Showing posts with label கந்தர்வன். Show all posts
Showing posts with label கந்தர்வன். Show all posts

Feb 4, 2011

சாசனம் - கந்தர்வன்

அப்பா வெளியூருக்குப் போகையில் வண்டிக்குள் யார் பேச்சுக் கொடுத்தாலும், எவ்வளவு முக்கியமாக அது இருந்தாலும் தலையை வெளியே நீட்டி அந்தப் புளிய மரத்தை ஒரு தடவை பார்த்துக் கொள்வார். ஊர்க்கோடியில் குறவர் குடிசைகளுக்கு மத்தியில் பிரம்மாண்டமான மரம் அது. அடியில் பன்றி அடைந்து உரம் கொடுக்க ஊர் பூராவிலும் உள்ள மரங்களில் செழித்துக் கொழித்து நிற்கும் அது. அப்பாவுக்குச் சொந்தமான மரம்.

ஒரு செவ்வகவாக்கில் ஐந்து மைல் விஸ்தீரணத்தில் ஆறு சின்னக் கிராமங்களிலும் இந்தத்gandharvan தாய்க் கிராமத்திலும் அப்பாவுக்கு நிலங்களுண்டு. அத்தனை நஞ்சை புஞ்சை வீடு மரங்களிலும் அப்பாவுக்கு ரொம்பப் பிடித்தமானது இந்த புளியமரம்தான். வெகு தூரத்திலிருந்து பார்த்தால் ஒரு குன்று பச்சையாய் நிற்பது போலிருக்கும். அருகில் வந்து அண்ணாந்து பார்த்தால் ஆயிரங்கிளையோடு அடர்ந்து அந்த மரத்திற்குள் ஒரு தோப்பு அசைந்தாடுவது போலிருக்கும்.

எண்ணெய் பூசியதுபோல் வழுவழுவென்றிருக்கும். சிமிண்டுத் திண்ணையில் பகல் பூராவும் அப்பா உட்கார்ந்திருப்பார். நாலு பண்ணையாள்களுக்கும் அஞ்சு கிராமத்துக் குத்தகைக்காரர்களுக்கும் உட்கார்ந்த இடத்திலிருந்தே உத்தரவுகள் போகும். எப்போதாவது பர்மாக் குடையை விரித்து நடப்பார்.  ஒரு நாளைக்கு இத்தனை தடவை என்று எண்ணிவிடலாம் இறங்கி நடப்பதை.

அப்பா நடந்திருக்க வேண்டிய நடையெல்லாம் தாத்தா நடந்திருந்தார். சமஸ்தானத்தில் தாத்தா இந்தப் பிரதேசத்தின் பேஷ்கார்.

மஹாராஜா இந்தப் பக்கமாய் ஒரு முறை திக் விஜயம் செய்தபோது தாத்தா ஒவ்வொரு வேளை விருந்தையும் ஒரு உற்சவமாய் நடத்தியிருக்கிறார். மஹாராஜாவின் நாக்கு அது வரை அறிந்திராத ருசியும் பண்டமும் விருந்துகளில். பரிவாரங்கள் தங்கள் வயிறுகளைத் தாங்கள் தூக்கிச் சுமக்க வேண்டிய நிலை.

மரியாதை காட்டி வெகுவாய்ப் பின்னால் வந்து கொண்டிருந்த தாத்தாவை அழைத்து விரலை அவ்வப்போது நீட்டிக் கொண்டே வந்தார் மஹாராஜா. பின்னால் அந்த நிலங்களெல்லாம் தாத்தாவுக்குச் சமானமாய் வந்தன.

தாத்தா அரண்மனைக்குப் போய் சாசனங்களையும் பட்டயங்களையும் வாங்கி வந்த நாளிலிருந்து எட்டு நாட்களுக்குள் இருபத்தோரு கிராமங்களில் ஆட்களைத் திரட்டினார். தங்களுடையதென்று எண்ணி உழுது கொண்டிருந்த குடியானவர்களை நிலங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் மஹாராஜாவின் சாசனங்களைக் காட்டி விரட்டினார். அடிதடிகளும் நாலு கொலைகளும் நடந்ததாகப் பேச்சுண்டு.

தாத்தா வீட்டிலிருந்து எப்போது புறப்பட்டுப் போனார். எந்த ஊரில் யாரு வீட்டிலிருக்கிறார், ராத்திரி எத்தனை மணிக்கு வருவார் என்பதெல்லாம் வீட்டில் யாருக்கும் தெரியாது. உள்ளூரில்தான் தங்கியிருக்கிறார் "ஒரு வீட்டில்" என்பது போல் நக்கலாக ஒருவர் சொல்ல "அதெல்லாமில்லை சிறைக்குளமோ பண்ணந்தையோ கீரந்தையோ எங்கேயிருக்காகனு யார் கண்டா" என்று அழுத்தமாய் அடுத்த ஆள் பேசிவிடும்.

சில சமயம் விடியற்காலைகளில் சிவந்த கண்களோடு வந்து சேர்வாராம். வந்ததும் பரபரவென்று வீட்டு ஆள்கள் ஒரு அண்டா நிறையத் தண்ணீரைக் கொண்டு வந்து வாசலில் வைப்பார்கள். குளிரக் குளிரக் குளித்து வேட்டி துண்டை நனைத்துப் போட்டு விட்டு வீட்டிற்குள் நுழைவாராம்.

தாத்தா கையைப் பிடித்துக் கொண்டு அப்பா நடக்கையிலே மஹாராஜா இந்தியப் பிரஜையாகிவிட்டார். சாசனங்களையும் பட்டயங்களையும் அப்பா கையில் ஒப்படைத்துவிட்டுத் தாத்தா கிழக்குக் காட்டில் எரிந்தபோது முதல் தேர்தல் முடிந்து ஓட்டுகளை எண்ணிக் கொண்டிருந்த நேரம்.

கிராமங்களில் நீண்டு கிடந்த புஞ்சைகளை அப்பா அந்தந்த கிராமத்துக்குப் பெருங்குடியானவர்களிடம் வாரத்துக்கு விட்டு விட்டார். செவற்காட்டுப்பனைகளைப் பாட்டத்துக்கு விட்டார். தை மாசியில் வீட்டு மச்சிலும் குளுமைகளிலும் பட்டாசாலையிலும் நெல்லும் கம்பும் வரகும் கேப்பையும் ஒரு புறமாகவும் மிளகாய்,

போலிருக்கும். ஒவ்வொரு தடவையும் பெட்டியைத் திறந்து மூடிவிட்டுத் திண்ணையில் உட்கார்கையில் அப்பா முகத்தில் வேர்வையும் அதிருப்தியும் தெரியும்.

ஊர்க்கோடி புளியமரம் தளதளவென்று நிற்கிறது. அதிலிருந்துதான் வருசத்திற்குண்டான புளி வருகிறது. ஆனால் ஒப்படைத்து விட்டுப் போன சாசனங்கள் பத்திரங்கள் எதிலும் ஏன் ஒரு சின்னத் துண்டு காகிதத்தில் கூட இந்த மரத்தைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை.

ஒரு நாள் சுப்பையா மாமா அப்பா பக்கத்தில் வந்து உட்கார்ந்து பேச்சுவாக்கில் "மண்டபத்து மல்லி, மண்டபத்துப் புளி ரெண்டுக்கும் சமமா ஒலகத்திலெ எங்கேயும் கிடையாது" என்று சொல்லிவிட்டார். அப்பா இதைக் கேட்டதும் அம்மாவைக் கூப்பிட்டார். "அந்தக் கொறட்டுப் புளியிலே கொஞ்சங் கொண்டாந்து மாப்பிள்ளட்ட குடு" என்று சொல்லிவிட்டு, "இன்னைக்குக் குழம்பு ஒங்க வீட்டிலெ இந்தப் புளியிலெ. விடிய வந்து சொல்லுங்க மாப்பிள்ளை, மண்டபத்துப் புளி ஒசத்தியா; கொறட்டுப் புளி ஒசத்தியானு"

மறுநாள் சுப்பையா மாமா திண்ணையில் வந்து உட்கார்ந்ததும் சொன்னார். "இந்தக் கொறட்டுப் புளிக்குச் சரியா  மண்டபத்துப் புளியும் நிக்காது; மதுரைப் புளியும் நிக்காது!”

‘கொறட்டுப் புளி’ என்று அப்பா சொல்வது ‘குறவீட்டுப்புளி’ என்பதன் சுருக்கம். ‘குறவீடு’ என்று வருகிற எதையும் வேறு மாதிரித்தான் சொல்வார். அப்படிப் பேசி முடித்ததும் எதையோ மறைத்துத் தப்பித்து விட்ட திருப்தியில் பலர் முன்னிலையில் தன்னை மறந்து சந்தோஷப்பட்டுக் கொள்வார்.

ஆள்பத்தி அறையின் இரும்புப் பெட்டியைத் திறந்து சாசனங்களையும் பத்திரங்களையும் பார்த்து முடித்த சில சமயங்களில் அப்பா திண்ணையிலிருந்து இறங்கிக் குடையை விரித்தும் விரிக்காமலுமாய் ஓடப் போகிற மரத்தைக் கயிறு போட்டு வைக்கப் போவது போல் ஓடுவார். கொழுந்து விடும் நேரம், பூப் பூக்கும் நேரம், பிறை பிறையாய்ப் பிஞ்சு விடும் நேரங்களில் இப்படிப் போய் மரத்தடியில் நிற்பார்.

“அய்யா மகன் வந்திருக்கார் விலகுலெ” என்று சத்தம் போட்டு, வேடிக்கை பார்க்க வரும் குறவீட்டுப் பிள்ளைகளைச் சேரிக் கிழவர்கள் விரட்டுவார்கள். மரத்தடியில் அடைந்து கிடக்கும் பன்றிகளை விரட்டி மேட்டுப்பக்கம் கொண்டு போவார்கள். பன்றிக் கழிவுகளைத் தள்ளி ஒரு புறமாய் ஒதுக்குவார்கள்.

மற்றக் குடிசைகளிலிருந்து விலகி ஒரு குடிசை மரத்திற்கு வடக்கில் தனியாய் உண்டு. வெளியில் உண்டாகும் சேரி அசுத்தங்கள் அந்தக் குடிசையருகே வந்துவிடாதவாறு சுற்றி ஒரு தீ வட்டம் நின்று காப்பதுபோல் பளிச்சென்றிருக்கும்.

அப்பாவின் குரலைக் கேட்டதும் குடிசைக்குள்ளிருந்து ஒரு கிழவி கண்ணில் பூ விழுந்து பார்வை தெரியாமல் கம்பூன்றி வெளியில் வருவாள். குறவர் கூட்டத்திலிருந்து விலகித் தனியாய் ஆகாயத்திலிருந்து வந்து பிறந்ததுபோல் கிழவியின் மகள் தாத்தா ஜாடையில் தாத்தா நிறத்தில் வந்து நிற்பாள். அப்பாவுக்கும் அந்தப் பொம்பிளைக்கும் பதினைஞ்சு வயசு வித்தியாசமிருக்கும்; சின்னவள்.

அந்தப் பொம்பிளையும் அவள் புருஷனும் பிள்ளைகளும் குறவர் கூட்டத்திலிருந்து விலகித் தனியாய் நிற்பார்கள். கிழவியும் மகளும் அப்பா பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் வாஞ்சையோடு கேட்பார்கள். அப்பா புறப்பட்டுப் போகும் போது அந்தப் பொம்பிளை அவர் பார்க்கும்படி முன்னே வந்து குப்பைக்கூளங்களைக் காலால் தள்ளி வழி செய்வாள். இவர்களின் இந்தச் செய்கைகளால் அப்பா தடுமாறி நடப்பார். வீடு வரும்போது மறுபடி முகம் மாறி வந்து சேர்வார்.

வெகுநேரம் யோசனையில் கிடப்பார். கணக்குப் பிள்ளையைக் கேட்டு விடலாமென்று அப்பாவுக்குப் பலமுறை தோன்றியதுண்டு. இந்த மரம் நிற்கும் நிலம் யாருக்குச் சொந்தம் என்று அவரிடம் கேட்கலாம். தன் பெயருக்கே ரசீது போடச்  சொல்லலாம் வரி கட்டியதாக. ஆனால் மரம் இருக்கும் இடம் நம் பெயரிலில்லை என்று கணக்குப்பிள்ளைக்கு நாமே சொல்லிக் கொடுத்தது போலாகிவிடும். சொத்து விஷயத்தில் அவசரப்படக்கூடாது. போகிற வரை போக வேண்டும். அப்பா, கணக்குப் பிள்ளைக்குச் சொல்லி விடும் ஞாபகம் வந்து ஒவ்வொரு முறையும் நிறுத்தி வைத்தது போக அந்த எண்ணத்தையே சில நாளில் மறந்து விட்டார்.

வருசா வருசம் புளியம்பழ உலுக்கல் அப்பா முன்னால் விமரிசையாய் நடக்கிறது. மூடை மூடையாய்ப் புளி வீட்டுப் பட்டாளத்துக்கு வருசத்து. புளியம்பழ உலுக்கலுக்கு முதல் நாளே அப்பா ஆள் சொல்லி விடுவார். மறுநாள் காலை அப்பா போகுமுன்னால் பன்றிக் கழிவுகளைக் கூட்டிப் பொட்டலாக்கி வைத்திருப்பார்கள்.

அப்பா பத்து ஆள்களோடும் ஒரு கட்டுச் சாக்குகளோடும் வெயில் வந்ததும் வருவார். வருசா வருசம் இது ஒரு சடங்கு போல் நடக்கும். உலுக்கலுக்கு முன் கிழவியின் மகள் கிழவியின் கையைப் பிடித்துக் கொண்டு வந்து மரத்தருகில் நிறுத்துவாள். கிழவி மரத்தைத் தொடுவாள்; தடவுவாள்; கும்பிடுவாள். குருட்டுக் கண்ணிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் வடியும். மகள் மெல்லக் கிழவியை அகற்றி அழைத்துக் கொண்டு குடிசைப் பக்கம் போவாள்.

அப்பா இவைகளையெல்லாம் பார்த்தும் பார்க்காதது போல் நிற்பார். சீக்கிரமாய் இந்தச் சடங்கு நடந்து முடியவேண்டுமென்பது போல் பொறுமை இழப்பார். இது முடிந்ததும் பலசாலிகளாயுள்ள எட்டு பேர் திசைக்கு ஒருவராய் ஒரே நேரத்தில் கிளைகளில் ஏறி மேற்கொப்பைப் பிடித்துக் கொண்டு கூத்தாடுவார்கள்.

பழங்கள் உதிர்ந்து சடசடவென்று சத்தங்கிளப்பும். குற வீடுகளின் சின்னப்பிள்ளை எதுவும் பழம் பொறுக்க நடுவில் நுழைந்தால் மண்டையிலடிக்கும். ஒரு பழமே ரத்தம் கசிய வைத்துவிடும்.

மொத்தக் கிளைகளையும் உலுக்கியபின் அப்பா மரத்தைச் சுற்றி வந்து மேல் நோக்கிப் பார்வையிடுவார். ஒரு கிளை விட்டுப் போயிருந்தாலும் அவர் பார்வைக்குப் பட்டுவிடும். எல்லாமும் உலுப்பி முடிந்தவுடன் பத்துப் பேரும் பழங்களை வாரிக் கட்டுவார்கள்.

ஒரு சின்னக் குவியலை அப்பா காலாலேயே குவித்து ஒதுக்குவார். அந்தப் பொம்பிளை வந்து அள்ளிக் கொள்ளும். அள்ளும்போது அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வடியும். மூடைகளை வண்டியிலேற்றி வீட்டில் கொண்டு வந்து இறக்குவார்கள். ஒரு வாரம் முற்றத்தில் காயும். அப்புறம் பதினைந்து பேர்கள் பட்டாசாலையில் உட்கார்ந்து உடைப்பார்கள். மறுபடியும் முற்றத்துக்குப் போகும். அப்புறம் சால்களில் அடையும்.

ஒரு வருசம் உலுக்கலில் போது கிழவி மரத்தைத் தொட்டு அழுது கொண்டிருந்தபோது மகள் புருசன், “ஒங்க ஆத்தாளை இங்கிட்டுக் கூப்பிடு. அசிங்கமாயிருக்கு; சனம் பூராவும் வேடிக்கை பார்க்குது” என்று கோபமாய்ச் சொன்னான். அந்த பொம்பிளை தயங்கியது. “கூட்டிட்டு வரப்போறியா இல்லையாடி” என்று எல்லோருமிருக்கக் காலால் ஒரு உதை விட்டான். ஓடிப்போய்க் கிழவியை இழுத்துக் கொண்டு வந்தாள். அன்று அப்பா காலால் தள்ளிக் குவித்திருந்த புளிக்கு முன்னால் வந்து அவன் “இதையும் அள்ளிக்கிட்டுப் போயிருங்க” என்றான்.

அவன் கை காலெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தன. அப்பா சற்றுக் கலங்கிப் போனார். விட்டுக் கொடுக்காமல் “இதையும் அள்ளிக் கட்டுங்கடா” என்று சொல்லிவிட்டு நடந்தார். அன்று ஒரு பழம் விடாமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தன. அடுத்த வருசம் வழக்கம் போல் மறுநாள் புளியம்பழம் உலுக்க வரப் போவதாகச் சொல்லியனுப்பியிருந்தார் அப்பா. மறுநாள் பத்துப் பேரோடு மரத்தடிக்குப் போகையில் தரையெங்கும் பன்றிக் கழிவுகள் எங்கும் அசிங்கமும் நாற்றமும்.

கயிற்றுக் கட்டிலில் கிழவி உட்கார்ந்திருந்தாள். யாரோ வம்பாய் உட்கார்த்தி வைத்திருப்பது போலிருந்தது. அந்தப் பொம்பிளை புருஷனோடும் பிள்ளைகளோடும் நின்றாள். அப்பா அந்தப் பெண்ணைக் கடுமையாகப் பார்த்தார். “என்ன இதெல்லாம்?” என்று அதட்டினார். சொல்லி வைத்ததுபோல் யாரும் வேலை வெட்டிக்குப் போகாமல் குறவீட்டு ஆள்கள் மொத்தமும் கூடியிருந்தது.

அந்த பொம்பிளை “இனிமேற்பட்டு இந்த மரத்தை நாந்தான் உலுக்குவேன்.” “இதிலே எனக்குப் பாத்தியதை உண்டு...” என்று பேசத் துவங்கியது. அப்பாவுக்குக் கால் நடுங்கியது; உதடு கோணியது. “போதும் போதும் பேச்சை நிறுத்து” என்று அதற்கும் அப்பால் அந்தப் பொம்பிளை பேசப்போவதைப் பதறிப்போய் நிறுத்தினார். கயிற்றுக் கட்டிலின் மேல் அந்தக் கிழவி நிச்சலனமாய் உட்கார்ந்து இருந்தாள்.

கூட்டி வந்த ஆள்களைத் திருப்பியழைத்துக் கொண்டு தலையைச் சாய்த்துக் குனிந்து நடந்து வீடு வந்து சேர்ந்தார். அதற்கப்புறம் அப்பா ஆள்பத்தி அறைக்குள் நுழைந்து பெட்டியைத் திறந்து சாசனம் எதையும் எடுத்துப் பார்க்கவே இல்லை.

