Showing posts with label ரவிசுப்ரமணியன். Show all posts
Showing posts with label ரவிசுப்ரமணியன். Show all posts

Apr 17, 2013

நாதவனத்தை நிர்மாணிக்கும் அபியின் படிமங்கள் - ரவிசுப்ரமணியன்

பாரதியும் பாரதிக்குப்பின் பிச்சமூர்த்தியும் தொடங்கிவைத்த புதுவித எழுத்து முறைமைகள்தான், அறுபதுகளில் கவிதை இயக்கம் வேர்பிடித்து வளர அடி மண்ணாய் இருந்ததெனச் சொல்லலாம்.
அந்த வளத்தில் விளையத் துவங்கியவை இன்றும் சங்கிலித்தொடராய் மகசூல்கள் தந்தவண்ணம் இருக்கின்றன. அப்போது ஏராளமான கவிகள் வந்தனர். பல குழுவினராய் பிரிந்து இயங்கி, கவிதைத் துறைக்கு வளம் சேர்த்தனர். ஒரு கோணத்தில் பாரதியிலிருந்தே தமிழின் அரூபக் கவிதைகளும் தொடங்கிவிட்டன என்றாலும், அவருக்குப் பின், அதில் குறிப்பிடும்படி இயங்கியவர், தருமுசிவராம் என்கிற பிரமிள். அதன் பின், முப்பதாண்டுகளுக்கும் மேலாக அரூபக்கவிதைகளில் மட்டுமே மனஓர்மை கொண்டு இயங்கி, தன்னையே அந்த அரூப கவிமொழிக்கு ஒப்புக் கொடுத்து விட்டவர்ravisub88 அபி.

ஒரு வகைப்பாட்டிற்காக பிரமிளை இங்கு சேர்த்தாலும் அவரது இயங்கு தளங்களின் திசைகளும், அவர் ஏற்படுத்திய சாதக பாதக விளைவுகளும் முற்றிலும் வேறானவை. அபிக்கோ கவிதை மட்டுமே களம். தன் கவிதைக்கு ஆதர்சமும் வாரிசுமில்லாத அபூர்வ கவி அபி. இரைச்சல்களுக்கே ஆட்பட்ட நமக்கு, அவரது மௌனத்தை உணர்வது கடினம்தான். அவர் நுட்பமான வாசகனுக்கு பிடிபடலாம். பிடிபட்டது போல போக்கு காட்டி, ஓடலாம். அல்லது பிடிபட்டுவிடாமலேயே கூடப் போகலாம்.

அபியின் கவிதைச் சாதனைகளில் முதன்மையானது, மொழியிலிருந்து அதன் அர்த்தத்தை வெளியேற்றிவிட்டு, புதிய கவிதை மொழியை கவிதைக்குள் உருவாக்கியிருப்பதுதான். அகச் சலனங்களை நோக்கியே இயங்கும் இவரது கவிதைகள், அரூப நிலைகளிலேயே மையங்கொண்டு திளைக்கின்றன. தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்தில், யாரோடும் ஒப்பிட முடியாத, யாரின் சாயலுமற்ற தனிப்பாதையைத் தனக்கென வகுத்துக் கொண்டவர் அபி. அதுவே பொது புத்திக்கு அவர் உறைக்காமல் போனதற்கும் காரணமாக அமைந்து விட்டது.

அரைநூற்றாண்டைக் கடந்த தமிழின் நவீனக் கவிதை வரலாற்றில், சட்டெனக் கண்ணுக்குப் புலனாகாத அபியின் இருப்பு, தேடலும் கரிசனமும் நிறைந்த நுட்பமான வாசிப்பில், பிடிபட சாத்தியமாகிற ஒன்றுதான். நவீன மரபில் இந்த அளவுக்கு அதீத மௌனத்தைத் தன் படைப்புகளின் ஆழத்தில் வண்டலாகப் படியவிட்டுப் பரிசோதித்தவர், இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

வாதப்பிரதிவாதங்கள், பிரகடனங்கள், வெற்று கோஷங்கள், மேடைக்குயுத்திகள், உரத்துப் பேசும் தன்மை, ஆதாயத் தேடல்கள், மறைமுக நிரல்கள் முதுகு சொரிதல்கள், நிரூபித்து அடையத்துடிக்கும் எத்தனங்கள் - என கவிதை உலகில் நிலவும் கசடுகள் எதுவும் இவரது கவிதைகளை மட்டுமல்ல இவரையும் கூடச் சீண்டவில்லை.

ஒரு ராகம் எப்படி நமக்கு சட்டென அடையாளப்படுகிறது? அதன் பிரதான ஜீவஸ்வரங்கள் வழியேதான். அந்த ஜீவஸ்வரங்களை, உரிய முறையில் பிடித்து, துவக்கத்திலேயே உணர வைப்பவர்கள் உண்டு. மேலும் கீழுமாக ஏற்றியும் இறக்கியும் அசைத்தும் பாடும்போது, புரிய வைப்பவர்கள் உண்டு, அதன் சாயல் புலப்பட்டும் இன்னொரு ராகத்தின் மயக்கம் தோன்ற வைப்பவர்களும் உண்டு. ஜீவஸ்வரங்களை ஸ்வராந்திர அடுக்குகளுக்குள் மறைத்து விளையாடுபவர்களும் உண்டு. அந்த வித்வத்துவ விளையாட்டில் மேல்தளத்தில் ஒலிக்கிற சாதாரண காந்தாரத்தைக் கூர்ந்து கேட்டால், அது அந்தர காந்தாரமாக இருக்கலாம். அசட்டு கவனத்தில் கேட்கப்படும் கைசிகி நிஷாதத்தை ஆழ்ந்து கவனித்தால், காகிலி நிஷாதமாக இருக்கும். சில சமயம் புரிந்தது போல இருக்கும், புரியாது. பிறகு, ராகத் தேடலை மறந்து, ப்ருகாக்களின் உதிர்வில் மலைப்போம். கமகங்களில் கிறங்கித் திளைப்போம். ஒரு கட்டத்தில் ராகமும் அழகான ஒலியும் கூட மறைந்து, உணர்வில் ததும்பும் அலையாக அது மாறி, ஏதோ இனம் புரியாத சிலிர்ப்பை நம்முள் நிகழ்த்தும். அந்த அனுபவத்தை ஒத்ததுதான் அபியின் கவிதைகள்.

செவிக்குப் புலனாகி மனசை வந்தடையும் சங்கீதம்போலவே, கண்களின் வழியே கருத்துக்கு புலனாகி மனசை வந்தடையும் அபியின் கவிதைச் சொற்களும், அதன் அர்த்தத்தில் அங்கு இருப்பதில்லை. நாமறிந்த மொழியின் சொற்களை கொண்டே அவர் எழுதியிருந்தாலும் மொழிக்குள் மொழியை உருவாக்கும் ரசவாதத்தால், புதிய புதிய அனுபவங்களை உணர வைக்கிறார்.
அபியின் ‘ராகம்’ - என்ற ஒரு கவிதை இப்படி முடிகிறது.

”கவிதையின் மூச்சு ஒன்று
கவிதையை மறுத்துக்
கடல்வெளி முழுவதையும்
கரைக்கத் தொடங்கிற்று”

இங்கு கவிதை, மூச்சு, கடல் என்னும் படிமங்கள் வந்த வேகத்தில்
பின் வாங்கிக் கொள்கின்றன. தன்னை மறுத்த தான் ஆகி, ஒரு ராகம்
கொள்ளும் பெருவியாபகம் போல் அனுபவம் உண்டாகிறது.
மேல்தளத்தில் ஒரு பொருளைத்தந்த ஒன்று, அடியாழத்தில் வேறொன்றாக உருமாறி, படிப்பவரின் அறிவுக்கும் அனுபவத்திற்குமேற்ப விதவிதமான பொருள்களைத் தந்து வினோதம் நிகழ்த்துகிறது. ஒரு வகையில் செப்பிடு வித்தை போல, படித்த சொல்லின் பொருள் ஒன்று, கணத்தில் மாயமாகி
அதே சொல்லில் வேறொன்று, ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்திருக்கிறது.

பொறுமையையும், நிதானத்தையும், கவனக்குவிப்பையும், புதியதை விழையும் வேட்கையையும் கோருபவை அவரது கவிதைகள். அதை முழுமையாகக் கண்டடைய, அதன் மேல்மூட்டங்களையெல்லாம் விலக்கி விட்டு,
குறியீடுகள், சமிக்ஞைகள், சன்ன ஒலிகள், சோபையான வெளிச்சக்கீற்றுகள் போன்றவற்றின் சொற்ப வழிகாட்டலில்தான் நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு நடந்த பிறகு, நாம் வருமென்று நினைத்த ஊர் வரலாம். அல்லது வேறு புதிய ஊரை அறியலாம். எதுவுமே இல்லையெனில், கடந்துவந்த தூரம் என்னும் ஒரு காலமற்ற அனுபவம் நம்மை நிறைக்கலாம்.

‘நிசப்தமும் மௌனமும்’ - என்று ஒரு கவிதை.

“நெடுங்கால நிசப்தம்
படீரென வெடித்துச் சிதறியது.

கிளைகளில் உறங்கிய
புழுத்தின்னிப் பறவைகள்

அலறியடித்து
அகாதவெளிகளில்
பறந்தோடின

தத்தம் வறட்டு வார்த்தைகளை
அலகுகளால் கிழித்துக் கொண்டே.”

ஒரு எளிய பார்வையில், திடீரென நேர்ந்த ஒரு வெடிப்பில், சட்டென ஒரு பறவைக் கூட்டம் பறக்குமொரு காட்சி மனசில் விரிகிறது.

நிதானமாக யோசித்தால், ஒவ்வொரு சொல்லும் நிறுக்கப்பட்டு, அதன் கனமறிந்து பயன்படுத்தப் பட்டிருப்பதை உணர முடிகிறது. இது இவரது எல்லாக் கவிதைகளுக்கும் பொருந்தும் ஒரு அம்சமாகவே இருக்கிறது.

’நெடுங்கால நிசப்தம்’ - என்பது என்ன? யாருடைய நிசப்தம் அது? அல்லது எந்த சமூகத்தின் நிசப்தம்? இல்லை, பிரபஞ்சத்தின் நிசப்தமா? எது அது?

படீரென வெடித்துச் சிதறியது என்றால் ஏன் அப்படி நிகழ்ந்தது?
யாரால் அல்லது எதனால் நிகழ்ந்தது இப்படி?

அடுத்து ’கிளைகளில் உறங்கிய’ - என்கிறார். கிளைகளில் உறங்கியது எத்தகைய பறவை. அது என்ன உறக்கமா? உதாசீனமா?

’புழுத்தின்னிப் பறவைகள்’ - என்று ஒரு சொல்லைப் போடுகிறார். நல்ல பழங்கள் இருந்தும் சாப்பிடவில்லையோ? அல்லது புழுவையே தின்று வாழ சபிக்கப்பட்டவையா அவைகள்?

அதன்பின், சாதாரணமாய்ப் பறக்கவில்லை. அலறியடித்துக் கொண்டு பறந்தோடுகிறது என்கிறார். அலறிக்கொண்டு மட்டுமில்லை. தத்தம் வறட்டு வார்த்தைகளை வேறு, அலகுகளால் கிழித்துக் கொண்டு. மொத்தத்தில் பறவை என்கிற படிமம், பறவை உருவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டு வேறு ஏதோவாக மாறி ஒரு பயங்கரம் தொனிக்கிறது.

இந்தச் சிறிய கவிதை வரிகள் எழுப்பும் கேள்விகள்தான் எத்தனை!

abi_photobw01ஒரு தட்டையான நேர்கோட்டுப் பார்வையில் இது தரும் பொருள்களை யோசித்தால், பல மடிப்புகள் விரிகிறது. ஒரு கூட்டத்தின் திடீர் எழுச்சி போலப் படுகிறது. ஒரு குடும்பத்தலைவனின் பொறுமை இழந்த நடவடிக்கையாகப் பார்க்க முடிகிறது. ஒன்றின் தன்னிழப்பில் இன்னொன்று புதிதாய்ப் பிறப்பது போல இருக்கிறது. செப்டம்பர் பதினொன்று போலவும் தோன்றுகிறது. ஒரே ஒரு சிறு காட்சிப் படிமம்தான். அது எத்தனை விதவிதமான அர்த்த அடுக்குகளை பார்வைக்கும் அனுபவத்துக்கும் தக்க விரித்து, முடியாமல் சென்றவாறே இருக்கிறது! அபியின் இந்தக் கவிதையின் தலைப்பு ’நிசப்தமும் மெளனமும்’. அவர் கவிதையில் தொடங்குவது நிசப்தத்தின் வெடிப்பு. அப்படியானால் மெளனம் நிசப்தம் அல்ல. அந்த மெளனத்தின் தரிசனத்தைத்தான் கவிதையின் பிற்பகுதி ஏங்கி நோக்குகிறது.

