Showing posts with label பாரதி மணி. Show all posts
Showing posts with label பாரதி மணி. Show all posts

Oct 12, 2012

எனக்கு மாமனாராகவும் இருந்த க.நா.சு. - பாரதி மணி

க.நா.சு.100

ஐம்பதுகளில் நான் கல்கண்டு, கண்ணன், ஜில்ஜில், அணில் போன்ற சிறுவர் பத்திரிகைகள் படித்துக் கொண்டிருந்த போது, எங்களூர் பார்வதிபுரத்தில் நடராஜன் என்ற அறிவுஜீவி — ஹிந்தியில் Ghar Jamai என்று அறியப்படும், பணக்கார மாமனாருக்கு ‘வாழ்க்கைப்பட்ட’ வீட்டோடு KA.-NA.-SU-Portrait-01மாப்பிள்ளையாக — இருந்தார். ஊரே அவரை ‘மாப்பிள்ளை’யென்று தான் கூப்பிடும். எங்களுக்கு அவர் ‘மாப்ளை மாமா’.  மிகவும் சுவாரசியமாக, எதைப்பற்றியும் பேசத்தெரிந்தவர். அவருக்கு தேவையெல்லாம் லீவுநாட்களில் எங்களைப்போன்ற பதின்மவயது ‘ஆடியன்ஸ்’ தான். மணிக்கணக்கில் வாயைப்பிளந்து கேட்டுக்கொண்டிருப்போம். பலநாட்கள் என் அம்மா திண்ணைக்கு வந்து, அவரிடம் ‘ஓய்! மணி ரெண்டாகப்போறது. இன்னும் குளிக்காமெ, சாப்பிடாமெ, உம்ம பேச்சைக்கேட்டுண்டு ஒக்காந்திருக்கான். எல்லாம் ஆறிப்போயாச்சு. அப்பறமா சாப்டுட்டு பேசலாமே!’ என்று எங்கள் ‘இலக்கிய விசாரணைக்கு’ ஒரு முற்றுப்புள்ளி வைப்பாள்! நான் தில்லி வந்து, பிறகு லீவில் ஊருக்குப்போயிருந்தபோது, தில்லியில் நான் கேட்ட படே குலாம் அலிகான், பேகம் அக்தர் இசை பற்றியும், பால சரஸ்வதி அபிநயம் குறித்தும் நான் சொல்ல, அவர் கேட்டுக் கொண்டிருப்  பார். அவரிடம் தான் முதன்முதலாக சாணிப்பேப்பரில் அச்சிடப்பட்ட எழுத்து பத்திரிகையைப்பார்த்தேன். பழைய பிரதிகளை பைண்ட் போட்டு வைத்திருப்பார். தான் ஒரு வரி கூட எழுதாமல், நல்ல எழுத்தை ரசிக்கத்தெரிந்த ‘இலக்கியவாதி’! இளவயதிலேயே நல்ல எழுத்தை இனம் கண்டு, தேடித்தேடி வாசிக்கும் பழக்கத்தை எனக்குள் வித்திட்ட ஆசான்.

விகடன், கல்கி கதைகளைப்படிக்கும் என்னிடம், கிருஷ்ணன் நம்பியின் கதை வந்திருக்கும் சரஸ்வதி யைக்கொடுத்து படிக்கச்சொல்லுவார். பாவம்…..அறுபது வருடங்கள் கழித்து எழுத ஆரம்பித்த ஒரு ‘நல்ல எழுத்தாளரை’ப் படிக்காமலே போய்விட்டார்!

எந்த பிரபல எழுத்தாளர்கள் நாகர்கோவிலுக்கு / கன்யாகுமரிக்கு வந்தாலும், நடராஜனுக்கு தகவல் வந்துவிடும். அவருடன் நான் போய் சந்தித்த மூத்த எழுத்தாளர்கள் அனேகம். எனக்கு அவர்களைப்பார்க்க தணியாத ஆவல் இருந்ததோ இல்லையோ, பார்வதிபுரத்திலிருந்து தெற்கு ரோடு -– இப்போதுகாலச்சுவடு விலாசமிருக்கும் K.P. Road –- வழியாக நடந்துபோகும்போது, பேச்சுத்துணைக்காகவாவது என்னையும் வற்புறுத்தி இழுத்துக்கொண்டு போய்விடுவார். அவர் மூலமாகத்தான் ‘மணிமேடை சுதர்ஸன் ஸ்டோர்ஸ் சுந்தரமையர் பையன் நம்ம வேப்பமூடு ஜங்ஷனை வெச்சு ஒரு நாவல் எழுதியிருக்கான்’ என்று ஒரு புளியமரத்தின் கதை கையெழுத்துப்பிரதியைப் படித்துப்பார்த்தேன். பிறகுதான் அது சரஸ்வதியில் தொடராக வந்தது. நாஞ்சில்நாட்டு எழுத்தாளர்களிடம் அவருக்கு தனிப்பிரியம். கிருஷ்ணன் நம்பிக்கும், சு.ரா.வுக்கும் நெருங்கிய நண்பர்.

ஒருநாள் மாலை என்னிடம் ‘நாறோலுக்கு’ வரியா? க.நா.சு. வந்திருக்காராம். சென்ட்ரல் லாட்ஜிலே தங்கியிருக்கார். பாத்துட்டு வருவோம்’ என்றார். எனக்கு அப்போது தன் இனிஷியலை K.N.S. என்று ஆங்கிலத்தில் சுருக்காமல், தமிழில் க.நா.சு. என்று வைத்துக்கொண்டிருப்பவரை பார்த்துவிட்டு வரலாமேயென்று தோன்றியது. லாட்ஜில் சின்ன அறையில் நம்பியும், சு.ரா.வும் அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள். சட்டையில்லாத, பூணூல் இல்லாத உடம்பு, இன்னும் மறையாத அம்மைத்தழும்பு, பூ விழுந்த கண், சீப்பையே கண்டிராத தலை. பிற்காலத்தில் தன் ஒரே மகளை எனக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்போகும் மனிதரை நான் முதன்முதலில் சந்தித்தேன். ஆனால் தன் ’வருங்கால மாப்பிள்ளை’க்கான எந்த மரியாதையையும் எனக்குத்தரவில்லை! படுக்கையின் ஒரு மூலையில் நானும் ஒண்டி உட்கார்ந்து, பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பேச்சு நடுவில், ‘காப்பி சாப்பிடலாமே…….. கோல்டன் லாட்ஜில சொல்லுவோம். கிச்சாமணி குண்டுப்போத்தி ஹோட்டல்லேருந்து ரசவடை வாங்கிண்டு வருவன்.’ என்று நடராஜன் சொல்ல, ராமசாமி கொடுத்த பத்து ரூபாய் நோட்டுடன் கீழே வந்தேன். ‘கெட்டிச்சட்னி நெறைய வைக்கச்சொல்லுங்க’ என்று க.நா.சு சொன்னதும், மணிமேடையிலிருந்து ரெண்டணா வாடகை சைக்கிள் எடுத்து வடசேரி இறக்கத்துக்குப்போனதும் நினைவிருக்கிறது.

நான் தில்லி போனபிறகு, அறுபதுகளின் இறுதியில் க.நா.சு. சென்னையிலிருந்து தில்லி வந்துவிட்டதாக அறிந்தேன். அவ்வப்போது ரஃபி மார்க் I.E.N.S. ஹாலில் கஸ்தூரி ரங்கன் நடத்தும் கணையாழி மாதாந்திரக் கூட்டங்களிலும், கர்ஸன் ரோடு மலையாளி மெஸ்ஸிலும்,  நான் மெம்பராக இருந்த தில்லி ஃபிலிம் ஸொசைட்டி திரையிடல்களிலும் அவரைப்பார்த்திருக்கிறேன். சர்வதேச திரைப்படவிழாவில் நான் போகும் நாலு தியேட்டர்களில் ஒரு தியேட்டருக்கு மகளுடன் வந்திருப்பார். ஒரு வணக்கத்தோடு சரி. ‘நிறைய கெட்டிச்சட்னியோடு ரசவடை வாங்கித்தந்தேனே!’யென்று பழங்கதையால் அவரை துன்புறுத்தியதில்லை. பிறகு முளைத்த UNI கான்டீனுக்கும் அடிக்கடி வருவார். அவர் தோற்றமோ என்னவோ இணக்கமாக பேசத்தோன்றவில்லை.

1970-ல் இ.பா. மழை நாடகம் எழுதியதும், அதில் கதாநாயகியாக நடித்த ஜமுனாவுக்கு, எனக்கே தெரியாமல் என்மேல் ’பற்று’ ஏற்பட்டதையும் சொல்லியிருக்கிறேன். மாமிகளின் மத்தியில் எப்போதும் எனக்கு ஒரு நல்ல பெயர் உண்டு. ‘மணிக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பாக்கணும். ஆண் காரியம் பெண் காரியம் தெரிந்த சூட்டிகை. கைநிறைய சம்பளம் வாங்கறான். எந்த மகராஜிக்கு குடுத்து வச்சிருக்கோ?’ என்று பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேன். இ.பா.வின் மாமியார் மூலமாக எனக்கு வேறு இடத்தில் பெண் பார்ப்பதை அறிந்து, மகள் தந்தையிடம் தன் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அடுத்தநாள் காலை க.நா.சு. நான் அப்போது வேலை பார்த்த பிர்லா ஆபீசுக்கு வந்து என்னிடம் பேசினார். அப்போது தான் எனக்கே அந்த எண்ணம் இருந்ததை உணரமுடிந்தது. என் அக்காவிடம் க.நா.சு. வந்த விஷயத்தை சொன்னபோது, ‘ஆமாண்டா… ரொம்ப நல்ல பொண்ணு….நமக்கு ஏன் இந்த ஐடியா முன்னாடி தோணலே?’ என்று என் திருமணத்துக்கு முதல் அட்சதை போட்டார்.

காதல் திருமணங்களில் ஏற்படும் எந்த பிரச்னையும் இல்லாமல் இரு குடும்பத்தினரின் ஒத்த கருத்தோடு ஜமுனாவின் கைத்தலம் பற்றினேன்.. திருமணம் ஒரு கனமழைநாளில், போட்ட பெரிய பந்தலெல்லாம் தண்ணீரில் முழுகி, அங்கிருந்த ஒரு நாடக மேடையில் இனிதே நடந்தேறியது. எனக்கு நாடகமே உலகம் அல்லவா! இ.பா.வின் மழை நாடகத்தில் தொடங்கிய காதல், அவரது இரண்டாவது படைப்பான போர்வை போர்த்திய உடல்கள் நாடகத்தில் நடிக்கும்போது கல்யாணத்தில் முடிந்தது. திருமணத்தன்று, தாரைவார்த்து கொடுக்குமுன் நடக்கும் விரதத்தின்போது க.நா.சு. பூணூல் அணிந்திருந்தார். பலவருடங்கள் கழித்து, அவரிடம் ‘உங்களுக்கு நம்பிக்கையில்லாத விஷயத்தை ஏன் செய்தீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘உங்கள் வீட்டாருக்கு அதில் நம்பிக்கையிருந்தது. அந்த நல்ல நாளில் அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை!’யென்று பதிலளித்தார். தில்லியில் நடந்த என் திருமண நாளன்று, பார்வதிபுரத்தில் முதல் பாராவில் குறிப்பிட்டிருந்த நடராஜன் தன் வீட்டில் ஒரு விருந்தே ஏற்பாடு செய்திருந்தாராம். அவருக்குப்பிடித்த எழுத்தாளர் க.நா.சு.வின் மகளை நம்ம ஊர் கிச்சாமணி கல்யாணம் செய்துகொள்கிறான் என்றால் சும்மாவா?

என் திருமணத்திற்குப்பிறகு, தனியாகப்போக நினைத்த அவரை வற்புறுத்தி என்னோடு இருக்கும்படி சொன்னேன். ஒருவரையொருவர் புரிந்து கொண்டதால், பத்துவருடங்களுக்கும் மேலாக ஒரே கூரையின் கீழ் எந்த உரசலுமில்லாமல், மற்றவர் கருத்துக்கு மரியாதையோடு இருக்கமுடிந்தது.  அடுத்தநாளைப்பற்றிய கவலையே இல்லாதவர். எனக்கு அவரிடமிருந்த ஒரே வருத்தம் பத்திரிகைகளுக்கு எழுதி, வரும் பணத்தை இருக்கும்போது தாராளமாக ஹோட்டலுக்கு செலவழித்துவிட்டு, பணம் இல்லாத நாளில், ‘ராஜி! போஸ்ட்மேன் வந்தாரா?’ என்று மணியார்டருக்கு காத்திருப்பது தான்.  ஞாயிற்றுக்கிழமைகளில் நான் சமைக்கும் சமையலை ரசித்து, சப்புக்கொட்டி சாப்பிடுவார். சும்மா சொல்லக்கூடாது….. நான் நன்றாகவே சமைப்பேன். என் அம்மாவின் சீடன்.