*****

Dec 30, 2010

தண்ணீர்-கந்தர்வன்

வெயில் குரூரமாயடித்துவிட்டுத் தணியத் தொடங்கிய வேளை; பாசஞ்ஜர் ரயிலின் கூவல் வெகு தொலைவிலிருந்து அருவலாகக் கேட்டது. வல்லநேந்தல் தாண்டியதும் இன்ஜின் டிரைவர்கள் இப்படித்தான் ஒலி எழுப்புவார்கள். திண்ணைக்கு ஓடிவந்து, தூணைப் பிடித்துக் கொண்டு திரும்பிப் பார்த்தாள் இந்திரா. தூரத்தில் ரயில் வருவது மங்கலாகத் தெரிந்தது.kantharvan
உள்ளே அம்மா 'பொட்டுத் தண்ணியில்லை ' என்று ரயில் ஊதல் கேட்டு அனிச்சையாகச் சொ ல்லிக் கொண்டிருந்தது. ஐயா, சினை ஆட்டைப் பார்த்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தார். ஐயாவுக்கு எப்போதும் கணக்குத்தான். ஆடு குட்டி போட... குட்டி பெருத்துக் குட்டிகள் போட்டுக் குபேரனாகும் கணக்கு.
இந்திரா குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு வாரியைத் தாண்டி ஓடினாள். மேட்டை எட்டும்போது ஏழெட்டுப் பெண்கள் இடுப்பில் குடங்களோடு ஓடிவந்து இந்திராவை முந்தப் பார்த்தார்கள். எல்லோரும் வாலிபப் பெண்கள். முந்துகிற பெண்களை பிந்துகிற பெண்கள் சடைகளைப் பிடித்து இழுத்தார்கள். கைகளைப் பிடித்து மடக்கினார்கள். அடுத்தவர் குடங்களைப் படபடவென்று கையால் அடித்தார்கள். சிரிப்பும் கனைப்புமாக ஓடினாலும் முந்துபவர்களைப் பார்த்து நொடிக்கொருமுறை கடுகடுவென்று கோபமானார்கள். அடுத்த நொடியில் முந்தும்போது சிரித்துக் கொண்டார்கள்.
மேட்டில் ஏறும்போது ஒருவரையொருவர் கீழே சறுக்கிவிடச் செய்தார்கள். 'ஏய் செல்வி, இன்னொரு தடவை என்னை இழுத்து சறுக்கிவிட்டானா இழுத்த கையை முறிச்சுப்புடுவேன் ' ' என்று ஒரு பெண் கத்தியது. சறுக்கிவிட்டதில் முழங்கையில் அரைத்து ரத்தம் தெரிந்தது -- இரண்டு மூன்று குடங்களைத் தூக்கிக்கொண்டு மறுபடி மேடு ஏறினார்கள். புயல் நுழைவது போல் ரயில் நிலையத்துக்குள் பாய்ந்தார்கள். கிளித்தட்டு விளையாட்டில் தங்கள் தங்கள் இடங்களில் ஓடிவந்து நிற்கும் ஆட்களைப் போல் பிளாட்பார நுனியிலிருந்து கடைசி வரை இடைவெளிவிட்டு இடம்பிடிக்க முடியாத பெண்கள் இங்கும் அங்கும் ஆலாகப் பறந்தார்கள். இடங்களை பிடித்துக் கொண்டுவிட்ட பெண்களிடம் கெஞ்சினார்கள். சில பூஞ்சையான பெண்கள் இடம் கிடைக்காததற்காக ஓரத்தில் நின்று அழுதார்கள். சில துடியான பெண்கள் இடம்பிடித்த பெண்களைத் தள்ளிவிட, அவர்களோ தங்கள் குடங்களாலேயே அடித்தார்கள். இரக்கமில்லாமல் விரட்டினார்கள். நேற்றோ முந்தாநாளோ போன சனிக்கிழமையோ தன்னை இதே போல் விரட்டியது 'நல்லா இருந்திச்சா ? ' என்றனர்.
இந்திரா இதில் படுகெட்டியான பெண். எல்லோருக்கும் முன்பாக இடம்பிடித்ததோடு மட்டுமில்லாமல், பதட்டமேயில்லாமல் அலட்சியமாக நிற்கிற அழகைப் பார்த்தால் ஐந்தாறு வருசங்களாக அதே இடத்தில் நிற்பது போல இருந்தது. இடம் பிடிக்க முடியாத பெண்கள் சுவர்களில் சாய்ந்துகொண்டு எகத்தாளம் பேசினார்கள். ஸ்டேஷன் மாஸ்டர் வெள்ளை உடைகளோடும் பச்சைக் கொடியோடும் வந்தவர் இந்த சச்சரவைப் பார்த்துவிட்டு, 'ஒரு நாளைக்கு ஸ்குவார்டை வரச்சொல்லி எல்லோரையும் அள்ளிக்கிட்டுப் போயி ஜெயில்ல போடுறேன் ' ' என்றார். பெண்கள் இடுப்புக் குடங்களுக்குள் முகங்களைக் கவிழ்த்து வக்கணையாகச் சிரித்தார்கள்.
ரயில் சத்தம் நெருங்கிக் கொண்டிருக்கையில் இந்திராவைப் படாரென்று தள்ளிவிட்டு, அந்த இடத்தில் டெய்லர் மகள் ராணி நின்று கொள்ள முயன்றாள். இந்திரா கொஞ்சம் தடுமாறிவிட்டு அவளை அலாக்காகத் தூக்கிப் போட்டுவிட்டு மறுபடி வந்து நின்றுவிட்டாள். கீழேவிழுந்த டெய்லர் மகள் ஆங்காரமாக ஒடிவந்துஇந்திராவின் தலைமுடியைப் பிடித்தாள். இந்திரா அவளைக் குடத்தால் முதுகில் அடித்தாள். அடிக்குப் பயந்து குனிகிறாளென்று நினைத்து நிமிர்ந்தவளுக்கு முழங்கையில் சுரீரென்று வலித்தது. டெய்லர் மகள் கடித்துவிட்டாள். பல் பதிந்துவிட்டது. அவளைக் காலால் எத்திவிட்டாள் இந்திரா.
ரயில், காட்டுயானை பிளிறிக்கொண்டு வருவதுபோல் நிலையத்துக்குள் நுழைந்தது. பயணிகள் யாரும் இறங்கு முன்பாக இந்திரா குடத்தோடு பெட்டிக்குள் பாய்ந்தாள். முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி செம்பில் தண்ணீர் பிடித்தாள். செம்பு பாதி நிறையுமுன் குடத்தில் ஊற்றினாள். ஊற்றிய வேகத்தில் மறுபடி செம்பில் பிடித்தாள்.
ரயில்களில் இந்த வசதியில்லை, அந்த வசதியில்லை என்று இந்திரா எதைப் பற்றியும் நினைத்ததில்லை. ஏனென்றால், ரயிலில் இதுவரை பயணமே செய்ததில்லை. ஆனால், திறந்தால் தண்ணீர் கொட்டுகிற மாதிரி ரயிலில் குழாயில்லை என்பது அவளது குறை. உள்ளங்கையை வைத்து அழுத்திக்கொண்டு முகங் கழுவுபவர்களே சிரமப்பட வேண்டியிருக்கிறது. குடம் தண்ணீர் பிடிக்க வேண்டுபவள் எவ்வளவோ பாடுபட வேண்டியிருக்கிறது.
கதவைப் பிடித்துக்கொண்டு கழுத்தை வெளியே நீட்டிப் பார்த்தாள். அந்தக் கோடியில் சிவப்பு விளக்குதான் எரிந்தது. வேகம் வேகமாக அரைச்செம்பும் கால் செம்புமாகப் பிடித்துக் குடத்தில் ஊற்றிக்கொண்டிருந்தாள். இந்தக் குழாயில் தண்ணீர் சனியனும் விறுவிறுவென்று வந்துவிடாது; இந்தப் பீடைக் குடமும் நிறைந்து தொலைக்காது.
இதுதான் நாளை சாயந்திரம் வரை வீட்டுக்குக் குடிதண்ணீர் இதுவும் கிடையாதென்றால், பிலாப்பட்டிக்குப் போக வேண்டும் நல்ல தண்ணீருக்கு.
இந்த ஊரும் அக்கம்பக்கத்து ஊர்களும் உவடு அரித்துப் போய்விட்டன. ஊருக்குள் நாலு இடங்களில் கிணறு வெட்டிப் பார்த்தார்கள். உப்பென்றால் குடலை வாய்க்குக் கொண்டுவருகிற உப்பு ' கடல் தண்ணீரை விட ஒருமடங்கு கூடுதலான உப்பு கிணற்றுத் தண்ணீரில் உப்பளம் போடலாம் என்றார்கள்.
எல்லா ஊர்களும் தீய்ந்துபோய்விட்டன. பஸ்ஸில் போகும் போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயற்காடுகளில் பச்சை நிறத்தையே பார்க்க முடியாது. ஜனம் எதைத்தின்று வாழ்கிறது என்று இந்தப் பக்கத்தில் பயணம் செய்கிறவர்கள் அதிசயமாகப் பார்ப்பார்கள்.
எழவெடுத்த காற்று பகலென்றும் ராத்திரியென்றுமில்லாமல் பிசாசாயடிக்கும். தடுக்கத் தாவரங்கள் இல்லையென்று பள்ளிக்கூடத்து வாத்தியார் சொல்வார். காற்று சுற்றிச்சுற்றி அடிக்கும். வறண்ட காற்று, ரத்தத்தை உறிஞ்சும் காற்று என்பாள் பாட்டி. மணலை அள்ளித் தலைகளில் இறைக்கும் காற்று ஈரமில்லாத எருக்கிழங்காற்று.
எல்லா ஊரிலும் பருவகாலத்தில் மழை பெய்யும். புயல் வந்தால்தான் இந்தப் பக்கம் பூராவுக்கும் மழை. மழை பெய்வதில்லை...பெய்தாய் பேய் மழை ' கண்மாய், ஊருணி எல்லாம் உடைப்பெடுத்து வெள்ளம் போய் மூன்றாம் நாள் மறுபடி நீரில்லா பூமியாகக் கிடக்கும். ஆகாயத்துக்கும் பூமிக்கும் இந்த ஊர்ப்பக்கம் நிரந்தரப் பகை.
ஐயா காலத்தில் உலகம்மாள் கோயில் கிணறு மட்டும் நல்ல தண்ணீர் கிணறாக இருந்தது. ஏற்றம் வைத்து இறைப்பார்கள். அதிகாலை முதல் டின் கட்டி நாலைந்து இளவட்டங்கள் இறைத்துக் கொண்டே இருந்தார்கள். பெண்கள் தலையில் ஒரு குடம், இடுப்பில் ஒரு குடமென்று எடுத்துவந்தார்கள். ஜனங்கள் இலுப்பை மரத்துக்காய், கண்மாய்க் கரம்பை என்று தலை தேய்த்து ஜன்னி வருகிற மாதிரி சுகமாகக் குளித்தார்கள். சனிக்கிழமைகளில் வானவில்லாக எண்ணெயும் வாசனையாகச் சீயக்காயும் மிதக்கும், நந்தவனத்துக்குப் பாயும் தண்ணீரில்.
இப்போது எல்லாமே பூண்டற்றுப் போய்விட்டன. முல்லை மணந்த நந்தவனம் குட்டிச்சுவர்களில் சின்ன அடையாளங்களோடு பாழடைந்து கிடக்கிறது. கிணற்றில் முள்ளை வெட்டிப் போட்டிருக்கிறார்கள். மழைபெய்து குண்டுக்கால் நிறையும் வரை குடிக்கத் தண்ணீர் வேண்டிப் பெண்கள் குடங்களோடு பிலாப்பட்டிக்குப் போகிறார்கள்.
இங்கிருந்து வில்லனூர் தாண்டி, பொன்னனூர் தாண்டி பிலாப்பட்டி போகவேண்டும். வழி பூராவிலும் காட்டுக் கருவேல் மரங்களைப் பார்க்கலாம், காக்காய் கத்துவதைக் கேட்கலாம். எதிர்ப்படுகிற ஆம்பிளைகள் முரட்டு மீசைகளோடு தெரிவார்கள். நிசப்தமான முள் காடுகளின் நடுவில் கரடு முரடான ஆம்பிளைகள் கறுப்புக் கறுப்பாயிருமுவது இந்திராவுக்குப் பீதியூட்டும். இரண்டு கண்மாய்கள், நான்கு ஊருணிகள் நஞ்சைகள் -- புஞ்சைகள் தாண்டிப் போகையில், எல்லாமே வெடித்து விரிவோடிக்கிடக்கும். இதில் இரண்டு சுடுகாடுகளைத் தாண்ட வேண்டும். கர்ப்பஸ்திரீகள் குடங்களோடு செல்கையில் மற்ற பெண்கள் ஓரங்களில் நடந்து சுடுகாட்டை மறைப்பார்களாம்.
மூணு மைல் தூரம் நடக்கவேண்டும் பிலாப்பட்டிக்கு. ஊருணிக்குப் பக்கமாயிருக்கிறது அந்த நல்ல தண்ணீர் கிணறு. ஊற ஊறத்தான் இறைக்கவேண்டும். மதியம் வரை பிலாப்பட்டி ஜனம் மட்டும் இறைத்துக்கொள்ளும். மதியத்துக்குமேல் வெளியூர் ஆள்களுக்கு விடுவார்கள்.
வண்டித் தண்ணி, சைக்கிள் தண்ணி அப்புறம்தான் இடுப்புக் குடத்துக்கு. ஏழூர் பெண்கள் இளசும் கிழடுமாகக் குடங்களை வைத்துக்கொண்டு வானத்தையும் வையத்தையும் வைதுகொண்டு நிற்பார்கள். மாட்டாஸ்பத்திரி திண்ணைதான் இவ்வளவு ஜனத்துக்கும் நிழலிடம். காய்ந்து கருவாடாகக் கிடந்து, ஒரு சொட்டு சிந்தாமல் நடந்து ஊர் திரும்பி, வீட்டுப் படியேறினால் பொழுது சாய்ந்துகொண்டிருக்கும்.
அம்மாதான் தினமும் பிலாப்பட்டிக்குப்போய் வந்து கொண்டிருந்தது. வயிற்றில் கட்டி வந்ததிலிருந்து இந்திரா குடத்தை எடுத்தாள். நாலு மாசத்துக்கு முன்தான் ரயில் நிலைய ஓரத்து வீடுகளில் இந்தப் பேச்சு வந்தது. 'ஒலகம் பூராவும் தண்ணில்லைன்னாலும் சரி, நாள் தவறாம ரயிலுக்கு மட்டும் எங்கெருந்தாவது கொண்டு வந்து ஊத்திவிட்டுருறான் பாரு. ' இப்படிப் பேசிப்பேசியே மூன்று மணிக்கு வரும் பாசஞ்சர் ரயிலைக் குறிவைத்துத் தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தார்கள்.
மூன்று மணி ரயிலுக்கு மதியம் பன்னிரண்டு மணிக்கே பெண்கள் வந்தார்கள். நிலையத்தின் இரண்டு வேப்பமரங்களினடியிலும் ஒரு சிமெண்டு பெஞ்சின் மீதும் அட்டவர்க்கமா உட்கார்ந்தார்கள். இடம்பிடிக்கும் தகராறுகள் இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு நடந்து ரயில் நிலலியம் ஒரு இரைச்சலான முச்சந்தியானது. ஊர்க்கதை, உலகக் கதைகள் எல்லையில்லாமல் பேசப்பட்டன. இந்திரா இந்த நேரங்களில் அதிகமாகக் கனவு கண்டாள். உள்ளூரில் எவனுக்கும் கழுத்தை நீட்டிவிடக் கூடாதென்றும் பிலாப்பட்டி மாதிரி தண்ணீருள்ள ஊர்களிலிருந்து பெண்கேட்டு வருவது மாதிரி கனவு காண்பாள்.
பிலாப்பட்டிக்கு நடந்துப்போய் தண்ணீர் தூக்கிவந்த ராத்திரிகளில், கால் வலியோடு விடிய விடியக் கிடந்திருக்கிறாள். நோவோ நோக்காடோ, பொம்பிளை பிலாப்பட்டி போயாக வேண்டும். தண்ணீர் கொண்டுவந்து சோறு பொங்கவேண்டும். குடிக்கக் கொடுக்கவேண்டும்.
இந்திரா மாதிரி அமைதியாக மற்ற பெண்கள் கனவு காணாமல் இடம்பிடிக்க அடிதடி சண்டைகளில் இறங்குவதையும் ரயில் நிலையமே அவர்கள் ஆதிக்கத்துக்குப் போய்க்கொண்டிருப்பதையும் ஸ்டேஷன் மாஸ்டர் விரும்பவில்லை. சிப்பந்திகளைக் கொண்டு ஒருநாள் வீடு வரை விரட்டினார். அன்று ஒரு பொட்டுத் தண்னீர்கூட ரயிலிலிருந்து யாராலும் கொண்டுபோகமுடியவில்லை.
பாய்ண்ட்ஸ்மேன் பக்கத்து ஊர்க்காரர். அவரை வைத்துப் பேசித்தான் இந்த ஏற்பாடு. ரயில் வரும்போதுதான் வரவேண்டும். வந்து சத்தம் போடக்கூடாது. தண்ணீர் கொஞ்சம்தான் பிடிக்க வேண்டும். இவற்றுக்குக் கட்டுப்பட்டு வருவதாகப் பேர்; சண்டை இன்னும் நாறிக்கொண்டுதானிருக்கிறது. எந்தச் சண்டை எப்படி நடந்தாலும் இந்தப் பெண்களுக்கு ஆறாத ஆச்சரியம் ஒன்று உண்டு. நம் ஊர் தண்ணீரை விட ஒசத்தியான தண்ணீர் ரயில் குழாயில் வரும்போது, ஏன் சில ரயில் பயணிகள் வெள்ளை வெள்ளை பாட்டில்களில் தண்ணீரைப் பதினைந்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் வாங்கி வைத்துக்கொண்டு திரிகிறார்களென்று.
சாயங்காலங்களில் எப்போதாவது இந்திரா கடைத் தெருவுக்குப் போகும்போது, டாக்கடை வாசல்களில் பார்த்திருக்கிறாள். இடுப்பில் மல்லு வேட்டியும் தோளில் வல்ல வேட்டுமாக ஒரு கிலோ ரெண்டுகிலோ மீசைகளோடு கனம் கனமான ஆம்பிளைகள் வானத்தை வில்லாக வளைக்கப் போவதாகப் பேசினார்கள். எல்லா நேரங்களிலும் பிலாப்பட்டிக்குப் போகும்போதுகூட பெண்கள் அடுத்த வீட்டுச் சங்கதிகளைக் காது மூக்கு வைத்துப் பேசினார்கள். ஊருக்கு உப்புத் தண்ணீரை நல்ல தண்ணீராக்கும் மிஷின் மட்டு வருகிற கூறையே காணோம்.
இந்திரா உள்ளங்கையை இன்னும் அழுத்திக் கொண்டிருந்தாள். தண்ணீர் சன்னமாக வந்தது குழாயில். பாதிக்குடம் கூட நிறையவில்லை. இன்ஜினிலிருந்து ஊதல் ஒலி வந்தது. அம்மா 'சொட்டுத் தண்ணியில்லை ' என்று முனகியது ஞாபகத்துக்கு வந்தது. சில நேரங்களில் இன்ஜினிலிருந்து ஊதல் ஒலி வந்தாலும் புறப்படத் தாமதமாகும். உள்ளங்கையில் ரத்தம் வரும்படி இன்னும் வேகமாகக் குழாயை அழுத்தினாள். ரயில் நகர்கிற மாதிரி இருந்தது. இன்னும் கொஞ்சம் மட்டிலும் பிடித்துக் குடத்தில் ஊற்றிவிட்டுக் குதித்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டே உள்ளங்கையை மேலும் அழுத்தினாள்.
ரயில் வேகம் அதிகரித்து பிளாட்பார முனை வருவது போலிருந்தது. படபடவென்று செம்பை எடுத்துக் குடத்தைப் பாதையில் வைத்துவிட்டுக் குதிக்கப் போனாள். முழங்கை வரை கண்ணாடி வளையல்களணிந்த ஒரு வடக்கத்திப் பெண் ஓடிவந்து இவளை இழுத்து வண்டிக்குள் தள்ளிவிட்டுக் கோபமாகக் கத்தினாள். மொழி புரியவில்லையென்றாலும், 'தற்கொலை பண்ணிக் கொள்ளவா பார்த்தாய் ? ' என்கிற மாதிரி ஒலித்தது.
சினை ஆட்டைப் பார்த்தபடி கணக்குப் போட்டுக்கொண்டிருந்த ஐயா காலாற கடைத் தெருவுக்குப் போனபோது சின்னவன் ஓடிவந்து இரைத்துக்கொண்டே சொன்னான்; 'ரயில் போயிருச்சு... அக்கா இன்னும் வரலை. ' ஐயா ரொம்ப சாதாரணமாகச் சொன்னார், 'எங்கெயாவது வாயளந்துகிட்டிருக்கும். போய் நல்லாப் பாருலெ. '
'நல்லாப் பாத்துட்டுத்தான் அம்மா சொல்லச் சொன்னுச்சு. '
லேசான பதட்டத்துடன் வீடு வந்தவரிடம் அம்மா படபடவென்று சொன்னாள். 'ஓடுங்க... அந்த ரயிலைப் பிடிங்க. எம்மக அதிலெதான் போயிட்டா. அடுத்த டேசன்ல பிடிங்க போங்க ' அண்ணன் வீடு, தம்பிவீடு, மச்சினன் வீடுகளிலிருந்துஆட்கள் ஓடி வந்தார்கள். நாலைந்து பேர் சேரவும் வேட்டிகளை மடித்துக் கட்டிக்கொண்டு மெயின் ரோட்டுக்கு ஓடினார்கள். இரண்டு பஸ்கள் போய் மூன்றாவதாக வந்த ராமநாதபுரம் பஸ்ஸில் ஏறியும் ஏறாமலுமாக கண்டக்டரிடம் கத்தினார்கள். 'பாசஞ்சர் ரயிலைப் பிடிப்பா... '
டிக்கெட் கொடுப்பதில் மும்முரமாயிருந்த கண்டக்டர், அதைச் சாதாரண முறையில் கேட்டுக்கொண்டு பதறாமலுமிருக்கவே ஐயாவின் மைத்துனர் பாய்ந்தார்... 'பொண்ணு ரயிலோட போயிருச்சுனு நாங்க ஈரக்குலையைப் பிடிச்சுக்கிட்டுக் கத்துறோம். சிணுங்காமக் கேட்டுக்கிட்டு நிக்கிறீரு. டிரைவர்ட்ட சொல்லுமய்யா, வேகமா ஓட்டச் சொல்லி... '
விவகாரம் வேண்டாமென்று கண்டக்டரும், 'வேகமாப் போங்கண்ணே ' என்று ஒப்புக்குச் சொல்லிவிட்டு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார். கும்பல், டிரைவரிடம் போய் கத்தியது. டிரைவர் விரட்டிக்கொண்டுபோய்ச் சேர்ந்தார்.
இவர்கள் போய்ச் சேர்ந்த போது ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஈ எறும்புகூட இல்லை. ஸ்டேஷன் மாஸ்டரிலிருந்து ஒவ்வொருவரிடமாக விசாரித்தார்கள். 'குடத்தோட ஒரு பொண்ணு எறங்குச்சா... ? 'வென்று. யாரும் பார்த்ததாகச் சொல்லவில்லை. போன ஆட்களில் குயுக்தியான ஒருவர் சொன்னார்; 'புள்ளைட்ட டிக்கெட் இல்லைங்கிறதனாலெ யாருக்கும் தெரியாம ஒளிஞ்சு ஒளிஞ்சு வெளியே போயிருக்கும்யா. '
ரயில் நிலையத்துக்கு வெளியே ஆட்டோ ஸ்டாண்ட், ரிக்ஷா ஸ்டாண்ட், சைக்கிள் கடை, பேக்கரி எல்லா இடங்களிலும் கேட்டார்கள். 'குடத்தோட ஒரு பொண்ணு இந்தப் பக்கமா போச்சா ? 'வென்று. ராமநாதபுரம் வடக்குத் தெருவில், அத்தை வண்டிக்காரத் தெருவில், சின்னம்மா வீடு, தெரிந்தவீடு, அறிந்தவீடு பூராவும் தேடிவிட்டு பஸ் ஸ்டாண்டுக்குப் போனார்கள். அந்த குயுக்திக்காரர் வெகு நம்பிக்கையாகச் சொன்னார். 'புள்ளைட்ட காசிருக்காது. இங்கெதான்யா நிக்கணும்... நம்மூர் ஆளுக யாரும் வருவாகளான்னு ' பால்கடை, பழக்கடை, டாக்கடையென்று ராமநாதபுரத்தையே சல்லடை போட்டு சலித்துப் பார்த்துவிட்டுக் கவலையும் அசதியுமாக ஆட்கள் ஊர் திரும்பினார்கள்.
வீட்டு வாசலில் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்த கூடத்தில் ஒருவர் 'மெட்ராஸ்உக்கே போயிருச்சோ புள்ளை ' என்று சந்தேகமெழுப்ப....ஐயா கத்தினார், 'ஒன் கழுத்தைக் கடிச்சு மென்னுபுருவேன்; பேசாம இரு ' ஐயா கூட போய்த் திரும்பிய ஆள்களில் ஒருவர் கூட்டத்தின் கவலையைக் கவனித்து விட்டுச் சொன்னார். 'நாம அடுத்தடுத்த ஸ்டேஷன்களுக்குப் போய் பார்த்திருக்கணும் எங்கெயாவது புள்ளை எறங்கி தெசை தெரியாம நிக்குதான்னு... இங்கெ உக்காந்து என்ன செய்யிறது ' '
அம்மாவுக்கு இந்தப் பேச்சுக்களைக் கேட்டுக் குமட்டலும் மயக்கமுமாய் வந்தது. இந்தக் கூட்டத்தில் யாரும் எட்டமுடியாத யோசனைக்குப் போய் பொருமிக்கொண்டும் வாயில் முந்தானையை அழுத்திக்கொண்டும் சொன்னாள், 'எம்புள்ளை எந்த ஊரு தண்டவாளத்திலெ விழுந்து கெடக்கோ ' அவளால் அடக்கமுடியவில்லை. அவளை யாரும் பிடித்து அடக்கவும் முடியவில்லை.
ஆவேசம் வந்தவள் போல் ரயில் நிலையத்துக்கு ஓடினாள். பின்னாலேயே ஐயாவும் ஊர் ஜனமும் ஓடியது. பொழுது இருட்டிக் கொண்டு வந்தது. அம்மா தண்டவாளத்தின் ஓரத்திலேயே ஓட ஆரம்பித்தாள். பத்தடி ஓடியதும் ஐயா, அம்மாவைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டுக் கூர்ந்து பார்த்தார். தூரத்தில் ஒரு உருவம் தெரிந்தது. நெருங்க நெருங்க அம்மாதான் முதலில் கத்தினாள். 'அந்தா, இந்திரா வருது. '
இடுப்பில் தண்ணீர்க் குடத்தோடு இந்திரா. கூட்டத்தருகில் வந்தாள். அம்மா நிறை பூரிப்பில் விம்மிக்கொண்டு போய்க் குடத்தை வாங்கினாள். நிறைகுடம், சொட்டு சிந்தாமல் கொண்டு வந்துவிட்டாள். மகள் வந்து சேர்ந்ததில் மலர்ந்துபோய் ஐயா கேட்டார்... 'பயமகளே.. இதையும் சொமந்துக்கிட்டா வரணும்; இத்தனை மைலுக்கும் ? '
இந்திரா சொன்னாள்.. 'ஊக்கும்.. நாளைக்கு வரை குடிக்க எங்கெ போறது ? '
******
நன்றி: திண்ணை

