Mar 19, 2017

நிலை நிறுத்தல் - கி. ராஜநாராயணன்

"மூதேய் மூதேய் வெறுவாக்கலங்கெட்ட மூதேய்.” எப்பேர்க் கொத்தி வேலையாளாய் இருந்தாலும் வசவு வாங்காமல் தீராது அவரிடம். இது சாதாரணம்; பெரிய முதலாளிக்கேண்ணு உள்ள கெட்டவார்த்தை வசவுகள் இருக்கு புழுத்தநாய் குறுக்கே போகாது அதைக் கேட்டால். அதோடு எத்தனையோதயா அவரிட்டெ அடியும் வாங்கி இருக்கான் இந்த மாசாணம் பயல்.

ஏசுங்க, எம்புட்டு வேனுமானாலும் ஏசுங்க என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டான் அவன். -

இப்பொ அவன் வாங்கின வசவுக்கு ஒரு காரணமும் கிடையாது. "சுண்ணாம்பு எடுத்துட்டுவாலே மாசாணம்"ண்ணாரு எடுத்துட்டு வந்தான்.

ஒரு பிஞ்சு சுண்டைக்காய் அளவுதான் வெத்திலையில்
வைத்துக் கொண்டாரனும்; மஞ்சாடி கூடீரப்படாது, வசவுதான். 

சம்மந்தகார முதலாளி வந்திருந்தப்பொ, இவுக முதலாளிகிட்டே சொன்னாரு ஒருநா.

"வே மாப்ளே, மாசாணம் இங்கெனதான் நிக்கான் போலுக்கு! செமத்தியா வாங்கலாம் வேலை. சிறுசுலேர்ந்தே நல்.ல பாட்டாளி பாத்துக்கொ. இவங்க சாதியிலேருக்கிற சில்லரைத்தனம் புளுகுணித் தனம் கைநீளுறதெல்லாம் வள்ளிசாக் கிடையாது இவங்கிட்டெ, தப்பிப் பிறந்தவன் பாத்துக்கொ"

மாட்டை வச்சி வேலை வாங்கின சம்சாரி மாட்டைப் பாத்ததும் சொல்லிருவான்; வேலையாட்களை வச்சி வேலை வாங்குறவர்களுக்கு இதுகூடத் தெரியாட்டா எப்படி

பெரிய முதலாளிக்கும் தெரியும்; ஆனாலும், அவரிட்டெ ஒரு குணம் தன்னுட்டுள்ள வேலைக்காரங்களை பிறத்தியார்ட்டெ பாராட்டிச் சொல்லமாட்டாரு. காரணம், எவனும் களுதைப் பெரட்டிக் கூட்டிட்டிப் போயிருவாண்ணுதான்.

மாசாணமும் அவன் குடும்பத்தாரும் இந்த ஊருக்குப் பஞ்சம் பிழைக்க வந்த சமயத்தில், ஊர் மடத்துக்குப் பின்னுள்ள புளிய மரத் தடியில்தான் தங்கி இருந்தார்கள். வெளிக்குப் போக கம்மாக்கரைப் பக்கம் வந்த முதலாளி கண்ணுலெ தட்டுப்பட்டது மாசாணம்தான்.

பயலைக் கூர்ந்து பார்த்தார். அப்பொ, அவனுக்கென்ன பதிமூணு பதினாலு வயசிருக்கும். கருமெழுகு நிறத்தில் நல்ல எலும்புத் தாக்காய் அந்த அத்தப் பட்டினியிலும் ஆயாசம் தெரியாமல் ஈரம் உலராத கருப்பு உதடுகளுடன் திடமான மாட்டுப்பற்களுடன் மினுங்கிக் கொண்டிருந்தான். பெரிய முதலாளியைப் பார்த்ததும் அவனறியாம லேயே ஒரு மரியாதை பிறந்து எழுந்து ஒடுக்கமாய் நின்றான்.

கிட்டே கூப்பிட்டு நன்றாகப் பார்த்தார். பிறந்த மண் நல்ல செவக் காடு என்று கந்தல் உடுக்கை சொன்னது. அந்த ஆரோக்ய உடம்பி லிருந்து ஒரு மனித ஊத்தை நெடி

திரும்பவும் அவனை நன்றாகப் பார்த்தார்; மனசுக்குள் உடனே தேர்ந்தெடுத்துவிட்டார்.

"வாடேய், வா. நம்ம வீட்டுக்கு வந்து ஒருவாய் கஞ்சி சாப்டுட்டுப் போவெ"

விசுவாசமான கருப்பு நாய்க்குட்டிபோல அவருக்குப் பின்னால் மரியாதையோடு நடந்தான்.

சட்டியில் கம்மஞ்சோறு வைத்துக் கொடுத்தார்கள். சாப்பிடு வதையே கவனித்துக்கொண்டிருந்தார்கள். மீண்டும் சோறு வைக்க சாப்பிட்டுக்கொண்டே இருந்தான். உடனே பெரிய முதலாளிக்குச் சந்தோஷம் வந்துவிட்டது! இவன் வயித்துக்குச் சாப்பிடுகிறவன். நாக்குக்குச் சாப்பிடுகிறவனில்லை.

வேலை செய்து காய்காய்த்துப் போன கை பருப்புக் கறியை சிக்கனமாக சிந்தாமல் சிதறாமல் உணவின் அருமை தெரிந்து எடுக்கிறது சட்டியிலிருந்து. எடுக்கும் கவளத்திலிருந்தே வாய் அடம் தெரிந்தது. ஒரு பலாட்டியனாகப் பின்னால் விளங்குவான் வேலையில். அடடா ஒரு செல்வம் கிடைத்துவிட்டது நமக்கு: Cl

இப்படித்தான். வேலைக்குப் புதுசாக வந்த ஒருவனுக்கு அம்மா வட்டிலில் சோறு வைத்துக் கொடுத்தாள். முதல்த்தரம் சாப்பிட்டு முடித்த உடனேயே போதும் என்று அவன் சொன்னதைப் பார்த்ததும் கோவம் வந்துவிட்டது. "போடா வெளியே, ஒருப்பணிக்கழுதை நீ இப்படித் தின்னு வேலை செய்யவா? நீ வேலைக்கு இருந்தது போதும் போ” என்று விரட்டிவிட்டாள்.

பிடிக்கப் போகும் மாட்டுக்கு முன்னால் ஒரு தளுக்கு நாத்துக் கூளத்தை எடுத்துப் போடுவார்கள். எப்படி அது வாய் நிறைய்ய அள்ளி எடுத்துத் திங்கிறது என்று கவனிப்பார்கள். "சோத்தை அள்றதி லேந்தும் நாத்தை அள்றதிலேந்தும் தெரிஞ்சிரும் பூளாக்கு" என்பார் பெரிய நைனா.