என் நண்பர்கள் வட்டத்தில் நான் செய்யும் மொருமொருவேன்றிருக்கும் மசால் வடையும் தூள் பக்கோடாவும் பிரசித்தம். அவை தான் மாலைவேளைகளில் எனது ‘சோமபான’ விருந்துகளுக்கு ஸைட் டிஷ்! (சிறு வயதிலிருந்தே நான் ஒரு மசால்வடைப்ரியன். ‘சுண்டெலியா பொறந்திருக்க வேண்டியவன்டா நீ’ என்று அலுத்துக்கொண்டே, என் அம்மா எண்ணெய்ச்சட்டியை வைப்பாள்!)  பத்து வடைகள் சாப்பிட்டபின்னும், ‘ராஜி! மணி பண்ணின வடை இருக்கா? இருந்தா….இன்னும் ரெண்டு கொண்டுவாயேன்!’ என்று கேட்டு வாங்கிச்சாப்பிடுவார். என் எழுத்தைப் பாராட்டும்போது கிடைக்கும் சந்தோஷம் அப்போது வரும். என் குழந்தைகளுக்கு பிரியமான தாத்தா. என் குழந்தைகளுக்கு உலக இலக்கியத்தை அறிமுகம் செய்தவர்.

மாலை நேரங்களில் ஒருநாள் கூட நண்பர்களுடன் ‘Bar’ திறந்திருக்கும் என் ‘தாகசாந்தி கேந்திர’த்துக்கு அவர் வந்ததேயில்லை. வருடாவருடம் டிசம்பர் 31 இரவு நடக்கும் புத்தாண்டு பார்ட்டியில் ஒரு பெக் ’ராயல் ஸல்யூட்’ ஊற்றி அவர் ரூமுக்குச்சென்று, அவரை வற்புறுத்தி குடிக்கச்சொல்லுவேன். மரியாதை நிமித்தம் அதை வாங்கி வைத்துக்கொள்வார். அடுத்தநாள் காலையில் அது அப்படியே இருக்கும்!

தம்பதி சமேதராக நாங்கள் எப்போது தமிழ்நாட்டுக்கு வந்தாலும், வருமுன் ‘மெட்ராசிலே செல்லப்பா, முத்துசாமியைப் பாருங்கோ. சிதம்பரத்துக்குப்போனா மெளனியைப்பாத்துட்டு வாங்கோ. உங்க ஊருக்குப்போனா நம்பியையும், சுந்தரராமசாமியையும், திருவனந்தபுரத்தில் டி.கே. துரைசாமியையும் ஒரு நடை பாத்துட்டு வாங்கோ’ என்று அவர் சொல்ல மறப்பதேயில்லை.

சென்னையில் க.நா.சு. நடத்திய இலக்கியவட்டம், ராமபாணம், சந்திரோதயம், சூறாவளி க்குப்பிறகு, தில்லிக்கு வந்தபின்னும் அவருக்கு இலக்கியப்பத்திரிகை நடத்தும் ஆவல் தணியவில்லை. சமயம் நேரும்போதெல்லாம், என் மாமியார் ராஜி, ‘எங்காத்திலெ ஒட்டியாணம், வங்கி, காசுமாலை, புல்லாக்கு உட்பட ரெண்டு தடவை செட் நகை பண்ணிப்போட்டா. எல்லாத்தையும் சூறாவளி பண்ணிட்டார்’ என்று புலம்புவார். தில்லியில் Lipi Literary Syndicate என்ற அமைப்பைத்தொடங்கினார். இந்தத் தடவை நிறுத்தாமல் தொடர்ந்து Lipi லிபி என்ற ஆங்கில இலக்கியப் பத்திரிகை நடத்தவேண்டுமென்று விரும்பினார். அப்போது நான் HDPE Woven Sacks தயாரிப்பாளர்களின் அகில இந்திய சங்கத்துக்கு தில்லியில் பிரதிநிதியாக இருந்தேன். எழுபதுகளில் உரத்தட்டுப்பாடிருந்தது. துறைமுகங்களில் வந்திறங்கும் Bulk Urea/DAP/MOP உரங்களுக்கு 15 கோடி காலி சாக்குமூட்டைகள் தேவைப்பட்டன. இந்திய அரசின் உணவுத்துறையிடம் அந்த பெரிய ஆர்டரை வாங்கிக்கொடுத்து, அதை சரியாக நிறைவேற்றும் பொறுப்பு என்னுடையது. அவர்களை சும்மா விடலாமா? வசதியுள்ள 70 அங்கத்தினர்களிடம் Lipi Literary Syndicate-க்கு விளம்பரத்திற்காக, தலா ஆயிரம் ரூபாய்க்கு அவர்கள் தலையில் கை வைத்தேன். இதற்கெல்லாம் C.A.G. Report / Lok Ayukta Report வராது! என்னிடம் அவர்களுக்கு காரியமாகவேண்டியிருந்ததால், க.நா.சு.வுக்கு ரூ.70,000 வந்தது. அப்போது இது ஒரு நல்ல தொகை. அது தீரும் வரை லிபி நான்கு இதழ்கள் வெளிவந்தன! அவரது ஆசையும் தீர்ந்தது!

உங்களில் பலருக்குத்தெரியாத விஷயம் சரண்சிங் சிலமாதங்களுக்கு இந்தியப்பிரதமராக இருந்தபோது, அவர் நடத்தி வந்த Rural India என்ற பத்திரிகைக்கு க.நா.சு.வை ஆசிரியராக இருக்கும்படி வேண்டிக் கொண்டார். தினமும் வீட்டுக்கு கார் வந்து அழைத்துப்போகும். கட்சியிலிருந்த எம்.பி., ராம் விலாஸ் பாஸ்வானிடம் ஏற்பட்ட கருத்துவேற்றுமையால், இரண்டே மாதத்தில்கால் கடுதாசி கொடுத்துவிட்டார். சரண்சிங் எத்தனையோ வற்புறுத்தியும், போகவேயில்லை.

1982 வாக்கில் மைசூரில் யூ.ஆர். அனந்தமூர்த்தி ஏற்பாடு செய்திருந்த இந்திய எழுத்தாளர் பட்டறை முடிந்தபின் இருமாதங்கள் சென்னையில் இருந்துவிட்டு வருகிறேனென்று தில்லியிலிருந்து புறப்பட்டார். பல வருடங்களாக மறுபதிப்பு வராமலிருந்த அவரது எல்லா மொழிபெயர்ப்புகளும், படைப்புகளும் அப்போது புற்றீசல் போல புது பதிப்புகள் வர ஆரம்பித்தன. க.நா.சு.வின் பெயரைக்கூட கேள்விப்பட்டிராத இளம் தலைமுறையினர் அவரைப் படிக்கத் தொடங்கினர். ‘தமிழ்நாட்டிலே புதுசா என்னை கவனிக்க ஆரம்பிச்சுருக்காங்க.குங்குமத்திலும், துக்ளக்கிலும் தொடர்ந்து எழுதச்சொல்றா. சந்தோஷமா இருக்கு. கொஞ்சநாள் சென்னையிலெ இருக்கேன்’ என்று இன்லாண்ட் கடிதமெழுதிவிட்டு, என் ’சித்தன் போக்கு சிவன் போக்கு’ மாமனார் மைலாப்பூர்TSV கோவில் தெருவில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்தார்.

குங்குமம் பத்திரிகையில் அவர் எழுதிய ‘.நா.சு. பக்கத்தில்கருணாநிதிக்கெதிரான விமர்சனங்களையும் பதிவுசெய்ய முரசொலி மாறன் அனுமதித்திருந்தார். சொந்த மகளுக்கும் மேலாக சென்னையில் எல்லா உதவிகளையும் செய்ய, லதா ராமகிருஷ்ணன், மற்றும் மஹாதேவன் போன்றோர் பக்கத்தில் இருந்தனர். இரண்டு மாதம் சென்னை வாசம் என்பது நான்கு வருடங்கள் நீடித்தது. க.நா.சு வாழ்க்கையில் அவை மகிழ்ச்சிகரமானவை. ஒரு பிரபல வார இதழின் நிருபர் இடக்காக ‘ரொம்பநாள் கழிச்சு சென்னைக்கு ஏன் வந்திருக்கீங்க? என்று கேட்டதற்கு, ‘கடைசிக்காலத்திலே இங்கே சாகலாம்னு வந்திருக்கேன்!’ என்று பதிலளித்தாராம். இந்த வார்த்தையை அவர் காப்பாற்றவில்லை. 1988-ல் தன் கடைசி நாட்களைக்கழிக்க அவருக்குப் பிடித்த தில்லியில் என் வீட்டுக்கு வந்துவிட்டார். இதைப்பற்றி விரிவாக இன்னொரு கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.

எண்பதுகளில் ஒரு தடவை நாகர்கோவில் போனபோது, பார்வதிபுரத்திலிருந்த என் அம்மாவைப் பார்க்க சுந்தர ராமசாமியுடன் போயிருந்தார். ‘அன்னிக்கு உங்காத்திலெ சாப்பிட்ட பூப்போல, வாயில் கரையும் இட்லியும், சாம்பாரும், அந்த தேங்காய் சட்னியும் போல நான் வேற எங்கெயும் சாப்பிட்டதில்லே. நானும் பல இடங்களில் கை நனைத்தவன்’ என்று பலநாள் சொல்லிக்கொண்டிருந்தார். ஆம்… என் தாயின் இட்லியும் சட்னியும் உலகப்பிரசித்தம்!

அதனால் தான் எனக்கு ‘முருகன் இட்லிக்கடை’யெல்லாம் சாதாரணமாகப்படுகிறது. எனக்கு நாக்கு நாலேகால் முழம். காளியாக்குடி அல்வாவில் தொடங்கி, எந்த ஊரிலும், சிற்றூரிலும் எந்தெந்த ஹோட்டல்களில் எதெது விசேஷம் என்பதற்கு அவர் ஒரு ரெடி ரெக்கனர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல…… சிம்லாவில் எந்த மூலையில் ராத்திரி பத்து மணிக்கு மேல் சிறந்த ‘கடக் சாய்’, சமோஸா கிடைக்குமென்பது அவருக்கு அத்துப்படி.

2003-ல் தமிழக அரசு க.நா.சு.வின் படைப்புக்களை நாட்டுடமையாக்கி, அவரது வாரிசுகளுக்கு ரூ.3.00 லட்சம் கொடுப்பதாக அறிவித்தது. இதற்கு தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் தலைவராக இருந்த டாக்டர். மா. ராஜேந்திரன் எடுத்துக்கொண்ட முயற்சி தான் முழுமுதற்காரணம். ஒரு மாதம் முன்பே, க.நா.சு.வின் பெயரை பரிந்துரைத்ததாகவும், அமைச்சர் விரைவில் அதை சட்டசபையில் அறிவிப்பாரென்றும் மா.ரா. தகவல் சொன்னார். அதற்கான அறிவிப்பு பத்திரிகைகளில் வந்த தினம், ஐந்தாறு பிரபல எழுத்தாளர்கள் என்னை தனித்தனியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாம் எடுத்த முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்ற ‘உண்மை’யை எனக்கு விளக்கமாக எடுத்துச்சொல்லி, கட்டாயமாக என் ‘நன்றி’யையும் பிடுங்கி வாங்கிக்கொண்டார்கள்! க.நா.சு.வின் மற்றொரு வாரிசான என் மனைவி, தனக்கு இதில் எந்தப்பங்கும் தேவையில்லையென்று எழுதிக் கொடுத்து விட்டதால், மொத்தப்பணமும் க.நா.சு.வின் மனைவி ராஜிக்கே வழங்கப்பட்டது. அதே வருடம் நாட்டுடமையாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரின் பணத்துக்கு, சுமார் 25 வாரிசுகள் போட்டி போட்டதும், அதற்கான விழா நடந்த கோட்டை முதலமைச்சர் அலுவலகம் வந்தபிறகும், ஒரு ’வாரிசு’ இறந்த எழுத்தாளரை கடைசிக் காலத்தில் கவனித்துக்கொண்டதால், தனக்கு அதிகப்பங்கு வேண்டுமென்று ’தெருச்சண்டை’யாக்கியதும் பார்க்க வேடிக்கையாக இருந்தது. கடைசியில் ரூ. 3 லட்சத்தை 26 காசோலைகளாக பிரித்து பங்கு போட்டுக்கொண்டு, சந்தோஷமாக வீடு திரும்பினார்கள்!

