May 5, 2010

முள்வேலி-பாமா

பாமா

மலையப்பனுக்கு திடீர்னு நடக்க முடியல. பஸ்டாண்டுக்கு டீ குடிக்க நடந்து போனவன சைக்கிள்ல உக்கார வச்சுத் தள்ளிக்கிட்டு வந்தாக. அவனப் பாத்து எல்லாருமே பரிதாபப்பட்டாக, ஆனா எனக்கென்னமோBama (1) அவம்மேல பரிதாபமே வரல்ல.  வழக்கம்போல குடுச்சுப் போட்டுத்தான் தெருவுல கெடந்தவன தூக்கியாராங்கன்னு நெனச்சேன். அதுனால நானு யாருகிட்டயும் அவனப் பத்தி விசாரிச்சுக்கல. அவனத் தூக்கியாரும்போது சாயங்காலம் ஆறு மணி இருக்கும். ஏழு மணி போல நானு மாடிக்குப் போயி காலார நடந்துக்குட்டு இருக்கைல கெழக்க காவாப்பக்கம் மலையப்பனப் பாத்தேன். கூனக்கெழவங் கணக்கா குனுஞ்சுக்கிட்டு, இடுப்ப ரெண்டு கைட்டப் புடுச்சுக்குட்டு குன்னிக் குன்னி நடந்து போனான். இப்பத்தான் செத்த முன்னாடி சைக்கிள்ள வச்சுத் தூக்கியாந்தாகஙீ இப்ப இப்பிடி நிமுரமாட்டாமெ போறானேன்னு ஆச்சிரியமா அவனப் பாத்தேன். அவனால நிமுரமுடியல. குனுஞ்சு நின்னுக்கிட்டே வேட்டிய மேலாமத் தூக்கிக்கிட்டு ஒன்னுக்கிருக்கப் போனான். நானு சட்டுனு வேற பக்கம் திரும்பிக்கிட்டேன்.

மலையப்பன் மட்டுமில்ல. எங்கெங்க இருந்து வர்ர ஆம்பளைகள்ளாம் இங்னக் குள்ள வந்துதான் வேட்டியத் தூக்கிடுறானுக. ஏ வீடு கடேசி வீடுங்றதுனால அவுகளுக்கு ரொம்பச் சவுரியமாச் போச்சு. ஆம்பளைக எங்குன்னனாலும் நாயிகணக்கா தூக்கிக்கிட்டு ஒன்னுக்கிருப்பானுக; பொம்பளைக பாத்துட்டு ஒதுங்கிப் போகனும். ஆனா பொம்பளைக ஒரு ஆத்துர அவசரத்துக்குக்கூட எங்குனக்குள்ளயும் குத்தவைக்க முடியாது. அப்பிடியே ரொம்பா அவசரம்னா காலு வழியா மோளவேண்டியதுதான். அதுகூட செலபேராலதான் சீலைல படாமெ மோளமுடியுது.

மத்தபேருக்கெல்லாம் எப்பிடித்தான் மோண்டாலும் சீலை நனஞ்சுரும். ஊர்ல தாயம்மா பாட்டி நின்னபடியே லேசா முன்னால சாஞ்சுக்கிட்டு சீலைய லாவகமாத் தூக்கிப்புடுச்சுக்கிட்டு இத்தினிக் கூட சீலைல படாமெ ஒன்னுக் கிருப்பா. அவா ஒன்னுக்கிருக்கான்னு யாருக்கும் தெரியாது.

அது அவளுக்குக் கைவந்த கலைன்னுதான் சொல்லனும். ஆம்பளைகளுக்கு அப்படியில்ல. எங்கனாலும் லொங்காமெ மோளுவானுக.

அவனுகளுக்கு அம்புட்டுச் சுதந்திரம். இவனுக்கென்ன கேடு இப்படி குன்னிக்கிட்டுத் திரிறான். குடி போதை சாஸ்தியாச்சு போல. நெனச்சுக்கிட்டே கீழ எறங்கி வந்துட்டேன்.
மறுநாளு காலைல தெருக்குழாயில தண்ணி புடிக்கும்போது எல்லாரும் மலையப்பனப் பத்திதான் பேசிக்கிட்டு இருந்தாக. அதக் கேட்டபெறகுதான் எனக்கு விசயமே புருஞ்சது.

