Showing posts with label தேவதச்சன். Show all posts
Showing posts with label தேவதச்சன். Show all posts

Mar 25, 2012

உலகம் ஆரம்பிக்கும்-தேவதச்சன்

.
 
காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை

காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன devathatchan34
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை.

 

உலகம் ஆரம்பிக்கும்

உலகம் ஆரம்பிக்கும் ஓசைகள் கேட்கின்றன
சிலபல
குரல்கள் மோதி
பாறை சிலையாகி
சிலபல
குரல்கள் மோதி
சிலை
பாறையாகி
தெருவில்
ரெண்டு பிள்ளைகளை
சிறகுகள் என கோர்த்தபடி
செல்லும் பெண்
பள்ளிக்கூடத்தில்
தெருவில்
நடுவீட்டில்
யாரைப் பார்த்தாலும், நல்ல செய்தி
எதுவும்
காதில் விழவில்லை

*****

நன்றி: அரியவை

Sep 5, 2010

தேவதச்சன் கவிதைகள்

1.
உபயோகமில்லாத பொருட்கள் எதையாவது எப்போதாவது
நீ கையால் தொடுகிறாயா
உபயோகமற்ற பொருட்கள் ஒரு விலங்கைப் போல்
மூச்சுவிட்டுக் கொண்டிருக்கின்றன.
அகிலம் எல்லாம் அசைந்து கொண்டிருக்கும்போது devathatchan
அவைகள் அசைவற்று நிற்கின்றன. 
நாளைக்காலை, இந்தக்
கனியின் தோல்
குப்பைக் கூடையில் கிடக்கும்
அப்போது அது
காணும் கனவுகளிலிருந்து அதுவும்
தப்பிக்க முடியாமல் போகும்,
மூலைக்கு மூலை தள்ளி விடப்பட்ட
முதியவர்கள் போல.
எனினும் நம் விரல்களுக்கு, ஏதோ
வினோத சக்தி இருக்கிறது
உபயோகமற்றபோதும், உடைவாளை சதா
பற்றிக் கொண்டிருக்கிறது
சென்று வாருங்கள், உபயோகமற்ற பொருட்களே
நீங்கள்
இன்னொரு ஆறைப்போல் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்
எப்போது வேண்டுமானாலும் திரும்பி வாருங்கள்
வந்து,
மீண்டும் மீண்டும்
அன்பின் தோல்வியைக் காணுங்கள்.


2.
அடுக்குமாடிக் கட்டிடத்திலிருந்து
விழுந்து கொண்டிருந்தனர்.
பாதித் தூரம் செல்கையில்
மீனாய் மாறினர்
மூச்சுத் திணறி துடித்தனர்
தொடர்ந்து விழுகையில்
பிறந்து இரண்டுநாள் ஆன
குருவிக் குஞ்சாய் ஆயினர்.
அவர்களது
பழுப்பு நிற உடல் நடுநடுங்கி
குப்புற விழுகையில்
தரையைத் தொட்டு
கூழாங்கல்லாய் தெறித்தனர்
பூமிக்குள் விழுந்து
பூமிக்குள்ளிருந்து வெளியேறுகையில்
ரோமங்கள்
முளைத்த ரத்தம் ஆனார்கள்
ரத்தம்
எனச் சொட்டி,சொட்டு சொட்டாய்
அடுக்குமாடிக் கட்டிடத்திலிருந்து
விழத் தொடங்கினர்
எல்லோரும் சுற்றியிருக்கும்போது,
அவனும் அவளும்
யாருமில்லாது
அடுக்குமாடிக் கட்டிடத்திலிருந்து
விழுந்துகொண்டிருக்கின்றனர்.


3.
தப்பித்து
ஓடிக்கொண்டிருக்கிறது, ஆறு
பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து.
அதன் கரையோர நாணலில்
அமர்ந்திருக்கிறது
வயதான வண்ணத்துப்பூச்சி ஒன்று.
அது இன்னும் இறந்து போகவில்லை
நமது நீண்ட திரைகளின் பின்னால்
அலைந்து திரிந்து களைத்திருக்கிறது
அதன் கண்கள் இன்னும் நம்மைப்
பார்த்துக் கொண்டிருக்கின்றன
பசியோடும் பசியோடும்
யாருமற்ற வெறுமையோடும்.
அதைச்சுற்றி, கொண்டாடி கொண்டாடி
பிடிக்கவரும் குழந்தைகளும் இல்லை.
அதன் சிறகுகளில் ஒளிரும்
மஞ்சள் வெளிச்சம்
காற்றின் அலைக்கழிவை
அமைதியாய் கடக்கிறது
நீ
திரும்பிப் போனால், இப்போதும் அது
அங்கு
அமர்ந்திருப்பதைக்
காணலாம். உன்னால்
திரும்பிச் செல்ல முடிந்தால்

