Showing posts with label பிரபஞ்சன். Show all posts
Showing posts with label பிரபஞ்சன். Show all posts

Jan 18, 2013

பிரபஞ்சனுக்கு சாரல் விருது 2013

 

ஜேடி-ஜெர்ரி நிர்வகிக்கும் அறக்கட்டளை சார்பில், எழுத்தாளர்கள் மா.அரங்கநாதன், தேனுகா, ரவி சுப்பிரமணியன் ஆகியோரை நடுவராகக்கொண்டு வருடாவருடம் சாரல் விருது இலக்கிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வருடம் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு சாரல் விருது வழங்கப்படுகிறது.

இதற்கு முன் இந்த விருதைப் பெற்றவர்கள்:
2009- திலீப்குமார்
2010- ஞானக்கூத்தன்
2011-அசோகமித்திரன்
2012-வண்ணநிலவன், வண்ணதாசன்

விழா ஜனவரி 26 சனிக்கிழமை நடைபெறுகிறது.
அனைவரும் வருக.

01

விழா அழைப்பிதழ்

saral_2013-final

Feb 18, 2012

பாதுகை – பிரபஞ்சன்

இரண்டு பெருச்சாளிகள் பக்கத்தில் பக்கத்தில் நிற்பதுபோல அந்தச் சப்பாத்துகள் இருந்தன. புத்தம் புதிய சப்பாத்துகள். முகம் பார்த்துத் தலை சீவிக் கொள்ளலாம் போன்ற பளபளப்பு. வாசலில் காய்ந்த வெயில் வெளிச்சம் பட்டுக் கறுப்பு மின்னல் மாதிரி அலைகள் ஒளிர்ந்தன.

பொன்னுத்தம்பி அந்தச் சப்பாத்துக் குழந்தைகளைப் பார்த்தான். கறுப்பு இரட்டைக் குழந்தைகள். வெள்ளைக்காரத் தெருவில், துரைமார்களுக்கு மட்டுமே பாதுகைகள் செய்prabanயும் மாடன் சிரத்தையோடும் ஆர்வத்தோடும் செய்திருந்தான் அவற்றை. விலை கொஞ்சம் கூடுதல்தான்.  அதற்கென்ன செய்ய முடியும். துரைமார்கள் கொடுக்கிற கூலியைத் தானே தானும் கொடுக்க வேண்டியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். ரொம்ப நாள் ஆசை அன்று நிறைவேறியது பொன்னுத் தம்பிக்கு துரைமார்களைப் போலவே படித்து அவர்களோடேயே தொழிலும் செய்கிறவன். அவர்களைப் போலவும் உடுத்த வேண்டாமா என்ன?

கஞ்சி முடமுடப்பில் நிமிர்ந்து கத்தி மாதிரி நின்ற கால் சராய்களின் மடிப்பு பழுதுபடா வண்ணம் வாகாக உட்கார்ந்து கொண்டு, மேஜோடுகளை எடுத்தான். மேஜோடுகளும் புதியவைதான். பாம்பு உரித்த சட்டை மாதிரி, மெருகும் மென்மையுமாய் இருந்தன அவை. இரண்டு கால்களிலும் மேஜோடுகள் அணிந்து முடித்து, சப்பாத்துகளை எடுத்தான்.

மேலே படிந்திருந்த தூசை, அவற்றுக்கு நோகாமல் தட்டிக் சுத்தம் செய்தான். ஒவ்வொன்றிலும் காலை நுழைத்துக் கயிற்றால் இழுத்துக் கட்டிக் கொண்டான். வளர்ப்பு நாய்க்குட்டி காலைக் கவ்வியது மாதிரி சப்பாத்துகளும் கவ்விக் கொண்டன. நாலடி நடந்தான்.

என்ன சுகம். நடக்கவே சந்தோஷத்தையும் உந்துதலையும் கம்பீரத்தையும் கூட அவை தந்தன. ஏழெட்டு வயது குழந்தை மாதிரியும் இருந்தன.

திண்ணையில் பொன்னுத்தம்பியின் அப்பா மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு உட்கார்த்திருந்தவர் மகனைப் பார்த்தார். எழுந்து நின்றார்.

அப்பாவுக்குக் கூன் போட்டிருந்தது. முதுமை காரணமாக வந்த கூன் அல்ல அது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக வெள்ளைகாரர் வீட்டுப் பட்லர் முதல் வெள்ளை நிறத்தோரைக் காணும் தோறும் குனிந்துகுனிந்து வணங்கியதால் ஏற்பட்ட வளைவு. வழக்கம்போல அவர் சொன்னார்.

“பத்ரம்பா, பத்திரம்! துரைகளோடு வாழ்க்கை நடத்தறது பேயோட சம்சாரம் பண்ணற மாதிரி. எப்போ மரம் ஏறும் எப்போது இறங்கும்னே கண்டுபிடிக்க முடியாது. கும்பிட்டு வாழனும். கும்பிட்டவன் கூழ் குடிப்பான். வம்பிட்டவன் வைக்கோல் தின்பான்னு பெரியவங்க சொல்லுவாங்க.“

வழக்கம்போல அந்த உபதேசங்களை இடக்காதில் வாங்கி வலக்காது வழியே வெளியேற்றிவிட்டு வீதியில் இறங்கினான் பொன்னுத்தம்பி

வழக்கமாகப் புஷ் வண்டியில்தான் தம்பி நீதிமன்றத்துக்குப் போவான். அன்று நடந்தே போவது என்று முடிவெடுத்தான். பொட்டு லாடமும் முந்திரி லாடமும் அடித்த சப்பாத்து ‘நடநட‘ என்று சொல்லியது அவனிடம். தகரத்தில் சுத்தியலை அடித்தமாதிரி விநோத சப்தங்களை எழுப்பிக்கொண்டு ஒரு கறுப்புத் துரை வீதி வழி போவதைத் திண்ணையில் இருந்தவர்கள் பார்த்து, எழுந்து நின்றார்கள். நிற்பதன் மூலம், அந்த உத்தியோகஸ்தருக்குத் தம் மரியாதையைப் புலப்படுத்திக் கொண்டார்கள். தம்பியை அவர்கள் அறிவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் சப்பாத்து அணிந்திருக்கிறானே! ஆகவே பெரிய உத்தியோகம் வகிப்பவனாகவே இருக்க வேண்டும். போகிற வருகிறவர்கள் நிமிர்ந்து நின்று கும்பிட்டார்கள். மிஷன் தெருவில் அடைத்துக்கொண்டு நெருக்கமாக நின்றிருக்கும் பூவரச மரங்கள் வெயிலைத் தாங்கித் தெருவுக்கு நிழலைத் தந்து கொண்டிருந்தன. பொன்னுத்தம்பி நிதானமாக நிமிர்ந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்தான்.

நீதிமன்றம் தொடங்கியிருந்தது. கனம் நீதிபதி ஏற்கனவே தம் ஆசனத்தில் அமர்ந்துவிட்டிருந்தார். அரசு வழக்கறிஞரும் ஏனைய வழக்கறிஞர்களும் தத்தம் ஆசனத்தில்அமர்ந்திருந்தனர். யாருடைய வழக்கொன்றோ எடுத்துக்கொள்ளப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

நடுவானத்துக்குள் நின்றவாறே பொன்னுத்தம்பி தலைகுனிந்து “வணக்கம், கனம் நீதிபதி அவர்களே!“ என்று பிரான்சே மொழியில் பணிந்தான்.

கறுப்பாக ஒளிவீசும் அவன் சப்பாத்துகளை மேலிருந்து குனிந்து கவனித்தார் நீதிபதி. பொன்னுத்தம்பிக்கும் கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது.

வெள்ளைப் பளிங்குக்கல் மாதிரியான நிறம் நீதிபதிக்கு. இந்தியாவுக்கு வரும்போது மாசு மருவற்ற பளிங்குச் சிற்பம் மாதிரியே இருந்தார் அவர். இந்தியச் சூரியனின் உஷ்ணத்தைத் தாங்க மாட்டாது, முகப்பரு மாதிரி சிவப்புப் புள்ளிகள் அவர் முகத்தில் ஏற்பட்டு இருந்தன. நீலக்குண்டுகள் மாதிரி இருக்கும் அவர் கண்கள் முதல் தடவையாகச் சிவந்ததை முதல்முறையாக அப்போதுதான் பார்த்தான் பொன்னுத்தம்பி.

“நீங்கள் காலில் அணிந்திருப்பது சப்பாத்துத்தானே?“ என்றார் நீதிபதி. அவர் குரல் வழக்கத்துக்கு மாறாக உயர்ந்தும் கறுத்தும் இருந்தது.

பொன்னுத்தம்பி ஒருமுறை குனிந்து தன் சப்பாத்துகளைப் பார்த்தவாறே, “ஆம், கனம் நீதிபதி அவர்களே!“ என்றான். நீதிபதிக்கு நிகராக பிரான்சே மொழியின் அழகோடும், உச்சரிப்போடும்!

மறுப்புக்கு உரிய அடையாளமாக, நீதிபதியின் தலை அசைந்தது. “தங்கள் நடத்தைக்கு நான் வருந்துகிறேன். மிஸ்யோ பொன்னுத்தம்பி பிள்ளை! என் மன்றத்துக்குள் தாங்கள் சப்பாத்து அணிந்து வருவதை நான் ஆட்சேபிக்கிறேன்.“

பொன்னுத்தம்பி நீதிபதியின் கால்களைப் பார்த்தான். அவனது சப்பாத்துக்களைப் போலவே அவரும் சப்பாத்து அணிந்திருந்தார். பிரான்ஸ் தேசத்துக்காரரும் அரசு தரப்பு வழக்கறிஞருமான அவன் சகாவும் அவனது போன்ற சப்பாத்துகளையே அணிந்திருந்தார். தமிழ் வழக்கறிஞர்கள் இருவர் மட்டும் கோட்டும், பஞ்சகச்சமும் அணிந்து வெறும் காலுடனேயே இருந்தார்கள் என்பதையும் கவனித்தான்.

பொன்னுத்தம்பி நிமிர்ந்து நேராக நீதிபதியைப் பார்த்துச் சொன்னான். “கனம் நீதிபதி அவர்களே! என் நண்பரும் அரசு வழக்கறிஞருமான இவரும், மரியாதைக்குரிய தாங்களும் சப்பாத்து அணிந்து மன்றத்துக்குள் இருக்கும்போது, நான் மட்டும் அணியக் கூடாது என்று தாங்கள் சொல்லும் கட்டளையை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.“

நீதிபதியின் வெண்பளிங்கு முகம் செங்கல்லாகச் சிவந்ததைத் தம்பி கண்டான். இகழ்ச்சி கலந்த சிரிப்பு ஒன்று அவரிடமிருந்து வெளிப்பட்டது.

“மிஸ்யோ பொன்னுத்தம்பி பிள்ளை! தாங்கள் இந்தியர், இந்தியப் பழக்க வழக்கங்களையே தாங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாம் அபிப்பிராயப் படுகிறோம்.“

நீதிபதியின் மனக்கருத்தை இப்போது பொன்னுத்தம்பியால் புரிந்துகொள்ள முடிந்தது. அவரைப்பார்த்து அவன் சொன்னான். “கனம் நீதிபதி அவர்களே, மரியதைக்குரிய இந்த மன்றத்துக்குள் தாங்கள் பிரான்ஸ்காரராகவோ, நான் இந்தியனாகவோ பிரவேசிக்க வில்லை. நீதியைப் பரிபாலனம் செய்யவே வந்திருக்கிறோம். வழக்கறிஞர்கள் என்ன உடை உடுத்த வேண்டுமோ அந்த மரபுப்படி நான் உடுத்தியிருக்கிறேன். ஐரோப்பிய வழக்கறிஞர்கள் இன்னவிதமாயும் இந்திய வழக்கறிஞர்கள் இன்னவிதமாயும் உடுத்த வேண்டும் என்ற நியதியை நம் நீதிமன்றம் ஏற்படுத்தவில்லை. ஆகவே நான் எந்த விதமான உரிமையையும் மீறும் பிரச்சினை எழவில்லை. தாங்கள், நான் சப்பாத்து அணிந்து வருவதை மறுப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவி்ல்லை.“

மாபெரும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியான, வணக்கத்துக்குரிய ஒரு நீதிபதியைப் பார்த்து, அடிமை நாட்டைச் சேர்ந்த ஒரு சாதாரண மனிதர், முகத்துக்கு நேரே தன் எதிர்ப்பைப் புலப்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் அப்போது நிகழ்ந்து முடிந்திருந்தது.

நீதிபதி எழுந்து நின்றார். சபையும் எழுந்து நின்றது.

“தாங்கள் வரம்புக்கு மீறிப் பேசினீர்கள். எங்கள் காலனி நாட்டைச் சேர்ந்த ஒருவர் இப்படிப் பேசியது தவறானது மட்டுமல்ல, மரியாதை குறைவானது. ஐரோப்பிய கனவான்களோடு தங்களை ஒப்பிட்டுப் பேசுவதை நான் அங்கீகரிக்க முடியாது. என் மன்றத்துக்குள் தாங்கள் சப்பாத்து அணிந்து வரக்கூடாது என உத்தரவிடுகிறேன். வருவீராயின், தங்கள் வழக்கறிஞர் உரிமை பறிக்கப்படும் என்பதை அறிவீராக! தாங்கள் வெளியேறலாம்“ என்று கூறிவிட்டு நீதிபதி வேகமாகச் சென்றுவிட்டார். அவரைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞரும் சென்றார்.

பொன்னுத்தம்பியின் சகாவும் இந்திய வழக்கறிஞர்களுமான இருவர் மாத்திரம் அரங்கில் இருந்தார்கள். சுப்பிரமணிய ஐயர் அவன் கைகளைப் பற்றிக்கொண்டு சொன்னார். “பிள்ளைவாள், பெருமைக்குரிய காரியம் பண்ணி விட்டீர்கள். நாம் எந்தவித்தில் தாழ்ந்து போய்விட்டோம்? அவர்களுக்கு நிகராக நாமும் படிக்க வில்லையா? நம் சட்ட ஞானத்தை வெளிப்படுத்தவில்லையா? இதை விட்டுவிடக் கூடாது? பிள்ளை! கடைசி வரைக்கும் ஒரு கை பார்த்து விடுவோம்!“

வீரபாகு, தம்பியைத் தழுவிக் கொண்டார். “மிஸ்யோ பிள்ளை! பிரெஞ்சிந்திய வரலாற்றில் புதிய அத்தியாயத்தை இன்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். நிறத் திமிருக்கு எதிராக இன்று நீங்கள் வைத்த நெருப்பு ஒரு சினனப் பொறி. இந்தப் பொறிதான் வளர்ந்து நாளைக்கு இந்தக் காட்டையே அழிக்கப் போகிறது, பாருங்கள்!“

இருவரும் சென்ற பிறகும் பொன்னுத்தம்பி அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவமானப்படுத்தப்பட்ட உணர்வு அவனை நகரவொட்டாமல் அடித்தது. பிடித்துக் கட்டிவிட்டது போன்று இருந்தது. சிரமப்பட்டு வெளியே வந்தான்.

வெயில் தகித்தது. அருகே கடல் அலை புலம்பும் குரல் கேட்டது. வண்டிக்காரன் ஒருவன். “வர்றீங்களா ஏஜமான்?“ என்று கேட்டான் எதையும் காதில் வாங்கும் நிலையில் அவன் இல்லை. கடற்கரையை ஒட்டி, கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு, மெல்ல வீட்டை நோக்கி நடந்தான் தம்பி.

நிலவு உச்சிக்கு வந்துவிட்டிருந்தது. நட்சத்திரங்களே இல்லாத வானம். குழந்தைகளே இல்லாத பள்ளிக்கூடம். வீடுகள் இருட்டுப் போர்வைக்குள் முடங்கிக் கொண்டிருந்தன. இந்த வீடுகளுக்குத்தான் எத்தனை முகங்கள். பகலில் ஒரு முகம். இரவில் வேறொரு முகம். மனிதர்களைப் போலவே வீடுகளுக்கும் முகம் அமைந்துவிடும் போலும்!

மொட்டை மாடியில் உலவிக் கொண்டிருந்தான் தம்பி. தூக்கம் வரவில்லை. வருமா என்ன? நடுத்தெருவில் வேஷ்டி உரியப்பட்டது போல், கண்ணுக்குத் தெரியாத சக்தி பின்னால் இருந்து அறைந்தது போல் இருந்தது.

மனிதர்கள் தான் எத்தனை எத்தனை பள்ளங்களாகப் பிளவுபட்டுப் போகிறார்கள். ஜாதி, மதம், தேசியம், நாடு, இனம், ஐரோப்பியன், இந்தியன், வெள்ளை, கறுப்பு, உசத்தி, தாழ்த்தி… எத்தனையெத்தனை பள்ளங்கள். எத்தனை ஞானிகள் எத்தனை மகான்கள் தோன்றி எத்தனை பேசி, எழுதிப் போயிருக்கிறார்கள். எல்லாம் வெறும் புத்தகங்கள். எங்கோ ஒரு கூடு மறந்த பறவை ‘கீச்‘சென்றது. கீழே இறங்கித் தன் அறைக்கு வந்தான் தம்பி.

பேப்பரை எடுத்து வைத்துக்கொண்டு, கட்டைப் பேனாவில் மையைத் தொட்டுக்கொண்டு எழுதத் தொடங்கினான்.

பாரீஸ் நகரத்து உச்சநீதிமன்ற நீதிபதிக்கு விலாசமிட்டு, அன்று மன்றத்துக்குள் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கூடுதல் குறைவின்றி உண்மையை மாத்திரம் எழுதினான்.

‘சுதந்திரம், சகோதரத்துவம், சகவாழ்வு என்கிற மனித குலத்தின் பெருமை மிக்க ஒரு தேசத்தின் கற்றறிந்த நீதிபதி, ஒரு வழக்கறிஞருக்கு இந்த அநீதியைச் செய்தது முறையா? இதைத் தங்கள் நீதிமன்றம் அனுமதிக்கிறதா?

நீதிதேவதைக்கு முன்னால் வெள்ளை கறுப்பு என்கிற வித்தியாசங்கள் தான் உண்டா? தேசம் ஒவ்வொன்றுக்கும் ஒரு குணம் உண்டு. கலாசாரப் பூந்தொட்டியும், கலைகளின் விளைநிலமும் ஆன பிரான்ஸ் தேசத்தின் முகத்தில் நிறவெறிக் கறையைப் பூச ஒரு தனி மனிதரும், ஆணவத்தையே உரிமையாகக் கொண்டவரும் ஆன ஒரு நீதிபதிக்குத் தங்கள் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறதா?

வணக்கத்துக்குரிய நீதிபதி அவர்களே! எனக்குப் பிரயமானதும், நீதிமன்றம் அனுமதித்ததுமான உடைகளையும் சப்பாத்தையும் அணிந்தே நான் நீதிமன்றம் செல்லத் தாங்கள் உத்தரவிடவேண்டும். புதுச்சேரி நீதிபதியின் தீர்ப்பையே தாங்களும் ஆதரிப்பீர் எனில், இந்த வழக்குரைஞர் வேலையை விடுவேனே அல்லாது, என் வழக்கத்தை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். நீதி ஒருபோதும் சாகாது என்பதை நான் அறிவேன். சர்வ வல்லமை பொருந்திய இறைவனின் சந்நிதானத்தின் முன் மனிதர் என்ற முறையில், சமத்துவத்தை மட்டுமே நான் கோருகிறேன்‘ என எழுதி முடித்தான். அடுத்த நாளே கடிதத்தைப் பாரீசிலிருக்கும் தன் நண்பரும் வழக்கறிஞரும் முற்போக்காளருமான ஜூரி கோதீனுக்கு அனுப்பி வைத்தான். நம்பிக்கையோடு அன்று இரவு உறங்கவும் செய்தான்.

அப்பா சொன்னார்.