எஸ்ரா பவுண்ட் படிமத்தைப் பற்றிச் சொன்னதை இங்கு பொருத்திப் பார்க்க இடமிருக்கிறது.

“ஒரு படிமம் என்பது வெறும் கருத்தாக்கமல்ல;
அது ஒரு சுடரும் கண்ணி; கணு;
அல்லதுகொத்து. அது ஒரு சுழல்.
அதிலிருந்து கருத்தாக்கங்கள் பீறிட்டுக் கொண்டேயிருக்கின்றன.”

வாழ்வின் அபத்தம், நிலையின்மை, சலனம், நிச்சலனம், தெளிவு, தெளிவின்மை, கணநேரப்பிரக்ஞை, காலம், இடம், வெளி, தத்துவத் தேடல், புதிர் - என நுட்பமான இழைகளூடே இயங்கும் இவரது கவிதைகளை எடுத்து விளக்க - கவிதைகளில் இவர் சொல்ல முயன்றதைத் தேடித் தவிப்பதைவிட, மறுபடி மறுபடி பயின்று விடைதெரியா உணர்வொன்றை உணரமுயற்சிப்பதே உத்தமம் என்று பல சமயம் எனக்குள் தோன்ற வைத்திருக்கின்றன இவரது கவிதைகள்.

அபியின் இசை ஈடுபாடு அவரது கவிதைகளிலும் அங்கங்கு விரவிக் கிடக்கிறது.

“உலாவ அழைத்துப் போகும்
ஸ்வரங்களிடம்
வார்த்தைகளை கேட்டுக்கொண்டு என்ன செய்கிறாய்” - என்றும்,

“எப்போதும் நீ கேட்பது நாதமல்ல
நாதத்தில் படியும் உன் நிழல்” – என்றும் ஒரு கவிதையில்
சொல்லும் அபி,

“ஊசி முனைப்புள்ளியில் இறங்கி
நீடிப்பில் நிலைத்தது கமகம்” - என்று கமகத்தை இன்னொரு கவிதையில் காட்சிப் படுத்துகிறார்.

“பகல் வெளியில்
எங்கோ பறந்து போயிருந்த உறக்கம்
இதோ
படபடத்து விழிக்கூட்டுத் திரும்புகிறது”

- என்று ஆரம்பிக்கும் ஒரு கவிதைக்குத் தலைப்பாக, தாலாட்டுக்குப் பயன்படும் நீலாம்பரி ராகத்தின் பெயரைச் சூட்டுகிறார். அவரது தேர்ந்த சங்கீத ரசனையின் படிவங்கள் கவிதையில் படிந்த சில இடங்கள் இவை.

தன்னோடு பேசுவதும் தன்னை முன்னிருத்திப் பலப்பல உருவெடுத்து விவாதிப்பதும் பகடி செய்வதும் அமைதி கொள்வதும் நிச்சலனத்தில் சலனங்களை எழுப்புவதும் உள்ளுக்குள் கொதிப்பைத் தகிக்கவிட்டுப் பார்வைக்கு அமைதியான ஒரு தோற்றத்தை நிறுத்தி வைப்பதும் புதுவிதப் புதிர்ப்பிராந்தியத்தை இயல்பாக சிருஷ்டிப்பதும் வாசகனின் அனுபவ வழியில் கவிதைகளைக் கண்டுணரச் சில சாவிகளை மறைத்து வைப்பதும் ஒவ்வொரு சொல்லையும் தூக்கி எடுத்து, அதன் ஜிகினாத் துகள்களை உதறி, அர்த்தப் பிசுக்குகளை கழுவித் துடைத்து சுத்தமாக உருமாற்றிப் புழங்க விடுவதும் மொழியின் லயத்தையே ஆதார ஸ்ருதியாகக் கொண்டு பித்தான மனோநிலையில் வார்த்தைகளற்ற ராகத்தை ஆலாபிப்பதுமென - அபியின் கவிதைவெளி பிரத்தியேகமானது. எளிய சொற்களில் தமது தர்க்கத்தை தாமே உருவாக்கி வளர்ந்து செல்வதை ’ஏற்பாடு’, ’மாற்றல்’, ’இருத்தல்’ - போன்ற கவிதைகளில் நாம் காணலாம்.

‘நான்’ - ‘நீ’ என்று தன்னையே இருகூறாகப் பிரித்து, சில கவிதைகளில் உரையாடல் நிகழ்த்துகிறார். எதிரெதிர் துருவமாக இயங்கும் மன அமைப்புகொண்ட ‘நான்’ - ‘நீ’-யை அவற்றில் பேசவிட்டு, மனிதனின் ஸ்பிளிட் பர்சனாலிட்டியை வெளிக் கொண்டு வருகிறார். அல்லது அந்த உளவியல் உண்மையை ஒரு பாவனையாகக் காட்டி விட்டு உளவியல் தாண்டிய வேறொரு தரிசன உலகத்திற்குள் நுழையப்பார்க்கிறார்.

தன் இருத்தலையே விதவிதமாகப் பார்க்கும் அபியின் கவிதைகள், தமிழுக்குப் புதியவை. ழான் - பால் - சார்தர் “Being and Nothingness”-ல் எழுதியுள்ள கட்டுரைகள் போல, என் பார்வையில் என் இருத்தல், என் பார்வையில் நான் இல்லாது இருத்தல். உங்கள் பார்வையில் என் இருத்தல், உங்கள் பார்வையில் என் இல்லாதிருத்தல். காணாமல் போனபிறகு இருத்தல். காணாமல் போனபிறகு இல்லாதிருத்தல் என்று மனித இருத்தலின் பல்வேறு கோணங்களை படம் பிடிக்கிறது அபியின் சில கவிதைகள்.

நாற்பதாண்டு காலக் கவிதை வாழ்வில் மூன்று கவிதைத் தொகுதிகள், பின் இதை எல்லாம் சேர்த்த, அத்துடன் ”மாலை” என்னும் புதிய தொகுப்பு உள்ளடங்கிய ஒரு முழுத்தொகுதி. எழுதியவை குறைவெனினும் தமிழ்க் கவிதைப் பரப்பில் இல்லாத தளங்களைத் தனது உக்கிரமான பரிசோதனைகளின் மூலம் தந்து தமிழுக்கு வளம் சேர்த்த அபி.
அய்யந்திரிபறக் கற்பித்த தமிழாசிரியர். நண்பர்களுக்கு வயதுகளின் பேதம் துறந்த தோழன். சபைகளை விலக்கிவிட்டுச் சதா சாயைகளோடு பேசித் திரியும் பித்தன். மாலை, துண்டு, புகழ்மொழிகளின் லேசான தூவானத்திற்கே ஒடி ஒதுங்கி ஓரமாய் நின்று சிரிக்கும் துறவி.

தேர்ந்த கலைஞனுக்கேயுரிய அலைக்கழிப்பும் பரிதவிப்பும் சமன்குலைவுகளும் மனோஅவஸ்தைகளும் லௌகீக உபாதைகளும் இவருக்கு உண்டெனினும், அதையெல்லாம் மீறிப் பிறந்த ஒரு அபூர்வ ராகம் அபி.

புழக்கத்தில் இல்லாத ராகத்தை நாம் இழந்து விடுகிறோம். அதனால் ராகத்துக்கு நேர்வது எதுவுமில்லை. எல்லா வித்வான்களாலும் பாடப்படுவதில்லையெனினும் புதிர்ப்பிராந்திய எல்லைகளில் சுவாதீனமாய் வளர்ந்து வளர்ந்து, தன்னந்தனியே ஒரு நாதவனத்தை நிர்மாணம் செய்து கொள்ளும் வல்லமை சில அபூர்வ ராகங்களுக்கு உண்டு.

இன்னொரு கோணத்தில் சொன்னால், பல வீடுகளில் தலைச்சன்கள் தன்னையே கரைத்துக் கொண்டு இயங்கி, பிறரது உயர்வின் பெருமிதங்களில் சாந்திகொண்டு துலங்குகின்றன. அபியும் ஒரு தலைச்சன்தான். அவர் அரூபக் கவிமொழியின் தலைச்சன்.

‘மாலை’ - என்று அந்திப் பொழுதைக் குறிக்கும் கவிதை வரிசை, இவரது கவிதைச் சித்து விளையாட்டின் உச்சபட்ச விஸ்தீரணங்களை காட்டக்கூடியதெனச் சொல்லலாம்.

மாலையைத் தனக்கான தனிப் பொழுதாகவே அடையாளம் காண்கிறார் அபி. பிரம்மாண்டமும் வியப்பும் காத்திருத்தலும், மௌடீகமும் துலங்கும் மாலை அது. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் யாருக்காக இப்படிக் காத்துக் கிடக்கிறது என்கிற கேள்வி கவியும் மாலை, அவர் காட்டும் மாலை. நாம் கண்டிராத மாலை. இந்த மாலை, ஒரு புதுவித முல்லைத்திணை. சங்கத் தமிழ்ப் பாடல்களில் தலைவி தலைவனுக்காகவோ தலைவன் தலைவிக்காகவோ காத்திருப்பார்கள். இங்கே கவிதைசொல்லியோ, தன் வரவுக்காகத் தானே காத்திருக்கிறான். எவ்வளவு வித்தியாசமான காத்திருப்பு இது!

தன் சோகத்துக்கும் தத்துவத் தேடலுக்கும் மௌனத்துக்கும் தோதாக மாலையை உருமாற்றி விடுகிறார் அபி. சில கவிதைகளில். பால்யத்தில் உறைந்த மாலையின் நினைவுகளில், நிகழின் சலனங்களைப் படிய விடுகிறார். உயிரற்ற மாலை அபியின் தீண்டலில் இயக்கம் கொள்கிறது.

“புரண்டு படுக்க இடமின்றி
ஒற்றையடிப் பாதை சலிக்கிறது” - என்கிறார் ஒரு மாலைக் கவிதையில்.

“சவுக்குத் தோப்புகள் வேறு கவனமின்றி
வழிதெரியாத கூச்சல்களை
நிர்வாகம் செய்து கொண்டிருந்தன” - என்கிறார்
இன்னொரு மாலைக் கவிதையில்.

மாலை விளையாட்டு முடிந்து அம்மாவிடம்கதை கேட்கும் குழந்தைகளுக்கு

“ஏதேதோ அடுக்குகளில் இருந்து
ஏதேதோ அரூபங்கள்
பறந்து படிந்து மறையும்.
காலத்துள் நிகழ்ந்திராத காலம்
தகதகத்து
பிள்ளைகளின் கண்களில் இறங்கும்”

வெளியில் தெரியாத, இயற்கையின் உள்ளியக்கங்களை இவர் படிமப்படுத்தும் போது, மானிடமும் இயற்கையும் ஒன்று கலந்த பரவச பிம்பங்கள் எழுகின்றன.

மாலைக் கவிதைகளிலும் காலமும் வெளியும் ஒளியும் மௌனமும் விளையாடுகின்றன. அவை இருப்பது போலவும் இல்லாதது போலவும் கண்ணாமூச்சி ஆடுகின்றன.

ஜாக்ஸன் போலக்கின் ‘ப்ளூபோல்’ வரிசை ஓவியங்கள், பார்வைக்கு முள்படல்கள் ஒன்றன்மேல் ஒன்று அடுக்கப்பட்டிருப்பது போலத் தோற்றமளிக்கும். நிதானமான கவனிப்பில், ஒவ்வொரு படலுக்கிடையேயான தூரமும் இருப்பும் வெளியும் வெளிச்சமும் புலனாகும். அதுபோலவே, காலம், வெளி ஆகியவை இக்கவிதைகளில் இருப்பது போலவும் இல்லாதது போலவுமான மாய நிகழ்வினை நிகழ்த்திக் கொண்டே, சொல்லியும் சொல்லாமலும் ஏதேதோ சொல்கின்றன.

இவைகளை எல்லாம் எப்படி நாம் உள்வாங்குவது? காலமென்றும் வெளியென்றும், அண்டமென்றும், சூன்யமென்றும், புதிரென்றும் மௌனமென்றும் விரியும் இவரது கவிதை உலகை எப்படி நாம் புரிந்துகொள்வது? எவ்விதம்தான் அணுகுவது?

இதுவரை நாம் கவிதையென்று படித்தவைகளையும் கவிதை குறித்த
நம் முன் அனுமானங்களையும், கருத்தாக்கச் சுமைகளையும் துறந்துவிட்டு கவிதையின் முன், நாம் ஒரு வகை அகநிர்வாணியாகப் போக வேண்டியிருக்கிறது. மதர்ப்புகளையெல்லாம் மறந்து விட்டு இப்படி ரசிக்கத் துவங்கும் போது, குழந்தையாக ஆகிவிடுகின்றன அபியின் கவிதைகள்.
அது ”குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்...” (புறம்–188) மயக்கும் குழந்தை.

****

தீராநதி நன்றி: ரவிசுப்ரமணியன்

Feb 7, 2013

வறுமையிலும் வாழ்வைக் கொண்டாடிய கரிச்சான்குஞ்சு-ரவிசுப்ரமணியன்

தன் படைப்புகளை முன்நிறுத்தாது தன்னை முன்னிறுத்தும் போக்கு மலிந்த தமிழ்ச் சூழலில் தன் படைப்புகளின் மேன்மை வழியே தன்னை அறிந்துகொள்ளவைத்தவர் கரிச்சான் குஞ்சு.