Jul 31, 2010

அத்துவான வேளை – தேவதச்சன்

தேவதச்சன் கவிதைகள்

நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன்
ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன
சட்டையை தொளதொள வென்றோ
இறுக்கமாகவோ போடுகிறாய்
தலைமுடியை நீளமாகவோ
குறுகவோ தரிக்கிறாய்devathachan
உன்னிடமிருந்து பறந்து சென்ற
இருபது வயது என்னும் மயில்
உன்
மகளின் தோள் மீது
தோகை விரித்தாடுவதை
தொலைவிலிருந்து பார்க்கிறாய்
காலியான கிளைகளில்
மெல்ல நிரம்புகின்றன,
அஸ்தமனங்கள்,
சூரியோதயங்கள் மற்றும்
அன்பின் பதட்டம்

*

கைலாசத்தில்
புதரோரம்
ஒட்டாமல் கிடந்த
சிவனின் இடது பாகமும்
பார்வதியின் வலதும்
சரிந்து பூமியில் விழுந்தன
சாமிகளின் உடம்பில்லையா
காலங் காலங் காலமாய்
அழுகிக் கொண்டிருக்கிறது
தம் வீடுகளில்.

*

காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை.

*

பழத்தை சாப்பிட்டு விடு
நாளைக்கென்றால் அழுகிவிடும்
என்றாள் அம்மா
வாங்கி விண்டு
உண்டேன்
இன்றை.

____________________________________

அத்துவான வேளை தொகுப்பிலிருந்து வெளியீடு: முகவரி, சென்னை - 59

Jun 4, 2010

சப்தமும் நிசப்தமும் -தேவதச்சனின் கவிதை-பாவண்ணன்

ல்லாப் பூங்காக்களிலும் காலைநடைக்காகவென்றே சதுரக்கற்கள் அடுக்கப்பட்டு செப்பப்படுத்தப்பட்ட வட்டப்பாதைகள் இப்போது உருவாகிவிட்டன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவை அனைத்தும் வெறும் ஒற்றையடிப்பாதையாகவே இருந்தன. அந்த நாட்களில் பூங்காவில் ஒரு பெரியவர் எனக்கு அறிமுகமானார்.எழுபதை நெருங்கிய வயது.மெலிந்த தோற்றம். படியப்படிய வாரிய அவருடைய வெளுத்த தலைமுடிக்கோலம் வசீகரமானது. இரண்டு அல்லது மூன்று devathachan சுற்றுகள்மட்டுமே நடப்பார். வேகநடையெல்லாம் கிடையாது. எல்லாத் திசைகளிலும் வேடிக்கை பார்த்தபடி மெதுவாகவே செல்வார். பிறகு, ஒரு மஞ்சட்கொன்றை மரத்தடியில் போடப்பட்டிருக்கும் சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்துகொள்வார். எதிரில் இறகுப்பூப்பந்து விளையாகிற சிறுமிகளையும் அருகில் இருக்கிற தோப்பையும் சுற்றுச்சுவரையும் சாலையையும் கடந்து செல்லும் வாகனங்களையும் மாறிமாறி வேடிக்கை பார்ப்பார். ஒரு குறிப்பிட்ட நேரம்வரை அப்படியே உட்கார்ந்திருந்துவிட்டு எழுந்து சென்றுவிடுவார். தொடர்ச்சியாக சந்தித்துக்கொள்வதன் அடிப்படையில் பார்க்கும்போதெல்லாம் புன்சிரிப்பு சிந்தி,வணக்கம் சொல்லி, பெயர் சொல்லி அறிமுகமாகி, நெருக்கமாகப் பேசத் தொடங்குவதற்கு ஏறத்தாழ இரண்டு மாதங்கள் பிடித்தன. பேசிப்பேசித்தான் அவருடைய மனதைப் புரிந்துகொண்டேன்.