அன்றிலிருந்து பெரியமுதலாளியின் குடும்பத்தில் ஒருவனாக' மாசாணம் ஆனான். வாரத்துக்கு ஒரு தலைமுழுக்கு உண்டு. வருசத் துக்கு ஒரு ஜோடி வேட்டி சாப்பாடு போக மாசம் மூணு ரூபாய் சம்பளம்.

அவன் வந்தது ஐப்பசி வருகிற சித்திரையிலிருந்துதான் கணக்கு. அடுத்த சித்திரை வரையிலும் இருந்தால்தான்; பாதியிலேயே அரைகுறையாக போனால் போனதுதான். சம்பளம் கிடையாது.

மாசாணத்தின் குடும்பத்தாரிடம், அவர்களுடைய பூர்வீகம், தொழில், சொந்தவீடு இருக்கா முதலிய எல்லாம் விசாரித்ததில் பூர்வீக வீடு மட்டும் உண்டு என்றும், அது ஒத்தியில் இருக்கிறது என்றும்,

பரம்பரையாக நல்ல பாட்டாளிகள் என்றும், உடம்புதான் அழுக்கு நாக்குசுத்தம் என்றும் ஆரம்பரை சாமி கொண்டாடிகளாக இருந்தார் களென்றும் கால வித்தியாசம் இப்படித்தங்களை வலசைக்காரர்களாக ஆக்கிவிட்டது என்றும் சொன்னார்கள்.

அக்கம்பக்கத்தில் ஆட்களைவிட்டு விசாரித்துப் பார்த்ததில் இதெல்லாம் நெசந்தான் என்று தெரிந்தது. 

"தினி நல்ல தீனிதான் திறுக்குகதான் பட்டு முடியலை" என்று தனது வீட்டாரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னான் மாசாணம் பல சமயம் அங்கிருந்து ஒடிப் போய்விடுவோமா என்ற நினைப்பு வரும். சித்திரையை விட்டுறப்படாது' என்று பல்லைக் கடித்துக்கொண்டிருப்பான்.

வேலையின் சுமையையாவது தாங்கிக்கிடலாம், வசவுகளையும் சமயத்தில் விழும் அடிகளையும் எப்படித் தாங்கிக்கிடறது என்று திகைத்தான்.

ராத்திரி பதினோரு மணிக்கு வந்து படுக்கையில் விழுந்தால் அதி காலை'நாலுமணிக்குக் காலால் எத்தினால்தான் எழுந்திருக்க முடியும்.

வேலைக்குச் சேர்ந்த வருசத்தில் நடந்த ஊர் சாத்திரைப் பொங்கல் விழாவின்போது பகலில் வேலை செய்துவிட்டு ராத்திரியில் நடக்கும் மந்தை நாடகங்களை முன்னால் போய் உட்கார்ந்துகொண்டு பார்த்தான். இப்படி ஏழாம் நாள் நாடகம் முடிந்து தலைக்கோழி கப்பிட அவன் நடந்து வீட்டுக்கு வரும்போது தன்னுசார் இல்லை! எந்த இடத்தில் போய் விழுந்தால் நிம்மதியாகத் தூங்கலாம் என்று தள்ளாடிக்கொண்டே வந்து, ரெண்டு தானியப் பட்டரைகளுக்கு இடையில் சுவரை ஒட்டியுள்ள தூசி படர்ந்த இடத்தில் துண்டை விரித்ததுதான் அவனுக்குத் தெரியும்.

மாசாணத்துக்கு முழிப்புத்தட்டி எழுந்திருக்கும்போது தொழுக் கரையின் உச்சியிலிருந்த தலைக்கோழி கூப்பிட்டது. ஒண்னுக்கு இருந்துவிட்டு வெள்ளியை வானத்தில் தேடினான். ஒன்றும் நிதான்ப்படவில்லை. கூரை உச்சியில் திரும்பவும் ஒரு "கொக்கரக் கோ.கோ" கேட்டது. இரு இரு எண்ணைக்கு உன்னை வந்து வெருகு வேட்டு வைக்கப் போகுதோ தெரியலை சிரிப்போடு நினைத்துக் கொண்டு ஆட்டுரலில் நனையப்போட்ட பருத்திக்கொட்டையைக் கட கட கட என்று சத்தங் கேட்க வேகமாய் ஆட்ட ஆரம்பித்தான்.

வாசக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த பெரியமுதலாளி கவனித்துவிட்டார் இது யார் என்று, கோவமான கோவம் அவருக்கு. திண்ணையில்க் கிடந்த சாட்டைக் கம்பை எடுத்து சுளிரென்று ஒரு சுளுப்புச் சுளுப்பினார். "எங்கெலே போயிருந்தெ ஒரு வாரமா" 'என்னது, ஒரு வாரமாவா!'

"நா எங்கேயும் போகலையே முதலாளி: இங்கென தான் பட்டரைகளுக்கு இடுக்கிலெ படுத்துக்கிடந்தேன்"

"சிறுக்கி பிள்ளெ பொய்யி; பொய்யா சொல்லுதெ-" என்று பேவாங்கு வாங்கினார்.

துடித்துப்போனான் மாசாணம். அந்தக் குளிர்ந்த வேளையில்

அவனுடைய அலறல் எல்லோரையும் எழுப்பிக் கூட்டம் கூடிவிட்டது. சாட்டையின் வெடிப்பு நாலு தரத்துக்குத்தான் வலிக்கிறமாதிரி இருந்தது.

இடது முஷ்டியை வானத்தைப் பார்த்து உயர்த்தி சாமி கொண்டாடிகள் தங்கள் உடம்பிலேயே புனித சாட்டையால் அடித்துக் கொள்ளும் பேரோசை அவன் மனக்கண்ணில் மின்னலிட்டது.

உணர்ச்சியால் இரண்டு முஷ்டிகளையும் இறுக்கிக்கொண்டு வானத்தைக் குத்துவதுபோல்த் தூக்கி நிறுத்தி படுமுடிச்சிவிடும் கயிறுபோல் உடம்பை முறுக்கிக்கொண்டு அப்படியே நின்றான்.

சில்லுகளாய் முறிந்த மனஎலும்புகள் உருகி, பின் ஒன்றுகூடி கரடுமுறடான ஒரு எலும்பாய்க் கூடியது அந்த வினாடியில் அவனுள். அவன்மேல் விழுந்துகொண்டிருக்கும் அடிகளை அங்கே வந்து கூடியவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். 