நம் காலத்தில் வாழ்ந்து மறைந்திருந்தாலும் கீழான வகைதொகைகளில் அவர் சிக்கிவிடவில்லை. கலைக்குள் இயங்குவதை ஒரு நோன்பென நோற்று ஆழமான அமைதியோடு படைப்புக்கு உண்மையாய் இருந்து அதற்குச் செழுமை சேர்த்தவர் கரிச்சான் குஞ்சு. அவரது படைப்புகளைத் தேடுபவர்களே கண்டடைய முடியும். அதனால் தான் அவர் போன்ற கலைஞர்களை, அவர்கள் வாழ்ந்த காலங்கடந்தே நாம் முழுமையாகக் கண்டுணரும்படி நேர்ந்துவிடுகிறது.

தன் சிறுகதைகள் குறுநாவல்கள், நாவலில், எந்த ஒரு கருத்துக்காகவும் கொள்கைக்காகவும்karichankunju தனிப்பட்ட குரலில் அவர் மாய்ந்து உருகுவதையோ எதிர்ப்புக் குரல் எழுப்புவதையோ நாம் காண முடியாது. தான் கண்ட, கேட்ட, அனுபவித்த, உணர்ந்த, கற்பனை செய்த விஷயங்களை அலட்டலில்லாமல் தன் படைப்புகளின் வழி முன்வைத்தவர் கரிச்சான் குஞ்சு.

அது ஒரு சமனான நிலை. அந்த நிலை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஏகாந்திகளுக்குச் சித்திக்கும் ஒருவித நிலை. வாழ்வில் தன்னைச் சுற்றி நடப்பவற்றையும் தனக்கே நேர்ந்தவற்றையும்கூட ஒரு பார்வையாளனாகக் கவனித்து அதை முன்வைப்பது. ஒரு சம்பவம், அவமானம், துயரம், சந்தோஷம், பகடி இப்படி ஏதோ ஒன்றை அவர் தன் படைப்பின் வழியே நம் பார்வைக்குக் கொண்டுவருகிறார். முன்னனுமானம், மனச் சாய்வு, தீர்மானங்கள், அபிப்ராயங்கள் போன்றவை இல்லாமல், தன்னிலை என்ற ஒன்றும் இல்லாமல் ஒரு விஷயத்தைப் படைப்பாக்கி நம் பார்வைக்கு வைப்பது போலத்தான் அது நமக்குத் தோன்றும். ஆனால் இங்குதான் கரிச்சான்குஞ்சு நுட்பமான உலகில் பிரவேசிக்கிறார். அவர் கண்டுணர்ந்த, அனுபவித்த, ஆயிரம் விஷயங்களில் அவர் நமக்கு எதைச் சொல்ல வந்தார் என்ற இடத்திலிருந்து ஆரம்பிக்கிறது விஷயம். விமர்சனமோ புகாரோ இன்ன பிறவோ ஏதுமின்றி ஒன்று எப்படி நடந்ததோ அப்படியே அதைச் சொல்கிறேன் என்னும் பாவத்தைக் காட்டி அதில் ஏதோவொன்றை நாம் உணரும்படி வைப்பார். ஆனால் அவர் பாத்திரங்கள் எழுப்புகிற தர்க்கங்கள், படைப்பினை நகர்த்திச் செல்லுகிற பாதை, உள்ளடக்கமாகக் குங்குமப் பூ ரேகையாய் ஓடும்

ஒரு தத்துவார்த்த இழை, இவை மூலம் அவர் எழுப்புகிற த்வனி, இந்த இடங்களில்தான் கண்ணுக்குத் தெரியாத கவிதை உணர்வாய், விண்டு சொல்ல முடியாத அனுபூதியாய், கரிச்சான் குஞ்சுவின் ஆளுமை விரவிக்கிடக்கிறது. ஒரு வகையில் இவைதான் அவர் எழுப்ப விரும்பும் குரலின் தடங்கள். இவற்றின் வழியாகத்தான் அவர் சொல்ல விரும்பும் எல்லாவற்றையும் நமக்குள் லாவகமாகக் கடத்துகிறார்.

சொல்லியும் சொல்லாமல் செல்லும் இந்த விட்டேத்தியான போக்கை அவர் கதையைக் கட்டமைத்த விதத்தின் வழியேகூட நாம் உணரமுடியும். அதீதக் கவனத்துடன் இழுத்துக் கட்டப்பட்டு கிண் என்று நாதம் எழுப்புபவை அல்ல அவரது கதைகள். தளர்வான கதைகள். சில சமயம் சளசளப்பும் தொய்வுமாய் வழக்கமான கதை சொல்லும் பாணியிலிருந்து சற்று விலகிச் செல்லும் கதைகள். எல்லோரையும் சட்டென ஈர்க்கும் யத்தனத்தையோ செதுக்கி எடுத்து மினுமினுப்பாய்த் துலக்கிப் பார்வைக்கு வைப்பதையோ பிரகடனங்களையோ அவர் படைப்புகளில் நாம் காணமுடியாது. இதை மீறிச் செறிவான கட்டமைப்புடன் அமைந்த சில படைப்புகளும் அதற்கான யத்தனமின்றி அதனியல்பில் பிறந்தவையே.

ஒரு பரதேசி ஒப்பனைகள் ஏதுமின்றி இடுப்பை மறைக்கமட்டும் உடுத்தியபடி தன் போக்கில் காலாற நடக்கும் ஒருவித மனோ நிலையில் எழுதப்பட்டவை போலத்தான் இந்தக் கதைகள் தோன்றுகின்றன. இதை அவர் அறிந்தோ அறியாமலோ செய்திருக்கக்கூடும்.

இளமையில் வறுமை, பால்யகால உறவுகளின் அனுசரணையற்ற தன்மை, அனாதை போலப் பாட சாலைகளில் கழிந்த பால்யம், அவர் படித்த வேதாந்தத் தத்துவங்கள், எல்லாமுமாகச் சேர்ந்து லௌகீக வாழ்விலும் அவரை ஒட்ட விடாமலேயேதான் வைத்திருந்தன. அவர் வீட்டுக்குள்தான் வாழ்ந்தார். ஓட்டுக்குள் பழுத்துருளும் விளாம் பழம் போல் ஓட்டுக்குள்ளிருந்தும் ஒட்டியும் ஒட்டாமல் விட்டு விடுதலையான வாழ்வைத்தான் வாழ்ந்தபடி இருந்தார்.

பொதுவாக அவருக்குக் குடும்பப் பொறுப்பு இருக்கவில்லைதான். ஆனால் அதே சமயம் முற்றமுழுக்க உறவுகளை அறுத்துக்கொண்டார் என்றும் சொல்லிவிட முடியாது. அவரது மகள்களை அவர் பெயர் சொல்லிக்கூட அழைக்கமாட்டார். ‘குழந்தே’, ‘குழந்தே’ - என்றுதான் கூப்பிடுவார். அவர்களைப் படிக்கவைக்க அவர் பட்ட பாட்டையும் திருமணம் செய்து வைக்க அவர் பட்ட அல்லாட்டத்தின் ஒரு பகுதியையும் நான் அறிவேன். அவர் தனது நண்பர் ல.கி.ராமானுஜத்துக்கு மன்னார்குடி 36, கீழ நாலாந் தெருவிலிருந்து 09.08.1977இல் எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

“மூத்தவளுக்கு மணம் முடித்தே ஆகவேண்டும். வயது இருபத்தி ஒன்பது முடிந்துவிட்டது. அவமான உணர்ச்சியுடன்தான் நடமாடிக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் விரைவில் ஆகவேண்டும். இறையருள் எப்படியோ. மனசை இம்சிக்கும் தீய கனவுகளை நான் பெரிதுபடுத்திக் கொண்டால் கொஞ்சமாய் மிஞ்சி மங்கிக்கிடக்கும் ஆத்ம விலாசமும் மாய்ந்தே போய்விடும். ஆனால் அப்படித்தான் மனம் குழம்பிச்செத்த நிலை. மனம் மாய்ந்துதான் போய்க்கொண்டிருக்கிறது. உண்மையில் மனம் மாய்ந்துவிட்டால் நான் ஒரு பரமஹம்சன். அமுதத்தாரையைக் குடித்துக்கொண்டு ஆனந்த சாகரத்தில் திளைப்பேன். அந்த மஹா பாக்கியமெல்லாம் இந்த பாவிக்கேது”

பல சிரமங்களுக்குப் பின் அந்தக் கல்யாணத்தை 21.04.1978 அன்று நடத்தி வைத்திருக்கிறார். தன் அம்மாவோடு அவருக்கு வந்த பெரும் கருத்து வேறுபாடே அவரது மகள்களைப் படிக்க வைப்பதில்தான் தொடங்கியது. “என்னத்துக்குடா பொண் குழந்தைகளைப் படிக்க வைச்சுண்டுருக்க? நான் சொல்றேன் கேளு. இவாள்ளாம் படிச்சுட்டு இப்ப என்ன பண்ணப் போறா? அவள்களுக்கு கல்யாணத்த பண்ணி வைச்சிப்புடு” என்று அவர்கள் சொல்ல, “எப்பாடு பட்டாவது நான் அவாளைப் படிக்க வச்சுடுவேன்” என்று இவர் பிடிவாதமாய் சொல்ல, “அப்படின்னா நீ என் முஞ்சிலயே முழிக்காத. நான் செத்துட்டா தலைகாணிக்கு அடில பணம் வைச்சிருக்கேண்டா. அத எடுத்து நீ எனக்கு காரியம் பண்ணிடு” என்று சொல்லிவிட்டார். அந்தப் பாட்டியோடு பேத்திகள் சீராடிக் கொண்டிருந்தாலும் கரிச்சான்குஞ்சுக்கு இந்தச் சண்டையால் தனது அம்மாவை அவரது கடைசி காலம் வரை பார்க்க முடியவில்லை.

இன்னொரு பக்கம் அவர் சீட்டாடினார். ரேசுக்குப் போனார். எது பற்றியும் கவலை கொள்ளாமல் இருந்தார். வேலை பார்த்த சில இடங்களில் தவறு நடக்கையில் சகித்துக்கொண்டிராமல் சமரசம் கொள்ளாமல் சண்டைபோட்டு விலகிவந்தார். கோபக்காரர். சாப்பாட்டுப் பிரியர். தாம்பூலக் காதலன். கிடைத்த பணத்தை உடனே செலவிட்டுவிடுபவர். அறச்சினம் கொண்டவர். துன்பங்களை அலட்சியப்படுத்தியவர். கோபத்தில் கெட்ட வார்த்தை பேசுபவர். வேதம் படித்தவர். கம்யூனிசத்தில் சற்று மோகம். இசை ரசிகர். விச்ராந்தி மனோநிலையில் இருப்பவர். இப்படி கரிச்சான் குஞ்சுவின் விசித்திரக் குணாம்சங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். கொஞ்சம் கொஞ்சம் பிடிமானம் இருந்தாலும் சராசரி வாழ்வில் ஒட்டாத மேலும் கீழுமான இந்த ஏற்ற இறக்கமான நிலைதானே ஒரு அசல் கலைஞனின் சாமுத்ரிகா லட்சணம். அவன் மன நிலையில் அவன் அப்படித்தானே வாழமுடியும்.

ஆனால் இது போன்ற விசித்திரப் பிறவியை வீடு சகித்துக்கொள்ளுமா? அது வரவு செலவு கணக்குகளால் ஆனது. அதைப் புரிந்து சகித்துக்கொள்ள வேறோரு கலைமனம் தேவைப்படுகிறது. திருமதி கரிச்சான் குஞ்சுவான சாரதா அம்மாளும் அவருடைய மகள்களும் பல சமயம் அவரைக் கடிந்துகொண்டதை அவரோடு சண்டையிடுவதை நான் நேரில் கண்டதுண்டு. ஆனால் அது அவர்கள் தவறல்ல. அவர்களின் கருத்துலகம் வழியே, அவர்களின் புரிதல்கள் வழியே, அவர்களின் அன்றாடச் சிரமங்கள் வழியே அவரைப் பார்த்த பார்வை அது. இது கரிச்சான் குஞ்சுக்கு மட்டுமல்ல பெரும்பாலும் தேர்ந்த கலைஞர்களெல்லாம் எதிர்கொள்கிற லௌகீகச் சிக்கல்தான். சம்பாத்தியமில்லாத, செல்வாக்கில்லாத புருஷனை வீடு சகித்துக்கொள்ளாது. சகித்துக் கொள்ளவும் முடியாதுதான். இப்படி ஆதார இருப்பிடத்திலிருந்தும் வீசிக் கலங்கடிக்கிற காற்றுக்கும் மத்தியில்தான் ஒரு கலைஞன் தன் படைப்பின் சுடரை அணையாமல் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆனால், காலம் கடந்து கரிச்சான் குஞ்சுவின் மகள்கள் அவரைக் கொண்டாடத்தான் செய்தார்கள். வாடகை வீடுகளில் அவர் குடியிருந்த காலங்களில் வீட்டுக்காரன் ஒருவன் “வாடகை குடுக்க வக்கில்ல. உனக்கு ஹிண்டு பேப்பர் ஒரு கேடா” என ஒருமுறை கேட்டிருக்கிறான். அதனால் விஜயா அவருக்காகவே சொந்த வீடு கட்டும் முயற்சி எடுத்துப்பெரும் சிரமத்திற்கிடையில் அதைக் கட்டி முடித்தது. பிரபாவின் ப்ரியங்கள் சொல்லில் அடங்காதது. கரிச்சான்குஞ்சு ஈஸிச்சேரில் அமர்ந்து விஸ்தாரமாக பாவ அபிநயங்களோடு நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்க அவரது மேன்மை அறிந்த காலத்தில் அவர் காலடியில் அமர்ந்தவாறே பிரபா அதை வியந்து கேட்டுக்கொண்டிருக்கும். அவர் மறைந்து இவ்வளவு காலத்துக்குப் பின்னும் அதற்கு இவ்வளவு வயதாகியும்கூட எப்போது அவரைப் பற்றி பேசினாலும் நெகிழ்ந்து அழுதுவிடுகிறது பிரபா.