“எனக்கு அப்பவே தெரியும். ராஜாவோடு சூதாட முடியுமாடா? முட்டாளே! அவன் நூறு கிராமம், ஆயிரம் பசுன்னு பந்தயம் வைப்பான். தலையிலே இருக்கிறதைக் கொத்தாகப் பிடுங்கி வச்சாக்கூட ஆயிரம் மயிரு தேறுமாடா உன் தலையில்?“ என்றார்.

“ஆச்சு. தை பிறந்தா வருஷம் ஒன்றாகப் போகுது. இன்னும் ஒரு தகவலும் பாரீசு பட்டணத்திலிருந்து வந்தபாடில்லை. சும்மா வீட்டிலே உட்கார்ந்து கொண்டு மொட்டுமொட்டென்று தேவாங்கு மாதிரி உறங்கறதைக் காட்டிலும் ஒரு வெற்றிலை பாக்குக் கடை வச்சுக்கிட்டு உட்கார். காலட்சேபமும் நடக்கும். நாலு காசும் கிடைக்கும்“ என்றார். தம்பிக்கு அதுவே சரியென்றுபட்டது.

ஆனால், விதி வேறாக இருந்தது. பாரீஸ் உயர்நீதி மன்றம், புதுச்சேரி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து, பொன்னுத்தம்பிப் பிள்ளை தன் விருப்பம் போல உடுத்திச் சப்பாத்து அணிந்து நீதிமன்றத்துக்கு வரலாம் என்று உத்தரவிட்டிருந்தது.

ஓராண்டுக்குப் பிறகு பொன்னுத்தம்பி, ஐரோப்பியர் போலவே உடுப்பும் சப்பாத்தும் அணிந்து நிமிர்ந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்தான். சுப்பிரமணிய ஐயரும் வீரபாகுவும் கண்ணீர் சுரக்கக் கட்டி அணைத்து வரவேற்றார்கள். நாடு ஷண்முக வேலாயுத முதலியார் போன்ற ஊர்ப் பிரமுகர்கள் தம்பிக்கு மாலை அணிவித்தார்கள்.

“பிள்ளை, பிரெஞ்சு ஆட்சியோடு போராட்டம் நடத்தி முதல் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். பிரான்சிலும் மக்களாட்சி ஏற்பட்டிருக்கிறது. நாம் விடுதலை பெற ரொம்ப நாள் ஆகாது“ என்று நெஞ்சம் விம்ம, ஷண்முக முதலியார் வாழ்த்தினார்.

நீதிபதியின் வளாகத்துக்குள் நுழைந்தான் பொன்னுத்தம்பி. நீதிபதி மாறிவிட்டிருந்தார். முந்தையவரினும் முதிய ஒருவர் நீதிபதி ஆசனத்தில் இருந்தார்.

பொன்னுத்தம்பி, “வணக்கம் கனம் நீதிபதி அவர்களே!“ என்று தலை குனிந்து அவருக்கும் மன்றத்துக்கும் வணக்கம் செலுத்தினான்.

நீதிபதி அவனைப் பார்த்தார். அதே பளிங்குப் பொம்மை போன்ற செம்மை கலந்த வெள்ள நிறம். அவரிடமிருந்து சினேகம் போன்ற மிகுந்த புன்னகை வெளிப்பட்டது.

மிஸ்யோ, பொன்னுத்தம்பி பிள்ளை! நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நான் அறிவேன். ஒன்று மட்டும் உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். பிள்ளை! முந்தைய நீதிபதி தங்களைக் குறித்துச் சொன்ன கருத்து அவருடைய சொந்தக் கருத்தே தவிர, எங்கள் தேசத்தின் கருத்து என்று தவறாகக் கருதிவிடாதீர்கள். சமத்துவத்திலும் சகோதரத்துவத்திலும் எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. மனிதர்களில் உசத்தி, தாழ்த்தி சொல்வது இறைவனுக்கே விரோதமானது என்பது என் நம்பிக்கை. தோலின் நிறம்தான் நமக்கு வேறே தவிர அடிப்படையில் நாமெல்லாம் மனிதர்கள் தானே? வாருங்கள். எலலா மனிதர்களையும் நாம் நேசிப்போம். நமக்கு விதித்திருக்கிற நீதியைப் பரிபாலனம் செய்கிற கடமையை முழுச் சித்தத்தோடு நாம் செய்வோம். என் நீதிமன்றம் தங்களை வரவேற்கிறது“ என்றவாறு நீதிபதி எழுந்து தன் கைகளை பொன்னுத்தம்பியிடம் நீட்டினார்.

பொன்னுத்தம்பி அந்த நேசக் கரத்தைப் பற்றிக் கொண்டான்.

******

Mar 8, 2011

பிரபஞ்சன்: எப்போதுமிருக்கும் நட்பு - எஸ்.ரா

அலைந்து திரிந்த நாட்களில் எழுத்தாளர்களை வைத்தே சென்னை நகரின் ஒவ்வொரு பகுதியையும் பிரித்திருந்தேன். உதாரணத்திற்கு அசோகமித்திரன் என்பது தி.நகர். திருவல்லிக்கேணி என்பது ஸ்ரீரங்கம்கண்ணன், ராஜமார்த்தாண்டன், மயிலாப்பூர் என்பது சி.மோகன், திலீப்குமார், லஸ்கார்னர் என்றால் நாகார்ஜுனன், லாசரா என்பது அம்பத்தூர், நங்கநல்லூர் என்பது வண்ணநிலவன், மற்றும் மா. அரங்கநாதன், மந்தைவெளி என்றால் சுகுமாரன், சாருநிவேதிதா, நந்தனம் என்றால் சா.கந்தசாமி, டிராட்ஸ்கி மருது, கே.கே.நகர் என்றால் வெளி ரங்கராஜன்praban, ஆழ்வார்பேட்டை என்றால் கணையாழி அலுவலகம் மற்றும் இ.பா, நுங்கம்பாக்கம் பிரமீள், கொட்டிவாக்கம் ந.முத்துசாமி, இந்த வரிசையில் ராயப்பேட்டைக்கு பிரபஞ்சன்.

இப்படிப் பகுதி வாரியாகப் பிரித்துக்கொண்டதற்கான முக்கிய காரணம் அந்தப் பகுதிக்குள் பிரவேசித்தவுடன் மேற்கண்ட எழுத்தாளர்களில் எவரையாவது சந்தித்துப் பேசி எப்படியாவது அவர்கள் செலவில் சாப்பாடு காபி என்று ஒரு நாளை ஓட்டிவிடலாம் என்பதுதான். அநேகமாக  எழுத்தாளர்கள் எதிர்பாராத நேரங்களில் அவர்கள் வீட்டை முற்றுகையிட்டு அவர்களது மனவிருப்பம் பற்றிய கவலையின்றிக் கேட்டுவாங்கி காபி சாப்பிட்டு இலக்கிய விவாதம் வம்பு செய்த நாட்கள் அவை.

வந்தேறியாக சென்னை மாநகரில் சுற்றிக்கொண்டிருந்தபோது போக்கிடம் கிடையாது.  இலக்கியம் பேசுவது, இலக்கியவாதிகளைச் சந்திப்பது என்ற இரண்டு விஷயங்களைத் தவிர வேறு நோக்கங்களும் கிடையாது.

அப்படி வெயிலேற நடந்து திரிந்த நாட்களில் தன் அறையின் கதவை எப்போதும் நண்பர்களுக்காகத் திறந்து வைத்திருந்தவர் பிரபஞ்சன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு சென்னை நகரின் வெவ்வேறு மேன்ஷன்களில் பிரபஞ்சன் தங்கியிருந்த நாட்களிலும் சரி அரசுக் குடியிருப்பு கிடைத்து பீட்டர்ஸ் காலனிக்கு மாறிய பிறகும் சரி பிரபஞ்சனின் வீடு எப்போதுமே நண்பர்களுக்கான புகலிடவெளி தான்.

அன்றிலிருந்து இன்று வரை அவர் தனித்திருந்து நான் கண்ட தேயில்லை. எப்போதும் யாராவது  சில நண்பர்கள் அவரோடு இருப்பார்கள். உற்சாகமான பேச்சும் சிரிப்பும் நிரம்பி வழியும் இடம் அவரது வசிப்பிடம்

சென்னையின் முக்கிய மேன்ஷன்கள் அத்தனையும் அறிந்தவர் பிரபஞ்சன் ஒருவரே. அதிலும் திருவல்லிக்கேணி, மேற்குமாம்பலம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, தி.நகர் என்று அவர் வெவ்வேறு பகுதிகளில் இருந்த மேன்ஷன்களில் வாழ்ந்திருக்கிறார். அந்த நாட்களைப் பற்றி அவர் நினைவு கூறும்போது ஆயிரத்தொரு இரவுக் கதைகளை விடவும் அதிகமான கதைகள் பிரபஞ்சனிடம் எழுத இருக்கின்றன என்று தோன்றும்.

பேச்சு, உபசரிப்பு, நண்பர்களின் மீதான இயல்பான அக்கறை என்று  தன்னைச் சுற்றியுள்ளவர்களைத் தொடர்ந்து மகிழ்ச்சி கொள்ளச் செய்ய சிலரால் மட்டுமே முடியும். அப்படி நான் கண்டவர்களில் மிக முக்கியமானவர் பிரபஞ்சன்.

தமிழ் இலக்கியம், சினிமா, பத்திரிகை, தான் சந்தித்த மனிதர்கள் என்று அவர் விவரிக்கும் எதிலும் அடக்க முடியாத சிரிப்பு பீறிடும். குரலை மிக லாவகமாகவும் உயர்த்தாத முகபாவங்களுடனும் அவர் விவரிக்கும் அழகு அற்புதமானது.

சாகித்ய அகாதமி பரிசு, பாஷா பரிஷித் பரிசு உள்ளிட்ட பலமுக்கிய பரிசுகளைப் பெற்றிருந்தபோதும் தன்னைப் பற்றிய மிகைபாவனை எதுவுமின்றி எளிமையாகப் பழகக்கூடியவர். அவரது வீடு நிறைய புத்தகங்களுடன் பெரிய நூலகம் போலிருக்கும். முறையாக இசை பயின்றவர். இசையைப் பற்றி அவரது உரையாடல்களைக் கேட்பதே சங்கீதமாக இருக்கும்.

சென்னையின் மேன்ஷன்களில் அழையாத விருந்தாளியாக ஒளிந்து தங்கி நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தேன். அதிலும் நண்பன் ராஜகோபால், ஸ்ரீரங்கம் கண்ணன் போன்றவர்களின் அறையில் இரவில் தங்கிக் கொள்வதும் பகலில் கால்போன சாலையில் சுற்றியலைவதுமே அன்றாடச் செயல்பாடு.

வாரம் ஒரு நாள் நிச்சயம் பிரபஞ்சன் அறைக்கு போய்விடுவேன். சில நாட்கள் காலை எட்டு மணிக்குத் துவங்கி இரவு பன்னிரண்டு, இரண்டு மணி வரை  அவரோடு இருப்பேன். அன்றாடச் செலவிற்குக்கூட என்னிடம் காசு இல்லாதது போலவே அவரிடமும் காசு இல்லாமல் இருக்கக்கூடும். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார். பிரபஞ்சன் கையில் பணம் வந்து சேர்ந்தால் அடுத்த சில மணி நேரங்களில் பறந்தோடிவிடும்.

எழுத்தாளர்களுக்கு ஆயிரம் பக்க நாவல் எழுதுவதைவிடவும் பெரிய சவால் பதிப்பாளர்களிடமிருந்து மனம்நோகாமல் பேசி ராயல்டி தொகையை வாங்குவது. எளிதில் பணம் கைக்கு வந்து விடாது. இதில் பெரிய எழுத்தாளர் சின்ன எழுத்தாளர் என்ற பேதம் கிடையாது. அப்படியே பெரிய பதிப்பகம் சின்னப் பதிப்பகம் என்ற பேதமும் கிடையாது. அந்த சவாலில் அதிர்ஷ்டவசமாக வென்று கையில்  சிறிய ராயல்டி தொகை வந்தவுடன் பிரபஞ்சனின் கனவுலகம் விழித்துக் கொண்டுவிடும்.

நண்பர்களைத் தேடி அழைத்து உபசரித்து, நல்ல உடை,  விரும்பிய புத்தகங்கள், இசைநாடாக்கள் என்று அவர் கடைசிப் பைசாவரை செலவு செய்துவிட்டு எப்போதும் போலவே எளிமையாக சாலையின் ஓரங்களில் மெதுவாக நடந்தபடியே, சென்னை நகரின் பரபரப்பைத் தனக்குள் ஒரு போதும் நிரப்பிக் கொள்ளாமல் தன்னியல்பாக வீடு திரும்புவதைக் கண்டிருக்கிறேன். காலைச் சுற்றும் பிரச்சினைகள் நிரம்பிய மாநகரில் எப்படி இவரால் எதையும் இயல்பாகச் சந்தித்து பதற்றம் அடையாமல் கடந்து செல்ல முடிகிறது என்று வியப்போடு பார்த்துக் கொண்டிருப்பேன்.

பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதுவது. புத்தகங்களுக்கான ராயல்டி தவிர அவருக்கென நிரந்தரமான மாத ஊதியம் கிடையாது.  குடும்பம் பாண்டிச்சேரியிலும் அவர் சென்னையிலுமாகப் பல வருடங்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார். சென்னையில் அவர் வசிக்க வேண்டிய ஒரே காரணம் இலக்கியத்தின் மீதான விருப்பமும் நண்பர்களைச் சந்திக்க முடியும் என்ற ஆசையும் மட்டுமே.

பாண்டிச்சேரியில் பிரபஞ்சனைச் சந்தித்தால் முற்றிலும் வேறு மனிதரைச் சந்திப்பது போல இருக்கும். அவர் பிறந்து வளர்ந்த நகரம் என்பதால் கையில் ஓடும் ரேகைகள் போல பாண்டிச்சேரியின் அகம்புறம் அவருக்குத் துல்லியமாகத் தெரியும். குறிப்பாக அதன் நூற்றாண்டுகால வரலாறு, இன்றைய நிலை, அங்குள்ள குடியிருப்புகள், வீதிகள், அதன் பின்னால் உள்ள மறக்கமுடியாத நிகழ்வுகள் என்று சொல்வதற்கு நிரம்பிய விஷயங்கள் அவரிடம் உள்ளன. பாண்டிச்சேரியைப் பற்றி அவரது இலக்கியப் பதிவுகள் மிக முக்கியமானவை.

ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் சரித்திரச்சான்றுகளாக மட்டும் அறியப்பட்டு வந்ததை, தனது வானம் வசப்படும் நாவலின் வழியே முக்கியமான புனைகதையாக்கி தமிழின் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நாவல்களில் ஒன்றாக எழுதிக்காட்டியவர் பிரபஞ்சன்.

இன்றைக்குப் பரவலாக ஆனந்தரங்கம்பிள்ளையின் டயரி பொது வாசகர்களால் வாசிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் பிரபஞ்சன் என்றே சொல்வேன். இந்த நாட் குறிப்புகள் பற்றித் தொடர்ந்து சொல்லியும் எழுதியும் வந்ததோடு இதைப் புதுச்சேரி அரசின் உதவியோடு பதிப்பிக்கும் பணியிலும் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார் பிரபஞ்சன். புதுச்சேரியின் வரலாற்றைப் பாட நூலாக எழுதியதிலும் இவரது பங்கு மிக முக்கியமானது.

புனைகதைகள், கட்டுரைகள் என்பதில் மட்டும் சஞ்சாரம் கொள்ளாமல் தன்னைச் சுற்றிய அன்றாட வாழ்வின் நெருக்கடிகள், சமகால அரசியல், கடந்த கால சரித்திரத்தின் உண்மையை அறியும் மீள்வாசிப்பு, உலக இலக்கியத்தின் மீதான தொடர்ந்த வாசிப்பு, சமூக மாற்றங்களுக்கான இயக்கங்களோடு சேர்ந்து செயல்படுவது என்று அவரது விருப்பம் பன்முகப்பட்டது.

ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு மட்டுமில்லை. தனக்குப் பிடித்த கதை அல்லது நாவல் என்று எதைப் பற்றியும், சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் மிகுந்த பாராட்டுடன் சொல்லக்கூடியவர் பிரபஞ்சன். அதை எழுத்தில் பதிவு செய்வதோடு ஏதாவது ஒரு நிகழ்வில் பேசியும்விடுவார். அப்படி அவரால் கொண்டாடப்பட்ட எழுத்தாளர்கள் கவிஞர்கள் நிறைய உண்டு. இதில் சிலர் தங்களது முதல் கதையை மட்டுமே எழுதியவர். சிலரை அவர் சந்தித்ததுகூட இல்லை. ஆனால் படைப்பின் வழியாக அவர் கொள்ளும் ஆனந்தத்தை உடனே மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துவிடுவார்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் சமீபத்தில் அவர் பவா செல்லதுரையின் முதல்சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதியுள்ள முன்னுரை. நவீனச் சிறுகதைகளில் புதிய வரவாக உள்ள பவா செல்லதுரையின் சிறுகதைகளை மதிப்பிட முயன்ற பிரபஞ்சன் தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றையே நாலைந்து பக்கங்களில் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

பவாவின் சிறுகதைகளை எவ்வளவு ரசனையோடு வாசித்திருக்கிறார் என்பதற்கு  இந்த வரிகளையே சான்றாகச் சொல்லலாம்.  பவாவின் கதை உலகம், ரசனையோடு வடிவமைக்கப்பட்ட, எளிமையின் பேரழகோடு செய்யப்பட்ட உணவுவிடுதியின் குறைந்த வெளிச்சம் பழக்கப்பட்டுப் பின் இதமும் ஆசுவாசமும் தரும் ஒளிப்பரப்பாவது போலக் கதைகள் ஒவ்வொன்றும் வாசித்து முடிந்த பின் தரும் கலை இதம் வசீகர அனுபவங்கள் நிலைபேறுடைய பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

ஒரு எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பை இப்படி மனம் நிறைந்து பாராட்ட எத்தனை பேரால் முடியும். அவ்வகையில் பிரபஞ்சன் ஒரு முன்னோடி.

பவாவின் கதைகளை மட்டுமில்லை. தமிழ் நவீனச் சிறுகதையுலகின் முன்னோடிப் படைப்பாளிகளைப் பற்றிய அவரது அவதானிப்பு மிக முக்கியமானதாகும். இதில் ஜானகிராமனைப் பற்றிய அவரது பதிவு திரும்பத் திரும்ப என்னை வாசிக்க வைத்தது. ஜானகி ராமன் எந்த அளவு பிரபஞ்சனின் அகவுலகிற்கு நெருக்கமாக இருந்திருக்கிறார் என்பதற்கு இந்த வரிகளே சாட்சி.

தமிழ்மொழியில் தனிப்பெரும் வியக்தி தி.ஜானகிராமன், மனித அழகுகள் ஒவ்வொன்றாகப் பொறுக்கிச்சேர்த்து அழகைப் பேரழகாக மாற்றிய பெரும்கலைஞர் தி.ஜா. வார்த்தை அழகு, உச்சரிக்கும் அழகு, நிற்கும் அழகு, நிகுநிகு உடம்பழகு, பாட்டு அழகு, மனப்பரிமள வாசனை அழகு, காமம் விகசித்துச் சூரியனையே போகத்துக்கு அழைக்கும் அழகு, என அனைத்து அழகுகளாலும்  பெண்களைப் படைத்த ஜம்பொன்குயவர் அவர். பெண்களின் விகாசம் தாங்காமல் ஆண்களைத் தற்கொலை செய்ய வைத்த நேசத்துக்குரிய தன்பால் துரோகி அவர், அதனாலே அவரை எனக்குப் பிடிக்கும்.

இது போலவே தனக்குப் பிடிக்காத விஷயத்தை அவர் நேரடியாகப் பிடிக்கவில்லை என்று சொல்லும் மனவுறுதி கொண்டவர். அவரோடு ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். தன்னை எந்த விழாவிற்கு அழைத்தாலும் அந்தப் புத்தகத்தை முழுமையாக வாசித்து அதன் நுட்பங்களை ஒன்றுக்கு இரண்டுமுறை அவதானித்து அழகாகப் பேசக்கூடியவர்.