என்ன என்று பார்த்தபிறகுதான் தெரிந்தது! தூசி படிந்த தரையில் அவன் கிடந்த தடமும் விரித்த துண்டும் அங்கே கிடந்தது.

பெரிய முதலாளியின் வீட்டில் இப்படி யாரும் பார்க்காமல் வருஷத்துக்கு ஒருதரம் மட்டும் ஒட்டடை அடிச்சி வெள்ளை ஆத்துகிற இடம் பலது இருக்கும். அதுலெ இதும் ஒண்ணு.

"நல்ல கூத்துதாம்போ அப்பவும் குண்டியிலே போற குசு தெரியாமெ ஒரு ஆம்பளை ஏழுநா ராவா பகலாத் துரங்கியிருக்கானே பாவி மட்டை' அதிசயத்தாள் ஒரு கிழவி.

"ஹிம், நீ ஒண்ணு. ஒரு வாரம் முழிச்சிருக்கான், ஒரு வாரம் துங்கிருக்கான். கணக்கு சரியாப் போச்சி!” என்று கெத்தோடு சொன்னார் ஒரு கிழவனார்.

ஊரெல்லாம் ஒரே கெக்கோல்; சொல்லிப் பேசிச் சிரிக்க விஷயம் கிடைத்துவிட்டதே

அடி வாங்கியதுக்குப் பிறகு ரொம்பநேரம் அழுதுகொண்டிருக்கும் மாசாணம் அழாமல் அன்று கணத்த மெளனமாய் வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது பெரிய முதலாளிக்குப் புதிய விஷயம்.

சித்திரையை முடித்த மாசாணம் விடுப்புக் கேட்டான் ஊருக்குப் போக முப்பத்தி ஆறு வெள்ளி ரூபாய்களை எண்ணி அவன் முன் வைத்தார் பெரிய முதலாளி. அவனைப் பார்த்து அவர் ஒரு பாராட்டுச் சிரிப்புச் சிரித்தார். பிறகு, "இண்ணைக்கு விசாளக்கிழமை. நாளைக்கு ஒரு நா தைப்பாறிக்கொ; நாளண்ணைக்கி சனிக்கிளமை எண்ணை தேச்சித் தலைமுளுகி கோழியடிச்சி சாப்ட்டுட்டுப் போ" என்றார்.




ஊருக்குப்போன மாசாணம், அந்த வருசம் வரலை; அடுத்த வருசம் வரலை; அதுக்கடுத்த வருசமும் வரலை.

நாலாவது வருசம் வந்த மாசாணம் நெலைச்சட்டமாக ஒரு வீட்டில் நிற்காமல் ஒவ்வொரு சித்திரைக்கும் ஒரு வீட்டில் நின்றான்.

என்றாலும் கிராமத்தில் அவன்பேரில் சுத்தமான ஆளு' என்ற பெயர் நிலைத்தது.

குமருகளும் இளவட்டங்களும் பால் உணர்ச்சிப் பேச்சுகளால் அவனைச் சாடையாகச் சீண்டுவார்கள்.

"லேய் மாசாணம் மாடு மிதிச்சிட்டதா உனக்கு!” என்றுகூடக் கேட்டிருக்கிறார்கள்.

கேலியைப் பொறுத்துக்கொள்பவனைக் கண்டால் எல்லார்க்குமே குஷிதான். சிறுசுலிருந்து பெருசுவரை அவனோடு வாயாட்டம் ஆடாதார் கிடையாது.

சனிக்கிழமைதோறும் ஊர் பஜனை மடத்தில் நடக்கும் பஜனைக்கு மாசாணம் தவறாமல்ப் போய் உட்காருவான். பாடாவிட்டாலும் கேட்டுக்கொண்டே இருப்பான். தெலுங்குப்பாடல்களின் அர்த்தம் அவனுக்கு விளங்காவிட்டாலும் கேட்பதற்கு ரம்மியமாய் இருந்தது.

சில தமிழ்ப்பாடல்கள் வரும்போது மனசுள் ஒரு பிச்சிப் பூ மலரும். "ராம நாமமே கல்க்கண்டு; வாயிலெ பட்டால் இனிப்புண்டு;" ஒரு நாள், ஸ்ருதிப்பெட்டி போடும் ஆள் வராததாலோ என்னமோ மாசாணத்தைப் போடும்படி சொன்னார்கள். அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டான்.

முதலில் கொஞ்சம் முகச்சுளிப்பு இருந்தாலும், பிறகு சரியாய் வந்து கொண்டிருந்தது ஸ்ருதி. அப்போதுதான் கவனித்தான்; தன்னை அது ஒரு அமுததாரையால் கரைக்கிறது என்பதை லயித்துப்போனான் அதன் சொகத்தில்,

அதிலிருந்து சனிக்கிழமை இரவுதோறும் அவனுக்கு அந்தப் பதவி கிடைத்து வந்தது. கண்ணன் பிறப்பு, ஏகாதசி, புரட்டாசியின் கடேசிச் சனி இவைகளில் சப்பரம் எழுந்திருத்தாகி வரும்போது பின்னால் பஜனை கோஷ்டி பாடிக்கொண்டே வரும். அவர்கள் மாரிலே சந்தன மும் பூமாலையும் அணிந்து இருப்பார்கள். அதில் மாசாணமும் இருந்தான். அது அவனுக்கு ஒரு உயர்வாகத் தெரிந்தது. அனைவ ரோடும் தான் சமதையாகத் தோன்றியது. அங்கே தன்னை இளப்பமாகப் பார்ப்பவர்களோ கேலி செய்பவர்களோ இல்லை.

3
மாசாணத்துக்கும் கலியாணம் வந்தது. ஊருக்குப் போனான். கொஞ்சநாட்களுக்கெல்லாம் ஒரு பெண்ணோடு வந்தான். அவர்களை பார்த்ததும் "அட! மாசாணம் பயலுக்கு கிடைச்ச யோகத்தைப் பாத்தியா' என்று பேசிக்கொண்டார்கள். கண்ணால் ஒருவருக் கொருவர் ஜாடை செய்துகொண்டார்கள். அவர்களுக்கு இருக்க இடம் கொடுக்க நான் நீ என்று முன்வந்தார்கள்.