ஒருமுறை கரிச்சான்குஞ்சுவுக்குக் கடுமையாக உடல்நிலை பாதித்தபோது அவர் மகள் விஜயாவும் நானும் கும்பகோணம் செட்டி மண்டபம் அருகே உள்ள விமல் மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தோம். அந்த முதல் நாள் முழுக்கத் தவிப்பும் வலியும் சஞ்சலமுமாக இருந்தார். பிறகு தூக்கத்துக்கான மருந்துகள் தரப்பட்டு ஊசிகள் போடப்பட்டுக் காலையில் கண்விழித்தார். “என்ன சார் எப்படி இருக்கீங்க. இப்ப வலி ஏதும் இல்லியே” என்று கேட்டேன். “ஆத்மாவுக்கு வலி உண்டா என்ன?” என்றார்.

09.08.1983இல் பாண்டிச்சேரியிலிருந்து ஞானாலயா கிருஷ்ண மூர்த்திக்கு எழுதிய கடிதத்திலும் ஆத்மாவைக் குறிப்பிட்டுள்ளார். “வறுமையும் வேதனையும் எனக்குப் பிடித்த தோழர்கள். ஆனால் அது என் ஆத்மாவைப் பாதிக்கவில்லை என்றே நினைத்துக்கொள்கிறேன். அது எவ்வளவு தூரம் சரியோ எனக்குத் தெரியாது”

ஆத்மா என்று அவர் எதைச் சொல்கிறாரென எனக்குப் புரியவில்லை. த்வன்யா லோகா மொழிபெயர்ப்பான தொனி விளக்கில், தொனியின் முக்கியத்துவம் குறித்து தனது கருத்தைத் தனியே அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டிருந்தார். இந்த ஆத்மா பற்றி அவர் குறிப்பிடுவதை அதிலும் கவனித்தேன். அதைப் படித்தபின் அதன் உட்பொருள் எனக்கு விளங்கிற்று.

”சொல்லும் பொருளும் காவியத்திற்கு உடல். ரஸம் முதலியவை உயிர், தொனி, ஆத்மா. உயிர் உடலில் இருந்து விலகுமெனில் ஆத்மா என்பது அவ்வியக்கம் மாத்திரம் இல்லை. உணர்வுகளே ஆத்மா ஆகும். உயிரும் ஆத்மாவும் கூடித் தான் சரீரமென்பது நேரும். அவை இல்லையெனில் வெறும் சரீரம் உயிரும் உணர்வும் அற்றது ஆகும் என்பதை நினைவில் கொள்க” என்று குறிப்பிடுகிறார்.

பார்வைக் குறைபாடுகள் இருந்தும் உடல் நலிவு இருந்தும் எழுத வேண்டுமென்ற ஆவல் அவரிடம் சதா இருந்துகொண்டே இருந்தது. அது போலவே அவர் எழுதிப் பாதியில் நிறுத்தியவை சில. தனது சுயசரிதைத் தொடர் ஒன்றைத் திருச்சியில் இருந்து வந்த மனிதம் இதழில் தொடங்கி அது நான்கு இதழோடு நின்றதும் நிறுத்திவிட்டார். மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் பற்றிய ஒரு நாவல் எழுத எண்ணி அவர் பற்றிய ஏராளமான வரலாற்றுத் தகவல்களைப் பல நூல்நிலையங்கள் சென்று குறிப்பெடுத்துச் சேகரித்து வைத்திருந்தார். கடைசிவரை அதை அவரால் எழுத இயலவில்லை.

02. 05. 1978இல் மன்னார்குடியிலிருந்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராமானுஜம் இருவரையும் சேர்த்து விளித்து எழுதிய ஒரு கடிதத்தில் எழுதுகிறார்.

“1937 முதல் 1947 வரையிலான சமகால வரலாற்றுப் பின்னணியில் நாவல் எழுத முடிவாகிவிட்டது. இது வெறும் வரலாறாகிவிடுமோ என்று பயப்படுகிறீர்களா? இருக்காது. கதையம்சமே நிறைய இருக்கும். பிராமணசமூகத்தின் ஸனாதனிகள், ஆஷாடபூதிகள், போலி ஆச்சாரங்கள், முதலியவை தோலுரிக்கப்பட வேண்டும். இவ்வளவும் எழுத முற்றிலும் எனது குடும்பச் சூழ் நிலையிலிருந்து விலகி தத்துவம், சிந்தனை, தவம், தனிமை என்று இருந்தால் முடிந்துவிடும். காதல் கதைகள்தான் நிறைய வருகின்றனவே. உண்மையான நாவலை எழுதிப் படைக்கப் பார்க்கிறேனே நான்”

இது தொடர்பான இன்னொரு கடிதம் 27. 11. 1981இல் பாண்டிச்சேரி 123 செட்டித்தெருவில் இருந்து கிருஷ்ணமூர்த்திக்கு எழுதியது. முன் நான் குறிப்பிட்ட கடிதம் 78. இது 81. இந்தக் கடிதத்தில் இப்படிச் சொல்கிறார்.

“இங்கே எனக்கு நேரமே கிடையாது. ஓய்வு மிகக்குறைவு. இரவுகளில் எழுதலாம் என்றால் கண் ஒத்துழைக்க மறுக்கிறது. முன்பெல்லாம் இரவுகளில் தூங்குவது முட்டாள்தனம் என்று திமிரடியாய் இருந்ததற்கு இப்போது தண்டனை. இருந்தாலும் ஏதாவது செய்யத் தீர்மானித்துவிட்டேன். அடுத்த வருஷம் பிறந்த பிறகாவது மெல்ல மற்றொரு நாவலை அரசியல் மற்றும் ஆன்மீகப் பின்னணியில் ஜாதி, சமய சர்ச்சைகளோடு எழுதப்போகிறேன். ஆமாம் எழுதத்தான் போகிறேன். தினந்தோறும் சிறிது சிறிதாக எழுத உத்தேசம். ஏற்கனவே திட்டம் போட்டு நிறையச் சிந்தனை  செய்த கரு அது. ஆகவே சில மாதங்களில் முடித்துவிடலாம். ஒருவேளை பக்கம் குறைந்தாலும் நாவல் தரமுடையதாய் அமையும். வரலாற்று விவரங்கள் 1939 முதல் 1948வரை அடிபடும். முறையற்ற பிராமணர்கள் சவுக்கடிபடுவார்கள். சீர்திருத்தக்காரர்களும் செல்லாக் காசாய் இளிப்பது காட்டப்படும். பெரியாரின் தொண்டும் அதன் பயனும் உரிய பாராட்டைப் பெறும். அதேவேளை அவர் செய்த நாத்திகப் பிரச்சாரத்தின் போலித்தன்மையும் ஆத்திகத்தின் போலித்தன்மைக்கு அப்பால் உள்ள நிஜமான ஆத்திகமும் விளக்கப்படும். அந்தக் கதையில் நானே ஒரு பாத்திரமாக அமைவேன். (இது உண்மையும் கூட) ஆகவே தயவு செய்து கலைஞரின் நெஞ்சுக்கு நீதி எனக்கு வேண்டும். திருப்பிக் கொடுக்கப்படும் வகையில் எனக்கு கிடைக்குமாறு செ ய்தல் வேண்டும். இதை எழுதும் போது இரவு 10:30 பாரதி படித்துக்கொண்டிருக்கிறேன். அடடா, படிக்கப் படிக்க புதுமை”

எழுதுவதில் திட்டங்களும் ஆசைகளும் இருந்தது போலவே தான் உயிரோடு இருக்கும்போதே தனது புத்தகங்களின் மறுபதிப்புகள் வந்துவிட வேண்டுமென்றும் கரிச்சான் குஞ்சுக்குத் தணியாத ஆசை இருந்தது. அதை ஓரளவே அப்போது எங்களால் நிறைவேற்ற முடிந்தது. ஏற்கனவே வெளிவந்திருந்த அவரது ஏழு கதைத் தொகுதிகளில் இருந்து தொகுத்து நர்மதா பதிப்பகம். அன்றிரவே தொகுப்பை எண்பதுகளில் வெளியிட்டது. அதன் பின் பேராசிரியர். மது. ச. விமலானந்தம் அவர்கள் முயற்சியால் கீர்த்தி வாசன் என்ற தொழிலதிபரால் அவரது கழுகு என்ற நாடகத்தொகுதி வெளிவந்தது.

சிம்மம் என்றும் ஞானபண்டிதர் என்றும் பிரியமாக அழைத்ததோடு மட்டுமல்லாமல் தனது கதைகளில் கரிச்சான் குஞ்சைச் சிறுசிறு பாத்திரங்களாகவும் உலவவிட்டவர் ஜெயகாந்தன். பொதுவாய்த் தனது சபையில், தான் அமரும் நாற்காலியில் யாரையும் அமர அனுமதிக்காத ஜெயகாந்தன் அவரை அதில் அமர வைத்துப் பேசச்சொல்லிக் கேட்டுக்கொண்டிருப்பார். அந்த ஜே.கேயின் முயற்சியால் 197Ravi Aathi 1A 8இல் மீனாட்சி புத்தகநிலையம் பசித்த மானிடம் புத்தகத்தை வெளியிட்டது.

“அதன் மறுபதிப்பு இனி எப்போ வருமோ தெரியலை” என வெகு காலமாய்ச் சொல்லிக்கொண்டிருந்தார் கரிச்சான் குஞ்சு. 1990இல் என்னிடமும் அது குறித்துப் பேசியுள்ளார். 09.04.1982இல் பாண்டிச்சேரியிலிருந்து அவர் தனது நண்பர் ஞானாலாயா கிருஷ்ண மூர்த்திக்கு எழுதிய கடிதத்தில் சலிப்போடு இப்படிச் சொல்கிறார். “பசித்த மானிடம் மறுபதிப்பு வர வேண்டுமென்பது என் ஆசை. அது நிறைவேறப் போவதில்லை. போகட்டும்”

அந்த நாவலை 1978க்குப் பிறகான நீண்ட இடைவெளிக்குப் பின் 2005இல் காலச்சுவடு வழியாகக் கொண்டுவந்தேன். கண்ணன் இதற்கு முன்பணமாகப் புத்தகம் வெளிவரும் பலமாதங்களுக்கு முன்பே 2004இல் ஒரு தொகையை என்னிடம் தந்தார். சாரதா அம்மாளிடம் நான் அதை வடபழனி தங்கவேல் காலனியில் சென்று தந்தபோது, “அவர் இருந்தபோதுகூட புஸ்தகம் வருமின்ன எழுத்துக்கான பணத்த நான் பாக்கல சுப்ரமண்யம். அவர் இப்ப இல்லாமயும் குடுக்கறார். அத அப்படியே சுவாமி படத்துக்கு மின்ன வச்சுரு” என்று தழுதழுத்தார்.

சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகங்கள் எனப் படைப்பிலக்கியத் தளத்தில் பல காலம் அவர் இயங்கி வந்திருந்தாலும் பசித்த மானிடம் என்ற ஒரு நாவலின் வீச்சு, அவரை இலக்கியத்தின் பல தளங்களிலும் இயங்குபவர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தது. அந்த நாவல் இப்போது நான்காம் பதிப்பைத் தாண்டிச் செல்கிறது. மூன்று பதிப்புகளின் ராயல்டி தொகையாக மட்டும் இதுவரை முப்பத்து ஐய்யாயிரம் வந்துள்ளது. காலச்சுவடின் வழியாகவே அவரது சிறுகதைகளும் இந்த ஆண்டு வெளிவரும் என்பது என் நம்பிக்கை.ஞானத்தால் பெற்ற பயமின்மையும் மார்க்ஸியச் சிந்தனைப் போக்கில் இருந்த சன்னமான ஈடுபாடும் சேர்ந்து, அவர் எந்தச் சபையிலும் எந்த விஷயத்தையும் துணிச்சலாகப் பேசுபவராகவே இருந்தார். காஞ்சிப் பெரியவர் சந்திர சேகரேந்திர சுவாமிகளுடனான சதஸில் அத்வைதம் குறித்த விவாதங்களில் ஈடுபடும்போது த்வைதம் என்றால் ஜீவாத்மா, பரமாத்மா என்று இரண்டு. அத்வைதம் என்றால் இரண்டுமல்லாத ஒன்று என்கிறபோது கடவுளும் இல்லை. அப்போ அதுவும் நாத்திகம்தானே என்று அவர் காஞ்சிப் பெரியவரிடம் விவாதித்ததை நண்பர் தேனுகாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் கரிச்சான்குஞ்சு.

1986இல் இலங்கை எழுத்தாளர் மார்க்ஸியச் சிந்தனையாளர் டேனியல் இறப்புக்கு

பொ.வேலுச்சாமியின் கோழி முட்டை ஏற்றும் வண்டியில் அமர்ந்து அவரது இறுதிச்சடங்குக்குச் சென்றதும் கம்யூனிச ஊர்வலங்களில் கலந்துகொண்டு கோஷமிட்டு சென்றதும் இதனால்தான். அதே பார்வை கொண்ட, சிக்கல் சிடுக்கான நிரடான மொழியில் அமைந்த தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய ஆங்கிலப் புத்தகமான வாட் ஈஸ் லிவ்விங் அன்ட் வாட் ஈஸ் டெட் இன் இண்டியன் பிலாசஃபி என்ற புத்தகத்தை எளிமையாக அவர் தமிழில் மொழிபெயர்த்ததும் அதனால்தான்.

பொ.வேலுச்சாமியும் பொதியவெற்பனும் அந்தப் புத்தக மொழிபெயர்ப்புக்குக் காரணமாக இருந்தாலும் அது மொழிபெயர்க்கப்பட்டதும் அதன் அதிக பக்கங்களால் பதிப்பாளர்கள் அதை வெளியிட முன் வரவில்லை. (அது வெளிவந்தபோது அதன் பக்கங்கள் எழுநூற்றி ஐம்பத்தி ஐந்து) அதை வெளியிட யார் யாரிடமோ அணுகி கடைசியில் தேனுகா அவரது நண்பர் சவுத் விஷன் பாலாஜி வழியாக அந்தப் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பான இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் புத்தகத்தைக் கொண்டுவந்தார் பாலாஜி. அந்தப் புத்தகத்துக்காக ஐயாயிரம் ரூபாயைக் கரிச்சான்குஞ்சுக்கு தந்தார் அவர். அது அப்போது அவருக்குப் பெரிய தொகையாக இருந்தது.

காஷ்மீரத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆனந்தவர்த்தனரின் த்வன்ய லோகவைத் தொனி விளக்கு என்ற பெயரில் அவர் மொழிபெயர்த்த புத்தகமும் தமிழுக்கான பிற மொழி வரவுகளில் முக்கியமானது. க்ரியாவுக்காக மொழி பெயர்க்கப்பட்ட த்வன்ய லோகம் க்ரியா ராமகிருஷ்ணனுக்கும் அவருக்குமான சிறு கருத்து முரண்பாடால் வெளிவராமல் போனது. அதன் பின் அதனை நான் மீராவின் அன்னம் பதிப்பகம் வழியே கொண்டுவர முயற்சி எடுத்து அவரிடம் கொண்டுபோய்ச் சேர்த்தேன். அவரும் ஏனோ சில வருஷங்கள் அதனை வெளியிடாமலே இருந்தார். கரிச்சான் குஞ்சுவின் மறைவுக்குப் பின் அதை அவர் இருக்கும்போது வெளியிடாததற்கு வருத்தப்பட்டுப் பின் அதை அச்சாக்கமும் செய்துவிட்டார். அப்போது திடீரென அதன் கடைசி அத்தியாயம் காணவில்லை என்று மீரா சொல்ல எனக்கு என்னசெய்வதெனப் புரியவில்லை. அப்போது கரிச்சான் குஞ்சுவும் இல்லை. மறுபடி எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. இதற்கிடையில் மீராவும் உடல் நலமின்றி இருந்து மறைந்துவிட்டார். கடைசியில் மீராவின் மகன் கதிரிடமிருந்து அதை வாங்கி வந்தேன். நண்பர் கி. அ. சச்சிதானந்தன் அதில் விடுபட்ட பகுதிகளை சமஸ்கிருத அறிஞர்களின் உதவியோடு ஒழுங்கு செய்ய முதலில் முயன்றார். பின்பு அவரே “கரிச்சான் குஞ்சு உயிரோடு இல்லாததால, இன்னாத்துக்குப்பா அதுல போயி திருத்தம் பண்ணி, இல்லாத இன்னோர்த்தனை வச்சி எழுதிச் சேத்துகினு. வேண்டாப்பா. வுடுப்பா அப்படியே போட்றலாம்” என்று சச்சி முடிவு செய்யவே அதை அவ்விதமே வெளியிட நண்பர் சந்தியா நட்ராஜன் சம்மதித்து 2004இல் அதை வெளியிட்டார்.

1992இல் அவர் மறைந்த பிறகு நானும் தேனுகாவும் கரிச்சான் குஞ்சு பற்றிய கருத்தரங்கமொன்றை நடத்தத் திட்டமிட்டோம். பிறகு முத்துவையும் பொதியவெற்பனையும் அதில் சேர்த்துக்கொண்டோம். கும்பகோணம் ஜனரஞ்சனி ஹாலில் கருத்தரங்கம் நடந்தது. அதில் கரிச்சான் குஞ்சுவின் படத்தைத் திறந்துவைத்து அவர் பற்றியும் எம்.வி.வி நடத்திய தேனி இதழில் இணைந்து அவர் துணை ஆசிரியராகப் பணியாற்றியது பற்றியும் அவரது பன்முக ஆற்றல் பற்றியும் எம்.வி.வி. பேசினார். அந்த விழாவில் அவரது சிறு நாடகப்பிரதியான காலத்தின் குரலை நானும் தேனுகாவும் எங்கள் சொந்தச் செலவில் புதிய நம்பிக்கை இதழ் ஆசிரியர் பொன் விஜயன் வழியாகக் கொண்டு வந்தோம்.

அதே கும்பகோணம் ஜனரஞ்சனி ஹாலிலும் காந்திபார்க்கிலும் கோபால்ராவ் நூலகத்திலும் அவருடைய பேச்சைக் கேட்டுத்தான் என் கல்லூரி காலங்களில் அவர் மீது எனக்குப் பெரும் மதிப்பு உருவாகி இருந்தது. சில வேளைகளில் எம். வி. வியும் அவர்கூட இருப்பார். வெங்கட்ரமணா ஓட்டலில் காபி சாப்பிட்ட பின் முத்து பீடாக் கடையின் தாம்பூலம் துலங்கப் பேச்சு போய்க்கொண்டிருக்கும். அதன் பின் அவரை வீட்டுக்குச் சென்று பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. நானும் இன்று திரைப்பட வசன கர்த்தாவாக இருக்கும் பிருந்தாசாரதியும் இப்போது கோவையில் தமிழாசிரியராப் பணிபுரியும் செந்தில் வேலுவும் வெற்றிலைச் சீவல் வாங்கிக்கொண்டு அவரைப் பார்க்க மாசம் ஒரு தடவையாவது சென்றுவிடுவோம். கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் எழுதிய கவிதைகளை வாங்கி அவர் ஆர்வமாய்ப் படிப்பார். அப்போது கம்பராமாயணப் பாடல்களை அனுபவித்து ரசனையோடு பாடம் எடுப்பது போலச் சொல்வார். அவருக்குப் புதுக்கவிதைகள்மீது அத்தனை ஈடுபாடில்லை. மரபின் செழுமையை உண்டுகளித்துத் திளைத்த மனத்திற்கு அப்படி ஒரு விலகல் இருந்ததில் எங்களுக்கு ஆச்சர்யமும் இல்லை.

கவிதை பற்றி ஏராளமான விஷயங்களைச் சொல்வார். தொல் காப்பியம் யாப்பெருங்கலக்காரிகை பற்றியெல்லாம் பேசுவதோடு உசிதமல்லாததை விலக்கி உசிதமானதை மட்டும் வைத்தால் கவிதை ஆகும் என்று சொல்லும் ஷேமேந் திரரின் ஔசித்திய விசாரம், நேர்கோட்டில் போனால் உரை நடை அதைச் சற்று வளைத்து நெளித்து போட்டால் கவிதை என்று சொல்லும் குந்தகாவின் வக்ரோத்தி ஜீவிதம், கவிதைக்குள் எழுப்பும் த்வனி பற்றிய ஆனந்தவர்தனரின் த்வன்ய லோகா போன்ற கவிதை இயல் சார்ந்த புத்தகங்கள் பற்றியெல்லாம் விரிவாகச் சொல்வார். வயசு வித்யாசமின்றி எதைப் பற்றியும் அவரிடம் பேச முடியும். அருவி போல விஷயங்கள் கொட்டும். அவரைவிட்டு விலக மனம் வராது. எத்தனை நூலகம் போய்ப் படித்தாலும் அவ்வளவு விஷயங்கள் கிடைக்காது. பேச்சின் போது அமர்ந்தபடியே குதிப்பார், சப்தமிடுவார். சத்தமாகச் சிரிப்பார். கைதட்டுவார். சில சமயம் மூக்கு கண்ணாடி கீழே விழும். தனது கைத்தடியை எடுத்துத் தரையில் தட்டுவார். வெற்றிலை எச்சில் தெறிக்கும். கோபத்தில் சில சமயம் தாயோளி என்றும் வள்ளார ஓளி முண்டைகளா, வக்காள ஓழிகளா என்றும் கெட்டவார்த்தைகள் சிதறும். எதைப் பேசினாலும் அதை உல்லாசமாய் அனுபவித்துப் பேசுவார். அது வெறும் பேச்சாக இராது. ஒரு நிகழ்வு போலவே இருக்கும். கண் உபாதைக்கும் இதய நோய்க்கும் ஆட்பட்டபின் இந்த வேகம் கொஞ்சம் குறைந்தது.

கரிச்சான்குஞ்சு வடமொழி விற்பன்னராக இருந்தாலும் ஹிந்தி, ஆங்கிலம் அறிந்திருந்தாலும் தமிழ் மொழியின் மீது அவர் கொண்டிருந்த மாளாத அன்பு அவரது செயல்களில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னதற்கேற்ப கும்பகோணம் சங்கர மடத்தில் உரை நிகழ்த்தி இருக்கிறார். அதற்குத் தேனுகா அவரை அழைத்துப் போவார். சமஸ்கிருதத்தில் உரை அமைய வேண்டுமென்று சொல்லப்பட்டாலும் அதன் கடைசிப் பகுதிகளில் அவர் தமிழில் பேசித்தான் முடிப்பார். அது போலவே அவர் பள்ளிகளில் கம்பராமாயணம் நடத்தும்போது வால்மீகி ராமாயணத்தையும் சேர்த்துச் சொல்லி நடத்தியிருப்பதை அவரிடம் படித்த மாணவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.

உயர்சாதியில் பிறந்திருந்தாலும் அவர் கரிசனங்கள் மிகச் சாதாரணர்கள்மீதும் எளியவர்கள் மீதுமே இருந்தது. அவர் சார்ந்த சமூகத்தின் சில மடமைகளின் மீது அவருக்குக் கடுமையான விமர்சனங்கள் இருந்தன. அவர் எழுதிய நாவலில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு குஷ்டரோகியின் கதையையே எடுத்துக்கொள்கிறார். ஓரினப்புணர்ச்சி பற்றிய விஷயங்களைத் தமிழில் முதன்முதலாக எழுதியவர் அவர். ரகசியமாய் நடக்கும் ஒரு விஷயத்தைப் பொது வெளிக்குக் கொண்டுவருகிறார். சமூகம் அது குறித்த பார்வையையும் விவாதத்தையும் முன்னெடுக்கத் தன் படைப்பின் வழியே ஒரு ஒரு சாளரத்தைத் திறந்துவைக்கிறார். இந்தத் தொனியை அவரின் பல படைப்புகளில் நாம் காணமுடியும்.