மலையப்பனுக்கு ஒன்னுக்கிருக்க முடியலையாம். ஒன்னுக்கிருந்து மூனு நாளாச்சாம். அதுனாலதான் அவனால நிமுந்து நடக்க முடியலையாம். அடிவகுத்துல பயங்கரமான வலியாம். துடியாத் துடிக்கானாம். அவனோட வெரக்கொட்ட ரெண்டும் பெரிய பந்துக கணக்கா வீங்கிப் போயி செக்கச் செவேர்னு இருக்காம். உள்ளூரு ஆஸ்பத்திரிக்குக் கொண்டுட்டுப் போனா பாக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம். இன்னைக்குக் காலைல காரு வச்சு டவுனு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்காகளாம். எல்லாரும் உச்சு உச்சுன்னு சவுண்டு எழுப்பி பரிதாபப் பட்டுக்கிட்டாங்க. ஆனா எனக்கென்னமோ அப்பக்கூட அவெம்மேல எரக்கமே வரல்ல. நானு ஏம்பங்குக்கு எதுனாச்சும் சொல்லாட்டி எதுனாச்சும் நெனச்சுக்கிருவாகளேன்னு சத்தம்போடாமெ வீட்டுக்குள்ள வந்துட்டேன்.

உள்ள வந்ததுலருந்து மலையப்பனோட பொண்டாட்டி கனியம்மாளயே நெனச்சுக்கிட்டு இருந்தேன். இப்ப கனியம்மா என்ன முடிவு எடுத்துருப்பா... அவங்கூட ஆஸ்பத்திரிக்குப் போயிருப்பாளா... அப்பிடிப் போயிருந்தா என்ன மனசோட போயிருப்பா... போகாமெ நின்னுருப்பாளோ... அவா நின்னாலும் மத்தவுக அவள நிக்க உடுவாகளா... மத்தவுகளோட பேச்சுக்கும், ஏச்சுக்கும் பயந்துக்குட்டு போயிருப்பாளோ... சே. அவங்கூட யாரு போயிருக்கான்னு கேக்காமெ வந்துட்டமேன்னு தோணவும் வேகமா வெளிய வந்தேன்.

மலையப்பன் வீட்டுக்கு எதிர்வீட்டுல இருக்குற சந்திரா நின்னுக்கிட்டு இருந்தா. அவாகிட்ட கேட்டேன்.

“மலையப்பன எந்த ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டு போயிருக்காக? அவருகூட யாரு போயிருக்காக?”

“அவருக்கு கிட்னி பெயிலாப் போச்சாம். அத்தோட கொடலு வேற கீழாமெ எறங்கிப் போச்சாம். அதென்னமோ எரனியாவும்ல? அந்த நோயும் வந்துருக்காம். பொழைக்குறது கஸ்டமாம். ஒன்னுக்கே போகலன்னா எப்பிடிக்கூடி பொழைக்க முடியும்? அந்தண்ணனப் பாத்தாப் பாவமா இருக்கு. டவுனு ஆஸ்பத்திரின்னு சொன்னாக. ஆனா எந்த ஆஸ்பத்திரின்னு தெரியல. அந்தக்கா கனியம்மாதான் கூடப்போயிருக்காக. வேற யாரு போவா? அவுக போகாட்டி இந்த ஊரு ஒலகம் அவுகளச் சும்மா உட்டுருமா?” கேள்வியோட முடுச்சா சந்திரா.

“இந்த பத்து வருசுமா அவுகென்ன புருசம் பொண்டாட்டியாவா இருந்தாக? அந்தக்கா அந்தாள உட்டுட்டு தனியாத்தானெ கெடந்தாக.