தஞ்சாவூரில் பிறந்திருந்தாலும், க.நா.சு.வுக்கு கெட்ட வார்த்தைகள் பாடமாகவில்லை. அவர் திட்டி நான் கேட்டதேயில்லை. இ.பா.வும் அப்படித்தான். ஆனால் தி. ஜானகிராமன் இதிலும் வல்லவர்! சிலசமயம் க.நா.சு.வுடன் பேசிக்கொண்டிருக்கும் எழுத்தாள நண்பர் சக எழுத்தாளரை ‘பச்சைத்தெறியில்’ திட்டும்போது, இவர் நெளிவதை பலமுறை ரசித்திருக்கிறேன். ‘விடுய்யா’ என்று அவரை சமாதானப்படுத்துவார். தினமும் வெளியில் போய்விட்டு, வீடு திரும்பும்போது வாசலில் பேசியதற்கதிகமாக கேட்கும் தமிழ் தெரியாத ஆட்டோக்காரிடமும், என் குழந்தைகளை அவர் கண் முன்னால் அடிக்கும் என் மனைவியிடமும், அவரது அதிகபட்ச கோபத்தில் வரும் கெட்டவார்த்தை ‘Bloody Fool’ என்பது தான். வயதில் சின்னவர்களையும் அவர்கள் இல்லாதபோதும் கூட மரியாதையோடு தான் குறிப்பிடுவார். ’ராஜி! ஆதவன் வந்தாரா?’ பலதடவை அவரை மடக்கி, ‘எனக்கு ஒங்க மகன் வயசு தான் இருக்கும். ஏன் வாங்கோ….போங்கோனு படுத்தறீங்க!’ என்று கடிந்துகொண்டாலும் அவர் தன்னை மாற்றிக்கொண்டதில்லை.

எனக்கு அவரிடம் பிடித்த இன்னொரு விஷயம் அவரது அநாயாச மரணம்.எல்லோருக்கும் அந்த பாக்யம் கிட்டுவதில்லை. லேசாக ஜுரம் என்று படுத்தவர் அடுத்தநாள் அதிகாலையில் சிரமப்படாமல், மற்றவர்களை சிரமப்படுத்தாமல் போய்விட்டார்.  எனக்கும் அதுபோல நடக்கவேண்டுமென்று தினமும் வேண்டிக்கொள்கிறேன். அவன் சித்தம் எப்படியோ?

நன்றி: காலச்சுவடு -க.நா.சு. நூற்றாண்டு விழா  மலரில் வெளிவந்தது.

Sep 24, 2010

இ.பா……. எண்பது!-பாரதி மணி

என் ஐம்பதுவருட நண்பர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு எண்பது வயதாகிறது. சென்ற ஜூலை மாதம் 9-ம் தேதி உயிர்மை பதிப்பகமும் மணற்கேணியும் இணைந்து நடத்திய கருத்தரங்கிலும், அடுத்தநாள் TAG Centre-ல் இ.பா. குடும்பத்தினர் சேர்ந்து கொண்டாடிய விழாவிலும், தன் நீண்ட, பயனுள்ள வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், இளமைத்துடிப்புடனும் தன் நியதிப்படி வாழ்ந்த ஒரு நல்ல மனிதரைப்பார்க்க முடிந்தது. இ.பா. நண்பர்களிடம் எந்த எதிர்பார்ப்புகளும் bharthimani4 இல்லாமல் பழகுவார். அவருக்கு யாரும் விரோதிகளில்லை. ‘இலக்கிய அரசியல்’ இல்லாதவர். எதற்கும் விட்டுக்கொடுக்காதவர். தமிழக அரசின் கலைமாமணி விருதை வேண்டாமென்று மறுத்தவர். தனது கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி தயங்காமல் சொல்பவர். அமெரிக்காவில் வசிக்கும் தன் மகன் முகுந்த் சிரமப்பட்டு வாங்கிக்கொடுத்த ‘பச்சை அட்டையை (American Green Card) அங்கு வசிக்க தனக்குப்பிடிக்கவில்லையென்று அங்கேயே வீசி எறிந்துவிட்டு, ஆற்காட்டாரின் மின்வெட்டுகளை சந்திக்க நிரந்தரமாக சென்னை வந்தவர். நான் சென்னை வந்தபிறகு, மீண்டும் எங்கள் நட்பு நெருக்கமானது. வாரத்துக்கொருமுறையாவது, அவரை நானோ, என்னை அவரோ தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தால், பேசிக்கொண்டேயிருப்போம். என் வீட்டிலேயோ, அவர் வீட்டிலேயோ யாராவது வந்து அழைப்புமணி அடிப்பதுவரை அது தொடரும். ‘யாரோ வாசல்லே வந்திருக்கா. அப்புறமா பேசுவோம்’ என்பது தான் எங்கள் கடைசி வாக்கியமாக இருக்கும்! பேசின செல் போனில் Call Duration 48 minutes 22 seconds என்று காட்டும்! எங்களுக்கும் பொழுது போகவேண்டாமா?

சி ல வருடங்களுக்குமுன் தன் மனைவி இந்திராவை இழந்த பார்த்தசாரதி, தன் எண்பதாவது வயதில் சதாபிஷேகத்தை மனைவியில்லாமல் கொண்டாட விரும்பவில்லை. மனைவியின் மறைவு, இவரை பெரிய அளவில் பாதித்தது. திருமதி இந்திரா இ.பா.வை ஒரு குழந்தையைப்போல் சீராட்டி குடும்ப பாரத்திலிருந்து இவருக்கு விடுதலையளித்து முற்றிலும் இலக்கியப்பணிக்காக இவரை தமிழுலகத்துக்கு தந்தார். அவர் இருந்ததுவரை, எல்லா குடும்பக்கவலைகளையும் அவரே சுமந்தார். மாதச்சம்பளத்தை இந்திராவிடம் கொடுத்துவிட்டு இவர் கவலையே இல்லாமல் இருப்பார். இ.பாவிடம் ‘இப்போ முகுந்த் எத்தனாவது படிக்கிறான்?’ என்று கேட்டால், கொஞ்சம் யோசித்துத்தான் பதில் சொல்வார்! பார்த்தசாரதி கொடுத்துவைத்தவர். எல்லோருக்கும் இம்மாதிரி மனைவிகள் அமைவதில்லை. இப்போதும் அவருக்கு அரிசி என்ன விலை, LPG சிலிண்டர் என்ன விலையென்று கேட்டால் தெரியாது! தன் அக்கா மகளையே மணந்தார். இந்திரா தன் கணவரின் காரியம் யாவினும் கைகொடுத்த அதிசயப்பெண்மணி. குழந்தைகள் பிறந்து சம்சாரம் ஆனபின்பும் தில்லிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து Master of Music பட்டம் பெற்றவர். புதுச்சேரியில் இருந்தபோது நாடகப்பள்ளி போட்ட ஒரு நாடகத்துக்கு இசையமைத்திருந்தார். இந்திராவை நான் கடைசியாகப்பார்த்தது சென்னையில் அவர் காலில் அடிபட்டு பிளாஸ்டரோடு படுக்கையில் இருந்தபோது. மூன்று மணிநேரம் சுவாரஸ்யமாக பழங்கதைகள் பேசிக்கொண்டிருந்தோம். அவரது அபார சங்கீத ஞானம் தான் பேத்தி அபூர்வாவிடம் இப்போது பரிமளிக்கிறது. தன் மனைவி இந்திராவின் இழப்பிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை. இ.பா.வும் சங்கீதத்தை விரும்பிக்கேட்பார். அவரால் எல்லா முக்கிய ராகங்களையும் அடையாளம் காணமுடியும். நான் சிலகாலம் செயலராக இருந்த தில்லி கர்நாடக சங்கீத சபாவின் எல்லா கச்சேரிகளிலும் இ.பா.வை பார்க்கலாம்.

ஆர். பார்த்தசாரதி, எழுத்தாளர் ஆனபோது தன் மனைவியின் பெயரையும் சேர்த்துக்கொண்டார். அப்போது அது புது ட்ரென்டை உருவாக்கியது. இவருக்குப்பின்னால் வந்த எழுத்தாளர்கள் பலர் தன் மனைவியின் பெயரையும் ஒட்டிக்கொண்டார்கள், சுஜாதா உட்பட. அப்போது சென்னை வந்தால், பல நண்பர்கள் ‘ஓ, இந்திரா பார்த்தசாரதி பொம்மனாட்டி இல்லையா?’என்று வியந்திருக்கிறார்கள். பிற மாநிலங்களிலிருந்து இவருக்கு Mrs. Indira Parthasarathy என்று பல அழைப்புகள் வந்திருக்கின்றன! இவர் சகோதரர் ஆர். வெங்கடாச்சாரி தன் மகனுடன் இப்போது பெங்களூரில் வசிக்கிறார். இவரும் தில்லியில் Times of India Group வெளியிடும் The Economic Times பத்திரிகையில் Chief News Editor ஆக பணிபுரிந்து ரிட்டயரானவர். எனக்கு பலவிதத்திலும் உதவி செய்திருக்கிறார். தில்லி வரும் என் வெளிநாட்டு வியாபார நண்பர்களைக்குறித்து நானே எழுதிக்கொடுக்கும் நேர்காணல்களையும் புகைப்படங்களையும் தானே பேட்டி கண்டதாக அடுத்தநாள் டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் எகனாமிக் டைம்ஸிலும் பெரிய புகைப்படங்களுடன் மூன்றாம் பக்கத்தில் வெளியிடுவார். தங்கள் புகைப்படங்களையும் கட்டுரைகளையும் பத்திரிகையில் பார்க்கும் ஜெர்மானிய நண்பர்கள் இந்தியாவில் அன்று அதுதான் முக்கியச்செய்தி என்று நினைத்து சந்தோஷப்படுவார்கள். என் ஆபீசில் என் புகழ் ராக்கெட் வேகத்தில் உயரே பறக்கும். இப்போதும் பெங்களூர் போனால் அவரை சந்திப்பதுண்டு.

34666_1317046215373_1507276454_30664210_3568118_nஇந்திரா பார்த்தசாரதியும் நானும் தில்லிக்குப்பொனது ஒரே வருடம். 1955. அவர் தில்லி Madrasi Education Association (MEA) – பிற்காலத்தில் தில்லிவாசிகள் அதை Money Eating Association என்று கேலி செய்வோம் --– நடத்திவந்த லோதிரோடு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகச்சேர்ந்தார். லோதி ரோடில் ஒரு அறையில் பிரும்மச்சாரியாக வாசம். சிதம்பரம் மெஸ்ஸில் இருவேளைச்சாப்பாடு. அங்கே ஓரிருமுறை பார்த்திருக்கிறேன். பேசியதில்லை. பார்த்தசாரதி பார்ப்பதற்கு இப்போதிருப்பதைவிட இன்னும் அழகாக இருப்பார்! (புகைப்படத்தில் நீங்களே பார்க்கலாம்). அவருக்கு அந்தப்பள்ளியில் சக ஆசிரியர் லக்ஷ்மணன். இந்த ‘ராமருக்கும்’ அவர் லட்சுமணனாகவே எப்போதும் இவருடனேயே இருப்பார். ’அந்த’ லட்சுமணனைப்போலவே, அவருக்கு ‘இந்த’ ராமரிடம் ஒரு பக்தி. எந்த வேலை சொன்னாலும், இன்முகத்தோடே செய்வார். இ.பா.வின் வீட்டில் ஒரு அங்கமாகவே மாறியிருந்தார். இவர் மனைவி இந்திராவுக்கு ஒரு தம்பி. குழந்தைகள் முகுந்த், பத்மா, மாதவிக்கு நல்ல மாமா. இவருடன் எப்போதுமே இருந்தாலும், இலக்கியத்துக்கும் அவருக்கும் ஸ்நானப்ராப்தி கூடக்கிடையாது! நல்ல ஆத்மா….இப்போது எங்கிருக்கிறாரோ? இந்தவருட ஆரம்பத்தில் இந்தப்பள்ளியின் பழைய மாணவர்கள் சங்கம் தில்லியில் ஒரு பெரிய விழாவை ஏற்பாடு செய்து, அதற்கு தலைமை தாங்க தன்னை நேரில் வந்து அழைத்ததாகவும், கால்வலி, முதுமை காரணமாக தன் இயலாமையைத்தெரிவித்ததாகவும் சாரதி என்னிடம் சொன்னார். ‘என்ன சிரமம் இருந்தாலும் போயுட்டு வாருமைய்யா! உம்மிடம் படித்த பழைய மாணவர்களை ஒருசேரப்பார்ப்பதும், அவர்கள் ஒவ்வொருவராக உங்கள் காலைத்தொட்டு வணங்கி, ‘சார்! நான் இன்ன வருடம் ஒங்ககிட்டெ படிச்ச மாணவன்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதும் எல்லோருக்கும் கிட்டாத பாக்யம் ஐயா! எழுத்தறிவித்தவன் இறைவனல்லவா?’ என்று அவருக்கு நான் ‘உபதேசம்’ செய்தேன்!