சமூகம் பேசக் கூசுகிற விஷயத்தை எழுதும் இது போன்ற துணிச்சல் அவருக்கு புதிதல்ல. அவரது பால்ய காலத்தில் 1937 ஜூன் முதல் 1941 மே வரை மதுரையில் உள்ள ராமேஸ்வரம் தேவஸ்தானப் பாடசாலையில் வடமொழியும் தமிழும் பயிலும்போது அவர் சில நாடகங்களில் நடித்துள்ளார். அதில் பட்ட நாராயணரின் “வேணீ சம்ஹாரம்” என்ற பாரதக் கதையை ஆதாரமாகக் கொண்ட நாடகத்தில் நடித்தபோது கர்ணனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் கடும் வாக்குவாதம் நடக்கும் காட்சி. இதில் அஸ்வத்தாமனாகக் கரிச்சான் குஞ்சு நடித்தார். “இங்கே பார் கர்ணா நான் எதற்கும் தயங்கமாட்டேன் என் பூணூலைக்கூட அறுத்தெறிவேன்’’ என்று பேசி சவால்விட வேண்டிய கட்டத்தில் அவர் உண்மையாகவே பூணூலை அறுத்தெறிந்துவிட்டார் என்கிறார் அவருடன் அந்தப் பாடசாலையில் உடன் பயின்ற பி.எச்.சிவசுப்ர மணியன். பூணூலை அறுப்ப தென்பது அபச்சாரம். அதுவும் வேதபாடசாலையில் பயிலும் ஒரு மாணவன் அறுப்பது என்பது பெரும் அதிர்ச்சியான விஷயம். அன்று முதல் அவருக்கு அங்கு அஸ்வத்தாமா என்ற பட்ட பெயர் நிலைத்திருக்கிறது.

வேதாந்த நோக்கில் அவர் பாரதியின் ஆத்ம பக்குவத்தைப் பற்றி எழுதிய பாரதி தேடியதும் கண்டதும் நூலும் கு.ப.ரா. பற்றி விரிவாக அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பும் அவரது தமிழ் இலக்கியப் பங்களிப்பில் பிரதானமானவை.

பாரதி நூற்றாண்டின் போது பாரதி பற்றியும் அவர் படைப்புகள் பற்றியும் நூற்றுக்கணக்கான புத்தங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் எல்லாம் சேதாரம். மிகையில்லாமல் பரவசமில்லாமல் அவரை வெளிப்படுத்திய புத்தகங்கள் கனகலிங்கத்தின் என் குருநாதர், கரிச்சான் குஞ்சுவின் பாரதி தேடியதும் கண்டதும், யதுகிரியம்மாள் எழுதிய பாரதி சில நினைவுகள் போன்ற வெகுசிலவே தேறுகின்றன’’ என்று அவரது பசித்த மானுடத்தை மிகச்சிறந்த நாவலாக குறிப்பிட்டு கா.நா.சு பேசியுள்ளார். தாய் வார இதழிலும் எழுதினார்.

பாரதி போலவே கரிச்சான் குஞ்சும் வேதங்களில் தோய்ந்தவர்தான். இன்னும் கூடுதலாக சுக்ல யஜீர் வேதத்தின் பகுதியான பிருஹ தாரன்ய உபநிஷத்தைச் சுரத்தோடு அத்யயனம் செய்தவர். அப்படிக் கனம் முறையில் கடினமான வேதப் பகுதிகளைப் பயின்ற கனபாடிகளுக்கு இணையானவர் அவர். பாரதியின் படைப்புகளில் வேதங்களின் தாக்கங்கள் பற்றியும் அவர் பேசியுள்ளார்.

பாரதி “ஜெயபேரிகை கொட்டடா கொட்டடா, ஜெயபேரிகை கொட்டடா. பயமெனும் பேய்தனை அடித்தோம், பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம். வியனுலகனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைபிடித்தோம். ஜெயபேரிகை கொட்டடா கொட்டடா. ஜெயபேரிகை கொட்டடா’’ என்று பாடுகிறார். ஆனால் வேதங்களைத் தங்கள் அளவில் ஆழமாக உள் வாங்கிக்கொண்ட இருவருமே வேத வாழ்வைக் கைப்பிடிக்கவில்லை, அசல் கலைஞனின் வாழ்க்கையையே வாழ்ந்தனர்.

மனித மனத்தின் அடியில் படிந்து போயிருக்கும் தன்முனைப்பு, காமம், பொருந்தாக்காமம், செல்வம் சேர்ப்பதில் உள்ள வேட்கை, அதன் பொருட்டு நடக்கும் கேவலங்கள், பக்தியின் பெயரால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் போலித்தனங்கள் என்று எல்லாவற்றையும் மறைக்காமல் ஒளிக்காமல் தன் படைப்புகள் மூலம் நம் முன்வைக்கிறார் கரிச்சான் குஞ்சு. எதையும் எதிர் பார்க்காமால் எதன் மீதும் மறைந்தோ சாய்ந்தோ ஒளிந்தோ கொள்ளாமல் நேரிடையாகக் கணீரென்ற குரலில் தளுக்கின்றி அவர் சத்தியத்தைப் பேசுவது அவர் படைப்புகளின் வழியே இன்னமும் கேட்கிறது.

ஒன்றித் திளைத்து வெளிப்படும் அவரது சுவாரஸ்யமான சம்பாஷனை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடிகிற ஒன்றல்ல. கடும் வாசிப்பும் வாசித்ததைக் கேட்பவன் கிறங்குமாறு சொல்வதிலும் சமர்த்தர். ருசியான உணவும் பேச்சும் தாம்பூலமும் சிரிப்பும் குதூகலமுமாய் அவர் வாழ்வைக் கொண்டாடிக் கொண்டு தானிருந்தார். எல்லாவிதத் துயரங்களோடும் அவர் சுகவாசியாகச் சந்தோஷமாக நிம்மதியாக இருந்ததைத்தான் நான் எப்போதும் கண்டிருக்கிறேன். ஒரு வகையில் எனக்கு அப்போது ஆச்சரியமாக இருந்தது. தரித்திரத்தை எக்காளம் செய்து அவர் சிரித்து விளையாடிய விளையாட்டு அது என்று இப்போது புரிகிறது.

***

தமிழ் பல்கலைக்கழகமும் சாகித்ய அக்காதெமியும் இணைந்து தஞ்சையில் 10.08.2012இல் நடத்திய கரிச்சான்குஞ்சு கருத்தரங்கில் கரிச்சான் குஞ்சு குறித்தும் அவர் படைப்புகள் குறித்தும் ரவிசுப்பிர மணியன் வாசித்த கட்டுரை

நன்றி: காலச்சுவடு

Jan 18, 2013

பிரபஞ்சனுக்கு சாரல் விருது 2013

 

ஜேடி-ஜெர்ரி நிர்வகிக்கும் அறக்கட்டளை சார்பில், எழுத்தாளர்கள் மா.அரங்கநாதன், தேனுகா, ரவி சுப்பிரமணியன் ஆகியோரை நடுவராகக்கொண்டு வருடாவருடம் சாரல் விருது இலக்கிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வருடம் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு சாரல் விருது வழங்கப்படுகிறது.

இதற்கு முன் இந்த விருதைப் பெற்றவர்கள்:
2009- திலீப்குமார்
2010- ஞானக்கூத்தன்
2011-அசோகமித்திரன்
2012-வண்ணநிலவன், வண்ணதாசன்

விழா ஜனவரி 26 சனிக்கிழமை நடைபெறுகிறது.
அனைவரும் வருக.

01

விழா அழைப்பிதழ்

saral_2013-final

Nov 8, 2012

கானம் - ரவிசுப்ரமணியன்

மழை

வாசம் ததும்ப விட்டு
பெய்யுது மழை
முள்ளில் சிக்கிய வண்ணத்துப்பூச்சி
மழை நீர் சொட்ட
சடசடத்து உதிர்க்கிறது
ஞாபக வர்ணங்களை RAVISUB2
உடம்புலுக்கி நீர் உதறும் காகங்கள்
மழைக்கு ஒதுங்கிய வெள்ளாடுகள்
விலுக்கென பறக்கும் வவ்வால்
அதே குளிர்
அதே காற்று
நீதான் இல்லை
ஏதேதோ நேசிக்கக் கற்றுத்தந்த
நேசிகையே
இதோ வானத்தைப் பிரிந்த
மழை வந்து சொல்லுது ஆறுதல்
சொப் சொப்பென
டப்டப்பென
உனக்குமிந்த மழை
அங்கேதும் சொல்லுதா
இந்நேரம்
**மார்ச் 1995ல் வெளிவந்த காத்திருப்பு கவிதை தொகுதியிலிருந்து

கானம்

ம்...
ஸ...
விரல்களால் காது மடல்மூடி
கூட்டும் சுருதியில் ரீங்காரம்
கட்டுக்குள் வருகுது சகலமும்
மண்கிளறி உரமிட்டு
விதைவிதைத்து நீர் ஊற்றி
தளிர் கிளைத்து மேலெழும்ப
செடியாகி மரமாகி
பூத்துக் குலுங்கும் ஸ்வரராக விருட்சங்கள்
பாடகி உருகி ராகத்தில் கரைகிறாள்
தோப்பாகிறது அரங்கம்
தோப்பில் திரியும் கவலைகளை
தேர்ந்த இடையனாய் மெல்ல மேய்த்து
வெளியில் நிறுத்திக் கதவைச் சாத்தி
இன்னொரு அற்புதம் செய்கிறாள் அவள்
***அக்டோபர் 2006 ல் வெளிவந்த  " சீம்பாலில் அருந்திய நஞ்சு"  கவிதை தொகுதியிலிருந்து

உபயோகம்

ரோஜா என்றால் கொள்ளை அழகு
மல்லிகையின் மகத்துவம் சொல்லித்தெரிவதில்லை
துளசியின் புனிதம் ஊர் அறியும்
செம்பரத்தை அர்ச்சனைக்கு
ஓம இலை செரிமானத்துக்கு
வில்வ இலை சர்க்கரைக்கு
வெண்டை மூளைக்கு நல்லது
எண்னை கறிக்கு கத்தரிக்காய்
பார்வைக்கு அழகாய் பட்டன் ரோஸ்கள்
எதற்கு இடையில் கொழுத்து செழித்த
இந்த குரோட்டன்ஸ்கள்
எடுத்து எறியிங்கள் என்கிறாள்
சகதர்மிணி
எல்லாவற்றிற்கும் உபயோகத்தை
உணரமுடியுமா நம்மால்

நன்றி: ரவிசுப்ரமணியன் தளம்

Oct 16, 2012

கலக்கத்திலும் கனிவை கைமாற்றிவிட்டுப் போன கலைஞன்-ரவிசுப்ரமணியன்

வாழும் காலத்தில் அங்கீகரிக்கப்படாத சோகம் போல, வேறு எதுவும் இருக்கமுடியாது நல்ல கலைஞர்களுக்கு. கலைக்காய் சமூகத்திற்காய் தன் வாழ்வின் பெரும்பகுதியை  கரைத்துக் கொள்கிற தேர்ந்த படைப்பாளிகளை உரிய காலத்தில் கௌரவிக்காது மௌனம் காத்து இறும்பூதெய்தும் பெருமை கொண்டது நம் செம்மொழிச் சமூகம். அதற்காக அவன் பதிலுக்கு மௌனம் காப்பதில்லை.
"கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்றும் அறிவுமிலார்..." என்பதை அவன் அறிந்தவனாகையால் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி சதா இழைஇழையாய் தன் படைப்பின் நெசவை அவன் தொடர்ந்தபடி இருக்கிறான். ஆடைகளைப் பயன்படுத்தும் நாம் நெய்தவனைப்பற்றி யோசித்ததே இல்லை. ஆனாலும் மிகச் சிலரின் காதுகளுக்கு தறியின் இடதும் வலதுமாய் ஒடி ஒடி நூல் இழைக்கும் நெளியின் ஒலி கேட்கிறது. அப்படித்தான் எனக்கும் தேனுகாவுக்கும் அது கேட்டது. அந்த சப்தம் தந்த உறுத்தலால் தான் தொண்ணூற்றி ஓராம் ஆண்டின் இறுதியில் கரிச்சான்குஞ்சு மற்றும் எம்.வி.வி ஆகியோரது புத்தகங்களே இப்போது அச்சில் இல்லாமல் இருக்கிறது அவற்றை நாம் கொண்டு வர ஏற்பாடு செய்ய  வேண்டுமென்றும் அவர்களுக்காக கருத்தரங்கள் நடந்த வேண்டுமென்றும் சந்திக்கும் போதெல்லாம் பேசி பேசி திட்டமிட்டுக் கொண்டே இருந்தோம்.  அப்போது தொண்ணூற்றி இரண்டில் திடீரென கரிச்சான்குஞ்சு இறந்து விட்டார். பதற்றமாக இருந்தது. ஏதோ செய்ய தவறிவிட்டோம் என்பது போலவான ஒரு மனச்சங்கடம். உடனே கரிச்சான்குஞ்சுவின் வெளிவராத “காலத்தின் குரல்” என்ற புத்தகத்தை நண்பர் “புதிய நம்பிக்கை” பொன் விஜயன் மூலமாக வெளிக்கொண்டு வந்தோம். அப்போது அதில் பொதியவெற்பனும் கடைசியில் சேர்ந்துகொண்டார். கருத்தரங்கம் நடத்த முடியாத நாங்கள் கரிச்சான்குஞ்சுக்கான இரங்கல் கூட்டத்தை நடத்தினோம். அப்போது அவர் படத்தை திறந்து வைத்து அப்புத்தகத்தையும் வெளியிட்டார் எம்.வி.வி.

