May 8, 2010

சிதறல்கள்-பாமா

 

மரத்தூர்  சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒவ்வொரு நாள் மாலையிலும் வாத்தியக்குழுவினர் முழுவீச்சில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.  காட்டுப்பட்டி பள்ளிக்கூடத் திறப்பு விழாவுக்கு அவர்களது குழுவினரை அழைத்திருந்தார்கள். அதனால் கடந்த ஒரு வாரமாக சிறுவர்கள் மாலை நேரத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.கீரனூருக்கும் கொளத்தூருக்கும் இடையில் பிரதான சாலையில் bam4 மாத்தூர் அமைந்திருந்தது. கீரனூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச் செயலில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்ட சிறுவர்கள், அந்தப் பள்ளியில் இருந்தார்கள். சந்திரனும் அவர்களில் ஒருவன். எடையபட்டிதான் அவனது சொந்த ஊர். சீர்திருத்த பள்ளிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. அவனது ஊரைவிட மாத்தூர் கொஞ்சம் பெரிய கிராமமாக இருந்தது. சீர்திருத்தப் பள்ளி ஊரைவிட்டுத் தள்ளி காட்டுப் பகுதியில் இருந்தது. அவனுக்கு அங்கு இருக்கப் பிடிக்கவி;ல்டலை. அடிக்கழ அவனது ஊரையும், அவனது அம்மாவையும், அவனது ஒரேயொரு குட்டித் தங்கையையும், அவன் படித்த பள்ளியையும், அவனது நண்பர்களையும் நினைத்துப் பார்ப்பான். அப்படி நினைக்கும் பொழுதெல்லாம் அவனுக்குக் கண்கள் கலங்கும். அங்கு வந்த புதிதில் அடிக்கடி அழுதுகொண்டிருப்பான். இப்போது மௌனமாக வேதனையைச்  சுமந்து திரியப் பழகிக் கொண்டான்.சந்திரனின் வயது பதிமூன்று. சீர்திருத்தப்பள்ளிக்கு வருதற்கு முன்பு, ஊரில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அவன் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது அவனது அப்பா கோதண்டம் இறந்துபோனார்.

வயலில் நெற்பயிருக்குப் பூச்சி மருந்து அடிக்கச் சென்றவர் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டதாகச் சொல்லி, வீ;ட்டுக்குத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். சந்திரனின் அம்மா ரஞ்சிதம் கூலி வேலை செய்து சந்திரனைப் படிக்க வைத்துக்கொண்டிருந்தாள்.  சந்திரனும் நன்றாகப் படித்துக்கொண்டிருந்தான். படிப்பில் இருந்தது போல மற்ற எல்ல விசயத்திலும் கெட்டிக்காரனாக இருந்தான். அவனை எப்படியாவது படிக்க வைத்து ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டு வரவேண்டுமென்று ரஞ்சிதம் கனவு கண்டாள். ஆனால் இடையிலேயே அவனது வாழ்க்கை இப்படியாகிப் போனதை எண்ணி அவள் நொறுங்கிப் போனாள். சந்திரனுக்கும் அம்மாவை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கும். மறுபடியும் ஊருக்குப் போயி நண்பர்களோடு சேர்ந்து படிக்க வேண்டும் தங்கையோடு விளையாட வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தான்.