மாசாணம் பெண்டாட்டியின் பெயரும் மாசாணம்தான்! இதைக் கேட்டதும் ஊர்க்காரர்களுக்கு ரெட்டைச் சந்தோஷம். கால் கை சுளுக்கிக்கொண்டால் எண்ணெய் இட்டுத் தேய்த்துவிட இனிமேல் ஒரே பெயருடைய தம்பதியர் வீட்டைத்தேடி விசாரிக்கவேண்டாம். தேடிப்போகும் மூலிகை வந்து காலில் சிக்கிக்கொண்டதே

குடும்பஸ்தனாகிவிட்டதால் இனிமேல் எந்த சம்சாரி வீட்டிலும் சம்பளத்துக்கு நிற்கமுடியாது. அத்தக்கொத்து வேலைக்குப் போய் தினமும் மூனுபடி கம்மம்புல் தானியம் கொண்டுவந்தான்.

ஒருநாள் சாய்ந்திரம் ஏகாலிச்சுப்பன் கால்ச்சுளுக்கைத் தடவிவிட சிரட்டையில் கொஞ்சம் விளக்கெண்ணெயுடன் வந்தான். "அப்பச்சி, ஒங்க கையாலெ தடவிவிடுங்க" என்றான். மாசாணத்துக்கு கொஞ்சம் திகைப்புதான்; என்ன செய்ய, பெண்சாதியும் புருஷனும் ஒரே பெயர் உடையவர்கள் தடவிவிட்டால் தேவலையா விடும் என்று இருக்கிறதே கடவுளே என்று தடவிவிட்டான்.

மறுநாள் காலையிலேயே சுப்பனால் கைவீசி நடக்க முடிந்தது. அவனுடைய பெண்சாதி ராக்கி கஞ்சி வாங்கப்போன வீடுகளில், ஊர் பூராவும் மாசாணத்தின் கைராசியைப்பற்றி மெச்சிப் பேசினாள்.

பிடிப்புகளுக்குத் தடவிவிட, திருஷ்டி கோளாறுகளுக்குப் பச்சிலை பூக பார்வை பார்க்க, தண்ணிர் தெளிக்க, விபூதி போட என்று ஆட்கள் ஆட்களைக் கூட்டிக்கொண்டு மாசாணத்தின் வீட்டைத் தேடிவர ஆரம்பித்தார்கள். 

மாசாணத்துக்கு இதெல்லாம் பெருமையாக இருந்தாலும் மாசாணத்திக்கு ஆரம்பத்தில்தான் பெருமையாக இருந்தது. காசு பெறாத இந்த நட்டணை வேலைகள் அவளுக்கு பிடிக்காததோடு புருஷனையும் பிடிக்காமல் போய்விட்டது. இவன் தனக்கு சமதை இல்லை என்ற நினைப்பு அவளுக்கு உள்மனசுக்குள்; அதோடு தான் வந்தபிறகுதானே இவனை இத்தனை பேர் தேடிவர இருந்தது என்கிற நினைப்பும்.

ஆரம்பத்தில், குளிக்கும்போது அவனுக்கு முதுகு தேய்த்து விட்டாள். சாப்பிட்ட வட்டிலைக் கழுவி வைத்தாள். பிறகு அவனே தான் செய்துகொள்ள வேண்டியதாகிவிட்டது. சில நாளைக்குள் அவள் "ஒரு வடியா வருது, ஊத்திச் சாப்பிடு கஞ்சியெ" என்று திரும்பிப் படுத்துக்கொள்வாள், சுடுசொல் ஒன்றும் சொல்லமாட்டான் அவளை, கோவங்கூட வராத அவனுடைய இந்த மதக்கம் அவனிடமிருந்து ரொம்ப விலகிக்கொள்ளச் செய்தது அவளை.

மற்றவர்களிடம் அவள் பேசிக்கொண்டிருக்கும்போது இவன் காதில் படும்படியாகவே "ஆடுண்ணா ஒருசுறுகுப் பால் கொடுக்கனும் கிடாண்ணா ஒரு முட்டாவது முட்டணும்" என்று பொரிவாள். 

சாய்ந்திரம் பெரியமுதலாளியின் வீட்டம்மா மாசாணத்தைத் தேடி வீட்டுக்குப் போனாள். மாசாணத்தி முழுகிய தலையை படலைக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு சினுக்குவலியால் சிக்கெடுத்து நீவிவிட்டுக் கொண்டிருந்தாள். முதலாளியம்மாவின் கண்ணில் முதலில் பட்டது மாசாணத்தியின் சிறுத்த இடையும் நீண்ட கூந்தலும்தான். பசப்புக் கார முண்டை ஊர்ப் பிளைகளையெல்லாம் கெடுத்திட்டாளே என்று மனசுக்குள் ஏசிக்கொண்டே "ஏ மாசாணத்தி, மாசாணம் வந்ததும் வீட்டுக்கு வரச்சொல்லு" சின்ன மொதலாளிக்கு திருநாறு போடணும்" என்று சொல்லிவிட்டு நாறச் சிறுக்கி, எடுபட்ட முண்டெ' என்று மனசுக்குள் ஏசிக்கொண்டே போனாள்.

காட்டிலிருந்து மாசாணம் வந்தவுடனே முதலாளியம்மா வந்த
தகவலையும் சொல்லி, வழக்கம்போல் அவனுக்குக் கொடுக்கிற வாழ்த்துமானங்களையும் கொடுத்தாள்.

வென்னீரை அவனே சோமாரி வைத்துக்கொண்டு குளித்தான். போயி விபூதி போட்டுட்டு வந்து சாப்பிட்டுக்கிறலாம் என்று கிளம்பிவிட்டான்.

விபூதிபோட வந்தாலோ, பச்சிலை பூச வந்தாலோ, வருகிறவன் யாருடனும் பேசுவதில்லை. அதனால் "வா" என்றும் அவனை வீட்டார் சொல்லமாட்டார்கள்.

பெரிய முதலாளியின் வீட்டுக்குள் மாசாணம் மெளனமாக நுழைந்ததும் ஒரு சின்ன பரபரப்பு; ஒரு சின்ன மரியாதை

பட்டகசாலையில் கன்னி மூலையில் போய் பேசாமல் சப்பணம் போட்டு உட்கார்ந்துகொண்டான். அவன் முன்னால் தாம்பாளத்தில் விபூதி குவித்து அதன் உச்சியில் சூடக்குவியல்,

முதலாளியம்மா ஒன்பது வயசுள்ள "சின்னமொதலாளி"யைக் கூட்டிக்கொண்டு வந்து மாசாணத்துக்கு முன்னால் உட்கார்த்தி வைத்து தானும் உட்கார்ந்துகொண்டாள். குடும்பத்தார் அனைவரும் மாசாணத்தின் எதிரே பவ்யமாக வந்து உட்கார்ந்துகொண்டார்கள். பெரிய முதலாளியும்கூட எவ்வித அட்டகாசம் இல்லாமல் ஒரு பக்கத்தில் வந்து அமைதியாக உட்கார்ந்துகொண்டார்.

