதையில் அவை குறியீடுகளாக மாறி , தலைமுறை தலைமுறையாக உலராத ரத்தத்துடன் அக்குடிகளிடம் எஞ்சுகிறது. இக்கதையை தான் பூமணியின் கதையின் தொடர்ச்சியாகவே உருவகிப்பதாக அதை எழுதுவதற்கு முன்பே கோணங்கி என்னிடம் சொல்லியது நினைவுக்கு வருகிறது. அந்த ரத்தம் எளிதில் உலராதது ,அதை கழுவ முடியாது என்று அவர் சொன்னார் .இக்கதை நாட்டார் /வாய்மொழிக் கதைகளின் புராணிக /ஐதீக அம்சத்தை சேர்த்துக் கொண்டு பூமணி தொடாத அடுத்த இடத்தைத் தொடுவது முக்கியமானது.

பூமணியின் படைப்புலகில் உள்ள அடுத்த இடைவெளி அதன் இயல்புவாதப் பண்பு காரணமாக அது அங்கத அம்சத்தை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டிருக்கிறது என்பதே. அருந்ததியர் போன்ற அடித்தள மக்களின் ஒடுக்கப்பட்ட வாழ்க்கையில் அங்கதம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தங்கள் கசப்பை ,கோபத்தை,ஏமாற்றத்தை ,ஆங்காரத்தை எல்லாம் இம்மக்கள் அங்கதமாக மாற்றிக் கொள்கின்றனர். அத்துடன் அவர்களிடம் ஒரு களியாட்ட அம்சம் எப்போதும் உள்ளது,அது ஒரு பழங்குடித்தன்மையும்கூட! மற்ற 'உயர் ' சாதியினரின் எதிர்காலம் பற்றிய பதற்றத்தை ,ஒழுங்குகளை, பாவனைகளை இந்த களியாட்டம் மூலம் அவர்கள் நக்கல் செய்கின்றனர். அவர்கள் வாழ்க்கை ' முற்போக்கு ' இலக்கியத்தால் காட்டப்பட்டது போல ' அழுவாச்சி ' யால் நிரம்பியது அல்ல .அது ஒரு களியாட்டவெளியும் கூட.நோயும் வறுமையும் அதை தகர்ப்பதில்லை. இந்த அம்சம் பூமணியின் படைப்புக்ளில் சுத்தமாக காணப்படுவது இல்லை.இந்த அம்சத்துக்கு மிகச் சிறந்த உதாரணம் சோ. தருமனின் காடுவெட்டி முத்தையா [தூர்வை].அவனது 'இங்கிலீசும் ' அவன் போடும் அவசர அடிமுறை பிரகடனங்களும் எல்லாமே ஒரு வகை சாதிய எதிர்ப்புகளும் கூடத்தான்.

பூமணி திரைப்படம் பக்கமாக சென்றது அவரை இலக்கியத்திலிருந்து ஓரம் கட்டியது என்று சொல்லப்படுவது உண்டு. அவரது இலக்கிய பங்களிப்பு முழுமையடைந்து விட்டது ,அவரது இடைவெளிகளை நிரப்பும் அடுத்த கட்ட படைப்பாளிகள் வந்து விட்டார்கள் என்பவர்களும் உண்டு. வெங்கட் சாமிநாதன் மகன் திருமணத்தில் நான் அவரை ஒரு வருடம் முன்பு சந்தித்தபோது தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பதாகவும் சீக்கிரமே மீண்டும் தன் இலக்கிய பிரவேசம் அமையுமென்றும் சொன்னார்.புதிய தளங்களுக்கு நகர்ந்துவிட்ட பூமணியை எதிர்பார்க்கிறேன்.

***

நன்றி: திண்ணை

Dec 6, 2011

பூமணி-க்கு விஷ்ணுபுரம் விருது

 

விஷ்ணுபுரம் விருது 2011
தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருதுFR: Poomani

மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு

ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்

பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு

டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை

கலந்துகொள்ளும் ஆளுமைகள்


எழுத்தாளார் ஜெயமோகன்,
வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்
எழுத்தாளார் யுவன் சந்திரசேகர்,
எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன்,
எழுத்தாளார் நாஞ்சில்நாடன்
கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,
இயக்குனர் பாரதிராஜா
எழுத்தாளர் பூமணி

உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்
அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123
(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)vishnupuram-11-Invitaion-design-copy-1024x767

பூமணியின் சில சிறுகதைகள்

Oct 30, 2011

பேனாக்கள் – பூமணி

அவன் தாத்தா ரொம்பநாளாய் ஒரு பேனா வைத்திருந்தார். அவன் சின்ன வயசாயிருக்கும்போதே அவர் பையில் இருந்தது. கடைசிவரைக்கும் புதிசுமங்காமல் வைத்திருந்தாரே அதுதான் பெரிய காரியம். பையிலிருந்து அபூர்வமாய்த்தான் எடுத்து இரண்டு வரி எழுதுவார். எழுதும்போது கவரைப் பையில் குத்தியாகணும். பேனாவுக்குப் பின்னால் சொருகி எழுதுவதேயில்லை. கை நடுக்கத்திலும் தானாகவே மையடைப்பார். வெள்ளைத் துணி வைத்து மெனக்கிட்டு துடைத்து வெண்கலக் குடம் மாதிரி விளக்குவார்.poomani2

இத்தனைக்கும் மிஞ்சி மிஞ்சிப் போனால் பத்து ராம ஜெயம், நாலு பிள்ளையார் சுழிதான் எழுதியிருப்பார்.

தாத்தா கம்பூன்றி போகும் போதும் வரும்போதும் சட்டையில் மினுங்கிய பேனா அவனைத்  தொடர்ந்து உறுத்தியது. எத்தனையோ தடவை அபேஸ் பண்ணத் திட்டம் போட்டிருக்கிறான். பாச்சா பலிக்கவில்லை. அவர் பேனாவை கண்ணுக்குப் படும்படியாய் வைத்தால்தானே. ஒன்று அவர் போட்டிருக்கும் சட்டையில் இருக்கும் அல்லது மேஜை டிராயருக்குள்ளிருக்கும். டிராயர் சாவியையாவது வெளியே வைக்கட்டுமே. அரணாக் கயிற்றில் வாளிப்பு போட்டு வேட்டி மடியில் வைத்துக்கொள்வார். சில சமயம் குளிக்கையில் கழட்டி வைத்துவிடுவார் என்று கொட்டாவி விட்டிருக்கிறான். ஆனால் கைத்தடி மட்டுமே வீட்டு மூலையில் சாத்தியிருக்கும். சாவி அரணாக்கயிற்றில் மணியாட்டும்.

அவர் அசந்த நேரம் பார்த்து சாவியைக் கழட்டி விடலாமா என்றுகூட யோசித்தான். அப்படி அசந்த நேரமே தெரியாது. முக்கால் வாசி கண்ணை மூடிக்கொண்டுதான் இருப்பார். தூங்குகிற மாதிரி இருக்கும். எதிரே பூச்சி பறந்தால்கூட அருவங் கேட்டு விடுவார். எக்குத் தப்பாய் மாட்டிக்கொண்டால் கம்படி வாங்கிகட்ட வேண்டியதுதான்.

அவன் அப்பாவிடமும் ஒரு பேனா இருக்கத்தான் செய்தது. அது தாத்தா பேனா போல் இல்லை. அவன் வைத்திருந்த பேனாவுக்கும் மோசமாயிருந்தது. அவர் பஞ்சுக் கணக்கெழுதி பேனாவைப் படாதபாடு படுத்தியிருந்தார். அப்பா கூட தாத்தா பேனாவில் கண் வைத்திருப்பது பிந்தித்தான் தெரிய வந்தது. ஒரு நாள் பேச்சுவாக்கில் சொன்னார்:

”நயினா ஒங்களுக்கு இனி அந்தப்பேனா எதுக்கு சும்மாதானே வச்சிருக்கீக எனக்குக் குடுத்திருங்க. நாண் கணக்கெழுதிக்கிறென்”.

“ஏம்பா வேறபேனா கணக்கெழுத மாட்டன்னா சொல்லுது”.

அப்பா மறு பேச்செடுக்க வில்லை. தாத்தாவா கொக்கா.

அதற்குப் பிறகு தாத்தா அப்பாவிடம் அடிக்கடி பேனா கேட்க ஆரம்பித்தார்.

“ராமானுஜம் ஒம் பேனாவைக் கொஞ்சம் குடுத்து வாங்கிறயா. என்னதில் மையில்லையோ என்னமோ எழுத்து சரியாவே தெரியலே. கசியிற மாதிரியும் தோணுது.”

அப்பா முணுமுணுத்தவாறே பேனா கொடுப்பார்.

“கசியிதோ புதுசா”

அவன் பாட்டி அதைவிடக் கில்லாடி. கழுத்துப் பிடிக்காமல் நகை போட்டுக் கொண்டு கிறுங்காது. அவன் அம்மாவும் எத்தனையோ பிரயத்தனம் பண்ணிப் பார்த்து விட்டாள். மசியவில்லை.

பாட்டி குளிக்கும்போது நீட்டி முழக்கிக் கூப்பிடுவாள்.

“நாகலெச்சிமி ஓரெட்டு வந்து முதுகத் தேச்சுத் தண்ணி ஊத்தீட்டுப் போயிரு”

அம்மா காசலையாய்ப் போய் உடம்பெல்லாம் தேய்த்து விடுவாள். கழுத்தோரம் தேய்க்க வரும்போது மட்டும் பாட்டி சாதாரணமாயச் சொல்வாள்.

“இனி நான் தேச்சுக்கிறம்மா. நீ போயி வீட்டு வேலையப் பாரு”

திரும்பும்போது அம்மா சத்தம் கேட்கும்.

“அவ்வளவு சாமானவும் கழுத்திலை போட்டுக் குளிக்கீகளே, அடிக்கடி தண்ணி பட்ட என்னாத்துக்காகும் கண்ணி இத்துப்போகாதோ”

அதற்குங் கூட பாட்டி நடுக்கத்திலே பதில் வைத்திருப்பாள்.

“ஆமடியம்மா தண்ணிக்கு இத்துப்போற சாமானும் செஞ்சு குடுப்பான் பாரு எனக்கு”

அம்மா வெளியூருக்குப் போகிற சமயம் நகைகளை இரவல் கேட்டால்கூட பாட்டி கொடுப்பதில்லை.

“காலங் கெடக்கிற கெடையில சாமான் போடவா முடியுது. ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போகவே பயந்து கெடக்குது. இருக்கிறதப் போட்டுட்டுப் போனாப் போதும். ஆரும் கேட்க மாட்டாக”

நல்லவேளை அவன் அப்பா கூடப் பிறந்த அத்தையோ சித்தப்பாவோ இல்லை. அப்பா ஒருவர்தான். எப்படித்தான் அவரைப் பத்துவரை படிக்க வைத்தார்களோ.

தாத்தா சாக நாள் பிடித்தது. சட்டை போட்ட வாக்கில் ஈஸி சேரில் கண்ணயர்ந்திருந்தவர் எழுந்திருக்கவில்லை. சட்டைப்பையில் குத்தியிருந்த பேனாவை அப்பா எடுத்து அவர் பையில் சொருகிக் கொண்டார்.

அவன் கல்யாணச் சோறு தின்றுவிட்டுத்தான் கண்ணை மூடுவேன் என்று அடிக்கடி சொல்லுவார். பாவம், அதுவரை கூட்டில் உயிர் தங்கவில்லை.

அந்த யோகம் பாட்டிக்குத்தான் அடித்தது. அவன் வாத்தியார் வேலைக்குப் போய் கல்யாணம் முடித்து ஒரு மகனைப் பார்க்கும்வரை திடமாகவே இருந்தாள்.

எத்தனையோ முறை உயிர் இந்தா போகிறேன் என்று மிரட்டி முடக்குவாள். இரண்டாவது நாள் புடைத்தெடுத்த மாதிரி எழுந்து வெயில் காய்வாள்.

அம்மாவும் பீ மோத்திரம் எடுப்பதிலிருந்து சகல வேளைக்கும் சளைக்கவில்லை. அவன் மனைவியும் அம்மாவும் நான் முந்தி நீ முந்தி என்று பணிவிடை செய்தார்கள். காணாக்குறைக்கு அயலூரிலிருந்து அவன் அக்கா வேறு வந்து இருப்பு போட்டுக் கவனித்தாள்.

கடைசியில் தாமதமாய்த்தான் மூன்று பேருக்கும் பாட்டியைச் சுற்றி உட்கார்ந்து அழ வாய்த்தது. மயானத்திலிருந்து அப்பா கொண்டுவந்த பாட்டியின் நகைகளை அம்மா வாங்கிக் கொண்டாள். அவ்வளவையும் மறுநாளே மஞ்சள் தேய்த்துக் கழுவி அழுக்கெடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டாள்.

அவன் அக்கா அதற்குப் பிற்கு அவ்வளவாய் வீட்டுக்கு வருவதில்லை. முக்கியமான காரியத்திற்கு வந்தாலும் அவன் மனைவியுடன்தான் பெரும்பாலும் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்படுவாள்.

தாத்தா பேனாவை அப்பா வைத்துக் கொண்டது அவனுக்குக் கூட வருத்தந்தான். வெளியே எவ்வளவோ நல்ல பேனா விற்கத்தான் செய்கிறான். எல்லாம் தாத்தா பேனாவாக முடியாது. என்னேரமும் தங்கமாய் மினுங்கும். மூடியெது கீழ்ப்பாகமெது என்று கண்டுபிடிக்க முடியாதபடி திரடில்லாத வழவழப்பு. பேப்பரில் வைத்தால் பொரிந்து தள்ளும். முந்தி ஒருநாள் எழுதிப்பார்த்தது. வைத்திருந்தால் அப்படிப் பேனா வைத்திருக்கணும்.

பள்ளிக்கூடம் போய் கொஞ்ச நாளில் அவன் மகன் பேனா கேட்டு அடம் பிடித்தான்.

ஒரு பழைய பேனாவை எடுத்து ஒக்கிட்டுக் கொடுத்தான். அது மறுநாளே இருந்த இடத்தில் வாய் பிளந்து கொண்டு கிடந்தது. அவன் வைத்திருந்த பேனாவையே கேட்டு அழுதான்.

அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அப்பா மேஜைப்பக்கம் கைகாட்டி விட்டான். அவ்வளவுதான் அவர் குளிக்கப் போன சமயம் பேனாவை எடுத்து தரையில் எழுதி பின்னால் வளைத்து நெக்கைத் திருகி மறை கழண்டு ஆட்டம் குளோஸ். தாத்தாவைப் போல் அப்பாவுக்கு முன்னெச்சரிக்கை கிடையாது.

அப்பா பையனை பிடித்து கண்டபடி காதைத் திருகி வீங்கவைத்த பிறகும் கோபம் தணியவில்லை. எல்லோரையும் திட்டித் தீர்த்தார்.

“வீட்ல புள்ளையா பெத்து வச்சிருக்குதுக. கால சனியனா எறங்கியிருக்கானே..ஆகமான பேனா போச்சே.”

“என்னமோ பேனா போனதுக்குப் போயி புள்ளய இந்தப்பாடு படுத்தியிருக்கீகளே. இதுல்லனா வேற ஒண்ணு வாங்கிக்கிறது.”

“ஒனக்கென்ன தெரியும் அறிவு கெட்டவளே. இப்படிப் பேனா எவங்கிட்ட இருக்கும்.”

அவனும் அவன் மனைவியும் ஒன்றுமே பேசவில்லை. பிறகும் இரண்டு மூன்று நாட்கள் பையனை அவர் கண்ணில் படவிடாமல் வைத்துக்கொண்டதோடு அவன் பேனாவைப் பத்திரப் படுத்தவும் செய்தான்.

தாத்தா பேனாவுக்கு எங்கும் நெக்குக் கிடைக்கவில்லை. அவன் கேட்டான்.

“அத எங்கிட்டக் குடுந்திருங்களேம்ப்பா. எப்படியாச்சும் நெக்குச் சம்பாரிச்சு எழுக்கிறேன்.”

“நீ சம்பாரிச்சு எழுதிக் கிழிச்சது போதும். அது எங்கிட்டயே இருக்கட்டும்.”