அன்று மேடைக்கு வரும்வரை அமைதியாக இருந்தார். புத்தக வெளியீடு நடந்தது. அவரைப் பேசவரும்படியாக அழைத்தார்கள். மேடைக்கு வந்த பிரபஞ்சன் அந்தக் குறிப்பிட்ட புத்தகம் தனக்குப் பிடிக்கவில்லை என்பதோடு அதை எழுதியவர் தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமான சுயபெருமை செய்துகொண்டிருக்கிறார். புத்தகம் மிகவும் குப்பையானது, அபத்தமும் அர்த்தமற்ற உளறல்களும் நிரம்பியது என்பதால் அதைப் பாராட்டிப் பேச, தன்னால் இயலவில்லை. விரும்பி அழைத்த காரணத்திற்காக வந்திருந்தேன். தொடர்ந்து இதைப் பாராட்டிப் பலர் பேசுவதைக் கேட்க எனக்கு விருப்பமில்லை, கிளம்புகிறேன் என்று மேடையில் அந்தப் புத்தகத்தை வைத்துவிட்டு சபையை விட்டு வெளியே கிளம்பி நடந்தார். சபை அதிர்ந்து போனது.

சாலையில் அவரோடு நடந்த படியே அந்த எழுத்தாளர் உங்கள் மீது கோபம் கொள்வாரே என்று கேட்டேன். அதற்கு பிரபஞ்சன்  முதலில் எழுத விரும்புகின்றவன் தன்னைப் பற்றிய சுயபெருமைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். கையில் பணமிருந்தால் மட்டும் எல்லாவற்றையும் வாங்கி விட முடியாது. இப்போது அதை அவர் புரிந்துகொண்டிருப்பார் என்றபடியே எதுவும் நடக்காதவர் போல இயல்பாக எங்காவது காபி சாப்பிடலாமா என்று கேட்டார் பிரபஞ்சன்.

தன் வாசிப்பின் வழியே தான் அடையும் உண்மைகளை அவர் ஒருபோதும் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. அதுபோலவே வாசிக்கக் கிடைக்காத புத்தகங்களுக்காக வெளிப்படையாக ஆதங்கப்படுகின்றவரும்கூட. சில வேளைகளில் அவரைத் தேடிவருகின்றவர்கள் கையில் வைத்துள்ள புத்தகங்களை ஆசையுடன் வாங்கிப் புரட்டிப் பார்த்து இதைப் படிக்காமல் விட்டுவிட்டேனே எங்கே கிடைக்கிறது என்று உடனே பதிப்பக முகவரியைக் குறித்துக்கொள்வதைக் காணும்போது வீடு நிறைய புத்தகங்களுடன் வாழ்ந்துகொண்டிருந்தும் எதற்காக இவ்வளவு ஆதங்கப்படுகிறார் என்று தோன்றும்.

தன் உடல் உபாதைகள் பற்றியோ, குடும்பச் சூழல் குறித்தோ அதிகம் யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடியவரில்லை. மிக அரிதாக அதைப்பற்றிப் பேசக்கூடியவர். அதுவும் எவ்விதமான எதிர் பார்ப்புகளும் அற்றதாக இருக்கும்

பிரபஞ்சன் நினைத்திருந்தால் அவரது நண்பர்கள் ஆர்வலர்களின் வழியே அதிகாரத்தின் உச்ச நிலைக்கு அடைந்திருக்கக்கூடும். பெரிய பதவிகள் பட்டங்கள் பெற்றிருக்கக் கூடும். ஆனால் அதை முற்றிலும் நிராகரித்தவர். கிடைக்கவில்லையே என்ற குறைகூட இல்லாதவர்.

பிரபஞ்சனின் சிறுகதைகள் தனித்துவமானவை. அன்றாட வாழ்வில் நெருக்கடிகளையும் அந்த நெருக்கடிக்கு உள்ளேயும் மனிதர்களின் மீதமிருக்கின்ற அன்பையும் வெளிப்படுத்தக்கூடியவை. கதா பாத்திரங்களின் மனோநிலையைப் பின்தொடர்ந்து சென்று எழுதக்கூடியது அவரது எழுத்து வகை.

மெல்லிய கேலியும் விமர்சனமும், குரலை உயர்த்தாமல் செல்லும் கதை சொல்லும் முறையும் அவருக்கு உண்டு.  வாழ்க்கை கருணையற்றது என்பது அவரது கதைகளின் சில நிகழ்வுகளின் வழியே திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ஆனால் இப்படிக் கருணையற்ற வாழ்வின் ஊடாகவும் சிலர் தங்களது சுய அடையாளங்களை இழப்பதில்லை. அவரது ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், மனுஷி பிரும்மம், குமாரசாமியின் பகல்பொழுது, மரி என்கிற ஆட்டுகுட்டி போன்றவை எனக்கு விருப்பமான கதைகள்.

sra343 பிரபஞ்சனுக்கு உருவாகும் பிரச்சினைகள் ஆச்சரியமானவை. ஒருநாள் நானும் நண்பன் ராஜகோபாலும் அவரைச் சந்திப்பதற்காக பீட்டர்ஸ்காலனி வீட்டிற்குச் சென்றிருந்தோம். படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் வரவேற்று மாடி ஏறி, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். எங்கே இறங்கிச் செல்வதாக இருந்தார் என்று நாங்கள் கேட்டுக் கொள்ளவில்லை. ஒரு மணி நேரப் பேச்சிற்குப் பிறகு காபி சாப்பிடப் போகலாமா என்றார்.  சரி என்று கிளம்பிய போது அங்குமிங்குமாகத் தேடிவிட்டுச் சொன்னார்,

"ஒரு மணி நேரம் முன்னாடி என்னை ஒரு இலக்கியக் கூட்டத்தில் பேசுவதற்கு அழைப்பதற்காக நாலு பேர் வந்திருந்தார்கள். அதில் யாரோ ஒரு ஆள் என்னுடைய புதுச் செருப்பைப் போட்டுவிட்டு சென்றுவிட்டான். இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் ஆசைப்பட்டு புதிதாகச் செருப்பு வாங்கியிருந்தேன்.  செருப்பைப் போட்டுக் கொண்டுபோன ஆள் பழைய செருப்பு எதையாவது விட்டுச் செல்வான் இல்லையா அதையும் தேடிப் பார்த்துவிட்டேன். திருடிக் கொண்டுபோன ஆள் செருப்பே போட்டுவரவில்லை போல. அவனுக்கு என்னுடைய சைஸ் செருப்பு எப்படி சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. சரி திருடுவது என்று முடிவு செய்தபிறகு சைஸ் பார்த்தா திருட முடியும். ஒரு எழுத்தாளன் வீட்டில் திருடுவதற்குச் செருப்பைத் தவிர ஒன்றும் கிடைக்கவில்லை என்பதுதான் நிஜமில்லையா? வெறுங்காலோடு நடக்கப் பழகிக்கொள்ள வேண்டியது. அதை நிச்சயம் இன்னொரு ஆள் திருட முடியாது இல்லையா" என்று சொல்லிச் சிரித்தார்.

நடந்து சென்று சரவணபவனில் காபி சாப்பிட்டோம். அவரை உணவகத்தில் உள்ளவர்கள் அறிந்திருந்தார்கள். அவரது நாவின் சுவைக்கு ஏற்ப காபியைத் தயாரிக்கும் நுட்பம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. வரும்வழியில்  சில வருடங்களுக்கு முன்பாகத் தனக்கு நடந்த  சம்பவம் ஒன்றை விவரித்துச் சொல்லத் துவங்கினார்.

"இலக்கியக் கூட்டத்திற்கு அழைப்பதற்கு வருகின்றவன் இப்படியிருக்கிறான் என்றால் அழைத்து போனவன் ஒருவன் கதையிருக்கிறது. அதையும் கேளுங்கள். சாகித்ய அகாதமி விருது கிடைத்தவுடன் கடலூர்  அருகில் உள்ள ஒரு இலக்கிய அமைப்பு எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்துவதாக அழைத்தது. நானும் கலந்துகொண்டேன்.

விழா நடப்பதாகச் சொன்ன இடத்திற்குப் போனபோதுதான் தெரிந்தது அது ஒரு இரண்டு தெருக்கள் சந்திக்குமிடம் என்று. நான் போனபோதுதான் மேடை அமைத்துக்கொண்டிருந்தார்கள். எப்படியும் மூன்று மணிநேரமாகும் என்றதால் விழா நிர்வாகிகளைத் தேடினேன்.

எனக்காக அறை ஒன்று ஒதுக்கப்பட்டிருப்பதாக போனில் சொல்லியிருந்தார்கள். அதனால் அங்கே சென்று காத்திருக்கலாம் என்று தேடியபோது அமைப்பாளர்களில் ஒருவரையும் காணவில்லை. ஒரு வழியாகக் கண்டுபிடித்தபோது அறை கிடைக்கவில்லை என்பதால் டீக்கடை ஒன்றில் காத்திருக்கும் படியாகச் சொன்னார்கள்.

இரவு பத்து மணிக்குக் கூட்டம் ஆரம்பம் ஆனது. சிறுவர்கள் நடன நிகழ்ச்சி, உள்ளூர்ப் பிரமுகர்களின் வாழ்த்து முழக்கங்கள், ஆடல்பாடல் நிகழ்ச்சி என்று நீண்டு கொண்டிருந்ததேயன்றி பாராட்டுவிழா துவங்குவதற்கான அறிகுறியே இல்லை. இதில் வந்தவர்கள் இரவு உணவு தரவில்லை என்பதால் பசிவேறு காதை அடைக்கத் துவங்கியிருந்தது.

முடிவில் நள்ளிரவில் பாராட்டு விழா அரங்கேறத் துவங்கியது. ஆள் உயரப் பாராட்டுப் பத்திரம் ஒன்றை பிரேம் செய்து தந்தார்கள். அதை வாங்கிக்கொண்டு நன்றியுரை சொல்லிவிட்டு ஊருக்குப் புறப்படலாம் என்று நினைத்து வழிச்செலவிற்கான தொகைக்காக அழைப்பாளர்களைத் தேடினால் ஒருவரையும் காணவில்லை. கூட்டம் முடிந்த மறுநிமிசம் மாயமாக மறைந்து போய்விட்டார்கள்.

ஆள் உயரப் பாராட்டுப் பத்திரத்தைத் தூக்கிக்கொண்டு எப்படி நடப்பது என்று தெரியவில்லை.  பேருந்தில் இதை வைத்துக்கொண்டு எப்படி ஊருக்குப் பயணம் செய்வது என்று வேறு குழப்பமாக இருந்தது.

இங்கேயே ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டுப் போய்விடலாம் என்றாலும் எங்கே வைப்பது யாராவது பார்த்துவிட்டால் என்ன நினைப்பார்கள் என்றும் தோன்றியது. வேறுவழியில்லாமல் அந்தப் பாராட்டுப் பத்திரத்தைத் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு நடந்தேன்.

இத்தனை ஆண்டுகாலம் தமிழில் எழுதி விருது வாங்கியதற்குக் கொடுக்கப்பட்ட தண்டனை இது தானோ என்று நினைத்தபடியே யாரும் அறியாமல் ஒரு விளக்குக்கம்பத்தின் அருகே வைத்துவிட்டு அவசர அவசரமாகப் பேருந்து பிடித்து பாண்டிச்சேரிக்குப் போய்ச் சேர்ந்தேன்.

ஆள் உயரப் பாராட்டுப் பத்திரம் செய்ய ஆசையிருந்தவர்களுக்கு அழைத்து வந்த எழுத்தாளருக்கு உணவு வாங்கித் தரவோ, வழியனுப்பி வைக்கவோ விருப்பமில்லை. பாராட்டுப் பத்திரத்தில் உள்ள வாழ்த்துப்பாடலை எழுதிய நபர், பிரேம் போட உதவிய நபர் என்று நாற்பது பெயர்கள் அதில் இருந்தது. அவர்கள் நோக்கம் தங்களைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்வது. அதற்கு நான் பலியானதுதான் வேடிக்கை" என்று உரக்கச் சிரித்தார்.

தனது அவமதிப்புகளைக்கூடப் பரிகாசமாக மாற்றிவிட முடியும் மனது அவருக்கு இருந்தது.

பிரபஞ்சன் முறையாகத் தமிழ் படித்தவர், சங்க இலக்கியம் துவங்கி காப்பியங்கள் வரை எதைப் பற்றிக் கேட்டாலும் விளக்கமாகச் சொல்லுவார். ருஷ்ய இலக்கியங்களைப் பற்றிப் பேசத் துவங்கினால் வியப்பும் பெருமையாக அவர்கள் படைப்புகளை விவரித்துக் கொண்டிருப்பார். அவரது அப்பா கள்ளுக்கடை வைத்திருந்த நாட்களைப் பற்றியும் சீட்டு விளையாட்டில் ஆர்வம் அதிகமாகி பகலிரவாக சூதாடிய மனிதர்களைத் தன் பிராயத்தில் கண்டதைப் பற்றியும் அவர் விவரிக்கும் போது இதை எல்லாம் இன்னும் எழுத்தில் முழுமையாக பிரபஞ்சன் கொண்டுவரவில்லையே என்று ஆதங்கமாக இருக்கும்.

நல்ல எழுத்தாளர் என்பது போலவே பிரபஞ்சன் ஆகச்சிறந்த பேச்சாளர். கூட்டத்தைத் தன் பேச்சில் மயக்கும் வித்தை அவரிடம் கைகூடியிருந்தது. பல்கலைக்கழக ஆய்வு அரங்கமாக இருந்தாலும், பொது நிகழ்வாக இருந்தாலும் அவர் பேச்சு எப்போதுமே சுவாரஸ்யமானது. பலமுறை அவர் பேச்சைக் கேட்டிருக்கிறேன். என்னுடைய புத்தக வெளியீட்டு விழாக்களில் அவர் பேசியிருக்கிறார்.

பிரபஞ்சன் நேர்த்தியான ஆடைகள் அணிவதிலும் தன் தோற்றப் பொலிவிலும் அக்கறை காட்டக் கூடியவர். எழுத்தாளர்களில் அவர் ஒரு அழகன் என்று நண்பர்கள்  சொல்வார்கள். அதை மெய்யாக்கும் விதமாக அவரது தோற்றத்தில் எப்போதுமே தனிவசீகரம் இருக்கும்.

நல்ல காபி, சிறந்த இசை, விருப்பமான புத்தகங்கள், நிறைய நண்பர்கள் இதுதான் பிரபஞ்சனின் உலகம். இன்றைக்கு அவரது அறைக்குச்  சென்றாலும்  யாரோ சில இளம் எழுத்தாளர்கள் வாசகர்கள் சந்தித்துப் பேசி விவாதித்து, தங்களைப் பகிர்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். இதற்கான முக்கிய காரணம் தன்னைத் தேடி வருகின்றவர்களிடம் அவர் காட்டும் நிஜமான அக்கறையும் தன் விருப்பங்களைப் பகிர்ந்துகொள்ளும் இயல்பான தன்மையும், புதிதாக எழுத வருகின்றவர்களை அழைத்துப் பாராட்டி, தொடர்ந்து எழுதச்சொல்லி உற்சாகப்படுத்தும் பாங்குமேயாகும்.

அவ்வகையில் பிரபஞ்சனின் இல்லம் நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய பகிர்வு வெளியாகும். அந்த அறை தந்த கதகதப்பும் உபசரிப்பும் எனக்குமட்டுமல்ல நண்பர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரது நினைவிலும் எப்போதும் தன் பசுமையோடிருக்கிறது. அவ்வகையில் பிரபஞ்சனின் இருப்பு எழுத்தாளனின் உயரிய தோழமை என்றே சொல்வேன்.

***

நன்றி: வாசகபர்வம் – உயிர்மை வெளியீடு

Dec 6, 2010

பிரும்மம்-பிரபஞ்சன்

நாங்கள் புதுவீட்டுக்குக் குடி போனோம். ஆச்சரியமாக வீட்டுக்கு முன்னால் கொஞ்சம் நிலம் வெறுமே கிடந்தது. ஒரு நாலு முழ வேஷ்டியை விரித்தது போன்று கிடந்தது அது. அதை என்ன பண்ணலாம் என்று நாங்கள் யோசித்தோம்.வீட்டுப் பெரியவர்களுக்குச் சலுகை கொடுப்பது மாதிரி, மரியாதை கொடுக்கிற பழக்கத்தை உத்தேசித்துப் பாட்டியைக் கேட்டோம்.

அவள் ஆகிவந்த பழக்கங்களுக்கேற்ப, ஒரு பசு வாங்கி, கட்டி வளர்க்கலாம் என்றாள். பசு வீட்டுக்கு pirabanjan2 லட்சணம். பசு வந்தாலே வீட்டுக்கு லட்சுமி வந்ததுபோல. பசு பால் கொடுக்கும். பாலில் இருந்து மோர், தயிர், வெண்ணெய், நெய் முதலியவை கிடைக்கும். பசு பெய்வதை மூத்திரம் என்று சொல்லக்கூடாது. அதைக் கோமியம் என்று கூற வேண்டும். அந்தக் காலத்து மனுஷர்கள் வீட்டுக்கு ஒரு பசு வளர்ப்பார்கள். இப்போதெல்லாம் மனுஷர்கள் ரொம்ப மாறிப்போய்விட்டார்கள்.

பாட்டியின் கருத்தை அம்மா ஒரே அடியில் அடித்து வீழ்த்தினாள். காலம் பூராவும் இந்தக் குடும்பத்துக்கு உழைத்து அவள் தேய்ந்துபோனாள். உருக்குலைந்து ஓடாகிப்போனாள். இது போதாது என்று இப்போது மாட்டுச் சாணி வேறு வார வேண்டுமா என்று கேட்டாள். அவள் கட்டிக்கொண்டு வந்ததில் இருந்து அவளும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். அவள் நாத்திமார்கள் அவளைப் படுத்தி வைத்தார்கள். அவள் சந்திரமதியைப்போல கண்ணீர் உகுத்து இருக்கிறாள். காலை நாலு மணிக்கு எழுந்திருக்கும் அவளை இரவு ஜாமம் ரெண்டு மணிக்குத்தான் படுக்கவிட்டார்கள். ஊர் உலகத்தில் உள்ளதுபோல அவளுக்கு புருஷன் வாய்க்கவில்லை. நாள் கிழமைகளில் அவளுக்குப் பட்டுப் புடைவை இல்லை. கண்ட கழிசடைகள் வைரமாகப் போட்டுக்கொண்டு ஜொலிக்க சாதா பவுனுக்கே இவள் அல்லாடுகிறாள். கல்யாணம் காட்சிகளில் அவள்தான் எவ்வளவு அவமானப்படுகிறாள். கடைசியாக அம்மா வாய்வலி காரணமாக நிகழ் உலகத்துக்குத் திரும்பி ஒரு வெண்டை, ஒரு கத்தரி, ஒரு தக்காளிச் செடி போடலாம், கறிக்கு ஆகும். கொத்தமல்லிகூடப் போடலாம்தான் என்றாள்.

செளந்தரா--என் தங்கையின் பெயர். இதைக் கடுமையாக ஆட்சேபித்தாள். அவள் கல்லூரியில் படிப்பதாகச் சொல்பவள். 'ஹோம் சயின்ஸ் ' என்கிற அபூர்வமான கல்வியைக் கற்பவள். அவள் தோழி வீட்டில் மல்லிகை, கனகாம்பரம், ரோஜாச் செடிகள் போட்டிருக்கிறது, மல்லிகை, ரோஜா, கனகாம்பரம், பறித்துக் கட்டி தலையில் வைத்துக்கொண்டு காலேஜ் போகலாம். ரம்மியமாக இருக்கும். சுலோச்சனா, எப்.எ.மகத் எல்லாம் பூ வைத்துக் கொண்டு கல்லூரி வருகிறார்கள். பூக்கள் அற்புதமானவை. அழகை ரசிக்கத் தெரிய வேண்டும். கத்தரி, வெண்டை எல்லாம் வெறும் சோற்றுக்கே ஆகும். மனிதன் வெறும் சோற்றால் மட்டும் ஜீவித்திருக்கமாட்டான். செளந்தரா கனவுகளைத் தின்று வாழ்பவள்.