அப்பயெல்லாம் இந்த ஊரும், ஒலகமும் எங்க போனாக? இப்ப மட்டுக்கும் வருஞ்சு கெட்டிட்டு வந்துடுறாக. என்னக் கேட்டா அந்தக்கா அவங்கூட போயிருக்கக் கூடாது.” நாஞ்சொல்லவும், சந்திரா மட்டுமில்ல அங்ன நின்ன அம்புட்டுப் பேரும் ஒரு தினுசாப் பாத்தாக.

“அதெப்பிடி செல்வி போகாமா இருக்க முடியும்? என்னதான் இருந்தாலும் புருசனுக்கு ஒன்னுனா பொஞ்சாதிக்குப் பதறத்தான செய்யும். அவுக ஆயிரம் வருசம் பிருஞ்சு கெடந்தாலும் அந்த புருசன், பொஞ்சாதிங்ற ஒறவு இல்லன்னு ஆகிடுமா? புருசன் இல்லன்னா இங்க பொம்பளைக்கு என்ன மதிப்பு, மரியாதை இருக்குன்னு சொல்லு. அவெ நொண்டியோ, சண்டியோ, கூனோ, குருடோஙீ ஒரு ஆளாக் கெடந்தாம்னா அவளுக்கு ஒரு மதிப்புத்தான். அதான் கனியம்மா எல்லாத்தையும் மறந்துட்டு கூடப் போயிட்டா”. அஞ்சலப்பாட்டி சொன்னத அம்புட்டுப் பேரும் ஆமோதிக்கிற மாதிரி அமைதியா இருந்தாக. நாந்தான் அந்த அமைதியக் கலச்சுப் பேசுனேன்.

“கனியம்மா இந்தாளுக்கு வாக்கப்பட்டு வந்த நாளுலருந்து அவா எப்பேர்ப்பட்ட வாழ்க்க வாழ்ந்தான்னு நம்ம எல்லாத்துக்குமே நல்லாத் தெரியும். தெருஞ்சுக்கிட்டே இப்பிடிப் பேசுறது நல்லாவா இருக்கு? அந்தக் குடீகாரங்கிட்ட அவா பட்டபாடு கொஞ்சநஞ்சமில்ல. ஒரு நாளாவது அவங்கிட்ட அடிவாங்காத நாளுண்டா? இதே தெருவுல எத்தன தடவ அவள சீலைய உருவிட்டு செறகா கம்புட்டயே அடுச்சுருக்கான்? யாராச்சும் அவன வெலக்கிட்டு அவள காப்பாத்த முடிஞ்சுச்சா? அம்புட்டுச் சித்திரவதையையும் அனுபவிச்சுட்டு கடைசில அதுக்குமேல தாங்கமுடியாமத்தான அவா அவன உட்டுட்டு வெலகிப் போயிட்டா. அதுக்கும் அவள அவுசாரின்னு சாட்டிட்டு வஞ்சான். அந்தாள உட்டுட்டு தனியாப் போனபெறகுதான் நிம்மதியா இருக்கேன்னு அவளே அடிக்கடி சொல்லி இருக்கா. தாலிகட்டுனதுனால மட்டும் புருசன் பொண்டாட்டி கெடையாது. மனசுல பாசம், ஒறவு, மதிப்பு, மரியாத இருந்தாத்தான் அந்தக் கயித்துக்கும் மதிப்பு. இல்லன்னா அது வெறுங்கயிறுதான்னு இதே அஞ்சலக் கெழவி எத்தன தடவ சொல்லி இருக்கா. இப்ப என்னமோ ஆயிரம் வருசம் பிருஞ்சாலும் அப்பிடித்தான் இப்படித்தான்னு அவாபாட்டுக்கு அளக்குறா”.
“ஆமா சொன்னேந்தான். யாரு இல்லன்னா இப்ப? என்னதான் இருந்தாலும் வாழ்வா, சாவான்னு வரும்போது பழச மறக்கத்தான் வேணும். போயிப் பாக்கத்தான் வேணும். பொம்பளையா பெறந்த பெறகு வேற என்ன செய்ய முடியும்?”