அவர் வேறு பேனாவை எழுதப் பயன்படுத்திய போதும் தாத்தா பேனாவை ஒரு பார்வைக்காக பையில் குத்தில் கொள்ளத் தவறுவதில்லை.

ஒருநாள் அவன் பள்ளிக்கூடன் கிளம்பிக்கொண்டிருந்த போது பையில் பேனாவைக் கவனித்து விட்ட அப்பா கேட்டார்.

“நல்லா பேனாவா சம்பாரிச்சிருக்கயே. இண்ணக்கி ஒருநாள் எழுதக்குடேன். என் பேனாவ ரிப்பேருக்குக் குடுத்திருக்கென்.”

அவனும் தயங்காமல் சொன்னான்.

“இது ஏற்கனவே ரிப்பேருப்பா. சும்மா கெடந்துச்சு. இண்ணக்கித்தான் ரிப்பேருக்குக் குடுக்கலாம்னு எடுத்திட்டுப் போறென்.”

நாலாவது நாள் அவன் ஒரு விளாரை எடுத்துக்கொண்டு மகனை விரட்டி விரட்டி அடித்தான். எல்லோரும் பிடிக்கப் பிடிக்க அடித்தான். அவன் அப்பா மிரண்டு போய் கண்டித்தார்.

“அடே ஒனக்கென்ன வந்திருச்சு இப்ப. புள்ளையா என்னன்னு நெனச்ச. மடத்தனமா அடிக்கயே.”

அவன் வயிற்றெரிச்சலில் கத்தினான்.

“அவன் பண்ணீருக்கிற காரியத்துக்கு முதுகுத் தொலிய உரிச்சாக் கூடக் காணாது. அருமையான பேனாவ ஆணிவேற அக்கு வேற கழட்டிப் போட்டுட்டானே பாவி.”

“பெரிய பேனா. போடா போ. அண்ணைக்கே ரிப்பேர்னு சொன்னயே. அது போயித் தொலஞ்சா இனியொண்ணு வாங்கிக்கயேன்.”

அவன் மகன் அவருக்குப் பின்னால் ஒளிந்து நின்றிருந்தான்.

***

நன்றி : ’தேடல்’( ஜூன் 1978)

Mar 18, 2011

எதிர்கொண்டு-பூமணி

வெளியே சாயங்காலச் சத்தங்கள் வெளிச்சத்தைப் போல் உள்வாங்கிக் கொண்டிருந்தன.

கீழ்வீட்டுக்காரி இன்னேரம் வந்திருக்கணுமே. வேலைக்காரனிடம் பெருமை கொழித்துக்கொண்டு பொடி நடையாக வருவாள். அவன் இவளுக்குத் துணை போனவன். அதென்ன வாய் ஓயுதா கை ஓயுதா. ராத்திரி நேரங்கூடத் தூங்குவாளோ என்னமோ. என்னேரம் பார்த்தாலும் வாய் பொரிப் பொரியும்.poomani2

சுட்டுப் போட்டாலும் இன்றைக்கு அவளுக்கு உறக்கம் வராது. கனைத்துக் கனைத்து அழுகணும்.

திருணையில் குப்புறப் படுத்து முதுகில் காலால் தாளம் போட்ட சுந்தரம் திருப்பிக்கொண்டான்.

நேரத்தோடு சோறுகேட்டு அம்மாவிடம் வசவு வாங்கிக் கட்டிக் கொண்டதுக்கு இதுக்குள் கீழ வீட்டுக்காரி கச்சேரி வைத்திருந்தால் தோதாக இருக்கும். சே சின்னத்தங்கச்சி என்னேரம் பார்த்தாலும் வாள் வாள் என்று கத்திக் கொண்டு அடுத்த ஆள் சத்தம் கேட்க விடாமல். இந்த அம்மா தான் அவளை எடுத்து அமர்த்தினால் என்ன.

பிச்சமணியாவது வந்தால் முற்றத்தில் பாய் விரித்து கச்சேரி கேட்கலாம். ஆறாங்கூட்டம் காராம்பசு என்று மேகத்தில் வெள்ளி பார்த்துக்கொண்டே சிரிக்கலாம். அவன் ஒரு குசுவிணிப் பயல். பேசாமல் முடக்கிப் படுத்திருப்பான்.

எல்லாம் இனிக் கொஞ்ச நேரத்தில் தெரியும். என்னென்ன வசவுதான் வாயில் வரப் போகிறதோ. அவளுக்கு இது காணாது. காட்டில் ஈ காக்காய் இறங்கினால் கூட மே வீட்டிலிருந்து கையைக் கண்ணாடி போட்டுப் பார்த்து நாறலாக வையச் சொல்கிறதா. அடேயப்பா நாயிலெத்தனை கழுதையிலெத்தனை.

எதுக்கு வைவதென்றில்லை. களத்தில் தும்பைச் செடி கும்மலுக்குள் வண்ணாத்திப்பூச்சி பிடித்ததுக்கெல்லாமா வையணும். ரெம்ப எரிச்சலாக இருந்தது. பிச்சமணியென்றால் ஓட்டம் பிடித்துவிட்டான். அவள் புருசன் வேறு பொதுக் பொதுக்கென்று கருத்த எருமை மாதிரி விசாரிக்க வந்துவிட்டார். அதுக்கு அவள் சொல்கிறாள்.

'சின்னக் கழுதைக களத்துல ஒழப்புதுக. சத்தம்போட்டா போகுதுகளான்னு பாருங்க. அந்த கெங்கையாப் பெய மகன் இருக்கானே. மொளச்சு மூணெலப் போடல. அதுக்குள்ள மொறச்சிட்டுல்ல போறான். துமுராக்கும். '

பெரிய மனுசனும் என்னமோ தானியம் ஒழப்பிக் கெடந்த மாதிரி 'அதெவம்லே கொழுப்பா இங்க வந்து ஒட்டிக்கிட்டு ' என்று துணைக்கு வைகிறார் குருட்டுப் பார்வை பார்த்தபடி. அதுக்குத்தான் இந்த வயசிலேயே கண்ணை மறைத்திருக்கிறது. முதலில் பெண்டாட்டி நின்ற இடம் தெரிந்ததோ என்னமோ.

கெங்கையாப் பயலாம். இன்றைக்கு வரைக்கும் அவள் ஒரு பிள்ளைகூடப் பெறவில்லை. வாயில் எப்படி வருகிறது. அய்யாவிடம் சொன்னதுக்கு. 'ஆமா அவ பெரிய வீட்டுச் சீமாட்டி. அப்படித்தான் பேசுவா. கழுத பொலம்பீட்டுக் கெடக்கு. ' என்று எச்சைத் துப்பிவிட்டு வேலைக்கு கிளம்பிவிட்டார். இதைப் போய் அம்மாவிடம் சொன்னால் அவள் கேட்கிறாள்.

'ஒனக்கு வண்ணாத்திப் பூச்சி புடிக்கிறது வேற எடமே கெடைக்கலயாலே. '

நல்ல அம்மாதான்.

பிச்சமணியைக் கேட்ட கேள்வியில் விக்கிப் போனான். பிறகென்ன எடுத்ததுக்கெல்லாம் விசுக்கென்று கழட்டிக்கொண்டு ஓடினால் எப்படி. முதுகில் ரெண்டு சாத்தலாம் என்று கூடத் தோணியது. பிறகு ஓயாமல் அழுவான். அமர்த்தி முடியாது.

அவன் மற்ற பிள்ளைகளுடன் சேரமாட்டான். எத்தனை அடித்தாலும் மாறி மாறி வீட்டுக்குத் தேடி வருவான். ஓயாமல் விளையாட்டுத்தான். பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. குண்டி கிழிந்த கால்சட்டையைப் போட்டுக்கொண்டு எப்படிப் போவதாம். அய்யாவிடம் கேட்டால் 'அது ஒண்ணுதான் கொறச்சலாக்கும் ' என்கிறார்.

ஊரில் நிறையப் பேர் ஆடுமாடு மேய்க்கிறார்கள். சாணியெடுக்கிறார்கள். எல்லாம் மத்தியான நேரம் ஊருணிக்கரையில் கூடினால் ஒரு கூட்டமே திரண்டு விடும். பள்ளிகூடப் பிள்ளைகள் அவ்வளவு இருக்காது.

வீட்டு மூலையில் அய்யா உஸ்ஸென்று மம்பட்டியை இறக்கினார். தலைத் துண்டை எடுத்து உச்சியில் சொறிந்தார். அம்மா வென்னீர்ப் பானையை இறக்கி கொட்டாரத்துப் பக்கம் கொண்டு போனாள். தங்கச்சியைத் தூக்கிக் கொண்டு பின்னால் போன அய்யா சொன்னார்.

'சுந்தர மொதலாளி யென்ன நேரத்தோடயே நித்திரையில கூடியாச்சு இண்ணைக்கு. '

இவர் ஒருத்தர் வாய்த்தார். மண்டையைச் சொறியத்தான் தெரியும்.

கீழத்தெருவில் கசபுசல் கேட்டது. ரெம்பப் பேர்சத்தம் போட்டார்கள். சே பொட்டக் கூத்தாக்கும். ஆரம்பித்தாயிற்றா இன்றைக்கும். இனி ஓய்ந்தாற் போலத்தான். ஒண்ணைத் தொட்டு ஒண்ணாக பின்னிக் கொண்டே போகும். கடைசியில் ஒருத்தி அழுகணும்.

கீழ வீட்டுக்காரி இன்னும் வந்திருக்க மாட்டாளோ. வீடெல்லாம் விளக்குப் பொருத்தியாயிற்றே. இதுக்குள் வந்திருப்பாளே. வழியில் எத்தனைப் பேரிடம் வாயைக் கொடுத்து நிற்கிறாளோ. வீட்டில் வந்து பிள்ளையையா அமர்த்தப் போகிறாள்.

ஊர்ச்சனம் முக்கால்வாசி அவள் வீட்டில் வேலை செய்கிறது. கொத்து வாங்க எத்தனை பேர் காத்திருக்கிறார்களோ வீட்டு வாசலில். அம்மாகூட அடிக்கடி பெட்டித் தூக்கிக் கொண்டு போவாள். அன்றைக்கெல்லாம் ராத்திரிச் சாப்பாடு பிந்திக் கிடைக்கும். அவள் வீட்டில் அப்படிக் காத்துக் கிடக்கணும். அதுகூட அவளுக்குப் பிடிக்காது. கிணற்றில் ரெண்டு பேர் குளித்தாலே விரட்டியடிக்கிறாளே அதை பொறுப்பாளா.

பிச்சமணிக்கு அன்றைக்குச் சரியான எறி. ஊருணியில் தண்ணீரில்லையென்று மாமரத்துக் கிணற்றுக்குக் குளிக்கப் போனதை எப்படியோ தெரிந்து வந்துவிட்டாள். கண்டபடி வைது மண்கட்டியால் எறிந்தாள். பிச்சமணியென்றால் கூப்பாடு போடுகிறான். எறிக்கு முங்கித் தப்பித்து வெளியேறியும் கண்ணில் மண் விழுந்து உறுத்தியது. கிணற்றை விட்டு ஏறும்போது மண்டையிலேயே குட்டினாள்.

கால்ச்சட்டையைக் கையிலெடுத்து ஓடி ஓடைக்குள் வைத்துப் போட்டுக் கொண்டபோது அவள் கழுகு மாதிரி மிதிகல்லில் நின்று இன்னும் வைது கொண்டிருந்தாள். ஓடும்போது 'அம்மணக்குண்டி அரட்டவாள ' என்று கேலி பண்ணிய கொத்து வேலைப் பெண்களைப் பார்த்து கல்லெறியலாமா என்றிருந்தது. பிச்சமணி மண்டையைத் தடவித் தடவி அழுதான். மண்டையில் உருண்டையாகப் புடைத்திருந்தது. அவன் அழுகையோடு சொன்னான்.

'இவள ஒரு நாளைக்காச்சும் நெத்தியில உச்சுறனா இல்லையான்னு பாரு. '

அப்படிச் செய்து அவள் அழுவதைப் பார்த்தால் நன்றாகத்தானிருக்கும்.

இதாச்சும் என்ன தைப் பொங்கலுக்குக்கூடப் பொலிகட்ட அவளது வேப்ப மரத்தில் குழை ஒடித்ததற்கு வைத வசவிருக்கிறதே ஒரு கடகமிருக்கும். மரம் தளிர்க்காமல் பட்டுப் போகுமாம். அவர்களுக்கு மட்டும் வேலைக்காரன் கட்டுக் கட்டாக ஒடிக்கிறானே அது எதுக்காம்.

இவளுக்கு இதோடா போயிற்று. இருக்கட்டும் இருக்கட்டும். முந்தா நாளே ஒரு ஆட்டம் ஆடியிருப்பாள். அதுக்கு லாய்க்கில்லாமல் போய்விட்டது. அதை பிச்சமணியே செய்தான். மத்தியானம் படப்பு மறைவில் அவள் வீட்டுக் கோழியை அடித்து வேலிக் கருவலைக்குள் திணித்துவிட்டு அருவமில்லாமல் வந்தாயிற்று. சரியான கோழி. ராத்திரிவரை வாயலுக்கத்தையே காணும். என்ன விஷயமென்று மறுநாள் போய்ப் பார்த்தால் வெருகு சரியானபடிக்குத் தின்றிருக்கிறது. அதுக்கு வளம். பிறகெங்கே வைவாள். வெருகைத் தேடி வைய வேண்டியதுதான். கதை அப்படியே இல்லையென்றால் தெருவில் சனங்கள் நடமாடியிருக்க முடியாது.

பிச்சமணிக்கென்றால் எரிச்சல்.

'இதுக்கு வேறெதாச்சும் வழியிருக்காடா. '

'இருக்குடா பெரிய வேட்டா வைக்க வேண்டியதுதான். '

அவள் வீட்டு வெளித் தொழுவில் பசுங்கண்ணுக்குட்டி மட்டும் கட்டிக் கிடந்தது. மதியந்தான். பசுமாட்டை அவுத்துக் கொண்டு காட்டுக்குப் போயிருந்தார்கள். வீட்டில் யாருமே இல்லை. சரி இதுதான் சமயமென்று கோலி தட்டும் கம்பியை எடுத்துப் போய் அதுக்கு நடுமண்டையில் ஒரேயடி. சொதுக்கென்று செத்து விழுந்தது. கயிற்றை அவுத்து நிறைசலுக்குத் தூக்கிக்கொண்டு போய் தூணோரம் நிற்கிற வாக்கில் தண்ணீர்ப் பானைக்குள் மூஞ்சியை ஒட்டிவைத்துவிட்டு மெல்ல நழுவும் வரை பிச்சமணி அடிக்கடி வெளியே வந்து ஆள் பார்த்தான்.

காரியத்தை முடித்துவிட்டு வருகையில் பிச்சமணி சொன்னான்.

'இதும் சரிப்படலன்னா ஒரு நா ராத்திரி மாமரத்துக் கெணத்துக்குப் போயி மிதிகல்ல ஒடச்சுப் போட்டுட்டு வந்துற வேண்டியதுதான். '

'அது பெறகில்ல. '

பொழுதடைந்ததும் வீட்டுக்கு வருவதாகச் சொன்ன பிச்சமணியைக் காணவில்லை. எந்த மூலையில் கிடக்கிறானோ.

இதுக்குள் கீழவீட்டுக்காரி வந்திருப்பாள். முதலில் நிறைசலுக்குப் போய் ரெம்பத் தோதாக முகங்கால் கழுவி விட்டு வீட்டுக்குவருவாள். இன்றைக்குச் சரியான கூத்துத்தான். தெருவெல்லாம் ஆட்டம்போடுவாள். அடுத்தவர்களின் ஆடுமாடு படப்புப்பக்கம் லாந்தினால் கூட கண்மூக்குத் தெரியாமல் எறியச் சொல்கிறதா. அதுக்கெல்லாம் வட்டி வாசியாக இன்றைக்கு ஆடணும். கீழத்தெருவில் போடும் சத்தம் மேலத் தெருவரைக்கும் கேட்கும். டிய்ய்ங்ங் ரேடியோ பாடப்போகிறது.

எத்தனை வைது என்ன செய்ய. யாராவது சொன்னால் தானே. பிச்சமணி லேசுக்குள் சொல்ல மாட்டான். மண்டையெறி மறக்கவில்லை.