ஆரம்பிப்பதற்கு முன்னால் மாசாணம் அந்த வீட்டையும் அங்குள்ள பொருள்களையும் அந்த மனிதர்களையும் ஒரு பார்வை பார்த்தான், இவ்வளவுதானா நீங்கள்ளாம்! என்று இருந்தது அவன் பார்த்தது.

சூடத்தைக் கொளுத்தினான். அது எரிவதையே அவன் கண்கள் உக்கிரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தன. எரிதியின் நாக்குக் குறையக் குறைய பார்வை உக்கிரமும் குறைந்து விழி மெளனம் ஆகி மூடிக் கொண்டது. நிமிர்ந்த மார்புடன் அப்படியே இருந்தவன் மெல்ல விழித்து அந்தப் பாலகனை அருள் சுரந்த கண்களால் பார்த்தான்.

தாம்பாளத்தை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு அந்த வெது வெதுப்பான திருநீற்றை சமன்படுத்தி அதில் விரலால் ஏதோ எழுதி னான். கொஞ்சம் தலைதுாக்கி பெரிய முதலாளி அதைக் கவனித்தார். ஒன்றும் விளங்கவில்லை. மாசாணத்துக்கோ எழுதப் படிக்கத் தெரியாது.

மூடிய கண்களுடன், ஒலி எழாமல் அவன் உதடுகள் வேகமாக எதையோ சொல்லிக்கொண்டே உடம்பை சற்றே முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டே இருந்தவன் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் தரையில் ஓங்கி பெருத்த சத்தம் எழ கைபொத்தி அடித்தான். நெஜமாகவே பதறிப்போனார்கள் எல்லோரும்! அவனுடைய விழிகள் வெளியே பிதுங்கும்படியாக ஓங்கிய குரலில் ஒம் ரீம் ஸம் என்று இன்னும் என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டு அவர்களைக் கோபமாகப் பார்த்தான். அது அனைவரையுமே கொஞ்சம் திகில டையச் செய்தது. அடுத்த வினாடியே சாந்தமடைந்து மிருதுவான குரலில் "மொதலாளியம்மா, சின்ன மொதலாளி எங்கையோ பயந்திருக்காக, வேற ஒண்னுமில்லெ இந்தத் திருநீறை காலையிலும் ஒரு தபா பூசுங்க. ராத்திரியே காய்ச்சல் இறங்கி சரியாபோயிரும்" என்று

சொல்லி அந்தச் சிறுவனுக்கு நெற்றியில் இட்டு புஜங்கள் இரண்டிலும் தடவிக்கொண்டே போய் ஒரு சொடக்குடன் முடித்தான். அவன் இப்படிச் செய்தது குழந்தைகள் அனைவருக்குமே பிடித்திருந்தது.

பெரியவர்கள் வந்து திருநீறைக் குனிந்து மரியாதையாக வாங்கிக் கொண்டார்கள். பெரிய முதலாளிக்கு இந்தப் பயலிடம் போய் இப்படிக் குனிந்து வாங்கவேண்டுமா என்றிருந்தது. வீட்டம்மாவின் அழுத்தம் அவரையும் வந்து குனிந்து ரெண்டு கைகளையும் நீட்டி வாங்கும்படி செய்தது.

"சின்ன முதலாளி"யின் காய்ச்சல் இறங்கி மறுநாளே சரியாகி விட்டது. ஒரு பக்கம் ஊராரின் இளப்பம் அவன்பேரில் நீங்கிக் கொண்டு வரும்போது இன்னொரு பக்கம் கேலிபீரங்கிகள் அவன்மீது தரமாரியாய்க் குண்டு மாரி பொழிந்துகொண்டிருந்தன. இவர்களுக்கு ரொம்பச் செளகரியமான விஷயம் அவன் முகத்துக்கு நேரேயே அதைப் பிரயோகிக்கலாம். 

அந்த வருஷம் மழைக்காலம் சீக்கிரமே தொடங்கும்போல் தெரிந்தது. ஆவணி மத்தியில் ஒரு நல்ல மழையும் ஒரு துணை மழையும் பெய்து நிலத்தையும் மனசையும் குளிர்வித்தது, சொல்லி வைத்தது போல உடனே கரிசல்க்காடு அனைத்தும் சுறுசுறுப்படைந்தது.

பருவம் செய்ய ஆரம்பித்தார்கள், முங்க உழறது குப்பை சிதறுகிறது எழுப்படிக்கிறது என்று.

புரட்டாசி முதல் பட்டத்தில் விதைக்க எல்லோருமே தயார். பருவ மழையைத்தான் காணோம்.

சரி போகுது; நடுப்பட்டத்தில் பேயும், அதுதானே நமக்கு உகந்த படடம.

நடுப்பட்டத்திலும் பெய்யவில்லை. சம்சாரிகளின் நெற்றி சுருங்கியது. முகம் கடுக்க ஆரம்பித்தது.

விறுவிறு என்று காரியங்கள் மழையைத் தருவிக்க என்று ஆரம்பமாயின.

மழைக்கஞ்சி எடுத்தார்கள். கொடும்பாவி கட்டி இழுத்து ஒப்பு சொல்லி அழுதார்கள். கிராம தேவதைகளுக்கெல்லாம் கொடை நடத்தி, பலி கொடுத்து அவைகளின் மனசைக் குளிர்வித்தார்கள்.

புரட்டாசியின் கடேசிப்பட்டமும் வெள்ளைவெயிலாகவே கடந்து போனது.

கடவுளே, ஐப்பசி மாசமாவது நீ மழையாக வரமாட்டீயா? பிறாந்துகளே நீங்கள் எங்கே போய்த் தொலைந்தீர்கள்?

வானத்தின் உச்சியில் நூற்றுக்கணக்காய்ப் பறந்து வட்டமிட்டு மழை வரப்போவதைச் சொல்லுவீர்களே.

சிறிய நங்கூர வடிவத்தில் பறக்கும் சலங்கைப் பறவைகளையும் காணோமே.

சாயந்திரங்களில் மேகங்கள் நீர்வாய்க்கால் இடவில்லையே, சந்திரன் எட்டத்தில் கோட்டை கட்டவில்லையே, ட்ொர்க் டொர்ர்க் என்று எங்காவது ஒரு தவளை கூப்பிடாதா.

மோசம் போயிட்டோம்! மோசம் போயிட்டோம் என்று

சம்சாரிகள் ஒருவருக்கொருவர் மாறிமாறி சொல்லிக்கொண்டார்கள்.