ஊரில் படிக்கும்போது நண்பர்களோடு சேர்ந்து செய்த சேட்டைகளை யெல்லாம் அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்வான்.அவன் படித்த பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு வட்டமான பெரிய கிணறு இருந்தது. அந்தக் கிணற்றுச் சுவரையொட்டிய மஞ்சணத்தி மரத்தில் ஒரு குருவிக்கூடு இருந்தது. அந்தக் கூட்டில் இருந்த குருவிக்குஞ்சை எடுப்பதற்கு, நண்பர்கள் சந்திரனை மரத்தில் ஏறச் சொன்னார்கள். சந்திரனும் ஏறினான். கூடு இருந்த கிளை கிணற்றின் உட்புறமாக சாய்ந்து தொங்கிக்கொண்ழருந்தது. அந்தக் கிளையில் கால் வைக்க வேண்டாமென்று நண்பர்கள் சொன்னார்கள். அது மிகச் சிறியதாக இருந்ததால் ஒடிந்து விடுமென்று பயந்தார்கள். அப்படி ஒடிந்தால் சந்திரன் கிணற்றுக்குள்தான் விழ வேண்டும். சந்திரனும் அந்தக்கிளைக்கு அருகே இருந்த பெரிய கிளையில் காலூன்றிக் கொண்டு கையை நீட்டி கூட்டைத் தொட முயன்றான். தொட முடியவில்லை. அந்தக் கிளை கிணற்றுக்குள் தொங்கிக் கொண்டிருந்ததால் கூட்டை நெருங்குவது அவ்வளவு சுலபமாக இல்லை. நண்பர்களுடைய ஆலோசனைப்படி சந்திரனின் சட்டையைக் கழற்றி அதை அவன் இடுப்பில் கட்டியிருந்த அரை  ஜாண் கயிற்றில் கட்டி, சட்டையின் மறுமுனையை நண்பர்கள் பிடித்துக்கொள்ள, சந்திரன் தாவி அந்தக்கிளையை இழுக்க முயன்றான்.

ஆனால் அடுத்த நிமிடத்தில் இடுப்பில் கட்டியிருந்த கயிறு அறுந்துவிட சந்திரன் தாவி தடாலெனக் கீழே விழுந்தான். நல்லவேளையாக கிணற்றுக்குள் விழாமல் வெளியில் விழுந்ததால் கை ஒடிந்ததோடு தப்பித்துக்கொண்டான். அந்தத தோளைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். அதனால் ஒருமாதம் பள்ளிக்கே செல்லாமல் சுற்றிக்கொண்ழருந்ததை நினைத்துக்கொண்டான்.அப்போது பயிற்சிக்கு மாஸ்டர் அழைப்பதாக மணிகண்டன் வந்து சொல்லவும், சந்திரன் எழுந்து சென்றான். அந்தப் பள்ளியில் அவனுக்குப் பிடித்தது அந்த வாத்தியக் கருவிகளைக் கையாளுவதுதான். அனைத்துக் கருவிகளையும் இசைக்கப் பழகியிருந்தான். ஊரில் இருக்கும்போதே பறையடிப்பதில் அவனை யாரும் வெல்லமுடியாது. நாக்கைக் கடித்துக்கொண்டு ஆவேசத்தோடு ஆடிக்கொண்டே அவன் அடிப்பதைப் பார்க்கும் போது பார்ப்பவர்களுக்கே ஆட்டம் வந்துவிடும். அவ்வளவு ஈடுபாட்டோடு பறையடிப்பான்.

இப்போது இங்கு பறை இல்லாததால் டிரம்ஸ் அடிப்பான். ஆனாலும் பறை அடிப்பதில் இருக்கும் ஊக்கமும், உற்சாகமும் டிரம்ஸ் அடிப்பதில் இல்லை என்று அவனுக்குச் சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. புல்லாங்குழலில் வாசிப்பான். தபேலா அடிப்பான். வாசிக்கப்படும் இசைக்கு ஏற்ப மொராக்கசை வைத்து அருமையாக உள்ளங்கையில் உருட்டுவான். அந்த மொராக்கசை உருட்டுவது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதற்கு முன் அதை ஊரில் பார்த்திராததால் அவன் அப்பொழுதும் அதை எடுத்து உருட்ட விரும்புவான். அவன் தாளம் தவறாமல் உருட்டுவதால் மாஸ்டரும் அவனை அதையே உருட்டச் சொல்லிவிட்டார். இதற்காக மட்டும்தான் அந்த மாஸ்டரை அவனுக்குக் கொஞ்சம் பிடிக்கும். மற்றபடி அவரைக்கண்டால் இவனுக்குக் கோபம் கொப்பளிக்கும். அதற்குக் காரணமும் இருந்தது.