கும்பகோணம் காந்திபூங்கா எதிரில் உள்ள ஜனரஞ்சனி ஹாலின் கீழ்புற சிறிய அரங்கில் அந்த கூட்டம் நடைபெற்றது. அந்த நாளின் மதியத்தில் எம்.வி.வியின் படைப்புலகம் பற்றிய கருத்தரங்கையும் நடத்தினோம். அசோகமித்திரன், கோவை ஞானி, கோமல்சாமிநாதன் ம.ராஜேந்திரன், மாலன், ப்ரகாஷ், மார்க்ஸ் போன்ற எழுத்தாளர்கள் அதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எம்.வி.வி. அந்த கூட்டத்தில் பேசிய இறுதி உரையின் கடைசி வரிகள் ரொம்பவும் நெகிழ்வானது, "நான் கல்லாப்பெட்டியை மூடிவிட்டேன். விளக்கையும் அணைத்தாயிற்று. என் கடையை கட்டி பூட்டி விட்டேன். சூடமும் கொளுத்தியாகிவிட்டது. அதுவும் கொஞ்ச நேரத்தில் அணையும். இப்போது நான் என் குருநாதனின் (அதாவது முருகனின்) சொல்லுக்குக் காத்திருக்கிறேன்". அதாவது இரண்டாயிரம் ஆண்டு நிகழப்போகிற தன் மரணத்திற்கு கிட்டத்தட்ட அவர் தொண்ணூற்றி இரண்டிலேயே தயாரான ஒரு மனநிலையில் இருந்தார். அவரது இந்த வார்த்தைகள் இவரது புத்தகங்களையும் தாமதமில்லாது உடனே கொண்டு வந்து விட வேண்டுமென எங்களைத் தூண்டியது.
பொதிய வெற்பனிடம் அப்போது அது பற்றி பேச அவர் எம்.வி.வியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை ”இனி புதிதாய்” - என்ற தலைப்பில் ஒரு புத்தமாக கொண்டு வந்தார்.
வெளியிடப்படாத அவரின் காதுகள் நாவலின் கையெழுத்து பிரதி சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகத்தில்  ஏழாண்டுகள் ஆக இருந்து கடைசியில் காணாமலே போய்விட்டது. எங்களுக்கும் எம்.வி.வி.க்கும் மிகச்சிறந்த நண்பராக இருந்த ஆசிரியர் கலியமூர்த்தியின் சலியாத தேடுதலால், அது மறுபடி கைக்கு கிடைத்தது. அதனை நான்
Mvv
Add caption
அன்னம் பதிப்பகம் மீராவிடம் கொண்டு போய்ச் சேர்த்தேன். அவரும் ஒரு ஆறுமாதகாலத்துக்குப் பின் அதைப் படித்துப் பார்த்து அதன் தரமும் மேன்மையும் உணர்ந்து அதனை வெளியிட்டார். அந்நாவலுக்கான பொருத்தமான ஜாக்ஸன் போலக்கின் ஒவியத்தை அட்டைப்படமாக வடிவமைத்து தந்தார் தேனுகா. எங்களுக்கு இதல்லாம் சந்தோஷமான காரியங்களாக இருந்தது.
சவுத் ஏஷியன் பதிப்பகம் வழியாக “என் இலக்கிய நண்பர்கள்” - என்ற எம்.வி.வியின் கட்டுரை தொகுதியை கொண்டுவந்தோம். அதன் முன்னுரையில் கூட எங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார் எம்.வி.வி. இன்றும் காலச்சுவடு வழியாக சரிச்சான்குஞ்சு எம்.வி.வி. புத்தகங்களை கொண்டு வர நானும் தேனுகாவும் முன் முயற்சி எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்து கொண்டுமிருக்கிறோம்.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளர்களில் ஒருவர் எம்.வி.வி என்பதற்கு அவரது ”பைத்தியக்காரப் பிள்ளையே” - சான்று என்று அசோக மித்திரானால் குறிப்பிடப்பட்ட எம்.வி.வி. வெளியில் வர இயலாத அவரது இறுதிகாலங்களில் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் சந்திக்க ஏங்கியவாறே இருந்தார். அதை உணர்ந்த நாங்கள் எந்த எழுத்தாளர் கும்பகோணத்துக்கு வந்தாலும் அவர்களை அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாய் கொண்டிருந்தோம். அப்படித்தான் ஞானக்கூத்தன், எஸ்.வைதீஸ்வரன், பிரபஞ்சன், அசோகமித்ரன், இந்திரா பார்த்தசாரதி, கோபிகிருஷ்ணன், வண்ணநிலவன், மீரா, திலகவதி, கோமல் சாமிநாதன் போன்ற பலரையும் நான் அவர் வீட்டுக்கு அழைத்து சென்றவாறு இருந்தேன். நானும் தேனுகாவும் சராசரியாய் வாரம் ஒரு முறை அவரை பார்ப்பவர்களாக இருந்தோம். அவரோடு பயணம் செய்யும் வாய்ப்புகளும் எங்களுக்கு அமைந்தது.
அவர் வீட்டை விட்டு வெளியே சைக்கிளில் சுற்றிய காலம் என்ற ஒன்று இருந்தது. அதற்குபின் எண்பதுகளின் துவக்கத்தில் கும்பகோணம் காந்தி பார்க்கின் திறந்த வெளியிலும் ஜனரஞ்சனி ஹாலின் சா துஷேஷய்யா நூலகத்திலும் நாங்கள் சிறுசிறு கூட்டங்களை நடத்தி அதில் எம்.வி.வியையும் கரிச்சான்குஞ்சுயையும் பேசவைப்போம். தங்கள் எழுத்துலக அனுபவங்களை அவர்கள் எங்களுக்கு கதை கதையாக சொல்வார்கள். இருவருமே வயசு வித்யாசமின்றி எல்லோரிடமும் இணக்கமாக பழகக்கூடியவர்கள். சில சமயம் அசட்டுத்தனமாக நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் நிதானமாக பதில் சொல்வார்கள். சமயத்தில் ” வக்காள ஒழிகளா..” என்பது போன்ற வார்த்தைகள் கரிச்சான்குஞ்சு வாயிலிருந்து சகஜமாக வரும். எம்.வி.வியிடமிருந்து அப்படி கேட்க முடியாது. கரிச்சான்குஞ்சுவிடமிருந்து பரவசமும் குழந்தைத்தனமும், குதூகலமும், சிரிப்பும் பார்ப்பவர்களை உடனே தொற்றிக் கொள்ளும். எம்.வி.வி. எப்போதும் நிதானமாக இருப்பார். எல்லாவற்றையும் கடந்த ஒரு ஞானியின் புன்னகையோடு சலனமின்றி இருப்பார் பல சமயம். கரிச்சான்குஞ்சு வாய்விட்டு எதிராளியின் மேலேகூட சமயத்தில் தட்டி  சிரிப்பார். எம்.வி.வியின் சிரிப்பு அடக்கமாக கட்டுக்குள் இருக்கும்.
வறுமையும் லௌகீக சிரமங்களும் மனஅழுத்தமும் இருக்கும் போதும் கூட எம்.வி.வி. ஒரு மெல்லிய புன்னகையோட இருந்திருக்கிறார். எந்த கஷ்டத்திலும் நண்பர்களிடம் அவர் கடன் வாங்கியதில்லை. நம் கஷ்டங்களுக்கு நாமே பொறுப்பு. அத வெளில சொல்லவும் கூடாது. அதுக்கு இன்னொருத்தரை குற்றவாளி ஆக்கவும் கூடாது. நாமதான் தாங்கணும், பல்கடிச்சு தாங்கணும் என்பார். அவர் அவரது இந்த வார்த்தைகளுக்கு தக்கவே அவர் வாழ்ந்தார்.
வீட்டிலிருந்தபடியே தினமும் கொஞ்சம் கைகால் நீட்டி உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தியானம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். பூஜை அறையில் தினமும் சாமி கும்பிடும் வழக்கமும் இருந்தது. அதுபோலவே தினமும் முகச்சவரம் செய்து கொள்வதில் கவனமாக இருப்பார். புதிய புதிய சட்டைகளை அணிந்து கொள்வார். பவுடர் பூசிக்கொள்வார். முகம் எப்போதும் தேஜஸ்ஸாக இருக்கும். கணக்காக வாரிய தலைமுடி. திருநீறும் குங்குமமும் துலங்கும் நெற்றி. வெற்றிலை காவி ஏறிய பற்கள். பன்னீர் புகையிலை வாசம். தாம்பூலம் தளும்பும் இதழ்களின் கனிந்த சிரிப்பு. பார்த்தடவுடன் ஒரு மரியாதை தோன்றும் விதமாகவே அவர் எப்போதும் இருப்பார். பனியனோடு வீட்டில் அமர்ந்து இருக்கும் போதுகூட. ஒரு தத்துவ ஞானியின் பிரசன்னம்போல இருக்கும் அவரது இருப்பு.
“ திருக்கண்டேன் பொன்மேனிக்கண்டேன், திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று.....”
அவர் தோற்றம் இந்த பேயாழ்வாரின் இந்த பாசுரத்தை எனக்கு நினைவூட்டும் சில சமயம். அதீத வறுமையிலும் செம்மாந்து புன்னகைத்த எம்.வி.வி. அந்த எழுத்தின் மூலமே அதை அடைந்தார் என்பதுதான் துயரம்.
பெரும் பட்டுஜரிகை வியாபாரியான அவர் வியாபாரத்தையும் மறந்து எழுதத்துவங்குகிறார். தேனி என்ற  இலக்கிய பத்திரிக்கையை துவங்கி முதலீடு போட்டு, தானே ஆசிரியராக இருந்து நடத்துகிறார். உதவி ஆசிரியர் அவரது அத்யந்த நண்பன் கரிச்சான்குஞ்சு. பேப்பர்காரனுக்கு பிரஸ்காரனுக்கு பைண்டிங் பண்றவனுக்கு நாம் கடன் சொல்ல முடியுமா? பணம் இல்லன்னு சொல்ல முடியுமா? எழுத்தாளன் மட்டுமென்ன விதிவிலக்கு என்று, நாற்பதுகளில்  தேனியில் எழுதியவர்களுக்கு இருநூறு ரூபாய் சன்மானம் தந்துள்ளார். இவ்வளவு பணம் வருகிறதே என்று இரண்டு பெயரில் அதில் எழுதிய எழுத்தாளர்களும் உண்டு என்பது இதில் இன்னொரு சுவாரஸ்யம். அந்தகாலத்தில் கிட்டத்தட்ட அந்த ஒரு வருஷத்தில் முப்பதாயிரம் ரூபாய் இந்த பத்திரிக்கையால் நஷ்ட்டம் அடைந்துள்ளார் எம்.வி.வி. இந்த காலமதிப்பில் அது எத்தனைலட்சம் என கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
அந்த பத்திரிக்கை நடத்தியதன் மூலம் அவர் பெற்ற அனுபவங்கள் ஒரு தனி நாவலுக்குரியது என்று ஒரு முறை சொல்லியிருக்கிறார். மௌனியின் கதை ஒருமுறை பிரசுரத்திற்கு வந்ததாகவும் அதில் ஏகப்பட்ட கிராமர் மிஸ்டேக். கமா, புல்ஸ்டாப் ஏதுமில்லை கிளாரிட்டி இல்லை. ஆனால், எல்லாவற்றையும் மீறி, நெளிநெளிகோடுகளால் ஆன, நுட்பமான வேலைப்பாடு கூடிய, Ravi subramaniyanமனச்சித்திரங்கள் அவை என்று சிலாகித்துச் சொல்வார். அந்த தேனி பத்திரிக்கைகாக பேப்பர்கூட வாங்கத்தெரியாமல் பேல் கணக்கில் ஆர்டர் கொடுக்க அது வீட்டில் வந்து இறங்கியுள்ளது. ஒரு நாள் அந்த பத்திரிக்கைக்காக பேப்பர் நறுக்க பேலை உருட்ட, அது வாசல் வரை ஓடி பரந்து விரிந்து கிடந்திருக்கிறது. அந்த நேரத்தில் இவரிடம் ஜரிகை வாங்க வந்த குஜராத் சேட், அந்த பேப்பரின் மேல் நடந்து இவரை வந்து அடைகிறார். இந்த பித்து உள்ள உன்னால் இனி வியாபாரம் சரியாக செய்ய முடியாது என்று, அன்றே அவருடனான எல்லா வியாபார உறவுகளையும் முறித்துக்கொள்கிறார். பின், மெல்ல ஷீணமடைந்து முடிவுக்கு வருகிறது அவரது வியாபாரம். அதன் பின்னான வறுமையும் மன அவசங்களும் அவரை வாழ்நாள் முழுக்க தொடர்ந்து வந்திருக்கிறது. இருபத்திஏழு வருஷங்கள் அவரது காதுகளில் நாரசமான விநோதமான ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. அதனோடுதான் நான் வாழ்ந்தேன் கடைசியில் என் குருநாதன் முருகன் திருவருளால்தான் அந்த துயரங்களிலிருந்து மீண்டேன் என்று சொன்னார். காதுக்குள் யாரோ அமர்ந்திருப்பது போலவும் திட்டுவது போலவும் சிரிப்பது போலவும் அழைப்பது போலவுமான, அமானுஷ்ய குரல்கள் அவரை ஆட்டிப்படைத்திருக்கிறது. அந்த அனுபவத்தின் வழியே அவர் கண்டடைந்த நாவல்தான் சாகித்ய அகாடமி விருது பெற்ற காதுகள் நாவல்.
அந்த நாவலை பல எழுத்தாளர்களால்கூட சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. மருத்துவர்கள் இது ஒரு ஹாடிட்ரி ஹல்யூசினேஷன் சார்ந்த நாவல் என்று வகைப்படுத்தி அதுபற்றிய விஷயங்களைச் சொன்ன பிறகே அந்த நாவல் குறித்து பலருக்கும் புரிந்தது.
சிறுகதை நாவல் குறுநாவல் கட்டுரை மொழி பெயர்ப்பு குழந்தை இலக்கியம். நாடகம் என இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதிக்குவித்த எம்.வி.வி. தனது வாழ்நாளில் சராசரியாக அவரே சொன்னபடி ஒரு நாளைக்கு முப்பது பக்கங்கள் எழுதியுள்ளார். இவ்வளவு எழுதிய எம்.வி.விக்கு அவரது கடைசி பத்து ஆண்டுகளில் ரைட்டர்ஸ்கிராம்ப் வந்து கையெழுத்துகூட போட இயலாமல் ஆனது.
என்ன ரவி எம்.வி.வி. கையெழுத்து இப்படி இருக்கு என்று கேட்ட மீராவுக்கு
நான் எழுதிய பதில் கடிதத்தில் இப்படி எழுதியிருந்தேன்.
எழுதி எழுதிச் சோர்ந்த விரல்கள்
இப்போது கையெழுத்திடவும் நடுங்குகிறது
இ.சி.ஜி. கிராப் போல. என்று
பட்டாடை நெய்யும் சௌராஷ்ட்டிரர்கள் சமூகத்தில் பிறந்த அவரது வாழ்வில் பட்டின் மினுமினுப்பு ஒரு போதும் இருந்ததில்லை. அவரது பால்ய காலத்தின் சில வருஷங்கள் தவிர. அந்த பால்யகாலத்திலும் அவருக்கு இன்னொரு அவஸ்தை நிகழ்ந்தது. தனது சொந்த அப்பா அம்மாவால் அவரது தாய்மாமனுக்கு சிறுவயதிலேயே தத்து கொடுக்கப்பட்டவர் எம்.வி.வி. மாமாவை அப்பா என்றும் அத்தையை அம்மா என்றும் அழைக்க நிர்பந்திக்கப்படுகிறார். அவரது அத்தை இவ்வளவு செலவு பண்ணி உன்னை தத்துஎடுத்தேனே அம்மா என்று கூப்பிட மாட்டேன் என்கிறாயே அம்மா என்று கூப்பிடு என்று சொல்லி தண்டிக்கிறார். வாய் அம்மா என்றாலும் மனம் ஒட்டாமல் தத்தளிக்கிறார் வெங்கட்ராம். அவரது மன அழுத்தத்தில் துவக்கப்புள்ளி இது என்று சொல்லலாம்.
இவ்வளவுக்கு மத்தியில் சுவாரஸ்யமான பல அடுக்குகளை கொண்டது அவரது வாழ்க்கை. அப்பா அம்மா வீட்டில் வறுமை. தத்துப்போன வீட்டில் கோடிஸ்வர வாழ்க்கை. பதிமூன்று வயதில் எழுத்ததுவங்கியது. பதினாறு வயதில் மணிக்கொடியில் சிட்டுக்குருவி என்ற கதை பிரசுரம். பி.ஏ. பொருளாதாரம் படிக்கும்போதே தி.ஜானகிராமன் இவரை குருபோல வியந்து பார்த்து நட்பாக்கி கொள்வது. இந்தி விஷாரத் படிப்பில் தேர்ச்சி. ஆங்கில இலக்கிய புலமை. இளம் வயது திருமணம். பட்டு ஜவுளி ஜரிகை வியாபாரம். நாற்பத்தெட்டில் தேனி பத்திரிக்கை துவங்கியது. பத்திரிக்கையில் நஷ்டம், அதனால் வியாபாரத்தில் நஷ்டம். அடியாட்களை வைத்துக்கொண்டு ரவுடியாக சிலகாலம். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கவுன்சிலர் பதவிக்கு நின்று தோற்றது ஒரு நேரம். பல பெண்களாலும் காதலிக்கப்பட்ட வசீகரனாக இருந்தது ஒரு காலம். இந்த அனுபவங்களும் கூட இல்லாவிட்டால் எழுத்தை தவிர என்னதான் மிஞ்சியிருக்கும் என் வாழ்வில் என்பார் எம்.வி.வி.
கரிச்சான்குஞ்சு கவனிக்கப்படாதது போலவான ஒரு விஷயம் எம்.வி.விக்கு முழுவதுமாக நேர்ந்து விடவில்லை. ”என்னய்யா இந்த ஊரை இப்படிக்கொண்டாடுதேய்யா அவரை” - என்று லா.ச.ரா. குறிப்பிடும்படி ஆனது அந்திமக்காலங்களில் அவர் மீது குவிந்த கவனம்.
அவர் சௌராஷ்ட்டிர மொழியில் எழுதி இன்னும் வெளிவராத புத்தகம் மீ காய் கரு.
தமிழில் அதன் அர்த்தம் நான் என்ன செய்யட்டும்.
கடைசியாக வந்த அவரது புத்தகம் எம்.வி.வியின் கணிசமான கதைகள் அடங்கிய சிறுகதை தொகுப்பு. அதை மிகுந்த பிரியத்தோடும் பொருளாதார சிரமத்தோடும் பாவைச்சந்திரன் வெளியிட்டார். அதில் பிழைகள் திருத்தும்வரை பார்வை சரியாக இருந்தது எம்.வி.விக்கு. அந்த புத்தகம் முழுமைப்பெற்று வரும் போது அதைப்பற்றி அவரது காதில் சத்தமாக கத்தி சொல்ல வேண்டியிருந்தது. அட்டைப்படத்தில் சிரித்தபடி இருக்கும் அவரது புகைப்படத்தை தன் கைகளால் மட்டுமே தடவிப்பார்த்துக் கொள்ள முடிந்தது அவருக்கு.
கேட்காத காதுகளோடும் பார்க்க முடியாத குளுக்கோமா விழிகளோடும் பிறழ்வான மனக்கொதிப்பில் மேலெழும்பும் குமிழிகளோடும் அவஸ்தை மிகுந்ததாக இருந்தது அவரது கடைசி வருட வாழ்க்கை.
இயன்ற வரையில் நினைவுதப்பாமல் இருந்த வரையில் எல்லா கஷ்டங்களையும் மீறி
கைமாறு கருதாமல் அவர் சதா நமக்காக ஏதோ நெய்து கொண்டே இருந்தார். தன் நடுங்கும் விரல்களால்.
நன்றி: ரவிசுப்ரமணியன் தளம்