வீட்டில் காத்திருப்பவர்களுக்கு இன்றைக்கு கொத்தளந்தாற் போலத்தான். இன்றைக்கில்லையென்றால் நாளைக்கு.

அய்யாவும் அம்மாவும் சாப்பிட்டு விட்டு வாசலில் உட்கார்ந்து எதையோ கசகசவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். சின்னத் தங்கச்சியை மடியில் போட்டுத் தட்டினாள் அம்மா. உள்ளே அக்காவும் மொட்டைத் தங்கச்சியும் சாப்பிட்டார்கள். அவர்களாவது பேசாமல் சாப்பிடக் கூடாதா.

கீழத் தெருவில் இருட்டைத் தள்ளிக் கொண்டு வசவுச் சத்தம் பெருகிவந்தது.

படுக்கையை விட்டுத் துள்ளியெழுந்த சுந்தரம் வாசலிலிருந்த அய்யாவை நெரித்து அம்மாவைத் தாண்டி ஓடி வெளிப்பானையில் வாய் நிறையத் தண்ணீர் கொப்புளித்து முற்றத்தில் வட்ட வட்டமாகப் பீச்சி விளையாடினான்.

'படுக்கிற முத்தத்தப் பாழாக்கிறியே ஒனக்கென்ன கோட்டியாலே இப்ப வந்தம்னாத் தெரியுமா ' என்று அம்மா அரட்டியதையும் சட்டை செய்யாமல் இப்போது பிச்சமணியிம் கூட இருந்தால் நன்றாக இருக்குமென நினைத்தான்.

*******

நன்றி: திண்ணை

Dec 4, 2010

போட்டி-பூமணி

மார்கழிக் குளிரில் சுவர்ந்துவரும் சுலோகங்களின் தாள லயத்தில் தூக்கமுற்றுகை தளர்ந்து மனசு மெல்லத் திறந்தது. அவன் மல்லாக்கப் புரண்டான். அலமாரிக் கண்ணாடியில் அழகிய புல்வெளியின் விரிப்பு மங்கலாகத் தெரிந்தது. பார்வையைத் துடைத்துக் கொண்டான்.

பசுமை படர்ந்த கோகுலக் காடுகள். மரத்தடியில் கால்பின்னிய கோலத்தில் மாயக்கண்ணன் கண்சொருகிக் குழலூதுகிறான். நிரவிக் கிடக்கும் ஆநிரைகள் நிலைமறந்த புல்லரிப்பில் சொக்கி poomani2 நிற்கின்றன. இரையசையில் பிரிந்த தாடைகள் இணையாத கிறக்கம். கடைவாயில் கள்ளத்தனமாகக் கண்ணனைப் பார்க்கும் புல்லிதழ்கள். நீர்நிலையில் நிற்பவை செவிசாய்த்து இசைக் குடிக்கின்றன. சிலவற்றின் மடியில் அருவி சுரக்கிறது. பரவசத்தில் குதூகலிக்கும் செடிகள் பருவம் தாண்டி மொட்டவுக்கின்றன.

நீலக்கண்ணனின் நெற்றிக்கு மேலே மயிலிறகு ஒயிலாட புல்லாங்குழல் வழியே பொங்கிவரும் இன்னிசை அந்தரத்தில் சொற்களைத் தூவிக்கொண்டு ரீங்கரித்துச் செல்கிறது.

'இந்து என்று சொல்லடா

எழுந்து நிமிர்ந்து நில்லடா '

குட்டிபையன் தான் சுட்டிக்கண்ணனின் படத்தை ஒட்டியிருக்கணும். போட்டி வைத்தாலும் வைத்தார்கள். குழந்தைகளுக்கு ஏகக் கொண்டாட்டம். சுறுசுறுப்பு சொல்லமுடியாது.

அவர்கள் படித்த பள்ளி ஒரு இந்து அமைப்புடன் இணைந்து பாட்டுப் போட்டியை அறிவித்திருந்தது. பாடல்களை அச்சிட்டுக் கொடுத்தார்கள். அதில் எந்தப் பாடலைக் கேட்டாலும் ஏற்கனவே சொல்லிக் கொடுத்த ராகத்தில் பாடணும்.

அன்று மாலை குட்டி கும்மாளத்தில் ஓடிவந்து அம்மாவிடம் மூச்சுவிடாமல் ஒப்பித்தான். அக்காவை ஒருவார்த்தை பேசவிடவில்லை. அவன் முகம் பூத்து விரியவிரிய கண்கள் தெறித்துவிடும் பயம் அம்மாவுக்கு.

தலைக்குப் பொருத்தமான கண்கள். தலை பெரிசானது ஒரு கதை. பேறுகால வலிச்சுழல் நின்றுவிட கண்ணும் காதும் வாசலில் சிக்கிக் கொண்டன. ஊசிவலியின் துணையில் திக்கித் திணறி வெளியே வந்தான். கூம்பிப் போன தலையைத் தட்டி சீராக்கும் போது சற்றுப் படர்ந்துவிட்டது. நடுவில் குறுக்காக வாசல்நிலை பதித்த நதிப்பள்ளம். விசிறிவிட்ட காதுமடல் சுருள மறுத்துவிட்டது.

அம்மா மடியிமர்த்தி மட்டுப்படுத்தினாள்.

'போட்டியில செயிச்சா என்ன தருவாக. '

'மூணு பிரைசு. '

'ஏயப்பா மூணு உண்டா '

'மொதல் பிரைசு ஐநூறு ரூவா. ரெண்டாவது முன்னூறு ரூவா. மூணாவது எரநூறு. '

'அப்ப நம்ம வீட்டுக்கு ரெண்டு பிரைசு வரும்னு சொல்லு. '

குட்டியின் முகத்தில் வெற்றிப் பெருமிதம்.

'அம்மாம்மா ஐநூறு ரூவா எனக்குத்தான். '

'அக்காவுக்கு முன்னூறு ரூவா குடுத்துருவொம். பெழச்சிட்டுப் போகட்டும். '

அக்கா ஒத்துக் கொள்ளவில்ல.

'எனக்குத்தான் மொதல் பிரைசு. '

குட்டி அடம்பிடித்துச் சிணுங்கினான்.

'பாரும்மா அவன. நான் தரமாட்டென். '

நிலைமை மோசமாவதைப் பார்த்து அம்மா அப்பாவைக் கூப்பிட்டாள்.

'ஏங்க இங்க வாங்களேன். இவுக சண்டைய நம்மால தீத்துவைக்க முடியாது. '

அவன் வந்து விசாரணை நடத்தினான். நீண்ட பேச்சு வார்த்தைக்குப்பின் ஒரு வழியாக சமாதான உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி குட்டிக்கு முதல் பிரைசு. அம்முவுக்கு ரெண்டாவது. விட்டுக் கொடுத்ததற்காக அவளுக்கு ஒரு சாக்லேட் அதிகம் கொடுக்கணும்.

எப்படியோ கைகலப்பு தவிர்க்கப்பட்டதில் அம்மாவுக்கு நிம்மதி. குழந்தைகளிடம் அக்கறையாகச் சொன்னாள்.

'குடுத்திருக்கிற பாட்டுகள ஒண்ணுவிடாம மனப்பாடம் பண்ணுங்க. அப்பத்தான் பிரைசு கெடைக்கும். '

அதிலிருந்து வீட்டில் சதா ராக சஞ்சாரந்தான். அக்கா தம்பியின் ஆலாபனை கோகுல வனத்தில் எதிரொலித்தது. சன்னல் இடைவெளியில் உருண்டு புரண்டு கூடுகட்டும் அணிலுக்கு ஆச்சரியம். ராகரசிப்பில் சொகமாகச் சுருண்டு இளைப்பாறியது. சுவரில் அப்பியிருக்கும் பல்லி கீழ்வாக்கில் விழியுருட்டி நோட்டமிட்டது.பறந்துவந்து நடுவீட்டில் அமர்ந்த பஞ்சுக்குருவி குதித்துக் கூத்தாடிவிட்டுப் போனது.

என்ன வேலையாக இருந்தாலும் அம்மாவுக்குக் குஞ்சுக் குரல்கள் மீதே கவனமிருந்தது. இடையிடையே வந்து ராக ஏற்ற இறக்கங்களைச் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனாள். அம்மியில் அவள் வாசித்த அரைப்புத் தாளம் பாடலுக்கு இசைவாக இருந்தது.

அவள் ஒவ்வொரு நாளும் குழந்தைகளை கரிசனையாகக் கவனித்துக் கொண்டாள். மாலையில் மறக்காமல் தீனி கொடுத்தாள். அவர்கள் வராண்டாவில் நின்றால் கடிந்தாள்.

'வெளிய நிக்காதங்க. குளிருக்குத் தொண்ட கட்டிக்கிரும். '

காலையில் சூடான பாலுடன் எழுப்பினாள். வென்னீரில் குளிக்க வைத்தாள். ருசியாகச் சமைத்து ஊட்டினாள்.

அவனுக்கென்றால் ஆத்திரம். அங்கயாய்த்தான்.

'மனுசன் நாயோபேயோ அலஞ்சிட்டு வாறது தெரியலயா. நமக்கு இந்தக் கவனிப்பு உண்டுமா. '

அவள் கறாராகச் சொல்லிவிட்டாள்.

'இனிமே ஒங்களுக்குத் தனியா கவனிப்பு கேக்குதோ. குடுக்கிறதத் தின்னுட்டு மொடக்கிறதுக்கில்லாம. '

'சம்பாதிக்கறவனுக்கு இந்தக் கதியா. '

'நம்ம சம்பாத்தியத்தப்பத்தி நம்மதான் பீத்திக்கிறணும். '

'மாசம் மாசம் சம்பளத்த வாங்கி அப்படியே குடுக்கென் பாரு. ஏன் பேசமாட்ட. '

'கூலிக்கு ஆளுப்புடிச்சுத்தான் இவுக சம்பளத்தச் சொமந்துட்டு வரணும். அத்தோட நிறுத்துங்க. '

'போற போக்கப் பாத்தா கொழந்தைகளுக்குச் சொந்தப் பாடம் மறந்துரும் போலருக்கு. '

'ஒரு வாரத்துல ஒண்ணும் குடிமுழுகிப் போயிறாது. '

'அப்ப நடத்துங்க நடத்துங்க. '

'நீங்கென்ன கேட்ட ஒடன நோட்ட எண்ணிக் குடுத்துறவா போறீக. முப்பது நாளைக்குப் பல்லக் கடிச்சுக்கிட்ருந்து பத்துப் பணத்தப் பாக்கவேண்டியிருக்கு. '

'சட்டியில இருந்தாத்தான அகப்பையில வரும். '

சட்டியே ஓட்ட பெறகு எங்கருந்து வரும். '

'ஒடஞ்சு போகலயே. '

'அதும் நடக்கத்தான் போகுது. குடுக்கிற சம்பளத்த ஒரு நாளைக்குக் கண்ணுல பாக்கிறதோட சரி. மறுநா அது வெண்ண உருகினமாதிரி போற போக்குத் தெரியாது. மாசக் கடைசியில ஒரு பண்டம் தட்டியிருச்சுன்னா வாங்குறதுக்கு வழியிருக்கா. பாயி கடையில சிட்டபோட்டு வண்டி ஓடுது. அவன் தண்டத்துக்குக் கணக்கெழுதி வைக்கான். குடும்பத்துல வேற என்ன வருமானம் இருக்குது. வீடு பள்ளிக்கூடம் மருந்து மாத்திரன்னு அத்தன செலவும் சம்பளத்த வச்சுச் சமாளிக்கனும்... '

'கொஞ்சம் சிக்கனாருந்தா சரியாப் போகும். '

'அப்படின்னா வயித்துல ஈரத்துணியத்தான் கட்டிக்கிறணும். '

'கஸ்டத்துலதான் சந்தோசம் இருக்கு தெரியுமா. '

'சந்தோசத்துக்கென்ன கொறச்சல். வீட்ல மூடமூடையா அடுக்கிக் கெடக்குது. ஆனா ஒரு நல்ல நாளைக்கு நாலு உருப்படிக்குத் துணியெடுக்க முடியல. என்ன விடுங்க வீட்டுக்குள்ளயே அடஞ்சு கெடக்கிறவ. வெளி எடங்களுக்குப் போற மனுசன் நல்ல துணி உடுத்தணுமில்ல. அதிகாரின்னு சொல்லிக்கிறதுல மதிப்பென்ன இருக்கு. '

'அப்படிப்பட்ட மதிப்பும் மரியாதையும் நமக்கு வேணாம்மா. '

'நீங்க எப்படியும் போங்க. படிக்கற கொழந்தைகளச் சொல்லுங்க. மத்தவுகளப் போல நல்ல மொறையில அனுப்பனுமில்ல. '

'அவுங்களுக்கென்ன. '

'சும்மாருங்க. அதுக மாத்திப் போடுறதுக்கு உடுப்பு உண்டா. இருக்கிற ஒண்ணவும் தெனமும் தொவசச்சாத்தான் அடுத்த நாள் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பமுடியும். அதுலயும் ஏழு கிழிசல். தச்சுத்தரலன்னா கண்ணக் கசக்குதுக. அழுத மூஞ்சியோட போனா மண்டையில பாடமெங்க ஏறும்... இப்படி நாலு காசு வந்தா அதுகளோட கஸ்டமாச்சும் தீருமில்ல. '

அவள் கண்கலங்கிவிட்டாள். கிண்டலில் ஆரம்பித்து கீறலில் முடிந்து கசிவது வழக்கந்தான். அவன் வாக்குறுதிகளை வாரி வழங்குவதும் அவள் வார்த்தைகளில் மயங்குவதும் புதிதல்ல. மெளனமேகம் கலைந்து மெல்லிய சிரிப்பிழையில் இணைவார்கள். கழுத்துச் சொகத்தில் அவள் சாப்பிட அழைப்பாள். அவன் ஒப்புக்கு மறுத்து உடன் படுவான். அப்போதைக்கும் கதை முடியும்.

மறுநாள் பாட்டுப் போட்டி. குழந்தைகள் நேரமிருக்கவே தயாரானார்கள். நீர் பாய்ச்சிய செடிகளைப் போல் அவர்கள் முகத்தில் குழைவான குளிர்ச்சி. கடல் நீல உடை பழசானாலும் புது அழகைக் கொடுத்திருந்தது. குட்டியின் கால் சட்டைக்குப் பின்புறம் கெட்டியான தையலிரண்டு எட்டிப் பார்த்தது.

அத்தனை பாடல்களையும் அம்மாவிடம் ஒப்பித்துவிட்டு பூஜையில் கலந்துகொண்டார்கள். வரிசை கோர்த்த தெய்வங்களுக்கு முன்னால் சிறிய மணி அதிகநேரம் முணுமுணுத்தது. அம்மா அவர்களுக்கு அழுத்தமாகத் திருநீறு பூசினாள்.

குட்டி ஓடிவந்து அலமாரிக் கண்ணனை அண்ணாந்து பார்த்தான். அந்தக் கண்ணனைப் போலவே அவன் கண்களிலும் களை ததும்பியது.

'நேரமாச்சு கெளம்புங்க. '

அம்மா அவர்களை வராண்டாவுக்கு அப்பாவிடம் அழைத்து வந்தாள். அவன் ஓங்கியுயர்ந்த பப்பாளி மரத்தில் பார்வை பதித்திருந்தான். அதன் கழுத்தைச் சுற்றி பிஞ்சும் பழமுமாகத் தொங்கின. பிஞ்சு காயானால் இன்னும் கனம் கூடும். ஒல்லியான மரத்தால் அவ்வளவு பாரத்தை எப்படித் தாங்க முடிகிறது. அம்மு அவன் சிந்தனையைக் கலைத்ததாள்.

'அப்பா போயிட்டு வாறொம். '

'பையி கொண்டு போகலயா. '

குட்டி முந்திக் கொண்டான்.

'இண்ணைக்குப் பாட்டுப் போட்டியாச்சே. பள்ளிக்கூடம் கெடையாதே. '

'அடடா அத மறந்துட்டேனே. போட்டியில கூச்சப்படாமப் பாடணும். தெரிஞ்சதா. பயப்படக்கூடாது. பத்தரமாப் போயிட்டு வாங்க. '

அம்மா முனங்கிக் கொண்டே குழந்தைகளைப் பின் தொடர்ந்தாள்.