1956-ல் எங்கள் தட்சிணபாரத நாடக சபா தொடங்கியவுடன், மாலை வேளைகளில் நாடக  ஒத்திகைக்காக லோதிரோடு தமிழ்ப்பள்ளிக்குப்போவோம். பள்ளி நிர்வாகம் எங்கள் நாடக ஒத்திகைக்கு ஓரிரு வகுப்பு அறைகளை இலவசமாக தந்துதவியது. அப்போது பள்ளி வேலைகளை முடித்துவிட்டு, ராம லட்சுமணர்களாக இ.பா.வும் லக்ஷ்மணனும் வீட்டுக்குப்போகும் நேரம். ‘எப்போது நாடகம்? எங்கே மேடையேற்றம்?’ போன்ற விசாரணைகள். நான் ஆனந்தவிகடன், கல்கியில் அவரது முத்திரைக்கதைகளைப் படித்துவிட்டு, அவரை சந்திக்கும்போது பாராட்டுவேன். அதன்பிறகு தான் அவரது ‘தந்திர பூமி’ கணையாழியில் வெளிவந்தது என ஞாபகம். எங்கள் மனதில் முக்கியமான தமிழ் எழுத்தாளர் என்ற அந்தஸ்தைப்பெற்றுவிட்டிருந்தார். அவரிடம் பேசும்போது நாங்கள் காட்டும் மரியாதை அதிகமாயிற்று.

எங்களைப்போன்ற தில்லிவாசிகளுக்கு அவர் கதை, நாவல்களில் தமிழ்நாட்டு வாசகர்களை விட ஆர்வம் அதிகமாக இருந்தது. காரணம் அப்போதிருந்த பல தில்லிப்பிரமுகர்கள் அவர் நாவல்களில் கதைமாந்தராக உலா வருவார்கள். அவர் கதைகளில் முக்கிய விஞ்ஞானியும் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன், பூதலிங்கம் ICS, அவர் ம்னைவி ‘கிருத்திகா’, சக்ரவர்த்தி ஐயங்கார், சி.எஸ். ராமச்சந்திரன் ICS, கர்நாடக சங்கீதசபா தலைவர் ஏ.வி. வெங்கடசுப்பன் (சிலர் அவரை ‘ஆளை விடு வெங்கடசுப்பன் என்று கேலி செய்வார்கள்), National Cultural Organisation (NCO) தலைவர் என்.பி. சேஷாத்ரி –-- இவரைப்பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதியே தீரவேண்டும் -- இவர்களெல்லாம் இவரது படைப்புகளில் தங்கள் குண இயல்புகளுடன் வந்துபோவது தில்லியில் வாழ்ந்த எங்களுக்கு ஒரு போனஸ் மகிழ்ச்சி. ஒரு கதையில், ஒரு ICS அதிகாரியின் மனைவி, வெளிநாடு போகும் சின்ன அதிகாரிகளிடம் தங்களுக்குத்தேவையான, ஆனால் இந்தியாவில் அப்போது கிடைக்காத Bras, Sanitary Napkins போன்றவைகளின் அளவு கொடுத்து வாங்கி வரச்சொல்வார். அவர் யாரென்பது தில்லிவாசிகளுக்குத்தான் தெரியும். இன்னொரு நாவலில் – வேஷங்கள் என்று நினைக்கிறேன் -- ஒரு சபாவின் தலைவர் எல்லா சங்கீத வித்வான்களையும், அகால வேளையில் வீட்டுக்கு கூட்டிவந்து, ராக்கூத்தடித்து, கட்டிய மனைவியை ஒரு புழு போல் நினைத்து வேலைவாங்கும் படலம் விவரிக்கப்படும். அந்த முகம் யாருடையதென்று எங்களுக்குத்தான் தெரியும். வெளியூர் வாசகர்களுக்கு அவர் ஒரு பாத்திரம் மட்டுமே. இதைப்பற்றி இ.பா.விடம் கேட்டால், சிரித்துக்கொண்டே, ‘நல்லகாலம், அவர்களுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் வெகுதூரம். என் கதைகளை அவர்கள் படிப்பதே இல்லை!’ என்று சொல்வார்! அப்படியும் இவர் தன்னைப்பற்றி எழுதியதை படித்து கோபம் கொண்ட ஒரு சபா தலைவர் இவரை பழிக்குப்பழி வாங்க நினைத்து, எமெர்ஜென்ஸி காலத்தில் இவர் எழுதிய ஒரு கட்டுரையில் இந்திரா காந்தியைப்பற்றி அவதூறாக எழுதியதாக போலீசில் புகார் கொடுத்தார். எமெர்ஜென்ஸியல்லவா? இ.பா. டிபன்ஸ் காலனி போலீஸ் ஸ்டேஷனுக்கு போக நேர்ந்தது. நல்ல காலமாக இவரிடம் படித்த ஒரு IAS அதிகாரி சரியான சமயத்தில் தலையிட்டு, கொடுத்த புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லையென்று நிரூபித்ததால் வழக்கு தள்ளுபடியாயிற்று! இ.பா. கொஞ்சமும் கவலைப்படாமல், ‘நான் ஜெயிலுக்குப்போனதேயில்லை. கொஞ்சநாள் செளக்யமா இருந்துட்டு வரலாம்னு பாத்தா, அதுமட்டும் நடக்கலே! எமெர்ஜென்ஸிலே உள்ளே போனா இன்னும் விசேஷம்!’ என்று சிரிக்காமல் சொன்னார்.

இதற்கு நேர்மாறான இன்னொரு நிகழ்ச்சி. இ.பா. கல்கியில் ‘ஹெலிகாப்டர்கள் இறங்கிவிட்டன’ என்ற ஒரு தொடர்நாவல் எழுதிவந்தார். அதில் வரும் கதாநாயகன் மணமாகி இரு குழந்தைகளுக்குத்தந்தை. தில்லி அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பவர். அவருக்கு ஒரு நாடக நடிகையுடன் இருந்த தொடர்பு, அதன் விளைவாக தீக்குளிக்கும் மனைவி, அவர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள்…. இப்படிப்போகும். ஆரம்பமான இதழிலேயே இது யாரைப்பற்றிய கதை என்று எங்களுக்கு தெரிந்துவிட்டது. இந்தக்கதையின் உண்மை ‘நாயகன்’ கோபப்படுவதற்குப்பதிலாக, வாராவாரம் கல்கிப்பத்திரிகைக்காக காத்திருக்கத்தொடங்கினார். இவர் இ.பா.வுக்கும் எனக்கும் நெருங்கிய நண்பர். ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் கரோல்பாக் போய், பத்திரிகைக்கட்டு வந்து பிரித்ததும், முதல் பிரதியை வாங்கி அங்கேயே படித்துவிட்டு, எங்கெங்கே உண்மையிலிருந்து கதை மாறுபடுகிறது என்பதைப்பற்றி என்னிடம் சுவாரஸ்யத்துடன் விவாதிப்பார். தன் கதையை பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தொடராக எழுதுவதில் அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி! இ.பா. ஒருதடவை என்னிடம், ‘மணி! எனது ‘தந்திர பூமி’யில் வரும் கதாநாயகன் உங்களை மாதிரித்தான். நீங்கள் தான் இன்ஸ்பிரேஷன்’ என்று சொல்லியிருக்கிறார். But I don’t think he really meant it!
தமிழ்ப்பள்ளிக்குப்பிறகு இ.பா. தில்லி தயாள் சிங் கல்லூரியில் தமிழாசிரியராகப்பணியாற்றினார். பிறகு சிலவருடங்கள் தில்லிப்பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பிரிவில் ப்ரொபஸராக ஆனார். தமிழ் படிக்க வருட ஆரம்பத்தில் பத்து மாணவர்கள்…….பரீட்சை எழுதும்போது நாலுபேர் கூட தேறமாட்டார்கள். ஒரு முறை ஆர்வமாக தமிழ் படிக்க வந்த பஞ்சாபி மாணவனிடம் இ.பா. சந்தோஷமாக, ‘உன் தமிழ்ப்பற்று எனக்குப்பிடித்திருக்கிறது. உன்னை தமிழ் படிக்க தூண்டியது எது?’ என்று கேட்டதற்கு அந்த பஞ்சாபி, ‘ஸார், நான் ஒரு தமிழ்ப்பெண்ணை காதலிக்கிறேன்!’ என்று பதிலளித்தானாம். தமிழ்ப்பிரிவின் தலைவர் டாக்டர் ஆறுமுகம். சரியான அக்மார்க் முனைவர். நச்சினார்க்கினியாருக்குப்பிறகு தமிழில் கவிகளே இல்லையென்று சத்தியம் செய்வார். இ.பா.வின் ஒரு கதையைக்கூட அவர் படித்ததில்லை. ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள். பிறகு வந்த முனைவர் சாலை இளந்திரையன் இவருக்கு சில நெருக்கடிகளை உருவாக்கியவர். அதன்பிறகு ஐந்தாண்டுகள் வார்ஸா வாசம். தில்லி திரும்பியவுடன் புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப்பள்ளியில் இயக்குநர் பதவி. இ.பா. கதைகள்/நாவல்களில் உரையாடல்கள் முக்கியப்பங்கு வகிக்கும். கதைகளின் போக்கை விவரங்களை விட வசனங்களே மேலே எடுத்துச்செல்லும். உரையாடல்களில் அவருக்கே உரித்தான பகடியும் Black Humour கலந்த நகைச்சுவையும் அடிநாதமாக இருக்கும். நாடகத்துக்கு இவையெல்லாம் இன்றியமையாதவை. இவர் கதைகளையும், நாவல்களையும் படித்த எனக்கு ’இவர் ஒரு நல்ல நாடகத்தை உருவாக்கித்தரமுடியும்’ என்ற நம்பிக்கையிருந்தது. அதனால் அவரைப்பார்க்கும்போதெல்லாம், ‘சாரதி சார், எங்களுக்கு ஒரு நாடகம் எழுதித்தாங்களேன்!’ என்று கெஞ்ச ஆரம்பித்தேன். பிறகு தொடர்ந்த என் நச்சரிப்புகள் அவருக்கு ஒரு தலைவலியாக மாறியிருக்கக்கூடும். சில இடங்களில் அவர் என்னை தவிர்ப்பதாக உணர ஆரம்பித்தேன். பிறகு அவரை அதிகம் படுத்துவதில்லை!

