Showing posts with label வேல.இராமமூர்த்தி. Show all posts
Showing posts with label வேல.இராமமூர்த்தி. Show all posts

Oct 3, 2010

தீராக்குறை- எஸ்.ராமகிருஷ்ணன்

வேல.ராமமூர்த்தி

 

ராமநாதபுர மாவட்டத்தின் பெருநாழியைச் சேர்ந்தவர் வேvelaramல.ராமமூர்த்தி. அவரது  கதைகள் கிழக்குச் சீமையின் அடிநிலை மக்களின் வாழ்வை விவரிப்பவை. ராணுவத்தில் வேலை செய்து ஓய்வு பெற்று, தற்போது தபால்துறையில் பணிபுரிகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள இவர், தனது எழுத்து பேரன்பும் பெருங்கோபமும் நிரம்பியது என்பவர். வேல.ராமமூர்த்தி கதைகள், கூட்டாஞ்சோறு, இருளப்பசாமியும் 21 கிடாயும் போன்றவை இவரது முக்கியப் படைப்புகள். இவரது கதைகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியாகியுள்ளன.



திருச்செந்தூரின் வைகாசி விசாகத்தைக் காண்பதற்காகச் சென்றிருந்தேன். பெருந்திரளான மக்கள் கூட்டம். பாதுகாப்புப் பணிக்காக வெவ்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு காவலர்கள் வந்து இறங்கியிருந்தார்கள். ஜனத்திரளுக்குள் அந்த போலீஸ்காரர் மட்டும் தனியே தெரிந்தார்.
அவருக்கு ஐம்பது வயதிருக்கும். கறுப்பு கூலிங்கிளாஸ் அணிந்திருந்தார். கண்ணாடியின் மீது பிள்ளையார் ஸ்டிக்கர் இரண்டு பக்கமும் ஒட்டப்பட்டு இருந்தது. அவர் உற்சாகமாகக் கையில் மைக்கை வைத்துக்கொண்டு கிரிக்கெட் வர்ணனையாளரைப் போல கூட்டத்தினரை நோக்கி வாய் ஓயாமல் அறிவிப்புகளைச் செய்தபடி இருந்தார்.

அன்றிரவு, கோயில் வளாகத்தில் நடைபெற்ற கச்சேரியின் போது மீண்டும் அவரைப் பார்த்தேன். இருட்டினுள் அதே கூலிங்கிளாஸ் அணிந்தபடியே, கச்சேரியில் பாடப்படும் ஒவ்வொரு பாடலையும் அவரும் உரத்த குரலில் சேர்ந்து பாடிக்கொண்டு இருந்தார். கச்சேரி கேட்டுக்கொண்டு இருந்தவர்களில் ஒன்றிரண்டு பேர் திரும்பிப் பார்த்து அவரை முறைத்தபோதும், அவர் புன்சிரிப்பு மாறாமல் தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தார்.

மறுநாளின் அதிகாலையில் அதே நபர், கடலில் உற்சாகமாகத் தாவித் தாவி குளித்துக்கொண்டு இருந்தபோது, நாங்கள் கடற்கரையில் சூர்யோதயம் பார்ப்பதற்காக நின்றிருந்தோம். இரண்டு நாட்களில் அந்த போலீஸ்காரர் மிகவும் பரிச்சயமானவரைப் போலாகியிருந்தார்.

மூன்றாம் நாளில், பொம்மைகள் விற்கும் கடையில் மரத்தில் செய்யப்பட்டு இருந்த செப்புச் சாமான்களை விலை கேட்டுக்கொண்டு இருந்தபோது, அருகில் அவர் ஒரு தலையாட்டி பொம்மையின் விலையை விசாரித்தார். பேரம் இழுபட்டுக்கொண்டு இருந்தது. பணத்தைக் கொடுத்து பொம்மையை வாங்கும் போது என் பையன் அவர் கையில் வைத்து இருந்த தலையாட்டி பொம்மையைப் பார்த்து விட்டான். அது தனக்கு வேண்டும் என்று அடம்பிடித்து அழத் துவங்கினான். அந்த போலீஸ்காரர் சிரித்த படியே பொம்மையை என் பையனிடம் தந்துவிட்டு, ‘பையனுக்கு எத்தனை வயசாகுது சார்?’ என்று அன்போடு விசாரித்தார். நான் ஆர்வம் தாள முடியாமல், ‘எதுக்கு கூலிங்கிளாஸ் மீது பிள்ளையார் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கீங்க?’ என்று கேட்டேன்.

அவர் சிரித்தார். ‘‘காலையில விடிஞ்சதிலிருந்து ராத்திரி தூங்கப்போற வரைக்கும் திருட்டுப் பயக, கொலை பண்றவனுங்க, கஞ்சா விற்கிறவங்கன்னு அப்படிப்பட்ட ஆட்கள் முகத்தில்தான் முழிக்க வேண்டியிருக்கு. அந்தப் பாவம் நம்மளைச் சும்மா விடுமா, சொல்லுங்க... அதான் கண்ணாடியில பிள்ளையாரை ஒட்டிட்டேன். இப்போ எதுவா இருந்தாலும் பிள்ளையார் வழியாதான் பார்க்க முடியும். இதனால எந்தப் பாவமும் நம் மேல நேரடியா படாது பாருங்க’’ என்றார்.

அவர் பேசுவது வேடிக்கைக்காகவா இல்லை, நிஜம்தானா என்று புரியவில்லை. ‘என்ன வேலை சார்... எப்போ பாரு அடிதடி, சாவு, வெட்டிட்டான், குத்திட் டான்னு எவனாவது வந்து நிப்பான். ஒரு நாளைக்கு ஒரு நல்ல சேதி கேட்க முடியாது. ஊர்ல எத்தனை கோயில் இருக்கு. ஒரு கோயிலுக்குப் போறதுக்குக்கூட நேரம் கிடையாது. இவ்வளவு ஏன் சார்? பிள்ளைக படிக்கிற பள்ளிக் கூடத் தைக்கூட போய்ப் பார்த் தது இல்லை. விடிஞ்சா கோர்ட், கொலைக் கேஸ§, ரௌடிப் பயக... இதைத்தான் வருஷம் பூரா பார்த்துக்கிட்டே இருக்கேன்.