'நம்ம எதத்தான் மறக்கல. '

மூவரும் படியிறங்கி மைதானத்தில் நடக்கும்போது எதிர்வீட்டு இலந்தைமரத்தில் விளையாடும் அணில் முன்னங்காலுயர்த்தி வழியனுப்பியது. அவன் பிஞ்சுகளைப் பெரிசாக்கி மீண்டும் பப்பாளியைச் சுமந்து கொண்டான்.

வேலை முடிந்து அவன் வீடு திரும்பும்போது அந்திமயங்கி விட்டது. குழந்தைகளுக்குப் பள்ளிஉடை வாங்கிவந்தான். நீண்டநாள் தவணை நிறைவேறிய மகிழ்ச்சி. அதை மனைவியிடம் கொடுத்தான்.

'கொழந்தைகள் எங்க. '

'மூத்தவ படிக்கா. குட்டி எழுதறான். '

'ஓகோ போட்டி முடிஞ்சதோ. '

'துணியெடுக்கக் காசு ஏது. '

'போட்டியில பிரைசு வாங்கீட்டு வந்துருப்பாகல்ல. அந்தத் தெம்புதான். '

'கிண்டலா. '

'ஏன் போட்டி நடக்கலயா. '

'எல்லாம் நடந்துருக்கு. '

'என்னாச்சு. '

'தேர்ந்தெடுக்கிறதுக்கு மூணு நீதிபதியாம். '

'ஒவ்வொருத்தரும் மார்க்போட்டு கூட்டிப் பாப்பாங்க. '

'அவங்கவங்களுக்குத் தெரிஞ்சவங்க கொழந்தைகளுக்கு அதிக மார்க் போட்டுட்டாங்களாம். '

'அதெப்படி. '

'அப்படித்தான் நடந்ததாம். '

'இருக்காதும்மா. '

'தெரிஞ்சவங்க போயி நீதிபதிக்கிட்ட குசுகுசுன்னு பேசிக்கிட்டாங்களாம். நமக்குத் தெரிஞ்சவங்க யாரு இருக்காங்க. நம்மதான் பள்ளிக்கூடத்துப் பக்கமே எட்டிப்பாக்கிறதில்லையே. அம்முவுக்கு கின்னா அவ்வளவு ஆத்தரம். குட்டி குமுறிக்குமுறி அழுகிறான். '

'நீயே அழுதுருவ போலருக்கே. '

'பெறகென்னங்க. இவ்வளவு கஸ்டப்பட்டு வெறுங்கையோட வந்தா வயித்தெரிச்சலா இருக்குதுல்ல. '

'யாரு கஸ்டப்பட்டது. நீயா கொழந்தைகளா. '

'எல்லாருந்தான். '

'ஒவ்வொருத்தரும் இப்படித்தான் கஸ்டப்பட்ருப்பாங்க. அத்தனபேருக்கும் குடுக்கணும்னா பிரைசுக் கெங்க போறது. '

'என்னருந்தாலும் மனசு ஆறமாட்டங்குது. '

'தண்ணிய ஊத்தி அமத்து ஆறிப்போகும். '

'அதுசரியே இந்தச் சமயத்துல காசு எங்கருந்து வந்தது. '

'கடன் குடுக்க ஆளா இல்ல. '

'கடன் வாங்கித் துணியெடுக்கணுமாக்கும். அப்படியென்ன அவசரம். '

'கைக்குக் காசு வாறதெப்ப துணியெடுக்கிறதெப்ப. '

கீழே உஞ்சவிருத்திக்கிழவரின் மிருதங்கத் தாளம் கேட்டது. கார்மேகவண்ணனின் லீலைகளை நெஞ்சுருகப் பாடிக்கொண்டிருந்தார். எப்போதாவது மைதானத்தை வலம்வந்து குரலைத் தூவிவிட்டுப் போவார். அவர் இருளில் மறைந்த பின்பும் பாடலும் தாளமும் உலவிக் கொண்டிருக்கும். இவ்வளவு காலமாக அவருக்குப் போட்டியாக யாரும் வந்ததில்லை.

அவன் குழந்தைகளை அழைத்தான்.

'அம்மு தாத்தா வந்துருக்காரு பாரு. '

இருவரும் ஓடிவந்தனர். அவன் ஆளுக்கொரு ரூபாய் கொடுத்தான். அதை அம்மா அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டாள்.

'டப்பாவுல ரெண்டு எட்டணா எடுத்துட்டுப் போங்க. '

அவன் ஆச்சரியமாகப் பார்த்தான்.

'வழக்கமா குடுக்கிறதுதான. '

'இனிமே இதுதான் வழக்கம். '

திரும்பி வந்த குழந்தைகளுக்கு புது உடையைப் பார்த்ததும் பெரிய பரிசு கிடைத்த பூரிப்பு. அதை அணிந்து அழகுபார்த்து அழகுகாட்டிச் சண்டையிட்டு சமரசமாகி ஆடியடங்க அதிக நேரமானது. குட்டி புதுசிலேயே தூங்கிவிட்டான்.

மறுநாள் அதிகாலையில் அய்யப்ப பக்தர்கள் துயிலெழுப்பினார்கள். முரசுகளின் கணுக்கணுவான தாளமும் அதை மொத்தமாகப் பிடித்து வைத்து குப்பென்று மடைதிறக்கும் ராட்சத ஜால்ராவின் முத்தாய்ப்பும் பம்பா நதிபோல் பாய்ந்து வந்தது.

சபரிமலை தேடும் அந்த ஓங்கார நாதம் தேயத் தேய வீட்டுக்குள் வானொலியின் இசை மெல்லப் பரவியது. அவன் பக்திப் பாடல்களைக் கேட்டவாறு படுத்திருந்தான். ஒருவர் கல்வாரி மலையிலிருந்து கணீரென்று அறைகூவினார்.

'கேளுங்கள் தரப்படும்

தட்டுங்கள் திறக்கப்படும்

தேடுங்கள் கிடைக்குமென்றார்-ஏசு

தேடுங்கள் கிடைக்குமென்றார். '

இன்னொருவர் மெக்காவிலிருந்து உருகினார்.

'இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்

இல்லையென்று சொல்லுவதில்லை. '

மற்றொருவர் 'சுவாமிமலை....சுவாமிமலை... ' என்று நடுக்கத்தில் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தார்.

எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு கானகத்திற்கு ஓடி ஒளிந்து கொள்ளணும் போலிருந்தது அவனுக்கு. அப்போது சமையலறைக்குள்ளிருந்து அசரீரி வந்தது.

'பாட்டுக் கேட்டது போதும். பாடத்த எடுத்துப் படிங்க. '

அவன் அவசரமாக எழுந்துபோய் வானொலியை நிறுத்தி விட்டு முகங்கழுவப் போனான். பள்ளிக்கூடம் தந்த பாட்டுப் புஸ்தகங்கள் உரலோரம் குப்பைக் கூடையில் கிழிந்து கிடந்தன.

நீரினால் தூக்கக் கலக்கத்தைப் போக்கிவிட்டு வரும்போது ஒரு மூலையில் அமர்ந்திருந்த அம்மு பாடத்தை சுலோகமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அலமாரிக்கு முன்னால் மண்டியிட்டிருந்த குட்டி கண்ணாடியை ஒருமுறை வெறித்துவிட்டு பைக்குள் பாரத்தைத் திணிக்க ஆரம்பித்தான். கண்ணாடியில் கோகுலக்கண்ணன் குழலூதிய இடத்தில் அவன் நேற்றிரவு கஷ்டப்பட்டுக் கட்டமிட்டெழுதிய கால அட்டவணை ஒட்டியிருந்தது.