Nov 22, 2010

மைதானத்து மரங்கள் - கந்தர்வன்

    இவன் வீட்டை விட்டுத் திரும்பி நடந்தால் நூறடி தூரத்திலிருக்கிறது அந்த மைதானம். ஊரின் ஒரு கோடிக்கு ஒதுங்கி விட்ட இவன் வீட்டுக்கு ஒரே மரியாதை, அது அந்த மைதானத்திலிருக்கிறது என்பதுதான். புதியவர்கள் யாரும் இவனிடத்தில் வீட்டு முகவரி கேட்கும்போது இவன் இந்த மைதானத்தை அடையாளங் காட்டித்தான் சொல்லிக் கொள்வான். உலகத்தின் பெரிய பெரிய வாழ்க்கையிலிருந்தும் பெரிய பெரிய சம்பவங்களிலிருந்தும் இவன் ஒதுங்கி, ஒடுங்கியிருப்பது போல இந்த வீடும் நிசப்தத்தைத் திண்ணையில் விரித்துக்கொண்டு ஒடுங்கி ஒதுங்கிப் போயிருந்தது. அந்தப் பெரிய மைதானத்துக்கருகில் உள்ள வீடு என்பதால்  மைதானத்தின் கம்பீரம் லேசாய் வீட்டில் படிந்து இவன் குரலில் சில சமயங்களில் வெளிப்படும்.

    அம்மா கூடப்போய் பெண்கள் துறையில் குளிக்க வெட்கப்பட்டு அவளோடு சண்டை போட்டு kandharvan4 இவன் தன்னோடு சேர்த்துக் குஞ்சு குளுவான்களோடு ஊருணிக்கு குளிக்கப் புறப்பட்ட காலத்திலிருந்து இந்த மைதானத்தோடு இவனுக்கு ரகசிய சம்பந்தம் உண்டு. அப்பா அம்மா கைகளை உதறிவிட்டு இவன் தானே நடக்கத் துவங்கி, கைகளை வீசி நடந்து வந்ததே அருகிலிருந்த இந்த மைதானத்திற்குத்தான். அப்போதிலிருந்து இந்த மைதானந்தான் இவனுக்கு ஆதரவு.

    மதுரை செல்லும் சாலையின் ஓரத்தில் இந்த மைதானம் பரந்து கிடந்தது. மைதானத்தின் சிறப்பு அதன் பரப்பளவினால் வந்ததல்ல. அதன் இவ்வளவு மகிமைக்கும் காரணம் அதன் கிழக்கு மேற்கு ஓரங்களில் ஆஜானுபாகுவாய்க் கிளைகள் விரித்து நிற்கும் அந்தப் பெரிய பெரிய மரங்கள்தான். அவைகளைச் சாதாரணமாய் மரங்கள் என்றழைப்பதே சிறுமைப்படுத்தியதாகிவிடும். நெடுநெடுவென்று வளர்ந்து வீடுகள்போல் தூர்கட்டி மைதானத்து ஓரங்களைக் கருகருவென்று இருள் போர்த்திக்கொண்டு பூவும் பிஞ்சும் காயும் பழங்களுமாய் நிற்கும் அந்தப் புளிய மரங்களை ‘விருட்சங்கள்’ என்றுதான் யதார்த்தமாக சொல்லவேண்டும்.

    ஊர் நடுவேயுள்ள உயர்நிலைப் பள்ளியின் சொந்த விளையாட்டு மைதானம் இது. அந்தப் பள்ளியின் முற்றத்திலேயே ஒரு சிறிய மைதானமும் உண்டு.  இடைஇடையே வரும் விளையாட்டுப் பீரியட்களில் மட்டுமே அந்தச் சிறிய மைதானத்தில் விளையாட்டு நடக்கும். ஒரு வகுப்பிற்கு மதிய இடவேளைக்கு முந்திய கடைசி பீரியட், விளையாட்டு பீரியடாக இருந்தாலோ அல்லது மாலையில் கடைசி பீரியடாக இருந்தாலோ பையன்கள் வரிசையாய் நடந்துவந்து இந்தப் பெரிய மைதானத்தில்தான் விளையாடவேண்டும். விளையாடி முடித்து உடற்பயிற்சிக் கல்வி ஆசிரியர் கழுத்தில் தொங்கும் பிகிலை ஊதி வீடுகளுக்கு விரட்டும்போது எல்லா மாணவர்களும் ஊருக்குள் இருக்கும் தங்கள் வீடுகளுக்கு அலுப்புடன் நடப்பார்கள். மதிய இடைவேளையாயிருந்தால் அவசரமாய் ஓடுவார்கள். இவனுக்கு அப்போதெல்லாம் ரொம்பப் பெருமையாயிருக்கும். இவன் வீடு இதோ நாலு பாகத்தில் இருக்கிறது.

    இவன் மட்டும் ஆற அமர ஒவ்வொரு மரமாய் ஓடி ஒடித் தொட்டுவிட்டு மைதானம் காலியானதும் ஒண்டியாய் நின்று இங்குள்ள எல்லாமே இவன் கவனிப்பில், மேற்பார்வையில் நடப்பதுபோல் காலி மைதானத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வீட்டிற்குப் போவான்.

    வெயில் தணிந்ததும் அப்போது புழக்கத்திலிருக்கும் கிட்டியோ பம்பரமோ கோலியோ எடுத்துக்கொண்டு மறுபடியும் மைதானத்திற்கு வருவான். ஆங்காங்கிருந்து ஒரு ஜமா சேர்ந்துவிடும். குழுக்களாகப் பிரிந்து விளையாட்டுத் துவங்கும். விளையாட்டின் போது எவ்வளவு கத்தினாலும் சத்தம் மைதானத்தை விட்டு வெளியே போகாது. மைதானமே சப்தங்களே விழுங்கிவிடும். இரண்டுபேர் மூன்று பேராக இளவட்டங்களும் வயசாளிகளும் வந்து மர நிழல்களில் உட்கார்ந்து ஊர்க்கதைகளைப் பேசுவார்கள். தனி ஆட்களாய் கண்ணிலுள்ள சோகத்தையெல்லாம் மைதானத்தில் பாய்ச்சிக்கொண்டு குத்துப்பார்வைகளோடு சிலர் உட்கார்ந்திருப்பார்கள்.

    சாலையைத் தாண்டிப் பச்சைக் காடாய்க் கிடக்கும் வயல் ஓரங்களில் மாடு மேய்க்க வரும் சிறிசுகள் முறைபோட்டுக்கொண்டு, சிலர் மாடுகளைப் பார்த்துக்கொண்டு மைதான மரப் பாதங்களில் வீடமைத்து ஆடுபுலி, தாயம் எல்லாம் ஆடுவார்கள். கந்தலும் பரட்டையுமாய் அவர்கள் ஒரு ஒதுங்கிப்போன மரத்தடியை எப்போதைக்குமாய் எடுத்துக்கொண்டார்கள். எவ்வளவோ காலம் ஆயிற்று அவர்கள் அந்த மரத்தடியை எடுத்துக்கொண்டு. காடு மாறிப் பொழப்பு மாறி எவ்வளவோ பேர் போய்விட்டார்கள். எண்ணிக்கையில் குறைவுபடாமல் புதிது புதிதாகவும் வருகிறார்கள். கந்தலும் பரட்டையும் மாறவில்லை. அவர்கள் பிடித்துக் கொண்டிருந்த மரத்தையும் மாற்றிக்கொள்ளவில்லை. விடிகாலைப் பொழுதில் கூட்டிப் பெருக்கி பளிச்சென்றிருக்கும்  வீட்டு முற்றம்போல்  எல்லாக் காலத்திலும் அந்த மரத்தடி மட்டும் சுத்தமாயிருக்கும். அடுத்தடுத்த மரத்தடிகளில் வெள்ளையுஞ் சுள்ளையுமாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களிடம் அஞ்சிக்கொண்டே விளையாடும் அந்த மாடு மேய்ப்பிகள் சப்தக் குறைவோடுதான் சம்பாஷித்துக் கொள்வார்கள்.

    கொஞ்சகாலம் முன்பு வரை இளவட்டங்கள் கூட்டமாக வந்து கேந்திரமான மரத்தடிகளில் உட்காருவார்கள். கண்டகண்ட பெண்களைப் பற்றியெல்லாம் அவர்கள் கதையளந்து கொண்டிருப்பார்கள். அவர்களெல்லாம் கல்யாணம் முடிந்து மனைவிகளுக்குக் கட்டுப்பட்டு வீடுகளில் முடங்கியிருப்பார்கள் போலும்! அந்த முகங்களில் ஒன்றிரண்டைத் தவிர அநேகம் பேரை இப்போதெல்லாம் இந்த மரத்தடிகளில் காண முடிவதில்லை. இப்போது வரும் இளவட்டங்கள் வந்து உட்கார்ந்தவுடன் அமர்க்களமாய்ப் பேசத்துவங்கினாலும் நேரம் ஆக ஆக சோகங்களையே பரிமாறிக் கொள்கிறார்கள். தூரத்துப் பட்டணங்களும், கை நிறையச் சம்பளம் வரும் உத்தியோகங்களும் நாதஸ்வரம் முழங்கக் கல்யாண ஊர்வலங்களும் அவர்களின் ஏக்கம் போலும். அவர்கள் ஒவ்வொரு நாளும் விட்டுச் செல்லும் பெரு மூச்சுகள் மரத்தடிகளைத் தாண்டி மைதானமெங்கும் விரிந்து செல்லும்.

    இவன் சிறுபிள்ளையாயிருந்தபோது மைதானத்து மரத்தடிகளில் அதிகமாய் உட்கார்ந்ததே இல்லை. இவனைக் கவர்ச்சித்ததெல்லாம் சூரியனை நேராகப் பார்த்துக் கிடந்த அந்த மைதான வெளிதான். மரத்தடி என்பது உட்காருபவர்களுக்குண்டானது. இவனால் அந்த வயதில் வாலைச் சுருட்டிக்கொண்டு ஐந்து நிமிடங்கள் கூடத் தொடர்ந்து ஒரு இடத்தில் உட்கார முடியாது. மைதான வெளியிலென்றால் ஆடிக்கொண்டேயிருக்கலாம். ஓடிக்கொண்டேயிருக்கலாம்.
    ஒவ்வொரு சமயம் விளையாட்டு உச்சத்திலிருக்கையில் மரத்தடியிலிருந்து ‘அப்படிப் போடுரா சபாசு’ என்ற உற்சாகக் குரல்கள் சிறுவர்களை எட்டும். அந்த நாட்களில் அவர்களின் அடுத்தடுத்த ஏவல் குரல்களுக்காகவும் உற்சாக ஒலிகளுக்காகவும் ஆட்டம் தூள்படும். இறங்கு வெயில், மஞ்சள் வெயில், லேசிருட்டு என்ற பொழுது மாற்றங்கள் ஆட்ட மும்முரத்தில் புத்திக்கு உறைக்காது. இருட்டுக் கனமாகி கனமாகி அடித்த கிட்டிப்பிள்ளையைத் தேடமுடியாமற் போனாலும் உருண்ட கோலிகளைக் குனிந்து குனிந்து கண்களை இடுக்கி இடுக்கிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியாமற் போனாலும் ஆட்டத்தை மாற்றி வேறு விளையாட்டில் முனைவார்கள். கடைசியாய் ஓடி வருவது தெரியாமல் முட்டி மோதி எதிரே வருபவனை பெயர் மாற்றிக் கூப்பிட்டு எல்லோரும் அதற்காக ஓவென்று சிரித்து அந்தச் சிரிப்புகளிலும் அயர்ச்சி வந்து அப்புறந்தான் அந்த மைதான வெளியில் ஆட்டபாட்டங்கள் முடியும்.

******
    இவன் எட்டாம் வகுப்பு படிக்கையில்தான் முதன் முறையாக மைதான வெளியிலிருந்து ஒதுங்கி மரத்தடியில் உட்கார்ந்தான். அன்று அவன் காலையில் பள்ளிக்கூடம் போய் இறைவணக்கம் முடிந்து வரிசையில் வந்து வகுப்பில் உட்கார்ந்தான். ஆங்கிலம்தான் முதல் பீரியட். ஆங்கில ஆசிரியர்தான் வகுப்பாசிரியர். வெள்ளை பேண்ட்டும் வெள்ளை சட்டையும் வெள்ளை மனசுமாய் மிகுந்த கவர்ச்சியோடிருப்பார். வகுப்பிற்குள் நுழையும்போதே ஒரு காகிதத்தைக் கொண்டு வந்தார். அவர் முகத்தில் கவலை நிறைந்திருந்தது. நாற்காலியில் உட்காரு முன்பே அதைப் பார்த்துப் படிக்க ஆரம்பித்தார். “ இன்னும் ஸ்கூல் பீஸ் கட்டாதவர்கள் வகுப்பை விட்டு வெளியேற வேண்டும். பீஸ் கட்டி ரசீது வாங்கிக்கொண்டுதான் உள்ளே வரவேண்டும். இந்த வகுப்பில் இன்னும் பீஸ் கட்டாதவர்கள் ராகவன், முத்து...” அடுத்தடுத்த பெயர்கள் அவன் காதில் விழவில்லை. ‘முத்து... முத்து... முத்து...’ என்றுதான் எல்லாமே இவன் காதில் விழுந்தன.

அம்மாதான் வீட்டிலிருப்பாள். அப்பா வேலைக்குப் போயிருப்பார். ஆதீன ஆபிஸ் நாற்காலியைத் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். பத்து நாளாய்ப் பன்னிப் பன்னிச் சொல்லியும் ‘இந்தா தாரேன், அந்தா தாரேன்’ என்று சொல்லிக்கொண்டே தினமும் ஓடிவிடுகிறார். அம்மாவோடு சண்டை போட்டுப் புண்ணியமில்லை. அஞ்சறைப் பெட்டியைத் தடவிப் பார்த்துவிட்டு மஞ்சள் சீரகம் இல்லையென்றாலும், சீசாவைப் பார்த்துவிட்டு எண்ணெய் இல்லையென்றாலும், தம்பி தங்கைகள் நேரங்கெட்ட நேரத்தில் ‘பசிக்கிறது’ என்றாலும் “என்னைக் கொண்டுக்கிட்டு சீக்கிரம் போயிரு ஈஸ்வரா” என்றுதான் குரலெடுப்பாள். அவளிடம் இப்போதுபோய் பீஸ் கட்டப் பணம் கேட்டால் அவள் மறுபடி ஒருமுறை “என்னைக் கொண்டுக்கிட்டு சீக்கிரம் போயிரு ஈஸ்வரா” என்று குரலெடுப்பதைத் தவிர பீஸ் கட்டச்சொல்லிக் கொடுக்க அவளிடம் எதுவும் இருக்காது. அலுவலகத்திற்குப்போய் அப்பாவைக் கேட்கலாமென்றால் எரிந்து விழுவதைத் தவிர அவரும் உடனடியாக எதையும் ஏற்பாடு செய்துவிட மாட்டார்.

    அவன் அன்றுதான் மைதான வெளியை மறந்துவிட்டு மரத்தடியில் உட்கார்ந்து மைதானத்தை வெறித்து நோக்கினான். ஆங்காங்கு சில மரத்தடிகளில் அந்த வெயில் நேரத்தில் ஒன்றிரண்டுபேர் உட்கார்ந்திருந்தார்கள். வேளை கெட்ட வேளைகளில் இப்படி வந்து உட்காருபவர்கள் உளைச்சல் தாளாமல்தான் வருகிறார்கள் என்பது அவனுக்கு அருவலாய்ப்பட்டது. வகுப்பில்பட்ட அவமானம் இவன் உடலை நடுக்கியது. இவனால் செய்யக்கூடியது அப்போதைக்கு வேறெதுவுமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. வகுப்பை விட்டு வெளியே வருகையில் மாணவர்கள் இரக்கத்தோடு பார்த்த பார்வைகள் இன்னும் இவன் உடல் முழுதும் ஈக்களாய், எறும்புகளாய் மொய்த்துக் கிடந்தன. உக்கிப்போய் உட்கார்ந்திருந்தான்.

    சாலைகளும் மைதான வெளியும் ஊர் முழுவதும் வெயிலின் உக்கிரத்தில் கொப்பளித்துக் கொண்டிருக்கையில் உடல் நடுங்கி இவன் உட்கார்ந்த இந்த மரத்தடி மட்டும் இளங்காற்றுச் சிலுசிலுப்பும் இதமான நிழலுமாய் குளுகுளுவென்றிருந்தது. நெடுநேரம் அப்படியே சிலையாயிருந்தான். இந்தச் சிலுசிலுப்பும் குளுமையும் இவனின் மனப்பாரத்தை லேசு லேசாய் கரைத்துவிட்டன. இவன் மரத்தடியிலிருந்து எழுந்தபோது குழப்பமும் நடுக்கமும் குறைந்திருந்தன.

    இதன்பின் மைதான வெளியில் இவன் குறைவாகவே விளையாடினான். ஒவ்வொன்றாய் இவனைத் தாக்கிய ஒவ்வொரு அடிக்கும் மரத்தடியே இவனுக்கு மருத்துவமனையானது. படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் சில வருஷங்கள் எல்லாப் பொழுதுகளிலும் இவன் இந்த மரத்தடிகலிலேயே ரணங்களோடு கிடந்து எழுந்தான். இவன் தகப்பனார் காலமானதும் பண்டார சந்நிதிகளின் காலில் விழுந்து ஆதினத்திலேயே ஆகக் குறைந்த சம்பளத்தில் நாற்காலி தேய்க்கும் வேலையை வாங்கினான்.

    கல்யாணமாகிப் பிள்ளைகள் வந்து கூடவே தம்பி தங்கைகள் என்று இவன் சுமை அதிகரித்து ஒரு பழைய செல்லரித்துப்போன கப்பலாய் மாறிப்போனான். மனைவி, பிள்ளைகள், தம்பி, தங்கைகள் எல்லோருடைய தேவைகளுக்காகவும் நடக்கும் போராட்டங்கள் இவனை எதிரியாக்கியே நடந்தன. அப்போதும் இவன் அந்தச் சிலுசிலுவென்றும் குளுகுளுவென்றுமிருந்த மரத்தடிகளிலேயே மருந்து வாங்கித் தேய்த்துவிட்டான்.

    இந்தத் தேவைகளுக்காகவும் வேறு எதற்காகவுமோ ஊரில் எப்போதும் ஊர்வலங்கள் கூட்டங்களெல்லாம் நடக்கின்றன. அடிதடி ரகளையெல்லாம் நடக்கின்றன. இவனுக்கு அதிலெல்லாம் நாட்டமில்லை. சின்னசின்ன இலைகள் கூடி இவனுக்காகவே அமைத்தது போன்ற அந்த மரப்பந்தலின் கீழ் இவன் தன் அவலங்களையும் துக்கங்களையும் மறைத்துக் கொண்டான். அக்கம் பக்கத்தில் சொல்வார்கள், “ முத்துக்கு இந்த மைதானத்திலே பாதியாவது பள்ளிக்கூடக்காரக குடுத்திரணும். அனுபவ பாத்தியதைனு வந்தா பள்ளிக்கூடப் புள்ளைகளை விட இவந்தான் ரொம்ப இதை அனுபவிச்சுட்டான்.”