அன்னிக்குப் பாருங்க... ஒரு கைதியைக் கூட்டிக் கிட்டு மதுரைக்குப் போயிட்டு இருக்கேன். பஸ்ல என் மாமனார் ஏறிட்டார். ரொம்பக் கூட்டம். ‘வாங்க மாமா! உட்காருங்க’னு சொல்லணும்னு ஆசையா இருந்துச்சு. ஆனா, கூட கைதி இருக்கான். அவனை என் கையோடு சேர்த்து விலங்கு போட் டிருக்கேன். எழுந்து நின்னா ரெண்டு பேரும்தான் நிக்கணும். என்ன செய்யறது? பார்க்காத மாதிரி இருந்துட்டேன். ராத்திரி வீட்டுக்குப் போனா, பொண்டாட்டி கோவிச்சுகிடுறா.

இதுவாவது பரவாயில்லை. ஒரு காரும் லாரியும் எதிரெதிரே மோதி, கார்ல வந்த குடும்பமே காலி. பச்சைப் பிள்ளை, ஆறு மாசமிருக்கும். வாயில நிப்பிளை வெச்சுக்கிட்டு செத்துக் கிடக்குது. அதைக் கையில் எடுத்து வெச்சுக்கிட்டு, ராத்திரி பூரா நடு ரோட்லயே இருட்டுக்குள்ள நின்னுக்கிட்டு இருக்கேன். என்னை அறியாம கண்ணுல தண்ணி கொட்டுது. எதுக்குடா இந்த உத்யோகத்துக்கு வந்தோம்னு மனசு அடிச்சுக்கிச்சு. சம்பளத்துக்குத்தான் இந்த உத்யோகம் பாக்கிறோம்னு சொன்னாலும், மனசு ஒட்டலை சார். அதான், இப்படி ஏதாவது கோயில்ல டூட்டி போட்டா கிளம்பி வந்திருவேன். ஒரு நாளைக்குப் பத்து தடவை சாமி கும்பிடுவேன்.

என் அனுபவத்துல மனுஷன் அவ்வளவு நல்லவன் இல்லை சார். எல்லார் மனசுக்குள்ளேயும் தப்பு பண்ற ஆசை இருக்கத்தான் செய்யுது. எது எதுக்கோ பயந்துபோய்தான் அடங்கியிருக்காங்க. அதே மாதிரி திருட்டுப் பயக எல்லோரும் கெட்டவங்களும் கிடை யாது சார். இப்படித்தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சூரசம் ஹாரத்துக்கு டூட்டி போட்ருந்தாங்க. ராத்திரி சாப்பிட்டது சேராம ஒரே வயித்துப்போக்கு. கூட்டத்துக்குள்ளேயே மயங்கி விழுந்துட்டேன். முழிச்சுப் பார்த்தா ஜி.ஹெச்ல கிடக்கேன்.

நம்மளை இங்கே கொண்டு வந்தது யாருன்னு பார்த்தா, கையில ஒரு தூக்குவாளி வெச்சுக்கிட்டு கட்டைக் குமார்னு பிக்பாக்கெட் அடிக்கிற பய நிக்கிறான். ‘என்ன ஏட்டய்யா... இப்போ எப்படி இருக்கு?’னு விசாரிச்சுக்கிட்டு, டீயை ஆத்திக் கொடுத்துக் குடிக்கச் சொல்றான். ‘நீ எதுக்குடா என்னைக் காப்பாத்துனே?’னு கேட்டா, சிரிக்கிறான்.

அந்தப் பயலை எம்புட்டு அடி அடிச்சிருப்பேன்..! அது எதுவும் கழுதைக்கு ஞாபகமில்லை. என்னிக்கோ ஒரு நாள் பசிக்குதுனு கேட்டப்ப, நாலு இட்லி வாங்கிக் குடுத்தேனாம்... அதை சொல்லிக் காட்டுறான். மூணு நாள் ஆஸ்பத்திரியில படுத்திருந்தேன். அவன்தான் கூடவே இருந்தான். இவங்களுக்கு எல்லாம் எப்படி கைம்மாறு செய்யறது சொல்லுங்க?’’

நீருற்றைப் போல, அவரது மனதில் ஊறிக்கிடந்த எண்ணங்கள் பீய்ச்சி அடித்துக்கொண்டு வெளிப்பட்டன. பையன் கையில் வைத் திருந்த பொம்மையை அவரிடம் வாங்கிக் கொடுப்பதற்காக நான் எத்தனித்தபோது, பையன் அழத் துவங்கினான். அது போல வேறு ஏதாவது பொம்மை இருக்கிறதா என்று கேட்டதற்கு, கடைக்காரர் இல்லை என்றார். கான்ஸ்டபிள் சிரித்த முகத்தோடு, ‘பரவாயில்லை சார்! வெச்சுக்கிடட்டும். நானும் என் பேத்திக்கு தான் வாங்கிட்டுப் போறதா இருந்தேன். இப்போ பேரனுக்குக் கொடுத்துட்டேன்னு நினைச்சுக்கிடுறேன்’ என்றார்.

உறவுக்கும் அன்புக்கும் ஏங்கும் அந்த மனிதரைப் பார்த்தபடியே செய்வது அறியாமல் நின்று இருந்தேன். ‘நடை பூட்டுறதுக் குள்ள இன்னொரு தடவை சாமி கும்பிட்டு வந்து டறேன்’ என அவர் சந்நிதியை நோக்கி நடந்து போனார்.

அறைக்குத் திரும்பிய பிறகும் அந்த மனிதரின் பேச்சும் ஆழ்ந்த வலியும் என்னைப் பற்றியபடியே இருந்தன. வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப் பாடத்தைக் கற்றுத் தருகிறது போலும்!
‘கொலைகாரர்கள், அடையாளம் காணப்பட்டவர்கள். அவர்களிடம் நாம் பயம் கொள்வதற்கு எதுவுமில்லை. ஆனால், சாதாரண மனிதன் எந்த நேரமும் ஒரு கொலையைச் செய்வதற்குச் சாத்தியம் இருக்கிறது. ஆகவே, அவன் மீது மட்டும் சற்று கவனமாக இருக்கவேண்டும்’ என்று ஸ்பானிய எழுத்தாளர் போர்ஹே தனது கதை ஒன்றில் குறிப்பிடுகிறார். அதுதான் வாழ்க்கை காட்டும் நிஜம்!