நான்கைந்து மாதங்களுக்கு முன்பு ஓரிடத்திற்கு வாத்தியக்குழு சென்றிருந்தபோது, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சந்திரன் தப்பியோட முயன்றான். அப்போது இந்த மாஸ்டர்தான் அவனைப் பிடித்துக்கொண்டுவந்து மீண்டும் இந்த பள்ளியில் போட்டுவிட்டார். அதிலிருந்து மாஸ்டருக்கு இவன்மேல் ஒரு கண். எங்கு சென்றாலும் இவனைக் கண்காணித்துக்கொண்டே இருப்பார். அதை அவன் வெறுத்தான். அவரையும் வெறுத்தான். இப்போது காட்டுப்பாட்டிக்குச் செல்ல பயிற்சி எடுக்கும்போதே சொல்லிவிட்டார்.“என்ன சந்திரன், நம்ம போறது ஒரு சின்ன கிராமம். அங்கயெல்லாம் தப்பிச்சு கிப்பிச்சு ஓடலாம்னு நெனைக்காதே. அப்பிடி எதுவும் செஞ்சீனா ஈசியா மாட்டிக்கிடுவெ.சந்திரன் பதிலுக்கு அவரை ஒரு பார்வை பார்த்தான். அவ்வளவுதான் அவனால் செய்ய முடிந்தது.காட்டுப்பட்டி பள்ளியைத் திறந்து வைக்க வந்த அதிகாரியை, காட்டுப்பட்டி பேருந்து நிலையத்தி லிருந்து வாத்தியக்குழுவினரின் இசையோடு ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதன்படி மாஸ்டரும், மற்றும் வாத்தியக் குழுவில் இடம்பெற்றிருந்த பத்துச் சிறுவர்களும் தூய வெண்ணிறச் சீருடை அணிந்து, வெள்ளைத் தொப்பி வைத்து, அவரவரின் வாத்தியக் கருவிகளுடன் மாலை ஐந்து மணிக்கெல்லாம் காட்டுப்பட்டி பேருந்து நிலையத்தில் வரிசையாக நின்றுகொண்டிருந்தனர்.

காட்டுப்பட்டி ஊர்த்தலைவரும், ஊர்மக்களோடு அங்கு வந்து காத்திருந்தார். பேருந்துநிலையத்திலிருந்து பள்ளிக்கூடம் வரையுள்ள தெருக்களில் ஆங்காங்கே மின்விளக்குகள் கட்டி அலங்கரித்திருந்தனர். ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். பேருந்துநிலையம் மிகவும் சிறியதாக இருந்தது. ஒன்றிரெண்டு தேநீர்க் கடைகள் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்பழ எதுவுமில்லை. ஒரு பெரிய வேப்பமரம் இருந்தது. அதில் சினிமா போஸ்டர் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. என்ன படமென்று சரியாகத் தெரியவில்லை.