எந்த முடிவுக்கும் வராமலேயே சபை கலைந்தது. எங்கள் அனைவருக்கும் சிந்திக்கவும் செய்யவும் அனேக காரியங்கள் ஏற்பட்டுப் போயின.

ரெண்டு நாள் கழித்து அப்பா, சாயங்காலப் பொழுதில் எங்களை அழைத்து, காலியாகக் கிடக்கும் நிலத்தில் முருங்கை நடலாம் என்றார். முருங்கை மரம், இருக்கும் மரங்களிலேயே சிறந்தது. வேர் விட்டு மதிலையோ, வீட்டு அஸ்திவாரத்தையோ தகர்க்காது, இடத்தை அடைக்காது. முருங்கைக் கீரை, கீரைகளிலேயே ரொம்ப விசேஷமானது. கபத்தைக் கரைக்கும் கால்ஷியம் சத்து உள்ளது. கந்தசாமி முதலியார்கூட எழுதி இருக்கிறார். காயைப்பற்றிச் சொல்ல வேண்டியது இல்லை. சாம்பார் வைக்கலாம். வாசனை ஊரைக் கூட்டும். காரக் குழம்புகூட வைக்கலாம்தான். தேங்காய்ப்பூ போட்டுக் கறி பண்ணலாம். வீட்டு முகப்பில் மரம் ஒரு அழகைத் தரும். நிழலும் தரும். வீதியை ஒட்டிய அறைக்கு எப்பவுமே வெயில் வராது; குளிர்ச்சியாய் இருக்கும். அப்பாவுக்கு முருங்கை பிடிக்கும். ஆகவே, அம்மாவுக்கும் பிடிக்கும். எனக்கு எப்போதுமே முருங்கை பிடிக்கும்.

அடுத்த நாள் காலை அப்பாவின் சினேகிதர் வீட்டில் இருந்து அவர் பையன் ஒரு முருங்கைக் கிளையைக் கொண்டு வந்தான். தூங்கிக்கொண்டிருந்த அப்பாவை எழுப்பிக் கொடுத்தோம். அப்போது நாங்கள் தூங்கி எழுந்து காப்பி சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அன்று வெள்ளிக்கிழமையாய் வேறு அமைந்திருந்தது.

அம்மா ஸ்நானம் பண்ணி, கூந்தல் முனையில் ஈரம் போகத் துணியைப் பந்தாக்கித் தொங்கவிட்டிருந்தாள். மஞ்சள் மினுக்கில், வழக்கத்துக்கு விரோதமாகச் சிரித்தாள். அதன் காரணமாகவே அவள் அழகாய்த் தெரிந்தாள்.

முருக்கைக் கிளை கொண்டுவந்த பையனுக்கு காபி உபசாரம் நடந்தது. அப்பா குளிக்கப் போனார். சாதாரணமாக அப்பா முக்கால் மணி குளிப்பார். உடம்பை அங்குலம் அங்குலமாகத் தேய்த்துக் குளித்தால்தான் அவருக்கு திருப்தி. அன்று அதிசீக்கிரமாகக் குளித்துவிட்டு, நீர் சொட்டச் சொட்டத் துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு வந்தார்.

அப்பாவிடம் ஒரு பட்டு வேஷ்டியும் பட்டுத் துண்டும் இருக்கிறது. தாத்தாவின் திவச நாளிலும் பண்டிகை விசேஷ காலங்களிலும் அவர் அதைத்தான் அணிவார். மஞ்சளும் இல்லாமல் பழுப்பும் இல்லாமல் இடைப்பட்டு விளங்கும் கரை, பச்சை வண்ணத்தில் கை அகலம் இருக்கும். வெயில் பட்டால் எரிவதுபோல் மினுங்கும். வருஷத்தில் பத்துப் பன்னிரண்டு நாள்களுக்கே அவை பயன்பட்டு விளங்கின. மற்ற நாள்களிலே, அலமாரியிலேயே மடித்து வைக்கப்பட்டு இருப்பதால் அதுகளுக்கு தனி மணமும் குணமும் ஏற்பட்டிருக்கிறது. அலமாரியை விட்டு எடுக்கும்போதெல்லாம் கற்பூர வாசனை பரவும். அப்பா அந்த வாசனையோடு இருக்கும்போது அவரை எனக்குப் பிடிக்கும். அன்றும் ஏதோ விசேஷ தினம்போல அப்பா அந்த வேஷ்டியைக் கட்டிக் கொண்டு துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டார்.

முருங்கைக் கொம்பு கொஞ்ச நாழிகை முன்புதான் ஒடிக்கப்பட்டிருந்தது. அதனின்றும் நீர் சுரந்தது. பசிய மரவாசனை அதனின்றும் வந்தது. மெல்லிய மேல்தோல் சிதைந்து உள்ளே பச்சை காண இருந்தது. அந்தச் சதுர நிலத்தில் நடுவிடத்தில் அந்தக் காம்பை அப்பா நட்டார். அம்மா அவருக்குத் துணை செய்தாள். அம்மா குனிந்து அந்தக் கொம்பைப் பிடித்துக்கொண்டிருந்தபோது, அவள் தலையில் முடித்திருந்த ஈரத்துண்டின் காரணத்தாலும், வியர்வையாலும், அவள் முதுகு பூராவும் நனைந்து இருந்தது. அப்பா பள்ளம் தோண்டி நட்டதும் செளந்தரா ஓடிப்போய் வாளியில் நீர் கொண்டுவந்து கொம்பைச் சுற்றி மண்ணில் வார்த்தாள். அம்மா மூன்றாவது வீட்டுக்கு ஓடிப் போய் மாட்டுச் சாணம் கொண்டுவந்து கொம்பின் முனையில் அப்பி வைத்தாள். அன்று காலை நேரம் பூராவும் எங்களுக்கு முருங்கையே விஷயமாக இருந்தது. நானும் அப்பாவும் எங்கள் தொழில் கூடங்களுக்கும், செளந்தரா காலேஜ்உக்கும் அன்று லேட்டாகவே போனோம்.

அடுத்த சில நாள்களுக்கு நாங்கள் முருங்கையைப் பற்றி சுத்தமாய் மறந்துபோனோம். முருங்கை எங்கள் வாழ்வில் இடம் பெற்றதாகவே எங்கள் யாரின் உணர்விலும் இல்லை.

ஒரு நாள் காலை என்னை என் படுக்கையில் வந்து எழுப்பினாள் செளந்தரா. அவள் குரலிலும் அசைவிலும் அவசரம் தெரிந்தது.

'சனியனே ' காலைல வந்து என் உயிரை ஏன் எடுக்கறே ? '

'அண்ணா, வந்து பாரேன். முருங்கை மரம் முளைச்சிடுச்சி. '

சுருக்கென நான் எழுந்து உட்கார்ந்தேன். இருவரும் கீழே வந்தோம். முருங்கையைச் சுற்றி வீட்டார் அனைவரும் நின்றிருந்தார்கள்.

பட்ட மரம் போலும், குச்சி போலும் தோற்றம் கொண்டிருந்தது முருங்கை. அதன் பட்டையின் பல்வேறு இடங்களில் பச்சை மைப் புள்ளியாகத் தளிர் விட்டிருந்தது.

ஒட்ட வைக்கப்பட்ட பச்சைப் பயிர்.

கிளர்த்திக்கொண்டு வெளியேறத் துடிக்கும் உயிரின் உருவம் பார்க்க பரவசம் தெரிந்தது. தொட என் விரல் என்னை அறியாமல் நீண்டது.

'ஊஸ்...அதைத் தொடக்கூடாது '--என்றாள் பாட்டி. பச்சைக் குழந்தைகளை, பூக்களை, தளிர்களை விரல் நீட்டிச் சுட்டக் கூடாது; தொடவும் கூடாது. தொட்டால் அதுகளுக்கு ஊறு.

அன்று முதல், விடிந்ததும் எங்களின் முதல் வேலை முருங்கையைப் பார்ப்பதுதான். அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு கணுவும் எங்களுக்குத் தெரிந்தே நிகழ்ந்தது. உளுத்தம் பொட்டின் அளவான தளிர், மெல்லிய நரம்பு போல் அது விடும் கிளை, பச்சைப் பட்டாணிபோல அதன் இலை, ஊடே ஊடே தோன்றும் அதன் புதிய புதிய தளிர்கள்--எல்லாம் எங்கள் கண் முன்பாகவே நிகழ்ந்தன. இதற்கிடையே நான் இரண்டு சட்டைகள் புதிதாகத் தைத்துக்கொண்டேன். என் பேண்ட் சற்று இறுக்கமாகி விடவே, அதைப் பிரித்துவிட வேண்டியிருந்தது. ஒரு நாள் ரகசியமாக அதன் ஒரு--ஒரே ஒரு--இலையைப் பறித்து வாயில் போட்டுச் சுவைத்தேன். வித்தியாசமாக ஒன்றும் இல்லை. சுவாரஸ்யமாக இருந்தது.

முருங்கையைப் பயன் கொண்ட அந்த முதல் நாள் இப்போதும் என் கண்முன் நிற்கிறது. நெஞ்சில் நிற்பது போல. அம்மாவுக்கு நெய் உருக்க வேண்டி இருந்தது. முருங்கைக் கீரை போட்டு உருவாக்கினால் ரொம்ப வாசனையாக இருக்கும் என்றாள் பாட்டி. அம்மா அவ்வாறே செய்தாள். மத்தியானச் சாப்பாட்டுக்கு அந்த நெய்யையே நாங்கள் விட்டுக் கொண்டு சாப்பிட்டோம். முருங்கையின் விசேஷமோ அன்றி மனதின் விசேஷமோ நெய் என்றைக்குங் காட்டிலும் அன்று ரொம்ப சுவையாக இருந்தது. நெய்யில் விழுந்திருந்த கீரையுங்கூடத் தின்ன ஒரு மாதிரியாய் நன்றாகவே இருந்தது. அழகாகத் துளிர்விட்ட அதைப் பறித்து அம்மா ஹிம்சித்து விட்டாளே என்கிற துக்கம் என் மனசுக்குள் இருக்கத்தான் செய்தது.

அது நாளுக்கு நாள் தான் பெருக்கிக்கொண்டே ஆகிருதியினால் செளந்தராவையே பல நேரங்களில் எனக்கு நினைவூட்டியது. அம்மா செளந்தராவைத் தன் யெளவனத்தின் கடைசிக் காலத்தில்தான் வாங்கிக்கொண்டாள். எனக்கும் அவளுக்கும் பதினைந்து வருஷப் பிராயம் வித்தியாசம் ஏற்பட்டுவிட்டது. செளந்தராவை அவள் குழவிப் பருவம் தொட்டே அருகிலிருந்து கண்டு வருகிறேன். அதையும் அது முளைவிட்ட பருவம் தொட்டே தரிசித்து வருகிறேன். அவள் பாயில் புரண்டு தன் பார்வையில் என் முழங்கால் மட்டும் விழ, அந்த அடையாளத்தை மட்டும் கண்டு தன்னைத் தூக்கச் சொல்லி அழுதது; அது தன் குறுந்தளிர்க் கைகளைக் காற்றில் வீசி என்னை நேயம் கொண்டாடியது; அவள் முதல் நாள் பள்ளிக்கூடம் போகும் விசேஷத்தைக் கொண்டாடவென்று அதற்காகவே தைத்த சட்டை பாவாடை புரளப் புரளப் போட்டுக்கொண்டு நின்றது; வரண்டு மரத்துக் காய்ந்து நின்ற கொம்பில். பச்சை பச்சையாய், கொத்துக் கொத்தாய் நாலு பக்கமும் சிலிர்த்துக்கொண்டு நின்றது; அவள் மலர்ந்தபோது நடு வீட்டில் ஜமக்காளம் போர்த்தின நாற்காலியில் மாலை அணிந்த கழுத்தோடு உட்கார்ந்துகொண்டு வெட்கத்தில் சிரித்தது; புட்டுச்சுற்றி உளுந்துக் களி தின்று சடங்கு கொண்டாடியது, அதை நண்பர்களுக்கு வெட்கத்தோடு முகத்தைப் பார்க்க முடியாது பகிர்ந்துகொண்டது--எல்லாம் என் நினைவுகளில் பக்கம் பக்கமாய் நின்றன.

நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேலைக்குப் புறப்படுகையில் அது கையை அசைக்கும். பேசுவதாய் இருக்கும், எங்கள் சம்பாஷணைக்கு வார்த்தை அவஸ்யப்படவில்லை. ஒலி இன்றியமையாமை இல்லை. உணர்வுகள் போதுமானவையாய் இருந்தன ' இமைகள் உதடுகள் எங்களுக்கு.

செளந்தரா, கூடத்து ஜமக்காள நாற்காலியில் உட்கார்ந்ததுபோல் அதுவும் நின்றது. அதன் கால்களுக்கிடையில் நிழல் திரண்டது. நானும் அப்பாவும் அதன் கால்களுக்கிடையில் சைக்கிளை நிறுத்துவதாகச் செய்தோம். மத்தியான காலங்களில் நான் அதன் கால்களுக்குப் பக்கத்தில் ஈசிசேரைப் போட்டுக்கொண்டு உட்காருவேன். காற்று சுகத்திலும், நிழல் அருமையிலும் வெயில் அஸ்தமித்துவிடும். புஸ்தகங்கள் படிப்பதும் எழுதுவதும் அதன் அடியில் என்றாகி விட்டது. எழுத்து கண்ணுக்கு மறையும் வரை, என் வாசிப்பும் சிருஷ்டியும் அதன் அடியில், அதன் ஆதரவில் என்றாகிவிட்டது.

காவிரி ஆற்றங்கரையில் நான் கல்லூரி வாசம் செய்திருந்தேன். காவிரியை ஒட்டி ஒரு பழைய ஒட்டு வீட்டில் நான் ஸம்ஸ்கிருதம் படித்தேன். ஆற்றில் நீர் ஓடும் சப்தம் கூடத்தில் கேட்கும். அந்தக் காலத்து மனுஷர்களைப் போலவே அந்தக் காலத்து வீடுகளும் பெரிசாய் இருக்கும். வீட்டுக்குள்ளேயே வாசலில் மரம் இருந்தது. அது முருங்கையாய் வாய்த்திருந்தது. அதன் கீழ்தான் என் பாடம் நடந்தது. அதற்கு மட்டும் வாய் இருந்தால் ராம சப்தத்தையும், கோதா ஸ்துதியையும் என்னைக்காட்டிலும் இனிமையாகவும், ஆத்மபூர்வமாகவும் சொல்லியிருக்கும்.

வாத்தியார் ஒருநாள் முருங்கையை பிரும்ம விருட்சம் என்றார். முருங்கையின் மேல் தோல், கால், கீரை, காய் முதலானவை மனுஷ இன விருத்திக்குக் காரணமாகிய புணர்ச்சிக்குத் தீவிர உந்துதலும் உரமும் தருவதால் அது சிருஷ்டிக்கு உதவுவதாகிறது. பிரமனும் சிருஷ்டி பரமான காரியங்களிலேயே இருப்பதால் அது பிரும்ம விருட்சம் என்றாகிறது என்றார். அந்த நாள் முதற்கொண்டு நான் அதை நோக்கும்போதெல்லாம் நாலு திசைகளிலும் சிரம் கொண்ட பிரும்மமே என் கண்களுக்குப் புலப்படுவதாயிற்று. வாத்தியார், குழந்தைகள், நாங்கள்--அனைவரும் விருட்ச நிழலில் வளர்ந்தவர்கள்.

செளந்தராவுக்குச் சட்டென்று கல்யாணம் கூடி முடிந்தும் போயிற்று. அவள் புருஷனோடு புறப்படுகையில் அப்பா, அம்மா, நான், பாட்டி என எல்லோரிடமும் முண்டு முண்டாக நின்று அழுதாள். உறவுகளைப் பிரிவது என்பது எல்லோருக்கும் துன்பமான அநுபவமாகத்தான் இருக்கும். அம்மா வீட்டில் அவள் பார்க்க விரும்புவதில் முருங்கையும் கட்டாயம் இருக்கும்.

இப்போதெல்லாம் எங்கள் வீட்டில் பெண்டுகளின் வரத்து அதிகமாக இருந்தது. அம்மாவை ஒத்த பெண்டுகள் எதிர்வீட்டு, பக்கத்து வீட்டு, மூன்றாவது வீட்டுப் பெண்கள் வயது காரணமாக இவர்கள் பெரும்பாலும் குண்டாகவும் அல்லது அதீத ஒல்லியாகவும் இருப்பார்கள். நான் வீட்டுக்குள் நுழைகையில் சரேலென்று என்னைக் கடந்து இவர்கள் போவார்கள். இவர்கள்மீது ஏதேனும் ஒரு வகை வாசம் வீசும்--அழுக்கின் கார நெடி, கழுவாத உடம்பின் கவிச்சை நெடி என. தவறாமல் இவர்கள் கைகளில் ஒரு கொத்துக் கீரையும், ரெண்டு மூன்று காய்களும் இருக்கும். இதற்காகவென்றே வருபவர்கள் வேறு எதற்காகவோ வருபவர்களாக அபிநயித்து, கடைசியில் அம்மாவே கீரை காய் பறித்துக் கொடுக்கும்போது புளகித்துச் சிரித்துப் பேசிவிட்டுச் செல்வார்கள். அம்மா பொதுவாக அண்டை வீடுகளுக்கு, வம்பு தேடிப் போகிறவள் அல்ல. அதில் அவளுக்கு நாட்டம் இல்லை. எனவே பெண்டுகள் அவளைப் புறக்கணித்தே இருந்தார்கள். முருங்கை வந்தபின் அவளுக்கு உறவுகள் வந்தன.

எங்கள் வீட்டுக் கீரை, தேன் என்று பயன் கொண்டவர்கள் சொன்னார்கள். காய், மதுரம் என்றார்கள். அது தன்னைக் குறித்த பாராட்டெனவே ஆனந்தம் மிளிரும் அம்மாவுக்கு.

அது அடர்த்தி இன்றி, மற்றவைபோல மிருக பலம் இன்றி வானத்தை நோக்கியே வளர்ந்தது. வானமே தன் இலட்சியம் என்பதுபோல அது வளர்ந்தது. என் மனசுக்குள் அது தவழும் குழந்தை.

மனிதர்கள் ஒரு நாள் தங்கள் கோரைப்பற்கள் நீள மரங்களையெல்லாம் வெட்டிப் போட்டார்கள். கற்களை வைத்துச் சுவரெழுப்பித் தங்கள் வாழ்விடங்களையும் சாவிடங்களையும் அமைத்துக்கொண்டார்கள். ஆதலினால் வானத்துப் பறவைகள் கூடுகளை இழந்து விண்ணில் திரிந்தன. முருங்கை காக்கைக் குருவிகளுக்கு இல்லம் ஆயிற்று.

எங்கள் காதுகளுக்கு மனித இரைச்சலும், இயந்திரக் கூச்சலும் ஓசையாய் இருந்த நிலை போய், பறவையின் நாதம் இசை ஆயிற்று. மாடியில் என் அறையில் ஜன்னல் வழி பார்த்தால் முருங்கையின் தலைப்பகுதி தெரியும். என் படுக்கையின் மேல் படுத்திருந்துகூட அதனைப் பார்க்க முடியும். காலையில் ஏதேனும் ஒரு பறவையின் பேச்சுக் கேட்டுத்தான் நான் கண்களைப் பிட்டுக் கொள்ளும் வழக்கம் அமைவதாயிற்று.