    இவன் மனைவி மட்டும் உக்கிரமான சண்டைகளுக்குப் பின் ஒவ்வொரு சமயம் இப்படிச்சொல்வாள், “ஆச்சு, எல்லாஞ் சொல்லி நானும் நாக்கைப் புடுங்கிக்கிட்டு சாகுறாப்பலே கேட்டுப்பிட்டேன். என்னடா இப்படி ஒரு பொம்பளை கேட்டுப்புட்டாளேனு ரோசம் வந்து நாலு பேருகிட்டப்போயிப் பாத்தடிச்சு செய்வோம்னு நல்ல ஆம்பிளையினா தோணனும். இங்க அதெல்லாம் தோணாது. சண்டை ஆச்சுன்னா சாமியார் மாதிரி மரத்தடிக்கு ஓடிற்றது. இருட்டினதும் சம்சாரின்னு ஞாபகம் வந்து இந்தக் கூட்டுக்குள்ள வந்து மொடங்கிக்கிறது. இப்படி வெவஸ்தை கெட்டுப் போயித் திரியுறதுக்குப் பதிலா அந்த மரத்துங்கள்ள ஒண்ணுல தூக்குப்போட்டுத் தொங்கலாம்”. இப்படிக் கேட்டவுடன் இவனுக்குக் கை பரபரவென்று வரும். முகமும் கண்களும் நடுங்கிச் சிவந்து அவளை இழுத்து நாலு சாத்து சாத்திவிட்டு மரத்தடிக்குப் போய் வருவான்.

    அன்று இவன் அலுவலகத்திலிருந்து சீக்கிரமாகவே வந்துவிட்டான். கடைசிப் பையன் அழுதுகொண்டிருந்தான். அவனைச் சமாதானப்படுத்திக் கையில் பிடித்துக் கொண்டு பொழுது இருட்டும் வேளையில் அவன் மைதானத்திற்குள் நுழைந்தபோது கண்ட நிகழ்ச்சியில் அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டான். மைதானமெங்கும் நின்ற பதினைந்து இருபது மரங்களில் ஏழெட்டு வெட்டப்பட்டு சாலைவரை புரண்டு கிடந்தன. கர்ப்ப ஸ்தீரிகள் சாய்ந்து மல்லாக்க விழுந்து கிடப்பதுபோல் அவை கிடந்து இவனைப் பரிதவிக்க வைத்தன. கோடாரிகளோடும் ரம்பங்களோடும் ஏராளமான ஆட்கள் விழுந்துகிடந்த மரங்களைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். லாரிகளில் செங்கற்கள் வந்து மைதானத்தின் பல இடங்களில் இறக்கிக்கொண்டிருந்தனர்.

    இவனைப் போலவே அங்கே தினமும் வரும் பலரும் கவலை படிந்த கண்களோடு இவனுக்கு முன்னமேயே அங்கு வந்து நின்று மேலும் கவலையாகி நிற்பதைப் பார்த்தான். மாடு மேய்க்கும் சிறுசுகள் கந்தல்களோடும் பரட்டையோடும் கன்னங்களில் கையை வைத்து வேதனையோடு வேடிக்கை பார்த்தன. மெதுவாய்ப் போய் ஒருவரிடம் இவன் கேட்டான். “என்ன ஆச்சு? ஏன் இப்படித் திடீர்னு எல்லாத்தையும் வெட்டுறாக?” கொப்பும் கொலையுமாய்க் கிடந்த அந்தப் பச்சைப் பூதங்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி அவர் சொன்னார் “கனா மூனா இந்த இடத்தைப் பள்ளிக்கூடத்துக்காரக கிட்டேயிருந்து வாங்கிப்பிட்டாக. இதுக்குப் பதிலா பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துலெ உள்ள அவரு காலி இடத்தைக் கொடுத்திட்டாராம். இதிலே சினிமாக் கொட்டகை கட்டப்போறாக. கதவு நெலைக்கெல்லாம் இந்த மரங்கதான்.”

    மைதானம் அலங்கோலமாகிவிட்டது. வெட்டுப்பட்ட மரங்களிலிருந்து வந்த பச்சைக் கவிச்சியும் மரவாசனையும் காற்று முழுதும் வியாபித்துக்கிடந்தது. இன்னும் வெட்டப்படாத மரங்களைச் சுற்றித் தூரைத் தோண்டுவதும் வெட்டுப்பட்ட மரங்களை ரம்பங்களால் அறுப்பதுவும் மும்முரமாய் நடந்துகொண்டிருந்தன. இரண்டு மூன்று பெட்ரோமாக்ஸ் விளக்குகள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. பகிரங்கமாய் அங்குக் கொலைகள் நடந்து கொண்டிருப்பதாகவே இவனுக்குப்பட்டது. பாதம் முதல் தலை வரை உலுக்கியது. இவன் கவலைகளை இனி யார் வாங்குவார்கள்? மரங்கள் மழையை வருவிக்கும் என்று இவனுக்குத் தெரியும். இந்த மரக்கொலைகள் இவன் கண்களிலும் அப்படியே மழையை வரவைத்துவிட்டன. எல்லா அடிகளையும் வாங்கிகொண்டு இவன் உன்மத்தன்போல் இந்த மரத்தடிகளில் உட்கார்ந்திருந்தானே தவிர ஒரு நாளும் கண்ணீர் விட்டு அழுததில்லை. அன்றைக்கு முதன்முறையாகப் பொருமிப் பொருமி அழுதான். கைப்பிடியில் சிக்கி நின்ற குழந்தை ஒன்றும்புரியாமல் தகப்பனின் கேவலைக் கண்டு அதுவும் ஓவென்று மைதானமெங்கும் கேட்கும்படி அழுதது.

    இருட்டி வெகு நேரங்கழித்து வீட்டிற்கு வந்தான். உள்ளே நுழைந்ததும் மனைவி சொன்னாள், “இனி மேலாச்சும் ஊருலெ ஒவ்வொருத்தரும், நம்மளைப்போல எப்படிக் கஷ்டப்படுறாகன்னு நடந்து திரிஞ்சு பாருங்க”. 

    மறுநாள் பொழுது சாய்ந்த வேளையில் இவன் மைதான ஓரச்சாலை வழியாக ஊருக்குள் தன்னையொத்த ஜனங்களைத் தேடிப்பார்க்க முதன் முறையாய்க் கையை வீசி நடந்துகொண்டிருந்தான். மைதானத்தை ஒட்டிய ஓரங்களில் கண்டும் முண்டுமாய்த் துண்டுபட்ட மரங்கள் உயிரற்றுக்கிடந்தன. இவன் உயிரோடு அவைகளைத் தாண்டி தாண்டி நடந்தான்.

Oct 9, 2010

கதை - கந்தர்வன்

மரியம்மா டீச்சர் வீடு ஒன்றுதான் இந்த ஊரிலேயே வேதக்கார வீடு. டீச்சருக்கு இது ஒன்றும் சொந்த ஊரில்லை. பக்கமாயிருக்கும் கிடாரத்திலிருந்து பெரிய ஸாரும் மரியம்மா டீச்சரும் புருஷன் பெஞ்சாதியாய் இங்கு வேலைக்குவந்தவர்கள்தான். கிடாரம் ஊரே வேதக்கார ஊராம். பெரிய ஸாருக்கு அவ்வளவாய் வேதக்கார வழக்கமெல்லாம் பிடிக்காது. இந்த ஆள்களா உள்ள ஊரில் பள்ளிக்கூடம் நடத்தவேண்டியிருந்தாலோ என்னவோ ஸார் ரொம்ப நீக்குப் போக்காயிருப்பார். ஆனால் இந்த மரியம்மா டீச்சர்தான் மூச்சுக்கு முன்னூறு முறை ‘கர்த்தரே கர்த்தkantharvanரே’ என்று சொல்லிக்கொண்டு கிடக்கும்.

பள்ளிக்கூடத்தில் இன்னொரு ஸார் சின்ன ஸார். இந்து ஆள்தான். ஆனால் ஒரு மூலைக்கு ஒதுங்கிவிட்டவர். பள்ளிக்கூடத்தில் பெரிய ஸாருக்கும் மேல் மரியம்மா டீச்சரின் சத்தம்தான்  ஹோஹோவென்று கேட்கும்.

அடிக்கடி ஒரு ஆள் வெள்ளைக்கவுன் போட்டு எந்த ஊரிலிருந்தோ மரியம்மா டீச்சர் வீட்டிற்கு வருவார். ஊர்ப்புள்ளைகள் எல்லாம் அதிசயமாய் அவரைப் பார்த்துக்கொண்டே பின்னால் நடந்து வரும்கள். புள்ளைகள் கிளப்பிவிடும் புழுதிக்கு மத்தியில் அவர் நடந்து வருவதைப் பார்க்க மரியம்மா டீச்சர் ரொம்ப அவமானப்படும். புள்ளைகள் மேல் கோபங்கொண்டு கத்தும். அவரை வீட்டில் வைத்து ரொம்ப உபசரிக்கும். பெரிய ஸார் ஏதாவது ஒப்புக்கு அவரிடம் பேசிவிட்டுப்போவார்.

மரியம்மா டீச்சர் வீடு மாதிரி இந்த ஊரிலேயே ஒரு வீடும் இல்லை. பூப்பூவாய் போட்ட திரை தொங்கும். உள்ளே முக்காலியில் காகிதப்பூ சொருகி ஒரு ஜாடி இருக்கும். பாசிகளைக் கோந்தில் ஒட்டி படம் தொங்கும். வீடு பூராவிலும் ஒரு மாதிரி வாசனை இருக்கும். ஒன்னொண்ணும் வித்தியாசந்தான் மரியம்மா டீச்சர் வீட்டில்.

தீபாவளி அன்றைக்கு இந்த ஊரிலேயே மரியம்மா டீச்சர் வீடு ஒன்றில்தான் கருப்பட்டி தோசை சுடமாட்டார்கள். புள்ளைகளின் இம்சை பொறுக்கமாட்டாமல் பொம்பிளைகள் தீபாவளிப் பலகாரம் கொண்டுபோய் மரியம்மா டீச்சரிடம் கொடுப்பார்கள். சிரித்துக்கொண்டே வாங்கி வாங்கி அறைவீட்டு மூலையில் வைத்துக்கொள்ளும். கையால்கூட அந்தப் பலகாரங்களை தொடாது. அரை ஆள் உயரத்திற்கு ஒரு நாய் வளர்க்கும். அதற்கும்கூட அந்தப் பலகாரங்களைப் போடாது. காச்சு மூச்சென்று பலசாதிப் பிச்சைக்காரர்கள் தீபாவளி அன்றைக்கு தகர டின்களோடும் அலுமினியத் தட்டுக்களோடும் வருவார்கள். அப்படியே தூக்கி அந்த ஆள்களிடம் கொட்டிவிடும். சாமி கும்பிடும்போது இந்த பலகாரங்களையும் வைத்துக் கும்பிட்டுத்தான் பொம்பளைகள் கொண்டு வந்திருப்பார்களாம். மரியம்மா டீச்சரிடம் கிடந்து வளர்வதால் அந்த வீட்டு நாய்க்குக் கூட தோஷம் வரக்கூடாதாம்.

பள்ளிக்கு வைக்கையில் புள்ளைகளும் தாய்தகப்பன்களும் காப்பரிசி தேங்காய் எல்லாம் கொண்டு வருவார்கள். பெரிய ஸார் புள்ளை கையைப்பிடித்து ஓம் என்று எழுத வைப்பார். புள்ளைகள் எல்லாம் எழுந்து நின்று ‘கைத்தலம் நிறைகனி’ என்று பாடும்கள். பாடி முடித்ததும் புள்ளையைப் பெத்த தகப்பன் இடுப்பில் துண்டு கட்டிக் கனிந்து சின்னசாரிடமும் மரியம்மா டீச்சரிடமும் காப்பரிசியைக் கொடுப்பார். சின்ன ஸார் வாயெல்லாம் பல்லாக வாங்கிக்கொள்வார். ஒரு குத்தை அள்ளிப்போட்டுக் கொண்டே மிச்சத்தைப் பொட்டணம் கட்டிக்கொள்வார். மரியம்மா டீச்சர் மட்டும் வாங்கிப் பக்கத்தில் வைத்துக்கொள்ளும். பள்ளிக்கூடத்தில் விடப்பட்ட பிள்ளை காரை பெயர்ந்து கிடக்கும் பள்ளிக்கூடக் கட்டிடத்தையும் புள்ளைகள் கூட்டத்தையும் வாத்திமார்க் கைப்பிரம்பையும் பார்த்துவிட்டு வெறித்துக்கொண்டு அழுது அழுது மூக்கெல்லாம் சளியோட நிற்கும். அதன் கைகளிலிருந்து தகப்பன் தன் கையைப் பிய்த்து எடுத்துக்கொண்டே ‘புள்ளைக்கு இனிமே நீங்கதான் பொறுப்பு’ என்று வாத்திமாரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போனதும் மரியம்மா டீச்சர் சட்டாம்புள்ளையைக் கூப்பிடும். காப்பரிசியை எடுத்து எல்லாப் புள்ளைகளுக்கும் கொடுத்துவிடச் சொல்லும். சாமி கும்பிட்ட அரிசியானதால் விரலால்கூட அதைத்தொடாது மரியம்மா டீச்சர்.

மரியம்மா டீச்சருக்கு ஒரே ஒரு மகன். முந்தி இந்தப் பள்ளிக்கூடத்தில்தான் படித்துக் கொண்டிருந்தான். அப்புறம் பெரிய படிப்பு படிக்க ராமநாதபுரம் போய் விட்டான். அதிலிருந்து டீச்சருக்குப் பெரியகுறை. ‘‘இந்தப் பள்ளிக்கூடம் பூராவிலும் ஒருபுள்ளைகூட வேதக்காரப்புள்ளை இல்லையே’’ என்று ஓயாமல் வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருக்கும்.

ஒரு சனிக்கிழமை மத்தியானம் இருக்கும். அன்றைக்கு பள்ளிக்கூடம்தான். புள்ளைகள் எல்லாம் பசி மயக்கதிலிருந்தார்கள். அப்போது மரியம்மா டீச்சர், எல்லாப்புள்ளைகளையும் கூட்டி வைத்துக் கொண்டு சொன்னது. ‘‘நாளைக்கு மத்தியானம் யார் யாருக்கு இஷ்டமோ அவுகள்ளாம் பள்ளிக்கூடத்துக்கு வந்தா நல்ல நல்ல கதையெல்லாம் சொல்வேன். யார் யார்யெல்லாம் ஒழுங்கா கதை கேக்க வர்ராகளோ அவுகளுக்கெல்லாம் கிறிஸ்மஸுக்கு மொத நாள் நல்ல நல்ல பிரைஸ் கொடுப்பேன். எல்லா ஞாயித்துக்கிழமையிலும் கதை கேக்க வர்ரேங்கிற புள்ளைக மட்டும் உயர்த்துங்க.’’

‘‘ஞாயித்துக்கிழமை மத்தியான வெயிலில்தான் புள்ளைகளுக்கு ஏராளமான சோலிகள். கிழடுகளிடமிருந்து பொடிமட்டையை அபேஸ் செய்துகொண்டு வந்து கம்பும் கையுமாய் அலைந்து புதர்களில் ஒதுங்கும் ஓணானை அடித்து அதன் வாய் தலையெல்லாம் பொடியைத் தூவி அது தலைசுற்றிப் பேயாடுவதைப் பார்ப்பதைவிடவும் சந்தோசம் வேறெதிலும் இருப்பதில்லை. வீட்டிலிருந்து மிளகாய் உப்புத் திருடி நுணுக்கி வைத்துக்கொண்டு புளியமரத்திலேறி பிஞ்சு பிஞ்சுக் கொறடுகளாய்ப்பறித்து வந்து நாக்குப் பொத்து போகும் வரை தொட்டுத் தொட்டுத்தின்பதில் உள்ள ருசி வேறெதிலும் இருப்பதில்லை.

மரியம்மா டீச்சர் யார் யார் ஞாயித்துக்கிழமை கதை கேக்க வருவீர்கள் என்று கேட்டதும் எல்லாப்புள்ளைகளுக்கும் இந்த சொகங்களும் ருசிகளும் ஞாபகத்தில் வந்து கம்மென்று இருந்தன. டீச்சர் ஓரிரு முறை அதட்டியதும் திருதிருவென்று முழித்தன. மரியம்மா டீச்சருக்குப் பக்கத்தில் நின்ற புள்ளைகளில் ஒண்ணு ரெண்டு டீச்சர் முகத்தைப் பார்த்தபடியே கைகளைத் தூக்கியதும் நெறையக் கைகள் பிரைஸ் கேட்டு உயர்ந்து நின்றன.

மறுநாள் ஞாயித்துக்கிழமை மத்தியானம் பள்ளிக்கூட மைதானமெல்லாம் வெயிலில் மொறு மொறுத்துக் கொண்டிருக்கையில் மரியம்மா டீச்சர் பவுடர் பூசி பச்சுப் பச்சென்று பள்ளிக்கூடத்திற்குள் வந்தது. இருபது புள்ளைகள் வரை வந்திருந்தன. பள்ளிக்கூடம் இல்லாத நாளில் பள்ளிக்கூடத்திற்கு வந்து எல்லா வகுப்புகளும் ஓவென்று வெறிச்சோடிக்கிடந்ததைப் பார்த்த கிளுகிளுப்பிலும் என்னென்ன வெல்லாமோ கதைகளைக் கேட்கப்போகிறோம் என்ற உற்சாகத்திலும் புள்ளைகள் காச்சுமூச்சென்று கத்திக்கொண்டு கிடந்தன. மரியம்மா டீச்சர் செருப்பைக் கழற்றிக்கொண்டே முகம் பூராவும் சிரிப்பாய் பிள்ளைகளைப் பார்த்தது.

பள்ளிக்கூடத்திற்குப் பின்புறத்தில் தோட்டத்திற்குப் பக்கத்தில் ஒரு தாழ்வாரம் உண்டு. தோட்டத்து வேப்பமரம் அந்த வகுப்பறைமேல் வளைந்து படர்ந்து கிடக்கும். எப்படி ஒறைக்கும் வெய்யிலுக்கும் அந்த இடம் மட்டும் சிலுசிலுவென்றிருக்கும். மரியம்மா டீச்சர் புள்ளைகளையெல்லாம் கூட்டிக்கொண்டு அங்கே போனது. அஞ்சாப்புச் சட்டாம்பிள்ளை போய் ஒரு நாற்காலியை கொண்டுவந்து போட்டான். அன்றைக்கே பிரைஸ் வாங்கப்போவது போல் புள்ளைகள் எல்லாம் அடக்க சடக்கமாய் உட்கார்ந்துகொண்டது.

மரியம்மா டீச்சர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு சொன்னது : ‘‘இன்றைக்கு வந்திருக்கும் புள்ளைகள்தான் ரொம்ப நல்ல புள்ளைகள், நீங்கள் விரும்பியவைகளை கர்த்தர் கொடுப்பார். இன்றையிலிருந்து நீங்கள்ளாம் கர்த்தரின் புள்ளைகள். நமக்கு வேண்டியவைகளை யெல்லாம் நாம் கர்த்தரிடம் கேட்போம். எல்லோரும் மண்டியிடுங்கள்’’ என்று கூறிக்கொண்டே மரியம்மா டீச்சர் நாற்காலியிலிருந்து எழுந்து முழங்காலை மடித்து இரண்டு கைகளையும் ஏந்திக்கொண்டு பேச ஆரம்பித்து.

மரியம்மா டீச்சர் கைகளை ஏந்திக்கொண்டு மண்டி போட்டதைப் பார்த்த புள்ளைகளுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. டீச்சரே பிரைஸ் கேட்டு யார் முன்னாலேயோ மன்றாடுவது போல் முதலில் தெரிந்தாலும் எல்லாப்புள்ளைகளும் திருதிருவென்று முழித்தன. முதலில் அஞ்சாப்புச் சட்டாம்பிள்ளைதான் மண்டிபோட்டு டீச்சரைப்போலவே கைகளை விரித்து பிரைஸ் கேட்டான். அந்தப்பயல் இருந்த கோலத்தைப் பார்க்கப் பார்க்க புள்ளைகளுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த டீச்சர் திடுமென்று கண்ணைத் திறந்து எல்லோரையும் மண்டியிடும்படி சைகை காட்டியது. பக்கத்துப் பக்கத்துப் புள்ளைகளைப் பார்த்துக்கொண்டே சிரிப்புகளை அடக்கியபடி இடித்துக்கொண்டும் தடுமாறிக்கொண்டும் மண்டி போட்டன.

டீச்சர் சொன்னதையெல்லாம் புள்ளைகள் திக்கித் திக்கி ஒப்பித்துக்கொண்டே போயின. எங்கள் ஊரில் நல்ல மழை பெய்ய வேண்டும் கர்த்தரே என்றதும், புள்ளைகளை உசுப்பி விட்டது போலிருந்தது. இரண்டு வருஷமாய் ஊரில் மழையில்லை. வயற்காடெல்லாம் பாளம்பாளமாய் வெடித்துக்கிடந்தன. முனியசாமி கோவிலுக்கு எருது கட்டு நடத்திப்பார்த்தும் மழைச்சோறெடுத்துப் பார்த்தும் சப்பாணி கோவிலில் சாமிகும்பிட்டுப் பார்த்தும் இன்னும் மழை பெய்யவில்லை. ‘‘மூன்றாம் வகுப்புப் பாண்டிக்கு உடம்பு சொஸ்தமாகவேண்டும் கர்த்தரே’’ என்று டீச்சர் சொன்னதும் புள்ளைகள் உருக்கமாகிவிட்டன. பாண்டி நன்றாகப் படிப்பான். மரியம்மா டீச்சர் வீட்டிற்கு அடுத்த வீடுதான் பாண்டிவீடு. இழுப்பு வந்து உடம்பெல்லாம் வெளிறிப் போய் மணிக்கட்டில் மஞ்சள் துணிகட்டிப் போட்டிருக்கிறார்கள். ராத்திரிக்கு ராத்திரி பாண்டி வீட்டில் கோடாங்கிச்சத்தம் கேட்கும். பாண்டி அப்பாவும் அம்மாவும் கஞ்சிதண்ணி குடிப்பதில்லை. பாண்டிக்காக பதினெட்டு கோயில்களுக்கு வெதப்புக் கொடுத்துக்கொண்டு திரிகிறார்கள்.