அவருடைய மனைவி கடந்த ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் இறந்துபோய்விட்டார். அதுவரைக்கும் இந்தப் பூங்காவுக்கு பல ஆண்டுகளாக காலைநடைக்கு இருவருமாகவே வருவார்கள். மனைவி ஆறு சுற்றுகளோடு நடையை முடித்துக்கொண்டு இதே சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்துகொள்வார்.கணவர் கூடுதலாக இரண்டு சுற்றுகள் சுற்றியபிறகு அருகில் சென்று உட்கார்வார். சிறிது நேரம் வேடிக்கை, சிறிது நேரம் பேச்செனப் பொழுதைக் கழித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிப் போய்விடுவார்கள். இப்போது மனைவி இல்லை. ஆனால் பூங்காவுக்குள் வந்ததுமே மனைவியும் கூடவே நடந்துகொண்டிருப்பதாக ஒரு உணர்வு தோன்றத் தொடங்கிவிடுகிறது.பெஞ்சில் அமர்ந்திருக்கும்போது அவரும் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதாகவும் தோன்றத் தொடங்கிவிடுகிறது. மனைவி இல்லாத வாழ்வு ஒரு பெரும் பாரமென்ற எண்ணமே அவருக்கிருந்தது. ஒரு கட்டத்தில் மனைவியுடன் புழங்கிய இடங்கள் அனைத்தும் அவருடன் நிகழ்த்திய உரையாடல்களையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவருவதை உணர்ந்தார்.பிறகு, அமைதியான பூங்காவில் எந்த இடத்தில் இருந்தாலும் அவருடைய உரையாடல்கள் காதில் விழத் தொடங்கிவிட்டன. மனைவி மறைந்துவிட்டார் என்கிற எண்ணம் பெரும்பாலும் எழுவதில்லை என்றும் இல்லாமையிலும் அவருடைய இருப்பை ஒவ்வொரு கணத்திலும் உணர்ந்தபடியே இருக்கிறேன் என்றும் சொல்லி முடித்தார். அவர் சொல்லச்சொல்ல வியப்பில் மூழ்கினேன் நான். சிமென்ட் பெஞ்சில் தனக்கு அருகேயே தன் மனைவி உட்கார்ந்திருப்பதுபோன்ற நம்பிக்கையை அவருடைய கண்களில் கண்டேன்.

இருப்புக்கும் இல்லாமைக்குமான பொதுவரையறைகளை வகுப்பது கடினம் என்று தோன்றுகிறது. ஒவ்வொன்றுக்கும் சான்றுகளைக் கோருகிற அறிவியலின்முன் இருப்புக்கும் இல்லாமைக்குமான வரையறைகள் கறாராக உள்ளன. ஆனால் மனஉலகத்தில் அவ்வரையறைகளுக்கு இடமே இல்லை. "சிவபக்தனின் வீட்டுமுற்றம் வாரணாசி என்பது பொய்யோ?" என்று கேள்வி கேட்கிற அக்கமகாதேவியின் கவிதையில் அவ்வரையறைகள் சரிந்துபோகின்றன. அக்கவிதையில் "சிவபக்தனின் வீட்டுமுற்றத்தில் எட்டுவகைத் தீர்த்தங்களும் நின்றிருக்கின்றன என்றும் சுற்றிவர ஸ்ரீசைலம்,அக்கம்பக்கம் கேதாரம் என்றும் அங்கிருந்து வெளியே ஸ்ரீவாரணாசி" என்றும் சொல்லிக்கொண்டு போகிறார். தன் வீட்டு முற்றத்தில் வளர்கிற ஒரு மரத்தை தன் அக்காவின் இருப்பாக நம்புகிற தலைவியை நம் அகப்பாடல் ஒன்றில் காணலாம். இன்றும் கைக்குட்டையையும் எழுதுகோலையும் கையெழுத்து போட்டுக்கொடுத்த புத்தகங்களையும் நினைவுச்சின்னங்களாகப் போற்றிப் பாதுகாத்துக்கொண்டிருப்பவர்கள் பலருண்டு. நண்பர் ஒருவருடைய வீட்டில் பார்வையாளர்கள் அறையில் பொம்மைகளும் பல கலைப்பொருட்களும் வரிசையில் வைக்கப்பட்டிருந்த சுவரடுக்கில் ஒரு சின்ன வெள்ளிக்கோப்பை இருப்பதைப் பார்த்தேன். என் கண்கள் அதன்மீது பதிவதைப் பார்த்த நண்பர் தான் பள்ளியில் படித்த காலத்தில் கால்பந்து விளையாட்டில் தொடர்ந்து பங்கேற்று பல சுழற்கோப்பைகளை பள்ளிக்கு வாங்கித் தந்ததற்காக பள்ளியின் சார்பில் பாராட்டி வழங்கப்பட்ட கோப்பை என்று கண்கள் மின்னச் சொன்னார்.அவருடைய கண்களில் விரிந்த மைதானமொன்றில் பந்தைத் துரத்திக்கொண்டு ஓடுகிற ஒரு சிறுவனின் நிழல் விரிவதை என்னால் உணரமுடிந்தது.அக்கோப்பையின் இருப்பின் வழியாக அந்த இளமையின் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தேவைப்படும்போதெல்லாம் அவர் மீட்டெடுத்துக்கொள்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.