May 19, 2012

எழுத்தாளுமைகள் பற்றிய ரவிசுப்ரமணியனின் ஆவணப்படங்கள்

1. ஜெயகாந்தன்:எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்
“ஒரு எழுத்தாளனை எதற்காக ஆவணப்படம் எடுக்க வேண்டும்? அவனுக்காக அவனது எழுத்துக்கள் பேசும். அவன் போனபின்னும் அவை பேசிக் கொண்டிருக்கும். கலைஞனின் சொற்கள் அழியாது. தன் ஆக்கங்களில் பேசியவற்றுக்கு அப்பால், அவன் ஒரு பேட்டியிலோ ravisuஅல்லது ஆவணப்படத்திலோ ஒன்றும் சொல்லிவிடப்போவதில்லை. இலக்கியம் சார்ந்த நோக்கில் இத்தகைய ஆவணப்படுத்தல்களுக்கு எந்த இடமும் இல்லை.
ஆனால் நமக்கு இலக்கியவாதி என்ற ஆளுமை தேவைப்படுகிறது.  வள்ளுவரும் கம்பனும் எப்படி இருந்தார்கள் என நாம் அறிவதில்லை. ஆனால் அவர்களைப்பற்றிய கதைகள் நமக்குக் கிடைக்கின்றன. அவர்களை நாம் மனக்கண்ணில் வரைந்துகொள்கிறோம். இன்று அவர்களுக்கு முகங்களை உருவாக்கியிருக்கிறோம். தாடிமீசையுடன் வள்ளுவரும், அடர்ந்த பெரிய மீசையுடன் கம்பரும்.
ஏன்? காரணம் நாம் படைப்பை படிக்கையில் படைப்பாளியுடன் உரையாடுகிறோம் என்பதே. அருவமான எழுத்தாளனுடன் நம்மால் பேச முடிவதில்லை. நமக்கு உருவம் தேவையாகிறது. எந்தக் காரணத்தால் கடவுள்களுக்கு உருவம் அமைந்ததோ அதே காரணத்தால்தான் நாம் கலைஞர்களுக்கும் உருவம் அளிக்கிறோம்.
பெரும் கலைஞர்களின் உருவத்தைப் போற்றுவது உலக மரபு. ஹோமரின் சிலை நமக்குக் கிடைக்கிறது. நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் கோயில் கொண்டிருக்கிறார். புகைப்படக்கலை வந்தபின்னர் இது இன்னும் முக்கியமானதாக ஆகியது. பாரதியின் பாடல்களுக்கு நிகராகவே அவரது தீவிரமான கண்கள் கொண்ட புகைப்படங்களும் ஆர்யா வரைந்த ஓவியமும் தமிழ் மக்களின் மனதில் பதிந்திருக்கின்றன. அந்த சித்திரங்களே கூட மக்களிடம் உக்கிரமாக உரையாடக்கூடியவையே. அவரது பாடல்களில் இருந்து அந்த முகத்தை பிரிக்க முடியாது
கலைஞனின் உடல் அவனுடைய கருத்துக்களின் பிம்பமாக மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் அது அவன் சொன்ன அனைத்துக்கும் உரிய குறியீடாக ஆகிறது. ஆகவேதான் நாம் கலைஞனின் உடலை ஆவணப்படுத்துகிறோம். நம் நாட்டில் முறையான ஆவணப்பதிவுகள் அனேகமாக இல்லை. இப்போதுதான் தொடங்கியிருக்கின்றது. ரவிசுப்ரமணியன் இயக்கிய ‘ எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக்கலைஞன் - ஜெயகாந்தன் ‘ என்ற ஆவணப்படம் அதில் ஒரு முக்கிய சாதனை.” 

ஜெயமோகன்

ஆவணப்படத்தைப் பார்க்க 

 https://youtu.be/ahC22jv1JjQ 

image_2

2. மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்

ஆளுமைகள் குறித்த ஆவணப்படங்களோ, ஆளற்ற பொட்டலில் மேடைப் பேச்சு போல் பரிதாபத்துக்குரியவை. இந்த அவலங்களின் மிகச் சில விதிவிலக்குகளில் ரவிசுப்ரமணியனின் 'மா.அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்' ஒன்று.
இயக்குனர் ம.செந்தமிழன்
ஆவணப்படத்தைப் பார்க்க 



arang
3. இந்திரா பார்த்தசாரதி எனும் நவீன நாடகக் கலைஞன்

நூற்றுக்கணக்கான விவரணப்படங்களையும் குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் தொலைக்காட்சிகளுக்காக தயாரித்திருக்கிற ரவிசுப்ரமணியன், அவ்வகை தொலைக்காட்சிப் பார்வையாளர்களைத் தவிர்த்து விட்டு, அதன் பாதிப்புகளிலிருந்தும், அதன் எளிமையிலிருந்தும் விலகி, இந்திராபார்த்தசாரதி என்ற நாடகாசிரியரைப் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுத்திருப்பதில் தனது அடுத்த கட்டப் பாய்ச்சலை நிரூபித்திருக்கிறார்.
பி.அப்பன்
ஆவணப்படத்தைப் பார்க்க 





ip
நன்றி: ரவிசுப்ரமணியன்

Mar 7, 2012

மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்-ஆவணப்படம்

எழுத்தாளர் ரவிசுப்ரமணியன் இயக்கத்தில் உருவான மா அரங்கநாதனைப் பற்றிய அரிய ஆவணப்படம், மா அரங்கநாதனின்  தளத்தில் காணக் கிடைக்கிறது. (காண படங்களை சொடுக்கவும்)
maarangana4 Ravi subramaniyan
மா. அரங்கநாதன்
ரவிசுப்ரமணியன்
மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்_01
Part I
மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்_02
Part II
மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்_03
Part III
மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்_04
Part IV
மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்_05
Part V
மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்_06
Part VI

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்