அதுவரை டீச்சர் சொன்னதையெல்லாம் திருப்பிச் சொல்லி வந்த புள்ளைகள் மழையைச் பற்றியும் பாண்டியைப்பற்றியும் டீச்சர் ஏக்கத்தோடு சொன்னதும் புள்ளைகளுக்கு கூச்சம் போய் இயல்பாகச் சொல்ல ஆரம்பித்தார்கள். அப்புறம் என்னென்னவெல்லாமோ சொல்லிவிட்டு மரியம்மா டீச்சர் ‘ஆமென்’ என்றது. எல்லாப்புள்ளைகளும் சத்தம்போட்டு ‘ஆமென்’ என்றன. டீச்சர் கண்ணைத் திறந்து எல்லோரையும் உட்காரச் சொல்லி சைகையும் காட்டிவிட்டு எழுந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டது.

‘‘ஒங்களுக்கெல்லாம் கதை கேக்க ஆசையா இருக்கில்ல’’ என்று டீச்சர் கேட்டதும் ‘‘ஆமாம் டீச்சர்’’ என்று குப்பென்று பிள்ளைகள் கத்தின.

மரியம்மா டீச்சர் கதை சொல்லத் தொடங்கியது. பெத்தலகேம் என்ற இடத்தில் யேசுவானவர் பிறந்த கதையை அது சொல்லிவந்தபோது புள்ளைகள் வாயில் ஈப்போவது கூடத் தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்தன. மரியம்மா டீச்சர் அம்மா, ஆடு, இலை, ஈ எல்லாம் சொல்லிக் கொடுக்கும்போது மரக்கட்டை மாதிரி முகம் இருக்கும். சரியாகத் திருப்பிச் சொல்லாத புள்ளைகளுக்குப் பிரப்பம்பழம் கொடுக்கும். முகமெல்லாம் வெடுவெடுவென மாறும். பெத்லகேமில் யேசுவானவர் பிறந்த கதையைச் சொல்லும்போது, மரியம்மா டீச்சரின் முகமெல்லாம் அருளோடிருந்தது. ஏற்ற இறக்கங்களோடு கைகளை ஆட்டி நீட்டி உருகிப் போய் கதை சொல்லி வந்தது. தீர்க்கதரிசிகள், மேய்ப்பவர்கள், தேவதூதர்கள் எல்லாம் கதையில் வந்தார்கள். புள்ளைகளுக்கு இதெல்லாம் அரைகுறையாய்ப் புரிந்தாலும் இதுவரை கேட்காத மாதிரியில் இருந்ததால் மயங்கிப் போய் கேட்டுக் கொண்டிருந்தன. வால் நட்சத்திரம் ஆகாயத்திலிருந்து இறங்கிவந்து வழிகாட்டிக் கொண்டே போனதை டீச்சர் சொன்னபோது புள்ளைகளுக்குப் பறந்து போவது போல் தோன்றியது. சொக்கிப் போய்க் கிடந்தன. வால்நட்சத்திரம் ஆகாயத்திலுமில்லாமல் பூமியிலுமில்லாமல் நடுவால ஆள்களுக்கு முன்னாலேயே போன சங்கதியும் வேப்ப மரக்காத்தும் சேர்ந்த ஒரு அசங்க மசங்களில் நாலஞ்சு புள்ளைகள் ஒறங்கியே விட்டார்கள்.

பழைய கஞ்சி குடிச்ச கேரில் புள்ளைகள் யாராவது வகுப்பில் ஒறங்கி விழுந்தால் டீச்சர் பின்னங்கையை நீட்டச் சொல்லி பிரம்பால் அடிக்கும். கதை சொல்லி வரும்போது மட்டும் ஒறங்கிய புள்ளைகளைப் பார்த்து, `ராசுக்கு அரைச்சாமம் ஆச்சு, எழுப்புங்கடா’ என்று சிரிப்பும் கனைப்புமாய்ச் சொன்ன மாரியம்மா டீச்சர் வேறு ஆளாய் மாறி வந்து உட்கார்ந்து இருப்பது போல தெரிந்தது. டீச்சரிடம் இந்த மாதிரி ஆதரவான பேச்சுக்களைக் கேட்பதற்காக வேனும் ஓயாமல் டீச்சர் கதை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் போல நெனைப்புத் தட்டியது புள்ளைகளுக்கு.

யேசுவானவர்மேல் புள்ளைகளுக்கு முதல்நாளே பிரியம் வந்துவிட்டது. `அவரு மாட்டுத் தொழுவத்துல பொறந்து கிடந்தபோது ஒன்னைமாதிரி, என்னை மாதிரி கறுப்பாவா இருந்தாரு, வெள்ளை வெளேர்னு பொறந்திருந்தாரு. அவரு மொகம் பூரா தேஜஸ் அடிச்சுதுன்னு டீச்சர் சொன்னதும் அததுக்கும் அவரைப்பத்தி ஒரு மரியாதை வந்துவிட்டது. டீச்சர் வீட்டுக்குப் பள்ளிக்கூட சாவி வாங்கப்போகும் புள்ளைகள் நெறையப் பேர் வீட்டில் தொங்கும் காலண்டரைப் பார்த்திருந்தன. சுற்றி காட்டாளுகளாய் நிற்க ஒரு குழந்தை தொழுவத்தில் கிடந்தது காலண்டர் படத்தில். அதன் முகத்தைச் சுற்றி நட்சத்திரம் மாதிரி ஜொலிக்கும். புள்ளைகள் அதையும் சேர்த்து நினைத்ததில் யேசுவும் உண்மையில் ஒரு சாமிதான் என்று ஒருவடிவாய் யோசித்துக் கொண்டே கதைகேட்டார்கள்.

கோடைக்காலம் போய் காத்துக்காலம் வந்தது. ஞாயிற்றுக்கிழமை மத்தியானங்களில் பள்ளிக்கூட மைதானம் புழுதிக் காலத்தில் அல்லாடியது. தாழ்வாரத்தில் படர்ந்திருந்த வேப்பமரக் கிளைகள் பேய்களைப் போல் தலைவிரித்தாடின. தூசி வந்து விடும் போதெல்லாம் புள்ளைகள் கண்களைத் துடைத்து விட்டுக்கொண்டே யேசுவானவரின் மகிமைகளைக் கேட்டன. கொஞ்சமாயிருந்த அப்பங்களின்மேல் யேசுவானவர் கையை வைத்தார். அப்பங்கள் ரொம்பவாய் வந்தன. சீக்காளிகளின் மேல் அவர் கையை வைத்தார். அப்புறம் அந்த ஆள்கள் மேல் சீக்கே இல்லை. மரியம்மா டீச்சர் இதையெல்லாம் சொல்லிவரும்போது அசலா அங்கேயே அதெல்லாம் நடப்பது போலிருந்தது புள்ளைகளுக்கு. மூணாப்பு பாண்டிக்கு உடம்பு குணமாக வேண்டி புள்ளைகள் தொடர்ந்து ஜெபம் செய்தார்கள். அந்த வருஷம் நல்ல மழை பெய்ய வேண்டுமென்று ஜெபம் முடியும் முன் கேட்டார்கள்.

ஒரு ஞாயித்துக்கிழமை மரியம்மா டீச்சர் கதை சொல்லிக்கொண்டிருந்தது. ரொம்ப அமைதியாய் புள்ளைகள் கதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஊரே அமைதியாயிருந்தது. திடீரென்று கூ_கொள்ளை என்று சத்தம் வந்தது. புள்ளைகள் யாருக்கும் கட்டுப்படாமல் சத்தம் வந்த பக்கமாய் ஓடினார்கள். மூணாப்புப் பாண்டி செத்துப் போயிருந்தான். புள்ளைகளுக்கு எல்லாச் சாமிகள் மேலும் சந்தேகம் வந்தது. ரொம்ப யோசிப்பதற்குள் அடுத்த ஞாயித்துக்கிழமை வந்துவிட்டது. டீச்சர் கொடுக்கப்போகும் பிரைஸ்கள் கூடவே தோன்றி விதம் விதமான கற்பனைகளைத் தூண்ட புள்ளைகள் மறுபடியும் கதைகேட்க வந்தார்கள்.

காத்துக்காலம் அடங்கி அடைமழைக்காலம் வந்தது. பள்ளிக்கூடத்து மைதானம் சொதசொதவென்று கிடந்தது. தாழ்வாரத்து வேப்பமரக் கிளைகள் மழையில் வாங்கிய தண்ணி முத்துக்களைச் சடசடவென்று உதிர்த்துவிட்டன. புள்ளைகள் குளிருக்கு அடங்கி உட்கார்ந்து யேசு சாமியின் அற்புதங்களை அனுபவித்துக் கேட்டன. வானம் மூடிக்கொண்டு பனியும் மப்புமாயிருந்த ஒரு ஞாயித்துக்கிழமை மத்தியானத்தில் மரியம்மா டீச்சர் புள்ளைகளுக்கெல்லாம் பிரைஸ்கள் கொடுத்தது. அழகழகான பொம்மைகள் படம் வரையிற நோட்டுகள் கலர் கலராய் பென்சில்கள் சின்ன சின்ன டப்பாக்கள் எல்லாம் கொடுத்தது. இந்த ஊரில் வேதக்கோயில் இல்லை. அதனால் மரியம்மா டீச்சர் வருகிற வாரம் கிறிஸ்துமஸுக்கு கிடாரத்திற்குப் போய்விடும். புள்ளைகளுக்கு கிறிஸ்துமஸ் என்கிற வார்த்தையே குளிரும் மழையும் பிரைஸுமாய்க் குதூகலத்தைத் தந்தது. பிரைஸ்களை வாங்கி பக்கத்தில் வைத்துக்கொண்டு மண்டி போட்டுக் கண்களை மூடிக்கொண்டு தாங்களாகவே ஜெபம் செய்தன. ஜெபம் முடிந்து கண்களை முழித்து முதலில் பிரைஸ்களையே ஆவலோடு பார்த்து கைகளில் எடுத்து வைத்துக் கொண்டன.

கூச்ச நாச்சமில்லாமல் பக்தி சிரத்தையோடு புள்ளைகள் ஜெபம் செய்யத் தொடங்கிவிட்டன. கதைக்கு வராமல் ஊரணிப்பக்கமும் ஓணான்கள் பின்னாலும் திரிந்த பயல்கள் கதை கேட்கப்போய் பிரைஸ் வாங்கி வந்த பயல்களை `ஆமென் பயலெ வாடா’ என்று நக்கல் பண்ணிய போதும் இந்தப் புள்ளைகள் சட்டை பண்ணவில்லை. ஊரிலேயே இந்தப் புள்ளைகள் மட்டும் ஒரு தினுசாய் நடந்து போனார்கள்.

அந்த வருஷம் ஊரில் நல்ல மழை பெய்து வயல் வரப்பெல்லாம் பச்சை வீசியது. புள்ளைகள் கால்களில் சேறு அப்பியது. `பூட்ஸ் போட்டு நடக்கிறேன் பாரு’ என்று சேறு அப்பிய கால்களோடு லெப்ட் ரைட் என்று கத்திக்கொண்டே சொத் சொத்தென்று நடந்தன. `நாங்க ஜெபிச்சதினால தான் ஊருக்கு மழை வந்திச்சு’ என்று மரியம்மா டீச்சர் சொன்னதை புள்ளைகள் ஆத்தாமாரிடம் சொல்லின. `ஜெபிச்சுப் பார்த்தியலெ, ஏண்டா மூணாப்புப் பாண்டி செத்தான்?’ என்று ஓணான் அடிக்கிற பயல்கள் எதிர் கேள்வி கேட்டார்கள். கல்லுச்சாமியைக் கும்பிடுகிற பயல்கள் என்றும் கர்த்தர் சாமியைக் கும்பிடுகிற பயல்கள் என்றும் பிரிந்து கொண்டார்கள்.

இந்தப் புள்ளைகள் வேறவேற சாமிகளைக் கும்பிடுவதைக் கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துக் கொண்டே வந்தன. இதற்கு முன்பெல்லாம் ஊருணியில் குளித்தால் ஈரச்சட்டையை முழங்கையில் போட்டுக்கொண்டு கீழ்ப்படியில் நின்று முனியசாமி கோயிலைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு அடிமண்ணை நெற்றியில் வைத்துக் கொள்வார்கள். கண்மாய்க்குக் குளிக்கப் போனாலே உலகம்மாளுக்கு கும்பிடு போட்டுவிட்டு வருவார்கள். மரியம்மா டீச்சரிடம் கதை கதையாய்க் கேட்டபின்பு ஊருணி முனியசாமி கோவிலையும் கண்மாய்க்கரை உலகம்மா கோயிலையும் பிடரி வழியாகப் பார்த்து நடையைக் கட்டினார்கள்.

மரியம்மா டீச்சரின் வீட்டில் மட்டும்தான் ஊரிலேயே தினமும் காலையில் இட்டிலி சுட்டுச் சாப்பிடுவார்கள். மத்தியானத்தில் குழம்பு சோறும் அந்த ஒரு வீட்டில்தான். வண்ணா வீட்டில் துவைத்து இஸ்திரி போட்டுவரும் சேலையைக் கட்டிக்கொண்டுதான் தினமும் மரியம்மா டீச்சர் பள்ளிக்கூடம் வரும். பெரியசாரையும் அழுக்குச்சட்டையெல்லாம் போடவிடாது. அவரும் எப்பொழுதும் இஸ்த்திரி போட்ட சட்டை வேட்டியோடுதான் பள்ளிக்கூடம் போவார். மரியம்மா டீச்சர் மகன் இராமநாதபுரத்தில் ஹாஸ்டலில் தங்கிப்படித்தான். கால்பரிட்சை அரைப்பரிட்சை லீவுகளில் ஊருக்கு வரும்போது அவன் போட்டிருக்கும் அரைட்ரவுசர் சட்டைகளைப் பார்த்து புள்ளைகளுக்கு அவன் மேல் ஒரு மரியாதை வரும். அளவாய்க் கச்சிதமாய் அவன் உடுத்தி வருவான். பொடிமட்டை மாயாண்டி டெயிலரிடம் தைத்தால் ட்ரவுசர் என்ன சட்டையென்ன எல்லாமே பொந்தா பொந்தாவென்று கவுனைப் போல கிடைக்கும். மரியம்மா டீச்சர் மகனுக்கு எல்லாமே ராமநாதபுரத்தில் தைப்பதுதான்.

மரியம்மா டீச்சர் வீட்டுப் பழக்க வழக்கங்களை நெருக்கத்தில் பார்த்த புள்ளைகளுக்கு காலையில் இட்லி, மத்தியானம் குழம்பு சோறு, ராத்திரியில் குழம்பு சோறு, அளவாய்த் தைத்து இஸ்த்திரி போட்ட ட்ரவுசர் சட்டை இவைகள் மேல் சொல்ல முடியாத ஆசை வந்துவிட்டது. மரியம்மா டீச்சர் கர்த்தர் சாமியைக் கும்பிடுவதால்தான் இத்தனையும் அந்த வீட்டிற்கு மட்டும் கிடைக்கின்றன என்று புள்ளைகள் பேசிக் கொண்டன.

தரவைக் காடுகளில் மாடு மேய்க்கும் போது உள்ள தனிமையிலும் உச்சி வெயிலில் நடவிற்கு நாற்று விளிம்பும் வலுவான வேலை செய்யும்போது உள்ள ஆற்றாமையிலும் வாமடையில் தண்ணீர் பாய்வதை வரப்பில் உட்கார்ந்து காவல் காக்கும்போது வரும் வெறுமையிலும் களத்து மேட்டில் பிணையல் மாட்டோடு சுற்றிச் சுற்றி வரும் யந்திரத்திலும் சோவென்று ஊற்றிக் கொண்டிருக்கும் மழை நேரத்தில் குதுகுதுப்பிலும் இந்தப் பிள்ளைகள், `கர்த்தரே எனக்குக் காலையில் சுடச்சுட இட்லி வேண்டும். மத்தியானமும் ராத்திரியும் குழம்பு சோறு வேண்டும். ராமநாதபுரம் டெய்லர் தைக்கும் ட்ரவுசர் சட்டை வேண்டும் ஆமென்’ என்று ஜெபம் செய்தார்கள்.

ஜெபித்து முடிந்ததும் அந்தப்புள்ளைகள் காலையில் இட்லி சாப்பிட்டுவிட்டு ராமநாதபுரம் டெய்லர் அளவாய்த் தைத்த கலர் கலரான ட்ரவுசர் சட்டை அணிந்து டக்டக்கென்று தெருக்களில் நடப்பது போலவும் மத்தியானச் சாப்பாட்டிற்குப் பள்ளிக்கூடத்திற்குத் தட்டுகளேந்தி வரிசைகளில் நிற்காமல் தங்கள் தங்கள் வீடுகளுக்குள் அதிகாரமாய் நுழைந்தது போலவும், சோப்புப்போட்டு முகம் கழுவுவது போலவும், பவுடர் போட்டு வெளியே போவதுபோலவும் வெகு நம்பிக்கையுடன் கற்பனை செய்தார்கள்.

திண்ணைகளில் படுக்கைகளை விரித்ததும் உறங்கப் போகுமுன்பு புள்ளைகள் படுக்கைகள் மீது மண்டியிட்டு ஜெபம் செய்தன. காலையில் படுக்கையிலிருந்து எழுந்ததும் கண்களை கசக்கிவிட்டுக் கொண்ட மறுநொடியே ஜெபம் செய்தன. புள்ளைகள் சாமி கும்பிட்டுவிட்டுப் படுப்பது சாமி கும்பிட்டுவிட்டு எழுந்திருப்பதும் பற்றி ஆத்தா அப்பன்களுக்கு ரொம்பப் பெருமை. கூப்பிட்ட குரலுக்கு பிள்ளைகள் உடனே ஏனென்று கேட்டு விடுவதில்லை. இரண்டு மூன்று தடவைகள் கூப்பிட்ட பிறகுதான் மறுகுரல் கொடுத்தார்கள். அவர்கள் எப்போதும் வேறெங்கோ சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

மரியம்மா டீச்சர் கால் தரையில் படாமல் நடந்தது. அதுக்கு அவ்வளவு சந்தோசம். ``வேதக்கார வீடு இல்லையின்னா என்ன? வேதக்கார புள்ளைக நெறைய ஆயிருச்சே’’னு மரியம்மா டீச்சருக்கு நெனச்சு நெனச்சு சந்தோசம்.

பெரிய ஸார் மேசைமேல் ஒருநாள் மரியம்மா டீச்சர் ஒரு உண்டியலைக் கொண்டு வந்து வைத்தது. யேசு முகக்காந்தியோடு உள்ள ஒரு படம் அதில் ஒட்டப்பட்டிருந்தது. ``யேசு ராஜா வருகிறார்’’ என்று அதில் அழகாக எழுதியிருந்தது. பள்ளிக்குப் புள்ளைகளைச் சேர்க்கும்போதும், அஞ்சாப்பு முடிஞ்சு புள்ளைகளுக்கு ரிக்காடுஷீட் கேட்டுவரும் போதும் அதில் காணிக்கை போடவேண்டுமென்று பெரிய ஸாருக்கும் புள்ளைகளுக்குமாய்ச் சேர்த்து சொல்லிவிட்டது. கீழத்தெருவில் ராமுத்தேவர் ரொம்ப நொடித்துப்போய் மனை இடத்தை விற்க வந்ததை, ``வேதக்கோயில் கட்டத் தருவார்களா’’ என்று கேட்டு மரியம்மா டீச்சர் ஆள்மேல் ஆளாய் அனுப்பிக்கொண்டிருந்தது.

புள்ளைகள் இட்லிக்கும் குழம்பு சோறுக்கும் ராமநாதபுரத்தில் அளவாய்த் தைக்கும் ட்ரவுசர் சட்டைகளுக்கும் கர்த்தரே என்று ஆரம்பித்து ஆமென் என்று முடித்து வயல்காடுகளையும் வாமடைகளையும் வெறித்துப் பார்த்துக் கொண்டு திரிந்தன.


நன்றி : பூவுக்குக் கீழே அன்னம் வெளியீடு

May 13, 2010

உயிர்-கந்தர்வன்

ஒரு உச்சி வெயிலில் கடலோடித் திரும்பிய மீனவர் ஒருவர் தான் போட் ஜெட்டியில் அந்த சேதியைச் சொன்னார். தீவில் ஒரு திமிங்கலம் ஒதுங்கிக் கிடப்பதாக. சேதி கிராமத்தின் வழியாகச் செல்லும் பஸ்களிலும் லாரிகளிலும் நகரத்திற்கு அன்று மாலைக்குள் வந்து சேர்ந்துவிட்டது. நகரத்திலிருந்தும் வேறு எங்கிருந்தும் போட் ஜெட்டிக்கு பஸ்களில் வரவேண்டும். பிறகு முக்கால் மணி நேர படகு சவாரிக்குப் பின் தீவிற்குப் போகலாம் என்றார்கள்.

kandharvan  முதலில் சில ஆண்கள்தான் பஸ் பயணம். கடல் சவாரி வெறித்துக் கிடக்கும் தீவு என்று பயத்தை மறைத்தபடி நண்பர் குழமாய்ப் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள். வந்து அவர்கள் அளந்த அளப்பு மனைவி குழந்தைகளோடு இன்னொரு பயணம் என்றானது.

பத்திரிகைகளில் பெரிய செய்தியாகக் காலையிலும் மாலையிலும் வெளியிட்டார்கள். வானொலி தொலைக்காட்சியிலும் திமிங்கலத்தைக் காட்டி பிள்ளைகள் ஒரே குரலில் 'புறப்படு போகணும் ' என்றார்கள். தகவல் என்னவென்றால் பஸ்களிலும் போட் ஜெட்டியிலும் நெரிசல் தாளவில்லையென்றும் மாருதி சியல்லோ, 'டி ' போர்டு கார்கள் பகல் முழுதும் போட் ஜெட்டி வாசலில் கிடக்கின்றன என்பதாகும்.

திமிங்கலம் ஒதுங்கிய மூன்றாம் நாள்தான் அவன் குடும்பத்தோடு தீவுக்குப் பயணமானான் புறப்படுமுன் இரண்டு நாளாய்ப் பிள்ளைகள் விடிந்து எழுந்ததும் திமிங்கலம் குறித்து கூடிக் கூடி உட்கார்ந்து கற்பனையும் பேத்தல்களுமாய் வாயொழுகப் பேசித் திரிந்ததை அவள் அடிக்கடி பார்த்துவிட்டு வாய் பொத்தித் திரும்பிக்கொண்டு சிரித்து வைத்தாள். சிரிக்காமல் என்ன செய்வது விடிகாலையில் உட்கார்ந்து இரண்டும் இப்படிப் பேசிக்கொண்டிருந்தால்.