இதுக்கு மேல அவுககிட்ட பேச எனக்குப் பிடிக்கல.

“அதெப்பிடி பழசெல்லாம் ஒடனே சட்டுனு மறந்து போக முடியும்? கனியம்மா அவா புருசனப்பத்திச் சொன்னதை எல்லாம் இப்ப நெனச்சுப் பாத்தாலும் அந்தாளச் சாவடிக்கனும்னுதான் தோணும். கலியாணமாகி மொதல் நாளுலருந்தே அவா யாருட்டப் பேசுனாலும் சந்தேகம். அசிங்க அசிங்கமா பேசி அடிதடி. கால்காசு சம்பாதிச்சு கொண்டாந்து குடுக்காட்டாலும், இவா எதுனாச்சும் கூலி வேல செஞ்சு வாங்குற காசையும் புடுங்கிட்டுப் போயி ஊத்திக்கிட்டு வந்து மாட்ட அடிக்கிறமாதிரி அடிச்சு தொவச்சு எடுப்பான். அவங்கூட வாழ்ந்த சாட்சிக்குப் பெறந்தது ஒரு பொம்பளப் பிள்ளை. அதக்கூட யாருக்கோ பெத்தான்னு வாய் கூசாமச் சொல்லி அடிப்பான். அந்தப் பிள்ளையையும் அவதான் வளத்து, ஆளாக்கிட்டு வாரா. கண்ணெதுர இம்புட்டையும் பாத்த இந்த பொம்பளைகளே இப்பிடிச் சொல்றாகளே.

இவளுக வாயிக்குப் பயந்து தான் அவா போயிருப்பா. சே. எப்பிடித்தான் மனச கல்லாக்கிட்டு போறது? அந்தாளு மொகத்துல முழுச்சு, அவங்கூட இருந்து அவனுக்குப் பணிவிடை செய்றது? அவனுக்கு அதுக்கு என்ன தகுதி இருக்கு? இப்பிடியே இந்தாளு செத்துப் போனாக்கூட அவா என்னைக்கும் நிம்மதியா இருந்துட்டுப்போவா. இந்த மஞ்சக் கயத்த ஒன்னக் கட்டிட்டுத்தான காலம்பூராம் கொத்தடிமைக் கணக்கா இருக்க வேண்டியதா இருக்குது.”

மலையப்பனுக்கு ஆபரேசன் நல்லபடியா முடுஞ்சு பொழச்சுக்கிட்டாம்னு சொல்லிக்கிட்டாக. இது அவனுக்கு மறுஜென்மம்னு சொல்லி சந்தோசப் பட்டாக. மனுசச் ஜென்மமே இல்லாத அவனுக்கு மறுஜென்மம் என்ன வேண்டிக்கெடக்குன்னு ஏம்மனசுக் குள்ள தோணுனத வெளிய சொல்ல முடியல.

கிட்டத்தட்ட ஒரு வாரம் கழுச்சு மலையப்பன மறுபடியும் கார்ல வச்சு வீட்டுக்குக் கொண்டாந்தாக. கார்ல இருந்து எறங்கைல ரெண்டு ஆம்பளைக போயி மலையப்பனக் கைத்தாங்கலாப் புடுச்சாக. அவனுக்குப் பின்னாடியே கனியம்மாளும் எறங்குனா. மலையப்பன மெதுவாப் புடுச்சு வீட்டுக்குள்ள கூட்டியாரச் சொல்லி கனியம்மாள்ட சொன்னாக. அவா அதக்காதுல வாங்காதது மாதிரி காருக்குள்ள இருந்த வயர்க் கூடையை எடுத்துக்கிட்டு விறுவிறுன்னு வீட்டுக்குள்ள போனா. அவா போன வேகத்தப் பாத்து அவா எம்புட்டு வேண்டா வெறுப்பா அவங்கூட போயிட்டு வந்துக்கான்னு புருஞ்சுக்கிட்டேன். அவாகூட பேசுறதுக்கு சரியான நேரம் பாத்துக்கிட்டு இருந்தேன். ரெண்டுமூனு நாளா அவள வெளியவே காணும். பாவம்; அந்தாளக் கவனிக்கவே நேரம் சரியா இருக்கும்போலன்னு நெனச்சுக்கிட்டேன்.