எல்லாக் குற்றமும் ஒரு நிகழ்வுதான். இந்த நிகழ்வின் பின்னால் அறியப் படாத காரணம் ஒன்றும் இருக்கிறது. அந்தக் காரணம் குற்றவாளிக்கு உண்மையானதாக இருக்கிறது அதனால் தான் குற்றம் சாத்திய மாகிறது. பொது நியாயங்களும், அறமும் குற்றத்தின் முன் காரணமற்ற தாகவே போய் விடுகின்றன.

ஆதி நாட்களில் திருட்டைத் தொழி லாகக் கொண்ட கிராமங்கள் எத்த னையோ இருந்திருக் கின்றன. சங்க இலக் கியத்தில், ஆறலைக் கள்வர்கள் என்ற இனம் பற்றிக் குறிப்புகள் காணப்படுகின்றன. இவர்களின் முக்கிய தொழில், வழிப்பறி செய்வது. வாழ்வதற்குத் தேவையான எந்தப் பின்புலமும் இல்லாத இந்தப் பாலை நில மக்கள், வணிகர்களிடம் வழிப்பறி செய்து வந் தார்கள் என்று பாலை இலக்கியம் விவரிக் கிறது.

விவசாயம் சார்ந்து நடைபெறும் திருட்டுத் தொழிலில் மிக முக்கியமானது ஆடு, மாடுகளைத் திருடுவது. ராமநாதபுர மாவட்டத்தில், ஒரு காலத்தில் இத்திருட்டு மிக முக்கிய பிரச்னையாக வளர்ந்திருந்தது. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது காவல்துறை.
இப்படி களவுக்குப் பிரசித்தி பெற்ற ஊர்களில் காணப்படும் அன்றாட வாழ்வும் விசித்திரமானதாகும். வேல.ராமமூர்த்தியின் ‘இருளப்பசாமியும் 21 கிடாயும்’ என்ற சிறுகதை, இந்த உலகைப் பற்றி விவரிக்கும் நுட்பமான கதை.

தன்னுடைய கதைகள் ரத்தக் கறை படிந்த எழுத்து என்று கூறும் வேல.ராமமூர்த்தி, ராமநாதபுர மாவட்டத்தின் வெக்கையை தன் எழுத்தில் படியச் செய்தவர். மிகக் குறைவான சிறுகதைகளே எழுதியிருந்தபோதும் தனித்துவமாக அறியப்பட்டவர்.

இக்கதை ஆட்டுக்கிடை போடப்பட்டு இருக்கும் இடங்களுக்குச் சென்று நள்ளிரவில் ஆடுகளைத் திருடிவரும் கள்ளர்கள் சிலரின் வாழ்வை விவரிக்கிறது. கவுல்பட்டு என்ற ஊருக்கு இருளாண்டி தலைமையில் சிலர் திருட்டுக்குப் புறப்பட்டுப் போகிறார்கள். எல்லோரது கையிலும் வேல்கம்பு. பதுங்கிப் பதுங்கிப் போய் ஆடுகளைத் திருடி விட்டுக் கிளம்பும்போது கிடைக் காவலுக்கு இருந்த நாய் குரைத்துவிடுகிறது.

‘கள்ளன்... கள்ளன்’ என்று கிடைக்காரன் கத்துகிறான். கவுல் பட்டிக்காரர்கள் ஊரோடு சேர்ந்து துரத்துகிறார்கள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பியோடி வருகிறார் கள் திருடர்கள். காவல் நாய் பாய்ந்து வந்து குதிகாலைக் கவ்வியபோதும் அதை அடித்துத் தூக்கிப்போட்டுவிட்டு, தப்பி வந்து சேர்கிறார்கள்.

மறுநாள், பெருநாழி போலீஸ் ஸ்டேஷனில் கவுல்பட்டிக்காரர்கள் ஊரோடு வந்து முறையிடுகிறார்கள். காவல்துறையினர் மிக ஆத்திரமாகி, திருட்டுக்குப் போனவர்கள், போகாதவர்கள் என்ற பாகுபாடின்றி சந்தேகப்பட்ட அத்தனை பேரையும் பிடித்து வந்து சூடு போடுகிறார்கள்.
இது நடந்து சில காலத்துக்கு திருட்டு மட்டுப்பட்டது. திருட்டுக்குத் தலைமை தாங்கிய இருளாண்டி தொடையில் சூடுபட்டுப் படுத்தே கிடந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, அந்த ஊரின் மூத்த குடும்பத்துப் பிள்ளையான சேது வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, அவரைப் பார்க்கப் போகிறார் இருளாண்டி.

திருட்டுக்குப் பேர்போன ஊரிலிருந்து முதன்முறையாக சப்&இன்ஸ்பெக்டராக வேலைக்குத் தேர்வு ஆகியிருக்கிறான் சேது. அது அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் தருவதாக இருக்கிறது. வேலை கிடைத்துவிட்டால், இருளப்பசாமிக்கு கிடாவெட்டி பொங்கல் வைப்பதாக அம்மா நேர்ச்சை செய்திருப்பதாகவும், அதற்காக அண்ணன் கிடாகுட்டி வாங்கி வரப் போயிருப்பதாகவும் சேது சொல்கிறான்.

அதைக் கேட்டதும் அவர்களுக்கு ஆத்திரமாக வருகிறது. சேதுவின் நேர்த்திக்கடனுக்காக 21 கிடாய்களை ஏற்பாடு பண்ண வேண்டியது தங்கள் பொறுப்பு என்று சொல்கிறார்கள். சேது அதைத் தடுக்கிறான். ‘மாப்பிள்ளை தப்பா நினைக்காதீங்க. நாம வெட்டப்போறது கள்ள ஆடுகள் இல்லை. எல்லாம் நாம் வளர்த்த ஆடுகள்’ என்று இருளாண்டி உண்மையைச் சொல்கிறார். சேதுவுக்கு அவர்கள் மனதில் உள்ள ஆறாத ரணம் புரிகிறது.