1969-ல் ஒரு நாள். இ.பா. போனில் தொடர்பு கொண்டு, ‘நீங்க கேட்டமாதிரி, ஒரு நாடகம் எழுதியிருகேன். படிச்சுப்பாத்து, பிடிச்சுதுன்னா போடுங்க. இல்லெ திருப்பியனுப்பிடுங்க’ என்று சொன்னார். ஆபீசை கட் பண்ணிவிட்டு உடனே டிபன்ஸ் காலனியில் இருந்த அவர் வீட்டுக்குப் போனேன். ‘மழை’ என்ற தலைப்பிட்ட ஒரு நாடகப்பிரதியைக் கொடுத்தார். அதை முதல் 34234_1317045815363_1507276454_30664208_1212288_nதடவையாகப்படிக்கும்போது, தமிழ்நாடகங்களில் அதுவரை கிடைக்காத, வங்காள, மராட்டிய நாடகங்களில் மட்டுமே பார்க்கக்கிடைக்கும் மூன்றாம்நிலை உன்னதப்பரிமாணத்தை உணர்ந்தேன். தமிழில் இப்படி ஒரு நாடகமா? என்று வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனது தட்சிண பாரத நாடக சபாவின் மற்ற அங்கத்தினர்களிடம் கலந்தாலோசிக்காமலே, உடனே மறுபடியும் அவர் வீட்டுக்குப்போய், நாடகத்தை வெகுவாகப்பாராட்டி, எங்கள் அடுத்த நாடகம் இதுவாகத்தான் இருக்கும் என்று உறுதியளித்துவிட்டு வந்தேன். நாலே பாத்திரங்களும் மூன்றே காட்சிகளும் கொண்ட மழை நாடகத்தில் வரும் முக்கிய பாத்திரம் நிர்மலா தற்காலப் பெண்ணியத்தில் ஊறியவள். நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையுடன் அவள், தன் தந்தையைப்பார்க்கவரும் ஜேம்ஸ் என்ற டாக்டரிடம், ‘Doctor! Are all the Saints impotent?’……என்றும், இன்னொரு இடத்தில், ” டாக்டர்! I need a man……அது நீங்களாகவே இருக்கலாம்!’ போன்ற வசனங்களை அனாயாசமாக உதிர்ப்பாள். தில்லியில் நாடகங்களில் நடிக்க தொழில்முறை நடிகைகள் கிடையாது. அரசாங்க அலுவலகங்களில் உயர் அதிகாரிகளாகப்பணியாற்றும் IAS ஆபீசர்களின் மனைவி, மகள் போன்றவர்களுக்கு நாடகத்தில் நடிக்க விருப்பமும் திறனும் இருந்தால் அவர்களைத்தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுப்போம். மழை நாடகத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகையின் தந்தை என்னை போனில் கூப்பிட்டு, ‘மணி! இந்த நாடகத்தில வர சில டயலாக் ரொம்ப ஷார்ப்பா இருக்கு. என் டாட்டர் அதை மேடையில் பேச கூச்சப்படறா. அதை குறைக்க அல்லது எடுத்துவிட முடியுமா?’ என்று கேட்டார். அதற்கு நான் ‘ஸார், அந்த வசனங்களை எடுத்துவிட்டால் இது நாடகமே இல்லை. இந்த நாடகத்தின் உயிரே அதன் வசனங்கள் தான்!’ என்று சொல்லி போனை வைத்தேன். பிறகு இ.பா.விடம், ‘சார், உங்க நாடகத்தைப்போட எங்களுக்கு சம்மதம். ஆனால் ஒரு கண்டிஷன். நாடகத்துக்கு ஹீரோயினையும் நீங்க தான் தேடித்தரணும்’ என்று வேண்டிக்கொண்டேன்.
இருநாட்களுக்குப்பிறகு, ‘மணி! எழுத்தாளர் க.நா.சு. டிபன்ஸ் காலனிலே என்வீட்டுக்குப்பக்கத்திலெ இருக்கார். அவர் மகள் ஜமுனா Interior Designing படித்துக்கொண்டிருக்கும் மாணவி. அவளிடம் கேட்டேன். நடிக்க ஒத்துக்கொண்டாள். நீங்க போய்ப்பாருங்க’ என்று சொன்னார். 1970-ல் ஜமுனா நிர்மலாவாகவும், நான் ரகுவாகவும் இ.பா.வின் மழை நாடகத்தில் நடித்ததும், அந்த நாடகம் அனைத்திந்திய அனைத்துமொழி நாடகப்போட்டியில், நான்கு வங்காள, மூன்று மராட்டிய நாடகங்களுக்கிடையே ஒரே தமிழ் நாடகமாக போட்டியிட்டு அதில் மழை மிகச்சிறந்த நாடகமாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் பழைய கதை. மழை நாடகத்தில் நடிக்கும்போது எங்களுக்கிடையே காதல் அரும்பி, துளிர்த்து, மலராகி, நாங்கள் திருமணம் செய்துகொண்டது உங்களில் சிலருக்கு தெரியாத கதை! எங்கள் திருமணத்துக்கு இந்திராவும், சாரதியும் தான் முக்கிய காரணிகள்.
இ.பா. ஆஸ்திரேலியா போயிருந்தபோது, அங்கே ஈழத்தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ.வுடன் ஒரு நேர்காணல். அதில் இ.பா. ‘நான் மழை நாடகம் எழுத முக்கிய காரணம் எஸ்.கே.எஸ். மணி. ஆனால் மணியின் திருமணத்துக்கு நான் மட்டுமே காரணம். தமிழ்நாட்டில் ‘பலஸ்ருதி’யென்று சொல்வார்கள். ஒரு ஸ்லோகத்தைச்சொன்னால், அதற்கு இன்ன பலன் என்று உண்டு. தமிழ்நாட்டில் கல்யாணமாகாத பெண்களுக்கு நான் மழை நாடகத்தை பரிந்துரைக்கிறேன். 1970-ல் தில்லியில் முதன்முறையாக இந்த நாடகத்தில் நடித்த மணிக்கும் ஜமுனாவுக்கும் உடனே திருமணம் நடந்தது. சில வருடங்களுக்குப்பிறகு, லண்டனில் மழை நாடகத்தில் நடித்த பாலேந்திரனுக்கும், நிர்மலாவாக நடித்த பெண்ணுக்கும் திருமணமாயிற்று. அமெரிக்காவிலும் இதே நாடகத்தில் நடித்த இருவரும் தம்பதிகளாயினர். இதனால் அறியப்படுவது யாதெனில் கல்யாணமாகாத பெண்கள் ஒரு தடவை மழை நாடகத்தில் நடித்தால், அவர்களுக்கு விவாகப்ராப்தி உடனே சித்திக்கும்! என்று சொல்லியிருந்தார்.

இந்தியாவில் சாகித்ய அகாடெமி விருதும், சங்கீத நாடக அகாடெமி விருதும் பெற்ற ஒரே எழுத்தாளர் இ.பா. தான். அவர் கையெழுத்து கோழி கிண்டினது போல் படிக்க சிரமாக இருக்கும். சில சமயங்களில், ‘மணி! என்ன எழுதியிருக்கேன், படிச்சு சொல்லுங்க’ என்று என்னிடம் காட்டுவார். அப்போது நான், ‘சார், நீங்க எழுதியிருப்பது ஏதோ மார்ன் ஆர்ட் மாதிரி இருக்கு. இதை லலித் கலா அகாடெமிக்கு அனுப்பினால், இந்த வருஷம் விருது உங்களுக்குத்தான்! இந்தியாவிலேயே மூன்று அகாடெமி விருதுகளும் பெற்றவர் இ.பா. என்ற பெருமை எங்களுக்கெல்லாம் கிடைக்கும்!’ என்று நான் வேடிக்கையாகச் சொல்வேன். இ.பா. எழுதிய ‘ராமானுஜர்’ நாடகத்துக்கு கே.கே. பிர்லா ட்ரஸ்ட் உருவாக்கிய ‘சரஸ்வதி ஸ்ம்மான்’ விருது கிடைத்தது. இவ்வருடம் அவருக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருதைப்பற்றி யாராவது குறிப்பிட்டால், கூச்சத்துடன் நெளிவார்! உங்களில் பலருக்கு இ.பா.வின் ‘உச்சி வெயில்’ நாவலைத்தான் இயக்குநர் சேது மாதவன் ‘மறுபக்கம்’ என்ற தலைப்பில் திரைப்படமாக எடுத்தாரென்பது தெரிந்திருக்கும். இவரது ‘ராமானுஜர்’ நாடகத்தை பொதிகையில் சீரியலாக உங்களில் பலர் பார்த்திருக்கக்கூடும்.
இ.பா.விடம் என்னை ஈர்த்த இன்னொரு விஷயம் அவருக்கு ஆங்கில இலக்கியத்தில் இருக்கும் ஆளுமை. அவர் ஆங்கிலத்தில் பேசினால், மிகச்சரியான வார்த்தைகள் அங்கங்கே வந்து விழும். பலர் பேசுவது போல ‘I cannot be able to…….’ ரகமாக இருக்காது. இப்போதிருக்கும் தமிழ் எழுத்தாளர்களில் ஆங்கிலத்தை சரியாகக் கையாளும் புலமை அவருக்குண்டு. சுஜாதாவுக்கும் அது இருந்தது. எழுத்தாளர்களில் எத்தனை பேர் இன்று British Council-க்கும், American Library-க்கும் போய் தங்களைப் புதுப்பித்துக்கொள்கிறார்கள்? சென்னைக்கு வந்த புதிதில் இவர் பேச்சு ஆங்கிலத்தில் நினைத்து தமிழில் பேசுவதைப்போல இருந்ததுண்டு, க.நா.சு.வைப்போல. ஓரிரு வருடங்களில், இவருக்கு தமிழ் மேடைப்பேச்சு கைவசமாகி விட்டது. அவர் நல்ல மூடில் பேச ஆரம்பித்து முடிக்கும்போது, கைதட்டல்கள் ஒரு சடங்காக இல்லாமல், அவர் இருக்கையில் சென்று அமரும் வரை தொடரும்!
அதே போல, இ.பா.வின் ஆழ்வார்களைப்பற்றிய புரிதலும், நாலாயிர திவ்யப்பிரபந்தம் குறித்த அறிதலும் ஒருசில கட்டுரைகள் வாயிலாகவே வெளிவந்துள்ளன. அவருக்கு டாக்டர் பட்டம் வாங்கிக்கொடுத்ததே ஆழ்வார்களும் பிரபந்தமும் தான்! என்னைக் கேட்டால், நாரத கான சபா செயலர் கிருஷ்ணசுவாமி ஆண்டுதோறும் இ.பா.வை வைத்து தன் அரங்கில் ‘ஆழ்வார்களின் தமிழ் இலக்கியச்சுவை’ என்று பத்துநாள் இலக்கியப்பிரசங்கம் ஏற்பாடு செய்யவேண்டும். “ஸ்ரீயப்பதியான எம்பெருமான் சாட்சாத் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும்…….” என்று தொடங்கும் உபன்யாசங்களுக்குப்பதிலாக, ஆழ்வார்களையும், திவ்யப்பிரபந்தத்தையும், தமிழ் இலக்கிய நோக்கில் நமக்கு அறிமுகப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக அது அமையும்!

தில்லியில் இ.பா.வும் கணையாழி கஸ்தூரி ரங்கனும் நெருங்கிய நண்பர்கள். இ.பா.வின் டிபன்ஸ் காலனி விலாசம் தான் சிலகாலம் கணையாழியின் முகவரியாக இருந்தது. இணையாசிரியராக இருந்த இ.பா.வுக்கும் சென்னையில் இருந்த அசோகமித்திரனுக்கும் அவ்வப்போது ஊடல்கள் உரசல்கள் ஏற்பட்டதுண்டு. இப்போது இருவரும் நெருங்கிய நண்பர்கள். இலக்கியச்சிந்தனை ப. லட்சுமணனும், மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும் இ.பா.வின் நெடுநாள் நண்பர்கள்.
’உயிர்மை’ பதிப்பகம் என் முதலும் கடைசியுமான பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகத்தை வெளியிட்டபோது, இ.பா.விடம் ஒரு முன்னுரை எழுதித்தர கேட்டுக்கொண்டேன். அதில் பொய்யான புகழாரங்களாகச்சொரிந்து என்னை திக்குமுக்காட வைத்துவிட்டார். அதிலிருந்து சில வரிகள்: ……….. ‘ஆனால் இது மட்டும் என்னால் சொல்லமுடியும். மழை அப்போது மணி மூலம் மேடையேறாதிருந்தால், நான் தொடர்ந்து நாடகம் எழுதியிருப்பேனா என்பது சந்தேகந்தான். அது மேடையேறுவதற்கு முழுக்காரணமாக இருந்தவர் மணி தான்’………..’மணி தேர்ந்த நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல், இலக்கியத்திலும் இசையிலும் மிகுந்த ஈடுபாடுடையவராக இருந்ததுதான் என்னை மிகவும் கவர்ந்தது’……….’தில்லிக்கு வரும் சென்னை இசைக் கலைஞர்களில், மிகவும் பிரபலமானவர்களை மணி வீட்டில் தான் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கும் மணியின் குடும்பத்துடன் ஓர் ஆத்மார்த்த உறவு இருந்ததையும் என்னால் உணர முடிந்தது.’……….’மணியினால் செய்து முடிக்கமுடியாத காரியம் எதுவுமில்லை என்பது போன்ற ஓர் அபிப்பிராயம் அவருடைய நண்பர் வட்டாரத்துக்கு எப்பொழுதுமே உண்டு. ‘மணியா? அவரிடம் சொன்னால் ஒரு வெள்ளை யானையையே உங்கள் வீட்டு வாசலில் கொண்டு வந்து கட்டிவிடுவார்' என்று சொல்வார்கள். தில்லியில் அவரால் பயன் அடையாத தென்னிந்தியக் கலாசாரக் குழு எதுவுமில்லை……….“ ‘முடியாது' என்பது என் அகராதியில் கிடையாது” என்று நெப்போலியன் சொல்வாராம். இது நண்பர் மணியைப் பொறுத்த வரையில் மிகவும் பொருந்தும்’………. முன்னுரையை இப்படி முடித்திருந்தார்: ‘அவருடைய எழுத்தாற்றல் சமீபத்தில் தா ன் எனக்குத்தெரிய வந்தது. ஆனால் நான் ஆச்சரியப்படவில்லை. இதுவரையில் அவர் ஏன் எழுதாமலிருந்தார் என்பது தான் என் ஆச்சரியம்!’