*****

நன்றி: திண்ணை

Oct 21, 2010

ரீதி - பூமணி

அப்படியே முடிவாயிற்று.
மூன்று பேரும் ஓடமரத்து நிழலில் போய் உருண்டார்கள். தொரட்டிக் கம்பு மரக்கொம்பைக் கவ்வி ஏலவட்டம் போட்டது.
உதிர்ந்து கிடந்த பூக்கருகல்களைப் பொறுக்கி நெறித்துக்கொண்டே பெரியவன் கேட்டான். poomani2
“அப்ப இண்ணக்கி கஞ்சியில்லையாக்கும். எங்க வீட்டில ஆருருந்தா?”
சின்னவன் தொண்டையை நனைத்தான்.
“ஒங்கம்மா புள்ளையாட்டீட்டிருந்தா ‘புளிச்ச தண்ணிக்குள்ள” கூட இல்லனு கையை விரிச்சுட்டா... அவன் வீட்ல ஆளவே காணும்...”
“நீ குடிச்சிட்டு வந்தயா?”
“அதெல்லாம் கேலி மயிருல்ல. கொஞ்சம் நஞ்சம் இருந்ததவும் எங்கண்ணக்காரன் உருட்டீட்டான்.”
“ஆரு படிக்கிறவனா?”
“ஆமாமா அவன் ஒருத்தன் வந்து கெடக்கான்ல வீட்ல..”
கரிசல் புழுதியை முகர்ந்த வெள்ளாடுகள் விதறுபட்டு ஓங்கரித்தன. பட்டுக்கிடந்த இலந்தைச்செடியையு கொம்பட்டி நெற்றையும் கொறிப்பதுடன் அவை அடங்குவதாயில்லை. ரோட்டோரம் சில தோட்டப் பசப்புக்களைத் தவிர எட்டாக் கை வரையில் ஒரே கரிசல் விரிப்புத்தான் கருகிக் கிடந்தது.
“செருப்புக் காலோட ஒரு ஓட்டம் ஓடி ஆட்டத் திருப்பீட்டு வந்துரு. எங்கயாச்சும் பெறப்புடுவோம்”
“இங்க திருப்பீட்டு வந்து என்ன செய்ய. ஆட்டுக்கு வகுறு நெறஞ்சா போகும். அந்தானக்கி சில்லாங் காட்டுக்குப் போவோம்.”
“அதுஞ் சரிதான். ரெண்டு கொப்புக் கொழைய வளச்சுக் குடுத்துட்டே போனாச்சுன்னா தென்னமரத்துக் கரண்டுக் கெணத்துக்குப் போயிறலாம்.”
அவர்கள் கிளம்புகையில் மேற்கே வெயிலலையில் ஆட்டுக்கூட்டம் நீய்வதுபோலத் தெரிந்தது.
”ஏலே ஆட்டக் குளுப்பாட்டி எத்தன நாளாச்சு. காணம் வந்துரும் போலருக்கு.”
“இவன் ஒருத்தன், ஆட்டுக்குத் தண்ணி காட்றதே பெரிசாருக்கு. இதுல குளிப்பு வேற கேக்குதோ.”
“அந்தா தெக்குத் தாருல கம்மந்தட்ட சும்மாதான கெடக்குது, அதுல வுட்டாக்கூட ரெண்டு கடிக்குமே.”
”வேறு வென வேண்டாம். அவரு தன்னால ரெண்டு மாட்ட வச்சிட்டு கூளத்துக்குத் திண்டாடுறாரு, கண்டுக்கிட்டாருன்னா நொக்கப் பிதுக்கிப்பிடுவாரு.”
இண்ணக்கி ஊட்டுக்கு என்னதான் செய்யப் போறமோ தெரியல’ எளங்குட்டி வீட்ல பாலுக்குப் பாடாப் படுத்தும்.
“அங்க பாரு மழ தண்ணியில்லாம மொச்சி கூடபட்டுப் போயிக் கெடக்குது.”
எதிர்ப்பட்ட பனைமரத்தில் கல் வைத்துச் சதைத்து நெஞ்சில் சாறு தெறிப்பதில் நிம்மதிப்பட்டான் இன்னொருத்தன்.
சின்னவனுக்கு வயிறு குடைந்தது. தூரத்தில் சில உருவங்கள் கோடுகளாய் நெளிந்தன.
“ஏய் நான் ரோட்டுக்கு வடக்கு கொய்யாத் தோட்டத்துக்குப் போயிட்டு வரட்டுமா?”
“எலேய் போயும் போயும் அதுலயா கை நீட்டப் போற. அவரு ஒரு பிசினாறி. கண்டாச்சுன்னா அலறீட்டு வருவாரு கடமாங்கொளவி மாதிரி.”
“நாயிருந்தாக்கூட வேட்டையாடலாம். அது இன்னியேரம் எங்க நாக்கத் தள்ளீட்டுக் கெடக்கோ.”
“எங்கயாச்சும் கரண்டுத் தொட்டிக்குள்ள கெடக்கும்.”
“அதுல்லாம அணிலு வேட்டையாடுவமே.”
“அருவாருக்குதுல்ல, ரெண்டு பனையப் பாத்து ஏறலாம்.”
“சரி வெளாரு செதுக்கீட்டு வா”
பெரியோடைக் கரையில் கும்மல் பனைகளில் அணில் கிடக்கும் நிழலை அருவம் பார்த்து முடிக்க ஐந்து பனை தேறியது. பெரியவன் மூன்று பனைகளில் ஏறி ஓலையோடு சேர்த்து அணில் கிடந்த பாகத்தை வெட்டி விழுத்தாட்டினான். பதமான வெட்டில் அவை கோரப்பட்டு விழுந்து செத்தன. விடலிப் பனையொன்றில் ஏறிய சின்னவன் குருத்தையொட்டிக் கிடந்த அணிலை ஓலையுடன் பிடித்தே நெறித்துக்கொன்றான். இன்னொன்று இந்தச் சலசலப்புக்கு நழுவிவிட்டது.
சின்னவன் சுதாரித்துச் சொன்னான்.
”நாலாச்சு.”
ஆடுகள் ஓடை மர அடர்த்திக்குள் மறுக்கி மறுக்கி நெற்றுப் பொறுக்கித் திரிந்தன.
“இப்ப தீக்குச்சு வேணுமே”
“நடுக்காட்ல ஆருட்டப் போயிக் கேக்குறது.”
“பெறகு இதத் தூக்கீட்டே அலையவா. சூட்டாங்கறி போட்ருவோம்.”
“அப்ப கொத்தப் பருத்தி கெடந்தா பெறக்கீட்டு வா. நான் ரெண்டு சீனிக்கல்லு பாத்துட்டு வாறென். சிக்கிமுக்கி தட்டுவோம்.”
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கரையோரம் தத்துக்குக்கீழ் தீமூட்டம் புகைந்தது. முகஞ் சுண்டச்சுண்ட நாலு அணில்களையும் நன்றாய் வாட்டிக் குடலெடுத்தனர்.
“சூட்டோட சூடா ரெண்டு மூணு கல்லத் தீக்குள்ள போட்டு வையி.”
“நீயென்ன அப்பிடிக் கொடலெடுக்க ஈரலெல்லாம் சேத்து, அத இங்க கொண்டா.”
சின்னவன் ஈரல் துண்டைக் கத்தரித்து தீயில் கருக வாட்டி வாயில் பிட்டுப் போட்டுக்கொண்டான்.
“ஆடு எங்க போகுதுன்னு பாருலே”
‘அது எங்கப் போகப்போகுது இந்த வெயில்ல.”
“நாயிருந்தாலும் இந்தக் கொடலத் திங்கும்”
சுட்டெடுத்த அணில்களை சப்பையும் சதையுமாப் பிய்த்து சூடேறப் போட்ட கற்களில் ஒற்றி நீருறிஞ்ச வைத்தார்கள். பிறகு மூன்று பங்காய் வைத்து கல்லாங்கூறு போட்டுப் பகிர்ந்து தின்றார்கள்.
கையைப் புழுதியில் துடைத்துவிட்டு அவர்கள் எழுந்து பார்த்த போது ஆடுகள் அனேகமாய் தென்னமரத்துக் கிணற்றை எட்டியிருந்தன.
“இண்ணிக்கி அம்புட்டுத்தான் தொலஞ்சோம்.”
குடல் தெறிக்க ஓடினார்கள். ஆடுகள் அத்தனையும் தோட்டத்தில் மிளகாய்ச் செடிகளை உழப்பிக்கொண்டு போய் கினற்றைச் சுற்றித் தளிர்த்திருந்த பாலாட்டஞ் செடிகளை மொய்த்திருந்தன.
தெற்கு மடக்கில் உழுதுக்கொண்டிருந்த புஞ்சைக்காரர் அவர்களுக்கு முந்தியிருந்தார். அவர் கையில் சாட்டைக்கம்பு இருந்தது.
அவர்கள் ஆட்டுக்கும்பலை ஓடித் திருப்பி விரட்டியதும் அவர் இரைந்தார்.
”ஏலே சாதிகெட்ட சலுப்புத் தேவிடியா புள்ளீகளா, இங்க வாங்கலே. வெள்ளாமக்காடு தெரியாம அம்புட்டென்னதே பூளக் கொழுப்பு. இப்ப மூணு பேரவும் தென்னமரத்துல கெட்டித் தொலிய உரிக்கனா என்னன்னு பார்.”
உழவு கட்டிக்குள் விழுந்தடித்து ஓடி சின்னவனைச் சாட்டையால் விளாசினார். அவன் கூப்பாடு போட்டுக்கொண்டு ஓட்டம் பிடித்தான். அதுக்குமேல் அவரால் பின் தொடர முடியவில்லை. மிச்சக் கோவத்தை கண்டனமாக்கி வைது தீர்த்துக்கொண்டார்.
முள்ளுக் காடெல்லாம் தாண்டி வந்தபிறகும் சின்னவனுக்கு விக்கலும் விம்மலும் அடங்கவில்லை. உடம்பைச் சுற்றி புரி முறுக்கியது போல் தடிப்பு சிவந்திருந்தது.
“பெலமாப் பட்ருச்சோடா?”
சின்னவன் பேசவில்லை, மூக்கை உறிஞ்சினான்.
“அந்தானக்கி அவனத் தொரட்டிக் கம்புட்டு ஒரு போடு போடுவமான்னு வந்துச்சு. என்னமோ வெள்ளாமையெல்லாம் அழிஞ்சு போனது போலல்ல வாரான். இருக்கட்டும் ஒரு நாளைக்குத் தொரட்டிக்கத்திய நல்லாத் தீட்டிட்டு வந்து தென்னங் குருத்தெல்லாம் அறுத்துப் போட்டுட்டுப் போயிருறேன்.”
“இவன் துமுறுக்கு இன்னேரம் நம்மூருனா கெதி என்னாகும். ஈரக்கொல செதறிப்போகும். இண்ணக்கினுல்ல தொயந்துகை நீட்டிட்டுத்தான் வாரான். எண்ணக்கித்தான் பூச வாங்கிக் கெட்றான்னு தெரியல.”
“ஆடு வெள்ளாமையில ஒரு எலகூடக் கடிக்கல. பாவம் காரப்பெய தொட்டித்தண்ணியில சாணியக் கரச்சுவுட்டுக்கிறதப் பாரு. ரெண்டு நெத்தப் பெறக்குனதுக்கு அதுக தண்ணிகூடக் குடிக்கல.”
“இனியொரு நாளைக்கு என்ன செய்யணும்னுருக்கென் தெரியுமா. வார வெருச்சியில கத்திக் கும்பு குத்தி ஏத்திறணும். இவனால செயிலுக்குப் போயிட்டாத்தான், என்ன. வாய்க்கால்ல நிண்ணு ஆடு தண்ணி குடிச்சிட்டாக் கொறஞ்சா போகுது அத்தனையும். பேசாம ரோட்டுக் கெணத்துக்கு ஆட்ட வுடு.”
ஒத்தக் கடையோரம் ரோட்டுக் கிணற்றில் கமலை இறவையாடியது.
குறண்டிச் செடிகளில் சில்லான் அடித்துவிட்டு அவர்கள் லாத்தலாய்ப் போனார்கள்.
பெரியவன் சின்னவனைக் கேட்டான்.
“ஒங்க அண்ணன் எதுக்குடா ரொம்ப நாளா இங்க வந்து கெடக்கான் படிப்ப வுட்டுட்டு.”
“என்னமோ பெரிய படிப்புப் படிக்கணும்னு சொல்லு ரெண்டு மூணு ஆட்ட வித்து அனுப்புனாக. அங்க அரிசியில்லாமச் சோறு சரியாப் போடமாட்டாங்கன்னு சத்தம் போட்டாங்களாம். எல்லாத்தவும் இழுத்து மூடி வெறட்டியடிச்சிட்டான்.”
“சோறில்லாம வகுத்துப் பசியோட எப்பிடி உக்காந்துட்ருக்கிறது. ஒங்கய்யாவுக்குக் கோவங் கோவமாருக்குமே.”
“அதுக்கென்ன செய்யிறது. பொட்டியாருக்கு கூழுக்களின்னா மொகஞ் சுண்டும். எங்கம்மா வேல செஞ்சிட்டு வார தவசத்துலதான் கம்மங்கஞ்சி காச்சிக் குடுக்கிறது.”
“ஒங்க வீட்டோரம் பிச்சையா குடும்பத்தோட எங்கயோ போயிட்டானாமில்லடா?”
“ஆமா, மலப்பக்கம் போயிட்டான். வீட்ல கஞ்சிக்கில்லன்னா என்ன செய்யிறது. வேற வேலையுமில்ல.”
“கெணத்துக் காடெல்லாம் தண்ணியில்லாமக் கெடக்கையில என்ன வேலருக்கும்.”
”ஙோத்தா, மழையாச்சும் பேயுதா. வேண்டாம் வேண்டாமிங்கப் பேயிறது. இப்பிடி நேரம் போட்டெடுக்கிறது.”
“கொஞ்ச நா போச்சுனா எல்லாரும் கிளம்ப வேண்டியதுதான்.”
கமலை மாடுகள் கக்கிய நுரைக்குமிழ்கள் பறந்தவண்ணமிருந்தன. கமலையடித்த கிழவர் கூனைக்கொருக்க கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துக்கொண்டார். ஒரு கூனை தண்ணீர் ஊற்ற மாட்டு வாலைப் பிடித்துக்கொண்டு ரொம்ப தூரம் வடத்தில் உட்கார வேண்டியிருந்தது.
“அடேய் ஒழப்பீராம ஆட்டவுடுடா, எங்கயாச்சும் ஒடஞ்சிருச்சுனா எட வத்திப்போகும். ஆளுல்லாத நேரத்துல வண்ணாப் பெய வந்து வெளுத்துருக்கான் கெணத்துக்குள்ள. அவனுக்கு வேற எடங்கெடக்கல போலருக்கும். அது பாரு அந்த அழுக்குச் சீண்றத்துக்கு தண்ணிய வாயிக்கிட்டக் கொண்டு போக முடியல.”
ஆடுகள் ஆசை தீரத் தண்ணீர் குடித்துக் கிளம்பின. சில முதுகுதறி வெயிலுறைப்பை நாக்கால் தடவிச் சென்றன. கமலைக் குழியோரம் வைத்திருந்த தண்ணீர்ச் செம்பைத் தட்டிவிடாமல் பார்த்துக்கொண்டார் கிழவர்.
அவர்கள் மூன்ரு பேரும் முகங்கழுவித் தெளுச்சியாகப் புறப்பட்டார்கள்.
“ஒத்தக் கடையோரம் போயிக் கொஞ்சம் அமத்துவமே.”
”ரோட்டு மேலயா?”
“அதுக்கென்ன, வேற மரமெங்க இருக்கு. வாங்கப்பா போவோம்.”
சின்னவனுக்கு இதெல்லாம் மனசிலில்லை.
”எனக்குத் தண்ணித் தவிக்குது. இது வெறுஞ் சவருத் தண்ணி. வாயில் வய்க்க முடியல.”
”எங்களுக்கும் தவிக்கத்தான் செஞ்சது. என்ன செய்யிறதுன்னு இதுலதான் ரெண்டு கையள்ளிக் குடிச்சோம்.”
“தாயக் கழிச்சாலும் தண்ணியக் கழிக்கப்புடாதுலே.”
“நான் எங்கயாச்சும் போயிக் குடிச்சிட்டு வாறென்.”
“அந்தா வாகமரத்தோரம் கரண்டுக் கெணறு இருக்குது பாரு அங்க போயிக் குடிச்சிட்டு வா. நாங்க இப்படியே ஒத்தக் கடைக்குப் போறோம்.”
சின்னவன் வேகமாகப் போய்த் திரும்புவதற்குள் ஆட்டுக்கூட்டம் ரோட்டு வேம்படியில் கூடிக்குழை கடித்துக்கொண்டிருந்தது. பெரியவன் அவசரத்தில் தொரட்டிக்கம்பால் வேப்பங்குழைகளை வளைத்து இழுத்துப் போட்டான். ஆடுகள் அமர்ந்து தின்பதைப் பார்க்க சந்தோசமாயிருந்தது அவனுக்கு.
“என்னலே தண்ணி குடிச்சயா?”
“குடிச்சேன். கெணத்துக்காரப் பெய படிய இடிச்சுப் போட்ருக்கான்.”
”பெறகு?”
“கரண்டுக் கொழாயி வழியா எறங்கிக் குடிச்சிட்டு வாறென்.”
அண்ணாந்திருந்த பெரியவன் கொஞ்சம் குனிந்து பார்த்தான். அந்த நேரத்தில் கிழக்கேயிருந்து முரட்டுவாக்கில் வந்த கார்ச்சத்தத்துக்கு ஆட்டுக்கூட்டம் ஒரேயடியாக விரண்டதைப் பார்த்ததும் சின்னவன் வாய்க்கு வந்தபடி வைதுகொண்டே காருக்குப் பின்னால் ஓடிக் கல்லெறிந்தான். அப்பவும் பெரியவன் குழையிழுத்துக் கொண்டு தானிருந்தான்.
சிதறிக்கிடந்த ஆடுகளை ஒன்று திரட்டித் திருப்பி வந்த இன்னொருத்தன். “அந்தக் கொழாயில பெரிய பாறையத் தூக்கிப் போட்ருக்கணும்லே” என்று தென் சரிவில் உயர்ந்து தெரிந்த ட்ரான்ஸ்பாரத்தை நோக்கி கல் உச்சினான்.
வெள்ளாடுகள் குழைகடிப்பதில் அமைதி கண்டிருந்தன.

தட்டச்சு : சென்ஷி

Jul 16, 2010

தொலைவு-பூமணி

பஸ் விரட்டலில் சிதறுண்ட புறாக்கூட்டம் பஸ்டாண்டைத் தாண்டி ஆற்றங்கரை மர வரிசைக்குள் மறைந்து போயிற்று.

'சேசுவே ஒம் கொழந்தைகளக் காப்பாத்தும். '

poomani2 ரோசம்மா நெஞ்சில் சிலுவையிட்டுக் கொண்டாள். அவள் காலடியில் மேரிக்குட்டி பஸ்டாண்டில் பார்வை விளையாட நின்றிருந்தாள்.

அந்தோணியும் வயலெட்டும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ரெண்டு குழந்தைகளும் இடையில் ஓடி தொந்தரவு செய்தன. ஆனாலும் சட்டை செய்யவில்லை. ஒரு தடவை அந்தோணி அரட்டினான்.

'ஏலே சும்மா இரியேம்லே கையக்கால வச்சிட்டு. '

ரோசம்மா முறுவலித்தாள்.

'என்னதான் பேசி முடிப்பாவளாம். '

கல்யாணம் முடிந்தது நேற்றுப் போலிருக்கிறது. அதற்குள் ரெண்டு பிள்ளைக்காரனாகி விட்டான். மூத்தவள் ஏழெட்டு வருசத்தில் உட்கார்ந்து விடுவாள். பெண்ணுஞ் சரி பீர்க்கங்கொடியுஞ்சரி. சின்னவனைப் பற்றிக் கவலையில்லை. என்றைக்கிருந்தாலும் சம்பாதிப்பவனாயிற்றே.

அந்தோணி திடப்பட்டு விட்டான். மீசை புருவமெல்லாம் அய்யாவைப் போல் திரட்சியாக. ஏன் கன்னங்கூட ஒட்டிப் போய் அதே அச்சுதான். இதெல்லாம் பார்க்க அவர் இருக்கணும் இன்னேரம். வயலெட் கெட்டிக்காரியாக்கும். புருசனை நன்றாகக் கவனித்துக் கொள்கிறாள். நல்ல சம்பந்தம். வசதிக்குக் குறைவில்லை. நிறைய நகை போட்டார்கள். ரொக்கம் வேறு கொடுத்தார்கள். இப்போதும் வருசத்துக்கு வேண்டிய எல்லாப் பண்டங்களையும் அவள் வீட்டிலிருந்து அனுப்பி விடுகிறார்கள். அவளது வீட்டிற்குப் போய் ரொம்ப நாளாயிற்று. கல்யாணத்திற்குப் பிந்தி ஒரு நாள் போனது. சம்பந்தகாரர்களும் வருவதில்லை. அந்தோணி வந்தால்கூட இவன்தான் அங்கு போகணும். அப்படியொரு வழக்கம் ஏற்பட்டுப் போனது.

என்னமோ பிள்ளை குட்டிகளுடன் அவன் நன்றாக இருந்தால் சரி. அவனைப் படிக்க வைக்க கொஞ்சச் செலவா ஆயிற்று. விவசாயத்தில் வந்த வரவையெல்லாம் அவனுக்குத்தான் போட்டது. அவன் அய்யாவுக்கென்றால் ஒரே கிறுக்கு. எப்படியும் படிக்கவைத்து விட வேண்டுமென்று. கடைசியில் அவன் வேலைக்குப் போவதைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. கமலைத் தனத்தில் மாட்டுக்குத் தும்பறுந்து நிறை கூனையுடன் மோக்கால் மோதியதென்று படுத்தார். மனுஷனை அப்படியே அமுக்கிவிட்டது.

கர்த்தருக்கு முன்னால் எல்லாரும் மண்டியிட்டு ஜபித்ததெல்லாம் பலனற்றுப் போனது.

அப்போது மேரிக்குட்டி கைக்குழந்தை. அய்யா முகம் அடையாளந்தெரியாது. ரெம்ப நாளாக அய்யா ஊருக்குப் போயிருப்பதாகச் சொல்லித் திரிந்தாள். இன்றைக்கு நாலாவது வாசிக்கிறாள். மரிய செல்வம் கெட்டிக்காரி. வீட்டு வேலைக்குக் கவலையில்லை. அது சமைந்து ரெண்டு வருசமாகிறது. ஒருத்தனுக்குக் கொடுக்கணும். அது வேறு செலவு.

மேரிக்குட்டியை மேற்கொண்டு படிக்க வைக்கணும். அதுக்கு வீட்டில் ஓட்டமில்லை. மாடு வண்டியெல்லாம் விற்று விவசாயம் கால் குறுக்கத்தில் வந்து நிற்கிறது. கீரையும் காய்கறியும் விற்று எந்த மூலைக்கு அடைபடும். என்னேரமும் கமலை இறவையாடிய கிணற்றில் இன்றைக்கு தெலா முனக்கம் கேட்கிறத். அதற்கும்கூட யாரையாவது பிடித்து வரவேண்டியிருக்கிறது.

எல்லாம் அவரோடு சரி. அவர் கண்ணுக்குப் பின்னால் முற்றந்தெளிக்க சாணிக்குக்கூட அடுத்த வீடு போக வேண்டிய நிலைமை. என்னமோ ஒரு வருசமாக மரிய செல்வம் காளங்கண்ணு வளர்க்கிறாள். அதை விற்றால் அவளுக்கொரு தங்கச் சாமானுக்காயிற்று.

போன பண்டிகைக்கு எல்லாருக்கும் துணிமணியெடுக்க அந்தோணி பணம் அனுப்பினான். மூணு மாசத்திற்கு முந்தியே கடிதம் எழுதித் தூண்டியது. கர்த்தர் கிருபையில் பண்டிகைக்குக் குறையெதுவுமில்லை. இந்தப் பண்டிகைக்குக் அவனை குடும்பத்துடன் வரச் சொல்லணும். நிறையச் செலவாகும். அந்தச் செலவுக்கு இங்கே பண்டிகை கொண்டாடிவிடலாம். முதலில் மருமகள் என்ன சொல்கிறாளோ.

இப்போது வேறு வந்து போகிறான். கொழுந்தியாளுக்குக் கல்யாணமாம். வரவில்லையென்றால் மாமனார் கோவிப்பார். மருமகளுக்குச் சொல்லி முடியாது.

ரோசம்மாவுக்கு பஸ்டாண்டு இரைச்சல் உறுத்தியது. மேரிக்குட்டியின் தலையை வருடினாள். அதற்குப் பதிலாக குட்டி அண்ணாந்து பார்த்தாள்.