பின்பு, அவர்கள் தயங்கி சேதுவிடம் இன்ஸ்பெக்டர் உடையை அணிந்துகொண்டு வந்து தங்களோடு ஒன்றாக உட்கார்ந்து சில நிமிஷம் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். சேது அவர்கள் ஆசையை நிறைவேற்றும்படியாக இன்ஸ்பெக்டர் உடுப்பை போட்டுக்கொண்டு வெளியே வருகிறான். ஆனால், அதுவரை திண்ணையில் உட்கார்ந்திருந்த அவர்கள் தங்களை அறியாமல் பதறி எழுந்து, தோளில் கிடந்த துண்டை கட்கத்தில் இடுக்கியபடி நின்றார்கள், என்பதோடு அக்கதை முடிகிறது.
கையில் ஆயுதம் இல்லாமல் தெய்வங்களே வாழ முடியாத நம் காலத்தில், மனிதர்கள் அவமதிப்பும் அறியாத வடுக்களும் ஏற்படாமல் வாழ முடியாதுதான் போலும்! பறப்பது சுதந்திரம் என்று பறவையைப் பார்த்து மகிழும் எவரும் பறத்தல் ஒரு இடையறாத போராட்டம் என்று புரிந்துகொண்டு இருக்கிறார்களா, என்ன?