'அது மேலெ ஏறி ஏறிப்போனா மேகத்தையே தொட்டிரலாம் தெரியுமா ? '

'எனக்குத்தெரியுமே, அதோட ஒரு கால் நம்ம ஊர் அளவு பெரிசு. '

'எனக்குத் தெரியுமே நாமெல்லாம் பாத்தா இவ்ளூண்டு தூரம் தான் பாக்கமுடியும். அது கண்ணாலெ பாத்துச்சுன உலகமே தெரியும் தெரியுமா ? '

'நாம இங்கெ உக்காந்திருக்கிறதெல்லாமா ? '

'ஆமா அப்பா பேப்பர் படிக்கிறதெல்லாம் கூட. '

'எனக்குத்தெரியுமே ' ஆனா அதுக்கு ஒருகண்ணுதான். '

'போடி ரெண்டு கண்ணு '

'எனக்குத் தெரியும் தெரியும்றியே நீ எங்கே போய்ப் பாத்தெ ' '

'என்னை மட்டும் சித்தி வீட்டுக்கு அனுப்பியிருந்தாங்கள்ள அப்பொ நீ வல்லியே. அன்னிக்கு ஒருநாள் அங்கெ வந்திச்சி. நான் பாத்தேன். '

'புளுகாதெடா '

'நீதான் புளுகி. '

'டி வெண்டி தெளசண்ட் லீக் அண்டர் தி சீ ' என்று ஒன்பதாம் வகுப்பில் ஒரு நாண்டிடெய்ல் புத்தகத்த இங்கிலீஷ் பாடமாக வைத்திருந்தார்கள். கடலுக்கடியில் அதுவரை இல்லாத பெரிய சைஸில ஒரு ராட்சத திமிங்கலம் திரிவதாகவும் அதனால் கடலின் ஒரு பிராந்தியம் முழுதும் மீனவர்களின் வலை அறுந்ததையும் படகுகள் கவிழ்ந்ததையும் நாவல் சொல்லி வரும். கடல் நம்பிகள் பீதி கொண்டு திரிந்தார்கள். திமிங்கலம் அவ்வளவு பிரம்மாண்டமாகச் சொல்லப்படும்.

அந்தத் திமிங்கிலத்தை வேட்டையாடக் குறி பிசகாமல் உலகிலேயே சிறப்பாக ஈட்டி எறியும் பலசாலிகள் இருவரோடு ஆழ்கடலில் திமிங்கல வேட்டை நடக்கும். திமிங்கலத்தையும் காண்பார்கள். ஈட்டி எறிந்ததும் 'டய் ' என்று உலோகத்தின் மீது விழும் சத்தம் கேட்கும். அது முதன் முதலாக ரகசியமாய் செய்துவிடப்பட்ட நீர் மூழ்கிக் கப்பல் என்ற மர்ம முடிச்சு நாவலில் அவிழும் இடம் அந்த வயதில் பரவசமாயிருந்தது. பிள்ளைகளிடம் அந்தக் கதையைச் சொன்னதும் நடுக்கடல், திமிங்கலம், கடற்பயணம், பூதங்கள் உருவத்தில் ஈட்டி எறிபவர்கள் என்று இன்னும் அதிகக் கற்பனைகளோடு ஒன்றிடம் ஒன்று நிறைய பேத்திக் கொண்டிருந்தது. அவளும் இந்தக் கதை கேட்ட பின்னர் திமிங்கலம் பற்றிப் போகும்போது வரும்போது ஏதாவது கேட்டாள்.

'கடலும் கிழவனும் ' கதையை மறுநாள் ராத்திரி ஒன்பது மணி வாக்கில் சொன்னான். கிழவன் விடாப்பிடியாய் ராட்சத மீனோடு போராடியதை வெகு நேரம் சொல்லி முடித்ததும் பிள்ளைகள் கேட்டன 'இப்பவே போவமா திமிங்கலம் பாக்க ? ' என்று அவளுக்கே அப்படி ஒரு ஆர்வம் வந்து முகத்தில் நின்றது.

போட் ஜெட்டியில் கூட்டம் மிகுதியாக நின்றது. சுற்றுலா ஸ்தலங்களுக்குப் போகிறவர்கள் கொண்டு செல்லும் பொருள்கள் தின்பண்டங்களோடு நின்றார்கள். காமிராக்கள் நிறையத் தெரிந்தன. பிரயாணிகள் படகு என்று ஒன்றிரண்டுதான் நின்றன. மற்றவை எல்லாமே மீன்பிடிப் படகுகள்தான். அநேகமான படகுகள் கடந்த இரண்டு நாட்களாய் மீன் பிடிக்கப் போகவில்லை. இருட்டும் வரை தீவுக்குப் பிரயாணிகளைக் கொண்டுவிட, கூட்டி வர நல்ல வருமானம். போட் ஜெட்டியில் அவனைக் கவர்ந்த விஷயம் ஒன்று. அந்தக் கருங்கல் மேடையிலிருந்தும் படகுகள் ஏற எவ்வளவு வில்லங்கமான ஆளுக்கும், வாயாடிக்கும், பலசாலிக்கும், சவடால் காரனுக்கும் இன்னொரு கை உதவியாகத் தேவைப்பட்டது. பிள்ளைகள் போட் ஜெட்டியின் மேடையில் நின்று நீல நெடுங்கடல் பார்த்துக் குதித்தன. அவளே கடல் பார்த்து அடக்கமுடியாமல் பார்த்தபடி பேசினாள் அவனிடம்.

விசைப்படகின் முன்பக்கத்தில் அவன் குடும்பம் உட்கார்ந்து கொண்டது. கடலைக் கிழித்துக்கொண்டு படகு போவதைப் பார்க்க அதுதான் சரியான இடம் என்று சொல்லியபடி உட்கார்ந்தன பிள்ளைகள். அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் படகுகள் வந்ததால் பிள்ளைகள் ஆரவாரித்துக் கையசைத்தார்கள்.

படகில் உட்கார்ந்து பார்க்கக் கடல் ஒரே நிறத்தில் எல்லா இடங்களிலும் இல்லை. தூரம் விட்டு தூரத்தில் அழுத்தமான நீலத்தில் வாலம் வாலமாய்க் கிடந்தது கடல். மேலே வானத்தின் நிறமும் கீழே கடலின் நிறமும் ஒரே மாதிரியாக இருந்ததிலும் இரண்டு பிரம்மாண்டங்களை ஒரே நேரத்தில் பார்த்ததிலும் மனதுகள் எவ்விப்பறந்தன. பிள்ளைகள் ஒன்றிடம் ஒன்று என்றோ பார்த்த யானைப் பற்றிப் பேசியது. இன்னொன்று பதிலுக்கு சறுக்கலில் பார் விளையாடியதைப் பார்த்தபோதுபயம் பயமாய் வந்ததைப் பற்றிப் பேசியது. அதிசயம் பார்த்து அனுபூதிக்கும் நேரங்களில் பிள்ளைகள் இப்படிப் பேசுவதைக் கேட்டு அவனுக்கு இப்போதுபழகிவிட்டது.

படகு போகும் ஓரங்களில் ஆங்காங்கே மிதவைகள் கிடந்தன. தீவுக்குப் பாதை போட்டுவிட்டார்கள். ஒரு முழுக்கை நீள மீன்கள் தூரத்தில் அவ்வப்போது வெட்டவெளிக்கு வந்து விட்டுக் கடலுக்குள் பாயும்போதெல்லாம் பிள்ளைகள் கைதட்டின. மண் மேட்டில் தாவரங்கள் மங்கலாய்த் தெரிந்தது. 'அதோ தீவு ' என்றன பிள்ளைகள். அடுத்தவர்கள் காதில் விழாமல் அவள் அவனிடம் சொன்னாள். 'இந்தப் புள்ளைக புண்ணியத்திலெ ஒரு ஆசையிலெ பாதி நிறைவேறுது இன்னிக்கு. '

'என்னது ? '

'வாழ்க்கையிலெ ஒரு தடவையாவது வெளிநாட்டுக்குப் போய் வரணுமினு அசட்டு நெனைப்பு அடிக்கடி வரும். நாலு பக்கமும் கடலா ஒரு மேட்டிலெ எறங்குறப்பொ நெனைச்சிக்க வேண்டியதுதான்.இது ஒரு நாடுனு. கடல் தாண்டி வர்ரோம்ல. '

அவளைப் பார்க்கப் பாவமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. கடற்கரை குளக்கரைபோல் மணற்பாங்காய் அழகாயிருந்தது. படகுத் துறைக்கருகில் கீழ்த்திசையில் ஒரு குடிசையும் அதில் கறுத்து மெலிந்த இரண்டு ஆட்களும் இருந்தனர். அவர்கள் படகுகளிலிருந்து இறங்கிப் போகும் ஆட்களை மிரட்சியோடு பார்த்துக் கொண்டு நின்றார்கள். அவர்களுக்கருகில் இரண்டு மெலிந்த செவல நாய்கள் நின்று கொண்டிருந்தன.

குடிசைக்கு நேராக கடலுக்குள் கம்புகள் ஊன்றி செயற்கை முத்துக்களை விளைவிக்கிறார்கள். நகரிலிருக்கும் ஒரு பெரிய நிறுவனம் அதை நடத்துகிறது. இரவுபகலாய் அதைப் பாதுகாக்க அந்தக் குடிசையும் மெலிந்த அந்தமனிதர்களும் நாய்களும் என்றார்கள்.

பிள்ளைகள் அவர்களை ஆச்சர்யத்தோடு பார்த்துவிட்டு ஒன்று கேட்டது 'அப்பா ராத்திரி எல்லாம் இவுங்க மட்டும் இந்தத் தீவிலெயே இருந்துக்குவாங்களா ? '

'ஆமா '

'பயமா இருக்காதா ? '

'கூட நாய் இருக்கில்ல '

'நாயும் மெலிஞ்சு போயிருக்கு. '

'தெனம் தெனம் வர்ரவங்கள்ளாம் போனப்புறம் திமிங்கலமும் இவங்களும் மட்டும்தான் தீவிலெ இருப்பாங்க. ஏப்பா ? '

'ஆமா ஆமா கீழெ பாத்து நட. '

தீவின் மறுபக்கம் தான் திமிங்கலம் ஒதுங்கிக் கிடப்பதாகச் சொன்னார்கள். படகுகளில் இறங்கி குடும்பங்கள் முன்னும் பின்னும் போய்க்கொண்டிருந்தன. இளைஞர்கள் குழாம் அட்டகாசம் பண்ணிக்கொண்டு வெகு பின்னால் வந்து கொண்டிருந்தது. தீவில் தாவரங்கள் எல்லாமே ஒரு தினுசாயிருந்தன. ஊரில் நீண்டு காய்க்கும் புடலை ஒரு சாணுக்குள் முடங்கிக் கிடந்தன. எந்தச் செடியின் இலையைப் பறித்து மென்றாலும் உப்புக் கரித்தது.

மக்கள் நடந்துபோன இந்த மூன்று நாட்களுக்குள் ஒற்றையடிப் பாதை உருவாகியிருந்தது. மித வெயிலும் அடர்ந்த புதர்களும் உடம்பையும் மனதையு லேசாக்கின. நடந்துபோகையில் அவன் பிள்ளைகள் கூட வரும் பல ஊர்ப் பிள்ளைகளோடு பேச்சுக்கொடுத்து நெருங்கிக்கொண்டன. ஓடிப்பிடித்து திரும்பப் பெற்றோரிடம் வந்து விழுந்து உற்சாகமாய் வந்தார்கள் பிள்ளைகள்.

வெகு தூரத்திலேயே தெரிந்தது. திமிங்கலம் கரைமேல் வண்னங்களில் ஜனங்கள் தெரிந்தார்கள். பிள்ளைகள் முன்னைவிட பாய்ச்சலில் போகவும் தொடர்ந்து அதே வேகத்தில் நடக்க சிரமமாயிருந்தது பெற்றோர்களுக்கு.

பனை மர நீளத்திலும் ஆலமர அகலத்திலும் திமிங்கலம் கிடந்தது. யானையின் வெளிர் கறுப்பில் வேலுடம்பும் கீழே வெள்ளையாயும் கிடந்தது. வாய் தரையில் கிடந்தது. உடம்பு முழுதும் சமுத்திரத்திற்குள் வயிற்றுப் பகுதியிலிருந்து ரத்தம் கசிந்தது; கசிந்தது என்ன ஒழுகிக் கலந்து கொண்டிருந்தது சமுத்திரத்தில்.

கப்பலில் மோதி அடிபட்டிருக்க வேண்டும்; பாறையில் மோதிக் காயம் வாங்கி ஒதுங்கியிருக்கவேண்டும் என்று பலவாறாகப் பேசிக் கொண்டார்கள். அந்திம காலத்தில் மனிதர்கள் வாய் வழியாய் மூச்சுவிட்டு அவஸ்தைப்படுவதுபோல் திறந்து திறந்து மூடியது வாய். அவ்விதமான ஒவ்வொரு தடவையிலும் சிரசிலிருக்கும் பெரிய துவாரம் வழியாய் கடல் நீர் ஆகாயத்தில் பீய்ச்சியடித்தது. மூச்சு விட்டு மூச்சிழுக்கும் போதெல்லாம் கடல் ஏறி இறங்கியது.

ரத்த ஒழுக்கைப் பார்க்கவும் திக்கித் திக்கி மூச்சு விடுவதைப் பார்க்கவும் பரிதாபமாயிருந்தது. இதுவரை பார்த்தறியாத பெரிய ஜீவராசியின் மரணப் படுக்கை என்பதால் சுவாரஸ்யமாகவும் பார்த்தார்கள்.

திமிங்கல வாலுக்கு வெகு அருகிலேயே வேர்க்கடலை, ஐஸ்க்ரீம், தயிர்சாதம், குளிர்பானங்கள் விற்பனையாகிக் கொண்டிருந்தன கடலுக்குள் போய் திமிங்கலத்தின் தலையைப் பார்க்க விரும்பி இருக்கிறார்கள் பிள்ளைகள். தலை கிடந்த இடம் வெகு ஆழம். விஷயம் அறிந்ததும் இரண்டு மூன்று சிறிய படகுகள் இதற்கென வந்துவிட்டன. பிள்ளைகளை ஏற்றித் திமிங்கலத்தைச் சுற்றிக் காண்பித்து இறக்கிவிட்டுப் பணம் பெற்றுக்கொண்டார்கள்.

அவர்கள் போன சமயத்தில் மீன் துறை அதிகாரிகள் கடலுக்குள் வெகுதூரத்தில் ஒரு படகிலிருந்துகொண்டு திமிங்கல வாய்க்கு நேராக முரட்டு மீன்களைத் தூக்கி எறிந்தார்கள். அவை திமிங்கலத்தின் திறந்த வாயருகே விழுந்தும் அவைகளை அது ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மூச்சு வாங்குவதையும் விடுவதையும் தவிர வேறுஞாபகங்கள் அற்றுப் போய்க் கிடந்தது. சிரசின் வழி ஆகாயத்திற்குப் பீய்ச்சும் தண்ணீர் மட்டும் அந்தச் சூழ்நிலையிலும் அதன் கம்பீரத்தைக் காட்டிக்கொண்டிருந்தது.

கரைதாண்டி மணல் மேட்டில் சிறிய இலைகளடர்ந்த பேர் தெரியா செடிகள் தூசி அப்பிக் கிடந்தன. அங்கு போய் நிழல் தேடினார்கள். உடம்பில் கால்வாசிக்குக்கிடைத்த செடி நிழல்களில் ஏற்கனவே மக்கள் நின்றும் உட்கார்ந்தும் தூரத்தில் திமிங்கலத்தின் ஓரத்தில் ஓடி ஓடிப் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைகளை அதட்டிக் கொண்டிருந்தனர்.

கடல் நீரில் கால் நனைத்தபடி அவன் பிள்ளைகள் படகுக்காகக் காத்திருந்தார்கள். படகு கிடைத்ததும் அவர்களைக் கை தட்டி அழைத்தனர். குறுகி வந்திருந்த வால் பகுதியிலிருந்து தொடங்கிப் பருத்து விரிந்து வயிறு தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. கடல் மக்கள் எவ்வளவு பேர் இந்தப் பெரிய உருவத்திற்குப் பயந்து வால் சுருட்டி வாய் பொத்தி ஓடி ஒளிந்திருப்பார்கள் என்று பிள்ளைகள் விலாவரியாக விவாதித்துக் கொண்டு வந்தார்கள். படகில் பல ஊர்ப் பிள்ளைகள் இருந்ததால் புதுப் புது விவரங்களைப் பரிமாரிக் கொண்டார்கள்.

அவர்களுக்கு முன் சென்ற படகுக்காரர் படகை நிறுத்தி பிள்ளைகளைத் திமிங்கலத்தின் மீதி ஏற்றி விட்டார். கையில் கோன் ஐஸ்கிரீமுடன் பிள்ளைகள் படு உற்சாகமாய் திமிங்கலத்தின் முதுகிலேறினர். முதுகின் மீது நின்று குதித்தனர். சறுக்கிக் கீழே போய் மேலே வந்தனர். ஐஸ்கிரீமை திமிங்கிலத்தின் கரிய தோலில் தடவினர்.

எவ்வளவு அதட்டியும் அவன் பிள்ளைகள் கேட்பதாயில்லை. அவைகளும் திமிங்கலத்தின் மீதே விளையாண்டார்கள். ஐஸ்கிரீமால் தங்கள் பெயர்களை திமிங்கில முதுகில் இனிஷியலோடு எழுதினார்கள். எருமை மேய்க்கும் சிறுவர்கள் எருமை மீதமர்ந்து பக்கவாட்டில் எருமையின் வயிற்றைத் தட்டி விரைந்து நடக்கும்படி செய்வது போல் இவர்களும் திமிங்கல முதுகில் உட்கார்ந்து வயிற்றுக்கு எட்டிக் கையால் அடித்தார்கள்.

'என்ன வேகமாப் போகமாட்டேங்குதே '

'அதோ தெரியுது பார் இன்னொரு தீவு அங்கு போ ' என்று கத்தினார்கள் திமிங்கலத்திடம்.

கடலில் நீரோட்டம் ஆரம்பமாகியிருந்தது. மேற்கு நோக்கி ஆறுபோல் ஓடிய நீரில் சிவப்புக் கலந்திருந்தது. திமிங்கலத்தின் வயிற்றிலிருந்து ஒழுகிய ரத்தந்தான். படகின் அடிப்பகுதியெல்லாம் சிவப்பாகி இருந்தது. கடல் வாசமும் ரத்த வாசமும் கலந்த கவிச்சி வாடை கரை வரை வீசியது.

திமிங்கல சவாரியை விட்டுப் பிரிய அவர்களுக்கு மனமில்லை. பிள்ளைகளைப் பிடிவாதமாக இறக்க வேண்டியிருந்தது. அவர்கள் கரைக்கு வந்த பின்னும் மேலும் மேலும் ஜனங்கள் பிள்ளைகளோடு கடலில் இறங்கியபடி இருந்தார்கள். பிள்ளைகள் இப்போது ஐம்பது அறுபதுபேர் திமிங்கல முதுகில் உட்கார்ந்து குதித்துக் கொண்டிருந்தார்கள்.

தயிர்சாதம் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு கரை ஓர சிறு நிழல்கள் தாண்டித் தீவின் உட்புறத்தில் வளர்ந்து கிடந்த தாழம் புதரடியில் உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.பிள்ளைகள் தீவைச் சுற்றி வரவேண்டும் என்பதில் குறியாக நின்றார்கள். சாப்பிட்ட இலைகளைச் சுருட்டிக்கொண்டு எழுந்தபோது பார்த்தார்கள் பக்கத்துத் தாழம்புதர் நிழலில் பாட்டில் திறந்து வைத்து கமகமவென்று ஒரு கம்பெனி பத்துப் பேரோடு வட்டமாய் உட்கார்ந்து நடந்துகொண்டிருந்தது.

பிள்ளைகளோடு தீவின் கிழக்குப் பக்கமாய் கரையில் கால் நனைத்தபடி வெயிலுக்குள் நடந்தார்கள் திமிங்கலம் பார்க்க வந்த இளைஞர்கள். பலர் அநேக இடங்களில் கடலுக்குள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் கடலுக்குள் தூரத்தில் நின்ற பாறைகள் வரை அவற்றின் மேலேறி நின்று அலை அடித்த நீரை உடம்புகளின் மீது வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

கடல் நுரை ஒன்றை அவன் பிள்ளைகளிடம் எடுத்துக் கொடுத்தான். அவன் சிறுவனாயிருந்தபோது சிலேட்டை அழிக்க அந்தக் காய்ந்த நுரையைப் பயன்படுத்தியதைச் சொன்னபோது பிள்ளைகள் அந்த ஒட்டு நுரையில் நிறைய கால்ஷியம் இருப்பதாகவும் வீட்டில் வளர்க்கும் லவ்பேர்ட்ஸ்க்கு உண்ணக் கொடுக்கலாம் என்று சொல்லி பத்திரப்படுத்தினார்கள். கடல் அலைகளில் அடித்து வந்த பாசிகள் கடற்புல் என்று ஒதுங்கிக் கிடந்தத் தாவரங்களை சுகமாக மிதித்தபடி தீவையே வட்டமடித்துத் திமிங்கலம் கிடந்த இடத்திற்கு வந்தார்கள்.