எவ்வளவு பெரிய வார்த்தைகள்? உண்மையிலேயே நெகிழ்ந்துபோனேன். யார் தயவும் இல்லாமலே இ.பா நாடகாசிரியர் ஆகியிருப்பார். அவரால் எங்கள் DBNS குழுவுக்கும் எனக்கும் நவீன தமிழ் நாடக இயக்கங்களின் முன்னோடி என்ற சிறப்பு 1970-லேயே கிடைத்தது. அது அவர் எனக்கு அளித்த பெருமை. எழுபதுகளின் தொடக்கத்தில் அவரை சந்திக்கும்போதெல்லாம் நச்சரித்து நச்சரித்து எழுதச்சொன்ன முதல் நாடகம் மழை, பிறகு போர்வை போர்த்திய உடல்கள், ஒளரங்கசீப் போன்ற நாடகங்களை அப்போதே தில்லியில் பலதடவைகள் வெற்றிகரமாக மேடையேற்றி, அவைகளில் நடித்த பெருமை எனக்குண்டு.

இ.பா. நாடகங்களில் ‘காலயந்திரங்கள்’ நாடகத்தை நான் போட்டதில்லை. அதில் வரும் மஹாதேவன் பாத்திரம் எனக்குப்பிடித்தது. அழகாக, மிகைப்படுத்தாமல், Subtle-ஆக செய்யவேண்டிய கதாபாத்திரம். சென்னையிலோ, மற்ற நகரங்களிலோ யாராவது இந்த நாடகத்தைப்போட முன்வந்தால், கைச்செலவு செய்துகொண்டு போய், காலணா வாங்காமல் மஹாதேவன் பாத்திரத்தை நடித்துவிட்டு வர நான் தயார்! இ.பா.வே சொல்லியிருக்கிறார்: “என் நாடகங்களில் அவர் எந்தப் பாத்திரமாக நடித்தாரோ, அந்தப் பாத்திரத்தைப் பற்றி நான் எப்பொழுதெல்லாம் நினைக்கின்றேனோ அப்பொழுதெல்லாம் மணிதான் என் கண் முன் வந்து நிற்பார். வேறு பலர் அந்த நாடகப் பாத்திரத்தில் பிறகு நடித்திருந்தாலும், மணிதான் என் கண்முன் வந்து நிற்கிறார்.” மஹாதேவனாகவும் நடித்து இ.பா.வை பயமுறுத்தலாமே! சரி, கட்டுரை நீண்டுகொண்டே போகிறது…….. இவரைப்பற்றி சொல்வதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

எனக்கு ஓர் ஆசை: இ.பா…..நூறு! விழாவிலும் அவரை மேடையில் இதே துடிப்புடன் பார்க்கவேண்டும்!
***** **** **** *****
bharatimani90@gmail.com உயிர்மை ஆகஸ்ட், 2010 இதழில் வெளிவந்தது

Sep 17, 2010

தில்லியில் நிகம்போத் காட் [சுடுகாடு]-பாரதி மணி

இன்று CNN-IBN-ல் ஒரு செய்திமடல் பார்த்தேன். தில்லியில் 'லாவாரிஸ் பாபா' [லாவாரிஸ் = அநாதை] என்ற ஒரு முஸ்லீம் பெரியவரைப்பற்றியது. இவர் தனது சைக்கிள் ரிக்ஷாவுடன், தில்லி  வில்லிங்டன் [ஜெயப்பிரகாஷ்  நாராயண்] மருத்துவமனை வெளியே காத்திருப்பாராம்.  எல்லா பெரிய மருத்துவமனைகளிலும், உற்றார் உறவினரில்லாத அநாதைப்பிணங்களை, கண்பார்வையற்ற தன் மனைவியின் உதவியோடு, அவரவர் மதச்சம்பிரதாயப்படி, அடக்கம் செய்வாராம். தில்லிக்காவல்துறை இவருக்கு தலா ரூ.200அளிக்கிறதாம். பூவிழுந்த கண்களுடன், 'நான் எல்லா மனிதர்களையும் நேசிக்கிறேன். என்னிடம் வரும் பிணங்கள் அநாதைகளல்ல. அவர்களுக்கு நான் இருக்கிறேன். அவரவர் முறைப்படி அந்திமச்சடங்குகளைச்செய்கிறேன். இந்த உலகத்திலிருந்து யாரும் அநாதைகளாகப்போகக்கூடாது' என்கிறார் இந்த  நல்ல மனிதர்!     

போனவாரம், சென்னையில் என் ஆசான், ஐம்பது வருட தில்லி நண்பர், எங்கள் தட்சிண பாரத நாடகmani27sphoto-1 சபா டைரக்டர் ராமநாதனின் மாப்பிள்ளை இறந்துபோனதாகச்செய்தி அறிந்து, அவர் வீட்டுக்குப்போயிருந்தேன். எண்பத்தைந்து வயதான அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. தில்லியில் இருந்தபோது, அவர் தந்தை, தாய்,மனைவி, பிறகு ஒரே மகன் இறந்த நேரங்களில், மார்ச்சுவரி யிலிருந்து சடலத்தை வாங்குவதிலிருந்து, நிகம்போத் காட் சுடுகாடு வரை கூடவிருந்து உதவி செய்தவனுக்கு,இங்கே கண்ணம்மாபேட்டை வரை  போவதற்கான மனநிலை  இருக்கவில்லை.  'நமக்கு வயதாகி விட்டது, வெயிலில் நிற்கமுடியாது, மற்றவர்கள் இருக்கிறார்கள் பார்த்துக்கொள்வார்கள்' என்ற அரைமன நொண்டிச்சமாதானத்தோடு, வீடு திரும்பிவிட்டேன்.

ஆனால் வீட்டுக்கு வந்தும் இந்தக் குற்றவுணர்ச்சி குறையவில்லை. வயது ஆகஆக நான் மாறிக்கொண்டுவருகிறேனா? தில்லியில் இது நிச்சயம் நிகழ்ந்திருக்காது. அங்கிருந்தவரை சுமார் இருநூறு தடவைகளாவது நிகம்போத் சுடுகாட்டுக்குப்போயிருப்பேன். சாவு சொல்லிக் கொண்டு வருவதில்லை. வீட்டிலிருக்கும் மற்றவர்களுக்கு தனக்கு நெருக்கமானவர் சாவைப்பார்ப்பது முதல் அநுபவமாகத்தான் இருக்கமுடியும். அதிலும் கணவன் மனைவியாக வேலை நிமித்தம் தில்லிக்குவந்து தனிக்குடித்தனமாக வாழ்ந்துவருபவர்களுக்கு இந்தச்சோகம் அணுகினால் உடைந்துபோய் இருப்பார்கள். இன்னும் வேர்பிடிக்காத, மொழி தெரியாத புதிய ஊரில், விபத்திலோ நோயிலோ தன் ஒரே துணையான கணவனைப்பறிகொடுத்த அந்தப்பெண்மணியின் நிலையை சற்று நினைத்துப்பாருங்கள். அந்தசமயத்தில் செய்தியறிந்து, அப்போ திருந்த என் ஓட்டை ஸ்கூட்டரில் அங்கேபோய் சொந்தஊரில் யார்யாருக்கு தொலைபேசியில் தகவல் சொல்லவேண்டுமென்பதைத் தெரிந்துகொண்டு, இந்த சோகச்செய்தியை பக்குவமாக தெரிவிப்பது எளிதல்ல. கைபேசிகளும், STDயும் வராத காலத்தில், Trunk Call புக் பண்ணி, அவர்கள் குக்கிராமத்தில் தொலைபேசி இருக்கும் ஒரே வீட் டுக்கு தகவல் சொல்லி உறவினர்களைக்கூப்பிடவேண்டும். அவரவர் மத சம்பிரதாயப்படி, இறந்தவரை புதுத்துணியால் போர்த்துவது, தலை தெற்குப்பக்கம் வைத்து,   தலைமாட்டில் தெற்கேபார்த்து விளக்கேற்றுவது, உள்ளூரில் இருக்கும் அவர்களது நண்பர்கள் உறவினர்களுக்கு தகவல் சொல்வது, இறந்தவரின் Death Certificate கேட்டுவாங்கி, அதற்கு நாலைந்து  நகல் எடுத்து, ஒரிஜினலை பத்திரமாக வைத்திருப்பது, மந்திர் மார்க்கில் இருக்கும் தில்லி கார்ப்பொரேஷன் creamatorium_may_02-small ஆபீசுக்குப்போய் ரூ.50 கட்டி நிகம்போத் போக அமரர் ஊர்திக்குப்பதிவு செய்வது, அவர்களுக்கு சடங்குகளில் நம்பிக்கையிருந்தால், அதற்கான புரோகிதரை வரவழைப்பது, அவர் வருமுன்பே, யூஸப் ஸராயிலிருக்கும் ஒரே கடையில், பாடை,காடாத்துணி, பானைகள், கயிறு, வரட்டி நெய் போன்றவை வாங்கித் தயாராக வைப்பது, நெருங்கியவர்கள் சென்னையிலிருந்து விமானத்தில் வருவதாக இருந்தால் அவர்களுக்கு வண்டி அனுப்புவது என்று நான் ஒரு தடவை கூட சாகாமல், செத்தவர்களுக்கு என்னாலான மரியாதையை தொடர்ந்து செய்திருக்கிறேன். இறந்தவர்களுக்கு பசி இருக்காது. துக்கத்திலிருக்கும் மற்றவர்களுக்கு அந்த 'இடும்பைகூர்' வயிறு இருக்கிறதே! அவர்களுக்கு தேவையான காபி, டிபனுக்கு பக்கத்திலுள்ள தெரிந்தவர் வீட்டில் சொல்லி ஏற்பாடு செய்யவேண்டும். அந்தக்காலத்தில், தில்லியில் எங்கே தமிழர் வீட்டுச்சாவு நிகழ்ந்தாலும், உடனே 'மணியைக்கூப்பிடு, அவனுக்குத்தான் எல்லாம் தெரியும்'என்று         சொல்லுமளவுக்கு ஏறக்குறைய நான் ஒரு 'சவண்டிப்பிராமணன்' ஆகியிருந்தேன்! பாடை கட்டுவதில் எனக்கு இணையேயில்லை. கயிறு எங்கெங்கே இறுகவேண்டும் எப்படி முடிச்சுப்போடவேண்டுமென்பது தெரியாவிட்டால், அமரர் ஊர்தியில் போகும்போதே கயிறு தளர்ந்து, சடலம் ஆட ஆரம்பித்துவிடும்!

என் வேலை இத்துடன் முடிவதில்லை. நம்பிக்கையான இருவரை முன்கூட்டியே சுடுகாட்டுக்கு Death Certificate நகல், பணத்துடன் அனுப்ப வேண்டும். வாழும்போது மனிதனை வாட்டும் க்யூவரிசை அவன் இறந்தபிறகும் விடுவதில்லை! நிகம்போத் சுடுகாட்டில் போனவுடன் இறப்பு  பதிவேட்டில் பதிவு செய்ய க்யூ, விறகு வாங்க பணம் கட்டி,முண்டுமுடிச்சு இல்லாத நின்று எரிகிற விறகை, விறகுக்குவியலில் நாமே மேலே ஏறி பொறுக்கியெடுத்து எடைபோட்டு தள்ளுவண்டியிலேற்றுவதற்கு க்யூ, சடலத்தை எரிப்பதற்கான இடத்தை பதிவு செய்வதில் க்யூ, இப்படி க்யூ வரிசை இறந்த பிறகும் தொடரும்!

தில்லி போனபுதிதில், ஒரு தடவை என் நண்பரின் சடலத்துடன், இறப்பு பதிவேட்டில் பதிவு செய்ய க்யூவில் நின்றிருந்தேன். என் முறை வந்ததும், தூங்கிவழிந்துகொண்டிருந்த வயதான சிப்பந்தி, 'க்யா நாம் ஹை? என்றார். என் பெயரைச்சொன்னேன். 'பாப் கா நாம்?' என் தந்தையின் பெயரைச்சொன்னேன். 'உமர்?'. என் வயதைச்  சொன்னேன். ப[த்]தா?என் விலாசத்தை பின் கோடு சகிதம் ஒப்பித்தேன். அவரது அடுத்த கேள்வி: 'உன் பெயரென்ன?' என் பெயரைத்தானே சொன்னேன் என்று சற்று உரக்கக்கூறினேன். 'முட்டாள்,நான் செத்தவரின் பெயரைத்தான் கேட்டேன்.  நீ என்ன அட்வான்ஸ் புக்கிங் பண்ணறியா? பேட்டா! உனக்கு இங்கே வர இன்னும் நிறைய நாளிருக்கு. என் வயதும் உனக்குச்சேரட்டும்!' என்று ஆசீர்வத்தித்தார்!  ஆக என் பெயர் நிகம்போத் காட்டில் ஏற்கனவே பதிவாயிருக்கிறது!