'ஏட்டி குட்டி அண்ணனோட பட்ணம் போறயா படிக்க. '

குட்டி தலையை வெட்டினாள்.

'ம்க்கும் அம்மாவும் வரணும். '

எதுக்கெடுத்தாலும் இப்படித்தான். கூடவே அம்மா இருக்கணும். கோயிலுக்குள் மண்டியிடும் போதுகூட முந்தியைப் பிடித்துக் கொண்டு வாயலுங்கப் பேசமாட்டாள். சோறு போட்டுவைத்தால் அம்மா பக்கத்திலிருந்து பிசைந்து கொடுக்கணும். மறுசோறு வேண்டுமா என்று கேட்டால் அமைதியாகச் சொல்வாள்.

'அம்மாவுக்குப் பிரியம் எப்படியோ அப்படி. '

'மகளே நீ பள்ளிக்கூடம் போயி எப்படி இருக்கயோ. '

ரோசம்மா குட்டியை அணைத்துக் கொண்டாள். சிகரெட்டை ஊதியவாறு பெட்டி படுக்கைகளைச் சரி பார்த்த அந்தோணி கேட்டான்.

'குட்டி என்னம்மா சொல்லுது. '

'அண்ணனோட போறயான்னு கேக்கென். அம்மாவும் வரணுமாம். '

அந்தோணி வயலெட்டைப் பார்த்தான். குழந்தைகளைப் பிடித்து வசக்கிக் கொண்டிருந்தாள் அவள்.

'குட்டிக்கு அம்மா கூடவே இருக்கணும். அம்மா வந்தா அக்கா என்னடா செய்வா. '

குட்டி அம்மா மடிக்குள் முகத்தை ஒளித்துக் கொண்டாள்.

'அக்காவ கலியாணம் முடிச்சுக் குடுக்கணும். '

எல்லோரும் சிரித்தார்கள். அந்தோணி பிறகு மெளனப்பட்டுப் போனான்.

ரோசம்மா பந்துத் தலையைச் சொறிந்து கொண்டாள்.

'ஏம்ப்பா கார் வர நேரமாவுமா. '

'இண்ணைக்கென்னமோ லேட்டு. '

'இப்படி சீரெட் ஊதுறயே அதென்ன வாயி நெறையுமா வயிறு நெறையுமா. வீண் செலவு தானப்பா. '

வயலெட் திரும்பிப் பார்த்தாள்.

'நானுந்தான் சொல்றத்தே. அவிய கேட்டாத்தான. ஒடம்பு எதுக்காவும். அவியளுக்கு யாரு சொல்லுவா. '

'ஒடம்பு மட்டுமா. மாசம் செலவென்ன ஆவும். அந்தக் காச எனக்கனுப்பினாக் கூட புள்ளைகளுக்குப் போடுவென். இல்ல ஒம்புள்ளைகளுக்குப் போடு. ஒம் புருசனக் கண்டிசன் பண்ணி வையி. துட்டு கரியாப் போவுதே. '

'அதோ பஸ் வந்தாச்சே. '

அந்தோணி சிகரெட்டை எறிந்து நசுக்கினான். வயலெட் எழுந்து சேலையைத் துடைத்தாள்.

'உள்ள எறிக்கடா. புள்ளைகளக் கூப்பிடு. '

'நீங்க பெட்டியத் தூக்குங்க. நான் சூட்கேஸ எடுத்துக்கிறென். '

'எனக்கிட்ட ஒண்ணு குடும்மா. '

'வேணாம். நானே தூக்கிப் போயி டிக்குல போட்டுட்டு வாறென். '

மேரிக்குட்டியும் ஏறிக்கொண்டாள். முன்சீட்டில் குழந்தைகளுடன் வயலெட் உட்கார்ந்தாள். பின்னால் அந்தோணியின் பக்கத்தில் ரோசம்மா உட்கார்ந்து மேரிக்குட்டியை மடியில் வைத்திருந்தாள்.

'சாமானெல்லாம் பத்தரமா இருக்குமாப்பா. '

அந்தோணி தலையாட்டினான். பிறகு எழுந்து முன்சீட்டைப் பார்த்துவிட்டு உட்கார்ந்தான்.

'போற வழியில ஒறங்கக் கூடாதுப்பா. புள்ளைகளக் கூட்டிப் போறவன் கவனமாப் போவணும். '

அவன் ஜன்னல் வழியே டாக்கடையில் தொங்கிய புஸ்தகங்களைக் கவனித்திருந்தான்.

'அடிக்கடி காயிதம் போடணும். வீட்ட மறந்துறக்கூடாது. ரெண்டு வச்சுகிட்டு நான் கெடக்கேன் இல்ல. குட்டியப் படிக்க வைக்கணும். அவளுக்குக் காலாகாலத்துல ஒரு எடம் பார்க்கணும். பொறுப்பிலாம இருந்துறக்கூடாது. நம்ம ஒண்ணும் வசதியாப் பெழைக்கல. '

முன்சீட்டில் வயலெட் குழந்தைகளின் சேட்டைக்கு ஈடு கொடுத்துக் கொண்டிருந்தாள். யாரோ ரோசம்மாவின் இடத்திற்காகக் காத்து நின்றார்கள். அந்தோணி சொன்னான்.

'குட்டியும் நீங்களும் எறங்கிக்கங்க. பஸ் பொறப்புடப் போவுது. '

'ரோசம்மா எழுந்தாள். அவளுக்கு முந்தியே குட்டி முன்சீட்டிற்கு வந்திருந்தாள்.

'கொழந்தைகள நல்லாப் பாத்துக்கிறணும்மா. கழுத்துல சாமாங்களப் போட்டுட்டு அயத்து ஒறங்கீறாத. போனதும் காயிதம் போடணும். அவன் மறந்தாலும் நீ மறக்கக் கூடாது. போயிட்டு வரட்டுமாம்மா. '

ரோசம்மா மூணுபேர் நெற்றியிலும் சிலுவையிட்டு முத்தி விட்டு நிமிர்ந்தாள்.

பின்னாலிருந்து அந்தோணியின் குரல் கேட்டது.

'பர்ஸ்க் குடிடா. குட்டிக்குக் காசு குடுக்கணும். '

வயலெட் பர்ஸைக் கொடுக்கவில்லை. அவளே ஒரு ரூபாய் நோட்டை எடுத்து குட்டியிடம் நீட்டினாள். குட்டி அம்மாவைப் பார்த்துவிட்டு வாங்கிக் கொண்டாள்.

பின் சீட்டிற்கு நகர்ந்த ரோசம்மா அந்தோணியின் நெற்றியிலும் முத்தி விட்டு குனிந்தவாறே காதருகில் சொன்னாள்.

'மாசம் மாசம் பணம் அனுப்பச் சொணங்காதப்பா. நான் வரட்டுமா. '

அந்தோணி தலையசைத்தான். குட்டியின் கையைப் பிடித்து மெல்ல இறக்கி விட்டாள் ரோசம்மா.

புறப்பட்டுபோன பஸ் இரைச்சல் ரெம்ப தூரத்தில் கேட்டது.

'புள்ளைகள இழுத்துட்டு எப்படித்தான் போயிச் சேரப் போறானோ. '

ரவிக்கைக்குள் கிடந்த சிலுவையை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்ட ரோசம்மா ரூபாய் நோட்டை நீட்டி நின்ற குட்டியை இப்போது கவனித்தாள்.

'கர்த்தரே நான் பாவி. '

குட்டியை அழைத்துக் கொண்டு அவள் இன்னொரு பஸ்ஸைத் தேடியபோது புறாக்கூட்டம் மறுபடியும் இறங்கியிருந்தது.

***

Jun 2, 2010

ஆழம்-பூமணி

 

அவன் கதையெழுதிக்கொண்டிருந்தான். தூக்கம் கழுவித் துடைத்திருந்த மனசுக்குள் நினைவும் உணர்வும் ஊறி விரலில் கசியக் கசிய எழுத்து வேகமாக ஓடியது. உடம்பு குளிரை மறந்து முறுக்கேறியிருந்தது.

கடலுக்குமேல் மெல்லக் கலையும் சாம்பல் புகைமண்டலம். அங்குமிங்குமாகத் திரியும் பறவைத் தூள்கள். தொலைவிலிருந்து சூரியனைப் புரட்டித் தள்ளிவரும் அலைகள்.

poomani மைதானத்தில் மழை பரப்பியிருந்த நீரில் சர்க்கரைச் சாரல் உதிர்ந்து கரைந்தது. காக்காய்கள் குதித்துக் குதித்து தலையால் கோலிக் குளித்துச் சிலிர்த்தன.

மனைவி பாத்ரூமுக்குள்ளிருந்தாள்.

'தலைய ஒணத்துடா. '

முடியை உதறிக்கொண்டே மூத்தவள் வராண்டா சுவருக்கு மேல் அசையும் வாதுமைக் கொழுந்துகளை நீவிவிட்டாள். முன்பு கொழுந்துகளை எட்டிப் பார்த்தவள் இப்போது தொட்டுப் பார்க்கிறாள்.

சின்னவன் தாடை நடுக்கத்தில் சட்டை தேடினான். தலையில் தண்ணீர் ஊற்றிவிட்டால் அவனுக்குச் சிணுங்கல்கூடகுளிர்ந்துவிடுகிறது.

மனைவி துணி கும்மினாள்.

'அந்தப் பய அழுகிறது கேக்கலயா. காது இடிஞ்சா போச்சு. வீட்ல ஆம்பள இல்லன்னு எண்ணைக்கோ முடிவாயிருச்சு. '

அவள் வந்து சேலைத் தலைப்பால் சின்னவன் தலையை இன்னொரு தடவை துவட்டி ஈரம் பார்த்தாள். எழும்பியிருந்த முடியை மடக்கித் தடவினாள். சட்டையை எடுத்துக் கொடுத்துவிட்டு சமையலறைக்குப் போனாள்.

'வந்து கொட்டிக்கடா. ஸ்கூலுக்குப் போகணுமிங்கிறது ஞாபகமிருக்கா. இப்பவே தகப்பன் புத்தி தலையில ஏறிக்கிருச்சா. '

அவன் மும்முரமாகப் பேனாவில் சவாரிசெய்தான்.

'ஒடம்புச் சதைய அறுத்துக் குடுத்தமாதிரி மாசம் மாசம் ஸ்கூலுக்கு அழுகிறது ஒங்களுக்கெங்க தெரியும். '

மூத்தவள் கொழுந்துகளைப் பிரிந்து வந்தாள். சின்னவன் தயாராக உட்கார்ந்திருந்தான். சாப்பிட ஆரம்பித்தார்கள்.

'மழ வந்தா கொழந்தைக நனையாமப் போறதுக்கு ஒரு கொட உண்டுமா. தனக்குத்தான் வேண்டாம்னா அதுகளுமா நனையணும். '

அவன் தலை நிமிரவில்லை. கால்மடிப்பைத் தளர்த்தினான்.

பாத்ரூமுக்குள் மறுபடியும் துணியின் அங்கலாய்ப்பு.

'இடுப்பு வலிக்க எழுதி காலாணாவுக்கு வழி உண்டுமா. இந்த வயசுலயே கண்ணக் கெடுத்து கண்ணாடி போட்டாச்சு. தலையக் கொடஞ்சு மயிரு நரச்சிருச்சு. இங்க இப்படி உக்காந்துட்டுப் போயி ஆபீசுலயும் உக்காந்தா ஒடம்பு என்னத்துக்காகும். நம்ம படுத்துக்கிட்டா என்னன்னு கேக்கிறதுக்கு ஆளு உண்டுமா. நம்மளாத்தான் உருண்டு எந்திரிக்கணும். நோய வெலைக்கு வாங்குறதுக்கா எழுதணும். டாக்டருக்குக் குடுத்து முடியிதா.. எழுதியெழுதி கிழிச்சுப் போடுற பேப்பர கொழந்தைகளுக்குக் குடுத்தாலாவது பாடம் எழுதிப்பாக்கும். '

அவளுக்கு முன்னால் அழுக்கு நுரை கோபுரங்கட்டியிருந்தது. அடித்து இருத்திவைத்த குழந்தைகளைப் போல் கசக்கிய துணிகள் உம்மென்று உட்கார்ந்திருந்தன.

'தாலிக்கயறு நெறம் வெளுத்துட்டுப் போகுது. புதுசு ஒண்ணு வாங்கித் தாங்கன்னு சொல்லாற நாளில்ல. அத காதுலயே போட்டுக்கிறதில்ல. தங்கத்துல செயினா கேக்காக. நாலணாக்கயறு. அதுக்கும் பஞ்சமாப் போச்சு. ஒரு பியூன் வீட்டுக்காரி வெரல் தண்டியில செயின் போட்ருக்கா. பாத்தா வெக்கமாருக்கு. ஸ்கூலுக்குப் போனா அத்தனபேரும் கழுத்தவே பாக்கிறாங்க. சேலைய மூடி கழுத்த மறச்சா சொகமில்லையான்னு கேக்கிறாங்க... ஒரு நேரத்துல வித்தா ஒருநேரத்துல வாங்கணும். பின்னால வாங்கலாம்னு சொல்லித்தான வித்தொம். அடுத்த வருசம் அடுத்த வருசம்னு ஒவ்வொரு வருசமும் வந்துட்டுத்தான் போகுது. செத்ததுக்குப் பின்னால வாங்கினாச் சரி. '

அவளது கைகள் தொடர்ந்து உச் கொட்டின.

'குடும்பத்துல கஸ்டம் எந்நாளும் இருக்கத்தான் செய்யும். அதப்பாத்தா முடியுமா. இருக்கிறது ஒரு பொண்ணு. அது உக்காந்தா போட்டுப் பாக்க மினுக்குனு ஒரு பண்டம் இருக்குதா. ஆம்பளைகளே கழுத்துல போட்டு அத பெரிசா காட்டாட்டு அலையிறாங்க. பொம்பளைக ஒண்ணுமில்லாம இருந்தா யாரு மதிக்கிறாங்க. '

அவன் பேப்பரை மறுபக்கம் திருப்பியிருந்தான். குழந்தைகள் புஸ்தகங்களை அடுக்கிப் பைக்குள் திணித்தார்கள்.

'என்னப்போல கயறு போட்ருந்த கமலாகூட பெரிய செயின் வாங்கீட்டாங்க. நேத்து ஸ்கூலுக்குப் போறவங்க பாத்துட்டு பேசாமப் போறாங்க. நின்னு ஒருவார்த்த பேசினா என்ன. செயின பிடுங்கிக்கிருவாங்களா. இத்தன நாளும் என்பக்கத்துல உக்காந்து கொழந்தைகளுக்குச் சோறு ஊட்டுவாங்க. நேத்து கிட்டயே வரல. அவசரமா ஊட்டி முடிச்சிட்டு முந்திப் போயிட்டாங்க. எனக்கு அழுகையா வந்துருச்சு... யாருட்டச் சொல்றது. சொவர்லதான் முட்டிக்கிறணும். '

அவள் பக்கெட்டிலிருந்து பழைய தண்ணீரை வெடுக்கென்று ஊற்றி நுரையை விரட்டினாள். எல்லாம் சேர்ந்து கழிவுக் குழாயில் கொடகொடத்தது. டேப்பைத் திறந்துவிட்டாள். பக்கெட்டில் புதுத் தண்ணீரின் இரைச்சல். துணிகளை உள்ளே அமுக்கி குடுமியைப் பிடித்து தூக்குவதும் தண்ணீரைக் கொட்டுவதும் தொடர்ந்து நடந்தது.

அவன் முதுகுக் குறுக்கை நெளிக்கக்கூட நேரமில்லாமல் எழுத்தில் லயித்திருந்தான். கதை வெண்ணெயாகத் திரண்டு வந்தது.

கழுவிய துணிகள் நீர் கக்கிக்கொண்டு கொடியில் தொங்கின. அவள் வெளியே வந்து ஸ்டவ்வில் உட்கார்ந்திருந்த பானையின் மூடியைத் திறந்து பார்த்தாள்.

'வென்னீர் கொதிச்சிட்டுக் கெடக்கிறது யாருக்குத் தெரியிது. குளிக்கக்கூட நமக்கு நேரங்கெடைக்க மாட்டேங்குது.