இருப்பு மற்றும் இல்லாமை சார்ந்த ஒரு வரையறையை வழங்குகிறது தேவதச்சனின் கவிதை. இக்கவிதையில் நுட்பமான ஒரு காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது. துணிதுவைக்கும் ஒருவருக்கருகே இரைச்சலிடும் குருவிகளின் கூட்டத்தை முதலில் முன்வைக்கிறது கவிதை.துணிதுவைக்கிறவரின் மனம் அந்த இரைச்சலை உள்வாங்கிப் பதித்துக்கொள்கிறது. அதையே ஒரு இசைத்துண்டைப்போல அவர் மனம் மீண்டும்மீண்டும் அசைபோடுகிறது. இடையில் அக்குருவிகள் பறந்துபோகின்றன. துணிதுவைக்கிற சத்தத்தைத் தவிர வேறெந்த சத்தமும் இல்லை. எங்கும் நிசப்தம். ஆனாலும் நிசப்தத்தை ஊடுருவிக்கொண்டு குருவிகள் இரைச்சலிடுவதாக உள்ளூர அவர் மனம் கற்பத்துக்கொள்கிறது.வெளியே, குருவிகளும் இல்லை. இரைச்சலும் இல்லை. அவை இடம்மாறி உள்ளே இடம்பிடித்துவிடுகின்றன. எவ்வளவு ஆழ்ந்த நிசப்தத்திலும் அந்த சப்தங்களின் கலவை ஒலித்தபடியே இருக்கிறது. சத்தம் என்பது இருப்பு.சத்தமின்மையின் வழியாக உணர்கிற சத்தம் என்பது இல்லாமையின் ஊடே உணரப்படுகிற இருப்பு.

முதலில் ஒன்றின் இருப்பை நேருக்குநேராக, வெகு அருகில் உணர்கிறது நம் மனம். அதன் ஒவ்வொரு அசைவையும் ஆழமாக நினைவில் வைத்துக்கொள்கிறது. இருப்புடன் உருவாகும் தொடர்ச்சியான ஓர் உறவு அந்நினைவுகளைப் பசுமையாகப் pavannan பேணிப் பாதுகாக்கிற உந்துதலைத் தருகிறது.பிறகு, இல்லாத போதும் அந்நினைவுகள்வழியாக அந்த இருப்பு தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது. சுருக்கமாக, இன்னொரு விதமாகவும் சொல்லிப் பார்க்கலாம். இப்போது கடந்த காலம் என்பது இல்லை. ஆனால் கடந்த காலத்தின் அடையாளமாக இருக்கிற எண்ணற்ற சிற்பங்கள், சுவடிகள்,பாடல்கள், வழிபாட்டுத்தலங்கள் மீண்டும்மீண்டும் அக்காலத்துக்குள் சென்றுவர நமக்கு வழிவகுத்துத் தருகின்றன. தாராசுரம் கோயில் வளாகத்துக்குள் நடக்கும்போதெல்லாம் குந்தவை நாச்சியார் அதோ அந்தப் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறார் என்கிற எண்ணம் எழாமல் இருப்பதில்லை. கல்கியின் புதினத்தைப் படிக்கும் ஒவ்வொருவருடைய செவியருகிலும் குதிரைகளின் குளம்போசை கேட்காமல் இருப்பதில்லை. கங்கைகொண்ட சோழபுரத்தின் ஆலயவெளியில் நாம் சுற்றிக்கொண்டிருக்கும்போது ராஜேந்திர சோழன் உள்ளே கருவறையில் இருப்பதுபோன்ற உணர்வே எழுகிறது.