வேலைகள் ஸ்தம்பித்துப் போனதால் கூலிகள் பட்டினி கிடந்தார்கள்.

மாசாணத்தின் வீட்டில் ஐப்பசியின் அடைமழைக்காகக் கொஞ்சம் சேமித்து வைத்திருந்த தானியமும் தீர்ந்தது. "இனி மண்ணைத் திங்க வேண்டியதுதான்" என்று சொன்னாள் மாசாணத்தி, கடேசியாகக் கிண்டிய கம்மங்கழை அவன் கும்பாவில் ஊற்றிக்கொண்டே

"மண்ணை என்னத்துக்காகத் திங்கனும் மாசாணன் இருக்கிற வரைக்கும்?” என்றான் அவன் உடனே, "ஆஹ ஹாக" என்று இளப்பமாக அவனை நோக்கி வலிப்புக்காட்டிக் குரல் கொடுத்தாள் மாசாணத்தி.

4
பட்டினி ஊரோடு ஆரம்பமானது. ஒரளவு வசதியான வீடுகளில் மட்டும் அடுப்பு புகைந்தது. கூலிகள் பஞ்சம் பிழைக்கக் கிளம்ப வேண்டியதுதான் என்று தீர்மானித்துக்கொண்டார்கள். ஆனாலும் பூமாதேவி தனது குழந்தைகளுக்குக் கொடுக்க என்று தன் மடியில் கிழங்கு வகைகளை வைத்துக்கொண்டிருந்தாள்.

மண்வெட்டிகளை எடுத்துக்கொண்டு போய் காடுகளில் புதைந் திருக்கும் சட்டிக்கிழங்கு சானைக்கிழங்கு வகைகளைத் தோண்டிக் கொண்டு வந்து பக்குவம் செய்து தின்று கிடைத்த தண்ணிரைக் குடித்து நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார்கள்.

மழை பெய்யாமல் போகாது; அப்படி இருக்கமுடியுமா; இருந்தால் உலகம் என்னத்துக்காகும் என்று நினைத்தார்கள்.

மாசானம் இரண்டு நாள் பட்டினி இருந்தான். ராத்திரிகளில் துக்கமே வரவில்லை, குத்தப்பட்டவன் துங்கினாலும் குறைவயித்துக்காரன் துரங்கமுடியுமா

மூணாவது நாள் மதியம் ஒரு முடிவோடு படுக்கையிலிருந்து எழுந்து நின்றான். தலைசுற்றும்போல் இருந்தது நிலையைப் பிடித்துக் கொண்டான்.

நேரே பார்வதி அம்மன் கோவில்முன் வந்து நின்றான். வேலை இல்லாததால் ஊர்க்காரர்கள் அங்கே உட்கார்ந்து மழை செய்த வங்கொடுமையைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மாசாணம் அவர்கள் முன்னால் வந்து நின்று மே வேட்டியை எடுத்து இறுக்கிக்கொண்டு தரையில் விழுந்து அம்மனை வணங்கினான். நீட்டி கூப்பிய அதே நிலையில் ஒன்றிரண்டு நிமிடங்கள் கிடந்தான். ஊர்க்காரர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

எழுந்திருந்த மாசாணம் தரையைக் கிள்ளி நெற்றியில் இட்டு சபதம் போல் உரத்துச் சொன்னான், மழை பெய்கிறவரை இங்கேயே அம்மனுக்கு முன்னால் உட்கார்ந்து வயணம் காக்கப்போவதாகவும் மழை பெய்யாமல் போனால் பட்டினி இருந்து இங்கேயே உயிரை விடப் போவதாகவும் சொல்லி அந்த மைதானத்தில் கிழக்காமல் பாாத்து சப்பனம் போட்டு உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

பலபேருக்கு இது வேடிக்கையாகவும் சிலபேருக்கு இது கோமாளித் தனமாகவும் பட்டது. ஊருக்குள் இதைக் கேள்விப்பட்டவர்களுக்கு அப்படி இல்லை; கேள்விப்பட்டதும் உணர்ச்சிவயப்பட்ட ஒரு பரபரப்புக் கொண்டார்கள்.

பார்க்க பலபேர் அந்த இடத்துக்கு விரைந்து வந்தார்கள். ரொம்ப நேரம் நின்று பார்க்கமுடியாமல் வெயில் வாட்டியது.

உடம்பெல்லாம் வேர்த்து வடிய அதேநிலையில் மாசாணம் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.

ராத்திரியில் அவனை அந்த நிலையில் விட்டுவிட்டு வீட்டில் படுக்க ஊராருக்கு மனசு வரவில்லை.

ஒருவர் மாற்றி ஒருவர் முழித்துக்கொண்டு கோவிலின் முன் தாழ்வாரத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு லாந்தர் வெளிச்சத்தில் சத்தம் போட்டு 'விராட பர்வம்" படித்தார்கள், அவர் களுக்குப் பெரிய முதலாளியின் வீட்டிலிருந்து சுடுதண்ணி - கருப் பட்டி போட்ட தேயிலைத் தண்ணி கொடுத்தனுப்பினார்கள்.

மறுநாளும் மாசாணம் அதேநிலையில் இருந்தான். காலையிலி ருந்தே புழுக்கம் தாங்கமுடியாததாய் இருந்தது.

மாசாணத்தின் இந்த முடிவுபற்றிக் கேள்விப்பட்ட தோரி கிருஷ்ணக்கோனார் கிடையிலிருந்து வந்தார்.

குருத்துப்பனை ஒலையைப் பட்டை பிடித்து அதில் ஆட்டுப் பாலைக் கறந்துகொண்டு வந்திருந்தார். அவன் இருப்பு அவருடைய

மனசைத் தொடுவதாய் இருந்தது. மாசாணத்தின் முன்னால் மண்டியிட்டு அவனுடைய வாய்க்குப் பக்கத்தில் பால்ப்பட்டையை ஏந்திப் பிடித்துக்கொண்டு "மாசானம்; மாசாணம்" என்று மெல்லிய குரலில் சத்தங்கொடுத்துக் கூப்பிட்டார். மாசாணம் கண்ணைத் திறந்து பார்க்கவில்லை. பலர் இதை வேடிக்கை பார்க்கக் கூடிவிட்டார்கள்.