சூரிய கிரணங்கள் மண்ணில் பாயாத அந்த வைகறைப் போதின் வெண்மையான சூழலில், ஒரு சிட்டுவோ, காகமோ அபூர்வமாக எப்போதாவது வரும். மைனாவோ, கருவாட்டுவாலியோ பேசக் கேட்டுக் கொண்டே உலகத்தின் ஒரு பொழுதை எதிர்கொள்வது மிக இனிய அனுபவமாக இருக்கும். மனிதர்கள் தங்கள் வீடுகளில் தாங்கள் மட்டுமே தனித்து எவ்வாறு வாழ்கிறார்கள் என்று எங்களுக்குத் தோன்றும். விடியல் போதை மனிதர்களைக் காட்டிலும் பறவைச் சாதியை ஆர்வத்தோடும் சந்தோஷத்தோடும் வரவேற்கின்றன. அவைகளின் உற்சாகம் விளையாட்டு மைதானத்தில் இருக்கும். குழந்தைகளின் கும்மாளத்தை ஒக்கும். ஒரு கிளையில் இருந்து மறு கிளைக்குச் சிறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு தாவும். அலகால் நெஞ்சை நீவி விட்டுக் கொள்ளும். சாயங்காலங்களில் அவை வேறு மாதிரி தோன்றும், வேறு மாதிரி கூவும். ஒரு நாள் வாழ்க்கையை முடித்து விட்ட திருப்தியும், சாந்தமும், போது முடிந்து விட்டதே என்கிற ஆதங்கமும் அந்தக் குரல்களில் இருக்கும்.

முருங்கையைப் பறவைகளோடும் தொங்கும் காய்களோடும் பார்த்தால், அசப்பில் தன் தோள்மீது குழந்தைகளைத் தூக்கி வைத்துக் கொண்டு குதிபோடும் தாத்தாவைப் போலத் தோன்றும். திடாரென்று ஆயிரம் வருஷத்தில் முதுமையில் மூச்சு விடும் பாவமாய் இருக்கும். திடாரென்று விடலைப் பையனின் குஷியில் குதிபோடும்.

எங்கள் வீட்டில் முருங்கை சம்பந்தப் படாத சமையல் இப்போதெல்லாம் இல்லை. முருங்கைக் கீரை பிரட்டல் அல்லது பருப்புக் கூட்டு; காய் சாம்பார்; காய்காரக் குழம்பு; காய்ப் பொரியல்--இவ்வாறு ஏதேனும் இருக்கும். முருங்கைக் காய் எதில் சேர்ந்தாலும், சேர்மானத்தைப் பரிமளிக்க வைக்கும் சக்தி அதற்கு உண்டு. சாம்பாருக்கு விசேஷமான மணமும் சுவையும் உண்டு எனக்கு அது ரொம்பவும் பிடிக்கும்; எங்கள் மரத்துப் பொருள்கள் எல்லாமே எங்களுக்குப் பிடிக்கும்.

எங்கள் வீட்டுக்கு மூன்றாவது வீட்டில் ஹெட்மாஸ்டர் ஒருத்தர் குடி வந்தார். மிகப்பெரிய தனியார் பள்ளிக்கூடத்தின் மிகப்பெரிய வாத்தியார் அவர். அப்படிப்பட்டவர் எங்கள் தெருவை மதித்துக் குடிவந்த பிறகும், அவருடைய வருகையை எந்தவிதத்திலும் மகிமைப் படுத்தாது நாங்கள் எங்கள் காரியாதிகளை கவனித்துக் கொண்டிருந்தோம். அது காரணமாகவே நாங்கள் அவருக்குப் புல்லாய்த் தெரிந்தோம். ஒரு நாள் எதேச்சையாக வாத்தியார் தெருவுக்கு வந்து அதன் நீள அகலத்தை ஆராய்ந்தவாறு இருந்தார். அதே சமயம் எதிர்வீட்டு வெள்ளைமுத்துக் கோனாரும் வெளியே வந்து, வேஷ்டியை அவிழ்த்துத் தோளில் போட்டுக்கொண்டு, நெகிழ்ந்துபோன கோவணத்தை இறுக்கிக் கட்டி நிமிரும்போது, கோனார் பார்வையில் வாத்தியார் விழ, ஒரு நேசப் புன்னகையை தம் முகத்தில் நெளியவிட்டிருக்கிறார். வாத்தியார் சடேரென்று திரும்பி, கதவை அசுரத்தனமாக அறைந்து சாத்திக்கொண்டு போய்விட்டார். அன்றைய தினமே, வாத்தியார் வீட்டுத் தூணில் மாட்டைக் கட்டி, கோனார் பால் கறந்துகொண்டிருக்கையில் அவர் வெளியே வந்து தலைமயிர் துண்டு, வேஷ்டி பறக்க ஒரு ஆட்டம் ஆடினார். தெருவே திரண்டு பார்த்துக் களித்தது. ஒரு நாள் அவர் என்னைக் காண வந்தார். உத்தியோக உடை. எலிசபெத் காலத்து ஆங்கிலத்தில் தற்கால கல்வித்துறையின் சீர்கேடு, சினிமா, மாவு மிஷின், குடும்பக் கட்டுபாடு---எல்லாவற்றையும் பற்றி சம்பாஷித்தார். அதாவது, அவரே பேசினார். கடைசியாக 'அடடே, முருங்கை மரம் ' என்றார். நான் ஆமோதிக்க அவஸ்யம் இருக்கவில்லை. அது முருங்கை மரம்தான். கொஞ்சம் காயும் கீரையும் பறித்துக் கொடுத்தேன். அவருக்கு மேலும் கீழும் அழகான பல் வரிசை.

இப்போதெல்லாம் மாலைகளில் முருங்கையின் கீழ் இருப்பது இயலாததாயிற்று. திடாரென்று வானம் நினைத்துக் கொண்டு மழையைப் பொழிந்தது. காலம் அதன் கிரியைகளை மிக ஒழுங்காகவே செய்கிறது. காற்று ஈரம் கோத்துக் கொள்ள அறைக்குள் இருப்பது சுகமாக இருந்தது. மண் குழைந்தும், ஈரம் செறிந்தும் போகவே, நடப்பது நிதானம் தேவைப்படும் தொழிலாயிற்று. அடிக்கடி காற்று பலத்து வீசி நித்திய வாழ்க்கைக்கு இடையூறு ஆயிற்று. பலத்த காற்று அடிக்கடி ஊரைக் கடப்பதாயிற்று.

ஒருநாள் குடையில் ஒளிந்து அலுவலகம் போனேன். உள் இருக்கையிலேயே பலத்த காற்று வீசிற்று. ஜன்னல் கதவுகள் கட்டுபாடின்றி அடித்துப் பயம் எழுப்பின. எல்லாம் முடிந்து அமைதி நிலவியது. மதிய உணவுக்கு நான் வீடு திரும்பினேன்.

எங்கள் வீட்டுக்கு முன்னால் சிறுவர்களும் பெரியவர்களுமாக ஒரு பெரும் கூட்டம் நின்றிருந்தது. தெருவை அடைத்துக் கொண்டு வீழ்ந்து கிடந்தது முருங்கை. மெலிய மெலிய விரல்களாகக் கிளைகள். பச்சை குங்குமப் பொட்டுகளாய் இலைகள். ஊடே தங்கப் பொட்டாய் மஞ்சள் பழுப்பிலைகள். முறிந்த விரல் போலும் முருங்கைக் காய்கள்.

மனிதர்கள், கீரைகளாகவும் காய்களாகவும் விறகாகவும் அவரவர் தங்கள் சக்திகளுக்கு ஏற்பத் திரட்டிக்கொண்டு சென்றார்கள். பார்த்துக்கொண்டு இருக்கும்போதே முருங்கை இருந்த இடம் சூனியமாயிற்று.

அம்மாவும், அப்பாவும், பாட்டியும் தள்ளி நின்று கொண்டிருந்தார்கள். நான் வழக்கமாகச் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் சைக்கிள் மாத்திரம் நின்றது. முருங்கை இடுப்பொடிந்து நிற்பது போல இருந்தது. பாதி மண்ணில் செருகி வைத்தது போல நட்டுக்கொண்டிருந்தது அது. ஈரம் இன்னும் கசிந்து கொண்டிருந்தது.

மறுநாள் காலையில்தான் அது இல்லாமையின் தாக்கம் எனக்குப் புரிந்தது. நேற்று இருந்தது. நின்ற வண்ணம் இது. கிடந்த வண்ணம் அது அடித்தண்டு மட்டும் இருந்தது.

கொஞ்ச நாள் போயிருக்கும்.

ஒரு நாள் காலை காப்பிக்கு மாடியை விட்டுக் கீழிறங்கி, வழக்கப்படி டம்ளரோடு முருங்கையின் அருகில் போய் நின்றேன். எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

துண்டாகி நின்றிருந்த மரத்திலிருந்து, ஒரு இடத்தில் சின்னதாய்க் கிளைத்து இருந்தது.

உயிர்தான்.

Oct 16, 2010

நாவல் பழ இளவரசியின் கதை-பிரபஞ்சன்

அவர்கள் காட்டுக்குள் பிரவேசித்துப் பல யுகங்கள் ஆனாற்போல பெரியவன் உணர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இரண்டு பேர். ஒருவன், பெரிய ஆகிருதியும், படர்ந்த பாதங் களையும் கொண்டிருந்தான். எதிர்ப் படும் மரங்களைத் தோள்களால் தள்ளிவிடக்கூடும் எனும்படி முன்னே நடந்து சென்றான். பெரியவனின் மார்புக்கு மட்டில் வளர்ந்தவனாக சின்னவன் இருந்தான். பெரியவன் இழுத்துச் செல்லும் குதிரை; பின்னால், சக்கரங்களில் உருளும் சிறு தேர் போலச் சின்னவன் இருந்தான்....

சின்னவன், பெரியவனின் முதுகைப் பார்த்தபடி நடந்தான். விசாலமான புல் முளை01த்த
மைதானம் போல அது இருக்கவே, முன்னால் இருந் ததை அவன் பார்க்கக்கூடாமல், பக்கவாட்டில் மட்டும் பார்த்துக் கொண்டு சென்றான். சூரியன் உச்சிக்கு வந்தபோது அவர்கள்  காட்டுக்குள் பிரவேசம் ஆனார்கள். என்றாலும், இருள், பச்சை இரு ளாய்ப் பக்கவாட்டு
மரங்களிலும், கரிய இருளாய் நேராகவும் இருந்தது. விசித்திரமாக, முயல் தலை போல் இரு கைகளிலும் நீண்டு, முகம்போல கீழ் நோக்கிப் படுத்த இலைகளை ஆச்சரியமாகப் பார்த்தபடி நடந் தான் சின்னவன்.

படி வைத்த இருட்டுப் பெட்டிக் குள் இறங்குபவனாய்ப் பெரியவன், ஒவ்வொரு அடியாக  எடுத்து வைத்தான்.

`சாயங்காலத்துக்குள்ள ஊரைப் பார்க்க போயிடலாமாண்ணே' என்று கேட்ட சின்னவன், குரலைக் கேட்காதவன் போல பெரியவன் சொன்னான்.

இப்பொழுதே கறுப்பைக் கரைத்துக் கொட்டி மெழுகினாற்போலத் தோன்றும் இந்தக் காடு,
நூற்றைம் பது இருநூறு வருஷத்துக்கு முன்னாலே என்னவாக இருக்கும் பார். பேய்கள் புகாத
இங்கதான் அந்த மனுஷன் புகுந்தான். விரட்டிக் கொண்டு, காட்டு வாசலுக்கு வந்த
நாய்கள், சரேலென்று திகைத்து நின்றுவிட்டன என்றால் பார்த்துக் கொள். நாய்கள்,
துப்பாக்கிகளில் மருந்து கெட்டித்து வச்சு இருந்தன! சுட்டு விரல் முனையில் அந்த மனு ஷனின்
உயிர், இரும்புக் கொக்கியில் மாட்டிய உரித்த கோழியெனத் தொங்கியது. ரத்தம்
சொட்ட அவன் காட்டின் இருதயத்துக்குள் மிதித்து முன்னேறினான்.

நாய்களில் இரண்டு வகை. ஒன்று, உள்நாட்டு நாய்கள். மற்றொன்று வெளிநாட்டு
நாய்கள். காட்டின் வரம்பைக் கிழித்துக்கொண்டு உள்ளே புக வெளிநாய்கள் தயங்கின.
ஆனால், உள்நாட்டு நாய்களோ, மிகுந்த மோப்ப சக்தி கூடி, இடங் களைப் பற்றிய
சங்கேதங்களை அறிந்து இருந்தன. நிலங்களை முகர்ந்து, அவைகளோடு பேசும் சக்தி உடையவையாக
இருந்தன. நிலம், ரகசியம் அற்று, காயப் போட்ட, வேஷ்டியாக வெறுமனே, வௌ¢ளையாக
விரிந்து கிடக்கும் இயல்பு உடையதுதானே? நாய்கள், மூக்கைத் தரைமீது வைத்தபடி உள்ளே
புகுந்தன.

அந்தக் காலத்தில், இந்தக் காடு களுக்குள் புலிகள் உயிர் வாழ்ந்து இருந்தன. அவன்
மாதிரி மனிதர் களைப் புலிகளுக்குப் பிடித்திருந்தன. ஆகவே, அதுகள், தங்கள்
அரசியின் தலைமையின் கீழ் ஒன்று திரண்டு, கூடிவந்து, மனுஷனுடன் ஒரு ஒப் பந்தம்
பண்ணிக்கொண்டன. தங்க ளால் மனுஷனுக்கு எந்த தீமையும் வராது. அவனாலும் தங்களுக்கு ஹதம்
வரக்கூடாது என்பது ஒப்பந் தம். நீங்கள் என் எதிரிகள் அல்லர். என் பகை வேறு என்று அவன்
சொன்னான். புலிகள் பச்சிலைகள் கொணர்ந்து, அவன் காயங்களை சொஸ்தம் பண்ணின.
அவனை மாற்றி மாற்றித் தம் முதுகில் சுமந்து கொண்டு காட்டைச் சுற்றிக் காட் டின.
ஆனால், என்ன பண்ண? நாய் களோ அவனை ஒரு நாள் அதி காலையில் உடைத்து ஊற்றிய
முட்டை மாதிரி வெளிச்சம் பரவி வருகையில், சுற்றி வளைத்து, கோரைப் பற்களால்
கிழித்துப் போட்டன.

அடப் பாவமே என்றான் சின்ன வன். யார் பாவம் என்று கேட்டான் பெரியவன். நகரம்
சாராமல் வாழும் பல பட்சிகளின் குரல்கள் அவர் களுக்குக் கேட்க வாய்த்தது. இதை
ஏதோ சத்தம் என்று எண்ணிவிடக் கூடாது என்றான் பெரியவன். இவைகள் பறவைகள். மற்ற
பறவை களுக்கும், ஏனைய மிருக ராசிகளுக் கும், ஊர்வனவற்றுக்கும் கொடுக்கும்
சமிக்ஞைகள் என்று அவன் சொன் னான். புதியவர்களை, அதிலும் குறிப்பாக மனிதர்களைக்
கண்டால் அவைகள் பதற்றம் அடைகின்றன என்றான் அவன். அவநம்பிக்கை. முன் காலத்தில்,
மனிதர்கள் வாழும் இடத்தண்மை, தாவரம், மிருகம் பட்சிகள் என்று என்னவெல்லாம்
உண்டோ அவைகள் எல்லாம் சாதாரணமாக வந்து, பேசி மகிழ்ந்து, நட்பு பாராட்டிவிட்டு
போயின. அப்படி வந்துபோய்க்கொண்டிருந்த பசுக்கள், குதிரைகள், கழுதைகள், குரங்குகள்
போன்றவற்றை ஏமாற்றி யும் வஞ்சித்தும் தமக்கு ஏவல் பண் ணுமாறு பண்ணிவிட்டான்
மனிதன். ஆனால், நரிகள், பாம்புகள், சிங்கம், புலிகள் முதலானதுகள், புத்திசாலி கள்
மற்றும் தந்திரசாலிகள் ஆகை யால், மனிதனை விட்டுத் தப்பித்து ஓடிவிட்டன. எனக்குத்
தெரிந்து, நாவல்பழ இளவரசி என்று ஒருத்தி இருந்தாள். பல காலங்களுக்கு முந் தின
சமாச்சாரம்.

அவள், ஆசைப்பட்டுக் கார்க் கோடன் என்ற பாம்பைக் கல் யாணம் பண்ணிக்கொண்டு,
ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்தாள். இரவில் சம்போகமும், பகலில் குடித்தனமு மாக
அவர்கள் வாழ்ந்தார்கள். இது பொறுக்காமல், மருதன் என்கிற மனு ஷன் என்ன பண்ணினான்
தெரி யுமா? ஒருநாள், நாவல்பழ இளவரசி யின் அறைக்குள் மருதன் புகுந்து கொண்டான்.

அது என்ன நாவல்பழ இளவரசி? நாவல் பழத்துக்கும் அவளுக் கும் என்ன உறவு?
சின்னவனின் குரல் கேட்டுச் சிரித்தான். ஒரு காலத்தில் இந்த தேசம் முழுக்கவும், நாவல் மரமே
அதிகமாக இருந்தது. மதுரைக்குத் தெற்காலும், வட மது ரைக்கு வடக்காலும் எங்கு
பார்த்தா லும் நாவல் மரங்கள். அப்போ எல் லாம் மனுஷன், மரத்தில் ஆந்தை, வௌவால்,
குரங்கு, கரடிகளோடும் வாழ்ந்து இருந்தான். நாவல் பழங்கள் தின்று வாழ்ந்ததால், நாம்
நாவற்பழ நிறத்துக்கு ஆகிவிட்டோம். அது வேறு கதை. இளவரசியின் கண்கள் இரண்டிலும்,
கன்னங்கள் இரண்டி லும், முலைகள் இரண்டிலும், நாவல் பழங்கள், பழுத்து இருந்தன. அத
னால் அந்தப் பெயர்.

`சரி தான்.'

எங்கே விட்டேன்? ஆங். . . அந்த மருதன், இளவரசியின் சயன அறைக் குள்
புகுந்துகொண்டு, மறைந்து இருந்தான். ராத்திரி போஜனம் முடிந்து, வாசனைப் பாக்கு, கிராம்பு,
பத்திரி, ஏலம், கசகசா, கடுக்காய் இத்யாதிகளால் சேர்த்துக் கட்டிய மசாலாக்களால்
வெற்றிலைத் தாம் பூலம் போட்டுச் சிவந்துவிட்டது என்று உதட்டைப் பார்த்துத்
தெரிந்து கொண்டு, இளவரசியும் கார்க்கோட னும் சயன அறைக்குள் புகுந்து, பரஸ் பரம்
லாகிரியோடு எட்டெட்டுக் கரணங்களால் ஆன சையோக போகங்களில் ரச்மித்துக்கொண்டு
கிடக்கையில். . .

`அஃதென்ன எட்டெட்டுக் கர ணம்' என்று சின்னவன் விளங்காமல் வினவ, சிரித்து,
காலக்கிரமத்தில் எல்லாம் புரிய வரும் என்ற பெரிய வன் தொடர்ந்தான்.

இடிச் சத்தம் கேட்டுக் குகை களில் புகுந்து ஒளிவது மாதிரி, இருவ ரும், ஒருவருக்குள்
ஒருவர் பிணைந்து இருக்கையில், வாளை உருவிக் கொண்டு மருதன் கார்க்கோடனை
வெட்டினான். கார்க்கோடன் சாகும் முன்பு, மனிதன் மேல் விஷத்தைப் பாய்ச்சினான்.
இப்போதும்கூட, நாவல்பழ இளவரசி இந்தப் பக்கங் களில்தான் சுற்றித் திரிகிறாள் என்று
பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

நான் பார்த்தது இல்லை என்று பதில் சொன்னான் பெரியவன். ஆனால் அவள் குரலைக்
கேட்டிருக் கிறேன். மரங்களின் கிளைக்குப் பின் னால், இலைகளுக்குப் பின்பக்கத்
தில் அவள் இருந்துகொண்டு சப்த அலைகளை எழுப்பிப் பேசுவாள். வார்த்தைகள் ஒன்றோடு
ஒன்று முடிச்சு போட்டுகஞகொண்டு, வெயில் ஒளிச் சிதறலில் கொசுக்கூட் டம் போல்
பறப்பதை நாம் காண முடியும் . . .
அவர்கள், திடுமென எதிர்ப்பட்ட திறந்த வெளியைக் கடக்க நேர்ந்தது. காற்றில்
நீரின் மணம் கலந்து வந்தது. அழுகிய, சொதசொதத்த, புற் கோரைகள் வீச்சம்,
காற்றில் கரடு தட்டிய சிரங்காய் வீங்கி இருந்தது.