இன்னும் ஐம்பது அடிதூரம் இருக்கையில் அவர்கள் கண்முன்னே அந்தப் பிரதேசமே நடுங்கும்படி அது நிகழ்ந்து கொண்டிருந்தது. ரத்தம் ஒழுகியவாறும் மூச்சு விடவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்த திமிங்கலம் சரேலென்று உதறிக்கொண்டு வெகு உயரத்திற்கு எழுந்தது. திமிங்கலத்தின் முதுகில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் சிதறி விழுந்துகரை நோக்கி நீந்தியும் ஓடியும் வந்தார்கள். படகுகள் கவிழ்ந்துவிட்டன. படகுக்காரர்கள் கரை நோக்கி நீந்தினார்கள். படகுகளைப் போட்டுவிட்டு படகுகளில் திமிங்கல முதுகில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளுக்காகக் காத்திருந்த பெற்றோர்கள் பதறியபடி கடலுக்குள் விழுந்து கரைக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

துணிந்த சில பேர் ஓடி கடலுக்குள் தடுமாறியவர்களைப் பிடித்து இழுத்து வந்தனர். திமிங்கலம் அசைந்தபடி கிடந்தது. எல்லோரும் பீதியடையத் துவங்கினார்கள். அங்குமிங்கும் ஓடினார்கள். திமிங்கலத் தலைவழி பீய்ச்சும் கடல் நீர் அதிக அளவிலிருந்தது. அடுத்த ஒரு தாவலுக்கு அது முயல்வதாகப் பட்டது. பெற்றோர்கள் பிள்ளைகளை வைது கொண்டும் இழுத்துக் கொண்டும் தீவின் மறுபக்கமுள்ள படகுத் துறை நோக்கி ஓடினார்கள். திமிங்கலம் திரும்பி தீவுக்குள் விழுந்தால் 'நாமெல்லாம் சட்னி ' என்று சொல்லிக்கொண்டே ஓடினார் ஒருவர். கால் வலிக்க நடந்த அந்தத் தீவு இப்போது சின்ன நிலத்துண்டாகத் தெரிந்தது இப்போது.

திமிங்கலம் திரும்பி தீவுக்குள் விழுந்தால் தீவு கடலுக்குள் போய்விடும் என்றார் ஒரு பெண். இன்னும் நிறைய ஜனங்களும் பெரு நிலமுமாக இருந்தால் இந்தப் பயம் வந்திருக்காது என்று தோன்றியது அவனுக்கு. கடைசியாய் திமிங்கலத்தின் முதுகில் விளையாடி வெகு நேரம் வரை கீழே இறங்கமாட்டேனென்று பிடிவாதம் பிடித்த இரண்டு பிள்ளைகளை அவற்றின் அப்பா உடம்பு குன்றிப் போகும்படி அடித்தார். அவர்கள் எல்லோரும் முழுக்க நனைந்திருந்தார்கள்.

படகுத் துறையில் கூட்டம் ஒரு கட்டுக்குள் இல்லை. ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும் மிதித்துக்கொண்டும் படகுகளில் ஏறினார்கள். பட்டுக்காரர்களின் எச்சரிக்கை மிரட்டல் எல்லாவற்றையும் மீறி படகுகளில் உட்கார்ந்துகொண்டு சீக்கிரம் புறப்படும்படி விரட்டினார்கள்.

படகுகள் திரும்பி வருவதற்காகக் காத்திருந்தபோது கடைசியாக வந்தவர்கள் சொன்னார்கள். 'திமிங்கலம் மறுபடி எவ்விப் பாஞ்சு மெல்ல மெல்லக் கடலுக்குள்ளெ போய்க்கிட்டிருக்கு. '

தூரத்தில் ஒருவர் ஓடி வந்துகொண்டிருப்பவர் சொன்னார். 'அதெல்லாம் பொய். அது மெல்ல மெல்ல செத்துக்கிட்டிருக்கு. '

அவள் முகம் வெளிறி நின்றாள். அடித்து பிடித்துப் படகில் ஏற எவ்வளவு முயன்றும் இரண்டாம் முறையாகவும் முடிய வில்லை. இதற்குள் படகுத்துறையில் பெரும் அலைகளைடிக்கத் துவங்கி திமிங்கலம் இந்தப் பக்கமாக வந்து கொண்டிருப்பதாகப் பிள்ளைகளோடு நின்றவர்கள் பயந்தபடி முணங்கத் துவங்கி இஷ்டதெய்வங்களைக் கூப்பிட்டுத் திசை நோக்கி வணங்கினார்கள்.

அவர்கள் ஏறியதுதான் கடைசிப்படகு. தீவு வெறிச்சோடிக் கிடந்தது. அந்த ஒரு குடிசையும் இரண்டு மெலிந்த ஆட்களும் வற்றிய இரண்டு நாய்களும் மட்டும் அந்தப் படகை வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

***

Feb 27, 2010

தெரியாமலே - கந்தர்வன்

கந்தர்வன்

இந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த அன்று திருதிருவென்று சுற்றுமுற்றும் கவனித்ததில் பலதும் கண்ணில் பட்டன. அதில் முக்கியமானது எல்லோரும் சில குறிப்பிட்ட நேரங்களில் தேநீர் அருந்தப் போய் வந்தார்கள் என்பது. அடுத்த சில தினங்களில் அவர்கள் யாரும் தனியாய்ப் போகவில்லையென்றும் குழுக்களாய்ப் போய் வருவதையும் பார்த்தேன். என் பக்கத்து சீட் சாமிநாதன் இடம்பெற்ற குழுதான் இந்தக் குழுக்களிலேயே பெரியது என்று அவனோடு சிநேகமாகி அந்தக் குழுவோடு கேன்டானில் நின்றபோது தெரிந்தது.

தேநீர் அருந்தியதும் குழுக்கள் உடன் நாடு திரும்பியதில்லை. கேன்டானுக்கு எதிரே kantharvan உள்ள மைதான வெளியில் மூன்று நான்கு மரங்கள் பெரிது பெரிதாய் நிற்கின்றன. ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வந்து பரப்பப்பட்ட மர இனம் என்று அவைகளின் உயரத்தை அண்ணாந்து பார்த்து ஒருவர் சொன்னார். அந்த மரத்தடிக்குப் போய் நின்று முதல் நாள் மாலை தாங்கள் பிரிந்த பின்பிருந்து அந்த நிமிடம் வரை அவரவர் வீடுகளிலும் வெளியிலும் நடந்தவைகளை செய்திகளாகவும் அதிசயங்களாகவும் கதைகள் போலவும் பேசுவார்கள். எதையும் வெகு சுவையாகச் சொல்பவர்கள் என்று எங்கள் குழுவில் இரண்டு மூன்று பேர் உண்டு. பெரும்பாலும் அவர்களே கூட்டத்தை ஆக்ரமித்துக் கொள்வார்கள். கேட்கவும் பார்க்கவும் ஆசையாயிருக்கும்.

விதிக்குப் புறம்பாக வந்த பில்லை எப்படிக் கண்டுபிடித்துத் திருப்பி அனுப்பினார் என்று சொல்லி யாராவது ஒருவர் தனது அறிவு மற்றும் சூட்டிகைகளை விளக்கிப் பேசுவதுதான் வழக்கமான மாநாட்டுத் துவக்கமாக இருக்கும். அதன் பின் அதிகாரி பற்றி அவர் குடும்பம் பற்றி பத்திரிக்கைகளில் வந்த செய்திகள் பற்றி கண்ட காட்சிகள் பற்றி என்று மாநாட்டில் பேசுவதற்கென்றே தயாரித்து வந்த உரைகள் போல வரிசைக் கிரமமாகவோ முண்டியடித்துக் கொண்டோ பலரிடமிருந்து வெளிவரும். பெரும்பாலும் இந்த மரத்தடி மாநாடு வட்டவடிவிலும் நின்றபடியேயும் நிகழும்.

மூன்றாம் நாளே கவனித்தேன். எங்கள் வட்டம் தாண்டி ஒரு கிராமத்துக்காரர் மஞ்சள் பை ஒன்றைக் கையில் தொங்க விட்டபடி நாங்கள் பேசுவதைக் கூர்மையாகக் கேட்டபடிநின்றார். முகத்தில் கவலை அதிகமாயிருந்தும், நாங்கள் பேசிவிட்டு உரக்கச் சிரிக்கும் நேரங்களில் அவர் உதட்டிலும் பொசுங்கலாய் ஒரு புன்னகை வந்து போனது. ரகசியமான சங்கதிகளை நாங்கள் மெது குரலில் பேசுகையில் அவர் எங்கள் வட்டத்தை நோக்கி இரண்டு எட்டு எடுத்து வைத்துக் காதோரம் கை வைத்துக் கேட்டு விட முயற்சிப்பார்.

நாங்கள் நாடு திரும்பிய ஒரு நாள் முற்பகலில் திரும்பிப் பார்த்தேன். அவர் பக்கத்திலிருந்த கோர்ட் கட்டிடம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அப்போது அவர் தாட்டியாயிருந்தார். பிற்பகலில் எங்கள் கூட்டம் ஆரம்பிக்கும் நிமிடத்தில் எங்கள் பேச்சைக் கேட்க வாயைத் திறந்தபடி மேற்கிலிருந்து வேகம் வேகமாய் வந்துநின்று கொண்டார்.

நாங்கள் முடித்துத் திரும்பிய ஒவ்வொரு வேளையிலும் எங்களை விட்டுப் பிரிந்து அவர் ஒருசமயம் கலெக்டர் அலுவலகப் பக்கமாய்ப் போய்க் கொண்டிருப்பார்; ஒரு நேரம் வக்கில் ஒருவரின் பின்னாடி பரிதாபமாய் நடந்து கொண்டிருப்பார். எனது ஊகம் என்னவெனில் கர்ணன் உடம்பின் கவச குண்டலம் போல் அவர் கையில் தொங்கிய மஞ்சள் பைக்குள் ஏதோ முக்கிய ஆவணங்கள் அல்லது விண்ணப்பங்களின் நகல்கள் ரசிதுகளென்று நிறைத்து வைத்திருந்தார் என்பதே ஆகும்.

எங்கள் குழு கூடும் மரத்தடி விரிந்த நிழல் கொண்டது. மஞ்சள் பூ மரம் அது. அதன் கிளைகள் அருகில் உள்ள வக்கீல்கள் கூடத்தின் மேற்கூரையில் பாதியை மூடியிருக்கும். இந்தப் பக்கம் கேன்டானின் தென்னங் கீற்றுகளின் மேல் அசையும் கோடையில் வெல்வெட் விரிந்து கிடப்பது போல் தரையெங்கும் பூக்கள் உதிர்ந்திருக்கும். வதங்கிய பூக்களிலிருந்து வாசம்வரும். பேசிக் கொண்டிருக்க ரம்மியமாயிருக்கும்.

அடிக்கடி பேச்சுகளில் ஊடாடுவது, காலம் முன்பு போய் மெதுவாய் நகர்வதில்லை என்பதும் வெகு வேகமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது என்பதுதான். நேற்றுதான் திங்கட்கிழமை வந்தது போலிருக்கிறது. அதற்குள் வெள்ளிக்கிழமை வந்துவிட்டது என்று அநேகமான வெள்ளி மாலைகளில் பேசுவதுண்டு. பேச்சில் அடிக்கடி வரும் இன்னொன்று காலம் மாறிக்கொண்டிருக்கிறது.

'பெரிய சங்கதிகளை விடு. டிபன் பாக்ஸைச் சொல்லு. அதுகளை வரிசையா மேலெ மேலெ அடுக்கி மாலை மாதிரி ஒண்ணை மேலெ வைச்சு இதுலெ மாட்டி அதுலெ மாட்டிக் கடைசியா ஒரு கெட்டியான ஸ்பூன் ஒண்ணை மூணு துவாரத்திலெயும் சட்டுனு எவனாவது நொழைச்சிருப்பானோ; அதுதான் நொழைஞ்சிருமா ? ஸ்பூன் இல்லாம டிபன் பாக்ஸ் வரும்னு நெனைச்சிருப்பமா முந்தியெல்லாம்.

'எங்க தெருவுலெ புதுசா ஒரு கேபிள்காரன் வந்திருக்கான். அம்பது சானல் தரப் போறானாம். நெனச்சிருப்பமா பத்து வருசத்துக்கு முன்னெ ? '

'பஸ் ஸ்டாண்டுக்கு அப்பாலெ காலெஜ் வரை ஜனநடமாட்டமே இருந்ததில்லெ முன்னெயெல்லாம். இப்ப வீடுகளும் கடைகளும் பஸ்ஸ்உம் காரும் ஸ்கூட்டருமா ஜெக ஜோதியாயிருச்சு. '

'விடு கம்ப்யூட்டர் சங்கதியை ஆரம்பிச்சா கதை பத்து நாளைக்கு நீளும். நம்ம ஆபிஸ்லெ பத்து கம்ப்யூட்டர்கள் பிரிண்ட்டர், ஏர் கண்டிஷனர் எல்லாம் அடுத்த வருசம் வந்து எறங்கப் போகுது. அம்பது நூறு வருசமா தலையைப் போட்டு பிறாண்டி மாசாமாசம் கணக்கு அனுப்புற வேலையெல்லாம் இனி இல்லை. மிஷினலெருந்து வந்து கையிலெ விழுந்திரும் கோடி ரூபாய் கணக்கு.

பேசிவிட்டு நாடு திரும்பும்போது பார்த்தேன். மஞ்சள் பைக்காரர் வெகு சுவாரஸ்யமாய் இவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தவர் காக்கித் துணி மூடிய ஜீப்பில்லாமல் நவீனமான மாருதி ஜீப்பில் வந்து கொண்டிருந்த தாசில்தாரை நோக்கி ஓடினார். தாசில்தார் ஜீப்பிலிருந்து இறங்கும்போது அவர் தலைக்கு மேல் கைகளை உயர்த்திக் கும்பிட்டுக் கொண்டிருந்ததைக் கவனிக்க நேரமில்லாமல் விறுவிறுவென்று கலெக்டர் ஆபீஸின் படிகளில் ஏறினார். டவாலி முன்னால் ஓடிக் கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குப்பின் மஞ்சள் பைக்காரர் கோர்ட் பக்கம் பார்த்து நடந்து கொண்டிருந்தார்.

ஒருநாள் எங்கள் மரத்தடியிலிருந்து சற்று தூரத்தில் செங்கல்லும் மணலும் லாரிகளில் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. நவீன வசதிகளுடன் பலமாடிக் கட்டிடம் ஒன்று கட்டப் போவதாகச் சொன்னார்கள். பல துறை அரசு அலுவலகங்களும் இயங்கி வரும் இந்த வளாகத்திற்குள் இன்னும் நிறைய அலுவலகங்கள் வந்து சேரப்போவது குறித்து மகிழ்ந்தும் வியந்தும் நாங்கள் மரத்தடியில் பேசிக் கொண்டிருந்த பலநாட்களில் மஞ்சள் பைக்காரரும் நின்று கேட்டுக் கொண்டிருந்தார்.

எங்கள் அலுவலக வளாகம் நூறு ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. மொத்தக் கட்டிடங்களும் நாலு அல்லது ஐந்து ஏக்கர்களுக்குள் என்றால் மீதி தொண்ணூற்றைந்து ஏக்கர்களில் செடிகளும் புதர்களும் காட்டுக் கொடிகளும் பேர் தெரியா மரங்களும் தான். வெள்ளைக்காரன் காலத்திற்கு முந்தைய அரசர் அல்லது சிற்றரசர் கால வளாகம் இது. திசைக் கொன்றாய் எட்டு பிரம்மாண்ட வாசல்கள். தர்பாராகவோ அந்தப் புரங்களாகவோ இருந்ததையெல்லாம் கலெக்டர் அமரும் அறையாகவோ விவசாயத்துறைக் கிடங்குகளாகவோ மாறியிருந்தன.

வளாகத்தின் வடகிழக்கில் இரண்டாள் உயரத்திற்குக் கரையான் புற்றும் சுற்றிலும் இடுப்பளவிற்குக் குத்துச் செடிகளும் அடர்ந்து கிடந்தன. தெற்கே காம்பவுண்டுச் சுவருக்கு மேலும் அடியிலும் மயில் கூட்டம் திரியும் வடதிசையில் சூரிய வெளிச்சம் படாது அடர்ந்த மரங்களிலிருந்து பறவைகளின் சப்தம் காதைப் பிளக்கும் ஆடைக்கும் கோடைக்கும் புல் மண்டிக் கிடக்கும் இந்தப் பிரதேசமெங்கும். கட்டிட வாசல்களின் நிழல்களில் புல் பத்தை பத்தையாய்க் கிடக்கும். அதனால் இந்த வளாகத்தில் கால் நடைகளின் புழக்கம் அதிகம். வளாகத்தைச் சுற்றி வீடுள்ளவர்கள் இங்குள்ள புள் படுகைகளை நம்பி மாடு ஆடு வளர்த்து வருகிறார்கள்.

இந்தக் கால்நடைகள் பெரும்பாலும் அலுவலக வாசல்களிலும் கேன்டான் ஓரங்களிலும் மனிதர்கள் நடமாடும் பகுதியாகப் பார்த்துத்தான் மேய்ந்து கொண்டும் உலாவிக் கொண்டும் திரியும். வெளி மாநிலக்கார ஒரு ஐ.ஏ.எஸ் இங்கு கலெக்டராக வந்தவர் பி.ஏ.வைக் கூப்பிட்டுக் கோபமாய் இரண்டு தகவல்களைச் சொன்னாராம். முதலாவது இந்த வளாகத்தினுள் அலையும் மனிதர்களை விடவும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகம். இரண்டாவது அவர் காருக்குக்கூட இடம் தராமல் அந்த ஒல்லித் தார் ரோடின் குறுக்கே வரிசையாய்ப் படுத்துக்கொண்டு ஆரன் ஒலிகளுக்கு மதிப்புத் தராமல் அசை போட்டபடி படுத்துக் கிடந்தன என்றாராம். அந்தக் கோபத்தோடு பல உத்தரவுகளையும் போட்டார்.

அந்த உத்தரவுகளின் படி ஆடு மாடு எதுவும் வளாகத்திற்குள் வரமுடியாதவாறு வாசல்களில் இரும்புக் குழாய்கள் பதிக்க வேண்டும். மீறி நுழையும் கால் நடைகளைப் பவுண்டில் அடைக்க வேண்டும். கால்நடை சொந்தக் காரர்கள் அபராதம் செலுத்திய பின்னர் தான் விடுவிக்க வேண்டும்.

மேற்கண்ட உத்தரவுகள் போர்க்கால வேகத்தில் அமுல் படுத்தப்பட்டன. சரியாக ஒரு மாதங்கழித்து மாடுகளும் ஆடுகளும் உள்ளே ராஜநடை போட்டன. வாசலில் பதித்த கம்பிகளின் மேல் நடக்கப் பயின்று விட்டனவாம்.

ஒரு கோர்ட்டிலிருந்து இன்னொரு கோர்ட்டிற்கு நடந்து செல்லும் நீதிபதிகளுக்கு பத்தடி முன்னால் ஆள்களை விலகச் சொல்லி அதட்டிக்கொண்டு ஓடும் டவாலிகளுக்கு இந்த ஆடுகளும் மாடுகளும் பெரும் இடையூறாயிருந்தன. அதிகாரிகள் காரிலிருந்து இறங்கி சட்டென்று அலுவலகப் படிகளில் ஏற முடியாதவாறு இவை பலநேரம் வழி மறித்தன.

எங்களது ஒரு மரத்தடிக் கூட்டத்தின் போது சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வரப் போகும் மாதங்களில் நாங்கள் நடத்தவிருந்த வேலை நிறுத்தம் பற்றி உரக்க விவாதித்துக் கொண்டிருந்தபோது மஞ்சள் பைக்காரர் வெகு அக்கறையோடு எங்களைப் பார்த்துக்கொண்டு நின்றார். அந்த மாதத்தில் ஒரு திங்கட்கிழமையன்று கலெக்டர் அலுவலக வாசலில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட வரிசையில் அவர் நிற்பதைப் பார்த்தேன். அன்று நாங்கள் மரத்தடிக்கு வரும் நேரத்தில் அவரும் திரும்பிவிட்டார். முகத்தில் எவ்வித உணர்ச்சியுமில்லை. வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம் என்று மறுபடி மறுபடி மூர்க்கமாய்ப் பேசியவைகளைக் கேட்டுக்கொண்டிருந்து விட்டுப் போனார்.

அலுவலகங்களையெல்லாம் மூடிவிட்டு நாங்களும் பள்ளிகளையெல்லாம் மூடிவிட்டு ஆசிரியர்களும் கலந்து நின்று வளாக முகப்பில் ஆர்ப்பரித்ததை தினமும் நின்று பார்த்துச் சென்றார். அப்போது மஞ்சள் பையில் ஒரு காது அறுந்து இன்னொரு காதோடு முடிந்திருந்தார். சட்டை வேட்டி நைந்து போயிருந்தது. பலநாள் போராடிவிட்டு உச்சகட்டமாய் சென்னை முற்றுகைக்காகக் கிளம்பும் கூட்டம் வெகு உக்கிரமாய் நடந்து கொண்டிருந்தபோது அவர் தலைப்பாக்கட்டி தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.

போராட்டம் முடிந்து நாங்கள் அலுவலகங்களைத் திறந்து உள்ளே போய் உட்கார்ந்துவிட்டு உற்சாகமாய் மரத்தடிக்கு வந்த போது அவர் எங்கிருந்தோ வந்துவிட்டார். இத்தனை நாட்களாய் அவர் இந்த மஞ்சள் பையோடு எங்கே இருந்திருப்பாரென்று எங்களில் யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. மாறாக அங்கு கூடுகிற எல்லோருக்கும் அவர்மேல் ஒருவித வெறுப்பு வந்திருந்தது.

அவர் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறார். எங்களுக்கென்று எந்த அந்தரங்கமும் இல்லாமல் ஆக்கி விடுகிறார். எங்கள் ஆசைகள், தவறுகள், தேவைகள், குளறுபடிகள் எல்லாமே அவருக்குத் தெரிந்து விடுகின்றன. அவரோடு சண்டை உருவாக்கி அவரை எங்கள் கூட்டங்களின் போது வந்து நிற்பதைத் தடுக்கவும் எங்களால் முடியவில்லை. எவ்வித சண்டைக்கும் கோபத்திற்கும் இயலாத தேகமும் முகமும் அவருக்கு.

பல அலுவலகங்களின் வாயில்களில் தலையில் சிவப்பு விளக்கோடு கார்களும் ஏராளமான ஜீப்களும் தடபுடலாய்த் தெரியும். முந்தைய வாரத்திலோ மாதத்திலோ நடந்த வேலைகள் பற்றி அடிக்கடி ரெவ்யூ மீட்டிங்குகள் நடக்கும். சிமிண்டுக் கலர் சபாரி அணிந்து கனத்துப் போன அதிகாரிகள் உடம்புகளைத் தூக்கிக்கொண்டு வேகம் வேகமாய்ப் படி ஏறுவார்கள். இந்த ஜீப்புகளுக்கு நடுவில் மஞ்சள் பைக்காரர் அலுவலக முகப்புகளை வெறித்து பார்ப்பதை சில தடவைகள் அந்தப்பக்கமாய்ப் போகும் போது வரும்போது பார்த்திருக்கிறேன்.