"மாசாணம், ஐயா மாசாணம், இந்தா கொஞ்சம் பால் கொண்டு வந்திருக்கேன். ஒரு மடக்கு குடியய்யா"

மெதுவாகக் கண்ணைத் திறந்து கீதாரியைப் பார்த்தான். அவர் தனது வாயருகே ஏந்தியிருக்கும் பட்டையில் ததும்பும் பாலைப் பார்த்தான். அதே மெதுவாக கண்களை மூடிக்கொண்டே வேண்டாம் என்று சொல்வதுபோல் தீர்மானமாகத் தலையை அசைத்துவிட்டான். அங்கே கூடியிருந்த முகங்களில் புன்சிரிப்போடு கூடிய வியப்புத் தோன்றி மறைந்தது.

வயசாளியான அந்தக் கீதாரி சொன்னார். "பிள்ளே, எல்லாரும் தமக்காகத்தான் வயணம் காப்பாக உலகத்துக்காகக் காக்கெ ஒன் புண்யத்திலெ மழை பெஞ்சி ஜீவராசிக பொழைக்கட்டும்." என்று சொல்லிக்கொண்டே எழுந்திருந்து பக்கத்திலுள்ள கங்கையில் கொண்டுபோய் பாலை ஊற்றிவிட்டு பட்டையை நெரித்து அதை ஒரு ஒரமாகப் போட்டுவிட்டு வந்தார்.

எல்லோரும் தோரியைச் சுற்றிக்கொண்டு மழை வரும் அறிகுறி ஏதாவது கிடையில் தெரிகிறதா என்று கேட்டார்கள்.

"நேத்துலேயிருந்து ஆடுக சரியா மேயாமெ கூடிக்கூடி அடையுது மழை வராமப் போகாது" என்றார். பால் கறந்துகொண்டு வர

விடலைப் பனையில் குருத்தோலை வெட்டப் போனபோது துரக்கணாங்குருவிகள் வேகமாய் கூடுகள் கட்டி முடிப்பதைப் பார்த்திருந்தார்.

தரைப் புற்றுகளிலிருந்து தேங்காய்ப்பூப் போன்ற வெண்ணிறத்தில் தங்களின் முட்டைகளை அள்ளிக்கொண்டு மொலோர் என்ற எறும்புக் கூட்டங்கள் கிளம்பிப் போவதையும் அவர் பார்த்திருந்தார்.

மூணாம்நாள் காலையில் மஞ்சள் வெயில் அடித்தது. அலசி விட்டதைப்போல் வானம் சுத்த நீலமாய் இருந்தது.

யாரோ மேற்கே கைகாண்பித்தார்கள். வெகுதுரத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை இன்று ரொம்பக்கிட்டெ வந்து இருப்பது போல்த் தெரிந்தது. எப்பவும் ஒரு நீளமான நீலநிற அம்பாரமாக மட்டுமே தெரியும் மலை இன்று, அதனுள்ளே இருக்கும் மலையின் திருப்பங்கள் மடங்கள்கூடத் தெளிவாகத் தெரிந்ததைப் பார்த்தார்கள். யாரோ அதிலுள்ள பாறைகள் மரங்கள் கூடத் தெரிவதாக சொன்னார்கள். கோவிலின் படிக்கட்டின் அடியிலிருந்து "டொர். டொறக்" என்று ஒரு சொரித்தவளை சத்தம் கொடுத்தது. ஒருவர் முகத்தை ஒருவர் சந்தோஷமாய்ப் பார்த்துக்கொண்டார்கள்.

ஏறுவெயிலின் வெக்கை தாளமுடியாதபோது மாசாணத்தின் மேலே நிழல் படும்படியாக ஒருவர் ஒரு காடிவண்டியை இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தினார்.

துடைத்ததுபோலிருந்த வானத்தில் நேரம் ஆக ஆக மேக கோபுரங் கள் எழுந்து வந்தவண்ணமாக இருந்தன. திடீரென்று காலநிலையில் சொல்ல இயலாத மாறுதல் - பார்த்துக்கொண்டிருக்கும்போதே - நிகழ்ந்துகொண்டிருந்தது.

வேகமாக நகர்ந்துகொண்டிருந்த வெள்ளை மேகங்கள் மதியத்துக்கு மேல் நிறைசூல்கொண்ட யானை மந்தைகளைப்போல் நகரமுடியாமல் அப்படியே நின்றுவிட்டது உச்சியில் கட்டுத்தரையிலிருந்து கயிற்றை அறுத்துக்கொண்ட காளையொன்று குதியாளம் போட்டது. இரைக்குச் சென்றிருந்த கரைமரத்துக் காகங்கள் பாதியிலேயே கத்திக் கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்தன. வடஞ்சுருட்டி - மூலையில் திடீரென்று மின்னல் அந்தப் பகலிலும் கண்ணை வெட்டியது.

இருட்டிக்கொண்டு வருகிறது மழை என்று யாரோ சத்தம் போட்டுச் சொல்லுவது தூரத்தில் கேட்டது. அதைத் தொடர்ந்து ஒரு இரைச்சல் நெருங்கி வருவதை உணர்ந்தார்கள்.

நெல்லிக்காய் அளவுள்ள கனமுள்ள குளிர்ந்த துற்றல் முகத்தில் தலையில் கையில் விழ ஆரம்பித்தது.

அந்த இரைச்சல் இப்போது பெரிதாகக் கேட்டது. அருகேயுள்ள பன்ங்காட்டின்மேல் கொட்டுகிற மழையின் சப்தம் அது.

திடீரென்று தட்டாங்கற்களை வாரி இறைப்பதுபோல ஆலங் கட்டிகள் தரைமேல்க் கொட்டியது. அனைவரும் கோவிலுக்குள் ஒடி நுழைந்துகொண்டார்கள். நிழலுக்காகக் கொண்டு வந்து நிறுத்தி வைத்திருந்த காடிவண்டி மாசாணத்துக்குப் பாதுகாப்பாக அமைந்தது.

மாசாணம் கண்ணைத் திறந்து பார்த்தான் "ஈஸ்வரீ," என்று சொல்லிக்கொண்டே தனக்குப் பக்கத்தில் உருண்டு வந்த ஒரு ஆலங்கட்டியை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான்.

ஆகாயத்துக்கும் பூமிக்கும் பாவாற்றியதுபோல் இறங்கிக்கொண்டிருந்த கம்பித்தூதூறல் திடீரென்று வலுத்த மழையாகக் கொட்டியது. மழையின் ஒசை காதுக்கு இனிமையாக இருந்தது. காற்றின் இசைவுக்கு ஏற்ப மரங்கள் முதுகைத் திருப்பித் திருப்பி காட்டிக் குளித்தது மழையில்,

மாசாணம் தெப்பமாக நனைந்துவிட்டான். உட்கார்ந்திருந்த இடத்திலெல்லாம் மழைநீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. பிரம்மாண்டமான ஒரு இடி முழக்கத்தை தொடர்ந்து "அர்ஜ்ஜுனன் பேர் பத்து" என்று கூவினார்கள் அங்கிருந்தவர்கள்.