வரையறுக்கப்பட்ட பொருளைத் தாண்டி குருவியையும் அதன் சத்தத்தையும் படிமமாக விரிவாக்கிப் பார்த்தால், மானுட உறவாக முதலில் விரிவடைவதைக் காணலாம். நம் உறவினர்களும் மனத்துக்குப் பிடித்தமானவர்களும் நண்பர்களும் எப்போதும் நம் அருகிலேயேவா இருக்கிறார்கள்? இல்லையே.நினைவுகள் வழியாகவும் சொற்கள்வழியாகவும் அல்லவா, அவர்கள் நம்மோடு உறவுள்ளவர்களாக இருக்கிறார்கள். இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

*

 

தேவதச்சன்

துணி துவைத்துக்கொண்டிருந்தேன்

காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்

தொடர்ந்து துவைத்துக்கொண்டிருந்தேன்

காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்

அடுத்த துணி எடுத்தேன்

காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்

*

நவீனத் தமிழ்க்கவிதை உலகில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த முக்கியக் கவிஞர் தேவதச்சன். தேவதச்சனும் ஆனந்த்தும் எழுதிய கவிதைகள் ஒருங்கே தொகுக்கப்பட்டு அவரவர் கைமணல் என்கிற தலைப்பில் வெளிவந்து நல்ல வாசக கவனத்தைப் பெற்றது. படிமத்தன்மையை இயல்பாக அடைகிற இவருடைய கவிதைகள் மிகச்சிறந்த வாசிப்பனுபவம் வழங்கக்கூடியவை.இவருடைய எல்லாக் கவிதைகளையும் அடங்கிய தொகுப்பு ’கடைசி டினோசர்’என்கிற தலைப்பில் உயிர்மை வெளியீடாக வந்தது. அதற்குப் பிறகு எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பான ’யாருமற்ற நிழல்’ உயிர்மை சமீபத்தில் வெளிவந்த கவிதைத் தொகுதிகளில் மிகச்சிறந்த ஒன்று.

******

May 29, 2010

அன்பின் எழுத்துகள்-தேவதச்சன்

குருட்டு ஈ

ஆஸ்பத்திரியில்
வெண்தொட்டிலில்
சுற்றுகிறது
இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின்
மூச்சொலி
பார்க்கப் devathachan3
பயமாக இருக்கிறது
சுவரில்
தெரியும் பல்லி
சீக்கிரம் கவ்விக் கொண்டு
போய்விடாதா
என் இதயத்தில்
சுற்றும் குருட்டு ஈயை
**


பரிசு

என் கையில் இருந்த பரிசை
பிரிக்கவில்லை. பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
என் அருகில் இருந்தவன் அவசரமாய்
அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்
மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
பரிசு அளித்தவனோடு
விருந்துண்ண அமர்ந்தோம்
உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன ஆயிரம் சொட்டுகள்
**


அன்பின் எழுத்துகள்

எங்கு வைப்பேன் உன் அன்பின் எழுத்துக்களை
யாருக்கும் தெரியாத ரகசிய இடம் ஒன்று
வேண்டும் எனக்கு. சின்ன
குருவிக்குஞ்சை வைப்பது போல அங்கு
உன் கடிதத்தைச் சேர்க்க விரும்புகிறேன்
எங்கு இருக்கிறது அது
எங்கும் இல்லை
என் நினைவுகளில் அது வளரட்டும் என்று
கடந்து செல்லும் அந்திக் காற்றில்
விட்டுவிடச் செல்கிறேன்
என் உடலிலிருந்து நீண்டு செல்கிறது
உன் நிழல்
வெளியே வெளியே தெரிந்தாலும்
நிழல்கள்
ஒளிந்திருப்பதற்கு
உடலைத் தவிர வேறு இடம்
ஏது
**

தன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய்
நிற்கிறாள் சிறுமி
கேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது
மூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள்
சூத்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன
அவள்
கண்ணுக்கு அடங்காமல்
கனரக வாகனங்கள் அவளைக்
கடந்து சென்றன
வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில்
இன்னொரு பகலில் போய்க்
கொண்டிருக்கும் குண்டுப்பெண்
சிறுமியின் ஷூ லேஸ்
அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள்
சொல்லவிரும்பிக் கை அசைத்தாள்
சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது
கொஞ்சம் புரியவில்லை.
*****

குனிந்து
எடுத்தேன்
வேப்பம்பூ என்னும்
பிரம்மாண்டமான கோட்டையை
வேறு எந்த
நெடியும்
உள்ளே புகமுடியாத
வீடு
அது.
வாசனை என்னும்
சுரங்கத்தின்
வெளிவழி நோக்கி
ராட்சசக் கழுகொன்று, என்னை
கவ்விக் கொண்டு பறக்கிறது.
கோட்டைக்குள்
பார்க்கவென்று
எல்லாம் தெளிவாகத் தெரிகின்றன
காதலின்
நடமாட்டம் ஒன்றைத் தவிர.