ஊரில் இருக்கும்போது அக்கம்பக்கத்து பையன்களோடு சினிமாப் பார்க்கப் போனது சந்திரனின் நினைவுக்கு வந்தது.ஊரில் இருந்த சினிமாக் கொட்டகையில் ரஐனிகாந்து படம் வந்தபோது அம்மாவிடம்  சினிமாவுக்குக் காசு கேட்டு தொந்தரவு செய்தது ஞாபகத்துக்கு வந்தது. அம்மாவிடம் அப்போது பணமில்லை. படம் ஆரம்பமாவதற்கு முன்பே அங்கு சென்ற சந்திரன், டிக்கெட் கவுண்டரில் வைக்கப்பட்டிருந்த ஒரு கட்டு டிக்கெட்டை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான். கவுண்டரில் டிக்கெட் கட்டைக் காணாமல் அலைமோதிக் கொண்டிருந் தார்கள். காணாமல் போன டிக்கெட்டுகளின் எண்கள் தெரியுமாதலால் அந்த எண்கள் கொண்ட டிக்கெட்டுகளை எடுத்து வருபவர்களைப் பிடிப்பதற்கு உஷாராக இருந்தார்கள்.இதைப்பற்றியெல்லாம் யோசிக்காத சந்திரன் தன் நண்பர்களுக்கும் டிக்கெட் கொடுத்து, அவர்களையும் அழைத்துக்கொண்டு சென்றான். மாட்டிக்கொண்டதும் நண்பர்கள் சந்திரன்தான் தங்களுக்கு டிக்கெட் கொடுத்தான் என்று சொல்லிவிட சந்திரனைப் பிடித்து விசாரித்தார்கள் ஊர்ப்பெரியவர்களிடம் சொல்லி அவனைக் கண்டித்து வைக்கச் சொன்னார்கள். ஊரில் அனைவரும் ~டிக்கெட்டு எடுத்த பெயலுக்கு அதக்கொண்டுக்கிட்டு போனா புடிபட்டுக்கிருவம்னுகூடத் தெரியல பாருன்னு"சொல்லி அவனைக் கிண்டல் செய்து சிரித்தனர்.

தலைவர் வந்துவிட்டாரென மக்கள் பரபரப்பாகவும் சந்திரனின் சிந்தனை தடைப்பட்டது. மாஸ்டர் உத்தரவுப்படி அவரவர் வைத்திருந்த வாத்தியக்கருவிகளை வாசிக்க ஆரம்பித்தனர். சந்திரனும் தன் கையிலிருந்த மொராக்கஸை வலது கையில் பிடித்துக்கொண்டு பல வண்ண மணிகளைச் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த அந்த மணிகளை இடது உள்ளங்கையில் வைத்து தாளத்துக்கு ஏற்றபடி உரசி உரசி ஒலி எழுப்பிக் கொண்டிருந்தான். மற்ற சிறுவர்களும் ஒருமித்த வாசித்ததைக் கேட்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. மாஸ்;டர் அவர்களை வழி நடத்திக் கொண்டிருந்தார்.அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தலைவர் ஏறிக்கொள்ள ஊர்வலம் தொடங்கியது. வாத்தியக்குழு ஊர்வலத்துக்கு முன்னே வாசித்தபடி மெதுவாகச் சென்றது.

சிறுவர்களின் வாசிப்பு மிகவும் பிரமாதமாக இருப்பதாக மக்கள் ஒருமனதாகச் சொன்னார்கள். அந்தச் சிறுவர்களைப் பார்ப்பதற்கே கூட்டம் அலைமோதியது. ஆனால் அந்தச் சிறுவர்கள் முகத்தில் எந்தவித உணர்வும் இல்லை. ஏதோ தங்களுக்குக் குறிக்கப்பட்ட ஒரு கடமையைச் செய்வது போல எவ்விதச் சலனமுமின்றி அவர்கள் வாசித்துக் கொண்டே முன்னோக்கி நகர்ந்தார்கள். இடையிடையே பட்டாசுகளை வெடித்தார்கள். சிறுவர்கள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. அவர்களது முழுக் கவனமும் வாசிப்பில்தான் இருந்தது. அவர்களைச் சுற்றி இளைஞர்கள் ஓர் அரண்போல பாதுகாப்பாக வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து மாஸ்டரின் ஏற்பாட்டின்படி ஒரு பாதுகாப்புக்காகத்தான் அவர்கள் அப்படி புடைசூழ்ந்து வருகிறார்கள் என்பதை சந்திரன் புரிந்து கொண்டான். அவனுக்கு அது எரிச்சலை உண்டாக்கியது. அவன் மனது பலவிதமான உணர்வுகளால்; அலைக்கழிக்கப்பட்டது. அவன் கையில் அகப்பட்டுக்கொண்ட அந்த மொராக்கஸை அவன் ஆக்ரோசமாக உருட்டி, உருட்டி மனசை ஆசுவாசப்படுத்த முயற்சி செய்தான். கைகளிரண்டும் சூடாகின. மனது கொதித்துக்கொண்டிருந்தது.