நன்றி: கதாவிலாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்

Aug 10, 2010

இருளப்ப சாமியும் 21 கிடாயும் - வேல.இராமமூர்த்தி

இருளாண்டித் தேவரை உப்பங்காற்று ‘சிலு சிலு’ என உறக்காட்டியது. முளைக் கொட்டுத் திண்ணைக்கு என்று ஒரு உறக்கம் வரும். நெஞ்சளவு உயரமான திண்ணை. நடுவில் நாலு அடுக்கு சதுரக் கும்பம். தப்பித் தவறி கால் பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும். நாலு கல்தூணில் நிற்கும் ஒட்டுக் கொட்டகை. கிழக்குப் பாதையோரம் தரையோடு முளைத்த பத்ரகாளி, இளவட்டஙக்ள் பத்ரகாளிக்குப் பயந்து இரவு நேரங்களில் தப்பிலித்தனம் பண்ணுவதில்லை. இந்த விஷயத்தில் பெரியாளுகள் ரொம்பக் கண்டிஷன்.
velaram ’எளவட்ட முறுக்கிலே எவளோடயாவது போறவன்... கம்மாக்கரை, கிணத்தடி, படப்படிப் பக்கம் போயிறுங்க. தப்பி நடந்தா... காளி கண்ணைக் கெடுத்திடும்’ என்பார்கள். மற்றபடி பகம் பூராவும் வெட்டுச் சீட்டு, ரம்மி, தாயக்கட்டம், ஆடுபுலி ஆட்டம் நடக்கும். தென்புறம் இருளாண்டித் தேவர் படுத்திருந்தார். அவர் தலைமாட்டில் கந்தையாத் தேவர். வட ஓரம் ஏழு பேர் ரம்மி, ஏழு பேரில் இருளாண்டித் தேவர் மகன், மகள் புருஷன், கந்தையாத் தேவர் மகன், தம்பி மகன் ஆடிக் கொண்டிருந்தார்கள். மேலப்புறம் வெட்டுச் சீட்டு, கிழக்கே பத்ரகாளி பார்வையில் தாயக் கட்டம். இருளாண்டித் தேவரின் கால்மாட்டில் ஆடுபுலி ஆட்டம். எல்லோரும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு சொந்தம். தகப்பன், மகன், மாமன், மச்சினன்.
சீட்டுப் பிடிக்க கை பழகாத சின்னப் பயலுகளுக்கு நிறைகுளத்தம்மன் கோயில் ஆலமரத்தில் காக்கா குஞ்சு விளையாட்டு. ஊர்க் கிணறுகள் அத்தனையும் குட்டப்புழுதி ஆகிவிடும். குதியாட்டம்தான்.
இருளாண்டித் தேவரின் இடதுகை மடங்கி தலைமாட்டில் பாந்தப்பட்டிருந்தது. இரண்டு தொடை இடுக்கிலும் வலது கையைக் கொடுத்திருந்தார். தொடை இடுக்கில் கிடந்த தழும்புகள் மேடு தட்டிக் கிடந்தன. கவுல்பட்டியில் ஆடு திருடப்போய் பிடிபட்டு பெருநாழி போலீஸார் கம்பியைக் காய வைத்து இழுத்தத் தழும்பு.
பெருநாழிக்கு மேற்கே நாலாவது மைலில் கவுல்பட்டி. தெலுங்கு பேசுகிற ரெட்டிமார் ஊரு. வண்ணான் குடிமகனைத் தவிர்த்து எல்லோரும் ரெட்டிமார்கள் தான். சம்சாரிகளுக்கான எல்லாக் கோப்புகளும் உள்ள ஊர். வீட்டு வீட்டுக்கு உழவு மாடு. கிடை கிடையாக ஆடு, ஊரைச் சுற்றி பெரும்பெரும் படப்புகள். வாய் அகன்ற மண்பானை போல் ஊரணி. மாட்டுக்கும் மனுசருக்கும் அதுதான் குடிதண்ணீர். யாரும் கால், முகம் கழுவக் கூடாது. கட்டு செட்டான ஊர். களவுக்கு இடங்கொடுக்காத ஊர்.
பத்து பேர் எதிர்த்து வந்தாலும் அடித்து விரட்டுகிற வீரன் இருளாண்டித்தேவர். அன்றைக்குக் கவுல்பட்டி களவுக்குப் போனவர்களில் யாரும் குறைந்த ஆளில்லை. முருகேசத் தேவர், ஒத்தையிலே நின்னு ஊரையே அடிக்கிற தாட்டியன். அதே மாதிரி கந்தையாத் தேவர், நாகுத்தேவர், கருப்பையாத் தேவர், முத்துத்தேவர், சுந்தரத்தேவர், குருசாமித் தேவர் எல்லாரும் வீரவான்கள். இத்தனை பேரும் கம்பு கட்டி நின்றால் எந்தப்படையும் பின்வாங்கும்.
அன்றைக்குச் சாமத்துக்கு மேலே எல்லாரும் கிளம்பி வைரவன் கோயில் பொட்டல் ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்தார்கள். பின் நிலாக் காலம். ராத்திரி ஒரு மணிக்கு மேலே தான் நிலா கிளம்பும்.
ஆலமரம். பாறையில் வேர்ப்பிடித்து உச்சியில் நின்றது. ஆலமரத்துப் பட்சி உத்தரவு கொடுத்தால்தான் களவுக்குக் கிளம்புவது வழக்கம். ஆந்தை வலமிருந்து இடம் பாய்ந்தால் நல்ல சகுனம். போகிற இடத்தில் ஆபத்தில்லை. இடமிருந்து வலம் ஆகாது. வீட்டுக்குத் திரும்பிவிட வேண்டும். எல்லோர் கையிலும் வேல் கம்பு. கனத்த செருப்பு, கருப்புப் போர்வை, குத்துக்காலிட்டு காத்திருந்தார்கள். வெகுநேரம் கழித்து ‘கீச்ச்....’ என்ற சத்தத்தோடு ஆந்தை வலமிருந்து இடம் பாய்ந்தது.
இருளாண்டித் தேவர் எழுந்தார்.
“வைரவன் உத்தரவு கொடுத்துட்டாரு ஒரு குறையும் வராது. எல்லாரும் கெளம்புங்க”. கிளம்பினார்கள், பத்துப் பேருக்கு மேல் இருக்கும். நிலா கிளம்பி விட்டது. நாலு மைலும் வண்டிப்பாதை. ரெண்டு பக்கமும் முள்ளுக்காடு. இருளாண்டித்தேவர் முன்னால் போனார். பேச்சும் சிரிப்புமாக நடந்தார்கள்.
வனாந்தரம். இருட்டு. யாராவது கொஞ்சம் பலத்து பேசினாலோ, சிரித்தாலோ இருளாண்டித்தேவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
இடையிலே ரெண்டுமூணு ஓடைக்காடு. முழங்காலுக்கு வண்டல் இறக்கியது. செருப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடைகளைக் கடந்தார்கள்.