எப்போது நகரத்துக்கு வந்து திரும்பினாலும், இங்குதான் தங்கி, கொண்டு வந்த புளி,
எலுமிச்சைச் சோற்றை நாங்கள் சாப்பிடுவோம் என்று பெரியவன் தன் அனுபவத்தைச்
சொன்னான். சுற்றி விளிம்புகளில் இலைச் சருகுகள், கிளைக் குச்சிகள் மிதக்கும்
ஏரியில் துண்டை விரித்து மீன் பிடிப்போம். நீரில் போட்ட காக்காய்ப் பொன் தாளில்
பட்டுப் பளீரிட்டுச் சிலிர்க்கும். கிழிந்த காகித மீன்கள் படகின் வயிற்றுக்
குழியாய் உருக்கொண்ட துண்டுகள் வந்து விழும். சுள்ளியைக் கொளுத்தி, சின்னச்
சின்னப் பொட்டலங்களில் கொண்டு வந்த உப்பு மிளகாய்த் தூளைத் தூவி, சூடு ஆவி பறக்கத்
தின்போம். உதடுகளில் புகையும் ஆவி. மீன்களில் மூச்சுக் காற்று.

`அண்ணே. நூறு முறைக்கு மேலா, இங்க வந்திருப்பீங்க, போல?'

சிரிப்பைப் பதிலாகத் தந்தான் பெரியவன். தலை விரித்துக் கிடந்த பேய்
மரத்தின் கீழ்ப் போய் உட் கார்ந்தான் பெரியவன்.

`நீங்க மட்டும் வரலைன்னா, அந்த தேவடியாப் பையன் பணம் தந்திருக்க மாட்டான்.'
அனிச்சையாக மடியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான் சின்னவன். கத்தைப் பணம்,
தொப்புளுக்கும் கீழே மடிந்து மேடிட்டுக் கிடந்தது.

எத்தனை வாட்டி என்னை இழுத்தடித்தான்? பத்திரம் செல் லாது என்றான். அறுவடை முடியட்
டும் என்றான். தை பிறக்கட்டும் என்றான். பொண்ணு கல்யாணம் வச்சாச்சு என்றான்.
கடைசியில் அண்ணண் வந்து கிண்ணென்று நின்றதும்தான் பணம் தலைகாட்டி யது.

`அண்ணே, வச்ச நிலத்தை மீக்கணும்.'

பெரியவன், ஆம் என்பது போலத் தலை அசைத்தான். அவன் கண்முன் நிகழ்ச்சிகள்
விரிந்தன. குடும்பம் தலை நிமிர்கிறது. சின்ன வனுக்குக் கல்யாணம் ஆகிறது.

``அத்தை மவ வேற காத்திருக்கா.''

சின்னவன் விரலால் தரையில் எதையோ எழுதி அழித்தான். அரைத்த உளுந்து வாசனை
வீசும் அவள் மேல் படுத்துக் கிடக்கிறான் சின்னவன். நாவல்பழ இளவரசி மேல் சின்னவன்
படுத்துக் கிடந் தான். மூச்சை உள்ளிழுத்துப் பழங் கள் பருத்துப் பெரிசாயின.
    அவர்கள் இருட்டும் முன்பு, காட்டைக் கடந்தாக வேண்டும். சதுப்பு நிலம் போன்று தரை கால் உள்வாங்கியது. ஆபத்தான வெளி. சருகுகள், குப்பைகள் மூடி, மண் ணின் முகம் மறைந்து கிடந்தது. அங்கிருந்த மரத்தின் பருத்த கிளையை ஒடித்து எடுத்தான் பெரியவன். அந்தக் கொம்பால் தரையை ஊன்றித் தடம் பார்த்து முன்னே நடந்தான். பெரியவன் வைத்த கால டிக்கு மேல் தன் அடியை வைத்து ஜாக்கிரதையாக நடந்து சென்றான் சின்னவன். சதுப்பு நிலத்தைத் தாண்டிக் கட்டாந்தரையைக் கடக் கையில், சுகந்தமான முல்லை மணம் அவர்களைச் சுருட்டி மூடியது. பெரியவன், மார்பு கொண்ட மட் டும் மூச்சை இழுத்து உள்ளே ஸ்தம்பம் பண்ணியதைச் சின்னவன் பார்த்தான்.

அடுத்த ரெண்டு கல்லும் முல்லைக்காடுதான். கார்கோடன், அதன் சந்ததியர் படுத்துக்
கிடக்கும். ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கு மாய்க் காணும். என்னத்துக்கு ஓய்வு என்றால்
சண்டை போட்ட களைப்பு தான். பல காலங்களுக்கு முன்னால் கிருஷ்ணனும் அர்ஜுனனும்
அவர் கள் பந்துமித்திரர்களோடு கார் கோடன் வம்சத்தாரோடு சண் டைக்கு வந்தார்கள்.
காண்டவ வனம் உள்ளிட்ட பூமியின் பரவலில் சொந்தம் கொண்டாடுவது கிருஷ் ணன்,
அர்ஜுனரின் நோக்கமாக இருந்தது. கார்கோடன், மலையின் உச்சியில் ஏறி நின்றுகொண்டு
சொன்னான். இந்த மலைபோல் லட்சம் கோடி மலைகள் தேய்ந்து தேய்ந்து மண் ஆன கல்ப
கோடி வருஷங்களாக நாங்கள்தான் இங்கே குடி இருக்கிறோம். இது எங்கள் பூமி.
என்றாலும் யாரும் அவன் பேச்சைப் பொருட்படுத்துவதாக இல்லை. சண்டை பல ஊழிகள்
தொடர்ந்தது. இன்னும்தான். சண் டைக்குள்ளாகச் சற்றே ஓய்வு கொள் கிறான் கார்கோடன்.

அவர்கள் முல்லைக் காட்டைக் கடந்துகொண்டிருந்தார்கள். முல்லைச் செடிகள்
மரம்போல், அங்காந்து பார்க்க வைத்தன.

`இதேது. ஆச்சரியமாய்த் தோணுதே.'

ஆச்சர்யம் ஏதும் இல்லை. யோசிக்கையில் ஆச்சர்யம் என்று ஏதும் இல்லை. எதுவும்
உள்ளது தான். நாம்தான் பார்ப்பது இல்லை. அந்தக் காலத்தில், ஏன், இப்போதும்
தான் இந்த இடத்தில் கொள்ளைக் காரர்கள் பதுங்கிக் கிடப்பார்கள். ஆறலைக் கள்வர்
என்பது அவர்கள் பெயர். பாலைச்சுரத்து வாழ்பவர் கள். இந்தப் பக்கம் போகும்
பயணி களை மருட்டி இருப்பதைப் பிடுங்கு வார்கள். இப்படித்தான், ஒரு சமயம், கல்யாணப்
பெண்ணையும் அவள் சொந்த பந்தங்களுடன் இந்த வழி யாகக் கூட்டிப் போய்க்கொண்டிருந்
தோம். காவல்காரர்களில் நானும் ஒருவன். அந்தி சாயும்போதுதான் இந்த முல்லைக்
காட்டைக் கடந் தோம். இருட்டும், பயமும், சீக்கிரம் ஊருக்குப் போய்விட வேண்டும்
என்ற தவிப்பும் எல்லோருடைய பைகளிலும் பெட்டிகளிலும் நிரம்பி வழிந்தன. வழியில்,
விதவிதமான புதுசான சத்தங்களை நான் கேட் டேன். இவை காட்டின் சத்தம் இல்லை.
எனக்குத் தோன்றியது. இது சத்தம் அல்ல. சமிக்ஞை. மரங்களின் உச்சந்தலையைக்
கவனித்தேன். உச்சந்தலையில் கட்டின ரிப்பனைப் போல, மனித உடம்புகள் தெரிந்தன.
வேல்க் கம்பியை எறிந்து ஒருத்தனை வீழ்த்தினேன். திபுதிபு என்று திருடர் கள் எங்களைச்
சூழ்ந்துகொண்டார் கள். நான் கம்பைச் சுழற்றினேன்.

பெரியவன், தன் கையில் இருந்த கம்பைச் சுற்றத் தொடங்கினான். அவன் காவலாளி.
கல்யாணப் பெண்ணைக் காப்பாற்றும் கடமை சாலி. அவன் ஏந்திய கம்பு, முனை வளர்ந்து,
நீண்டு, நெளிந்தது. பாம் பின் பிளந்த நாக்கு நெளிந்து நெளிந்து, கம்பு
கீழிறங்கும் போதெல் லாம், ஒருவன் சுருண்டு வீழ்ந்தான். கார்கோடனின் நாக்கு. விஷம்
கொட்டிவைத்த சால். அவன் வைத்த கால்த் தடங்களில் நெருப்புக் கனல் தெறித்தது. பூமி
வாய்பிளந்து புகையை உமிழ்ந்தது. கம்பு, வானத் துக்கும் பூமிக்குமாக எம்பி எம்பித்
தாழ்ந்தது. பெரியவன் ஒரு நாழிகை தரையில் கால்பதியாதவனாக அந்த ரத்தில் வீடு
கட்டிச் சுற்றி வந்தான். அவன் வெற்று உடம்பில் தாரை தாரையாக வியர்வையும் ரத்தமும்
வழிந்தது. தரையில் விழும் சொட்டு களை கார்கோடன் வம்சத்தார் நக்கிக்
குடிப்பதைச் சின்னவன் பார்த்து நடுங்கினான்.

போதும் போதும் என்று கத்த வாய் திறந்தான். பேச்சுக் காற்றாய் வழிந்தது. அவன்
கண்களின் கருவிழி கள், மேல் அரைவட்ட விளிம்பில் மறைந்தன.
பெரியவன் ஏந்திய கம்பு, கிளை களாய் கிளைத்தன. மரத்தை ஏந்திய வனாய் அவன்
இருந்தான். பல வான். எட்டுத் திக்கிலும் மரம், கீழ் இறங்கியது. ஒவ்வொரு திசையிலும்
அது தரைக்கு வந்தபோது அலறல் கள் கேட்டன. யானைகள் பிளிறின. குதிரைகள் கனைத்து
விழுந்தன. வீரர்கள் ஊளையிட்டார்கள். எட் டாம் திசைக்கு மரம் இறங்கிய போது,
அது, சின்னவன் தலையில் இறங்கியது.

பெரியவன் ஓய்ந்தான். கம்பைத் தரையில் ஊன்றி நின்றான். நிதானப் பட வெகு
நேரம் ஆனது. தரையைப் பார்த்தான். ரத்தக் குழம்பில், சின்ன வன் மிதந்தான்.
பெரியவன், கம்பை எறிந்தான். நிதானமாகச் சின்னவன் பக்கத்தில் குத்துக் காலிட்டு
அமர்ந் தான். அவன் இடுப்புப் பக்கத்தில் தடவி, ரூபாய் நோட்டுகளை எடுத் தான்.
மடியில் சொருகிக் கொண் டான்.