இதுக்குள்ள அக்கம்பக்கத்துல இருந்த எல்லாரும் மலையப்பன் வீட்டுக்குப் போயி அவனப் பாத்து விசாருச்சுட்டு வந்தாக. எனக்கென்னமோ அப்பிடி அவனப் போயி பாத்துட்டு வரப்பிடிக்கல. ஏ வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரங்க போம்போது என்னையும் கூப்புட்டாங்க.

“வாங்கக்கா, கூட்டத்தோட கூட்டமா நம்மளும் போயிப் பாத்துட்டு வந்துரலாம். அம்புட்டுப் பேரும் போயிப் பாத்துட்டு வந்துட்டாக. பெறகு நீங்க மட்டும் போகாட்டி எதுனாச்சும் சொல்லப்போறாக.”

அவுங்க கௌம்பும்போது என்னையும் வந்து கூப்புடவே எனக்கு என்ன செய்றதுன்னு புரியல. வரமாட்டடேன்னு சொன்னா அதுவே பெரிய விசயமாப் போயிரும். போகவும் புடிக்கல. இவுக போறவுக அவுகப்பாட்டுக்கல போயிப்பாத்துட்டு வரவேண்டியதுதான. நம்மளவேற கூப்புட்டு இக்கட்டுல மாட்டிஉடுறாக. என்னமோ எனக்கு உதவி செய்றதா இவுகளுக்கு நெனப்பு. நாம்படுற சங்கடம் இவுகளுக்கு எங்க தெரியப் போகுது. வேற வழியில்லாம நானும் அவுகளோட கௌம்பிப் போனேன். அப்பிடியே கனியம்மாளையும் பாத்துரலாம்னு நெனச்சேன். அவுகதான் எல்லாம் விசாருச்சாக. நானு கம்முனு நின்னுக்கிட்டு இருந்தேன். கனியம்மா எங்குட்டாச்சும் கண்ணுல தட்டுப்படுறாளான்னு பாத்தேன். அவா ஆளு அரவமே இல்ல. செத்த நேரம் நின்னுட்டு அவுகளோடயே நானும் கௌம்பி வீட்டுக்கு வந்துட்டேன். வார வழிலதான் கேட்டேன்.
“கனியம்மாள வீட்டுல காணுமே. எங்க போயிட்டா? நானும் அவளப் பாக்கனும் பாக்கனும்னு இருக்கேன். பாக்கவே முடியலையே.....”

“அந்தக் கொடுமைய ஏங்கேக்குற. அவாள்ளாம் ஒரு பொம்பளையா? அவன அறுத்து, தச்சுக் கொண்டாந்து போட்டுட்டு ஒடனே கௌம்பிப் போயிட்டாளாம். இங்ன இருந்து கொஞ்சம் ஒத்தாசையா இருக்கலாம்ல? வந்ததும் வராததுமா ஓடிப் போயிட்டா.”
“யாருக்கு ஒத்தாசை?”

“யாருக்கா? அவா புருசனுக்குத்தான். கட்டுன பொண்டாட்டிக்கு அக்கர வேண்டாமா?”
“அதான் வீட்டுல அவுகம்மெ இருக்கா. அவனோட அண்ணந் தம்பி, அக்கா, தங்கிச்சின்னு அம்புட்டுப் பேரும் இருக்காகள்ள. பின்ன என்ன? அம்புட்டுப் பேரு இருக்கைல இவா என்னத்துக்கு? இவ்வளவு தூரம் செஞ்சதே பெரிய காரியம். நானா இருந்தா ஆஸ்பத்திரிக்கே போயிருக்க மாட்டேன். இப்ப கனியம்மா எங்க போயிட்டாளாம்?”