மணிப்பத்தா ஓடையைத் தாண்டி பத்து எட்டு நடந்திருப்பார்கள். வண்டிப்பாதையின் இந்தத் தடத்துக்கும் அந்தத் தடத்துக்கும் சரியாக ஒரு பாம்பு புழுதியைக் குடித்துக்கொண்டு படுத்திருந்தது. தொடைக்கனம். முன்னே போன இருளாண்டித்தேவர் ரெண்டு எட்டு இடைவெளியில் பாம்பைப் பார்த்துவிட்டு நின்றார். நாகம் தலை தூக்கிச் சீறுமுன், வேல்கம்பால் தலையில் ஒரு குத்துக் குத்தி முள்வேலிக்குள் தூக்கி எறிந்துவிட்டு நடந்தார். கவுல்பட்டி ஊரணிக்கரையைச் சுற்றி பெரும் பெரும் புளிய மரங்க்ள் பேயாய் நின்றன. நிலா வெளிச்சத்தில் ஊரணி புளியமரங்கள் தட்டுப்பட்ட உடனே இருளாண்டித்தேவர் உதட்டில் விரல் வைத்து ‘உஸ்... உஸ்...’ என்று எச்சரித்தார். செருப்புச் சத்தம் கேட்காதபடி பொத்தி பொத்தி நடந்து முன்னேறினார்கள். ஊர்க்கிட்டே அண்ட முடியாது. வீட்டு வீட்டுக்கு நாய் கெடக்கும். ராஜபாளையத்துக்கோம்பை நாய்கள். துரத்திப் பிடித்தால் தொடைக் கறியை தோண்டி எடுத்துவிடும்.
குளிருக்குக் குன்னிப் படுத்திருக்கும் அனாதைக் கிழவி மாதிரி ஊர் உறங்கிக் கொண்டிருந்தது. ஊரை தெற்கே விட்டு, ஊரணிக்கு வடக்காக நடந்தார்கள். ஆட்டுக்கிடை ஊருக்கு வெளியே மந்தைக் காடுகளில்தான் கெடக்கும்.
“யோவ்.... குருசாமித் தேவரே.... எட்டி நடங்க...”
ஊரணிக்கு வடக்கே நாலு புஞ்சை கடப்புக்கு ஆட்டுச் சத்தம் கேட்டது.
இருளாண்டித்தேவர் வலது கையை லாத்தி காட்டினார். எல்லோரும் வடக்காக எட்டி நடந்தார்கள்.
சுந்தரத்தேவருக்கு இருமல் முட்டியது. நெஞ்சுக்குள் அமுக்கினார்.
“கந்தையாத்தேவரே.... செருப்பு சத்தம்....”
கந்தையாத் தேவர் பொதுமலாய் நடந்தார்...
எல்லா ஆடுகளும் படுத்துக்கிடந்தன. ஒரு ஆடு ‘புர்ர்ர்ர்.... ர்....ர்...’ எனத் தும்மியது. தென்கோடியில் ஒரு கயிற்றுக்கட்டில். உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை தெரியாமல் போர்த்திக்கொண்டு கிடைக்காரன் படுத்திருந்தான். கட்டிலில் ஒரு வேல்கம்பு சாத்தி இருந்தது. கட்டிலுக்கடியில் நாய். சுருட்டிப்படுத்திருந்தது.
‘நேய் படுத்திருக்கு.”
அடுத்த புஞ்சைப் பொழியில் எல்லாஅரும் பதுங்கி உட்கார்ந்தார்கள். வேல் கம்புகளைக் கிடத்தி விட்டு போர்வைகளை இறுக்கிப் போர்த்தினார்கள். வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொண்டார்கள்.
”தெற்கயும் மேற்கயும் யாரும் போகாதீங்க. வடக்க பாதிப்பேரும் கிழக்கப் பாதிப்பேரும் போகணும். சுருக்கா முடியணும்.”
வேல்கம்பை கையில் எடுத்துக் கொண்டார்கள். இருளாண்டித் தேவரோடு சேர்ந்து பாதிப்பேர் கிழக்கேயும், முருகேசத் தேவரோடு பாதிப்பேர் வடக்கேயும் பிரிந்தார்கள்.
பச்சைப் பனை ஓலையைக் கிழித்ததுபோல் குட்டி ஆடுகள் சிணுங்கின. சின்னச் சின்ன சத்தங்களோடு ஆடுகள் கிடந்தன. கிடைக்காரனும், நாயும் அசையவில்லை. நல்ல தூக்கம். நிலா வெளிச்சத்தில் ஆடுகளின் நிறம் தெரியும் அளவுக்கு நெருங்கி விட்டார்கள். சுந்தரத்தேவர் மறுபடியும் இருமலை நெஞ்சுக்குள் அமுக்கினார்.
’புர்ர்...ர்...ர்’ என்று ஒரு ஆடு தும்மியது. பத்தடி நெருக்கத்திலேயே நின்று அவரவருக்குத் தகுதியான ஆடுகளை இனம் குறித்தார்கள். கிடாயாக இருந்தால் கறி நல்லா இருக்கும். பெருத்த கிடாயாக இருந்தால் தோளில் போட்டுக் கொண்டு நாலு மைல் தூரம் ஓட வேண்டும். இருளாண்டித் தேவரின் சைகைக்காக காத்திருந்தார்கள். கட்டிலில் படுத்திருந்த கிடைக்காரன் புரண்டு படுத்தான். நாய் அசையவில்லை. கிழக்கே இருந்து இருளாண்டித் தேவர் துண்டை வீசினார்.
அவரவர் குறித்து வைத்திருந்த கிடாய்களை நெருங்கி இடது கையால் வாயை இறுக்கிப் பிடித்தார்கள். வலது கையால் குரல்வளையை ‘கடக்’ என நெறித்து ஒதுக்கி விட்டார்கள். கிடாய்கள் கால்களை உதறிய சத்தந்தான் லேசாய் கேட்டது. கத்த முடியவில்லை. கைக்கு இரண்டு கால்களைப் பிடித்துத் தூக்கி, துண்டைப் போர்த்துவதைப் போல் தோளில் போட்டார்கள்.
கிடைக்காரனுக்கும், நாய்க்கும் நல்ல தூக்கம். இடது கையால் ஆட்டுக் கால்களையும் வலது கையில் வேல் கம்பையும் பிடித்துக் கொண்டு ‘லொங்கு... லொங்கு’ என ஓடக் கிளம்பினார்கள். மூன்றாவது புஞ்சைப் பொழியைக் கடந்தால்தான் வண்டிப்பாதை. முருகேசத் தேவர் முன்னால் ஓடிக் கொண்டிருந்தார். தோளில் கிடந்த ஆட்டின் சூடு, இந்தக் குளிர்ந்த நேரத்தில் எல்லோருக்கும் இதமாக இருந்தது. வண்டிப்பாதைக்கு வந்து விட்டார்கள். யாரும் வாய் திறக்கவில்லை. ஓட்டம் குறைந்து ’ஓட்டமும் நடையு’மாகப் போனார்கள்.
முத்துத்தேவரின் கழுத்தில் கிடந்த கிடாயின் குரல்வளை சரியாக நெறிபடவில்லை. ‘ம்மே... ம்மேய்... ம்மேம்...’ என்று கத்தக் கிளம்பி விட்டது. முத்துத்தேவரின் பிடி தவறியது. கிடாய் துள்ளவும் பிடியை விட்டு விட்டார்.
கீழே குதித்த கிடாய், ‘ம்  மே... மே... மேம்... ய்..’ என்று கத்தித் தீர்த்து விட்டது.