முதலில் தெரிந்தவர்களுக்காக என்று ஆரம்பித்து, பிறகு தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ, சாவுச்செய்தி கேட்டால், பாக்கெட்டில் ஐநூறு ரூபாயை போட்டுக்கொண்டு போய்விடுவேன் (அப்போது என் ஒருமாத சம்பளம்) சாவுவீட்டிலிருக்கும் இறுக்கமான சூழ்நிலையில் அவர்களிடம் பணத்துக்காக தொந்தரவு செய்யக்கூடாதென்பதில் உறுதியாக இருந்தேன். அவர்களாக நினைவு வைத்திருந்து, பிறகு நிர்ப்பந்தமாக திருப்பித்தந்தால், முடிந்தவரை மறுத்துப்பார்ப்பேன். நான் வழக்கமாக கோவிலுக்குப்போவதில்லை. நானே தான் கடவுள் [அஹம் ப்ரும்மாஸ்மி]என்று அசட்டுத்தனமாக நினைத்துக்கொண்டிருந்த காலம். உண்மையாக இதை இறைவனுக்குச்செய்யும் கைங்கரியமாக நினைத்து செய்துவந்தேன்.  மாரடைப்பால் இறந்த நண்பர் ஒருவரது பதிமூன்றாம்நாள் சுபஸ்வீகாரத்தன்று, அவரது மனைவி என்னைத்தனியாக கூப்பிட்டு, 'அவர் இறந்த அன்று என்  கையில் பணம் இல்லை. திங்கட்கிழமை பாங்குக்குப் போய் பணம் எடுக்கலாமென்றிருந்தார். ஞாயிற்றுக்கிழமை திடீர்னு போயுட்டார். கடவுள் போல நீங்க இருந்தீங்க' என்று கண்ணீர் மல்கச்சொன்னது நினைவுக்கு வருகிறது. நானும் சில நல்ல காரியங்கள் செய்திருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டேன்.

நான் தில்லியிலிருந்த ஐம்பது வருடங்களில் பலதடவைகள் நிகம்போத் போயிருந்தாலும், என் சொந்தத் துக்கத்துக்காக போனது இரண்டே தடவைகள் தான். என் மாமனார் க.நா.சு. 1988 டிசம்பரில் நடக்கும் சாகித்ய அகாதெமி வருடாந்திர விருது விழாவில் கலந்துகொள்ள இரு மாதங்களுக்கு  முன்பே தில்லி வந்திருந்தார். மகள், பேத்திகளுடன் சில மாதங்கள் தங்கிவிட்டு சென்னை திரும்புவதாகத் திட்டம். அப்போது மூன்று வருடங்களாக சென்னையில் தங்கியிருந்தார். அவர் கடைசியாக கலந்துகொண்ட கூட்டம் ka_na_suதில்லி பாரதி மார்க்கில் இருக்கும் பாரதி சிலையடியில் அவரது பிறந்தநாள் விழா. அன்றுதான் ஷோரூமிலிருந்து டெலிவரி எடுத்த புது மாருதிக்காரில் அழைத்துச் சென்றேன்.'புது புத்தகம் மாதிரி புதுக்காரும் வாசனையா இருக்கு' என்று போகும் வழியில் சொன்னார்.  அன்று பாரதிவிழாவில் அவர் தமிழில் சரளமாகப்பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு ஆங்கிலத்தைப்போல தமிழில் சரளமாக, கோர்வையாகப் பேச வராது. ஆங்கிலத்தில் யோசித்து தமிழில் பேசுவதுபோலிருக்கும். ஆனால் அன்று தங்குதடையில்லாமல், அழகான தமிழில் இருமணி நேரம் பேசினார். அதற்கு அவரது மூன்றுவருட சென்னைவாசம் தான் காரணம் என்று அனுமானித்தேன். [நானே சென்னை வந்து  சில வருடங்களில் தைரியமாக தமிழில் எழுத ஆரம்பித்துவிட்டேனே!] சென்னை திரும்புமுன் என் குழந்தைகளுடன் ஓரிரு மணிநேரம் அவரைப் பேசச்செய்து,ஒலிப்பதிவு செய்யவேண்டுமென்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அது  நடக்கவில்லை. சாகித்ய அகாதெமி அவருக்கு India International Centre-ல் தங்க வசதி செய்திருந்தார்கள். விழாவுக்கு முன்தினம் அங்கு போவதற்கான ஆயத்தங்களில் இருந்தார். பெட்டி, Portable Typewriter, தடிக்கம்பு, அடுத்தநாள் விழாவில் வாசிப்பதற்கான தலைமையுரை,  சிறிது ஜலதோஷமானதால் இரண்டு டப்பி Zambuk எல்லாம் ரெடி. [உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன்: க.நா.சு. ஜாம்பெக்கை ஒரு சர்வரோகநிவாரணியாகவே கருதினார்!  ஜலதோஷத்துக்கு, இருமலுக்கு, கால்புண்ணுக்கு, சிராய்ப்புக்காயத்துக்கு, கத்திவெட்டுக்கு, வேர்க்குருவுக்கு, இன்னோரன்ன பிற பிணி களுக்கு, ஜாம்பெக் தான் அவரது ஒரே வைத்தியம். யாராவது அவரிடம் காலில் கான்ஸர் வந்திருக்கிறதென்று சொல்லி வருத்தப்பட்டால், 'ரெண்டுநாள் ஜாம்பெக் தடவுங்கோ. சரியாப்போயிடும்' என்று நம்பிக்கையோடு சொல்வார்!  என் குழந்தைகள் அவரைப் பரிகாசம் செய்யும்!]

வியாழக்கிழமை மாலை, ஜாம்பெக்குக்கு பணியாத ஜலதோஷம் நல்ல காய்ச்சலையும் சேர்த்துக்கொண்டது. 'நான் இன்னிக்குப்போகலே.  ரெஸ்ட் எடுக்கிறேன்' என்று படுத்துவிட்டார். என் காலனியிலிருந்த ஒரு டாக்டர் வந்து  பார்த்துவிட்டு, வெறும் ஜுரம் தான் என்று மருந்து எழுதிக்கொடுத்துவிட்டுப் போனார். இரவு கனவில் இளமையில் இறந்த தன் சகோதரி வந்து கூப்பிட்டதாகச்சொன்னார். மருந்தைக்கொடுத்து தூங்கவைத்தோம். 1988 டிசம்பர் 16-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு தன் மனைவி ராஜியிடம் ஒரு ஹார்லிக்ஸ் கேட்டுவாங்கி குடித்துவிட்டு படுத்தவர் தான். அரைமணி கழித்து, 'மணி! ஓடிவாங்கோ, என்னவோபோல் இருக்கார்' என்று என் மாமியார் கூப்பிடவும், போய்ப்பார்த்ததில், க.நா.சு. அடங்கிவிட்டாரென்று தெரிந்தது. இருந்தும் இருகைகளால் நெஞ்சை வேகமாக அழுத்திப்பார்த்தேன். எந்தச்சலனமுமில்லை. உடனே வந்து பார்த்த டாக்டரும் அதையே சொல்லிவிட்டு, Death Certificate எழுதிக்கொடுத்துவிட்டுப் போனார். கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன், ஆல் இந்தியா ரேடியோ தமிழ்ச்செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமிக்கு வீட்டில் தகவல் சொன்னேன்.  சிறிதுநேரத்தில், டூட்டியிலிருந்த என் நண்பர் செய்திவாசிப்பாளர் ராஜாராம் AIR-லிருந்து என்னைத்தொடர்பு  கொண்டு க.நா.சு.வின் பிறந்த ஊர், வயது முதலியவற்றைக்கேட்டறிந்து, காலை 7.15 தமிழ்ச்செய்தியில் தமிழ்  நாட்டுக்கு க.நா.சு. இறந்த செய்தியை அறிவித்தார். எட்டுமணி ஆங்கிலச்செய்தி வருமுன்பே, ராஷ்டிரபதி பவனிலிருந்து நாணா [கல்கியின் மருமகன் - குடியரசுத்தலைவர்  வெங்கட்ராமனின் செயலர்] என்னிடம் தொடர்பு   கொண்டு, பெரியவர் என்னிடம் பேசவிரும்புவதாகச்சொன்னார். திரு. வெங்கட்ராமன், தன் ஆழ்ந்த அநுதாபங்களைத்தெரிவித்து, சிறுவயதிலேயே இருவரும் நண்பர்களென்றும், நேரில் வர ஆசை இருந்தும், என் காலனிக்குள் வர பாதுகாப்பு அதிகாரிகள் Security Clearance தரவில்லையென்றும், தன் சார்பாக இரு A.D.Csமலர்வளையங்கள், கைப்பட எழுதிய இரங்கல் செய்தியுடன் வருவார்களென்றும் தெரிவித்தார். தில்லி தமிழ்ச்சங்க நண்பர்கள், சாகித்ய அகாதெமி தலைவர், வாஸந்தி, வெங்கட் சாமிநாதன், பென்னேஸ்வரன் உட்பட தில்லி எழுத்தாள நண்பர்கள் வர ஆரம்பித்தனர். காலில் அடிபட்டு பிளாஸ்டர் போட்டிருந்த வெங்கட் சாமிநாதன், ஒவ்வொரு படியாக ஏறமுடியாமல் ஏறி வந்து, தூரத்தில் நின்று, படுத்திருந்த க.நா.சு.வை அரைமணிநேரம்   வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது ஞாபகத்துக்கு வருகிறது. க.நா.சு. வளர்த்த Goofyஎன்ற நாயை விட அவரிடம் மரியாதை, நன்றிவிசுவாசம் வைத்து, அவருக்குப் பிரதம சீடனாக இருந்த தில்லி எழுத்தாளர் ஏ.ஆர். ராஜாமணி மட்டும் வரவில்லை ஊரில் இல்லாத காரணத்தினால்! ஆனால், பெரியவரது சாம்பலை யமுனைநதியில் கரைக்கப்போகும்போது என்னுடன் இருந்தார். Goofyயும் ஒரு வாரத்துக்கு சோறுதண்ணி  யில்லாமல் சோகமாக படுத்துக்கிடந்தது! இந்த Goofy பெயரில் ஓரிரு கவிதைகள் கூட எழுதியிருக்கிறார்!

க.நா.சு.வுக்கு சென்னையைவிட தில்லி பிடித்திருந்தது. அந்தக்காலத்தில் அவரைப்போல எழுத்தையே தொழிலாக நம்பிவாழ்ந்த வெகு சிலருக்கு சென்னை அரைவயிறாவது நிறைய வாய்ப்பளித்திருக்குமா என்பது சந்தேகம் தான்! தில்லியில், Statesman, Hindustan Times, Patriot, Pioneer, Times of India, Indian Express போன்ற தினசரிகளில் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுதி வந்ததால், அங்கே வசதியாகவே வாழ்ந்தார். இவ்விஷயங்களில், ஞானபீடம் ஜெயின், குல்தீப் நய்யர், குஷ்வந்த் சிங் போன்றோர் உதவி அவருக்கிருந்தது.1984-வாக்கில் மைசூரில் நடந்த ஒரு 'எழுத்துப் பட்டறை'க்காக இருமாதங்கள் தெற்கே வந்தவர், மூன்று வருடங்கள் சென்னையிலேயே தங்கிவிட்டார். அப்போது ஒரு நிருபர் கேட்ட இடக்கான ஒரு கேள்விக்கு, 'ஆம், சாவதற்காக சென்னை வந்திருக்கிறேன்' என்று சொன்னாராம். ஆனால் சாவதற்கு, அவருக்குப்பிடித்த தில்லிக்குத் திரும்பிவிட்டார்!

க.நா.சு.வுக்கும் எனக்கும் கடவுள் நம்பிக்கையிருந்தாலும் சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இருந்ததில்லை. அவர் பூணூலையே கழட்டிவிட்டார். அதனால், புரோகிதர்,மந்திரங்கள், தீச்சட்டியில்லாமல், தில்லி கார்ப்பொரேஷன் புதிதாகக்கட்டியிருந்த நிகம்போத் மின்சார சுடுகாட்டில் அவரை எரியூட்டினேன்.  என் வீட்டுக் காரியத்துக்கும், நானே தான் மந்திர் மார்க் போய் அமரர் ஊர்திக்கு பதிவு செய்துவிட்டு வந்தேன். எனக்குத்துணைக்கு பாரதி பாலுவைத்தவிர யாருமில்லை. அவருடன் அவர் எழுதிய, அப்போது மறுபதிப்பு வந்திருந்த, எல்லா சிறுகதை நாவல்கள், உலக இலக்கிய மொழிபெயர்ப்புக்களின் ஒவ்வொரு பிரதியையும் அவருடன் சேர்த்து எரியவிட்டேன். இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது.