தங்களைச் சுற்றி பெருந்திரளாக மக்கள் கூடி வந்தது தங்களது வாசிப்புத் திறனைப் பார்த்து, கேட்டு மகிழத்தான் என்றெண்ணியிருந்த சந்திரன், அவர்கள் தங்களது பந்தோபஸ்துக்காகத்தான் வருகிறார்கள் என்பதை அறிந்தபின் ஆத்திரமும், வெறுப்பும் அடைந்தான். மாஸ்டரைப்  பார்க்கும்போது அவனுக்கு வெறித்தனமான கோபம் வந்தது. அவர் தன்னைமட்டும் குறிப்பிட்டு கவனிப்பது போல் தெரிந்தது. இந்த ஊர் மக்களிடம்கூட அவர் தன்னைப் பற்றிச் சொல்லி வைத்திருப்பார் என்று எண்ணினான். அனைவரும் அவனையே கூர்ந்து கவனிப்பதுபோல   அவனுக்குத் தெரிந்தது.

சீர்திருத்தப் பள்ளிக்கு வருவதற்கு முன்பு தனது ஊரில் எவ்வளவு மகிழ்ச்சியாக விழாக்கள் கொண்டாடினோம் என்று நினைத்தான். தன்வயதுப் பையன்கள் ஓடியாடித் திரிவதைப் பார்க்கும்போது அவனது மனது வேதனையில் கனத்தது. அவனது மனச்சஞ்சலத்தை அவன் கையில் வைத்திருந்த மொராக்கஸ் பட்டபாட்டிலிருந்து அறிய முடிந்தது. அவன் மனதிலிருந்த ஆத்திரத்தையும், வலியையும் அவன் கையில் வைத்து உருட்டிய மொராக்கஸின் மணிகள் எழுப்பிக் கொண்டிருந்தன. அவனது முகத்திலிருந்து வியர்வை தாரை தாரையாக வழிந்தது. அவனது கைகள் சூடானது போலவே அவனது முகமும் சூடானது. அவனது நெஞ்சின் வேட்கை, வெக்கையாக வெளியேறியது. அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பேசிய பேச்சுக்கள் அவன் காதுகளில் தெளிவாகக் கேட்டது.

“யே... இந்தப் பையனப் பாருங்கடா... இந்த மணிய எப்பிடி உருட்டுறாம்னு பாருங்க... இதுமாதிரி உருட்டுற மணிய நம்ம இது வரைல பாக்கவே இல்லைலடா... இவெ உருட்டுற உருட்டுல மணியே அந்து போகும் போலடா..."“இதெப்பிடிடா செஞ்சுருக்காக? "“அதுக்குள்ள இருக்குறது என்னனு தெரியுமா? தேங்காச் செரட்ட"“செரட்டையா? இம்புட்டுப் பெரிய செரட்டையா?"“ஆமாடா.

இது கேரளா தேங்காயில இருக்குற செரட்ட. இதுக்குப்  பேரு கொப்பரத் தேங்காடா. அங்கயெல்லாம் ரொம்பா பெருசாத்தான் இருக்குமாம். எங்கண்ணஞ் சொன்னான். நீயி வேணும்னா அத உருட்டுற பெயல்ட கேட்டுப் பாரேன்."“ஐயய்யோ.... அவங்கிட்டயெல்லாங் கேக்கக் கூடாதுடா. அந்தா வாராருல அவுங்க வாத்தியார்டத்தான் கேக்கனும்".“போடா போ... அவருட்ட கேக்கக் கூடாதுடா. எனக்கு அவரப்பாத்தா புடிக்கவே இல்லடா. அவருதாண்டா இந்தப்பெயல்களை புடுச்சு அடச்சு வச்சுருக்காரு."“இல்லடா... இவனுங்க என்னமோ தப்பு செஞ்சாங்களாம்டா. அதுக்குத்தான் இவனுங்கள செயில்ல புடுச்சு வச்சுருக்காங்களாம். எங்கம்மெ சொன்னா."“போடா  போ... அதெல்லமில்லடா. பாவம்டா இவனுங்க. இவுங்க செயில்ல இல்லடா. அதன்னமோ சீர்திருத்தப்பள்ளிக்கூடத்துல இருக்காங்களாம். ஆஸ்டலுமாதிரி. இல்லடா? "