*****

May 15, 2010

கல் எறிதல்-தேவதச்சன்


வானவில்கள்

அது
நிறங்கள் அடர்த்தியாகிக்
கொண்டுவரும் வானவில். என்
வீட்டின்மேல் அழகாய் வட்டமிடத் devathachan
தொடங்கியது
“எவ்வளவு பெரிய வில். உள்ளே
வந்தால் வீடு 
உடந்துவிடும்தானே” என்கிறார்கள்
உறவினர்கள்
“வில்லும் உடைந்துதானே
போகும்” என்கிறார்கள்
நண்பர்கள்
கண்ணில் வழிந்தோடு
குமிழிகளில்
தானே வளர்கிறது
சப்தத்தைக் கடந்த அன்பில் வில்
தோன்றித் தோன்றி மறையும் சாலைகளாக
வளைந்திருக்கும்
வானவில்லுக்குள்ளே
இருக்கிறது என் ஊர்.
ஊருக்குள்ளே இருக்கிறது
என் வீடு,
எப்போதும்
கதவுகள் மூடியிருக்கும்
என் சின்னஞ்சிறிய வீடு

கல் எறிதல்
ஆளாளுக்கு கல் எடுத்து
எறிந்தனர். என் கையிலும்
ஒன்றைத் திணித்தனர்

உள்ளங்கையை விரித்து
மலைத்தொடர் வடிவத்தில்
இருந்த கல்லைப் பார்த்தேன்

உற்று நோக்கினேன்
உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். ஓசையற்று
மலைத்தொடர் மறைந்தது

வெறுங்கையை வேகமாக
வீசினேன்.
விடைபெறும் முகமாகவும்
என்னையும்
தூக்கிச் செல்லேன் என்று
இறைஞ்சும் விதமாகவும்.

காத்திருத்தல்

நிறையப் பேர் உறங்கியபடி காத்திருக்கிறார்கள்
உறவுப்பெண்கள் தேநீர் குடித்தபடி
சித்ரகுப்த நயினார் கதையைப் பாடியபடி
நடுவீட்டில், முதுமகள், இறந்தபடி காத்திருக்கிறாள்
நடுச்சாமம் நகர்வதற்கு
பொழுது புலர்வதற்கு
ரத்த உறவுகள் காலையில்
கதறியபடி வருவதற்கு
சாவின் கண்ணாடி காத்திருக்கிறது.
பக்கத்து வீட்டு ஜன்னலை மூடி
தன் பருத்த காம்புகளை
கணவனுக்கு ஈந்து
இறுகப் புணரும் இளமகளின் நாசியில்
வந்துவந்து போகிறது பத்திவாசனை.
தெருவில்
கலைந்து கிடக்கும்
இரும்புச் சேர்களில்
காத்திருக்கிறது
நிலவொளி.

*****

துணி துவைத்துக்கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக்கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்

******

தன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய்
நிற்கிறாள் சிறுமி
கேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது
மூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள்
சூத்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன
அவள்
கண்ணுக்கு அடங்காமல்
கனரக வாகனங்கள் அவளைக்
கடந்து சென்றன
வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில்
இன்னொரு பகலில் போய்க்
கொண்டிருக்கும் குண்டுப்பெண்
சிறுமியின் ஷூ லேஸ்
அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள்
சொல்லவிரும்பிக் கை அசைத்தாள்
சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது
கொஞ்சம் புரியவில்லை

****

ஆற்றைக் கடந்து செல்லும் காகம்
களைத்திருப்பது போல் தெரிகிறது
ஞாபகத்தின் அமிர்தத்தை
தட்டிவிட்ட
சப்தத்தில்
உடல் முழுக்க வெளிறியிருக்கிறது