எழுபதுகளில் நாங்கள் செளத் எக்ஸ்டென்ஷனில் இருந்தபோது, க.நா.சு.வுடன் பேசிக்கொண்டிருக்கவும், மதராஸி பில்டர் காபி சாப்பிடவும் மாலை ஏழு மணிக்குப்பிறகு  வீட்டிலிருந்த என் 'Bar'ல் பேகம் அக்தர் கேட்டுக்கொண்டே, மூன்று லார்ஜ் 'ஷிவாஸ் ரீகல்' விஸ்கி சாப்பிடவும் முதுபெரும் எழுத்தாளர் குஷ்வந்த் சிங் என் வீட்டுக்கு வருவார். ஒரு சமயம் க.நா.சு.வுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, 'கானா, உன்னிட மிருக்கும் எல்லா புத்தகங்களையும் மொத்தமாக எனக்குத்தருகிறாயா, ஒரு லட்ச ரூபாய் தருகிறேன். I am serious' என்றார். அதற்கு, 'My book collections are not for sale. எனக்குப்பிறகு இவைகளைப்படிக்க யாருமில்லையென்றால், அவைகளை என்னோடு சேர்த்துவைத்து   எரித்துவிடட்டும். Thank you very much for your offer.' என்று அவர் சொன்னது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. அதனால் தான் அவர் போகும்போது, அவருக்கு மிகவும் பிடித்த புத்தகங்களும் அவருடன் போகட்டுமே என்று அவைகளையும் சேர்த்து எரியவிட்டேன். American Library, British Council-லிருந்து வாங்கிவந்த புத்தகங்களையெல்லாம் படித்துமுடித்து, படிப்பதற்கு வேறு புத்தகங்களொன்றுமில்லை' யென்றால், என் குழந்தைகளின் பாடபுத்தகங்களை கேட்டுவாங்கிப்படிப்பார்! படிப்பதற்கு எதுவாக இருந்தாலும் சரி! என் மூத்தமகள் ரேவதி தான் அந்தத்தாத்தாவுக்கு சரியான பேத்தி! அவர் விட்டுச்சென்ற புத்தகங்களையெல்லாம் குறைந்தது இரண்டுமூன்று தடவைகளாவது படித்திருப்பாள். அவள் கணவனும் ஒரு 'புத்தகப்புழு' என்பதால்,கல்யாணமாகிப்போனதும், க.நா.சு.வின் எல்லா புத்தகங்களையும் பாதுகாத்து பராமரித்து வந்தாள். என் மகள் ரேவதிக்கு World Bank வேலையில் சென்னைக்கு மாற்றலானதும்,ஐம்பது பெரிய டிரங்க் பெட்டிகள் வாங்கி புத்தகத்துக்கென்றே ஒரு தனி லாரி ஏற்பாடுசெய்து க.நா.சு.வின் புத்தகங்கள் தில்லியிலிருந்து சென்னை வந்துசேர்ந்தது. என்வீட்டில் ஒரு ஆள் நடக்கப்போதுமான இடைகழி விட்டு மூன்று அறைகளிலும், வரவேற்பு அறையிலும் கூரை வரை புத்தகப்பெட்டிகள்! எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வீடு பூரா பழைய புத்தகநெடி. சென்னை எழுத்தாளநண்பர்களிடம் சொன்னேன். ஓரிருவர் வந்து அவர்களுக்குத்தேவையான சில புத்தகங்களை எடுத்துச்சென்றார்கள். விற்கவும் மனசு வரவில்லை. ஒருமாதத்திற்குப்பிறகு, 'காலச்சுவடு' கண்ணனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, சென்னையிலோ நாகர்கோவிலிலோ ஒரு புத்தகநிலையம் அமைத்து இந்தப் புத்தகங்கள் மக்களுக்கு உதவும்படி செய்யமுடியுமாவென்று கேட்டேன். அவர் சொல்லி ஆ.இரா. வேங்கடாசலபதி வந்து ஒரு லாரியில் எல்லா புத்தகப்பெட்டிகளையும் ஏற்றிச்சென்றார். [புத்தகநெடியால் ஒருவாரம் அவஸ்தைப்பட்டாராம்]. அதற்குப்  பிறகு, ஒரு வருடத்துக்குமேல் கண்ணனிடமிருந்து புத்தகப்பெட்டிகள் வந்து சேர்ந்ததைப்பற்றி எந்தத்தகவலும் இல்லை. நான் இதைப்பற்றி காலச்சுவடில் நாலுவரி அறிவிப்பைத்தான் எதிர்பார்த்தேன். சரி, இதையெல்லாம் எதிர்பார்ப்பது  நம் தவறு என்று எண்ணிக்கொண்டேன். சமீபத்தில் கண்ணனை நேரில் பார்க்க நேர்ந்தபோது, நாகர்கோவிலில் அமையப்போகும் சு.ரா. நினைவுப் புத்தகநிலையத்தின் ஒரு பகுதியாக இவைகளும் இடம்பெறுமென்று அவராகவே சொன்னார்.

சரி, நிகம்போதுக்கு திரும்பிவருவோம். கிருபானந்த வாரியார் போல், எம்பார் விஜயராகவாச்சாரியார் போல், கதை உபகதையென்று எங்கெங்கோ சுற்றினாலும், விஷயத்துக்கு வந்துவிடவேண்டும்! இரண்டாவதாக என் குடும்பச்சாவுக்கு நிகம்போத் போனது வயதான என்  தாயார் சிவகாமி இறந்தபோது  எல்லா நல்ல விஷயங்களையும் பார்த்து அனுபவித்து நிறைவாக எண்பத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்த மகிழ்வோடு மறைந்ததால், அது எங்களுக்கு ஒரு கல்யாணச்சாவாகத்தான் இருந்தது.

தில்லியில் இன்னமும் பிரேத ஊர்வலங்கள் தனிமனிதனின் துக்கத்தை மதிக்கும் வகையில் அமைதியாகத்தான் நடைபெறுகின்றன. அமரர் ஊர்திக்குக்கூட வழியில்லாதவர்கள் மறைந்தவருக்கு ஓரிரு துலுக்கன் சாமந்தி   மாலைகளை அணிவித்து, உறவினர்களில் சிலர் மாறிமாறி   'ராம் நாம் ஸத்ய ஹை' என்று அவர்களுக்குள்ளேயே சொல்லிக்கொண்டு தூக்கிச்செல்வார்கள். சுமங்கலிப்பெண்களாக இருந்தால், சடலத்தை சிவப்புத்துணியால்   போர்த்துவார்கள்.  நிகம்போத் சுடுகாட்டுக்குப்போனவுடனே,பாடையை யமுனை படித்துறையில் ஒரு தரம் முக்கியெடுத்துவிட்டு, ஈரம் சொட்டச் சொட்ட சிதையில் வைப்பார்கள். ஆனால் சென்னையில் சாவு எனும் தனிமனித துக்கத்தை ஒரு கொண்டாட்டமாகவே நிகழ்த்துகிறார்கள். பத்திரிகைகளில் பக்கம்பக்கமாக 'கண்ணீர் அஞ்சலி' விளம்பரங்கள், அவர் வாழ்ந்த பேட்டை முழுவதிலும், முடிந்தால் சென்னை மாநகர் முழுவதும் பெரிய இரு கண்களிலிருந்து குடம் குடமாகக்கொட்டும் 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டர்கள், முக்கிய வீதிகளில், போக்கு வரத்தையே ஸ்தம்பிக்கச்செய்யும் பூஜோடனையுடனான ஊர்திகள், அதன் முன்னே 'உள்ளே   போன குவார்ட்டர் அரைக்கு' வஞ்சகமில்லாமல், தாரைதப்பட்டைகளின் 'கல்யாணந்தான் கட்டீக்கிட்டு' மெட்டுக்கு சிம்பு ஆட்டம் ஆடும் இருபதுக்குக்குறையாத இளைஞர்கள், இவர்களை மேய்க்கவும், வேண்டிவந்தால், அவசரமாகப்போகும் ஆம்புலன்ஸையும் நிறுத்திவைக்கும் இரு டிராபிக் 'தாதாக்கள்', அடுத்தநாள் பார்த்தாலும் இந்தவழி ஒரு பிரேத   ஊர்வலம் போயிருக்கிறதென்பதை தெரிவிக்கும் மலர்த்தூவல்கள்.... இப்படி ஒரு தனிமனிதனின் துக்கத்தையும் பொதுஜனக்கொண்டாட்டமாகவே நிகழ்த்திவருகிறோம்! ஒரு சிறுமியின் 'மஞ்சள் நீராட்டு விழா'வையே போஸ்டரடித்து ஊரறியக் கொண்டாடும் நாம் சாவை விட்டுவைப்போமா?

சில நெருங்கியநண்பர்கள் வீட்டுக்கல்யாணங்களைத்தவிர்த்திருக்கிறேன். ஆனால் சாவுச்செய்தி கேட்டு போகாமலிருந்ததில்லை. இப்போது நினைத்துப்பார்க்கும்போது, அறுபது எழுபதுகளில் ஒரு மாதத்தில் இருதடவைகள் கூட நிகம்போத் சுடுகாடு போயிருக்கிறேன்.  இருமாதங்கள் போகவில்லையென்றால், அடுத்ததடவை போகும்போது, 'க்யா ஸாப்,பஹுத் தின்ஸே திக்காயி நஹீன் தியா?' [ஏன் உங்களை ரொம்பநாளாக்காணோம்?] என்று அங்குள்ள  வெட்டியான்கள் விசாரிக்கிற அளவுக்கு நான் அறிமுகமாகியிருந்தேன்! நான் போனால் அதிக நேரம் பிணத்துடன் காக்க வைக்காமல், எரியூட்டுமிடத்தை தயாராக வைத்திருப்பார்கள். ஆர்.கே.புரம், லோதி ரோடு, கால்காஜி என்று பக்கத்தில் சுடுகாடுகளிருந்தாலும், எல்லோரும் இந்தியாவிலேயே பெரிய சுடுகாடான நிகம்போத் சுடுகாட்டில் எரியூட்டுவதையே விரும்புவார்கள். பக்கத்தில் ஓடும் யமுனையாறு ஒரு முக்கியக்காரணம். அடுத்தநாள் அஸ்திச்சாம்பலை ஒரு படகில்போய் யமுனை நடுவே கரைப்பது எளிதாக இருந்தது. நிகம்போத் அருகிலேயே யமுனைநதிக்கரையில்,தேசப்பிதா மகாத்மா காந்தியிலிருந்து,   நேரு, சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் உட்பட பல தலைவர்களும் நீங்காத்துயில் கொண்டிருப்பது இன்னொரு காரணம். அவர்கள் பக்கத்தில் இடம் கிடைப்பது எளிதா என்ன? அதனால் தான் நானும் என்னையறியாமலே எனக்குப்பழக்கமான நிகம்போதில் என் இடத்தைப் பதிவுசெய்து வைத்திருக்கிறேன் போலும்!

என் மாமியார் ராஜி இப்போதும் அடிக்கடி, 'கடைசியா என் கையாலே ஹார்லிக்ஸ் சாப்பிட்டார். போயுட்டார்!' என்று சொல்வதுண்டு. அதற்குப்பின் அவர் யாருக்கும் ஹார்லிக்ஸ் போட்டுக்கொடுத்ததில்லை! இது உண்மை!!

எழுபதுகளுக்குமேல் அடிக்கடி வெளிநாடுகள் போகவேண்டிய நிர்ப்பந்தம், வாழ்க்கைவசதிகளைப்பெருக்குவதிலிருந்த ஆர்வம் காரணமாக எனது நிகம்போத் விஜயம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. என்னதான் என் மனது நொண்டிச்சாக்கு சொன்னாலும், மே ஜூன் தில்லி வெயிலில் நான்குமணி நேரம் நிகம்போதில் ஓடியாடி வேலை செய்தவனுக்கு, இங்கே கண்ணம்மாப்பேட்டை வெயில் தாங்காது என்று வீடு திரும்பிவிட்டேன். அரசியல் மொழியில் சொன்னால், அப்போது தொண்டனாகவிருந்தவன்,இப்போது தலைவனாகிவிட்டேனா? சென்னை  வெயில் தாங்காமல் இப்போது ஏ.ஸி. குளிர் கேட்கிறது இது ஏன்? நான் மாறிக்கொண்டுவருகிறேனா? இல்லை என் வயதுதான் காரணமா?

இப்போது இந்தக்கட்டுரையின் முதல் பாராவை மறுபடியும் படித்துப்பாருங்கள். அந்த 'லாவாரிஸ் பாபா'வுக்கும் எனக்கும் சிறிதாவது ஒற்றுமை தெரிகிறதா?

நன்றி: பாரதி மணி bharatimani@yahoo.com   'உயிர்மை' நவம்பர் 2007 இதழில் வெளிவந்தது

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்