காட்டைக் கடக்கத் தொடங்கினான்

Oct 2, 2010

அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்

அப்பாவிடம் ஒரு பட்டு வேஷ்டி இருந்தது. அப்பாவிடம் வெண்பட்டும், பொன்னிறப் பட்டு வேஷ்டிகளும் நிறைய இருந்தாலும் கூட, குழந்தைகளாகிய எங்களுக்கு அவருடைய சிவப்புப் பட்டு வேஷ்டியே அற்புதமானதாகத் தோன்றியது.
சிவப்பென்றால் சுத்தச் சிவப்பும் இல்லை. குங்கும வண்ணமும் இல்லை. செப்புப் பாத்திரத்தைப் Prabanchan புளிபோட்டு விளக்கிப் படிக் கல்லில் வைத்து விட்டுக் குளிப்பார்களே. அப்போது பார்த்திருக்கிறீர்களா? நீங்கள்! உதயகாலத்துச் சூரிய ரேகைகள் பட்டுத் தகதகக்குமே, அந்தச் செப்புப் பாத்திரம் - அது மாதிரியான வேஷ்டி அது.
முழுதும் செப்புக் கலரும் இல்லை. கரை பச்சை நிறம். நாலுவிரல் அகலம். கரையில் சரிகை வேலைப்பாடுகள். சரிகை வேலைப்பாடு என்ன என்கிறீர்கள்? வாத்துகள் ஒன்றன்பின் ஒன்றாய் அணிவகுத்துச் செல்கிற சித்திரம். அவை வாத்துகள் அல்ல; அன்னப்பறவைகள் என்றாள், அம்மா. நாங்கள் அன்னப்பறவைகளை நிறத்தில் பார்த்ததில்லை. அந்த வேஷ்டியின் கரையில்தான் பார்த்திருக்கிறோம். எதுவானால்தான் என்ன? உயிருள்ள ஜீவராசிகள்.
அந்த வேஷ்டி சாதாரணமாகக் கண்களில் காணக் கிடைப்பதில்லை. அப்பா, அதை அவருடைய ஆளுயர, மிக அகலமான அலமாரியில் வைத்திருப்பார். அந்த மாதிரி அலமாரிகள் எல்லாம் இப்போது கிடைப்பதில்லை. ஒற்றை ஆள் அகலம்தானே இப்போதைய அலமாரிகள். அதுவோ மூன்று அலமாரிகளை பக்கம் பக்கமாக நிறுத்தி வைத்ததுபோல் இருக்கும்.
அப்பா அலமாரியில் இருந்து, அதை எடுக்கப்போகும் நேரம் எங்களுக்குத் தெரியும். எனக்கும் என் தங்கை ராஜேஸ்வரிக்கும். பண்டிகை, மற்றும் தாத்தாவுக்கு தெவஷம் முதலான நாட்களில்தான் அது வெளிவரும். அந்த நாட்கள்தான் எங்களுக்கு முந்தியே சொல்லப்பட்டிருக்குமே! அப்பா குளித்துவிட்டு வந்து அந்த வேஷ்டியைத்தான் எடுத்து உடுத்துவார். அப்பா எப்போது குளித்து விட்டு வருவார் என்று தவம் கிடப்போம், அலமாரிக்கு முன்னால்.
அப்பாவுக்குக் குளிக்க ஒரு மணி நேரம் அவசியப்படும். அநியாயத்துக்கு ஏன் அவர் தாமதம் பண்ணுகிறார் என்று இருக்கும். அது குழந்தைப் பருவம். கேள்விகளால் மட்டுமே ஆன பருவம். இப்போது தெரிகிறது. குளிப்பது அழுக்குப் போகவா? அழுக்குப் போகக் குளித்தது யார்? குளிப்பது ஒரு சுகம். உச்சந்தலையில் விழுந்த குளிர்ச்சி வழிந்து வழிந்து பாதத்துக்கு வருகிற இன்பத்துக்குத் தானே குளிப்பது... குளித்த பின் ஏற்படுகிற புத்துணர்ச்சிக்குத்தானே குளிப்பது? அப்பா ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டது நியாயம் என்றே தோன்றுகிறது.
சரி! குளித்ததும் சட்டுப் புட்டென்று வந்து வேஷ்டியை எடுப்பார் என்றா நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. குளித்தும், கோமணத்தோடு வாசலுக்கு வந்து நின்று விடுவார். ஈரத்தைப் பாதி தானும், மீதி சூரியனும் துடைக்க வேணும். நாங்கள் அப்பாவையே பார்த்துக் கொண்டு இருப்போம். நீர் முத்துக்கள் அவர் முதுகில் கோடு கிழித்துக் கொண்டு இறங்குவதைப் பார்க்க வியப்பாய் இருக்கும். அவர் முதுகே ஒரு பெரிய தாமரை இலையாகவும், நீர்த்துளிகள் முத்துக்களாகவும் தோணும். நிதானமாகவும், அங்குலம் அங்குலமாகவும் துடைத்து ஈரம் போக்குவார். அப்பாவின் உடம்பு சிவந்து போய்விடும். ஏற்கனவே அவர் சிவப்பு. குளித்தபின், உடம்பு பழுத்துவிட்டது மாதிரி இருக்கும்.
‘மணியாகுது.. சீக்கிரம் வந்து படைச்சா என்ன?’ என்பாள் அம்மா. இதைக் கோபமாகவும் குற்றச்சாட்டாகவும் சொல்வாள் என்கிறீர்களா! இல்லை! இன்னும் கொஞ்ச நேரம்தான் ஆகட்டுமே என்று அப்பாவைத் தட்டிக் கொடுப்பதுபோல் இருக்கும். கூரை எரவானத்தில் ஒரு கையை வைத்துக் குனிந்து, வாசலில் நிற்கும் அப்பாவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு அம்மா இதைச் சொல்கையில் எங்களுக்குக் கோபம் கோபமாய் வரும்.
அப்பாடா! ஆச்சு... ஒரு வழியாகக் குளித்து முடித்துத் துவட்டிய துண்டை இடையில் கட்டிக்கொண்டு, கோமணத்தை உருவிப் பிழிந்து, பத்துத் தடவை ஈரத் தூசி பறக்க உதறி உதறி வாசலில் கட்டியிருக்கும் கொடியில் காயப்போடுவார். அது காற்றில் பறந்து விடாமல் இருக்க, முனைகள் இரண்டையும் பிடித்து முடிச்சுப் போடுவார். அப்புறம் தலைமுடியை, தலையைக் கவிழ்த்துத் தட்டித் தட்டி ஈரம் போக்குவார். தெறிக்கும் நீர்த்தூசுகள், சின்னஞ் சிறு கொசுக் கூட்டம் மாதிரி இருக்கும்.
அப்புறம் கூடத்துக்கு வருவார், அப்பா. சடாரென்று வந்தால் தேவலையே! அதுதான் இல்லை. கூடத்து மிதியடியில் காலை இப்படி அப்படிப் புரட்டிப் புரட்டி நன்கு மணல், மண்போகத் துடைப்பார். காலில் ஒரு துளி அழுக்கு இருக்காது. அழுக்கு அவரது ஜென்மப் பகை ஆச்சே! எங்களுக்குத் தெரியுமே. அப்புறம்தான் அலமாரியைத் திறப்பார், அப்பா.
அந்தக் கணம் ஓர் அபூர்வமான கணம். கதவைத் திறந்ததும், குபீரென்று பச்சைக் கற்பூர வாசனை வந்து தாக்குமே, சிலிர்க்க அடிக்குமே உடம்பை, அந்தக் கணம் அதற்காகத்தானே காத்திருக்கிறோம். இத்தனை நாழி காத்திருக்கிறோம். நாங்கள் மூக்கு, வாய் இரண்டையும், கரை மீன் திறப்பது போலத் திறந்து திறந்து மூடி அந்த வாசனையை அனுபவிப்போம். அலமாரிக்குள் ஒரு சின்ன ஜாதிக்காய் பெட்டி வைத்திருப்பார். அந்தப் பெட்டிக்குள் என்ன இருக்கும்? ஒருநாள், ’அப்பா... அப்பா... அந்தப்  பெட்டியை எனக்குக் காட்டுப்பா!’ என்றேன். அப்பா சிரித்துக்கொண்டே என்னைத் தூக்கிப் பெட்டியண்டைக் காட்டினார். ஒரு வெள்ளைத் துண்டில் சுற்றி வைக்கப்பட்ட வேஷ்டி, சுருள் சுருளாகச் சுற்றி வைக்கப்பட்ட காகிதம், (பத்திரங்கள் என்று பின் நாளில் தெரிந்து கொண்டேன்) ராணி, ராஜா படம் போட்டு நோட்டுகள், தங்கக் காசுகள், அப்பாவுடைய சிவப்புக்கல், வெள்ளைக்கல் மோதிரங்கள் எல்லாம் இருந்தன. ராஜி பொறுத்துக் கொள்வாளா என்ன? ’நானும் பார்க்கணும்பா...’ என்றாள். அப்பா அவளையும் பெட்டித் தரிசனம் பண்ணி வைத்தார்.
அப்பா இப்போது அந்தப் பெட்டியைத் திறந்தார். ஜாக்கிரதையாக அந்தச் சிவப்பு வேஷ்டியை எடுத்துக்கொண்டு அறைக்குள் போனார். துவைத்துக் காயப்போட்ட அன்டிராயர்கள் அப்பா அறையில், கொடியில் தொங்கும். அவைதாம் எவ்வளவு பெரியவை! ஒன்றை வெட்டி ராஜிக்கு பாவாடையும், சட்டையும் தைக்கலாம் என்று இருக்கும். அப்பா முட்டிவரை நீளும். அந்த அன்டிராயரைப் போட்டுக்கொண்டு, அதன் மேல் வேஷ்டியைக் கட்டிக் கொண்டால் தான் அப்பாவுக்கு நிற்கும்!
அப்பா வேஷ்டியைக் கட்டிகொண்டு வெளியே வருவார். அடடா... நெருப்பைச் சுற்றிக்கொண்டு  வருவதுபோல் அல்லவா இருக்கும். அந்த வேஷ்டியில் தான் அப்பா எவ்வளவு அழகாகத் தெரிந்தார். அவரால் அந்த வேஷ்டிக்கு மகிமையா, அல்லது அந்த வேஷ்டியாலா? அப்பாவை அப்போது கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருக்கும். கட்டிக் கொள்வேன். பச்சைக் கற்பூரத்தின் வாசனையோடு, அந்தப் பட்டு சில்லென்று குளிர்ச்சியாய், பாப்பாவின் கன்னம்போல மிருதுவாய் இருக்கும். அதைத் தடவித் தடவிச் சந்தோஷம் கொள்வேன்.
அந்த வேஷ்டியோடுதான் பண்டிகை மற்றும் விசேச நாட்களில், தெவஷத்தின்போது அப்பா பூஜை எல்லாம் செய்வார். பூஜை என்றாலே எனக்கு நினைவில் நிற்பவை இரண்டு விஷயங்கள்தாம். ஒன்று சாப்பாடும் அன்றைக்கு சீக்கிரம் ஆகாது, தாமதம்  ஆகும்.  வடை, பாயசம் என்று பட்டியல் நீள்வதால் அப்படி. ரெண்டாவது, அந்த நாட்களில் இனிப்புப் பட்சணங்கள் கட்டாயம் இருக்கும். தவிர சொந்தக்காரர்கள் நிறையப்பேர் வருவார்கள். மரம் ஏறிய கையோடு குடுக்கையும், வடமுமாகச் சிலர் வருவார்கள். தென்னை மரத்தைத் தேய்த்து ஏறிய காரணமாகவும், கள்ளுக்குப் பானை சீவியதன் காரணமாகவும், அவர்கள் மேல் கள்நெடி அடிக்கும். கள் வாசனை, பூவைப்போலவே நல்ல வாசனைதான். சாப்பிட உட்காருவதற்காகக் குடுக்கையைச் சுவர் ஓரம் சாய்த்து வைப்பார்கள். அதில் உள்ள அரிவாளின் பளபளப்பு என்னைக் கவர்ந்த ஒன்று. அதைக் கையில் எடுத்துப் பார்க்கும் தைரியம்தான் இன்று வரை ஏற்படவில்லை. அந்த அரிவாளின் கூர்மையும் பட்டின் பளபளப்பும் சமம்.
இளமைக்காலத்தில் எனக்குள் ஒரு லட்சியம்தான். பெரியவர்கள், ‘நீ பெரியவன் ஆனதும் என்ன செய்யப் போகிறாய்?’ என்று  கேட்பார்கள். டக்கென்று பதில் சொல்வேன். ‘நான் டாக்டராவேன்’ - இல்லையெனில், ‘நான் இன்ஜீனியர் ஆவேன்’ என்று சமயத்தில் ஞாபகத்துக்கு வந்ததைச் சொல்வேன். கேட்டவர்கள் திகைத்துப் புருவத்தை மேலே உயர்த்தி என்னைப் பார்ப்பார்கள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெருமை நிலை கொள்ளாது.
ஆனால், இந்த டாக்டர் பெருமையும், இன்ஜினீயர் பெருமையும் என் மனசுக்குள் இல்லை. பெரியவர்களுக்கு முன் நான் பொய்தான் சொன்னேன். இந்தப் பொய் ரசிக்கத்தக்க பொய். பெரியவர்கள் துண்டமாக்கிக் கொடுத்திருந்த இதை அவர்களிடமே திரும்பவும் நான் வீசினேன். சந்தோஷமாக வாலை ஆட்டிக் கொண்டு அவர்கள் அதை விழுங்கிக் கொண்டார்கள்.
இதைச் சொல்ல வெட்கம் என்ன? எனக்குப் பெரியவன் ஆனதும் அப்பாவின் வேஷ்டியைக் கட்டிக் கொள்ளவேண்டும்! இதுவே என் லட்சியமாக இருந்தது. நான் பெரியவன் ஆக ஆசைப்பட்டது இதற்காகத்தான். பெரியவன் ஆனால் அப்பாவைப் போல மீசை முளைக்குமே! மார்பில் சுருள் சுருளாக முடி முளைக்குமே.. முக்கியமான விசேஷ நாட்களில், அந்தச் சிவப்புப் பட்டு வேஷ்டியைக் கட்டிக்கொண்டு நான் சாமி கும்பிடுவேனே... நான் பெரியவன் ஆக வேண்டுமே!
மடித்தே வைக்கப்பட்டுக் கிடந்ததால், அந்த வேஷ்டி எப்போதும் மடிப்புக் குலையாமல் இருக்கும். மடிப்புகள் பிரிக்க முடியாதனவாக இருக்கும். கடைசி வரை அன்னங்கள் முழுமையாகவே இருந்தன. சரிகைக்கரை இற்று விழவில்லை. நெசவு நேர்த்தி அப்படி. அது  அந்தக் காலத்துக் கை வேலைத் திறன். அவசர வாகன யுகம் தோன்று முன்பே தோன்றிய ஒரு நெசவுக் கலைஞனின் கை நேர்த்தி அப்படி உருவாகி இருந்தது. ‘இதை எங்கு வாங்கியது?’ என்று அப்பாவிடம் கேட்டு வைத்துக் கொள்ளவில்லை நான். காவிரிக்கரையில், சோற்றுக்குப் பஞ்சம் இல்லாத, வெற்றிலை பாக்குப் போட்டு சிவந்த வாயுடன், உடம்பில் இளஞ்சூடு பரவிய திருப்தியில் ஒரு மனிதன் தன் மனைவியோடு சேர்ந்து நெய்த வேஷ்டியாக இது இருக்க வேண்டும். மாயவரம், கூரைநாடு, திருபுவனம் என்று ஏதாவது ஒன்றாய் இருக்கக் கூடும். பிறப்பிடம், மூலம் எதானால் என்ன? பிறந்த பயனை? கர்மாவைக் குறைவற, பரிபூரணமாகச் செய்தது அது என்பது சத்தியம்.
எனக்குக் கல்யாணங்களுக்குப் போவதில் அந்தக் காலத்தில் பெருத்த ஆர்வம் இருந்தது. காரணம் இதுதான். மாப்பிள்ளை பட்டுடுத்திக் கொண்டு இருப்பார். பட்டு வேஷ்டியைப் பார்ப்பதே இன்பமான அனுபவமாக இருக்கும். எத்தனை, எத்தனை வகையான பட்டுடுத்திப் பெண்கள் கல்யாணங்களுக்கு வருகிறார்கள்! பட்டுப் புடவைகளை வைத்துக்கொண்டு கல்யாணங்களுக்கு ஏங்குகிறார்கள் பெண்கள். கல்யாணங்களே உலகில் இல்லாது போனால், இந்தப் பெண்கள் கண்ணீர் வடிப்பார்கள். பட்டுடுத்தி யாரிடம் காட்டிப் பரவசப் பட்டுக் கொள்வது?
என் கனவுகள் கூட அந்தக் காலத்தில் பட்டாய் இருந்தன. கனவுகளில் அன்னப்பறவைகள் அணிவகுத்து வரும். ஆகாயம் செம்புக் கலரில், கத்தியாய் மின்னும். அந்தச் செம்பு ஆகாயத்தின் ஊடே, பச்சை நிறத்தில் ஒரு நீளமான ஆறு. அந்த ஆற்றில் அந்த அன்னங்கள் நீந்தின.
அந்த வேஷ்டியை அப்பா துவைத்து நான் இரண்டு முறை பார்த்திருக்கிறேன். குழந்தைப் பாப்பாவைக் குளிப்பாட்டுவது மாதிரி இருக்குமே! அதற்குச் சுடு தண்ணீர் ஆகாது. பச்சைத் தண்ணீரில் தான் அதைக் குளிப்பாட்டுவார். சவுக்காரம் அதற்கு ஆகாதாம். ஆகவே சந்தன சோப்பைத்தான் அப்பா உபயோகிப்பார். அப்பா குளித்தது மைசூர் சந்தன சோப்பில். அதற்கும் முந்தி கதம்ப சோப்பில். பிரான்சில் இருந்து வந்த கதம் சோப். நாங்கள் கதம்ப சோப் என்போம். இறக்குமதி நின்று போனவுடன் மைசூர்ச் சந்தன சோப். அதைத்தான் இதற்கும் போடுவார். சோப் போடுவது தடவிக் கொடுப்பது மாதிரி இருக்கும். அம்மா எங்களுக்கு எண்ணெய் தேய்த்து விடுகிற முரட்டுத் தனம் இருக்காது. அவ்வளவு மெது. கசக்கிப் பிழிய மாட்டார். மெதுவாக நீரில், அகலவாக்கில் வேஷ்டியின் முனைகளைப் பிடித்துக்கொண்டு அலசுவார். பிறகு,  தண்ணீர்த் துளி எங்கள் மேல் தெறிக்க, உதறுவார். ரொம்பவும் உதறக்கூடாது. நாள்பட்ட துணி, கிழித்துவிடக் கூடும். உதறும்போது. மழைச் சாரலில் நிற்பதுபோல் இருக்கும், எங்களுக்கு. அப்புறம் நிழலில் காயப்போடுவார். வெயில் பட்டால் நிறம் வெளுக்கக்கூடும். காய்ந்ததும் அப்பாவுக்குச் சொல்ல வேண்டியது எங்கள் பொறுப்பு. நாங்கள் மாற்றி மாற்றி அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு முறை துணியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே இருப்போம். காய்ந்து விட்டதா என்று பார்ப்பதற்காகத்தான். எங்களுக்கு இது ஒரு சாக்கு. அந்தச் சாக்கில் வேஷ்டியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே இருக்கலாமே!
சாயங்காலம் வாக்கில் வேஷ்டி காய்ந்து விட்டிருக்கும். அப்பாவிடம் சொல்ல ஓடுவோம். அப்பாவே வந்து, நிதானமாக அதைக் கொடியில் இருந்து எடுத்து, மூலை பிசிறில்லாமல் இழுத்து மடித்து, மீண்டும் அந்தப் பெட்டிக்குள் வைத்துவிடுவார். இனி அதன் உபயோகம் அடுத்த நல்ல நாளில்தான்.
நாளடைவில் எனக்குல் மீசை முளைத்தது. ஒரு சிநேகிதனின் சகோதரிக்கு லவ் லட்டரும் கொடுத்தேன். உதை வாங்கினேன். நியாயம் தானே! அப்புறம் கல்லூரிக்குச் சென்றேன். என்னமோ படித்தேன். என் மூளையை ஆக்கிரமித்துக் கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருந்தன.
என் கவனத்தைக் கவர எவ்வளவோ நிகழ்ச்சிகள், நடப்புகள், உலகம் ஜீவத் துடிப்போடு ஒவ்வொரு கணமும் அல்லவா பிறந்து இறந்து,  தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. என் மனசில்தான் எத்தனை ஆவாகனங்கள்.... கம்பன்; கதை சொல்லிகள்; கொடி மரத்து மூலை வக்கீல் ஜெகந்நாதையர் மகள் உமா மகேஸ்வரி எல்லோரும் சேர்ந்து என்னை உருமாற்றி அடித்து விட்டார்களே, கம்பியை நகையாக்குவது போல...! இடையிடையே அந்தச் செப்புப் பட்டு வேஷ்டியும் என் நினைவில் ஆடும். நீ எங்கு, எவ்வாறு இருக்கிறாய்?
அதைப் போற்றிக் கொண்டாடி, பயன் துய்க்க அப்பா இல்லை. பெட்டியுள் இருக்கும் பாம்பென உயிர்த்துக் கொண்டிருக்கும் அது என்பது எனக்குத் தெரியும். ஆண்டுகள் பல கழிந்து சொந்த ஊருக்கு வந்தபோது ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
அப்போது விநாயக சதுர்த்தி வந்தது. நன்றாக நினைவு இருக்கிறது. ராஜி, கல்யாணம் செய்துகொண்டு போய்விட்டிருந்தாள். நான்தான் பிள்ளையார் வாங்கி வந்தேன். அச்சுப் பிள்ளையார்தான். மூக்கும், முழியும் கன கச்சிதம். இந்தச் சாமிதான் என்ன அழகான கற்பனை! என்னையே படைக்கச் சொன்னாள், அம்மா.
மனசுக்குள் ஒரு படபடப்பே எனக்கு ஏற்பட்டுவிட்டது. அந்தப் பெட்டிக்குள் இருக்கும் வேஷ்டியை நினைத்துத்தான். சுய நினைவின்றித்தான் குளித்தேன். ஈரம் போகாமல் துவட்டிக்கொண்டு, அப்பாவின் அலமாரியைத் திறந்தேன். அந்தப் பச்சைக்கற்பூர வாசனை இன்னும் இருந்தது. வாசனை போகாது போலும்! அனுபவித்தேன். உடன் ராஜி இல்லையே என்று வருத்தமாய் இருந்தது. ஜாக்கிரதையாகப் பெட்டியையும் திறந்தேன். அப்பாவின் மோதிரங்களைத் தவிர மற்றவை அனைத்தும் அங்கு இருந்தன. மோதிரங்கள், என் கல்லூரிக் கட்டணமாகவும், சாப்பாட்டுச் செலவாகவும் ஏற்கனவே மாற்றம் அடைந்திருந்தன.
வேஷ்டியை வெளியே எடுத்தேன். அதன் மேல் சுற்றிய துண்டை நீக்கினேன். அதே குழந்தையின் மென்மை. அதே கத்தியின் பளபளப்பு. அதே வாசனை. கொஞ்சம் கூட நிறம் மங்கல் இல்லை.
இடுப்பில் சுற்றிக் கொண்டேன். மனசு அப்பாவை நினைத்துக் கொண்டது. மயிர்க் கால்கள் குத்திட்டு நின்றன. வாழை இலையைச் சுற்றிக் கொண்டது போல் இருந்தது. அவ்வளவு மழமழப்பு.
மனைப் பலகையை எடுத்துப் போட்டுக்கொண்டு பிள்ளையாருக்கு முன் அமர்ந்தேன். ஓர் ஓசை, முனகலோடு வேஷ்டி உயிரை விட்டது. என் பின் பக்கத்து மடிப்புகள் தோறும் நீளம் நீளமாகக் கிழிந்திருந்தது. எழுந்து நின்று கொண்டேன். இருட்டில் குழந்தையின் கையை மிதித்து விட்டாற்போல் இருந்தது.
அடுப்பங்கரையிலிருந்து அம்மா, கொழுக்கட்டைப் பாத்திரத்தோடு வந்தாள்.
”என்னடா, கிழிஞ்சு போச்சா... போவட்டும்... அப்பா காலத்து வேஷ்டி! உனக்கு எப்படி உழைக்கும்.... போயி, உன் வேஷ்டியைக் கட்டிக்கிட்டு வந்து காரியத்தைப் பாரு!” என்றாள் அம்மா.
நான் என் டெரிகாட்டன் வேஷ்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு, பிள்ளையாருக்கு முன் உட்கார்ந்தேன். டெரிகாட்டன் வேஷ்டிதான் எனக்குச் சரி என்று பட்டது. ஆனாலும் மனசுக்குள் எங்கோ வருத்தமாகத்தான் இருந்தது.