“ம்... பெத்த தகப்பன் சாகப் பொழைக்க கெடக்கான். அவம்பெத்த பொண்ணக் கூட்டியாந்து தகப்பனப் பாக்க உடல. ஏதோ கடனுக்கு வந்துட்டு, ஒடனே பொண்ணு தனியா இருக்கான்னு சாக்குப் போக்குச் சொல்லிட்டு கௌம்பிட்டான்னு சொல்லிக் கிட்டாக. நம்ம என்ன கிட்ட இருந்து பாத்தமா என்ன? நாலுபேரு சொல்லக் கேள்விப் படுறதுதான். இனியாச்சும் பொண்ணக் கூட்டியாந்து புருசங்கூட இருந்து வாழலாம்ல?”
“அப்ப ஒடம்புல ரத்தம் நல்லா இருக்கும் போதெல்லாம் குடுச்சு, கும்மாளம் போட்டு ஆடிட்டு, ரத்தம் சுண்டிப் போகவும் பொண்டாட்டி வந்து கவனிச்சுக்கனுமாக்கும்? நல்லா நாயஞ் சொல்ற நீயி. கனியம்மா எடத்துல ஒனிய வச்சுப் பாரு. அப்ப இப்பிடிப் பேச மாட்டெ. அப்பிடியே கனியம்மா வந்துட்டாலும் என்ன சொல்வீக? இங்க பாரு. மழ எப்பப் பேயும்ஙீ வழுக்கல் எப்பெ வழுகும்னு இதான் சாக்குன்னு வெக்கமில்லாமெ வந்து வீட்டுக்குள்ள உக்காந்துட்டாள்னு சொல்வீக. நரம்பில்லாத நாக்குன்னு சும்மாயா சொன்னாக?”

“சே, சே. அப்பிடியெல்லாம் ஒருத்தரும் சொல்லமாட்டாக.”

“ஆமா சொல்லமாட்டீக. ஒரு கலியாணத்துல கனியம்மா தலைல பூ வச்சதுக்கே எவளோ சாடமாடையாச் சொன்னாளாம், ‘புருசன் வேண்டாமாம்ஙீ ஆனா பூ மட்டும் வேணுமாம்’. கனியம்மாளும் சும்மா உடல. பதுலுக்கு நல்லாச் சொல்லியிருக்கா, ‘பூவு நானு சின்னப் புள்ளையா இருக்கைல இருந்து வச்சுட்டு வாரேன்ஙீ புருசன் இப்ப எடவழில வந்தவன்.”

பேசிக்கிட்டே வீடு வந்து சேத்துட்டேன். வீட்டுக்கு வந்தப் பெறகு ஏந்தான் அந்தாளப் பாக்க போனோம்னு இருந்துச்சு. இப்பிடித்தான். வாழ்க்கைல நெறையா விசயங்கள நமக்குப் பிடிக்காமலே நாம செய்ய வேண்டியதா இருக்கு. நல்லதுக்கோ, கெட்டதுக்கோ. இப்பிடி மனசுக்குள்ள ஒன்ன வச்சுக்குட்டு வெளில வேற மாதிரி பாவலா பண்ண வேண்டியிருக்கு. கனியம்மாகூட இப்பிடித்தான். மனசு புடிக்காமத்தான் போயிருப்பா. பாவம் அவா. அவா மட்டுமா பாவம்? எல்லாருமே பாவப்பட்ட சென்மங்களாத்தான் இருக்கோம். அவள எப்பிடியாச்சும் பாத்துப் பேசனும்னு நெனச்சேன். ரெண்டு நாளுக் கழுச்சு அவளச் சந்தைல வச்சுப் பாத்தேன். அவளும் என்னப் பாத்து பேசனும்னு இருந்ததாச் சொன்னா. நாங் கேக்க முன்ன அவளாச் சொன்னா.