வரவர அவர் வெகுவாய் மெலிந்து கொண்டு வந்தார். தலைத் துண்டை எடுத்துஅடிக்கடி முகத்தைத் துடைத்தார். மரத்தடிக் கூட்டத்திற்கு வருவது மட்டும் நிற்கவில்லை.

ஒருநாள் மரத்தடியில் நின்று கொண்டிருக்கையில் ஒரு ஆடு சுவரருகில் அடுக்கியிருந்த செங்கல் குவியலில் ஏறியது; அப்படியே சுவர்மேல் நடந்தது. அடுத்த வக்கீல்கள் கூடத்து ஓட்டு மேல் நின்று அங்குப் பரவிக்கிடந்த மரக்கிளைகளில் புத்தம் புதிதாய்ப் பூத்திருந்த மஞ்சள் பூக்கள் ஒவ்வொன்றாய் தின்று கொண்டிருந்தது. 'இதுக அக்ரமம் தாங்கலைப்பா. இங்க பாரு ஆட்டுக்கு ரெக்கை முளைச்சு மேலே போய் ஓட்டிலே நிக்கிறதெ ' என்றார் ஒருவர்.

ஒரு சினை ஆடு மேலே நின்ற ஆட்டை ஆர்வமாய்ப் பார்த்தபடி ஓரத்தில் வளர்ந்து கிடந்த புல் கத்தையைக் கடித்துக்கொண்டு நின்றது.

மாநாடு முடிந்து கூட்டமாய் வரும்போது கீழே நின்ற சினை ஆடு எங்கள் முன்பாக திணறியபடி நடந்தது. சுற்றிச் சுற்றி வந்தது. எங்கள் கூட்டம் அதை நெருங்குமுன் ஆட்டின் பின்புறத்தில் பச்சைக் குட்டியின் தலை தெரிந்தது. பேண்ட்டும் சட்டையும் கடிகாரமுமாய் நின்ற எங்கள் கூட்டத்திற்கு என்ன உதவி செய்ய வேண்டுமென்று தெரியவில்லை.

வேறு திசையில் ஒரு வக்கீல் பின்னால் பேசியபடி போய்க் கொண்டிருந்த மஞ்சள் பைக்காரர் ஆடு நின்ற நிலையைப் பார்த்து விட்டு ஓடி வந்தார். தலைப்பாவை இறுக்கக் கட்டிக் கொண்டார். குட்டி வெளியில் வர உதவினார். குட்டியின் மேலிருந்த திரவத்தை வழித்துவிட்டு குட்டியின் நான்கு கால்களிலுமிருந்த குளம்பைக் கிள்ளி எறிந்து தரையில் விட்டார்.

குட்டி ஆடியது. விழுந்து எழுந்தது. எழுவது விழுவதுமாயிருந்தது. ஆடு குட்டியை நக்கிக் குடுத்தது. மஞ்சள் பைக்காரர் ஆட்டின் கனத்த மடியில் குட்டியை விட்டார். சிறிது நேரமானதும் குட்டியைத் தூக்கிகொண்டார். ஆடு நடந்த திசையில் குட்டியைக் கையிலேந்திக் கொண்டு நடந்தார். யார் வீட்டு ஆடோ வீடு வரை கொண்டு போய் விட்டு வருவாரென்று பேசிக் கொண்டோம். மஞ்சள் பை முழங்கையில் ஒற்றைக் காதோடு ஆடிக்கொண்டே போனது.

எங்கள் கூட்டத்தில் பதினோரு ஆண்டுகளுக்குப் பின் ஒருவர் யாருக்கும் கேட்டுவிடாத மெல்லிய குரலில் முதன்முதலாய் வாய் திறந்து சொன்னார். 'ஆட்டுக்கு என்ன செய்யணும்னு இந்தாளுக்குத் தெரியுது. இந்தாளுக்கு என்ன வேணும்னு யாருக்குமே தெரியலை. '

***************

Aug 13, 2009

கந்தர்வன் - கல் தடம்-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன்


கோயில், வழிபாட்டுக்கு உரிய இடம் மட்டுமல்ல; அதன் ஊடாக இசையும் கலையும் சிறுவணிகமும், மருத்துவ மும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்திருக் கின்றன. கோயில் ஒரு கூட்டு வெளி. அது யாருமற்றவர்களுக்கான போக்கிட மாகவும், காலத்தின் மாபெரும் சாட்சியாக வும், கோடிக்கோடி மனிதர்களின் ஆசைகளும் கனவுகளும் சமர்ப்பிக்கப் படும் இடமாகவும் இருக்கிறது.
ஆனால், பிரார்த்தனை என்பது வெறும் சடங்காகிவிட்ட சூழலில், தெய்வத்தைத் தவிர மற்ற யாவும் கவனிப்பாரற்றுப் போகத் துவங்கி விட்டிருக்கின்றன. ஓதுவார்களின் தேவாரப் பாடலும், நாகஸ்வர இசையும், படபடக்கும் புறாக் கூட்டமும், தண்ணீர் நிரம்பிய தெப்பத்தின் மீது கோபுர நிழல் ஊர்ந்துகொண்டு இருப்பதும், பண்டாரங்களின் ஞானப் பாடலும், எண்ணெய் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் தெரியும் மயக்கமான தோற்றங்களும், பிராகாரத்தை நிறைக்கும் மணியோசையும், சந்தன மணமும், கால் தூக்கி நிற்கும் யாளிகளும், உற்சவமும், உலாவும், தேரும், திருவிழாவும் கோயிலின் புராதன நினைவுகள் போலவே புதையுண்டு கிடக்கின்றன.
இன்று கோயில் ஒரு வணிக நிறுவனம். வாசலில் செருப்பை அவிழ்த்துப் போடுவதில் துவங்கி, ஒவ்வொரு பத்தடிக்கும் ஏதோ காரணம் சொல்லிப் பணம் கறக்கும் வித்தைக் கூடம். அதே கற்தூண்களும், சிற்பங் களும் இருக்கின்றன. ஆனால், அதன் மீது எரியும் டியூப் லைட்டிலிருந்து மின்சார மணி வரை உபயதாரர்களின் பெயர்கள், அவர்களின் முழு முகவரியோடு செல்போன் நம்பர் வரை பொறிக்கப்பட்டு மின்னுகின்றன. (நூற்றாண்டைக் கடந்தும் அழகு குறையாத யாளியைச் செய்த சிற்பியின் பெயரோ இன்று வரை யாருக்குமே தெரியாது!).
தரிசனத்துக்கும் முதல், இரண்டாம் வகுப்புக் கட்டணங்கள். சிபாரிசுக் கடிதங்கள், கையூட்டு, பல் இளிப்பு, என நடைமுறைத் தந்திரங்களின் கூடாரமாகிவிட்டது கோயில். அமைதி யையும் சாந்தத்தையும் இன்று கோயிலில் காண்பது அபூர்வமாகி விட்டது.
கோயிலுக்குச் செல்பவர்களில் ஒரு சதவீதம் பேர்கூட அங்குள்ள சிற்பங்களையோ, ஓவியங்களையோ, பிராகாரச் சுவர் முழுவதும் கல் வரிகளாக நீளும் கல்வெட்டுகளையோ நின்று பார்ப்பதை நான் கண்டதே இல்லை. பொதுச் சுவர்களில் சிவப்பு நிறங்களில் ஒட்டப்படும் விரை வீக்க விளம்பரங்களைக்கூட நின்று படிப்பதற்கு ஆள் இருக்கிறார்கள். ஆனால், மாறாத அழகும் புன்னகையும் கொண்ட சிற்பங்களை நேர்கொள்வதற்கு எவருமே இல்லை.
பல கோயில்களில், அங்கு பணிபுரிவர்களுக்கே எது என்ன சிற்பம் என்று பெயர்கூடத் தெரிவதில்லை. நான் கோயிலுக்குச் செல்ல நேர்ந்த சமயங்களில், வெகு அரிதாகவே சன்னதிக்குச் செல்வேன். மற்றபடி, எனக்குக் கோயில் ஒரு சிற்பக் கூடம். காலத்தின் கருவறை. வழிபாடுள்ள கோயில்களிலாவது யாராவது ஆட்கள் தென்படுகிறார்கள். கைவிடப்பட்டு தூர்ந்த நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் சிற்பங்கள் மூளியாக்கப்பட்டு, கை கால் இழந்த நிலையில் சிதறிக் கிடக்கின்றன. புளியமரத்தடியில் தேவகணங்களும், துவாரபாலகர்களும் உருச்சிதைந்து போய், கேட்பாரற்றுக் கிடக்கிறார்கள்.
சமீபத்தில், திருவிடைமருதூரில் உள்ள பாவை விளக்கைக் காண்பதற்காகச் சென்றிருந்தேன். சன்னதிக்கு அருகில் உள்ள மண்டபத்தில் நின்றிருக்கிறது அந்த விளக்கு. ஐந்தரை அடி உயர வெண்கல விளக்கு. தொலைவிலிருந்து பார்க்கும்போது யாரோ ஒரு பெண், நூற்றாண்டுகளாக கையில் விளக்குடன் நின்றுகொண்டு இருப்பது போல இருக்கிறது. அவளின் முக வசீகரமும், நகக்கண்கள்கூட துல்லியமாக வார்க்கப்பட்டிருந்த அழகுமாக, பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போன்ற ஈர்ப்பைத் தருகிற விளக்கு.
சரபோஜி மன்னர்களின் காலத்தில் வாழ்ந்த பெண் அவள். தனக்கு விருப்பமானகணவன் வேண்டும் என்பதற்காக வேண்டுதல் செய்து அதை நிறைவேற்றும் படியாக தன்னைப் போலவே வெண்கலத்தில் விளக்கு செய்து வைத்திருக்கிறாள். அந்த பெண்ணின் கண்கள் காதல் ஏறி கவிழ்ந்திருக்கின்றன. உதட்டில் சந்தோஷம் கரை தட்டி நிற்கிறது. அவள் காலடியில் உள்ள கல்வெட்டில் அவளது பிரார்த்தனையின் நோக்கம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதை வார்த்து எடுத்தவன் எத்தனை பெரிய கலைஞனாக இருந்திருப்பான்! எப்படி அவளது ஆடை மடிப்புகளைக்கூட இத்தனை சுத்தமாகச் செய்ய முடிந்திருக்கிறது அவனால்! அதுவும், அவளது கையில் உள்ள விளக்கு எரியும்போது முகத்தில் ஒளிர்ந்து படரும் சுடரொளியில் முகம் வெட்கத்தில் சுருங்கி விரிவது போலவே இருக்கிறது. இத்தனை வசீகரமும் கவனிக்கப்படாமல் ஒதுங்கியே இருக்கிறது. அவசரமும் பரபரப்பும் மிக்கவர்களாக கையில் காசை இறுக்கிப் பிடித்தபடியே சன்னதியை நோக்கி ஓடும் மனிதர்களின் கண்களில் அந்தப் பாவைவிளக்கு படுவதே இல்லை. ரயில் நிலையங்களிலும் ரேஷன் கடைகளிலும் காண முடிந்த பரபரப்பு கோயிலுக்குள்ளும் தொற்றிக்கொண்டு விட்டது.
இதன் இன் னொருபுறம், கிராமப்புற கோயில்களில் பெரும்பான்மை, சாதியைக் கட்டிக் காக்கும் காப்பரண் களாக ஆகி இருக்கின்றன. கிராமக் கோயில் எதிலும், எவரும் விருப்பம்போல நுழைந்துவிட முடியாது. ஒவ்வொரு தெய்வமும் ஒரு சாதிக்கு மட்டுமே உரியது! மற்ற எந்த சாதிக்காரனும் அந்தக் கோயிலின் வாசற்படியைக்கூட மிதித்துவிட முடியாது. ஆலயப் பிரவேசம் நடந்து ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்ட போதும், இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத கோயில்கள் பல ஊர்களிலும் இருக்கத்தான் செய்கின்றன.
ஆறு வருடங்களுக்கு முன், நானே ஒரு சம்பவத்தை நேரில் கண்டிருக்கிறேன். சிவகாசி அருகில் உள்ள சிற்றூர் ஒன்றில் உள்ள காளியம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பது தெரிந்து, அரசு அவர்கள் ஆலயப் பிரவேசம் செய்ய ஏற்பாடு செய்திருந்தது.
குறிப்பிட்ட நாளில், தாசில்தாரில் துவங்கி அத்தனை அரசு அதிகாரிகளும் அந்தக் கிராமத்தில் குவிந்தார்கள். ஆனால், எந்த மக்கள் ஆலயத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமோ, அவர்களில் ஒருவர்கூடத் தன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அரசு அதிகாரியே ஒரு தட்டில் பழம், தேங்காய் வாங்கி எடுத்துக்கொண்டு, அவர்களில் சிலருக்குத் தைரியம் சொல்லி அழைத்து வந்திருந்தார். ஆண்களும் பெண்களுமாக நாற்பது பேர் வந்தனர். கோயிலுக்குள் நுழைவதற்காக அவர்கள் வந்து நின்றபோது, அந்த முகங்களில் பயமும் நடுக்கமும் ஒளிந்திருப்பதைக் காண முடிந்தது. வயதான பெண் ஒருத்தியின் கைகள் நடுங்கின. கோயிலுக்குள் அவர்களை அனுமதித்தது தங்களுக்கு உடன்பாடில்லை என்பதுபோல, மற்றொரு மேல்சாதியினர் கோயிலை விட்டு விலகியே நின்றிருந்தார்கள்.அதுவரை இருந்த பூசாரி, அன்று தான் பூஜை வைக்க முடியாது என்று விலகிக்கொண்டார். தாசில்தாரே துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பூஜை வைத்தார்.
பூஜை முடிந்தது. பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த நாடகம் முழுவதும் ஒரு நாள்தான்! மீண்டும், அந்தக் கோயில் எந்தச் சாதிக்குச் சொந்தமாக இருந்ததோ, அவர்கள் வசமே திரும்பிப் போய்விட்டது. அன்று கோயிலில் சாமி கும்பிட வந்தவர்கள், அதன் பிந்திய நாட்களில், வேறு வேறு காரணங்களுக்காக உதைபட்டார்கள்.
வழிபாட்டை விடவும் முக்கியமானது சக மனிதனை மதிப்பதும், அவனைப் புரிந்துகொள்வதுமே ஆகும். நம்மைச் சுற்றிய மனிதர்களின் மீது தீராத துவேஷமும், பகையும், பொறாமையுமாக வாழ்கிற நாம், கோயிலில் மட்டும் எப்படிப் பரிசுத்தவாதிகளாக நடந்துகொள்ள முடியும்?
மனம் காழ்ப்பு உணர்ச்சியின் ஊற்றாக மாறிக்கொண்டு இருக்கும்போது, கருணையையும், அன்பையும் எப்படிக் கோயிலில் காண முடியும்? எளிய மனிதர்களின் விட்டுக்கொடுத்தல் எத்தகையது என்பதை நாம் உணரவே இல்லை. அடுத்தவனின் உரிமையை அபகரித்துக் கொள்வதற்குத்தான் நமது அறிவும் பலமும் அதிகம் பயன்பட்டிருக்கிறது.
கந்தர்வனின், ‘சாசனம்’ என்ற கதை எளிய மனிதர்களின் விட்டுக் கொடுத்தலையும் ஆவேசத்தையும் நுட்பமாகப் பதிவு செய்துள்ளது. கந்தர்வன் ஒரு கவிஞர். முற்போக்குச் சிந்தனையாளர். ‘விதவிதமாக மீசை வைத்தோம்... ஆனால், வீரத்தை எங்கோ தொலைத்துவிட்டோம்’ என்று பாடும் கவியுள்ளம் கொண்டவர். சிறந்த சிறுகதைப் படைப்பாளி.
‘சாசனம்’ கதை, ஒரு புளிய மரத்தைப் பற்றியது. அந்த மரம் குறவர்கள் குடிசைகளுக்கு மத்தியில் உள்ளது. பிரமாண்டமான அந்த மரத்தடியில் பன்றிகள் அடைந்து கிடக்கின்றன. கதைசொல்லி அதைத் தனது அப்பாவின் புளியமரம் என்று அறிமுகப்படுத்துகிறார்.
அருகில் உள்ள ஊர்களில் அப்பாவுக்கு நிறைய நிலங்கள் உண்டு. யாவையும் குத்தகைக்காரர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். வீட்டுத் திண்ணையில் இருந்தபடியே அப்பா அவர்களுக்கு உத்தரவு கொடுத்துக் கொண்டு இருப்பார். அந்த நிலம் யாவும் தாத்தாவுக்கு, மகாராஜா தானமாகத் தந்தவை. அதற்கு சாசனமும் இருக்கின்றன.
அப்பாவுக்கு ரொம்பவும் பிடித்த மானது அந்த கொறட்டுப் புளி தான் (குற வீட்டுப் புளி என்பதைச் சொல்லக் கூச்சப்பட்டு, கொறட்டு புளியாக்கி இருந்தார் அப்பா). ஒவ்வொரு முறை புளியம்பழங்களை உலுக்கும்போதும், அந்தப் பகுதியில் உள்ள கிழவி ஒருத்தி யும் அவளது மகளும் மரத்தடியில் வந்து நிற்பார்கள். அந்த கிழவியின் மகள் தாத்தாவின் சாடையிலே இருப்பாள். அப்பா பேசும்போது அவர்கள் வாஞ்சையாகக் கேட்பார்கள். பழம் உலுக்கி முடிந்ததும் அப்பா தன் காலால் கொஞ்சம் பழங்களை ஒதுக்கி, அந்தக் கிழவியை எடுத்துக்கொள்ளச் சொல்வார். அவள் மறுப்பேதும் இன்றி அள்ளிக்கொள்வாள். உண்மையில், அந்தப் புளியமரம் தனக்குச் சொந்தமானதுதானா என்று அப்பாவுக்கே சந்தேக மாகத்தான் இருந்தது. அதைச் சொந்தம் கொண்டாட அவரிடம் எந்தச் சாசனமும் இல்லை. ஆனா லும், அதை அனுபவித்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால், அடுத்த வருஷம் அவர் புளியம்பழம் உலுக்க ஆளைக் கூட்டிக்கொண்டு போனபோது, அந்தக் கிழவி மரம் தனக்குத்தான் சொந்தம் என்றும், அதை உலுக்கும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என்றும் அறிவிக்கிறாள்.
அப்பா கால மாற்றத்தை உணர்ந்துகொண்டு அதிர்ச்சியடைந் தவராக, வெளியேறி வீடு திரும்பி வருகிறார். ஆனால், அந்த மரம் தன்னுடையதுதானா என்று பரிசோதிக்க, அவர் சாசனம் எதையும் எடுத்துப் பார்க்கவில்லை என்பதோடு கதை முடிகிறது.
மறைமுகமாக இக்கதை விளக்குவதெல்லாம், அந்தக் கிழவி அவரது தாத்தாவின் மனைவிகளில் ஒருத்தி. அவளுக்கு உரிமையான மரத்தை இத்தனை வருடமாக அவள் அனுமதியோடு அப்பா அனுபவித்துக் கொண்டு இருந்தார். ஆனால், அதற்கான நன்றியோ, கருணையோ அவரிடம் இல்லை. முடிவாக, புளியமரத்துக்கு உரிமையானவள் குரல் தரும்போது, வழியின்றி வெறும் ஆளாகத் திரும்பிவிடுவதன் மூலம் அவர் உண்மையை ஒப்புக் கொள்வதை அறிய முடிகிறது.
பிறப்பில் உருவான பேதங்களைக் களைவதற்காகத்தான் கோயில்களும், பள்ளிக்கூடமும், அற நிலையங்களும் உருவாக்கப்பட்டன. இன்று அவையே சாதியையும், துவேஷத்தையும, வன்முறை யும் வளர்ப்பவை ஆகிவிட்டன.
சாலையோரத்தில் உள்ள நடுகல்லை ஒரு பௌத்தத் துறவி வணங்கிக்கொண்டு இருக்கிறார். அதைக் கண்ட மற்றொரு துறவி, ‘இதென்ன முட்டாள்தனம்?’ எனக் கேட்க, ‘கோயிலின் உள்ளே நீ வணங்கும் புத்தனும்கூட இதைப் போன்றதொரு கல்தானே?’ என்று சிரிக்கிறார் என்கிறது ஜென் கதை.
நிஜம்தானே! நாம் கடைப்பிடிக்க வேண்டிய சுய ஒழுக்கத்தையும், அன்பையும் தூர விலக்கிவிட்டு, அபிஷேகமும், ஆராதனைகளும் செய்வதால் மட்டும் மனம் மலர்ச்சியுற்றுவிடும் என்று நம்பினால், அதன் பெயர் முட்டாள்தனம்தான் இல்லையா?
தொழிற்சங்கவாதியாகவும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பை வகித்த கலைஞராகவும் தீவிர பங்களிப்பு செய்த கந்தர்வன், வாழ்வின் அரிய தருணங்களைக் கதைகளாக்கியவர். புதுக்கோட்டையைச் சேர்ந்த கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். Ôகண்ணதாசன்Õ இதழில் எழுதத் துவங்கிய இவர் Ôசெம்மலர்Õ, Ôசுபமங்களாÕ, ÔதாமரைÕ போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார். கவியரங்க மேடைகளில் இவர் வாசித்த கவிதைகள் இன்றும் திரும்பத் திரும்ப பாடப்பட்டு வருகின்றன. Ôமீசைகள்Õ என்ற இவரது கவிதைத் தொகுப்பும் Ôபூவுக்கு கீழேÕ, Ôசாசனம்Õ போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் மிக முக்கியமானவை. அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று சென்னையில் உள்ள அவரது மகளின் வீட்டில் வசித்தபடி இலக்கியப் பணியை மேற்கொண்டிருந்த கந்தர்வன் உடல்நலக் குறைவின் காரணமாக ஓராண்டுக்கு முன் மரணமடைந்தார்.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்