இதைக்கேட்டுக்கொண்டே  நடந்த சந்திரனுக்கு, ~ஆஸ்டலு இல்லடான்னு" கத்த வேண்டும்போல இருந்தது. அவர்களுடன் பேசவேண்டும் போல இருந்தது. அந்த மாஸ்டரைப் பற்றியும் அந்த சீர்திருத்தப் பள்ளிக்கூடத்தைப் பற்றியும் அவர்களிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது. அத்துடன் அவன் கையில் வைத்து உருட்டிக்கொண்டிருக்கும் அந்த மொராக்கசைப் பற்றியும் அதை  அவன்  எவ்வாறு தாளத்துக்கு ஏற்றாற் போல உருட்டுகிறான் என்பது பற்றியும் அவர்களுக்கு உருட்டிக்காட்டவும் அவனுக்கு ஆசை ஆசையாக இருந்தது. இப்படி எத்தனையெத்தனை ஆசைகளை அவன் அழித்துக்கொள்ள வேண்டியுள்ளது என்றெண்ணினான்.

இவர்களைப் போல தானும் தனது நண்பர்களும் பேசித் திரிந்த நாட்கள் நினைவுக்கு வர, துக்கம் தொண்டையை அடைத்தது. அழவேண்டும் போல இருந்தது. ஆனால் இந்தக் கூட்டத்தில் எப்பழ அழமுடியும்? அழுகையை அடக்கிக் கொண்டு ஆனந்தமாக வாசிப்பது போல பாவனை செய்ய பழகியிருந்தான்.“பாவம்டா... சின்னப்பெயலா இருக்கான். ஆனா எம்புட்டு அழகா தாளம் தப்பாமெ உருட்டுறாம்னு பாரு. எப்பிடி வேர்த்து ஊத்துதுன்னு பாரு. இவம்மேல கருப்பசாமி எறங்குனது மாதிரி இருக்குதுடா".“இவனத்தாம்டா குறிப்பா கவனிக்கச் சொல்லி அந்த மாஸ்டரு சொல்லியிருக்காராம். ஏம்னா இன்னொரு எடத்துல இப்பிடி வாசிக்கப் போனப்ப இந்தப் பெய தப்புச்சு ஓடப்பாத்தானாம். ஆனா மாட்டிக் கிட்டானாம்.

இதைக்கேட்டதும், அடக்கி வைக்கப்பட்டிருந்த சந்திரனின் அழுகை ஆங்காரமாக மாறியது. மனது இறுக்கமானது. மொராக்கசில் கட்டப்பட்டிருந்த கம்பிகளின் இறுக்கத்தை அவன் மனமும் அனுபவித்தது. ஊர்வலம் பள்ளியை நெருங்கிக் கொண்டிருந்தது. சந்திரனின் மன உளைச்சல் உச்சத்தை அடைந்தது. அது அந்த மணிகளின் ஆங்கார ஓசையில் வெளிப்பட்டது. அவனது மனதைப் போலவே கைகளும் சூடாகின. அவன் ஆக்ரோசமாக உருட்ட, உருட்ட மணிகளை இணைத்துக் கட்டியிருந்த கம்பிகள் அறுந்தன. மணிகள் சிதறின. விடுதலையாகிப்போன மணிகளை ஏக்கத்தோடு பார்த்தான் சந்திரன்.

*****

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

Several tips on July 22, 2010 at 12:52 PM said...

நல்ல பதிவு

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்