முத்துத்தேவர் சுதாரித்து, கிடாயின் குரல்வளையை கடித்துத் துப்பினார். கிடாய் சத்தம் நின்றது.
‘லொள்... லொள்... லொள்...’
இராஜபாளையத்தைக் கோம்பை கிளம்பி விட்டது. கிடை ஆடுகள் எல்லாம் கத்த ஆரம்பித்தன.  கிடைகாரன் போர்வையைச் சுருட்டி வீசிவிட்டு வேல் கம்பை கையில் எடுத்துக் கொண்டு ஊரைப் பார்த்துக் கத்தினான்.
“ஏய்..... கள்ளன்... கள்ளன்.... ஓடியாங்க...”
இருளாண்டித் தேவரோடு சேர்ந்து எல்லோரும் வண்டிப்பாதையில் கெதியாய் ஓடினார்கள். முத்துத்தேவர் கடைசியாக வந்தார். வாயில் ஆட்டு ரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. முதல் புஞ்சைப் பொழியை நாய் தாண்டி விட்டது. ஊர் எழுந்து கொண்டது.
ஹூ...ஹூவெனக் கூச்சல்.
சுந்தரத் தேவருக்கு மூச்சு இரைத்தது. எல்லோரும் வேல் கம்பு இருந்த வலது கையில் செருப்பைக் கழற்றி எடுத்துக்கொண்டு ஓட்டமெடுத்தார்கள்.
மணிப்பத்தா ஓடை வண்டலுக்குள் சதக்.. பொதக்.. என மிதித்து வெளியேறி ஓடினார்கள். நாய் ஒரு புஞ்சைக் கடப்பில் வந்து கொண்டிருந்தது. ஊர்ச்சனங்கள் கம்புகளோடும் ஆயுதங்களோடும் வண்டிப் பாதையில் ‘திமு திமு’ என ஓடி வந்தனர்.
‘வேய் ரா.... வேய் ரா...”
நாய், வண்டலைக் கண்டதும் மலைத்து நின்று குரைத்தது. ஓடையின் தென்கரையில் கொஞ்ச தூரம் ஓடியது. வண்டல் மாறி தண்ணீர் தட்டுப்பட்டது. பாய்ந்து நீந்தி வடகரையில் ஏறிக் கிழக்கே வண்டிப் பாதையில் விரட்டி ஓடியது.
அதற்குள் முருகேசத் தேவர் கூட்டத்தினர் எட்டிப் போய்  விட்டார்கள். வைரவன் கோயில் பொட்டல் ஆலமரம்தான் இவர்களுக்குக் குறி. கெதியாக ஓடினால் ஒன்னுக்கு இருக்கும் நேரம்தான். எல்லையைத் தொட்டு விடலாம். அப்புறம் வெளியூரான் நெருங்க மாட்டான்.
நாய், நாலுகால் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது. கவுல்பட்டிச் சனம் மணிப்பத்தா ஓடையைக் கடந்து விட்டது.
“வேய் ரா..... வேய் ரா....”
களவாணிப் பயலுகளை ஒரு தடவை ஊருக்குள் விட்டுவிட்டால் அப்புறம் ஒண்ணும் மிஞ்சாது. மனுஷன் குடியிருக்க நீதி இல்லாமல் போயிரும். இதுவரைக்கும் அக்கம்பக்கத்திலே, அடுத்த ஊரு மூணாவது ஊருலேதான் களவுபோனது. கவுல்பட்டிக்குக் களவாணிப்பயலுக வந்தது இதுதான் முதல் தடவை. அவிழ்ந்த தலைமயிரைக் கூட அள்ளி முடியாமல் பெண்கள் சேலையை ஏத்திச் செருகிக் கொண்டு ஓடி வந்தார்கள்.
“வேய்  ரா... வேய்   ரா...”
கடைசியாகப் போய்க் கொண்டிருந்த முத்துத்தேவரை நாய் எட்டிக் கவ்வியது. வேட்டி பிடிபட்டது. முத்துத்தேவர் செருப்பை ஓங்கி நாயின் வாயில் அடித்தார். வேட்டியை விட்டுவிட்டது. போர்வையைக் கவ்வியது. பிடறியில் கிடந்த கிடாயை கீழே போட்டார். செருப்புக்களையும் கீழே போட்டார். போர்வையை உதறி விட்டார். வேல் கம்பு மட்டும் கையில் இருந்தது. நாய், நெஞ்சில் குதறியது. இடது கையால் நாயின் மூஞ்சியில் அடித்தார், வேல் கம்பை ஓங்கினார். வலது மணிக்கட்டை கவ்விக் கொண்டது. திமிர முடியவில்லை. வேல் கம்பு நழுவியது. இடது கையால் நாயின் மேல் வாயைப் பிடித்து, வாய்க்குள் மாட்டி இருந்த வலது கையை கீழே அமுக்கினார். நாய், பக்கத்து முள் வேலியில் விழுந்தது. குனிந்து வேல் கம்பை எடுப்பதற்குள் நாய் முதுகில் பாய்ந்தது. கீழே சாய்ந்தார்.
முன்னால் போனவர்கள் வெகு தூரம் போய்விட்டார்கள். பின்னால் ஊர் திரண்டு வந்து கொண்டிருந்தது.
“வேய் ரா... வேய் ரா....”
நிலா வெளிச்சத்தில் சனம் வருவது தெரிந்தது.
நாயைப் புரட்டினார். கால் நகத்தால் உடம்பைப் பிறாண்டியது. நாயோடு முள் வேலியில் புரண்டார். பாளம் பாளமாய் முள் குத்திக் கிழித்தது. மறு புரட்டில் வண்டிப் பாதைக்கு வந்தார். மேலே கிடந்த நாயின் வாயெல்லாம் ரத்தம் ஒழுகியது. இரண்டு கைகளையும் நாயின் வாய்க்குள் கொடுத்துக் கிழித்தார்.
பலமான சத்தத்தோடு நாய் மல்லாக்க சரிந்தது. முத்துத் தேவரின் வாய், கை, உடம்பெல்லாம் ரத்தம்.
”வேய் ரா... வேய் ரா...”
சனம் நெருங்கிக் கொண்டிருந்தது.
முத்துத்தேவர் எழுந்து வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டினார். போர்வையைக் காயங்களின் மேலே போர்த்திக் கொண்டார். கிடாயைத் தூக்கி தோளில் போட்டு, வேல் கம்பு, செருப்புகளை வலது கையில் எடுத்துக் கொண்டு கெதியாய் ஓடினார். வைரவன் கோயில் பொட்டல் ஆலமரம் நெருங்கித் தெரிந்தது.
மறுநாள், பெருநாழி போலீஸ் நிலையத்தில் கவுல்பட்டி கிராமமே வந்து நின்றது.
முதல்நாள் ராத்திரி களவுக்குப் போனவங்க, போகாதவங்க எல்லா ஆம்பளைகளுக்கும், போலீஸார் கம்பியைக் காய வைத்து துடிக்கத் துடிக்க, கதறக்கதற சூடு போட்டார்கள். கன்னத்திலே, தொடையிலே, கையிலே, கழுத்திலே, வயிற்றிலே, முதுகிலே என்று பலமாதிரி சூடு. அன்றைக்கு இழுத்த சூடுதான், இருளாண்டித் தேவரின் தொடை இடுக்கில் தழும்பேறிக் கிடந்தது.