ஓவியத்துக்கும் தாளுக்கும்
நடுவே உள்ள
இடைவெளியில்
அசைந்தபடி செல்கின்றன
சோர்வுற்ற அதன் இறக்கைகள்

******

May 1, 2010

தேவதச்சனின் கவியுலகம்-எஸ். ராமகிருஷ்ணன்

எஸ். ராமகிருஷ்ணன்

கவிதை சொற்களால் உருவாக்கபட்டிருந்த போதும் சொல்லைக் கடந்து செல்வதே அதன் முக்கியப் பணியாக இருக்கிறது. சொற்களை அது முடிந்த ஒன்றாக கருதுவதேயில்லை. மாறாக சொல்லை அதன் நேரடி அர்த்தம் சார்ந்து மட்டும் பிரயோகம் செய்யாமல் சொல்லுக்கும் பொருளுக்குமான இடைவெளியை, devathachanசாத்தியப்பாடுகளையும் எதிர்நிலைகளையும் உருவாக்க விளைகிறது.

கவிஞன் கவிதையின் வழியாக உலகை ஒன்றிணைக்கவும் சிதறடிக்கவே ஒரே நேரத்தில் விரும்புகிறான். காட்சிகளையும் சப்தத்தையும் படிமங்களையும் கொண்டு உலகின் மீதான தனது வேட்டையை நிகழ்த்துகிறான். கதையாசிரியனைப் போல அவன் சம்பவங்களின் மீதும், சம்பவங்களை உருவாக்கும் காரணிகளின் மீதும் இயங்குவதில்லை. மாறாக தண்ணீரின் மீது கல்வீசுகையில் தத்தித்தத்தி மறையும் தாவுதல் போல மொழியின் வழியே மொழி கடந்த அனுபவங்களை உருவாக்கிக் காட்டுகிறான்.

நான் கவிதைகளை மிகவும் தேர்வு செய்தே வாசிக்கிறேன். கவிதைக்கும் எனக்குமான உறவு காரணங்களால் விளக்க முடியாதது. கவிதையின் வழியே நான் கண்டு உணரும் நிலைகளும் அப்படியே.

தேவதச்சனின் கவிதைகளைக் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாசித்து வருகிறேன். என் மனதிற்கு மிக நெருக்கமான கவிதைகள் அவருடையது. நேர்பேச்சிலும் கவிதையிலும் அவரது கவித்துவமான, தனித்தன்மைமிக்க பார்வைகளை அறிந்திருக்கிறேன்.

தேவதச்சனின் கவிதைகள் தமிழ்வாழ்வியலின் நுட்பமான பதிவுகளை கொண்டிருக்கின்றன. மிக அபூர்வமான கவித்துவப் படிமங்களையும் பார்வைகளையும் வெளிப்படுத்துகின்றன. தத்துவச் சார்பு கொண்டது போன்ற தோற்றம் கொண்டிருந்த போதும் இக்கவிதைகள் வாழ்வைக் கொண்டாடுகின்றன.

தினசரி வாழ்வின் மீது இத்தனை ருசி கொண்ட கவிஞன் வேறு எவருமிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தேவதச்சனின் கவிதைகள் தினசரி வாழ்வின் விசித்திரங்கயும் அற்புதங்களையும் மிக அண்மையில் சென்று ரசிக்கின்றன. கவிதையின் வழியாக அவர் தமிழ்வாழ்வின் நினைவுகளை மீள்பரிசீலனை செய்கிறார். இயேசுநாதரும் கண்ணகியும் ஆண்டாளும் அவரது கவிதைக்குள் இதுவரை அறியப்பட்டிருந்த கருத்துவருங்களை கலைந்து பிரவேசிக்கிறார்கள்.

சில ஆண்டுகாலம் சங்கக் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்த போது நான் அடைந்த மகிழ்வும் அகவெழுச்சியும் அளப்பறியது. தனிமை உணர்வை சங்கக் கவிதைகளைப் போல மிக நுட்பமாக வேறு கவிதைகள் எதிலும் உணர்ந்ததில்லை. காத்திருத்தல் என்ற ஒற்றை உணர்வினை இசையைப் போல பல்வேறு உயர்தளங்களில் சஞ்சாரம் செய்ய வைக்கின்றன சங்கக் கவிதைகள்.