துணி தேடி பானையை பாத்ரூமுக்குள் தூக்கிக்கொண்டு ஓடினாள். வந்து ஸ்டவ்வில் தண்ணீர் தெளித்து அணைத்தாள்.

'ஸ்டவ் ஒழுங்கா எரியிதா. தூண்டிவிட்டா குதிக்குது. ரிப்பேருக்குக் குடுத்தா ரூவா கேப்பான். இத என்னன்னு பாக்கிறதுக்கு முடியல. நம்ம கத இப்படியிருக்குது. '

வராண்டாவுக்கு வந்து வெளியே கைநீட்டினாள். மயிர்களில் சாரல் கோர்த்தது. ரெண்டு துண்டெடுத்து குழந்தைகளுக்கு முக்காடு கட்டினாள். பைகளைத் தூக்கிக்கொண்டு கிளம்பினாள்.

'போயிட்டு வாறவரைக்கு வென்னீர் ஆறீட்டுக் கெடக்காம இருந்தாச் சரி. '

மாடிப்படிகளில் சின்னக் கால்களின் ஓட்டம் கேட்டது. அவனால் எழுத்தைத் தொடரமுடியவில்லை. மூக்குக்குள் சிரித்துக் கொண்டான். அதுகூட பலமாகக் கேட்டது. ஆபீஸ் கடிகாரமுள் நினவில் எழுந்து பாத்ரூமுக்கு விரைந்தான்.

சாயங்காலம் அவன் வீட்டுக்கு வரும்போது மனைவி சந்தோசமாக இருந்தாள். பல்கோர்வை வெள்ளை முகத்தின் மெல்லிய மஞ்சள்பூச்சை அடிக்கடி மிஞ்சியது. தாலிக்கயிற்றிலும் மஞ்சளால் நிறமேற்றி வெளியில் தெரியும்படி போட்டிருந்தாள்.

அவன் முகங்கழுவிவிட்டு வந்து உட்கார்ந்தான்.

'கொழந்தைகள் எங்க. '

'கீழ வெளையாடுறாங்க. '

'ஆச்சரியமாருக்கே. '

'அதுகளுக்கும் கட்டிப் போட்டதுபோல இருக்குமில்ல. கொஞ்சநேரம் வெளையாடாட்டு வரட்டுமே. '

'ஒனக்கு பொறுமையா குளிக்கிறதுக்கெல்லாம் நேரங்கெடைக்குதா. '

'மதியம் ஸ்கூலுக்குப் போயிட்டு வந்து குளிச்சென்... ஒங்களுக்கு ஒண்ணுதெரியுமா. '

'என்னவிஷயம். '

'இருங்க அடுப்பில காபி வச்சென். '

அவள் சூடாக காபி கொண்டுவந்து வைத்தாள். அவன் எடுக்கவில்லை.

'சொல்லு. '

'ஸ்கூல்ல கமலாவப் பாத்தென். '

அவள் வய்விட்டுச் சிரித்தாள்.

'இதுக்கென்ன சிரிப்பு. அவங்கள தெனமுந்தான பாக்கிற. '

'என்னோட பேசீட்ருந்தாங்க. '

'பேசமாட்டங்கிறாங்கன்னு காலையிலதான் அடிச்சுக்கிட்ட. '

'என்ன பேசினாங்க தெரியுமா. '

'சொன்னாத்தான தெரியும். '

'கழுத்துல பழையபடி கயறு போட்ருக்காங்க. '

'அதுக்குள்ள புதுச்செயின் எங்க போயிருச்சாம். '

'புதுச்செயினா. '

அவள் இன்னும் உரக்கச் சிரித்தாள்.

'ஏன் பழசா. '

'பழசுமில்ல புதுசுமில்ல. '

'அப்புறம்.... '

நேத்து வர்றதா அவங்க அப்பா ஊருலருந்து ஒருவாரத்துக்கு முந்தியே கடிதம் போட்ருந்தாராம். '

'அதுக்கென்ன. '

'வந்து செயின எங்கன்னு கேட்டா என்ன சொல்றது. '

'உள்ளதச் சொல்லவேண்டியதுதான. '

'வித்துத் தின்னுட்டம்னு சொல்லமுடியுமா. '

'அதுதான நடந்தது. அவரும் குடும்ப நெலமையத் தெரிஞ்சுக்கிறட்டுமே. '

'ஒங்கபுத்தி ஒங்களவிட்டு எங்க போகும். '

'சரி அதுக்காக என்ன செஞ்சாங்களாம். '

'அண்ணைக்கிலருந்து வீட்டுக்காரர அரிச்சிருக்காங்க. அவரு அங்க இங்க ஓடி பணம் பெரட்டி கனமா கவரிங் செயின் வாங்கி வந்துட்டாரு. அப்பா நேத்து வந்துட்டு இண்ணைக்குப் போயிட்டாராம். அவரு போன ஒடனே கயற எடுத்து மாட்டிக்கிட்டாங்க. '

'அடடா வீண்செலவுதான. பணத்துக்கு என்ன கஸ்டப்பட்டாரோ. '

'இனியும் அவங்க அப்பா வருவாருல்ல. அதனால பத்தரமா கழட்டி வச்சிட்டங்க. இல்லன்னா கவரிங் வெளுத்துப் போகுமே... நல்லவேள எனக்கு அப்பாவுமில்ல அம்மாவுமில்ல. '

அவனுக்கு நெற்றிக்குள் குடைந்தது. ராத்திரிக்கு கதையெழுதமுடியுமென்று தோணவில்லை. தூக்கம்கூடச் சந்தேகந்தான்.

'கொழந்தைக இன்னும் வரலயா. '

'காபி ஆறிப்போயிருக்கும். '

அவள் வெளியே நின்று குழந்தைகளைத் தேடினாள். அவன் அவளையே பார்த்தபடி காபியை விழுங்கும்போது தொண்டைக்குள் விக்கியது.

*****

Apr 18, 2010

கோலி - பூமணி

பூமணி

சுப்புவுக்குப் பள்ளிக்கூடம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. எல்லாரும் ஒரே மாதிரி உட்காருவது நிற்பது பாடுவது படிப்பது ஒரே சமயத்தில் ஒண்ணுக்குப் போவது சாப்பிடுவது தண்ணீர் குடிப்பது ஒரே விளையாட்டைச் சேர்ந்து விளையாடுவது, அதென்ன படிப்பு. நெருக்கும் போது ஒண்ணுக் கடிக்கணும். தவிக்கும் போது தண்ணீர் குடிக்கணும். தோணும் போது விளையாடணும். இன்ன விளையாட்டு என்றல்லாம்  இஷ்டத்துக்கு விளையாடணும். வேப்ப மரத்தில் ஏறி ஊஞ்சலாடணும். வகுப்பில் ஒளிந்து தேடிப்பிடிக்கணும். பக்கத்திலுள்ள குமரன்கோயில் மலைக்கு ஓடி கால்வலிக்கப் படியேறி உச்சியில் நின்று ஊரை அளந்து விட்டு உருண்டு திரும்பணும். பள்ளிக்கூடக் கூரை விட்டத்தில் அருவியாக வடியும் குருவிக் கூட்டில் குடும்பம் நடப்பதை மல்லாந்து பார்த்தபடி கண்சொருகணும்.
poomani
கால்சட்டைப் பைக்குள் ரெண்டு கோலிக் காய்கள் துருதுருத்து உறுத்தின. அவ்வப்போது தொட்டுப் பிதுக்கி மோதவிட்டு சமாதானப்படுத்தினான். அவை பையை விட்டுக் கெலிக்கு முன் எடுத்து விரலுக்கொரு முறை வில்லாக வளைத்து 'அடி கடக்கோ' என்று தெறித்தால்தான் ஆசையடங்கும். எதிராளி முக்காமுக்கா மூணுதரம் கோலியைச் சுண்டி விரல்மொளி வீங்கணும். தேக்கித் தேக்கி முழங்கை தேயணும்.

ஊரும் மோசந்தான். எந்தப் பயலைப் பார்த்தாலும் ஏதாவது வேலை செய்கிறான். பெரிய வியாபாரி மாதிரி தோளில் பையைத் தொங்கப் போட்டுக்கொண்டு தாள் பொறுக்குகிறான். சீசா மூடியென்று கண்டதைக் கிண்டிக் கிளறுகிறான். கடையில் சைக்கிளுடன் மல்லுக்கட்டுகிறான். வண்டி தள்ளிக் கொண்டு கட்டை சுமந்துகொண்டு சைக்கிளில் தண்ணீர்க் குடங்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு... எல்லாம் நடக்கிறது. விளையாட்டைத்தான் காணவில்லை.

சிலநேரம் எல்லா இடத்திலும் விளையாட்டு நடக்கிறது. சாந்துச் சட்டியை சூட்டிக் கையாகக் கைமாற்றும் ஆட்கள் வாலிபால் விளையாடுகிறார்கள். கொத்தனார் கரண்டியால் சாந்தை சுவரில் வீசி பேட்மின்டன் விளையாடுகிறார். மம்பட்டி வேலைக்காரர்கள் ஹாக்கி விளையாடுகிறார்கள். சம்பளத்துக்காகச் சண்டை நடக்கும் போது சடுகுடு நடக்கிறது.

தெற்கு ரோடு மைதானத்தில் கொஞ்ச நாளைக்கு முந்தி ஹாக்கிமேச் நடந்தது. தூரத்திலிருந்தெல்லாம் விளையாட வந்திருந்தார்கள். ஊரே திரண்டு பார்க்கப் போனது. அவனுக்கு ஆசை. அம்மாவை அரித்தான். அவள் அசையவில்லை.

''வெளயாட்டுத்தானா சோறு போடுது''

சொல்லாமல் கம்பி நீட்டவும் முடியாது. ''அடே சுப்பு'' என்று வாய் வலிக்கத் தேடுவாள்.

எப்படியோ அவளை அசத்தி ஒருநாள் போய்விட்டான். மைதானத்தைச் சுற்றி ஏகக் கூட்டம். நடுவில் விளையாட்டுக்காரர்கள் சிதறிக் கிடந்தார்கள். எல்லாரும் பெரிய பெரிய ஆட்கள். சிலருக்கு மண்டை வழுக்கை சாயங்கால வெயிலுக்கு மின்னியது. வற்றிய குளத்து அயிரை மீன்களாக அவர்கள் துள்ளி விளையாடும்போது பையன்களாகிவிட்டார்கள். அவன் விளையாட்டைச் சொகமாகச் சுமந்து கொண்டு வீட்டுக்கு வந்தான். மேச் காய்ச்சல் சின்னப்பையன்களைப் பிடித்துக் கொண்டது. வாழைத்தார்க் காம்பு வைத்து ரோட்டில் ஹாக்கி விளையாடினார்கள். கல்லுகூட பந்துதான். அப்படி விளையாடணும் போல் எச்சூறும். அம்மா விடணுமே. சே இந்த அம்மா ரொம்ப மோசம்.

கொஞ்சநேரம் சும்மா இருக்க முடியாது. எப்போதும் வேலைதான். காலையில் அக்காவுடன் கட்டையடுக்கணும. சுமந்து போய் தீப்பெட்டியாபீசில் சேர்க்கணும். வெத்துக்கட்டை வாங்கி வரணும். வரும் போது ரோட்டில் கல்லை எத்தி விளையாடக் கூடத் தோதிருக்காது. கட்டைமேல் உட்கார்ந்திருக்கும் குச்சுச் சாக்கு பயமுறுத்தும். கட்டையை இறக்கியதும் பள்ளிக்கூடப் பையைத் தூக்கணும்.

சாயங்காலம் வீடு திரும்பினால் வேலை சரியாக இருக்கும். மளிகைக் கடைக்குப் போய் சாமான்கள் வாங்கி வரணும். கூடவே காத்திருந்து இட்லி தோசைக்கு மாவரைத்து வரணும். அந்த நேரத்திலும் விளையாட முடியாது. மாவு கொஞ்சம் குறைந்தால் அம்மாவிடம் வசவு வாங்கிக் கட்டணுமே.

ராத்திரி அந்திக்கடையில் அம்மாவுக்குத் துணையாக இருக்கணும். பஜாரில் பஸ்டாண்டுக்கு முன்னால் எட்டு மணிக்கெல்லாம் கடை போடணும். சுடச்சுட இட்லி தோசை கிடைக்கும். வடை மொச்சைக் கிழங்கு என்று வகைவகையாக அம்மாவும் அக்காவும் பண்டம் செய்வார்கள். பொடி சட்னி ருசிக்காகவே ரொம்ப ஆட்கள் வருவார்கள். மிளகாய் எள்ளு பருப்பு இப்படி பொடியில் பல ரகம் உண்டு. சட்னி வகையில் மல்லி தக்காளி வெங்காயம் புதினா இன்னும் என்னென்னமோ.

அந்திக்கடை வியாபாரம் குடும்பத்துக்கு ஏந்தலாக இருந்தது. கடை தொடர்ந்து ஓடுவதற்கு எங்கெங்கோ கவனித்துச் சரிகட்ட வேண்டியிருந்தது. யார் யாரோ வந்து ஓசியில் சாப்பிட்டுவிட்டுப் போவார்கள். அம்மா அக்கறையாகக் கவனித்துக் கொள்வாள்.

அவளே இலை விரித்து எல்லாம் பரி மாறணும். அம்மா இட்லி தோசை சுட்டுக் கொடுப்பாள். நேரம் கிடைக்கும்போது பொடியைக் குழைப்பதற்காக சிறுசிறு பாட்டில்களில் நல்லெண்ணெய் ஊற்றி வைக்கணும். அதோடு ராத்திரிச் சாப்பாட்டையும் முடித்துக் கொள்ளணும். சிலசமயம் லேசாக ஆடிக்கொண்டு பரிமாறு வான். ''அடே சுப்பு'' என்று அம்மா அதட்டுவாள்.

சாக்கடையை மூடியிருக்கும் சிமிண்டுப் பிளேட்டை விலக்கி உண்டு பண்ணிய வழியில் எச்சிலையைப் போட்டுக் கை கழுவணும். தண்ணீர் இல்லையென்றால் அவன் ஓடிப்போய் பம்பில் அடித்து வருவான். அது பெரிய வேலை.

திங்கள்கிழமை சந்தையென்பதால் கூட்டம் அதிகமிருக்கும். உட்கார நேரமிருக்காது. அம்மாவுக்கு இடுப்பு ஒடிந்துவிடும். நெருப்பு சூட்டில் கன்றிப் போன முகத்தைப் பார்க்கப் பாவமாக இருக்கும்.

ரெண்டாவது ஆட்டம் சினிமா முடியும் வரை கடையிருக்கும். அதுக்குப் பிறகு சாமான்களைக் கழுவி எடுத்துவைத்து வண்டியைத் தள்ளிக்கொண்டு போகணும். வீடுபோய்ச் சேருமுன் உறக்கம் சொக்கும். போகிற வழியிலும் விளையாட முடியாது. அப்படியும் வண்டி உருளுவதற்கேற்ப கால்பின்னி நடப்பான். அதையும் அம்மா கவனித்து விடுவாள்.

''ஏம்ல காலு ஒரு தரையில நிக்காதா...''

''நான் வண்டிதான் தள்ளுறென்...''

''தள்ளுற லச்சணத்தப் பாத்துட்டுத்தான வாறென்... நல்லாச் சாப்பிட்டயா...''

அவன் பலமாகத் தலையாட்டிவிட்டு வண்டியைத் தள்ளுவான். மேடான இடங்களில் அம்மா கை கொடுப்பாள். அவர்கள் போகும்வரை அக்கா முழித்திருப்பாள். அப்போதும் அவள் கை சும்மா இருக்காது. அன்றைக்குக் காலையில் கம்பெனியிலிருந்து கட்டை சுமந்து வரும்போது நடுரோட்டில் பசப்பசவென்று மாட்டுச்சாணி குமித்துக் கிடந்தது. கஷ்டப்பட்டுக் குனிந்து பார்க்கையில் காலில் ஒரு குறுகுறுப்பு. ஒரே மிதியில் ரெண்டாக வெட்டினால் சாணி துள்ளிக் குதித்துச் சிதறும் அழகே தனி. கிராமத்தில் அவனுக்கு சாணி வெட்டிச் சண்டீர் என்று பட்டப்பேர் உண்டு. அப்படி மிதித்து ரெம்ப நாளாயிற்று.