இருளாண்டித் தேவர் புரண்டு படுத்தபோது, கால்மாட்டில் ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த நாகுத் தேவரின் இடுப்பில் கால் பட்டுவிட்டது.
“நல்லா மிதிங்க மச்சான்.”
நாகுத் தேவர் நக்கலாய்ச் சிரித்தார்.
“எங்கிட்ட மிதி வாங்கணும்னா முன் ஜென்மத்திலே புண்ணியம் செஞ்சிருக்கணும் மாப்ளேய்...”
இருளாண்டித் தேவர் உதட்டோரம் சிரித்தபடி கால்களை ஒடுக்கி மறுபடியும் தலை சாய்த்துக் கொண்டார்.
ரம்மி ஆட்டத்தில் ஜோக்கர் வெட்டியதில் தகராறு. தாயக் கட்டத்தில் ஒருநாய் வெட்டுப்பட்ட சந்தோஷம். சிரிப்பும் கேலியுமாய்ச் சத்தம்.
கிழக்கே இருந்து முருகேசத் தேவர் வந்தார்.
“ஏய்ய்... நம்ம மூத்தவர்மகன் சேது வந்திருக்குதாம்...”
எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். சீட்டாட்டம், ஆடு புலி, வெட்டுச் சீட்டு, தாயக்கட்டம் எல்லாவற்றையும் கலைத்தார்கள். உறங்கிக்கொண்டிருந்த இருளாண்டித் தேவரையும் கந்தையாத் தேவரையும் எழுப்பினார்கள்.
எல்லோரும் கிளம்பி மூத்தவர் வீட்டுக்கு நடந்தார்கள்.
சேது, கால், முகம் கழுவி துடைத்துவிட்டு அப்பாவுடைய போட்டோவுக்கு முன்னால் நின்றான். அய்யாவின் நெற்றியில் குங்குமம் இட்டிருந்தது. உச்சிநத்தம் காசிநாதன்செட்டி வீட்டில் கன்னம் போட்டு களவாடப் போனபோது அந்த ஊர்ச் சனங்களோடு நடந்த சண்டையில் வெட்டுப்பட்டு அய்யா இறந்து போனார். சேதுவுக்கு அருகில் அம்மா நின்றது. படத்தில் இருந்த கணவரையும் பக்கத்தில் நின்ற மகனையும் மாறி மாறிப்பார்த்து அம்மா அழுதது. சேதுவுக்குக் கண்கலங்கிப் பார்வையை மறைத்தது. வீட்டு வாசலில் ஆள் அரவாட்டம் தெரிந்ததும் சேது திரும்பி வாசலைப் பார்த்தான்.
“மருமகனே”.. கூட்டத்துக்கு முன்னால் முருகேசத் தேவர் நின்றார். சேது வாசலுக்கு வந்தான்.
“கும்பிடுறேன் மாமா.. கும்பிடுறேன் சின்னய்யா.. கும்பிடுறேன் மச்சான்.. வாங்க எல்லாரும் வாங்க...”
கண்டதும் சேது, கையெடுத்துக் கும்பிட்டதில் எல்லோருக்கும் சந்தோஷம் தாங்க முடியலே.
“எப்போ வந்தீங்கப்பூ...?”
”இப்போதான் மாமா.”
அம்மா திண்ணையில் பாய்களை விரித்தது. எல்லோரும் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்கள்.
“டூட்டி ஒப்புக்கொண்டுட்டீங்களா?” - நாகுத்தேவரின் கன்னத்தில் தழும்பு கிடந்தது.
“நாளைக்குப் போயி ஜாய்ன்ட் பண்றேன் மாமா.”
”எங்கே டூட்டி?” - குருசாமித் தேவரின் வலது கையில் தழும்பு இருந்தது.
“பழனி பக்கத்திலே மடத்தாகுளம் போலீஸ் ஸ்டேசன்லே”
“சப்-இன்ஸ்பெக்டருதானே?” - கந்தையாத் தேவருக்குப் பிடறியில் தழும்பு.
“ஆமாம், சின்னய்யா, ஒரு வருசம் ட்ரெயினிங் முடிஞ்சு... முதல் போஸ்டிங்”
திண்ணையின் மூலையில், ஓரத்தில் உட்கார்ந்து இருந்தவர்கள் எல்லாம் எம்பி எம்பி சேதுவைப் பார்த்தார்கள்.
‘உடுப்பு போட லாயக்கான ஆளு.’ எல்லோருக்கும் பெருமை தாங்கலே.
“உங்க அண்ணனை எங்கே காணோம்?”
“எனக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை கெடைச்சா.. இருளப்ப சாமிக்குக் கிடாவெட்டி பொங்கல் வைக்கணும்னு அம்மா நேர்த்திக் கடன் வச்சதாம். அதுக்கு ஒரு கிடாக் குட்டி வெலைக்கு வாங்க அண்ணன் வெளியே போனாரு.”
முருகேசத் தேவர் கன்னத்தில் கிடந்த தழும்பைத் தடவிக்கொண்டே “என்னது..! கிடாக்குட்டியை வெலைக்கு வாங்கப்போனாரா? பைத்தியக்காரப் பிள்ளைக. நம்ம வீட்டுப் பிள்ளைக்கு சப்-இன்ஸ்பெக்டர் உத்தியோகம் கெடச்சிருக்கு. நம்ம சனமெல்லாம் சேர்ந்து கொண்டாட வேண்டாமா? நம்ம குலதெய்வம் இருளப்பனுக்கு நாளைக் காலையிலே ஒரு கிடாய் இல்லே.. இருபத்தியோரு கிடாய் வெட்டுப்படுது.” என்றவர் திண்ணையில் இருந்த எல்லோரையும் பார்த்து “ஏய்...ய்... வீட்டு வீட்டுக்கு ஒரு கிடாயைப் பிடிச்சுக் கொண்டு வந்து இங்கே கட்டுங்கடா” என்று உத்தரவிட்டார்.
“எதுக்கு மாமா.. வேண்டாம்...” சேது மருகி மருகி எல்லோரையும் பார்த்தான்.
“கள்ள ஆடு இல்லே மருமகனே.. எல்லாம் நம்ம சொந்த ஆடு.”
சேதுவின் கண்களில் குபுக் என நீர் அடைத்தது. காலமெல்லாம் காயம் பட்ட சனங்கள்.
“தம்பி சேதூ... இந்தப் பயலுகளுக்கு ஒரு ஆசை...”
“என்ன மாமா சொல்லுங்க”
“நீங்க சப்-இன்ஸ்பெக்ட்டர் உடுப்பு மாட்டிக்கிட்டு வந்து, கொஞ்ச நேரம் எங்க எல்லாரோடயும் உக்கார்ந்து பேசிக்கிட்டிருக்கணும்.”
முருகேசத் தேவரின் கைகளைச் சேது பிடித்துக் கொண்டான்.
“இதோ வர்றேன் மாமா.” வீட்டிற்குள் போனான். எல்லோரும் உள்வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான். சிறிதுநேரத்தில் சேது சப்-இன்ஸ்பெக்டர் உடுப்போடு திண்ணைக்கு வந்தான். எல்லோரும் பதறியெழுந்து, தோளில் கிடந்த துண்டைக் கையில் எடுத்தபடி திண்ணையைவிட்டு இறங்கிக் கீழே நின்றார்கள்
*******
தட்டச்சு : சென்ஷி

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்