தட்டச்சு : சென்ஷி

Sep 4, 2010

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம்.
"எந்த அற்புத மரி?" என்றேன் நான்.
"இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்."
prabanjan22 தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான்.
"என்னத்துக்கு சார் டி.சி?"
"என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?"
"ஆமாம். அப்பப்போ இஷ்டப்பட்டால், ஏதோ எனக்கு தயவு பண்ணுகிற மாதிரி கிளாசுக்கு வரும். போகும்."
"உம். நீரே சொல்கிறீர் பாரும்." என்று சொல்லிவிட்டு இரண்டாள் சேர்ந்து தூக்க வேண்டிய வருகைப் பதிவு ரிஜிஸ்டரையும், இன்னும் இரண்டு மூன்று ஃபைலையும் தூக்கி என் முன் போட்டார்.
"பாரும். நீரே பாரும். போன ஆறு மாச காலத்திலே எண்ணிப் பன்னிரண்டே நாள் தான் ஸ்கூலுக்கு வந்திருக்கிறாள். வீட்டுக்கும் மாசம் ஒரு கடிதம் எழுதிப் போட்டுக் கொண்டுதான் இருக்கேன். ஒரு பூச்சி, புழு இப்படி எட்டிப் பார்த்து, அந்த கடுதாசிபோட்ட கம்மனாட்டி யாருன்னு கேட்டுச்சா? ஊகூம். சர்தான் போடா நீயுமாச்சு உன் கடுதாசியுமாச்சுன்னு இருக்கா அவள். சரி ஏதாச்சும் மெடிக்கல் சர்டிபிகேட் கேட்டு வாங்கிச்சேர்த்துக்கலாம்னா, வந்தால்ல தேவலாம். நம்ம டி.இ.ஓ மாதிரியில்ல ஸ்கூலுக்கு இஷ்டப்பட்டால் வருகிறாள். வந்தாலும் ஸ்டூடண்ட் மாதிரியா வர்றாள்? சே…சே…சே… என் வாயாலே அத எப்படிச் சொல்றது? ஒரு பிரஞ்சு சைக்கிள்ளே, கன்னுக்குட்டி மேலே உட்கார்ந்து வர்ற மாதிரி பாண்ட் போட்டுக் கொண்டு வர்றாள். பாண்டுங்காணும்… பாண்ட்! என்ன மாதிரி பாண்ட்டுங்கறீர்? அப்படியே 'சிக்'குன்னு பிடிச்சிக்கிட்டு, போட்டோவுக்கு சட்டம் போட்ட மாதிரி, அதது பட்பட்டுன்னு தெறிச்சுடுமோன்னு நமக்கெல்லாம் பீதியை ஏற்படுத்தற மாதிரி டிரஸ் பண்ணிட்டு வர்றாள். சட்டை போடறாளே, மேலே என்னத்துகுங்காணும் இரண்டு பட்டனை அவுத்துவிட்டுட்டு வர்றது? அது மேலே சீயான்பாம்பு மாதிரி ஒரு செயின். காத்தாடி வால் மாதிரி அது அங்கிட்டும் இங்கிட்டும் வளைஞ்சு வளைஞ்சு ஆடறது. கூட இத்தினி பசங்க படிக்கறாங்களேன்னு கொஞ்சமாச்சும் உடம்பிலே வெக்கம் வேணாம்? இந்த இழவெடுத்த ஸ்கூல்லே ஒரு யூனிபார்ம், ஒரு ஒழுங்கு, ஒரு மண்ணாங்கட்டி, ஒரு தெருப்புழுதி ஒன்றும் கிடையாது. எனக்கு தெரியுங்காணும்… நீர் அதையெல்லாம் ரசிச்சிருப்பீர்!"
"சார்…"
"ஓய் சும்மா இருங்காணும். நாப்பது வருஷம் இதுல குப்பை கொட்டியாச்சு. ஐ நோ ஹ்யூமன் சைக்காலஜி மிஸ்டல் டமிள்! தமிழ்சார், எனக்கு மனத்தத்துவம் தெரியும்பா. உமக்கு என்ன வயசு?"
"இருபத்தொன்பது சார்!"
"என் சர்வீஸே நாற்பது வருஷம்."
"பாண்ட் , சண்டை போடக்கூடாதுன்னு விதி ஒன்னும் நம்ம ஸ்கூல்ல இல்லையே சார்."
"அதுக்காக, அவுத்துப் போட்டுட்டும் போகலாம்னு விதி இருக்கா என்ன? வயசு பதினெட்டு ஆகுதுங்காணும் அவளிக்கு! கோட்டடிச்சு கோட்டடிச்சு இப்பத்தான் டெந்த்துக்கு வந்திருக்கிறாள். எங்க காலத்துல பதினெட்டு வயசுல இடுப்பிலே ஒண்ணு, தோள்லே ஒண்ணு இருக்கும். போதாக்குறைக்கு மாங்காயைக் கடிச்சிட்டு இருப்பாளுக. போனவாட்டி, அதான் போன மாசத்திலே ஒரு நாள் போனாப் போவுதுன்னு நம்ம மேலே இரக்கப்பட்டு ஸ்கூலுக்கு வந்தாளே அப்போ, அவள் ஒரு நாள்லே, ஆறு மணி நேரத்துக்குள்ளாறே-ஹார்ட்லி ஸிக்ஸ் அவர்ஸ் சார்- என்ன என்ன பண்ணி இருக்காள் தெரியுமா? யாரோ நாலு தடிக்கழுதைகளோட - நீங்கள்ளாம் ரொம்ப கௌரவமா சொல்லிப்பேளே பிரண்ட்ஸ் அப்படீன்னு - நாலு தடிக்கழுதைங்களோட ஸ்கூல் வாசல்லே சிரிச்சு பேசிட்டு இருந்திருக்காள். நம்ம ஹிஸ்டரி மகாதேவன் இருக்கே… அது ஒரு அசடு. நம்ம ஸ்கூல் வாசல்லே, நம்ம ஸ்டூடண்ட் இப்படி மிஸ்பிஹேவ் பண்ணறாளேன்னு அவ கிட்ட போய் "இப்படி எல்லாம் பண்ணக்கூடாது அற்புத மரி, உள்ள வான்னு கூப்பிட்டு இருக்கான். அவள் என்ன சொன்னாள் தெரியுமா?
"சொல்லுங்க சார்"
"உங்களுக்கு பொறாமையா இருக்கா சார்ன்னு கேட்டுட்டாள். அந்தப்பசங்க முன்னால வெச்சு மனுஷன் கண்ணாலே ஜலம் விட்டுட்டு என்கிட்டே சொல்லி அழுதார். இந்த ஸ்கூல் காம்பசுக்குள்ளே நடக்கிறதுக்குதான் நீங்க பொறுப்பு. வெளியிலே நடக்கிற விவகாரத்துக்கெல்லாம் நீங்க என்னைக் கட்டுப்படுத்த முடியாது சார்னு மூஞ்சியிலே அடிச்ச மாதிரி சொல்றாள். யாருகிட்டே? இந்த நரசிம்மன்கிட்டே.”
எச்.எம்.முக்கு முகம் சிவந்து மூக்கு விடைத்தது.
“இந்த அநியாயம் இத்தோடு போகலே. சாயங்காலம், பி.டி. மாஸ்டர்கிட்டே சண்டை போட்டுக்கொண்டாள். அவன் இப்படிப் பண்ணப்படாது, இப்படி வளையணும், இந்த மாதிரி கையை வச்சுக்கணும்னு அவளைத் தொட்டுச் சொல்லிக்கொடுத்திருக்கான். தொட்டவன், எசகுபிசகா எங்கேயோ தொட்டுட்டான் போலிருக்கு. இவ என்ன கேட்டிருக்கா தெரியுமா?”
“என்னைத் தொட்டுப் பேசாதீங்கன்னு சொல்லியிருப்பாள்.”
“மனுஷ ஜாதின்னா அப்படித்தானே சொல்லியிருக்கணும்? இவள் என்ன சொன்னாள் தெரியுமா?”
எச்.எம். தலையைக் கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டார். அவர் முகம் வேர்த்து விட்டிருந்தது.
”சார்... உங்க பொண்டாட்டியோட நீங்க படுக்கறது இல்லையான்னு கேட்டுவிட்டாள். பாவம்! நம்ம பி.டி. பத்மநாபன் லீவு போட்டு விட்டு போய்விட்டான். முடியாதுப்பா முடியாது. நானும் நாலு பெத்தவன். இந்த ராட்சஸ ஜென்மங்களையெல்லாம் வச்சிக்கிட்டு, இரத்தக் கொதிப்பை வாங்கிக்கிட்டு அல்லாட முடியாதுப்பா. அந்தக் கழுதையைத் தொலைச்சுத் தலைமுழுகிட வேண்டியதுதான்.”
“இப்போ போய் டி.சி. கொடுத்துட்டால், அவள் எஸ்.எஸ்.எல்.சி. எழுத முடியாமல் போயிடும் சார். அவள் வாழ்க்கை வீணாகப் போய்விடும்.”
”அந்தக் கழுதைக்கே அதைப் பத்திக் கவலை இல்லை. உமக்கெதுக்கு?”
***
நமக்கெதுக்கு என்று என்னால் இருந்து விட முடியாது. அது என் சுபாவமும் இல்லை. அத்தோடு, அந்த மரி என்ற ஆட்டுக்குட்டி, ஒரு சின்னப்பெண். அப்படி என்ன பெரும் பாவங்களைப் பண்ணிவிட்டாள்? அப்படியேதான் இருக்கட்டுமே. அதற்காக அவளைக் கல்லெறிந்து கொல்ல நான் என்ன அப்பழுக்கற்ற யோக்கியன்?
நான் சுமதியிடம் சொன்னேன். எச்.எம். மாதிரிதான் அவளும் சொன்னாள்.
”உங்களுக்கெதுக்கு இந்த வம்பெல்லாம்? நீங்க சொல்றதைப் பார்த்தால், அது ரொம்ப ராங்கி டைப் மாதிரி தெரியுது. உங்களையும் தூக்கி எறிஞ்சு ஏதாச்சும் பேசிட்டால்??” என்றாள்.
அவளை சம்மதிக்க வைத்து, அவளையும் அழைத்துக்கொண்டு மரி வீட்டுக்கு ஒரு நாள் சாயங்காலம் போனேன்.
என் வீட்டுக்கு ரொம்ப தூரத்தில் இல்லை அவள் வீடு. ரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த வரிசை வீடுகளில், திண்ணை வைத்த, முன்பகுதி ஓடு போட்டு, பின் பகுதி ஒட்டிய பழங்காலத்து வீடு அவளுடையது. விளக்கு வைத்த நேரம். திண்ணை புழுதி படிந்து, பெருக்கி வாரப்படாமல் கிடந்தது. உள்ளே விலை மதிப்புள்ள நாற்காலிகள் சோபாக்கள் இருந்தன. ஆனாலும் எந்த ஒழுங்கும் இன்றிக் கல்யாண வீடு மாதிரி இரைந்து கிடந்தன.
“மரி,” என்று நான் குரல் கொடுத்தேன். மூன்று முறை அழைத்தபிறகுதான், “யாரு?” என்று ஒரு குரல் உள்ளிருந்து வந்தது. கலைந்த தலையும், தூங்கி எழுந்த உடைச் சுருக்கங்களோடும், சட்டையும் கைலியுமாக வெளிப்பட்டாள் மரி.
என்னைப் பார்த்ததில் ஒரு ஆச்சரியம், வெளிப்படையாக அவள் முகத்தில் தோன்றியது. என் மனைவியைப் பார்த்ததில் அவளுக்கு இரட்டை ஆச்சரியம் இருக்க வேண்டும்.
“வாங்க சார்.. வாங்க, உட்காருங்க.” என்று எங்கள் இருவரையும் பொதுவாக வரவேற்றுவிட்டு நாற்காலிகளை ஒழுங்குபடுத்தினாள். சோபாவில் நானும் சுமதியும் அமர்ந்தோம். எதிரே இருந்த ஒரு நாற்காலியில் அவள் அமரச் சொன்னதும் அமர்ந்தாள்.
“தூக்கத்தைக் கலைச்சுட்டேனாம்மா?” என்றேன்.
”பரவாயில்லே சார்,” என்று வெட்கத்தோடு தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். முகத்தில் விழுந்த முடியை மேலே தள்ளிவிட்டுக் கொண்டாள்.
”நீங்க எப்படி இங்கே..?”
“சும்மாத்தான்.  பீச்சுக்குப் போய்க்கிட்டு இருந்தோம். வழியிலே தானே உங்க வீடு. பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நுழைஞ்சிட்டோம். அழையாத விருந்தாளி. உடம்பு சரியில்லையா?”
”தைலம் வாசனை வருதா சார்? லேசாத் தலைவலி. ஏதாச்சும் சாப்பிடறீங்களா சார்?”
“எல்லாம் ஆச்சு. வீட்டிலே யாரும் இல்லையா?”
“வீடா சார் இது....? வீடுன்னா அப்பா, அம்மா இருக்கணும். அப்பா எப்பவோ போயிட்டார். போயிட்டாருன்னா செத்துப் போயிடலே. எங்களை விட்டு விட்டு போயிட்டார். அம்மா என்னைச் சுத்தமாக விட்டுடலை. அப்பப்போ நாங்க சந்திக்கிறோம். சமயத்திலே இரண்டு நாளுக்கு ஒரு முறை நாங்க பார்த்துக்கொண்டால் அது அதிகம். அதனால்தான் இது வீடான்னேன். எனக்கு ஏதோ லாட்ஜிலே தங்கற மாதிரி தோணுது.”
எனக்குச் சங்கடமாய் இருந்தது. இரவுகளில், நசுங்கிய அலுமினியப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பிச்சைக்கு வருகிற குழந்தையைப் பார்ப்பது போல இருந்தது.
”சாப்பாடெல்லாம் எப்படியம்மா?”
“பெரும்பாலும் பசி எடுக்கறப்போ, எங்க தோணுதோ அங்கே சாப்பிடுவேன். ஓட்டல்லேதான். அம்மா வீட்டிலே தங்கியிருந்தா ஏதாவது செய்வாங்க. அம்மா சமையலைக் காட்டிலும் ஓட்டலே தேவலை. நல்லாயிருக்காதுன்னு சொல்லலை. அம்மான்னு நினைச்சு சாப்பிட முடியலே. பொண்ணுன்னு நினைச்சு அவங்களும் பண்ணலை.”
சுமதி என்னை முந்திக்கொண்டு கேட்டாள்.
”உன் அம்மாதானே அவங்க?”
“ஆமாங்க. இப்போ வேறு ஒருத்தரோட அவங்க இருக்காங்க. அவரை எனக்குப் பிடிக்கலை. என்னையும் அவருக்குப் பிடிக்கலை. சரி அவங்க வாழ்க்கையை அவங்க வாழறாங்க. என் வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டு தீர்க்கிறேன்.”
ஓர் இறுக்கமான மௌனம் எங்கள் மேல் கவிந்தது. நான், சாவி கொடுக்காமல் எப்போதோ நின்று போயிருந்த கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
“மரி... ஸ்கூலுக்கு வந்தால், ஒரு மாறுதலாக இருக்குமில்லே?”
“நான் யாருக்காக சார் படிக்கணும்?”
“உனக்காக,”
“ப்ச்!” என்றாள் அவள். இதற்கு மேல் எதுவும் பேசக்கூடாது என்று எனக்குத் தோன்றியது.
”பீச்சுக்குப் போகலாம். வாயேன்.”
”வரட்டுமா சார்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“வா.”
“இதோ வந்துவிட்டேன் சார்,” என்று துள்ளிக் கொண்டு எழுந்தாள். உள்ளே ஓடினாள்.
நான் சுமதியைப் பார்த்தேன்.
“பாவங்க,” என்றாள் சுமதி.
“யாருதான் பாவம் இல்லே? இந்தப் பெண்ணை விட்டுவிட்டு எங்கேயோ இருக்கிற அந்த அம்மா பாவம் இல்லையா? இத்தோட அப்பா பாவம் இல்லையா. எல்லோருமே ஒருவிதத்திலே பாவம்தான்.” என்றேன் நான்.
அப்போதுதான் பூத்த ஒரு பூ மாதிரி, மழையில் நனைந்த சாலை ஓரத்து மரம் மாதிரி, ஓடைக் கூழாங்கல் மாதிரி, வெளிப்பட்டாள் மரி. பேண்ட்தான் போட்டிருந்தாள். சட்டையை டக் பண்ணியிருந்தாள். அழகாகவே இருந்தது அந்த உடை. உடம்புக்குச் சௌகரியமானதும், பொருத்தமானதும்தானே உடை.
“ஸ்மார்ட்!” என்றேன்.
“தேங்க்யூ சார்,” என்றாள், பரவசமான சிரிப்பில்.
நான் நடுவிலும், இரண்டு புறமும் இருவருமாக, நாங்கள் நடந்தே கொஞ்ச தூரத்தில் இருந்த கடற்கரையை அடைந்தோம்.
கடற்கரை சந்தோஷமாக இருந்தது. ஓடிப் பிடித்துக் கல் குதிரைகளின் மேல் உட்கார்ந்து விளையாடும் குழந்தைகள். குழந்தைகள் விளையாட்டைப் பார்த்து ரசிக்கும் பெற்றோர்கள். உலகத்துக்கு ஜீவன் சேர்க்கும் யுவர்களும் யுவதிகளும். கடலைகள், கடல் மணலில் சுகமாக வறுபட்டன.
குழந்தைகள் வாழ்வில் புதிய வர்ணங்களைச் சேர்த்துப் பலூன்கள் பறந்தன. ஸ்டூல் போட்டுப் பட்டாணி சுண்டல் விற்கும் ஐயரிடம் வாங்கிச் சாப்பிட்டோம்.
“கார வடை வாங்கிக் கொடுங்க சார்,” என்றாள் மரி, கொடுத்தேன். தின்றாள்.
”மத்தியானம் சாப்பிடல்லே சார். சோம்பேறித்தனமாக இருந்துச்சு. தூங்கிட்டேன்.”
“ராத்திரி எங்களோடுதான் நீ சாப்பிடறே,” என்றாள் சுமதி.
“இருக்கட்டுங்க்கா.”
”என்ன இருக்கட்டும். நீ வர்றே.”
வரும்போது, சுமதியின் விரல்களில் தன் விரல்களைக் கோத்துக்கொண்டு, சற்றுப்பின் தங்கி மரி பேசிக் கொண்டு வந்தாள். நான் சற்று முன் நடந்தேன்.
சாம்பாரும் கத்தரிக்காய் கறியும்தான். மத்தியானம் வறுத்த நெத்திலிக் கருவாடு இருந்தது.
“தூள்க்கா.... தூள்! இந்தச் சாம்பாரும் நெத்திலிக் கருவாடும் பயங்கரமான காம்பினேஷங்க்கா,” என்றாள் மரி.
*****
மரி இப்போதெல்லாம் காலையும் மாலையும் தவறாமல் எங்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள். காலை இட்டிலி எங்கள் வீட்டில்தான். வருஷம் 365 நாட்களும் எங்கள் வீட்டில் இட்டிலி அல்லது தோசைதான். “ஆட்டுக்கல்லை ஒளித்து வைத்து விட்டால், சுமதிக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும். மரி,” என்பேன். மரி விழுந்து புரண்டு சிரிப்பாள். சாயங்காலங்களில் எங்கள் வீட்டில்தான் அவள் வாழ்க்கை கழிந்தது. பேண்ட் போட்ட அந்தப்பெண், சிரமப்பட்டுச் சம்மணம் போட்டு உட்கார்ந்து சுமதிக்கு வெங்காயம் நறுக்கித் தருவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.
“ஏம்மா... சைக்கிள்ளே ஊரைச் சுற்றுகிற பெண் நீ. இங்கே இவளுக்கு வெங்காயம் நறுக்கித் தர்றியோ?” என்றேன்.
“இதுதான் சார் த்ரில்லிங்கா இருக்கு. கண்ணிலே நீர் சுரக்கச் சுரக்க வெங்காயம் நறுக்கிறது பயங்கரமான எக்ஸ்பீரியன்ஸ்.” என்றாள். ஐயோ இந்தப் பயங்கரமே!
“சார், ஒண்ணு சொல்லட்டுமா?”
“ஊகூம். ரெண்டு மூணு சொல்லு.”
“சீரியஸாகக் கேட்கிறேன், சார். நான் இங்கே வந்து போறதிலே உங்களுக்குத் தொந்தரவு இல்லையே சார்?”
“சத்தியமாகக் கிடையாது.”
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு அவள் சொன்னாள்.
“ஏன் சார் - கெட்டுப் போனவள்னு எல்லோரும் சொல்கிற என்னை எதுக்கு உங்க வீட்டிலே சேர்த்து, சோறும் போடறீங்க?”
சிரிப்புத்தான் வந்தது.
“பைத்தியமே! உலகத்திலே யார் தான் கெட்டுப் போனவங்க? யாராலுமே கெட முடியாது, தெரியுமா? மனசுக்குள்ளே நீ கெட்டுப் போனவள்னு நினைக்கிறியாக்கும்? அதை விட்டுடு. நீயும் கெட்டவள் இல்லை, உங்க அம்மாவும், அப்பாவும் யாருமே கெட்டவங்க இல்லே.”
அவள் சொனாள்: “எங்க அம்மாவைப் பழி தீர்க்கணும்னுதான் அப்படியெல்லாம் நடந்துக்கறேன் சார்.”
“எனக்கும் தெரியும்.” என்றேன்.
பத்து நாள் இருக்குமோ? இருக்கும். ஒரு நாள் மரி என்னிடம் கேட்டாள்.
”சார்.. நான் ஸ்கூலுக்கு வர்றதே இல்லைன்னு நீங்க ஏன் கேட்கவில்லை?”
நான் அவள் முகத்தைப் பார்த்தேன். இரண்டு மணிகள் உருண்டு விழத்தயாராய் இருந்தன. அவள் கண்களில்.
“என்னை நீங்க கேட்டிருக்கணும் சார். ஏண்டி ஸ்கூலுக்கு வரலைன்னு என்னை அறைஞ்சு கேட்கணும் சார். அப்படி யாரும் என்னைக் கேட்க இல்லேங்கறதுனாலதானே நான் இப்படி விட்டேத்தியா இருக்கேன்? என் மேல் இப்படி  யாரும் அன்பு செலுத்தினது இல்லே சார். அன்பு செலுத்தறவங்களுக்குத்தானே அதட்டிக் கேக்கவும் அதிகாரம் இருக்கு?”
“உனக்கே அது தோணனும்னுதானே நான் காத்திருக்கேன். அதனாலே என்ன? ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை. இன்னைக்குப்புதுசா ஆரம்பிப்போம். இன்னைக்குத்தான் டென்த் கிளாஸ்லே நீ சேர்ந்தன்னு வச்சுக்க. நாளையிலேர்ந்து நாம் ஸ்கூலுக்குப் போறோம்.” என்றேன்.
மரி, முகத்தை மூடிக் கொண்டு விசும்பி விசும்பி அழுதாள்.
******
தட்டச்சு : சென்ஷி

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்