விடாமல் பெய்துகொண்டே இருந்தது மழை. மாசாணத்தை எல்லோரும் கோவிலுக்குள் வந்துவிடும்படி அழைத்தார்கள். அதை மறுத்துவிட்டு அவன் எழுந்திருந்து நின்றான். நிற்கமுடியாமல் தள்ளாடியதால் ஒருவர் ஓடிவந்து அவனைப் பிடித்துக்கொண்டார்.

வானத்தையும் அவர்களையும் அவன் பெருமிதத்தோடு நிமிர்ந்து பார்த்தான். -

ஆனந்தமாக எல்லோரும் நனைந்துகொண்டே கைத்தாங்கலாக நடத்திக்கொண்டு ஊர்வலம்போல் அவன் வீட்டுக்குப் போனார்கள்.

வாசலில் வந்து நின்று பார்த்த மாசாணத்தி தனது புருஷனை ஊர்ப் பெரியாட்கள் அம்பலகாரர். பெரிய முதலாளி முதலானோர் மாலைபோட்டுக் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு வருவது பார்க்க அவளுக்கும் பெருமையாகவே இருந்தது.

எப்படி அங்கே பூமாலை வந்தது, மாசாணத்துக்கு உடைமாற்றிக் கொள்ள எப்படிப் புதுவேட்டி வந்தது என்று கேட்கவில்லை. அந்த மழைக்கு ஒழுகிக்கொண்டேயிக்கும் அந்தச் சிறிய்ய கூரைவீட்டில் இடம் போதவில்லை அந்த ஜனக்கூட்டத்துக்கு; தெருவிலும் நின்றார்கள்.

சூடான பசும்பாலை சில்வர் டம்ளரில் விட்டு "இந்தா, மாசாணம்; குடி" என்று பிரியத்தோடு நீட்டினார் பெரிய முதலாளி, அதை வாங்கிக்கொண்டான். வாங்கிக்கொண்டு, எல்லோருடைய முகத்தையும் பார்த்தான். மாசாணத்தியின் முகத்தையும்தான்.

பிறகு, அண்ணாந்தே இதுவரை குடித்து வந்த மாசாணம் அன்று அந்த டம்ளரில் சப்பிக் குடித்தான்.

"போதும்" என்று அவன் சொன்னபோதும் "இன்னும் கொஞ்சம்" என்று பெரிய முதலாளி சொன்னதும் எல்லோரும் "இன்னுங் கொஞ்சம், இன்னுங்கொஞ்சம்" என்று அவனை வற்புறுத்தினார்கள்.

********

கணையாழி அக்டோபர் 1981
flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

11 கருத்துகள்:

கோமதி அரசு on March 20, 2017 at 8:24 AM said...

அருமையான கதை .

Jegan -Canada on March 25, 2017 at 7:20 PM said...

பிரமாதம்! கரிசல் காட்டுக் கதைகள் சொல்வதில் கி.ராவுக்கு நிகர் அவரே !

rajkumar on August 17, 2017 at 6:44 PM said...

தங்களின் மதிப்பையும், மரியாதையையும் நிலைநிறுத்திக் கொள்ள போராடும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மாசாணம் வாழ்கிறான். ஐயா கி.ரா அவர்களின் புண்ணியத்தால் அவர்களுக்கெல்லாம் இது ஒரு சுயதரிசனம். நன்றி ஐயா!

rajkumar on August 17, 2017 at 6:45 PM said...

தங்களின் மதிப்பையும், மரியாதையையும் நிலைநிறுத்திக் கொள்ள போராடும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மாசாணம் வாழ்கிறான். ஐயா கி.ரா அவர்களின் புண்ணியத்தால் அவர்களுக்கெல்லாம் இது ஒரு சுயதரிசனம். நன்றி ஐயா!

Prakash govindan on February 6, 2019 at 12:33 PM said...

கரிசலின் மொழி, வாழ்வியல் முறைகள், நம்பிக்கைகள், சமூகம் என அனைத்துக்குமான ஒட்டுமொத்த பதிவு கி.ரா அய்யாவின் கதைகள். நிலை நிறுத்தல் அவரின் ஆகச்சிறந்த கதைகளில் ஒன்று.

Unknown on May 19, 2021 at 3:54 PM said...

நெஞ்சு நெறஞ்சி போச்சி.💖

Oorsutri on May 27, 2021 at 11:28 PM said...

Arumai

PS on May 28, 2021 at 9:01 AM said...

மாய யதார்த்தம் (magical realism) பிரிவில் சிறந்த ஓர் சிறுகதை.

Jegan -Canada on September 21, 2021 at 10:23 PM said...

25 மார்ச் 2017 க்குபின் இன்று மீண்டும் கி.ரா வின் இக் கதையைப் படித்தபோது கோடை மழையால் நிறைந்த ஏரி போல மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது!

"பிறகு, அண்ணாந்தே இதுவரை குடித்து வந்த மாசாணம் அன்று அந்த டம்ளரில் சப்பிக் குடித்தான்..."

ஒவ்வொரு வரியும் அருமை!

kaliyaperumalveerasamy on January 7, 2022 at 8:28 AM said...

கி.ரா அவர்கள் தாத்தா அல்லது தந்தை கதை சொல்வதைப் போலவே எப்போதும் எனக்கு தோன்றும் இக்கதையிலும் நெகிழ்ச்சியோடு இருந்தது நன்றி

ஜனார்த்தனம் க on February 1, 2022 at 2:42 PM said...

"நேத்துலேயிருந்து ஆடுக சரியா மேயாமெ கூடிக்கூடி அடையுது மழை வராமப் போகாது"
"விடலைப் பனையில் குருத்தோலை வெட்டப் போனபோது துரக்கணாங்குருவிகள் வேகமாய் கூடுகள் கட்டி முடிப்பது"
"தரைப் புற்றுகளிலிருந்து தேங்காய்ப்பூப் போன்ற வெண்ணிறத்தில் தங்களின் முட்டைகளை அள்ளிக்கொண்டு மொலோர் என்ற எறும்புக் கூட்டங்கள் கிளம்பிப் போவது"
வானிலை அறிவிப்பாக மேற்கண்ட குறிப்புகளால் கி.ரா.ஐயா தனது கரிச்சான் மக்களின் அறிவியல் பற்றியும் திறம்பட விவரித்துள்ளது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.நன்றி ஐயா.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்