சங்க கவிதையின் குரல் வெகு அந்தரங்கமானது. அது பால் பேதமற்றது. கவிதையில் ஒலிக்கும் நான் நாம் அறிந்த பெண்ணோ, ஆணோ அல்ல. மாறாக எப்போதுமிருக்கும் உணர்வெழுச்சியின் குரல் என்று கொள்ளலாம்.

சங்கக் கவிதைகளின் நுட்பம் அவை கவிதையின் வழியே அடையாளம் காட்டும் நிலவெளி காட்சிகள், உணர்வு ஒப்புமைகள். ஒவ்வொரு கவிஞனும் தனக்கென தனியான கவி உவமைகளையும் மொழி நுட்பத்தையும் அகப்பார்வையும் கொண்டிருக்கிறான் என்பதை உணர முடிகிறது.

எனக்கு விருப்பமான தேவதச்சனின் சில கவிதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு வண்ணத்துபூச்சி

நான்
உயர்நிலைப் பள்ளியில் நுழைந்த போது கூடவே
ஒரு வண்ணத்துப்பூச்சி நுழைந்தது
அது மஞ்சள் நிறத்தில் இருந்தது
அப்போது என் வயது பத்து
பொறுமையற்ற வருடங்கள் கழித்து
நான் வெளியேறியபோது
என் இடது தோளின் மேலாகப் பறந்து
வெளியேறியது . அப்போதும்
அது மஞ்சளாகவே இருந்தது
நரைக்கூடிக் கிழப்பருவம் எய்தி
கடவுள் தன் ரகசியங்களை மாட்டி வைத்திருக்கும்
ஆலமரத்தின் அருகில் நிற்கும்போது என்
முகத்தின் குறுக்காக விரைந்து சென்றது
அப்போதும் அது மஞ்சளாகவும் சிறியதாகவும்
இருந்தது.
தன் இரண்டு ஜன்னல்களைத்
திறந்து அலைபாயும் மஞ்சள் கடலைக் காட்டும்
வண்ணத்துப்பூச்சி
என்னைப்பற்றி
என்ன கதையடிக்கும்.
**

மழை

மழையின்
பெரிய புத்தகத்தை
யார் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில்
நீர்
வழிந்து கொண்டிருக்கிறது
**

அன்பின் சிப்பி
என் அன்பின் சிப்பியை
யாரும் திறக்க
வரவில்லை
கடல்களுக்குக் கீழ்
அவை
அலைந்து கொண்டிருக்கின்றன
ஒட்டமும் நடையுமாய்.
**

குருட்டு ஈ

ஆஸ்பத்திரியில்
வெண்தொட்டிலில்
சுற்றுகிறது
இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின்
மூச்சொலி
பார்க்கப்
பயமாக இருக்கிறது
சுவரில்
தெரியும் பல்லி
சீக்கிரம் கவ்விக் கொண்டு
போய்விடாதா
என் இதயத்தில்
சுற்றும் குருட்டு ஈயை
**

பரிசு

என் கையில் இருந்த பரிசை
பிரிக்கவில்லை. பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
என் அருகில் இருந்தவன் அவசரமாய்
அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்
மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
பரிசு அளித்தவனோடு
விருந்துண்ண அமர்ந்தோம்
உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன ஆயிரம் சொட்டுகள்
**

அன்பின் எழுத்துகள்
எங்கு வைப்பேன் உன் அன்பின் எழுத்துக்களை
யாருக்கும் தெரியாத ரகசிய இடம் ஒன்று
வேண்டும் எனக்கு. சின்ன
குருவிக்குஞ்சை வைப்பது போல அங்கு
உன் கடிதத்தைச் சேர்க்க விரும்புகிறேன்
எங்கு இருக்கிறது அது
எங்கும் இல்லை
என் நினைவுகளில் அது வளரட்டும் என்று
கடந்து செல்லும் அந்திக் காற்றில்
விட்டுவிடச் செல்கிறேன்
என் உடலிலிருந்து நீண்டு செல்கிறது
உன் நிழல்
வெளியே வெளியே தெரிந்தாலும்
நிழல்கள்
ஒளிந்திருப்பதற்கு
உடலைத் தவிர வேறு இடம்
ஏது
**
இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதி வரும் தேவதச்சன். தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டியில் வசிக்கிறார்.

இவரது கவிதைகள் கடைசி டினோஸர் , யாருமற்ற நிழல் என்று இரண்டு தொகுதிகளாக உயிர்மை பதிப்பகத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது
**

நன்றி : http://www.sramakrishnan.com/

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்