“அந்த நாரப் பெயலுக்கு முடியாமப் போச்சுன்னு ஏங்கிட்ட வந்து எதுக்குச் சொல்லனும்? அவெஞ் சாவசமே வேண்டாம்னு நானு ஒதுங்குனப் பெறகு, இந்தப் பத்து வருச காலமா எதையுமே கண்டுக்காமெ இப்ப மட்டும் ஏங்கிட்ட எதுக்கு வரனும்? மனச ரணமாக்கி, கொன்னு போட்டப் பெறகு இவனக் கவனிக்க எனக்கு எப்பிடி மனசு வரும்? இந்தக் கயிறு ஒன்னு ஏங்கழுத்துல கெடக்குறதுனால இவனுக்கு நாம்போயி பீ மோத்துரம் அள்ளி செமக்கனுமா? கண்ணு முழுச்சுக் கெடந்து இவனக் கவனிக்கனுமா? இந்த நெலமைல நாங்கெடந்தம்னா இவெ வந்து எனியக் கவனிப்பானா? செத்துத் தொலஞ்சாம்னா இந்தக் கவுத்த அறுத்து வீசிட்டு ஏம்பாட்டுக்கு இருப்பேன். அம்புட்டுப் பேரும் பொழைக்க மாட்டாம்னு சொன்னாக. இவனா சாவான்?”
“நீயி எதுக்குப் போன?”

“இவளுக வாய்ல விழவேண்டாம்னுதான் போனேன். ஓங்கிட்ட சொல்றேன். எனக்குப் போகவே இஸ்டமில்லதான். சரி போ. இவந்தான் மனுசத்தன்ம செத்தவன். ஏங்கிட்ட மனுசத்தன்ம இன்னும் சாகலியே... சாகுறானோ, பொழைக்குறானோ. முடியாமக் கெடக்குறவுகளுக்கு உதவி செய்ய மாட்டமா? அப்பிடிச் செய்துட்டு வருவம்னுதான் போனேன். போனதுனால எனக்குஞ் செலவுதான். இப்பக்கூட அவனுக்கு எம்புட்டு அதிகாரமும், ஆணவமுங்ற!”

“சாகட்டும்னு சொல்ற. பெறகு ஏம்போயிக் காப்பாத்துன?”

“சத்தியமாச் சொல்றேன். இத உங்கிட்ட தான் சொல்லமுடியும். மத்தவுக கிட்டச் சொல்லமுடியாது. இதுதான் உண்மெ. அவெம் பொழச்சு எந்துருச்சு வரனும்னு எனக்குத் துப்பரவா ஆசையே கெடையாது. ஆனா ஒன்னே ஒன்னுமட்டுந்தான் ஏம்மனசுக்குள்ள ஓடுச்சு” ஏங்காதோரம் மெதுவாச் சொல்லிட்டு நிப்பாட்டுனா.

“என்னது?”

“என்ன தெரியுமா? இவஞ்செத்துப் போனாம்னா, இந்த ஊரு ஒலகத்துல எனிய முண்டச்சின்னு சொல்லி, எந்த ஒரு நல்ல காரியத்துலயும் பங்கெடுக்க உடாமெ ஒதுக்கி வச்சிருவாங்களேங்ற எண்ணந்தான் என்னைய வேதனப் படுத்துச்சே தவுர, வேறெத்த கவலையும் எனக்கில்ல.”

“அதாவது ஊர்ல ஒரு பழமொழி சொல்வாகளே....”

“என்ன பழமொழி?”

“வெயிலுக்குப் பயந்துக்குட்டு வெந்நிப் பானைக்குள்ள விழுந்தது கணக்கா.”
கனியம்மா கம்முனு இருந்தா.

******

நன்றி : அணங்கு இதழ்    ( மார்ச் - ஆகஸ்டு 2007)

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

கலகலப்ரியா on May 5, 2010 at 11:57 PM said...

மிக மிக அருமையான பகிர்வு.. பதிவைப் படிக்கும்போது.. ஒவ்வொரு வரியிலும்.. இந்தச் சமுதாயப் புழுக்களோட நெளிஞ்சுக்கிட்டிருக்கிற மாதிரியான ஆதங்கம்..

எப்போ விடியும்ன்னு இருக்கு..

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்