வலதுகால் தானாக எழும்பியது. நடுச் சாணியில் ஓங்கி மிதித்தான். உள்ளே ஆணி முங்கிக்கிடந்திருக்கிறது. பாதத்தில் வசமாகக் குத்திவிட்டது. வலிக்கிறுகிறுப்பில் நொண்டி நொண்டி வீட்டுக்குள் வந்தான்.

''இதும் தலையெழுத்தா சொன்னபடி கேக்கமாட்டங்கானே''

அம்மாவின் முந்தானை தினமும் ஈரமானது.

அனாவசியமாக ஆஸ்பத்திரிச் செலவு. அதைச் சரிகட்ட அக்காவுடன் அனேக நேரம் உட்கார்ந்து கட்டையடுக்க வேண்டியிருந்தது. காலில் கட்டவுக்கும் வரை அம்மா கட்டை சுமந்தாள். ஒருத்தருக்குச் சம்பளம் கொடுத்து அந்திக்கடை நடந்தது. அம்மா அவனுக்குச் செருப்பு வாங்கிக் கொடுத்தாள்.

ஒரு லீவு நாளன்று குமரன்கோயில் மலைப்பக்கம் போயிருந்த போது மாட்டுக்காரப் பையன்கள் சுத்தியல் வைத்து பெரிய பெரிய கோலியாகத் தட்டிக் கொண்டிருந்தார்கள். ஓங்கித் தட்டத் தட்ட கல்குழியில் கருங்கோலி எவ்வித் துள்ளி உருண்டையானது. அவ்வளவு பெரிய காய்களை மோதவிட்டால் எருமைச்சண்டை போலிருக்கும். விரல் வலித்தாலும் கவலையில்லை.

ரெண்டு கோலி இருந்தால் கூட்டாளி சேர்த்துக் கொண்டு கும்மாளம் போட்டு விளையாடலாம். தட்டிக் கொடுக்கச் சொல்லலாமென்றால் அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது. வீட்டில் வேலை காத்திருக்கும்.

ராத்திரி முழுக்க கனாவில் கோலி கோலியாக உருண்டது. கிராமங்களிலிருந்து பெரியவர்களும், சிறியவர்களும் பாறையளவு கோலிக்காய்களை டவுனுக்கு உருட்டிக் கொண்டு வருகிறார்கள். இரும்புத் தடியால் தெண்டித் தெண்டி உருட்டுகிறார்கள். நொடியான இடங்களை மம்பட்டியால் சரிப்படுத்திக் கொள்கிறார்கள். அடை கொடுப்பதற்கு வழியில் கற்களைக் காணவில்லை. எல்லாம் ரோட்டில் அமுங்கி உடைந்து முங்கிவிட்டது. பருத்திமார்க் கூடைகளை குப்புறக்கவுத்தி அடை கொள்கிறார்கள். வரவர அது இரும்புச்சட்டியாக மாறுகிறது. சொரசொரத்த ரோட்டுப் பாதை சமதளமாக விரிந்து வழுவழுத்த ரோடாகிறது. அதனால் சிரமமில்லாமல் உருட்டுகிறார்கள்.

ரோட்டுக்கு இருபுறமும் கரிசக்காடுகளை இரும்பு முள்வேலி வளைத்துப் போட்டிருக்கிறது. வேலிக்குள் வெள்ளைக் கட்டிடங் கள் முழிக்கின்றன. அதைச் சுற்றி என் னென்னமோ மரங்கள் செடிகள், புதுசு புதுசாகப் பூக்கள், சிரிப்பு சிந்தும் பருத்திப் பூவையும் ஆவரம்பூவையும் காணவில்லை.

சில நிலங்களில் அட்டைக்கம்பெனி விரட்டியடித்த கழிவுதான் களை முக்காடு போட்டுக்கொண்டு வெள்ளாமைப் பயிர்களும் செடிகளும் காற்றசைவில் அழுது புலம்புகின்றன. அமர்த்தி ஆறுதல் சொல்ல ஆளில்லை.

நெருங்க நெருங்க நிறைய நிலங்கள் கல்லறைத் தோட்டங்களாகத் தெரிகின்றன. எங்கு பார்த்தாலும் கல் முளைகள், குறுக்கும் நெடுக்குமாகச் சிந்திய செம்மண் பாதைகள், பெரும்பாதைகள் ரோட்டுடன் பின்னியி ருக்கின்றன.

இப்போது ரோட்டில் கோலிக்காய்களை வேகமாக உருட்டுகிறார்கள். அந்த வேகத் திற்கேற்ப ஆணும் பெண்ணும் ஓடி நடக்கிறார்கள்.

கோலிகள் உருளும் நறநறப்பு உறக்கத்திற்குத் தோதாக ஓயாமல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

குடும்பம் கிராமத்திலிருந்த காலமே தனி. அய்யா முக்குரோட்டில் டீக்கடை வைத்திருந்தார். அம்மா காட்டுவேலை செய்தாள். அக்கா வீட்டைக் கவனித்துக் கொண்டாள். அவன் பள்ளிக்கூடம் போனான்.

அப்போதெல்லாம் ராவும் பகலும் விளையாட்டுத்தான். நேரத்துக்கொண்ணு. திகட்டும் வரை ஓயாது.

வீட்டில் சகல விளையாட்டுப் பொருளும் இருக்கும். அம்மாவுடன் திருவண்ணாமலைக் கோயிலுக்கு போயிருந்த போது ஒரு பொட்டணம் தெல்லுக்காய் வாங்கி வந்தான். அதில் பாலாங்காய் பவளக்காய் போர்க்காய் கருப்புக்காய் எல்லாமே உண்டு. எச்சைத் தொட்டு குறிவைத்துத் தெறித்தால் என்னமாய் ஏறி அடிக்கும் தெரியுமா. காணாக் குறைக்கு பானையோட்டிலும் சோடா மூடியிலும் பலவிதமான தெல்லுக்காய் துணைக்குத் தயாராக இருக்கும்.

பம்பரத்தில் பத்து வகைக்குக் குறையாது. அத்தனைக்கும் தனித் தனிக்கயிறு. ஒவ் வொண்ணும் சுண்டிவிட்டால் அப்படி லொங்கும். அது போதாதென்று விளாம்பழப் பம்பரம் வேறு. கும்மென்று அதன் இரைச் சலே தனி.

அதுக்கடுத்து செதுக்கு முத்துக்கல் வரிசையாகப் படுத்திருக்கும். வழலை சாரை விருசு மங்கிணி என்று ஒண்ணொண்ணுக்கும் பேர் உண்டு. தரைக்குத்தக்கபடி எடுத்துத் தட்டிவிடணும். சர்சர் என்று பாய்ந்து புளிய முத்தை விரட்டியடிக்கும்.

அண்ணன் தம்பிகளைப் போல் பெரிசும் சிறிசுமாக கோலிக் காய்கள் பக்கத்தில் குமித்துக் கிடக்கும். எதை எடுத்து அடிக்கலாம் என்பது எதிராளியைப் பொறுத்தது.


பனங்கூத்து சோளத்தட்டை உடைந்த தோசைச்சட்டி சலிப்பு இரும்பு வளையம் இப்படி வண்டிகளும் உண்டு. ஊரைச் சுற்றிப் பார்க்கணுமென்றால்தான் வண்டி பூட்ட வேண்டியிருக்கும். அதுக்கு நிறையக் கூட்டாளிகள் சேரணும்.

எல்லாம் அய்யா கண்ணை மூடியதுடன் சரி. அத்தனை விளையாட்டும் மனசுக்குள் வற்றி வறண்டு வண்டலாகிவிட்டது. அவர் திடீரென்று கதையை முடித்துக்கொண்டார். கடுமையான காய்ச்சலில் மூணு நாள் முனங்கியவர் நாலாம்நாள் மூச்சையும் நிறுத்திக் கொண்டார். குடும்பம் திக்கித் திணறித் தவித்தது.

மூணுமாசம் கழித்து டவுனிலிருந்து வந்திருந்த மீனாட்சியத்தை அம்மாவுக்குத் தைரியம் சொன்னாள். குடும்பத்துடன் டவுனுக்கு வந்துவிடுமாறு யோசனையும் சொன்னாள். அவள் ரொம்ப நாளைக்கு முன் குடிபெயர்ந்து போனவள்.

அம்மா அழுது அழுது ஓய்ந்து அந்தப்படியே முடிவுசெய்தாள். ஊரை விட்டுக் கிளம்பும் போது சேக்காளிகளையும் விளையாட்டுகளையும் விட்டுப் பிரிய அவனுக்கு மனசே இல்லை. ரொம்ப வருத்தமாக இருந்தது. விளையாட்டுப் பொருட்களை சீதனம் கொடுத்துவிட்டு அம்மாவுக்குப் பின்னால் நடந்தான்.

மீனாட்சியத்தை பக்கத்து லைனில் வீடு பார்த்துக் கொடுத்தாள். அவன் மேலப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தான். முதலில் அம்மாவும் அக்காவும் தீப்பெட்டி வேலை செய்தார்கள். பிறகுதான் அந்திக்கடை ஏற்பாடு நடந்தது.

மூணுவருசத்துக்கு மேலாகிவிட்டது. அவன் டவுன்காரானாகிவிட்டான். பொங்கல் பூசைக்கு கிராமத்திற்குப் போனால் உண்டு. ரெண்டு நாள் சேக்காளிகளுடன் குளிக்கலாம் விளையாடலாம். தலைக்குமேல் வேலை கிடக்கிறதென்று அம்மா அடுத்தநாள் கிளம்பிவிடுவாள். மனசுக்குள் குதியாளம் போடும் விளையாட்டு அமுங்கியடங்க ரொம்ப நாளாகும்.

செவ்வாய்க் கிழமை ராத்திரி. இன்றைக்கு ரெண்டிலொண்ணு பார்த்துவிட வேண்டியதுதான். எத்தனை நாளைக்கு கோலிக் காய்களை கால் சட்டையை விட்டு மாற்றிக் கொண்டிருப்பது. உறங்கும்போது தப்பி விடாமல் பொத்திப் பொத்திக் காப்பாற்றுவது. அம்மா கொடுத்த காசில் மிச்சம் வைத்து கடைகடையாக ஏறி வாங்கியது. ரெண்டும் தக்கட்டிப்பழம்போல் கண்ணுக்குக் குளிர்ச்சியான நிறம்.

பஜாரில் கூட்டமில்லை. பஸ் ஸ்டாண்டிலும் குறைவுதான். செவ்வாய்க்கிழமையானதால் பிரயாணம் போகும் ஆட்கள் கம்மி.

அந்திக்கடையில் ரெண்டுபேர் மட்டுமே உட்கார்ந்திருந்தார்கள். அம்மா ஆவலுடன் அங்குமிங்கும் பார்த்தாள். நிறைய ஆட்கள் வரும் போது அவள் முகத்தில் சந்தோசக் களை அப்படி மினுங்கும். மாவைக் கலக்கி தோதுப்படுத்துவதும் இட்லிக் கொப்பரையைத் திறந்து வேக்காட்டைச் சரிபார்ப்பதும் தோசைக் கல்லில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி கச்சிதமாக இளுகுவதுமாக அவள் கைகள் பம்பரமாகச் சூழலும். முந்தானையை இடுப்பில் சொருக நேரமிருக்காது. அந்த அவசரத்திலும் துட்டுக் கணக்கில் கவனமாக இருப்பாள்.

அவன் அடிக்கடி ரோட்டுப்பக்கம் வந்து பஸ் போக்குவரத்தைக் கவனித்தான். கொஞ்சநேரம் கிடைத்தால் போதும். ஒருமுறை அம்மா பார்த்துவிட்டு அரட்டினாள்.

''ஏய் சுப்பு அங்கென்ன வேல.''

அவனுக்குச் சப்பென்று போயிற்று. கிட்ட வந்ததும் கடிந்து கொண்டாள்.

"கடையெங்க இருக்குது ஒன் காலு எங்க திரியிது. வேலையக் கவனி. பசிச்சா சாப்பிட்டுக்கோ. இட்லி வேணுமா தோச ஊத்தவா...''

''எனக்குப் பசிக்கலம்மா, பெறகு சாப்பிட்டுக்கிறென்...''

ரோட்டுக்கு அந்தப்புறம் லாட்டரிக் கடையில் சீட்டுக்கள் காற்றுக்கு விசிறிக் கொண்டிருந்தன. ராத்திரியிலும் சீட்டு வாங்க ஆளில்லையென்றால் திறந்து வைத்திருப்பானா, பலகாரக் கடைகளில் சேவும் சீனிமிட்டாயும் கோபுரங்கட்டி நின்றன. சீனி மிட்டாய்க் கோபுரங்கள் தகர்ந்து சரிந்துவிடாமல் சுற்றிலும் அப்பியிருந்த தேன்குளவிகள் பிரயாசைப்பட்டுத் தாங்கிக்கொண்டிருந்தன.

ஆட்டோக்காரர்களின் சகடால் சச்சரவுகள் இல்லை. ரெண்டு மூணு ஆட்டோக்கள் மட்டும் அருவமில்லாமல் நின்றிருந்தன. உள்ளே டிரைவர்கள் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். நல்ல வருமானமில்லை போலிருக்கிறது. இல்லையென்றால் நேரமிருக்கவே நாலு தோசையும் மொச்சையும் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குக் கிளம்பி விடுவார்கள்.

கடையில் இப்போது ஒருவர் காத்திருந்தார். அவருக்கு இலை போட்டு தண்ணீரும் வைத்துவிட்டான். எண்ணெயும் ரெடி.

அம்மா இட்லியை எடுக்கவும் தோசை போடவும் கொஞ்ச நேரமாகும். அதுக்குள் திரும்பிவிடலாம். அம்மாவை ஓரக்கண்ணால் கவனித்தப்படி மெல்ல ரோட்டுப் பக்கம் நழுவினான்.

பஸ்போக்குவரத்து அவ்வளவாக இல்லை. லாரிகள் மட்டும் விட்டுவிட்டு கூவிக் கொண்டு போனது. சுற்றுமுற்றும் பார்த்து விட்டுத் தயாரானான். அம்மாவையும் ஒருமுறை பார்த்துக் கொண்டான்.

ஒரு பஸ் வந்து நின்று புறப்பட்டது. உடனே ரோட்டோரம் வெளிச்சமான இடத்துக்கு ஓடி கால்சட்டைப் பைக்குள்ளிருந்து அவரசமாக கோலிக்காய்களை எடுத்து உருட்டினான். முந்திப் போனதைப் பிடித்து மற்றதைக் குறிவைத்து அடித்தான்.

''கடக்கோ.''

இப்போது ஒரு விரலுக்குச் சந்தோஷம் சொல்ல முடியாது. மற்ற மூணு விரலும் துடித்தன.

அடிபட்ட காய் நடுரோட்டுக்கு விரண் டோடியது. அதுக்கு இன்னொரு கொடுப்பு கொடுக்கு முன் ஒரு பஸ் வந்து மறைத்துக் கொண்டது.

''ஓடவா செய்ற... இரு வாறென்..''

அந்த பஸ் கடந்ததும் ரோட்டுக்கு ஓடி விரண்டு போன கா¨யை ஆவலாகத் தேடினான். நல்லவேளைக்கு அது பஸ்ஸின் மிதிக்குத் தப்பிவிட்டது. மேற்கே பார்த்தபடி காயை எடுத்துக் கொண்டு இந்தப் பக்கம் ஓடிவந்தான். கிழக்கேயிருந்து வேகமாக வந்த லாரிக்காரனுக்கு நிலைமை பிடிபடவில்லை. பையன் ரோட்டைத் தான் கடக்கிறானாக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டான். திரும்பி வருவான் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் பிரேக்கைப் பிடிக்காமல் ஓரேயடியாக மிதித்துவிட்டான்.

தோசையைப் புரட்டிப்போட்ட அம்மா ஏறிட்டுப் பார்த்துக் குரல் கொத்தாள்.

''அடேய் சுப்பு...''

கருப்பு ரோட்டில் அவனது உடல் முழுக்க எண்ணெயில் குழைத்த மிளகாய்ப் பொடியைப் போல் நசுங்கிப் போயிருந்தது. தலைமட்டும் காயப்படாமல் பெரிய கோலிக் காயாக தனித்துக் கிடந்தது.

*****

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்