காலவழுவமைதி
“தலைவரார்களேங்…     
தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம்.
தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த்    
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்     
கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்     
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்”
‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’
“வளமான தாமிழர்கள் வாட லாமா?    
கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற     
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?     
தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்     
கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே     
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்     
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்     
தலைவரார்களேங்     
பொதுமாக்களேங் நானின்னும்     
யிருகூட்டம் பேசயிருப்பதால்     
வொடய் பெறுகறேன் வணக்கொம்”
‘இன்னுமிருவர்பேச இருக்கிறார்கள்    
அமைதி… அமைதி…
*******
அன்று வேறு கிழமை
நிழலுக்காகப் பாடையின் கீழ்    
பதுங்கிப் போச்சு நாயொன்று
பதுங்கிச் சென்ற நாய்வயிற்றில்    
கிழக்குக் கோடிப் பிணந்தூக்கி     
காலால் உதைத்தான். நாய் நகர
மேற்குக் கோடிப் பிணந்தூக்கி    
எட்டி உதைத்தான். அது நகர     
தெற்குக் கோடிப் பிணந்தூக்கி     
தானும் உதைத்தான். அது விலக     
வடக்குக் கோடிப் பிணந்தூக்கி     
முந்தி உதைத்தான். இடக்கால்கள்     
எட்டா நிலையில் மையத்தில்     
பதுங்கிப் போச்சு நாய்ஒடுக்கி
நான்கு பேரும் இடக்காலை    
நடுவில் நீட்டப் பெரும்பாடை     
நழுவித் தெருவில் விழுந்துவிட     
ஓட்டம் பிடித்து அவர் மீண்டும்     
பாடைதூக்கப் பாடையின் கீழ்     
பதுங்கிப் போச்சு நாய் மீண்டும்
*******
அம்மாவின் பொய்கள்
பெண்ணுடன் சினேகம் கொண்டால்    
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி    
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற் கேதும் கேட்டால்    
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக    
வாங்கினேன் உன்னை என்றாய்
எத்தனைப் பொய்கள் முன்பு    
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு    
சொன்ன நீ எதனாலின்று     
பொய்களை நிறுத்திக் கொண்டாய்
தவறு மேல் தவறு செய்யும்    
ஆற்றல் போய் விட்டதென்றா?     
எனக்கினி பொய்கள் தேவை     
இல்லையென் றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்    
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்     
பொறுப்பினி அரசாங்கத்தைச்     
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்    
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா
உன்பிள்ளை உன்னை விட்டால்    
வேறெங்கு பெறுவான் பொய்கள்?
******
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
0 கருத்துகள்:
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.